Thursday, December 18, 2008

மார்கழி-04: ஆண்டாள்-வள்ளுவர் கூட்டணி???

வள்ளுவர் எப்படித் திருக்குறளைக் கட்டமைக்கிறாரு? ஆண்டாள் எப்படித் திருப்பாவையைக் கட்டமைக்கிறா? ரெண்டு பேருமே கடவுள் வாழ்த்து, அடுத்து வான் சிறப்பு-ன்னு தான் தொடங்குறாங்க! அட, இம்புட்டு ஒற்றுமையா? ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு செஞ்சிருப்பாங்களோ? இருக்காதே! வள்ளுவர் காலம் 2 BC! ஆண்டாள் காலம் 7-8 AD! அப்புறம் எப்படி? பாக்கலாம் வாரீயளா?

புதிர்-04:
ஆண்டாள் கையில் கிளி. மீனாட்சி கையில் கிளி. கிளியை மட்டுமே வச்சி, யார் யார்-ன்னு எப்படிக் கண்டு பிடிப்பது?
மொதல்ல எதுக்குக் கையில் கிளி? (ஷைலஜா அக்கா பதிவில் போய் பிட் அடித்தாலும் அது தர்மம் தான்! பாதகம் இல்லை! மோதகம் உண்டு! :)


வள்ளுவர் = திருக்-குறள்
ஆண்டாள் = திருப்-பாவை

முன்னது சமயம் கடந்த நூல், பின்னது சமயத்துக்கு ஏற்ற நூல்!
முன்னவர், இறைவன் பேரைப் பேராய்ச் சொல்லாது குணமாகச் சொன்னார்!
பின்னவள், இறைவன் பேரைப் பேராய்ச் சொல்லி, குணமாகவும் சொன்னாள்!
அறம், பொருள், காமம்(இன்பம்) என்று இரண்டிலுமே கொட்டிக் கிடக்கு!

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்,
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்


ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து,
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்!


இந்தப் பாசுரத்தில் நம் தமிழுக்கே உரிய "ழ"-வை, 11 முறை சொல்கிறாள்! நீங்களே எண்ணிப் பாத்துச் சொல்லுங்க பார்ப்போம்!

இவ அப்பாவும் இப்படி ஒரு பாட்டு பாடி இருக்காரு! - குழல் இருண்டு சுருண்டு என்னும் பாசுரத்தில்!
குழல் முழைஞ்சு களினூடு, குமிழ்த்து, கொழித்து, இழிந்த அமுதப் புனல்-ன்னு வரும்! ஆனா அப்பா 10 முறை தான் ழகரம் சொன்னாரு! பொண்ணு 11 முறை ழகரம் சொல்லிட்டா! தந்தை பத்தடி பாய்ஞ்சா, குட்டி பதினோரு அடி பாயுது! :)


குறள்-பாவை! இரண்டு இலக்கியங்களின் கட்டமைப்பைப் பார்க்கலாமா?

* கடவுள் வாழ்த்து = மார்கழித் திங்கள்/வையத்து வாழ்வீர்காள்/ஓங்கி உலகளந்த!
ஆதி பகவன் முதற்"றே" உலகு! = நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!
நற்"றாள்" தொழாஅர் எனின் = பரமன் "அடி" பாடி!
நிலமிசை "நீடு" வாழ்வார் = "நீங்காத" செல்வம் நிறைந்தேலோ!

* வான் சிறப்பு = ஆழி "மழைக்" கண்ணா!
நீரின்று அமையாது "உலகு" = வாழ "உலகினில்" பெய்திடாய்!

* நீத்தார் பெருமை = மாயனை மன்னு!
செயற்கரிய "செய்வார்" பெரியர் = குடல் விளக்கம் "செய்த" தாமோதரனை!

* அறன் வலியுறுத்தல் = அம்பரமே தண்ணீரே!
அன்று அறிவாம் என்னாது "அறம் செய்க" = அம்பரமே தண்ணீரே சோறே "அறம் செய்யும்"!
மனத்துக்கண் மாசிலன் ஆதல் = கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ!


என்று இப்படிப் பலவாறாக விரியும்! அதுவும் காமத்துப் பாலில் சொன்ன ஒவ்வொன்றும், திருப்பாவையில் பொருத்திப் பார்க்க முடியும்!
"காமம் படித்த" பதிவர்கள் யாரேனும் இந்த ஆய்வுக் கட்டுரையைச் செய்தால், என்னைப் போன்ற "காமம் புடித்த" பதிவர்களுக்கு இன்பமா இருக்கும்! :))

தெய்வத் தமிழ் மறையாம் திருக்குறளைக் கோதை படிக்காமல் தான் இருந்திருக்க முடியுமா? அதுவும் கடவுள் வாழ்த்தில், கடவுளைச் சொல்லாமல், அடிக்கு அடி, அடியைப் (திருவடியை) பேசும் திருக்-குறளை, திருப்-பாவைக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?

1. வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
2. மலர்மிசை ஏகினான் "மாணடி" சேர்ந்தார்
3. வேண்டுதல் வேண்டாமை "இலானடி" சேர்ந்தார்க்கு
4. தனக்குவமை இல்லாதான் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
5. அறவாழி அந்தணன் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
6. எண்குணத்தான் "தாளை" வணங்காத் தலை
7. நீந்தார் இறைவன் "அடி" சேராதார்.
......என்று திருக்குறளில் எங்கு பார்த்தாலும் "திருவடிகள்" தான்!

குறள் நெறியில் வாழ்ந்தவள் கோதை! குறளை வெறுமனே போஸ்டர் அடிச்சி ஒட்டாமல், பட்டிமண்டபமாய்ப் பேசாமல், அவள் படித்தாள்! வாழ்வில் பிடித்தாள்!
இந்தப் பொண்ணு "உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்" தான்! அதான் உயர்ந்தவனையே உள்ளினாள்! மற்றதெல்லாம் தள்ளினாள்! = ஆண்டாள் ஆண்டானை ஆண்டாள்!



இன்னிக்கி நாம பெருசா Water Cycle, Rain Water Harvesting-ன்னு சீன் போட்டு படங்காட்டுறோமே! ஆனால் ஆண்டாள் அப்போதே வரைந்து காட்டிய நீர்ச் சுழற்சி ஓவியத்தைக் கொஞ்சம் பாருங்கள்! எத்துணை அழகு? அவள் எந்த வகுப்பறையில் போய் Hydro Cycle எல்லாம் படித்தாள்?

ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)

ஆர்த்தல் = ஒலி எழுப்பல்-ன்னும் கொள்ளலாம்! இல்லை, ஆர்=ஆரணங்கு=அணியும் பெண் என்றும் கொள்ளலாம்! நீர்த்துளிகள் எல்லாம் ஒன்னோட ஒன்னு, கோர்த்து கோர்த்து, அணிந்து அணிந்து ஏறுது-ன்னும் எடுத்துக்கலாம்!

வீட்டில் தண்ணி கொதிக்க வைக்கும் போது, உஸ் உஸ்-ன்னு சத்தம் வருது! அதே போல கடலில்/ஆற்றில் நடக்கும் சூரியச் சக்தி Evaporation-இல் ஏன் சத்தம் வர மாட்டேங்குது? இல்லை நமக்குத் தான் Ultrasound என்பதால் கேட்கலையா? இதை அறிந்த அறிவியல் வாசகர்கள் யாராச்சும் சொல்லுங்களேன்! ஆண்டாள் ஆர்த்து ஏறி என்று சொல்வது சத்தமாக Evaporationஆ? இல்லை கோர்த்து கோர்த்து ஏறுவதா? எது சரி?

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து (Condensation)
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! ஜிம் பாடி! சிக்ஸ் பேக் சூர்யா எங்கள் சூர்ய நாராயணப் பெருமாள்! :)
அந்தத் தோளில் குகை போல ஜம்முன்னு தூங்கலாம்! காதலன்/காதலி தோளில் சாய்ந்து தூங்குவது தான் எத்தனை சுகம்! பேருந்தில் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

சரி, அது என்ன பற்பநாபன்? பல்பம், சாக்பீஸ் எல்லாம் விக்குறவனா? ஹிஹி! பத்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! அவள் அப்பா பெரியாழ்வாரும் இப்படி விட்டுணு, சிறீதரன்-ன்னு எல்லாம் தமிழாக்குவார்!
ஹிஹி! சில வடமொழி அன்பர்களுக்குக் கோவம் வருதா? போயி ஆண்டாள் கூடச் சண்டை போடுங்க! அவ பதிவில் கும்மியடிங்க! என்னை இழுக்காதீங்க, சொல்லிப்புட்டேன்! :)

(சுவையான பதிவுலக வரலாற்றுக் குறிப்பு:
ஒரு முறை ஜிரா, நாறாயணன்-ன்னு தசாவதாரம் பார்த்த பின்னர் வேணும்னே எழுதினாரு! :) அவர் நோக்கம் என்ன என்பது வேறு விடயம்! ஆனால் ஆழ்வார் பாணியில் அதை விளையாட்டாகவே எடுத்துக் கொள்ளலாம்! தப்பே இல்லை!
அதே நாறாயணன் பாணியில், ஜிராவுக்கே அவர் நோக்கத்தை உணர்த்த, ஜிறா-ன்னு பதிலுக்கு விளையாடினேன்!

ஜிரா செய்த நோக்கத்தைப் பாக்க வேணாம்! அவர் செய்தது பெருசா தப்பு ஒன்னுமில்லை-ன்னு சொல்லிட்டேன்! அவ்ளோ தான்! தம்பி பாலாஜிக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துரிச்சி! நான் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும்-ன்னு ஆயிடிச்சி! :)

அப்பவே, ஆழ்வார் செய்த பற்பனாபன் போன்ற மொழி் ஆக்கங்களைத் தம்பிக்குக் காட்டப் பார்த்தேன்! என்னைப் பேச விட்டாத் தானே? :)
சகிப்புத்தன்மை குறையும் போது, அது ஆழ்வார் சமாதானமாகவே இருந்தாலும், நம்ம மனசு கேக்குறதில்ல! அப்போ கோவம்! ஆனா இப்போ நினைச்சா, சிரிப்புத் தான் வருது எனக்கும்-தம்பி பாலாஜிக்கும்-ராகவனுக்கும்! :))))
சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளாதே"! முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்!)



ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னல் மின்னுது!
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடிக்குது!

முதலில் மின்னல்! அப்புறம் இடி-ன்னு அப்பவே காட்டுறா கோதை!
அவளுக்குத் தெரியும் ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!
Light travels faster than sound! Light=3x10^8 m/s; Sound=343 m/s!
என் கோதை ஒரு அறிவியல் களஞ்சியம்-ப்பா! :)

தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துது மழை! (Precipitation & Rain)
வாழ உலகினில் பெய்திடாய்! = நல்லாரும் பொல்லாரும் எல்லாரும் வாழ, உலகில் நல்லா மழை பெய்யட்டும்! அனைத்தையும் குளிர்விக்கட்டும்!

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில், மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
4. நந்தகம் என்னும் வாள்
5. கெளமோதகி என்னும் கதை

நாங்களும் மார்கழி நீராட = மழை பெஞ்சாத் தானே, மத்த ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்!
சோத்துக்கே லாட்டரி அடிக்கும் போது, கோயிலுக்கு பேட்டரி போடுவாங்களா? :)
சிறப்பொடு பூசனை செல்லாது! வானம்
வறக்குமேல்! வானோர்க்கும் ஈண்டு!
- என்கிறார் அல்லவா ஐயன்! அதான் நல்லபடியா நோன்பு நடக்க, மக்கள் நோன்புக்கு ஆதரவு காட்ட, வாழ உலகினில் "பெய்திடாய்" என்று ஆர்டர் போடுறா? சரி, யாருக்கு ஆர்டர் போடுறா?



ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
இதுல வரும் ஆழி-மழை-கண்ணா யாரு? = வருணனா? இந்திரனா? கண்ணனா?

கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! கண்ணனை மணிவண்ணா-ன்னு தான் சொல்லி இருக்காங்க! ஆனா யாருமே மழைக்கண்ணா-ன்னு சொன்னது இல்லையே!
அப்போ அது கண்ணனைக் குறிக்குமா? இல்லை நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)

* இந்திரனா? அவனுக்குத் தான் ஆப்படிச்சி, அப்பவே கோவர்த்தன மலையைத் தூக்கியாச்சே! குன்றுக் குடையாய் எடுத்தாய் குணம் போற்றி! கண்ணனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவ போயி, இந்திரனைக் கூப்பிடுவாளா? :)

* வருணனா? அவனுக்குத் தான் ஆப்படிச்சி, அப்பவே கடலில் அலையே இல்லாமல் பண்ணியாச்சே! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! மனத்துக்கு இனியான் இராமன்! காதலன் அல்ல! ஜஸ்ட் இனியான்! இராமனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவ போயி, வருணனைக் கூப்பிடுவாளா? :)

* குணங்கெட்ட இந்திரனுக்கும், வருணனுக்கும் வைதீகோத்தமர்கள் வேண்டுமானால் யாகங்களில் மரியாதை கொடுக்கலாம்! ஆனால் கோதை அதெல்லாம் கொடுக்க மாட்டாள்! அவள் அஞ்சா நெஞ்சி!
தர்மத்தின் பால் பிடிப்பே அன்றிச் சடங்கின் பால் பிடிப்பு கிடையாது அவளுக்கு!
அவள் காதலன் கண்ணனும் இந்திரச் சடங்கை நிறுத்தியவன் தானே! சடங்கை நிறுத்திய சண்டாளா-ன்னு யாராச்சும் அவனைச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)

எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! எனவே கண்ணனையே மழைக் கடவுளாக வணங்குகிறாள் கோதை! அதனால் ஆழி மழைக் கண்ணா-வை, ஆழி மழைக்கு+அண்ணா-ன்னு எல்லாம் ரொம்ப மெனக்கெட்டு பிரிக்க வேணாம்! :)

ஆழி மழைக் கண்ணா = கண்ணனால் பல மழைகளை அவளுக்குத் தர முடியும்!
* உனக்கு முத்த முழை!
* உதட்டுக்கு எச்சில் மழை!
* உடலுக்கு வியர்வை மழை!
* உள்ளத்துக்கு அன்பு மழை!
* உலகத்துக்கோ அருள் மழை.....நீர் மழையுடன் கூடிய கருணை மழை! அருள் மாரி! ஆழி மழைக் கண்ணா!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

22 comments:

  1. அப்பா அருமையான‌ விள‌க்க‌ம். ம்ம்ம்ம் இனி தின‌மும் ர‌ங்க‌னுக்கு ஒரு முறை ந‌ன்றி சொல்ல‌ணும் போல‌. :)

    முத‌லில் புதிர் கேள்வில‌ பாதிக்கு ப‌தில். ஆண்டாள் கொண்டையை வைத்து ஆண்டாளை அடையாள‌ம் காண‌லாம். ஆனா கிளி எதுக்குன்னு ஷைலாக்கா வ‌ந்து தான் விள‌க்க‌ம் சொல்ல‌ணும். என‌க்கும் 500 பொற்காது போதும். மாத‌வி ப‌ந்தலில் எது கிடைத்தாலும் என‌க்கேற்ற‌தே.

    அப்ப‌ற‌ம் கேரேட் பிப்ள் திங்க் அலைக். அதான் திருவ‌ள்ளுவ‌ரும், கோதையும் ஒரே மாதிரி சிந்தித்திருக்காங்க‌.

    எத்த‌னையோ முறை திருப்பாவை ப‌டித்திருக்கின்றேன். க‌ண்ண‌னை ம‌ழைக் க‌ண்ணா என்று சொன்ன‌து இன்று தான் இத்த‌னை சிற‌ப்பாக‌ விள‌ங்கிய‌து என‌க்கு.

    அருமையான‌ ப‌திவு. மிக்க‌ ந‌ன்றி மாத‌வி ப‌ந்த‌லுக்கு.

    ReplyDelete
  2. வள்ளுவர் காலம் 2 BCஆ? நல்லா தெரியுமா? :-)

    ReplyDelete
  3. /ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
    முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
    ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)
    //

    மழை சுழற்சியும் மார்கழி திருப்பாவை ஆண்டாள் அப்பவே சொன்ன விசயம்

    விளக்கம் அருமை

    வியந்தேன்!

    ம்ம் கண்டினியூ கண்டினியூ!

    ReplyDelete
  4. ஆண்டாளும் மீனாட்சியும் கிளியை எந்த கையில் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும். வலக்கையில் கிளி இருந்தால் மதுரைக்கரசி. இடக்கையில் கிளி இருந்தால் புதுவைக்கரசி. சரியா இரவிசங்கர்?

    ReplyDelete
  5. ஆழிமழைக்கண்ணா என்னும் போதும் ஒற்று வைத்துத் தான் பொருள் சொல்கிறார்கள். ஆழி மழை கண்ணா என்றிருந்தால், ஒற்று மிகாமல் இருந்திருந்தால், அது கண்ணனைத் தான் குறிக்கிறது என்று சொல்வதில் தயக்கம் இல்லை. ஆழிமழைக்கண்ணா என்று ஒற்றுடன் அவள் சொன்னதால் ஆழி மழைக்கு அண்ணா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆழி மழைக்கு அண்ணல் யார்? வருணனா? இந்திரனா? இவனே தானா? வருணன் என்றும் பர்ஜன்யன் என்றும் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நீங்கள் சொல்வது ஏரணத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. அண்ணா, விளக்கங்கள் அருமையாக உள்ளது.. அலுவலகம் வந்தவுடனே.. முதல்ல ஆண்டாளை பந்தல்ல சந்திச்சதுக்கப்புறம் தான் மத்த வேலையே..

    ஆழி மழைக்கண்ணா.. அற்புதமான விளக்கம்..

    ReplyDelete
  7. மீனாட்சி இடக்கையில் செங்கோல் ஏந்தி மதுரை அரசாளும் இராணி அதனால் தான், வலது கையில் கிளி...

    ReplyDelete
  8. //குமரன் (Kumaran) said...
    வள்ளுவர் காலம் 2 BCஆ? நல்லா தெரியுமா? :-)//

    தமிழர் "நம்பிக்கை"ப்படி யேசுநாதருக்கு முப்பது ஆண்டுக்கு முன்னர்! 31 BC :)
    சிருங்கேரி ரெக்கார்டுகளின் படி, ஆதி சங்கரர் BC-ன்னு சாதிக்குறது ஓக்கேன்னா, இதுவும் ஓக்கே தான்! :))

    Jokes Apart...
    அறிஞர்கள் சொல்வது 2 BC to 2 AD!
    சிலம்பு, மணிமேகலையில் இவர் குறிப்புகள் வருவதால், அவற்றின் காலத்துக்கு முற்பட்டவர்.

    ReplyDelete
  9. Vanakkam sir,
    Arangane aazhimazhaikannan,reason I dont know,may be padmanaban uyarvara uyarum endra azhwar pasuram, she might have remembered.NEERVANNANAI,NEELAMEGATHAI,ARULMAAKADALAI,KAALAMEGATHAI,avalandri yaar arivar.sorry for writing in english,still dont know how to type in tamizh.
    ARANGAN ARULVANAGA.
    Anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  10. தல

    படிச்சிட்டு பின்னூட்டம் போட நேரம் இல்லை...ஆனால் தவரமால் படித்துவிடுகிறேன்.

    உங்கள் உழைப்புக்கு என்னோட பணிவான வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  11. அங்கயற்கண்ணீயும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியாரும்...

    கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்துள்ளவர்கள்...

    அம்மையின் வலக்கரத்திலும், நாச்சியாரின் இடக்கரத்திலும் கிளி.

    ReplyDelete
  12. காலையிலிருந்து எப்படியாவது இங்க வந்து பின்னூட்டமிடப்பார்த்தேன் இப்போதான் முடிஞ்சது
    சரி கிளிக்கு வருவோம்..ராகவ் குமரன் சொன்னமாதிரி கிளி கரமாற்றம் கவனிச்சா உங்க புதிருக்கு விளக்கம் கிடசிடும்!!

    ReplyDelete
  13. பந்தலுக்குக்குடையோடு வந்துவிட்டேன், நனைஞ்சிட்டே வந்தாலும் குடை தந்து உதவும் குடைவள்ளல் கேஆர் எஸ் என்பதால்!!!!



    அப்பப்பா ! தமிழ்மழை! தேன்குரல்மழை!

    குறளையும் ஆண்டாள் குரலையும் இணைத்து விளக்கம்கூறியவிதம் அசரவைக்கிறது அதற்கு முதல்ல பாராட்டுக்கள்!


    அடிஅடியாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் இதற்கான உழைப்பு அதிகம் இருக்குமே ரவி அதற்கு ஸ்பெஷல்பாராட்டுக்கள்!

    அதிலும் ஆண்டாளின் நீர்ச்சுழ‌ற்சி ஓவிய‌ம் க‌ண்முன்காட்சியாய் விரிகிற‌து!

    ப‌ஞ்சாயுத‌ங்க‌ளில்மூன்றை இப்பாட‌லில் சொல்லீ இருப்ப‌து ம‌காசிற‌ப்பு.


    வாழ‌ உல‌கினில் பெய்திடாய் என்னும் வ‌ரியில் ஆண்டாளின் பொதுந‌ல‌ உள்ள‌ம் தெரிகிற‌து.. வாழ‌ எனும் சொல் அதிகம் ம‌ழைபெய்து பெரிய‌ நாச‌ம் ஏற்ப‌டுத்தாம‌ல் ப‌யிர்ப‌ச்சைம‌க்க‌ள் வில‌ங்கின‌ம் ம‌ர‌ம் செடிகொடி என‌ எல்லாம் வாழ‌, உல‌கினில் பெய்திடாய் என்கிறாள்.


    இந்த‌ப்பாடலின் வேதாந்தக்கருத்து....
    ...
    வ‌ருண‌ன் என்ப‌து குருவை(ஆசார்யாரை) குறிக்கும்.

    ஆசார்ய‌ன் ப‌க‌வ‌த் குணானுப‌வ‌ம் என்னும் க‌ட‌லில் மூழ்கி அத‌ன் த‌த்துவ‌த்தைக்
    கிர‌கித்துக்கொண்டு உய்ர்பீட‌த்தில் ஏறி அறிவ‌ற்றவ‌ர்க‌ளுக்கு ஞான‌ம‌ழை பொழிய‌ வேண்டும்.


    ஆழிம‌ழைப்பாட‌லை ம‌ழைவேண்டிபாட‌லாம் என்கிறார்க‌ள்!

    ReplyDelete
  14. //அடிஅடியாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் இதற்கான உழைப்பு அதிகம் இருக்குமே ரவி அதற்கு ஸ்பெஷல்பாராட்டுக்கள்!//

    பணிவன்புடன் ரிப்பீட்டிக்கிறேன்!

    //சாரங்கம் உதைத்த //

    சார்ங்கம்னு படிச்ச மாதிரி இருக்கு.

    //காதலன்/காதலி தோளில் சாய்ந்து தூங்குவது தான் எத்தனை சுகம்! பேருந்தில் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)//

    காதலியா? சொல்லவே இல்ல? :)

    ReplyDelete
  15. திருப்பாவையின் காலம்?:
    http://jayasreesaranathan.blogspot.com/2008/12/dating-of-thirruppavai-from-paasurams-3.html

    ReplyDelete
  16. இந்தப் பாடலின் இராகம் - வராளி
    (கா வா வா, கந்தா வா... பாடலின் இராகம்!)

    (அப்பாடா, எப்படியோ கந்தனை லிங்க் பண்ணியாச்சு!)

    ReplyDelete
  17. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    இந்தப் பாடலின் இராகம் - வராளி//

    நன்றி ஜீவா, ஒவ்வொரு பாசுரத்தின் ராகத்தைத் தினமும் தருவித்துக் கொடுக்கறீங்க! :)

    //அப்பாடா, எப்படியோ கந்தனை லிங்க் பண்ணியாச்சு//

    போச்சுடா! நீங்களுமா இந்த கும்மியில்? :)
    எப்படியோ எல்லாம் கந்தனைப் பந்தலில் லிங்க் பண்ணத் தேவையே இல்லையே!

    அவன் திருக்கை வேலைத் தானே பேசினேன், கூர்"வேல்" கொடுந்தொழிலன்! நந்த கோபனா-கந்த கோபனா-ன்னு கேட்டிருந்தேனே! மறந்துட்டீயளா? :))

    ReplyDelete
  18. கவிநயா said...
    >>>>.

    //காதலன்/காதலி தோளில் சாய்ந்து தூங்குவது தான் எத்தனை சுகம்! பேருந்தில் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)//

    காதலியா? சொல்லவே இல்ல? :)

    >>>>>
    என்கிட்டயும் சொல்லல கவிநயா! இருக்கு இந்த கேஆர் எஸ்ஸுக்கு நேர்ல நாலு தர்ம அடி! இதே ரிஷானோ இல்ல ராகவ்வோ இருந்தா உடனெ விஷயத்தை சொல்லீ இருப்பாங்க!!!!

    ReplyDelete
  19. இங்கு சென்று பாருங்கள் இந்தக் கூத்தை.

    http://jeyamohan.in/?p=600

    ReplyDelete
  20. பலரும் பலதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டதால்....அருமையான பதிவு என்று மட்டும் சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  21. ஆண்டாளையும் நாளை ஆத்தாமேரியம்மா தான் என்றும் சொல்வார்கள் அதையும் எல்லோரும் தெரிந்து கொண்டால் நல்லது என்றே இங்கு வைத்தேன்.

    தவறென்றெண்ணினால் அதனை அகற்றி விடுங்கள் K.R.S. ஐயா.

    ReplyDelete
  22. //Anonymous said...
    ஆண்டாளையும் நாளை ஆத்தா மேரியம்மா தான் என்றும் சொல்வார்கள் அதையும் எல்லோரும் தெரிந்து கொண்டால் நல்லது என்றே இங்கு வைத்தேன்//

    :)
    இது ஓவர்நைட்டில் பேசக் கூடிய விஷயம் இல்லை ஐயா! ஆனால் ஒன்று சொல்லிக்கறேன்!

    சமயங்களுக்கும் இது போன்றவற்றால் அதீத பாதிப்பு இல்லை! ஓவராகக் கண்டு கொள்வதால், நாமே முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்! இந்தக் காலத்தில் பொது வரலாற்றுப் புத்தகங்களை அவ்வளவு ஈசியாக யாரும் திரிக்க முடியாது! அதெல்லாம் பழைய காலம்! அதனால் வீண் மல்லுகட்டுதல் தேவையே இல்லை!

    //தவறென்றெண்ணினால் அதனை அகற்றி விடுங்கள் K.R.S. ஐயா//

    இல்லை! இருக்கட்டும்!
    வாசிப்பே பாதிப்பு ஆகி விடாது!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP