Friday, December 29, 2006

தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3

முந்தைய பாகம் இங்கே!
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?

பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!
மோக்ஷ ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!
கீதை பிறந்ததும் இன்று தானே!
மூலவர் அரங்கநாதனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!

நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன்!
அவர் நம்முடைய ஆழ்வார், நம்மை உடைய-ஆழ்வார், நம்மாழ்வார்!
அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.

குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் ஒட்டிக்கொண்ட குட்டியைப் போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! உண்மையில், சொர்க்க வாசல் என்பதை விட வைகுந்த வாசல், பரமபத வாசல் என்று சொல்வது தான் பொருத்தமானது!

விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, நாதன் அரங்கன் அவன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அவன் நடை அழகு! திருக் குடை அழகு!
கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!

TY03NAMPERUMAL
முன் அழகன், பரமபத வாசல் சேவை

பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர்இதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியோர்க்கு அகல லாமே


63632967.Cg6l9Pbe
முன்னிலும் பின் அழகன், திருக்குடை அழகு!

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!
அரங்கன் அடி முடி ஜொலிக்கக் காட்டப்படும் தசாவதாரக் கற்பூர தீப சேவை!


சரி, கதைக்கு வருவோம்!
சுவாமி புறப்பாடு மாலையில் நடந்து கொண்டு இருக்கிறது! வீதியுலா வருகிறான் இறைவன்! கூடவே நம்ம பிள்ளைப் பெருமாள் ஐயா அரங்கனுக்கு வியர்க்குமே என்று வெண்சாமரம் வீசிக் கொண்டு வருகிறார்;
கதிரவன் மறையும் நேரம்! பிள்ளையின் தோளில் யாரோ தட்டுகிறார்கள்! சடக்கென்று திரும்பிப் பார்க்கிறார்; வேற யாரு, நம்ம ரங்கன் தான்!

* பிள்ளைவாள், சந்தி செய்யும் நேரம் வந்து விட்டதே! நீங்க செய்யப் போகலியா?
அது எப்படி சுவாமி? நீங்க புறப்பாடு வந்து கொண்டு இருக்கிறீர்களே!
* அதனால் என்ன? என்னைத் நடுத்தெருவில் அப்படியே வைத்து விட்டுப் போங்கள்! சந்தியை முடித்து விட்டு வாருங்கள், மீண்டும் புறப்பாடு தொடரலாம்!
இது என்னடா இது? ரங்கனுக்குப் பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா? என்ன உளறுகிறார் சுவாமி? யாராச்சும் சுவாமியை நடுத்தெருவில் விட்டுவிட்டு சந்தி செய்யப் போவார்களா?

* என்ன பிள்ளைவாள் யோசிக்கிறீர்? எனக்குச் சித்தம் கலங்கி விட்டது என்றா? ஹா ஹா! உம் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே!
விளங்கவில்லை சுவாமி! நான் தான் ஞான சூன்யம் என்று அப்போதே சொன்னேனே!

* சரி, நானே சொல்கிறேன். கேளுங்கள்!
சந்தி என்பது தினசரி தர்மம்; சுவாமிப் புறப்பாடு என்பது விசேட தர்மம்!
இன்று மாலை வேளையில் இந்தப் பெரிய தர்மத்துக்காக, அந்தச் சிறிய தினசரி தர்மத்தை ஒத்தி வைக்கிறீர் அல்லவா? - ஆமாம் சுவாமி!
* ஆனால் இப்படி தசரதரோ, பீஷ்மரோ, துரோணரோ செய்யவில்லை!

* தத்தம் தினசரி தர்மம் காப்பாற்ற வேண்டும் என்ற "நன்னலமான தன்னலத்தில்", பொதுநலனை எப்படியோ அவர்கள் மறந்து போனார்கள்! ஒருவருக்கோ கைகேயிக்குத் தந்த வாக்கு தர்மம் பெரிதாய்த் தோன்றியது! மற்றவருக்கோ உண்ட வீட்டுத் தர்மம்!

அதனால் என்னையே அம்போ என்று விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்!
அவர்கள் சிந்தித்துச் செயல்பட நானும் கொஞ்சம் நேரம் தந்தேன்! ஆனால் பாவம், அவர்களால் தர்ம சங்கடத்தில் இருந்து மீண்டுவர முடியவில்லை!
என்ன, புரிந்தாற் போல் இருக்கிறதா பிள்ளைவாள்? - லேசாகப் புரிகிறது ரங்கா!

renganatha

* ததிபாண்டன் பொய் தான் சொன்னான்; ஆனால் அவனுக்குப் பழி வந்தாலும் பரவாயில்லை என்று, எனக்காகத் துணிந்து சொன்னான்.
முன்பு கோபியர்கள் தங்கள் பாதம் பட்ட மண்ணை என் தலையில் பூசினார்கள் அல்லவா?
அவர்களுக்குப் பாவம் வந்தால் கூட பரவாயில்லை, என் நோய் தீர்ந்தால் போதும் என்ற ஒரு வாஞ்சை!
துரியோதனன் கூட அவன் காலடி மண்ணை என் தலையில் போடுவேன் என்று தான் கர்ஜித்தான்! இரண்டு வினைகளும் ஒன்று தானே! நோக்கம் தான் வேறு!
நீங்களே சொல்லுங்கள், அடியவன் என்னை மனத்தில் சுமந்தால், அவன் பாரத்தினை அடியேன் சுமக்க மாட்டேனா!

பிள்ளை வாய் அடைத்துப் போய்விட்டார்!
ஒன்றுமே பேச முடியவில்லை! கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
சுவாமி நீங்களே, உங்கள் திருவாயால், உங்களைப் போய் அடியேன் என்று சொல்கிறீரே. இது அழகா?
* பிள்ளாய், அடியவர்களுக்கு அன்பன் நான்;
அப்படி என்றால் அடியார்க்கு அடியான் தானே! உன் மனம் ஒப்பவில்லை என்றால், நீ மகாலக்ஷ்மியிடம் வேண்டுமானால் கேட்டுப் பார்!
அவள் காருண்ய லக்ஷ்மி, அவள் என்ன சொல்வாள் என்று பிள்ளைக்குத் தெரியாதா என்ன?

* ஜகத்குருவே நான் தான்! ஆனால் எனக்கே ராமானுஜர் குருவாக அமைய வில்லையா? அது போல் தான் அன்பருக்கு நான் அடியேன் ஆவதும்!
ராமானுஜர் முறைப்படுத்திக் கொடுத்தது தானே, நீங்கள் இப்போது என்னை அழைத்துச் செல்லும் இராப்பத்து உற்சவம்?
சரி யோசனையை விடுங்கள்! "அனுபவிக்குனும்; ஆராயக் கூடாது!" என்பது வலைப் பெரியோர் வாக்கு!

* வாருங்கள், தீந்தமிழ்ப் பாசுரங்கள் தொடங்கட்டும்!
ஆமாம், நம்மாழ்வாருக்கு ஓலை அனுப்பினேனே திருவரங்கம் வரச் சொல்லி! இன்னுமா அவர் வரவில்லை?
குருகூரில் இருந்து கிளம்பி விட்டாராம் சுவாமி! இதோ வந்து விடுவார்!

mohini_Srirangam

* சரி, எங்கே நான் அனுப்பிய இன்னொரு ராஜ ஓலையைப் படியுங்கள்!

"யாமே, உபய நாச்சியார்களோடு, ரத்ன சிம்மாசனத்தில் கொலுவிருந்து,
பகல்பத்து-ராப்பத்து நாட்களில், எல்லாத் தமிழ் வேதங்களையும்
செவிகுளிரக் கேட்கச் சித்தம்!
அது போழ்தினிலே எவ்வொருவரும் யாது மந்திரங்களையும், பாடல்களையும் தனியே சாற்ற வேண்டாம்!
கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விலக்கு!

- (ராஜ முத்திரையுடன்) அரங்கத்தான் ஆணைப்படி!

* சரி, பல்லக்கைக் கொலு மண்டபத்துக்குத் தூக்கச் சொல்லுங்கள்!
நீங்களும் அங்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!
அப்படியே ஆகட்டும் ரங்கா, மன்னிக்கவும்; பேரரசே ரங்கராஜா!

யார் அங்கே?
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓஓஓஓஓஓஓர் - எங்கே?
அடியோம் இந்தோஓஓஓஓஓஓஓஓஓம்!

42 comments:

  1. தன்னல தர்மத்தினும் பொதுநல தர்மம் பெரிது.

    எத்துணை சத்திய வார்த்தைகள். இறைவனே பொதுநலத்தை முன்னிறுத்துகிறான். நன்று.

    ReplyDelete
  2. ராஜாதிராஜன் ரங்கராஜன் வந்தான்.
    வையாளி நடையொ
    வைபவ நடையொ
    அரங்கன் நடை அழகு மோஹன நடை
    பராங்குச நாயகியை மயக்க வந்த நடை. பரான்குச நாயகி(நம்மாழ்வார்) சொல்கிறாளாம்.
    ரங்கா உன் ஆடை மாறினாலும்
    உன் பார்வை மாறவில்லை.
    தாயார் பார்வயில் உள்ள காருண்யம் உன் கண்ணில் இல்லை என்கிறார்.நம்மாழ்வார்.

    ReplyDelete
  3. கதை சொல்லிக் கருத்தை உணர்த்தி, அக்கருத்தைக் காண வைகுந்த வாயிலையும் திறந்து காட்டியமைக்கு நன்றி.
    ஆமாம். மோகினி அலங்காரத்தை ஏன் ஒதுக்கிவிட்டீர்?

    ReplyDelete
  4. Sri KRS,

    Many thanks for taking us all to SRIRANGAM on VaikuntaEkadesi Paramapadavasal virtualSevai .
    DadiPandandavanin Motcha vilakkam Arumai.

    Thiruppavain trans-literation Desikan valaipathivil illai-Translation is only available.

    Pagalpathuu-Irapathuu mudinthathum ,my prayer to u for a virtual trip on all Pragarams and Sannidhis of SRIRANGAM.

    Ennudaiya Perasaii Ningalthan Thirthuvaikkamudiyum ennru nambigeren.

    Adiyen Sundaram.

    ReplyDelete
  5. கதை சொல்லிக் கருத்தை உணர்த்தி, அக்கருத்தைக் காண வைகுந்த வாயிலையும் திறந்து காட்டியமைக்கு நன்றி.
    ஆமாம். மோகினி அலங்காரத்தை ஏன் ஒதுக்கிவிட்டீர்?

    ReplyDelete
  6. கண்டேன் கண்டேன் காணுதற்கறிய அரியவனைக் கண்டேன்.வீட்டில் ஓ.ஸ். அருணின் நாராயண நாராயண ஹரி ஹரி என்ற பாட்டு ஒலித்துக்கொண்டு இருக்குபோதே காணும் வாய்ப்பு கிடைத்தது.பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ரவிஷன்கர்

    ReplyDelete
  7. வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு அற்புதமான பதிவு கண்ணபிரான். அருமை!

    "ஓ சந்தியாவந்தனமே, உனக்கு வந்தனம், போய் வா" என்று தொடங்கும் சுலோகம் ஒன்று கிருஷ்ணகர்ணாமிருதம் என்ற பக்திநூலில் உண்டு, அது நினைவுக்கு வருகிறது! உண்மையான பக்திக்கு முன்னால் எல்லா சடங்குகளும் மதிப்பிழக்கின்றன.

    இதைத் தான் "லோக வேத வ்யாபார ந்யாஸ:" என்று நாரத பக்தி சூத்திரம் கூறுகிறது. உலகியல் கடன்கள், வேதக் கடன்கள் இரண்டையும் துறப்பதே உண்மையான பக்தியின் இலக்கணம். நித்ய கர்மாவின் மேல் உள்ள அப்செஷனும் ஒரு விதமான தடைக்கல், இதைத் தான் "வேத லஜ்ஜா" என்று சைதன்ய மகாப்ரபு குறிப்பிடுகிறார்.

    நீங்கள் சொன்ன அரங்கன் அடியார் சரிதம் இந்தக் கருத்துக்களை அழகாக விளக்குகிறது!

    அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை.
    - நாரத பக்தி சூத்திரம்

    ReplyDelete
  8. அரங்கனை இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தேன், இங்கும் காட்சி அளித்துவிட்டான்....அருமையாக இருக்கிறதய்யா பதிவு....இதனை எழுதிய உமக்கு அரங்கன் எல்லாமும் அருளுவான்....

    வல்லியம்மா, உங்க பின்னூட்டமும் அருமை....சரியான இடத்தில் சரியானதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

    மெளலி

    ReplyDelete
  9. கண்ணில் நீர் வரப் படித்தேன். இன்று காலை எனக்குத் தொலைக்காட்சி மூலம் பெருமாளின் அற்புத சேவையும் கிடைத்தது. ரொம்பவே ஆனந்தமயமான பதிவு. அனுபவித்து எழுதுகிறீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அங்கே திருமாலிருஞ்சோலை அழகனைக் காட்டிவிட்டு இங்கே திருவரங்கனையும் காட்டிவிட்டீர்கள் இரவிசங்கர். அருமையான சேவை. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. மூலவரின் முத்தாங்கி சேவையை அனுப்பிவைத்திருக்கிறேன். மின்னஞ்சலைப் பாருங்கள்.

    ReplyDelete
  12. நம்மாழ்வாருடன் சேர்ந்து அடியோங்களும் அவன் அருள் பெற்று 'நோற்காமலேயே சுவர்க்கம் புகும்' வழியைக் காட்டிவிட்டீர்கள். நன்றி நன்றி.

    நீங்கள் சொன்னது போல் அது பரமபத வாசல், மோட்சவாசல், வைகுந்த வாசல் என்பது தான் சரி. ஆனால் மக்கள் நடுவில் அது சொர்க்க வாசல் தான். மக்கள் சொன்னதையே எடுத்துக் கொள்ளும் கோதையும் 'நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்' என்று அதனை சுவர்க்கம் என்றே சொல்லியிருக்கிறாள்.

    ReplyDelete
  13. அரங்கனின் முன்னழகும் பின்னழகும் கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்.

    ததிபாண்டன் மோட்சத்திற்கும் தசரதர், துரோணர், பீஷ்மர் இவர்களின் சொர்க்கபிராப்திக்கும் அரங்கன் சொன்ன விளக்கத்தை பிரகலாதன், மகாபலி, வீடணன் போன்றவர்களின் முடிவிற்கும் சொல்லுவார்கள். பிரகலாதன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பு என்பார்கள் இந்தக் கருத்தை புரியாதவர்கள். தருமத்தின் தலைவனுக்கு முன்னே தருமத்தின் உருவே ஆனவன் முன்னே சிறிய தருமமான குலத்தைக் காத்தல் பகலவனுக்கு முன்னே மின்மினிப்பூச்சியைப் போன்றது. மின்மினிப்பூச்சிக்காக பகலவனைத் துறப்பது கண்ணில்லாதார் செய்யும் செயல். குருவின் வழிகாட்டுதலை கோவிந்தனுக்காகத் துறந்தான் மகாபலி. குருவின் சொல் கேட்டல் அங்கே சிறு தருமம் ஆகிவிட்டது. தமையனை விட தருமமே மேல் என்றான் வீடணன்.

    ReplyDelete
  14. வேதங்கள் சொல்ல மட்டுமே இந்த மாதத்தில் தடை என்று எண்ணினேன். எந்த விதமான வ்டமொழி மந்திரங்களுக்கும் தடையா? கோதையின் திருப்பாவையும் நம்மாழ்வாரின் நான்கு தமிழ் வேதங்களும் பாடவே அனுமதியா? நன்று நன்று. அநத்யயன காலத்தைப் பற்றி வேறு பதிவில் கேட்டதற்கு இங்கே விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  15. வல்லி அம்மா. இரவிசங்கர் அரங்கனின் மோகினி திருக்கோலத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாவிட்டாலும் நீங்கள் அழகாக அவன் என்ன தான் பெண் உடையில் வந்தாலும் தாயாரின் கருணைக்கண் பார்வையை அவன் நடிக்கும் போது கூட பெற முடியாது என்பதைச் சொல்லி அழகான விளக்கம் தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  16. ஜடாயு ஐயா. நீங்கள் சொல்வது சாமானிய தருமங்கள் எல்லோராலும் எப்போதும் பின்பற்றப்படவேண்டும்; ஆனால் பக்தியில் தானாக அவை நழுவினால் தவறில்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன். சரியா? இல்லையேல் என்னைப் போன்ற அரைகுறைகள் தருமங்களை நழுவவிட்டுவிட்டு பக்தியின் பின்னால் போய் ஒளிந்து கொள்வோம்.

    ReplyDelete
  17. //சாத்வீகன் said...
    தன்னல தர்மத்தினும் பொதுநல தர்மம் பெரிது.
    எத்துணை சத்திய வார்த்தைகள். இறைவனே பொதுநலத்தை முன்னிறுத்துகிறான். நன்று//

    நன்றி சாத்வீகன்!
    பொதுநலத்தை தர்மத்தை முன்னிறுத்த தானே நமக்காக அத்தனை முறை பூமிக்கு இறங்கி வந்ததும்!

    ReplyDelete
  18. //வல்லிசிம்ஹன் said...
    ராஜாதிராஜன் ரங்கராஜன் வந்தான்.
    வையாளி நடையொ
    வைபவ நடையொ
    அரங்கன் நடை அழகு மோஹன நடை//

    வல்லியம்மா,
    அடுத்த பதிவில் தமிழில் கட்டியம் கூறுவது பற்றிச் சொல்லலாம் என்று இருந்தேன்!
    நீங்கள் முந்திக் கொண்டீர்கள் பின்னூட்டத்தில்! :-)

    //ரங்கா உன் ஆடை மாறினாலும்
    உன் பார்வை மாறவில்லை.
    தாயார் பார்வயில் உள்ள காருண்யம் உன் கண்ணில் இல்லை என்கிறார்.நம்மாழ்வார்//

    கோளுக்குச் சமர்த்தன், மேலுக்கும் மாறி வந்தாலும்
    நாம் கண்டுபிடித்து விடுவோமே!
    தயாசாகரியின் குளிர்ந்த திருக்கண்கள் முன் எம்பெருமான் போட்டி தான் போட முடியுமா? :-)
    மாயோன் அவனே மயங்கி அல்லவோ போவான்!

    ReplyDelete
  19. //ஞானவெட்டியான் said...
    கதை சொல்லிக் கருத்தை உணர்த்தி, அக்கருத்தைக் காண வைகுந்த வாயிலையும் திறந்து காட்டியமைக்கு நன்றி.//

    நன்றி ஞானம் ஐயா. ஏகாதசிப் பதிவுகள் ஒன்று விடாமல் வந்து உங்கள் அன்புச் சொற்கள் தந்தீர்களே!

    //ஆமாம். மோகினி அலங்காரத்தை ஏன் ஒதுக்கிவிட்டீர்?//

    ஹி ஹி!
    ஒதுக்க வில்லையே ஐயா!
    கடைசிப் படம் மோகினி அலங்காரம் தானே! ஹூம் என்ன தான் மோகினி வேடம் போட்டாலும் எங்கள் தாயாரின் முகப் பொலிவும் கருணையும், ரங்கா...போதும் ரொம்ப முயற்சி செய்யாதே! :-)

    மோகினி பகல் பத்தில் இறுதி சேவை!
    பின்னர் பரமபத வாசல்!
    அதன் பின்னர் ராப்பத்து!

    ReplyDelete
  20. //Anonymous said...
    Sri KRS,
    Many thanks for taking us all to SRIRANGAM on VaikuntaEkadesi Paramapadavasal virtualSevai .
    DadiPandandavanin Motcha vilakkam Arumai.//

    நன்றி சுந்தரம் சார்!

    //Thiruppavain trans-literation Desikan valaipathivil illai-Translation is only available.//

    ஹூம்; தேடிப் பார்க்க வேண்டும்!

    //Pagalpathuu-Irapathuu mudinthathum ,my prayer to u for a virtual trip on all Pragarams and Sannidhis of SRIRANGAM.
    Ennudaiya Perasaii Ningalthan Thirthuvaikkamudiyum ennru nambigeren.//

    ஆகா...இது என்ன குருவியின் தலையில் பனம் பழம் வைக்கிறீர்களே!
    அடியேனின் ஊர் திருவரங்கம் என்று! (இருந்தாலும் அவன் ஊர் நம்மூரு தானே!)

    திருமலையும் அப்படியே! ஆனால் திருமலை நுணுக்கங்கள் தெரிந்த அளவு அரங்கத்தின் தகவல்கள் தெரியாது. பல செய்திகள் பெரியோர் சொல்லிக் கேள்வியே! சிலவற்றை மட்டும் நேரில் பார்த்ததுண்டு! அவ்வளவே!

    திருவரங்கத்துக்குச் சொந்தமானவர்கள் எல்லாரும் வாங்க! சுந்தரம் ஐயா என்ன கேட்கிறார் பாருங்க!

    மெட்ராஸ்காரன் நான்;
    திருவரங்கம் பற்றி 'எம்மாம் பெர்சா' எழுதினாலும் நிற்குமா? :-)

    ReplyDelete
  21. //தி. ரா. ச.(T.R.C.) said...
    வீட்டில் ஓ.ஸ். அருணின் நாராயண நாராயண ஹரி ஹரி என்ற பாட்டு ஒலித்துக்கொண்டு இருக்குபோதே காணும் வாய்ப்பு கிடைத்தது//

    ஆகா, இதுவல்லவோ தரிசனம்!

    //பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ரவிஷன்கர்//

    நன்றி திராச ஐயா!

    ReplyDelete
  22. //ஜடாயு said...
    வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு அற்புதமான பதிவு கண்ணபிரான். அருமை!//

    நன்றி ஜடாயு ஐயா.

    //"ஓ சந்தியாவந்தனமே, உனக்கு வந்தனம், போய் வா"... உண்மையான பக்திக்கு முன்னால் எல்லா சடங்குகளும் மதிப்பிழக்கின்றன//

    உண்மை தான் ஜடாயு ஐயா!
    ஆனா நம்ம மக்களுக்குச் சொல்லியாத் தரணும்; Exception கொடுத்தால் அதில் Expertise ஆக்கி விடுவார்களே! :-)

    அதான் போலும் தினசரி தர்மம் பழகி, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏணி மேல் ஏறச் சொன்னார்!

    //நித்ய கர்மாவின் மேல் உள்ள அப்செஷனும் ஒரு விதமான தடைக்கல், இதைத் தான் "வேத லஜ்ஜா" என்று சைதன்ய மகாப்ரபு குறிப்பிடுகிறார்.//

    ஏணி மேல் ஏறி முடிந்தவுடன், ஏணியையும் தூக்கிக் கொண்டுத் திரிவேன் என்றால் எப்படி? ஏற்றிய ஏணியை உதைக்கக் கூடாது; ஆனால் அதை வரப்போகிறவர்களுக்கு விட்டு வைத்துச், செல்லலாம் அல்லவா?

    ReplyDelete
  23. //Mathuraiampathi said...
    அரங்கனை இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தேன், இங்கும் காட்சி அளித்துவிட்டான்....அருமையாக இருக்கிறதய்யா பதிவு....இதனை எழுதிய உமக்கு அரங்கன் எல்லாமும் அருளுவான்....//

    ஆகா, அரங்க தரிசனம் நேரே ஆகியதா! அருமை மெளலி சார்! முத்தங்கி கண்டீர்களா? நாழி கேட்டான் வாசலில் அன்னை எட்டிப் பார்ப்பாளே அரங்கனை? கண்டீர்களா?
    எங்கள் அரங்கன் நலம் தானா?

    நன்றி மெளலி சார்!

    ReplyDelete
  24. //கீதா சாம்பசிவம் said...
    கண்ணில் நீர் வரப் படித்தேன். இன்று காலை எனக்குத் தொலைக்காட்சி மூலம் பெருமாளின் அற்புத சேவையும் கிடைத்தது.//

    இங்கு தொலைக்காட்சியில் அரங்கனைக் காட்டவில்லையே கீதாம்மா! நான் என்ன செய்ய! அதான் பதிவில் அவனைக் கண்டு திருப்தி கொள்கிறேன்!

    //ரொம்பவே ஆனந்தமயமான பதிவு. அனுபவித்து எழுதுகிறீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    அப்படியே என் மன நிலையைப் புரிந்து சொன்னீங்க கீதாம்மா.
    உண்மையில் இதை அனுபவித்து எழுதினேன் அடியேன்! மனத்தில் ஸ்ரீரங்க பயணத்தை அசை போட்டு, எழுதிக் கொண்டே இருந்த பின் தான் தெரிந்தது, breakfast, lunch இரண்டுமே அவுட். தமிழ்மணம் பக்கம் கூடச் செல்லவில்லை! நண்பர்கள் பதிவுக்கு இனிமேல் தான் போகணும்!

    ReplyDelete
  25. //குமரன் (Kumaran) said...
    அங்கே திருமாலிருஞ்சோலை அழகனைக் காட்டிவிட்டு இங்கே திருவரங்கனையும் காட்டிவிட்டீர்கள் இரவிசங்கர். அருமையான சேவை. மிக்க நன்றி. //

    நன்றி குமரன்! திருமாலிருஞ்சோலை அழகனின் படம் தந்தமைக்கு. பின்னர் ஏகாந்தப் படம் கிடைத்தது. போட்டு விட்டேன்!

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    மூலவரின் முத்தாங்கி சேவையை அனுப்பிவைத்திருக்கிறேன். மின்னஞ்சலைப் பாருங்கள்.//

    திருக்கண்களைப் பார்த்துவிட்டு, அப்படியே வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    மக்கள் சொன்னதையே எடுத்துக் கொள்ளும் கோதையும் 'நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்' என்று அதனை சுவர்க்கம் என்றே சொல்லியிருக்கிறாள்//

    உண்மை தான் குமரன்! ஆண்டாள் மக்கள் கவி ஆயிற்றே! சொர்கத்தின் சொர்க்கமான வாசலைக் காட்டி பரம சுவர்க்கம் இது தான் என்று அவள் கூறுவது எத்தனை சிறப்பு!

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    அரங்கன் சொன்ன விளக்கத்தை பிரகலாதன், மகாபலி, வீடணன் போன்றவர்களின் முடிவிற்கும் சொல்லுவார்கள். பிரகலாதன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பு என்பார்கள் இந்தக் கருத்தை புரியாதவர்கள்//

    பதிவைப் படித்த பின், உங்கள்
    கருத்தைப் பிடித்த பின்
    புரிந்து கொள்வார்கள் குமரன்!

    //மின்மினிப்பூச்சிக்காக பகலவனைத் துறப்பது கண்ணில்லாதார் செய்யும் செயல்.//

    :-)

    //குருவின் வழிகாட்டுதலை கோவிந்தனுக்காகத் துறந்தான் மகாபலி. குருவின் சொல் கேட்டல் அங்கே சிறு தருமம் ஆகிவிட்டது. தமையனை விட தருமமே மேல் என்றான் வீடணன்//

    குருவின் சொல்லை மீறிய குற்றம் வரும் என்று மகாபலிக்குத் தெரியும். ஆனாலும் பகவானுக்காகப் பழியை ஏற்கச் சித்தமாய் இருந்தான்!

    இது எப்போது வரும்? மாறாத அன்பினால், தன்னலமில்லா அன்பினால் மட்டுமே வரும்!

    அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்
    - அன்புடையார்
    என்பும் (எலும்பும்) உரியர் பிறர்க்கு!

    ReplyDelete
  29. // ஜடாயு ஐயா. நீங்கள் சொல்வது சாமானிய தருமங்கள் எல்லோராலும் எப்போதும் பின்பற்றப்படவேண்டும்; ஆனால் பக்தியில் தானாக அவை நழுவினால் தவறில்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன். சரியா? //

    குமரன், ஒருவகையில் சரிதான்.

    ஆனாலும் இன்னும் கொஞ்சம் விளக்கம் :))
    "சாமானிய தருமம்" என்பதை வரையறை செய்யவேண்டும் முதலில். பொதுவாக இந்தப் பெயரால் சொல்லப் படுபவை அடிப்படை மனிதப் பண்புகள் - அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமை), சௌசம் (உடல், மனத் தூய்மை), இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்). இது தர்ம சாஸ்திரம் கூறுவது. பக்தியில் திளைக்கும் ஒருவனுக்கு இந்த குணங்கள் விகசிக்குமே தவிர நீங்காது.

    "வேத லஜ்ஜா" என்று சைதன்ய மகாப்ரபு சொல்ல வந்தது சமயச் சடங்குகள், வரையறுக்கப் பட்ட சமயப் பழக்கம் (பூஜை செய்வதற்கு இந்த முறை தான் சரி போன்ற கட்டுப்பாடுகள்), தெய்வத்தை விட சாஸ்திரத்தின் மீது அதிக நம்பிக்கை போன்ற விஷயங்களை என்றே புரிந்து கொள்கிறேன்.

    // இல்லையேல் என்னைப் போன்ற அரைகுறைகள் தருமங்களை நழுவவிட்டுவிட்டு பக்தியின் பின்னால் போய் ஒளிந்து கொள்வோம். //

    உண்மையான பக்தியும் தர்மமும் முரணானவை அல்ல என்பதாகவே கண்ணன் கீதையில் கூறுகிறான் அல்லவா?

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said...
    ததிபாண்டன் மோட்சத்திற்கும் தசரதர், துரோணர், பீஷ்மர் இவர்களின் சொர்க்கபிராப்திக்கும் அரங்கன் சொன்ன விளக்கத்தை...//

    இதை நம்ம வெட்டிப்பையல் பாலாஜியின் கண்ணன்-கர்ணன் பதிவில் ஓரளவு சொல்ல முனைந்தேன்! ஆனால் அங்கே பதில்கள் அப்படியே நின்று விட்டன!

    அதையே இன்னும் எளிமையாச் சொல்லத் தான், இங்கு சுவாமியை நடுத்தெருவில் வைத்து விட்டுப் போக முடியுமா, என்று விளக்க முடிந்தது!

    நன்றி பாலாஜி!
    உங்கள் பதிவும் இதற்கு ஒரு inspiration!

    ReplyDelete
  31. //குமரன் (Kumaran) said...
    அநத்யயன காலத்தைப் பற்றி வேறு பதிவில் கேட்டதற்கு இங்கே விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி இரவிசங்கர்.//

    அடுத்த பதிவில் இன்னும் நல்ல விளக்கம் கிடைக்கலாம் குமரன்!
    ஏன் என்றால் அது ராமானுஜர் தரப் போகும் விளக்கம்! பாருங்கள்! :-)

    ReplyDelete
  32. //அநத்யயன காலத்தைப் பற்றி வேறு பதிவில் கேட்டதற்கு இங்கே விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி இரவிசங்கர்.//

    பாஸ்டன் வலைப்பதிவர் மாநாடு புண்ணியம் கட்டிக் கொண்டது:-) பதிவைப் போட்டு விட்டு பாஸ்டனுக்கு ஓட்டம் அப்போது!

    நல்ல வேளை, ஞாபகப் படுத்தினீர்கள்! அதில் பலர் பின்னூட்டங்களுக்குப் பதிலும் சொல்லவில்லை! சுப்ரபாதம் மீண்டும் ஆரம்பிக்கும் முன்னர் சொல்லவும் எண்ணம்!

    ReplyDelete
  33. //குமரன் (Kumaran) said...
    வல்லி அம்மா. இரவிசங்கர் அரங்கனின் மோகினி திருக்கோலத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாவிட்டாலும் நீங்கள் அழகாக அவன் என்ன தான் பெண் உடையில் வந்தாலும்....//

    மிக்க நன்றி வல்லியம்மா!
    மோகினி அலங்கார விளக்கம் மிக நன்று!

    மோகினியின் கண்களுக்கு ஈசன் தான் மயங்குவார்!
    அடியார்கள் நாங்கள் எங்கள் தாயார் கருணைப் பார்வைக்குத் தானே ஏங்குவோம்! அதான் படம் மட்டும் போட்டு விட்டு விட்டேன் போல! :-)

    ReplyDelete
  34. ரவி,அரங்கன் ,ஏகாதசி என்றால் மோஹன அவதாரம் தானே.வேளுக்குடி சொல்லுவார்.அது மோஹினி இல்லை. மொஹனம் என்று. அந்த உரையைக் கேட்டுக்கொண்டே உங்களுக்குப் பின்னூட்டமிட்டதன் விளைவு, தாயார் வந்துவிட்டாள்.
    நம்பெருமாள் தன்னைக் கொஞ்சம் துக்கிக் காட்டச் சொல்லுவாராம், பராங்குச நாயகியைப் பார்க்கவேண்டி.
    அதற்கு கைத்தல சேவை என்றும் பெயராம்.நாம் அவனைப் பார்க்காவிட்டல் என்ன அவன்தான் நம் வலையில் அகப்பட்டானே.:-)

    ReplyDelete
  35. அரங்கன் தன் எல்லா நலன்களையும் உங்களுக்குப் பரிபூரணமாக அருளட்டும் !!

    ReplyDelete
  36. ரவி
    எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    எங்க வீட்டுக்கு வந்து உங்க கருத்தையும் சொல்லுங்களேன்
    http://pirakeshpathi.blogspot.com/

    ReplyDelete
  37. sri KRS,

    Jadayu vin post-kku ungalin eaani (ladder) vilakkam arumai.

    Jadayu sirin pinpathivu sadarana darmam/chaitanya darma vilakkamum super aga amaikintrandu.

    Paramapadavasalai thangal thiranthvudan adiyavargalin utrchgama(exhiliration) amaikindrathu.

    Ennudiaya Sriranga perasaiyai ungal kuzham(+kumaran) kandippaga thirthuvaikkamudiyum.

    Lord Balaji-i patri ezhuthinalum miga miga maghizhichi adaiven pl.
    sundaram

    ReplyDelete
  38. //ஜெயஸ்ரீ said...
    அரங்கன் தன் எல்லா நலன்களையும் உங்களுக்குப் பரிபூரணமாக அருளட்டும் !!//

    நன்றி ஜெயஸ்ரீ!

    ReplyDelete
  39. //செல்லி said...
    ரவி
    எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்லி!

    //எங்க வீட்டுக்கு வந்து உங்க கருத்தையும் சொல்லுங்களேன்
    http://pirakeshpathi.blogspot.com///

    ஓ வந்தேன் செல்லி! வித்தியாசமான நல்ல தலைப்புகளில் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்!

    ReplyDelete
  40. //Anonymous said...
    Paramapadavasalai thangal thiranthvudan adiyavargalin utrchgama(exhiliration) amaikindrathu.//

    :-) உற்சாகத்துக்கு சொல்லவும் வேண்டுமோ?

    //Lord Balaji-i patri ezhuthinalum miga miga maghizhichi adaiven pl.
    sundaram //

    எழுதுகிறோம் சார்! குமரனும் எழுதுவார்! திருமலைப் பிரம்மோற்சவப் பதிவுகளை, என்னுடைய archives இல் சென்றும் காணுங்கள்!

    ReplyDelete
  41. சொர்க்கவாசலை காட்டியதற்கு நன்றி கண்ணபிரான்.

    துவாதசியன்று இஸ்கான் கோயிலுக்கு சென்றேன்.(விரதம் இருந்தேனா என கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்:-) கடும்பனி பொழிவால் கூட்டம் குறையவே இல்லை. ஆனால் சொர்க்கவாசல் என்ற கான்சப்டே அங்கே இல்லை போல.அப்படி ஒன்று திறக்கவே இல்லை.

    ReplyDelete
  42. //செல்வன் said...
    சொர்க்கவாசலை காட்டியதற்கு நன்றி கண்ணபிரான்.
    துவாதசியன்று இஸ்கான் கோயிலுக்கு சென்றேன்.(விரதம் இருந்தேனா என கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்:-)//

    சேச்சே அதெல்லாம் கேட்போமா? சரி... அன்று என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்? :-))

    //கடும்பனி பொழிவால் கூட்டம் குறையவே இல்லை. ஆனால் சொர்க்கவாசல் என்ற கான்சப்டே அங்கே இல்லை போல.அப்படி ஒன்று திறக்கவே இல்லை. //

    உண்மை தான் செல்வன்! நம் ஊர் ஆலயங்களிலும் சிலவற்றில் சொர்க்க வாசல் இருக்காது! கருவறை அமைப்பில் அவ்வாறு அமைத்ததால், ஆகம விதிப்படி இல்லாமல் போகும்!

    திருமலையில் சொர்க்க வாசல் இல்லை! முக்கோடி பிரதட்சிணம் என்று தான் உண்டு! சுற்றி வர வேண்டும் ஒரு உள் பிரகாரத்தை!

    வட இந்தியாவில் பெரும்பாலும் இருக்காது! பூரி, துவாரகை போன்ற தலங்கள் விதிவிலக்கு.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP