Friday, August 28, 2009

தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :)

தமிழ்மணம் காசி அண்ணாச்சி துவங்கி வச்ச சங்கிலிப் பதிவு சுமாரா எத்தினி நாள் ஓடும்-ன்னு நினைக்கறீங்க? 100-வது நாள்? 365-வது நாள்?? இரட்டைத் தீபாவளி???
* காசு மாலை தெரியும்? சுமார் பத்து பவுன்-ல பண்ணீறலாம்!
* ஆனா காசிச் சங்கிலி? எவ்வளவு பவுன் தேறும்-ன்னு தோராயமாச் சொல்லுங்களேன்! :) அவ்ளோ பவுன்-ல அண்ணாச்சிக்கு செஞ்சி போட்டுறலாம்! :)) இளா, மொய்ப் புத்தகத்தைக் கையில் எடுங்க! :))

சங்கிலி பாக்கத் தான் சிறுசா இருக்கு! ஆனா அதன் ஆழம்?..........சதா தங்கச் சங்கிலிகளை ஆழம் பார்க்கும் பெண்களால் கூடச் சொல்லீற முடியாது! :)

காசி அண்ணனை நட்சத்திரமாகப் பார்ப்பது, எனக்கு, இதான் முதல் முறை! :)
பின்னே, திருவிளையாடல் பட ஸ்டைலில், "நாடகத்தையே நடத்துபவன், நடிக்க முடியுமா அப்பா?" :))

* அவரோட நட்சத்திர வாரம் முடியும் தறுவாயில்,
* காசிச் சங்கிலியில்,
* என் பங்குக்கு கொஞ்சம்,
* குண்டு மணிகளைக் (வெடி-குண்டு மணிகளைக்) கோர்க்கிறேன்!
* உபயதாரர்: ஸ்ரீலஸ்ரீ கோவி. கண்ணன்!:)

இதோ அண்ணாச்சியின் கேள்விகளுக்குப் பதில்! ஆனால் வெறும் பதில்களா இல்லாம, அவருக்கே எதிர்க் கேள்விகளாக... :)))))))


1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

அண்ணாச்சி,
"தேவையான அளவு" உள்ளதா-ன்னு பார்ப்பது ஒரு வகை!
"நம்ம தேவைக்கு உள்ளதா"-ன்னு பார்ப்பது இன்னொரு வகை!

எப்பமே ஒரு இயக்கம், முதலில் பரவும் போது, "தேவையான அளவை" நோக்கித் தான் பரவும்! பரந்து விரிதல் என்பது இன்றியமையாத ஒன்று!
ஆனால் ஓரளவு முத்திரை பதித்து விட்ட பின்...? = "தேவைக்கு ஏற்றவாறும்" பரவுதலும் வேண்டும்!

தற்கால இணையத் தமிழரின் "தேவைகள்" என்ன? என்னிக்காச்சும் ஆய்வு செய்திருக்கோமா? அவர்களையே கேட்டிருக்கோமா?

தொண்டு செய்வாய் தமிழுக்கு - துறை தோறும், துறை தோறும், துடித்தெழுந்தே!-ன்னு சொல்லுவாரு பாவேந்தர் பாரதிதாசன்!
இணையத் தமிழ் இன்னும் "அதிகமாக" புழங்க என்ன செய்ய வேண்டும்? - என்பதை நிறுத்தக் கூடாது! ஆடிப் பட்டம் விதைச்சிக்கிட்டே தான் இருக்கணும்! ஆனா அது மட்டுமே போதுமா? ஐப்பசி-லயும் பயிரு வைக்கணும்-ல? அப்போ தானே தைப்பொங்கல் பாக்க முடியும்?

மீண்டும் அதே கேள்வி!
இணையத் தமிழரின் "தேவைகள்" என்ன? என்னிக்காச்சும் ஆய்வு செய்திருக்கோமா? அவர்களையே கேட்டிருக்கோமா?
அந்தத் "தேவை அறிந்து", தமிழ்ச் சேவை கொடுப்பது எப்படி? - வலையுலக முன்னோடியான நீங்க தான் சொல்லணும்!

என்னெல்லாம் இக்காலத் தமிழனுக்குத் தேவையா இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

* அரசியல்? - தமிழகச் சட்டப் பேரவை மாதிரி வலைத் தமிழகச் சட்டப் பேரவை-ன்னு ஒன்னு இருக்கா? மக்கள் அரசை, வலையில் இருந்து வழி காட்ட, இணையான ஒரு வலையரசு சாத்தியம் இல்லையா?

* வேலை வாய்ப்பு - தமிழில் ஒரு வேலை வாய்ப்புத் தளமாச்சும் இருக்கா? மொழிக் குறுகல்-ன்னு சொல்லீருவாய்ங்க! ஆனால் தமிழ் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமாச்சுமாவது ஒரு தமிழ்த் தளம் இருக்கா?

* திருமணத் தளம் - எத்தனை தமிழர்கள், தமிழில், திருமணத் தளம் தேடுகிறார்கள்? :) அட, சாதி லிஸ்ட்டு கூட வாயில் நுழையாத மாதிரி ஆங்கிலத்தில் தான் போடுறான், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட!
சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன்! பருநாகக் கண்ணரையர்-ன்னு ஒரு சாதி இருக்குன்னு வச்சிக்குவோம்! இதைத் தமிழில் வரன் தேடுவது எளிதா இல்லை Matrimony.comஆ? :))

தமிழ் முறைப்படியான திருமணங்கள், தமிழ் மக்கட் பெயர்கள், தமிழ் ஆர்வலர் குடும்பங்களுக்கு இடையேயான வரன் தேடல்-ன்னு ஒருங்கிணைந்த தமிழ்த் திருமணத் தளங்கள் முடியாதா?
அட, அல்காநந்தா மடம்-ன்னு பேரு வச்சிக்கிட்டு, சைட் பாரில், "நம்மவர் வரன் தேடல்"-ன்னு வச்சிக்கறாங்களே! தமிழுக்கு மட்டும் முடியாதா என்ன?

* குடும்ப நலம் - எத்தனை தமிழர்கள், தமிழில், இணைய ஆலோசனை பெறுகிறார்கள்?
அட ஒரு கிராமத்துத் தமிழ்ப் பொண்ணுங்க! மாறி வரும் சமூகச் சூழ்நிலையில், "லிவிங் டுகெதர்" சாத்தியமா-ன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படுறா!

ஆனா அவளுக்கு ரொம்ப ஆங்கிலம் தெரியாது! என்ன பண்ணுவா? நட்பு வட்டத்திலோ, ஆலோசனை மையத்திலோ முகம் கொடுத்து கேட்கும் அளவுக்கு தெகிரியம் இல்ல!
இணையத் தமிழ், இணையத் தமிழ்-ன்னு ரொம்ப பேசறோமே! இணையத்தில், தமிழில், அப்படியான ஒரு தனிப்பட்ட முறையிலான ஆலோசனைத் தளம் இருக்கா?

* ஆன்மீகம் - தமிழ் வளர்ச்சி = பல பேரு ஆன்மீகம்-ன்னு கண்டதையும் தனித்தனியா எழுதிக் குவிக்கிறோம்! :)
ஆனா ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களிலோ, இல்லை திருமுருகு ஆற்றுப்படையிலோ, "கேழல்"-ன்னு ஒரு சொல்லு வருதா?, "நாரணம்" என்பது மெய்யாலுமே ஒரு தமிழ்ச் சொல்லு தானா?-ன்னு தேடு தேடு-ன்னு தேட வேண்டிக் கிடக்கு! தேடு பொறி, அரிசிப் பொரி-ன்னு ஒன்னும் கிடையாது! :)

ஒருங்குறிப் படுத்தி வச்சிட்டோம்! மகிழ்ச்சி! ஆனால் தேடுபொறி தேவையா-ன்னு கூட இது வரைக்கும் யாரும் தேடலை!
ஆங்கில இலக்கிய இணைய நூலகங்கள் பல இருக்கு! ஒரு சொல்லைப் பிடித்தே, மொத்த ஆங்கில இலக்கியத்திலும் அச் சொல்லின் வீச்சைப் பிடித்து விடலாம்! இதையெல்லாம் இணையத் தமிழ்-ல முடியாதா?

தனித் தனியா, தீவு தீவா, தமிழ் முயற்சிகள் நிறைய வலையுலகில் உள்ளன! ஆனால் இவை அனைத்தும் "அறிவு" சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள்!
வணிக அளவில், அதுவும் லாபகரமான தமிழ் முயற்சிகள், எத்தனை இருக்கு? = விரல் விட்டு எண்ணீறலாம்! :)

காரணம்: தற்காலத் தமிழர்களின் தேவை என்ன-ன்னு அறிந்து, அதைத் தமிழில் வழங்கு சேவைகள், மிகவும் குறைவு!
அனைத்தும் "அறிவு சார்" முயற்சிகளே! "தேவை சார்" முயற்சிகளை நோக்கிச் செல்லும் காலம் வந்தே விட்டது!

பின்னூட்டம் திரட்டல் என்பது காலத்தின் தேவை-ன்னு, அன்னிக்கி நீங்க தான் முதலில் உணர்ந்தீங்க? இன்னிக்கி இம்புட்டு தூரம் வெற்றிகரமா வந்து நிக்குறோம்!
அது போல், தற்காலத் தமிழர்களுக்கு என்னென்ன தமிழில் தேவை?-ன்னு திரட்டப் போவது யாரு? எந்தக் காசி அவரு? தென்-காசியில் இருக்காரா? வட-காசியில் இருக்காரா? :)


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

முந்தைய கேள்வி-பதிலின் நீட்சியே இது!
ஊடக வளர்ச்சி இணையத் தமிழில் மிக நல்ல நிலையில் தான் இருக்கு! ஆனா தமிழில் உள்ள ஒரு விண்ணப்பப் படிவத்தை, அரசு தளத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்! அந்த அளவில் தான் இருக்கோம்!

நான் நெதர்லாந்து போகணும்! ஐரோப்பிய ஷென்ஜென் விசா (அ) டச்சு விசா வாங்க, இணையத்துக்குப் போனா, முழுக்க முழுக்க டச்சு மொழியிலேயே, நேர்காணல் சந்திப்பை நாமே குறித்துக் கொள்ளும்படி வச்சிருக்காக! மேலே உள்ள ஆங்கிலக் கொடியை அழுத்தினா தான், ஆங்கில Appointment Scheduler-ரே வருது!
தமிழில் இப்படி வழங்கிச் சேவைகள்? அட விசா, பாஸ்போர்ட், ரயில் டிக்கெட் எல்லாம் மத்திய அரசு! விட்டுருங்க! அரசுப் பேருந்து டிக்கெட் - தமிழ் வழங்கிச் சேவை இருக்கா?

தேவை என்ன என்று அறிந்து, Need Based Services, தமிழில் வழங்கு காலம் என்றோ?


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

* தமிழ் விக்கிப்பீடியா = தனி மனித/குழு சார்ந்தது! இணைய நம்பகத் தன்மை அது/இது-ன்னு பேசத் துவங்குவார்கள்!
* தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம் = அரசு சார்ந்தது! நம்பகத் தன்மை அதிகம் என்று ஒரு கருத்து!

தமிழ் விக்கிப்பீடியா + தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம், ஒருங்கே செயலாற்ற முடியாதா?
முடியாது என்றால், அதற்குத் தடையாய் இருப்பன யாவை?


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

முதல்வன் ஸ்டைல்-ல சொல்லணுமா? :)

ஒவ்வொரு பொறுப்புள்ள/பொறுப்பில்லாத/எழுதி மட்டுமே குவிக்கும் வலைப்பதிவரை,
அரசின், அந்தந்தத் துறை, தமிழ்ப் பயன்பாட்டுக் குழுவில் இடம் பெறச் செய்வேன்! :)
இவிங்க எல்லாரும் "அறிவு சார்"-இல் இருந்து,
"தேவை சார்"-க்கு திட்டம் வகுத்துக் கிட்டே இருக்கணும்!

* மருத்துவமா? = போடு டாக்டர் ப்ரூனோவை!
* கிராம வங்கிச் சேவையா? = போடு தமிழ் சசியை!
* அரசு அறிக்கைகள் ரொம்ப போரடிக்குதா? = போடு கோவி. கண்ணனை!

* பொதுவான குறை அறிதல் திரட்டியா? = போடு காசி ஆறுமுகத்தை!
* திருமணம்/காதல் தளங்கள், தமிழில் வேணுமா? = போடு வெட்டிப் பயலை!

* கோயிலில் தமிழ் அர்ச்சனை சரியில்லையா? சிதம்பரத்தில் மல்லு கட்டணுமா? = போடு கேஆரெஸ்-ஐ! :) ஆச்சார சீலர்கள் கிட்ட கேஆரெஸ்-ஆல தனியா அடி வாங்க முடியாதா? கூட அனுப்பு ஜிரா-வை! :)
* இவனுங்க அத்தினி பேருக்கும் அட்டென்ட்ஸ் எடுக்கணுமா? = போடு பாஸ்டன் பாலாவை!

இவனுங்க எவனுக்கும் சம்பளம் கிடையாது! பின்னூட்டம் மட்டுமே! :)
அதுவும் வழங்கிச் சேவைகள் சரியில்லை-ன்னு கருதினா,
அறிவுக் குழுவில் இருக்கும் அந்தப் பதிவரை,
"என்னய்யா கிழிச்ச?"-ன்னு திட்டி வரும் பின்னூட்டங்களுக்கு, ஸ்பெசலா அரசு மானியம்/ஊக்கத் தொகை வழங்கப்படும்! :)


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

* தமிழ் வலைப்பதிவுகள் = செல் பேசிகள் போல! சரி/சங்கடம் என்றே சொல்ல முடியாத படிக்கு, தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது!
* புதிதாக வலைப்பதிக்க வருவோர் = எழுத்துக் குப்பை-மலைகளுக்கு நடுவே, "வித்தியாசமாக" என்ன பதியலாம் என்று மட்டும் யோசித்துப் பதிந்தால், அடுத்த நாளே நீங்க = தமிழ்மண நட்சத்திரம்! :)


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

* இந்த ஐந்து ஆண்டு தமிழ்மணத்தின் சேவைகளுக்கு - வந்தாய், வென்றாய், இனிய வாழ்த்துக்கள்! அவ்ளோ தாங்க! அதுக்கு மேல எல்லாம் புகழ மாட்டேன்! :))
* ஆனா கேள்வி கேட்பேன் :)) = அடுத்த ஐந்து ஆண்டு, தமிழ்மணத்தின் சேவைகள் என்னென்ன?

மற்ற திரட்டிகளைக் காட்டிலும் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டப் போவது எது?
தமிழ்மணம் தமிழ்நாட்டில் கட்சி தொடங்குமா? :) - அப்படீன்னா ஒங்க கொடி, சின்னம், கொள்கை என்ன்ன? :))) - பழைய நட்சத்திரப் பதிவர்களுக்கு எல்லாம் தேர்தல் டிக்கெட் கொடுப்பீங்களா? இல்லை புதிய தலைமுறைக்கா? :)))

Jokes Apart...
* இது வரை, தமிழ்ப் பதிவுகளைத் திரட்டிய தமிழ்மணம்,
* இனி கூடவே, தமிழர்களையும், தமிழர் முயற்சிகளையும் திரட்டுமா?
* ஊருக்கு ஊர் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்குன்னா,
* ஒட்டு மொத்த இணையத்துக்கும் ஒரு தமிழ்ச் சங்கமாய், தமிழ்மணம் செயல்படுமா?
* "அறிவு ஜீவிகளின் திரட்டி"-ன்னு மட்டும் இல்லாம, ஆக்கப் பூர்வமான "தமிழ் முயற்சிகளின் சக்தி வாய்ந்த திரட்டி"-ன்னு ஆக முடியுமா? (ஈழ விடயத்தில் இது நிகழவில்லை என்பது என் தனிப்பட்ட வருத்தம் - "தனிப்பட்ட" வருத்தம் மட்டுமே!)

இந்தக் கேள்விக்கான விரிவான பதில் இங்கே! = http://madhavipanthal.blogspot.com/2009/05/5000.html


இந்த இருவரையும் சங்கிலிக்கு அழைக்கிறேன்!
1. கா.பி. அண்ணாச்சி என்று நான் அழைக்கும் கானா பிரபா! தன்னோட சொந்த போக்குக்கு மட்டும் இசை வழங்காது, வாசகர்கள் "தேவையைக் கேட்டு" வழங்குவதால்!

2. நம் அனைவர் வாயிலும், உள்ளத்திலும், அன்புடன் கலந்து விட்ட, திரு. செந்தில் நாதன்

* நன்கு உடல் நலம் தேறிய பின்...
* பிற்பாடு மெல்லவே வந்து, காசி அண்ணனுக்கு பதில் உரையுங்கள்!
* திரட்டிகளின் உள்ளார்ந்த "திரட்டும் சக்தியை" உலகத்துக்குக் காட்டியவர் நீங்கள்!
* உங்களை ஒட்டிய அனுபவங்களின் அடிப்படையில், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, உங்களை விடப் பொருத்தமானவர் கிடையாது என்பது அடியேன் எண்ணம்!

வாங்க செந்தில் நாதன்! வாங்க! மீண்டு, தேறி, நன்கு, எழுந்து, எழுத, வாங்க!

18 comments:

  1. :)

    பட்டையை கிளப்பிட்டிங்க கே ஆர் எஸ் !

    தொடரை தொடர்ந்ததற்கும் நன்றி !

    ReplyDelete
  2. ஆஹா....நமக்கெல்லாம் கேள்வி (மட்டும்)கேக்கத்தான் தெரியும்......:-))))

    காசியின் பதில் வர்றதுக்குள்ளே படத்தில் இருக்கும் காசி அல்வாவுக்கு சமையல்குறிப்பு போட்டுவைக்கவா?

    ReplyDelete
  3. //துளசி கோபால் said...
    ஆஹா....நமக்கெல்லாம் கேள்வி (மட்டும்)கேக்கத்தான் தெரியும்......:-))))//

    ஹிஹி! வாங்க டீச்சர்! கேள்வியே வேள்வி! :)

    //காசியின் பதில் வர்றதுக்குள்ளே படத்தில் இருக்கும் காசி அல்வாவுக்கு சமையல்குறிப்பு போட்டுவைக்கவா?//

    ஜூப்பரு! ஒடனே போடுங்க! தமிழ்மண நட்சத்திர அல்வா-ன்னு தலைப்பு வைங்க!

    நட்சத்திரத்துக்கு விடை கொடுத்து...ச்சே..."அல்வா" கொடுத்து அனுப்பி வைச்சா மாதிரியும் இருக்கும்! :)

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    :)
    பட்டையை கிளப்பிட்டிங்க கே ஆர் எஸ் !//

    அல்வா-ல பட்டைய எல்லாம் போடப்பிடாது கோவி அண்ணே!
    அப்பறம் அது பிரியாணி ஆயீரும்! :)

    //தொடரை தொடர்ந்ததற்கும் நன்றி !//

    தொடரை"த்" தொடர்ந்ததற்கும் நன்றி-ன்னு வலி மிகும்! :)
    ரெண்டாம் வேற்றுமைத் தொகை! :)

    தமிழ் தப்பா எழுதறீங்க-ன்னு காசி அண்ணன் ஒங்கள கோவிச்சிக்கப் போறாரு! :)

    ReplyDelete
  5. அண்ணே பதிவு சூப்பரு !!! இதே மாதிரி ஒரு தொடர் சங்கிலி பதிவுல உங்கள கொத்து விட்டு இருக்கேன்.. அதுக்கும் இந்த மாதிரி ஒரு விளக்கமா பதில் போடவும்....

    ReplyDelete
  6. துளசி கோபால் said...

    ஆஹா....நமக்கெல்லாம் கேள்வி (மட்டும்)கேக்கத்தான் தெரியும்......:-))))//

    ரிப்பீட்டே

    பதிலை அல்வா மாதிரி கொடுத்திருக்கீங்க தல, என் பங்குக்கும் சொல்லி வைக்க முயற்சிக்கிறேன். அழைப்புக்கு நன்றி ;)

    ReplyDelete
  7. அல்வா ரெடி.

    போய்ப் பாருங்க:-)

    ReplyDelete
  8. //துளசி கோபால் said...
    அல்வா ரெடி.
    போய்ப் பாருங்க:-)//

    ஹிஹி!
    ஜயஹே! ஜயஹே!
    சுடச்சுட சுடச்சுட அல்வா! :)

    ReplyDelete
  9. என்ன டீச்சர் நீங்க, அல்வா கொடுத்த நீங்க சுட்டி கொடுக்க வேணாமா? :)

    தமிழ்மண சிருஷ்டிகர்த்தா (நிறுவனர்) அல்வா!

    ReplyDelete
  10. வகுப்புக்கு வரச் சுட்டி(க்)கேட்ட முத ஆள் நீர்தான்:-)))

    ReplyDelete
  11. //dubukudisciple said...
    அண்ணே பதிவு சூப்பரு !!!//

    அல்வா சூப்பரு இல்லீயாக்கா? :)

    //இதே மாதிரி ஒரு தொடர் சங்கிலி பதிவுல உங்கள கொத்து விட்டு இருக்கேன்.. அதுக்கும் இந்த மாதிரி ஒரு விளக்கமா பதில் போடவும்....//

    போச்சுறா!
    இனி சங்கிலி போடறவங்க எல்லாம் ஒரு அரை பவுன்-லயாச்சும் சங்கிலி கொடுக்கணும்-ன்னு சட்டம் கொண்டாங்கப்பா! :)

    ReplyDelete
  12. //கானா பிரபா said...
    பதிலை அல்வா மாதிரி கொடுத்திருக்கீங்க தல,//

    ஹிஹி! வாங்க அண்ணாச்சி!

    //என் பங்குக்கும் சொல்லி வைக்க முயற்சிக்கிறேன்//

    அல்வா-வைத் தொடர ஒங்கள விட தெறமையானவரு வேற யாரு? :)

    ReplyDelete
  13. காசியண்ணேன் மின்னஞ்சல்ல கேட்டப்பவே அந்தக் கேள்வியெல்லாம் பாத்துப்புட்டு 'ஐயோ. கொஸ்டீன் ரொம்ப டஃப்புண்ணே'ன்னு ஓடினேன். இப்ப என்னடான்னா உங்க பதில் கேள்விகளையெல்லாம் படிச்சா துண்டைக்காணோம் துணியைக் காணோம்ன்னு ஓட வேண்டியிருக்கு. நல்லா சேர்ந்தாங்கையா ஒவ்வொருத்தரும். நாலு பேரு எழுதுனதை மட்டும் தேன் படிச்சிருக்கேன். ஹையோ இப்பவே கண்ணைக் கட்டுதே....

    ReplyDelete
  14. //குமரன் (Kumaran) said...
    இப்ப என்னடான்னா உங்க பதில் கேள்விகளையெல்லாம் படிச்சா துண்டைக்காணோம் துணியைக் காணோம்ன்னு ஓட வேண்டியிருக்கு//

    ஹிஹி!
    வைரத்தை வைரத்தால் தான் வெட்டணும்?
    கேள்வியைக் கேள்வியால் தான் தட்டணும்! :)

    //ஹையோ இப்பவே கண்ணைக் கட்டுதே....//

    கண்ணு தொறந்தாலும் குற்றம் குற்றமே-ன்னு சொல்லுற மதுரைக் கணக்காயனார் மகன் வழீல வந்தவரு நீங்க! ஒங்களுக்கே கண்ணு கட்டலாமா? :))

    ReplyDelete
  15. வணக்கம் ரவி. யாரும் பெண் பதிவர்கள், (என்னைச் சொல்லலை)
    பற்றிக் குறிப்பிடக் கணோமே

    மதினு ஒருத்தார் இருந்தார் இல்லையா,அப்புறம் நம்ம நிர்மலா,அருணா ஸ்ரீனிவாசன்,இவர்கள் எல்லாம் ஆரம்பித்த நாளிலிருந்தே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இவங்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கலாம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP