Sunday, February 22, 2009

சிவராத்திரி: சிவலிங்கப் பெருமாள்!

"என்னாது? சிவலிங்கப் பெருமாளா? என்னப்பா சொல்ல வர நீயி? சிவலிங்கத்தில் எப்படி பெருமாள் இருப்பாரு? என்ன தான் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொன்னாலும், சிவலிங்கம் என்பது ஈசனுக்கு மட்டுமே உரியதாச்சேப்பா! அதுல எப்படி....?"

"அட, சிவலிங்கம் என்றால் என்ன?-ன்னு முன்னமே சொல்லி இருக்கேனே, இந்தப் பதிவில்! அப்படியிருக்க, சிவலிங்கப் பெருமாள் என்பவர் இருக்க முடியாதா என்ன?"

"ஓ....புரியுது புரியுது! ஜிரா சொல்வது போல் கேஆரெஸ் மிக்ஸிங் டெக்னிக்! :)
* சிவலிங்கப் பெருமாள் = இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பூசை பண்ணும் பெருமாள்-ன்னு சொல்ல வர, சரி தானே?
* சிவலிங்கப் பெருமாள் = திருவனந்தபுரத்தில் சிவலிங்கத்தைக் கையில் வைத்து துயிலும் பெருமாள்-ன்னு சொல்ல வர, சரி தானே?"

"இல்லையில்லை! இந்தப் பெருமாள் சிவலிங்கத்திலேயே இருக்காரு! அதனால் தான் சிவலிங்கப் பெருமாள்!"


"டேய்...உனக்கு இதே பொழைப்பாப் போச்சு! நல்ல நாள் அதுவுமா, மகா சிவராத்திரி அதுவுமா, இப்படிக் குழப்பி விட்டா எப்படி?"

"ஓ...இன்னிக்கி மகா சிவராத்திரி-ல்ல? எங்க ஊரு பக்கத்தில் இருக்கும் பழமை வாய்ந்த கோயிலில் தான் இந்தச் சிவலிங்கம் இருக்கு = சிவலிங்கப் பெருமாள்!"

"ஓ...ஒங்க ஊரு கோயிலா? அப்படின்னா இது உன் வேலையாத் தான் இருக்கும்! நான் நம்ப மாட்டேன்!" :)

"அடிங்க! முழுக்கக் கேளு! இந்த ஆலயத்தை அப்பர் சுவாமிகள் பாடி இருக்காரு! அருணகிரியும் பாடி இருக்காரு! இதை எழுதணும்-ன்னு ரொம்ப நாளா நினைச்சேன்! ஆனா இன்று சிவராத்திரி நன்னாள் அதுவுமா இந்தப் பதிவைச் சொல்லணும்-ன்னு இருக்கு போல!
இது கேஆரெஸ் மிக்ஸிங் டெக்னிக்கும் இல்லை! அப்பர்-அருணகிரி மிக்ஸிங் டெக்னிக்கும் இல்லை! அந்த ஈசனே வந்து மிக்ஸ் ஆன டெக்னிக்! பார்க்கலாமா? :))


காஞ்சிபுரம் டு வேலூர் போகிற வழியில் காவேரிப்பாக்கம்-ன்னு ஒரு ஊர் வரும்! எங்கூரு வாழைப்பந்தலுக்கு, காஞ்சிபுரம் டு ஆரணி வழியாகப் போகும் போது இந்த ஊரு வரும்!
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் தான்! அங்கே தான் இருக்கு இந்த சிவலிங்கப் பெருமாள் அதிசயம்!

ஊரின் பெயர் = திருப்பாற்கடல்! கரபுரம் என்றும் சொல்வார்கள்!
முந்தைய காலங்களில் இந்த இடம் முழுக்க சிவாலயங்கள் தான்! மருந்துக்குக் கூட பெருமாள் கோயில்கள் இருக்காது! எங்க ஊராச்சே! அதான் சைவ சாம்ராஜ்ஜியம்! :)

புண்டரீக மகரிஷி என்பவர் யாத்திரை கிளம்பி, ஒவ்வொரு ஊராக வருகிறார்!
காஞ்சி வரதனைச் சேவித்த பின்னர் அப்படியே தன் யாத்திரையைத் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் வருகிறார்! ஒவ்வொரு நாளும் பெருமாள் கோயிலில் தரிசனம் முடித்த பின்னர் தான், அவருக்குப் பகல் வேளை உணவு! அதுவே அவர் வழக்கம்!

காவேரிப்பாக்கம்-திருப்பாற்கடல் கோயில்

அன்றோ பெரும் பசி! ஆனால் பெருமாள் கோயில் மட்டும் கண்ணுக்கு அகப்படவே இல்லை! எங்கு திரும்பினாலும் சிவாலயம் தான்! அது சரி, சிவாலயத்தில் பெருமாளைக் காண முடியாதா என்ன?
லிங்கத்தின் மத்திய பாகம் பெருமாள் ஆயிற்றே! அதற்கு மேலே தானே ஆவுடையாரும்-லிங்கமும் இருக்கின்றன! அப்படியும் காணலாமே!

அம்பலவாணரின் இடப் பாகம் பெருமாள் ஆயிற்றே!
* பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து என்று ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்களே!
* இடம் மால், வலம் தான், இடப்பால் துழாய், வலப்பால் ஒண் கொன்றை
என்று நாயன்மார்கள் பாடி இருக்காங்களே!

பெருமாளைச் சேவித்து விட்டுத் தான் சாப்பிடுவேன் என்றால், சிவாலயத்துக்குள் சென்று அம்பலவாணரின் "இடப் பக்கம் மட்டும்" பார்த்து விட்டுச் சாப்பிட்டு இருக்கலாமே?
ஹிஹி! மகரிஷி அல்லவா? நியமம், ஆச்சாரம், சாஸ்திரம்-ன்னு ரூல்ஸை மட்டுமே பேசுவாரு போல! அதான் ஆழ்வார் நாயன்மார்களின் ஈர உள்ளம், அந்த ரூல்ஸூக்குத் தெரியாமல் போயிற்று! :)


சாத்திர விதிகள் பேசினாலும், அவனும் பக்தன் தானே? முனிவர் பசியால் வாடுவது கண்டு ஓடோடி வருகிறான் இடப்பக்கத்து இடையன்!

"என்ன முனிவரே? இப்படிக் களைச்சிப் போய் இருக்கீங்க? பசி வயிற்றைக் கிள்ளுதா?"

"ஆமாம் பெரியவரே! உங்களைப் பார்த்தாலே பழுத்த வைணவர் போல் இருக்கிறதே! இங்கே ஏதாச்சும் பெருமாள் கோயில் இருந்தால் சொல்லுங்களேன்! தரிசனம் முடித்துத் தான் சாப்பிட வேண்டும் என்பது அடியேன் நியம நிஷ்டை!"

"பெருமாள் கோயில்-ன்னா அது என்னிக்குமே காஞ்சிபுரம் தான் முனிவரே?
கோயில்=திருவரங்கம்! திருமலை=திருவேங்கடம்! பெருமாள் கோயில்=காஞ்சி! காஞ்சிபுரம் இங்கிருந்து பத்து கல் தூரமாச்சே! அது வரைக்கும் பசியோடு நடக்க முடியுமா உம்மால?
பசியால் காஞ்சிப் போயிருக்கும் நீர், காஞ்சி போகவும் முடியுமோ?"

"என் பசியை வைத்து வார்த்தை ஜாலம் செய்கிறீரா? நான் கேட்டது இங்கு ஏதாச்சும் பெருமாளின் கோயில் இருக்கிறதா என்று தான்!"

"ஓ...அப்படிக் கேட்டீரா? மன்னிக்கவும்! மன்னிக்கவும்! இப்படி இவ்வளவு பசியை வைத்துக் கொண்டு பெருமாள் கோயிலைத் தேடி அலைஞ்சி உயிரை விட்டால், அந்த அவப்பெயர் பெருமாளுக்கு அல்லவா வரும்! அதை யோசித்தீரா முனிவரே?"

"அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! எனக்குச் சாஸ்திரமும் தான் முக்கியம்! சமயாச்சாரியார்கள் என்னும் ஏகாங்கிகள், ஆலயத்தில் காலா சாந்தி ஆகாது, உதர சாந்தி செய்யக் கூடாது என்பது சாஸ்திர விதி! முடிந்தால் கோயில் எங்கே என்று சொல்லுங்கள்! இல்லையென்றால் நான் என் வழியில் போய்க் கொள்கிறேன்!"

"ஆகா! பொறுமை! பொறுமை! அதோ இருக்கே...அந்த வெள்ளைக் கோபுரம்! அது பெருமாள் கோயில் தானே..."
பெரியவர் சொல்லி முடிக்கலை....மகரிஷி ஓடியே போகிறார்! பெருமாளைச் சேவிப்பதை விட, பசியின் வேகம் தான் அந்த ஓட்டத்தில் தெரிகிறது! :))
ஆனால் உள்ளே போன அதே வேகத்தில் திபுதிபு என்று வெளியே ஓடி வருகிறார் முனிவர்!

"அச்சோ! அச்சோ! அடேய்...அது சிவன் கோயில்! உள்ளே லிங்கம் இருக்கு! எதுக்கு என்னை இப்படி அலைக்கழிக்க விடுகிறாய்? உனக்குத் தெரியலை-ன்னா தெரியலை-ன்னு சொல்லி விடேன்!"

"இல்லை மகரிஷி! அது பெருமாள் கோயில் தான்! நேற்று வரைக்கும் அப்படித் தானே இருந்துச்சி! இன்னிக்கு மட்டும் திடீர்-ன்னு மாறிடுமா என்ன?
உங்களுக்குத் தான் பசியில் பார்வை மங்கிப் போச்சோ என்னவோ? ஞானக் கண் இருக்குறவங்களுக்கு எல்லாம் ஊனக் கண் வேலை செய்யாது போல! ஹா ஹா ஹா!"

"தினப்படி அக்னி ஹோத்ரம் செய்யும் என்னிடம் கேலி பேசுகிறாயா? இதோ பிடி சாபம்..."

"ஐயோ முனி சிரேஷ்டரே! மன்னிச்சிகோங்க! கேலி அல்ல! நிஜமாலுமே அது பெருமாள் கோயில் தான்! வாங்க, நான் கொண்டு போய் காட்டுகிறேன்!"


ஊர் மக்கள் எல்லாரும் இந்தச் சண்டையில் கூடி விட்டனர்! அத்தனை பேருக்கும் வியப்பு! அது சிவன் கோயில் தானே! யார் இந்த நாமக்காரப் பெரியவர்? இப்படி வல்லடி பண்றாரு! கூட்டிட்டுப் போய் வேற காட்டுறேன்-ன்னு இவ்வளவு உறுதியாச் சொல்றாரே!

மக்கள்: "மகரிஷி! இந்த ஊர் மக்கள் நாங்க! அது சிவன் கோயில் தான்! இந்தப் பெரியவர் யார்-ன்னே தெரியலை! ஊருக்குப் புது முகமா வேற இருக்காரு!
ஆனாலும் உங்களை விட வயதில் பெரியவர் என்பதால் அவர் சொல்வதைக் கேட்டுத் தான் பார்ப்போமே! உள்ளே போய் பார்க்கலாம் வாங்க!"

புண்டரீகர்: "பழுத்த வைஷ்ணவ தர்மம்! மறந்தும் புறம் தொழேன்! சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு! அதன்படி தான் நடப்பேன்! இம்மி கூட பிசக மாட்டேன்! என்னைச் சிவாலயத்துக்குள் கால் வைக்க எல்லாரும் சதி செய்கிறீர்களா என்ன?"

பெரியவர்: "உள்ளே வந்தால் தானே என்னால் அது பெருமாள் கோயில்-ன்னு நிரூபிக்க முடியும்? அநாவசியமாக என்னைப் பொய்யன் என்று குற்றம் சாட்டாதீர்கள்! அந்தப் பாவம் முனிவரே ஆனாலும் சும்மா விடாது! நிரூபிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும்!"

மக்கள்: "இதுவும் சரியாகத் தான் படுகிறது! ஒருவருக்கு நிரூபிக்கும் வாய்ப்பு கொடுப்பது தான் சட்டம், தர்மம் எல்லாம்! வழக்கைச் சீக்கிரம் முடிக்கலாம்! எல்லாரும் உள்ளே வாங்க!"

உள்ளே, கருவறையில்...
சிவலிங்க அடிப்பாகம்! வட்டமான ஆவுடையார்! ஆனால், ஆனால், மேலே, மேலே..... இது என்ன மாயம்? இது என்ன விந்தை?
வட்டமான ஆவுடையாரில் இருந்து, நீளமான உருவம் போல் ஒன்று எழுகிறதே!
பார்க்க சிவலிங்கம் போல் இருக்கு! ஆனால் இது சிவலிங்கம் இல்லையே!

ஆகா...சிறு கரங்களில், சிறு சங்கு-சக்கரம்! இது மேலே பெருமாளே தான்!
இல்லையில்லை! இது கீழே சிவலிங்கமே தான்!
இல்லையில்லை! இது சிவலிங்கப் பெருமாள்! சிவலிங்கப் பெருமாள்!

சிவலிங்கத்தில் இருந்து எழும் பெருமாளுக்கு, திருவேங்கடமுடையானாக அலங்காரம்!


நேற்று வரை சிவலிங்கமாக அல்லவா இதைப் பார்த்தோம்? இன்று எப்படி இப்படி ஒரு நுணுக்கமான மாற்றம்? கூர்ந்து பார்த்தால் அல்லவா தெரிகிறது! - ஊர் மக்கள் வியக்க, லிங்கத்தின் ஆவுடையாருக்கு மேலே பெருமாளின் உருவமாய் நின்று கொண்டிருந்தான் இறைவன்!

இது வரை இப்படி ஒரு பெருமாளை எந்தக் கோயிலிலும் பார்த்ததில்லையே என்ற வியப்பில் ஆழ்ந்தார் புண்டரீக மகரிஷி! ச்சே...வயதான பெரியவரைக் கோபித்துக் கொண்டோமே என்று திரும்பினால், ஆளைக் காணோம்! பசியாற்ற வந்தாயோ பரந்தாமா?
வயிற்றுப் பசியை விட, மனதின் பேதப் பசியை ஆற்றத் தான் இப்படி வம்புகள் செய்தாயோ? முனிவருக்கு நியமம், ஆச்சாரம் என்றால் என்ன இப்போது தான் புரிய ஆரம்பித்தது!

* தரிசனம் முடிஞ்சி சாப்பிடணுமே என்ற எண்ணத்தோடேயே தரிசனம் செய்வதா ஆச்சாரம்? எம்பெருமானின் மனசை வாடப் பண்ணக் கூடாதே என்பது தானே ஆச்சாரம்!
* நமக்குப் பாவம் வந்தாலும் சரி, அவன் பேருக்குக் களங்கம் வரலாகாது என்பது தானே ஆச்சாரம்!
* கோபிகைகள் தங்கள் காலடி மண்ணை, கண்ணன் தலைக்குத் துணிந்து கொடுத்து அனுப்பினார்கள் அல்லவா! அந்தத் திருவுள்ள உகப்பு தானே ஆச்சாரம்! இதோ குமரனின் பதிவு!

இன்றும் திருப்பாற்கடல் என்னும் இந்தத் தலத்தில், சிவலிங்கப் பெருமாளான இவரைக் கண்ணாரக் காணலாம்! மேலே பெருமாளும், கீழே லிங்கமும் ஆன இந்தத் திருமேனி அரிதிலும் அரிது!
இதன் அருகிலேயே அரங்கநாதப் பெருமாளும், மார்க்கபந்து ஈஸ்வரரும் (கரபுரீஸ்வரர்) தனிக் கோயில்களும் கொண்டு உள்ளனர்!

ஆலய முகப்பு

அமைதியான கிராமச் சூழல் உள்ள கரபுரம் என்னும் திருப்பாற்கடல்!
கண்ணார் நுதலார் "கரபுரமும்", காபாலியார் அவர்தம் காப்புக்களே - என்பது அப்பரின் காப்புத் தேவாரம் - ஆறாம் திருமுறை!
அப்பரின் தேவாரப் பாடல் பெற்று, இனிமையாக விளங்கும் சிவலிங்கப் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தை, சிவராத்திரி அதுவுமாய் இந்தப் பதிவிலேயே கண்டு களியுங்கள்!

சிவராத்திரி அன்று ஈழத்தின் நிம்மதிக்கு, இந்த இரவில் தனியாக வேண்டிக் கொள்ளுங்கள்!



இப்படி சிவலிங்கத்தின் மேல்பாகம் பெருமாள் ஆனது என்றால்...ரிவர்ஸில்,
மொத்த பெருமாள் உருவமும் சிவலிங்கம் ஆனது தனிக்கதை!
குற்றாலத்தில் இன்று நாம் காணும் குற்றாலநாதர் தான் அவர்!


அகத்தியர் குற்றாலச் சாரலில் இருந்த அழகிய நன்னகரப் பெருமாளைக் காண ஆசைப்பட்டார்! ஆனால் அங்குள்ள வைஷ்ணவ சாஸ்திர சிகாமணிகள் சிலர், அகத்தியரை உள்ளே விடக் கூட மறுத்தார்கள்! எதுக்காம்? அவர் உடம்பு முழுக்க விபூதி பூசி இருந்தார்! அதான் காரணம்! :) (இன்று சில கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு-ன்னு போட்டிருக்காங்க-ல்ல? அது போல-ன்னு வச்சுக்குங்களேன்!)

அகத்தியர் பெரும் சித்தரும் தமிழ் முனிவரும் ஆயிற்றே! ஆனால் அவர்களுக்கோ அதெல்லாம் முக்கியமில்லை!
அடியார்கள் முக்கியமில்லை! ஆச்சாரமே முக்கியம்! புறச் சின்னங்களில் மட்டுமே ஆடும் இவர்களுக்குத் தக்க பாடத்தை உணர்த்துவது எப்படி?
அந்தத் தமிழ்க் கடவுள் மாலவனைக் காண, இந்தத் தமிழ்க் கடவுள் முருகனே அகத்தியருக்கு யோசனை சொன்னான்! அவன் தான் இலஞ்சி முருகன்!

இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் உள்ள சிற்றூர்! அந்த முருகன் தான், அகத்தியரை வைணவச் சின்னங்கள் தரிக்கும் படிச் செய்தான்! அவரும் மால்மருகன் சொன்னவாறே புறச் சின்னங்கள் தரித்து விட்டார்! வைணவக் காப்பில் ஆளே மாறிப் போயிருந்தார்!
இவர்களும் ஏதோ வைஷ்ணவ மகரிஷியாக்கும்-ன்னு நினைச்சி மரியாதைகள் பல செய்து வழியை விட்டார்கள்! நேரே கருவறைக்குள் பூசிக்கச் சென்ற அகத்தியர், பெருமாளின் அழகில் மயங்கி நின்று விட்டார்! நன்னகரப் பெருமாள்! நின்ற திருக்கோலம்! ஆனால் முகத்திலோ வாட்டம்!

"அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ" என்று எப்போதும் அடியவர்களை முதலில் நிறுத்தும் பெருமாளிடம், அடியவர் செல்லத் தடை விதித்தால் வருத்தம் வாராதா? தாயிடம் ஓடி வரும் குழந்தையைத் தடுத்துப் பாருங்கள், என்ன நடக்க்கும் என்று தெரியும் அல்லவா? :)

"சிவனார் திருமணக் காட்சி காண தென்றிசை வந்த முனியே, இந்தத் திவ்ய மங்கள விக்ரகத்தைக் காணத் தானே அவ்வளவு ஆசை கொண்டீர்கள்? நம்மை மேலிருந்து கீழாக உமது கையால் குறுக்கி, சிவலிங்கம் போல் ஆக்கி விடுங்கள்! அப்போது என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்?" என்று கேட்டுக் கொண்டான் பெருமாள்!

அகத்தியருக்கோ கலக்கம்! யாரையோ அடக்கப் போய், ஆகம விதிகளுக்கு இது முரணாகப் போகுமோ என்ற சந்தேகம்! அதையும் இறைவனே தீர்த்து வைத்தான்!
"மகுடாகமம் என்ற ஒன்று உள்ளதே! அதை என் மருகன், இலஞ்சி முருகன் உமக்குச் உபதேசித்து இருப்பானே? அதன்படி இப்படி மாற்றி அமைக்கலாம் அல்லவா?" - அகத்தியருக்குத் தூக்கி வாரிப் போட்டது! "ஓ...இவர்கள் பேசி வைத்துக் கொண்டு விளையாடுகிறார்களோ?"


தன் கைகளால் பெருமாள் திருமேனியைத் தலையில் அழுத்தலானார். அழுத்தி அழுத்தி, குறுக்கிக் குறுக்கி, பெருமாளைச் சிவலிங்கம் ஆக்கி விட்டார்!
குறுக்கிக் குறுக்கி ஆனதால் குறு+ஆலம் = குற்றாலம் ஆனது! அடியாரின் பொருட்டு நன்னகரப் பெருமாள் குறுகிப் போனார்! குற்றாலநாதர் ஆனார்!

தமிழ் முனிவன் அகத்தியனுக்கு நேர்ந்த அவமானம், தமிழ்க் கடவுளான மாலவனுக்கே நேர்ந்த அவமானம் அல்லவா? குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன், குறுகி விட்டான்! உருகி விட்டான்!
அடியார்களை இகழ்ந்தவர்கள் ஆண்டவனையே இழந்தார்கள்!

இன்றும் லிங்கத் திருமேனியில் கைத் தழும்புகளைக் காணலாம்!
தலையால் குறுக்கப் பெற்ற இறைவனின் வலி தீர, குற்றாலத்துப் பக்தர்கள் இன்றும் இறைவனின் முடியில் தைலம் தடவுகிறார்கள்! சுக்கு நீரை மருந்தாக்கி கஷாயம் என்னும் "குடினி நிவேதனம்" செய்கிறார்கள்!
நேரமாவதைக் கண்டு வைஷ்ணவ சிகாமணிகள் கதவைத் தட்ட, அகத்தியர் வெளியில் வந்தார்! கருவறையில் லிங்கத்தைக் கண்ட வைஷ்ணவ அந்தணர்களுக்கு ஆயிரம் இடிகள் தலையில் இறங்கியது!
அகத்தியர் மேல் மந்திரம் ஏவி விட்டு, கயிற்றால் கட்டப் பாய்ந்தார்கள்! ஆனால் வாதாபியைச் சீரணித்த தமிழ் முனிவர் இவர்களையா சீரணிக்க மாட்டார்? மந்திர ஏவல் பொய்யாகி விட, தங்களை மன்னிக்குமாறு அழுதனர்! ஆனானப்பட்ட அகத்தியரே ஆகமத்தை மீறலாமா? என்று கதறினர்!

அகத்தியர் அவர்களுக்கு இறைவன் திருவுள்ளத்தை எடுத்துச் சொல்லி, இவர் குற்றாலநாதர் என்றே அழைக்கப்படுவார் என்று சொல்லினார்! உடன் இருந்த திருமகளையும் பூமகளையும், குழல்வாய்மொழி அம்மையாகவும், பராசக்தி பீடமாகவும் ஆக்கினார்!
முன்பிருந்த நன்னகரப் பெருமாளுக்குப் பக்கத்திலேயே தனி ஆலயம் ஒன்றை உண்டாக்கிப் பெருமாளைக் கொண்டாடினார்!
இன்றும் குற்றாலநாதர் சன்னிதியில் வருட உற்சவத்தின் போது, ஈசனுக்குப் பெருமாளாகவும் அலங்காரம் செய்து உற்சவம் நடத்துகிறார்கள்!

முனியே நான்முகனே "முக்கண் அப்பா" என்று ஆழ்வார் பாடியபடி, இன்றும் பெருமாள் முக்கண் அப்பனாகக் குற்றாலத்தில் ஈஸ்வரனாகக் காட்சி கொடுக்கிறான்!


* சிவலிங்கத்தில் பெருமாள் தோன்றிய கதையும்
* பெருமாளில் சிவலிங்கம் தோன்றிய கதையும்
பார்த்தீர்கள் அல்லவா? அடியவர் நன்மைக்காக ஆண்டவனே தோற்றம் மாறுவான் - இந்தச் சிவராத்திரி நன்னாளில் இதை நினைவு கொள்வோம் மக்களே!
அடியவர்கள் அன்பின் முன்னிலையில் எந்த ஆச்சார விதிகளும் நில்லாது! பெருமானின் திருவுள்ள உகப்பே காலமெல்லாம் கடந்து நிற்கும்!

அடியவர்களைப் பேசும் இவ்வேளையில், நாயன்மார்கள் போற்றிப் பாடிய ஈழ மண்ணுக்கு நிம்மதி வருமா?
இந்தச் சிவன் இரவில், ஈழச் சீவனுக்கு நிம்மதி கேட்போம்!

சிவலிங்கப் பெருமாள் திருவடிகளே சரணம்!
இல்லக விளக்கது, இருள் கெடுப்பது! நல்லக விளக்கது, நமச் சிவாயவே!

திருச்சிற்றம்பலம்!

36 comments:

  1. நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில்/ பெயரில் நீங்காதான் தாள் வாழ்க!

    ReplyDelete
  2. காவேரிப்பாக்கம் வழியா பலமுறை போய் இருக்கேன். ஆனா இந்த கோயிலுக்கு போனதில்லை. அப்பா போலாம் போலாம்னு சொல்லுவார். இந்த வருடம் போகமுடியாதான்னு பாக்கலாம்.

    அடிக்கடி இந்த வழில போகும் போது தோணும் கேள்விய இங்க கேக்கறேன். காவேரி எங்கயோ ஓடுது இந்த ஊருக்கு போய் ஏன் காவேரிப்பாக்கம்னு வந்துது. கண்டுபுடிச்சு சொல்லுங்க தல. ஆராய்ச்சி பண்ண ஒரு வேலைய குடுத்துட்டோம்ல...;-))

    ReplyDelete
  3. //தி. ரா. ச.(T.R.C.) said...
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்/ பெயரில் நீங்காதான் தாள் வாழ்க!//

    சந்திரசேகரப் பெருமான் திருவடிகளே சரணம்! :)

    சிவராத்திரி வாழ்த்துக்கள் திராச! சிங்கைச் சிவராத்திரி எப்படி?

    ReplyDelete
  4. //Sathia said...
    காவேரிப்பாக்கம் வழியா பலமுறை போய் இருக்கேன்.//

    ஓ..பெங்களூர் போற வழி வேற இல்லையா சத்தியா? :)

    //அடிக்கடி இந்த வழில போகும் போது தோணும் கேள்விய இங்க கேக்கறேன். காவேரி எங்கயோ ஓடுது இந்த ஊருக்கு போய் ஏன் காவேரிப்பாக்கம்னு வந்துது//

    அதானே! ஏன் தல இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? :)

    //கண்டுபுடிச்சு சொல்லுங்க தல. ஆராய்ச்சி பண்ண ஒரு வேலைய குடுத்துட்டோம்ல...;-))//

    ஆராய்ச்சியா? அதெல்லாம் குமரன், ஜிரா, மெளலி அண்ணா, ஷைலஜா அக்கா, ராகவ் போன்ற அறிஞர்கள் செய்ய வேண்டியது!
    மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! :))

    ReplyDelete
  5. //கோவி.கண்ணன் said...
    நல்ல தகவல்கள் !
    //

    நன்றி-ண்ணே!
    சிவராத்திரி அதுவுமா என்ன சாப்பிட்டீங்க? :)

    ReplyDelete
  6. ஆராய்ச்சியா? அதெல்லாம் குமரன், ஜிரா, மெளலி அண்ணா, ஷைலஜா அக்கா, ராகவ் போன்ற அறிஞர்கள் செய்ய வேண்டியது!
    மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! :))

    9:36 PM, February 22, 2009
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


    அப்பாவிச்சிறுவனே!
    இந்தமாதிரில்லாம் அபூர்வதகவல்களோடு மக்களை இழுக்கிறமாதிரில்லாம் ஷைலஜாக்காக்கு எழுதவே வராது!
    அருமையான பதிவு !!!காஞ்சிக்குப் போகப்போறேன் அடுத்தமாசம் அப்போ இந்தக்கோயில்லுக்கு போய்ட்டுதான் மறுவேலை!
    என் வாய்ல எப்போதுமே மண் இல்லை அரியும் சிவனும் ஒண்னு என அறிந்தவள் ஆச்சே நான்!

    ReplyDelete
  7. மஹா சிவராத்திரி நன்னாளில் அருமையான இரு கோவில்களைப் பற்றி கூறியுள்ளீர்கள் KRS ஐயா.

    கோவை மாவட்டம் காரமடையில் பெருமாள் லிங்க வடிவத்திலேயே சேவை சாதிக்கின்றார். அவருக்கு ரங்கநாதர் என்னும் திருநாமம்.

    சமயம் கிடைக்கும் போது அவரைப் பற்றி அடியேன் எழுதுகின்றேன்.

    //நன்றி-ண்ணே!
    சிவராத்திரி அதுவுமா என்ன சாப்பிட்டீங்க? :)//

    காற்று????

    ReplyDelete
  8. இங்கு பேயாழ்வாரின் பாசுரம் ஒன்றினை சொல்லவேண்டும்
    அது திருப்பதியைப்பற்றியது

    திருப்பதியிலே காட்சிதருவது பெருமாளா இல்லை திருமாலும் சிவனும் இணைந்து ஓர் உருவமாகக்காட்சிதருகின்றனராம்!

    பாடல் இது

    தாழ்சடையும் நீள்முடியும்
    ஒண்மழுவும் சக்கரமும்
    சூழ் அரவும் பொன் நானும்
    *தோன்றுமால்- சூழும்
    தரண்டருவி பாயும்
    திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டுருவும் ஒன்றாய்
    இசைந்து!


    தாழ்சடை என்பது சிவபெருமானின் நீண்ட சடை! நீள்முடி என்பது திருமாலின் உயரமான கிரீடம்!
    இவற்றோடு சிவபெருமானின் ஒண்மழு அதாவது ஒளிமிக்க மழுவாயுதம் தெரிகிறதாம், அதோடு திருமாலின் சக்கரமும் தெரிகிறதாம்!
    சிவனின் அரவாகிய பாம்பும் திருமாலின் தங்க அரைஞாணும்

    ஒருமைப்பாடு என்பது மனித சமுதாயத்தோடு தெய்வத்தோற்றங்களிலும் எப்படி இணைந்து ஒருமை பெறுகிறது பாருங்கள்!

    ReplyDelete
  9. தாழ்சடையும் நீள்முடியும்
    ஒண்மழுவும் சக்கரமும்
    சூழ் அரவும் பொன் நானும்
    *தோன்றுமால்- சூழும்
    திரண்டருவி பாயும்
    திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டுருவும் ஒன்றாய்
    இசைந்து!


    (பாடலில்
    \திரண்டு \என்பதை
    \தரண்டு\
    என தட்டச்சிவிட்டேன் மன்னிக்கவும்

    ReplyDelete
  10. பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்...

    நன்றி..

    ReplyDelete
  11. //ஷைலஜா said...
    அப்பாவிச்சிறுவனே!
    இந்தமாதிரில்லாம் அபூர்வதகவல்களோடு மக்களை இழுக்கிறமாதிரில்லாம் ஷைலஜாக்காக்கு எழுதவே வராது!//

    பெஹாக் ராகத்தில் சூப்பராப் பாடறீங்களேக்கா! எழுத்தினும் இசையே மக்களை இழுக்கும்! :)

    //காஞ்சிக்குப் போகப்போறேன் அடுத்தமாசம் அப்போ இந்தக்கோயில்லுக்கு போய்ட்டுதான் மறுவேலை!//

    எங்கூரு வாழைப்பந்தலுக்கும் உங்க வருகையை அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)

    //என் வாய்ல எப்போதுமே மண் இல்லை அரியும் சிவனும் ஒண்னு என அறிந்தவள் ஆச்சே நான்!//

    ஹிஹி!
    பதிவுலகில் மறந்தும் புறம் தொழாதவர்கள் வைணவர்கள் இல்லைக்கா! வேற சிலரு! :)))

    ReplyDelete
  12. //Kailashi said...
    மஹா சிவராத்திரி நன்னாளில் அருமையான இரு கோவில்களைப் பற்றி கூறியுள்ளீர்கள் KRS ஐயா//

    நான் ஐயாவா கைலாஷி ஐயா? :)

    எங்கூரு ஆலயம் பத்தி ரொம்ப நாளாச் சொல்லணும்-ன்னு இருந்தேன்! சிவராத்திரி புண்ணியம் கட்டிக் கொண்டது! இதற்கு அருகில் இன்னொரு அருமையான சிவத் தலம் இருக்கு!
    சம்பந்தர் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக மாற்றிய தலம்! செய்யாறு-ன்னு இப்ப சொல்றோம்! திருவத்திபுரம், திருவோத்தூர் என்பது பழைய பெயர்!

    //கோவை மாவட்டம் காரமடையில் பெருமாள் லிங்க வடிவத்திலேயே சேவை சாதிக்கின்றார். அவருக்கு ரங்கநாதர் என்னும் திருநாமம்//

    காரமடை ரங்கநாதர் தானே! அருமை! அருமை!

    //சமயம் கிடைக்கும் போது அவரைப் பற்றி அடியேன் எழுதுகின்றேன்//

    எழுதுங்கள், எழுதுங்கள்! பல புகைப்படங்களோடு! :)

    //
    //நன்றி-ண்ணே!
    சிவராத்திரி அதுவுமா என்ன சாப்பிட்டீங்க? :)//

    காற்று????//

    ஹா ஹா ஹா!
    காற்று வெளியிடைக் காளத்தியப்பா-ன்னு கோவியைப் பாடச் சொல்லிருவோம்!

    ReplyDelete
  13. உரையாடல் எல்லாம் அருமையா அமைச்சிருக்கீங்க,
    மகாசிவராத்ரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    நல்ல தகவல்கள் !
    //

    நன்றி-ண்ணே!
    சிவராத்திரி அதுவுமா என்ன சாப்பிட்டீங்க? :)
    //

    என் மனைவி நல்லா சமைப்பாங்க, களியாக ஆகாது ! :)

    அப்பறம்... எனக்கு சிவராத்ரி தேதியே வேற.

    ReplyDelete
  15. அருமையான பதிவு!

    அய்யா கேயாரெஸ்! ஒரு சந்தேகம்!

    தேவாரம் எழுத ஆரம்பிக்கும் முன்னே அடி எடுத்து கொடுத்த நடராஜர் (சிவன்) திருசிற்றம்பலம் என அடியிடுத்து கொடுத்த அந்த ஓலைச்சுவடி அதாவது சிவபெருமான் கையெழுத்து சிதம்பரத்தில் இருந்து கொண்டு போகப்பட்டு இப்போது பாண்டிச்சேரியில் ஒரு மடத்தில் இருப்பதாகவும் அது இந்த சிவராத்திரியில் மட்டுமே திறக்கப்படுவதாகவும் அந்த பெட்டியின் உள்ளே எல்லா சிவராத்திரியின் போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்து மூடி விடுவதாகவும் பின் அடுத்த சிவராத்திரியின் போது அதே பெட்டி திறக்கப்படும் போது அந்த பழம் வைத்த மாதிரியே அதே பொலிவோடு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

    நான் கேள்விப்பட்ட வரை அது உண்மை தான் என பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

    இது பற்றி எதுவாவது தெரியுமா?

    ReplyDelete
  16. //ஷைலஜா said...
    திருப்பதியிலே காட்சிதருவது பெருமாளா இல்லை திருமாலும் சிவனும் இணைந்து ஓர் உருவமாகக்காட்சிதருகின்றனராம்!//

    சூப்பர்-க்கா! ஆனால் இதுல தான் ஒரு வம்பே பின்னாளில் வந்தது! :))

    //தாழ்சடையும் நீள்முடியும்
    ஒண்மழுவும் சக்கரமும்
    சூழ் அரவும் பொன் நானும்
    *தோன்றுமால்- சூழும்
    தரண்டருவி பாயும்
    திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டுருவும் ஒன்றாய்
    இசைந்து!//

    இதை எம்.எஸ். பாடிக் கேட்கும் போது அவ்வளவு இனிமை! இசையில்லாத வெண்பா என்றாலும், இசை கோர்த்து பாடுவாங்க!

    //ஒருமைப்பாடு என்பது மனித சமுதாயத்தோடு தெய்வத்தோற்றங்களிலும் எப்படி இணைந்து ஒருமை பெறுகிறது பாருங்கள்!//

    மிகவும் உண்மை-க்கா!
    இறைவன் ஒருமைக்காக நிற்கிறான்!
    நாம் (வீண்)பெருமைக்காக நிற்கிறோம்!

    வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டி இப்படி இறைவன் நின்றால்...
    ஒற்றுமையில் வேற்றுமை காண்பார்கள் நம்மவர்கள்!

    பேயாழ்வார் ஒற்றுமைக்காகப் பாடப் போய், அதுவே வம்பில் முடிந்தது-ன்னு சொன்னேன் அல்லவா?

    திருமலையில் இருப்பது பெருமாளே அல்ல! சிவன் தான்-ன்னு சொல்லி, கலாட்டா செஞ்சி, ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களைத் துரத்தியடித்தார்கள்! அப்போது இது சிவன் தான் என்று பொய்யாக எடுத்துக்காட்ட இதே பேயாழ்வார் பாட்டைத் தான் உதாரணம் காட்டினார்கள்! :)))

    வேற்றுமையில் ஒற்றுமை காட்ட வந்த பாசுரம், ஒற்றுமையை வேற்றுமை ஆக்கியது! :))

    அப்புறம் தான் இராமானுசர் வந்து திருவேங்கடமுடையான் ஸ்ரீமன் நாராயணனே என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிலைநாட்டினார்!

    ReplyDelete
  17. * தாழ்சடையும் நீள்முடியும் = தாழ் சடை என்பது கானகத்து இராமனுக்கும் உரியது!
    * ஒண்மழுவும் சக்கரமும் = மழு பரசு ராமனுக்கும் உரியது!
    * சூழ் அரவும் பொன் நாணும் = அரவம் என்னும் நாகாபரணம் பரந்தாமனுக்கும் உரியது! சென்றால் குடையாம்...பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு என்று பொய்கையாழ்வார் பாசுரம்!

    //தோன்றுமால்// = "தோன்றும்" என்ற சொல் மிகவும் முக்கியம்! அங்கு ஒண்மழு இல்லை! ஆழ்வாருக்காக இரண்டு உருவும் ஒன்றாய்த் "தோன்றும்"! ஒற்றுமைக்காகத் "தோன்றும்"! முனியே நான்முகனே முக்கண் அப்பா என்று நம்மாழ்வாருக்குத் தோன்றியது போல் தோன்றும்!

    திருமலைமேல் "எந்தைக்கு" = ஆழ்வாரின் "எந்தை" யார்? பெருமாள் அல்லவா?

    அதனால் திருமலை மேல் எந்தை என்று பாடுவதால், திருமலை மேல் பெருமாள்....அவருக்கு இரண்டுருவும் ஒன்றாய்
    இசைந்து என்று பொருள் கொள்ள வேணும் என்று இராமானுசர் எடுத்துரைப்பார்! ஒற்றுமைக்குள் வேற்றுமை ஏற்படுத்தாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்வார்!

    திருமார்பில் அன்னை அலைமகள் இருப்பதைக் காட்டி, வேறொரு மூர்த்திக்கு அலைமகளை மார்பில் ஆக்கினால் பெரும் தவறு என்றும் காட்டுவார்!

    ஆனால் நம் மக்களுக்கு நல்லறிவு காதில் விழுமா? கடைசியில் மேஜிக் பண்ணாத் தானே நம்புவாங்க? :)))
    இறுதியில் சங்கும் சக்கரமும், மானும் மழுவும் இறைவன் முன்னே வைத்து, எது உன் திருவாயுதமோ அதையே ஏற்றுக் கொள் என்று சொல்ல, இறைவனே சங்கு சக்கரங்களை ஏற்றுக் கொள்வான்! இப்படியாக ஒரு பெரும் பிரச்சனை ஓயும்! :)

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    தாழ்சடையும் நீள்முடியும்
    ஒண்மழுவும் சக்கரமும்//

    பெருமாளுக்குத் திருமலையில் வில்வ அர்ச்சனையும் உண்டு-க்கா! உடனே இதுவும் பெரும் பிரச்சனை ஆகியது! :))

    மகாலக்ஷ்மித் தாயாருக்கு வில்வ அர்ச்சனை எப்பமே உண்டு!
    வில்வ தள அர்ச்சனப் ப்ரீதிகாயை நமஹ-ன்னு அவளுக்குத் துதியே உண்டு!

    மேலே திருமலையில் தாயார் சன்னிதி தனியாக இல்லாததால், திருமார்புத் தாயாருக்கு மட்டும் வில்வார்ச்சனை செய்வது இன்றும் வழக்கம்!

    ஆனால் இதையெல்லாம் சொல்லாது, திருப்பதியில் பெருமாளுக்கு வில்வார்ச்சனை என்று மட்டும் சொல்லுங்கள்! அடுத்து என்ன நடக்கும்? ஹா ஹா ஹா! :)

    யார் எப்படியோ, நாம் வேற்றுமையிலும் ஒற்றுமையே காண்போம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து!

    ReplyDelete
  19. நான் சொல்ல நினைச்சதை எல்லாம் ஏற்கனவே மத்தவங்க சொல்லிட்டாங்க. :-)

    காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு போயி பாருங்க. ஏழை எளிய மக்கள் கிட்ட ரொம்ப செல்வாக்கு அவருக்கு. :-)

    ReplyDelete
  20. //அடியார் said...
    பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்...//

    நல்லது அடியார்! நன்றி!

    ReplyDelete
  21. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    உரையாடல் எல்லாம் அருமையா அமைச்சிருக்கீங்க,
    மகாசிவராத்ரி வாழ்த்துக்கள்!//

    இனிய சிவனிரா வாழ்த்துக்கள் ஜீவா!
    உரையாடல் எல்லாம் பெருமாள் பேசும் போது ஒட்டுக் கேட்டது! :))

    ReplyDelete
  22. //கோவி.கண்ணன் said...
    என் மனைவி நல்லா சமைப்பாங்க, களியாக ஆகாது ! :)//

    அண்ணியின் கைவண்ணம் அடியேனுக்கு எப்போ? :)
    வைணவப் பதிவுன்னாலும் உணவு என்னவோ சைவ உணவு-ன்னு இப்பவே சொல்லிருங்க அண்ணி கிட்ட!

    //அப்பறம்... எனக்கு சிவராத்ரி தேதியே வேற//

    அது என்ன உங்களுக்கு மட்டும் தனியான சிவனிரா (சிவராத்திரி)? புதசெவி!

    ReplyDelete
  23. பேதங்களெல்லாம் மனிதர்களே உருவாக்கிக் கொள்வதுதான் என்று உணர்த்தும் நல்ல பதிவு :) மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  24. //அபி அப்பா said...
    அருமையான பதிவு!//

    நன்றி-ண்ணே!

    //அய்யா கேயாரெஸ்! ஒரு சந்தேகம்!//

    உங்க தம்பி கேயாரெஸ் எப்போ உங்களுக்கு ஐயா ஆனான்? டூ மச்! :)

    //தேவாரம் எழுத ஆரம்பிக்கும் முன்னே அடி எடுத்து கொடுத்த நடராஜர் (சிவன்) திருசிற்றம்பலம் என அடியிடுத்து கொடுத்த//

    தேவாரம் பாட ஈசன் அடி எடுத்து கொடுக்கலைண்ணே!
    சுந்தரருக்கு மட்டும் பித்தா என்று அவர் கூப்பிட்டவாறே பாடச் சொன்னாரு!
    சேக்கிழாருக்குத் தான் உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்தாரு!

    நீங்க சொல்லுறது திருவாசகம்-ன்னு நினைக்கிறேன்!
    அதுக்கும் அடி எடுத்துக் கொடுக்கலை! "திருச்சிற்றம்பலம்" என்று முடிச்சித் தான் வைச்சாரு!

    பாண்டிய நாட்டு அந்தணர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டு, மாணிக்கவாசகர் முன் வந்த நடராசப் பெருமான், அவர் திருவாசகம் சொல்லச் சொல்ல, அதை ஏட்டில் எழுதினான்! பின்னர் பாடல்கள் நிறைவு பெற்றதும்...

    "மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது" - என்று கைச்சார்த்து இட்டு, பஞ்சாட்சரப் படியில் வைத்து இறைவன் மறைந்தார்!

    //அந்த ஓலைச்சுவடி அதாவது சிவபெருமான் கையெழுத்து சிதம்பரத்தில் இருந்து கொண்டு போகப்பட்டு இப்போது பாண்டிச்சேரியில் ஒரு மடத்தில் இருப்பதாகவும்//

    யாரோ சொல்லிக் கேள்வி தான்-ண்ணே இது எனக்கு! சரியாத் தெரியலை!
    இறைவனின் திருக்கைச் சார்த்து என்றால் இந்நேரம் பல திருமடங்கள் பூசை செய்யும்! ஆனா யாரும் அப்படிச் செய்வது போல் தெரியலை!

    மேலும் மூல ஓலைகளா, படி எடுத்தவையா என்றும் தெரியாது! அழியும் நிலையில் இருந்த பல ஓலைகள், நம்பியாண்டார் நம்பி படி எடுத்தவை தான்!

    இது பற்றி பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்துள்ள மயிலை சத்குருநாத ஓதுவாரைக் கேட்டால் மேல் விவரணங்கள் அறியலாம்!

    ReplyDelete
  25. //குமரன் (Kumaran) said...
    நான் சொல்ல நினைச்சதை எல்லாம் ஏற்கனவே மத்தவங்க சொல்லிட்டாங்க. :-)//

    இல்லையே! இன்னும் ரெண்டு விஷயம் இருக்கே! வந்து சொல்லுங்க குமரன்! - குற்றாலம் பெயர்க் காரணம் & அகத்தியர் பெருமாளை லிங்கமா மாத்திப் பாடிய பாட்டு! :)

    //காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு போயி பாருங்க. ஏழை எளிய மக்கள் கிட்ட ரொம்ப செல்வாக்கு அவருக்கு. :-)//

    ஆமா! ஆமா! கழுத்து வரை மட்டுமே உள்ள அரங்கன்! கண்ணு எல்லாம் பெருசா பெருசா வச்சி இருப்பாரு-ல்ல?
    சிம்மாச்சலப் பெருமாளும் லிங்கம் போலவே தான் இருக்கும்! காரமடை போலவே சந்தனம் முழுக்க முழுக்கப் பூசுவாங்க!

    ReplyDelete
  26. //கவிநயா said...
    பேதங்களெல்லாம் மனிதர்களே உருவாக்கிக் கொள்வதுதான் என்று உணர்த்தும் நல்ல பதிவு :) மிக்க நன்றி கண்ணா//

    நன்றிக்கோவ்!
    நீங்க பேதம்-ன்னு சொன்னவுடன் சும்மா குருட்டாம்போக்கா யோசிச்சேன்! கவி-நயா கொடுத்த கவி! :)

    வேதம் இறைவன் தந்தது!
    பேதம் மனிதன் தந்தது!
    நாதனை மறந்து போய்
    "நானும்" என்னைக் கொன்றது!

    நாதன் நாமம் நாவினில்
    நாதம் ஆகத் தங்கிடில்
    பேதம் காதம் போகுமே!
    வேதம் போதம் ஆகுமே!

    ReplyDelete
  27. அடடா, அசத்தல்! அதிலும் ரெண்டாவது பத்தி ரொம்ப பிடிச்சது :) வாழ்க கவிஞரே!

    ReplyDelete
  28. @குமரன்
    அடியேனே சொல்லி விடுகிறேன்!

    லிங்கமாக மாறுமாறு வேண்டிய போது, அகத்தியர் பெருமாளைத் துதி செய்த பாடல் என்று சொல்லப்படுவது:

    முத்தனே முளரிக் கண்ணா
    மூலம் என்றழைத்த வேழப்
    பத்தியின் எல்லை யோனே
    பகவனே திகிரி யாளா!
    சுத்தனே அருள்சூல் கொண்ட
    சுந்தரக் கதுப்பி னானே
    நத்தணி செவிய கோல
    நாடுதற் கரிய நம்பி!

    ReplyDelete
  29. கந்தபுராணத்திலும், அகத்தியர் பெருமாளை மாற்றிய சேதி வரும்! திருக்குற்றாலப் படலம்-ன்னு ஒரு தனிப் படலமே பாடி இருப்பார் கச்சியப்பர்!

    அடியார்களை இகழ்ந்து அவர்கள் முகமும் நோக்காது இருந்த "ஆச்சார சீலர்களை" ஒரு இடி இடிக்கிறார்! ஐயோ நான் அல்ல! கச்சியப்பர் தான் இப்படிப் பாடுகிறார்! இதற்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே! :)))
    ----------------------------------
    அப்பதியில் அச்சுதனுக்கு ஆலயம் ஒன்று உளதம்மா அவனி மீதில்
    ஒப்பிலதோர் திருமுற்றம் அஃதென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ்

    செப்புவராய் இடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார்
    மெய்ப்படு நூல் முறைகண்டு மோகத்தால் தமது மத மேற்கொண் டுள்ளார்!
    -----------------------------------
    அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக் காணின் அழன்று பொங்கி,
    மூன்னுறு தொல் பகைஞர் என மிக இகழந்து மற்றவர்தம் முகம் நோக் காராய்த்

    துன்னெறியே மேற்கொண்டு மறை பயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித்
    தன் நெறியும் புரியாது அஙகு இருந்தனரால் அஃது உணர்ந்தான் தமிழர் கோமான்!
    ----------------------------------
    காட்டுதலுங் கைதொழுது மால் உறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி,
    ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி ஏத்தி

    பாட்டில் உறு தொல்லடியார் தமைநோக்கி இவரை வழி படுதற்கு உள்ளம்,
    வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான்.
    ----------------------------------
    அறுகு மதி நதி புனையுஞ் செஞ்சடை எம் பெருமானை அகத்துட் கொண்டு,
    சிறுகும் உருவுடைய முனி நாரணனார் திருமுடி மேற் செங்கை யோச்சிக்,

    குறுகு குறுகு என இருத்தி அவுளரக்கிற் புனை பாவை கோல மீதும்,
    அறுகு தழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்!

    ReplyDelete
  30. பாட்டுக்குப் பொருளும் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  31. //குமரன் (Kumaran) said...
    பாட்டுக்குப் பொருளும் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்//

    உங்க உதவி தான் வேணும் குமரன்!

    ReplyDelete
  32. அருமை..அருமை.. ;)

    நன்றி தல ;)

    ReplyDelete
  33. //கோபிநாத் said...
    அருமை..அருமை.. ;)//

    எது கோபி? :)
    சிவா நைட்டுக்கு என்ன ட்ரீட்? :)

    ReplyDelete
  34. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://sagakalvi.blogspot.com/


    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP