Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!

"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"

"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"


தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.

"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.

"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.

வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"

தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"

"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"



தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.

"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"

"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!

எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"

திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!


115858699_771cce968c

தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு

(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி

(தெர தீயக ராதா)

(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ

திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்

(திரை விலக்க மாட்டாயா)

வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்

(திரை விலக்க மாட்டாயா)




கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!

கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....

குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!

பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!

தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!

அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!

நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.

மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!



மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!

94 comments:

  1. தனி மடல்


    மொகுடு= ஹஸ்பெண்ட்

    மொகோடு =மனிதன்

    எந்தா இல்லை எந்த

    பதிவை இன்னும் படிக்கலை.

    ReplyDelete
  2. அருமையான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பதிவு வழக்கம்போல் சூப்பர்.

    ReplyDelete
  4. //துளசி கோபால் said...
    தனி மடல்
    மொகுடு= ஹஸ்பெண்ட்
    மொகோடு =மனிதன்//

    ஓ...அப்படியா டீச்சர்!
    மொகுடு/மொகோடு = கொஞ்ச differenceல மீனிங்கே மாறிடும் போல இருக்கே!
    நன்றி! நீங்க சொன்னவுடனேயே பதிவில் மாற்றி விட்டேன்!

    பாட்டை ஒழுங்கா மொழியாக்கி இருக்கேனா இல்லை "முழி"யாக்கி இருக்கேனா-ன்னும் சொல்லுங்க! :-)

    //பதிவை இன்னும் படிக்கலை//

    மெல்லப் படிச்சி சொல்லுங்க!
    இப்போ நான் தூங்கப் போறேன்! மணி 3:30! குட் நைட் டீச்சர்! :-)

    ReplyDelete
  5. இப்போ போலவே தான் தியாகராஜர் காலத்திலயுமா?

    ஒரு காந்தி நோட்ட நீட்டினா எத்தன நேரம் வரைக்கும் வேணாலும் நின்னு பாக்கலாமே.. இந்த டெக்னிக்ஸெல்லாம் தெரியாத அப்பிராணியா இருந்திருக்காரு..

    ReplyDelete
  6. //வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! -//
    superu!
    chance a illa!

    ReplyDelete
  7. //திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடி வெள்ளப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!//

    அருமை! சொல்ல வார்த்தைகளே இல்லை!

    ReplyDelete
  8. நல்ல அழகான பதிவு. ஒரு வரலாற்று நிகழ்வை தற்பொழுதைய சொற்களில் நல்லா சொல்லறீங்க. அதுவே படிக்கத் தூண்டுது. அதனால் அறியும் தகவல்களும் ரொம்ப சுவாரிசியமா, ச்சீ, சுவரசியமா இருக்கு. :)

    ReplyDelete
  9. //ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
    போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"//

    //மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" -//

    //ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!//

    இப்படி கேவலமா பேசறவங்களுக்கா திருமலைல தினமும் வெங்கடேசனை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்திருக்கிறது???

    எனக்கு என்னுமோ நீங்க அவுங்களை ரொம்ப தாழ்த்தற மாதிரி இருக்கு...

    பதிவு போடனும்னு அவசரத்துல எழுதனீங்களா? மனசு லயிச்சி எழுதன மாதிரி தெரியல :-(

    ReplyDelete
  10. எப்பவும் போல் என்னை அழவைத்த புண்ணியம் உங்களுக்கு! அதற்கும் பதிவிற்கும் நன்றி:-)

    இதைப் படித்ததும் தியாகராஜரின் கதையை என் பிள்ளைகளுக்கு (இந்த பதிவில் இருப்பதையும் சேர்த்து) சொல்லலாம் என்று தோன்றியது...

    ReplyDelete
  11. அருமையான பதிவு.

    ReplyDelete
  12. //பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும் பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!//

    என்னது காலியா?. என்னய்யா சொல்லுறீங்க?. காலையில இருந்து க்யூல நின்னு பிரசாத கவுண்டர் பக்கத்துல வந்த ஓடனே அந்த பால்-பழம் இல்லன்னு சொல்லூறீங்க?. என்னது வேற பிரசாதமா?, அத குடுத்து என்னை ஏமாத்தறீங்களா?, எங்க தல ரசித்து-ருசித்து எழுதின மாதிரியான கெட்டி-பால் பழம் தான் வேணும்.

    நான் தியாகராஜர் மாதிரியெல்லாம் நாளைக்கு வரேன்னு சொல்லிகிட்டு இருக்க மாட்டேன், இங்கனயே நாளைக்கு ராத்திரி வரையில பட்டறைய போட்டுவேன் ஆமா!

    அதோ ஒரு பட்டர் தனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த பாலை எடுக்கிறார், ஆமாம், என்ன மணம், என்ன கெட்டி. அட ராமா அந்தாளு எல்லாத்தையும் தானே குடிச்சுட்டாரே?. :(

    ReplyDelete
  13. Balaji First! :-)

    //வெட்டிப்பயல் said...
    எனக்கு என்னுமோ நீங்க அவுங்களை ரொம்ப தாழ்த்தற மாதிரி இருக்கு...//

    இல்லை பாலாஜி! அவர்களைத் தாழ்த்தித் தான் தியாகராஜரை உயர்த்த முடியுமா என்ன?

    சொல்லப் போனால், நான் ரொம்பவும் குறைத்துக் கொண்டு சொல்லி இருக்கேன், தியாகராஜர் விஷயத்தில்! அன்னமாச்சார்யரை ஆரம்ப காலத்தில் போட்டியாகக் கருதி எப்படி "அடித்து" விரட்டினார்கள் என்பதை அவர் பாட்டிலியே சொல்லி அழுதிருப்பார்.

    //பதிவு போடனும்னு அவசரத்துல எழுதனீங்களா? மனசு லயிச்சி எழுதன மாதிரி தெரியல :-(//

    இதை எழுதி முடிக்கும் போது விடியற்காலை 03:30 மணி! டீச்சருக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க! பாட்டின் சுட்டிகளைத் தேடி மொழியாக்கவும் அதிக நேரம் பிடிச்சுது! மனசு லயித்து எழுதும் போது தான் "தீயினில் தூசாகும்"-னு திருப்பாவை வரிகளும் சட்டுனு ஞாபகம் வந்துச்சு! :-)

    //இப்படி கேவலமா பேசறவங்களுக்கா திருமலைல தினமும் வெங்கடேசனை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்திருக்கிறது???//

    சன்னிதியில் இருக்கும் சில அர்ச்சகர்கள் அப்படிச் செய்வதால், அனைவருமே அப்படித் தான் என்று சொல்ல முடியாது! குழந்தை போல் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களும் இருக்கிறாங்க! அவங்களையும் பல பதிவுகளில் சொல்லி உள்ளேன்! அரங்கனிடமே கோபித்துக் கொண்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், வில்லிபுத்தூரில் ஓடி வந்து வரவேற்ற அர்ச்சகர்...இப்படிப் பல!

    அன்று தியாகராஜர் அப்படிப்பட்ட பேச்சுக்களைக் கேட்கணும்-னு இருக்கு போல! அதான் அவரே சொல்லி உள்ளாரே! யாரை மனம் வலிக்கப் பேசினேனோ - இப்படித் திரையா வந்து தொங்குதுன்னு!

    இவர்களுக்குத் தினமும் தரிசிக்கும் பேறு கிடைத்திருக்கிறதுன்னு நீங்க நினைக்கிறீங்க! நானும் நினைக்கிறேன்! ஆனால் அப்படிக் கிடைத்தவர்கள் அதை நினைக்க வேண்டும் அல்லவா? கரெக்டா?

    சரி, இன்னொரு முக்கியமான கேள்வி:
    இது போன்றவர்களுக்கு எப்படி இவ்வளவு பாக்கியம் கிடைக்குது? நீங்க என்ன நினைக்கறீங்க இது பற்றி?

    ReplyDelete
  14. //Expatguru said...
    அருமையான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி//

    நன்றிங்க Expatguru!

    //துளசி கோபால் said...
    பதிவு வழக்கம்போல் சூப்பர்//

    டீச்சர் குட்மார்னிங்! ஓ...இப்போ நீங்க குட்நைட்டா? சரி சரி! மொகோடு, எந்த-ன்னு நீங்க சொன்னதை எல்லாம் மாத்திட்டுத் தூங்கப் போயிட்டேன்! எழுந்திரிச்சி பார்த்தா மணி 08:50...இனி எப்ப பஸ்ஸைப் பிடிச்சி எப்போ நியூயார்க் போவது? :-))

    ReplyDelete
  15. //இராமநாதன் said...
    இப்போ போலவே தான் தியாகராஜர் காலத்திலயுமா?//

    தல, அப்ப கூட்டம் எல்லாம் அவ்வளவா இல்லை! அதுனால அவ்வளவா கெடுபிடி இருந்திருக்காது போல!

    //ஒரு காந்தி நோட்ட நீட்டினா எத்தன நேரம் வரைக்கும் வேணாலும் நின்னு பாக்கலாமே.. இந்த டெக்னிக்ஸெல்லாம் தெரியாத அப்பிராணியா இருந்திருக்காரு..//

    ஆகா...
    இந்த டெக்னிக் எனக்கே தெரியாதே!
    அப்படியா என்ன?
    வெளியே கூசாம லஞ்சம் வாங்குறவன் கூட, சுவாமியின் திருவுரு முன்னால் கொஞ்சம் வெட்கப்படுவானே? இல்லை-ன்றீங்களா?

    சரி...மொழியாக்கம் கரீட்டா, வோட்காதிபதியே?

    ReplyDelete
  16. //Dreamzz said...
    //வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! -//
    superu!
    chance a illa!//

    நன்றி ட்ரீம்ஸ் தல!
    எனக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது! மிட் நைட் பதிவு எழுதினாத் தான் இப்படி எல்லாம் கற்பனை ஊற்றெடுக்குமோ? :-))

    ReplyDelete
  17. //கீதா சாம்பசிவம் said...
    அருமை! சொல்ல வார்த்தைகளே இல்லை!//

    நன்றி கீதாம்மா! Uncle என்ன சொன்னாரு? தியாகராஜர் திருப்பதிக்கு போயிருக்காரா-ன்னு உங்களைக் கேட்டாரு-ன்னு சொன்னீங்க-ல்ல? இப்போ முழுக்கதையும் அவருக்குச் சொல்லிட்டீங்களா?

    இனி இது மாதிரி தினம் ஒரு கேள்வி கேட்கச் சொல்லுங்க அவரை! அப்ப தான் தினம் ஒரு பதிவு வரும்! :-))

    ReplyDelete
  18. கெ.பி சொல்வதுபோல் என்னை நன்றாக அழ வைத்த புண்யம் உங்களுக்கு....அருமை நன்றி!!

    நிறைய பேரை பாக்க முடியல......சஞ்ஜை சுப்ரமண்யம்,விஜய் சிவா, டி.எம்.க்ருஷ்னா லாம் காணோம்....!!
    பஞ்சரத்ன கீர்த்தனைகள் அனைத்தும் கிடைக்குமா??

    ReplyDelete
  19. //இலவசக்கொத்தனார் said...
    நல்ல அழகான பதிவு. ஒரு வரலாற்று நிகழ்வை தற்பொழுதைய சொற்களில் நல்லா சொல்லறீங்க. அதுவே படிக்கத் தூண்டுது//

    Dank u Koths!
    நமக்கு இப்படிக் கதை சொல்றது தாங்க ஈசி! இலக்கியத் தமிழ்-லாம் நமக்குச் சுட்டு போட்டாலும் வராத ஞான சூன்யங்க!

    //அதனால் அறியும் தகவல்களும் ரொம்ப சுவாரிசியமா, ச்சீ, சுவரசியமா இருக்கு. :)//

    கொத்தனாரே! ஏன் இந்தக் குழப்பம்?
    சுவா-ரிசியம்
    சுவ-ரசியம்
    சுவ-ரிசியம்
    சுவா-ரசியம்
    சுவர்-அசியம்
    சுவர்-அசின்
    சுவர்-ஷ்ரேயா
    சுவர்-பாவனா
    ன்னு ஏன் இத்தனை கஷ்டம்? :-)

    பேசாம சுவையாரம்-னு சொல்லி விடுங்களேன்! சொல்-ஒரு-சொல் மக்கள்ஸ், கரீட்டுங்களா?

    ReplyDelete
  20. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    எப்பவும் போல் என்னை அழவைத்த புண்ணியம் உங்களுக்கு! அதற்கும் பதிவிற்கும் நன்றி:-)//

    வாங்க கெபி அக்கா!
    என்னாது? அழ வச்சேனா? போச்சு போங்க! ரூட்டை மாத்திக்கணும் போல இருக்கே! இல்லீன்னா அழுகாச்சிப் பதிவரு-ன்னு சொல்லிடப் போறாங்க! :-)))

    //இதைப் படித்ததும் தியாகராஜரின் கதையை என் பிள்ளைகளுக்கு (இந்த பதிவில் இருப்பதையும் சேர்த்து) சொல்லலாம் என்று தோன்றியது...//

    சூப்பர்! சொல்லுங்க! சொல்லுங்க!
    அதை அப்படியே பதிவாகவும் போடுங்க! நாங்களும் படிப்பம்-ல!

    ReplyDelete

  21. கொத்ஸ், இராமநாதன்
    பாடல் யாரு பாடி சூப்பர்? - எம்.எஸ்? மதுரை மணி??

    இதை TMK, சஞ்சய், திருச்சூர் இராமசந்திரன் எல்லாம் பாடி இருக்காங்களாம்! TMK பாடினது க்ஷேத்திர திருப்பதி-ன்னு ஆல்பம் இருக்காமே? சுட்டி கிடைக்குமா?

    ReplyDelete
  22. //ஓகை said...
    அருமையான பதிவு//

    நன்றி ஓகை ஐயா! மொழியாக்கம் பத்திச் சொல்லவே இல்லையே! தெலுங்குப் பாட்டு பொருள் எதுவும் நான் மாத்திடலையே?

    சீக்கிரமா வெட்டி கிட்ட தெலுங்கு கத்துக்கணும்! குரு தட்சணை ஃபீஸ் தான் ரொம்ப அதிகம்-னு கேள்விப்பட்டேன்!

    இல்லீன்னா இருக்கவே இருக்காரு எங்க ஜிரா அண்ணன்! காசில்லாம, மாசில்லாம சொல்லிக் குடுப்பாரு!

    ReplyDelete
  23. //வெளியே கூசாம லஞ்சம் வாங்குறவன் கூட, சுவாமியின் திருவுரு முன்னால் கொஞ்சம் வெட்கப்படுவானே? இல்லை-ன்றீங்களா?//

    நெசமாவா சொல்றிங்க?

    ஏம்ப்பா தனி மடல்னு குறிப்பிட்டு பிழைதிருத்தம் அனுப்புனா அதை அப்படியே வெளியே வுடறதா?


    முழியாக்கம் எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா:-))))))

    ReplyDelete
  24. நல்ல கதையை வழக்கம் போல் சுவையாகத் தந்துள்ளீர்கள் இரவிசங்கர். இந்தக் கதையில் சண்டை போடும் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அடியேனின் முன்னோர்களில் ஒருவர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். தனது குருவின் கீர்த்தனைகளைத் தொகுத்துத் தந்தவர் அவர். அவரும் நிறைய கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  25. திரை விலகலா...காதா... எந்தன்
    திருப்பதி வெங்கடரமணா இட..ரென்னும்
    திரை விலகலா...காதா

    பரம புருஷா...அறமெனும் வீட்டிற்குப்
    போக ஒட்டாது செய்யும் எந்தன்
    திரை விலகலா...காதா

    ReplyDelete
  26. // வெட்டிப்பயல் said...
    //ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
    போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"//

    //மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" -//

    //ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!//

    இப்படி கேவலமா பேசறவங்களுக்கா திருமலைல தினமும் வெங்கடேசனை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்திருக்கிறது???

    எனக்கு என்னுமோ நீங்க அவுங்களை ரொம்ப தாழ்த்தற மாதிரி இருக்கு...

    பதிவு போடனும்னு அவசரத்துல எழுதனீங்களா? மனசு லயிச்சி எழுதன மாதிரி தெரியல :-( //

    அது சரி வெட்டிங்க...அப்ப கோயில்ல சாமி பக்கத்துல இருக்குறவங்கள்ளாம் உத்தமர்களா.. இது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே. இது எல்லாக் கோயிலுக்கும் பொருந்துமா? இல்ல திருமலை திருப்பதி வெங்கடரமணன் திருக்கோயிலுக்கு மட்டும் பொருந்துமாங்க? எதாச்சும் தப்பாக் கேட்டிருந்தா கோவிச்சுக்கிறாதீங்கங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறேன். :)

    ReplyDelete
  27. ரவி சங்கர்!
    இக்கீர்த்தனை பலதடவை கேட்டுள்ளேன். இப்படி ஒரு சரித்திரம் இதற்குள்ளதை இப்போதே அறிந்தேன்.
    அத்துடன் பொருளும் இன்றே அறிந்தேன். மிக்க நன்றி
    ரஞ்சினி காயத்திரி ஏற்கனவே பார்த்தேன். அதை யுருயூபில் இட்ட
    அன்பருக்கு நல்லாசிகள்.
    இந்த தியாகராஜ உற்சவம் இதுவரை பார்க்கக் கிடைக்கவில்லை.
    ஆனால் அறிவு தெரிந்த நாள் முதல் கேட்கிறேன்.
    யாழ்பாணத்தில் திருச்சி வானொலி அஞ்சல் பளிங்குத் தெளிவாக அன்றைய நாட்களில் ஒலிக்கும், வானொலியுள்ள வீடெங்கும் ரசிப்பார்கள்.
    நானும் ரசித்தேன்.
    மறக்க முடியாத நாட்கள்.

    ReplyDelete
  28. //Radha Sriram said...
    கெ.பி சொல்வதுபோல் என்னை நன்றாக அழ வைத்த புண்யம் உங்களுக்கு....அருமை நன்றி!!//

    ஆகா! எல்லாரும் ரவுண்டு கட்டி ஆடுறாங்க! :-)
    ராதா-அழ வைப்பவர்களுக்குப் போய் நன்றி சொல்லலாமா? :-)

    ஆமாங்க ராதா, இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய தலைகள், ஆண்களில் அவ்வளவா காணோம்! ஆனா பெண்களில் சுதா முதற்கொண்டு வந்திருந்தாங்க போல இருக்கே!

    //பஞ்சரத்ன கீர்த்தனைகள் அனைத்தும் கிடைக்குமா??//

    என்னுடைய youtube playlist page போங்க! இந்தாங்க சுட்டி!
    http://youtube.com/view_play_list?p=1E6AB952CD51C265
    or
    http://youtube.com/profile_play_list?user=shravanravi

    ReplyDelete
  29. //மதுரையம்பதி said...
    என்னது வேற பிரசாதமா?, அத குடுத்து என்னை ஏமாத்தறீங்களா?, எங்க தல ரசித்து-ருசித்து எழுதின மாதிரியான கெட்டி-பால் பழம் தான் வேணும்//

    ஹிஹி!
    மெளலி அண்ணா. வேற பிரசாதம் நள்ளிரவு கொடுக்கவே மாட்டாங்க! ஸோ டோன்ட் வொர்ரி! :-)
    கெட்டிப் பாலும் பழமும், புது மாப்பிள்ளைக்கு கொடுப்பது போல்! சாப்ட்டு வாங்க!

    //அதோ ஒரு பட்டர் தனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த பாலை எடுக்கிறார், ஆமாம், என்ன மணம், என்ன கெட்டி. அட ராமா அந்தாளு எல்லாத்தையும் தானே குடிச்சுட்டாரே?. :(//

    :-))))

    ReplyDelete
  30. //துளசி கோபால் said...
    //வெளியே கூசாம லஞ்சம் வாங்குறவன் கூட, சுவாமியின் திருவுரு முன்னால் கொஞ்சம் வெட்கப்படுவானே? இல்லை-ன்றீங்களா?//

    நெசமாவா சொல்றிங்க?//

    ஹிஹி! ஏன் டீச்சர்? எவனும் வெக்கப்படறது இல்லையா? வாங்காம இருக்க மாட்டானுக! ஆனா சாமி இருக்கும் கருவறையில் வாங்குறோமே-ன்னு ஒருத்தனாச்சுக்கும் மனசு குத்தாதா?

    //ஏம்ப்பா தனி மடல்னு குறிப்பிட்டு பிழைதிருத்தம் அனுப்புனா அதை அப்படியே வெளியே வுடறதா?//

    ஓ...அது Not to Publish-aaa?
    நான் அரைத் தூக்கத்தில் ஏதோ தனி மடல் வேற அனுப்பி இருக்கீங்க-ன்னு நினைச்சிகிட்டே தூங்கப் போயிட்டேன்!
    சாரி டீச்சர்!

    பரவாயில்லை என் அரை குறை தெலுங்கு அறிவு தான் இங்கிட்டு எல்லாருக்கும் தெரியுமே! :-)
    அதுனால நீங்க என்னைத் திருத்தி "ஆட்கொண்டதும்" தெரியட்டும்! :-)

    //முழியாக்கம் எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா:-))))))//

    ஆகா! டீச்சர் நாக்கு தெலுங்குல பாஸ் மார்க் இச்சேசானு! சந்தோஷங்க்கா உந்தி டீச்சர்! :-)

    ReplyDelete
  31. //குமரன் (Kumaran) said...
    நல்ல கதையை வழக்கம் போல் சுவையாகத் தந்துள்ளீர்கள் இரவிசங்கர்.//

    நன்றி குமரன்!

    //இந்தக் கதையில் சண்டை போடும் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அடியேனின் முன்னோர்களில் ஒருவர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்//

    ஆகா! எனக்குத் தெரியாதே! சூப்பர்! திராச தான் இவரைப் பற்றிய அறிமுகம் கொடுத்தாரு! எங்க ஊர்க்காரரு! வாலாஜா, செய்யாறு, ஆரணி, ஆர்க்காடு பக்கம்!

    அப்ப குமரனும் நம்ம ஊர்ஸ் தான்-னு சொல்லுங்க! :-)

    //தனது குருவின் கீர்த்தனைகளைத் தொகுத்துத் தந்தவர் அவர். அவரும் நிறைய கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார்//

    ஆமாம் குமரன்! இவர் முயற்சியால் தான் கீர்த்தனைகள் பல காற்றோடு கரையாமல் கைகளுக்குக் கிடைத்தன! தியாகராஜர் பயன்படுத்தின பொரூட்கள் சில மதுரை பஜனை மடத்தில் இருக்குன்னு எப்பவோ என் பதிவில் சொன்னீங்க! அது மட்டும் நினைவிருக்கு!

    ReplyDelete
  32. //G.Ragavan said...
    திரை விலகலா...காதா... எந்தன்
    திருப்பதி வெங்கடரமணா இட..ரென்னும்
    திரை விலகலா...காதா//

    ஜிரா...ஒவ்வொரு தியாகராஜ மொழியாக்கத்துக்கும் உதவிக்கு வரீங்க! நன்றி!

    இது மட்டும் புரியலை!
    அது என்ன விலகலா...காதா?
    ஓஓஓஓஓஓ
    விலகல் + ஆகாதா -ன்னு சொல்றீங்களா! சூப்பரோ சூப்பர்!
    தமிழும் ஆச்சு! காதா-ன்னு தெலுங்கும் ஆச்சு!
    இப்பல்லாம் தெலுங்கு-ல ஏமி நூக்கு இந்தா அபிமானம்? :-)

    சரி...ஒரே ஒரு திருத்தம். அது இடர் என்னும் திரை இல்லை! மத்சரமு என்னும் திரை! மாச்சர்யம், கர்வம், தீய எண்ணம் என்னும் திரை!

    தனியா ஒரு வலைப்பூவில் மூலப்பாடல் - உங்க மொழியாக்கம், என் மொழியாக்கம் - சீவீஆர் மொழியாக்கம் - இதைச் சேமிச்சி வைக்கட்டுமா? என்ன சொல்றீங்க!

    ReplyDelete
  33. //G.Ragavan said...
    அது சரி வெட்டிங்க...அப்ப கோயில்ல சாமி பக்கத்துல இருக்குறவங்கள்ளாம் உத்தமர்களா.. இது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே.//

    பாலாஜி..
    தங்க மரம் பதிவுலயே உமக்கு மரியாதை பலமா இருந்திச்சி! இங்கயும் ஜிரா "ங்க, ங்க" போட்டுச் சொல்றாரு!
    உனக்கு ஆப்பு ரெடி ஆயிக்கிட்டு இருக்குடீ! :-)))

    //இது எல்லாக் கோயிலுக்கும் பொருந்துமா? இல்ல திருமலை திருப்பதி வெங்கடரமணன் திருக்கோயிலுக்கு மட்டும் பொருந்துமாங்க?//

    நல்ல கேள்வி!
    "பாலாஜிக்கும்", "குமரனுக்கும்" தான் வெளிச்சம்! :-)

    //எதாச்சும் தப்பாக் கேட்டிருந்தா கோவிச்சுக்கிறாதீங்கங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறேன். :)//

    இப்படி எல்லாம் இனி பேஸ்மாட்டேன்னு சொல்லுங்க ஜிரா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு! :-))

    ReplyDelete
  34. //அது சரி வெட்டிங்க...அப்ப கோயில்ல சாமி பக்கத்துல இருக்குறவங்கள்ளாம் உத்தமர்களா.. இது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே. இது எல்லாக் கோயிலுக்கும் பொருந்துமா? இல்ல திருமலை திருப்பதி வெங்கடரமணன் திருக்கோயிலுக்கு மட்டும் பொருந்துமாங்க? எதாச்சும் தப்பாக் கேட்டிருந்தா கோவிச்சுக்கிறாதீங்கங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறேன். :)//

    சாமி பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் நல்லவங்க இல்லை. ஆனா சாமி பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் கெட்டவங்களாத்தானே காட்டறா(றீ)ங்க.. அதை தான் சொல்றேன்.

    ஒன்றை உயர்த்த மற்றொன்றை தாழ்த்துவது தானே நம் மரபு... அதை ரொம்ப அருமையா இங்க செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. அதனால தான் கேட்டேன்...

    அதுவுமில்லாம இப்படி கெட்டவங்களே இருக்குற இடத்துல நிக்கற சாமி நல்லதா? கெட்டதா?

    தியாகராஜர் பாட்டு பாடி திரையை எரிச்சிட்டாரு. அப்ப அங்க இருந்த பாட்டு பாடத்தெரியாத பக்தியாளர்கள் எல்லாம் என்ன குறைச்சலா? இதுக்கு அந்த சாமி என்ன லாஜிக் வெச்சிருக்கு?

    இதே மாதிரி ரொம்ப தூரத்துல இருந்து வந்த பல பக்தர்கள் பல இடங்களில் தரிசிக்க முடியாம போயிருக்கே அதுக்கு எல்லாம் ஏன் திரையை எரிக்கல?

    ReplyDelete
  35. //வெட்டிப்பயல் said...
    ஆனா சாமி பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் கெட்டவங்களாத்தானே காட்டறா(றீ)ங்க.. அதை தான் சொல்றேன்//

    முன்பே பதில் சொன்னது போல், இதை எப்பமே செய்வதில்லை! விதி விலக்குகளையும் பல சமயங்களில் காட்டி இருக்கேன்! இங்கு தியாகராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய சூழல். அதைச் சொல்லித் தான் ஆகணும். அவரைக் கிட்டத்தட்ட அப்புறப்படுத்தினார்கள் என்பது தான் கதை! ஆனால் என்ன உரையாடல் பேசினார்கள் என்று நமக்குத் தெரியாது!

    உங்களுக்கு நான் இட்ட உரையாடல் தான் கொஞ்சம் உறுத்தி இருக்கலாம். அதை எழுதும் போது எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது! உங்களிடம் உண்மையைச் சொல்ல என்ன இருக்கு! சொல்கிறேன்!

    அவை என் கற்பனையில் தோன்றிய உரையாடல் இல்லை! பலதும் நான் காதுபடக் கேட்டவை! அதில் சில என்னைப் பார்த்தும் திருவரங்கம் கோயிலில் சொன்னவை! :-(
    Down the memory lane! Thatz why, it took so much time last night to complete the post. I was editing again and again to 'refine' the real words.
    In a different sense, லயிச்சி தான் எழுதினேன்...சரி அழுகாச்சி போதும்! :-) விஷயத்துக்கு வருவோம்!

    //ஒன்றை உயர்த்த மற்றொன்றை தாழ்த்துவது தானே நம் மரபு... அதை ரொம்ப அருமையா இங்க செஞ்ச மாதிரி தெரிஞ்சிது//

    தியாகராஜரை அப்புறப்படுத்தும் போது என்ன சொன்னார்கள் என்று கதையில் இல்லை! ஆனால் அவருக்குச் சற்று முன்னர் வாழ்ந்த அன்னமாச்சாரியார் விஷயத்தில் கடுமை இன்னும் அதிகம்! சில சொற்களை அப்படியே கீர்த்தனையில் போட்டுள்ளார்;
    அம்மாவிடம் ஒரு பிள்ளை "என்னை இப்படி எல்லாம் பேசிட்டாங்கம்மா" ன்னு அழுவது போல் வரும் பாடல் அது! அதையும் கொஞ்சம் இங்கு உரையாடலுக்கு எடுத்துக் கொண்டேன்!
    "புனித பிம்பம்" என்பது மட்டும் தான் சொந்தச் சரக்கு :-)

    ReplyDelete
  36. //இப்போ போலவே தான் தியாகராஜர் காலத்திலயுமா?//

    யார் கண்டார்கள்? ஒரு நிகழ்வை கதையாக்கி இருப்பது இக்கால நபர்தானே? அவர் இப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ததும் இக்கால அனுபவத்தில்தான் இருக்கும்.
    கண்ணபிரான் சாமி, இதில் எவ்வளோ ஆதாரம் உள்ளது எவ்வளோ கற்பனைன்னு... வேண்டாம் வேண்டாம் சுவாரஸ்யம் போயிடும்!

    அருமையான பதிவு!

    ReplyDelete
  37. 'வெட்டி'யின் கருத்துகள் சிந்திக்கத்தக்கவை.
    மற்ற இடங்களில் நடப்பது போலவே இங்கும் அவரை மரைமுகமாகச் சாடுதலே நடப்பது வேதனையளிக்கிறது.

    நீங்கள் அந்த அர்ச்சகரைப் பற்றிய எழுத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா ரவி?

    அண்ணமாச்சார்யாவை இதில் இழுக்க வேண்டாம்.

    பதிவு நன்றாக இருந்தது என்பதையும் சொல்லிப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  38. //அதுவுமில்லாம இப்படி கெட்டவங்களே இருக்குற இடத்துல நிக்கற சாமி நல்லதா? கெட்டதா?//

    எதுக்கு அவர்களைக் கெட்டவங்க-ன்னு சொல்றீங்க? தங்கள் பணியின் மேன்மை உணராதவர்கள்-ன்னு வேணும்னாச் சொல்லுங்க! அதைத் தவிர அவங்க அயோக்யர்களோ, கெட்டவர்களோ இல்லை! அப்படி நான் சொல்லவும் இல்லை!

    //தியாகராஜர் பாட்டு பாடி திரையை எரிச்சிட்டாரு.//

    திரையை எரிக்கணும்-னு நினைச்சி எல்லாம் அவர் பாட்டு பாடலை! தன் பாவத் திரையை விலக்க மாட்டாயா-ன்னு தான் பாடறாரு! பாடிட்டு அவர் பாட்டுக்குனு அழுதுகிட்டே போயிட்டு இருப்பாரு! ஆனா அவர் நேரம் திரை பத்திக்கிச்சி! :-)

    தியாகராஜரின் குணம் என்னான்னா, திரும்பித் திட்ட மாட்டாரு! எதுக்கெடுத்தாலும் உள்ளத்து உணர்ச்சி எல்லாம் ஒரு பாட்டா சட்டுனு வந்துடும்! இராமன் விக்ரகத்தை அவங்க அண்ணன் தூக்கி ஆற்றில் போட்டாரு! அப்பவும் பாட்டு! ஆற்று மேட்டில் விக்ரகம் கொஞ்ச நாள் கழிச்சி கிடைச்சிருச்சி! அப்பவும் பாட்டு! :-)

    //அப்ப அங்க இருந்த பாட்டு பாடத்தெரியாத பக்தியாளர்கள் எல்லாம் என்ன குறைச்சலா? இதுக்கு அந்த சாமி என்ன லாஜிக் வெச்சிருக்கு?//

    பாட்டு என்பது அவர் ஸ்டைல்! அவர் குணம்! அவ்ளோ தான்! அதுக்காக பாட்டு பாடினாத் தான் பெருமை தெரியும், அருள் கிடைக்கும்-னு எல்லாம் ஒன்னும் இல்லை!

    நந்தனார் பாடவில்லை! பேசினார்! நந்தி விலகிற்று!
    கண்ணப்பன் பாடவும் இல்லை! பேசவும் இல்லை! தரிசனம் கிடைத்தது!
    பாஞ்சாலி பாடவில்லை, பேசவில்லை! அடித்தொண்டையில் கத்தினாள்! அருள் கிடைத்தது!

    இங்கு விஷயம் என்னன்னா, உணர்ச்சிகளால் உணர்ந்து, உள்ளத்தில் ஒடுங்கும் போது, இறையருள் வெளிப்படுகிறது!

    தியாகராஜரின் நோக்கம் அடுத்தவனிடம் குறை காண்பது இல்லை! போட்ட திரைக்கும் தன்னைத் தான் காரணம் ஆக்கிக்கிட்டார்!
    ஒடுங்கிப் போனார்! பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்வது போல்,"உலகத்தை மறந்தாள், ஒருமை உற்றாள்!"

    So the logic is you have to become punitha bimbam :-)))

    //இதே மாதிரி ரொம்ப தூரத்துல இருந்து வந்த பல பக்தர்கள் பல இடங்களில் தரிசிக்க முடியாம போயிருக்கே அதுக்கு எல்லாம் ஏன் திரையை எரிக்கல?//

    பிரகலாதனுக்கு proof காட்டியவர், நமக்கு ஏன் proof காட்டறதில்லை?
    ஏன் என்றால் நாம் யாரும் பிரகலாதன் இல்லை! அதான்! :-)
    நாம் எல்லாருமே 100% ஆத்திகர்கள் கிடையாதே!

    சேச்சே...
    எதுக்கு எல்லாரையும் சொல்லணும்? என்னைச் சொன்னாக்கா, எனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும்!
    நான் 100% ஆத்திகன் இல்லை! நான் ஒரு ஆத்திக நாத்திகன்! :-)))

    நாடகத்தால் உன் அடியார் போல் "நடித்து" நான் நடுவே-ன்னு மாணிக்கவாசகர் என்னைய பத்தி அப்பவே ஸ்பெசலா பாடிருக்காரு! என்ன பாலாஜி, எதுக்கெடுத்தாலும் ஒரு பாட்டை எடுத்து வுட்டுரானுங்கப்பா-ன்னு கவுண்டர் மாதிரி சொல்ல வரீங்களோ? :-)))

    ReplyDelete
  39. + போட்டாச்சு!

    ReplyDelete
  40. //VSK said...
    பதிவு நன்றாக இருந்தது என்பதையும் சொல்லிப் பாராட்டுகிறேன்//

    நன்றி SK!

    //அண்ணமாச்சார்யாவை இதில் இழுக்க வேண்டாம்//

    ஏன் இழுக்கக் கூடாது?

    //நீங்கள் அந்த அர்ச்சகரைப் பற்றிய எழுத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா ரவி?//

    நீங்கள் எந்த மாதிரியான ஆதாரங்கள் எதிர்பார்க்கிறீர்கள்-னு சொல்லுங்க SK!
    அடியேனால் இயன்ற அளவு திரட்டித் தருகிறேன்!

    அதற்கும் முன்னால் அர்ச்சகரைப் பற்றிய தவறான எழுத்து எழுத்து-ன்னு சொல்றாங்களே! அர்ச்சகர் மேல் காழ்ப்பைச் சிந்திய எழுத்து எந்த எழுத்து என்பதையும் சொல்லுங்கள்!

    //மற்ற இடங்களில் நடப்பது போலவே இங்கும் அவரை மரைமுகமாகச் சாடுதலே நடப்பது வேதனையளிக்கிறது//

    அர்ச்சகரை மறைமுகமாகவோ, அல்லது வேறு எப்படியோ சாடவும் இல்லை! சாடுவது நோக்கமும் அன்று!
    வெட்டிக்கு அளித்த பதில்களைப் பாருங்கள்!

    ReplyDelete
  41. //VSK said...
    'வெட்டி'யின் கருத்துகள் சிந்திக்கத்தக்கவை//

    எந்தக் கருத்துக்கள் SK?
    //இதுக்கு அந்த சாமி என்ன லாஜிக் வெச்சிருக்கு?
    பல இடங்களில் தரிசிக்க முடியாம போயிருக்கே அதுக்கு எல்லாம் ஏன் திரையை எரிக்கல?//

    - இந்தக் கருத்துக்களா? :-)))

    ReplyDelete
  42. //திவா said...
    யார் கண்டார்கள்? ஒரு நிகழ்வை கதையாக்கி இருப்பது இக்கால நபர்தானே? அவர் இப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ததும் இக்கால அனுபவத்தில்தான் இருக்கும்.//

    :-)
    நன்றி திவா!
    சுவாரஸ்யம் எல்லாக் கதைகளிலும் தேவை தான்! ஆனால் சுவாரஸ்யத்துக்காக மையக் கதையை மாற்றியோ, திரித்தோ விடக் கூடாது!

    கதையின் உரையாடல்களுக்கு ஆதாரம் கேட்க முடியாது! சரித்திரத்தில் எவரும் உரையாடல்களைப் பதிவு செய்து கொள்வதில்லை!

    ஆனால் கதையின் மையக் கருத்துக்கும் நிகழ்வுக்கும் ஆதாரம் உண்டு! தேவையே இல்லாமல் தியாகராஜருக்கும் மற்ற பக்தர்களுக்கும் தரிசனத் தடையை ஏற்படுத்தியதும், அவர்களை அப்புறப்படுத்தியதும் நிகழ்வுகள் தான்!

    ஒரு ஆலயத்துக்கு லேட்டாப் போயிட்டு, நடை சாத்தின பிறகு, நான் சங்கீதப் பேரரசர்! கதவைத் திறங்கடா-ன்னு சொன்னா தப்பு! அப்படித் தியாகராஜர் சொல்லவும் இல்லை! இங்கே நடையும் சார்த்தாமல், திரையை மட்டுமே போட்டு பக்தர்களை அப்புறப் படுத்தியது தான் தவறு!

    நியாயமான காரணங்களுக்காகத் திரை போடுவது வழக்கம் தான்! அலங்காரம், நிவேதனம் போன்ற சமயங்களில். அப்படிச் செய்திருந்தால் தியாகராஜர் காத்திருந்து தரிசனம் செய்து விட்டுப் போயிருப்பார்! பணிவே உருவானவர்!அவருக்கு வீண் சவடால்கள் எல்லாம் தெரியாது!

    ஆனால் திரையைப் போட்டு, அப்புறப்படுத்தத் தொடங்குகிறார்கள்! அதுவும் ஒரு சிலர் தரிசனம் முடித்து, இன்னொரு சிலர் தரிசனம் முடிக்காமல்! அது தான் தவறு!

    ஆனால் அதைக் கூடத் தவறு என்று தியாகராஜர் சொல்லவில்லை! தன்னைத் தானே தான் நொந்து கொள்கிறார்! ஏ கதவே - தீப்பிடித்து எரிந்து போ-ன்னு எல்லாம் அறம் பாடவில்லை! திரையை எரிக்க அவர் வேண்டவில்லை! திரை அறுந்தது திருவருளால் தான்!

    ReplyDelete
  43. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    + போட்டாச்சு!//

    நன்றி ஜீவா!

    ReplyDelete
  44. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ரவி சங்கர்! இக்கீர்த்தனை பலதடவை கேட்டுள்ளேன். இப்படி ஒரு சரித்திரம் இதற்குள்ளதை இப்போதே அறிந்தேன்//

    வாங்க யோகன் அண்ணா! நீங்க தியாகராஜ கீர்த்தனைகளின் ரசிகர் ஆயிற்றே! இது நீங்க ஏற்கனவே அறிந்த பாடல் தான் என்பதில் மகிழ்ச்சி! கீர்த்தனைகளின் பொருளை அவ்வப்போது இசை இன்பம் வலைப்பூவில் சொல்லி வருகிறோம் அண்ணா!

    //இப்படி ஒரு சரித்திரம் இதற்குள்ளதை இப்போதே அறிந்தேன்//

    அதைப் பத்தி தான் இங்கு பெரிய விவாதம் போயிக்கிட்டு இருக்கு! :-)

    //இந்த தியாகராஜ உற்சவம் இதுவரை பார்க்கக் கிடைக்கவில்லை.
    ஆனால் அறிவு தெரிந்த நாள் முதல் கேட்கிறேன்//

    youtube சுட்டி ராதா ஸ்ரீராம் அவர்களுக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க! அதில் முழு ஆராதனையைக் காணலாம்!

    //யாழ்பாணத்தில் திருச்சி வானொலி அஞ்சல் பளிங்குத் தெளிவாக அன்றைய நாட்களில் ஒலிக்கும், வானொலியுள்ள வீடெங்கும் ரசிப்பார்கள்.//

    அப்பாவுக்குத் தஞ்சைக்கு மாற்றலான போது, நாங்க விடுமுறைக்கு வருவோம்! அப்போ ரூபவாகினி, தமிழ்ச்சேவை எல்லாம் வானொலியில் கேட்ட ஞாபகம்! ஈழத்து ஸ்டேஷன்கள் தெள்ளத் தெளிவா கேட்கும்! ஆனா அதே சென்னையில் இருந்து கேட்டா ஒரே கொரகொர! :-)

    ReplyDelete
  45. பாலாஜியுடன் தொலைபேசி உரையாடல் கொஞ்சம் தொடர்ந்தது! :-)

    நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சம்பந்தமான என் கருத்துக்களை, இதோ முன் வைக்கிறேன்!
    ஏதோ தியாகராஜரை ஹீரோவாகக் காட்டுவதற்கு ஒரு சில பேரை வில்லனாகச் சித்தரித்து இருப்பது போல் சிலருக்குப் படுகிறது!

    இன்று முகம் தெரிந்த தியாகராஜரை உயர்த்த, முகம் தெரியாத அர்ச்சகர் ஒருவரையா தாழ்த்த வேண்டும்? தியாகராஜரை உயர்த்த பல்லாயிரக்கணக்கான பாடல்கள் இருக்கு! அவையே போதும்!

    அன்னமாச்சார்யார், தியாகராஜர் - இவர்கள் மேல் எல்லாம் கொட்டிய கடுஞ்சொற்களைக் கூட, அர்ச்சகர்கள் மேல் இங்கு யாரும் திருப்பிக் கொட்டவில்லை! அதுவே உங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றால்....

    பேச்சு வாங்கிய பக்தி உள்ளங்களுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? அந்த வேதனை இங்கு யாருக்காச்சும் புரிகிறதா? :-((((

    ReplyDelete
  46. பாலாஜி, SK ஐயா, திவா சார், மற்றும் நண்பர்களே!

    லோகசாரங்கர் என்ற அர்ச்சகர், திருப்பாணாழ்வாரை அடித்து ரத்தம் சொட்டியது! பின்னர் அரங்கனுக்கும் ரத்தம் சொட்டியது! - இதுக்கும் ஆதாரம் கேட்கப் போறீங்களா? - அன்றைய நிகழ்வை இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டு எழுதினேன்னு சொல்லப் போறீங்களா?

    பின்னர் அரங்கனே பணிக்க, லோகசாரங்கர் தன் தவறை உணர்ந்து, பாணரைத் தோள் மேல் ஏற்றி வந்தார்!
    இதை யாரும் மூடவோ, மறைக்கவோ, பூசி மெழுகவோ இல்லையே! அடித்ததை மறைத்துவிட்டு, திட்டினார்-னு polished-aa சொல்லி இருக்கலாமே!

    இந்த நிகழ்ச்சியால் லோகசாரங்கருக்கு கெட்ட பேர், பாணருக்கு நல்ல பேர் - என்று "பேர் கணக்கு" எல்லாம் யாரும் போட்டுப் பார்க்கவில்லை!

    இந்த நிகழ்ச்சியால் லோகசாரங்கர் -தீயவர் ஆகி விட மாட்டார்! திருப்பாணர் புனிதர் ஆகி விட மாட்டார்!

    பக்தியின் மேன்மை மட்டும் தான் இங்கு தெரிகிறதே தவிர - தனி மனிதர்களையோ, குழுக்களையோ தாங்கிப் பிடிப்பதோ, சாடித் தள்ளுவதோ அறவே இல்லை!

    அது தான் பக்தி இயக்கத்தின் முழுமுதற் பெருமை!
    இதைப் புரிந்து கொள்ளும் உள்ளத்தைத் தான் இறைவன் அருள வேண்டும்!

    ReplyDelete
  47. //ஒன்றை உயர்த்த மற்றொன்றை தாழ்த்துவது தானே நம் மரபு... அதை ரொம்ப அருமையா இங்க செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. அதனால தான் கேட்டேன்//

    Let me make it very clear.
    I dont have any agenda to scold archakas in my blog!

    I have praised the service of archakas like Pillai Perumal Iyengar, Villiputhur archakar and other Sivachariaras.

    If friends want "polishing" to be done on both sides and "mushy-mushy" dialogues, it's very easy for me. Both sides can be "protected"!

    But, trust me, that would not be in the best interests of bhakthi. The best example is Lokasaarangar-ThiruPaanazhwar!

    Friends,
    Lemme know your feedback! (Sorry for this english typing)

    ReplyDelete
  48. மிக அருமை.
    ஏறகுறைய, நீங்கள் தியாகராஜரின் மன நிலையில் இருந்து எழுதியதை போல தத்ரூபமாக உள்ளது.

    பாட்டு லிங்க் எல்லாம் மிக அருமை, கடைசி பஞ்சாக, எந்தரோ மாஹானுபாவுலு சூப்பர். :))

    ReplyDelete
  49. இறைவனுக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ ஒரு வித கர்வம் என்பதை விட அதீத உரிமை அர்சகர்களுக்கு வந்து விடுகிறதோ என எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  50. //பாலாஜி, SK ஐயா, திவா சார், மற்றும் நண்பர்களே!

    லோகசாரங்கர் என்ற அர்ச்சகர், திருப்பாணாழ்வாரை அடித்து ரத்தம் சொட்டியது! பின்னர் அரங்கனுக்கும் ரத்தம் சொட்டியது! - இதுக்கும் ஆதாரம் கேட்கப் போறீங்களா? - அன்றைய நிகழ்வை இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டு எழுதினேன்னு சொல்லப் போறீங்களா?//

    நிகழ்வுகளை பார்த்தவர் யாரும் விலாவாரியாக எழுதி வைத்து இருந்தால் ஒழிய உரையாடல் கற்பனையாகத்தான் இருக்கும். இதை தவிர்க்க இயலாது. அப்போது எழுதும் போது எழுத்தாளர் கற்பனை எப்படிப்போகும்? அவருடைய அனுபவத்தை ஒட்டிப்போகும், இல்லையா? ஸ்ரீரங்கத்தில் தாங்கள் பட்ட அனுபவம் அப்படி எழுத வைத்தது இப்போது புரிகிறது.

    //பின்னர் அரங்கனே பணிக்க, லோகசாரங்கர் தன் தவறை உணர்ந்து, பாணரைத் தோள் மேல் ஏற்றி வந்தார்!
    இதை யாரும் மூடவோ, மறைக்கவோ, பூசி மெழுகவோ இல்லையே! அடித்ததை மறைத்துவிட்டு, திட்டினார்-னு polished-aa சொல்லி இருக்கலாமே!//

    மையக்கருத்தை யாரும் மறுக்கவில்லையே?
    எழுதிய உரையாடல் சிலர் மனதை புண் படுத்தியதாகத் தெரிகிறது. அது தங்கள் எண்ணம் இல்லை என்று சொன்னபின் எல்லாம் தீர்ந்தது என்றே நினைக்கிறேன்.

    //பக்தியின் மேன்மை மட்டும் தான் இங்கு தெரிகிறதே தவிர - தனி மனிதர்களையோ, குழுக்களையோ தாங்கிப் பிடிப்பதோ, சாடித் தள்ளுவதோ அறவே இல்லை!//

    நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் உரையாடலில் ஏளனம், காரம் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கிவிட்டதுதான். எனக்கும் சற்று சங்கடமாகவே இருந்தது. பின் இது கற்பனை உரையாடல்தானே என்று சமநிலைக்கு வந்தேன்.

    //அது தான் பக்தி இயக்கத்தின் முழுமுதற் பெருமை!
    இதைப் புரிந்து கொள்ளும் உள்ளத்தைத் தான் இறைவன் அருள வேண்டும்!//

    //If friends want "polishing" to be done on both sides and "mushy-mushy" dialogues, it's very easy for me. Both sides can be "protected"!//
    எழுதியாச்சு, அப்புறமென்ன?

    Friends, Lemme know your feedback!
    இதோ!

    @ அம்பி,
    //இறைவனுக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ ஒரு வித கர்வம் என்பதை விட அதீத உரிமை அர்சகர்களுக்கு வந்து விடுகிறதோ என எனக்கு தோன்றுகிறது.//

    மகா பெரியவரிடம் ஒருவர் கேள்வி கேட்டார். “மடத்து தொண்டர்கள் பலவிதமாக இருப்பது உங்களுக்கே தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே எப்படி அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறார்கள்?”
    சிரித்துக்கொண்டே பதில் வந்தது: “ அவர்கள் எல்லாம் ஞானம் அடைந்துவிட்டால் மடத்துக்கு தொண்டு செய்வது யார்?”

    ReplyDelete
  51. ennanga idu thyagarajar ange thirai vizhunda mathiri enaku entharo mahanubavu paatu theriyave matenguthu.. yarunga thirai potathu.. seekiram thoranga

    ReplyDelete
  52. சர்ச்சைகளில் சிக்காதவர் என்று ஒருவர் உங்களை என்றோ சொன்னார். அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறீர்களே இரவிசங்கர். :-) உங்களுடன் சர்ச்சை செய்பவர்கள் நண்பர்கள் தான் என்பதும் இந்தச் சர்ச்சைகளா உங்கள் நட்பு முறியாது என்பதும் ஆறுதல் தரும் விஷயங்கள்.

    இந்த இடுகையில் என் மனம் புண்படும் படியாக எதையும் நான் காணவில்லை.

    ReplyDelete
  53. //குமரன் (Kumaran) said...
    சர்ச்சைகளில் சிக்காதவர் என்று ஒருவர் உங்களை என்றோ சொன்னார். அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறீர்களே இரவிசங்கர். :-)//

    ஹிஹி
    நியூயார்க் நகர சுரங்க ரயிலில் நீங்க உங்க ஸ்டேஷன் வந்துவிட்டால் நகரவே வேண்டாம் குமரன். சும்மா நின்னீங்கனாவே போதும். தானா வெளிய வந்துருவீங்க :-) தள்ளி வுட்டுருவாங்க! அது மாதிரி தான் இந்த "சர்ச்சைகளில் சிக்காத" என்பதும்! :-)

    //உங்களுடன் சர்ச்சை செய்பவர்கள் நண்பர்கள் தான் என்பதும் இந்தச் சர்ச்சைகளா உங்கள் நட்பு முறியாது என்பதும் ஆறுதல் தரும் விஷயங்கள்//

    ஆமாம் குமரன்.
    நண்பர் வீட்டுல நேத்து ராத்திரி சக்கரைப் பொங்கலாம்!
    பதிவுல நல்லாச் சண்டை போட்டு விட்டு, நண்பர் வீட்டுக்குப் போயி எங்கே என் பொங்கல்-ன்னு கேட்டு வாங்கிச் சாப்புடற பையன் நானு! :-)

    //இந்த இடுகையில் என் மனம் புண்படும் படியாக எதையும் நான் காணவில்லை//

    ஆறுதலான விஷயம்!
    Great men think alike? :-))))

    புரிதல் தானே குமரன் எல்லாத்துக்கும் காரணம்! இந்த மாதிரி சமயங்களில், நான் வீட்டுல புரிஞ்சிக்காம அம்மா அப்பா கிட்ட சத்தம் போட்டதை நினைச்சிப் பாத்துப்பேன்.
    நாம ஒரு சமயம் மத்தவங்களைப் புரிஞ்சிக்கறது இல்லை! நம்மளை ஒரு சமயம் மத்தவங்க புரிஞ்சிக்கிறது இல்லை! :-)

    துர்கா கூட சாட்டிக்கிட்டு இருந்தேனா, அதான் தத்துவமாக் கொட்டுது! :-)

    ReplyDelete
  54. //ambi said...
    மிக அருமை.
    ஏறகுறைய, நீங்கள் தியாகராஜரின் மன நிலையில் இருந்து எழுதியதை போல தத்ரூபமாக உள்ளது//

    ஆகா...அம்பி அண்ணா, என்னை ஏன் இப்பிடிப் போட்டுத் தாக்குதீக? :-)
    ஹிஹி! உண்மை அதான்! கரீட்டாப் புரிஞ்சிக்கிட்டீங்க! தியாகராஜர் மனநிலையைத் தான் சொல்ல வந்தேன்!

    தியாகராஜருக்குத் திமிரு! வெளியே போன்னு சொன்னாப் போகாம, பாட்டு பாடித் திரையை எரிக்கிறேன் பாரு-ன்னு சவடால் வுட்டாரு-ன்னு நண்பர் சொன்னாரா? - சிரிப்பு தாங்கலை! அதான் அவர் மனநிலையில் இருந்து எழுதிட்டேன்!

    //இறைவனுக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ ஒரு வித கர்வம் என்பதை விட அதீத உரிமை//

    அர்ச்சகர்கள் "பெரும்பாலும்" இறைவனையோ திருவுருவத்தையோ அவமதிப்பது இல்லை! பார்த்து பார்த்து தான் செய்கிறார்கள்.

    ஆனால் அடியார் என்று வரும் போது தான், அதே பாவம் (Bhavam), அவர்களுக்கு இல்லாமற் போய்விடுகிறது!
    They maybe well versed in scriptures; Maybe its time to give them training and involve & orient them in devotional literature as well! I am sure they will pick it up!

    ReplyDelete
  55. ஆணி ரொம்ப அதிகமா இருக்கு.. பொறுமையா வரேன்...

    ReplyDelete
  56. //dubukudisciple said...
    enaku entharo mahanubavu paatu theriyave matenguthu.. yarunga thirai potathu..//

    DD akka
    Youtube-la kooda thirai pottutaangala! enna kodumai saravanan! :-)
    seri inthaanga vera link!
    http://www.youtube.com/watch?v=4Me4z7qwIp4

    ReplyDelete
  57. இதே மாதிரி அனுபவம் தியாகராஜருக்கு ஸ்ரீரங்கத்திலும் உண்டு.அங்கும் ஒரு பாட்டு பாடினார். ஸ்ரீதியாகராஜர் சென்னைக்கும் வந்தார். அவர் தங்கியஇடம் டவுனில்
    பண்டர் தெருவில் இன்னும் உள்ளது.

    ReplyDelete
  58. //திவா said...
    எழுதிய உரையாடல் சிலர் மனதை புண் படுத்தியதாகத் தெரிகிறது. அது தங்கள் எண்ணம் இல்லை என்று சொன்னபின் எல்லாம் தீர்ந்தது என்றே நினைக்கிறேன்//

    புரிதலுக்கு நன்றி திவா.

    //நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் உரையாடலில் ஏளனம், காரம் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கிவிட்டதுதான். எனக்கும் சற்று சங்கடமாகவே இருந்தது//

    அது கதைக்குத் தேவைப்பட்டது திவா; முதலிலேயே நேரடியாக பிடித்துத் தள்ளி வெளியேற்ற மாட்டார்களே! பேச்சு வளர்ந்து தானே வெளியேற்றம் நடக்குது! அதான்!!

    //எழுதியாச்சு, அப்புறமென்ன?//

    இனி வரும் பதிவுகளைச் சொன்னேன் திவா! :-)

    ReplyDelete
  59. @திவா, சுவையான விளக்கம், நன்றி! :)

    //ஸ்ரீதியாகராஜர் சென்னைக்கும் வந்தார். அவர் தங்கியஇடம் டவுனில்
    பண்டர் தெருவில் இன்னும் உள்ளது.
    //

    @TRC sir, நல்ல வேளை! அவர் வந்து தங்கிய இடம் கிண்டியோ இல்ல அம்பத்தூரோ இல்லாமல் போனது. :p

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. //இந்த இடுகையில் என் மனம் புண்படும் படியாக எதையும் நான் காணவில்லை. //

    ரீப்பீட்டே...

    நான் என்ன நினைக்கிறேன் என்றால் கே.ஆர்.எஸ் இப்படி எழுதிட்டாரே என்று சில நண்பர்களுக்கு தோன்றியிருக்கலாம். அஷ்டே.

    நான் கூட உங்களுடைய வேறு சில பதிவுகளில் கருத்தை முழுதாக ஏற்காம 'உள்ளேனய்யா' மட்டும் போட்டுவிட்டு சென்றுள்ளேன். ஏன்னா அங்கு ஆர்க்யூ பண்ணி இடைச்செருகல்களுக்கு இடம் தர விரும்பாமையே காரணம்.

    ReplyDelete
  62. சரி, சரி, மார்கழி முடிந்து, தையும் முடிய்ப் போகுது, சீக்கிரம் சுப்ரபாத பதிவில் மீதி இருப்பதை எழுதஆரம்பிங்க. :-)

    ReplyDelete
  63. வைகுண்டத்தில் வாயில் காவலனாய் இருந்து, மாயோனைக் காணவந்த அடியார்களை அலட்சியம் செய்ததாலேயே அவன் வைகுண்ட பதவியிழந்து, பூலோகத்தில் அரக்கனாய் பிறக்க நேர்ந்ததும் நம் புராணங்களில்தானே இருக்கிறது? இரண்யாக்‌ஷகன் தானே கே.ஆர்.எஸ்ஸு? தன்னை நிந்தித்தாலும் பொறுத்துக்கொள்வேன், தன் பக்தனை நிந்தித்தால் அதற்கு மன்னிப்பு கிடையாது என்று சொன்னவனும் கண்ணன் தானே?

    கோபத்தில் பேசப்படும் சொற்கள் கடுமையாக வெளிப்பட்டுவிடுவது வாடிக்கைதானே. நம்மில் தொடங்கி பலரும் செய்துகொண்டுவருவதுதானே. இதையே திருப்பதியில் இருந்த சில அர்ச்சகர்களும் சொல்லியிருக்கலாமே என்று எடுத்துக்கொள்வதில் எந்த குழப்பமும் (என்னளவில்) இல்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு. நாள் பூரா கருவறைக்குள் நின்று இறைப்பணியே செய்தாலும், எத்தகைய கடினமானதொரு வேலையது என்று இருந்து செய்து பார்த்தவர்களுக்கு தெரியும். அப்படி ஒருவழியா வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்னு கிளம்புற நேரத்தில் வந்து கடையத்திற, ஆரத்தி காமினு ஆரமிச்சா எல்லாருக்குமே எரிச்சல் வரத்தான் செய்யும். இது மனித இயல்பு.

    கே.ஆர்.எஸ் இதை பிராக்டிகலா எழுதிருக்கார்னுதான் எனக்கு இன்னமும் தோணுது. எதையும் கட்டமைக்கவெல்லாம் இல்லை. ஓவரா அரசியல் பதிவு படிச்சு படிச்சு பாரனோயா நமக்கெல்லாம் வந்துட்டுதோனு கொத்ஸும் நானும் நேத்து கூட பேசிகிட்டிருந்தோம். அதை நிருபிக்கறா மாதிரி இங்க நடக்குது. :))))

    இந்த இடத்துல இன்னொரு பாட்டு நினைவுக்கு வருது.

    பரியாசகமா மாட பதிகுரிலோ போகதினதி

    வெரபு நனு மானம்புன வெசனம்புன னேக் கோரி சரணாகதரக்‌ஷ்கா
    நினு சந்ததமு சரணங்க....
    -------------------
    இதுக்கு யாராச்சும் சுட்டி இருந்தா கொடுங்கப்பா...

    ReplyDelete
  64. ஐயா! இது ஒண்ணும் பின்னூட்டங்களை அதிகப்படுத்த உத்தி இல்லையே???
    :-))))))))))))))))

    மாற்று கருத்து சொன்னது இரண்டரை பேர். எஸ் கே அப்புறம் எட்டியே பாக்கலை. நானும் விளக்கமா எழுதி விஷயத்தை முடிச்சுட்டேன். இதில் ஏதோ பயங்கர சர்சை நடக்கிறதா ஒரு பிட்ல் அப் இருக்கே, எதுக்கு.??

    ReplyDelete
  65. ////பின்னர் அரங்கனே பணிக்க, லோகசாரங்கர் தன் தவறை உணர்ந்து, பாணரைத் தோள் மேல் ஏற்றி வந்தார்!
    இதை யாரும் மூடவோ, மறைக்கவோ, பூசி மெழுகவோ இல்லையே! அடித்ததை மறைத்துவிட்டு, திட்டினார்-னு polished-aa சொல்லி இருக்கலாமே!//

    மையக்கருத்தை யாரும் மறுக்கவில்லையே?
    எழுதிய உரையாடல் சிலர் மனதை புண் படுத்தியதாகத் தெரிகிறது. அது தங்கள் எண்ணம் இல்லை என்று சொன்னபின் எல்லாம் தீர்ந்தது என்றே நினைக்கிறேன்.

    //பக்தியின் மேன்மை மட்டும் தான் இங்கு தெரிகிறதே தவிர - தனி மனிதர்களையோ, குழுக்களையோ தாங்கிப் பிடிப்பதோ, சாடித் தள்ளுவதோ அறவே இல்லை!//

    நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் உரையாடலில் ஏளனம், காரம் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கிவிட்டதுதான். எனக்கும் சற்று சங்கடமாகவே இருந்தது. பின் இது கற்பனை உரையாடல்தானே என்று சமநிலைக்கு வந்தேன்.//

    ரிப்பீட்டே!!!

    இது கவுண்டர்'ஸ் டெவில் ஷோ இல்லைனு உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்பினேன்... அஷ்டே :-)

    நக்கல் தூக்கலா இருந்த மாதிரி இருந்தது...

    நிறைய பெருக்கு இல்லைனு தோனலாம்.. ஆனா எனக்கு தோனுது... அவ்வளவு தான் :-)

    ReplyDelete
  66. திவா. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. :-)

    ReplyDelete
  67. //So the logic is you have to become punitha bimbam :-)))//

    கண்ணப்பனும், பாஞ்சாலியும் புனித பிம்பம்னு சொல்றது காமடியா இருக்கு...

    மகாபாரதத்துல புனித பிம்பம்னா எனக்கு தெரிஞ்சி விதுனரும், தருமனும் தான்...

    விதுனர் எமதர்மனோட அவதாரம்னும் சொல்லுவாங்க. தர்மன் எமதர்மரோட வாரிசு...

    ரொம்ப யோசிச்சா நிறைய பேர் கிடைக்கலாம். ஆனா பாஞ்சாலி நிச்சயம் புனித பிம்பம் இல்லை :-)

    புனித பிம்பம்னா அவ என்ன பண்ணிருக்கனும்னா கண்ணன் என்னை எப்படியும் காப்பாத்துவானு அந்த சபைக்கு வந்திருப்பா... புனித பிம்பத்தின் Perfect Opposite பாஞ்சாலி தான் :-)

    So ur logic is NOT Valid :-)

    ReplyDelete
  68. //அதற்கும் முன்னால் அர்ச்சகரைப் பற்றிய தவறான எழுத்து எழுத்து-ன்னு சொல்றாங்களே! அர்ச்சகர் மேல் காழ்ப்பைச் சிந்திய எழுத்து எந்த எழுத்து என்பதையும் சொல்லுங்கள்!//

    நான் தான் முதல்லயே பேஸ்ட் பண்ணிட்டனே... மறுபடியும் ஏன் இந்த கேள்வி???

    ReplyDelete
  69. //இது கவுண்டர்'ஸ் டெவில் ஷோ இல்லைனு உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்பினேன்... அஷ்டே :-)//

    டெவில் ஷோ வெட்டியின் ஏகபோக உரிமை இல்லை என்பதை நானும் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்! அந்தே! :-)

    //நக்கல் தூக்கலா இருந்த மாதிரி இருந்தது...//

    தியாகராஜரை வெளியே தள்ளும் அளவுக்கு அதிகாரமும் தூக்கலாக "இருந்த மாதிரி" இருந்தது!

    //நிறைய பெருக்கு இல்லைனு தோனலாம்.. ஆனா எனக்கு தோனுது... அவ்வளவு தான் :-)//

    உங்களுக்கு மட்டும் காட்சி கொடுக்குது என்றால் நீங்க மிகவும் புனித பிம்பம் பாலாஜி! :-)
    ஹைய்யா...பாலாஜிய ஆன்மீகப் பதிவர்-னு வவாச-ல சொல்லியிருந்தேன்! இப்போ பாலாஜி புனித பிம்பம் ஆயாச்சே!

    தியாகராஜர் பூசைக்காகத் திரை போட்டிருந்தால் இப்படி எல்லாம் அழுது பாட மாட்டார்.
    பூசை முடியும் வரை அவர் ராமனுக்குக் காத்திருப்பதில் சுகமே காண்பார்.
    ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை! :-(
    அந்தே! அஷ்டே!!

    ReplyDelete
  70. //திவா said...
    ஐயா! இது ஒண்ணும் பின்னூட்டங்களை அதிகப்படுத்த உத்தி இல்லையே???//

    ஹா ஹா ஹா!
    திவா, பாருங்க! இப்ப இது சர்ச்சையாகப் போகுது!
    சர்ச்சை நடக்கிறதா ஒரு பில்டப்பு இருக்கா என்று ஒரு சர்ச்சை வரப் போகுது!
    நீங்க சர்ச்சைக்குப் புதுசா? :-)

    //மாற்று கருத்து சொன்னது இரண்டரை பேர். எஸ் கே அப்புறம் எட்டியே பாக்கலை. நானும் விளக்கமா எழுதி விஷயத்தை முடிச்சுட்டேன்//

    பதிவிலும் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்னுமில்ல! SK ஐயா, திவா, பாலாஜி சொல்லி முடிச்சப்புறம் நானும் விளக்கமா எழுதி விஷயத்தை முடிச்சிட்டேன்!

    சர்ச்சையில் சிக்காதவன்-ன்னு என்னை ஒரு நண்பர் சொன்னாராம்! சாமீ! வாய் முகூர்த்தம்! வாய் நிறைய சர்க்கரை போடுகிறேன்! :-)))

    ReplyDelete
  71. //இராமநாதன் said...
    இரண்யாக்‌ஷகன் தானே கே.ஆர்.எஸ்ஸு?//

    ஐயா, வோட்காதிபதியே!
    எம்புட்டு நாளா எனக்கு ஆப்பு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தீரு?
    என்னைய போயி இரண்யாட்சன்-னு சொல்லிட்டீரு! :-(((

    சரி, பரவாயில்லை!
    நான் தான் இரண்யாட்சன், இராவணன், சிசுபாலன்!
    வில்லாகி, வில்லனாகி-ன்னு தொடர்கதைக்கு ஐடியா கொடுத்துட்டீங்க! நன்றி! :-)))

    ReplyDelete
  72. அட... முருகா.. ஞானபண்டிதா... செந்திலாண்டவா.. என்ன குழப்பம் இது...

    ///இராமநாதன் said...
    இரண்யாக்‌ஷகன் தானே கே.ஆர்.எஸ்ஸு?//

    ஐயா, வோட்காதிபதியே!
    எம்புட்டு நாளா எனக்கு ஆப்பு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தீரு?
    என்னைய போயி இரண்யாட்சன்-னு சொல்லிட்டீரு!//

    டோட்டலி அவுட் ஆப் காண்டெக்ஸ்ட்! :((((((((

    'இரண்யாக்‌ஷன் தானா' என்று உம்மகிட்ட கன்பர்ம் பண்ண கேட்டேன்.. இப்ப படிச்சுப்பார்த்தா பொருள் மாறிப்போனா மாதிரி இருக்கு...

    ஐ யாம் தி சாரி!

    ReplyDelete
  73. //வெட்டிப்பயல் said...
    கண்ணப்பனும், பாஞ்சாலியும் புனித பிம்பம்னு சொல்றது காமடியா இருக்கு...//

    தன் கண்ணு போனாலும், சாமி கண்ணுல ரத்தம் வரக் கூடாது...
    தன் புடவை கிழிச்சிக் குடுத்து, தன் மானம் போனாலும், கண்ணன் மானம் காப்பாத்தினாப் போதும்....

    - இது எல்லாம் என்ன பாலாஜி?

    //மகாபாரதத்துல புனித பிம்பம்னா எனக்கு தெரிஞ்சி விதுனரும், தருமனும் தான்...//

    என்னைக் கேட்டாக்கா கண்ணபிரான் தான் மகாபாரதத்துலேயே பெரீய்ய்ய்ய் புனித பிம்பம்-னு சொல்லுவேன்! :-)

    // புனித பிம்பத்தின் Perfect Opposite பாஞ்சாலி தான் :-)
    So ur logic is NOT Valid :-)//

    பின்னூட்டத்தைப் படிச்சிட்டு அப்பறமா பதில் பின்னூட்டம் போடணும் பாலாஜி! அப்படித் தானே வழக்கமாச் செய்வீங்க? :-)
    இன்னோரு தபா படிங்க!

    //பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்வது போல்,"உலகத்தை மறந்தாள், ஒருமை உற்றாள்!"
    So the logic is you "have to become"//

    பாஞ்சாலியைப் புனித பிம்பம்-னு நான் சொல்லவே இல்ல!
    அந்தக் கணத்தில் அவள் ஒருமை உற்றாள்! சாதாரண நிலையில் இருந்து புனித நிலை ஆனாள். She became one at that instant.
    "You have to become one"-ன்னு தான் சொன்னேன்! "You are already one"-ன்னு சொல்லலையே!

    எப்பேர்ப்பட்ட கொடியவனும் வாழ்க்கையில் ஒரு கணத்துக்கேனும் புனித பிம்பம் ஆவுறான் பாலாஜி!
    அப்படிப் பாத்தா நானு, நீங்க, நம்ம எல்லாருமே "புனித பிம்பம்" தான்! :-)))))

    ReplyDelete
  74. //தி. ரா. ச.(T.R.C.) said...
    இதே மாதிரி அனுபவம் தியாகராஜருக்கு ஸ்ரீரங்கத்திலும் உண்டு.அங்கும் ஒரு பாட்டு பாடினார்//

    ஓ ரங்க சாயீ - அந்தப் பாட்டா திராச?

    //ஸ்ரீதியாகராஜர் சென்னைக்கும் வந்தார். அவர் தங்கியஇடம் டவுனில்
    பண்டர் தெருவில் இன்னும் உள்ளது//

    Bunder St? புத்தகம், பிரிண்ட் எல்லாம் போடுவாங்களே! அதானே திராச?

    @அம்பி,
    அம்பத்தூர், கிண்டி-ல அப்படி என்னப்பா விசேஷம்! தியாகராஜருக்கு ஒரு வாய் நல்ல காபி கிடைக்க விடமாட்டே போலிருக்கே! :-)

    ReplyDelete
  75. //மதுரையம்பதி said...
    நான் என்ன நினைக்கிறேன் என்றால் கே.ஆர்.எஸ் இப்படி எழுதிட்டாரே என்று சில நண்பர்களுக்கு தோன்றியிருக்கலாம். அஷ்டே//

    :-)
    நோ கமென்ட்ஸ் :-))))

    //ஏன்னா அங்கு ஆர்க்யூ பண்ணி இடைச்செருகல்களுக்கு இடம் தர விரும்பாமையே காரணம்//

    மெளலி அண்ணா
    தப்பா எழுதினா தயங்காமச் சுட்டிக் காட்டூங்க! பதிவுல சொன்னா வம்பு வளரும்-னு நினைச்சா, தனி மடல்-லயாச்சும் சொல்லுங்க!

    //சரி, சரி, மார்கழி முடிந்து, தையும் முடிய்ப் போகுது, சீக்கிரம் சுப்ரபாத பதிவில் மீதி இருப்பதை எழுதஆரம்பிங்க. :-)//

    இத மட்டும் கரீட்டா ஞாபகம் வெச்சிக்குவீங்களே? :-)))

    ReplyDelete
  76. //வெட்டிப்பயல் said...
    நான் தான் முதல்லயே பேஸ்ட் பண்ணிட்டனே... மறுபடியும் ஏன் இந்த கேள்வி???//

    நீங்க பேஸ்ட் பண்ணதுல காழ்ப்பு மருந்துக்குக் கூட இல்ல!

    ReplyDelete
  77. //இராமநாதன் said...
    ஐ யாம் தி சாரி!//

    தல...
    வாட் இஸ் திஸ் சாரி?
    சும்ம்ம்ம்ம்ம்மா, உங்களை ஓட்டத் தான் அப்படி கேட்டேன்! :-)
    அந்த லைனை மட்டும் தனியாப் படிச்சி பாத்தா டக்குன்னு அப்படித் தெரியும்! அதான் லபக்-னு புடிச்சிகிட்டேன்! :-)

    ReplyDelete
  78. //மொழியாக்கம் பத்திச் சொல்லவே இல்லையே! தெலுங்குப் பாட்டு பொருள் எதுவும் நான் மாத்திடலையே?//

    மொழியாக்கம் பற்றி என்னைக் கேட்கிறீர்கள்? நீங்கள் சொன்னால் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். வாத்தியாரம்மா துளசி மொழியாக்கம் சரி என்று முத்திரை கொடுத்துவிட்டாரே!

    எனக்குத் தெலுங்கு தெரியாது. எனக்கு தெலுங்கு தெரியாதது தெலுங்குப் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் இடி இடியெனச் சிரித்தார்கள்!

    (தெலுங்கு அன்பர்கள் கோபம் கொள்ள வேண்டாம். வெறும் நகைச்சுவை மட்டுமே!)

    'எந்தரோ மஹானுபாவு...' கீர்த்தனையில் சொக்கிப் போய் அதை தமிழ்ப் படுத்தவேண்டுமென்று முனைந்து பொருள் அறிந்தபோது முற்றும் கனிந்து போனேன். புத்தியில் அம்மொழிச் சொற்களோடு பதிந்தவிட்ட அந்த பொருளை மொழிமாற்றம் செய்ய அதன் பிறகு மனம் முனையவில்லை.

    ....அந்தரிக்கி நமஸ்காரமுலு!

    ReplyDelete
  79. வெட்டியும் வேயெஸ்கேவும் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.

    நடைசாத்தும் நேரம் இன்னும் வரவில்லை என்பதாலேயே தியாராஜர் தரிசிக்கச் சென்றார் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அங்கு சற்று பிடிவாதமாய் ஆற்ற்மையோடு அங்கிருந்து அகலத் தயங்கும் ஒரு சாமான்யர் (அர்ச்சகர்களின் பர்வையில்), பொருப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களால் எப்படி நடத்தப்பட்டிருப்பார் என்பதை மிக இயல்பான உரையாடல் மூலம் சொல்லியிருக்கிறீர்கள்.

    கதை சொல்லுவதில் மிகவும் தேர்ந்துவிட்ட உங்களை எனக்கு தாத்தாவாக நியமிக்கலாமா என யோசிக்கிறேன்.

    ReplyDelete
  80. //பூலோகத்தில் அரக்கனாய் பிறக்க நேர்ந்ததும் நம் புராணங்களில்தானே இருக்கிறது? இரண்யாக்‌ஷகன் தானே கே.ஆர்.எஸ்ஸு?//

    அவனே தான் தல!
    ஜயன் தான் இரண்யாட்சன், இராவணன், சிசுபாலன்
    விஜயன் தான் இரண்யகசிபு, கும்பகர்ணன், தந்தவக்ரன்

    சொல்லப் போனா, சாபம் தாபம் கோபம் ஆசை எல்லாம் கடந்த மோட்ச நிலை - வைகுண்டத்தில் ஜயவிஜயர் எப்படிக் கோபப்படுவாங்க? சனகாதிகளும் எப்படிச் சாபம் விடுவாங்க! சான்ஸே இல்லையே! இது ஏன் என்பது தனிக்கதை!

    //நாள் பூரா கருவறைக்குள் நின்று இறைப்பணியே செய்தாலும், எத்தகைய கடினமானதொரு வேலையது என்று இருந்து செய்து பார்த்தவர்களுக்கு தெரியும்//

    நச்!

    அர்ச்சகர்கள் இறையருள் கனிந்தவர்கள் இல்லை! அவர்களும் நம்மைப் போல மனிதர்கள் தான்! அவங்க அதிர்ஷ்ட/துரதிருஷ்டம்...
    அந்த வேலையில் இருக்காங்க!
    அவர்கள் கடுஞ்சொல் எல்லாம் பேசவே மாட்டாங்க-ன்னு கற்பனை வளர்த்துக்க கூடாது!

    அதுனால தான் அர்ச்சகம் என்னும் பணியை, மருத்துவமனை, கவுன்சலிங் மாதிரியான ஆன்மீகத் "தன்மை நடத்தைத் துறை" ஆகக் கருத வேண்டும். அதுக்குண்டான பயிற்சியைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கணும்! - இதையும் ஒரு action pointஆக ஆலயச் சீர்திருத்தப் பதிவில் சொல்லி இருந்தேன்.

    //கே.ஆர்.எஸ் இதை பிராக்டிகலா எழுதிருக்கார்னுதான் எனக்கு இன்னமும் தோணுது.//

    நன்றி தலைவா!

    //பரியாசகமா மாட பதிகுரிலோ போகதினதி//
    பரிகாசமா (எனது) சொல் பலர் முன்னிலையில் உன்னைப் புகழ்ந்தது?

    டாக்டர், இந்தாங்க சுட்டி
    Pariyachakama Artist : Maharajapuram Santhanam Ragam : Vanaspathi
    http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/composer.8/

    சுட்டி வேலை செய்யுதா-ன்னு பாருங்க! oppicela musicindiaonline blocked :-)

    ReplyDelete
  81. அருண்
    உங்க பின்னூட்டம் கிடைச்சுது; நன்றி!
    கேட்டுக்கொண்ட வண்ணம் பதிக்கலை!

    ReplyDelete
  82. "வாசஸ்பதி" தான் தெரியும் "வனஸ்பதி" யா ?? போக வேண்டியா தூரம் ரொம்ப இருக்கு எனக்கு.!!!

    ReplyDelete
  83. //Radha Sriram said...
    "வாசஸ்பதி" தான் தெரியும் "வனஸ்பதி" யா ??//

    ராதா,
    இராமநாதன் கொடுத்த பாட்டைத் தேடின போது தான் எனக்கும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சுது.
    வனஸ்பதி=சமையல் நெய் தான் தெரியும்:-))

    //போக வேண்டியா தூரம் ரொம்ப இருக்கு எனக்கு.!!!//

    எனக்கும் தான்!
    அதுனால தான் இந்த தூரக் கணக்கை எல்லாம் நான் பாக்கறதேயில்லை!
    Happiness is not in the end point of the journey, but in the journey itself! :-)

    ReplyDelete
  84. //டாக்டர், இந்தாங்க சுட்டி
    Pariyachakama Artist : Maharajapuram Santhanam Ragam : Vanaspathi
    http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/composer.8/
    சுட்டி வேலை செய்யுதா-ன்னு பாருங்க! oppicela musicindiaonline blocked :-)//

    சூப்பர்...சுட்டி இஸ் நாட் வொர்க்கிங்!
    இந்தாங்க, வேலை செய்யும் சுட்டிகள்...ஆபிசிலிருந்து வூட்டுக்கு வந்துட்டேன்!

    சந்தானம்: http://www.musicindiaonline.com/p/x/9Ub2ASX.it.As1NMvHdW/
    அவர் பிள்ளை, ராமச்சந்திரன்:
    http://www.musicindiaonline.com/p/x/j4f2YSwZht.As1NMvHdW/

    ReplyDelete
  85. @(KRS)நீங்க சர்ச்சைக்குப் புதுசா? :-)

    புதுசே இல்லை.

    பெரும்பாலும் யாரும் அறிவு பூர்வமான விவாதம் செய்வதில்லை.

    உணர்வு பூர்வாமாகவே செய்கிறார்கள்.

    அதனாலேயே சர்சையை கூடியவரை தவிர்த்துவிடுகிறேன்.

    வின் ஆர்குமென்ட் அண்ட் லூஸ் அ ப்ரென்ட் அப்படி ஒரு வாசகம் இருக்கே!



    //Radha Sriram said...

    "வாசஸ்பதி" தான் தெரியும் "வனஸ்பதி" யா ??//



    ராதா,

    இராமநாதன் கொடுத்த பாட்டைத் தேடின போது தான் எனக்கும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சுது.

    வனஸ்பதி=சமையல் நெய் தான் தெரியும்:-))



    :-))))

    வனஸ்பதி = மரம்.
    பாட்டில இருந்ததா? வேதத்துல அடிக்கடி வர சொல்.

    ReplyDelete
  86. ஆமாம் கேஆர்ஸ் அந்த பந்தர் தெரு தான் சஞ்சய்யோடு மியுஸிகல் நடை போகும்போது கண்டோம்..
    ஸ்ரீரங்கம் பாடல் ஜூதா மூராரே கஸ்தூரி ரங்க...

    இராணீயாட்சன் நல்ல பெயர்.
    எனக்கு அவனை ரொம்பபுடிக்கும் ஏன் தெரியுமா?கொஞ்சம் யோஜித்துப் பாருங்கள்.கடவுள் நம்ப முன்னாலே வர வேண்டாம் திருப்பதி சாமிய பாத்த உடனேயே எல்லாத்தையும் மறந்து விடுகிறோம் வெளியில் வரும்வரை.என்னயெல்லாம் கேட்கவேணும் என்பதெல்லாம் மறந்து விடுகிறது ஆனா தவம் செய்து கடவுளை நேரில் பார்த்தபோதுகூட தன்னிலை இழக்காமல் எப்படியெல்லாம் வரம் கேட்டான். எப்படிஎல்லாம் சாகக்கூடாது என்று. என்ன ஒரு திட சித்தம்.

    ReplyDelete
  87. //அந்த பந்தர் தெரு தான் //

    அட! அந்த பந்தர் தெரு!!!!

    என்னடா இது குரங்குத்தெருன்னு ஒரு பெயரான்னு முந்தி நினைச்சுப்பேன்.

    அப்புறம்தான் தெரிஞ்சது அது பண்டார் தெருன்னு:-)))

    வியாபார நிறுவனங்கள் உள்ள காரியாலயம் தெருதானே?

    ReplyDelete
  88. ஓகை said...
    // தெலுங்கு தெரியாதது தெலுங்குப் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் இடி இடியெனச் சிரித்தார்கள்!//

    நானும் இடி இடி எனச் சிரிக்கிறேன்!
    வெட்டி, கோச்சிக்காத நாயனா! :-))

    //'எந்தரோ மஹானுபாவு...' கீர்த்தனையில் சொக்கிப் போய் அதை தமிழ்ப் படுத்தவேண்டுமென்று//

    ஆமாங்க ஓகை ஐயா!
    மூலப் பாடலின் ஆத்மா, அதுவும் அதே ராகத்தோட வருவது அரிதிலும் அரிது!
    இசை இன்பம் வலைப்பூவில், நாங்க கொடுப்பதெல்லாம் சும்மா ஒரு primer தான்! இன்றைய தலைமுறைக்குத் தியாகராஜரை எளிமைப்படுத்தும் முயற்சி! அந்த மொழியாக்கப் பாடலில் மேலோட்டமான பொருள் + மெட்டு தான் வரும்! ஆத்மா+ராகம் எல்லாம் அவர், அவர் தான்!

    ReplyDelete
  89. //ஓகை said...
    வெட்டியும் வேயெஸ்கேவும் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.

    நடைசாத்தும் நேரம் இன்னும் வரவில்லை என்பதாலேயே தியாராஜர் தரிசிக்கச் சென்றார் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.//

    புரிதலுக்கு நன்றி ஓகை ஐயா!

    //கதை சொல்லுவதில் மிகவும் தேர்ந்துவிட்ட உங்களை எனக்கு தாத்தாவாக நியமிக்கலாமா என யோசிக்கிறேன்.//

    ஆகா...
    இது என்ன ஐயா, இப்பிடிப் போட்டுச் சாத்திப்புட்டீங்களே!
    நான் ரொம்பவும் குட்டிப் பையன்!
    அவர் வெட்டிப் பயல் என்றால் நான் குட்டிப் பயல்! :-))

    ReplyDelete
  90. @திவா
    //வனஸ்பதி = மரம்.
    வேதத்துல அடிக்கடி வர சொல்//
    நன்றி திவா.

    @திராச
    //ஸ்ரீரங்கம் பாடல் ஜூதா மூராரே கஸ்தூரி ரங்க...//
    நன்றி திராச.

    இரண்யாட்சன் = இரண்ய+அட்சன் = தங்கக் கண்ணான்!
    சூப்பரா சொல்லி இருக்கீங்க! அவனுக்குத் திட சித்தம் தான்!
    பிரம்மன் முன்னால் வரும் போது, என்னமா யோசிச்சி யோசிச்சி கேட்டான்! நம்ம appraisal-la நம்ம செஞ்சத சொல்லவே மறந்துடறோம்! :-)

    @டீச்சர்
    துளசி கோபால் said...
    //அந்த பந்தர் தெரு தான் //
    என்னடா இது குரங்குத்தெருன்னு ஒரு பெயரான்னு முந்தி நினைச்சுப்பேன்.

    டீச்சரின் குறும்புக்கு அளவே இல்லை! :-)
    Bunder St-nnu ஆங்கிலத்தில் எழுதி வச்சதால் வந்த வினை!
    மும்பையில் Apollo Bundar, Dana Bundar கூட இருக்கு!

    ஆமாங்க டீச்சர்! வணிகத் தெரு தான்! முன்பு எல்லாம் அந்தப் பக்கம் நடந்து போனா, புதுப் பேப்பர் வாசம் தூக்கும்!
    காலண்டர், மேப், கல்யாணப் பத்திரிகை-ன்னு ஒரே பிரின்ட் கடைகள் தான்!

    ReplyDelete
  91. @அம்பி ஆமாம் அவர் பேசாம நல்லவர்கள் இருக்கும் கிண்டி அம்பத்தூருக்கு வந்திருக்கலாம். இருந்தாலும் உம்மேலே அவருக்கு அன்பு அதிகம் அதான் உன் பேருடைய பந்தர் தெருவுக்கு வந்தார். என்ன இருந்தாலும் அவரும் ராம பக்தர் அல்லவா? :))

    ReplyDelete
  92. @ தி. ரா. ச.(T.R.C.) :

    // ஆமாம் அவர் பேசாம நல்லவர்கள் இருக்கும் கிண்டி அம்பத்தூருக்கு வந்திருக்கலாம்.//
    ஓஹோ? அப்ப பேசும் நல்லவர்கள் இருக்கும் இடம் எது?
    :-)

    ReplyDelete
  93. திவாதிவா இது கூடத் தெரியாதா. பேசாத நல்லவர்கள் இருக்கும் இடம் புரசவாக்கம் பக்கத்திலே மேகலா தியேடர் பக்கத்திலே ஒரு பிளட் இருக்கு. அதுலே ஒரு பையன் இப்பொ அமெரிக்காலே இருக்கார்.பேரு சரியா ஞாபகமில்லை கேஆர்ஸ்ன்னு சொல்லுவாங்க

    ReplyDelete
  94. //திவா said...
    ஓஹோ? அப்ப பேசும் நல்லவர்கள் இருக்கும் இடம் எது?
    :-) //

    //தி. ரா. ச.(T.R.C.) said...
    திவா இது கூடத் தெரியாதா. பேசாத நல்லவர்கள் இருக்கும் இடம் புரசவாக்கம் பக்கத்திலே மேகலா தியேடர் பக்கத்திலே ஒரு பிளட் இருக்கு.//

    ஹிஹி
    திராச, இதுல உள்குத்து, வெளிக்குத்து அதெல்லாம் ஒன்னிமில்லை தானே? :-))

    புரசைவாக்கம் ஃபிளாட்டுல அம்மா அப்பா தான் இருக்காங்க! அவங்க நல்லவங்க தான்! ஸோ, நீங்க சொன்னது நல்லவங்க இருக்கும் இடம் சரி தான்!

    ஏன்னா-நான் இப்ப அங்கிட்டு இல்லை பாருங்க! ;-)))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP