Tuesday, December 16, 2008

மார்கழி-01: கீதை Bestஆ? கோதை Bestஆ?

வாங்க மக்களே! மார்கழிக்கு உள்ளாற குதிச்சிடலாமா? எங்களுக்கு இப்ப தான் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் தொடங்குது! ஆனா உங்க பல பேருக்கு, மதி நிறைந்து இந்நேரம் வானத்துல இருக்கும்! இனி இந்திய நேரப்படி பதிவிட முயல்கிறேன்! சரி, போட்டி மொதல்ல, பாட்டு அப்பாலிக்கா...

நேத்து பதிவுல ஒரு பெரிய காமெடி. யாராச்சும் நோட் பண்ணீங்களா? யாருக்கு ஆண்டாள் பூமாலை/பாமாலை சூட்டிக் கொடுக்கிறாள்? பாட்டை நோட் பண்ணுங்க...
* ஆண்டாள், அரங்கர்-க்கு பன்னு திருப்பாவை பல் பதியம்!
* வேங்கடவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம்!

ஆக திருப்பாவை யாருக்கு? = அரங்கனுக்கா? வேங்கடவனுக்கா?
ஆக பெண்பாவை யாருக்கு? = அரங்கனுக்கா? வேங்கடவனுக்கா?
புதிர்-01: மாப்பிள்ளை யாரு? அரங்கனா? வேங்கடவனா??
யாராச்சும் ஒருத்தர் தானே மாப்பிள்ளையா இருக்க முடியும்? கண்டுபுடிச்சி சொல்லுங்க! :)


"கண்ணனைப் போல ஒரு கிறுக்கு வேற யாரும் இருக்க முடியாது! ஒரு விஷயத்தைப் பளீர்-ன்னு சொல்லவே தெரியாது அவனுக்கு!
இழுத்து இழுத்து...நம்மையும் குழப்பி, அவனையும் குழப்பி, எதிரியையும் குழப்பி...
ஆனா கடைசீல சண்டையில் மட்டும் ஜெயிச்சிருவான்!"
- இப்படித் தன் காதலனை ஊருக்கே போட்டுக் கொடுத்து பாட்டை ஆரம்பிக்கிறாள் ஆண்டாள்! அதான் மொத பாட்டு! :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)

மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
,

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!



நோன்பு நோற்ற மார்கழி மாசம், முதல் நாள் ஒரு பெளர்ணமி போல! இப்படி வானவியல் குறிப்பை எல்லாம் இந்தப் பொண்ணு எழுதி வச்சிட்டுப் போறா! ஒரு வேளை ஆண்டாளுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திச்சோ? :)

மார்கழி மாசம், மதி நிறைந்த பெளர்ணமி இன்னும் வானத்தில் தெரியுதே! விடியற் காலையில் நீராடப் போகும் பொண்ணுங்களா!
போதுமினோ? = போகலாம்-வாரீயளா?

நேர் இழையீர் = இழை-ன்னா ஒரு அணிகலன்! ஏந்திழை-ன்னு சொல்லுவாங்க! இழை என்றால் கையில் போட்டுக் கொள்வதா? காலிலா? சொல்லுங்க பார்ப்போம்! நேர் இழை = ஒரே வரிசையா, நேர் நேரா, இழைகள்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் = சூப்பர் ஊரு ஆய்ப்பாடி! அந்தூரு பொண்ணுங்க, நேர் இழை போட்டுக் கொள்ளும் பொண்ணுங்க போல! துடுக்கு இருக்கும்! ஆனாத் திமிர் இருக்காது! சோம்பல் இருக்கும், ஆனாச் சோடை போகாதுங்க! அந்தப் பொண்ணுங்க எல்லாருக்கும் ஒருத்தன் மேல நைசா கண்ணு! யார் அவன்? :)

கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன், குமரன் = வேலை வைத்து வேலை வாங்கும் நந்தகோபன்! அவரு பையன்!
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை, இளம் சிங்கம் = ஏர் (ஆழமான), ஆர்(அழகான) கண்ணு யசோதாம்மாவுக்கு! அவிங்க சிங்கக் குட்டி!

கார் மேனி = கருத்த மச்சான்!
செங் கண் = செவத்த கண்ணு !
கதிர் மதியம் போல் முகத்தான் = சூரியன் போல் பளீர்-ன்னு, அதே சமயம் சந்திரன் போல் குளிர்ச்சியா முகம்!
கண்ணன் அம்புட்டு அழகன்! ஆலிவுட்டும், கோலிவுட்டும், பாலிவுட்டும், அத்தனையும் காலி வுட்டாய் ஆக்கவல்ல கள்ளச் சிரிப்பழகன்!


சரீஈஈஈஈஈஈஈ........அவிங்க அப்பாரு கையில எதுக்கு "வேலு"? அவரு முருக பக்தரா? அவரு பேரு நந்த-கோபனா? கந்த-கோபனா? :)

கூர் வேல் கொடுந் தொழிலாம்! பண்டைத் தமிழகத்தில் சண்டை போடணும்-னா, மொதல்லயே ஆளுங்களை அடிக்க மாட்டாங்க! எதிரி ஊருக்குப் போயி முதலில் பசுக்களைக் கவர்ந்து வருவாங்க! ஆ+நிரை கவர்தல்-ன்னு பேரு!
வெட்சிப் பூச் சூடிக்கிட்டு இவிங்க போய் பசுக்களைக் கவர, அவிங்க கரந்தைப் பூச் சூடிக்கிட்டு பசுக்களைக் காப்பாங்க! பசுக்களைக் கவர வரும் எதிரிகளை விரட்ட "வேல்" வச்சிருக்காரு தலைவர் நந்தகோபன்! தலைவன்-ன்னா எப்பமே கையில் வேல் இருக்கணும்! அப்ப தானே அழகு? :)

அடுத்து.....
ஏர்-ஆர்ந்த கண்ணி, யசோதாம்மா = பாசமானவங்க தான்! ஆனா அவிங்கள வெறும் பாசம்னு லேசா நினைச்சிறாதீங்க பொண்ணுங்களா! உங்க வருங்கால மாமியாரு தில்லாலங்கடி! அத்தனை ஆயர்களையும் கட்டி மேய்க்கிறவங்க!
ஏர் = பார்வையாலேயே உழுதுருவாங்க உங்க மனசை!
ஆர் = பார்வையாலேயே பாசமும் காட்டுவாங்க உங்க கிட்ட!

இந்தக் காலத்துப் பொண்ணுங்க, காதலனைக் காதலிக்கத் தொடங்கும் முன்னர் ஒரு பயோ-டேட்டா போடுதுங்க-ல்ல? அது போலப் போடறா ஆண்டாள்! :)
* மொதல்ல Date-ஐக் குறிச்சி வச்சிக்கிறா = மார்கழித் திங்கள்! மதி நிறைந்த நன்னாள்!
* அப்புறம் ஊரு = சீர் மல்கும் ஆய்ப்பாடி!
* அப்புறம் Daddy = கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்!
* அப்புறம் Mummy = ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை!
* அப்புறம் அவ ஆளு = கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!

சரி, இத்தினி பேரு பேரையும் சொன்னீயே! அவன் பேரு மட்டும் சொல்ல மாட்டேங்குற?
ஹை, ஹை! அது மட்டும் சீக்ரெட்! நண்பர்களுக்கே அப்பறம் தான் சொல்லுவேன்! அப்பறம் தான் அம்மா-அப்பாவுக்கு! ஃபேமிலிக்கு!
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை!
புத்தகம் மூடிய மயிலிறகாக, புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!

காதலன் பேரை உடனே சொல்லிட்டா வம்பு தான் பரவும்!
வேணும்-னா ஒரு க்ளூ!
அவன் நாராயணன்! என்னும் தெய்வம் :)


நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!!

இங்கே தான் ஆண்டாள் நிக்குறா! கண்ணன் படுத்துட்டான்! :)
சிம்ப்பிள் குழந்தைங்க சைக்காலஜி!
படிச்சா என்ன பரிசு-ன்னு மொதல்ல சொல்லிட்டு, அப்பறம் படிக்கச் சொல்லணும்! போட்டுத் திணிக்கக் கூடாது!
இது தெரியாம கீதையில் என்னென்னமோ கண்ட சுலோகத்தையும் சொல்லிப்புட்டு, கடைசீயா பதினெட்டாம் அத்தியாயத்தில்...

* மா "ஏகம்" சரணம் வ்ரஜ! = என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
* அஹம் த்வா சர்வ பாபேப்யோ = உன்னைக் காலம் காலமாகத் தொடரும் பாபங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்!
* மோக்ஷ இஸ்யாமி = அருளொடு பெருநிலம் அளிக்கிறேன்! மோட்சம் உனக்கே!
* மா சுச: = கவலைப் படாதே!

இதற்குச் சரம சுலோகம், சரமச் செய்யுள் என்று பெயர்!
மிகவும் முக்கியமான மூன்று மந்திரங்களுள் இதுவும் ஒன்று! வைணவர் உலகம் போற்றிக் கொண்டாடும் மந்திரம்! பல பேரு இதை முணுமுணுப்பாங்க! கும்மோணம் ஒப்பிலியப்பன் கோயில்ல, பெருமாளின் கைக் கவசத்தில் இது எழுதப்பட்டு இருக்கும்!

கீதாசாரம் சுலோக மழையில் நனைந்து, விடிய விடியக் கதை கேட்டான் அர்ஜூனன்! ஆனால் கடைசியில் சரணம் அடைந்தானா? மோட்சம் கிடைத்ததா?

ஹிஹி! பதினேழு அத்தியாயத்திலும் அவன் ஒரேயடியா கன்ஃப்யூஸ் ஆகிட்டான்; கடேசி பதினெட்டாம் அத்தியாயத்தில், சரணம் அடை-ன்னு வாய் விட்டே கேட்டுப் பாத்தாச்சு! அப்பவும் சரணாகதி பண்ண மறந்தே போனான்! இறுதியில் மோட்சம் போகாமல் சொர்க்கம் தான் போனான் அர்ஜூனன்!
கூட இருந்து கீதை கேட்டவனுக்கே இந்த கதி! கீதை கீதை-ன்னு சும்மா அளப்பறை விட்டுக் கொண்டிருக்கும் நாமெல்லாம்? :)

வந்தாள் எங்க அறிவுக் கொழுந்து! அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்! "எங்கள்" கோதை!
அடச்சே......நம்ம மக்களே பாவம்! கண்டதிலும் உழல்றாங்க! அவிங்களுக்கு பதினேழு அத்தியாயம் கழிச்சியா, பரிசு என்னான்னு சொல்லுறது? இதெல்லாம் வேலைக்காவுமா? கண்ணா! மிஸ்டர் ஜகத்குரு! கொஞ்சம் தள்ளி நிக்கறீயளா?

முதல் பாட்டு, முதல் ரெம்பாவாய்! அதிலேயே சொல்லுறேன் பாரு, நம்ம பசங்களுக்கு என்னா பரிசு-ன்னு!
= நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!!
* மாம் "ஏகம்" = நாராயண"னே"
* அஹம் த்வா = நமக்"கே"
* மோக்ஷ இஸ்யாமி = பறை தருவான்!

வடமொழியில் இதுக்கு பதினெட்டு அத்தியாயமா? பாருங்கள், எங்கள் தமிழில், எடுத்த எடுப்பிலேயே!
அவ்ளோ தான்! ரொம்ப ஈசி! கோப்பையை அறிவிச்சாச்சி! அடிச்சி ஆடுங்க! வெற்றி உங்களுக்கே! இதுக்குப் பேரு தான் Sports-manship! Sports-"woman"ship! :)

கீதோ-பநிஷத்...அப்பறம் பாத்துக்கலாம்!
கோதோ-பநிஷத்
...வாவ், சூப்பரு!
கண்ணன் = ஜகத்குரு!
என் தோழீ, கோதை = ஜகத்-ஜகத்குரு! :)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!


பாரோர் புகழப் படிந்து = உலகமே புகழ, மார்கழி நோன்பைத் துவங்குவோம்! குளிக்கப் போகலாம் வாருங்கள்!
எதிலே குளிக்க? = உடலுக்கு அல்லிக் குளம்! உள்ளத்துக்கு அன்புக் குளம்!

"ஏல்-ஓர்" எம் பாவாய்! = எலே பொண்ணுங்களா, பசங்களா, பதிவர்களா, வாங்க வாங்க! அது என்ன ஏல்-ஓர் எம்பாவாய், ஏல்-ஓர் எம்பாவாய்-ன்னு வித்தியாசமாப் பிரிச்சிப் பிரிச்சி எழுதறீங்க?

அதுவா.....? அதை நாளிக்கிப் பார்க்கலாம்! இப்போ ஒழுங்கா புதிர்-01 க்கு விடை சொல்லுங்க! அது வரை வர்ட்டா இஷ்டைலில் வர்ட்டா? :)

(this addendum was added later...)
பறை:

பறை = Drums! பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா அர்த்தம்? :)

ஆண்டாள் என்னும் பெண்ணியவாதி, அதென்ன பசங்க மட்டும் பறையடிச்சி குத்துப்பாட்டுக்கு ஆடறது? நாங்களும் எறங்கறோம் பாரு-ன்னு இறங்கிட்டாளா? :)
"பறை" என்று பக்தி இலக்கியத்தில் சொல்லாளும் கவிஞர் = கோதை ஒருத்தியே!

* பறை = மோட்சம்! (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம்! (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (காதல் ரீதியில்)

அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தைக் குறிக்கும்?

சங்கத் தமிழர்களோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!
பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு வாழ்க்கைக் கட்டத்திலும் பறை இருக்கும்! போர், உழவு, கூத்து என்று ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்! அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் இசைத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத் தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக, நோன்பிலே கொண்டு வந்து வைக்கிறாள் கோதை!

மலையாளத்தில் "என்ன பறையும்"-ன்னு கேக்கறோம்-ல்ல?
பறை = சொல்!
பறைதல் = சொல்லுதல்! இசையால் சொல்வது = பறை! ஆனால், பறை என்பது வெறுமனே இசைக் கருவி மட்டும் தானா?
இல்லை!
அது சமூக வழக்கிலே அளக்கும் கருவியாகவும் மாறி விட்டது!

பறையின் மேற்புறத் தோலை நீக்கினால் (அ) பறையைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்!
கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?

முற்காலத்தில், பறையடித்து முடிந்த பின், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!
* அதே போல், தெய்வம் கொடுக்கும் கூலி = மோட்சம் = பறை!
* கலந்து விட்ட காதலன் கொடுக்கும் கூலி = பேரின்பம் = பறை!

* பறையடித்து, அதன் கூலியையும் அதிலேயே வாங்கிக் கொள்ளுதல் போலே...
* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் எம்பெருமான்!
சரணம் ஆகும் தனதாள் அடைந்தோர்க்கெல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று மாறன் வாய் மொழியையும் ஒப்பு நோக்கிப் பாருங்கள்! இப்படி நம் அனைவருக்கும் கூலி கொடுக்கும்/ஆண்டளக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை!
* யார் தருவார் பறை? = நாராயண"னே"!
* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!
நாராயணனே, நமக்கே, பறை தருவான்!!  என்று தன் முதல் பாட்டைத் துவங்குகிறாள்!

"பறை" என்னும் இந்தச் சொல்லாட்சி, ஆண்டாள் மட்டுமே காட்டும் "உள்ளுறை உவமம்" = Abstraction in Poetry!
வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ காட்டாத...
ஒரு பெண்-கவிஞர் மட்டுமே சாதித்துக் காட்டிய...
அவள் அப்பா பெரியாழ்வார் கவிதையிலும் காணமுடியாத குறியீடு! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!

1. நமக்கே "பறை" தருவான் =(திருப்பாவை:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு =(தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)
3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் பண்டொரு நாள் =(தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. ஆயர் சிறுமியரோமுக்கு அறை "பறை" =(தி:16 - நாயகனாய் நின்று)
5. அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் =(தி:25 - ஒருத்தி மகனாய்)

6. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே =(தி:26 - மாலே மணிவண்ணா)
7. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் =(தி:27 - கூடாரை வெல்லும்சீர்)
8. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் =(தி:28 - கறவைகள் பின்சென்று)
9. இற்றைப் "பறை" கொள்வாம் அன்று காண் கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் =(தி:29 - சிற்றஞ் சிறுகாலே)
10. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை அணி புதுவை =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி பறை!
அதுவும் கடைசி 5 கவிதைகளில், தொடர்ச்சியாக வரும் சொல்லாட்சி!

* துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...
* நடுவிலே, பறை=சன்மானம், பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம் என்று படியளந்து கிடைத்த பரிசைச் சொல்லி...
* இறுதியிலே, பறை=மோட்சம்/பேரின்பம், இற்றைப் பறையெல்லாம் எனக்கு ஒன்னுமே வேணாம், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே...என்று முடிக்கிறாள்!

இப்போது தெரிகிறதல்லவா, அவள் தனித்துவமான கவிதை = பறை?
உள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை =  சங்கத்தமிழ் இசைக்கருவி
* பறை =  படியளந்து பெறும் பரிசில்/கூலி
* பறை =  எனக்கு-அவனே என்ற பேரின்பக் கூலி!

ஒரு உள்ளத்துக்கு,  "அவன்" கொடுக்கும்  உச்சகட்ட பேரின்பக் கூலி!
என் அன்புத் தோழி, ஆண்டாளின் அடிமனசு இன்பமே, உனக்குப் "பறை"யேலோ ரெம்பாவாய்!!!

35 comments:

  1. எனக்குத் தெரிஞ்சு அரங்கன் தான் மாப்பிள்ளை. நாச்சியார் திருமாளிகையிலயும் ரெங்கமன்னாருன்னு தான் பேரு.

    ஆண்டாள் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றாள் என்று கொண்டாலும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பாட்டு பாடினதா எடுத்துக்க முடியாது. நாம தான் நம்ம சவுகரியத்துக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பாட்டுன்னு வச்சு படிக்கிறோம்; எழுதுறோம் (நான் அதனால தான் அந்த மாதிரி எழுத மாட்டேன்னு சொல்லி 2005ல இருந்து இன்னும் எழுதாம இருக்கேன்) :-)

    அதனால இந்தப் பாட்டுல வர்ற மதிநிறைந்த நன்னாள் மார்கழி முதல் நாள்ல ஆண்டாள் காலத்துல வந்ததுன்னு எடுத்துக்கலாமான்னு தெரியலை. எடுத்துக்கக்கூடாதுன்னு தான் தோணுது.

    நெட்டுக்கா வளர்ந்தவங்க எல்லாம் நெடியோன் தான்; ஆனால் விதப்பா ஒருத்தனை சொல்வோம். அதே போல வேலை வச்சிருக்கிறவங்க எல்லாம் வேலன் தான்; ஆனால் விதப்பா ஒருத்தனை சொல்வோம். அம்புட்டு தான். :-) பாண்டியனையும் நெடியோன்னு சங்கத் தமிழ் சொன்னது போல நந்தகோபனையும் கூர்வேலன்னு சொல்லுது இந்த சங்கத் தமிழ்மாலை.

    நாராயணனே நமக்கே பறை தருவான் சரம ஸ்லோகம் தான்னு அழகா சொன்னீங்க. :-)

    ReplyDelete
  2. @குமரன்
    //எனக்குத் தெரிஞ்சு அரங்கன் தான் மாப்பிள்ளை. நாச்சியார் திருமாளிகையிலயும் ரெங்க மன்னாருன்னு தான் பேரு//

    அப்புறம் எதுக்கு "வேங்கடவனுக்கு என்னை விதி"? :)
    தரவோட வந்து விளக்குங்க குமரன்!

    (ஹைய்யா...அங்க கேட்டு, இங்க கேட்டு, இப்போ குமரன் கிட்டவே தரவு கேட்டாச்சே! :)))

    ReplyDelete
  3. //அதே போல வேலை வச்சிருக்கிறவங்க எல்லாம் வேலன் தான்; ஆனால் விதப்பா ஒருத்தனை சொல்வோம். அம்புட்டு தான்! :)//

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா, தமிழுக்கும் வேலனுக்கும் உள்ள தொடர்பை, ஆயர்களுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பை, கோதை போன்ற அழகிய தமிழ்ப் பெண்களின் போற்றுதலுக்கும் கந்தனுக்கும் உள்ள தொடர்பை அழிக்க சதி நடக்கிறது-ன்னு மட்டும் சொல்லிக் கொண்டு அமைகிறேன்! :)))

    ReplyDelete
  4. என்ன சந்தேகம் அரங்கனே தான்!


    இனிப்புகடைக்குப்போறோம் எத்தனையோ இனிப்புகளைகண்பார்த்தாலும் மனம் ஒரு இனிப்பையே அதிகம் விரும்புகிறது.அது மைசூர்பாக்கோ அலவாவோ அல்லது லட்டோ, எல்லாமே சக்க்கரையில் செய்தவைகள்தான் ஆனாலும் ஏதோ ஒன்று கண்ணையும்கருத்தையும் கவர்ந்துவிடுகிறது.

    அதுப்போலத்தான் குழலழகர் வாயழகரான அழகியமணவாள‌ன் அரங்கனைப்பற்றீ அப்பா சொன்னதுமே அவன்மீது ஆண்டாளுக்குப் ப்ரேமை உண்டாகிவிட்டது.

    ஆண்டாள் சிறுவயதிலேயே தந்தை பெரியாழ்வார் வாயிலாக பூலோக வைகுண்டம் என்ப்படும் திருவரங்க நகரின் மகிமையையும்,(இலகுபொற்கோயிலும் இந்துவின் பொய்கையும் புன்னைவாய்நிழலும் புரிசையும் மதுகரம்பூரித்து உறையும் அக்காவிரித்துறையும் )அந்த அரங்கத்தில் யோக நித்திரைபுரியும் அரங்கனைப்பற்றியும் தெரிந்துகொண்டாள்.



    அவனையே மணக்க கனாகண்டாள். அதை நனவாக்கிக்கொண்டாள்!


    பிஞ்சில்பழுத்த ஆண்டாளை பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து!

    ReplyDelete
  5. நேர் இழையீர் = இழை-ன்னா ஒரு அணிகலன்! ஏந்திழை-ன்னு சொல்லுவாங்க! இழை என்றால் கையில் போட்டுக் கொள்வதா? காலிலா? சொல்லுங்க பார்ப்போம்! நேர் இழை = ஒரே வரிசையா, நேர் நேரா, இழைகள்!
    >>>>>>>>இழை சங்கிலியாக இருக்கணும்

    ReplyDelete
  6. சரீஈஈஈஈஈஈஈ........அவிங்க அப்பாரு கையில எதுக்கு "வேலு"? அவரு முருக பக்தரா? அவரு பேரு நந்த-கோபனா? கந்த-கோபனா>>>>>>>>>>>>>>>>>>>>>>


    எல்லார்கும் சொந்த கோபன்!! வம்புபண்ணாதீங்க ரவி!!!:):)

    ReplyDelete
  7. கார் மேனி = கருத்த மச்சான்! செங் கண் = செவத்த கண்ணு !
    கதிர் மதியம் போல் முகத்தான் = சூரியன் போல் பளீர்-ன்னு, அதே சமயம் சந்திரன் போல் குளிர்ச்சியா முகம்!
    கண்ணன் அம்புட்டு அழகன்! ஆலிவுட்டும், கோலிவுட்டும், பாலிவுட்டும், அத்தனையும் காலி வுட்டாய் ஆக்கவல்ல கள்ளச் சிரிப்பழகன்!
    >>>>>>>>>>>>>>>>>>

    ஐயா ஜாலிமூட்ல எழுதீருக்கீங்க ம்ம் நடக்கட்டும்!!

    ReplyDelete
  8. மாட்டாங்க! எதிரி ஊருக்குப் போயி முதலில் பசுக்களைக் கவர்ந்து வருவாங்க! ஆ+நிரை கவர்தல்-ன்னு பேரு!
    வெட்சிப் பூச் சூடிக்கிட்டு இவிங்க போய் பசுக்களைக் கவர, அவிங்க கரந்தைப் பூச் சூடிக்கிட்டு பசுக்களைக் காப்பாங்க! பசுக்களைக் கவர வரும் எதிரிகளை விரட்ட "வேல்" வச்சிருக்காரு தலைவர் நந்தகோபன்! தலைவன்-ன்னா எப்பமே கையில் வேல் இருக்கணும்! அப்ப தானே அழகு? :)
    >>>>>>>>>>>>>அதானே :) ஆனா இந்த வேலை ஆண்டாள்தவிர வேற யாரும் யூஸ் பண்ல( நினைக்கிறேன்.)

    ( நான்மட்டும் என்வலைல‌ வேலை அரங்கன் கையில் கொடுத்து அதைஒருமரபுக்கவிதைல எழுதிடவும், என்ன மால் கைல வேலான்னு சிலர் எதிர்க்க அப்போ சிலவருடம்முன்பு தாங்கள்வந்து இந்த ஆண்டாள் வரிகளை எடுத்துக்காட்டி அபயக்குரல்கொடுதீங்க நினைவிருக்கா ரவி!:):)

    ReplyDelete
  9. கடைசியில் சரணம் அடைந்தானா? மோட்சம் கிடைத்ததா?
    ஹிஹி! பதினேழு அத்தியாயத்திலும் அவன் ஒரேயடியா கன்ஃப்யூஸ் ஆகிட்டான்; கடேசி பதினெட்டாம் அத்தியாயத்தில், சரணம் அடை-ன்னு வாய் விட்டே கேட்டுப் பாத்தாச்சு! அப்பவும் சரணாகதி பண்ண மறந்தே போனான்! இறுதியில் மோட்சம் போகாமல் சொர்க்கம் தான் போனான் அர்ஜூனன்! கூட இருந்து சுலோகம் கேட்டவனுக்கே இந்த கதி! :)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!

    நம்மாழ்வார்...


    சரணாகதி அடைய அவன்திருவடியை நினைக்க வேண்டுவது நாராயணா என்னும் நாமமே!!
    அதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட ஆண்டாள் பெண் அல்லவா பெண்புத்தி முன்புத்தி!!!!

    ReplyDelete
  10. ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
    >>>>>>>>>>>>>>>>>>>>>>
    இளஞ்சிங்கம்! பார்த்தீங்களா நரசிம்ம அவதாரம் முதல்பாட்டுலேயே வந்தாச்சு!!


    இந்தப்பாட்டுக்கு வேதாந்தக்கருத்தும் இருக்கு.


    நீராடல் என்ற சொல்லுக்கு கலவி என்றும் பொருள் உண்டு

    ஆண்ட‌வ‌னுட‌ன் ப‌க்த‌ர்க‌ள் விரும்பும் பேரின்ப‌க்க‌ல‌வியைக்குறிப்பிடுகிற‌து அந்த‌ உற‌வை அடைய‌ பாவை நோன்பு ஒருகார‌ண‌ம்

    அந்த‌க்கார‌ண‌த்தைக்கொண்டு ஆண்ட‌வ‌னிட‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌ (வ‌ழிகாட்டி அழைத்துச்செல்ல‌) ஆண்டாள் முய‌லுகிறாள்.

    ReplyDelete
  11. //ஷைலஜா said...
    நேர் இழையீர் = ஒரே வரிசையா, நேர் நேரா, இழைகள்!//
    >>>>>>>>இழை சங்கிலியாக இருக்கணும்
    //

    உம்ம்ம்...கையில் போடுவதா? கழுத்தில் மாட்டிக் கொள்வதா-க்கா? கையில் கூட வளையலோட கூட சங்கிலி மாதிரி போடுறாங்களே இப்பல்லாம் :)

    ReplyDelete
  12. "வேங்கடவற்கு என்னை விதி"
    வேங்கட + அவர்க்கு ( அரங்கனுக்கு ) என்னை விதி என்று படிக்கலாமா கண்ணன்

    சும்மா ஒரு முயற்சிதான் தப்பா இருந்தா யாரும் அடிக்க வராதிங்க
    PLS........

    ReplyDelete
  13. கோதையின் கீதையே பெஸ்ட்..

    அப்புறம் என்ன கேள்வி இது.. அரங்கனா?? வேங்கடவனான்னு.. உலகத்துக்கே தெரிந்த விடயம் அரங்கனே மாப்பிள்ளை.. :)

    அரங்கனின் விளையாட்டில் இதுவும் ஒன்று தானே.. அனைத்து செல்வங்களும் தனக்கே வந்து சேருமாறு பார்த்துக் கொண்டான்.. ஆழ்வார்கள் ஆகட்டும்.. ஆச்சார்யர்கள் ஆகட்டும்.. சோழ நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் அனைவரையும் தன்னிடமே வந்து சேரும்படி செய்தான்.

    //அப்புறம் எதுக்கு "வேங்கடவனுக்கு என்னை விதி"? :) //
    வேங்கடவனுக்கு விதிக்கச் சொன்னாள்.. ஆனால் அரங்கனின் மதி.. அவளை உயர் அரங்கனிடம் சேர்த்தது.

    ReplyDelete
  14. மன்னிக்கணும்.

    கோதை எழுதியது = சமயம் சம்பந்தபட்ட நூல்
    கீதை சொல்வது = வாழ்வின் நெறிமுறை, விளக்கங்கள், தத்துவம்.

    சமயம் தாண்டிய தத்துவம் கீதையில் தான் மிளிர்கிறது.

    அங்கே தான் இறையை, என் கண்ணனை, நான் எல்லோருக்கும் உகந்தை இறையாய் மட்டும் பார்க்கிறேன்.

    அவன் உலகெல்லாம் வியாபித்திருக்கும் ஆதிப்பொருளாய்ப் பார்க்கிறேன்.

    கோதையின் நூல் இம்மையில் கண்ணனுடன் கனாக்கண்டு மறுமையில் இன்பம் தேடும் பலருக்கு

    கீதையின் விளக்கமோ இம்மை மறுமை என்றல்லாது என்றுமே இறைநிலையில் இருத்தல்.

    கோதையின் நூல் இறையை நோக்கிப் அடியெடுக்க உகந்தது என்றால்

    கீதையோ இறைத்தன்மைக்கே நம்மை இட்டுச்செல்வது.

    இப்போது சொல்லுங்கள். கோதையா? கீதையா?

    இப்படிக்கு என்றும் க்ருஷ்ணப்ரேமியான,
    ஷக்திப்ரபா

    ReplyDelete
  15. யாரும் கீதையேன்னு சண்டைக்கு வரலியே இன்னும்னு பார்த்தேன். வாழ்க சக்திபிரபா!
    ~~~
    //முதல் பாட்டு, முதல் ரெம்பாவாய்! அதிலேயே சொல்லுறேன் பாரு, நம்ம பசங்களுக்கு என்னா பரிசு-ன்னு! நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!!//
    ஒருவேளை இப்படிச் சொல்லலாமோ? கண்ணன் விட்ட இடத்திலிருந்து கோதை தொடர்ந்தாள் என!

    ReplyDelete
  16. And,
    எல்லோ கோபியரையும் தத்தம் மனாளனாய் நினைக்க வைத்த கண்ணன் தான் Best!

    ReplyDelete
  17. // ஜீவா (Jeeva Venkataraman) said...
    யாரும் கீதையேன்னு சண்டைக்கு வரலியே இன்னும்னு பார்த்தேன். வாழ்க சக்திபிரபா!//

    அடா அடா அடா...என்னவொரு கூட்டணி சந்தோசம் ஜீவாவுக்கு? :)

    //ஒருவேளை இப்படிச் சொல்லலாமோ? கண்ணன் விட்ட இடத்திலிருந்து கோதை தொடர்ந்தாள் என!//

    ஹிஹி!
    கண்ணனைக் காப்பாத்த ரொம்ப மெனக்கெடறீங்க ஜீவா! ஆனா அவன் அப்பவே சரண்டர் ஆயிட்டான்! :)

    ReplyDelete
  18. ஜீவா (Jeeva Venkataraman) said...
    யாரும் கீதையேன்னு சண்டைக்கு வரலியே இன்னும்னு பார்த்தேன். வாழ்க சக்திபிரபா!
    ~~~
    >>>>>>>>>>>>>>>ஜீவா..ஷக்திப்ரபா என் தோஸ்த்! ஆழ்ந்த ஆன்மீக ஞானம் உண்டு...இப்போதானே ஆரம்பம் பொறுத்திருந்து பாருங்க!

    ReplyDelete
  19. @ஜீவா
    //ஒருவேளை இப்படிச் சொல்லலாமோ? கண்ணன் விட்ட இடத்திலிருந்து கோதை தொடர்ந்தாள் என!//

    இல்லை!
    விட்ட இடத்திலிருந்து கோதை தொடர்ந்தாள் என்றால் மேற்கொண்டு பேசி இருப்பாள்!
    கண்ணனின் ரிவர்ஸ் டைரக்ஷன்-ல சாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம்-ன்னு போக மாட்டாளே!
    ரெண்டு பேரும் asc order, desc orderஆ விளையாடறாங்க? :)

    எனவே தங்கள் வாதம் செல்லாது! செல்லாது! :)

    ReplyDelete
  20. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    And,
    எல்லோ கோபியரையும் தத்தம் மனாளனாய் நினைக்க வைத்த கண்ணன் தான் Best!//

    ஹிஹி!
    கூடவே வாழ்ந்த கோபியருக்கே இப்படின்னா...

    அவதார காலம் முடிஞ்சி போன பின்பும், வில்லிபுத்தூர் பெண்களையும், மற்றவர்களையும், பின்னால் வந்த ஆச்சார்யர்களையும், இன்னிக்கி நம்ம எல்லாரையும்...கண்ணனைத் தத்தம் தலைவனாய் நினைக்க வைத்த ஆண்டாள் தான் Very Best! :)

    ReplyDelete
  21. //குமரன் (Kumaran) said...
    எனக்குத் தெரிஞ்சு அரங்கன் தான் மாப்பிள்ளை. நாச்சியார் திருமாளிகையிலயும் ரெங்கமன்னாருன்னு தான் பேரு//

    வேங்கடவன் வீட்டுலயும் ரெங்க விலாசம் இருக்கே! அங்கே உட்கார்ந்து சேவை காணும் போது வேங்கடவனை ரெங்க விலாசா-ன்னு தானே கூப்புடுறாங்க! :)

    //ஆண்டாள் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றாள் என்று கொண்டாலும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பாட்டு பாடினதா எடுத்துக்க முடியாது//

    ஏன்?

    கோதை ஆசு கவி! ஒவ்வொரு நாள் நோன்பின் போதும், அவ்வவ் வீட்டின் முன் பாடி இருக்கலாம் அல்லவா?

    //நாம தான் நம்ம சவுகரியத்துக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பாட்டுன்னு வச்சு படிக்கிறோம்; எழுதுறோம்//

    ஹூம்! உங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க, மேற்கொண்டு தரவு வேணும் குமரன்!

    நான் ஒன்னு சொல்லட்டுமா?
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று-ன்னு முன்னாடியே வானியல் அபூர்வ நிகழ்ச்சி தெரிந்திருக்க அவளுக்கு வாய்ப்பில்லை! எனவே அன்றன்று பார்த்ததை அன்றன்று பாடிப் பதிஞ்சி வைக்கிறாள் - இதை மறுத்துப் பேசுங்க பார்ப்போம்! :)

    ReplyDelete
  22. //நான் அதனால தான் அந்த மாதிரி எழுத மாட்டேன்னு சொல்லி 2005ல இருந்து இன்னும் எழுதாம இருக்கேன்) :-)//

    ஹா ஹா ஹா!
    கோதைத் தமிழ் வலைப்பூ, பொருளுரைப் பூ அல்லவே!
    அது கதைப்பூ! தமிழ் விதைப்பு! எனவே வேண்டாம் உமக்கு பதைப்பு! :)

    //நெட்டுக்கா வளர்ந்தவங்க எல்லாம் நெடியோன் தான்; ஆனால் விதப்பா ஒருத்தனை சொல்வோம்//

    யார் அவன்? பேர் என்ன? ஊர் என்ன? அவன் என்ன அத்தனை பிரபலமானவனா, பேரைச் சொல்லாமலேயே தெரிய?
    நெடியோன்-ன்னா எனக்குத் தெரிஞ்ச நெடியோன் KRS தான்! :)

    //அதே போல வேலை வச்சிருக்கிறவங்க எல்லாம் வேலன் தான்; ஆனால் விதப்பா ஒருத்தனை சொல்வோம். அம்புட்டு தான். :-)//

    ஆகா!
    அப்போ திருமங்கையை வேலன்-ன்னு சொல்றீங்க! முருகன்-ன்னு சொல்றீங்க! eki.....என்ன கொடுமை இது! வைணவ அடாவடி அல்லவோ இது! :)

    //பாண்டியனையும் நெடியோன்னு சங்கத் தமிழ் சொன்னது போல நந்தகோபனையும் கூர்வேலன்னு சொல்லுது இந்த சங்கத் தமிழ்மாலை//

    என்னாது! கோதையின் மாலை சங்கத் தமிழ் மாலையா? என்ன சங்கம்? முதல், இடை, கடை?
    வைணவ அடாவடிக்கு ஒரு அளவே இல்லியா? நானும் பேசாமல் ஒதுங்கிப் போகிறேன்-ன்னு என்ன வேண்டுமானாலும் அடிச்சி ஆடுவதா? நான் ஆம்ஸ்-இல் இருந்து இறங்கி வந்தேன்...மொத்த நியூயார்க்கும், மின்னசோட்டாவும் காலி! ஓக்கே? :))

    //நாராயணனே நமக்கே பறை தருவான் சரம ஸ்லோகம் தான்னு அழகா சொன்னீங்க. :-)//

    நன்றி குமரன்!
    மரபு வழி வியாக்யானங்கள் இதைத் திருமந்திரம் என்றும்,
    வையத்து வாழ்வீர்காள் = த்வயம்
    ஓங்கி உலகளந்த = சரம சுலோகம்-ன்னும் சொல்லும்!

    ReplyDelete
  23. //ஷைலஜா said...
    என்ன சந்தேகம் அரங்கனே தான்!//

    ஊர்ப் பாசம் ஒங்க கண்ணை மறைக்குதுக்கா! :))

    //இனிப்புகடைக்குப்போறோம் எத்தனையோ இனிப்புகளைகண்பார்த்தாலும் மனம் ஒரு இனிப்பையே அதிகம் விரும்புகிறது//

    தெரியுமே! மை.பா தானே? :)

    //அது மைசூர்பாக்கோ அலவாவோ அல்லது லட்டோ//

    அல்வா! அல்வா! :)

    //எல்லாமே சக்க்கரையில் செய்தவைகள்தான் ஆனாலும் ஏதோ ஒன்று கண்ணையும்கருத்தையும் கவர்ந்துவிடுகிறது//

    வாயை? :)

    //அதுப்போலத்தான் குழலழகர் வாயழகரான அழகியமணவாள‌ன் அரங்கனைப்பற்றீ அப்பா சொன்னதுமே அவன்மீது ஆண்டாளுக்குப் ப்ரேமை உண்டாகிவிட்டது//

    அதான் அரங்கன் மேல் கம்மியாகவும், வேங்கடவன் மேல் அதிக பாசுரங்களும் பாடினாளோ? :)

    பாவை நோன்பு முடிஞ்சவுடன், யாரைக் கண்ணாலம் கட்டிக்கப் பாடுறா? திருப்பாவை நோன்பின் பலனாக அடுத்து நாச்சியார் திருமொழி...அதில் யாரை விரும்பி மொத்த திருமொழியும் ஆரம்பிக்கிறா? முதல் ஆளு யாரு?

    தையொரு திங்களும் தரைவிளக்கித்
    தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
    ....
    வித்தகன் "வேங்கட" வாணனென்னும்
    விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே!

    கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி,
    வித்தகன் வேங்கட வாணன் என்னும்
    விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே!

    உன்னித்து எழுந்தன தட முலைகள்! யாருக்கு?
    வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
    வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே!

    ஹா ஹா ஹா! இதுக்கு என்னா சொல்றீங்க-க்கா?

    வேங்கடவனுக்குத் தான் தன் ஆவி...ன்னு சொல்லுறாளே!
    "என் கோவிந்தன்" = இதுக்கு என்னா சொல்றீங்க? :)

    குளிரருவி "வேங்கடத்து" **என்
    கோவிந்தன்** குணம்பாடி,
    அளியத்த மேகங்காள்.
    ஆவி காத்து இருப்பேனே!

    ReplyDelete
  24. //ஷைலஜா said...
    //அவரு பேரு நந்த-கோபனா? கந்த-கோபனா//

    எல்லார்கும் சொந்த கோபன்!! வம்புபண்ணாதீங்க ரவி!!!:)//

    நானா வம்பு பண்ணுறேன்? இதை என் நண்பன் கிட்டப் போயி சொல்லுங்க! வம்பனும் சொம்பனும் கம்பனும் நண்பனும் அவனே! :))

    ReplyDelete
  25. //ஷைலஜா said...
    நான்மட்டும் என்வலைல‌ வேலை அரங்கன் கையில் கொடுத்து அதைஒருமரபுக்கவிதைல எழுதிடவும்//

    ஆமா! ஆமா!

    //என்ன மால் கைல வேலான்னு சிலர் எதிர்க்க//

    ஆமா! ஆமா!

    //அப்போ சிலவருடம்முன்பு தாங்கள்வந்து இந்த ஆண்டாள் வரிகளை எடுத்துக்காட்டி அபயக்குரல்கொடுதீங்க நினைவிருக்கா ரவி!:):)//

    ஹிஹி! மறக்க முடியுமா-க்கா? அப்படித் தானே நண்பர்களானோம் முதலில்!

    வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு எடுத்துக் கொடுத்தவுடன், அம்புட்டு பயலுகளும் அடங்கிட்டாக-ல்ல! :)))

    ReplyDelete
  26. // ஷைலஜா said...
    கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!//

    சூப்பர்! சூப்பர்!

    //அதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட ஆண்டாள் பெண் அல்லவா பெண்புத்தி முன்புத்தி!!!!//

    ஹிஹி!
    பெண் புத்தி, முன் புத்தி தான்-கா!
    ஏமி டவுட்டு லேது! :)

    ReplyDelete
  27. //ஷைலஜா said...
    இளஞ்சிங்கம்! பார்த்தீங்களா நரசிம்ம அவதாரம் முதல்பாட்டுலேயே வந்தாச்சு!!//

    சூப்பர்-க்கா! பாருங்க நீங்க தான் இப்படி அழகா எடுத்துக் கொடுக்கணும்-ன்னு இருக்கு!

    //ஆண்ட‌வ‌னுட‌ன் ப‌க்த‌ர்க‌ள் விரும்பும் பேரின்ப‌க்க‌ல‌வியைக்குறிப்பிடுகிற‌து அந்த‌ உற‌வை அடைய‌ பாவை நோன்பு ஒருகார‌ண‌ம்//

    அருமை! அதே! அதே!

    //அந்த‌க்கார‌ண‌த்தைக்கொண்டு ஆண்ட‌வ‌னிட‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌ (வ‌ழிகாட்டி அழைத்துச்செல்ல‌) ஆண்டாள் முய‌லுகிறாள்//

    ஆகா! கலக்கல்!

    திரு-கண்ணனாற்றுப்படை! :)
    திருமுருகாற்றுப்படை மட்டும் தான் ஆற்றுப்படையா?
    ஜிரா, அக்காவோட ஈ பாயிண்ட் நோடுறீ! :)

    ReplyDelete
  28. //Shakthiprabha said...
    //

    வாங்க சக்திபிரபா! ஷைலு அக்கா உங்க அருமை பெருமை எல்லாம் சொன்னாங்க! சூப்பரா பாயின்ட் எடுத்து வச்சிருக்கீங்க! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! மூச்சு முட்டுது, தினம் ஒரு பதிவில்! :)

    //கோதை எழுதியது = சமயம் சம்பந்தபட்ட நூல்
    கீதை சொல்வது = வாழ்வின் நெறிமுறை, விளக்கங்கள், தத்துவம்//

    இல்லை!
    கோதையில் காதலும், சமூகமும், இயற்கையும், ஆன்மீகமும் பேசப்படுது! மதம் பேசப்படவில்லை!

    கீதை சமயம் இல்லை-ன்னா கோதையும் சமயம் இல்லை தான்! அங்கிருந்து தானே அவளுக்கு ஆதாரம்!

    //அங்கே தான் இறையை, என் கண்ணனை, நான் எல்லோருக்கும் உகந்தை இறையாய் மட்டும் பார்க்கிறேன்//

    ஓ...ஷக்தி பிரபா கண்ண தாசரோ? அடியேனைப் போலவே!
    ஆனால் கண்ணனைத் தோழன் போல நான் ரொம்பவே கலாய்ப்பேன் :)
    அவனைக் கலாய்க்க கலாய்க்க கற்கண்டு இன்பம்! :)

    //கோதையின் நூல் இம்மையில் கண்ணனுடன் கனாக்கண்டு மறுமையில் இன்பம் தேடும் பலருக்கு//

    தவறு! கோதையின் தமிழும் என்றும் உள தென் தமிழ் தான்!
    இம்மைக்கும் மறுமைக்கும் என்றைக்கும் உள்ள நூல் கோதை! அதான் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-ன்னு சொன்னாங்க! வேதம் இம்மைக்கு மட்டும், மறுமைக்கு இல்லை-ன்னா சொல்ல வரீங்க? :)

    இப்போது சொல்லுங்கள். கோதையா? கீதையா? :)

    இப்படிக்கு என்றும்
    கோதையின் தோழன்,
    கே ஆர் எஸ்

    ReplyDelete
  29. //Mani Pandi said...
    "வேங்கடவற்கு என்னை விதி"
    வேங்கட + அவர்க்கு ( அரங்கனுக்கு ) என்னை விதி என்று படிக்கலாமா//

    ஹிஹி!
    சூப்பர் கற்பனை மணிபாண்டி அண்ணே! ஆனால் பொருள் வரணுமே!

    வேங்கட+அவர்க்கு-ன்னா என்ன? வேங்கடத்தான் அண்ணனான அவர்க்கு-ன்னா அர்த்தம்? அப்படி ஏதும் தகவல் இல்லியே! :)
    இன்னொரு தபா யோசிங்க!

    ReplyDelete
  30. //Raghav said...
    கோதையின் கீதையே பெஸ்ட்..//

    நன்றிப்பா ராகவ்! :)

    //அப்புறம் என்ன கேள்வி இது.. அரங்கனா?? வேங்கடவனான்னு.. உலகத்துக்கே தெரிந்த விடயம் அரங்கனே மாப்பிள்ளை.. :)//

    அரங்கன் கட்டாயப்படுத்தி கண்ணாலம் கட்டிக்கிட்டான்-ன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க? ஹா ஹா ஹா!
    வேங்கடவன் மேல் காட்டும் பாசுர உருக்கம், காதல்...அரங்கனிடம் காட்டாதது ஏனோ? அதுக்குப் பதில் சொல்லுங்க!
    (அக்காவுக்குத் தந்த பதிலில் பாசுரங்கள் சிலதைக் கொடுத்திருக்கேன்!)

    //அரங்கனின் விளையாட்டில் இதுவும் ஒன்று தானே.. அனைத்து செல்வங்களும் தனக்கே வந்து சேருமாறு பார்த்துக் கொண்டான்..//

    ஆங்! அப்படி உண்மையை ஒத்துக்குங்க! ஊரான் செல்வத்தை எல்லாம் தன் செல்வமா கொள்ளை அடிச்சானோ அரங்கன்? :))

    //வேங்கடவனுக்கு விதிக்கச் சொன்னாள்.. ஆனால் அரங்கனின் மதி.. அவளை உயர் அரங்கனிடம் சேர்த்தது//

    ஆக...பொண்ணின் விருப்பம் வேங்கடவன்!
    அதை மாற்றியவன் அரங்கன்!
    விதியைச் சதியால் வெல்லலாம் என்பது இது தானோ?
    :)))))

    ReplyDelete
  31. சரி...புதிருக்கான பதில்...நம்ம குமரன் நெற்றிக் கண்ணைத் தொறக்கும் முன்னே! :))

    புதிர்-01: மாப்பிள்ளை யாரு? அரங்கனா? வேங்கடவனா??


    மாப்பிள்ளை = அரங்கன் அல்ல! ரங்கன்! வேங்கடரங்கன்! :)

    ரங்கன்! ரெங்க மன்னார் என்று தான் சொல்றாங்க! அரங்க மன்னார்-ன்னு யாரும் சொல்வதில்லை!

    வேங்கட-ரங்கனா? இது என்னா புதுக் கதை? குழப்படி பண்ணுறதே கேஆரெஸ்-க்கு பொழைப்பாப் போச்சு! :)

    அட நான் குழப்படி பண்ணலீங்க! பாணர் பண்றாரு! :)
    அரங்கனை மட்டுமே கண்ட அவர்!
    பாதம் முதல் தலை வரை கண்ட பாணர் என்ன சொல்றாரு? அதை வாசிங்க! புரிஞ்சிடும்! :)

    ReplyDelete
  32. அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
    விமலன், விண்ணவர் கோன், விரை
    யார் பொழில் "வேங்கடவன்",
    நிமலன் நிர்மலன் நீதி வானவன்,
    நீள்மதில் "அரங்கத்து அம்மான்"

    மொத மொதல்ல கோயிலுக்குள் சென்று அரங்கன் திருமேனியைப் பாக்குறாரு தாழ்ந்த சாதி என்று சொல்லப்பட்ட திருப்பாணாழ்வார்!

    அப்போ அரங்கனா அவர் கண்ணுக்கு மொதல்ல தெரியிறான்?
    விரையார் பொழில் "வேங்கடவன்" முதலில்!
    நீள்மதில் "அரங்கத்து அம்மான்" அடுத்து!

    ReplyDelete
  33. அடுத்தும் என்ன சொல்றாரு பாருங்க...

    மந்தி பாய் வட "வேங்கட" மாமலை, வானவர்கள்,
    சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்!

    அதாச்சும் வேங்கடவனே அரங்கனாக இருக்கானாம்!
    "வேங்கட" மாமலையில், வானவர்கள் சந்தி செய்ய நிற்கும் வேங்கடவன்...அரங்கத்து அரவிலும் அணையான்!

    இது எப்படிச் சாத்தியம்?
    அடுத்த வரி தான் விடை!
    உந்தி மேலது அன்றோ! அடியேன் உள்ளத்தின் உயிரே!


    உந்தியைப் பார்த்தால் விடை கிடைச்சிடும்! தொப்புளையும், வயிற்றையும் பாருங்க!
    முன்பே சுப்ரபாதப் பதிவில் சொன்னது போல்...
    இன்றும் பார்த்தால்,
    வேங்கடவன் தோளில் அம்புறாத் தழும்பும் (இராமன்),
    வேங்கடவன் வயிற்றில் தாம்புக் கயிற்றுத் தழும்பும் (கண்ணன்) தெரியும்!
    எனவே வேங்கடவன் = இராம + கண்ண விபவ அவதாரங்களின் கலவை!

    இப்போ அரங்கனுக்கு வருவோம்!
    அவன் இராமன் இல்லை! இராமனால் வழிபடப்பட்டவன்! அயோத்தியில் இருந்த அரங்கன் தானே, வீடணன் பரிசாக தெற்கே வந்தது!
    ஆனால் அரங்கனின் வயிற்றில் உதரபந்தத் தழும்பை இன்றும் பார்க்கலாம்! அரங்கன் = கண்ணன் மட்டுமே!

    முதலில் வேங்கடவன் மேல் மோகித்து, அரங்கன் மேலை விட, வேங்கடவன் மீதே அதிக பாசுரம் பாடுகிறாள் கோதை! பாவை நோன்பு முடிந்ததும், அதன் பலன் யார்? வேங்கடவன்! நாச்சியார் திருமொழியும் வேங்கடவனை முன்னிட்டே துவங்குகிறது! ஏன்னா வேங்கடவனில் இருக்கும் கண்ணனே அவள் சிந்தையை ஆட்கொள்கிறான்!

    ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது அவன் கண்ணன்+இராமன் என்று தெரிகிறது! தமிழ் மறத்தி அல்லவா கோதை! அதனால் கண்ணனை "மட்டுமே" தேடுகிறாள் கோதை!

    அதற்கு வேங்கடவனே கோதைக்கு வழி காட்டுகிறான்! வேங்கடவன் மோட்சத்துக்கு வழிகாட்டி! மாறனின் சரணாகதிப் பாசுரமும் அவனுக்குத் தானே! ஆண்டாளின் சரணாகதியை ஏற்று, அவளுக்கு உதவி செய்கிறான்! தானே அரங்கத்தில் இருப்பதைக் காட்டிக் கொடுக்கிறான்! "வேங்கட" மாமலையில், வானவர்கள் சந்தி செய்ய நிற்கும் வேங்கடவன், அரங்கத்து அரவிலும் அணையான்!

    அப்படிக் காட்டியது தான் தாமதம்...
    அரங்கனில் "கண்ணனை மட்டுமே" கண்டாள் கோதை!
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    (விளக்கம் சரியா என்று அன்பர்கள் பார்த்துச் சொல்லவும்)

    ReplyDelete
  34. குமரனுக்கு நெற்றிக்கண் உண்டா? உதிர்ந்த பிட்டைத் தின்றவனுக்குத் தான் உண்டு என்று கேள்விப்பட்டேன். :-)

    விளக்கம் நல்லா இருக்கு. தனி இடுகையா போடலாம்.

    ஒரே ஒரு சின்னஞ்சிறு கேள்வி உண்டு இந்த விளக்கத்தில். ஆனால் பெரியாழ்வார் இராமன், கிருஷ்ணன் என்று முன்னும் பின்னுமா பாடறதால பெரிய பெருமாளைப் பெருமாள் வணங்கிய காலத்திற்குப் பின்னர் தானே கண்ணன் வந்தான்? அப்படியிருக்க பெரிய பெருமாள் கண்ணனாக மட்டுமே இருப்பது எப்படி? என்ற கேள்விகளைக் கேட்காமல் விடுகிறேன். :-)

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...
    ஒரே ஒரு சின்னஞ்சிறு கேள்வி உண்டு இந்த விளக்கத்தில்.//

    ஹா ஹா ஹா!
    என்னடா கேள்வி இல்லையே-ன்னு பார்த்தேன் மதுரைக் கணக்காயனார் கிட்ட இருந்து! :)

    அப்பவே பார்த்தேன் குமரன்! இப்ப தான் நேரம் கிடைச்சுது!

    //பெரிய பெருமாளைப் பெருமாள் வணங்கிய காலத்திற்குப் பின்னர் தானே கண்ணன் வந்தான்? அப்படியிருக்க பெரிய பெருமாள் கண்ணனாக மட்டுமே இருப்பது எப்படி? என்ற கேள்விகளைக் கேட்காமல் விடுகிறேன். :-)//

    இதுக்கு விளக்கம் மிக எளிது குமரன்!

    விபவ அவதாரங்களில் பின்னதின் சாயல், முன்னதில் காட்டவில்லையா?
    கண்ணனின் கீதைக்கு முன்னாலேயே, இராமனாக அதன் படி நடந்து காட்டவில்லையா?
    கங்கை வாமனத்தில் வெளிப்பட்டாலும், மத்ஸ்யத்திலும் இருக்காளே! அதே போலத் தான்!

    அர்ச்சை அவதாரம் தானே அரங்கன்!
    மாறும் நிலைகளையும் அர்ச்சையில் காட்ட அவனால் முடியும் தானே!
    குடநதையில் முன்பு இருந்த போக சயனம், திருமழிசை ஆழ்வாருக்காக உத்தான சயனமாய் மாறியதே!

    இப்படி அர்ச்சையிலும் மாற்றம் காட்ட வல்லவன், இராமனுக்கு ஒரு தோற்றமும், பின்னர் கண்ணனுக்கு இன்னொரு தோற்றமும் அர்ச்சையில் மாற்றம் காட்ட முடியாதா என்ன?

    இராமன் வழிபடும் போது தாம்பு+உதரம் இருந்திருக்காது! பின்னர் கண்ணன் தோன்றிய பின் தாம்பு+உதரமும் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

    அர்ச்சையின் பெருமை சொல்லவும் பெரிதே!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP