Thursday, May 07, 2009

நரசிங்கத்தின் முன்னே பிரகலாதனா? அனுமனா?

பிரகலாதக் குழந்தைக்காக அல்லவா ஓடோடி வந்தான் இறைவன்? இரணியன் எந்த இடத்தைக் காட்டி குழந்தையை என்ன கேள்வி கேட்பானோ? அது பதிலுக்கு என்ன சொல்லுமோ? என்று பதபதைத்து, பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்தது யாருக்காக? = பிரகலாதனுக்காகவா? அனுமனுக்காகவா? அட, அனுமன் எப்படிப்பா நரசிம்ம அவதாரத்தில் வந்தாரு? :)

இன்று சுதர்சன-நரசிம்ம ஜெயந்தி (May-07-2009)!
சுதர்சனம், நரசிம்மம் இரண்டுமே "உதித்த" நாள்! ஒரு திரு சிம்மம் வந்தாங்கு, "உதித்தது" உலகம் உய்ய!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சுவாதியில் வருவது நரசிம்ம ஜெயந்தி! சாந்தமே உருவான சுவாதி நட்சத்திரக் காரவுங்க, அந்த சுவாதியிலா உக்கிரமே உருவான நரசிம்மர் உதித்தார்? :)

ஹிஹி! உண்மை என்னான்னா, பலர் நினைப்பது போல நரசிம்மம் உக்கிரமே அல்ல! நரசிம்ம பூசை பண்ணவே பல பேரு பயப்படுவாய்ங்க! சுத்த பத்தமா இருக்கணும்! ஏதாச்சும் தெரியாம தப்பு ஆயிட்டாக் கூட உக்கிரமா ஆயிடுவாரு, நமக்குத் தீங்காயிரும்-ன்னு தாங்களா நினைச்சிக்கிட்டு தயங்குவாங்க! இந்தப் பயமே தேவையில்லை!

ஏன்னா நரசிம்மப் பெருமாள் (ஆளரிப் பெருமாள்) அவ்வளவு அழகு, அவ்வளவு கருணை, அவ்வளவு வாத்சல்யம்! குளிக்காம கூட நரசிம்ம பூசை பண்ணி இருக்காங்க! மரத்தின் கீழ் சதா யோகத்தில் இருந்த நம்மாழ்வார் குளித்து விட்டா நரசிம்ம பூசனை செய்கிறார்?
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
என்று பயந்து பூசிக்காமல், அகம் கரைந்து ஆளரியைப் பூசிக்கிறார் நம்ம மாறன்!

கல்யாணம் ஆகப் போவுது! மணப்பந்தலில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளம் பொண்ணு, "உக்கிரமான" நரசிம்மத்தை நினைக்குமா? "ரொமான்டிக்" கண்ணனை நினைக்குமா? ஹிஹி! இந்தப் பொண்ணு நரசிம்ம-ஆளரியைத் தான் நினைக்கிறாள் பாருங்க! :)
"அரி-முகன்" அச்சுதன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!


இதில் இருந்து என்ன தெரிகிறது? ஐயோ நரசிம்ம உபாசனையா? நரசிம்ம பூஜையா?-ன்னு நீங்களா கண்டதையும் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு பயப்படாதீர்கள்!
"என்ன பயந்துட்டியா? வாடா, என் கிட்டக்க வா" என்று கைகாட்டிக் கூப்பிடும் கோலம் தான் இன்றும் திருவல்லிக்கேணியில்! ஆஹ்வான ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!
அன்பே உருவான ஆளரி! அழகிய சிங்கன்! தெள்ளிய சிங்கன்!
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே!


பிரம்மனே,
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும்
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ
* பகலோ, இரவோ
* வானமோ, பூமியோ
* மிருகமோ, மனிதனோ
* எந்த ஆயுதத்தாலும்...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ
* தேவரோ, அசுரரோ...யாராலும் நான் சாகக் கூடாது!

எல்லா பதிவையும் ஒன்னாத் திரட்டி, ஒரே பக்கத்தில் தெரிய வைப்பது போல்...
எல்லா வரத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே லபக்கில் வாங்க நினைத்த நம்ம "அறிவாளி" தான் இரணியகசிபு! அவன் தான் திரட்டிகளின் ஆதி காலத் தந்தையோ? :)
"ஓ* இரணியகசிபுவே நம" என்று அகில உலகத்தையே உருட்டி மிரட்டி சொல்ல வைத்தாகி விட்டது! ஆனால் தன் இரத்த சம்பந்தத்தை மட்டும் சொல்ல வைக்க முடியவில்லை!

ஜய விஜயர்கள் இறை அடியார்கள் ஆயிற்றே! அவர்களுக்கு முகமன் சொல்லிட்டு, பணிவாகக் கேட்டறிந்து பெருமாளைச் சேவிப்போம்-ன்னு இல்லாமல், திமிராய் உள்ளே நுழைந்த சனகாதி முனிவர்கள்!

அன்றைக்கு அடியார்களுக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறியவர்கள், இன்று அன்றாடம் "இரணியகசிபுவே நம" என்கிறார்கள்! :))
இறைவன், எதை எதை, எப்படியெல்லாம் கோர்த்து விடுகிறான் பாருங்கள்! அவதாரம்-பிரகலாதன்-இரண்யகசிபு-ஜய விஜயர்கள் என்று அத்தனைக்கும் நடுவில், பணிவை மறந்த முனிகளுக்கும் தக்கதொரு பாடம்!

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்! அவனிடமா கணக்கு போட்டு வாங்கிய வரம் செல்லும்? நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால், அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும் = பிரம்மனுக்கும் மேலே ஒரு பகவான் உண்டு என்பதை பாவம் இரணியன் அறியவில்லை போலும்!
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ = வாயிற்படியில்
* பகலோ, இரவோ = அந்தி மாலையில்
* வானமோ, பூமியோ = தொடைகளின் மேலே
* மிருகமோ, மனிதனோ = மிருக+மனிதன் = ஆள்+அரி

* எந்த ஆயுதத்தாலும் = கை நகத்தில் சுதர்சனாழ்வார் வந்து அமர...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ = வளரும் ஆனால் உயிர் அற்றதான நகங்களில்
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ = தெய்வங்களுக்கே தெய்வம் ஆனாலும் தெய்வம் என்ற சொல்லில் கூட அடைபடாதவன்
* தேவரோ அசுரரோ = தேவருக்கும் அசுரருக்கும் பொதுவில் நிற்கும் எம்பெருமான்...

ஆகா! அந்தக் குழந்தை கும்பாபிஷேகம் செய்த பின்னரா அவன் தூணில் சான்னித்யம் ஆனான்? மனத்தில் ஆழமாகச் சான்னித்யம் ஆனதால் அன்றோ, மற்றுள்ள அரக்க வீட்டிலும் சான்னித்யம் ஆனான்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலனம் முடிந்தது! 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகக் குறுகிய கால அவதாரம் இது ஒன்றே!



இந்த குறுகிய கடிகை நேரத்தில் "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?
உக்கிரத்தைத் தணிக்க பதில் உக்கிரம் கொண்ட சரப மூர்த்தி, பல நாள் சண்டையிட்டு, நரசிங்கத்தைக் குத்திக் கிழித்தார் என்பதெல்லாம் பின்னாளைய புனைவு! அடித்து அடித்து இல்லாததை உண்மையாக்கும் கும்மி டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று! இன்னொரு சமயம் இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

* பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!
* ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!
* தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!
அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறான்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே! அதனால் அல்லவோ நரசிங்கம் பிடரியை உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறது? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மத்துக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்!
அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது!
இன்றோ தந்தையே இல்லாமல் போனது!
அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்! ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டான் இறைவன்!

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்...

இப்படி மற்ற சுயநலமிகள் எல்லாம் "உக்கிரம்" கண்டு பயப்பட...இறைவனோ "பந்தனை" என்னும் அசதியில் பக்தனுக்காக வாட...
பக்தனையும்-இறைவனையும், ஆச்சார்யனே(ளே) சேர்த்து வைக்கிறான்(ள்)!
பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அவள் தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ" என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை!
பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்! இதோ அந்த முந்தைய பதிவு!


சரி, இதில் அனுமன் எங்கு வந்தான்?
இராமாவதாரம் நரசிம்மத்துக்குப் பல யுகம் கழித்து அல்லவா? அப்புறம் எப்படி-ன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு திருக்கடிகை என்னும் ஊருக்குப் போகணும்! வரீங்களா?
சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கபுரமே அந்தத் திருக்கடிகை! கரிகாற் சோழன் அமைத்த கடிகைக் கோட்டம்!

ஆளரி அவதாரம் நிகழ்ந்த போது சப்த ரிஷிகள் பயந்து நடுங்கி, எம்பெருமானின் வடிவழகைச் சேவிக்க முடியாமல் கோட்டை விட்டார்கள் அல்லவா? அதனால் மனம் வருந்தி மீண்டும் சேவிக்க விழைந்த போது, கடிகாசலம் என்னும் சோளிங்கபுர மலையிலே, யோகத்தில் இருக்கும் கோலத்தில், யோக நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறான்! விஸ்வாமித்ரரும் இங்கே பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்!

முனிவர்கள் இங்கே தவம் இயற்ற, இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அவர்கள் தவத்தைக் காக்கின்றான்! ஆனால் முனிவர்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்களின் தொல்லை அளவுக்கு மீறிப் போகிறது!
மன்னனால் வெறுமனே போர்ப் படைகளை மட்டும் வைத்துக் கொண்டு அசுரனின் மாயப் படையை ஒடுக்க முடியவில்லை! முனிவர்களைக் கலைத்து விஷயத்தைச் சொல்லவும் அவனுக்கு விரும்பவில்லை! யோக நரசிம்மரிடமே முறையிடுகிறான்!

இராமாவாதார முடிவில் இறைவனுடன் செல்லாமல், அடியார்களோடு அடியாராக, இங்கேயே தங்கி விட்டான் அல்லவா அனுமன்? அந்தப் பெரும் பக்திக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் இராமனால்?
சீதையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதனின் உயிரைக் காத்து, இதனால் இராமனின் உயிரையே காத்த ஒரு சிறிய திருவடி,
சுயநலமான மோட்சமும் வேண்டாம், எனக்கு அடியவர் தொடர்பே போதும் என்கிறது! இவனுக்கு என்ன செய்து நன்றிக் கடன் தீர்ப்பது?

சோளிங்கபுரம் - அனுமன் - மூலவர்


பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி என்று பிரகலாதனைப் பல யுகங்கள் முன்பே பட்டாபிஷேகம் செய்தாகி விட்டது! அனுமனுக்கு என்ன பட்டாபிஷேகம் செய்து வைப்பது? ஆங்! அது தான் சரி!
ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னை விட்டுப் பிரியாத சங்கு சக்கரங்களையே அனுமனிடம் கொடுத்து விடுகிறான்! தன் அடையாளத்தையே பக்தனின் அடையாளமாகவும் ஆக்கி விடுகிறான்!

அதை வைத்துக் கொண்டு இந்திரத்துய்ம மன்னனுக்கு உதவுமாறு, இறைவனே அனுமனைச் சோளிங்கபுரம் அனுப்பி வைக்கிறான்! பணி முடிந்ததும், அனுமனும் யோக நரசிம்மனைப் பார்த்தவாறு, யோக ஆஞ்சநேயனாக அமர்ந்து விடுகிறான்!
சின்ன மலையின் மேல் சிறிய திருவடியும், பெரிய மலையின் மேல் நரசிம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்! அவர்கள் பார்த்துக் கொள்ளும் சாளரமும் (ஜன்னல்) இன்றும் உள்ளது!

இராமனை அன்றி வேறு ஒருவரையும் வணங்காதவர், கண்ணனைக் கூட வெறுமனே மதித்து விட்டு வணங்காது சென்றவர், அனுமன்! நரசிம்மப் பெருமாளான ஆளரியை மட்டும் வணங்கி வீற்றிருக்கிறார்!
இன்றும் அனுமனின் கைகளில் சங்கு சக்கரங்களைக் காணலாம்! அனுமன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறான்! ஒரு அடியவன் பகவானின் ரூபமாகவே ஆகிவிட்ட அபூர்வக் காட்சி, இங்கு மட்டுமே காண முடியும்!

சோளிங்கபுரம் - அனுமன் - உற்சவர்


இப்படி பக்தர்களுக்காகத் தன்னையும், தன் உடைமைகளையும் கூடக் கொடுத்து விடும் ஆளரிப் பெருமான் உக்கிர ரூபி அல்ல! சக்கர ரூபி! அக்காரக் கனி!
யோக ஆஞ்சநேயன் முன்னுறை, பிரகலாதக் குழந்தை உடனுறை ஆளரிப் பெருமாள் திருவடிகளே சரணம்!


குறிப்பு:
நண்பர் ரிஷான் மிக மோசமான உடல்நிலையில் இருந்ததை அறிவீர்கள். நச்சுணவு ஆகிப் போய் நீலம் பாய்ந்து இருந்ததாக அவர் தம் சகோதரி பஹீமா ஜெகானும் குழுமத்தில் சொல்லி இருந்தார்.
ரிஷான் நன்முறையில் உடல் நலம் தேறி, முன்பு போல் ஓடோடி வர, மருத்துவக் குளம் கொண்ட தக்கான், சோளிங்கபுரம் நரசிம்ம பெருமாளுக்கு அடியோங்கள் பிரார்த்தனைகள்!

49 comments:

  1. தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை எங்கும் கண்டேனே..

    ReplyDelete
  2. நரசிம்மம் = ஆளரி. ஆளரப் பெருமாள் இல்லை. தட்டும் போது விட்டுப் போச்சோ?

    குளிக்காம நம்மாழ்வார் போன்றவங்க ஆளரி கோளரி நரசிங்கனைக் கும்பிடலாம்; யோகமே அவர்களுக்கெல்லாம் உடல் தூய்மை, உளத்தூய்மை, சொற்தூய்மைகளைக் கொடுத்துவிடுகின்றது. என்னைப் போன்றோருக்கெல்லாம்? உளத்தூய்மையும் சொற்தூய்மையும் கிடைக்கிறதோ இல்லையோ உடல் தூய்மையாவது சடங்கு போன்ற குளியலால் கிடைக்கின்றது என்று எண்ணிக் கொள்கிறேன்/றோம். J

    // நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால் அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
    //

    ஒரு காலத்துல கணிதம் நல்லா வரும்; இப்ப எல்லாம் மறந்து போச்சு. இதெல்லாம் புரியவே இல்லை.

    கண்ணனையும் இராமனையும் நினைக்கும் தோறும் கிடைக்கும் இன்பம் அழகியசிங்கனை நினைக்கும் போதும் கிடைக்கின்றன. அவர்களை விட இவன் எளிமையுடனும் நெருக்கத்துடனும் இருப்பது போன்றும் ஒரு உணர்வு.

    எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
    இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
    அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
    சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

    நம்மால் அவன் பெருமை ஆராய்ந்து ஆகாது. ஆயிரம் நா கொண்ட ஆதிசேடனாலும் இயலாது. அவனே அவன் பெருமையை முழுவதும் அறிந்திலன்.

    ReplyDelete
  3. Vanakkam sir,
    In THIRUVAIMOZHI pasuram Azhwar mentioned his name in EKKALTHENDHAYAI ENNULMANNIL MATRUEKKALATHILUM YADHONDRUM VENDEN,MIKKAR VEDHAVIMALAR VIZHUNGUM EN AKKARAKKANIYE UNNAI YANE.2-9-8
    Azhwar in this pasuram not mentioned the divyadesam name but he mentioned his name.Good infirmation,thanks. Devaperumal garudavahanarai given darshan to his adiyar swami thootachariar in this thirukkadigai,still when devaperumal comes out from temple,theywill cover swami by vasthram which is known as thottachariar sevai.Prayed for Rishan.

    ARANGAN ARULVANAGA.
    anbudan
    k.srinivasan

    ReplyDelete
  4. வழக்கம் போல் நன்று ;)

    ReplyDelete
  5. all anonymous commenters,kindly come here :D

    Yaaravathu intha KRS ah nalla thittungalaen..thollai thaangala..

    ReplyDelete
  6. ரிஷான் உடல் நலம் பெற இறைவனைப் வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  7. கண்ணபிரான்: சும்மா பின்னிட்டீங்க ;-)உங்கள் துணிவு, நேர்மை, ஆழமான பார்வை, அதில் ஆச்சர்யமான பக்தி, ஆச்சார்ய வாஞ்சை, அடியார் நேசம் இப்படி எவ்வளவு பரிமாணங்கள் உள்ளம் குளிர இருக்கு. இன்னுமொரு நூற்றாண்டு இச்சேவை எங்களுக்கெல்லாம் கிடைக்க நம்ம சிங்கப்பெருமாள் உங்களுக்கு பூர்ண ஆயுசு அருளட்டும். வாழ்க.

    ReplyDelete
  8. //ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
    பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
    நாடி நாடி நரசிங்கா என்று
    வாடி வாடும் இவ் வாள் நுதலே!//

    நம்மாழ்வாரின் இப்பாசுரம் அடியேனுக்கும் மிகவும் பிடித்த பாசுரம்.

    ஆடிக்கொண்டே கண்ணீர் விட்டுக்கொண்டே அவனை தரிசித்தால் எல்லா துன்பங்களும் தீயினில் தூசாகும்.

    நன்றி KRS ஐயா.

    ReplyDelete
  9. பிரஹலாதனுக்கும் அனுமனுக்கும் ஒற்றுமை ஒன்று உண்டு.
    அதை சொல்லியிருக்கிறீர்களா என இன்னும் ஒரு தடவை
    கவனமாக படிக்கவேண்டும்.

    இரண்டு பேரும் சிரஞ்சீவிகள்.

    நிற்க. ஆதி சங்கரரின் லக்ஷ்மி ந்ருசிம்ஹ கராவலம்பன‌
    படித்துப் பார்த்தால், அதில் நீங்கள் சொன்ன நரசிம்மனின்
    பல குணங்கள் த்ருச்யம்.

    அதை இங்கே படிக்கவும்.
    http://pureaanmeekam.blogspot.com

    உங்கள் பாணி ( எடுத்துரைக்கும் முறை ) பாராட்டும் வகையில்
    உள்ளது. தொடருங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  10. //திருவல்லிக்கேணியில்! ஆலாவன ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!//

    ஆவாஹன ஹஸ்தம் - தட்டச்சுப் பிழையோ.

    சோளசிம்மபுரம் இரு கோவில்களாக உள்ளது. மூலவரும் அமிர்தபலவல்லி தாயாரும் மலைக் கோவிலில் சேவை சாதிக்கின்றனர், உற்சவர் பக்தோசிதன் அடிவாரத்தில் ஊர்க் கோவிலில் சேவை சாதிக்கின்றார். இவரும் ஆவாஹன ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார்.

    குழந்தை பிரகலாதனை( தன் அடியவர்கள் அனைவரையும்) அஞ்சாதீர்கள் என்னை சரணடையுங்கள் நான் காப்பறுகின்றேன்) என்று அழைத்து அருளும் அற்புதக் கோலம்.

    ஜெய் ஸ்ரீ நரசிம்மா

    ReplyDelete
  11. உக்கிரத்தைத் தணிக்க பதில் உக்கிரம் கொண்ட சரப மூர்த்தி, பல நாள் சண்டையிட்டு, நரசிங்கத்தைக் குத்திக் கிழித்தார் என்பதெல்லாம் பின்னாளைய புனைவு! அடித்து அடித்து இல்லாததை உண்மையாக்கும் கும்மி டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று! இன்னொரு சமயம் இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!//

    இந்த வரிகளுக்கு நன்றி,. என்னால் யாரும் நரசிங்கத்தை அடக்குவது என்ற வரிகளைக் கேட்டாலே நொந்துவிடும்.
    நன்றி ரவி.

    ReplyDelete
  12. நானும் நரசிங்கனையும் அனுமனையும் சேர்த்தேன் இன்று, நாமக்கல்லில்:)

    ReplyDelete
  13. //Raghav said...
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை எங்கும் கண்டேனே..//

    எங்கெல்லாம் கண்டீர்கள் ராகவ்? :)

    ReplyDelete
  14. //குமரன் (Kumaran) said...
    நரசிம்மம் = ஆளரி. ஆளரப் பெருமாள் இல்லை. தட்டும் போது விட்டுப் போச்சோ?//

    ஆமாம் குமரன்...விடியற்காலை 04:00 மணிக்கு எழுந்து பிரம்ம முகூர்தத்தில் பதிவு போட்டா? :)
    பதிவில் திருத்திட்டேன்...இன்னும் சில தட்டச்சுப் பிழைகளையும்!

    //குளிக்காம நம்மாழ்வார் போன்றவங்க ஆளரி கோளரி நரசிங்கனைக் கும்பிடலாம்; யோகமே அவர்களுக்கெல்லாம் உடல் தூய்மை, உளத்தூய்மை, சொற்தூய்மைகளைக் கொடுத்துவிடுகின்றது. என்னைப் போன்றோருக்கெல்லாம்?//

    என்னைய விட்டுட்டீங்க? நம்மைப் போன்றோருக்கு-ன்னு சொல்லுங்க குமரன்! :)

    இனிமேல் எல்லாரும் குளிக்காம போயி நரசிம்மரைக் கும்பிடணும்-ன்னு அர்த்தம் எடுத்துக்க கூடாது! :)

    ஆனால் குளிக்காமயும் நரசிம்மர் கிட்ட போய் இருக்காங்க சில பேரு! அதுனால அவர் உக்கிரம் பக்கிரம்-ன்னு சொல்லிக்கிட்டு இருக்க வேணாம்-ன்னு மட்டும் தான் சொல்ல வந்தேன்!
    இந்த விஷயத்தில் மெளலி அண்ணாவே அடியேன் வாக்கியத்தைக் கரீட்டாப் புரிஞ்சிக்கிட்டாரே! :)

    //உளத்தூய்மையும் சொற்தூய்மையும் கிடைக்கிறதோ இல்லையோ உடல் தூய்மையாவது சடங்கு போன்ற குளியலால் கிடைக்கின்றது என்று எண்ணிக் கொள்கிறேன்/றோம். J//

    உண்மை! உண்மை! :)

    //கண்ணனையும் இராமனையும் நினைக்கும் தோறும் கிடைக்கும் இன்பம் அழகியசிங்கனை நினைக்கும் போதும் கிடைக்கின்றன. அவர்களை விட இவன் எளிமையுடனும் நெருக்கத்துடனும் இருப்பது போன்றும் ஒரு உணர்வு//

    மிகவும் சரி குமரன்!
    கண்ணன் வெறும் காதலன்.
    இராமன் ஒரு தோழன்.
    நரசிம்மனே தெய்வம் :)

    //எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
    இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
    அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
    சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே//

    இது என்ன பாசுரம் குமரன்? கம்பர் எழுதியதா? பொருள் ப்ளீஸ்! :)

    //அவனே அவன் பெருமையை முழுவதும் அறிந்திலன்//

    அது என்னமோ சரி தான்! :)

    ReplyDelete
  15. @குமரன்
    //
    //நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால் அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
    //
    ஒரு காலத்துல கணிதம் நல்லா வரும்; இப்ப எல்லாம் மறந்து போச்சு. இதெல்லாம் புரியவே இல்லை//

    ஹிஹி!
    dy/dx means an small incremental change...They say Δx na? that one!
    lim x->infinity...as x tending to infinity 1/x will tend to zero...

    அது போல இரணியன் கணக்கு போட்டு பெருசா பண்ணதெல்லாம் உண்மையில் Δx.
    எம்பெருமான் lim x->infinity ஆனான்! இரணியன் உடனே zero ஆயிட்டான்!

    கணிதமும் அடியேனுக்கு ரொம்ப பிடிக்கும்!
    ராகவனுக்கு கூட கணக்கு-ன்னா ரொம்ப பிடிக்குமாம்! எதைக் கணக்கு பண்ண-ன்னு கேட்டு வைக்காதீங்க! :)))

    ReplyDelete
  16. /Anonymous said...
    In THIRUVAIMOZHI pasuram Azhwar mentioned his name in EKKALTHENDHAYAI ENNULMANNIL MATRUEKKALATHILUM YADHONDRUM VENDEN,MIKKAR VEDHAVIMALAR VIZHUNGUM EN AKKARAKKANIYE UNNAI YANE.2-9-8//

    எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
    எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்:
    மிக்கார் வேத-விமலர் விழுங்கும் என்
    அக்கார கனியே! உன்னை யானே!

    வாங்க ஸ்ரீநிவாசன் சார்! அருமையான பாசுரம் எடுத்துக் கொடுத்திருக்கீங்க! அதான் தமிழில் மீண்டும் தந்தேன்!

    //Azhwar in this pasuram not mentioned the divyadesam name but he mentioned his name//

    ஆமாம்! அக்காரக்கனி!
    ஆராவமுதே = குடந்தை தான்!
    அக்காரக்கனியே = சோளிங்கபுரம் தான்!

    //Devaperumal garudavahanarai given darshan to his adiyar swami thootachariar in this thirukkadigai,still when devaperumal comes out from temple,theywill cover swami by vasthram which is known as thottachariar sevai//

    தொட்டாச்சாரியார் சேவையின் கதை தான் எவ்வளவு வாத்சல்யம்! காஞ்சியில் பெருமாளைக் கொஞ்ச நேரத்துக்கு, இரண்டு திருக்குடைகளாலும் மூடி மறைத்து விடுவார்கள்! வரமுடியாத தொட்டாச்சாரியாருக்கு சேவை சாதிக்க, வரதன் சென்று விடுவான் அல்லவா! வராத ராஜனுக்கும் வரத ராஜன் அவன்!

    //Prayed for Rishan//

    நன்றி! ARANGAN ARULVANAGA!

    ReplyDelete
  17. //கோபிநாத் said...
    வழக்கம் போல் நன்று ;)//

    மாப்பி கோப்பி
    வழக்கம் போல் நன்றி :)

    ReplyDelete
  18. //Anonymous said...
    all anonymous commenters,kindly come here :D//

    அகோ வாரும் பிள்ளாய்! வாரும் தங்காய்! :)

    //Yaaravathu intha KRS ah nalla thittungalaen..thollai thaangala..//

    அதானே! திட்டுங்கப்பா! திட்டுங்க! அடச்சே, எப்பமே திட்டற ராகவன் கூட இப்பல்லாம் திட்ட மாட்டேங்குறான்! :)

    ReplyDelete
  19. //Anonymous said...
    ரிஷான் உடல் நலம் பெற இறைவனைப் வேண்டுகின்றேன்//

    நன்றி!
    இன்று யாம் வந்தோம் (ரிஷான் ஷெரீஃப்புக்கு) இரங்கேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  20. //நா.கண்ணன் said...
    கண்ணபிரான்: சும்மா பின்னிட்டீங்க ;-) உங்கள் துணிவு, நேர்மை....//

    போச்சு! அடியேனோடு பேசிப்பேசி கண்ணன் சாருக்கும் லோக்கல் பாஷை ஒட்டிக்கிச்சா? :)))

    நேர்மையான கருத்தைப் பொளேர்-ன்னு ஒளிக்காமச் சொல்லும் போது பல பின் விளைவுகளுக்கும், பின் கோபங்களுக்கும் ஆளாக வேண்டி வரலாம் கண்ணன் சார்! அப்படி ஆளாகியும் இருக்கிறேன்! ஆளாகிக் கொண்டும் இருக்கிறேன்! ஆளாகியும் இருப்பேன்! :)

    //இன்னுமொரு நூற்றாண்டு இச்சேவை எங்களுக்கெல்லாம் கிடைக்க நம்ம சிங்கப்பெருமாள் உங்களுக்கு பூர்ண ஆயுசு அருளட்டும். வாழ்க//

    ஆசிக்கு நன்றி கண்ணன் சார்!
    குணானுபவத்தில் நாம் அனைவரும் இவ்வண்ணமே கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  21. //Kailashi said...
    ஆடிக்கொண்டே கண்ணீர் விட்டுக்கொண்டே அவனை தரிசித்தால் எல்லா துன்பங்களும் தீயினில் தூசாகும்//

    கைலாஷி ஐயா சொன்னது மிகவும் சரியானது! நுட்பமானது! ரெண்டே வரியில் சொல்லிட்டார்!

    //ஆடிக்கொண்டே கண்ணீர் விட்டுக்கொண்டே அவனை தரிசித்தால்//

    ஆடிக்கொண்டே = நாம் ஆடணும்-ன்னு நினைச்சி ஆடுவதில்லை! அவனைப் பார்த்த மாத்திரத்தில் கால்கள் தானாகவே ஆடும்! அவனை நோக்கிச் சாதாரணமாக ஓடினாலே ஆடுவது போலத் தான் கால்கள் ஓடும்!

    பஸ்ஸைப் பிடிக்க ஓடும் போதும், காதலியை நோக்கி ஓடும் போதும் கூர்ந்து பாருங்கள்! இரு ஓட்டத்துக்கும் வித்தியாசம் தெரியும்! ஒன்றில் மட்டும் ஆட்டம் தெரியும்!

    கண்ணீர் விட்டுக்கொண்டே = இதுவும் அழணும்-ன்னு நினைச்சி அழுவதில்லை! அவனைப் பார்த்த மாத்திரத்தில் தானாகவே கண்கள் பனிக்கும்! கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி?-ன்னு வாய் பேசாது கண்கள் மட்டும் பேசுதே திருவேங்கடமுடையான் சன்னிதியில்! ஏன்?

    ஏன்னா ஆட்டம்/கண்ணீர் இரண்டுமே உண்மை! மனிதனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்காமல் தானாய் வருவது!

    அதான் ஆடிக்கொண்டே கண்ணீர் விட்டுக்கொண்டே!
    ஆடி ஆடி அகம் கரைந்து
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி!

    ReplyDelete
  22. //sury said...
    பிரஹலாதனுக்கும் அனுமனுக்கும் ஒற்றுமை ஒன்று உண்டு.
    அதை சொல்லியிருக்கிறீர்களா என இன்னும் ஒரு தடவை
    கவனமாக படிக்கவேண்டும்.//

    படித்து விட்டுச் சொல்லுங்கள் சூரி சார்!

    //இரண்டு பேரும் சிரஞ்சீவிகள்//

    ஆம்!
    இன்னும்...
    இரண்டு பேரும் இன்னும் வைகுந்தம் போகவில்லை! இங்கே தான் இருக்கிறார்கள்! :)

    //ஆதி சங்கரரின் லக்ஷ்மி ந்ருசிம்ஹ கராவலம்பன‌
    படித்துப் பார்த்தால், அதில் நீங்கள் சொன்ன நரசிம்மனின்
    பல குணங்கள் த்ருச்யம்//

    மெளலி அண்ணா பொருள் சொல்லிப் பதிவு போட்டிருக்காரே!

    //அதை இங்கே படிக்கவும்.
    http://pureaanmeekam.blogspot.com//

    இதோ வாரேன்!

    //உங்கள் பாணி ( எடுத்துரைக்கும் முறை ) பாராட்டும் வகையில்
    உள்ளது. தொடருங்கள்//

    :)
    நன்றி சூரி சார்!

    ReplyDelete
  23. //Kailashi said...
    //திருவல்லிக்கேணியில்! ஆலாவன ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!//

    ஆவாஹன ஹஸ்தம் - தட்டச்சுப் பிழையோ//

    இல்லீங்க கைலாஷி ஐயா! இதைப் பாருங்க!
    http://www.geocities.com/sumivaradan/my_postings/Thiruvallikeni_anubavams.pdfஆலாவன ஹஸ்தம் தான்! ஆக்வன ஹஸ்தம்-ன்னும் சொல்லுவாங்க!
    ஆ-வா என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!

    //சோளசிம்மபுரம் இரு கோவில்களாக உள்ளது. மூலவரும் அமிர்தபலவல்லி தாயாரும் மலைக் கோவிலில் சேவை சாதிக்கின்றனர், உற்சவர் பக்தோசிதன் அடிவாரத்தில் ஊர்க் கோவிலில் சேவை சாதிக்கின்றார். இவரும் ஆவாஹன ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார்//

    ஆமாம்! உற்சவர் மலைக்கு கீழே! ஊரில் தான்!
    கோயில்கள்-தகவல்கள்-அதன் புகைப்படங்கள் என்றால் உங்களைத் தான் கேட்கணும்! அவ்வளவு அத்துப்படி உங்களுக்கு! நன்றி கைலாஷி ஐயா!

    ReplyDelete
  24. //வல்லிசிம்ஹன் said...
    இந்த வரிகளுக்கு நன்றி,. என்னால் யாரும் நரசிங்கத்தை அடக்குவது என்ற வரிகளைக் கேட்டாலே நொந்துவிடும். நன்றி ரவி.//

    ஹா ஹா ஹா
    சூப்பர் வல்லிம்மா! நன்றி! இன்னிக்கி உங்களவர் விஷேஷமாச்சே! சும்மாவா? :)

    சரப மூர்த்தி, சூலினி, பிரத்யங்கரா தேவி இவர்கள் நரசிம்மத்தைக் கிழிக்க எண்ணிய போது, கண்டபேருண்டம்-ன்னு நரசிம்மத்துக்குள் இருந்து இரட்டைத் தலை பெரும் பறவை வந்தது, வென்றது-ன்னும் இவிங்களே சொல்லுவாங்க! :)

    சரபேஸ்வரர் தோன்றி நரசிம்மத்தை அணைத்துக் கொண்டார், குத்தி எல்லாம் கிழிக்கவில்லை, உடனே நரசிம்மர் சாந்தமானார் என்பதும் சிலர் சொல்வதுண்டு! திருபுவனத்திலும் சரபேஸ்வரர் ஆலயம் இப்படித் தான் இருக்கு!

    எது எப்படியோ, நரசிம்மப் பெருமாள், குழந்தைப் பிரகலாதனுக்கு மட்டுமே குளிர்ந்தார்! வேறு எந்த மந்திர தந்திரங்களுக்கும் அல்ல! இது வேத சத்தியம்! வேதங்களிலும் உள்ளது!

    சரப உபநிஷத் எல்லாம் பின்னாளில் தான்! ஆதி உபநிஷத்களில் கூட அவற்றுக்கு இடமில்லை! ஏன் இந்தப் பின்னாளைய போக்கு-ன்னு தான் தெரியலை!

    நரசிம்மரா? எதிர்க்க, சரபேஸ்வரர்
    வாமனரா? எதிர்க்க, சட்டநாதர்
    இப்படி ஏன் இந்தப் பின்னாளைய போக்கு-ன்னு தான் தெரியலை!

    ReplyDelete
  25. //வல்லிசிம்ஹன் said...
    நானும் நரசிங்கனையும் அனுமனையும் சேர்த்தேன் இன்று, நாமக்கல்லில்:)//

    சூப்பரோ சூப்பர்!
    நாமக்கல் வரைக்கும் போயி, சிபி அண்ணா வீட்டுக்குப் போகலை-ன்னா எப்படி? :))

    ReplyDelete
  26. KRS,

    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

    1. நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால் அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
    => பிரகலாதன் சொன்னமாதிரி - இவர்தான் dy/dx லயும் இருக்கார் - x->infinity லயும் இருக்காரே!

    2. பந்தனை தீரப் பல்லாண்டு - பகவானுக்கு அசதி என்ற பொருள் பொருந்தாத ஒன்று; வருத்தம் ஏன் வந்தது என்று சொன்ன விதம் அழகாக இருக்கிறது.

    3. 1987-91: ஒவ்வொரு வருடமும் சோளிங்கர் சென்று இரண்டு மலைகளும் ஏறி யோக ஆஞ்சனேயரையும், யோக நரசிம்மரையும் தரிசித்த அனுபவத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    ரங்கா.

    ReplyDelete
  27. V.திவாகர் சார் மின்னஞ்சலில் அனுப்பியது...
    'அழகழகா' என்ற அவர் சொன்ன சொல்லை அனைவரும் அறியும் பொருட்டு இங்கேயும் பதிக்கிறேன்!
    ------

    ஓ.. அழகழகான பதிவு கே ஆர் எஸ்!

    'அழகழகா' என்று ஆழ்வார் நரசிம்மரை அழைப்பார். சிங்கமுகம் மிருகங்களில் மிக அழகு. தலைக்கு கீழே உள்ள உடலோ புருஷோத்தமன். மனிதவடிவின் அழகு. இரண்டு அழகுககளும் இன்று ஒன்று சேர அவதாரம் செய்தவனை அழகழகன் என்று அழைப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்

    நரசிம்ம பெருமாள் தாளே சரணம்
    திவாகர்

    ReplyDelete
  28. தமிழிலும், ஆன்மீகத்திலும் புகுந்து விளையாடுகிறீர்கள் மகாவிஷ்ணு.

    நான் மிக நேசித்த வரிகள்....

    //ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)//

    அதே போல நான் மிக நேசிக்கும்
    இறை நாரணன்.

    அவர் பெருமை சொல்லும் உங்கள் தமிழான்மீகச் சேவை சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. அதானே! திட்டுங்கப்பா! திட்டுங்க! அடச்சே, எப்பமே திட்டற ராகவன் கூட இப்பல்லாம் திட்ட மாட்டேங்குறான்! :)//

    எல்லாம் உங்க மேல பயம்தான் ;)
    இப்போதான் நீங்க ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு நானும் ரெடின்னு ரெஞ்சுக்கு பேச ஆரம்பிச்சுட்டீங்க.உங்க கோவத்தை பார்த்து ஊரே கதி கலங்கி போய் இருக்காம்.BBC நீயுஸ்ல சொன்னாங்கோ.ஆகவே உங்ககிட்ட யாருமே வம்பு சண்டைக்கு வர மாட்டாங்களாம்:(
    எனக்கு அழுகை அழுகையா வருது..யாராச்சும் இந்த கேஆரெஸை நல்லா திட்டுங்களேன் :(((

    KRS no longer calm man,He is the bad man :)))

    ReplyDelete
  30. அன்புள்ள கேஆர் எஸ்,

    அருமையான பதிவு! இன்றுதான் படித்தேன். இந்த அவதாரத்தின் மகிமையே அதன் விரைவுதான். "ஆடி ஆடி அகங்கரைந்து..." பாசுரத்தில் எதற்கு குறிப்பாக நரசிம்மனைக் கூப்பிடவேண்டும் ஆழ்வார்? ஏன் இவ்வுலகில் நம்மிடையே ஒருவராக வாழ்ந்த இராமனையோ கண்ணனையோ அழைக்கவில்லை? காரணம் "எங்கும் நாடி நாடி" என்ற வரிகள்தான். இராமனோ சீதைக்குத் தேவையான தருணத்திலே ஒருவருட காலம் அவள் கண்ணில் படாமல் போனான். கண்ணனோ, ஓடி ஒளியும் விளையாட்டுப்பிள்ளை. ஆனால், இறைவன் எங்கும் உளன் என்று கூறிய மாத்திரத்தில், அடியவனான ப்ரஹலாதனை காக்க நொடிப் பொழுதில் தோன்றியவன் நரசிம்மனே என்றபடியால், ஆடி ஆடி அகங்கரைந்த ஆழ்வார், மற்ற அவதாரங்களை விடுத்து, விரைவில் தோன்றிய நரசிம்மனைப் பற்றுகிறார். ஏற்கெனவே கரைந்துவிட்ட அவரால், மேலும் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதாகையால், இராமனையும் கண்ணனையும் விடுத்து நரசிம்மனைப் பற்றினார்.

    "எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து..." என்ற பாசுரம், திருவாய்மொழி 2-8-9 பாசுரம். கம்பனுடையதல்ல.

    திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனின் திருக்கரத்தை, "ஆஹ்வான ஹஸ்தம்" என்பர். ஆஹ்வானம் என்றால் "அழைத்தல்" என்று பொருள். "ஆஹ்வான" என்பதுதான் சரியான் உச்சரிப்பு.

    //இனிமேல் எல்லாரும் குளிக்காம போயி நரசிம்மரைக் கும்பிடணும்-ன்னு அர்த்தம் எடுத்துக்க கூடாது! :)//

    குளிக்காம கும்பிட்டா நரசிம்மன் கோவிச்சுப்பான்னும் அர்த்தம் பண்ணிக்கக் கூடாது "எற்றே தன் கன்றின் வழுவன்றோ காதலிக்கும், அன்று அதனை ஈன்று உகந்த ஆ" என்பது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாக்கு.

    //ஆடிக்கொண்டே கண்ணீர் விட்டுக்கொண்டே அவனை தரிசித்தால்//

    ஆனால் தொண்டரடிப்பொடிஆழ்வார் இக்கண்ணீரை எவ்வாறு குறை கூறுகிறார் பாருங்கள்...

    இனிதிரைத்திவலைமோத எறியும்தண்பரவை மீதே
    தனிகிடந்து அரசுசெய்யும் தாமரைக்கண்ணனெம்மான்
    கனியிருந்தனையசெவ்வாய்க் கண்ணனைக்கண்டகண்கள்
    பனியரும்புதிருமாலோ என்செய்கேன்பாவியேனே

    என்கிறார். அவனை தரிசிக்கும் பொழுது, "காலாழ்ந்து, நெஞ்சழிந்து, கண்சுழன்றதால்" உருவான கண்ணீர் அவனைக் காணத்தடையாக உள்ளதே! அவனைக் காணமுடியாமைக்கு என்ன பாவம் செய்தேனோ என்கிறார். (இது குறைக்காகக் கூறவில்லை. சுவைக்காகவே கூறினேன்)

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  31. //ரங்கா - Ranga said...
    KRS,
    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க//

    :)
    வலையுலகத்துக்கு மீள் நல்வரவு ரங்கா! :)

    //=> பிரகலாதன் சொன்னமாதிரி - இவர்தான் dy/dx லயும் இருக்கார் - x->infinity லயும் இருக்காரே!//

    ஆமாம்! அதான் dy/dx என்ற வெறும் சின்ன கணக்கு மட்டும் தான் அவன் என்று நினைத்து விடக் கூடாது!
    x->infinity என்ற பெரிய கணக்கெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிறவும் கூடாது! :)

    //2. பந்தனை தீரப் பல்லாண்டு - பகவானுக்கு அசதி என்ற பொருள் பொருந்தாத ஒன்று; வருத்தம் ஏன் வந்தது என்று சொன்ன விதம் அழகாக இருக்கிறது.//

    பந்தனை=அசதி என்பது அகராதிப் பொருள்! அதான் வருத்தம்-ன்னும் மாத்திச் சொன்னேன்! பெரியாழ்வாருக்கு அவன் (மாப்)பிள்ளையாச்சே! அதான் நரசிங்கத்துக்கே அசதியோ-ன்னு ஆயாசப்படறார்! பெத்த மனசு அல்லவா? :)

    //3. 1987-91: ஒவ்வொரு வருடமும் சோளிங்கர் சென்று இரண்டு மலைகளும் ஏறி யோக ஆஞ்சனேயரையும், யோக நரசிம்மரையும் தரிசித்த அனுபவத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி//

    அருமையான அனுபவம் சோளிங்கர் மலை ஏறுதல்! ரொம்ப வசதிகள் இல்லாத மலை! அசதியாகவும் இருக்கும் சில சமயம்! :)

    ஆனால் அந்தக் குரங்குகள் கூடவே வரும் பாருங்க! அதுங்க பண்ணற சேட்டையில் அசதி எல்லாம் பறந்தே போயிரும்! :)
    ஆனா நம்ம கையில் குச்சி முக்கியம்! அப்போ தான் சேட்டையை ரசிக்க முடியும்! :)

    ReplyDelete
  32. @திவாகர் சார்
    //ஓ.. அழகழகான பதிவு கே ஆர் எஸ்!
    'அழகழகா' என்று ஆழ்வார் நரசிம்மரை அழைப்பார். சிங்கமுகம் மிருகங்களில் மிக அழகு. தலைக்கு கீழே உள்ள உடலோ புருஷோத்தமன். மனிதவடிவின் அழகு. இரண்டு அழகுககளும் இன்று ஒன்று சேர அவதாரம் செய்தவனை அழகழகன் என்று அழைப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்//

    உங்க பின்னூட்டம் தான் அழகழகு! அழகோ அழகு!
    என்ன ஒரு அழகழகான சொற்றொடர் இந்த "அழகழகு"!

    ஆள்+அரி=ஆட்களில் அழகன்! ஆணழகன்! விலங்குகளில் அழகன்! அரி அழகன்!
    அடுக்குத் தொடர் அழகன்! :)

    ReplyDelete
  33. //அந்தோணி முத்து said...
    தமிழிலும், ஆன்மீகத்திலும் புகுந்து விளையாடுகிறீர்கள் மகாவிஷ்ணு//

    அந்தோணி அண்ணே, நலமா? பேசி ரொம்ப நாளாச்சு!

    //
    நான் மிக நேசித்த வரிகள்....
    //ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)//
    //

    ஹிஹி! அப்பப்ப இப்படியெல்லாம் உளறுவேன்! கண்டுக்காதீங்க! :)

    //அதே போல நான் மிக நேசிக்கும்
    இறை நாரணன்.
    அவர் பெருமை சொல்லும் உங்கள் தமிழான்மீகச் சேவை சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்//

    நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்பார் பாட்டில்!
    நாரண நேசம் என்பதே அந்த எளிமை, இடையர் லெவலுக்கும் "இறங்கி" வரும் தன்மை தான்!

    வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றிண்ணே!

    ReplyDelete
  34. // Anonymous said...
    எல்லாம் உங்க மேல பயம்தான் ;)
    இப்போதான் நீங்க ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு நானும் ரெடின்னு ரெஞ்சுக்கு பேச ஆரம்பிச்சுட்டீங்க.உங்க கோவத்தை பார்த்து ஊரே கதி கலங்கி போய் இருக்காம்//

    ஹிஹி! எல்லாம் நீ கொடுத்த தைரியம் தான் சிஸ்டர்! அதான் "அடியேனை" விட்டுட்டேன்! "டேய்"-ன்னு ஆயிட்டேன்! :)))

    //ஆகவே உங்ககிட்ட யாருமே வம்பு சண்டைக்கு வர மாட்டாங்களாம்:(//

    ஹிஹி! வரது வம்புச் சண்டை! அப்புறம் என்ன கம்புச் சண்டை மாதிரி ஃபீலீங்ஸ் ஆஃப் சிங்கப்பூர்?

    //எனக்கு அழுகை அழுகையா வருது..யாராச்சும் இந்த கேஆரெஸை நல்லா திட்டுங்களேன் :(((//

    கேஆரெஸ் ஒரு கண்ணக் குழந்தை! எல்லாரும் கொஞ்சி வெண்ணெய் ஊட்டி விட்டு திட்டுவாங்க! ஆனா அது திட்டு அல்ல! :)

    ReplyDelete
  35. // Venkatesh said...
    அன்புள்ள கேஆர் எஸ்,
    அருமையான பதிவு! இன்றுதான் படித்தேன். இந்த அவதாரத்தின் மகிமையே அதன் விரைவுதான்.//

    ஆமாம் வேங்கடேஷ்! உங்க வேகம் என் வேகம் இல்லை! ஜெட் வேகம்! :)

    //"ஆடி ஆடி அகங்கரைந்து..." பாசுரத்தில் எதற்கு குறிப்பாக நரசிம்மனைக் கூப்பிடவேண்டும் ஆழ்வார்? ஏன் இவ்வுலகில் நம்மிடையே ஒருவராக வாழ்ந்த இராமனையோ கண்ணனையோ அழைக்கவில்லை? காரணம் "எங்கும் நாடி நாடி" என்ற வரிகள்தான்//

    உம்ம்ம்ம்

    //இராமனோ சீதைக்குத் தேவையான தருணத்திலே ஒருவருட காலம் அவள் கண்ணில் படாமல் போனான். கண்ணனோ, ஓடி ஒளியும் விளையாட்டுப்பிள்ளை. ஆனால், இறைவன் எங்கும் உளன் என்று கூறிய மாத்திரத்தில், அடியவனான ப்ரஹலாதனை காக்க நொடிப் பொழுதில் தோன்றியவன் நரசிம்மனே என்றபடியால்//

    அருமை! அருமை!
    அதான் கோதையும் கண்ணாலம் சீக்கிரம் நடக்க நரசிங்கனைக் கனவில் வேண்டினாளோ?

    //"எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து..." என்ற பாசுரம், திருவாய்மொழி 2-8-9 பாசுரம். கம்பனுடையதல்ல//

    ஹிஹி! தெரியும்! சும்மா குமரனைப் பொருள் சொல்லத் தான் இப்படி வம்பு பண்ணேன்! ஹரி வினா, அறி வினா இதெல்லாம் அடிக்கடி இங்கன நடக்கும்! கண்டுக்காதீங்க! :)

    //திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனின் திருக்கரத்தை, "ஆஹ்வான ஹஸ்தம்" என்பர். ஆஹ்வானம் என்றால் "அழைத்தல்" என்று பொருள். "ஆஹ்வான" என்பதுதான் சரியான் உச்சரிப்பு//

    அப்படியா? மன்னிக்கவும்! இதோ பதிவில் திருத்தி விடுகிறேன்!

    சுமித்ரா வரதராஜன் அவர்கள் சொன்னதை அப்படியே பதிவில் இட்டு விட்டேன்! கைலாஷி ஐயாவும் ஆவாஹனம் என்று சொல்லி இருந்தார்! அது ஆஹ்வானமோ? "ஹ்" இடம் மாறி வரணும் போல!

    //குளிக்காம கும்பிட்டா நரசிம்மன் கோவிச்சுப்பான்னும் அர்த்தம் பண்ணிக்கக் கூடாது "எற்றே தன் கன்றின் வழுவன்றோ காதலிக்கும், அன்று அதனை ஈன்று உகந்த ஆ" என்பது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாக்கு//

    அருமை!
    கன்றை ஈன்ற தாய்ப்பசு நாவால் அன்றோ அதைச் சுத்தப்படுத்துகிறது! அசுத்தம் தெரிவதில்லையே என்று சொல்லும் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வாக்கு அமுதம்! இது அவரின் எந்த அருளிச் செயலில் இருக்கு வேங்கடேஷ்?

    //"காலாழ்ந்து, நெஞ்சழிந்து, கண்சுழன்றதால்" உருவான கண்ணீர் அவனைக் காணத்தடையாக உள்ளதே!//

    ஹா ஹா ஹா!
    காதலிக்கு சில சமயம் காதலன் எது செஞ்சாலும் குற்றமாத் தான் தெரியும்! அது போல ஆழ்வாருக்கு! :)
    மனசு அழலைன்னாலும் குற்றம், அழுதாலும் குற்றம்! :)

    ReplyDelete
  36. அருமையான பதிவு அன்பரே...

    ReplyDelete
  37. அன்புள்ள கேஆர் எஸ்,

    இந்த ஜெட் வேகமானது இன்னொரு தருணத்திலும் வெளிப்படுகிறது. கஜேந்திரன் தன் முயற்சியை விடுத்து அவனை அழைத்த பொழுது, அவன் (அவன் காக்க வைத்த வருடங்கள் ஒரு புறமிருக்கட்டும்) அருள நினைத்த மாத்திரத்தில், (S.Ve Shekher நாடகத்தில் வருவதுபோல்) சட்டென்று தன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு அவன் மேல் துணி நழுவியதையும் பொருட்படுத்தாமல் விரைந்தானாம். கருடனும் இவ்வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஒரு நொடி பின்னர் தான் அவனடியில் தன் முதுகை வைக்கிறான். சுதர்ஸன சக்கரம் (வேகத்திற்கு பெயர் போனது) மிரண்டு போய் பின்னர் வந்து அவன் கையில் பொருத்திக் கொண்டதாம். இந்த வேகத்திற்கு பராசர பட்டர் அஞ்சலி செய்கிறார் "பகவத் த்வராயை நம:" என்று. "த்வரை"-"வேகம்".

    திருமதி சுமித்ராவை அடியேன் நன்கறிவேன். அவருடைய பாட்டி வீட்டில்தான் நாங்கள் 7 வருடங்கள் குடியிருந்தோம். அவர் அவ்வாறு எழுதியது அச்சுப்பிழையாகத்தான் இருக்கும்.


    //ஹிஹி! தெரியும்! சும்மா குமரனைப் பொருள் சொல்லத் தான் இப்படி வம்பு பண்ணேன்! ஹரி வினா, அறி வினா இதெல்லாம் அடிக்கடி இங்கன நடக்கும்! கண்டுக்காதீங்க! :)//

    ஓ சாரி, நான் தான் கரடிபோல் வந்து விட்டேனா? மன்னிக்கவும். தங்களுக்கு இது தெரியாது என்றது சிறிது நெருடலாகவே இருந்தது. சரி சரி, காமெடி கீமெடி பண்ணிடாதீங்க! :-)

    //அருமை!
    கன்றை ஈன்ற தாய்ப்பசு நாவால் அன்றோ அதைச் சுத்தப்படுத்துகிறது! அசுத்தம் தெரிவதில்லையே என்று சொல்லும் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வாக்கு அமுதம்! இது அவரின் எந்த அருளிச் செயலில் இருக்கு வேங்கடேஷ்?//

    இது அவர் அருளிச்செய்த "ஞானசாரம்" என்ற நூலில் 25வது பாசுரமாக உள்ளது.

    இதை தெரிந்துதானே கேட்கிறீர்கள்?? என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலயே :-) :-) :-)

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  38. dei ravi :D
    intha comment poda maranthuden..ipo ok :)))

    ReplyDelete
  39. //அடியார் said...
    அருமையான பதிவு அன்பரே...//

    நன்றி அடியாரே! :)

    ReplyDelete
  40. //Venkatesh said...
    சுதர்ஸன சக்கரம் (வேகத்திற்கு பெயர் போனது) மிரண்டு போய் பின்னர் வந்து அவன் கையில் பொருத்திக் கொண்டதாம். இந்த வேகத்திற்கு பராசர பட்டர் அஞ்சலி செய்கிறார் "பகவத் த்வராயை நம:" என்று. "த்வரை"-"வேகம்".//

    அருமையோ அருமை!
    ஸ்ரீயாகிய அன்னையும் உத்தரீய முடிச்சில் சற்றே அசைபட, அதையும் பொருட்படத்தாத வேகம், பகவானின் வேகம் என்று நினைத்துப் பார்க்கும் போதே இனிக்கிறது!

    //ஓ சாரி, நான் தான் கரடிபோல் வந்து விட்டேனா? மன்னிக்கவும்//

    சேச்சே! No Issues! இது போல ஹரி-வினா எல்லாம் மற்ற அடியார்களும் குணானுபவத்தில் திளைக்கணும் வேணும்-ன்னே கேட்டு வைப்பது! :))

    //தங்களுக்கு இது தெரியாது என்றது சிறிது நெருடலாகவே இருந்தது.//

    அடடா! அடியேன் அறிந்தது நிஜமாலுமே மிகவும் கம்மி வேங்கடேஷ்! அதுவும் ஆச்சார்யர் வாயிலாக அறிந்து/உணர்ந்து கொள்வது போல் வருமா?
    அறி தோறும் அறியாமை கண்டற்றால்!
    அறி தோறும் அரியே கண்டற்றால்!

    //இது அவர் அருளிச்செய்த "ஞானசாரம்" என்ற நூலில் 25வது பாசுரமாக உள்ளது.
    இதை தெரிந்துதானே கேட்கிறீர்கள்?? என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலயே :-) :-) :-)//

    ஹிஹி!
    ஞான சாரம், பிரமேய சாரம்-ன்னு பேரு தான் தெரியும்!
    மணவாள மாமுனிகள் வியாக்யானம் பெற்றவை. உடையவர் சீடர்கள் எழுதியவற்றிலேயே முதலில் எழுந்த நூல்! நூற்றந்தாதி கூட இதற்குப் பின்னர் தான்!

    ஆனா உள்ளே சென்று அதிகமா வாசிச்சதில்லை! நுனிப்புல்லோடு சரி! :)
    இனிமே தான் வாசிக்கணும், உங்கள் தயவால்! வெண்பா நடையில் அருமையா இருக்கு!

    ReplyDelete
  41. //Anonymous said...
    dei ravi :D
    intha comment poda maranthuden..ipo ok :)))//

    என்னை டேய்-ன்னு மத்தவங்க கூப்பிட்டா அப்போ சப்போர்ட்டுக்கு வருவாங்க தங்கச்சி!
    ஆனா நீ கூப்பிட்டா, யாரும் வரமாட்டாங்க! ஏன்னா தெரியும்...நான் உன் கிட்ட நல்லாச் சிக்கிக்கிட்டு இருக்கேன்னு! :)))

    ReplyDelete
  42. //ஆனா நீ கூப்பிட்டா, யாரும் வரமாட்டாங்க! ஏன்னா தெரியும்...நான் உன் கிட்ட நல்லாச் சிக்கிக்கிட்டு இருக்கேன்னு! :)))//

    naana sikka sonnen :D neegathaan sikkitinga..ur head writing..it cant be changed ;)

    aana unga fans ellam personala vanthu thitturanga :D
    eppadi enga krs theivathai nee dei,da nu ellarume sollurenu...

    naan marupidiyum solluvene..

    deiiii ravi :D

    ReplyDelete
  43. //எதிரிகள் எப்படி உருவாகிறார்கள்? :)
    ஒரு விஷயத்தை நல்லபடி மாற்ற வேண்டும் என்று மனப்பூர்வமாகச் செயல்பட்டுப் பாருங்கள்,
    எதிரிகள் புற்றீசல் போல் கிளம்புவார்கள் :)//

    adada..enna oru theory :D

    ReplyDelete
  44. ////எதிரிகள் எப்படி உருவாகிறார்கள்? :)
    ஒரு விஷயத்தை நல்லபடி மாற்ற வேண்டும் என்று மனப்பூர்வமாகச் செயல்பட்டுப் பாருங்கள்,
    எதிரிகள் புற்றீசல் போல் கிளம்புவார்கள் :)//

    inimel dont write spiritual post :D
    let's shift to youthful post..what do u say

    ReplyDelete
  45. நர்ரசிம்ம ஜெயந்தி பதிவுக்கு இப்படி ஒருவாரம் கழித்து பின்னூட்டம்போடுவதற்கு மன்னிக்கவும்.
    பிரஹலாதனா அனுமனா என்று தலலப்பிலேயே சிந்திக்கவைத்துபடிக்க வைத்தீர்கள் ரவி. வெங்கடேஷும் நீங்களும் குமரனும் மற்றும் பலரும் சொல்லிய கருத்துக்கள் அற்புதம்.

    தாமதமாய் வந்து இனி நான் என்ன கருத்துக்களை சொல்வதோ?:)

    எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உற்றோமேயாவோம் உமக்கே நாமட்செய்வோமெனக்கூறி அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை பந்தணைதீரப் பல்லாண்டுபாடுவோம் எனவும் வேண்டி முடிக்கிறேன்.
    ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் திருவடி சரணம்.


    அரங்கப்ரியா

    ReplyDelete
  46. ’ஆஹ்வாந முத்ரை’ என்பது சரியே.
    ஆஹ்வாநம் - அழைப்பு

    பெயரைச் சொல்லி ஒருவரை அழைப்பதால் Name என்பது வடமொழியில் ‘ஆஹ்வயம்’ ஆகிறது.
    (எ-கா) ‘பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய* பட்டநாத....’
    * பேய் எனும் பெயருடையவர்

    தேவ்

    ReplyDelete
  47. அருமையான பதிவு கண்ணா. (இதை எப்படி வித விதமா சொல்றதுன்னு கத்துக்கணும் :) பின்னூட்டங்களும். நன்றி... நன்றி.

    ReplyDelete
  48. அன்பு நண்பர் கேயாரெஸ் அவர்களுக்கும், எனக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !

    நான் மீளவும் உங்களிடம் வந்துவிட்டேன். எனது மருத்துவமனை அனுபவங்கள் இங்கே...
    http://mrishansharif.blogspot.com/2009/05/01.html

    என்றும் அன்புடன் உங்கள்,
    எம்.ரிஷான் ஷெரீப்.

    ReplyDelete
  49. I am happy to comme across your blog. I am also a beneficiarry of Ahobila Narasimha and Chenchu Lakshmi Thayar. I have enjoyed HIS benevolence and blessed me during my visit Ahobilam last Narashimha Jayanthi alone from Puducherry to Ahobilam, even though I did not know Telegu nor the Bus Route. All is that I started off on a doubtful note against the wishes of my Mother and Wife (heat wave,language problem, no direct bus service but have to chage buses at Tindivanam, Kanchipuram, Tirupati, and Allagada and back home to Chennai). How I reached Ahobilam in comfort is another story of its own. He guided me through right from the start and made it possible for me to pray at all the nine dieties of Ahobilam the next day (in a single day), take part in the Narasimha Jaynthi special Pooja at Upper Ahobilam the day after the next day and return the same night home. (I forgot to tell about the thunder showers during my walk to Ugra Narashimha that afternoon at 1 P.M. The sun was scorching literally had to jump around, I prayed for a cool shower, within next ten minutes there was a thundershower for the next 30 minutes, when we returned to upper Ahobilam we were wet but there was no sign of any rain in there.) My wife, Mother and people who used to go for pilgrimage to Ahobilam wouldnt believe me that I made it alonne, that to prayed all nine deities in single day. That too with miracles I was bestowed with which facilitated my completion of my pilgrimage. This year also, I am undertaking my pilgrimage to Ahobilam, All I pray is for his blessings for completing my pilgrimage like last year.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP