Friday, November 30, 2007

திருக்கோவிலூர்: பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

பொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன? "பொன்னார் மேனியனே" - சிவபெருமான் ஆயிற்றே!
வந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே! நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு? முந்தைய பதிவு இங்கே!

நீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது? அதை எடுத்துப் பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்!
அது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் "மணி"! மணிகளுள் அவள் பெண் "மணி"!
ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!
நீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான்! நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்!

அதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.
பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்!
பொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் ! :-)
அதான் அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு!
அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!
இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்!
நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க!

ஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு! அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!
அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று!




பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்!

இன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர்! வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும்! செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க! :-)

தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை! - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை! இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! சிவனையும் சேர்த்தே போற்றிற்று!

வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு!
ஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!


அந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்!
வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!


சரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா? நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு! - நன்றி தல!
ஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு! அவர் கிட்ட காமிரா இல்லையாம்! அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு! :-)

திருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆறு ஓடுது! வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க! புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்!
வண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்!
ஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே

-திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

திருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு!
பார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்!

திருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு! வீரட்டானத் தலங்களுள் ஒன்று! சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர்! மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட! சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்!
இன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம்! இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்!

பக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம்! அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க! நிறைய குறிப்பு கொடுத்திருக்காரு!

உத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்!



இன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம்! மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்!

அனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!
இன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர்! சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவிலூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்!

எல்லாத்த விட முக்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான்! - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க!
வைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ்! - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்!
அது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா? :-)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....

47 comments:

  1. தன்யனானேன்...!!!!

    கட்டுரையும் உங்கள் வர்னணைகளும் ஆஹா !!! அருமை !!!!!

    சொல்லாத பல புதிய செய்திகளை தாங்கிவந்துள்ள இந்த பதிவுகள் நிறைவு பெற்றதே என்று ஏமாற்றமாக உள்ளது...!!!!

    ReplyDelete
  2. Arumai Arumai..

    Meethi ellam naalaiku anga vanthu commentaren ;)

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை, ஆழ்வார்கள், ஒரே ரேழியில் இருந்தவரை தெரியும், ஆனால் அது நடந்த இடமோ, கோயிலோ பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன், இன்னும் பார்க்காத ஊர்களில் இதுவும் ஒன்று, பார்க்க ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள். நிறையவே தகவல்கள் தெரிந்து கொண்டேன், ரொம்ப நன்றி, பல புதிய செய்திகள். அதுவும் அந்தப் பாசுரமும், கரும்பு ஆடுவதை மனக்கண்ணால் கண்டு களிக்கும் வண்ணம் இருக்கிறதே!! எவ்வளவு அழகிய தமிழ் நடை!!!

    ReplyDelete
  4. its excellent, good work.

    ReplyDelete
  5. பதிவில் உள்ள படங்கள் எல்லாம் செந்தழல் ரவி தந்தது! அவருக்கு நன்றியைச் சொல்லிடுங்க மக்கா!

    ReplyDelete
  6. //செந்தழல் ரவி said...
    தன்யனானேன்...!!!!//

    ஆகா...தனியா, கொத்தமல்லின்னு இந்தத் தன்யனானேன்...ஒங்களுக்கும் ஒட்டிக்கிச்சா?:-)

    //கட்டுரையும் உங்கள் வர்னணைகளும் ஆஹா !!! அருமை !!!!!//

    நன்றி தல!

    //சொல்லாத பல புதிய செய்திகளை தாங்கிவந்துள்ள இந்த பதிவுகள் நிறைவு பெற்றதே என்று ஏமாற்றமாக உள்ளது...!!!!//

    ஹை...ரொம்பத் தான் ஆசை ஒங்களுக்கு :-)

    ReplyDelete
  7. //வெட்டிப்பயல் said...
    Arumai Arumai..
    Meethi ellam naalaiku anga vanthu commentaren ;)//

    மாப்பிள்ளை...வாங்க! வாங்க! வலது காலை எடுத்து வச்சி ஏர்போர்டுக்குள்ள வாங்க! :-)

    அட, நீங்க ஊருக்குக் கெளம்பும் போதும் ஒரு திருக்கோவிலூர் போஸ்டு! இப்ப வரும் போதும் ஒரு போஸ்டா! பின்னுறீங்க போங்க!!

    ReplyDelete
  8. //கீதா சாம்பசிவம் said...
    இன்னும் பார்க்காத ஊர்களில் இதுவும் ஒன்று, பார்க்க ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள்.//

    ஒரு நடை போயிட்டு வந்துடுங்க கீதாம்மா!
    சிவானந்தவல்லி அவ்வளவு அழகு!
    பெருமாளும் ரொம்பவே ஒசரம்!!

    //அதுவும் அந்தப் பாசுரமும், கரும்பு ஆடுவதை மனக்கண்ணால் கண்டு களிக்கும் வண்ணம் இருக்கிறதே!! எவ்வளவு அழகிய தமிழ் நடை!!//

    கரும்பு ஆடுதுன்னு நீங்க ஒரு கரும்பை வயல்ல இருந்து ஒடிச்சிச் சாப்பிட்டா, அதுக்கு நான் பொறுப்பில்லை! இப்பவே சொல்லிட்டேன்! :-)

    ReplyDelete
  9. பல முறை போயிருந்தாலும் நீங்க சொல்லியிருக்கும் சிவன் கோவில் பார்த்தது கிடையாது....சிவானந்தவல்லி.....
    ஆகா பெயரே எத்துணை அழகு.

    பெங்களூரிலிருந்து திருக்கோவிலூருக்கு செல்ல வழி காண்பித்த செந்தழலார் எனக்கு இந்த கோவில் பற்றி ஒண்ணுமே சொல்லாம விட்டுவிட்டார்..

    ReplyDelete
  10. வழக்கம் போல அழகா தெளிவா இந்த பொடியனுக்கும் புரியும்படியா எழுதி இருக்கீங்க. :)

    கரும்பு திங்கறதுக்கு பல்லு வேணும் KRS anna.

    ReplyDelete
  11. சிறந்த பதிவுகள். நான் லேட் ஆக வந்ததால் மூன்றுக்கும் சேர்த்து ஒரே கமெண்ட் -அற்புதம்.

    //இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் ! :-) //

    இதை இதை இதைத்தான் எல்லாரும் புரிஞ்சிக்கனுமிங்கறது.
    ஷோபா

    ReplyDelete
  12. Great Post (Sorry for the english).

    Thanks a lot for the details and informations. The photos are also very good (Thanks to Ravi).

    Thirukoviloor always reminds me about Ponniyin Selvan (Thirukoviloor Malayamaan - Uncle of Aditya Karikalan) :-)

    Thanks for your efforts for sharing all precious informations.

    ReplyDelete
  13. தெரியாத பல விஷயங்கள் திருக்கோவிலூரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
    அடுத்த முறை போகும் போது சிவன் கோவில் சென்று பார்க்க வேண்டும்.
    முதலாழ்வார்கள் மூவர் மங்களாசனம் செய்த கோவிலின் உள் செல்லும் போது ஏற்படும் பரவச நிலை இப்பதிவினை படிக்கும் போது ஏற்ப்பட்டது.கண்ணபிரான்..மற்றும் படங்கள் வழங்கிய செந்தழல் ரவி...ஆகிய இருவருக்கும்...நன்றி உரித்தாகுக.

    ReplyDelete
  14. superu katturai! nalla informational!

    ReplyDelete
  15. கரும்பு திங்கறதுக்கு பல்லு வேணும் KRS anna.

    @ambi, உங்களுக்குப் பல் இல்லைங்கிறதை இவ்வளவு வெளிப்படையாவா சொல்றது? ஹையோ!!! பாவம் நீங்க, பூரிக்கட்டை ரொம்ப வேகமாப் பட்டுதோ? :P :P

    ReplyDelete
  16. நண்பர் திருமங்கை நிறைய பாடல்கள் பாடியிருக்கார். இந்தப் பெரியவர் பாடின பாட்டை எல்லாம் இனிமே படிக்கணும். சின்னப்பையன் மாறன் பாடின பாட்டுக்களைத் தான் நிறைய படிச்சிருக்கேன். ஆனா திருமங்கை மேல வெறியா இருக்குற நண்பர்களையும் பாத்திருக்கேன். அப்ப எல்லாம் அவர் எழுதுனதையும் முழுக்கப் படிச்சுப் பாத்துறணும்ன்னு தோணும்; நேரம் தான் இன்னும் அமையலை.

    கரும்பு ஓங்கி வளர்ந்து நிக்கிறதைப் பாத்திருக்கேன். இங்கே தூங்குறதைக் காட்டியிருக்காரு நண்பர் திருமங்கை. :-)

    'நீறு செவ்வே இடக்கண்டால் நெடுமால் அடியார் என்று ஓடும்'ன்னு சடகோபன் பாடியிருக்காரு. நெடுமால் அடியார் மட்டுமில்லாம நெடுமாலே நீறு அணிந்திருக்காரா? சொல்லுங்க. தெரிஞ்சுக்கிறேன்.

    ReplyDelete
  17. ஜெயா டீவியில் இருந்து எடுத்துப் போட்டிருக்கும் முதல் படம் மிக மிக அருமை.

    ReplyDelete
  18. திருக்கோவிலூர் பதிவுகள் அனைத்தும் மிக அருமை. பலமுறை அவ்வூருக்குச் சென்றிருந்தாலும் உலகலந்த பெருமாள் ஆலயத்தைத் தவிர நீங்கள் குறித்திருக்கும் மற்ற இடங்களுக்குச் சென்றதில்லை. அடுத்தமுறை செல்லும் போது இங்கெல்லாம் சென்றுவர முடிவு செய்துவிட்டேன். நன்றி.

    ஒரு தகவல் பிழை இருக்கிறது. வெண்பாவை நீட்டி முழ்க்கிப் பாடினாலும் அகவல் ஓசை வராது. வெண்பா செப்பலோசையைத் தரும். செப்பலோசைக்கு எடுத்துக்காட்டு சொல்வது கடினம். ஆனால் அகவலோசைக்கு என்னால் எடுத்துக்காட்டுகள் தர முடியும்.
    1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா....
    2. கடவுள் பாதி மிருகம் பாதி
    கலந்து செய்த கலவைநான்....
    3.மாசறு பொன்னே வலம்புரி முத்தே
    காசறு விரையே கரும்பே தேனே....

    ReplyDelete
  19. //ஓகை said...
    அடுத்தமுறை செல்லும் போது இங்கெல்லாம் சென்றுவர முடிவு செய்துவிட்டேன்//

    சூப்பர்! சென்று வந்து பயணக் கட்டுரை போடுங்கள் ஓகை ஐயா!

    //ஒரு தகவல் பிழை இருக்கிறது. வெண்பாவை நீட்டி முழ்க்கிப் பாடினாலும் அகவல் ஓசை வராது. வெண்பா செப்பலோசையைத் தரும்//

    ஆகா...தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஓகை ஐயா!
    பதிவில் திருத்தி விடுகிறேன்!

    வெண்பா=செப்பலோசை
    ஆசிரியப்பா தான் அகவல் ஓசை!
    கலிப்பா=துள்ளல் ஓசை
    வஞ்சிப்பா=தூங்கல் ஓசை!

    செப்பல் ஓசை என்பது Narration தான்! அதான் பிரபந்த வெண்பா-வை கோவில்களில் முழங்கும் போது, ஓதும் தொனியில் சொல்லாது, பேச்சுத் தொனியில் சொல்லுவாங்க!

    ReplyDelete
  20. //மதுரையம்பதி said...
    பல முறை போயிருந்தாலும் நீங்க சொல்லியிருக்கும் சிவன் கோவில் பார்த்தது கிடையாது....சிவானந்தவல்லி.....
    ஆகா பெயரே எத்துணை அழகு//

    ஈசன் பெயர் வீரட்டானேஸ்வரர்.
    பதிகம் பெற்ற தலம் மெளலி!

    //பெங்களூரிலிருந்து திருக்கோவிலூருக்கு செல்ல வழி காண்பித்த செந்தழலார் எனக்கு இந்த கோவில் பற்றி ஒண்ணுமே சொல்லாம விட்டுவிட்டார்..//

    ஆகா...விட்டாச் செந்தழலாரை திருக்கோவிலூர் பயண வழிகாட்டி (Tour Guide) ஆக்கி விடுவீங்க போல இருக்கே! :-)

    ReplyDelete
  21. //ambi said...
    வழக்கம் போல அழகா தெளிவா இந்த பொடியனுக்கும் புரியும்படியா எழுதி இருக்கீங்க. :)//

    அம்பி...
    நீங்க பொடியனா?
    கலாய்ச்சலில் மக்களைப் பொடிப் பொடியா ஆக்கும் பொடியன்-னு வேணும்னா சொல்லலாம் :-)

    //கரும்பு திங்கறதுக்கு பல்லு வேணும் KRS anna.//

    கீதாம்மா...Grrrrன்னப் போறாங்க! :-)

    ReplyDelete
  22. //nisha said...
    its excellent, good work.//

    நன்றி நிஷா!

    //Shobha said...
    சிறந்த பதிவுகள். நான் லேட் ஆக வந்ததால் மூன்றுக்கும் சேர்த்து ஒரே கமெண்ட் -அற்புதம்.//

    நன்றி ஷோபா!

    //இதை இதை இதைத்தான் எல்லாரும் புரிஞ்சிக்கனுமிங்கறது//

    ஹூம்! நல்லாவே புரியுது! பூவோடு சேர்ந்து கணவன்களும் மணம் பெறுகிறார்கள்! :-)

    ReplyDelete
  23. //Sridhar Venkat said...
    Thanks a lot for the details and informations. The photos are also very good (Thanks to Ravi).//

    ஆமாம் ஸ்ரீதர்! செந்தழலார் இன்னும் பல படங்களை அனுப்பினார்! நான் தான் இங்கே அத்தனையும் இடவில்லை!

    //Thirukoviloor always reminds me about Ponniyin Selvan (Thirukoviloor Malayamaan - Uncle of Aditya Karikalan) :-)//

    மீசை வைத்த கிழவர்...
    கரிகாலனும், பார்த்திபேந்திரனும் கிண்டல் அடிப்பாங்க! :-)

    ReplyDelete
  24. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
    முதலாழ்வார்கள் மூவர் மங்களாசனம் செய்த கோவிலின் உள் செல்லும் போது ஏற்படும் பரவச நிலை இப்பதிவினை படிக்கும் போது ஏற்ப்பட்டது.//

    நன்றி புஷ்ப லதாம்மா!
    மங்களாசாசனம் ஆடியோ தேடினேன்! கிடைத்திருந்தால் அதையும் போட்டிருப்பேன்!

    ReplyDelete
  25. //Dreamzz said...
    superu katturai! nalla informational!//

    thanks thala...

    //கீதா சாம்பசிவம் said...
    @ambi, உங்களுக்குப் பல் இல்லைங்கிறதை இவ்வளவு வெளிப்படையாவா சொல்றது? ஹையோ!!! பாவம் நீங்க, பூரிக்கட்டை ரொம்ப வேகமாப் பட்டுதோ? :P :P//

    கீதாம்மா...
    ஏதேது, வுட்டா training நீங்களே கொடுப்பீங்க போல இருக்கே! :-)

    ஏற்கனவே அம்பி உங்க மேல பெட்டிஷன் தட்டி வுட்டிருக்காரு! நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள் போஸ்ட்-ல பாத்தோமே! :-)

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    ஜெயா டீவியில் இருந்து எடுத்துப் போட்டிருக்கும் முதல் படம் மிக மிக அருமை.
    //

    அகலகில்லேன் உறையும் என்று
    அலர்மேல் மங்கை உறை மார்பா- வா குமரன்? :-)

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    சின்னப்பையன் மாறன் பாடின பாட்டுக்களைத் தான் நிறைய படிச்சிருக்கேன். ஆனா திருமங்கை மேல வெறியா இருக்குற நண்பர்களையும் பாத்திருக்கேன்.//

    அந்த வெறியன்-ல அடியேனும் ஒருவன்! :-))
    ஏன்னா திருமங்கை-ல காதல் ரசம் அதிகம்! :-)

    //கரும்பு ஓங்கி வளர்ந்து நிக்கிறதைப் பாத்திருக்கேன். இங்கே தூங்குறதைக் காட்டியிருக்காரு நண்பர் திருமங்கை. :-)//

    நின்னுகிட்டே தூங்குதுங்க போல!

    //'நீறு செவ்வே இடக்கண்டால் நெடுமால் அடியார் என்று ஓடும்'ன்னு சடகோபன் பாடியிருக்காரு.
    நெடுமால் அடியார் மட்டுமில்லாம நெடுமாலே நீறு அணிந்திருக்காரா? சொல்லுங்க. தெரிஞ்சுக்கிறேன்//

    பிரபந்தங்களில் பல இடங்களில் நீறு வரும் குமரன்! பல சமயம் சுண்ணப் பொடி என்னும் பொருளில் வரும்!
    சில சமயம் விபூதி என்ற பொருளிலும் வரும்!

    நான் சொல்லும் இந்த ஆலயம் திருக்கண்ணங்குடி!

    ReplyDelete
  28. மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை. மக்கள் மனதில் உறை. இப்பிடித்தான் இருக்கனும். வைணவத் தமிழ் வேதங்கள் இதைச் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி எடுத்துச் சென்று இன்றைய அழுக்கையும் இழுக்கையும் நீக்கியே தீர வேண்டும்.

    ReplyDelete
  29. //G.Ragavan said...
    மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை. மக்கள் மனதில் உறை//

    மறை என்பது மறைந்துள்ள கறைகளைக் களை! கறை களைந்து, மக்களைச் சேர்த்திடுக கரை!

    //வைணவத் தமிழ் வேதங்கள் இதைச் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது//

    நன்றி ஜிரா. தமிழ் வேதம், தமிழ் வேதம் தான்! வைணவ சைவப் பாகுபாடுகள் வேதங்களில் இல்லை!

    //இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி எடுத்துச் சென்று இன்றைய அழுக்கையும் இழுக்கையும் நீக்கியே தீர வேண்டும்//

    ஆமாம். நீக்கியே தீர வேண்டும்!
    அன்று பலருக்கும் இது எடுத்துச் சொல்லப்பட்டது. அதோடு நின்று விடாமல், ஆலயங்களில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்!

    ஆனால் இன்னிக்கி அதே பணியை யார் செய்வது என்பது தான் பெரிய கேள்வி!

    ReplyDelete
  30. //G.Ragavan said...
    மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை.//

    ஜிரா
    மறைக்குப் பொருளே மாறிப் போச்சு!
    மறை, மறைபொருள் ன்னா மறைக்கப்பட வேண்டிய பொருள்-னு நினைச்சிக்கிட்டாங்க!

    ஆனா அப்படியில்லை! நம்முள் "மறை"ந்துள்ள பொருளான இறைவனை வெளிக் கொணரும் முயற்சியே மறைபொருள்!

    ரகசியம் என்ற சொல்லுக்கு சூட்சுமம், நுட்பம் என்ற பொருளும் இருக்கு! வேத ரகசியம்-னு அப்படிச் சொன்னதை, விபரீத பொருள் கொண்டதால் வந்தது தான் இந்த மறைச்சி வைக்கும் பழக்கம்!

    இதைத் தைரியமாகப் முதலில் உடைச்சி எறிஞ்சவர் இராமானுசர்!
    குருவின் சொல்லையும் மீறி, எல்லாரும் அறிய, மறைத்து வைத்ததை உரைத்து வைத்தார்!

    நாடும் நகரமும் "நன்கு அறிய"
    நமோ நாராயணாய என்று
    பாடும் மனமுடைப் பத்தர் உள்ளீர்
    வந்து பல்லாண்டு கூறுமினே!
    என்று ஆழ்வாரும் நாடும் நகரமும் "நன்கு அறிய"
    என்று தான் பாடுகிறார்!

    ReplyDelete
  31. ////G.Ragavan said...
    மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை. மக்கள் மனதில் உறை//

    மறை என்பது மறைந்துள்ள கறைகளைக் களை! கறை களைந்து, மக்களைச் சேர்த்திடுக கரை!
    //
    ////G.Ragavan said...
    மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை.//

    ஜிரா
    மறைக்குப் பொருளே மாறிப் போச்சு!
    மறை, மறைபொருள் ன்னா மறைக்கப்பட வேண்டிய பொருள்-னு நினைச்சிக்கிட்டாங்க!
    //

    இந்த சிறியோனின் இரண்டனா...

    மறை என்றால் வழி நடத்துவது, தடம், என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த ஸ்குருகளில் இருக்கும் தடத்தை 'மறை' என்றும் சொல்வது உண்டு.

    நீங்கள் அந்த தடத்தை பின்பற்றினால் அது சரியான பாதையில் உங்களை சேர வேண்டிய இடத்திற்க்கு இட்டு செல்லும்.

    வாழ்வை சரியான தடத்தில் செலுத்த உதவும் முறையே மறை என்றும் கொள்ளலாம்.

    ReplyDelete
  32. சிறப்பான பதிவு. மகிழ்ச்சி. நன்றி.

    மெய்ப்பொருள் நாயனார் சமாதி திருக்கோயிலூரில் எங்கே எந்த இடத்தில் உள்ளது. அறிய ஆவல்

    அன்புடன்
    ராதாகிருஷ்ணன்.

    மணம்பூண்டி எழுத்துக்கள் சரியாகப் பதியவில்லை. திருத்தவும்.

    ReplyDelete
  33. அருமை ரவி ஷங்கர்,

    கட்டுரை - படங்களுடன் - அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. கரிய பெருமாள் - பொன்னாலான பெருமாளாக மாறியது துணையின் தயவிலா ?? - ம்ம்ம் - வெள்ளி அணியா, வெங்கலம் புழங்கா, பொன்னாலானவைகளையே பயன்படுத்தும் பெருமாள் ( ம்ம்ம் இதுவும் துணையின் தயவோ) - பொன்னிறம் காட்டுவது சரிதானே.

    திருப்பதியில் தாயாரைக் காணக் கண் கோடி வேண்டும்.

    திருக்கோவிலூர் பல ஆண்டுகளுக்கு முன்னால் சென்று வந்தது. பெருமாள் மனது வைத்தால் செல்லலாம் மீண்டும்.

    நன்றி

    ReplyDelete
  34. பதிவின் முதல் படம் ( ஜெயா டிவி ) மிக மிக அருமை. படங்களைத் தேடிப் பிடித்து இணைப்பது சிறந்த செயல். வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. //ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.
    //
    அண்ணா,
    உங்கள் கருத்து மிகவும் சரி!யஜுர் வேதத்தில் உள்ள லக்ஷ்மி ஸுக்தத்தில் //ஹிரண்யவர்ணாம் ஹிரிணீம் // என்றே துவங்கும்.

    ReplyDelete
  36. ///மெய்ப்பொருள் நாயனார் சமாதி திருக்கோயிலூரில் எங்கே எந்த இடத்தில் உள்ளது. அறிய ஆவல்///

    நாயனார் சமாதியாக செய்யப்பட்டார் என்ற தகவல் உங்களுக்கு எப்படி கிடைத்தது ?

    இருந்தாலும் ஊரில் பெருசுகளிடம் கேட்டால் ஏதும் தகவல் கிடைக்கலாம்...

    மெய்ப்பொருள் நாயனார் சம்பவம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

    அந்த சம்பவத்தில் இடம்பெற்ற தத்தன் என்ற மெய்க்காப்பாளன், முத்தநாதன் என்ற எதிரி நாட்டு அரசனை ஊர் எல்லையில் விட்டதாக இடம்பெற்றுள்ளது அல்லவா ?

    அந்த ஊர் எல்லை, மெய்பொருள் நாயனாரின் அறத்தினை உலகுக்கு உணர்த்துவதாக இருந்ததால், அறம்கண்டநல்லூர் என்று அதுமுதல் வழங்கினார்கள்....(ஆங்கிலத்தில் Aragandanallur - கூகிளிடலாம்)

    ReplyDelete
  37. //நாயனார் சமாதியாக செய்யப்பட்டார் என்ற தகவல் உங்களுக்கு எப்படி கிடைத்தது?
    இருந்தாலும் ஊரில் பெருசுகளிடம் கேட்டால் ஏதும் தகவல் கிடைக்கலாம்...//

    ரவி, ராதாகிருஷ்ணன் சார்,

    நாயனாரின் நினைவிடம், சிவானந்தவல்லி அம்பாள் சன்னிதிக்கு அருகில் என்று கேள்விப்பட்டுள்ளேன்! சென்ற முறை போன போது, இந்த ஆலயம் மட்டும் செல்ல முடியவில்லை! ஆனா ஊரில் சொன்னாங்க! திருச்சியில் மெய்ப் பொருள் நாயனார் குரு பூசை நடக்கும்! அப்பவும் சொல்லக் கேள்வி!

    வாரம் ஒரு ஆலயம் பாட் காஸ்ட்டில், சில தகவல்கள் உள்ளன!
    இதோ சுட்டி!
    http://www.podbazaar.com/view/144115188075856885

    ReplyDelete
  38. //Sridhar Venkat said...
    இந்த சிறியோனின் இரண்டனா...
    மறை என்றால் வழி நடத்துவது, தடம், என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த ஸ்குருகளில் இருக்கும் தடத்தை 'மறை' என்றும் சொல்வது உண்டு//

    ஹூம்! நன்றி ஸ்ரீதர்!
    நான் அதை மரை என்றல்லவா எண்ணி இருந்தேன்! மரை கழண்டிடுச்சு-ன்னு சொல்லுவாங்க! screw thread பழுதானால்!

    ReplyDelete
  39. //R. said...
    மணம்பூண்டி எழுத்துக்கள் சரியாகப் பதியவில்லை. திருத்தவும்.//

    done! :-)

    //cheena (சீனா) said...
    கட்டுரை - படங்களுடன் - அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. கரிய பெருமாள் - பொன்னாலான பெருமாளாக மாறியது துணையின் தயவிலா ?? //

    அதே அதே! :-))

    //படங்களைத் தேடிப் பிடித்து இணைப்பது சிறந்த செயல். வாழ்த்துகள்//

    நன்றி சீனா சார்!
    A picture is worth 1000 words!

    ReplyDelete
  40. //Thambi said...
    //ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.
    //
    அண்ணா,
    உங்கள் கருத்து மிகவும் சரி!யஜுர் வேதத்தில் உள்ள லக்ஷ்மி ஸுக்தத்தில் //ஹிரண்யவர்ணாம் ஹிரிணீம் // என்றே துவங்கும்.


    தம்பி கணேசன் சொன்னாக்கா அப்பீல் ஏது! ஸ்ரீ சூக்தத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி தம்பி!

    ReplyDelete
  41. பங்களூரில் இருந்து கடலூர் வரும் பொழுது ப்ல முறை திருக்கோவிலுர்
    சென்று எல்லக்கோவிலுக்கும் சென்று
    தரிசித்து வந்துள்ளேன், தபோவனதில்
    தங்கியும் இருக்கேன். இந்த பதிவை படிக்கும் பொழுது மனம் அந்த நிகழ்வுகளை நினைத்து அசை போடுகின்றது. மிக்க நன்றி
    அன்புடன்
    பிச்சை ராகவன்

    ReplyDelete
  42. பொருளைவிட்டுக் கண்கள் மேலே நகரலைப்பா.

    அந்த லக்ஷ்மி பதக்கம்.....அடடட்ட்ட்டாடா.........

    ஹிரண்மயீ(ம்) லக்ஷ்மி........

    துணையின் வலிமை சொல்லவும் இனிதே.....:-))))

    ReplyDelete
  43. நல்ல நடை ,
    நல்ல பாவனை , உங்களின் தமிழ் பாசுரங்களின் தெளிவு என்னையும் நாலாயிர திவ்யபிரபந்தத்தை படிக்க தூண்டுகிறது .

    ReplyDelete
  44. நானும், அம்பியும் உங்களோட பயங்கரமான கனவில் வந்ததாய்ச் சொல்லிட்டிருக்கீங்களே, அதைப் பத்தி எழுதி இருப்பீங்களாக்கும்னு பார்க்க வந்தா ஒண்ணையும் காணோமே? :)))))))))))

    ReplyDelete
  45. எத்தனை அழகா, அருமையாக கருத்தா எழுதியிருக்கீங்க! என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் :)

    ReplyDelete
  46. Dear kannabiran..i am very happy to learn more about my dad.Keep it up....write more about my dad....he is the cosmos, i know u can't define him but you can write a lot about him....MY DAD WILL BE WITH YOU ALWAYS....all the best..

    ReplyDelete
  47. NAANUM THIRUKKOVILURAI SERTHAVANDHAN. PORANDHU VALARNTHATHU / PADITHTHADHU ELLAMAY THIRUKKOVILUR DHAN. UNGAL VIMARSANANGALAI PAARTHAVUDAN, NERIL PAARPADHU POLE ERUKKU. NAAN KOLKATAVIL SETTLE AAGIVITTANE. PIRANDHA OORAI PAARKA VENDUM POLE ULLADU. BAGAVAN ARUL PURIANUM

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP