Thursday, November 30, 2006

கைசிகம் - புராணமா? புரட்சியா??

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!

சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்!
இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!

தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!

வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் திருவரங்கம் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்!
அவ்வகையில் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!

இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.

குறுங்குடி நம்பி


அரையர் சேவை

அன்று ஒரு நாள், கார்த்திகை மாத ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!

அந்தணனாக இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
இன்று ஏகாதசி அல்லவா?....
அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"

உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே!
"நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?" என்று பிரம்ம ராட்சசனிடம் கேட்டுப் பார்த்தான்.

"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"
என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ?
அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.

தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
"என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? வைணவ அடியான் சொன்ன சொல் தவறலாமா?"

விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? நான் பெருமாளின் அன்பன்! இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை அப்போது விட்டது!
"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!

"சரி நீயே விரும்பிக் கேட்பதால்,கடைத்தேற இதோ", என்று புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான்.
பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
நம்பாடுவானை அந்த அந்தணன் விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.



(Re-enactment)

ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ்.அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். கிராமியக் கலை, இந்தச் சுட்டியில் காணலாம்!

இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!

இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர்!

என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!


"அமர ஓர்அங்கம் ஆறும், வேதம் ஓர்நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே
"


இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள் மற்றும் ஆச்சாரியர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

58 comments:

  1. நல்ல நாளில் நல்ல கதை கேட்க( படிக்க) வச்சதுக்கு நன்றி.


    கெளசிகர், தருமவியாதரைத் தேடிப்போனது ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  2. அன்பு இரவி,
    //என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
    அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
    அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்!//

    சாதி குலத்தால் வருவதில்லை. வாழ்ந்து காட்டும் வழிவகைகளில் உள்ளது.

    இதைத்தான் திருவள்ளுவரும் தன் "ஞானம் எட்டி" என்னும் நூலில் எழுதியுள்ளார். பிணம் எரிக்கும் ஒருவன் தன் எசமானர்களை நோக்கிப் பாடும் பாடல்களாக வந்துள்ளது.

    அதில் உண்மையாக இறைவன் எங்குள்ளான் என்று அறியாத நீங்கள் எல்லாம் உயர் குலத்தோரா? என வினவுகிறார்.

    "கைசிக ஏகாதசி" முதலாகிலும் மக்கள் மனந்திருந்தினால் சரி.

    ReplyDelete
  3. பெருமாள் அருளால் தற்செயலாக ஒரு முறை திருவரங்கத்திற்கு கைசிக ஏகாதசியன்று சென்றேன் இரவி. திருவரங்கத்திற்குச் செல்லும் போதெல்லாம் ஒரிரு நாட்கள் தங்கிவிட்டு வருவது என் வழக்கம். அன்று 9 மணி போல் உணவருந்திவிட்டு வரும் போது சாரி சாரியாக மக்கள் கோவிலுக்குள் செல்வதைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்க அப்போது கைசிக ஏகாதசியைப் பற்றியும் அரையர் சேவையைப் பற்றியும் சொன்னார்கள். உடனே கோவிலுக்குள் சென்றேன். பெருமாள் திருமுன்பு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பெருமாளையும் அரையர் சேவையையும் நன்கு தரிசித்தேன். மறக்க முடியாத இரவு அது.

    திருக்குறுங்குடியில் நடக்கும் நாடகத்தைப் பற்றி படித்ததாகத் தோன்றுகிறது. ஆனால் அது நினைவில் நிற்கவில்லை. இனி நிற்கும்.

    கைசிக ஏகாதசி அன்று கைசிக புராணத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  4. நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு ஐயா.
    இந்து சமுதாயம் அனைத்து ஏற்ற தாழ்வுகளும் இலாத நல்நிலையை அடைய தங்களை போன்றோரின் சேவை அவசியம்.
    மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. கண்டபடி தூற்றிவரும் வலைபதிவர் நிறைந்திருக்கும்
    இந்த ஒரு சூழ்நிலையில் துணிவுடனே தயங்காமல்
    இந்துமதப் பெருமையினை, எவரையும் அணைத்திடும் பாங்கினை
    சொந்தமான தீந்தமிழில் இனிப்பாக எழுதிடும் உம்மை
    சந்தமுடன் போற்றி வாழ்த்திடுவேன் கண்னபிரானே!

    ReplyDelete
  6. நல்ல பதிவு, கண்ணபிரான் அவர்களே. இந்தக் கதையை எப்போதோ கேட்டிருக்கிறேன். தங்கள் பதிவில் இப்போது படிப்பது நல்ல ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது.

    "அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழு நோயராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகளாரே! "

    என்று அப்பர் பெருமான் பாடியது நினைவுக்கு வருகிறது. தொழுநாயோளர்க்கும் இரங்கித் தொண்டு செய்து சேவைப் புரட்சி செய்தவர்கள் நம் ஆன்மிகச் சான்றோர்.

    ReplyDelete
  7. கைசிக எகாதசி அன்று அதன் வரலாற்றை சொல்லியதற்கு நன்றி!!!

    //என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
    அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
    அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!//
    அருமையாக சொன்னீர்கள்!!!

    ReplyDelete
  8. கண்ணா, புதுப்புது விஷயங்களை அனாவசியமா சொல்றியப்பா?

    நல்லபிள்ளை நல்லாயிருப்பா

    ReplyDelete
  9. அப்பாடி காலையில் இருந்து ஏதேதோ படித்து மண்டை காய்ந்த பிறகு ஒரு நல்ல பதிவை படித்த நிறைவு.அதுவும் கால்கரி சிவாவின் நகைசுவை பின்னூட்டம் கொஞ்சம் சிரிப்பையும் வரவழைத்தது.

    ReplyDelete
  10. கண்ணபிரான்

    அருமையான தகவல். சுதாகர் ஸ்ரீமங்கை அவர்கள் எழுதிய பதிவையும் படித்திருப்பீர்கள். பேராசிரியர் ராமானுஜன் இந்த நாடகத்தை மீட்டெடுத்து நடத்தி வருவதை சுதாகர் எழுதியிருந்தார். இந்த புண்ணிய நாளில் இந்தப் புண்ணியக் கதையை எங்களுக்குச் சொல்லி இந்து மதத்தின் சிறப்பினை விளக்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டீர்கள். உங்களுக்கும் ஊர் திருக்குறுங்குடியோ ?

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  11. மிக அருமையான நாளுக்கேற்ற பதிவு...நன்றி ரவிசங்கர்.

    இன்னும் ஒரு தகவல், டிவிஸ் அவர்களின் சொந்த ஊரும் இதுதான்...

    ReplyDelete
  12. //இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் //

    இன்று இக்கதையைப் படிக்க வைத்து
    எனக்கு புண்ணியம் கிடைக்க வைத்த
    உங்களுக்கும் நிறைய புண்ணியம்
    கிடைக்கட்டும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. //துளசி கோபால் said...
    நல்ல நாளில் நல்ல கதை கேட்க( படிக்க) வச்சதுக்கு நன்றி.//

    டீச்சர் சத்சங்கத்துக்கு என்றுமே நீங்க தான் முதல் ஆளா வந்து ஊக்கம் தருவது! நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்!

    //கெளசிகர், தருமவியாதரைத் தேடிப்போனது ஞாபகம் வந்தது//

    உண்மை தான் டீச்சர்! கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவர் (கெளசிகர்), மாமிசம் வெட்டும் தருமவியாதரைத் தேடிப் போனார் ஞானம் பெற!

    ஆனால் இந்தக் கதையில் ஞானம் இல்லை! மோட்சமே கிடைக்க வழி செய்து விட்டார் பாருங்கள்; அதுவும் தன் பங்கை இன்னொருவருக்கு கொடுக்க எவ்வளவு மனசு வேண்டும்!

    ReplyDelete
  14. //ஞானவெட்டியான் said...
    அன்பு இரவி,
    சாதி குலத்தால் வருவதில்லை. வாழ்ந்து காட்டும் வழிவகைகளில் உள்ளது.//

    "நச்" என்று சொன்னீர்கள் ஞானம் ஐயா

    //அதில் உண்மையாக இறைவன் எங்குள்ளான் என்று அறியாத நீங்கள் எல்லாம் உயர் குலத்தோரா? என வினவுகிறார்//

    தங்கள் ஞானமெட்டி பதிவிலும் இதைப் படிக்கிறேன் ஐயா!

    //"கைசிக ஏகாதசி" முதலாகிலும் மக்கள் மனந்திருந்தினால் சரி//

    SK ஐயாவின் பின்னூட்டமும் பாருங்கள்! மன மாற்றம் பல நல்ல ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு வழி வகுக்கும்! இந்த மன மாற்றத்துக்கும் அவனையே நாமும் வேண்டுவோம்!

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    பெருமாள் திருமுன்பு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பெருமாளையும் அரையர் சேவையையும் நன்கு தரிசித்தேன். மறக்க முடியாத இரவு அது.//

    மிகவும் புண்ணியமான செயல் செய்தீர்கள் குமரன்; கொடுப்பினை வேண்டும் இதைக் காண்பதற்கு! நல்ல காலம் நீங்கள் கூட்டத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள்! நீங்கள் நேரில் கண்டதையும், அரையர் பாட்டு மற்றும் கை அசைவு/ பாவனைகள், தாளம் பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன்!

    //திருக்குறுங்குடியில் நடக்கும் நாடகத்தைப் பற்றி படித்ததாகத் தோன்றுகிறது. ஆனால் அது நினைவில் நிற்கவில்லை. இனி நிற்கும்//

    அடியேனுக்கு இதை விட மகிழ்ச்சி வேறு என்ன? எல்லார் நினைவிலும் நிற்கட்டும்!

    ReplyDelete
  16. //நீலகண்டன் said...
    நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு ஐயா.
    இந்து சமுதாயம் அனைத்து ஏற்ற தாழ்வுகளும் இலாத நல்நிலையை அடைய தங்களை போன்றோரின் சேவை அவசியம்.
    மிகவும் நன்றி//

    வாங்க நீலகண்டன் ஐயா! நல்வரவு!
    சரி நிகர் சமானமாக, அன்பில் ஓங்கித் தழைக்க அவன் தாள் பணிவோம்! நம் முயற்சிகளையும் அவன் அருளால் தொடர்ந்து செய்ய வேண்டும்! உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் தேவை!

    ReplyDelete
  17. //Anonymous said...
    excellent,//

    Thank you Mr/Ms. Anonymous!

    ReplyDelete
  18. //SK said...
    எவரையும் அணைத்திடும் பாங்கினை
    சொந்தமான தீந்தமிழில் இனிப்பாக எழுதிடும் உம்மை
    சந்தமுடன் போற்றி வாழ்த்திடுவேன் கண்னபிரானே!//

    கவிமழையில் கருத்துகளைக்
    கவினுடனே தருபவரே,
    புவிஇனிக்க புகழ்விருந்தை
    புகட்டும்நல் மருத்துவரே,

    தூற்றுவார் தூற்றல்களும்
    துடிப்பான செந்தமிழ்தான்!
    தூற்றட்டும்; சிலநாளில்
    மாற்றட்டும் மயிலழகன்!

    கவிதையாய் வாழ்த்திய SK ஐயா! உங்கள் ஆசியையும் கேட்டுப் பெறுகிறேன்! நன்றி என்றென்றும்!!

    ReplyDelete
  19. அருமையான பதிவு

    அதனிலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தம் பாடல் நான் இதற்கு முன் படித்தறியாதது.. படிக்கத்தந்தமைக்கும் தங்களின் பொருள் பொதிந்த கதை விளக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  20. //ஜடாயு said...
    நல்ல பதிவு, கண்ணபிரான் அவர்களே. இந்தக் கதையை எப்போதோ கேட்டிருக்கிறேன். தங்கள் பதிவில் இப்போது படிப்பது நல்ல ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது.//

    வாங்க ஜடாயு ஐயா! மிக்க நன்றி!
    அதுவும் இந்த நாளில் கேட்பதும் சொல்வதும் சிறப்பு தான்!

    //ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    ...
    அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகளாரே!//

    அய்யோ! என்ன ஒரு தொண்டு மனப்பான்மை! மதம் வளர்க்கும் நோக்கம் இன்றி, அன்பு ஒன்றே கைக்கொண்டு, சேவைப் புரட்சி தான் ஐயா!
    இவையெல்லாம் பலர் அறிய பகட்டாக வெளியில் தெரிவது இல்லை!
    அதனால் சுற்றி நிற்கும் குப்பைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன!

    குப்பையே இல்லாமல் ஒரு ஊர் தான் இருக்க முடியுமா?
    இந்தக் குப்பைகளை அகற்றி, உள்ளே கிடக்கும் மாணிக்கத்தைக் காண்பதற்கு அறிவும் பொறுமையும் நம் எல்லாருக்கும் பெருமாள் அருள வேண்டும்!!

    ReplyDelete
  21. எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  22. //வெட்டிப்பயல் said...
    கைசிக எகாதசி அன்று அதன் வரலாற்றை சொல்லியதற்கு நன்றி!!!
    இதுவல்லவோ செயலில் புரட்சி!//
    அருமையாக சொன்னீர்கள்!!!//

    பாலாஜி அனுபவித்துப் படிக்கறீங்க! மிக்க நன்றி!

    ReplyDelete
  23. //கால்கரி சிவா said...
    கண்ணா, புதுப்புது விஷயங்களை அனாவசியமா சொல்றியப்பா?//

    பாருங்க நீங்க சொன்னவுடன் குமார் சார் ஜாலியா சிரிக்கிறாரு!

    //நல்லபிள்ளை//
    முடிவே கட்டிட்டீங்களா?:-)

    //நல்லாயிருப்பா//
    நன்றி சிவாண்ணா!

    ReplyDelete
  24. //வடுவூர் குமார் said...
    அப்பாடி காலையில் இருந்து ஏதேதோ படித்து மண்டை காய்ந்த பிறகு ஒரு நல்ல பதிவை படித்த நிறைவு.//

    என்ன குமார் சார்! வாரக் கடைசி நாள் என்பதால் மண்டை காயும் வேலையா? பாருங்க கைசிக ஏகாதசியைப் பெருமாள் உங்களுக்காகவே அனுப்பிச்சி கூல் டவுன் பண்ணிட்டாரு :-)))

    //அதுவும் கால்கரி சிவாவின் நகைசுவை பின்னூட்டம் கொஞ்சம் சிரிப்பையும் வரவழைத்தது//
    :-)))))

    ReplyDelete
  25. //Anonymous said...
    அன்புடன்
    ச.திருமலை

    அருமையான தகவல். சுதாகர் ஸ்ரீமங்கை அவர்கள் எழுதிய பதிவையும் படித்திருப்பீர்கள். பேராசிரியர் ராமானுஜன் இந்த நாடகத்தை மீட்டெடுத்து நடத்தி வருவதை சுதாகர் எழுதியிருந்தார்//

    வாங்க திருமலை ஐயா!
    என்னப்பன் உறையும் மலையை பேரிலே கொண்டு வந்து இருக்கீங்க!
    சுதாகர் ஸ்ரீமங்கை அவர்கள் பதிவை மீண்டும் படிக்கிறேன்!

    //இந்த புண்ணிய நாளில் இந்தப் புண்ணியக் கதையை எங்களுக்குச் சொல்லி இந்து மதத்தின் சிறப்பினை விளக்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டீர்கள்//

    திருமலையப்பன் அருள் அன்றி வேறேது?

    //உங்களுக்கும் ஊர் திருக்குறுங்குடியோ ?//

    அவ்வளவு பாக்கியம் அடியேன் செய்யவில்லை!
    பிறந்தது தருமமிகு சென்னை!
    ஆனால் ஊர் என்னவோ வடார்க்காடு மாவட்டம் வாழைப்பந்தல்!
    ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை அருகில் உள்ளது!

    யாதும் ஊரே, யாவரும் கேளிர்ன்னு பாத்தா எனக்கு என் ஊர் திருப்பதி, திருவரங்கம், வில்லிபுத்தூர், மதுரை, ஒப்பிலியப்பன் கோவில், திருச்செந்தூர் ன்னு எல்லா ஊரையும் சொல்லிக்கணும் போல இருக்கு! :-) பேராசையோ? :-))

    ReplyDelete
  26. //Anonymous said...
    மிக அருமையான நாளுக்கேற்ற பதிவு...நன்றி ரவிசங்கர்.//

    வாங்க அனானி; நன்றிங்க!

    //இன்னும் ஒரு தகவல், டிவிஸ் அவர்களின் சொந்த ஊரும் இதுதான்...//

    ஆமாங்க! TVS அவர்களின் சொந்த ஊரும் இதான்! TVS அனிதா ரத்னம் அவர்கள் கைசிக நாடக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகப் பதிவிலும் சொல்லியுள்ளேன்!

    ReplyDelete
  27. அருமையான பதிவு

    அதனிலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தம் பாடல் நான் இதற்கு முன் படித்தறியாதது.. படிக்கத்தந்தமைக்கும் தங்களின் பொருள் பொதிந்த கதை விளக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  28. //Anonymous said...
    இன்று இக்கதையைப் படிக்க வைத்து
    எனக்கு புண்ணியம் கிடைக்க வைத்த
    உங்களுக்கும் நிறைய புண்ணியம்
    கிடைக்கட்டும்.மிக்க நன்றி.//

    அடியேனுக்கும் புண்ணியம் கிடைக்க ஆசி வழங்கிய அன்பான அனானி அவர்களே, மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  29. //சாத்வீகன் said...
    அருமையான பதிவு
    அதனிலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தம் பாடல் நான் இதற்கு முன் படித்தறியாதது..//

    வாங்க சாத்வீகன்!
    ஆமாங்க, ரொம்பவும் சாதுவான ஆழ்வார்ன்னு சொல்லுவாங்க! பேரே தொண்டரடிப்பொடி! ஆனால் கருத்துக்கள் மிகப் புரட்சிகரமானவை!!

    உங்க கம்ப ராமாயணம் குறித்த பதிவு பக்கம் அடிக்கடி வரலாம் என்று இருக்கிறேன்! கம்ப ராமாயாணப் பதிவு போட்டால், ஒரு இமெயில் அலர்ட் கொடுங்களேன்! நன்றி!!

    ReplyDelete
  30. //சிவமுருகன் said:
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்!//

    வாங்க சிவமுருகன்!
    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!
    எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம்!!

    ReplyDelete
  31. யாருப்பா அது அங்க, சொந்த ஊர் குறுங்குடியா என்று கேட்டது!
    குறுங்குடிக்குச் சொந்தக்காரங்க இப்ப சிகாகோவில் விடுமுறைக்கு இருக்காங்க!

    நாச்சியார், குறுங்குடி வல்லி என்று பதிவுலகில் பரிமளிக்கும் வல்லியம்மா எங்கே, இன்னைக்குன்னு பாத்து காணோம்!

    வல்லியம்மா, உங்க பேரைச் சொல்லிவிட்டோம், உங்கள் ஊர் பதிவில்! :-))))

    ReplyDelete
  32. நல்ல நாளில் வெகு அருமையான பதிவு.நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவாகவும், ஆழமான கருத்துக்களோடும் எடுத்துச் சொல்லும் முறையிலும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  33. ரவிசங்கர்,நன்றி நன்றி.
    எம்பெருமான் நம்பெருமாள் நம்பாடுவானை இந்தக் குளிரில் துதிக்க வைத்து என்னை காப்பற்றினீர்கள்.
    ஏகாதசிமூடிந்து துவாதசியும் வந்துவிட்டது, படிப்பதற்கு உட்கார.

    எங்க ஊரை இங்கே நினைக்க, படிக்க என்ன தவம் செய்தேனோ.
    இங்கெ பனிமழையால் நெட்,போன்,டிவி அனைத்தும் அவுட்.

    சென்னையா இருந்தா இரண்டு போன் செய்தா போறும். இங்கே நாங்க காத்திருக்க வேண்டி வந்தது.
    மெயில் திறந்ததும் கண்ணில் குறுங்குடி.
    இதை விடப் பெரிய பரிசு அடுத்தாற்போல் வரவிருக்கும் குட்டிப் பையன்தான்.
    வெறுமே நன்றி சொன்னால் போதாதுப்பா.
    அதற்கு மேல் வேறு ஏதாவது சொல்லணும்னால் உங்க அம்மா அப்பா ரொம்பக் கொடுத்துவைத்தவர்கள்,நீங்களும் குடும்பமும் குறுங்குடிஅழகிய நம்பியும் அத்தனை பெருமாளும் கூட இருந்து காப்பாத்துவார்கள்.

    ReplyDelete
  34. நம்ம பக்கத்து ஊரில் இந்த மாதிரி ஒரு விசேஷமா? இது வரை தெரிஞ்சுக்காம இருந்துட்டேனே. சொல்லித் தந்ததுக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

    அப்புறமா நம்ம கால்கரியார் நகைச்சுவையா 'அனாவசியம்' என்ற வார்தையை சொல்ல வில்லை என்றே தோன்றுகிறது. அவர் 'அனாயாசம் (effortless)'எனச் சொல்ல வந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  35. //கீதா சாம்பசிவம் said:
    நல்ல நாளில் வெகு அருமையான பதிவு.நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவாகவும், ஆழமான கருத்துக்களோடும் எடுத்துச் சொல்லும் முறையிலும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.//

    மிக்க நன்றி கீதாம்மா; SK ஐயா சொன்னது போல், எங்கே பதிவின் தன்மையை, சர்ச்சைக்கு உள்ளாக்குவர்களோ என்ற கவலை எல்லாம், உங்களைப் போன்ற புரிதல் கொண்ட நல்ல அன்பர்கள் வாழ்த்தும் போது, பறந்து விடுகிறது!

    ReplyDelete
  36. // வல்லிசிம்ஹன் said...
    எங்க ஊரை இங்கே நினைக்க, படிக்க என்ன தவம் செய்தேனோ.
    இங்கெ பனிமழையால் நெட்,போன்,டிவி அனைத்தும் அவுட்.//

    பாருங்க வல்லியம்மா, குறுங்குடி நம்பி, உங்களைத் துரத்திக் கொண்டு சிகாகோ வரை வந்து விட்டான்!:-)))

    //பெரிய பரிசு அடுத்தாற்போல் வரவிருக்கும் குட்டிப் பையன்தான்.//

    Our wishes in advance!
    உங்கள் குரல், மிகவும் மென்மையாக, இனிதாக உள்ளது! நல்லா பாடுவீங்களா வல்லியம்மா?

    //வெறுமே நன்றி சொன்னால் போதாதுப்பா//

    நன்றியெல்லாம் நாம் ஆழ்வார்க்குச் சொல்ல வேண்டியது வல்லியம்மா; உங்க அன்பும் ஆசியும் இவையே அடியேனுக்குப் போதும்!

    ReplyDelete
  37. //இலவசக்கொத்தனார் said:
    நம்ம பக்கத்து ஊரில் இந்த மாதிரி ஒரு விசேஷமா? இது வரை தெரிஞ்சுக்காம இருந்துட்டேனே. சொல்லித் தந்ததுக்கு நன்றி கே.ஆர்.எஸ். //

    ஓ...கொத்ஸ், உங்க பக்கத்து ஊரு இல்லையா! திராச பதிவுல சொன்னீங்க, மறந்தே போச்சு! அது என்ன குறிச்சி? :-))))

    //அப்புறமா நம்ம கால்கரியார் நகைச்சுவையா 'அனாவசியம்' என்ற வார்தையை சொல்ல வில்லை என்றே தோன்றுகிறது. அவர் 'அனாயாசம் (effortless)'எனச் சொல்ல வந்திருப்பார் என்றே நினைக்கிறேன்//

    ஆமாம் கொத்ஸ், அனாயாசம் ன்னு தான் சொல்ல வந்தார்! செங்கிருத வார்த்தையா, அதான் சில சமயம் அதைத் தமிழில் எழுதும் போது இப்பிடி!

    பாருங்க நண்பரை வீட்டுக் கொடுக்காம ஓடியாந்துட்டீங்க :-))

    ReplyDelete
  38. //தி. ரா. ச.(T.R.C.) said...
    உள்ளேன் சங்கரா //

    திராச ஐயா, உங்க ஆசியால்,
    அடியேனும் உள்ளேன்!:-))

    ReplyDelete
  39. //ஓ...கொத்ஸ், உங்க பக்கத்து ஊரு இல்லையா! திராச பதிவுல சொன்னீங்க, மறந்தே போச்சு! அது என்ன குறிச்சி? :-))))//

    கல்லிடைக்குறிச்சி - மலைகள் நடுவே இருக்கும் ஊர் எனப் பொருள். தாமிரபரணி நதிக்கரை.

    ReplyDelete
  40. கூத்துப்பட்டறை அறிமுகத்துக்கு நன்றி !!!

    ReplyDelete
  41. //இலவசக்கொத்தனார் said...
    கல்லிடைக்குறிச்சி//

    இனி மறக்க மாட்டேன் கொத்ஸ்! :-))

    ReplyDelete
  42. //செந்தழல் ரவி said...
    கூத்துப்பட்டறை அறிமுகத்துக்கு நன்றி !!! //

    வாங்க ரவி!
    "பசித்திரு, விழித்திரு" பதிவாளர் செந்தழலாரை இங்கு மாதவிப் பந்தலில் வரவேற்பது எனக்கு மகிழ்ச்சியே!

    கூத்துப்பட்டறை நாடகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்; தனிப்பதிவு போட வேண்டும்!

    ReplyDelete
  43. Mr. Srinivasan has sent this in an email

    Vanakkam sir,
    your articles in tamizhmanam were very excellent, I pray god to give u and ur family good health &cheers.

    My wife called me on kaisika ekadsi day early morning, and informed me today is kaisika ekadasi , I explained her the story of nampaduvan and thirukurungudi divyadesam,she astonished I told her this is from ur article I learned .it is really very good.
    see u later,
    anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  44. ரவிசங்கர்

    இப்பதிவின் நீங்க சொல்ல கருத்து நல்ல கருத்து!

    நன்றி!

    ReplyDelete
  45. //Sivabalan said:
    இப்பதிவின் நீங்க சொல்ல கருத்து நல்ல கருத்து!//

    நன்றி சிபா!

    ReplyDelete
  46. thangalin melana pathiviruku mutha mariyathai.

    padithu migavum anantham adainthen.Kaisigan n pann i marunthu vazhum nam anaivarkum miga atrputha padam.

    ithagaiya aruputhamana puranathai ella medaigalukum kondu sella ARANGA i vendugiren.

    Ennudia oru santhegam:
    Kaisiga ekadesi andru Sriranga thil perumal purappadu vallthu padiel(padiettram) nadaikirathu. Why?

    ippadikku Sundaram Mumbai

    ReplyDelete
  47. first time visit.excellent .totally relevant in today's situation in our country.

    Best wishes on ur sincere and superlative effort to bring this episode to simpleton like me.

    one doubt: During Kaisika Ekadesi,perumal purappadu Srirangathil Rightside padikkatil nadakkirathy. why? adiyen sundaram

    ReplyDelete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  49. //Anonymous said:
    thangalin melana pathiviruku mutha mariyathai.//
    மிக்க நன்றி சுந்தரம் ஐயா.

    //ithagaiya aruputhamana puranathai ella medaigalukum kondu sella ARANGA i vendugiren.//
    அரங்கன் அருள் பல ஏற்றத் தாழ்வுகளைப் படிப்படியாக நீக்க வேண்டும்!

    ReplyDelete
  50. //Ennudia oru santhegam:
    Kaisiga ekadesi andru Sriranga thil perumal purappadu vallthu padiel(padiettram) nadaikirathu. Why?//

    இது கொஞ்சம் வரலாற்றுப் பூர்வமானதுங்க சுந்தரம் ஐயா! கற்பூரப் படியேற்று என்று சொல்லுவார்கள்!

    முன்பு திருவரங்கம் அந்நியர் படையெடுப்பால் சூறையாடப்பட்ட போது, நம்பெருமாள் திருமேனி, திருமலைக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டது; விருந்தினர் என்பதால் முதல் நிவேதனமும் இவருக்குச் செய்தே பின்னர் வராகருக்கும், வேங்கடத்தானுக்கும் செய்தார்கள்! இன்று கூட திருமலைக் கோவிலில் உள்ள இந்த மண்டபத்துக்கு ரங்நாயக மண்டபம் என்றே பெயர்!

    திருவரங்கத்தில் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் சார்த்தி, 365 ஆரத்தி நடக்கும்! பின்னர் சுவாமிக்குப் படியேற்றம் நடந்து உள் அழைத்துச் செல்வார்கள்; அப்போது பச்சைக் கர்ப்பூரம் தூவப்படும்!

    நெடுநாள் திருமலையில் வாசம் இருந்து, பின்னர் திருவரங்கம் வருவதைக் குறிக்கத் தான் இந்த ஏற்பாடு, வலப் படியேற்றம் என்றே நினைக்கிறேன்!

    அண்மைக் காலமாக, ஒவ்வொரு கைசிக ஏகாதசியின் போதும், நம்பெருமாளுக்குத் திருமலையில் இருந்து மாலை, சேஷ வஸ்திரங்கள், சந்தனம், தாம்பூலம் எடுத்து வந்து, மரியாதை செய்கிறார்கள் திருமலைக் கோவில் தலைவர்/அலுவலர்கள். அன்று திருமலையில் வைக்கப்பட்டு ஆராதித்ததின் நினைவாக இது இப்போதும் செய்யப்படுகிறது!

    ReplyDelete
  51. //Anonymous said:
    first time visit.excellent .totally relevant in today's situation in our country.//

    நன்றிங்க! ஏகாதசியை விட, அதில் உள்ள நற்சிந்தனையை எண்ணித் தான் இந்தப் பதிவிட்டது!

    ReplyDelete
  52. இரவிசங்கர். இந்தக் கற்பூரப் படியேற்று விழாவைக் காண வந்து தானே ஒரு அரசர் ஒரு வருடம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்?

    ReplyDelete
  53. நல்லபதிவு,

    எனக்கு இது புதிய விசயம்.

    தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்ன து வள்ளுவரின்,

    அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் ..

    எனும் குறளை ஞாபகப்படுத்துகிறது.

    ReplyDelete
  54. sundaram again,
    mikka nanri.thangalin uarantha, atrputhamana pathilai padithu paravasamanen.thangalin natrpani melum melum thodara iraivanidam irainjum- dasan

    ReplyDelete
  55. // குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர். இந்தக் கற்பூரப் படியேற்று விழாவைக் காண வந்து தானே ஒரு அரசர் ஒரு வருடம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்?//

    நானும் இந்தக் கதையைச் சொல்லத் தான் கேள்வி குமரன்; தாமதமாக வந்து வலப்படி ஏற்றத்தை மிஸ் பண்ண அரசன். மனம் ஆறாது, அரங்கன் அழகை ஒரு வருடம் இருந்து பார்த்து விட்டுச் சென்றான் என்பார்கள்!
    ஆனால் எந்த அரசன் என்றெல்லாம் தெரியாது!

    ReplyDelete
  56. //குலவுசனப்பிரியன் said...
    நல்லபதிவு,
    எனக்கு இது புதிய விசயம்//

    நல்வரவு குலவுசனப்பிரியன்! நன்றி.

    //அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் ..//

    நல்ல குறளை எடுத்துக் கொடுத்திருக்கீங்க!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP