Friday, August 22, 2008

மிஸ். பாவனா & பிரபல பதிவர்கள் நடிக்கும் "பதிவுலக ரோமாயணம்"!

தமிழ் கூறும் வலையுலகப் பெருமக்களே!
வலையுலக வரலாற்றில் முதல் முறையாக....
கனவுக் கன்னி பாவனா, கதாநாயகியாகத் தோன்ற...

அடுத்த வாரம், உங்கள் அபிமானத் திரையரங்கு,
மாதவிப் பந்தல் (Dolby Digital-A/C)-இல் காணத் தவறாதீர்கள்...
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ரிலீஸ்...


*** Blogayanam - பதிவுலக ரோமாயணம்! ***


அண்ணன் கானா பிரபாவின் பத்து தலை மாயா ஜாலக் காட்சிகள்!

உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் உலா வரப் போகும், பதிவுலக ஆதி காவியம்
BLOGAYANAM!
அதுவே பதிவர்கள் ரோமாயணம்!

* கானா பிரபா
* கோவி கண்ணன்
* சீவீயார்
* கேஆரெஸ்
* குசும்பன்

* மங்களூர் சிவா
* துர்கா தேவி
* ரிஷான் ஷெரீப்
* ச்சின்னப் பையன்

* பாஸ்டன் பாலா
* ஜீவ்ஸ் அண்ணாச்சி
* துளசி டீச்சர்
* மதுரையம்பதி

இவர்களுடன் கவுரவ வேடத்தில், கப்பி பய & வெட்டிப்பயல் & இன்னும் உங்கள் அபிமான முன்னணிப் பதிவர்கள்...

* யார் யாருக்கு என்ன ரோல்?
** யார் வேண்டுமானாலும் இப்போதே விவாதிக்கலாம்!


* கதை-திரைக்கதை: KRS
* வசனம்-டைரக்ஷன்: பின்னூட்டப் பதிவர்கள்
* தயாரிப்பு: SPVR சுப்பையா
* இசை: தேன் கிண்ணம்
* ஒளிப்பதிவு: PIT
* ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* சிறப்பு மாயாஜால ஸ்டண்ட் காட்சிகள்: மைஃபிரெண்டு

காணத் தவறாதீர்!!!!!!!!!!

(இந்தப் படத்தில், பாவனா பைக்கில் உள்ள ஸ்டிக்கரையும், பக்கத்தில் உள்ள பதிவரையும், நன்றாக நோட் சேஸ்கோண்டி! கதையின் திருப்பு முனை, நெருப்பு முனை புரிந்து விடும்!)

Read more »

Wednesday, August 20, 2008

புதிரா? புனிதமா?? - நட்சத்திரப் பதிவர் குமரனின் கிசு கிசுக்கள்!!!

மக்கள்ஸ்! இந்தப் புதிரா புனிதமா-வில் அஞ்சா நெஞ்சுடன், வீரமாகப் பதில் சொன்னது ரெண்டே பேரு தான்! சிவமுருகன் & ஸ்ரீதர் அண்ணாச்சி!
மற்ற அத்தனை பேரையும் நட்சத்திரப் பதிவர் குமரன் திரைமறைவில் மிரட்டியுள்ளதாக, திரைமறைவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன!

இருப்பினும், இதில் அதிக கிசுகிசு கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சாதனை படைச்ச சிவாவைப் பாராட்டி, குமரன், இந்தப் பரிசை வழங்குகிறார்!
சிவாவுக்கு வெகு விரைவில், இதே போன்று மாலை சூடி, திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்(றோம்)! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விரிவான விளக்கங்களைக் குமரனே வந்து சொல்லுவார்!


மக்கள்ஸ்! இன்று புதிரா புனிதமா ஒரு வரலாறு படைக்கப் போகிறது! தமிழ்ப் பதிவுகளிலேயே முதல் முறையாக....ச்சே....சன் டிவி பாக்காதே, கலைஞர் டிவிக்கு மாறு-ன்னு சொன்னாக் கேட்டா தானே?....ஒரு பதிவரைப் பற்றிய வினாடி வினா! அதான் யாருன்னு தலைப்புல சொல்லியாச்சே!

கிசுகிசு என்பது கூடிய சீக்கிரம் தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை ஆனாலும் ஆகி விடும்!
உலா, கலம்பகம், பள்ளு போல ஜொள்ளு, கலாய்த்தல், கிசுகிசு!
அந்த அளவுக்கு, மக்கள் அடுத்தவர் விஷயத்தில் காட்டும் ஒரு பொது அறிவு ஆர்வம்! ஒருத்தரைப் போட்டு வாங்க இதை விட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்குமா?
நம்ம நட்சத்திரப் பதிவர் குமரனை அடிச்சி ஆடுவமா? :)

இந்த முறை குமரன் ஐயாவே சொந்த செலவுல பரிசை வழங்குவாரு!
தங்கக் காசா கூட இருக்கலாம்! திருப்பரங்குன்றம் கோயில் கஜானாவுக்கே மேனேஜர்-ன்னா பாத்துக்குங்க!
மதுரை-ல மேல மாசி வீதியில அண்ணாச்சிக்கு சொந்தமா ஒரு வளையல் கடை! பிரபல முன்னணி நடிகைகள் எல்லாம் அங்கிட்டு தான் வளையல் வாங்க வருவாங்களாம்!

கிசுகிசு நம்பர் ஒன்:
நம்ம தங்கமான பதிவர் ஒருத்தருக்கு மரம் வளர்க்கறதுல ரொம்பவே ஆர்வம்!
தூத்துக்குடி உப்புச் சத்தியாகிரகத்துல அப்பப்ப உப்பு காய்ச்சுவாரு! அப்பல்லாம் ரஜினா உப்பு-மா மட்டுமே சாப்பிட்டு உண்ணாவெரதம் இருப்பாராம்!
அவரு சென்னை திரும்பி வரும் வழியில், மதுரைல எப்பமே ஒரு ஹால்ட் போடுவாராம்! எதுக்குங்கிறீங்களா? மேற்படி வளையல் கடைல, வளையல் போட்டு விடத் தான்! :)

குமரன் ரெடி! நீங்க ரெடியா?....
விடைகள், நாளை இரவு (மின்னசோட்டா நேரப்படி)!


1

பதிவர் குமரனின் அகவை - நல்லா கவனிக்கவும், அங்கவை இல்ல! - அகவை! அகவை!

பதிவுச் சான்றிதழ் வயது என்ன?

1

அ) 15-3/4

ஆ) 1330

இ) 1036

ஈ) 133

2

குமரன் வலைப்பூவில், தன்னைப் பற்றிய ஒரு குறிப்பில், இந்த பாட்டைக் கொடுத்துள்ளார்!

மதுரைக்காருல்ல! மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்து, அதைத் தான் எடுத்துக்கிட்டு வந்திருக்காரு! யாரு எழுதிக் கொடுத்த பாட்டு?

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே!

2

அ) ஆண்டாள்

ஆ) வெட்டிப்பயல்

இ) அபிராமி பட்டர்

ஈ) நம்மாழ்வார்

3

போறாளே பொன்னுத் தாயன், பொல பொலவென்று கண்ணீர் விட்டு! அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்டிருக்கீங்க தானே? குமரன் தமிழ்மணத்தை விட்டு விலகறேன்-ன்னு அறிவிப்பு வுட்டாருல்ல! அப்ப பாடுன பாட்டு தான் அது!

அப்படிப் போறப்போ, எந்தப் பதிவுகளை (வலைப்பூக்களை) மட்டும் தமிழ்மணத்துல இருந்து தூக்குனாரு?

3

அ) அபிராமி அந்தாதி

ஆ) கூடல்

இ) மதுரை மாநகரம்

ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு

4

கஷ்டமான கேள்வி!

குமரனோட கஷ்ட தெய்வம்...ச்சே...இஷ்ட தெய்வம் யாரு? :)

4

அ) முருகன்

ஆ) கண்ணன்

இ) மீனாட்சி

ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))

5குமரனின் பாடல் குரல், முதலில் அரங்கேறின வலைப்பூ எது? அதைக் கேட்டுவிட்டுச் சரியில்லை என்று சொன்ன பதிவர் யார்?

5

அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன்

ஆ) முருகனருள் - சர்வேசன்

இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார்

ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்

6

குமரன் எழுதியதில் எந்தத் தொடர் அதிக நீளமானது? (ஒவ்வொரு பதிவுமே அப்படித் தான்-ன்னு புலம்பல்ஸ் நாட் அலவுட் :)

நான் கேக்குறது, அதிக பதிவு எண்ணிக்கை கொண்ட தொடர்கள்!

6

அ) உடுக்கை இழந்தவன் கை

ஆ) புல்லாகிப் பூண்டாகி

இ) சொல் ஒரு சொல்

ஈ) கோளறு பதிகம்

7

இந்த நண்பர், குமரனின் ஊருக்குப் போகும் போதெல்லாம், குமரன் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி, ஊரை விட்டு ஓடிருவார்! பார்க்க வரவே மாட்டார்!

இத்தனைக்கும் இந்தப் பதிவரிடம் குமரன் கடன் கூட வாங்கலை! யார் அந்த அப்பாவிப் பதிவர்?

7

அ) KRS

ஆ) VSK

இ) இலவசக் கொத்தனார்

ஈ) விடாதுகருப்பு

8

குமரனின் புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு (சுயசரிதை-ன்னும் சில பேர் பேசிக்கறாங்கப்பா!), பலர் விமர்சனம் எழுதினாங்க! அதுல ஒரே ஒரு விமர்சனம் மட்டும் மாபெரும் சூட்டைக் கிளப்பியது!

கிட்டத்தட்ட குமரனை ஒரு போதைப் பொருளாளர் (Drug Addict) ரேஞ்சுக்கு வர்ணித்த அந்த வீரமிகு பதிவர் யார்? :)

8

அ) கோவி. கண்ணன்

ஆ) வவ்வால்

இ) ரத்னேஷ்

ஈ) டிபிசிடி

9

குமரனுக்குத் திடீர்-னு இயற்கை மேல் ஆர்வம் வந்து, பதிவுல, மரம் செடி கொடி எல்லாம் வளர்க்க ஆரம்பிச்சாரு ஒரு காலத்துல! எந்த மரம்/செடி?

9

அ) கொன்றை

ஆ) கடம்பு

இ) துளசி

ஈ) முல்லை

10

கடைசிக் கேள்வி: வெவகாரமான கேள்வி!

குமரனுக்கு ஒரு ராசி உண்டு! அவர் கூட எழுதும் கூட்டுப் பதிவர்கள் எல்லாம் கொஞ்ச நாளில் பதிவுலகத்தை விட்டே ஓடிருவாங்க! (உஷார் உஷார்-ன்னு உஷா அக்கா கூவுறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது :)

அப்படி விட்டுப் போன பதிவர், இவர்களில் யாரு?

10

அ) கீதா சாம்பசிவம்

ஆ) சிவமுருகன்

இ) நாமக்கல் சிபி

ஈ) சிவபுராணம் சிவா



* என்னாங்க, கிசுகிசு போதுங்களா? இல்லை, கொசுறு ஏதாச்சும் வேணுங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச கிசுகிசு-க்களைக் கூட நீங்க பின்னூட்டத்தில் சொல்லலாம்! "ஆண்மீகப் பதிவாளர்" - என்று உங்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்! :)

** இதுக்கு மேல வெவகாரமான கேள்விக்கு எல்லாம் நம்ம சின்னத் தலையைத் தான் கூப்டோணும்! யப்பா ராயலு! ராமு! அம்மூருகாரவுக, நம்ம ததா-வைப் பத்தி நல்ல சீட்டா நாலு எடுத்துப் போடு ராசா! :)

*** அப்படியே அந்த மேல மாசி வீதி, வளையல் கடை சமாச்சாரத்தை, மதுரையம்பதி-மெளலி அண்ணாவோ இல்லை நீயோ, களத்தில் இருந்து நேரடித் தகவல் கொடுத்தா, ப்ரைம் டயம் வெளம்பரம் காசு தேறும்! :))


இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) 15-3/4 ஆ) 1330 இ) 1036 ஈ) 133

2 அ) ஆண்டாள் ஆ) வெட்டிப்பயல் இ) அபிராமி பட்டர் ஈ) நம்மாழ்வார்

3 அ) அபிராமி அந்தாதி ஆ) கூடல் இ) மதுரை மாநகரம் ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு
4 அ) முருகன் ஆ) கண்ணன் இ) மீனாட்சி ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))
5 அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன் ஆ) முருகனருள் - சர்வேசன் இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார் ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்
6 அ) உடுக்கை இழந்தவன் கை ஆ) புல்லாகிப் பூண்டாகி இ) சொல் ஒரு சொல் ஈ) கோளறு பதிகம்
7 அ) KRS ஆ) VSK இ) இலவசக் கொத்தனார் ஈ) விடாதுகருப்பு
8 அ) கோவி. கண்ணன் ஆ) வவ்வால் இ) ரத்னேஷ் ஈ) டிபிசிடி
9 அ) கொன்றை ஆ) கடம்பு இ) துளசி ஈ) முல்லை
10 அ) கீதா சாம்பசிவம் ஆ) சிவமுருகன் இ) நாமக்கல் சிபி ஈ) சிவபுராணம் சிவா
Read more »

Thursday, August 14, 2008

நெல்லைச் சீமை! சங்கரன் கோயில்! ஆடித் தபசு! கோமதி அம்மன்! புற்று மண்ணு!

என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே(Tinneley)-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்! உலகத் தமிழர்களில் பரந்து கிடப்பது Tins & Tans! Tins=Tinnevely & Tans=Tanjore! :)
நெல்லுக்கு இறைவனே வேலி வேய்ந்த சீமை தான் நெல்லைச் சீமை!
ஊரும், பேரும், ஆறும், சீரும் சொல்லி மாளாது! இருந்தாலும் நெல்லை-ன்னாலே இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் என்ன-லே? ஒன்னு அல்வா! இன்னொன்னு ஆடித் தபசு!

இப்போ பலரும் அல்வா குடுக்கறாங்க! ஆனா சீமை அல்வா, சீமை அல்வா தான்! :)
அதே போல் பலரும் விழாக்கள் எடுக்குறாங்க! ஆனால் ஆடித் தபசு, ஆடித் தபசு தான்!
இன்னிக்கி (Aug-14) நெல்லையில் ஆடித் தபசு! பாக்கலாம், வாரீயளா?

* இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு; வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!
* பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!
* பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது!
இத்தனையும் எங்கேன்னு வித்தியாசமா பாக்குதீயளா? நம்ம நெல்லைச் சங்கரன்கோயில் டவுன்-ல தான்-லே! அட நம்மூரு சங்கரநயினார் கோயிலை மறந்துட்டீயளா?

வியப்பா இருக்கா? மேலே படிங்கல்லே!

* அது என்னாங்க தபசு? = தபசு-ன்னா தவம்!
* யாரு செய்யற தவம்? = சிவனாரின் இல்லத்தரசி கோமதி செய்கின்ற தவம்!
* எதுக்கு அவிங்க போயி தவம் செய்யறாங்க? = எல்லாம் பொறந்த வீட்டுப் பாசம் தேன்!
* அது என்ன கோமதி? = அவிங்க ஊரு கோ-குலம்; தொழில் கோ-பாலம்; அண்ணன் கோ-விந்தன்; தங்கச்சி் கோ-மதி!
கோமதி! செந்தமிழில் ஆவுடையாம்பிகை! பசுக்களைக் காப்பவள்!
கோவில்பட்டில எப்படி ஒரு செண்பகமோ, அது போல சங்கரன்கோவில்-ல ஒரு கோமதி! வீட்டுக்கு வீடு ஒரு கோமதி இருப்பாள்!
ஆடித் தபசே அவள் திருவிழா தான்! அம்பாளைத் தரிசிக்கும் முன்னர் கொஞ்சம் கதை என்னான்னு பார்க்கலாமா?


சங்கன், பத்மன்-ன்னு ரெண்டு நாக அரசர்கள், நெருங்கிய நண்பர்கள்! ஆனா ஒரே ஒரு விஷயத்துல மட்டும் அடிச்சிக்குவாங்க! ஆனா அப்பறம் கூடிக் குலவிப்பாங்க!
சங்கன் வீர சைவன்! பத்மனோ பழுத்த வைணவன்! இருவரும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா-ன்னு, பதிவுகள் எல்லாம் வராத காலத்திலேயே கூட, பின்னூட்டம் போட்டுக்குவாங்க போல!:)

உலகத்துக்கே அம்மா! அவளிடம் தானே வழக்கு வர வேண்டும்? வந்தது! கொண்டு வந்தது பத்மன்! சங்கன் செய்யும் வம்புகளை அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டான்!
அம்பாள் யாரைப் பார்ப்பாள்? பிறந்த வீடா? புகுந்த வீடா?

எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்! வேத கோஷம் ஓதிப் பார்த்தாள்! அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்லிப் பார்த்தாள்! அதிலும் அரியைத் தானே முதலில் சொல்றீங்க-ன்னு வம்பு பண்ணுகிறார்கள்! சொல்லுக்குச் சொல் பிடிச்சிக்கிட்டா, சோதரி என்ன செய்வாள் பாவம்?

வாயால மட்டுமே எடுத்துச் சொன்னால், இவிங்க எல்லாம் கேட்க மாட்டாங்க-ன்னு அவளுக்கு நல்லாப் புரிஞ்சி போச்சி!
அம்பாள் தபசில் உட்கார்ந்து விட்டாள்! ஆடி மாசம்! அதான் ஆடித் தபசு!

காதல் கணவன் சிவபெருமான் கோமதியின் முன்னால் தோன்றினான். அவனிடம் இது வரை யாருமே கேட்காத வரத்தைக் கேட்டாள் அன்னை! ஆடிய பாதனே ஒரு கணம் ஆடிப் போய் விட்டான்!


"நல்லா யோசிச்சித் தான் கேட்கிறியா கோமதீ?"

"ஆமாம் ஐயனே! நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்குத் தர மாட்டீங்களா?"

"அதில்லை! வாம பாகம் என்னும் என்னுடைய இடப் பாகம் உனக்கு உரியதாச்சே! அதையே நீ விட்டுக் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன வந்தது?"

"பரவாயில்லை! என் இடமே போனாலும் பரவாயில்லை ஐயனே! நான் கேட்கும் வரத்தைத் தாருங்கள்!"

"சரி...முறையாக ஜபித்து வேண்டுவதைக் கேள்"

"சர்வ வியாபி என்று என் ஆசை அண்ணனுக்குப் பெயர்! அவரோட மாயா ரூபம் தானே நான்! நிறம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் நாங்கள் ஒன்றல்லவா! பச்சை மாமலை போல் மேனி அல்லவா!"

"ஆமாம்!"

"விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று தானே பொருள்! அவன் உங்க கிட்டேயும் நீக்கமற நிறைந்து உள்ளான் அல்லவா!"

"ஆமாம்!"

"அதை நீங்கள் உலகத்துக்கு வெளிப்படையாகக் காட்டியருள வேண்டும்! அப்போது தான் இந்த ஊர் வாயை அடைக்க முடியும்!"

"ஊர் வாயை, ஆல-வாயாலும் அடைக்க முடியாது தேவி!"

"பரவாயில்லை ஐயனே! ப்ரத்யட்சம் ப்ரமாணம்!
கண்டதே காட்சி என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் கண்டதே காட்சி என்று மாறட்டும்!
கொண்டதே கோலம் என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் நீங்கள் கொண்டதே கோலம் ஆக ஏறட்டும்!"

"ஹா ஹா ஹா"

"எனக்குச் சொந்தமான இடப் பாகத்திலேயே அண்ணனைக் காட்டி அருளுங்கள்! தூணிலும் துரும்பிலும் எங்கெங்கும் வியாபித்து இருப்பவனை உங்கள் வாம பாகத்திலும் காட்டி அருளுங்கள்! சங்கர நாராயணனாக காட்சி கொடுத்து சாட்சி கொடுங்கள்!!!"


ஹரி-ஓம்-நம சிவாய!
ஈசன் காட்சி கொடுத்து விட்டான்! ஈசன் சாட்சி கொடுத்து விட்டான்!

இறைவன் திருமேனி இடப்பாகத்தில் யமுனைத்
துறைவன் தோன்றி விட்டான்!
ஈசன் திருமேனி இடப்பாகத்தில் இலக்குமி
நேசன் தோன்றி விட்டான்!
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து விட்டான்!
தாழ் சடையும் = நீள் முடியும்; ஒண் மழுவும் = சக்கரமும்; சூழ் அரவும் = பொன் ஞானும்!
* ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!
* ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!
* ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு!
* ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!
* ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசீ மாலை!
* ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய் தாமரைக்கண் கருமாணிக்கமே!

* சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!
* வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு!
* இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!

குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!

எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!

புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!



ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!

இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்கு! ஆனால் எல்லாப் பிறவியிலும் வரும் ஒரே அன்னை யார்?
தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!


மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!

அவளுக்கு எந்தக் குழந்தையிடமும் பேதம் பார்க்கத் தெரியாது!
சைவக் குழந்தையோ, வைணவக் குழந்தையோ, சாக்தக் குழந்தையோ, புத்தக் குழந்தையோ, சமணக் குழந்தையோ, முகம்மதியக் குழந்தையோ, கிறித்துவக் குழந்தையோ.....எதுவுமே இல்லாத குழந்தையோ.....
என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!

நம சிவாய!
ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!


Read more »

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்!
அறுபத்தோரு ஆண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன என்று பார்க்கலாம் வாங்க! அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன், தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நேர்காணலை Rediff.com இல் படித்து விட்டீர்களா? சுருக்கமாக இங்கே!

1.Where we achieved:
The Indian economy is in an ascent phase. Particularly, our economy is growing at 8% to 9% per annum for the last four years
Where we failed:
220 million people living below the poverty line shows the failure of our system
சாதனை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8-9%; சக்கரத்தின் மேல் புறச் சுழற்சியில் உள்ளோம்!
வேதனை: 22 கோடி மக்கள் இன்னும் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வது, நம் அமைப்பின் தோல்வி!

2.The need for a National Campaign to Eradicate Terrorism
தீவிரவாதம் களையெடுக்க நாடு தழுவிய முயற்சி

3.The skill deficit among our youth is the most important issue.
இளைஞர் ஆற்றல் பற்றாக்குறை என்பது முக்கியமான பிரச்சனை!

4.Always elect people who will work for development politics.
வளர்ச்சி அரசியல் செய்பவர்களுக்கு மட்டுமே வாக்கு அளியுங்கள்!

5.It is essential that economic prosperity reaches 700 million people in rural areas.
நகர்ப்புறம் அல்லாத எழுபது கோடி மக்களை, பொருளாதார வளர்ச்சி சென்று தாக்குமா/அடையுமா?

6.The youth is restless. They want to contribute to make India great.
The time has come to launch a youth movement for national development.
இந்திய இளைஞர் இயக்கம் ஒன்றைத் தொடங்கும் வேளை வந்து விட்டது!


பதிவுக்கு மீண்டும் வருவோம்...

தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்து அது பாடப்பட்டது என்பது, ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

மேலும் அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை! நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்! மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார். இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொல்லிப் பின்னர் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன பாடல், துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது! இதோ சபை விவாதங்களின் சுட்டி! ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது! அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும். வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm



சென்ற ஆண்டு விடுதலை நாள் விழாவின் போது இட்ட இடுகையின் மீள்பதிவு!
Read more »

Tuesday, August 05, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்? - 2

மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம், யார் தேறுகிறீர்கள் என்று! - சென்ற பதிவு இங்கே!
* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்,
* மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர்,
* எம்பெருமான், திருவேங்கடமுடையான்

105) உலகளந்த பெருமாள், திருக்கோவிலூர்
பராக்-பராக்-பராக்!
"என்ன கோதை? நான் தானே உனக்குப் பிடித்தமானவன்? ஓங்கி உலகளந்த "உத்தமன்"-ன்னு என்னைத் தானே பாடினாய்?"

"வாருங்கள், அளந்தவரே! வாருங்கள்! திருக்கோவிலூர்-ன்னாலே சும்மா "அளந்து" விடுவாங்க போல இருக்கே! நான் உத்தமன்-னு உங்களைச் சொல்லல! காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளைச் சொன்னேன்!"

"கோதை, யார் மேலயோ இருக்கும் கோபத்தை என் மேலே காட்டுகிறாயே! நியாயமா?"

"நியாயம் பற்றி நீங்க பேசறீங்களா? மாவலிக்குச் சிறு கால் காட்டி, பெரு கால் அளந்தீங்க தானே? போனால் போகட்டும்! ஆனா அளக்கும் போது இந்த மொத்த உலகத்தையும் சேர்த்து தானே அளந்தீங்க? அப்போ உங்க திருவடி, இந்தப் பூமி மேல மொத்தமாப் பட்டிருக்கணுமே? "

"ஆமாம்! பட்டதே; பட்டர் பிரான் கோதைக்கு பட்டதில் என்ன ஐயம்? பட்ட குறையா? பட்டு விட்ட குறையா? விட்டு தொட்ட குறையா?"

"ஐயா தமிழ்க் கடவுளே! போதும் உங்க அடுக்கு மொழி! திருவடிகள் பூமியில் மொத்தமா பட்டிருந்தா, பூமியில் உள்ள அத்தனை பேரும் இந்நேரம் மோட்சம் போயி இருப்பாங்களே? ஏன் போகலை? நீங்க என்னமோ சதி செஞ்சிருக்கீங்க! கேக்கறே-ன்னு தப்பா நினைச்சிக்காதீங்க! அப்படி என்ன திருவடியை விட நீங்க உசத்தியாப் போயிட்டீங்க?"

"அது இல்லை கோதை...வந்து....வந்து......என் திருவடிகள் என்னை விட..."

"போதும் உங்க திருக்கோவிலூர் தகிடு தத்தம்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...) அடுத்து..."


106) கள்ளழகர் என்னும் சுந்தரராஜப் பெருமாள், மதுரை-மாலிருஞ்சோலை!
பராக்-பராக்-பராக்! "ஆண்டாள்! My honey! தேனே, நலமா பொன் மானே?"

"வாருங்கள் அழகரே வாருங்கள்! பச்சைப் பட்டு உடுத்தி வந்திருக்கீங்க போல இருக்கே! அது எப்படி வருஷா வருஷம், உமக்கு மட்டும் பச்சைப் பட்டே வருது? இல்லை.....பெட்டி முழுக்கவே பச்சை தானா? ஹா ஹா ஹா! பச்சை மாமலை போல் பெட்டி! "

"ஆகா...உனக்கு என்ன உஷ்ணம்? என்ன உஷ்ணம்? மோர்ப் பந்தலில் மோர் தரச் சொல்லட்டுமா?"

"எனக்கு மோர்ப் பந்தல் எல்லாம் வேணாம்! என் தோழனோட மாதவிப் பந்தலே போதும்!" :)

"ஓ...அவன்ன்ன்ன்ன்னா? ......சரி, சரி...மாலையைச் சீக்கிரம் போடு! சோலை மலைக்குச் செல்ல வேண்டும்! நேரமாகிறது!"

"ஏதேது? பெண்ணைக் கட்டாயப்படுத்தி மாலை வாங்குறீங்க போல! சோலை மலை உங்க மலையா? போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்!  ஒதுங்க இடம் கொடுத்ததுக்கே இந்த ஆரவாரமா? வாடகை வீட்டில் குடியிருக்கும் போதே உமக்கு இம்புட்டு கோலாகலமா?"

"என்ன ஆண்டாள்? அடக்கமே உருவான மதுரைப் பெண் போலவா நீ பேசுகிறாய்? வெடுக்கெனப் பேசி நடுக்குறச் செய்தால், படுக்குறும் பரமன் மிடுக்கு அழிவேனே!
நூறு தடா பொங்கல், நூறு தடா வெண்ணெய்! பெருமாளிடம் உன்னைச் சேர்ப்பிப்பதற்காக எனக்கு நேர்ந்து கொண்டாய் அல்லவா?
அதான் நானே வந்துள்ளேனே! என்னிடம் சேர்ந்து விடு! பொங்கலையும் என்னிடமே சேர்த்து விடு!"

"கள்ள்ள்ள்ள் அழகா! பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனா நீ?
கூழும் வேண்டும், மீசையும் வேண்டும்! பெண்ணும் வேண்டும், பொங்கலும் வேண்டுமா?
மனத்துக்கினியான் என்னிடம் வந்து சேர்ந்தால் மட்டுமே உனக்குப் பொங்கல்! இல்லீன்னா போங்கல்! போங்கள்! உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...) அடுத்து..."


107) பாலாஜி, ஸ்ரீநிவாசன், வேங்கடேஸ்வரன் என்னும்...
திருவேங்கடமுடையான், திருவேங்கடம்!
பராக்-பராக்-பராக்!

ஜருகண்டி, ஜருகண்டி, பதண்டி-மா, பதண்டி...

"கோதை, என்ன இது? என்னை அழைத்தாய்? ஆனால் நான் வரும் போதோ ஓடுகிறாயே?"

"பின்ன என்னவாம்? வரும் போதே ஜருகண்டி, ஜருகண்டி-ன்னு சொன்னால் ஜருகாம என்ன செய்வார்களாம்?"

"ஹா ஹா ஹா! நீ அழைத்தாயே என்பதற்காகத் தான் வந்தேன்! தெழி குரல் அருவி பாயும், எம்பெருமான் பொன் மலையை விட்டு இறங்கி வந்தேன் பெண்ணே!"

"வேங்கடநாதா, உங்கள் மலையில் அருவி எல்லாம் இருக்கா? எனக்கு அருவின்னா ரொம்பவும் பிடிக்கும்!
மலை அருவியில் சாரல் தெளிக்க,
மனத்துக்கு இனியான் சேலை ஒளிக்க,
அவன் பரந்த மார்பில்,
விரிந்து குளிப்பது தான் எத்தனை சுகம்! ஆகா!
தினமும் இதே குளத்தில் குளித்துக் குளித்து எனக்குச் சலித்து விட்டது! இந்த மதுரையில் மருந்துக்கும் ஒரு அருவியும் இல்லை! குருவியும் இல்லை!"

(ஒரே ஒரு விநாடி தரிசனத்தில், ஒன்னுமே பேசாம, அருவியைக் காட்டி இப்படி மயக்கி விட்டானே வேங்கடவன்? - அத்தனை எம்பெருமான்களும் பொறாமை விழிகளால் பொன்மலையானைப் பார்க்கிறார்கள்!)

"வெறும் அருவி மட்டுமா கோதை? விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்! தேன் கொண்ட மலர்ச்சிதறல் திரண்டேறிப் பொழிவீர்காள்! எல்லாம் இருக்கும் திருமலையில்!
அது திருமலை! இது தோள்மலை! - என் தோள்மலையில் உன் தோள்மாலை எங்கே? தோமாலை எங்கே?"

* தோமாலை சேவை! ஆண்டாள் வேங்கடவனுக்கு மாலையைச் சூட்ட மிக அருகில் வந்து விட்டாள்!
* கிட்டக்க வந்தால், அவன் பச்சைக் கர்ப்பூர நெடி, அவள் பச்சை உடம்பை என்னமோஓஓஓஓஓ பண்ணுகிறது!
* அத்தனை திவ்யதேச எம்பெருமான்களுக்கும் இதயம் தடக்-தடக் என்று அடித்துக் கொள்கிறது!
* அரங்கப் பள்ளி கொண்டான் மட்டும் கழிவிரக்கத்தில் கொஞ்சம் தள்ளிக் கொண்டான்! ஆனால்....ஆனால்....ஆனால்....


"தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

எதுக்கும் ஒரு முறைக்கு இரு முறை நல்லா யோசிச்சிகோம்மா! திருமலை மேலே தேவியர் யாரும் இருக்க முடியாது! எல்லாரையும் மலைக்குக் கீழே அனுப்பி விடுவான் வேங்கடவன்!
கேட்டால், குரு பரம்பரை.....தேவி பூமியில் குருவாய் இருக்கணும்......துணைக்குச் சேனை முதலியார், நம்மாழ்வார் என்று ஒவ்வொருத்தரா அனுப்பறேன்-னு கதை விடுவான்! திருமலை என்பது அ-பிராக்ருதமான மலை! அங்கே அவனும் அவன் அடியார்கள் மட்டுமே! அவன் அந்தரங்க அறையில் கூட அடியார்கள் தான் படியாய்க் கிடப்பார்கள்! வாசல் படியாய் கிடந்து, அவன் பவள வாய் காண்பார்கள்!
உனக்கு ப்ரைவசி கூட இருக்காது! ப்ரை-வசி இல்லாமல் வசிப்பாயா நீ? உனக்கு அந்தரங்கம் வேணுமா? இல்லை அந்த-ரங்கம் வேணுமா?"

"அண்ணா இராமானுசரே! நல்ல வேளை ஞாபகப்படுத்தினீர்கள்! இல்லீன்னா என் கதி என்ன ஆயிருக்கும்? பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனேன் வாழியே!"

.........வேங்கடவன் உடையவரை நோக்கி ஒரு பார்வை பார்க்க...அவரோ சிரிக்க, அவனோ முறைக்க...


108) நம்-பெருமாள் என்னும் நம்முடைய பெருமாள்,
அரங்கன், திருவரங்கம்!
பராக்-பராக்-பராக்!
பராக்-பராக்-பராக்!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
கூரிய விழிகள் கூறிக் கொண்டன!
கண்கள் கலந்தன! வாய்கள் மறந்தன! பேச்சே இல்லை!
அவள் மூச்சு இவன் மேலே! இவள் மூச்சு அவன் மேலே!

* அவன் எளியன்! அலங்காரம் கூட இல்லை! = வெறும் முத்து மாலை!
* இவள் அளியள்! அலங்காரம் தான் முழுதும்! = பூமாலை, பாமாலை! இவர்களுக்குள் எப்படி ஒத்துப் போகும்? திருக் கமல பாதம் வந்து........என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே!
சிவந்த ஆடையின் மேல்........சென்றதாம் என் சிந்தனையே!
உந்தி (தொப்புள்கொடி) மேல்......அதன்றோ உள்ளத்தின் உயிரே!
திருவயிற்று உதர பந்தனம்.........என் உள்ளத்துள் உலாகின்றதே!



பின்னிய கூந்தல் கருநிற நாகம்.. பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

ஆர மார்பு அன்றோ............அடியேனை ஆட்கொண்டதே!
கண்டம் (கழுத்து) கண்டீர்.........அடியேனை உய்யக் கொண்டதே!
செய்ய வாய்......ஐயோ.........என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய வாய கண்கள்.....என்னைப் பேதைமை செய்தனவே!!!


தட்டொளி-கண்ணாடி சேவை

நீலமேனி.... ஐயோ..... நிறை கொண்டது என் நெஞ்சினையே!!!
சவுரித் திருமஞ்சனம்

என் அமுதினைக் கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே!!!
என் அமுதினைக் கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே!!!


* நம்மாழ்வார் திருமணத்தை நடத்தி வைக்க,
* பெரியாழ்வார் தம் ஆவியாம் திரு-மகளை, அரங்கனுக்குத் தாரை வார்க்க,

* ஆழ்வார்கள் பன்னிருவர் ஆழ்ந்தே தமிழ் இசைக்க,
* நாயன்மார்கள் மங்களப் பதிகம் பாடியே அருள,

* திவ்யதேச எம்பெருமான்கள் அத்தனை பேரும் அருளாசி வழங்க,
* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,

** நம்பிக்கு மாலையிட்டாள் நங்கை!
** நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலில் நெய்யாய்க் கரைந்து விட்டாள் நங்கை!
** நம்பியின் பாம்புப் படுக்கையில், நம்பியை, நம்பி ஏறி விட்டாள் நங்கை!

 மெத்து என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...
குத்து விளக்கு எரியக், கோட்டுக் கால்
கட்டில் மேல் காதலனைச் சேர்ந்து விட்டாள் கோதை!

இன்றோ திரு ஆடிப் பூரம்! எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்! - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தனை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
செல்லமே வாழியே! என் உயிர்த் தோழி வாழியே!


(சென்ற ஆண்டு மெளலி அண்ணா, "திவ்ய சூரி சரிதம்" பற்றி எழுதுங்களேன் என்று நேயர் விருப்பம் வைத்தார்! அதற்குக் காலம் இப்போது தான் கனிந்தது!

கருடவாகன பண்டிதர் என்பவர் எழுதிய நூல் தான் திவ்ய சூரி சரிதம்! பழைய நூல்! அச்சில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!

நம்மாழ்வார் ஆண்டாள் சுயம்வரத்தை நடத்துவார்; தோழி அனுக்ரகை கூவிக் கூவி அழைக்க, ஒவ்வொரு எம்பெருமானும் கோதை முன் தோன்றுவர்; அரங்கனை மட்டுமே அவள் கண்களால் தேர்ந்து எடுப்பதாகவும் வரும்!

ஒவ்வொரு பெருமாள் வரும் போதும், அவர் தலம், அதன் தல வரலாறு சொல்வதோடு நூல் நின்று விடும்!
மேலே நீங்கள் கண்ட உரையாடல்கள் எல்லாம் அடியேன் கற்பனையே!
கோதையின் பின்னால் ஒளிந்து கொண்டு, அடிப் பையன்-பொடிப் பையன், அனைத்து திவ்யதேச எம்பெருமான்களையும் கலாய்த்து விட்டேன்! :)

அனைத்து எம்பெருமான்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
"சிறு பேர்" அழைத்தனவும் சீறி அருளாதே! இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்! :)


அடியே கோதை...
உன் பிறந்த நாள் பரிசு தான், இந்தப் பதிவு!
பிடிச்சிருக்கா உனக்கு? :)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
Read more »

Monday, August 04, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாளைக் கட்டிக்க 108 பேர் போட்டா போட்டி! - 1

கோதை பிறந்த நாள் அன்று ஒரு சுவையான நாடகம் பார்ப்போமா? அவளைக் கல்யாணம் கட்டிக்க, நீ...நான்-ன்னு ஒரே போட்டா போட்டி! யாரு போட்டி போடறாங்க? மொத்தம் 108 பேரு போட்டி போடறாங்க! அவனவன் பெருமையை, அவனவன் அளந்து விடுறான்! ஸ்டைல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறான்! ஆனால் இவ யாருக்கு மாலை சூட்டப் போகிறாளோ?...

வாங்க மக்களே வாங்க! இன்னிக்கு Aug-04; ஆடிப் பூரம்! நம் கோதைக்குப் பிறந்த நாள்!
ஹேப்பி பர்த்டே சொல்லிருவமா? கேக்குக்குப் பதில் கொஞ்சம் கெட்டியா சக்கரைப் பொங்கல், Candle-க்குப் பதிலா ஆடி மாச மாவிளக்கு!:)

கோதையைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தான் தெரியணும்னு இல்ல! சரியான அடாவடிப் பொண்ணு! பாரதி கண்ட புதுமைப் பொண்ணு! அன்பாகவும் இருப்பா! அலேக்கா தூக்கியும் பந்தாடிடுவா! அவ கேக்குற கேள்விக்கு, ஒரு பய புள்ள முன்னாடி நிக்க முடியாது! ஆமாம்!

* மற்ற பதினோரு பேரும் அவனுக்குள்ளே தாங்கள் ஆழ்ந்தார்கள்! = அவர்கள் ஆழ்வார்கள்! அவன் ஆண்டான்!
* ஆனால் இவ ஒருத்தி மட்டும், தனக்குள்ளே அவனை ஆழ்த்தினாள்! = இவள் ஆண்டாள்! அவன் ஆழ்வான்!
இப்படி ஆண்டவனையே ஆழ்வார் ஆக்கிய பெருமை கோதைக்கு மட்டுமே உண்டு!

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை "விஞ்சி நிற்கும்" தன்மையளாய், என்று அதனால் தான் அவளுக்குத் தனிப் பாடல்! வாங்க கதைக்குப் போவோம்!


அன்னிக்கு பெரியாழ்வாருக்கு ஒரே கவலையாப் போச்சு! பொண்ணு இம்புட்டு புத்திசாலியா இருக்கா! தினுசு தினுசா கண்டிஷன் போடுறா? எங்கிட்டு போயி வரன் தேடுவாரு அவரு? பாண்டியன் சபையில் வேதங்களோதி விரைந்து கிழி அறுத்தவர், இன்னிக்கி கதி கலங்கிப் போயி நிக்குறாரு! பாசத்தைக் கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டி வளர்த்த அப்பன் கதை எல்லாம் இப்படித் தான் ஆகும் போல! :)
உடனே அவருக்கு ஒரு யோசனை தோனுது! அன்று திருவடி பட்டு ஒரு கல்லே பெண்ணானதே! இன்று திருவடி பட்டு, நம் பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்ன? யாரு திருவடி? - நம்மாழ்வார் தான் திருவடி!
பெண்ணைக் கூட்டிக்கிட்டு, திருக்குருகூர் என்னும் நெல்லை மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு ஓடுகிறார்! கூடவே ஆண்டாளின் தோழி அனுக்ரகை!

அங்கே குருகூர் புளியமரத்தின் கீழ், அந்த மாறன் என்னும் குழந்தை உட்கார்ந்து கிட்டு இருக்கு! விட்டு சித்தன் என்னும் பெரியாழ்வாரைக் கண்டதும்........படார் என்று எழுந்து கொண்டது! என்ன இருந்தாலும் "பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆழ்வார்" அல்லவா? அவருக்குப் பின்னாடி தொங்கல் மாலையில், பாவாடைத் தாவணியில், ஒரு அழகு தேவதை!
...இப்போது கையும் கூப்பிக் கொண்டது அந்தக் குழந்தை! ஆண்டாள் என்றால் அப்படி ஒரு பரவசம் அல்லவா?

"நம்மாழ்வாரே! எங்களைப் பார்த்து நீங்கள் கை கூப்பலாமா? தகுமா? நீங்கள் திருப்பாத அம்சம்! திருப் பாதங்கள் கை கூப்பலாமா??
நாங்கள் எல்லாம் பக்திப் பயிர் மட்டுமே வளர்த்தோம்! நீங்கள் அல்லவா நம் வைணவ தர்மத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தீர்கள்! பயிருக்கு நீர் தடையின்றிக் கிடைக்க அணை கட்டினீர்கள்!"

"ஆகா! தங்கள் புகழ்ச் சொற்களுக்கு அடியேன் தகுதி இல்லை! அடியேன் சிறிய ஞானத்தன்!"

"வேதத்தை மறைத்து வைத்திருந்த கால கட்டம்! அனைவரும் அறியத் தமிழில் ஆக்க வேண்டும் என்று நீங்கள் அல்லவா முடிவு கட்டினீர்கள்!
ஒரே மூச்சாக, திருவாய்மொழி ஆக்கி, வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன், தாங்கள் அல்லவா?"

"ஆழ்வாரே! பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய திருவடி...இவர்கள் வரிசையில் பெரிய-ஆழ்வார்! அடியேன் சிறிய-ஆழ்வார் தான்!
வர வேணும்! வர வேணும்! குருகூரைத் தேடித் தாங்களே வந்த காரணம் என்னவோ? அருகில் யாரது? அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்துதித்த நம் கோதைப் பெண் தானே இவள்?"
"அவளே தான்! ஆனால் அவளால் தான் இன்று வருத்தமும் தீராது, மகிழாதே ரெம்பாவாய்-ன்னு இருக்கிறேன்! ஒருமகள் தன்னை உடையேன்! உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்!
திருமகள் போல் வளர்த்தவளோ, இன்னிக்கி திருமகள் தலைவனைத் தான் கட்டுவேன் என்று அடம் செய்கிறாள்! அழிச்சாட்டியம் செய்கிறாள்! தாயில்லாத பெண்ணாக வேறு போய் விட்டது! திட்டவோ அடிக்கவோ மனம் வரவில்லை!"

"ஆகா...என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்து விட்டீர்கள் அல்லவா? மனக் கவலை விடுங்கள்!
தனக்குவமை இல்லாதான் ”தாள்” நான்! - சேர்ந்தார்க்கு
மனக்கவலை மாறும் நாள் இன்று தான்!"



"கோதை! யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய் அம்மா? என்னிடம் சொல்! நான் ஆவன செய்கிறேன்! பாவம்! அப்பாவின் கவலையைப் பார்த்தாய் அல்லவா?"

"இது என்ன கேள்வி மாறனாரே? மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று எத்தனை முறை தான் சொல்லுவது? பெருமாளை மணம் செய்யத் தான் விரும்புகிறேன்! விரும்புகிறேன்! விரும்புகிறேன்!!"

"அட! அதான் எனக்குத் தெரியுமே! எந்தப் பெருமாளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? அதைச் சொல்! பேரையும் ஊரையும் சொல்லாமல், கட்டி-வை கட்டி-வை என்றால், பாவம் என்ன செய்வார் ஒரு தந்தை? எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பனாலும் முடியாதே!"

(ஆண்டாளே ஒரு கணம் அரண்டு விட்டாள்! ஏதேது! இந்தப் புளியமரக் குழந்தை நம்மையே மடக்குகிறது?)
"அதெல்லாம் எனக்குத் தெரியாது மாறனாரே! எனக்குப் பெருமாளைத் தான் தெரியும்! அவன் எந்த ஊர், என்ன பேர் என்பதை எல்லாம் தெரிந்து வச்சிக்கிட்டா காதல் செய்ய முடியும்?
வேண்டுமானால் பெருமாளை இங்கு வரவழையுங்கள்! அவர் வந்து சொல்லட்டும், தான் எந்த ஊர்? என்ன பேர்-னு? கோதைக்காக ஊரும் பேரும் சொன்னால் ஒன்னும் குறைந்து விட மாட்டார்!
கோதைத் தமிழ் ஐ-ஐந்தும்-ஐந்தும் அறியாத பெருமாளை வையம் சுமப்பதும் வம்பு! - இப்படிச் சொல்லி, நான் வரச் சொன்னதாக சொல்லுங்க! வருகிறாரா-ன்னு பார்ப்போம்!"

(இப்போது, நம்மாழ்வாரே அரண்டு மிரண்டு போய் விட்டார்! பெருமாளைச் சுமப்பதும் வம்பா? அம்மாடியோவ்! பாவம் பெரியாழ்வார்! இந்தப் பொண்ணை இம்புட்டு நாள் எப்படி வளர்த்தாரோ...தெரியலையே! :)
பளீர் என்று ஒரு யோசனை, ஆழி போல் மின்னுகிறது, ஆழ்வாருக்கு!)

"அனுக்ரகை, இங்கே வா! நீ தானே கோதையின் தோழி? நான் சொல்வது போல் செய்ய வேண்டும்! சரியா? இதோ...ஓலை! இதில் மொத்தம் 108 பேர்களை எழுதி வைத்து இருக்கிறேன்!
அத்தனை பேரும் வீராதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! அழகு கொஞ்சும் கட்டிளங் காளைகள்! திண் புயத்து மார்பும், திடலெனத் திருமேனியும் கொண்டவர்கள்! மல்லாண்ட திண் தோள் மணி வண்ணர்கள்! அத்தனை பேருக்கும் ஓரே நொடியில் சுயம்வர ஓலை அனுப்பி இருக்கிறேன்!"

"ஆகா, எப்படி அடிகளே?"

"மனத்துளானுக்கு, மன ஓலையே, மண ஓலையாகப் போனது! மனோ வேகத்தின் வேகம் நீ அறியாதவளா? இல்லை கோதை தான் ஹரி-யாதவளா?
இந்தப் பட்டியலில் உள்ள பேர்களை எல்லாம் நீ கூப்பிடக் கூப்பிட,
ஒவ்வொருவராய் கோதையின் முன்னர் வருவார்கள்! கோதைக்கு யாரைப் பிடிச்சிருக்கோ, அவனுக்கு மாலை சூட்டிக் கொள்ளலாம்! சரியா?"

"அப்படியே ஆகட்டும் குருவே!"

"சரி, இந்தா, பட்டியல்! சுட்டிப் பெண், சுயமாக வரன் தேடிக் கொள்ளும் "சுயம்"-வரம் துவங்கட்டும்! மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும்!"


1) பரமபத நாதன், ஸ்ரீமன் நாராயணன்! திருப் பரமபதம்! பராக்-பராக்-பராக்!
எம்பெருமான்! பரப் பிரம்மம்! உருவம், அருவம், அருவுருவம் எல்லாம் கடந்தவன்! மோட்ச சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபதி! பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளும், மூவரும், தேவரும், ஏவரும் துதிக்க நின்றவன்!

அப்பேர்பட்டவன், உருவம் கடந்தவன்.....வந்த வேகத்தில் எங்கே தலை கலைந்து விட்டதோ, என்று மீண்டும் தன்னை அழகு படுத்திக் கொள்கிறான்! :)
பிரம்மனி மானச சஞ்சரரே என்று மனதில் மட்டுமே சஞ்சரிப்பவன், மயிற் பீலியும், சாயக் கொண்டையுமாய்...இன்று ஆண்டாளின் முன்னே...

"வாருங்கள் நாராயணரே! என்னோடு என் தோழிமார்கள், அடியவர்கள் எல்லாம் புகுந்த வீடான பரமபதம் வருவார்கள்! சம்மதம் தானே?"

"அச்சோ..."

"என்ன அச்சோ? வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-ன்னு சொன்னீங்களாம்? இப்ப என்ன அச்சோ சொல்றீங்க?
புகுந்த ’வீட்டில’ புகுவது மண்ணவர் விதியே இல்லையா?"

"அப்படியல்ல கோதை! எல்லாரும் புகுவார்கள் தான்! ஆனால்...அப்படிப் புக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்ற வேண்டும்! தோன்றினால் தடையேதும் இல்லை! புகுந்து விடுவார்கள்! ஆனால் அது வரை புக மாட்டார்கள்!

"ஓ! நல்ல சட்ட திட்டம்!...அடியவர்களை ஒதுக்க ஆயிரம் காரணங்கள் சொல்லும் உம்மை நிராகரிக்கிறேன்!...(Rejected...)"

"கோதை....கோதை....நான் என்ன சொல்ல வரேன்னா..."

"Nextttttttttt..."

2) ஒப்பிலி அப்பன் என்னும் உப்பிலியப்பன், திரு விண்ணகரம் பராக்-பராக்-பராக்!
"வேண்டவே வேண்டாம்! என்னால் உப்பில்லாமல் எல்லாம் சாப்பிட முடியாது! நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தான் பாடினேன்! உப்பிட்டு உண்ணோம்-ன்னு எல்லாம் பாடலை...தூத்துக்குடி தெக்கத்திச் சீமை உப்பைப் பத்தி என்ன நினைச்சுப்புட்டீங்க?
மன்னிக்கவும்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)

அடுத்து..."

3) பார்த்தசாரதி என்னும் வேங்கட கிருஷ்ணன், திருவல்லிக்கேணி பராக்-பராக்-பராக்!

(மீசையுள்ள ஆயர் கோன், பயந்து பயந்து வருகிறான்)
"வாருங்கள் பார்த்த சாரதி! நலம் நலம் தானா முல்லை நிலனே? சுகம் சுகம் தானா சின்னக் கண்ணனே?"

"கோதை, என் மனங் கவர்ந்த பேதை! நீ எப்படி இருக்காய் கண்ணே?"

"கண்ணாலம் ஆகும் முன்னர், இந்தக் கண்ணே, மணியே எல்லாம் வேண்டாம்! இந்த வித்தை எல்லாம் அப்பாவி கோபிகைகளோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்! என்னிடம் செல்லாது!"

"அடேயப்பா, என்ன ஒரு பொய்க் கோபம் இந்தக் கள்ளிக்கு?"

"சரி...தேரோட்டிக் கொண்டு ஒன்றும் அறியாத பையனுக்கு ஏதோ கீதை சொன்னீர்களே! வள-வள-ன்னு எத்தனை எத்தனை சுலோகம்? எத்தனை எத்தனை அத்தியாயம்?
போரில் ஒருத்தன் தர்மம் அறியாது குழம்பிப் போய் உள்ளான்! நான் இருக்கேன்டா உனக்கு-ன்னு தைரியம் சொல்லாமல்...அவனை மேலும் குழப்பி...வெட்டியாய் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருந்தீர்கள்! நீங்க என்ன வெட்டிப் பயலா? :)"

"ஆகா...என்ன கோதை இப்படிச் சொல்லி விட்டாய்? அதான் மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என்னையே சரணம் எனப் பற்று, உனக்கு வீ்டு அளிக்கிறேன்-ன்னு சொன்னேனே பெண்ணே!"

"ஆமாம் சொன்னீர்கள்! ஆனால் எப்போது சொன்னீர்கள்? ஒருவனை நல்லாக் குழப்பி விட்டுட்டு....கடைசியாகச் சொன்னீர்கள்! அவன் கலங்கிய மண்டையில், நீங்க சொன்னது ஏறுமா?
இதே என்னைப் பாருங்கள்...எடுத்த எடுப்பிலேயே, முதல் பாட்டிலேயே சொல்லி விட்டேன்! - நாராயண*னே* நமக்*கே* பறை தருவான்! இப்படித் தெளிவாகப் பேசவே உமக்குத் தெரியாதா?

உம்மையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)"


இப்படியாக ஒவ்வொருவரும் நிராகரிக்கப் பட்டுக் கொண்டே வருகிறார்களே ஒழிய, யாரும் தேறுவதாய்க் காணோம்!
நம்மாழ்வார், பெரியாழ்வாருக்கே கூட உதறல் எடுக்கிறது! என்ன பெண் இவள்?
* குடந்தை சாரங்கபாணி வேண்டாமாம்!
* நாகை அழகியார் வேண்டாமாம்!
* பத்ரீ நாதன் வேண்டாமாம்!
* மலையாளத் திவ்ய தேசப் பெருமாள் ஒருத்தனும் வேண்டாமாம்!

* திருக்குறுங்குடி பெருமாள் வேண்டாமாம்! என்னமா அழகு அந்த வடிவழகிய நம்பி?
* சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பெருமாள் கூட வேண்டாமாம்!

அடுத்து யாருப்பா? உம், இனி ஒருத்தரா வந்து பயனில்லை! ரெண்டு ரெண்டு பேரா வாங்க! அச்சோ...தவறு தவறு! நல்ல காரியம்! ஒத்தைப் படையா இல்ல வரணும்! மூனு மூனு பேரா வரச் சொல்லுங்க! அடுத்து.....

* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்,
* மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர்,
* எம்பெருமான், திருவேங்கடமுடையான்
மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம் யார் தேறுகிறீர்கள் என்று!
...
(நாளை தொடரும்....)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP