Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

சங்கப் பலகையில் ஓலையை வைத்தவுடன், அது என்ன செய்தது? அள்ளியதா இல்லை தள்ளியதா? இதோ முந்தைய பதிவு.

தள்ளியது!...
என்ன தள்ளியதா? - ஆமாம்...பலகையின் மீது ஏற்கனவே இருந்த நூல்களை எல்லாம் கீழே தள்ளிக் கொண்டது!
திருவாய்மொழியை மட்டும் அள்ளிக் கொண்டது!
இதைக் கண்ட மக்கள் எல்லாரும் "ஆகா"காரம் செய்ய, ஆகாரம் ஆனது மன்னுயிர்க்கு எல்லாம், இந்தத் திருவாய்மொழி!

சங்கப் புலவர்கள் எல்லாரும் திகைத்துப் போய் விட்டனர்.
இது தமிழ் மறை தான் என்று முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்ச் சங்கம் இதை ஏற்றுக் கொண்டு, தனது நூற் களஞ்சியத்திலே சேர்த்துக் கொண்டது!
சங்கப் புலவரின் தலைவர், மதுரகவிகளை அணைத்துக் கொண்டார்!
தவறுக்கு வருந்தி, கண்ணிர் மல்கி, ஒரு ஆசு கவி பாடிச் சிறப்பித்தார்!

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?

பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,
ஓவாது உரைஆயிரம் தமிழ் மாமறையின்
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!

(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)

நம்மாழ்வார் புளியமரக் காட்சித் திருகோலம் - ஆழ்வார் திருநகரி

புலவர்கள் அனைவரும் முழு மனதுடன், விழாவை மீண்டும் நடத்திக் கொடுத்தனர்!
அன்றில் இருந்து இன்று வரை, முன்பு சொன்ன கட்டியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு தான், எல்லா ஆலயங்களிலும் நம்மாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது!


அட, எல்லாம் சரி!
திருவாய்மொழி வைணவப் பாட்டாச்சே! அதைப் போய் மற்ற மதங்களும் சமயங்களும் எப்படிப் படிப்பாங்க?
இப்படித் தான் சில சைவர்கள் கேட்டார்களாம்,
இடைக்காட்டுச் சித்தர் என்னும் சிவநெறிச் செல்வரிடம்.
இவர் யாருன்னு தெரிகிறதா? தாண்டவக் கோனே, தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!

அவரு, ஒரு படி மேலே போய்,
"ஐயா...இது தமிழ் வேதம். வேதத்துக்கு சிவன் என்றோ, திருமால் என்றோ, அம்பாள் என்றோ பிரிவு உண்டா?...வாங்க எல்லாரும் படிக்கலாம்", என்று கேட்டவர்களுக்கு வகுப்பே எடுக்கத் துவங்கி விட்டாராம்!
அவர் செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டைப் (தனியன்) பாருங்க!

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து


(பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும் ,
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்! ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!)


இப்படிச் சைவ நெறிச் சீலர்களின் மனங்களையும் கவர்ந்தவர் நம்ம நம்மாழ்வார்!
முருகனின் வைகாசி விசாகத்தில் பிறந்த அந்தக் கொழுந்து.
அது செய்த தமிழைச், சைவரும் விரும்பியதில் வியப்பில்லையே!
இறைவனே இப்படித் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறார்! நாம் தான் மெத்தப் படித்து விட்டு, சொத்தை வாதங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்!
சொத்தை வாதங்களால், பெருஞ் சொத்தை இழந்து கொண்டிருக்கிறோம்! :-)

நம்மாழ்வார் அடிநிலையில் இருக்கும் சடாரி


இடைக்காடர், சைவத்தில் இருந்து கொண்டு வைணவத்தைப் புகழ்ந்தார்...சரி தான்!
அதே போல், வைணவம் சைவத்தைப் புகழ்ந்துள்ளதா?
- இது நல்ல கேள்வி!
வைணவத் தத்துவத்துக்கே தலைவரான நம்மாழ்வார், சிவபெருமானை வணங்கி வாழ்த்துவதைப் பாருங்கள்!

அற்றது பற்று எனில் உற்றது வீடு என்று பாடிய நம்மாழ்வார், அந்தப் பற்றை எப்படி அறுத்தார்?
பெருமாள், பிரமன், சிவன் என்று அனைவரையும் அழுது தொழுது, பற்றை அறுத்து, வீடு பெற்றாராம்!
இதை, இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல, அக்காலத்தில் எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்?:-)

அது என்ன பற்று?
இருப்பதிலேயே மிக பயங்கரமான பற்று, உன் சமயம் தாழ்த்தி, என் சமயம் உசத்தி என்ற பற்று.
வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளா விட்டாலும்,
அடி மனம் அதை அசை போட்டு மகிழ்வதில் ஒரு ஆனந்தம் காணுமாம்! அந்தப் பற்று... அது அற்றது பற்று எனில், உற்றது வீடு!

அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


இது திருவாய்மொழியின் நிறைவுப் பாடல்! அதில் மறக்காமல் சிவனையும் சேர்த்துப் பாடித், தமிழ் மறையைப் பொது மறை ஆக்குகிறார் நம்ம ஆழ்வார்!
முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்றும் அதற்கு முன்னால் பாடிப் பரவுகிறார்!


பொதுவாக வைணவர்கள் தீவிரப் பற்றாளர்கள் என்ற ஒரு வழக்கு உண்டு! அவர்கள் மதுரைக் கோவிலுக்குப் போனாலும்,
மீனாட்சியை மட்டும் தரிசித்து விட்டு, வந்து விடுவார்கள் என்றும் சொல்லுவர்.
அதெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரே! மிக மிகச் சொற்பம்!
உண்மை என்னவென்றால், திருச்சின்னங்களான சங்கு சக்கர முத்திரை பதித்துக் கொண்டவர்கள், அந்த விரதப்படி, சிவனார் ஆலயங்களில் வீழ்ந்து வணங்க மாட்டார்கள்! அவ்வளவு தான்!

ஒருமுறை வாரியார் சுவாமிகள், காஞ்சி மாமுனிவர் - மகா பெரியவருடன் கலந்துரையாடப் போய் இருந்தார்.
பெரியவரைக் கண்டவுடன், அவர் காலில் வீழ்ந்து வணங்க முற்பட,
பெரியவர் பதறிப் போய், வாரியாரைத் தடுத்து நிறுத்தினார்.
"மார்பிலே சிவலிங்க மணியைத் தரித்திருக்கும் வீரசைவன் நீ...சிவாலயங்கள் தவிர இப்படிப் பிற இடங்களில் கீழே விழுந்து, சிவலிங்கம் நிலம்பட வணங்கக் கூடாது.
இது தெரிந்தும் என் முன்னே நீ விழலாமா?", என்று வாரியாரைச் செல்லமாகக் கடிந்து கொண்டாராம்.
இதே தான் சங்கு சக்ர முத்திரை பதித்துக் கொண்டவர்க்கும்!

ஆனால் "வைணவர்கள் எல்லாம் தீவிரப் பற்றாளர்கள், பா", என்று சொல்லிச் சொல்லியே, வைணவரிடம் காரியம் சம்பாதித்துக் கொண்டு,
ஆனால் மனத்தளவில் மறந்தும் புறந் தொழாச் சைவர்களும் உண்டு :-)
இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் சைவர், வைணவர் இருவருக்குமே...ஏன்.....மற்ற எல்லாருக்குமே,
நம்மாழ்வார் சொல்லிக் கொள்வதைக் கேளுங்கள்!

சங்கர நாராயணர்

வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே


வணங்கும் துறைகள் = ஒரு மாபெரும் குளம்/ஏரி...
அதன் ஒவ்வொரு பக்கமும் ஒரு துறை...
தனக்குச் சொந்த ஊர் என்பதால், அந்த ஊர்த் துறையில் வசதியாகத் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான் ஒருவன்!
அதற்காக, பக்கத்துத் துறையின் தண்ணீரைப் பழித்துப் பேசுவானா?
அப்படியே பழித்துப் பேசினால், அது அந்தத் தண்ணீரின் குற்றமாகி விடாதா?
அதே ஏரியின் தண்ணீர் தானே இங்கும்? அதனால் தான் "வணங்கும் துறைகள்" என்றார் ஆழ்வார்!

அப்படி நீரின் பிழை இல்லையானால், அது யாரின் பிழை?
"மதி விகற்பால்" பிணங்கும் சமயம் = அவரவர் மதி விகற்பு. அவரவர் அறிவுக்கு எட்டிய வரை கற்பனையான வாதம். தான் தோன்றித் தனம்

அவை அவை தொறும், "அணங்கும் பலபல ஆக்கி" = இது போதாதென்று அதற்குள்ளேயே இன்னும் பலப் பலக் கருத்துகள்/கொள்கைகள்.
தென்கலை/வடகலை...வீரசைவம்/சைவ சித்தாந்தம்...இப்படிப் பலப்பல!

நின்கண் வேட்கை எழுவிப்பனே = இவ்வளவு பிரிவுகளுக்கு இடையேயும், உன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, வேட்கை எழுவிப்பனே!

இது தான் திருவாய்மொழியின் சாரம்!
இப்போது சொல்லுங்கள், திருவாய்மொழியையும் நம்மாழ்வாரையும் வைணவத்துக்குள் மட்டும் அடக்கி வைக்க முடியுமா?

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளும் இன்று தான்!
புத்த பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமாவும் இன்று தான்!
இந்நாளில் தோன்றிய நம்மாழ்வார், எந்நாளும் காட்டிய வழி இது!

இந்த வைகாசி விசாகத்தில்,
நம்மையே ஏமாற்றித் திரியும் நம் மனதினுடைய ஓரத்தில்...இதை போட்டு வைப்போம்! எப்பவாச்சும் இருட்டில் மாட்டிக் கொள்ளும் போது, நந்தா விளக்காய் ஒளி கொடுக்கும்!

மன்னு பொருள் நால் வேதம் தமிழ் செய்தான் வாழியே!
மகிழ் மணக்கும் குருகையர் கோன் மலர் அடிகள் வாழியே!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!


என்னங்க, இந்தப் பதிவில் தத்துவக் கருத்துக்கள் மிகுந்து விட்டனவா?
அடுத்த பதிவில்...
நம்மாழ்வார், ராமானுசரை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு எடுத்து விட்டார். அந்தக் கதையையும், இன்னும் சில தித்திக்கும் பாசுரங்களையும் பார்ப்போம்!

37 comments:

  1. நா"ரா"யணா வில் உள்ள "ரா"வும், ந"ம"சிவாயா வில் உள்ள "ம"வும் சேர்ந்தது தான் ராமா என்ற இரண்டெழுத்து. அதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல தமிழ் நடை. அழகு கொஞ்சுகிறது. எல்லாரையும் ரொம்பச் செல்லமாயும் அதட்டுகிறது கூடவே! :D

    ReplyDelete
  2. அருமை அருமை அருமை.

    'மறந்தும் புறம் தொழா'க்கூட்டத்தில் இருந்து வெளியேறிய முதல் ஆள் நாந்தான்
    எங்க குடும்பத்தில்:-)))))

    ReplyDelete
  3. //கீதா சாம்பசிவம் said...
    அதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல தமிழ் நடை. அழகு கொஞ்சுகிறது//

    நன்றி கீதாம்மா!
    மாலின் அழகைச் சொல்லும் போது, அழகு என்பது வெறுங் கைக்கும் தானே வந்து விடுமே!

    //எல்லாரையும் ரொம்பச் செல்லமாயும் அதட்டுகிறது கூடவே!//

    ஆகா...நாராயணா!
    அதட்டற மாதிரியாவா இருக்கு?
    யாரும் அடிக்க வரமாட்டங்களே! :-)

    ஓ, நீங்க அ+தட்டறா மாதிரி இருக்குன்னு சொல்ல வரீங்களா?
    அ(இறைவன்)+தட்டு(தட்டி எழுப்பு) மாதிரி இருக்கு-ன்னு சொல்ல வரிங்க போல!
    சரி சரி...இனிமே பெருமாளைத் தைரியமா அதட்டலாம்...கேட்டா, தலைவி கீதாம்மாவின் ஆணைன்னு சொல்லிடுவோம்! :-))

    ReplyDelete
  4. மிக அற்புதமான பதிவு கண்ணபிரான். வாழ்த்துக்கள். மறந்தும் புறம் தொழாதிருத்தல் ஒரு நெறி. நம்ம மனசு எப்பவும் அலைபாயும் குணம் உள்ளது. ஆனால், சிவநெறியில் உள்ளோரையும் "மால்" செய்யும் மாலன் இவன். பேரூர் சாந்தலிங்க மடத்தில் பழனி மடாதிபதிகள் என்னிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது தன்னிச்சையாக பெருமாள் பற்றி சொல்ல ஆரம்பித்து என்னை அழ வைத்துவிட்டார். அவ்வளவு கனிவான பேச்சு. அதே போல் ஆஸ்திரேலியா சிட்னி முருகன் கோயில் சிவாச்சாரியர், என்னை அறியாமலே ஆழ்வார்கள் பற்றி ஒரு சின்ன பிரசங்கமே செய்து விட்டார். "ஆராய்ந்து அருள்பவன்" திருமால். கும்பிட்டவுடனே கொடுத்துவிடுபவன் சிவன். இரண்டு பேரும் வேண்டும் வாழ்விற்கு. பிரம்மா என்ன செய்வார் என்று யாருக்கும் தெரிவதில்லை. அவர் பற்றிய பதிவுகள் உண்டா?

    ReplyDelete
  5. கண்ணபிரான், சைவ வைணவ ஒருமையை விளக்கும் நல்ல பதிவு.

    "குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்" என்றார் திருநாவுக்கரசர்.
    (குடமாடி என்பது கண்ணன் பெயர்)
    "பிறைதாங்கு சடையானை வலத்தே வைத்து" என்றார் திருமங்கையார்.
    இந்த வரிகளுக்கு உருவம் தரும் சங்கரன்கோவில் சங்கரநாராயணரின் சித்திரம் அழகு.

    இது போன்ற பதிவுகளை மேலும் தாருங்கள்.

    ReplyDelete
  6. கண்டேன் -- கண்ணுக்கினியன கண்டேன் - உங்கள் கட்டுரை மிக மிக அருமை. நா.கண்ணன் அவர்களின் நம்மாழ்வார் சொல்லாட்சியும் ('திருமொழி - பதிவு), உங்கள் கட்டுரையில் உள்ள 'நம்' ஆழ்வாரின் சர்வ சமய சிந்தனையும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது, நம்மாழ்வார் அவதரித்த நாள் சமயத்தில் கிடைத்த வரப்பிரசாதம். வாழ்க எம்மான்.. மென்மேலும் வளரட்டும் உங்கள் பணி.
    நம்மாழ்வாரின் புகழ் ஓங்குக!

    மாறன் மலரடிகளே சரணம்
    திவாகர்.

    ReplyDelete
  7. மிகச் செரிவான கருத்துக்கள் கே.ஆர்.எஸ்.....
    மிக்க நன்றி....

    ஜடாயு,

    நீங்க குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பாக்களை முழுதாக தரமுடியுமா?.

    ReplyDelete
  8. ரவி, எத்தனை தடவை நல்லா இருக்குனு சொல்றது.அலுத்துப் போச்சுமா.

    ஆனாலும் படித்தவுடனே இந்தப் பிள்ளை ரொம்ப நல்லா இருக்கணும், இத்தனை மணிமணியா எழுதுகிறதேனு சொல்லத் தோன்றுகிறது.
    அனைவரையும் வைணவ சைவ சித்தாந்தங்களுக்குள் அழைத்துச் சென்றூ நற்கருத்து எடுத்து உரைக்கும்
    கண்ணபிரான் மகன் வாழ்க.

    ReplyDelete
  9. அருமை அருமை...

    இந்த மாதிரி நிறைய எழுதுங்க

    ReplyDelete
  10. //துளசி கோபால் said...
    'மறந்தும் புறம் தொழா'க்கூட்டத்தில் இருந்து வெளியேறிய முதல் ஆள் நாந்தான் எங்க குடும்பத்தில்:-)))))//

    ஆகா
    Hats Off to u டீச்சர்!
    நீங்க வெளியேறின பின் உங்க பின்னாடி எத்தன பேர் வெறியேறினாங்க?...சாரி...ஐ மீன்...வெளியேறினாங்க? :-)

    ReplyDelete
  11. // நா.கண்ணன் said...
    பேரூர் சாந்தலிங்க மடத்தில் பழனி மடாதிபதிகள் என்னிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது தன்னிச்சையாக பெருமாள் பற்றி சொல்ல ஆரம்பித்து என்னை அழ வைத்துவிட்டார். அவ்வளவு கனிவான பேச்சு.//

    நன்றி கண்ணன் சார்.

    குன்றக்குடி அடிகளார் ராமானுசரைப் பற்றி அடிக்கடி அருட் பேருரை ஆற்றுவார்...அதனால் பல சைவ மடங்களின் கோபத்துக்கும் ஆளானார்.
    ஆனால் அவர் தொடர்ந்து, பல நேரங்களில், உடையவரின் அடியார்கள் அன்பு பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை!

    //பிரம்மா என்ன செய்வார் என்று யாருக்கும் தெரிவதில்லை. அவர் பற்றிய பதிவுகள் உண்டா?//

    ஆராய்ந்து அருளேலோ = பெருமாள்
    யோகத்துக்கு இரங்கேலோ = சிவன்
    தவத்துக்குக் கட்டுப்படல் = பிரம்மா

    பிரம்மா பற்றிய பதிவுகள் நாம தான் போட வேண்டும் கண்ணன் சார்!

    ReplyDelete
  12. // ஜடாயு said...
    (குடமாடி என்பது கண்ணன் பெயர்)//

    திரு அரிமேய விண்ணகரம் என்னும் திவ்யதேசத்தில் குடமாடு கூத்தன் என்று தான் பெருமாளுக்குத் திருநாமம்!

    //இது போன்ற பதிவுகளை மேலும் தாருங்கள்//

    வாழ்த்துக்கு நன்றிங்க ஜடாயு சார்.
    அவசியம் தருகிறேன்!

    ReplyDelete
  13. //மதுரையம்பதி said...
    மிகச் செரிவான கருத்துக்கள் கே.ஆர்.எஸ்.....//

    நன்றி மெளலி சார்.

    //ஜடாயு,
    நீங்க குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பாக்களை முழுதாக தரமுடியுமா?//

    அவர் பிசி போலத் தெரியுதே!
    இதோ அடியேன் தருகிறேன்!

    திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில், சீர்காழி திவ்ய தேச எம்பெருமான் பற்றிய பாசுரம்:

    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
    பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்து,
    கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
    கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்

    துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
    தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம் நண்ணி,
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே

    ReplyDelete
  14. மெளலி சார்
    அப்பர் சுவாமிகள், திருக்கோடிக்கா ஈசனைப் பாடும் பதிகம்

    படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
    பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
    நடமாடியே ஏழுலகுந் திரிவான் கண்டாய்
    நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்

    கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
    கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
    குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே!

    ReplyDelete
  15. //வல்லிசிம்ஹன் said...
    ரவி, எத்தனை தடவை நல்லா இருக்குனு சொல்றது.அலுத்துப் போச்சுமா.//

    ஆகா...வல்லியம்மா...
    ரொம்ப போரடிக்கறா மாதிரி எழுதறேனோ்? :-)
    சரி இனி அலுப்பு தட்டினால், வந்து என்னை ஒரு தட்டு தட்டுங்க! :-)

    //ஆனாலும் படித்தவுடனே இந்தப் பிள்ளை ரொம்ப நல்லா இருக்கணும், இத்தனை மணிமணியா எழுதுகிறதேனு சொல்லத் தோன்றுகிறது//

    உங்கள் மனத்தில் இருந்து வரும் இந்த ஆசியும் அன்பும் மகத்தானது வல்லியம்மா.

    //கண்ணபிரான் மகன் வாழ்க//

    ஆகா..
    எழுதறது நான்
    வாழ்த்து ஷ்ரவணுக்கா? :-)

    அந்த வாண்டு போடும் ஆட்டத்துக்கு நடுவில் பதிவு எழுதறதே பெரிய விஷயமா போகுது! பதிவு எழுத உட்கார்ந்தாலே, வந்து laptopஐ அணைக்கக் கற்றுக் கொண்டான்.
    இது உள் நாட்டு சதியோ என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் :-)

    ReplyDelete
  16. //DHIVAKAR said...
    கண்டேன் -- கண்ணுக்கினியன கண்டேன் - உங்கள் கட்டுரை மிக மிக அருமை.//

    நன்றி திவாகர்!
    முதல் வருகைன்னு நினைக்கிறேன்! நல்வரவு!

    //நா.கண்ணன் அவர்களின் நம்மாழ்வார் சொல்லாட்சியும் ('திருமொழி - பதிவு), உங்கள் கட்டுரையில் உள்ள 'நம்' ஆழ்வாரின் சர்வ சமய சிந்தனையும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது//

    கண்ணன் சார் திருவாய்மொழியின் சாரங்களை ஒரு தொடராகவே தருகிறார்...அவசியம் படித்து மகிழுங்கள்! (பாசுர மடல்)
    மற்ற நண்பர்களுக்குச் சுட்டி வேண்டும் என்றால் இதோ!
    http://thirumozi.blogspot.com/

    //மாறன் மலரடிகளே சரணம்//
    பா மன்னு மாறன் அடி பணிந்து உய்தனன்! ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  17. //வெட்டிப்பயல் said...
    அருமை அருமை...
    இந்த மாதிரி நிறைய எழுதுங்க//

    உங்க உத்தரவு, பாலாஜி! :-)

    ReplyDelete
  18. அன்பு கேஆஎஸ்,

    இரண்டுமே எளிதாக புரியும்படி உள்ள அருமையான பாக்கள் தாம்... தேடி எடுத்துத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  19. வழக்கம்போல் (By default ) அருமை, அருமை.

    எத்தனை முறைதான் இப்படி சொல்றது? வேற வார்த்தை எதாவது இருக்கான்னு தேடிட்டிருக்கேன். ))

    "மறந்தும் புறம் தொழா" மல் இருப்பதற்குக் காரணம் ஒரே தெய்வத்தை சகல கல்யண குணங்களுடன் மனதிலிருத்தி அதற்கே சரணாகதியாவது மனக்குவிப்பிற்கும் ஆழமான வழிபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதாலேயே.

    கௌமாரம் முதலியவை அந்தந்தத் தெய்வங்களையே முன்னிறுத்துவது இதனால்தான்.

    சிறு வயதில் பள்ளியில் கணிதம், அறிவியல், வரலாறு, மொழி என்று எல்லாவற்றையும் படிக்கிறோம். மேலே போகப்போக இதில் ஒன்றை மட்டும் specialize செய்கிறோம் இல்லையா ?

    ReplyDelete
  20. //ஜெயஸ்ரீ said...
    வழக்கம்போல் (By default ) அருமை, அருமை
    எத்தனை முறைதான் இப்படி சொல்றது? வேற வார்த்தை எதாவது இருக்கான்னு தேடிட்டிருக்கேன். ))
    //

    ஆகா...இது என்ன defaultஆகவே ஆக்கிட்டீங்க?
    சரி வேறு வார்த்தை தேடறேன்னு சொல்லிட்டீங்க...அப்படீன்னா இனி மேல் வாங்கிக் கட்டிக்க வேண்டியது இருக்கும் போல இருக்கே! சரி பரவாயில்லை...தமிழால் தானே அடிக்கப் போறீங்க...தாங்கிக்கலாம்!

    //"மறந்தும் புறம் தொழா" மல் இருப்பதற்குக் காரணம்... சிறு வயதில் பள்ளியில் கணிதம், அறிவியல், வரலாறு, மொழி என்று எல்லாவற்றையும் படிக்கிறோம். மேலே போகப்போக இதில் ஒன்றை மட்டும் specialize செய்கிறோம் இல்லையா ?//

    உண்மை தான் ஜெயஸ்ரீ.
    cardiac specialization மருத்தவரிடம் போய், ENT தொடர்பான ஆழமான அறிவை எதிர்ப்பார்க்கவே கூடாது அல்லவா?

    ஆனால் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அடிப்படை மருத்துவம் அவரும் அறிந்திருக்க வேண்டும். அதைப் புறந் தள்ளக் கூடாது. மற்றவற்றை வையக் கூடாது!

    புறந் தொழாது இருக்கலாம்...ஆனால்
    புறந் தள்ளாமல் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  21. //இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
    //

    நீங்க எழுதுறதையும் நான் எழுதுறதையும் பாக்குறப்ப நான் அடிக்கடி நினைச்சுக்கிறது இது இரவிசங்கர். :-)

    இந்த இடுகையைப் படிச்ச பிறகும் அப்படித் தான் தோன்றுகிறது. :-)

    ReplyDelete
  22. குமரன் (Kumaran) said...
    //இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
    //
    நீங்க எழுதுறதையும் நான் எழுதுறதையும் பாக்குறப்ப நான் அடிக்கடி நினைச்சுக்கிறது இது இரவிசங்கர். :-)//

    இத்தினி பேரு பின்னூட்டி இருக்காங்க!
    எப்படித் தான் உங்க கண்ணுல மட்டும் இதெல்லாம் கரெக்டா படுதோ? :-)

    ஏற்கனவே என்னைத் தில்லைப் பதிவுல திட்டித் தாண்டவம் ஆடுறாங்க!
    இப்ப "இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?" ன்னு ஆடப் போறாங்களா? போச்சு!

    என்னை நானே புகழ்ந்து பாட்டு எழுதிக்கிட்டேன்! ன்னு சொல்லி வைய என் ஆருயிர் நண்பரு ஓடியாறப் போறாரு! :-))

    ReplyDelete
  23. அட நல்ல ஐடியாவா இருக்கே. உங்க ஆருயிர் நண்பர் வர்றதுக்கு முன்னாடி நான் வர்றேன். இருங்க. :-))

    ReplyDelete
  24. ரவி!
    ஈழத்தில் இந்தப் பாகுபாடு இருந்ததாகத்
    தெரியவில்லை.
    உங்கள் ஆற்றொழுக்குப் போன்ற அழகு
    தமிழ்... பிரமாதம்.
    படங்கள் அருமை...
    ஆழ்வார் திருநகரென்பது ,வலசரவாக்கத்துக்குச் சமீபத்திலா உள்ளது.நான் 2004 வந்தபோது, இந்த பெயரைக் கண்டேன்.

    ReplyDelete
  25. ரவி,

    தங்களின் இடுகை மற்றும் இன்னும் ஒருசிலரின் இடுகையை தொடர்ந்து படித்துவருகிறேன்.

    வைணவம் பல புரட்சிகளை உருவாக்கி புதுப்'பித்துக்' கொண்டது போல் எழுதிவருகிறீர்கள். இன்னும் சைவம் வைணவம் என்று சில சாதிப்பிரிவுகளைத் தவிர்த்து இந்துமதக் கடவுள்களை பிரித்து கொள்பவர்கள் குறைவு. வைணவம் என்று தனிப்பாதையை வழியுறுத்தாமல் ( அப்படி செய்கிறீர்கள் என்று சொல்லவில்லை) பொதுவாக இந்துமத மேம்பாடுக்கு (யாருக்கு லாபம் என்பது வேறு கேள்வி) உங்களைப் போன்ற ஆன்மிக ஆர்வலர்கள் எழுதினால் நன்றாக இருக்கும். இது கருத்து அல்ல. ஆசை. :)

    சிதம்பரம் பிரச்னைகள் கூட எதோ மூன்றாம் மனிதரின் சமயத்தில் நடந்துவருவது போலவும் வைணவத்தில் இது போன்ற 'இழுக்குகள்' இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதானே. பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்களில் வைணவர்கள் மட்டும் 25% விழுக்காடு இருக்குமா ?

    பெரிய பதிலாக இருந்தால் தனிப்பதிவு ப்ளீஸ் !
    :)))))))

    ReplyDelete
  26. ரவி,இக்காலச் சூழலில் அழகான கருத்துக்கள்.
    'மறந்தும் புறந்தொழா' நிலை பற்றி-
    அக்கால அரசியல் சமூக சூழல்,களப்பிரர் கொள்ளைகளுக்கும் அரசுப் பிடிகளிலிருந்தும் விடுபட்ட காலம் தான் பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என் நினைக்கிறேன்.இதில் சைவமும்,வைணவமும் பெருங் கிளர்ச்சியுடன் மறுமலர்ச்சி அடைந்த காலத்தில் ஒரு போட்டியாகவே இவ்வகை வாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
    'மறந்தும் புறந்தொழா'க் கருத்துக்கள் ஆழ்வார்களிலேயே பலரால் சொல்லப்படிருக்கிறதுதானே?
    நம்மாழ்வார்,பெரியாழ்வார் தவிர சிவத்தையும் போற்றிய ஆழ்வார்கள் குறைவெனவே நினைக்கிறேன் - தவறெனில் திருத்தவும்.
    ஆனால் சைவ சித்தாந்தத்தின் உட்புகும்போது-வைணவ குருக்களில் நம்மாழ்வார் தவிர சித்தாந்தக் கருத்துக்களை கோடிட்டுச் சென்றவர்கள் இல்லையெனத் தோன்றுகிறது-அது அகச் சமயம்,அகப்புறச் சமயம்,புறச் சமயம்,புறப்புறச் சமயம் என்றெல்லாம் பேசுகிறது.
    இன்னும் அறிய எவ்வளவோ இருக்கின்றதென்றும்,இவற்றை முழுதும் அறிய ஒருமனித ஆயுள் வாழ்நாள் கொஞ்சமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை....

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  27. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ரவி!
    ஈழத்தில் இந்தப் பாகுபாடு இருந்ததாகத்
    தெரியவில்லை//

    ஈழத்தில் சைவ-வைணவ சமயப் பூசல்கள் அவ்வளவா இல்லை யோகன் அண்ணா!
    வைணவக் கோயில்கள் இருந்தாலும், சைவம் செழித்தது போல் ஈழத்தில் வைணவம் செழிக்கவில்லை! அதுவும் பூசல் இல்லாம இருந்ததுக்கு ஒரு காரணாமாய் இருக்கலாம்! :-))

    //உங்கள் ஆற்றொழுக்குப் போன்ற அழகு
    தமிழ்... பிரமாதம்.//

    நன்றி அண்ணா!
    யாமோதிய கல்வியும் எம் தமிழும் தாமே பெற வேலவர் தந்தது!

    //ஆழ்வார் திருநகரென்பது ,வலசரவாக்கத்துக்குச் சமீபத்திலா உள்ளது.நான் 2004 வந்தபோது, இந்த பெயரைக் கண்டேன்.//

    நீங்க சொல்லும் ஆழ்வார் திருநகர் சென்னையில் இருக்கு!
    அது இப்ப வந்த ஒரு காலனி!
    பதிவில் சொன்ன ஆழ்வார் திருநகரி என்பது திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிட்டக்க இருக்கு! உண்மையான தமிழ்ப் பெயர் திருக்குருகூர்! ஆழ்வாருக்கும் குருகூர் சடகோபன்-ன்னு பேரு!

    ReplyDelete
  28. //கோவி.கண்ணன் said...
    வைணவம் பல புரட்சிகளை உருவாக்கி புதுப்'பித்துக்' கொண்டது போல் எழுதிவருகிறீர்கள்//

    "போல" எல்லாம் எழுதி வரலீங்க கோவி அண்ணா! உண்மை அது தான்!
    சில சமயம் பகுத்தறிவு டார்ச் லைட்டிலேயே தங்கி விடுகிறோமா? அதுனால அது மட்டுமே எமெர்ஜென்சிக்கு உதவும் விளக்கு போல தெரியுது! குடத்தில் இட்ட விளக்காக, சொல்ல ஆள் இன்றி, சைவ/வைணவப் பகுத்தறிவுக் கருவூலம் ஒன்னு பெருசா இருக்கு!

    //இன்னும் சைவம் வைணவம் என்று சில சாதிப்பிரிவுகளைத் தவிர்த்து இந்துமதக் கடவுள்களை பிரித்து கொள்பவர்கள் குறைவு//

    சைவம்/வைணவம் சாதி இல்லீங்களே! தத்துவங்கள் தானே அவை! அதில் இருக்கும் மக்கள் வேணும்னா சாதி பிரிச்சிக்கிலாமே ஒழிய, சைவ/வைணவம் சாதி ஆகா!
    பெரியார் பாதையில் மக்கள் தொண்டு-ன்னு பிரிச்சிக்கிட்டு பல கட்சிகள் தோன்றினாலும், அடிப்படையில் பெரியார் சித்தாந்தம் கட்சி ஆகாது இல்லீங்களா! அது போலத்தேன்!

    //வைணவம் என்று தனிப்பாதையை வழியுறுத்தாமல் ( அப்படி செய்கிறீர்கள் என்று சொல்லவில்லை) பொதுவாக இந்துமத மேம்பாடுக்கு (யாருக்கு லாபம் என்பது வேறு கேள்வி) உங்களைப் போன்ற ஆன்மிக ஆர்வலர்கள் எழுதினால் நன்றாக இருக்கும். இது கருத்து அல்ல. ஆசை. :)//

    ஹைய்யோ! இந்து மதச் செடி வளர்க்க கோவி தண்ணி ஊத்துறாருப்பா! :-))

    எனக்கு சைவம் சொல்லத் தெரியும் அண்ணா! ஆனா ஆழ்ந்து படிச்சதில்லை! அதுனால தான் வைணவம் மட்டுமே நான் எழுதறாப் போலத் தெரியுது. ஆனா எங்க குல தெய்வம் என்னவோ முருகப்பெருமான் தான்!

    திருச்செந்தூர் முருகனை நான் வர்ணிச்சது போல் இது வரைக்கும் எங்குமே படிக்கலை-ன்னு ரத்னேஷ் ஐயா ஒரு முறை சொன்னாரு!
    முருகனும், மாலவனும் இயல்பா ஒட்டிக் கொண்டதற்குக் காரணம்-இருவரும் தமிழ்க் கடவுள் என்பதால் இருக்கலாம்!

    ஆனால் அப்பப்போ தில்லை, அம்பலவாணர், திருவாரூர், சிவராத்திரி என்று ஈசன் பதிவுகளும் இடுவேன்! இப்ப இந்தத் தில்லை பிரச்சனைக்கு அப்புறம் தேவாரப் பாடல்களும் அடிக்கடி படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எல்லாம் பதிவுல சாயல் வீசப் போவுது! பாவம் வாசகர்கள்! :-))))

    //சிதம்பரம் பிரச்னைகள் கூட எதோ மூன்றாம் மனிதரின் சமயத்தில் நடந்துவருவது போலவும் வைணவத்தில் இது போன்ற 'இழுக்குகள்' இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதானே.//

    இல்லை! ஏமாற்றிக் கொள்ள அவற்றைச் சொல்லவில்லை!
    வைணவத்திலும் இழுக்குகள் உண்டு! வடகலைச் சண்டைகள் பற்றிச் சொல்லியுள்ளேன் சில பதிவுகளில்!

    ஆனா சாதி/தமிழ் இரண்டையும் தாழ்த்தும் வழக்கம் வைணவத்தில் இல்லை! கொஞ்சம் ஸ்டிரிக்ட்டான வடகலையில் கூட தாழ்த்த மாட்டார்கள்! இது திடீர்-னு ஒரே நாளில் வந்து விடவில்லை! இதுக்குப் பல பேரு உழைச்சாங்க! இராமானுசர் காலத்தில் சிமெண்டு கெட்டிப் பட்டுப்போச்சு! அதே வழிமுறைகளைச் சைவமும் கையாண்டால் தமிழ், கருவறைக்குள்ளேயே செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை! அதைத் தான் சொல்ல வந்தேன்!

    புதுசா ஒரு வீட்டுக்குக் குடி போனா, பக்கத்து வூட்ல எது எது எங்கெங்க இருக்குன்னு கேட்டுகறது இல்லியா, அது போலத் தான்! அதுனால பக்கத்து வீட்டுக்காரரு தான் பெரிய பிஸ்து-ன்னு எல்லாம் அர்த்தம் ஆயிடாது!

    //பெரிய பதிலாக இருந்தால் தனிப்பதிவு ப்ளீஸ் !//

    உங்க ஆசையை ந.வாரத்துல தீர்த்து வைக்கிறேன்! :-)))))))

    ReplyDelete
  29. //அறிவன் /#11802717200764379909/ said...
    ரவி,இக்காலச் சூழலில் அழகான கருத்துக்கள்//

    நன்றி அறிவன் சார்!

    //'மறந்தும் புறந்தொழா'க் கருத்துக்கள் ஆழ்வார்களிலேயே பலரால் சொல்லப்படிருக்கிறதுதானே?//

    திருமழிசை மட்டிம் மிகவும் தீவிரம்! இவர் சைவராய் இருந்து பின்னர் மாறியவர்! ஆனால் பிற தெய்வங்களை திருமாலுக்கு பின்னுள்ள நிலையில் காட்டுவரே அன்றி, இழித்துப் பேச மாட்டார்கள்.

    //நம்மாழ்வார்,பெரியாழ்வார் தவிர சிவத்தையும் போற்றிய ஆழ்வார்கள் குறைவெனவே நினைக்கிறேன் - தவறெனில் திருத்தவும்//

    முதலாழ்வார்கள் மூவரும் வேறுபாடு காணாதவர்கள்.
    நம்மாழ்வார் வெளிப்படையாப் போற்றுவார்.
    ஆண்டாள், பெரியாழ்வார், திருப்பாணர் பாட்டில் காரம் இருக்காது. சாரம் மட்டுமே இருக்கும்.

    குலசேகரர் போற்றுவார்.
    மதுரகவி, தொண்டரடிப்பொடி - இவர்கள் தம் குரு, அரங்கன் தவிர வேறு பெருமாளைக் கூடப் பாடவில்லை!
    திருமங்கை சிவன் மட்டுமல்லாது சிவனடியார் (கோச்செங்கணான்) பற்றி கூடப் பாடுவார்!
    திருமழிசை மட்டுமே காரம் காட்டுவார்.

    //நம்மாழ்வார் தவிர சித்தாந்தக் கருத்துக்களை கோடிட்டுச் சென்றவர்கள் இல்லையெனத் தோன்றுகிறது//

    நம்மாழ்வார் தத்துவக் கரை கட்டி வைத்தவர். மற்ற ஆழ்வார்கள் பக்தியில் ஆழ்ந்தவர்கள்! ஆனால் தத்துவமே சொல்லவில்லை என்று சொல்லி விட முடியாது. திருமழிசையும் தத்துவ வித்தகர்! பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்த் பாட்டு ஒன்னே போதும்!

    //முழுதும் அறிய ஒருமனித ஆயுள் வாழ்நாள் கொஞ்சமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை..../

    ஹிஹி
    அறிதோறும் அறியாமை கண்டற்றால்! :-)

    ReplyDelete
  30. // ஜெயஸ்ரீ said...
    "மறந்தும் புறம் தொழா" மல் இருப்பதற்குக் காரணம் ஒரே தெய்வத்தை சகல கல்யண குணங்களுடன் மனதிலிருத்தி அதற்கே சரணாகதியாவது மனக்குவிப்பிற்கும் ஆழமான வழிபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதாலேயே.

    கௌமாரம் முதலியவை அந்தந்தத் தெய்வங்களையே முன்னிறுத்துவது இதனால்தான். //

    வணக்கம் ஜெயஸ்ரீ. இது எவ்வளவு தூரம் உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ஒரு பாட்டில் சிவனையும் பிரம்மனையும் வைத்துப் பாடியதால் வைணவம் எல்லாவற்றையும் அணைத்துக் கொண்டு போகிறது என்றால் கௌமாரத்திலும் எக்கச்சக்கமான பாடல்களை எடுத்துக்காட்ட முடியும்.

    கௌமாரமோ..வைணவமோ..சைவமோ...எல்லாமே இந்த விஷயத்தில் ஒன்றுதான்.

    கௌமாரத்திலும் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் படரும் சுடரது" என்றெல்லாம் உண்டு. ரவிக்கும் அது தெரியாமல் போனது வியப்புதான்.

    ReplyDelete
  31. //உண்மையான தமிழ்ப் பெயர் திருக்குருகூர்! //

    பழைய பெயர் திருக்குருகூர் என்று சொல்ல வந்தீர்களோ? ஆழ்வார்திருநகரியும் உண்மையான தமிழ் பெயர் தானே?! :-)

    ***

    //ஹைய்யோ! இந்து மதச் செடி வளர்க்க கோவி தண்ணி ஊத்துறாருப்பா! :-))//

    இதைப் படிச்சுட்டு வாய்விட்டு சிரித்ததை சொல்லாமல் விட முடியவில்லை. :-))))

    இரவிசங்கர், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் 'சைவம் மட்டுமே தமிழை வளர்க்கிறது; சைவம் என்றாலே தமிழ் தான்' என்ற கருத்து பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கிறது. அதனால் வைணவத்தைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமலேயே வைணவத்தைத் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அப்படிப் பேசும் போது அவை 'ஆய்வுக்கட்டுரைகள்' என்ற அளவிற்கு எழுதினார்கள். அதனை மறுத்து வைணவத்தில் தமிழ் எப்படிப்பட்ட பெருமையான நிலையில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டத் தொடங்கினோம். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது போலிருக்கிறது. அதனால் ஏன் 'சைவம், வைணவம்' என்று பிரித்துப் பேசுகிறீர்கள். நீங்களே இப்படி எல்லாம் பேசலாமா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எனக்கும் நண்பர்களிடமிருந்து இப்படி கேள்விகள் வந்திருக்கின்றன. ஓவர் டோஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ந.வாரத்திலும் ஓவர் டோஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வைணவத்தை உயரத்தி சைவத்தையோ மற்ற சமயப்பிரிவுகளையோ தாழ்த்துவது நமக்கு நோக்கம் இல்லை என்றாலும் மரபு வழியாக சைவத்தை மட்டுமே உயர்வாக எண்ணியிருப்பவர்கள் (அவர்கள் இன்று நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்) மனம் வருந்துவது இயல்பு. அந்த வருத்தம் மிகும்படி விட வேண்டாம். நாம் இருவரும் நமக்கு முருகப்பெருமான் தான் குலதெய்வம் என்று எத்தனை முறை சொன்னாலும் அந்த வருத்தம் குறையாது என்றே தோன்றுகிறது. ('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்).

    ***

    அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பது பல வகைகளிலும் உண்மை தான். நான் அதனால் தான் 'நாலாயிரம் கற்போம்' என்று தொடங்கினேன். திருவாய்மொழி கொஞ்சம், பெரியாழ்வார் திருமொழி கொஞ்சம், திருப்பாவை முழுதும், நாச்சியார் திருமொழி கொஞ்சம் என்று தான் படித்திருக்கிறேன். நாலாயிரத்தில் மற்றவை இன்னும் தொடவில்லை. 'நாலாயிரம் கற்போம்' மூலம் அவற்றையும் தொட்டுப் பார்க்கலாம் என்று தான். விரைவில் (அதாவது இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் - நாலாயிரமும் முடிந்த பின்னர் :-) ) திருமுறைகளையும் படிக்க வேண்டும். சம்பந்தர் தேவாரம் இரண்டு பதிகங்களை மட்டுமே இதுவரை பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  32. // ஜெயஸ்ரீ said...
    ஒரு பாட்டில் சிவனையும் பிரம்மனையும் வைத்துப் பாடியதால் வைணவம் எல்லாவற்றையும் அணைத்துக் கொண்டு போகிறது என்றால் கௌமாரத்திலும் எக்கச்சக்கமான பாடல்களை எடுத்துக்காட்ட முடியும்//

    கெளமாரம்-ன்னா என்ன ஜிரா? :-)
    நான் முருகுச் சமயம், மனமுருகு சமயம்-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்! :-))

    அதாச்சும் ஜிரா
    பாட்டுல எல்லார் பேரையும் போட்டதாலயே மட்டும் கொண்டாடிக்கலை!
    சொல் மட்டும் அன்றி, காட்டும் பொருளும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது! - இங்க நான் சொன்னது திருவாய்மொழி என்னும் நூலை மட்டும் தானே!
    சைவம்/வைணவம்/கெளமாரம் இதுல எங்க வந்துச்சி?

    இன்னொன்னு: சொல்/பொருள்-அதை விடச் செயலிலும் அதைச் செய்து காட்டியது தான் சிறப்பு!
    நம்மாழ்வார்=வேளாளர்
    மதுரகவிகள்=அந்தணர்
    அவர் குரு, இவர் சீடர் என்பது தான் செயலிலும் சிறப்பு.

    //கௌமாரத்திலும் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் படரும் சுடரது" என்றெல்லாம் உண்டு. ரவிக்கும் அது தெரியாமல் போனது வியப்புதான்.//

    அட, எனக்கு என்னங்க தெரியும்! அடியேன் பொடியேன்!
    கெளமாரத்திலும் இது போன்ற எக்கச்சக்கமான பாடல்களும் செயல்களும் இருக்கலாம்! நீங்க தான் எங்களுக்கு எடுத்துச் சொல்லணும்!

    ReplyDelete
  33. //குமரன் (Kumaran) said...
    பழைய பெயர் திருக்குருகூர் என்று சொல்ல வந்தீர்களோ? ஆழ்வார்திருநகரியும் உண்மையான தமிழ் பெயர் தானே?! :-)
    //

    அந்தே! அந்தே!

    //ஹைய்யோ! இந்து மதச் செடி வளர்க்க கோவி தண்ணி ஊத்துறாருப்பா! :-))//
    இதைப் படிச்சுட்டு வாய்விட்டு சிரித்ததை சொல்லாமல் விட முடியவில்லை. :-))))//

    நீங்க சிரிச்சதைப் பார்த்து இப்ப நான் சிரிச்சதையும் சொல்லாம விடமுடியவில்லை! ;-))

    //அதனை மறுத்து வைணவத்தில் தமிழ் எப்படிப்பட்ட பெருமையான நிலையில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டத் தொடங்கினோம். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது போலிருக்கிறது//

    ஓவர் டோஸா? இல்லையே! அண்மைப் பதிவு கூடத் தில்லையும் அதன் வளர்ச்சி குறித்தும் தான்!
    அதே சமயம் உண்மையும் out of sight out of mind ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்!

    //('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்//

    ஹிஹி!
    சரி நாம அந்தப் பக்கம் போவோம்! அவிங்கள இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க பார்ப்போம்! :-))

    //(அவர்கள் இன்று நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்) மனம் வருந்துவது இயல்பு. அந்த வருத்தம் மிகும்படி விட வேண்டாம்//

    கவலைப்படாதீங்க குமரன்!
    "வருத்தமும்" தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :-)))

    ReplyDelete
  34. // ('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்). //

    அப்படி மனசுல தோணுறதும் உண்மைதானே குமரன் ;)

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    // ஜெயஸ்ரீ said...
    ஒரு பாட்டில் சிவனையும் பிரம்மனையும் வைத்துப் பாடியதால் வைணவம் எல்லாவற்றையும் அணைத்துக் கொண்டு போகிறது என்றால் கௌமாரத்திலும் எக்கச்சக்கமான பாடல்களை எடுத்துக்காட்ட முடியும்//

    கெளமாரம்-ன்னா என்ன ஜிரா? :-)
    நான் முருகுச் சமயம், மனமுருகு சமயம்-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்! :-)) //

    அதெல்லாம் சரிதாங்க. முருகும் முறுகலில் உருகும் உள்ளம் எங்களுக்கும் தெரியும். அப்ப ஜெயஸ்ரீ கௌமாரம்னு சொன்னது வேறையா? அது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே :( இப்பிடி எதுவுமே தெரியாம இருக்கேனே! அப்ப கௌமாரத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு இல்லைங்குறீங்க. நீங்க சொன்னா சரிதான் ;)

    // அதாச்சும் ஜிரா
    பாட்டுல எல்லார் பேரையும் போட்டதாலயே மட்டும் கொண்டாடிக்கலை!
    சொல் மட்டும் அன்றி, காட்டும் பொருளும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது! - இங்க நான் சொன்னது திருவாய்மொழி என்னும் நூலை மட்டும் தானே!
    சைவம்/வைணவம்/கெளமாரம் இதுல எங்க வந்துச்சி? //

    என்ன காமெடி ரவி. ஜெயஸ்ரீ கிட்ட கேக்க வேண்டிய கேள்விய எங்கிட்ட கேக்குறீங்க?

    அப்ப திருப்புகழ் எல்லாம் சொல்லுல மட்டும் கொண்டாடுது.... ம்ம்ம்ம்ம்.. புரியுது புரியுது. திருவாய்மொழி மட்டுமே சொல்லும் பொருளும் உள்ளும் புறமும் ஒன்றி எந்த மயக்கமும் இன்றி இருக்கு. அருணகிரிக்கு அப்படியெல்லாம் பாடத் தெரியாமப் போனது வருத்தந்தான்.

    // அட, எனக்கு என்னங்க தெரியும்! அடியேன் பொடியேன்!
    கெளமாரத்திலும் இது போன்ற எக்கச்சக்கமான பாடல்களும் செயல்களும் இருக்கலாம்! நீங்க தான் எங்களுக்கு எடுத்துச் சொல்லணும்! //

    ஓ அப்ப கௌமாரத்துல என்ன இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியாது. அப்புறம் எப்படிங்க கீழ இப்பிடி டயலாக் ;)

    ///////////
    //('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்//

    ஹிஹி!
    சரி நாம அந்தப் பக்கம் போவோம்! அவிங்கள இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க பார்ப்போம்! :-))
    ////////////////////

    ReplyDelete
  35. //முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்//

    முருகனையோ இல்லை ஈசனாம் இறைவனையோ தாழ்த்திப் பேசினால் அது பெரும் தவறு! அப்போது கண்டிப்பாக அதட்டிக் கேட்கணும்!

    ஆனால் பெருமாளைப் பற்றி அதிகம் பேசக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? ஒரு இடத்தில் பேச்சோடு செயல் அளவிலும் இருக்கும் நல் மரபுகளை, சமூக மேம்பாட்டைப் பற்றிச் சொல்லவே கூடாது என்று சொல்ல இவர்கள் யார்?

    இதற்குப் பெயர் எதேச்சாதிகாரம் இல்லையா?

    //மரபு வழியாக சைவத்தை மட்டுமே உயர்வாக எண்ணியிருப்பவர்கள் (அவர்கள் இன்று நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்) மனம் வருந்துவது இயல்பு. அந்த வருத்தம் மிகும்படி விட வேண்டாம்//

    ஒன்றின் நல்லதைப் பற்றிப் பேசினால் எதற்கு வருந்த வேண்டும்?

    இவர்கள் வருந்துவார்களே என்ற ஒரே காரணத்துக்காக, உண்மையை முழுக்கச் சொல்லாம, "ஓவர் டோஸ்" ஆகாம, இவர்களின் அந்தரங்க ஆசைகளுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் பண்ணிச் சொல்லுவோம் என்பதெல்லாம் மிக மிகத் தவறான முன்னுதாரணம் ஆகி விடும்!

    இரு வீடுகளுமே அழகான வீடுகள்! அதில் ஒரு வீட்டில் முல்லைச் செடி பல பெண்களுக்குப் பிடிச்சிருக்கு-ன்னா, இந்த வீட்டிலும் முல்லை வளர்த்துக்கலாம். அதை விடுத்து, முல்லைச் செடியை எதுக்கு முன் வாசலில் வைத்தாய்? அதை அதிகம் பறிக்காதே! ஒரு வாரத்துக்கு ஒரு முறை பறிச்சாப் போதும்! - என்ற code of conduct கொடுக்கவோ, இல்லை அதை நினைத்துப் பொருமுதலோ, ஒரு நல்ல சமய இதயத்திற்கு அழகே அல்ல!

    தங்களையும், தங்களால் உருவாக்கப்படும் சமயக் கோட்பாடுகளையும் சற்றே பின்னுக்குத் தள்ளி, எம்பெருமான் சிவபெருமானை முன்னுக்குத் தள்ளி யோசித்தால், இப்படிப்பட்ட சிந்தனைகளோ, பேச்சுகளோ எழாது!

    ReplyDelete
  36. @ஜிரா
    //ஓ அப்ப கௌமாரத்துல என்ன இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியாது. அப்புறம் எப்படிங்க கீழ இப்பிடி டயலாக் ;)
    ///////////
    ஹிஹி!
    சரி நாம அந்தப் பக்கம் போவோம்! அவிங்கள இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க பார்ப்போம்! :-))
    ////////////////////
    //

    கெளமாரத்தில் என்ன இருக்கு-ன்னு கேஆரெஸ்-க்கு எல்லாம் தெரியும்-ன்னு நீங்களே முடிவுகட்டினா எப்படி? அதான் உங்களைச் சொல்லிக் கொடுங்க, பதிவாய் இடுங்க-ன்னு வேண்டுகோள் வைக்கிறோம்! சொல்லவும் மாட்டேன், ஆனா கேஆரெஸ்-க்கு தெரியும்-ன்னே எவ்ளோ நாள் தான் சொல்லிக்கிட்டே இருக்கப் போறீங்க? :)

    அந்தப் பக்கம் போவோம்-ன்னு சொன்னது, பாரபட்சம் இல்லாம என்னால் என் குழந்தை முருகப்பெருமானைப் பற்றியும் எழுத முடியும் என்ற அர்த்தத்தில் தான்! சஷ்டிப் பதிவுகளா எழுதிக்கிட்டும் இருக்கேன் என்பதும் உங்களுக்கும் நல்லாவே தெரியும்!

    அவிங்கள இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க-ன்னு சொன்னது, உங்களால் அப்படித் திருவேங்கடமுடையானையோ, இல்லை ஏகாதசிப் பதிவுகளோ இட மனம் வருமா-ன்னு கேட்கிறேன்! ஓப்பனாச் சொல்லுங்க! வருமா???

    அப்படி மனசு வந்து, நீங்கள் இட்டீர்களேயானால், என்னை விட மகிழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது! :)
    அப்படி இடும் போது, நடுவே உங்களுக்குப் பரிச்சயமான அருணகிரியை நீங்கள் மேற்கோள் காட்டினால்...
    இது என்ன முகுந்தன் பாட்டா இல்லை முருகன் பாட்டா-ன்னு எல்லாம் கேக்கவும் அடியேனுக்கு மனம் வராது ராகவா!

    இது சிவன் பாட்டா, இல்லை ராமன் பாட்டா-ன்னு நீங்க கேட்டீங்களே! அது போல எல்லாக் கேக்க மாட்டேன்! மனம் உவந்து வரவேற்பேன்!

    பதில் சொல்லுங்க ராகவா!

    ReplyDelete
  37. //G.Ragavan said...
    //'முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்). //

    அப்படி மனசுல தோணுறதும் உண்மைதானே குமரன் ;)//

    ராகவா
    மனசுல தோணுறது உண்மையா இருக்கலாம்! ஆனா நன்மையா?

    //அப்ப கௌமாரத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு இல்லைங்குறீங்க. நீங்க சொன்னா சரிதான் ;)//

    கெளமாரம் வடமொழி வழியில்-ன்னு எப்பமே சொல்வீங்களே! ஸ்கந்தனை விடக் கந்தன் தானே உங்களுக்கு ஆகும்! அதான் கேட்டேன்! வேணுங்கிற போது கெளமாரத்தைத் தொட்டுக்கறதும், வேணாங்கிற போது "கெளமார" தேவானை அம்மையைப் பத்தி இகழ்ச்சியா பதிவிடறதும் சரியான போக்கு இல்லை ராகவா!

    //அப்ப திருப்புகழ் எல்லாம் சொல்லுல மட்டும் கொண்டாடுது.... ம்ம்ம்ம்ம்.. புரியுது புரியுது//

    அப்படிச் சொன்னேனா? காட்டுங்க பார்ப்போம்!
    This is called self pity and self indulgence! :)

    சொல்லும் பொருளும் மட்டுமில்லாம, நடைமுறையாகச் செயலிலும் இருக்கு-ன்னு தானே சொன்னேன்!
    குல முதல்வனாய் ஒரு வேளாள நம்மாழ்வார் வர முடிகிறது! அந்தண மதுரகவி அவரிடம் கைகட்டி நின்று கேட்க முடிகிறது! இதை மட்டும் தானே சொன்னேன்!

    இதைப் போல் ஏன் கெளமாரத்தில் இல்லை-ன்னு எள்ளி நகையாடினேனா?
    ஒன்னுத்தில் இப்படி எல்லாம் இருக்கு-ன்னு சொல்லக் கூடக் கூடாது-ன்னு ஏன் நினைக்கிறீங்க? :(

    சரி, ஒரே ஒரு புள்ளில முடிச்சிக்கறேன்!
    நம் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் கருவறைகளில் தமிழ் ஓதப்படுது-ன்னு காட்டுங்க! இல்லை அந்த நல்ல நிலைமைக்கு அதைக் கொண்டு வாங்க!
    அப்புறம் திருவாய்மொழியின் சொல்-செயல்-நடைமுறை பற்றிப் பேசுவதையும் நான் கம்ப்ளீட்டா நிறுத்திக்கறேன்! ஓக்கேவா?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP