Tuesday, January 13, 2009

மார்கழி-31/தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக!

என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா? பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது காதுல விழலீங்களோ? :))


கோதைத் திருமணம்! ஆண்டாள் கல்யாணம்!
பொதுவா, மார்கழி முடிஞ்சதும், திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடும்! ஆனால் தமிழர் திருநாளான தை-முதல் நாளுக்கு, கோதை பாசுரம் பாடி வச்சிருக்கா-ன்னு பல பேருக்குத் தெரியாது!

சின்னப் பொண்ணுங்களுக்குத் தை மாசம்-ன்னா உயிராச்சே! தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்! வீட்டில் தானியமும் பணமும் கதிராடும் வேளையாச்சே! பொண்ணு மனசுல, காதல் திருமணம் சதிராடாதா? :) தமிழ் மறத்தி-கிராமத்துப் பொண்ணான எங்கள் கோதை, தைப் பிறப்பைப் பாடாமல் தான் இருப்பாளா என்ன?

வாங்க, அதை வேகமாப் பார்த்துட்டு, ஆண்டாள் திருமண வைபோகத்தையும் பார்த்துவிட்டு...மிக மிக மகிழ்ச்சியாகத் திருப்பாவைப் பதிவுகளை முடித்து வைப்போம்! :)
இதோ தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!


வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்! சிவ பெருமான் நெற்றிச் சோதியில் பொடியாகிய பொடியா!

தையொரு திங்கள் - ஆண்டாள் கல்யாணத்துக்காக,
ஷைலஜா அக்கா பிரத்யேகமாக போட்டு அனுப்பிய,
வண்ணக் கோலம் (தண்-மண்டலம்). க்ளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்!


தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாச்சும் தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! தை மாசம் என்றாலே நீ வீடு தேடி வரும் வேளையாச்சே! அதான்!

எதற்கு உயிர் வாழ்கிறேன் தெரியுமா? காமன் என்னும் உன்னையும், சாமன் என்னும் உன் தம்பியையும் தொழுதேன்! ஏன் தெரியுமா?
பொறிகள் பறக்கும் அழகிய சக்கரத்தைக் கையில் பிடிச்சிருக்கானே...அந்த வேங்கடவன்! "அவனுக்கு-நான்" என்று விதிப்பாயே!



மார்கழி நோன்பு முடிஞ்சதும், ரெண்டு மாசம் கழிச்சி, பங்குனியில் தான் (பங்குனி உத்திரம்) கோதைத் திருமணம் கொண்டாடுவார்கள் திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்!

ஆனால் வேங்கடவன் அதற்கு முன்னதாகவே கோதைக்கு அருள் செய்கிறான்! எப்படா இவள், "வங்கக்கடல் கடைந்த" கடைசிப் பாசுரம் பாடி முடிக்கப் போகிறாளோ?-ன்னு காத்துக்கிட்டு இருக்கான் போல! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! நோன்பு முடிச்ச கையோடு.....அவளை-அவன்.....அடுத்த நாளே லபக்! :)

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

ஆண்டாள் மாலை மாற்றல் காட்சியை, திருமதி. விசாகா ஹரி, சூப்பர் பாட்டு ஒன்றினால் விவரிப்பதைக் கேளுங்கள்! (மாலை சூட்டும் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!)


கேட்பதற்கு மட்டுமான ஒலிச்சுட்டி!
மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!


அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

*பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2040 (சர்வதாரி வருடம்), தைத் திங்கள் முதல் நாள் (14-Jan-2009), மகம் நட்சத்திரம் கூடிய தைப்-பொங்கல் நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள்,
திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாடுடைத் தலைவன், அமலனாதிப் பிரான்,
திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,

* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இத்துடன், திருமகள் திருமணத்தோடு கூடிய திருப்பாவைப் பதிவுகள்...
மாதவிப் பந்தலில் நிறைவாகின! கனவுகள் நனவாகின!!


யம்மாடி கோதை, தாயே, என் தோழீ...உன் தோழனை ஒரு காலும் மறக்க மாட்டேன் என்று என் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு...முகமெல்லாம் இன்பமாப் போய் வாடீ...
பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!

பொங்கலோ பொங்கல்! இன்பமே பொங்கல்!
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!

38 comments:

  1. சிங்கையில் இருந்து அப்பாவிச் சிறுமி & ஜிஸ்டர் ஃபோன் போட்டு போடச் சொன்ன முதல் பின்னூட்டம் இது! - ராகவ்-க்கு போட்டியாம்! :))

    ReplyDelete
  2. முப்பதுநாளும் மனசுக்கு நிறைவா இருந்தது.

    நல்லா இருங்க. மனம் நிறைஞ்ச பாராட்டுகள்.

    விழாக் காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக இருந்தது ரவி அண்ணா..

    கோதை மாலை மாற்றலும், நனவாகிய கோதையின் கனவை தாங்கள் விவரித்த விதமும், நாச்சியார் திருமொழியினை பதிந்தும்..

    கோதை திருமண வைபவம் மிக அற்புதம்..

    ReplyDelete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ரவி அண்ணா..

    ReplyDelete
  5. ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
    * பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
    * கண்ணாரக் கண்டு, கையாரப் போற்றித் தொழுது, ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  6. திருக்கல்யாணத்திற்கு வந்ததற்கு அடையாளமாக கோவில்களில், ஆரத்தியை ஆண்கள் வேட்டி நுனியிலும், பெண்கள் சேலை நுனியிலும் அடையாளமாக சிறு பொட்டு போன்று வைப்பார்கள்..

    ReplyDelete
  7. கோயிலில் பொங்க வைச்சாச்சு :D
    பொங்கலும் கிடைச்சாச்சு :))
    இது வரைக்கும் ஆண்டாள் கல்யாணம் எல்லாம் நேருல பார்த்தது இல்லை :( ஆனால் ஒரு நாள் பார்ப்பேன்னு நினைக்கிறேன் :D
    பல வருடம் கிடைத்து கொண்டாடுற பொங்கல் :)
    இன்னும் மார்கழி 30 படிக்கல.அது வேலை முடிஞ்சு வந்து படிச்சுக்குறேன் :D

    மீ த first :))
    நன்றி அண்ணா.

    ReplyDelete
  8. வீட்டுப்பொங்கலை முடிச்சி, இதோ,இங்க பந்தல்ல நடக்கற கல்யாணத்துக்கு வந்துகொண்டே இருக்கேன்! ரவி..ஒரு இலை எனக்கும்! திருமணத்தில மொய் அறிவிப்பாளர் யார் ராகவ்வா!! ஆயிரம்கட்டிவராகன் அரங்கப்ரியாவினுடையது !!


    (திருமணக்கோலம்காண்பவர்களுக்காய்
    வரவேற்புக்கோலம் ஒண்ணு வரைஞ்சி அனுப்பினேனே வரலையா இன்னும்)

    ReplyDelete
  9. அண்ணாச்சி, அருமையான படங்கள், அசைபடங்கள். குறிப்பாக விசாகா ஹரியின் ஆண்டாள் கல்யாண கதை.

    இந்த கட்டுரைத் தொடருக்கு பின்னால் உங்கள் அயராத உழைப்பு பிரமிப்பானது. அருமை.

    ReplyDelete
  10. முப்பதுநாளும்முழுமூச்சாய் பதிவிட்ட
    ஒப்பிலா எங்கள் கேஆரெஸ் என்றும் நலம் வளமோடுவாழ்ந்திடவே
    நப்பின்னை நங்கைசேர் நந்தகோபன்குமரனை
    இப்போதும் எப்போதும்
    தப்பாமல் வேண்டிடுவேன்

    ReplyDelete
  11. க்ருணாஹி ! க்ருதவதீ ஸவிதாராதிபத்யை : பயஸ்வதீ
    ரந்திராஸாநோ அஸ்து!

    ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண உத்ஸவத்திலே,
    மாப்பிள்ளை வீட்டார் மைதிலி நாராயணன்,
    சூடிக் கொடுத்த நாச்சியார் ஸம்பாவணை ஆயிரங்கட்டி வராகன் !

    ReplyDelete
  12. அக்கா, உங்க சம்பாவணாஇயை அரங்கன் ஆண்டாள் திருவடியில் சமர்ப்பித்தாச்சு..

    பொதுவா கோவில்களில் மேலே சொன்ன நீளா சூக்தம் சொல்லி சம்பாவணை சமர்ப்பிப்பார்கள்..

    ReplyDelete
  13. அரங்கனை மனமுருக சேவிக்கும் போது ஒரு துளி கண்ணீர் துளிர்க்கும் ஏன் என்று தெரியாது. அதைப் போல இந்த பதிவை படிக்கும் போதும் துளிர்த்தது.

    நெகிழ்வோடு மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  14. \\Sridhar Narayanan said...
    இந்த கட்டுரைத் தொடருக்கு பின்னால் உங்கள் அயராத உழைப்பு பிரமிப்பானது. அருமை.
    \\

    ரீப்பிட்டேய் ;))))

    நன்றி தலைவா ;)

    ReplyDelete
  15. கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோலம், விசாகா ஹரியின் பாட்டு, ரவியின் கை வண்ணம்.
    அமோகம்.

    கோதை திருமணம் இனிதே முடிந்தது. மனம் நிறைந்தது.
    அவளைவிட்டுப் பிரிகிறோமே என்றும் மனம் தவிக்கிறது.
    நன்றி ரவி.

    ReplyDelete
  16. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  17. ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...இவ்ளோ அழகா கோலமெல்லாம் போட்டிருக்கீங்க...ஊர் கண்ணே பட்டுடும் (முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )
    ..சூப்பரா இருக்கு அக்கா..திருஷ்டி சுத்திப் போடுங்க :)

    ReplyDelete
  18. பொங்கலோ பொங்கல் இங்கியும் ஆச்சு. மாதம் முழுசாப் படிக்கலை. எல்லாரும் சொல்றதைப் பார்த்தா படிச்சே ஆகணும் போலிருக்கு!!!

    ஆனால், இதுக்கு ஆஜர். மாலை மாற்றும் வைபோகம் மிகவே அற்புதம்! நன்றி. விசாகா ஹரி முழுமையாப் பார்க்கணும், பாக்கறேன்.

    எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்சது அந்த கோலம் தான். (இதுவா அரங்கப்ரியாவுது?) அதைச் சுற்றி செங்கல் போய் வைச்சிருக்காங்க, வேலிகட்டி, மழையில அழியாம எடுத்துட்டு போய் காலரில வைக்க வேண்டியதுங்க !!! நாலைந்து வருடங்களுக்கு முன் ஒரு டிசம்பரில் ஊர்ப்பக்கம் போயிருந்தோம், ராஜாமணிக்கு கிராமப்புறம்லாம் ஒண்ணும் தெரியாது; காலைல அஞ்சு மணிக்கு போனா, கார் நின்னு நின்னு நின்னு போவுது, ஏன்னா பெண்கள்லாம் வீட்டு வாசல்ல, பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கோலங்களாப் போட்டுருக்காங்க; ராஜாமணி பயங்கர இம்ப்ரெஸ்டு! இன்னிக்கும் சொல்லிக் காமிக்கும் பிரம்மம்: 'ஒரு நாளாவது நீ அப்படி நம்ம வாசல்ல போட்டுருக்கியா' ன்னு! ஐ மிஸ் இன்டியா:-(

    நன்றி, மீண்டும்.

    ReplyDelete
  19. பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...//

    என் பதிவில் நானே...ரிப்பீட்டே! :)

    //(முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )//

    கேயாரெஸ் கண்ணு தான்! என் கண்ணு-ன்னு கொஞ்சுவாங்கல்ல? அந்தக் கண்ணு! :)

    //திருஷ்டி சுத்திப் போடுங்க :)//

    வா ரிஷான், பூசணியான உன்னைச் சுத்தி சுத்தி, சுத்தி போடுறேன்! :)

    ReplyDelete
  21. //துளசி கோபால் said...
    முப்பதுநாளும் மனசுக்கு நிறைவா இருந்தது//

    அது தான் வேணும் டீச்சர்!
    பொங்கல் வாழ்த்துக்கள்!

    //நல்லா இருங்க. மனம் நிறைஞ்ச பாராட்டுகள்//

    நன்றி டீச்சர்! இனிமேல் ஃப்ரீ தான்! வரேன் இருங்க!:)

    ReplyDelete
  22. கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா எழுத்துருவம் கொடுக்க முடில... நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி...

    Thiruppavai for Dummies சீரிஸ் மீண்டும் ரிவைஸ் செய்ய உதவியது...வாழ்த்துக்கள் கே. ஆர். எஸ்...

    ReplyDelete
  23. //குமரன் (Kumaran) said...
    அடியேன்//

    இதெல்லாம் ஒப்புதுக்க மாட்டோம் கோதை தமிழ் வலைப்பூவின் ஓனரே!
    பங்குனி உத்திரம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் பேசுங்க!

    ஏன் ரெண்டு மாசத் தாமதம் கோதைத் திருமணத்தில்? மார்கழி, தை, மாசி போய்...பங்குனியில் தான் நடக்கிறது!

    ஆலயங்களில், சஷ்டி நோன்பு முடிவில் உடனே தேவானைத் திருமணம் நடந்து விடுகிறதே! மதுரையில் எப்படி?

    அதே போல வள்ளித் திருமண விரிவுரைகள் பல புகழ் பெற்று இருந்தாலும், ஆலயங்களில் வள்ளித் திருமணம்-ன்னு தனியா நடைபெறுவது இல்லையே! ஏன் குமரன்?

    ReplyDelete
  24. //Natty said...
    கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா எழுத்துருவம் கொடுக்க முடில... நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி...//

    வாங்க Natty!
    எனக்கும் நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி! இந்த ஒரே பாவைப் பதிவை மட்டும், இட்டவன் நானே திரும்பத் திரும்பப் படிச்சிக்கிட்டு இருக்கேன்! :)

    அந்த பொமோனா ஆலயத்து மாலை மாற்றல் காட்சி...எளிமையா இருந்தாலும், திரும்பத் திரும்பப் பாத்துக்கிட்டு இருக்கேன்! :)

    என்னமோ தெரியலை! மகிழ்ச்சியா இருக்கு! :)

    //Thiruppavai for Dummies சீரிஸ் மீண்டும் ரிவைஸ் செய்ய உதவியது...வாழ்த்துக்கள் கே. ஆர். எஸ்...//

    அது அவசரம் அவசரமா பதிவை மட்டும் PDF பண்ணதுங்க!
    நேரம் கிடைக்கும் போது அடியார்கள் பின்னூட்டங்கள் எல்லாம் சேர்த்து, ஒழுங்கான தொகுப்பா இடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  25. கோதை திருமணம் - ஒவ்வொரு கட்டத்துக்குமான படங்களைத் தந்து உதவிய நண்பி சதாவுக்கு நன்றி!

    இப்போது பதிவில் அனைத்து படங்களையும் இட்டு, திருக் கல்யாணக் காட்சியை வரிசைப் படுத்தி விட்டேன்!

    உன் கல்யாணம் போலவே நல்லா வந்திருக்கு சதா, நன்றி! :)

    ReplyDelete
  26. ஹைய்யோ.....இப்போ இன்னும் ரொம்ப நல்லா இருக்குப்பா.

    மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

    ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ

    ReplyDelete
  27. எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...இவ்ளோ அழகா கோலமெல்லாம் போட்டிருக்கீங்க...ஊர் கண்ணே பட்டுடும் (முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )
    ..சூப்பரா இருக்கு அக்கா..திருஷ்டி சுத்திப் போடுங்க


    >>>>>>>>>>>>>>
    நன்றி ரிஷு

    திருவரங்கத்தில் வளர்ந்தவங்க பெரும்பாலும் கோலம் போடுவாங்க..இதுல அதிசியம் ஒண்ணுமில்ல எல்லாம் பழக்கம்தான்.
    செல்லத்தம்பி வாய்ப்புகொடுத்து வலைல போட்ருக்காரு அவரு கண்ணு உங்க கண்ணு ஏன் யார்கண்ணுமே படாது!!!

    ReplyDelete
  28. கெக்கே பிக்குணி said...
    பொங்கலோ பொங்கல் இங்கியும் ஆச்சு. மாதம் முழுசாப் படிக்கலை. எல்லாரும் சொல்றதைப் பார்த்தா படிச்சே ஆகணும் போலிருக்கு!!!

    ஆனால், இதுக்கு ஆஜர். மாலை மாற்றும் வைபோகம் மிகவே அற்புதம்! நன்றி. விசாகா ஹரி முழுமையாப் பார்க்கணும், பாக்கறேன்.

    எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்சது அந்த கோலம் தான். (இதுவா அரங்கப்ரியாவுது?) அதைச் சுற்றி செங்கல் போய் வைச்சிருக்காங்க, >>>>

    ஆமாம் கெ.பி..செங்கல்வச்சி எல்லை கட்டிடுவேன் பைக் கார் எல்லாம் கோலம்மேல போகாமல் சுத்திட்டுப்போகும்னுதான்!!!
    கஷ்டப்பட்டு கலர்போடில்லாம் சேர்ந்து போடறோமே ஒருநாளாவது இருக்கணுமென்னு அக்கறையும்! நன்றி நீஙக் ரசிச்சதுக்கு!

    ReplyDelete
  29. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //குமரன் (Kumaran) said...
    அடியேன்//

    இதெல்லாம் ஒப்புதுக்க மாட்டோம் கோதை தமிழ் வலைப்பூவின் ஓனரே!
    பங்குனி உத்திரம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் பேசுங்க!

    >>>>>>>>>>>>>>>>>>>>
    உண்மைல ஆண்டாள் அரங்கன்கோவில் வாசல்வந்ததுமே அரங்கன் அங்கு உதிக்க அவனுடன்ஜோதியாய்கலந்தாள் என்கிறார்கள்.ஆண்டாள் கல்யாணம் அவள் கண்ட கனவே என்கிறார்கள் சிலர். அதனால்பங்குனி உத்திரக்கலாயாணக்கதை வேறாக இருக்கும் என நினைக்கிறேன் ரவி

    ReplyDelete
  30. வல்லிசிம்ஹன் said...
    கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோலம், விசாகா ஹரியின் பாட்டு, ரவியின் கை வண்ணம்.
    அமோகம்.

    >>>>>>>>>>>>>>>
    நன்றி வல்லிமா கோலத்தை ரசிச்சதுக்கு

    ReplyDelete
  31. வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்!>>>>>

    நல்ல விளக்கம்


    \\இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கல் நாளன்று, ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
    இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!\\\


    புதியதகவல்!
    ஆனால் ஆண்டாள்கல்யானம் ராதாகல்யானம்போல ஏன் நிறைய இடங்களில் நடப்பதில்லை எனத்தெரியவில்லை.

    சிறந்தபதிவு ரவி! இதற்கான உங்கள் உழைப்பு அதற்கான நேரம் எல்லாம் பிரமிக்கவைக்கிறது...பின்னூட்டமிடவே அவகாசமின்றி என்னவோ பணிகளில் மூழ்கிவிடும் எனக்கு உங்களின் இந்த சேவை மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது. அரங்கன் அருள் என்றும்கிடைக்க வேண்டிவாழ்த்துகிறேன் உங்களை!

    ReplyDelete
  32. திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோலம் சூப்பர்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. //ஏன் ரெண்டு மாசத் தாமதம் கோதைத் திருமணத்தில்? மார்கழி, தை, மாசி போய்...பங்குனியில் தான் நடக்கிறது!

    ஆலயங்களில், சஷ்டி நோன்பு முடிவில் உடனே தேவானைத் திருமணம் நடந்து விடுகிறதே! மதுரையில் எப்படி?

    அதே போல வள்ளித் திருமண விரிவுரைகள் பல புகழ் பெற்று இருந்தாலும், ஆலயங்களில் வள்ளித் திருமணம்-ன்னு தனியா நடைபெறுவது இல்லையே! ஏன் குமரன்?
    //

    தெரியாது தெரியாது தெரியாது. :-)

    ReplyDelete
  34. அட்டகாசமான பதிவுகள்..
    ஆழமான கருத்துகள்..

    பிரமிக்க வைக்கும் உழைப்பு...

    கேயாரெஸ் -> மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. கவிநயா said...
    திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோலம் சூப்பர்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    1:53 PM, January 15, 2009
    >>>>நன்றி கவிநயா கோலம் சுப்பர்னு சொன்னதுக்கு

    ReplyDelete
  36. மணற்கொண்டு தெரு அணிந்து
    அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!>>>>

    அனங்கன் எனும் மன்மதனை ஆண்டாள் இங்கு கூறக்காரணம் என்ன தெரியுமா


    தேவி உபாசகர்களில் முதன்மையானவன் காமன்.
    தன் பதியின் கோபாக்னியில் வெந்து சாம்பலானவனை உயிர்ப்பிக்கவே அன்னை திருவிளையாடல்கள் சில நடத்தினாள்
    மன்மதன் உணர்வுமட்டுமே உடையவன் அவனுக்கு உடலில்லை

    உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் அன்னைஆதிசக்தி!

    காமன்முதல் சாதித்த புண்ணீயர் எண்ணிலர் போற்றுவர் என்கிறார் அபிராமிபட்டரும்.

    இத்தகைய சிறப்புபெற்ற காமனை அனங்கதேவா என்பது எத்தனைப்பொருத்தம் இங்கு!

    ReplyDelete
  37. //தேவி உபாசகர்களில் முதன்மையானவன் காமன்//

    ஆமாம்-க்கா!
    அம்பாளுக்கும் கரும்பு வில்-மலரம்பு உண்டு! மன்மதனுக்கும் உண்டு!

    அம்பாளை உபாசனையாக வழிபட ஏற்பட்ட இரு தத்துவங்களில் ஒன்று மன்மதன் தந்ததே! அதைத் தான் அகத்தியரும் பின்பற்றினார். ஸ்ரீ-சக்ர வழிபாட்டை முறைப்படுத்தி தந்ததும் அனங்கனே!

    ஒரு வகையில் முருகப் பெருமான் தோன்றவும் அனங்கனே காரணம்! முருகன் தோன்ற வேண்டித் தானே ஈசனின் தவம் கலைக்க நினைத்தான் அனங்கன்!

    இந்த அனங்கன் பெருமாளின் மகன் என்று சொல்வாரும் உண்டு!

    காமவேள் என்று போற்றப்படும் இவனைத் தவறாகப் புரிந்து கொண்டு, வெறும் இச்சைகளைத் தூண்டுபவன் மட்டுமே என்று இப்போது ஆகி விட்டான்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP