Saturday, November 18, 2006

ஒத்த ரூவா தாரேன்!

"ஒத்த ரூவா தாரேன்" என்ற குஷ்புவின் கரகாட்டப் பாட்டு எவ்வளவு பிரபலம்?
ஆனா இந்த "ஒத்த ரூபாயைப்" பாத்து எவ்வளவு நாள் ஆகி விட்டது, தெரியுமா?
இதோ கீழே பாருங்க!
இதுகளை எல்லாம் எங்காச்சும் எப்பவாச்சும் பாத்த ஞாபகம் இருக்குங்களா?

பார்த்த ஞாபகம் இல்லையோ?



இதை நிச்சயமா அடிக்கடி பாத்திருப்பீங்க!


அப்படிப் பாக்காதவங்க, இப்பவே நல்லா பாத்துக்குங்க!
அப்புறம் இதுவும் நாணயமாப் போச்சேன்னு ரொம்ப நாணயமாப் புலம்பக்கூடாது, சொல்லிட்டேன்! :-)

எங்கே சென்றன இவையெல்லாம்?

இந்தியப் பொருளாதாரம் வளர்கிறது!
பங்குச் சந்தையின் கிடுகிடு வளர்ச்சி! அந்நிய முதலீட்டாளர்கள் விரும்பும் சந்தையாக மாறி உள்ளது.
நில விலைகள் ஏறுமுகம்! கடன், கேட்காமலேயே கிடைக்கும் :-)
வாழ்க்கைத் தரம் உயர்ந்து, வாங்கும் திறனும் உயர்கிறது.
இந்தியத் திட்டம் 2020, வலுவான இந்தியா என்பதில் பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்கு உண்டு!

Cost of Living உயர உயர, அடிமட்ட பணத்தின் மதிப்பு குறையவே செய்யும் என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே!
ஐந்து ரூபாய் நோட்டை வைத்து மொய் எழுதிய காலம் உண்டு; இப்ப செஞ்சி பாருங்க! உங்கள மொய் எழுதிடுவாங்க:-)
ஆக நோட்டு எல்லாம் நாணயமா மாறிகிட்டே வருது!
"வெகு விரைவில் எதிர்பாருங்கள் 20 ரூபாய் நாணயம்", என்று விளம்பரம் தான் இன்னும் செய்யலை!

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் சிலவற்றில் அடிப்படையான ஒரு டாலர்/யூரோ/பவுண்டு/ரூபிள் இன்னும் அப்படியே உள்ளன!
அதை வைத்துப் பெரிதாக ஒன்றும் வாங்கி விட முடியாது தான் என்றாலும் புழக்கத்தில் இருக்கு! மதிப்பும் இருக்கு!
ஆனால் நம் இந்தியாவில் அப்படி இல்லை!

வல்லரசாக நினைக்கும் நமக்கு, இது நல்ல அறிகுறியா?
பொருளாதார நிபுணர்களைத் தான் கேட்கணும்; நம்ம மா.சிவக்குமார் அவர்களைக் கேட்டா அழகான விளக்கம் கிடைக்கும்!

அது சரி,
யாரிடமாவது இந்த ரூபாய்த் தாள்கள் இருந்தால், அப்படியே பத்திரப்படுத்தி வையுங்கள்!
வருங்காலத்தில் அருங்காட்சியகம் (மியூசியம்), மற்றும்
தொல்பொருள் துறையில் இதற்கு நல்ல டிமாண்ட் இருந்தாலும் இருக்கலாம்!
Numismatics என்ற பணத்தாள் சேகரிப்பில் கூட டிமாண்ட் கூடலாம்!

இவ்வளவு ஏன், "இந்த அஞ்சு ரூபாய்க்கு என்னென்னல்லாம் வாங்குவோம் தெரியுமா", என்று குழந்தைகளுக்குப் பல கதைகள் விடலாம்!
என்ன சொல்றீங்க?

(பட உதவி: rbi.org.in)
கீழே வெட்டிபையல் பின்னூட்டம் பாத்தவுடனே ஒரு பயம் வந்துடுச்சு; இதோ டிஸ்கி: -)
Disclaimer:
மேலே உள்ள ரூபாய் படங்கள் எல்லாம் ஒரு சாம்பிள் தான்; Specimen Copy; பமாகப் பயன்படுத்தலாம் என்று rbi வலைத்தளம் சொல்லுகிறது! இருந்தாலும் மக்களே, படத்தைக் காண மட்டும் செய்யுங்கள்! (நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...)

52 comments:

  1. ரவிசங்கர்

    நல்லதொரு விவாதத்தை தொடங்கியுள்ளீர்கள். நடக்கட்டும்.

    நன்றி.

    ReplyDelete
  2. //என்ன சொல்றீங்க?//

    ஒரு ரெண்டு டாலர் நோட்டு ஒண்ணு அனுப்புங்க, சொல்லறேன்!

    ReplyDelete
  3. இந்தியாவில் உள்ளவர்கள் இதை கலர் பிரிண்ட் அவுட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் ;)

    ReplyDelete
  4. இரண்டே முக்கால் ரூபா(ரூ.2=75)
    நோட்டு பார்த்திருக்கீங்களா?
    நானும் பார்த்ததில்லே..
    பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்தது..
    ரிஸர்வ் பேங்க் இதைத் திரும்பப் பெற்றுக்கொண்டபொழுது,கணிசமான அளவு நோட்டுகள் பொதுமக்களிடம்
    தங்கிவிட்டன
    (RBI BULLETINE ல் 1970 ல் படித்த செய்தி)

    ReplyDelete
  5. KRS,

    நீங்க போட்ட படமெல்லாம் நிஜமாவே நான் சேர்த்து வச்சுருக்கேன். நாணயம்
    சேகரிப்பு என்னோட ஹாபியிலே ஒண்ணு.

    ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் பலநாடுகளின் காசுகள் இருக்கு.( ஹை!
    பதிவுக்கு ஐடியா???)

    நேத்து அதுலெ போட்டது கொரியன் காசுகள்,கைநிறைய:-)))

    ReplyDelete
  6. நிஜந்தான் நைனா..
    அஞ்சி வருசத்துக்கோ முன்னோ சொல்ல கூட அஞ்சி ருபாய்ல நாஸ்டாவே முட்சிட்லாம். இப்போ முடியுதா சொல்லு...

    எனுக்கு ஒரு டவுட்டுப்பா... அலுமினியத்துல கீற 10 பைசா, 20 பைசா இதல்லாம் செல்லுமா செல்லாதா... நம்ம கிட்ட நிறய கீது.. 10 பைசாக்கு இன்னா கிடைக்கும் சொல்லு....

    ReplyDelete
  7. //(நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...) //


    சரி!

    ஒரு ரூபாய் நோட்டு - 50 பைசா
    2 ரூபாய் - 1 ரூபாய்
    என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
    :))

    சரி! சீரியஸ் பார்ட்டிற்கு வருவோம்.

    இரண்டொரு நாட்கள் முன்பு நான் இந்த ஒரு ரூபாய்த் தாளை ஒரு கடையில் கொடுக்க செல்லாது என்று கூறி வாங்க மறுத்துவிட்டனர்.

    இது பற்றி ஆர்.பி.ஐ என்ன சொல்கிறது என்று யாரேனும் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  8. என் கிட்ட எப்பவோ ஊருல இருந்து கொண்டு வந்த ரெண்டு ரூபா தாளும் அஞ்சு ரூபா தாளும் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அதுவும் ஊருக்கு வரும். திரும்பி வந்து பாத்தா அது செலவாகாம திரும்பி வந்திருக்கும். :-) இப்ப உங்கப் பதிவைப் பாத்தவுடனே அதைத் தனியா எடுத்து வச்சிரலாம்ன்னு தோணுது. :-)

    ReplyDelete
  9. //நேத்து அதுலெ போட்டது கொரியன் காசுகள்,கைநிறைய//

    துளசியக்கா! நீங்க உண்டியலைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்!

    இவரு சொல்றது ஹாபி! கலெக்ஷன்!

    :)

    ReplyDelete
  10. //இரண்டே முக்கால் ரூபா(ரூ.2=75)
    நோட்டு பார்த்திருக்கீங்களா?
    நானும் பார்த்ததில்லே..
    பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்தது//

    போனவாரம் ஒருத்தர் 2.50 ரூபாய்க்கு சில்லறை கேட்டப்போ 1.75 ரூபாய் நோட்டு ஒண்ணும், முக்கால் ரூபா நோட்டு ஒண்ணும் கொடுத்தாருங்க!

    ஆனா அதெல்லாம் இந்த சர்க்காரே அடிக்கலை, அதனால செல்லாதுன்னு சொல்லிகிட்டாங்களே!

    ReplyDelete
  11. நான் சொல்வது சுத்ந்தரத்திற்கு முன்
    இந்தியாவில் புழக்கத்தில் இருந்த சட்டபூர்வ நோட்டு.

    Reserve Bank of India Bulletine ல்
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள காகிதப் பணத்தின் அளவு எனும் தலைப்பில் பார்க்கவும்

    ReplyDelete
  12. //Sivabalan said...
    ரவிசங்கர்
    நல்லதொரு விவாதத்தை தொடங்கியுள்ளீர்கள். நடக்கட்டும்//

    சிவபாலன், நன்றிங்க!

    ReplyDelete
  13. சங்கரா நான் சி.ஏ.(1968) படிக்கும்போது எனக்கு வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார்கள்.அதில் நான் ஐந்து நாட்களுக்கு மதிய முழுச்சாப்பாடு(90பைச) சென்னை பிராட்வே அம்பீஸ் கபேயில் சாப்பிட்டு சனிக்கிழமையன்று கையில் 50 பைசாவுக்கு டென்ட் சினிமா தரை டிக்கெட் போவேன்.
    ஆனா இப்போ கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே.

    ReplyDelete
  14. //இலவசக்கொத்தனார் said...
    //என்ன சொல்றீங்க?//
    ஒரு ரெண்டு டாலர் நோட்டு ஒண்ணு அனுப்புங்க, சொல்லறேன்!//

    கொத்ஸ்,
    ரெண்டு டாலர் நோட்டா? இல்லை என்னிடம் தற்சமயம் $2.75 நோட்டு தான் உள்ளது! அனுப்பட்டுமா? :-)

    ReplyDelete
  15. //வெட்டிப்பயல் said...
    இந்தியாவில் உள்ளவர்கள் இதை கலர் பிரிண்ட் அவுட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் ;)//

    பாலாஜி, உங்க பின்னூட்டம் பாத்தவுடன் ஒரு டிஸ்கி போட்டு விட்டேன்; பார்த்தீர்களா? :-)

    ReplyDelete
  16. //sivagnanamji(#16342789) said...
    இரண்டே முக்கால் ரூபா(ரூ.2=75)
    நோட்டு பார்த்திருக்கீங்களா?
    ....இதைத் திரும்பப் பெற்றுக்கொண்டபொழுது,கணிசமான அளவு நோட்டுகள் பொதுமக்களிடம்
    தங்கிவிட்டன
    (RBI BULLETINE ல் 1970 ல் படித்த செய்தி)//

    வாங்க சிவஞானம் சார்;
    தகவலுக்கு மிக்க நன்றி...நான் என் நண்பனைக் கேட்டுப் பாக்கிறேன்; அவனிடம் இல்லாத ரூபாய்த் தாள்களே இல்லை! (பழைய தாள்களைச் சொன்னேன்)

    ReplyDelete
  17. /துளசி கோபால் said...
    KRS,
    ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் பலநாடுகளின் காசுகள் இருக்கு.( ஹை!
    பதிவுக்கு ஐடியா???)
    நேத்து அதுலெ போட்டது கொரியன் காசுகள்,கைநிறைய:-))) //

    வாங்க டீச்சர்!
    கைநிறைய காசு வைச்சிருக்கீங்க போல :-)
    எதற்கு ஒரு பெரிய பாட்டில்; ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குட்டிகுட்டி பாட்டில் வைத்துக் கொள்ளக் கூடாதா? வசதியா இருக்குமே!

    ReplyDelete
  18. //அரை பிளேடு said...
    எனுக்கு ஒரு டவுட்டுப்பா... அலுமினியத்துல கீற 10 பைசா, 20 பைசா இதல்லாம் செல்லுமா செல்லாதா... நம்ம கிட்ட நிறய கீது.. 10 பைசாக்கு இன்னா கிடைக்கும் சொல்லு.... //

    வாங்க அரைபிளேடு அய்யனே!
    இதுக்கு ஒரு தனிப்பதிவு போடறேன்!
    10 பிசாவை வுடுங்க! தாமரைப் பூ போட்ட 20 பிசா இருந்தாச் சொல்லுங்க!

    ReplyDelete
  19. //நாமக்கல் சிபி @15516963 said...
    ஒரு ரூபாய் நோட்டு - 50 பைசா
    2 ரூபாய் - 1 ரூபாய்
    என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
    :))//

    ஆகா, சிபி, கிளம்பிட்டீங்கயா, கிளம்பிட்டீங்கயா!!
    டிஸ்கி போட்டது சாலவும் சரியே:-)))

    //இரண்டொரு நாட்கள் முன்பு நான் இந்த ஒரு ரூபாய்த் தாளை ஒரு கடையில் கொடுக்க செல்லாது என்று கூறி வாங்க மறுத்துவிட்டனர்.
    இது பற்றி ஆர்.பி.ஐ என்ன சொல்கிறது என்று யாரேனும் சொல்லுங்களேன்//

    விடை கிடைத்ததா?
    நானும் கேட்டுச் சொல்கிறேன்.
    ஆமாம் கைவசம் நிறைய ஒத்த ரூபா ஸ்டாக் இருக்குங்களா? :-)) இவ்வளவு அக்கறையா கேக்கீங்களே!

    ReplyDelete
  20. //குமரன் (Kumaran) said...
    இப்ப உங்கப் பதிவைப் பாத்தவுடனே அதைத் தனியா எடுத்து வச்சிரலாம்ன்னு தோணுது. :-)//

    அதை மட்டுமில்ல குமரன்; எதுக்கும் பாதுகாப்பா, பத்து, இருபது நோட்டுகளைக் கூட சாம்பிளுக்கு ஒண்ணு, எடுத்து வ்ச்சிடுங்க!

    //ஒவ்வொரு தடவையும் அதுவும் ஊருக்கு வரும். திரும்பி வந்து பாத்தா அது செலவாகாம திரும்பி வந்திருக்கும். :-) //

    அப்ப ஊருக்கு வந்தா செலவே செய்யமாட்டீங்க போல இருக்கே! எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்ளும் அந்த மகானுபாவுலு யாரோ?:-))

    ReplyDelete
  21. இரவி. ஊருக்குப் போனா பெரிய நோட்டா தான் செலவாகுது. இந்த ரூபாத் தாளுக்கெல்லாம் ஒன்னுமே கிடைக்கிறதில்லைன்னு சொல்ல வந்தா...

    ReplyDelete
  22. குமரன்,
    ஒரு ரூபாய்க்கு ஒரு எலந்தவடை அல்லது 4 தேன்மிட்டாயும் கிடைக்கும்.

    ReplyDelete
  23. தாமரைப்பூ 20 பைசாவா?

    ஹை ! இருக்கு இருக்கு.

    பழைய கால தம்படி ( தம் அடி இல்லை) காலணா, இன்னும் ஓட்டைக் காலணா,
    முதல் வெள்ளைக்காரன் ஆண்ட 1886 வருசத்துக் காசுன்னு நிறைய இருக்கு.

    ஹளபேடு கோயில் வாசலில் விக்கிறாங்கப்பா.

    நம்மூர்லேயும் 'சிறப்புப் பதிவா' போடறதையும் விடறதில்லை. நியூஸி 150 வருஷ
    10$ நோட் வச்சுருக்கேன்.

    என்னோட ஹாபிகள் பலவிதம், அதுலே இதுவும் ஒரு விதம்



    சிபி,

    தேன் மிட்டாய்ன்னா என்ன?

    ReplyDelete
  24. //அப்பாவி பொது ஜனம் said:
    போனவாரம் ஒருத்தர் 2.50 ரூபாய்க்கு சில்லறை கேட்டப்போ 1.75 ரூபாய் நோட்டு ஒண்ணும், முக்கால் ரூபா நோட்டு ஒண்ணும் கொடுத்தாருங்க!
    //

    அப்பாவி பொது ஜனம் என்பது யாரோ? என்ன ஊரோ? அவர் பேரோ?? :-))

    ReplyDelete
  25. //தி. ரா. ச.(T.R.C.) said...
    சங்கரா நான் சி.ஏ.(1968) படிக்கும்போது எனக்கு வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார்கள்.அதில் நான் ஐந்து நாட்களுக்கு மதிய முழுச்சாப்பாடு(90பைச) சென்னை பிராட்வே அம்பீஸ் கபேயில் சாப்பிட்டு//

    திராச வாங்க!
    என்னாஆஆஆஆஆஆஆஆஆஅது?
    அஞ்சு ரூவாக்கு, அஞ்சு நாள் சாப்பாடு + சினிமா வா?
    ஆகா...அப்ப, இப்பத் தான் கலி முத்திப்போச்சு போல! :-)

    பிராட்வே "அம்பீ"ஸ்ல சாப்ப்பிட்டீங்கன்னு தெரிஞ்சா, தங்கள் சிஷ்யரான அம்பி எவ்ளோ சந்தோஷப்படுவார், தெரியுமா? :-)

    ReplyDelete
  26. //துளசி கோபால் said...
    தாமரைப்பூ 20 பைசாவா?
    ஹை ! இருக்கு இருக்கு.//

    இதுல தாமரைப்பூ இருக்குன்னு சிலர் இதை வைச்சு லட்சுமி பூஜை செய்யறதை சின்ன வயசுல பாத்திருக்கேன் டீச்சர்!

    இங்க அமெரிக்காவுல 50 state quarters மிகப் பிரபலம்! வருஷத்துக்கு நாலு ஸ்டேட் பேர் போட்டு நாலு நாலணா ரிலீஸ் பண்ணுவாங்க!
    அடுத்த வருஷம் இன்னொரு நாலு ஸ்டேட்! இப்படியே ஓட்டறாங்க இவங்க!

    ReplyDelete
  27. //அப்பாவி பொது ஜனம் என்பது யாரோ? என்ன ஊரோ? அவர் பேரோ//

    என்னங்க இது? அப்பாவி பொது ஜனம் தெரியாதா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!

    அ.பொ.ஜ என்பவர் ஒரே வாக்குச் சீட்டில் தான் வாக்களிப்பதாக வாக்களித்த அனைவருக்கும் வாக்களிப்பவர்.

    அதாவது அரசியல் வாதிகள் போலல்லாமல் ஓட்டுக் கேட்க வருபவர்களிடம் தான் கொடுத்த வாக்குறுதிப்படியே வாக்களித்துவிட்டு வேட்பாளரும் அப்படியே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்.

    இவர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும் இருப்பவர்.

    ReplyDelete
  28. //தேன் மிட்டாய்ன்னா என்ன? //

    துளசியக்கா!

    நீங்களும் சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பெயர்தான் வேறுபடும் போல!

    சிகப்பு நிறத்தில் கோள வடிவில் இருக்கும். மைதா மாவில் செய்யப்பட்டிருக்கும். உட்புறம் சர்க்கரைப் பாகு கொஞ்சம் இருக்கும். பாதியை கடித்துவிட்டு பார்த்தால் தெரியும்.

    முதலில் ஒன்று 5 காசுக்கு விற்கப்பட்டது. இப்பொழுது 25 காசு ஆகிவிட்டது. இதிலேயே பெரிய அளவிலும் உண்டு. முதலில் 25 காசுக்கு கிடைத்தது இப்பொழுது ஒரு ரூபாய்.

    ReplyDelete
  29. //அப்பாவி பொது ஜனம் said...
    என்னங்க இது? அப்பாவி பொது ஜனம் தெரியாதா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!
    அ.பொ.ஜ என்பவர் ஒரே வாக்குச் சீட்டில் தான் வாக்களிப்பதாக வாக்களித்த அனைவருக்கும் வாக்களிப்பவர்.//

    ஆகா...
    கண்டேன் அவர் திரு உருவம்!
    கண்டேன் கண்டு கொண்டேன்!!
    இந்தியா பூராவும் நீக்கமற நிறைந்திருக்கும் அ.பொ.ஜ...வாழ்க!

    ReplyDelete
  30. //வல்லிசிம்ஹன் said:
    ravishankar,
    nallaa irukku nottu paakka.//

    வாங்க வல்லியம்மா.
    Are u able to read/write tamil fonts in new place?
    புது இடத்தில், தமிழ் font படிக்க/எழுத முடிகிறது அல்லவா?
    My regards to everyone @ home!

    ReplyDelete
  31. //பாலாஜி, உங்க பின்னூட்டம் பாத்தவுடன் ஒரு டிஸ்கி போட்டு விட்டேன்; பார்த்தீர்களா? :-) //

    நல்ல வேளை போட்டீங்க...
    இல்லைனா நம்ம மக்கள் இனிமே எல்லா இடத்தலயும் இந்த நோட்டுக்களைத்தான் பயன்படுத்துவார்கள்.

    நான் 5 பைசா, பத்து பைசா, 20, 25, 50 பைசா ஒரு ரூபாய் காசெல்லாம் சேர்த்து வெச்சிருக்கேன் ;)

    ReplyDelete
  32. இந்தோனேஷியா கணக்குல மில்லியன் பில்லியன் என்று நம்நாட்டில் போகாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  33. //வடுவூர் குமார் said...
    இந்தோனேஷியா கணக்குல மில்லியன் பில்லியன் என்று நம்நாட்டில் போகாமல் இருந்தால் சரி//

    குமார் சார்; நீங்க சொல்வதும் சரி தான்! ஜப்பானிய யென் கூட இப்படித் தான் இருக்காப்பல இருக்கு! பொருளாதார நிபுணர்களைத் தான் கேட்கணும்!

    ReplyDelete
  34. ரவி!

    என்க்கிட்ட மூன்று ஒரு ரூபாய் முழுக்கட்டு உள்ளது. அதை உபயோகப்படுத்த முடியாத நிலை பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. அந்த கதையை முடிந்தால பதிவாக போடுகின்றேன்.

    ReplyDelete
  35. ரவி சங்கர்!
    பாரத நாணயத்தை;2004 ல் சென்ற போதே!!கைகளில் தொடக்கிட்டியது.அதன் ஞாபகமாக இப்போதும் ஓர் பத்து ரூபாத் தாள் என்னிடமுண்டு.
    நீங்கள் கூறுவது போல் எங்கள் இலங்கையிலும் பல தாள்கள் நாணயமாக மாறிவிட்டன.
    ஈழத்தில் அன்றைய காலங்களில் 10 ரூபாவை;ஒரு பவுண் என்று சொல்லும் வழக்கமிருந்தது. என் பேத்தியார்(அம்மாவின் தாயார்);தாயார் இப்படிப் பறைவதைக் கேட்டுள்ளேன். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம்; அவர்கள் காலத்தில் ஓர் சவரன்(பவுண் நாணயம்) பொற்காசு;;;;10 ரூபாவுக்கு வாங்கக் கூடியதாக இருந்ததாம்.என் தாயாரின் திருமண நகைகள் அந்த விலைக்குத் தான் வாங்கினார்களாம்.100 ரூபாவுடன் ஓர் கலியாணம் விமரிசையாக நடத்தலாமாம்.
    சந்தைக்கு 25 சதத்துடன் சென்றால்;ஓர் கடகம் நிறைய காய்கறி வாங்கிவரலாமாம்.
    வாயைப் பிளந்து வைத்துக் கொண்டு கேட்பேன்.
    என் வயத்துக்கு 2 ரூபாவுடன் சந்தையில் ஓர் மதியச் சமையலுக்குரிய காய்கறி வாங்கியுள்ளேன்.
    ஓம்; பணவீக்கமென பொருளாதார நிபுணர்கள்;கூறுகிறார்கள்;இது காலத்தில் கோலம்!!!
    துருக்கி நாணயமும் மில்லியன் கணக்கில் தான்; கடைசி 4; பூச்சியமும் விட்டுவிட்டே கணக்குப் பார்ப்பார்கள்; இத்தாலியும்-லீரா; யூரோவுக்கு முன் அப்படியே!!!!!
    நினைவை மீட்கச் சந்தோசமாக உள்ளது.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  36. //(நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...) //

    பதிக்காட்டி என்ன? நாங்கள் கம்ப்யூட்டர் திரையை திருப்பி வைத்து படங்களை சேமித்துக் கொள்வோம். பின்னர் அச்சிட வேண்டியதுதானே!

    ReplyDelete
  37. ரவி,

    தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    நாணயத்தின் அல்லது காகிதப் பணத்தின் மதிப்பு அதன் மாற்று வலிமையில்தான் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை ரூபாயில் முடி வெட்டிக் கொள்ளலாம். இன்றைக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனந்த விகடன் அன்று அறுபது காசுகள், இன்று பத்து ரூபாய்.

    மேலே சொன்னதன் தொடர்ச்சியாகப் பார்த்தால், பணத்தின் மதிப்பு குறைந்தால் புழக்கமும் அதிகமாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் நோட்டு கைமாறுவது குறைவாக இருக்கும். மதிப்பு அதிகமாக இருப்பதால் பரிமாற்றங்கள் குறைவு. எனவே காகிதம் தாங்கிக் கொண்டது. இன்றைக்கும் நூறு ரூபாய் நோட்டு அவ்வளவாக அடிபடுவதில்லை. கையில் நூறு ரூபாய் நோட்டி வந்தால், அதை பணப்பையில் வைத்துக் கொண்டு கவனமாகக் கடையில் கொடுப்பதோது கையாளுதல் முடிந்து விடுகிறது.

    குறைந்த மதிப்பிலான பணக் குறியீடுகள் (நோட்டு/நாணயம்), அடிக்கடி கைமாறுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாதத்தில் பத்து கைகள் மாறியிருக்கக் கூடிய ஒற்றை ரூபாய் இன்றைக்கு ஒரே மாதத்தில் நூறு பேரிடம் போய் வந்து விடலாம். அந்த அடிபடலை காகிதம் தாங்க முடியாததால், உலோகத்திற்கு மாறி நாணயங்கள் வெளியிட வேண்டியிருக்கிறது.

    இதை விடக் குறைந்த பத்து பைசா, இருபது பைசாவுக்கு எதுவுமே வாங்கக் கிடைக்காததால் அவற்றின் பயன் ஒழிந்து போய் விட்டது.

    டாலரும், யூரோவும் ஒற்றை அலகும் வாங்கும் மதிப்பு அதிகமாக இருப்பதால் நோட்டுக்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  38. //நாகை சிவா said:
    என்க்கிட்ட மூன்று ஒரு ரூபாய் முழுக்கட்டு உள்ளது. அதை உபயோகப்படுத்த முடியாத நிலை பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. அந்த கதையை முடிந்தால பதிவாக போடுகின்றேன்//

    வாங்க சிவா; அட ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாத்திக்கலையா?
    பதிவு போடுங்க! நான் ரெடி ஓடி வந்து படிக்க!!

    ReplyDelete
  39. // Johan-Paris said...
    அவர்கள் காலத்தில் ஓர் சவரன்(பவுண் நாணயம்) பொற்காசு;;;;10 ரூபாவுக்கு வாங்கக் கூடியதாக இருந்ததாம்.என் தாயாரின் திருமண நகைகள் அந்த விலைக்குத் தான் வாங்கினார்களாம்//

    ம்ஹூம்ம்ம்ம்ம்ம்ம்; பெருமூச்சு!!!:-))
    நகைகளா வாங்கினா அப்ப இதிலிருந்து தப்பிக்கலாம் போல; ஐயோ உரக்கச் சொல்லாதீங்க; வீட்டுல காதுல விழுந்திடப் போகுது! :-)

    //துருக்கி நாணயமும் மில்லியன் கணக்கில் தான்; கடைசி 4; பூச்சியமும் விட்டுவிட்டே கணக்குப் பார்ப்பார்கள்;//

    இது புது தகவல் யோகன் அண்ணா; அதுவும் நாலு பூச்சியமா? அம்மாடியோவ்!

    ReplyDelete
  40. //Brilliant Criminal said...
    //(நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...) //

    பதிக்காட்டி என்ன? நாங்கள் கம்ப்யூட்டர் திரையை திருப்பி வைத்து படங்களை சேமித்துக் கொள்வோம். பின்னர் அச்சிட வேண்டியதுதானே!//

    அடா அடா அடா...
    வாங்க கோழியாரே! வணக்கம்!:-)

    ReplyDelete
  41. //மா சிவகுமார் said...
    ரவி,
    தாமதத்துக்கு மன்னிக்கவும்.//

    வாங்க சிவா! ஆன்மிகப் வலைப்பூக்குள் உங்களை எப்படி கொண்டு வந்தோம் பார்த்தீர்களா? :-)) ச்ச்ச்சும்மாங்க!

    மிக அருமையா, விரிவான விளக்கம் சிவா!
    //ஒற்றை ரூபாய் இன்றைக்கு ஒரே மாதத்தில் நூறு பேரிடம் போய் வந்து விடலாம். அந்த அடிபடலை காகிதம் தாங்க முடியாததால், உலோகத்திற்கு மாறி நாணயங்கள் வெளியிட வேண்டியிருக்கிறது.//

    அட ஆமாம்; நீங்க சொன்னாப்புறம் தான் தெரியுது! கை மாறி கை மாறிக் கிழிஞ்ச நோட்டை வேறு யாரும் வாங்க மாட்டாங்களே! அப்படின்னா நாணயம் நல்லதுக்குத் தான்-னு சொல்றீங்க! புரியுதுங்க!
    அழைப்பை ஏற்று, புரியும்படியா நல்ல விளக்கம் கொடுத்தீங்க சிவா! மிக்க நன்றி!!

    ReplyDelete
  42. ம்ம்ம்ம்ம், நானும் இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. எங்க கிட்டே ஒரு பண்டல் ஒத்தை ரூபா நோட்டுக்கட்டு இருந்தது. அப்புறம் அதைச் செலவு செய்ய முடியாதுன்னு சொன்னதாலே பாங்கிலே கொடுத்து மாத்தினோம்னு நினைக்கிறேன். தாமரைப்பூ 20 காசு இன்னும் நிறைய இருக்கு. வச்சிருக்கோம். பழைய மஞ்சள் அரையணா, இரண்டணா, ஓட்டைக் காலணா, தம்பிடி என்று சொல்லுவாங்களாமே அது எல்லாமே இருந்தது. இப்போ அங்கே அங்கே மாத்தி வந்ததிலே எங்கே போச்சுன்னு தெரியலை.

    ReplyDelete
  43. // இரண்டொரு நாட்கள் முன்பு நான் இந்த ஒரு ரூபாய்த் தாளை ஒரு கடையில் கொடுக்க செல்லாது என்று கூறி வாங்க மறுத்துவிட்டனர். //

    கடைக்காரர் செய்தது தவறு.

    //துருக்கி நாணயமும் மில்லியன் கணக்கில் தான்; கடைசி 4; பூச்சியமும் விட்டுவிட்டே கணக்குப் பார்ப்பார்கள்; இத்தாலியும்-லீரா; யூரோவுக்கு முன் அப்படியே!!!!! //


    See XE.com's
    Universal Currency Converter at:

    http://www.xe.com/ucc/

    This *free* Web-based service enables you to quickly and easily calculate
    how much any amount of one currency is worth in another currency. Now
    featuring global rates updated continuously!

    ReplyDelete
  44. ஒரு காலத்தில் இந்த இரண்டு ரூபாய்களுக்காக மெரினா பீச்சில் படம் வரைந்து இருக்கிறேன்.. மறக்க முடியாத காலங்கள் அவை..

    ReplyDelete
  45. //கடைக்காரர் செய்தது தவறு//

    லதா அவர்களே! கடைக்காரர் செய்தது தவறு என்றுதான் அனைவருக்கும் தெரியுமே!

    ஆனால் அதை அவர்களை பெற வைக்க என்ன செய்ய வேண்டும்?
    இதுபற்றி ஆர்.பி.ஐ என்ன சொல்கிறது என்று யாருக்கேனும் தெரியுமா?

    ReplyDelete
  46. // இதுபற்றி ஆர்.பி.ஐ என்ன சொல்கிறது என்று யாருக்கேனும் தெரியுமா? //

    கூகிலாண்டவர்தான் துணை. Reserve Bank of India legal tender என்று தேடினால் ஏகப்பட்ட செய்திகள் கிடைக்கும். டிபிஆர்ஜோ அய்யா அவர்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கும். அவர் மனசுவைத்தால் இதைப்பற்றி ஏதேனும் பதிவெழுதலாம்.

    ReplyDelete
  47. //// இதுபற்றி ஆர்.பி.ஐ என்ன சொல்கிறது என்று யாருக்கேனும் தெரியுமா? //

    சிபியாரே, இதோ!
    Press release No : 2001-02/621
    At certain locations in a few cities/towns, bill boards have appeared indicating that the notes and coins of Rs.2 and Rs.5 denominations have ceased to be legal tender. The report is baseless and misleading. The Reserve Bank of India clarifies that the notes and coins of Rs.2 and Rs.5 continue to be legal tender. The members of public can freely accept and transact their business in these notes and coins and need not to be misled by any such propaganda.
    N.L. Rao
    Asst. Manager

    http://www.rbi.org.in/scripts/BS_ViewCurrencyPressRelease.aspx?Id=6052

    ReplyDelete
  48. //கீதா சாம்பசிவம் said...
    தாமரைப்பூ 20 காசு இன்னும் நிறைய இருக்கு. வச்சிருக்கோம்.//

    வாங்க கீதாம்மா! தாமரைப்பூ 20 காசு எனக்கும் ரொம்ப பிடிக்கும்!

    ReplyDelete
  49. //See XE.com's
    Universal Currency Converter//

    லதா,
    Thanks for the converter

    // G.Muthukumar said...
    ஒரு காலத்தில் இந்த இரண்டு ரூபாய்களுக்காக மெரினா பீச்சில் படம் வரைந்து இருக்கிறேன்.. மறக்க முடியாத காலங்கள் அவை..//

    பழைய அனுபவங்களை கதையாகவோ, இல்லை வேறு பதிவாகவோ இடுங்கள் முத்துக்குமார்! மலரும் நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை!

    ReplyDelete
  50. மேலே உள்ள பணத்துக்கு மதிப்பு இருக்கா ?

    சரவணபவன் சென்று வந்தால் 50 ரூபாயே இரண்டு இட்டிலி கெட்டிச் சட்டினிக்குள் காணாமல் போய்விடுகிறதே !
    :)

    ReplyDelete
  51. //கோவி.கண்ணன் [GK] said...
    மேலே உள்ள பணத்துக்கு மதிப்பு இருக்கா? சரவணபவன் சென்று வந்தால் 50 ரூபாயே இரண்டு இட்டிலி கெட்டிச் சட்டினிக்குள் காணாமல் போய்விடுகிறதே !//

    அநியாயம்! அக்ரமம்! அநீதி!
    இரண்டு இட்லி + சட்னி = 50 ரூபாயா? சரவணா இது நியாயமா?

    எனக்கு எங்க புரசைவாக்கம் கையேந்தி பவன் ராசாத்தியக்கா கடை இருக்கு! 5 ரூபா போதும்; அக்கா இதமா இட்லி ஊத்தித் தருவாங்க! :-))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP