Thursday, October 15, 2009

நாலாயிரம் - ஒரு எளிய அறிமுகம்



இந்த உலகினில் வாழ்கின்ற ஸாதுக்களையும், நல்ல மனிதர்களையும் பாதுகாக்கவும், தீய மனிதர்களை அழிக்கவும், தர்மத்தைக் காப்பாற்றவும், யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்.
- கண்ணன், கீதையில்


ஸ்ரீமந் நாராயணன் நமக்காக எடுத்த அவதாரங்களையும், அவன் குணாதிசயங்களையும், வேதங்கள், புராணங்கள், காவியங்கள் போன்றவை நமக்குக் காட்டுகின்றன.

தெய்வ மொழிகளான தமிழிலும், ஸமஸ்க்ருதத்திலும் வாய் வழியாக, எப்பொழுதோ சொல்லப்பட்ட இவை, நமக்கு ஞாபகம் வருமா என்ன - நேற்று சொன்னது இன்றும், தேர்தலுக்கு முன்னால் சொன்னது தேர்தலுக்குப் பின்னாலும் எல்லோருக்கும் (குறிப்பாக சொன்னவர்களுக்கு :-) வேண்டுமென்றே மறந்து விடுகிறதே?

இவற்றை யார் நமக்கு ஞாபகப் படுத்துவது?

***

ந்த 'நினைவூட்டல்’ வேலைக்கு, எம்பெருமான், தான் தேவையில்லை என்று நினைக்கின்றானோ அல்லது தன்னால் மட்டும் முடியாது (!!) என்று நினைக்கின்றானோ அல்லது உலகம் திருந்தியது போதாது என்று நினைக்கின்றானோ என்னவோ?

தான் வருவதோடு நின்றுவிடாமல், அவ்வப்பொழுது தன்னுடைய திருமேனியை அலங்கரிக்கும் அணிகலன்களையும், வைகுந்தத்தில் தம்மிடம் இருப்போரையும் (நித்தியசூரிகள்) பூமிக்கு அனுப்பி வைக்கின்றான்.

அவதாரங்கள் எதுவும் தமிழ் நாட்டில் ஏற்படவில்லையே?

***

மக்கு நன்மை செய்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த நித்தியசூரிகளே பன்னிரண்டு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்.

ஒரு சில ஆசாரியர்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் இருவரையும் ஆழ்வார்கள் என ஒப்புக்கொள்வதில்லை (ஆகா! ... வந்தவுடனே நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டாயா!!).

'ஆழ்வார்கள்' என்ற சொல்லுக்கு, எம்பெருமானின் கல்யாண குணங்களிலே 'ஆழமாக ஈடுபட்டவர்கள்' என்று பொருள். இவர்கள், தாம் அனுபவித்தது மட்டுமல்லாது, பிரபந்தம் எனும் எளிய தமிழ்ப் பாசுரத் தொகுப்புகளால் இந்த அனுபவத்தை உலகிற்கும் தந்தவர்கள்.

அவர்கள் பிறந்த மாதம், நட்சத்திரம் முதலியவை சரியாகத் தெரிந்தாலும், அவர்கள் பிறந்த வருடங்கள் தெரியவில்லை.

வைணவ சமய நூல்களில் குறிப்பிட்டுள்ள ஆழ்வார்கள் காலமும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ள ஆழ்வார்களின் காலமும் பொருந்தவில்லை (இப்பத்தானே ஆரம்பிச்சீங்க ... அதுக்குள்ள இன்னொண்ணா?).

ஆழ்வார்களின் அவதாரங்கள் முடிந்தவுடன், பிரபந்தங்களும் வழக்கில் இல்லாமல் மறந்து போயின.

பின், நமக்கு எப்படி பிரபந்தங்கள் தெரிந்தன?

***

இடம்: காட்டுமன்னார்குடிக்கு அருகிலுள்ள வீரநாராயணபுரத்தில் மன்னார் கோயில் வளாகம்
நேரம்: ஒரு நாள் மாலை
காலம்: சுமார் கி.பி. 850 முதல் கி.பி. 900 க்குள்


(தந்யாசி ராகத்தில், ஆதி தாளத்தில், ஒரு இனிய தமிழ்ப் பாட்டு கேட்கிறது)

*ஆரா அமுதே!* அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலந்து கரைய உருக்குகின்ற* நெடுமாலே*
சீரார் செந்நெல் கவரி வீசும்* செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!
...

கோயில் வளாகத்தில், சில வைணவர்கள், தங்களை மறந்து, பாடிக் கொண்டு இருக்கின்றனர். கோயில் அர்ச்சகரான நாதமுனிகள் அவர்களுக்கு அருகில் சென்று, பாசுரத்தின் இனிமையையும், வளத்தையும் மிகவும் கவனமாகக் கேட்கிறார்.

*உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு* அவளை உயிருண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மானேய் நோக்கியர்க்கே.

(கேட்டு மெய்மறந்து நின்றவருக்கு, பாட்டு நின்றவுடன், நினைவு திரும்புகிறது)

'மிக அருமையாக இருக்கிறதே இது, எழுதியவர் யாரோ?' என்று நினைத்தவருக்கு, சட்டென்று, மனதுக்குள் ஒரு மத்தாப்பு!

இந்தப் பாசுரங்களை, மனமுருகப் பாடியவர்கள் அருகே செல்கின்றார், நாத முனிகள்.

நாதமுனிகள்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

வைணவர்கள்: நாங்கள் மேல் நாட்டைச் (மேலக் கோட்டை திரு நாராயணபுரத்தைச்) சேர்ந்தவர்கள். இந்த ஊரில் உள்ள வீரநாராயணப் பெருமாளைச் சேவிக்க வந்தோம்.

நாதமுனிகள்: நீங்கள் பாடிய பாடலின் கடைசியில், 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று வருகிறதே? ஆயிரமும் உங்களுக்கு வருமா?

வைணவர்கள்: இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்.

நாதமுனிகள்: உங்கள் நாட்டிலாவது யாருக்காவது இந்த ஆயிரமும் தெரியுமோ?

வைணவர்கள்: அப்படி ஒருவரும் இல்லை.

நாதமுனிகள்: உங்களுக்கு இதைக் கற்றுத் தந்தது யார்?

வைணவர்கள்: பரம்பரையாக இந்தப் பாடலை ஊர்க் கோயிலில் பாடுவோம். அவ்வளவு தான்.

நாதமுனிகள்: பாடலில் ’குருகூர்' என்று வருகிறதே! குருகூரில் உங்களுக்கு உறவினர் யாராவது உண்டா? அவர்களுக்காவது தெரியுமா?

வைணவர்கள்: எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அங்கு சென்றதும் இல்லை, இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் இல்லை.

(ஒரே நிமிடத்தில், மனதில் தோன்றிய மத்தாப்பு, தீபாவளி மழையில் நனைந்த மத்தாப்பு ஆகிவிட்டது:-(.

***
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ...

நாத முனிகள் (தனக்குத் தானே): எப்படியாவது இந்த ஆயிரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் ... பாடலில் 'குருகூர்ச் சடகோபன்' என்று வந்ததே! குருகூருக்குச் செல்ல வேண்டியது தான் ... வேறு வழியே இல்லை ...

***

இடம்: குருகூர் (ஆழ்வார் திருந்கரி), ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை


வழிப்போக்கன் (திண்ணையில் வெற்றிலை போடுவரிடம்): சடகோபர் வீடு எங்குள்ளது?

வெற்றிலை: எந்தச் சடகோபர்? இந்த ஊரில் அப்படி யாரும் இல்லையே!

சிறிது மௌனம் ...

வெற்றிலை (மீண்டும்): நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்?

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபரைப் பார்க்க வேண்டும்.

வெற்றிலை: சரி ... என்ன விஷயமாக?

நாதமுனிகள்: இந்த ஊரில் சடகோபன் என்பவர், எம்பெருமான் மீது ஆயிரம் பாட்டுக்கள் எழுதியதாகக் கேள்விப் பட்டேன். அவரிடம் இருந்து கற்கலாம் என்று வந்தேன்.


வெற்றிலை (சற்று உரக்கச் சிரித்து): ஓ! அந்த மரத்தடி மாறனா? அவர் சென்று பல நூறு ஆண்டுகள் ஆகின்றதே! இப்போது வந்தால் எப்படி?

நாதமுனிகள் (வருத்தத்துடன்): அவருக்குச் சீடர்கள் இங்கு யாராவது உண்டா?

வெற்றிலை (பெருமிதத்துடன்): இங்கு, மதுரகவி ஆழ்வார் என்பவரின் சீடர் பரம்பரையில் வந்தவரான 'பராங்குச தாஸர்' என்பவர் புளிய மரத்தடிக்குப் பக்கத்து வீட்டில் இருக்கிறார். அங்கு இல்லை என்றால், கோயிலில் இருப்பார். அவரைச் சென்று பாருங்கள்.

***

இடம்: பராங்குச தாஸரின் வீடு
நேரம்: அன்று மாலை


வழிப்போக்கன் (வீட்டுப் பெரியவரைப் பார்த்து): பராங்குச தாஸரைப் பார்க்க வேண்டும்.

பெரியவர்:
அடியேன் தான்! நீங்கள் ...

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபர் எழுதிய 1,000 பாட்டுக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு வந்தேன். அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று, ஊரில் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். எனவே உங்களைப் பார்க்க வந்தேன்.

பராங்குச தாஸர் (உசுப்பேத்திக்கிட்டே இருக்காங்கப்பா' என்று நினைத்து): யார் சொன்னது? அடியேனுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் எதுவும் தெரியாது.

சிறிது மௌனம் ... (மௌனம் சம்மதம் என்று யார் சொன்னது?)

பராங்குச தாஸர்: ஆனால், எனக்கு, மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' எனும் பிரபந்தத்தில் உள்ள பதினொன்று பாசுரங்கள் தெரியும்.

நாதமுனிகள் (தனக்குள்): என்னடா இது ... மளிகைக் கடைக்கு வந்தாற் போல் இருக்கிறது - கடலைப் பருப்பு இருக்கா? என்று கேட்டால், 'இல்லை' என்று சொல்லாமல், ’துவரம் பருப்பு இருக்கு’ என்கிறாரே இவர் ... அதுவும் விலை அதிகமாச்சே ...

நாதமுனி (பெரியவரிடம்): இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யட்டும்?

பராங்குச தாஸர் (சற்று உரக்க): கிட்ட வாங்கோ ... ஒரு ரகசியம் சொல்கிறேன் ...

நாதமுனிகள் (தனக்குள், இது என்ன 'Dhoosraa'? என்ற் எண்ணி): அது என்ன?

பராங்குச தாஸர் (அருகில் வந்து, மெதுவாக): நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து 12,000 முறை இந்தக் ’கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களைச் சேவித்தால் நம்மாழ்வார் தோன்றுவார். அப்படி அவர் தோன்றினால், அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள்ளுங்கள்.

நாதமுனிகள் ('இதுவாவது கிடைத்ததே' என்று எண்ணி): சரி பராங்குஸ தாஸரே! இதை அடியேனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பராங்குச தாஸர்: உள்ளே வாரும், முதலில்.

***

நாதமுனிகள் நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து, தியானம் செய்ய, ஒரு ‘Soap' கம்பெனி விளம்பரத்தின் பளீர் (நிஜமாவே தான்!) வெளிச்சத்துடன், நம்மாழ்வார் அவர் முன் தோன்றுகிறார்.

நம்மாழ்வார்: நாதமுனியே! உமக்கு என்ன வேண்டும்?

நாதமுனிகள்: வணக்கம்! அடியேனுக்கு தாங்கள் அருளிச் செய்த 1,000 பாசுரங்கள் வேண்டும்.

நம்மாழ்வார்: அப்பனே! நீ கேட்டதைக் நான் கொடுப்பதற்கு முன்னால் நீ திருவிலச்சினை அணிய வேண்டும்.

நாதமுனிகள், வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாத மாணவனைப் போல் 'Mr. Mr.' என விழிக்கிறார்.

நம்மாழ்வார் திடீரென்று அருகில் வந்து, இரண்டு தோள்களிலும் ஏதோ வைக்க, ’ஆஆஆ’ என்ற அலறல் கேட்கிறது ...

சற்று நேரம் கழித்து ...

நம்மாழ்வார்: உனக்கு யாம் சங்கு, சக்கரம் (திருவிலச்சினை) அணிவித்தோம். இன்று முதல் நீ எம்பெருமானின் சீடன். உனக்கு என்ன வேண்டும் கேள்!

நாதமுனிகள்: தாங்கள் எழுதிய 1,000 பாசுரங்கள்!

நம்மாழ்வார்: அது 1,000 அல்ல. 4,000.

நாதமுனிகள் (தோள் வலியுடன்): ஏதோ ஒண்ணு! சீக்கிரம் கொடுங்கள்!

நம்மாழ்வார்: நாலாயிரம் தானே! இந்தா பிடி!

நாதமுனிகள் (தயங்கி): ... இதற்கு ... எவ்வளவு ....

நம்மாழ்வார் (இடையில் புகுந்து):
காசா, பணமா? பாடல் தானே! சும்மா வைத்துக் கொள். நம் காலத்தில் ’காப்புரிமை’ எதுவும் கிடையாது. இதை நீயும் எல்லோருக்கும் சும்மா கொடுக்கலாம். ஆனால் வாங்கியவர்கள், பிற்காலத்தில், அரிசி யோகா, போல் இதையும் வேறு நாடுகளுக்கும எடுத்துச் சென்று, கூறு போட்டுக் காசு பார்த்தால் அதற்கு யாம் பொறுப்பில்லை.

’ட்ரயிங்ங்ங்ங்’ என்ற சத்தத்துடன் ...
நம்மாழ்வார் மறைகிறார்.

சரி, நீங்களும் 12,000 முறை இடைவிடாமல் தியானம் செய்யத் தயாரா (’ஆளை விடுங்கப்பா!’ என்று நீங்கள் எல்லோரும் ஓடுவது, அடியேன் வீட்டு ‘Live TV'-யில் தெரிகிறது)?

***

வ்வாறு, முதல் வைணவ குருவான நாதமுனிகள், ஒரு வழியாக நாலாயிரத்தையும் பெற்று, அவற்றை முறைப் படுத்தி, தனது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் நமக்குக் கிடைக்கச் செய்துள்ளார். இந்த நாலாயிரத்தை, 'தமிழ் மறை' என்றும் கூறுவர்.

நாதமுனிகள் கொடுத்த நாலாயிரத்திற்கும், இன்று வழக்கில் இருந்து வருகிற நாலாயிரத்திற்கும் சில கணக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன (ஐயோ! திருந்தவே மாட்டாங்களா?).

முதலில் நம்மாழ்வார் கூறிய நாலாயிரத்தில் எதுவும் விடப்படவில்லை.

ஆழ்வார்கள், தங்கள் பிரபந்தங்களில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 கோயில்கள் (திவ்விய தேசங்கள்) மீது பாடியுள்ளனர். அவதாரங்களில், கண்ணன், இராமனைப் பற்றியே அதிகமான பாசுரங்கள் காணப்பட்டாலும், நரசிம்மாவதாரமும் பல பாசுரங்களில் கூறப்படுகின்றது.

எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஒரு தமிழ் வணக்கத்துடன், ஆழ்வார்கள் அனுபவித்த அந்த நரசிம்மனை, அவர்கள் பாசுரங்கள் மூலம் நாமும் அடுத்த தபாலில் இருந்து அனுபவிக்கலாம்!

***

39 comments:

  1. அனைவர்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :)

    நாலாயிரக் கதை நடை சூப்பர் ரங்கன் அண்ணா!

    ReplyDelete
  2. சிலவற்றை எடுத்துக்காட்டவேண்டியதாயிற்று -

    1. நாதமுனிகள் நாலாயிரத்தைத் தொகுத்தார். அவையனைத்தும் நம்மாழ்வார் பாசுரங்கள் மட்டும்தானா? 12 ஆழ்வார்கள் பாசுரங்களடங்கியது 4000 என்றால், மற்ற ஆழ்வார்களுடையதை எங்கிருந்து பெற்றார்?

    2. நம்மாழ்வார் தம்மூர் மக்களின் தாழ்வணக்கத்தில் வைத்துபோற்றப்பட்டவர். அவர் பார்ப்பனர் அல்ல. சூத்திரர் எனவே. அவர்கள்தான் அவரை முதலில் கண்டு பரம ஞானியென தாழ் வணக்கம் செய்து போற்றியவர்கள். வெகு காலத்திற்குப்பின்தான் மதுரகவி என்னும் பிராமணர் அவருக்குச் சீடரானார்.

    இங்கு நீங்கள் குறிப்பட்ட ‘வெற்றிலை’ அ-பார்ப்பனரில் ஒருவரும் அவ்வூர மக்களுள் ஒருவரும் ஆவார். அவர் நம்மாழ்வார் என்றவுடனே உருகுவார். அப்படிப்பட்டவர், இளக்காரமாக

    “(சற்று உரக்கச் சிரித்து): ஓ! அந்த மரத்தடி மாறனா?”

    சொல்லுவாரா? மனதை மிகவும் நோகடித்து விட்டீர்கள் சாமி. நான் அந்தவூர். நம்மாழ்வார் எங்களூர்த் தெய்வம். நாங்களே அவரின் முதல் உரிமையாளர்கள். எங்கள் குலவிளக்கை எங்கள் முன்னோர் ஒருவர் இவ்வளவு அசிங்கமாக சொல்லியிருப்பாரா?

    3. நானறிந்த கதையில், நாதமுனிகள் எனப்படும் பிராமண வைணவர் தன் ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி கும்பிட நுழையும்போது, அங்கே சில வைணவர்கள் சில பாடல்களைப்பாடி நெஞ்சுருகி வணங்கிக் கொண்டிருந்தனர். அப்பாடல்களில் சொல்லப்பட்ட திருமால் பெருமை மனதை அள்ளுவதாக இருக்க, நாதமுனிகள் அப்பாடல்களை எழுதியர் யார் என அறிய விழைந்தார். அவர்கள் பின்னோடி அவர்களை வினாவ, அவர்கள் தாங்கள் பாண்டிய நாட்டின் கடைக்கோடியில் உள்ள திருவழுதிநாட்டிலிருந்து வருவதாகவும், யாத்திரையாக தமிழகத்துப்பெருமாள் கோயில்களுக்குசென்று கொண்டிருப்பதாகவும், தங்கள் நாட்டிலுள்ள திருக்குருகூரில் முன்பு வாழ்ந்த பரமஞானியும் திருமால் பக்தருமான நன்மாறன் சாமிகள் படைத்த இப்பாசுரங்களைப் பாடியே தாங்கள் திருமால் வணக்கம் பரம்பரை பரம்பரையாக செய்து வருவதாகவும் எழுதியதாகவும், இப்பாடல்கள் தங்களுக்குச் செவிவழிச் செய்திகளாகத்தான் தெரியுமென்றும்,தங்களூருக்குப் போனால் இன்னும் பலவிசயங்கள் தெரியவரலாமென்றும் நாதமுனிகளை ஊக்குவித்துச் சென்று விட்டனர்.

    திருவழுதிநாடு என்பது நம்மாழ்வாரின் திருக்குருகூரும் அதைச்சுற்றியுள்ள நிலங்களும் ஆகும். நம்மாழ்வரின் தந்தை காரிமாறன் அவ்வூரை பாண்டியன் கீழ் ஆண்டு வந்தார்.

    நீங்கள் எழுதியதில் இப்பாடகர்கள் திருநாராயணபுரத்தைசேர்ந்தவர்கள் என எழுதப்பட்டிருக்கிறது. அது உங்களுக்குக் கிடைத்த தகவலின் படி இருக்கலாம்.

    மதிப்புக்குரிய ரங்கள் தேவராஜன் சுவாமி அவர்களே, ஒன்று மட்டும் நினவில் கொள்க. நம்மாழ்வார் பாடல்கள் செவிவழிச்செய்தியாக தமிழகத்தில் கடைக்கோடி தென்மாவட்டங்களில் நின்று நிலவின. அவரின் காலத்திற்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்தே, நாதமுனிகள் தொகுத்தார். அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது: ‘சூத்திரனுக்கு இறைவனைப்பாட உரிமையில்லை எனச்சொன்னர் பிராமணர்கள்’ Please refer to நம்பிள்ளை உரை. வேண்டுமானால் அதை நான் எழுதுகிறேன்.

    எனவே நம்மாழ்வார் பாடல்களை நாதமுனிகளுக்கு முதல்முதலில் தெரியவருமாறு செய்த பெருமையை தாங்கள் நம்மாழ்வார் ஊர்க்காரர்களுக்கே வழங்க வேண்டும்.

    மற்ற ஆழ்வார்களும் நாதமுனிகள் காலத்திற்கு முன்னர் அவதரித்தவர்கள். அவர்கள் பாடல்கள் இவருக்கு எப்படிக்கிடைத்தன என்றும் கண்டுபிடித்துச்சொல்லுங்கள்.

    How he zeroed on only twelve? From the earliest three (முதலாழ்வார்கள்) to the last one (கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கையாழ்வார்) centuries lie. During these centuries, how only twelve were concluded - is a great mystery.

    Speaking from a non-religious point of view, the history of alvaars is written by religious people only. No professional historians interfered to write them. It is for this reason the non-religious history - such as when they lived exactly, or thereabouts, what they did for a living, who their parents and how their relationship with others etc., why it became necessary to emphasis Thirumaal worship? Did they encounter any opposition? Have Nammaazvaar met with Samanars who lived nearby and used to enter Thirukkuruhoor, etc.etc. - all were buried irretrievably.

    A few tried from non-religious point of view. But they suffered for want of evidences. They relied on the poems only. For e.g Mu Ragavaigangar relied on Andaals paasurams to conclude her period.

    We meet with the same style of history even in case of Bharati. His admirers prevent others from judgeing him properly. Luckily, all that he wrote survive without corruption. If we extricate him from his cultists, we can deliver him to posterity 'historically'

    ReplyDelete
  3. ஆழ்வார்கள் வைணவர்கள் உயிரில், உணர்வில் கலந்தவர்கள். நகைச்சுவை என நினைத்து, சோப் கம்பெனி விளம்பரம் என்றெல்லாம் எழுதுவது சரிதானா? இம்மாதிரி எழுதுவதை தவிர்த்தல் எல்லாருக்கும் உவகை தரும் பதிவுகளாக மாற்றும்.

    ReplyDelete
  4. //அனைவர்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :)

    நாலாயிரக் கதை நடை சூப்பர் ரங்கன் அண்ணா!//

    நன்றி. உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. திரு கள்ளபிரான் அவர்களுக்கு

    வணக்கம். முதலில், அடியேனின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் மூலம் அடியேன் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இதற்கு, என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சில கேள்விகள் எழுப்பியுள்ளீர்கள். அடியேனுக்குத் தெரிந்த வரையில், எழுதுகிறேன்.

    //நாதமுனிகள் நாலாயிரத்தைத் தொகுத்தார். அவையனைத்தும் நம்மாழ்வார் பாசுரங்கள் மட்டும்தானா? 12 ஆழ்வார்கள் பாசுரங்களடங்கியது 4000 என்றால், மற்ற ஆழ்வார்களுடையதை எங்கிருந்து பெற்றார்?//

    அடியேன் நாதமுனிகள் பிரபந்தம் அடைந்த விதம் பற்றி எழுதுவதன் முன்பு, சில வரலாற்றுப் புத்தகங்கள் படித்தேன் (ஆழ்வார்கள் வரலாறு - டாக்டர் ஆர் எதிராஜன், குரு பரம்பரை வைபவம் - எதிராஜ ராமானுஜ தாஸன், டாக்டர் ஸ் குலசேகரனாரின் வைணவத்தின் ஆழ்வார்கள் கால நிலை, நம்மாழ்வாரும் தமிழ்நாடும் - திரு.வி.க, பிரபந்த மூலமும் விளக்கமும்) அவைகளில் கூறப்பட்ட பொதுவான கருத்தைத் தான் எழுதியுள்ளேன். பெரும்பான்மைக் கருத்து, நம்மாழ்வாரே நாதமுனிகளுக்கு நாலாயிரமும் கொடுத்தார் என்பதே. இதைத் தவிர வேறு (சிறுபான்மை) கதைகளும் உள்ளன.

    //மனதை மிகவும் நோகடித்து விட்டீர்கள் சாமி. நான் அந்தவூர். நம்மாழ்வார் எங்களூர்த் தெய்வம். நாங்களே அவரின் முதல் உரிமையாளர்கள். எங்கள் குலவிளக்கை எங்கள் முன்னோர் ஒருவர் இவ்வளவு அசிங்கமாக சொல்லியிருப்பாரா?//

    மன்னித்துக் கொள்ளவும். அடியேன், தவறாக நினைத்து எழுதவில்லை. யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை. குருகூர் மாறன், குருகூர்ச் சடகோபன், என்று பலரும் உரைப்பர். அடியேன், ஹாஸ்யத்திற்காக, ‘(திருப் புளி) மரத்தடி மாறன்’ என்றே எழுதினேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

    தாங்கள் கூறிய வரலாற்றையும் ஒரு உபன்யாசத்தில் கேட்டுள்ளேன். ஆனால், அடியேன் படித்த புத்தகங்களில் இல்லை. தாங்கள் இதை ஏதாவது புத்தகத்தில் படித்திருந்தால், விவரத்தை அடியேனுக்குத் தெரியப் படுத்துங்கள். அடியேன் கற்றது கைம்மண் அளவே. இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.

    //எனவே நம்மாழ்வார் பாடல்களை நாதமுனிகளுக்கு முதல்முதலில் தெரியவருமாறு செய்த பெருமையை தாங்கள் நம்மாழ்வார் ஊர்க்காரர்களுக்கே வழங்க வேண்டும்.//

    மன்னிக்க வேண்டும் கள்ளபிரான் அவர்களே. அடியேன் ஒரு சிறியவன். இந்தச் சிறியவன் உங்கள் ஊர்க்காரர்களுக்கு இந்தப் பெருமையைக் கொடுத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. I was only acting as a human 'Compiler' from various books.

    //மற்ற ஆழ்வார்களும் நாதமுனிகள் காலத்திற்கு முன்னர் அவதரித்தவர்கள். அவர்கள் பாடல்கள் இவருக்கு எப்படிக்கிடைத்தன என்றும் கண்டுபிடித்துச்சொல்லுங்கள்.//

    நாலாயிரத்தையும், நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே கொடுத்ததாக பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.

    ReplyDelete
  6. துவக்கம் சிறப்பு. கதை சொல்லும் பாங்கில் அசத்துகிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நன்றாக இருக்குறது அரங்கன் அண்ணா. ஆனால் சொன்ன விதம் வேறு விதமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது தான் உங்கள் இயல்பான நடை என்றால் இப்படியே இருக்கட்டும். இரவிசங்கரின் பந்தலில் எழுதுவதால் இப்படி எழுத வேண்டும் என்று மெனக்கிடுகிறீர்கள் என்றால் வேண்டாம்; உங்கள் நடையிலேயே எழுதுங்கள்.

    இரகுவீரதயாள் சுவாமி (thiruthiru) சொன்னது போல் கொஞ்சம் மனம் கோணும் படியாகத் தான் சில இடங்களில் இருக்கின்றது.

    ReplyDelete
  8. //ஒரு சில ஆசாரியர்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் இருவரையும் ஆழ்வார்கள் என ஒப்புக் கொள்வதில்லை//

    :))

    இது ஏன் என்பதற்கான விளக்கத்தை அனைவரும் அறியத் தாருங்கள் அண்ணா!

    ReplyDelete
  9. //thiruthiru said...
    ஆழ்வார்கள் வைணவர்கள் உயிரில், உணர்வில் கலந்தவர்கள். நகைச்சுவை என நினைத்து, சோப் கம்பெனி விளம்பரம் என்றெல்லாம் எழுதுவது சரிதானா?//

    திருத்திரு அவர்கட்கு அடியேன் வணக்கம்!
    பந்தலுக்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

    தங்களையும் தங்கள் கைங்கர்யத்தையும் அடியேன் முன்னமேயே அறிவேன்! அதனால் தங்கள் சொற்களுக்கு மதிப்பளித்து, மாதவிப் பந்தல் வலைப்பூவின் உரிமையாளன் என்ற முறையில் தங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன்!

    இப்போது ஒரு சில எண்ணங்கள்... தங்களுக்கும், இன்ன பிற நல்லடியார்களின் பார்வைக்கும்!

    சோப் கம்பெனி விளம்பரம் போல் - மின்னலடிக்கும் அதே வெண்மை - பளிச்-சென்று ஆழ்வார் தோன்றினார் என்பது ஒரு இயல்பான நகைச்சுவை நடையில் ரங்கன் அண்ணா சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்!

    ஆனால் அந்த நடையில் எள்ளலோ, தாழ்த்துதலோ ஒன்றுமில்லை என்பதைப் பதிவின் தொனி கொண்டே சொல்லிவிட முடியும்!

    ஆழ்வாரை போயும் போயும் சோப் விளம்பரம் எல்லாம் வைத்தா ஒப்பிடுவது? என்று ஒரு சிலருக்குத் தோன்றலாம்! மனத்தன்மை தான் அதற்குக் காரணம்! புற அழுக்கு போக்க வல்ல சோப் போல, அக அழுக்கை அகற்ற ஆழ்வார் தோன்றினார் என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

    இதைத் தங்களிடம் வாதிக்க வேண்டும் என்பதற்காக அடியேன் சொல்லவில்லை! ஒரு நல்லடியாரான தாங்கள் உணர்ந்து பார்க்க வேணுமாறே சொல்ல விழைந்தேன்!

    இராமானுசர் கீதைக்கு உரை எழுதிய கீதா பாஷ்யத்தில்...இப்படித் தான் சோப் நகைச்சுவை போல ஆரம்பிப்பார்! கண்ணன் கீதை சொல்லுத் துவங்கு முன் சிரிச்சிக்கிட்டே சொன்னானாம் -பிரஹசன்னிப பாரத - அதற்கு உரை எழுதிய இராமானுசர், "அச்சோ, இந்த கீதை என்னும் நம்ம நூலை வச்சிக்கிட்டு, இந்த உலகம் இன்னும் என்ன பாடு படப் போகுதோ?"-ன்னு சிரிச்சான் - இப்படிக் கேலி பண்ணித் தான் கீதா பாஷ்யம் துவங்கும்! :)))

    உடனே உடையவர், வைணவர் உயிராகப் போற்றும் உணர்வுகளை புண்படுத்திட்டாரு-ன்னு எல்லாம் சொல்வோமோ? மாட்டோம் தானே? :)
    நோக்கம் என்ன? = சற்றுக் கடினமான கீதையை, நயம் கலந்த நகைச்சுவையில் ஆரம்பித்து, இன்னும் புதிய அடியவர்களை ஈர்த்து, எம்பெருமானிடத்தில் ஆட்படுத்துவது தானே?

    அப்படி இராமானுசர் செய்தது போலவே, இதையும் தாங்கள் பார்க்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன்!
    "சோப்" விளம்பரம் என்றாலே ஏதோ தீயது, அருவெறுக்கத் தக்கது, அதை ஆழ்வாரோடு ஒப்பிடல் முறையோ-ன்னு நாமளா நினைத்துக் கொள்ள வேண்டாம்!

    பக்தியாளர்கள் என்றாலே இப்படி எல்லாம் "லோக்கலாக" சொல்லக் கூடாது, அதற்குரிய "உசத்தியான" நடையில் தான் சொல்லணும் என்று எதிர்பார்ப்பு நம்மில் சிலருக்கு வந்து விடுகிறது! அதான் இப்படி நினைக்கத் தலைப்படுகிறோம்!
    சர்வ பூத இதப் பிரதா என்னும் சர்வ சேஷியான அந்தச் சரண்யனுக்கு, இதனால் "இழுக்கு" நேராது என்று உள்ளம் உணரத் துவங்கினால், இப்படியான எண்ணங்கள் தோன்றாது!

    எனவே, நோக்கம் பிழையாக இல்லாத வரை, எழுதுபவர் அவருக்குரிய நடையில், சொல்வதைக் காது கொடுத்து கேட்போம் என்றே சொல்லிக் கொள்ள விழைகிறேன்!

    அடியேன் தவறாகப் பேசி இருப்பின், மன்னியுங்கள்!
    தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே!
    தமர் உகந்தது எந்நடை, அந் நடை தானே! அரங்க நடை தானே!

    ReplyDelete
  10. //இது தான் உங்கள் இயல்பான நடை என்றால் இப்படியே இருக்கட்டும். இரவிசங்கரின் பந்தலில் எழுதுவதால் இப்படி எழுத வேண்டும் என்று மெனக்கிடுகிறீர்கள் என்றால் வேண்டாம்;//

    குமரன் சொன்னதை அப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன்!

    ரங்கன் அண்ணா, பந்தலுக்கு-ன்னு டிரேட் மார்க் அடையாளங்கள்-ன்னு எல்லாம் ஒன்னும் கெடையாது! :)
    அதனால் "லோக்கலாக" மட்டுமே சொல்ல வேணும் என்ற நியமனங்கள் ஏதுமின்றி, தாங்கள், தங்களுக்குரிய முறையில் எப்படிச் சொன்னால் அடியவர்கள் ஆட்படுவார்களோ, அப்படியே சொல்லுங்கள்! வருந்தற்க!

    ReplyDelete
  11. Vanakkam sir,
    Nadhamunigal first went to Thirukudanthai,there he enquired about the thousand passurams, they know only that ten passurams,so he went to Thirukurugur and met Parangusadhasar,this is what I heard.
    Ravi sir, why dont you write sthalapuranam of some temples,it is my earlier request also.hope you will consider.
    ARANGAN ARULVANAGA,
    anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  12. //சோப் கம்பெனி விளம்பரம் //

    கண்ணன் இதற்கு விளக்கம் சொல்லி விட்டாலும் படிக்கையில் கொஞ்சம் உறுத்தியது உண்மைதான். மற்றபடி உங்கள் நடை அருமையாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  13. //கண்ணன் இதற்கு விளக்கம் சொல்லி விட்டாலும்//

    ஹா ஹா ஹா! எந்தக் கண்ணன்-க்கா? :)

    இப்போது விளக்கம் சொல்லி விட்டதால், பலரும் உணர்ந்து பார்த்திருப்பார்கள்!
    அதனால் இனி மேல் அன்பர்களுக்கு உறுத்தாது!

    இனி லேசாக உறுத்தும் போதெல்லாம்...
    இராமானுசர் எழுதிய "அச்சோ, நம்ம கீதையை வச்சிக்கிட்டு, இந்த உலகம் என்ன பாடுப்படப் போகுதோ?-என்று கீதையைச் சிரித்துக் கொண்டே கண்ணன் ஆரம்பித்தான்" என்ற வரிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வந்த உறுத்தல் போயே போய் விடும்! :)

    ReplyDelete
  14. @கள்ளபிரான்
    //1. நாதமுனிகள் நாலாயிரத்தைத் தொகுத்தார். அவையனைத்தும் நம்மாழ்வார் பாசுரங்கள் மட்டும்தானா? 12 ஆழ்வார்கள் பாசுரங்களடங்கியது 4000 என்றால், மற்ற ஆழ்வார்களுடையதை எங்கிருந்து பெற்றார்?//

    நம்மாழ்வார் தன்னுடைய பாசுரங்கள் மட்டுமே அவருக்குக் கொடுக்கவில்லை! மற்ற ஆழ்வார்களின் அத்தனை பாசுரங்களையும் ஒருங்கே திரட்டி நம்மாழ்வார் தான் நாதமுனிகளுக்கே கொடுத்தது!

    நாதமுனிகள், ஆலயத்தில் அழகிய பாட்டைக் கேட்டுத் தேடிப் போனது என்னவோ, நம்மாழ்வாரின் திருவாய்மொழி மட்டுமே! ஆனால் வேதம் தமிழ் செய்த மாறன் தான், அவருக்கு மொத்த புதையலையும் மறைக்காது காட்டி அருளினார்!

    இப்படி, இன்று நாம் காணலாகும் அத்தனை ஆழ்வார்களின் தீந்தமிழையும், ஒருங்கே காட்டித் தந்தவர் நம்மாழ்வாரே!

    மற்றவர்கள் பாடல் எழுதுவார்கள்! ஆனால் ஒரு குரு தானே, பாடத்தையும், பாட நூலையும் ஒருங்கே மாணவனுக்குக் காட்டித் தர வேண்டும்?
    அதனால் தான் நம்மாழ்வாரை "ஆழ்வார்" என்று மட்டுமே சொல்லாது, "ஆசார்ய" பரம்பரையிலும் வைத்துப் போற்றுகிறார்கள்!
    நம்மாழ்வார் ஒருவரே = ஆழ்வார் + ஆசார்யர்!

    ஆனால் நாதமுனிகள் அத்துடன் நிற்காமல், நம்மாழ்வாரிடம் வேண்டிக் கொண்டு, மொத்த நாலாயிரத்துக்கும், பாசுரம் மட்டுமல்லாது, பொருள், விளக்கம் என்றெல்லாம் நம்மாழ்வார் வாயாலேயே கேட்டறிந்தார்!

    சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார் கோயிலில் வாழ்ந்த இந்த நாதமுனிகள் தான், நம்மாழ்வாரிடம் பெற்றதை, தொகுத்து வைத்து, முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம், மூன்றாம் ஆயிரம், நான்காம் ஆயிரம் என்று வகைப்படுத்தி வைத்தார்! அதற்கு இசைப் பண்கள் அமைத்து பாடிப் பரவவும் ஏற்பாடு செய்தார்!

    சொல்லப் போனால் அவர் தொகுத்தது ஆழ்வார்களின் 3892 பாசுரங்கள் தான்! பின்னாளில் இராமானுச நூற்றந்தாதி 108-உம் சேர்ந்தே "நாலாயிரம்" என்று ஆனது!

    ReplyDelete
  15. //2. நம்மாழ்வார் தம்மூர் மக்களின் தாழ் வணக்கத்தில் வைத்துபோற்றப்பட்டவர். அவர் பார்ப்பனர் அல்ல. சூத்திரர் எனவே. அவர்கள்தான் அவரை முதலில் கண்டு பரம ஞானியென தாழ் வணக்கம் செய்து போற்றியவர்கள். வெகு காலத்திற்குப்பின்தான் மதுரகவி என்னும் பிராமணர் அவருக்குச் சீடரானார்//

    :)
    உண்மை தான் கள்ளபிரான்!
    மாறன் என்னும் குழந்தையை, வாலிபனைச் சீராட்டி,வளர்த்துப் போற்றியதெல்லாம் ஊர் மக்களே! பின்னர் தான் வடநாட்டு யாத்திரை முடித்துக் கொண்டு, மதுரகவிகள், ஆழ்வாரிடம் வந்து சேர்ந்தார்! நம்மாழ்வார் 32 வயதே வாழ்ந்தவர்! அவருக்குப் பின் அவர் திருவாய்மொழியை தமிழ் இலக்கிய உலகிலும், கடைச்சங்கப் புலவர்களிடமும், மக்களிடையேயும் எடுத்துச் சென்றார் மதுரகவிகள்!

    நம்மாழ்வார் ஸோ கால்டு குலத்தால் நாலாம் வருணத்தவர் - வேளாளர்! அந்த வேளாளர் தான் இன்று ஒட்டு மொத்த வைணவத்துக்கும் "குல முதல்வன்"! அனைத்து ஆலயங்களிலும் சடாரி! அவரைத் தலை வணங்கித் தங்கள் சென்னி மேல் தாங்கிக் கொள்கிறார்கள்!
    பார்க்க...பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!


    //அப்படிப்பட்டவர், இளக்காரமாக “(சற்று உரக்கச் சிரித்து): ஓ! அந்த மரத்தடி மாறனா?”//

    ஹா ஹா ஹா!
    இதை நீங்கள் இம்புட்டு சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை! "மரத்தடி" என்பது தவறான சொற்புழக்கமும் இல்லை!

    * மரத்தடி-ன்னே இலக்கிய இணையத் தளம் இருக்கே!
    * "மரத்தடி மகேசன்"-ன்னு தென்னமர் கடவுள் தட்சிணாமூர்த்தியான சிவபெருமானைச் சொல்லுவார்கள் தேவாரத்தில்!
    * மரத்தடிப் பிள்ளையார், வேம்படி விநாயகர்-ன்னு எல்லாம் இருக்காங்க!
    * கம்பத்தடி ரங்கநாதர்-ன்னு பெருமாளே வேற இருக்காரு!
    * அதே போல "மரத்தடி மாறனை" கொள்ளவும்! :)

    //மனதை மிகவும் நோகடித்து விட்டீர்கள் சாமி//

    பந்தலில் உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :)

    ஆனா இது போன்ற மரத்தடிச் சொற்களுக்கு எல்லாம் சீரியசானா எப்படி? :)
    நாம் விரும்பி நேசிக்கும் ஒன்றை, ஓவராகப் பீடத்தில் ஏற்றி புனிதப் பூச்சு செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்!
    நம்மாழ்வார் என்றாலே கண் சோர நிற்பவன் அடியேன்! திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார்-ன்னு பல முறை சொல்லுவேன்! "மரத்தடி மாறன்" என்பது இயல்பு வழக்கே! "புளிங்குடி" மாறன்! "புளியமரத்தடிப் பூவன்"-ன்னு எல்லாம் பாடல்களில் வரும்! அப்படி ஒப்பு நோக்கி, எண்ணிப் பாருங்கள்!

    //நான் அந்தவூர். நம்மாழ்வார் எங்களூர்த் தெய்வம். நாங்களே அவரின் முதல் உரிமையாளர்கள்//

    ஹிஹி!
    உண்மை தான்!
    நெல்லைச் சீமை, தாமிரபரணி, திருக்குருகூருக்கு என்றுமே முதல் மரியாதை உண்டு! :)

    இதுவோ திருநகரி? ஈதோ பொருநை?
    இதுவோ பரமபதத்து எல்லை? - இதுவோ தான்
    வேதம் தமிழ் செய்து மெய்ப் பொருட்கும் உட்பொருளாய்
    ஓதும் சடகோபன் ஊர்!

    என்று தங்கள் ஊரையே பரமபதத்தின் எல்லை என்று கொண்டாடி உள்ளனர்! வருந்தாது மகிழுங்கள்! வாழி வாழி!

    ReplyDelete
  16. //திருவழுதிநாடு என்பது நம்மாழ்வாரின் திருக்குருகூரும் அதைச்சுற்றியுள்ள நிலங்களும் ஆகும்//

    உண்மை தான்!
    இதை நம்மாழ்வாரே தன் பாடலில் சொல்லி இருப்பார்!
    இதற்கு ஒரு சுவையான கதைப் பின்னணியும் உண்டு!

    இராமானுசர் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு இருந்த பெண்ணிடம் "இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?" என்று கேட்டார்.

    அதற்கு அவள் "திருவாய்மொழி தெரியாதோ"?-ன்னு உடையவரையே கிண்டலாக் கேட்டாள்! :))
    இதுக்கெல்லாம் "மரத்தடி" மாதிரி சீரியசா எடுத்துக்கிட்டு கோச்சிக்கிட முடியுமா? :))
    ஆன்மிக அன்பர்கள் இந்த "பீடத்தில் ஏற்றி வைக்கும்" மனப்பாங்கைக் கொஞ்சமாக் குறைச்சிக்கிடணும் என்பது அடியேன் பணிவான கருத்து! :)

    கதைக்கு வருவோம்...
    கூவுதல் வருதல் செய்திடாய் என்று
    குரை கடல் வண்ணன்
    மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் "வழுதி நாடன்" சடகோபன்
    - என்ற நம்மாழ்வார் பாட்டை அந்தப் பெண்ணே பாடிக் காட்டினாள்!
    கூவினாலே கேட்டு, வரும் தொலைவு தான் குருகூர்-ன்னு, திருவாய்மொழியில் இருந்தே உடையவருக்குத் தூரத்தை எடுத்துக் காட்டினாள் அந்தப் பெண்!

    இதைக் கேட்ட இராமானுசர் அவளை அப்படியே தரையில் வீழ்ந்து வணங்கினார்! - இது தான் ஆழ்வார் திருநகரி சிறப்பு! மகிமை!

    அந்தப் பாசுரத்தில் கள்ளபிரான் சொன்னது போல, தன்னை "வழுதிநாடன்" சடகோபன் என்றே குறித்து இருப்பார் ஆழ்வார்!

    ReplyDelete
  17. //இப்பாடகர்கள் திருநாராயணபுரத்தைசேர்ந்தவர்கள் என எழுதப்பட்டிருக்கிறது//

    கள்ளபிரான் சொல்வதில் தான் என் மனமும் ஒத்துப் போகிறது!
    திருநாராயணபுரம், இராமானுசர் காலத்துக்குப் பிறகே ஏற்றம் கண்டது! அதற்கு முன்பு பாழடைந்த ஒரு சிற்றூர்! அங்கு ஆலயமே இல்லை! அதனால் அங்கிருந்து அடியவர்கள் வந்து பாடி இருப்பார்கள் என்பது அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை! அதனால் தென் வழுதிநாட்டைச் சேர்ந்தவர்களே "ஓராயிரத்துள் இப்பத்தும்" என்பதைப் பாடிக் காட்டி இருப்பார்கள் என்றே கொள்ள ஏதுவாகிறது! அதுவும் அவர்களுக்கே பாடல்கள் முழுக்கத் தெரியாமல், ஏதோ தங்கள் சொந்த ஊர் என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்து வைத்துப் பாடி இருக்க வாய்ப்புண்டு!

    ReplyDelete
  18. //How he zeroed on only twelve? From the earliest three (முதலாழ்வார்கள்) to the last one (கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கையாழ்வார்) centuries lie. During these centuries, how only twelve were concluded - is a great mystery//

    இதில் புதிர் ஒன்றும் இல்லை!
    நம்மாழ்வார் தான் இன்ன பிற ஆழ்வார்களையும் நாதமுனிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறார்!
    அவர் காட்டிக் கொடுத்த மற்ற பாசுரங்களை வைத்தே - அந்தந்த ஆழ்வார்கள் என்று எண்ணிக்கை ஆகி, "பன்னிரண்டு" என்று வந்தது! ஆனால் எம்பெருமானிடத்தில் ஆழ்ந்தவரெல்லாம் ஆழ்வாரே!

    //Speaking from a non-religious point of view, the history of alvaars is written by religious people only. No professional historians interfered to write them.//

    இல்லை!
    * சமய வழிச் செய்திகளும் கிடைக்கின்றன!
    * குரு பரம்பரைப் பிரபாவமும் சொல்கிறது!
    * பாசுரங்களே ஆங்காங்கு காட்டிக் கொடுக்கின்றன!
    * வரலாற்று ஆசிரியர்களும் சிறப்பாக ஆய்ந்து உள்ளார்கள்!

    இவை எல்லாமும் சேர்த்து, பிற இலக்கியத் தகவல்கள் சேர்த்து, செவி வழிச் செய்திகளை உறுதிப்படுத்தி, பிற சுவடிகளைக் கொண்டு, சமயச் செய்திகளையும் ஆய்ந்து, அனைத்தும் ஒன்று திரட்டியே வரலாற்று ஆய்வு! இவ்வாறு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆய்ந்துள்ளனர்!

    மா.ராசமாணிக்கனார், சாமி சிதம்பரனார், மு.ராகவைய்யங்கார், பூர்ணலிங்கம் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை என்று நிறைய வரலாற்று அறிஞர்கள் இதைச் செய்துள்ளனர்! அண்மையில் KA நீலகண்ட சாஸ்திரியார், கோவிந்தராச முதலியார், டாக்டர் நாகசாமி, கே.எஸ் சம்பத் போன்ற அறிஞர்களாலும் விளக்கப்பட்டுள்ளது! அவரவர் supporting documentation (உசாத்துணை) கொண்டு நிறுவுவதால் ஆங்காங்கே வேற்றுமைகள் தெரிந்தாலும், ஆழ்வார்கள் அத்தனை பேரும் எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்கள் என்பதில் எவருக்கும் எந்தத் தடையும் இல்லை!

    //why it became necessary to emphasis Thirumaal worship? Did they encounter any opposition?//

    ஹா ஹா ஹா!
    இது பற்றிப் பேசினால் பெரிய வம்பில் போய் முடியும்! :)
    "சைவ" வேளாளர் நம்மாழ்வார், வைணவக் குலக் கொழுந்தாகி, வேதம் தமிழ் செய்து, அத்தனை சாதிக்கும், பெண்களுக்கும் வேதங்களை ஆக்கி வைத்து, சமயப் பொதுமை கண்டார் என்பதோடு சொல்லி முடிக்கிறேன்!

    வேதங்கள் தனிப்பட்ட உரிமைப் பொருளாக, ஒரு இடத்திலேயே முடங்கி, மறைந்து போய் விடாது, எல்லாரும் பயனடையும் வண்ணம், அந்த வேதக் கருத்துகளுக்கே மீண்டும் உயிரூட்டி, உலாவ விட்டவர் மாறன்! தமிழ் வேதம் என்று சைவச் செம்மல் இடைக்காட்டுச் சித்தர், திருவாய்மொழியைச் சிலாகிக்கிறார் என்றால் சும்மாவா?

    செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
    "தெளியாத மறை நிலங்கள்" தெளிகின்றோமே!

    ReplyDelete
  19. //நாம் விரும்பி நேசிக்கும் ஒன்றை, ஓவராகப் பீடத்தில் ஏற்றி புனிதப் பூச்சு செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்! //
    Not all may agree on this. Many people have love+respect for God...many people have love+respect for the devotees of God. Its a very sensitive matter. Many people who have "தாஸ்ய பாவம்" (either with the Supreme or with the devotees of the Supreme) may find this point to be arrogant...though I am not finding it so. :)

    யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவையாக எழுத தனித் திறமை வேண்டும்.
    Ravi, I am glad that I denied your offer. :) ரங்கன் அண்ணா, இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தொடருங்கள். :)

    ReplyDelete
  20. //Radha said...
    Not all may agree on this. Many people have love+respect for God...many people have love+respect for the devotees of God//

    Very true!
    But have already explained how Ramanuja brought forth this point! Plz address that and have in mind, when ppl tend to disagree.

    Not many ppl agreed to singing tamil vedam in temples way back? But didnt that change?
    Bcoz acharyas took effort!


    Not many ppl agreed to hitting arangam with fruits and flowers in mattaiyadi uRchavam. But didnt that change and is happening now?
    Bcoz acharyas took efffort!

    Juzt bcoz not many ppl dont agree, doesnt mean, that thoughts should not be percolated.
    Many ppl "dont agree" bcoz they are "NOT aware"! Once awareness sets in, that will go away. This is the objective of gunaanubhavam!


    "சிறு பேர்" அழைத்தனவும் சீறி அருளாதே!
    இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
    என்ற திருப்பாவையை "ஆத்மார்த்தமாக" ஓதும் அடியவர்களும் உள்ளனர்! அவர்களுக்கு உறுத்தவே உறுத்தாது!

    //Many people who have "தாஸ்ய பாவம்" may find this point to be arrogant//

    True devotees dont "enforce" their own bhaavam on any other devotee.
    Many people who have "தாஸ்ய பாவம்", dont find it as arrogant, when Andal sings "மானமிலாப் பன்றி"!
    In fact, they also sing in saatru marai like this, even today, with or without knowing the significance :)

    //may find this point to be arrogant//
    கோபிகைகள் கண்ணன் தலைவலி தீர, அவன் தலைக்குத் தங்கள் காலடி மண்ணை அனுப்பி வைத்தார்கள்!
    That might have been seen as "arrogant" at that point of time, but NOT today!

    Whatever, heartful devotees dont worry too much, when they are branded as "arrogant"! Coz, they are concerned more abt the welfare of the Lord than abt the image of themseleves!
    சொன்னால் விரோதமிது, ஆயினும் சொல்லுவேன் என்று நம்மாழ்வார் இதையே பாடிச் சென்றார்!

    //Ravi, I am glad that I denied your offer. :)//
    I am glad that you are glad, Radha :)

    ReplyDelete
  21. நல்ல நடை,பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  22. கண்ணன் அண்ணா

    //ஒரு சில ஆசாரியர்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் இருவரையும் ஆழ்வார்கள் என ஒப்புக் கொள்வதில்லை//

    முதலில், அடியேனைப் பொறுத்தவரை, ஆழ்வார்கள் பன்னிரண்டே! இந்த வித்தியாசத்தை இங்கு குறிப்பிட்டதற்குக் காரணம், இப்படியும் ஒரு வழக்கு இருக்கிறது என்று தெரிவிக்கத்தான். இனி, காரணம் தெரிந்து கொள்ளலாம் (படித்ததில் இருந்து - அடியேனுடைய எண்ணம் இது அல்ல):

    மதுரகவி ஆழ்வார்:

    இவர், எம்பெருமான் மீது பாடல்கள் எழுதவில்லை. இன்னும் ஒரு ஆழ்வார் மீதே எழுதினார். ‘ஆழ்வார் என்றால், எம்பெருமான் மீது ஆழங்கால் பட்டவர்கள்’ என்று பொருள். எம்பெருமான் மீது பாடல்கள் எழுதவில்லை என்பதால், ஆழ்வார் அல்ல என்பதே அவர்கள் வாதம்!

    ஆண்டாள்:
    ஆண்டாள் நாச்சியார் திருமொழி சில ஆசாரியர்களால், காதல் பாசுரங்களாகவே கொள்ளப்படுகிறது.
    ஆனால் எனவே, ஸ்ரீ ஆண்டாளையும் ஏற்றுக் கொள்வது இல்லை. இந்த விளக்கம் அடியேனுக்கு உகந்தது அல்ல (ஏனென்றால், இந்தக் காதல், எம்பெருமான் மீதே! மேலும், திருப்பாவை இந்த வகையைச் சேர்ந்தது அல்ல).

    கொசுறு: இவர்கள், இன்னும் ஒரு விஷயத்தைச் சான்றாகக் கூறுவர். பல தனியன்கள் ஆண்டாளையும் மதுரகவியாரையும் சேர்த்துச் சொல்ல வில்லை:

    குரு பரம்பரை பொதுத் தனியன்:

    பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத
    ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
    பக்தாங்ரிரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
    ஸ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

    - பராசர பட்டர்

    இதையே ஒரு சான்றாகவும் கூறுவர்.

    மேலும், பின்னால் வந்த ஆசாரியர்களே ஆண்டாள், மதுரகவி இருவரையும் சேர்த்து, தனியன்களில் சொல்ல ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு ஒன்று:

    பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
    பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை*
    அய்யன் அருள் மாறன், சேரலர் கோன் - துய்யப்பட்ட
    நாதன் அன்பர்தாள் தூளி நற்ப்பாணன் நற்கலியன்
    ஈதிவர் தோற்றத்தடை வாமீங்கு
    ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
    யாழ்வார் எதிராச ராமிவர்கள்-வாழ்வாக
    வந்துதித்த மாதங்கள் நாள்கள்தம்மின் வாசியையும்
    இந்த உலகோர்க்குரைப்போம் யாம்

    என்பார் மணவாள மாமுனிகள்.

    முதலில் பத்து ஆழ்வார்களைச் சொல்லி விட்டு, பின்னரே இருவரையும் சேர்த்துச் சொல்வதன் காரணம் அடியேனுக்கு விளங்கவில்லை.

    ReplyDelete
  23. Dear Mr. Srinivasan

    //Nadhamunigal first went to Thirukudanthai,there he enquired about the thousand passurams, they know only that ten passurams,so he went to Thirukurugur and met Parangusadhasar,this is what I heard.//

    I have heard this as well. In fact, I have heard 8-10 different version of how NaathamunigaL got the divine 4,000. One of them even says that 'NathamunigaL went all over Tamil Nadu and collected the 4,000', with no reference to Nammaazvaar blessing him with 4,000. There is another book 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம் -மூலமும் விளக்கவுரையும் - முனைவர் கமலக் கண்ணன்’ which leaves this vague - I will repeat it verbatim here:

    கால வெள்ளத்தாலும், போற்றுவாரின்மையாலும், எப்படியோ மறைந்து போன இப்பாசுரங்களை, நாதமுனிகள் என்னும் ஆசாரியர்களுள் முதல்வரான வைணவப் பெரியார் அரும்பாடு பட்டுத் திரட்டினார்.

    In the entire book of 9 Volumes (each about 500 pages), this appears to be the only reference to how NaathamunigaL got 4,000!! BTW, I love this book, as the explanations are very nice, short and easy for laymen like me to understand.

    For all you know, your version - or Mr. KaLLapiraan's version could be the truth.

    I have only looked at some books which have written about it, and took the majority view and stated it in my earlier post.

    இந்த தலைப்பில் அடியேனுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வேறு ஏதேனும் புத்தகத்தில் விவரம் கிடைத்தால் சொல்லவும்.

    ReplyDelete
  24. கவிநயா அக்கா

    //கண்ணன் இதற்கு விளக்கம் சொல்லி விட்டாலும் படிக்கையில் கொஞ்சம் உறுத்தியது உண்மைதான். மற்றபடி உங்கள் நடை அருமையாக இருக்கிறது. நன்றி.//

    I want to make a quick clarification on what 'I' meant when I wrote about 'சோப்புக் கம்பெனி விளம்பரம்’.

    When we see religious movies or serials, almost invariably, there is a brightness first, and the God/Angels appear. My reference to the 'வெளிச்சம்' was to this brightness or 'Halo'. I for one, would have never thought about Alwar's colour when writing about this.

    அடியேன், வாழ்க்கையில் முதல் முறையாக எழுட்டுகிறேன். இன்னும் கற்றுக் கொள்ளவே ஆரம்பிக்க வில்லை என்று இரண்டாவது தபாலிலேயே தெரிந்து கொண்டேன். பிறர் மனதை உறுத்தியது உண்மை என்று தெரிகிறது. ஆனால், அது வேண்டுமென்றே அல்ல. அறியாமையினால். இனிமேல், இம்மாதிரித் தவறுகள் ஏற்படாமல் இருக்க முயற்சிக்கிறேன். மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  25. //ஹா ஹா ஹா! எந்தக் கண்ணன்-க்கா? :)//

    என்கிட்ட நேரா பேசறது ஒரே ஒரு கண்ணன்தான் :)

    //My reference to the 'வெளிச்சம்' was to this brightness or 'Halo'./

    I see where you are coming from, Rangan :)

    //இன்னும் கற்றுக் கொள்ளவே ஆரம்பிக்க வில்லை //

    என்று நீங்கள் சொன்னாலும், உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடியது எக்கச்சக்கமாக இருப்பது புரிகிறது :)

    வருத்தத்தை விட்டு அடுத்து எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். கண்ணன் (ரெண்டு பேரும்தான்) துணை இருப்பான் :)

    ReplyDelete
  26. //பிறர் மனதை உறுத்தியது உண்மை என்று தெரிகிறது. ஆனால், அது வேண்டுமென்றே அல்ல. அறியாமையினால்.//

    ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி
    ஹரீ ஹரீ ஹரீ ஹரீ ஹரீ ஹரீ ஹரீ ஹரீ
    ஹரீஈ ஹரீஈஈ
    என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவை :)
    its actually a good post !

    ReplyDelete
  27. கண்ணபிரானே

    //சொல்லப் போனால் அவர் தொகுத்தது ஆழ்வார்களின் 3892 பாசுரங்கள் தான்! பின்னாளில் இராமானுச நூற்றந்தாதி 108-உம் சேர்ந்தே "நாலாயிரம்" என்று ஆனது!//

    பிரபந்தக் கணக்கு பற்றிய சிறு விளக்கம்:

    நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்தது, நாலாயிரம் (அவர் கணக்குப் படி).

    பெரிய திருமடல் - 297 வரிகள்
    சிறிய திருமடல் - 155 வரிகள்

    எல்லாக் குழப்பங்களும், இந்த வரிகளை எத்தனை பாசுரங்களாகக் கொள்வது என்பதில் தான்.

    நம்மாழ்வார் கூறிய கணக்குப் படி, திருமடல்களின் 2 வரிகள், ஒரு கண்ணியாகக் கருதப் பட்டன், எனவே, மடல்களின் பாசுரக் கணக்கு பின்வருமாறு குறிக்கப் பட்டுள்ளது.

    பெரிய திருமடல், 148.5
    சிறிய திருமடல் 77.5

    நாதமுனிகள் காலம் தொடங்கி, ஒராண் வழியாக நடந்து வந்த பிரபந்தம், எம்பெருமானார் காலத்தில் நன்கு பரவியது.
    அதுவரை, 4000-த்தில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

    திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமானுஜ நூற்றந்தாதி, எம்பெருமானார் காலத்திலேயே ஆழ்வார்கள் பாசுரங்களோடு அநுசந்திக்கப்பட ஆரம்பித்தது. இதன் பிறகே, 4000 கணக்கில், வித்தியாசமும், இலக்கணமும் தலையிட்டன.


    திருமடல்கள் இரண்டும் கலி வெண்பாக்களால் ஆனவை. எனவே, இதை இரண்டு பாசுரங்களாகத் தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.

    இருந்தும், நாலாயிரக் கணக்கை மாற்ற வேண்டாம் என்பதற்காக, (4 வரிகளை ஒரு பாசுரமாகக் கொண்டு, கீழ்வருமாறு கணக்கிடுவர்:

    பெரிய திருமடல் - 78
    சிறிய திருமடல் - 40

    இதனால், இராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாசுரங்களைச் சேர்க்க இடம் கிடைத்தது. பிரபந்த சாரத்திலும், இந்தக் கணக்கே கூறப் பட்டுள்ளது:

    சிறியமடற் பாட்டுமுப்பத் தெட்டி ரண்டும்
    சீர்பெரிய மடல்தனிற்பாட் டெழுபத் தெட்டும்
    .

    பின்னர், நம்மாழ்வார் கூறிய இலக்கணமும், கணக்கும் தவறா? இதன் பதிலாக, தமிழ் அறிஞர்கள் பின் வருமாறு கருத்து உரைப்பர்:

    நம்மாழ்வார் வாழ்ந்த காலம், 2-ம் சங்க காலமோ, அல்லது அல்லது மதுரையில் கடைச் சங்க காலமோ என்பர். ஆனால், இராமானுஜ நூற்றந்தாதி வந்த காலம், சங்கம் மருவிய காலத்திற்கும் பிற்பட்டது. எனவே சங்க கால இலக்கண விதிகளும் மாறியுள்ளன. எனவே, அக்கால விதிகளின் படியே நம்மாழ்வார் கூறியதாக உரைப்பர். மேலும், எம்பெருமானார் கால வழக்கின்படி, இராமானுஜ நூற்றந்தாதியைச் சேர்த்ததும் சரியே என்பர்.

    சுருங்கச் சொன்னால், நம்மாழ்வார் அளித்ததும் 4000 தான். இன்று நாம் படிப்பதும் 4000 தான். ஆனால், ’எது 4000?’ என்ற கணக்கு தான் சற்று வித்தியாசம் - மடல்களின் எண்ணிக்கை என்ன என்பதே.

    இதைப் பற்றி மேலும் அறிய வேண்டும் என்றால், திருவேங்கடத்தான் திருமன்றம் பதிப்பிட்டுள்ள நாலாயிர திவ்வியப் பிரபந்தம் புத்தகத்தின் முன்னுரையும், டாக்டர் ஆர் எதிராஜன் அவர்கள் எழுதிய ஆழ்வார்கள் வரலாறு என்ற புத்தகத்தையும் காண்க (வித்துவான் வேங்கடசாமி ரெட்டியார் எழுதியது).

    ReplyDelete
  28. கண்ணா!

    //திருநாராயணபுரம், இராமானுசர் காலத்துக்குப் பிறகே ஏற்றம் கண்டது! அதற்கு முன்பு பாழடைந்த ஒரு சிற்றூர்! அங்கு ஆலயமே இல்லை! அதனால் அங்கிருந்து அடியவர்கள் வந்து பாடி இருப்பார்கள் என்பது அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை!//

    இந்தக் கதையை அடியேன் முதலில், ஆழ்வார்கள் வரலாறு புத்தகத்தில் படித்தேன். அடியேனுக்கும் இந்தச் சந்தேகம் வந்தது உண்மையே. இதைப் பற்றி விசாரித்தபோது, கிடைத்த விளக்கம் இது:

    வீரநாராயணபுரம், மைசூருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோயில், இராமானுஜரால் பிரபலம் அடைந்தது உண்மையே. ஆனால், இங்குள்ள நரசிம்மர் கோயில், யுகங்களாக இருக்கின்றது - இரணிய வதத்தின் பிறகு, கோபம் தணியாமல், நரசிம்மர் இங்கு வந்து தவம் செய்ததாகக் ஒரு கதை உண்டு.

    மேலும், மைசூரில் வைணவர்கள் (பெரும்பாலும் கரூர், அமராவதி நதிக்கரைப் பகுதியில் இருந்து சென்றவர்கள்), சுமார் 1500-1800 ஆண்டுகளாக இருக்கின்றனர். இவர்களில் சிலருக்குப் பிரபந்தங்கள் தெரிந்திருக்கலாம்.

    பின்குறிப்பு:
    கேரளாவில், திருமிட்டக்கோடு எனும் திவ்விய தேசம் உள்ளது (#66). ஆனால், மு. ராகவையங்கார் அவர்கள், சேரர்களின் பழைய தலை நகரமான கருவூரில், அமராவதிப் பக்கத்தில் உள்ள திருமால் கோயில் எனும் பகுதி இன்றும் வித்துவக் கோடு எனப்படுவதால், இதையே குலசேகராழ்வார் தம் பாசுரங்களில் ‘வித்துவக்கோட்டம்மா’ (பெருமாள் திருமொழி-5-தருதுயரம் தடாயேல்)எனக் குறிப்பிட்டதாகக் கூறுவார். (ஆழ்வார்கள் கால நிலை பக்கம் 67-68). முனைவர் கமலக் கண்ணன் புத்தகத்திலும் (992) இது குறிப்பிடப் பட்டுள்ளது.

    எனவே, அமராவதி நதிக் கரையில் வைணவம் செழித்து வந்தது என்பது உறுதி. இங்குள்ளவர்களே மைசூருக்குப் பெயர்ந்தனர் என்பதும் தெரிகிறது.

    இங்குள்ள கோயில் பெயரும் வீர நாராயணப் பெருமாள் கோயில் தான். நாதமுனிகள் சந்தித்த வைணவர்கள் இங்கிருந்தும் வந்திருக்கலாம் என்பது என் எண்ணம் (ஆனால், இதற்கு ஆதாரம் அடியேனிடம் இல்லை).

    ReplyDelete
  29. //Rangan Devarajan said...
    கண்ணா!//

    இது என்ன ஆளாளுக்கு என்னைக் கண்ணா கண்ணா-ன்னு கூப்புடுறீக?:)
    கவி-க்கா மட்டும் தான் அப்படி பொதுவில் கூப்பிடுவாங்க! :)இன்னொருத்தன் வம்பு பண்ணறத்துக்குன்னே தனிமையில் கூப்பிடுவான்! :)

    ரங்கன் அண்ணா,
    வீர நாராயணபுரம் தகவல்களுக்கு நன்றி! அங்குள்ள நரசிம்மர் மலைக் கோயில் பழமையானது தான்! கீழேயுள்ள செல்வப் பிள்ளை ஆலயமும் பலராமன் கட்டி வழிபட்ட பழமை என்றாலும், கால வெள்ளத்தில் சிதைந்து போனது! அதனையே இராமானுசர் மீட்டார்!

    ஆக, இடைப்பட்ட காலத்தில் ஆலயம் இருந்தாலும், அது அதிகம் புழங்கும் இடமாகவோ, இல்லை வைணவர்கள் கூடி வாழ்ந்த இடமாகவோ இல்லை! அதனால் தான் அங்கிருந்து வந்து ஓராயிரத்துள் இப்பத்தும் பாடி இருக்க முடியாது என்று துணிபு! மற்றபடி அவர்கள் இன்ன ஊர் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் அரிதே!

    ஊரு என்னவா இருந்த என்ன?
    அத்தனை பேருக்கும் நம்மாழ்வார் அருளால் பாசுரம் கிடைத்ததே! அதுவல்லவோ பெரிது!
    யாதும் ஊரே, யாவரும் கேளிர், பாசுரம் கேளீர்! :)

    ReplyDelete
  30. //ஆண்டாள் நாச்சியார் திருமொழி சில ஆசாரியர்களால், காதல் பாசுரங்களாகவே கொள்ளப்படுகிறது.
    ஆனால் எனவே, ஸ்ரீ ஆண்டாளையும் ஆழ்வாராக ஏற்றுக் கொள்வது இல்லை//

    ஹா ஹா ஹா
    இதுக்கு உண்மையான விளக்கம் வேற ரங்கன் அண்ணா! பிறகு சொல்கிறேன் :)
    * அஞ்சு குடிக்கு
    * ஒரு சந்ததியாய்
    * ஆழ்வார்கள் தஞ்செயலை
    * "விஞ்சி நிற்கும் தன்மையளாய்"
    யம்மாடி...என் கோதை! உன்னைப் போயி ஆழ்வார் இல்லை என்று சொல்ல மனசும் வருமோ? :)

    ReplyDelete
  31. //Rangan Devarajan said...
    கண்ணபிரானே
    பிரபந்தக் கணக்கு பற்றிய சிறு விளக்கம்//

    அருமை! எளிமையாச் சொல்லி இருக்கீங்க ரங்கன் அண்ணா, இந்த கணக்கு எப்படியெல்லாம் மாறியது என்று! அத்தனைக்கும் காரணம் நம்ம ராபின்ஹூட் ஆழ்வார் தானா? :))

    //பெரிய திருமடல் - 297 வரிகள்
    சிறிய திருமடல் - 155 வரிகள்//

    கண்ணியாகக் கருதி, divided by 2
    //பெரிய திருமடல், 148.5
    சிறிய திருமடல் 77.5//

    விருத்தமாகக் கருதி, divided by 4
    //பெரிய திருமடல் - 78
    சிறிய திருமடல் - 40//

    இப்போது பலருக்கும் புரிந்து விடும், நாலாயிரம் என்ற மேஜிக் நம்பர்! :)

    ReplyDelete
  32. @ரங்கன் அண்ணா
    //அடியேன், வாழ்க்கையில் முதல் முறையாக எழுட்டுகிறேன். இன்னும் கற்றுக் கொள்ளவே ஆரம்பிக்க வில்லை என்று இரண்டாவது தபாலிலேயே தெரிந்து கொண்டேன்//

    ஆகா!
    நீங்களே இப்படிச் சொன்னா, அடியேன் இது வரை எழுதிய பந்தல் பதிவுகள் எல்லாம் எந்த மூலைக்கு? :)

    வருந்தற்க! பந்தல்-ல காலை வச்சாலே இப்பிடித் தான் ஆரம்பிக்கும்! அப்புறம் மெள்ளமா கும்மி வரும்! அப்புறம் நீங்க எங்கேயோ போயிருவீங்க! :)))

    பந்தல் வாசகர்கள் பலரும் ஞானம் மிக்கவர்கள்!
    கள்ளபிரான், திருத்திரு என்னும் சுவாமி ரகுவீர தயாள் போன்றவர்கள் எல்லாம் பாருங்க! பின்னூட்டத்தில் சற்றே வருத்தப்பட்டாலும், அதை எவ்வளவு நயமாக எடுத்துக் காட்டினர்! வேறு பல செய்திகளை அள்ளித் தெளித்தனர்! அதுவே குணானுபவம்!

    அன்பர்களின் எந்தக் கேள்வியும் (நாத்திகமோ/ஆத்திகமோ) ஒதுக்காது, அடியார்கள் யாவரையும் ஒருங்கிணைத்து, கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்த்து வாதித்து, கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    பல விதங்களான சிம்ம நடை, அஸ்வ நடை, கஜ நடை, சர்ப்ப நடை, அன்ன நடை என்று அரங்கன் நடை, பந்தலில் தொடர்ந்து தொடரட்டும்! அஞ்சற்க! வருந்தற்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. தல வணக்கம்
    பக்தியுடையோன் படைக்குஅஞ்சான
    ஸ்டைல் -- எல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்
    பாசுரம் ஆரம்பிக்கலாம் நம்ம நரசிம்மர் துணை இருப்பார்

    http://srikamalakkanniamman.blogspot.com

    ReplyDelete
  34. அரிமுக அறிமுகத்திற்கு முன்பாக நாலாயிர அறிமுகம் அருமையாகவே ஆரம்பமாகி இருக்கிறது! என்ன கொஞ்சம் பந்தல்காரர் ‘டச்’ அங்கங்கே நிறைய தெரிகிறது அவர் இதை நீங்க எழுதறபோதுதொடவில்லை என்றாலும்!
    பந்தலுக்கு வந்தாலே இப்படி ஒருபாதிப்பை ஏற்படுத்த வல்லார் கேஆரெஸ் ஒருவராத்தான் இருக்கமுடியும்!

    //, கண்ணன், இராமனைப் பற்றியே அதிகமான பாசுரங்கள் காணப்பட்டாலும், நரசிம்மாவதாரமும் பல பாசுரங்களில் கூறப்படுகின்றது.
    //

    ஆமாம் நரசிம்மனை இராமாவதாரக்காவியத்திலேயே கம்பர் எடுத்தாள்கிறாரே! அங்கும் இங்கும் எங்கும் நிறைந்தவனாயிற்றேநரசிம்மன்!

    லஷ்மிசஹஸ்ரம்
    திருமகளை நரசிம்மர்போல்நடத்திக்காட்டுபவள் என்கிறது!(12வது ஸ்லோகம்)

    சிங்கமுகத்துச் செங்கண்மால் செங்கமலத்துச்செய்யாள்போல்
    செய்கைகளெல்லாம் செய்வதனால் சேர்ந்திருவரையும் சேவிப்பேன்

    அந்தியம்போதில் அரியுருவாகிஅரியைஅழித்தவனை பந்தணைதீரப்பல்லாண்டுபாடுவோம்
    என்கிற இந்த வரிகளைத்தவிர நரசிம்மனை ஆழ்வார்கள் பிரபந்தத்தில் பதித்த வரிகளை இன்னும் நான் அறியவில்லை,,விரைவில் அவைகளை அளிக்கவும்! நன்றி.
    (பிகு..ஷைலஜா அல்லது அரங்கப்ரியா என அழைத்தால்போதும் உங்களுக்கும் நான் அக்காவா இருப்பேனான்னு சந்தேகமா இருக்கு!!:):)

    ReplyDelete
  35. WoW! So much info's as usual! எனக்கு ஒரு கள்ளபிரான் தெரியும்! அவர் ஒரு மகாகவியின் புதல்வர்! தாமிரபரணி பாயும் சீமைக்காரர்! அவரா இவர்!?

    ReplyDelete
  36. T.K. Ramanuja Kavirajar was born to Kallapiran and Arasalwar on 25.12.1905 in Tirunelveli, Tamil Nadu. Born in a traditional Hindu family, Kavirajar was intensely trained in Nalayira Divya Prabandham a divine collection of 4000 hymns on Lord Vishnu sung by the mystic Alwars.
    Thiruparkadal Kavirayar, who was his maternal grandfather, is credited to have rendered this tutoring to Kavirajar at a very tender age. Thus the poet was exposed to both spirituality and classic poetry at one stroke.
    His creative career made an early start while he was in school at Tirunelveli. Kavirajar was studying his ninth standard when he pencilled his first poem in chaste Tamil on nature. The poet displayed similar prowess in English as well.

    ReplyDelete
  37. T. R. KALLAPIRAN - Thirunelveli Ramanusa Kallapiran Birth: 26 October 1938. Kallapiran is the Founder - Chairman of the Pandyan Grama Bank. (Pandyan Grama Bank is a rural bank which holds the No. 1 Rural bank position in India) He has worked as the Deputy General Manager in Indian Overseas Bank. His translation of the holy book Thirukkural in English in Management perspective is very much appreciated by the Management Gurus all around the world. He is the author the book "Vetrikku vazhikaattum Melaanmai" (வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை).

    Is it the same Kallapiran I knew?!

    ReplyDelete
  38. என்னோட கமெண்ட் : அருமையான ஆறு.. சுவையான தண்ணி... அள்ளி குடிப்பமா இல்லை இது எங்கன இருந்து வருது? யாரு அணைகட்டினா? எத்தனை கிலோமீட்டர் ஓடுது? இப்படி ஒரு ஆய்வாளர் ரேஞ்சுக்கு யோசிப்பமா? ரங்கன் நாங்க தண்ணி குடிக்கிற கோஷ்டிங்கோவ்! சீக்கிரம் மடையை திறங்க!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP