Monday, June 29, 2009

தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!

மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!

அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!

நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!
இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, ஓடிக் கொண்டிருக்க, நானும் பல மைல்கள் எங்கே என்றே தெரியாமல், எங்கோ ஓடிக் கொண்டே இருந்தேன்!

இந்தப் பாடல் பக்த ராமதாசு என்ற தெலுங்குப் படத்தின் வாயிலாகப் பிரபலமான பாடல்! பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
அதை சினேகா பாடும் போது, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்!

இதில் ஒரு விசித்திரமான சோகம் என்னவென்றால்,
இந்தப் பாடலை மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் பாடலாம்! துக்கத்தில் துவளும் போதும் பாடலாம்!
இரண்டுக்குமே ஒத்து வரும் அற்புதம் எப்படி இந்தப் பாட்டில் அமைந்தது? = "மெல்லிய மனசு"!

இந்தப் பாடல் "மெல்லிய மனசு" என்ற ஜீவனைக் கட்டிச் சிறையில் எழுதப்பட்ட பாடல்!
அந்த மென்மை தான், ஒரு வெள்ளை இறகு போல, காற்றில்லாத போதும் பறக்கும்! காற்று அடிக்கும் போதும் பறக்கும்!

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா? = அன்பாக வந்தவர்களை அரவணைத்துக் கொள்பவன் என்று "விருது" மட்டும் வாங்கி வச்சிருக்கியே?
* இதை மகிழ்ச்சியாய் இருக்கும் போது சொன்னால் = கலாய்த்தல்!
* இதையே கண்ணீரில் சொன்னால் = கையறு நிலை!

கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ! = கருணையோடு இந்த பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு! உன் பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

கேளுங்கள்:
* பக்த ராமதாசு படத்திலிருந்து - சித்ரா - துன்பத்தில்!
* பாலமுரளி கிருஷ்ணா - மிக்க இன்பத்தில்!


இதை மெட்டு மாறாமல் தமிழாக்கி, என் வாய் பல முறை முணுமுணுக்கும்!
அப்படி முணுமுணுத்ததை இப்போது பந்தலில் உங்கள் முன் வைக்கிறேன்!
இதோ! அதே மெட்டில், ஆனால் தமிழில்.......

கேட்டுக் கொண்டே படியுங்கள்! சங்கராபரணம் படத்தில்-வாணி ஜெயராம் பாடுவது...

பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி
பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!

பலுகே பங்கார மாயே, பிலிசின பலுக வேமி
கலலோ நீ நாம ஸ்மரண, மறவே சக்கனி சாமீ
வினவினால் வாயைத் திறந்தொரு வார்த்தை சொன்னால் தப்பா?
கனவிலும் நாமம் தன்னை, மறவேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


எந்த வேடின கானி, சுந்தைன தய ராதோ?
பந்தமு சேய நீ, நெந்-ததி வாடனு தந்த்ரி
எத்தனை வேண்டி னாலும், உள்ளம் இரங்கி டாயோ?
அத்தனை அழுத்த்த் தமா? அகலேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா?
கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ!
(பலுகே பங்கார மாயனா?)

சரணா கத விருதை, முரணாக வாங்கி னோயோ?
கருணை கொண்டே பத்ரா....சல..ராம தாசன் என்னொடு...
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


இதை அன்பர்கள் யாரேனும் தமிழில் பாடிக் கொடுக்க முடியுமா? மிகவும் மகிழ்வேன்!

வரிகள்: பத்ராசலம் ராமதாசர்
ராகம்: ஆனந்த பைரவி்
தாளம்: ஆதி


படத்தில், சினேகா பாட, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்! பின்னே, அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் கட்டினால் சும்மா விடுவார்களா?
ஆலயத்தின் பணத்தை எடுத்து, அரசாங்கத்துக்குப் பயன்படுத்தினால் அது நியாயம்! ஆனால் அரசாங்கப் பணத்தை எடுத்து (அதுவும் கடனாகத் தான்) ஆலயம் கட்டினால், அது நியாயம் இல்லை! :)

உலகம், "நியாயம்" என்பதற்கு விதித்திருக்கும் விதியே தனி! ஆனால் மென்மையான மனத்துக்கு இந்த உலக விதிகளா கண்ணுக்குத் தெரிகிறது???
மனத்தைப் பறி கொடுத்தால், எல்லாமும் பறி கொடுக்க வேண்டியது தான்! அப்படிப் பறி கொடுத்தவர்களில் ஒருவர் பத்ராசலம் இராமதாசர்!

கோதாவரிக் கரையில், சீதையின் கடத்தல் நடந்த இடம் என்று கருதப்படும் பஞ்சவடி தான் இந்த பத்ராச்சலக் காடுகள்!
* கடத்தலுக்கு முன்பு இன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!
* கடத்தலுக்குப் பின் துன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!

* நினைந்தவாறு இருக்கும் பிராட்டியும்,
* புன்சிரிப்பில் இராகவப் பெருமாளும்,
* அன்பே உருவான இளைய பெருமாளும்...என்று திருவுருவ அழகே அழகு!

அதற்கு ஆலயம் எடுப்பித்த போது, சொந்தப் பணம் போதவில்லை! நன்கொடையாய் வந்த பொதுப் பணமும் போதவில்லை! கோல்கொண்டா அரசாங்க தாசில்தாரான இராமதாசர், வரிப் பணத்தில் சற்று கடன் வாங்குகிறார்! கருவூலத்தில் வட்டியுடன் திருப்பிச் சேர்ப்பதாக முறி எழுதிக் கொடுத்துத் தான் பணம் எடுத்துக் கொள்கிறார்!

மன்னன் தானி ஷா, வெகுண்டு எழுகிறான்!
இத்தனை காலம் ஆலயங்களின் வருவாய்களைக் கருவூலத்துக்குத் திருப்பினோமே என்று நினைக்க கூட அந்த "நீதிபதிக்கு" நேரம் போதவில்லை!
பொதுப்பணத்தில் கை வைத்த குற்றத்துக்காக இராமதாசர் சிறைப் பிடிக்கப்படுகிறார்! அது வரை சரியே! ஆனால் சிறைக் கொடுமைகள் அதிகம் கொடுத்து, அவரை அக்கு வேறு ஆணி வேறாகத் துன்புறுத்துகிறார்கள்!

கடனாகப் பெற்றதைத் திரும்ப அடைக்காத வரை, அடைக்காதவரை ஆளனுப்பித் துன்புறுத்தும் கிரெடிட் கார்டு காலம் தான் போலும், அந்தக் காலமும்!
சிறைக் கொடுமைகளுக்கு நடுவே தான் இந்தத் துன்ப/இன்ப மயமான பாட்டு!
சிறையில் இருந்தது கூடத் துன்பமாகத் தெரியவில்லை!
அவன் பாராமுகம் = துன்பம்! அவனைப் பார்க்கும் முகம் = இன்பம்!

இளவல்கள் இரண்டு பேர், தானி ஷாவின் அரண்மனைக்கு வந்து, தங்கக் காசுகள் செலுத்தி, விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்!
அன்று அன்னையைச் சிறை மீட்டவன், இன்று என்னையும் சிறை மீட்டுவானோ?
அவர்கள் செலுத்திய பதினாறாம் நூற்றாண்டு தங்கக் காசுகள் இன்றும் உள்ளன! ஒரு பக்கம் பட்டாபிஷேகம், மறுபக்கம் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று அந்தக் காசுகளை இன்றளவும் காணலாம்!

இசைக்கடல் தியாகராஜருக்கும் முன்னோடியானவர் பத்ராசலம் இராமதாசர்! தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்! தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!


ராமதாசு - படத்திலிருந்து: (Must See)



பத்ராசலம் ஆலயத்தில் திருக்கல்யாணத்தின் போது: (Nice to See. Pl. watch the jewels hand picked by Ramadasar.)



தீபிகா - சிட்னியில்:



FUSION: (Must Hear)



உன்னி கிருஷ்ணன்:



ஸ்வாதித் திருநாள் ராம வர்மா:



* Srivats கேட்டுக் கொண்டபடிக்கு, From Rock to Ragas!


கருணிஞ்சு பத்ராசல = கருணையோடு உன் பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு!
வர ராம தாச போஷ = உன் ஆதுரமான பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

பலுகே பங்கார மாயனா!
எந்நாளும் உன்னோடு "பிரிவின்றி",
பரிவுடன் ஆயிரம் பல்லாண்டு!
Read more »

Thursday, June 25, 2009

"ஓம் நமோ" என்றால் இதுவே! - 5

விமானத்தில் எழுதிக் கொண்டே வரும் பதிவு என்பதால், நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)

"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!
ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப் போவோம்!

* நம என்றால் ந+ம = இல்லை + எனது!
* எதுவும் எனதில்லை என்பது தான் நம!
நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!

நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?
* எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?
* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)


பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!
"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!

அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?
இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)
ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!
தெரிஞ்சிக்கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!
மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :)

எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே எனது, என் பதிவைப் படிக்கறவங்க எல்லாம் என் ஆளுங்க, இதைப் படிச்சிக்கிட்டு என் கிட்ட கோச்சிக்கறவங்க எல்லாம் என் விரோதிங்க! :)

சின்ன வயசுல பென்சில் எனது, பருவ வயசுல நயன்தரா காமிக்ஸ் எனது,
கல்லூரியில் அவ எனது, அவ கிட்ட போட்ட கடலை எனது! அவ கிட்ட கடலை போடற மத்தவங்க எல்லாரும் கூட எனது (என் எனிமி),
வேலைக்குச் சேர்ந்தாப் பொறவு போனஸ் எனது, கல்யாணம் ஆனப் பொறவு என் போனஸ் அவளுது, ஆனா அவ அப்பா சொத்து எப்படியும் ஒரு நாள் எனது..... :)

இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)

மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)

இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?
* ந மம = நம! நம! நம!
இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!


அட போங்கய்யா! ஒங்க சம்பளத்தை ஒங்களது இல்லை-ன்னு சொல்லிருவீங்களா? பெருசா பேச வந்துட்டாங்க "நமஹ"-வைப் பத்தி!
யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)

இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)

பிறக்கும் போது உடம்பு மட்டும் தானே பொறந்துச்சு?
அக்காஃபீனா தண்ணி பாட்டில், செரிலாக் பால் பாட்டில், ஷேம் ஷேம்-மை மறைக்க லூயி பிலிப்ஃஸ்-ன்னு பலதும் ரெடிமேடா பேக் பண்ணி கொண்டு வந்தோமா என்ன? :)
அப்பறம் அம்மா பாலூட்டினாங்க! அப்பா துணி வாங்கிக் கொடுத்தாரு!

நாக்குல தேன் தடவினாங்க! சொக்கா போட்டாங்க! கொலுசு போட்டாங்க! பள்ளிக் கூடம் அனுப்பி வச்சாங்க! கல்யாணம் பண்ணி வச்சாங்க! (அ) பண்ணி வைக்கச் சொன்னோம்! :)
அப்பறம் எல்லாம் அப்படியே ஒவ்வொன்னா நடந்துச்சி! குழந்தை வந்துச்சி! :)
அப்பாலிக்கா Skoda காரு வந்துச்சி, 3 BHK வீடு வந்துச்சி, நடு வயதில், பாஸ் கிட்ட இருந்து ப்ரமோஷன் வந்துச்சி, கூடவே பெத்த புள்ளை கிட்ட இருந்து ஆப்பு வந்துச்சி! :)

அனுபவிச்சி, அனுபவிச்சி, கடைசீசீசீல.....புதுத் துணி போர்த்தி அனுப்பி வச்சிட்டாங்க! ஆனா அதையும் அங்கே சுடறவன் எடுத்துக்கிட்டான்!

உம்....பொறந்த போது எப்படி வந்தோமோ, அப்படித் தான் பொசுங்கற போதும் போறோம்!
ஆனா நடுவுல மட்டும், இத்தனையும் சேர்ந்துக்கிட்டு, சை-சை-ன்னு ஆடுது!

இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...
அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!

* ஓம் ந"" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது
!


தோடா! இதெல்லாம் பதிவுல பேசத் தான் நல்லா இருக்கும்! உபன்னியாசத்தில் வேணும்-ன்னா கை தட்டுவாய்ங்க! பேசி முடிச்சப்பறம் அவருக்குப் போட்ட பொன்னாடை/சால்வையைத் தூக்கிட்டு ஓடறேன்-ன்னு வையி! "சேச்சே! எனதில்லை! நாராயணனுடையது"-ன்னு சும்மா வுட்டுருவாங்களா? :)))

இம்புட்டு பேசறியே கேஆரெஸ்! இந்த மாதவிப் பந்தல் உனதில்லை-ன்னு சொல்லேன் பார்ப்போம்! விட்டுருவியா?
"நமோ! எனதில்லை மாதவிப் பந்தல்"-ன்னு பந்தலை, மதுரையம்பதி-மெளலி அண்ணா பேருக்கு எழுதி வையேன் பார்ப்போம்? :)

என்னாது? மெளலி அண்ணாவுக்கா? போங்கய்யா! குமரன், ஜீவா, ஜிரா-ன்னு எல்லாம் சொல்லலாம்-ல? கோவி கண்ணனுக்கு எழுதி வச்சாலும் வைப்பேன்! இல்லாங்காட்டி பதிவர் அம்பி-க்கு எழுதி வைச்சாலும் வைப்பேன்!
ஆனா மெளலி அண்ணாவுக்கு மட்டும் எழுதியே வைக்க மாட்டேன்! = ஓம் எனதில்லை மதுரையம்பதியுடையது! :)))

ஹிஹி! அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் எல்லாம், நம, நம-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்லணும்? சும்மா கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்த்தேன்! அட, விமானத்தில் விளக்கு அணைச்சிட்டாங்க! அதான்! :)

பொதுவா, எனக்குப் புரிபடாத எதையுமே பந்தலில் எழுத மாட்டேன்! சும்மா எங்கேயோ படிச்சிட்டு, யாரையோ திருப்திப்படுத்த, "அதை மட்டுமே ஏன் எழுதற, இதையும் தான் எழுதேன்?" - என்பதெல்லாம் நமக்கு ஒத்தே வராது! உணர்ந்து எழுதினா மட்டுமே பிடிக்கும்! அவ்ளோ தான்!

அதுனால, இந்த "ஓம் எனதில்லை"-ன்னு எழுத ரொம்ப சங்கடமா இருந்துச்சி!
பைசா பெறாத பந்தல் பதிவையே எனதில்லை-ன்னு சொல்ல கேஆரெஸ்-க்கு வக்கில்லை! இதுல என்ன பெருசா "ஓம் எனதில்லை"-க்கு நான் வந்து விளக்கம் கொடுக்கறது? :)
அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் நம, நம-ன்னு சொல்லணும்? - கொஞ்சம் போல யோசிக்க ஆரம்பிச்சேன்!



அலுவல் விஷயமா இந்த பிரேசில் பயணத்துக்குப் போனேன்-ல்ல? ரியோ டி ஜெனீரோ - Atlantic Copacabana ஹோட்டல்-ல மூனு நாள் தங்கி இருப்பேனா? ஒத்தை ஆளுக்கு அறையாகக் கொடுக்காமல், பெரிய Suite-ஆக கொடுத்திருந்தாய்ங்க! உம்...ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!

அந்த மூனு நாளும் அந்த மாளிகை என்னுது தான்! அதுல மின்னுற மீன் தொட்டி, அலங்கார விளக்கு, வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர்-ன்னு எல்லாமே என்னுது தான்! வேற எவனும் கை வைக்க முடியாது! ஆனா...?

* அந்த அலங்கார விளக்குக்கு ஏதோ ஒன்னு ஆயிரிச்சி, சரியா எரியாம அரையும் கொறையுமா எரியுது! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா?
* ஹோம் தியேட்டர்-ல கீறல் விழுந்துரிச்சி! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா? இதே நம்ம வீட்டுப் பொட்டிக்கு ஆகியிருந்தா???

வாடகைக்கு கொஞ்ச நாள் இருக்கப் போறோம்-ன்னு நல்லாத் தெரிஞ்சதால, அந்த அறையின் செல்வங்களை அனுபவித்தாலும், அதில் பாசம் பொத்துக்கிட்டு கொட்டலை!
அதுக்காக அறையில் அனுபவிக்காமலும் இருக்க முடியாது! :)
அதே சமயம், அறையில் ஓவர் ஒட்டுதலும் இல்லை!
இதோ இனி அந்த மீன் தொட்டியைக் கொஞ்சப் போவதில்லை! அதே போலத் தான் இந்த நமோ=எனதில்லை! :)

இப்போ சொல்லுங்க! நாம எல்லாருமே இங்கிட்டு வாடகை-க்கு இருக்கும் போது, ஓம்-நமோ-நாராயணாய = ஓம்-எனதில்லை-நாராயணனுடையது என்பது டுபாக்கூரா? :))


* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!

பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல்,
அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...
அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)


* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!
* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!
* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)))

பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு!!
அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!
நான் சேஷன்! எம்பெருமான் சேஷி
!

* "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
* "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
* இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

* நான் = "நானே" இல்லை!
* நான் = "அடியேன்"!


இராமானுசரின் சீடரான முதலியாண்டான் கொஞ்சம் சாதி அபிமானம் மிக்கவராக இருந்தாரு! கர்மப் பிடிப்பும் ஐயாவுக்கு ஜாஸ்தி! அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர், அவருக்குத் தாம் உபதேசிக்காமல், தன் ஸ்டிரிக்ட்டான குரு திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
"*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!

உபதேசம்-ன்னு ஒரு பெரியவர் கிட்ட போனா இப்படியா? அவர் செத்த பிறகு எப்படி அவர் கிட்ட உபதேசம் பண்ணிக்கறது? "*நான்* செத்த பிறகு வாரும்"-ன்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம சொல்றாரே என்று குழம்ப...
"நான்" என்ற சொல் செத்த பிறகு வாரும் - என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது! அடுத்த முறை, "அடியேன்" என்று சொல்ல, கதவு திறந்தது! :)

நான் = "நானே" இல்லை!
நான் = "அடியேன்"!

"இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு...


1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்
அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!

2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!
எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

3. அப்போ, "நாராயணாய" என்றால் என்ன? (தொடரும்...)
Read more »

Friday, June 19, 2009

"ஓம் நமோ" என்றால் என்ன? - Part 4

வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? :)
சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!

நாத விந்து கலாதி நமோ நம!
வேத மந்த்ர சொருபா நமோ நம!
ஞான பண்டித சாமீ நமோ நம!
-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க "நமோ நம" தான்! எதுக்கு இத்தனை "நமோ நம"?

நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! எதுக்கு வரிக்கு வரி வணக்கம்? முருகன் என்ன அரசியல்வாதியா? அத்தனை முறை விழுந்து கும்பிடணுமா என்ன? அப்போ தான் என் பொடிப் பையன் அருள்வானா என்ன? :)



"நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!

ஓம் விநாயகாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் கெளரி புத்ராய நம!
ஓம் ஸ்கந்தா க்ரஜாய நம!
-ன்னு பிள்ளையார் கோயிலில் அர்ச்சனை நடக்கும்! சுண்டல் சாப்பிடும் போதாச்சும் கேட்டு இருப்பீங்க தானே? :)

ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனையைத் தமிழில் செய்து வைக்கிறாள்!

பூபாலக திரிவிக்ரமாய நம = அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நம = சென்றங்கு தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி
என்று தமிழ் அர்ச்சனைக்கு வித்திட்டுச் செல்கிறாள்!

ஆனால் அரும்பெரும் மந்திரங்களை ஓதும் போது சொல்லும் "நம" என்பதற்கு, வெறுமனே "போற்றி" என்று பொருள் அல்ல!
நம = ந + ம = இல்லை + எனது!
* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!
* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!


அட! என்னாங்க இது அநியாயமா இருக்கே? ஓம் நமோ நாராயணாய-ன்னு சொல்லச் சொன்னாய்ங்க! "எனக்கு" நல்லது நடக்கும்-ன்னு தானே அப்படிச் சொல்லச் சொன்னாய்ங்க?
இப்போ திடீர்-ன்னு வந்து, "எனதில்லை! எனதில்லை"-ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டா? இந்த இருவது ரூவா அர்ச்சனைத் தட்டு கூட "எனது" தானே! "என்" காசில் தானே வாங்கினேன்? அப்பறம் "எனதில்லை"-ன்னா எப்படி? போங்கய்யா, நல்ல போங்கா இருக்கே! :))


அதுக்கும் முன்னாடி, இன்னொன்னும் பார்த்திடுவோம்!
சென்ற பதிவில், எல்லா மந்திரத்துக்கும் முன்னாடி, "ஓம் ஓம்"-ன்னு சேர்த்துச் சேர்த்து சொல்றாங்களே? அது ஏன்?-ன்னு கேட்டோம்-ல? எதுக்கு "ஓம்" என்கிற முன்னொட்டு (Prefix)?

பிரணவம் (எ) ஓங்காரம் சேரும் போது தான், மந்திரம் முழுமை அடைகிறது! இல்லீன்னா முழுமை அடையாது!
ஓம் + நம சிவாய! ஓம் + சரவண பவ!
இப்படி எல்லாத்தோடவும் "ஓம்" சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! பூரணத்துவம் பெறும்!

ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!
நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!
ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?

* ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!
* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!

எங்கம்மாவை ஜோதீஸ்வரி-ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! நான் கூட செல்லமா ஜோதீ-ன்னு தான் கூப்பிடுவேன்! :)
ஆனா உறவு? = அம்மா-ன்னு கூப்பிடும் போது தானே?
ஜோதி-ன்னு கூப்பிட்டாலும், "அம்மா"-ன்னு கூப்பிடும் போது எப்படி உறவு குழைந்து கெட்டிப் படுகிறதோ, அதே போல்,
சங்கரா, சிவா, நமசிவாய-ன்னு கூப்பிட்டாலும், "ஓம்" என்று சேர்க்கும் போதே உறவு கெட்டிப் படுகிறது! புரிகிறதா? :)


* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
அப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)

இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!
அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய

(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)
என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?
எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)
அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)

ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!
ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless!

ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!
* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!

ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டி உறவாடுகிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!
அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!

முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!
அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?

ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!
ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!


குறிப்பு:
இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))
அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!
"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

* "ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!
* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?

வாட்? எது உனதா? ஆசை-தோசை! :)
உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!
ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!
உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! அப்போ எனக்கு???

உடம்பும், உயிரும் தவிர்த்து மீதி என்ன இருக்கோ, அதான் உனக்குச் சொந்தம்!

மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!
தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)

எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!
உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! So,"ந + மோ" என்றால் என்ன?.....(தொடரும்)
Read more »

Sunday, June 14, 2009

12-B யா? 32-B யா?

மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சிங்காரச் சென்னையில ஒரு பஸ் ரூட் இருக்கு! 32-ஆம் நம்பர் பஸ்! வள்ளலார் நகர்(Mint) to விவேகானந்தர் இல்லம்! மாநகரப் பேருந்தில் ஏறி உட்கார்ந்தா, ஊரெல்லாம் சுத்தி, ஜிலுஜிலு-ன்னு நம்மள மெரீனா பீச்சுக்கு கொண்டு போய் சேத்துரும்!
அது போல இருக்கு இந்த 32-கேள்வி ஆட்டம்! ஜிலுஜிலு-ன்னு எங்கு கொண்டு போய் சேர்க்கப் போகுதோ? :)

என்னைய பத்தி என்னென்னமோ பொய் சொல்லி, இந்த ஆட்டைக்கு அழைத்த மவராசன் மகரந்தனுக்கு இனிய நன்றி! :)


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நமக்குப் பேர் ராசி கொஞ்சம் ஓவராவே இருக்கு! ஆயிரம் பேருள்ள "அவரைப்" போலவே! :)
* KRS = நண்பர்கள் வட்டம் இதத் தான் ரொம்ப உச்சரிக்கும்!
கல்லூரியில் பேராசிரியர் KR Seshadri! அவருக்குப் போட்டியா பசங்க எனக்கு வச்ச பேரு....அப்படியே இன்னி வரை ஒட்டிக்கிச்சி! :)
* கண்ணபிரான் = தந்தையின் பெயரும், என் கண்ணனின் பெயரும், என்னுடனேயே ஒட்டிக் கொண்டது!
* இரவிசங்கர் = பள்ளிச் சான்றிதழ்-ல இதான் இருக்கு! அப்போ சான்றிதழ்-ல மார்க்கு இல்லையா-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! :)

* இரவி = இது கொஞ்சம் போல நெருங்கியவங்க கூப்டுவாங்க!
* சங்கர் = இது சங்கர் அண்ணா-ன்னு சொந்தக்கார பசங்க வாய் நிறையக் கூப்புடறது!
* கண்ணா = இது பல அக்காக்களும், ஆபிசில் சில பெண்களும் கூப்பிடறது! :)

* சங்கரா = இது மிக மிக நெருங்கியவங்க மட்டுமே, டேய் போட்டுக் கூப்பிடுவது!
இதைக் கொஞ்சமா மாத்தியும் கூப்பிட்டு அப்பப்போ இம்சை பண்ணுவாங்க! ஆனா அதைச் சபையில சொல்ல முடியாது! :)

என்னை யார் யார் எப்படிக் கூப்புடுறாங்களோ, அவிங்களுக்கெல்லாம் அப்படி அப்படித் தெரிவேன்! :))
எல்லாப் பேரும் பிடிக்கும்! ஆனாக் கடைசியா சங்கரா-ன்னு டேய் போட்டுக் கூப்பிடறது ரொம்பவும் பிடிக்கும்! :)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இந்தப் பதிவு போடும் முன்னர் அழுதேன்! ஒரு வாரமா ஒரு நட்புரிமைச் சண்டை! :)

அழுகை என்பது யாருக்குமே கண்களில் இல்லீங்க! எல்லாருக்குமே இதயத்தில் தான்! ஆனால் பாவம்....இதயம் செய்த குற்றத்துக்கு, கண்ணு தண்டனை அனுபவிக்குது! :(
இதய அணைக்கட்டு உடையும் போது,
ரோஜாக் கண்ணில் பனித் துளிகள்!
உம்...
பூவே, நீ பூத்து தான் ஆக வேண்டும்? பூத்து விடு!


என் கண்கள் கொஞ்சம் வீக்! சரியான ஸ்விட்சைத் தட்டினால் குளமாகி விடும்! :)
ஒரு முறை நண்பன்/தம்பி ஏதோ சொல்லிட்டான்! என்னைய கேவலமாச் சொல்லி இருந்தாக் கூட பரவாயில்லை! ஆனால் அந்த அன்பையே அவதூறாச் சொல்ல, சத்தமே இல்லாமல் கண்ணில் கொட்டிக் கொண்டே இருந்த நயகாராவைப் பாத்து அவன் பயந்தே போயிட்டான்!

குழந்தைகள் கதியின்றி வாடுவதைப் பார்த்தாலே கண்கள் தளும்பும்! ஈழத்திலும்!
ஆனால் நான் கதியின்றி வாடிய போது தான், ஒரு தற்கொலை இரவில், தலையணையை அதிகம் நனைத்தேன்! :((((((((


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்தில் வளைவுகள் அதிகம்! Its all about Curves-ன்னு பசங்க ஓட்டுவாங்க!
* என் கையெழுத்து = நோட் புக்கில் பிடிக்கும்!
* உங்க கையெழுத்து = செக் புக்கில் பிடிக்கும்! :))

4. பிடித்த மதிய உணவு என்ன?

* மோர்க்குழம்பு + வெண்டைக்காய்ப் பொரியல்!
* சுண்டைக்காய்க் குழம்பு + அவரைக்காய் பொரிச்ச கூட்டு!
ரெண்டுமே அரைச்சி விட்ட ஐட்டம்! மணக்க மணக்க! :)

ஹிஹி! இதெல்லாம் இங்கிட்டு கெடைச்சா நான் ஏன் பதிவு எழுதிக்கிட்டு இருக்கப் போறேன்?
நம்ம பேரில் இருக்கும் ரவிஒளி (Ravioli) என்னும் இத்தாலிய உணவு ரொம்ப பிடிக்கும்! :)


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இன்முகம் வேறு! நட்பு வேறு! இன்முகம் எப்பவும் கிடைக்கும்! :)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அட, கடலில் குளிக்க முடியாதுங்க! முங்கத் தான் முடியும்!
முங்கறதும், குளிக்கறதும் ஒன்னா? அருவியில் குளிப்பது தான் எத்தனை சுகம்!
கோவைக் குற்றாலம், நெல்லை பாண தீர்த்தம் ரொம்ப பிடிக்கும்! ஆனாச் சட்டைய கழட்ட மாட்டேன்! முருகனே வந்து சொன்னாலும், மேல் துண்டு உண்டு! :)


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்! கண்கள்!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: என்னை எதுக்கு உங்களுக்குப் பிடிச்சிருக்கு-ன்னு, நீங்க சொல்லி, அதை நான் கேக்குறது! :) ஹிஹி! என் மனசுக்குப் பிடிச்சமான சின்ன சின்ன ஆசையை, நண்பர்கள் திடீர்-ன்னு பண்ணும் போது மிகவும் பிடிக்கும்!

ஆனால் என் கிட்ட பிடிச்சமான குணம்: எந்த ஊரில் இருந்தாலும், அதை ரசிப்பது!
பிடிக்காதது: நிறைய, நிறைய, நிறைய!
* இப்போதுன்னா = அண்மைக் காலமாக, சரியாவே சாப்பிடறது இல்ல! ஆனா தொலைபேசும் போது அம்மா கிட்ட பொய் சொல்றேன்!
* அப்போதுன்னா = கல்லூரியில், கருத்து உறுதியில், ஒரு நட்பு தொலைந்தது! Can I go back to 1999 & again say "hi"?


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரி பாதி = நானே! என் கிட்ட எனக்குப் பிடிக்காதது? அட! ஏற்கனவே சொல்லிட்டேனே!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நாம உயிரா நினைக்கறவங்க பக்கத்தில் இருந்தா, நோயில் இருந்தாக் கூட உயிருக்கு ஒரு மிடுக்கு வந்துடும்!
நான் உயிரா நினைக்கறவங்க பக்கத்தில், நான் இல்லாம இருக்கிறேனே-ன்னு அப்பப்போ வருத்தப்படுவேன்! யார் அந்த உயிரா நினைக்கிறவங்க?
1. என் அறுபது வயதுக் குழந்தைகள்! 2. மூன்று நண்பர்கள்!

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இளம் நீல டீ-சட்டை! I drink Heineken Beer-ன்னு வரிகள் உடம்பெங்கும் ஓடும் ஒரு கருப்பு பைஜாமா! (நல்ல வேளை ஞாபகப் படுத்தினீங்க! நாளைக்குத் துணி துவைக்கணும் :)

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்த்து: காபி அண்ணாச்சியின் வீடியோஸ்பதி!

கேட்டு: பாட்டு இல்லாம நான் இல்லை! இந்த வரியைத் தட்டச்சும் போது....
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல் இருக்க
ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே! - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!
நல்ல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சோபிக்காததற்கு காரணம் சோம்பலா? உம்...முயற்சியில் எல்லாரும் ஒரு ரஹ்மான் ஆயிற முடியுமா என்ன?


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருநீலம்! சைடாப் பார்த்தால், வயலெட், கரும் பச்சை-ன்னு பல வண்ணம் காட்டும் இந்தக் கலரு! மயில் தோகையின் உள்ளுக்குள் ஆழமா இருக்கும் கலரு!
இந்தச் சின்ன வயசு சொக்கா என் கிட்ட இன்னமும் இருக்கு! ரொம்ப ஆசையா இருந்தா இப்ப கூட அதைப் போட்டுப்பது போல் போட்டுக்குவேன்....யாரும் இல்லாத போது :)

14. பிடித்த மணம்?

இந்தப் பதிவு தமிழ்"மணத்தில்" வருமா என்ன? :) நோ!
பிடித்த மணம் = தாழம்பூ வாசனை! எங்கூரு புதரில் நெறையப் பூக்கும்! மின்னல் பட்டு தான் தாழம்பூ பூக்கும்-ன்னு கிராமத்தில் கதை விடுவாங்க! :)
குறிப்பு: தாழம்பூ Perfume - தேடியும் எனக்கு இதுவரை கிடைக்கலை!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

V.திவாகர் - திருமலைத் திருடன், வம்சதாரா போன்ற வரலாற்றுப் புதினங்கள் படைத்த, சிறப்பான நாவலாசிரியர்! இவர் அண்மையில் படைத்த "S M S எம்டன் 22-09-1914" என்ற நாவல் சென்னை வரலாற்றைக் கிளறிப் பார்க்கிறது!

கபீரன்பன் - அழகான ஆன்மீகப் பதிவுகளை, அடர்த்தி குறைத்து, இக்காலத்துக்கு ஏற்றாற் போல், மக்கள் சிந்தனைக்கு ஊட்டுபவர்கள் நல்-அடியவர்கள்! எனக்கு மிகவும் பிடித்த பக்த கபீர்தாசரின் வலைப்பூவில்...கபீரன்பன்!

கோவி கண்ணன் - தத்துவப் புரிதலில், இவர் கேள்விகள் எல்லாம், நாத்திகத்தை விட, ஆத்திகம் வளர்க்கவே பெரிதும் உதவுகின்றன! :)
அந்த வகையில் குமரனுக்கு அடுத்து சிறந்த ஆன்மீகப் பதிவர் எங்க ஜிரா கூட இல்லை! ஒன் & ஒன்லி கோவி. கண்ணனே! :)

ஷைலஜா - ஷைலஜாக்கா-வின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்! எழுத்து, குரல், சமையல் என்று பெண்ணின் பல வண்ணங்களிலும் வலம் வருபவர்! சமையல் என்பதைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறேன்! :)

மதுமிதா - மதுமிதா-க்கா பற்றி நான் என்ன சொல்ல! கமலே இவங்க நாவலைத் தான் படிக்கிறார்! நடைபாதையில் நடக்கும் போதே இவிங்க கண்ணு சமூக ஆர்வத்தில் அலை பாயும்! அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும்! திரைப்பட-இலக்கிய வித்தகி!

Srivats - ஆங்கிலக் கவிதைகள் அட்டகாசம்! சமூகப் பணியில் ஆர்வமுள்ள புதிய நண்பர்! பீட்டர் மட்டுமே விடுபவர்! இப்போ தமிழில் எழுதப் போறார்! மாட்டினியா டா? :))

இளா தி ஃபார்மர் a.k.a. விவசாயி a.k.a விவாஜி - இவரு வருசத்துக்கு 32 போகம் விளைச்சல் பாக்குறவரு! அதான் 32-ல டேக் போட்டேன்! மத்தபடி இவரைக் கண்டாலே எனக்குப் பயம்! எந்த பதிவை எப்போ பத்த வைப்பாரு-ன்னே தெரியாது! :)

Last but not the least...இறுதியாக, ஆனால் உறுதியாக.....
நண்பன் ராகவனைப் போலவே ரொம்ப நாள் பதிவே போடாமல் இருக்கும், தொடர்கதை இளவரசி, மலேசிய மோனாலிசா, என் தங்கை துர்கா! :)))


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மஞ்சனத்தி - நான் சோகமாக இருந்தால் அடிக்கடி படிக்கும் கதை!
சூடாத நாடாத தொழாத பாடாத! - "நான் எதுக்கும் லாயக்கில்லை-ன்னு அவனுக்கும் நல்லாவே தெரியும்! இருந்தாலும் என் ஆசையை விரும்புகிறான்" என்று ஜிரா எழுதிய வைணவச் சரணாகதிப் பதிவு! :)


17. பிடித்த விளையாட்டு?

Blogs :) அப்பாலிக்கா Carrom!

18. கண்ணாடி அணிபவரா?

அணிந்தவர்! இப்போ பவர் கொறைஞ்சு கழட்டியாச்சு! ஆனா இரவு நேரத்தில் கார் ஓட்டும் போது, தொலை தூர Sign Board கூசுது! கான்டாக்ட்ஸ் போடலாமா?

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

Angels & Demons - Tom Hanks is the best!
திருவிளையாடல் - இப்போ பார்த்தாலும் லைட் ஆயிறலாம்!
The Piano - இந்தப் பதிவைப் போட்டுட்டு, இன்னிக்கு இரவு மீண்டும் பார்க்கப் போறேன்! :)
அபூர்வ ராகங்கள் - செம கிக்-ஆன படம்! :)
பசங்க - Just love it
Love in the time of Cholera - All time fave
Da Vinci Code - Again, Tom Hanks :)
ஜோதா அக்பர் - இந்தியில், தேவ்தாஸ்-க்கு அப்புறம் ரசிச்சி பாத்த படம்!

20. கடைசியாகப் பார்த்த படம்?

நண்பர்களுடன்: தோஸ்தானா
தனியாக: Drag me to Hell


21. பிடித்த பருவ காலம் எது?

முகத்தில் பரு வரும் பரு-வ காலம்! :)
எத்தனை முறை கண்ணாடித் தனிமையில் முகம் பார்த்து, உலகம் மாறத் தொடங்கிய காலம் அது? :)

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தமிழ்மணத்தின் இரு பரிசுகளுக்கும், ரெண்டு புத்தகம் வாங்கிக்க சீட்டு அனுப்பி வச்சிருந்தாங்க! இன்னும் வாங்கிக்கலை! இப்போது படித்துக் கொண்டிருப்பது:
* காலைப் பேருந்துப் பயணத்தில் = குறையொன்றுமில்லை! - முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்!
* மாலைப் பேருந்துப் பயணத்தில் = Northern Lights, Nora Roberts

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரை மணிக்கு ஒரு முறை தானாச் சுழலும்! Webshots Desktop!
* பெரும்பாலும் = நண்பர்களுடனான புகைப்படங்கள்!
* சிறும்பாலும் = பாவனா/தமன்னா, ஏஞ்சலீனா ஜோலி!
ஜானி டெப், சூர்யா-ஜோ! ஜெஸிகா ஆல்பா மட்டும் பல முறை சுழல்வாங்க! :)

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் = காதலர்கள் "குசுகுசு" வென்று கண்களாலும், கொஞ்சமே உதட்டசைவாலும் பொது இடங்களில் பேசிக் கொள்வது! :)
பிடிக்காதது = வீல் வீல் என்று நிறுத்தாது அழும் குழந்தைகளின் அழுகை! அதுவும் பொது இடங்களில் கேட்கும் போது... :((((


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்போதைக்கு அதிக பட்ச தொலைவே வீடு தான்! :)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனியா இருக்கேன்! திறமை இருக்கா-ன்னு நீங்க தான் சொல்லணும்! தனியாத் திறமையா இருந்தா தனித் திறமையா? :))

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மேலாதிக்க மனப்பான்மை!
எளியவன் தானே-ன்னு வார்த்தையால் வதைப்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்! அலுவலகத்தில் வாய் பேசத் தெரியாமல் இருப்பவர்களிடம் பழியைத் தள்ள நினைக்கும் ஒரு சிலரின் போக்குக்கு நான் தான் முதல் முட்டுக்கட்டை! :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

"நான்" தான்! :)
சிலரின் வீண் கோலாகலங்கள் கண்டால் வெறுப்பு வரும்! சினம் வரும்! ஒதுங்கிப் போயிருவோம்-ன்னும் தோனாது! அதனால் உழப்பிக் கொள்வது தான் மிச்சம்!


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நண்பர்களோடு-ன்னா, நரகத்துக்கு கூட சுற்றுலா போகப் பிடிக்கும்! வரீங்களா? :)

அடிக்கடி போக ஆசைப்படுவது =
1. திருச்செந்தூர் - கோயிலுக்குள் அல்ல! கடலோரப் பயணம் மட்டுமே!
2. Florida Keys - சமையல் அறையே அளவிலான சிறு சிறு தீவு முடிச்சுகள்!
இன்னும் போக கொடுத்து வைக்காதது = இலங்கை மேற்புற யாழ்ப்பாணத் தீவுகள்!

சிற்றுலா, பேருலா, பக்தி உலா-ன்னு Definition எதுவும் வச்சிக்காம,
போகப் பிடிக்கும் ஒரு இடம் = குலசேகரன் படி!
எத்தனை தள்ளு முள்ளுன்னாலும், ஆல்பஸ் அழகு முதற்கொண்டு, காவிரி வாய்க்கால் அமைதி வரை, அந்த "ஒரே" சிரிப்பில் காணலாம்! :)
வாசல் படியாய்க் கிடந்துன் பவள வாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல், ஏதேனும் ஆவேனே!


30. எப்படி இருக்கணும்னு ஆசை?

முகமும் அகமும் சிரிச்சி இருக்கணும்-ன்னு ஆசை!

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நாட் அப்ளிகப்பிள்! :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்!
கொஞ்சம் விரிச்சிச் சொல்லணும்னா: வாழ ஆசைப்பட்டு, வாழ்!
Read more »

Friday, June 12, 2009

ஓம் என்றால் இது தான்! - Part 3!

ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா? அதனால் மொத்த உலகமும் பயன் பெற முடியாதா? சிவபெருமான், உமையன்னை, முருகன் என்ற மூவருக்கு "மட்டுமே" தெரிய, "ஓம்" என்ன குலக் கல்வியா? இல்லை! இல்லை! இல்லை! முந்தைய பதிவு இங்கே!

சில "தீவிர" சைவப் பெருமக்கள் இவ்வாறு சொல்வது முற்றிலும் தவறு! மதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு, தங்களையும் அறியாமல், அந்த முருகனுக்கே களங்கம் சேர்ப்பிக்கிறார்கள்! என் முருகன் ஓம்-ஐ ஒளித்து வைக்கவில்லை! உலகத்துக்கே தந்து விட்டான்!

ஓங்காரம் சொல்லித் தவம் செய்து கொண்டிருந்தார் பிருகு முனிவர்! அவர் தலை மேல் கை வைத்து, தவம் கலைத்தான் ஈசன்! அதனால் ஓங்காரப் பொருள் மறந்து போகுமாறு ஆயிற்று! அதையே முருகன் திருவிளையாட்டு செய்து, அப்பனுக்கு மீள் உபதேசித்த சுப்பன் ஆனான்!

முருகப் பெருமான் சாட்சாத் சிவ சொரூபம்! சிவத்தால் சிவத்துக்கே உபதேசம் ஆயிற்று! சின்ன சிவத்தால் பெரிய சிவத்துக்கு உபதேசம் ஆயிற்று! :)

ஏனிந்த திருவிளையாட்டு? பிரம்மனுக்கே பொருள் அறியாமல் இருந்ததால், அவனை முன்னிட்டு, அவன் படைத்த எல்லா உயிர்களுக்கும் இதைப் பொதுச் சொத்து ஆக்கத் தான் இப்படி ஒரு விளையாடல்!

பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்த போது, சிவபெருமான் இதைப் பிரம்மனுக்குச் சொல்லிக் கொடுத்தே அனுப்புகிறார்! பின்னர் இதை நந்தி தேவருக்கும் உபதேசிக்கிறார்!
நந்தி -> சிவயோக முனிக்கும், சிவயோகர் -> பதஞ்சலிக்கும்...இப்படியே வரிசை திருமூலர், சித்தர்கள் என்று விரிந்து, திருக்கைலாய ஞான பரம்பரை உருவாகிறது! எனவே "ஓம்" என்பது மூவரின் தனிச் சொத்து என்பதை நம்பவே நம்பாதீர்கள்! :)


சென்ற பதிவில், பல சமயங்களிலும், ஓங்காரம் எப்படிப் பயின்று வருகிறது-ன்னு பார்த்தோம்! ஆனால் அவை எல்லாம் ரொம்ப "ஞான பரமாக" இருக்கு! நாதம், விந்து-ன்னு ஒரே காம்ப்ளெக்சா இருக்கு! உலகத் தோற்றவியலா இருக்கு!
அட, உலகத் தோற்றத்தை எல்லாம் விடுங்கப்பா! இன்னிக்கு நமக்குப் பயன்படுறா மாதிரி ஒரு பொருள் இருக்கா? சஸ்பென்ஸ் வைக்காம அது என்னான்னு இன்னிக்கி பாத்துருவோமா? :)

முருகன் சொன்ன பொருள், வைணவம் சொல்லிக் கொடுக்கும் ஓங்காரப் பொருளாகவே இருக்கு! மிகவும் எளிமையா இருக்கு :)
அட, இதை நான் சொல்லலீங்க! ஸ்கந்த புராணம் - பிரபாச காண்டமே சொல்லுது! கந்த புராணத்தில் வைணவமா?-ன்னு வியப்பா இருக்கா? ஹிஹி!
"ஓம்" நமோ விஷ்ணு குப்தாய, விஷ்ணு ரூபாய நமஹ!
சான்னித்யே பவ தேவே! சாகரே லவணாம்பஸி!
- என்பது ஸ்கந்த புராணம் தான்! ஜீவஸ் தது உபகரணம் - வைஷ்ணவ விதம்!

அப்படி எளிமையா, அனைவருக்கும் பயன்படும் படி உள்ள ஓங்காரப் பொருள் என்ன?
ஓம் = அ + உ + ம்
* அ = "அ"-வன்! அகர முதல இறைவன்!
* ம் = நா-"ம்"

இந்த ரெண்டு பேருக்கும் என்ன கனெக்ஷன்? "அ"-வை, "ம்" அடைவது எப்படி?
* உ = உறவால் அடைய முடியும்!

என்ன உறவு? எப்படிப்பட்ட உறவு? அதைப் பிரணவம் என்னும் DNA-ல கண்டுபுடிச்சிறலாமா?
புடிச்சிறலாம்! அதுக்கு "உ"-ன்னா என்ன-ன்னு தெரிஞ்சிக்கிட்டா போதும்! "உ"-ன்னா என்ன?

உ-காரோ = அனன்யார்க நியம இதி சம்பந்த மனயோஹோ என்று இதை விளக்கும் ஸ்காந்த சுலோகம்! அனன்யார்க சம்பந்தம்-ன்னா என்ன? அழகு தமிழில் சொல்லணும்னா = "உறவேல்"!
இந்த ஜீவன் இன்னொருத்தருக்கு சம்பந்தப் பட்டவன் அல்ல! பரமாத்மாவுக்கு மட்டுமே சம்பந்தப் பட்டவன்! அது தான் உ-காரம்! அதுவே உற"வே"ல்! இங்கிட்டு "ஏ"-காரம் மிகவும் முக்கியம்!

* பரமாத்மாவுக்"கே" உரியவன் ஜீவன்!
* ஜீவனுக்"கே" சரண்யன் பரமாத்மா!
* இப்படிச் சரண்யனாய் இருக்கக் கூடிய அவனை, இவன், சரணம் அடையற"தே" சம்பந்தம்! = பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை பற்றுக பற்று விடற்கு!

இவன் இன்னொருத்தரைப் பற்ற வேண்டியவன் அல்ல!
இவன் இன்னொருத்தருக்குச் சொந்தமானவன் அல்ல!
அவன் ஒருவனுக்கே சொந்தமானவன்! - அப்படின்னு நிரூபிக்கக் கூடியதான உ-காரத்தை நடுவில் சேர்த்து விட்டால், ஓம் வந்து விடும்!

* உந்தன்னோடு = "அ"வனோடு = "அ"
* "உ"றவேல் = "உ"
* நமக்கு = ந"ம்" = ம்
=> அ + உ + ம் = ஓம்!

உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது! இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்! - என்று ஓங்காரப் பொருளை, அத்தனை பேருக்கும் வெட்ட வெளிச்சம் ஆக்குகிறாள் கோதை!
DNA-வை யாராச்சும் ஒழிக்கத் தான் முடியுமா? பெத்த தாயே நினைச்சாலும் முடியுமா? பிள்ளை கோவிச்சிக்கிட்டு, தனக்கு DNA மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கத் தான் முடியுமா? ஹிஹி! அதான் "இங்கு ஒழிக்க ஒழியாது" என்று ஆண்டாள் வாக்கு!

* அ+உ+ம-வை ஒழிக்க ஒழியாது! அவனாலும் ஒழிக்க முடியாது! நம்மாலும் ஒழிக்க முடியாது!
* "அ"-வுக்கு ம! "ம"-வுக்கு அ! இரண்டுக்கும் "உ" = உறவு!
* அவனுக்கு நாம்! நமக்கு அவன்! = இதுவே நம் DNA! இதுவே நம் ஓங்காரம்! இதுவே நம் பிரணவப் பொருள்!

அறி-வோம்! அரி ஓம்! ஓம்!


மக்களே!
இதுவே ஓங்காரம் (எ) பிரணவத்தின் எளிமையான பொருள்!

நம்மில் பல பேர் அன்றாட வாழ்வில் "ஓம்"-ன்னு சொல்லுறோம்! தியானம், யோகா, பாட்டு, நடனம், உரக்கக் கத்தல், மெல்லிய முணுமுணுத்தல்-ன்னு பல வகையாக "ஓம்" என்பதைக் கையாள்கிறோம்! இனி "ஓம்"-ன்னு சொல்லும் போதெல்லாம் வெறுமனே உச்சரிக்காது, பொருளோடு உச்சரிக்கப் பழகுவோம்!

"ஜீவாத்மா ஆகிய நான், பரமாத்மாவுக்கு மட்டுமே உரியவன்" - அப்படிங்கற ஞானத்தோடே பிரணவத்தை ஜபிக்கணும்! அனுசந்தானம் பண்ணனும்!

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இனி மெல்லிதாக ஜபிக்கும் போதோ, உச்சரிக்கும் போதோ... மனசுக்குள்ளே இனி மேல் இதையும் மெல்லிதாக ஓட்டிக் கொள்ளுங்கள்! கீழே சொன்னவாறே இனி ஓம்-ன்னு சொல்லுங்க!

* உனக்கு நான் - ஓம்..........................
* எனக்கு நீ - ஓம்.................................
* ஓம்! ஓம்! ஓம்!



1. ஏன் எல்லா மந்திரத்தோடும் ஓம் ஓம்-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்றாய்ங்க? மந்திரம், தந்திரம், தியானம், யோகா - ஏன் எல்லாத்திலும் ஓம் சேர்க்கணும்?

2. எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் = பந்தத்தில் மாட்டிக் கொள்வது!
அனாதி காலமா நீ பந்தத்தில் மாட்டிக்கறே இல்லையா? இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறே! ஏன் மாட்டிக்கறே?-ன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கலாமா? "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்! "நமோ" என்றால் என்ன? (....தொடரும்)
Read more »

Tuesday, June 09, 2009

சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி!

மக்கா, என்னடா இது, பதிவு ஒன்னு பின்னால ஒன்னு, தினமும் வந்துக்கிட்டே இருக்கே-ன்னு யாரும் சந்தேகப் படக் கூடாது! சொல்லிட்டேன்! ஆமா! :)
இன்னிக்கு ஞான சம்பந்தர் குரு பூஜை (Jun-09, 2009)!

ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்றெல்லாம் அவருக்கு ஏற்றம்! இன்று தமிழ்ச் சைவ சமயம் இந்த நிலையில் இருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட வெற்றிப் பிள்ளை, சம்பந்தரே ஆவார்!

உமையன்னையின் முலைப்பால் உண்டு மலைப்பால் பாடிய பாடல் = தோடுடைய செவியன்! இங்கிட்டு போய் அதன் பாடலழகைப் பார்க்கலாம்!
சம்பந்தரைப் பற்றித் தான் நமக்கு நல்லாத் தெரியுமே! அதுனால நாம இன்னிக்கி பார்க்கப் போறது அதிகம் அறிமுகம் இல்லாத ஒரு நாயன்மாரைப் பற்றி! அவருக்கும் இன்று தான் குரு பூஜை!
அவர் பெயர் திருநீல நக்க நாயனார்! கேள்விப்பட்டு இருக்கீயளா?

சொல்லப் போனா அவர் மனைவிக்குத் தான் இன்னும் ஏற்றம்!
ஆனால் ஏனோ தெரியவில்லை, நாயனார் பேரைச் சொன்னவர்கள், அவர் மனைவி பற்றி வரும் போது, பேரைக் கூடச் சொல்லாமல் விட்டு விட்டார்கள்! ஏன்?

அந்தப் பெண் தான் சிவலிங்கம் மீது எச்சில் துப்பியவள்! அதுவும் கருவறைச் சிவலிங்கத்தின் மீது! - ஆகா! என்ன திமிரு? என்ன ஆணவம்? என்ன அபசாரம்?
கருவறைக்குள் பெண்கள் நுழையலாமா? நுழையத் தான் விடுவார்களா? முதற்கண் இந்தப் பெண் கருவறைக்குள் எப்படிப் போனார்? போய் எச்சிலும் துப்பினார்?

அட எப்படியோ போனார்! விடுவீங்களா! அவர் கணவர் நீலநக்கர் கோயில் வேலையில் உள்ள அந்தணர்! அவர் பணி புரிவதால் இவரும் உள்ளே போக முடிந்ததோ என்னமோ? நாம கதைக்கு வருவோம்!


சாத்தமங்கை ஆலயம் (நன்றி: templepages.com)

காவிரி பாயும் பூவிரி சோலையான சோழநாடு! அங்கே சாத்தமங்கை (சீயாத்தமங்கை) என்னும் ஊர்! நாகை-நன்னிலம் ஏரியா! திருநள்ளாற்றுக்கு அருகில்-ன்னு வச்சிக்குங்களேன்!

அங்கே அந்தணர் குலத்திலே பிறந்தவர் தான் இந்த நீலநக்கர்! வேதம் எல்லாம் கரைச்சிக் குடிச்சவர்! ஆகம விற்பன்னர்! சிவாகம விதிப்படி ஊர்க் கோயிலில் தினமும் பூசை செய்வார்! நியம நிஷ்டைகளில் இருந்து இம்மி கூட பிசக மாட்டார்! மற்ற அர்ச்சகர்களையும் பிசக விட மாட்டார்! அம்புட்டு சிம்ம சொப்பனம்! :)

ஆனால் மனத்தால் சிவபெருமான் மேல் மாளாத காதல் கொண்டவர்! ஈசனை ரொம்பவும் பிடிக்கும் அவருக்கு! ஆனால் ஆச்சாரமா? காதலா??-ன்னு வரும் போது......ஆச்சாரமே! நியமமே! என்ற கொள்கை உடையவர்! தங்களுக்கு-ன்னு "விதிக்கப்பட்டதை" தவறாம செய்யணும்-ன்னு, மாங்கு மாங்கு-ன்னு "செய்து" கொண்டே இருப்பவர்!

அன்னிக்கு சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்! சாத்தமங்கை கோயிலுக்கு அயவந்தி என்ற பெயரும் உண்டு!
இறைவன் = அய வந்தீஸ்வரர்; இறைவி = உபய புஷ்ப லோசனி
அழகு தமிழில், நான்முக நாதர் - இருமலர்க் கண்ணி


அன்றைய ஆருத்ரா பூஜை செய்ய நீலநக்கர் கருவறைக்குள் நுழைந்தார்.
குளித்து முடித்து, குடுமியை அவிழ்த்து விட்டு, மேனியெங்கும் விபூதி மணக்க, யாரிடமும் எதுவும் பேசாமல், நமோ பவாயச, ருத்ராயச, நம சர்வாய...ன்னு முணுமுணுத்தபடி உள்ளே வருகிறார். சிற்றஞ் சிறு காலை. மெல்லிய குளிர். அபிஷேகத்தைத் துவக்குகிறார்!
பூசைப் பொருட்களும் மாலைகளும் நிறைய இருக்கு. பாரம் அத்தனையும் அவர் ஒருவராலேயே சுமக்க முடியவில்லை போலும். அவர் மனைவியும் கூடவே கூடையில் சுமந்து வருகிறார்.

மனைவிக்கு கருவறை நுழைவு புது அனுபவமோ என்னமோ, உடம்பெல்லாம் புல்லரிக்கிறது! ஆனானப்பட்ட திருமாலும் காணாத ஈசனை..........................
இவ்வளவு அருகில் இருந்து காண்கிறோமே என்ற பதைபதைப்பு போலும்! சிவ சிவ என்று அவளுக்குத் தெரிந்ததை முணுமுணுக்கிறாள்! கூடையைக் கீழே இறக்கியது தான் தாமதம்! ஐயோ....

சிவலிங்கத்தின் மேல் பெரிய விஷச் சிலந்தி!
சுதைச் சிலம்பி என்னும் கொடிய வகை! மேலே விழுந்தாலே போதும்! படபட-ன்னு கொப்புளங்கள் எழும்பி விடும்! எரிச்சல் எடுக்கும்! குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்டே இருந்தாலும் அம்புட்டு சீக்கிரம் அடங்காது!

அந்தச் சிலந்தி ஈசனின் திருமேனி மீது விழுந்து கிடக்கிறது!
கருவறை உத்தரத்தில் இருந்து விழுந்ததோ இல்லை பூமாலையில் எங்காச்சும் ஒட்டிக் கொண்டு இருந்ததோ? பொதுவா ரோஜாச் செடியில் சிலந்தி வலையும் பெரும்பாலும் இருக்கும்! பார்த்து பார்த்து தான் ரோஜாவைப் பறிக்கணும்! எப்படிப் பறித்தார்களோ தெரியலையே!

தாயுள்ளம் பதறுகிறது! விடம் உண்ட கண்டனுக்கு விஷச் சிலந்தி ஆபத்தா-ன்னு எல்லாம் நினைக்கத் தோணலை அவளுக்கு!
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ


ஊதி எடுப்பது போல் ஊதுகிறாள்!
அவள் ஊத ஊத, எச்சில் பட்டுத் தெறிக்கிறது சிவலிங்கத் திருமேனியில்!
ஆருத்ரா அதுவுமாய் எச்சிலாபிஷேகம்! உமையொரு பாகனுக்கு உமிழ் நீர் அபிஷேகம்! :)

ரெளத்திரம் ஆகி விட்டார் நீலநக்கர்! கோபம் குபுகுபு என்று பொங்குகிறது!
அவருக்குச் சிலந்தி விழுந்தது கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை!
கண்ணை மூடிக்கிட்டு, அவருண்டு, அவர் மந்திரம் உண்டு-ன்னு இருப்பவருக்கு கண்ணில் படவில்லை போலும்!
மனைவியின் ஊனக் கண்ணுக்குத் தெரிந்தது கூட அவர் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லையோ! இது தான் அனுஷ்டான ஆழமோ?

நாயனார்: "அறிவில்லாதவளே! என்ன காரியம் செய்தாய்? புத்தி இல்லை? ஆருத்ரா அதுவுமாய் குளிரக் குளிர அபிஷேகம் செய்துண்டு இருக்கேன்! அதைக் கெடுப்பது போல் வந்து வாயால் ஊதுகிறாயே? பால் சூடாக இருக்கும்-ன்னு ஊதினாயோ? பெண் புத்தி பின் புத்தி! எத்தனை காலமாய் நம்ம வீட்டில் இருக்கிறாய்? பாலாபிஷேகப் பாலைச் சுட வைப்பதில்லை-ன்னு கூடவா தெரியாது?"

மனைவி: "ஐயோ! அப்படியில்லீங்க"

நாயனார்: "என்ன அப்படியில்லை? உன் எச்சில் பூரா, பகவான் மேல் பட்டிருக்கு! அனாச்சாரம்! துராச்சாரம்! அபசாரம்! இப்போ நான் இன்னொரு முறை முதலில் இருந்து அபிஷேகம் செய்யணும்! ச்சே!"

மனைவி: "என்னங்க! அதோ பாருங்கள்! அங்கே...அங்கே...சிலந்தி ஓடுகிறது! அதோ...அதோ...
எவ்ளோ பெரிசு பாருங்க! விஷச் சிலந்தி! ஈசன் திருமேனியில் கிடந்தது! அதான் ஊதினேன்!"

நாயனார்: "எதுக்கெடுத்தாலும் ஒரு பதிலை வச்சிருப்பியே! சிலந்தி இருந்தா அதை அப்புறப்படுத்த ஆயிரம் வழி இருக்கே! எந்த மடையனாச்சும் இப்படி ஊதித் தள்ளுவானா?"

மனைவி: "மன்னித்துக் கொள்ளுங்கள்!"


நாயனார்: "இந்தச் சிவலிங்கம் ஆகமப் பூர்வமாக ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டது-ன்னு உனக்குத் தெரியாதா? எத்தனை எத்தனை சங்காபிஷேகம் பார்த்திருக்கும் இந்தச் சிவலிங்கம்?
பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஈசனுடைய ஜீவனே இதிலே இருக்கு-ன்னு, மற்றவாளுக்கு வேணும்னா தெரியாம போகலாம்! நம்ம வீட்டுப் பொண்ணு உனக்கே தெரியலீன்னா எப்படி?"

மனைவி: "ஜீவனுள்ள பகவானாச்சே-ன்னு தான் நானும் அப்படிச் செய்தேங்க! சிலந்தி விஷம் ஏறிடுமோ-ன்னு பயம்! வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மேல் பூச்சி விழுந்தா ஊதுறாப் போல ஊதிட்டேன்!
ஏதோ சட்டு-ன்னு அப்போ அதான் தோனித்து! தர்ப்பைக் குச்சியால் அகற்றி இருக்கலாமோ-ன்னு இப்போ தான் தோனுது! செஞ்சது தவறு-ன்னா மன்னித்து விடுங்கள் சுவாமி!"

நாயனார்: "ஓ...ஆக......இப்போ கூட நீ செஞ்சது தவறு-ன்னு உனக்குத் தோனலை! தவறா "இருந்தா" பொறுத்துக்கோங்க-ன்னு தான் இப்பவும் பேசுற! இல்லை இல்லை! இது சரி வராது!"

மனைவி: "என்னாங்க..."

நாயனார்: "உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பாமரத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லிச் சரி கட்டிக்கலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை!
அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு! அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்!"

மனைவி: "ஐயோ! என்னங்க இப்படியெல்லாம் பேசறீங்க? வேணாங்க! மன்னிச்சிருங்க! இல்லை வேறு ஏதாச்சும் தண்டனை கொடுங்க! ஆனா இப்படியெல்லாம் பேசாதீங்க!"

நாயனார்: "இல்லை! இனி நாம் பேருக்குத் தான் கணவன்-மனைவி! நமக்குள் எல்லாம் முறிந்தது!"

வார்த்தைகள் இடி போல் இறங்கின! மனைவி அழுதபடி கோயிலின் வாசலில் ஒதுங்குகிறாள்!
எச்சில் பட்ட தோஷத்துக்கு மீண்டும் இன்னொரு முறை பிராயச்சித்த அபிஷேகம் ஆரம்பிக்கிறார் நீலநக்கர்! தீப ஆராதனைகள் தொடர்கின்றன! சிவோஹம்! சிவோஹம்!


சாத்தமங்கை ஆலயம் (நன்றி: templepages.com)

"நீலநக்கா!"

நாயனார்: "யாரது?"

ஈசன்: "கனவில் வந்த ஈசனைக் கூட அடையாளம் காண முடியவில்லையா நீலநக்கரே? ஆகமப் பிரகாரம் வராமல் சும்மா கனவில் வந்ததால் உமக்கு அடையாளம் தெரியவில்லையோ?"

நாயனார்: "சுவாமி...தாங்களா? வர வேணும்! வர வேணும்! என் பாக்கியம்! என் குலம் செய்த பாக்கியம்! என் முன்னோர் செய்த பாக்கியம்! என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை! ஆகா என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை!"

ஈசன்: "ஒரு வரியில் இத்தனை "என்"-ன்னா? ஹா ஹா ஹா! பூஜை புனஸ்காரம் பொய்யாகிவிடுமோ-ன்னு சந்தேகம் வேற இருந்ததா உமக்கு? ஏன் இப்படி "பொய்யாகவில்லை, பொய்யாகவில்லை" என்று இத்தனை முறை குதூகலிக்கிறீர்?"

நாயனார்: "அப்படியில்லை சுவாமி! உங்களைப் பார்த்த சந்தோஷம்! எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை!"

ஈசன்: "பேசுவது எல்லாம் இருக்கட்டும்! இதோ...நீ பூஜை புனஸ்காரம் செய்த அழகைப் பார்! என் தோளைப் பார்! என் ஒரு பக்கத்துக் கன்னத்தைப் பார்!"

நாயனார்: "ஐயோ! இது என்ன இப்படிக் கெண்டு கெண்டாக கொப்பளம்! வீங்கி இருக்கே! நீலம் பாய்ந்து இருக்கே! இது என்ன விபரீதம்?..."

ஈசன்: "விபரீதம் விபரீதம்-ன்னு இப்பவும் பேசிக்கிட்டு தானே இருக்கே? பட்ட இடத்தில் திருநீறு பூசுவோம்...துளசியும் நெல்லி இலையும் அரைத்துப் பூசுவோம்-ன்னு தோனுதா உனக்கு? சரி, இப்போ என் இடப்புறம் தோளைப் பார்! கன்னத்தைப் பார்! தலையைப் பார்"

நாயனார்: "ஆகா! ஒரு பக்கம் மட்டும் தான் கொப்பளம் பூத்துக் கிடக்கு! இன்னொரு பக்கம் இல்லையே! இது எப்படிச் சாத்தியம்?"

ஈசன்: "உன் மனைவி ஊதியதால் சாத்தியம்! அவள் எச்சில் பட்டதால், சிலந்தி பட்ட இடம் ஈரமானது! குளிர்ந்ததால் கொப்பளம் எழவில்லை!
நீ பிராயச்சித்த அபிஷேகம் செய்கிறேன் பேர்வழி-ன்னு தேனை ஊற்றத் தொடங்கினாய்! தேன் சூடு-ன்னு தெரியாதா? இந்தப் பக்கமெல்லாம் கொப்பளம்! திருப்தி தானே?"

நாயனார்: "சுவாமீமீமீ...."



ஈசன்: "யார், யாரைத் தள்ளி வைப்பது? என்ன கேட்டாய் அவளை? ஜீவனுள்ள பகவானை எச்சிற்படுத்தலாமா-ன்னு தானே கேட்டாய்? இப்போ நான் உன்னைக் கேட்கிறேன்.......ஜீவனுள்ள பகவானை விஷத்தால் இம்சைப்படுத்தலாமா?
எனக்கு ஜீவன் இருக்கு-ன்னு உனக்கும் தோனலையே?
எச்சிற்படுத்தக் கூடாது...ஆனால் இம்சைப்படுத்தலாம்! அப்படித் தானே?"

நாயனார்: "ஐய்யய்யோ! அறிவீனனாய் போனேனே! சுவாமி என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

ஈசன்: "மன்னிப்பா? எல்லாம் முறிந்தது-ன்னு சொல்ல எனக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் பண்டிதத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லி சுலோகம்/பாட்டு எழுதி விடலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை! அதுக்குன்னு ஒரு அன்பு இருக்கு!
அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்"

நாயனார்: "ஐயோ! என் வார்த்தைகளை எனக்கே சொல்றீங்களே பெருமானே! உத்தமியை நோகடித்தேனே! உத்தம அன்பை நோகடித்தேனே!
"என்னை" மன்னித்து விடுங்கள்! இல்லையில்லை! "அடியேனை" மன்னித்து விடுங்கள்!

ஆயிரம் கர்மா செய்து என்ன பயன்? பகவானை, "என் பகவான்" என்று பாவிக்கத் தெரியாமப் போச்சே! ஞானம், கர்மம், பக்தி எல்லாம் அந்தப் பாவனைக்குத் தானே!
எரியும் விறகுக் கட்டையானது குளிரைப் போக்க மட்டுமே-ன்னு தெரியாமல், விறகுக் கட்டையைப் போய் கெட்டியாக, சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு அணைத்துக் கொண்டேனே! சிவா சிவா!
இதோ ஓடுகிறேன் கோயிலுக்கு! அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் என் தாபம் அடங்கும்!" ......................

கனவு கலைந்தது! குடும்பம் சேர்ந்தது!



பின்னாளில் மனம் திருந்தி், மனையாளோடு, சிவத் தொண்டு புரிந்து வந்தார் திருநீலநக்கர்! சாத்திர அபிமானத்தை விட்டொழித்து, சாத்திரத்தின் உள்ளத்தையே பார்த்து வாழ்ந்து வந்தார்!
அதற்காக நியம நிஷ்டைகளை எல்லாம் விட்டு விடவில்லை! ஆனால் அவற்றில் அபிமானம் கலக்கவில்லை! மாறாக அன்பு கலந்தது!

ஞானசம்பந்தர் பின்னாளில் சாத்தமங்கையில் இவர் வீட்டுக்கு எழுந்தருளினார்!
அப்போது கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் அவர் மனைவியும் சம்பந்தருடன் வந்தார்கள்! அவர்கள் சாதியால் பாணர்கள்! அந்தணர் வீட்டில் பாண சாதிக்கெல்லாம் இடம் உண்டோ? பாணன் கருவறைக்குள் தான் வருவானோ?....ஆனால் முன்பு போல் நீலநக்கரிடம் பழைய அபிமானங்கள் எல்லாம் இப்போது இல்லை!

வந்தவர்களை எங்கே தங்க வைப்பது? வீடோ சிறிசு! இடமோ சம்பந்தருக்கு மட்டும் தான் ஏற்பாடு செய்து இருக்கு! மனைவியின் ஆலோசனையைக் கேட்க....

அன்றாடம் தான் வேள்வி செய்யும் வேதிகை! அந்த இடத்திலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார் நீலநக்கர்! வேள்வித் தீ முன்னை விட வலம் சுழித்துப் பிரகாசமாக எரிந்தது! பெரும் இசைவாணரும் அடியாருமான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மனங் குளிர்ந்தார்! சம்பந்தப் பெருமானும் பதிகம் பாடி அருளினார்!

வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம் நிலைதான் சொலல் ஆவதொன்றே
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழுஞ் "சாத்தமங்கை"
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே!
- (தேவாரம், மூன்றாம் திருமுறை)

பின்னாளில், சம்பந்தரின் நல்லூர் திருமண விழாவில், மாப்பிள்ளையான சம்பந்தருக்கே புரோகிதம் பார்த்தார் நீலநக்கர்! சம்பந்தர் சோதியுள் கலந்த போது, நீலநக்கரும் அவர் மனைவியாரும் அதே சோதியுள் கலந்தனர்!
அவர்களோடு திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், முருக நாயனாரும், அதே சோதியுள் கலந்தனர்!

ஆக இன்று தான் (Jun-09-2009) அனைவருக்குமே குருபூஜை!
* திரு ஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!
* திரு நீலநக்கர் - அவர் மனைவியார் (பெயர் குறிப்பிடப் படவில்லை) திருவடிகளே சரணம்!
* முருக நாயனார் திருவடிகளே சரணம்!
* திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, June 07, 2009

ஓம் என்றால் என்ன? - Part 2!

வாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்! முந்தைய பதிவு இங்கே!

ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!
சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க! கேள்விப்பட்டு இருக்கீங்களா? அட, நெசம் தானுங்க! :)


சமணத்தில் "ஓம்":
"ஓம் நமஹ"-ன்னு சமணர்கள் நவ்கார் மந்திரத்தை இன்னிக்கும் சொல்றாங்க! "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" என்பது சமண மந்திரம்!

ஓம் = அ-அ-அ-உ-ம்
என்று பிரித்துப் பொருள் சொல்லுவாய்ங்க சமணர்கள்! பஞ்ச பரமேஷ்டித் தத்துவம்-ன்னு இதுக்குப் பேரு!
அதாச்சும்...
அ = அரிஹந்த (மகாவீரர் ஈறான 24 தீர்த்தங்கரர்கள்)
அ = அசீரி (சித்தர்கள்)
அ = ஆச்சார்யர்
உ = உபாத்தியாயர்
ம் = முனி
என்று "குரு வணக்கமாக மட்டும்" சமணர்கள் ஓங்காரத்தைக் கருதுவார்கள்!


பெளத்தத்தில் "ஓம்":
வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ஓம்-ஐ உடன் சேர்ப்பார்கள் பெளத்தர்கள்! கிட்டத்தட்ட நம்ம சைவத்தின் பஞ்சாட்சரம் போலத் தான் இதுவும்!

* நம சிவாய என்னும் திரு-ஐந்து-எழுத்தோடு, தனியாக "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்ப்பதைப் போலே...
* மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் என்னும் ஐந்து எழுத்தோடு, "ஓம்" என்பதைச் சேர்ப்பது பெளத்த வழக்கம்!

போதிசத்வரை குறிப்பது தான் இந்த மணிபத்மேஹூம் = தாமரைத் திரு!
இவரைச் சிந்திக்க "ஓம் மணிபத்மேஹூம்" என்னும் மந்திரம் உதவுகிறது! இப்படி "ஞான சொரூபமாக" தியானித்தால், களங்க உரு/மனம் நீங்கி, பரிசுத்தமான புத்த உரு/மனம் கிடைக்கும்! அதுக்குத் தான் இந்த "ஓம்"!

* இப்படி ஓங்காரத்தை "ஞான சொரூபமாக மட்டும்" காண்கிறார்கள் பெளத்தர்கள்!
* சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! அதன் எழுத்துரு "唵"!


சீக்கியத்தில் "ஓம்":

இது, இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்! ஆனால் சமுதாயத்துக்காக அதைக் கொஞ்சம் மேம்படுத்தித் தருகிறது சீக்கியம்!
"ஏக் ஓம்கார்" = "ஓம் என்பது ஒன்றே பொருள்!" - இது குரு நானக் அவர்களின் வாக்கு! இங்கு "ஏக்(ஒன்றே)" என்பது முக்கியமான சொல்!

"ஒன்றேயான ஓம்-இல் இருந்து தான் பிரம்மா தோன்றினார்! ஓம்-ஐ தன் ஞானத்தில் நிறுத்தினார்! பின்பு அந்த ஓம்-ஐக் கொண்டே, உலகம்/உயிர்கள் எல்லாம் படைத்தார்! அதனால் எல்லாப் படைப்புக்கு மூலம் ஓம்!" - இவ்வாறு சீக்கிய நூல்கள் சொல்லும்!

ஆனால் அதோடு நின்று விடாமல், எல்லா உயிர்களும் "ஒரே" மூலமான ஓம்-இல் தோன்றியதால், வேற்றுமை பாராட்டக் கூடாது! "ஒன்றே"-ன்னு இதைச் சீக்கியம் குறிக்கும்!

வேற்றுமை பாராட்டக் கூடாது-ங்கிற பகுதியை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட மாண்டூக்ய உபநிடதம், கடோபநிடதம் சொல்வது போலவே தான் இதுவும் இருக்கும்!
இன்னிக்கும் குருத்வாராக்கள் முகப்பில், சீக்கிய "ஓம்" எழுத்துருவை ("") காணலாம்!


கிறித்துவத்தில் "ஓம்"???:
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! = இது வேதாகமத்தின் (பைபிள்) வரிகள்!
"ஓம்" என்ற வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் குறிப்பிடவில்லை! ஆனால் "வார்த்தையாய் இருத்தல்" என்பது கிட்டத்தட்ட ஓங்காரத் தத்துவம் தான்!

ஆதியிலே வார்த்தையாய் இருத்தல் = ஆதியிலே ஒலியாய் இருத்தல் = ஆதியிலே நாதமாய் இருத்தல் = நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடும் அதே பிரணவப் பொருளே!


இந்து மதத்தில் "ஓம்":

ஓம் என்பதே வேதம் தான்! ஓம் = வேதத்தின் ஆணி வேர்!

ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே!

* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்!
* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!
அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்!

அடிப்படை அ+உ+ம என்று இருந்தாலும், விளக்கம் மட்டும் பல! :)
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் (புராணம்)
என்றெல்லாம் பல மேல் விளக்கங்கள் மாண்டூக்ய, கடோ உபநிடதங்களில் உண்டு! ஆனால் அடிப்படை ஒன்று தான்! ஓம் = ஆதி மூலம்! Very Beginning!

எழுத்துக்களில் அ-கரமாய் இருக்கிறேன்! சேனாதிபதிகளில் முருகனாய் இருக்கிறேன்!
மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன்! வேதங்களில் சாமமாய் இருக்கிறேன்!
என்றெல்லாம் கீதையில் சொல்லிக் கொண்டே வருபவன்...
அனைத்திலும் "ஓம்" என்னும் ஜீவப் பொருளாய் இருக்கிறேன் என்று உரைக்கின்றான்!

சிலர் "ஓம்" என்ற சொல்லைக் கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்களாம்! அது மந்திர ரகசியமாம்! அதனால் அதன் வேறு பெயர்களான பிரணவம், தாரக மந்திரம், உத்கீதா என்று தான் அதைக் குறிப்பார்கள்!
ஆனால் கீதையிலும், கீதைக்குப் பிந்தைய காலத்திலும் இதெல்லாம் சற்று தளர்ந்து போயின! இஸ்லாமியரான கபீர் முதற்கொண்டு பலரும் "ஓம்" பற்றி அழகான விளக்கங்கள் எழுதி உள்ளனர்!


சரி, மற்ற இடங்களில் எல்லாம் "ஓம்"-ன்னா என்னா-ன்னு பாத்துட்டோம்! வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலைவாங்களா? இல்லை...கையில் பெப்சியை வச்சிக்கிட்டு யாராச்சும் ஏப்பத்துக்கு அலைவாங்களா? :))
வாங்க, நம்ம திருமந்திரத்தில், தமிழில், திருமூலர் என்ன சொல்றாரு-ன்னும் ஒருகா பாத்துருவோம்!

சைவ சித்தாந்தத்தில் ஓங்காரம்:
ஓம் = அ + உ + ம + நாதம் + விந்து

விந்து-ன்ன உடனே, கன்னா பின்னா-ன்னு எல்லாம் அர்த்தம் எடுத்துக்கக் கூடாது! பொறுமை! பொறுமை! :)
அது என்னமோ பாவம், விரிசடைக் கடவுளான நம்ம சிவபெருமான் ராசி போலும்! லிங்கம், நாத விந்து-ன்னு பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு விவகாரமாவே அமையுது! :)

* = சிவம்! சலனமற்று இருப்பது! சிவனே-ன்னு கிடக்கிறேன்-ன்னு சொல்றோம்-ல?
* = சக்தி! சக்தியின் உந்துதலால் சலனம் பெறுவது!
* = மாயை! அதாச்சும் சலனமற்று இருந்த பொருள் இப்போ சலனம் பெறுவது!
* நாதம் = இந்தச் சலனத்தால் ஒலி உண்டாக,
* விந்து = அதனால் தோற்றம் ஆரம்பிக்கிறது!

இதுவே நாத-விந்து-கலாதீ! ஆதியிலே தேவன் "ஓம்" எனும் நாதமாய் நின்று உலகைத் துவக்கினான்!

ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே - (திருமந்திரம் 9ஆம் தந்திரம்)


ஓம் என்னும் ஓங்காரம் ஒரே மொழி தான்! (ஒப்பு நோக்குக: வடமொழி ஏகாட்சரம், சீக்கிய ஏக்-ஓம்கார்)!
ஓம் என்பதற்குள் உருவமும் இருக்கு! அருவமும் இருக்கு!
ஓம் என்பதற்குள் பல பேதம் இருப்பது போலத் தெரியலாம்!
ஆனால் அது ஒன்றாகும் போது முக்தி சித்திக்கும்!

ஹிஹி! என்ன? ஏதாச்சும் புரிஞ்சுதா? ஒரே "ஞான பரமா"-ல்ல இருக்கு? இதை இன்னும் கொஞ்சம் எளிமையாச் சொல்ல முடியாதா? சரி, திருமூலர் சொல்வதை மேலும் கேளுங்கள்!

ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!


சீவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! சிவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! இதை மட்டும் உணர்ந்தால் சீவன் = சிவன் ஆகி விடும்!


ஐயோ! என்னைய அடிக்க வராதீங்க! எதுனா புரியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம்! அடி தடி எல்லாம் வேணாம்! :)
என்ன மக்கா, சீவன்-சிவன், ஏதாச்சும் புரிஞ்சுதா? எல்லாத்தையுமே எளிமையாச் சொல்லீற முடியுமா என்ன? நாமளும் மெனக் கெட்டால் தானே புரியும்-ன்னு சிலர் சொல்லலாம்!

ஆனால்.....
நான் அப்படிச் சொல்ல மாட்டேன் --- இறை விஷயத்தில் மட்டும்!
ஏன்னா இறைவன் எளிமையானவன்! ரொம்பவே எளிமையானவன்!

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்-ன்னு சொல்றாரு மாணிக்க வாசகப் பெருமான்!
"போதம்"(ஞானம்) கொடுப்பவன்-ன்னு சொல்லி இருக்கலாம்! "போகம்"(இன்பம்) கொடுப்பவன்-ன்னு ஏன் சொல்றாரு?

ஏன்னா எல்லா உயிர்களுக்கும், போகம்(இன்பம்)-ன்னா என்ன?-ன்னு "தானாவே" புரியும்!
* மாம்பழம் சாப்பிட்டா தித்திப்பா இருக்கும்!
* காதலியின் இதழ்களில் தேன் ஊறும்-ன்னு யாருமே சொல்லிக் கொடுக்க வேணாம்! பெருசா "ஞான பரமா" எல்லாம் இதுக்குச் சிந்திக்கத் தேவையில்லை! "போகமாம்" பூங்கழல்கள்! = அந்த இன்பம் "தானே" புரியும்! :))

அப்புறம் எதுக்கு இத்தனை நூல்கள்?-ன்னு கேட்கறீங்களா? = இன்பத்தைப் பற்றிப் பேசுவதும் இன்பம் தானே! அதான்! :)

இன்பத்தைப் பற்றிச் சிந்திப்பது, வந்திப்பது, பேசுவது, ஏசுவது, இன்பத்தைப் பற்றி நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, இன்பத்தைப் பற்றிக் காதலன்-காதலியிடம் வழிவது எல்லாமே இன்பம் தானே! :) அதான் இத்தனை பேச்சு! இத்தனை நூல்கள்! :))

திருமந்திரம் = சைவ சித்தாந்தப் பெருநூல்!
நம் தமிழ் மொழியில், தியான/ யோக/ தந்திர வகையில் அற்புதமான ஒரு நூல்! பல சிக்கலான சமயக் கருத்துக்களை விரிவாக விளக்கும் நூல்!

ஆனால் என்னமோ தெரியவில்லை, ஓங்காரம் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறார் திருமூலர்! உடனே பஞ்சாட்சரத்துக்குத் தாவி விடுகிறார்!
அதை விரிவாகப் விரித்துப் பேசுகிறார்! ஆர்வமுள்ளோர் ஒன்பதாம் தந்திரத்தைப் படித்துப் பார்க்கவும்!


இப்படிப் பல சமயங்களும் "குரு வணக்கம்", "ஞான சொரூபம்"-ன்னே ஓங்காரத்தைப் பற்றிப் பேசுகின்றன!
பலவற்றிலும் "ஞான பரம்" தான் அதிகமா இருக்கே தவிர...கொஞ்சம் எளிமையா "எல்லா மக்களுக்கும் ஓங்காரத்தால் என்ன பயன்?" என்பதை அவ்வளவு வெளிப்படையாகப் பேசவில்லை!

* ஓங்காரம் - அது ரகசியப் பொருள் - யாருக்கும் சொல்லீறக் கூடாது என்பார்கள் சிலர்!
* ஓங்காரம் - அது மந்திரம் - கிழக்கு பார்த்து உட்கார்ந்து, ஆச்சாரமா, நியமமா ஜபம் பண்ணனும் என்பார்கள் சிலர்!
* ஓங்காரம் - அது மந்திரப் பொருளாய் இருப்பதால் - அதை முறையாக ஆசிரியரிடம் வாங்கி, முழுக் கவனமாக (Total Concentration) சொல்ல வேண்டும் என்பார்கள் சிலர்!

இது முற்றிலும் உண்மை தான்! முழுக் கவனம் தேவை தான்! - ஆனால் அது யோகப் பயிற்சியில் மட்டுமே! மந்திரமாகச் சொல்லும் போது மட்டுமே!
மற்ற நேரங்களில் மந்திரமாக இல்லாமல், பொதுவான பொருளாகச் சொல்லலாமே! தவறில்லையே!

அசரீரி: "அடேய் கேஆரெஸ்! ஓங்காரத்தின் பொருள் உலகில் "வேறு யாருக்குமே" தெரியாது! அதாண்டா யாரும் அதைப் பத்தி ரொம்ப பேசறதில்லை!"

கேஆரெஸ்: "வாட்? என்னடா சொல்லுற நீயி? யாருக்குமே தெரியாதா?"

அசரீரி: "அந்தப் பிரம்மனுக்கும் தெரியாமல் தானே இருந்தது? அதானே முருகப் பெருமான், பிரம்மாவின் தலையில் குட்டினான்?
சிவ பெருமானுக்குத் தெரியும்! ஆனால் அவர் அதை மறந்திருந்தார்! தந்தைக்கு உபதேசம் செய்து, அதை மீள் ஞாபகப் படுத்தினான் முருகன்!"

கேஆரெஸ்: "அது வரைக்கும் சரி தான்-பா! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா யாருக்குமே தெரியாது-ன்னு சொன்னா எப்படி? அப்ப யாருக்குத் தான் தெரியும்?"

"ஓங்காரத்தின் பொருள் "வேறு யாருக்குமே" தெரியாது! முருகன், சிவன், உமையன்னை - இந்த மூவருக்கு மட்டும் தான் ஓங்காரப் பொருள் தெரியும் என்பார்கள் சில "தீவிர" சைவப் பெருமக்கள்! (என் அன்பு நண்பர்கள் உட்பட :)))

* உமா = உ + ம + அ!
அது தான் ரிவர்ஸில் அ,உ,ம என்று ஆகி, அப்புறம் "ஓம்" ஆனது என்றெல்லாம் வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்! :)
* உமா = உ,ம,ஆ என்று "ஆ" தானே இருக்கு? "அ" இல்லையே-ன்னு கேள்வி கேட்டாக் கோவம் வந்துரும்! :)

உமையன்னைக்கு மட்டும் தானா? பிரணவ சொரூபமாகத் திகழ்கிறானே என் முருகப் பெருமான்! அவன் பெயரில் மட்டும் அ,உ,ம இல்லையா?-ன்னு கேட்டா, அதுக்கும் பதில் வராது! :)
ஹிஹி...எல்லாருக்கும் பொதுவான ஒரு தத்துவத்தை...இப்படிக் கதையெல்லாம் சொல்லி, "எங்களுக்கு மட்டும்"-ன்னு தனிப்பட்டு ஆக்கி வைத்தால்...வரும் பிரச்சனை இது தான்!
இந்த டகால்ட்டி எல்லாம் ஈசனோ, அன்னையோ, முருகனோ செய்வதில்லை! அத்தனையும் மனுசன் தான் செய்யறான்! :(



* மூவர் மட்டுமே அறிந்து, மற்றவர் அறிய முடியாது-ன்னா, இது என்ன குலக் கல்வியா? "எங்களுக்கு மட்டுமே தெரியும்"-ன்னு சொல்வதிலா ஈசனுக்கும் அன்னைக்கும் பெருமை?

* பிரம்மனுக்குத் தெரியவில்லை என்று முருகன் தண்டித்த வரை சரியே! ஆனால் அவரை வெளியே விடும் போது, அவருக்குச் சொல்லிக் கொடுத்தல்லவா அனுப்ப வேண்டும்? அப்போது தானே அடுத்த முறை படைக்கும் போது, பிரம்மா பிரணவம் அறிந்து படைப்பார்?

* மூவர் மட்டுமே அறிந்தது என்றால், ஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப் பெருந்தகை, திருமூலர் - இவர்கள் எல்லாம் பிரணவப் பொருள்-ன்னா என்னன்னே தெரியாமல் ஓங்காரம் பற்றி எழுதினார்களா?

எளிமையா, எல்லாருக்கும் பயன்படுறா மாதிரி, ஓங்காரத்தின் பொருள் தான் என்ன? என்ன? என்ன?
முருகன் பிரம்மனுக்கு அதைச் சொல்லிக் கொடுத்து அனுப்பினானா இல்லையா?
ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா? (.....தொடரும்)


உசாத்துணை (References):
1. Jaina Sutras - http://www.sacred-texts.com/jai/sbe22/index.htm
2. Avalokiteswara Mantra - http://www.visiblemantra.org/avalokitesvara.html
3. Moola Mantra - http://www.sikhismguide.org/
4. பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் - பிரணவ சமாதி - http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10903&padhi=+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
5. விளக்கப் புத்தகங்கள் தந்து உதவிய ஜைன நண்பர் Pratik Bapna, மற்றும் சீக்கிய நண்பர் Siddhu-வுக்கும் நன்றி.
Read more »

Friday, June 05, 2009

பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!

யாருப்பா தாமிரபரணித் தலைவரு? பதிவுலகில் தாமிரபரணி தண்ணிக் குடிச்சவங்க பல பேர் உண்டு! ஆனா அவிங்க எல்லாம் தலைவர் ஆயிட முடியுமா? எங்க தலைவர் மாதிரி வருமா? அதுவும் பதினாறு வயசுத் தலைவர்! அவர் பேச்சுக்கு உருகாதவங்களே கிடையாது! அவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்! அவருக்குத் தான் இன்னிக்குப் பிறந்த நாளு! (Jun-05, வைகாசி விசாகம்)

Happy Birthday MaaRa! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், குல முதல்வன் நம்மாழ்வாரே! :)

* அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)
* காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்படும் மறைந்த ஆச்சார்யர் பிறந்தநாள் நாளை (அனுஷம்)!
** அப்படியே அம்மாவுக்கும்-அப்பாவுக்கும் இன்று திருமண நாளும் கூட! Happy Wedding Day, My Big Children! :)



பொருநை என்னும் தாமிரபரணி நதி! சுழித்துச் சுழித்து ஓடும் இளமங்கை! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!
பொருநைத் துறைவன்! யமுனைத் துறைவனைக் காட்டிலும் உயர்ந்தவன்!
அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் மாறன்! அரங்கன் இட்ட பெயர் நம்-ஆழ்வார்! அவனே குல முதல்வன் ஆனான்!

பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!
அதில் பெரிதாகத் தவறொன்றும் இல்லை! சமய ஆராய்ச்சியும் தொண்டும் செய்து, அதற்கென்றே இருந்தவர்களைத் தான் அந்நாளில் தலைவராகக் கொண்டனர் போலும்!

ஆதி சங்கரர், இராமானுசர், மாத்வர், சுந்தரமூர்த்தி நாயனார் என்று பலப்பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்!
ஒரு அருணகிரியோ, அப்பரோ, சமயத் தலைவராக வந்ததில்லை! அவர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பளித்தாலும், அவர்களைத் தலைவராகத் தனியாகக் கொண்டாடியதில்லை!

ஆனால் "தாழ்ந்த குலம்", "சூத்திரர்", "நாலாம் வருணம்" என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன?

வைணவக் "குல முதல்வன்" என்ற போற்றப்படுபவர் = வேளாளரான நம்மாழ்வார்!
அந்தணர், அந்தணர் அல்லாதார் என்று அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நம்மாழ்வார்!
கீதையின் தேர்த்தட்டு மொழியை விட அவரின் திருவாய் மொழிக்கு ஏற்றம் அதிகம்!

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க!
திருவாய் மொழிக்கு உருகாதார் ஒரு வாய் மொழிக்கும் உருகார்!

இத்தனைக்கும் இவர் ரொம்ப சின்னப் பையன்!
பதினாறு வயதில் பாடத் துவங்கி, முப்பத்து இரண்டு வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு வருத்தப்படாத வாலிபன்! அவனா குல முதல்வன்?

முதன் முதலில் தோன்றிய முதலாழ்வாரைச் சொல்லலாமே?
ஆண்டாளை மகளாகப் பெற்று, அரங்கனையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வாரைச் சொல்லலாமே? இத்தனைக்கும் அவர் அந்தணராச்சே!
அவர்களை எல்லாம் குல முதல்வன் என்று சொல்லாது, ஒரு சின்னப் பையன் நம்மாழ்வாரைச் சொல்வது ஏன்?

ஏன் மாறனுக்கு மட்டும் இத்தனை சிறப்பு? அவரை மட்டும் எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்? இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்!
இன்னிக்கி பிறந்த நாள் என்பதால் தத்துவம் வேணாம்! சுவையான கதையைக் கேட்கலாமா?
ஊரையே காய்ச்சும் தாமிரபரணி ஆளுங்க ஒரு பக்கம்-ன்னா, அந்தத் தாமிரபரணித் தண்ணியையே காய்ச்சும் கதை! பார்க்கலாமா? :))



தாமிரபரணி ஆறுக்கு அம்புட்டு மகத்துவம்! அழகு + தெளிவு + உயிர்ப்பு! கனிம வளம், மருத்துவக் கூறுகள் கொண்ட வளம்-ன்னு அதன் பெருமையே தனி!
கண்ணனின் ஸ்ரீமத் பாகவதத்திலேயே நம்ம தாமிரபரணி சொல்லப்பட்டிருக்கு-ன்னு தெரியுமா?

தாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ
கலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண!
க்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச
ப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா!

தாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே
கலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்!
அங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்!
பக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் "ஆழ்ந்து" போவார்கள்!

பின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்!
இப்படிப்பட்ட தாமிரபரணிக் கரையில் அன்னிக்குன்னு பார்த்து ஒரு முக்கியமான உரையாடல்...
**********************************************************************
மதுரகவிகள்: "ஆழ்வாரே! இப்படி அடியேனை வருத்தப்பட வைக்கலாமா? என்ன வயசு ஆகி விட்டது உமக்கு? முப்பத்திரண்டு தானே? அதற்குள் உலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றால் எப்படி?"

மாறன்: "ஹா ஹா ஹா! நான் வந்த பணி முடிந்ததால் மீண்டும் பரமபதம் செல்கிறேன்! இதில் உமக்கு என்ன வருத்தம் மதுரகவிகளே?"

மதுரகவிகள்: "எங்கோ வடநாட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தேன் நான்! இமயமலை போனால் தான் சிலருக்குப் பொய் ஞானம் வருமா? மெய் ஞானம் தாமிரபரணிக் கரையிலேயே கிடைத்து விடுமே-ன்னு, வானில் தோன்றிய ஒளி, என்னை இங்கு இழுத்துக் கொண்டு வந்தது..."

மாறன்: "ஓ...மலரும் நினைவுகளா? அதான் தெரியுமே! இந்த ஊருக்கு வந்து, அசையாது இருந்த என்னை நீங்கள் தானே அசைய வைத்தீர்கள்?
’இவன் வெற்றுச் சிறுவன்! தழலை ஓம்பும் அந்தணன் கூட அல்லன்! இவனுக்குப் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறது”-என்று சோதித்துப் பார்க்கத் தானே அப்படி ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்?"

மதுரகவிகள்: "ஆகா! ஆகா! அப்படியில்லை சுவாமி! அடியேன் பிறப்பால் வேணுமென்றால் அந்தணனாக இருக்கலாம்! ஆனால் செந்தன்மை பூண்டொழுகும் நீரல்லவோ மெய் அந்தணர்? நீரல்லவோ எம் குலமுதல்வன்?
நான் முதன்முதல் பார்த்த போது, நீர் பதினாறு வயது சிறுபிள்ளை! அசையாது புளியமரத்தின் கீழே யோகத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்! உம்மை அசைக்க வேண்டியே அந்தக் கேள்வியைக் கேட்டேன்!"

மாறன்: "அந்தக் கேள்வியை இன்னொரு முறை சொல்லுங்கள் கவிகளே! என்ன அருமையான கேள்வி! நினைத்தாலே இனிக்கும்!"

மதுரகவிகள்: "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...
எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்???"


மாறன்: "அத்தைத் தின்று, அங்கே கிடக்கும்!!!"

மதுரகவிகள்: "இந்த ஒற்றை வரிப் பதிலால் அல்லவோ அடியேன் ஆடிப் போனேன்!"



மாறன்: "ஹா ஹா ஹா! உண்மைக்கு என்றுமே ஒற்றை வரி தான்!
உண்மை, இறைவனைப் போலவே மிகவும் எளிமையானது!"

மதுரகவிகள்: "ஆமாம் ஆழ்வாரே! அதனால் தான் உங்கள் ஒரு வாய்மொழியான திருவாய்மொழியும் எளிமையாகவே உள்ளது!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! இதற்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! ஆகா!"

மாறன்: "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்!"

மதுரகவிகள்: "இப்படியெல்லாம் விதம் விதமாக வியப்பில் ஆழ்த்தினீர்கள்! இந்தச் சிறிய வயதில் இப்படி ஒரு ஞானமா? இத்தனை தெளிவா? என்று வியந்து போனேன்!"

மாறன்: "ஞானமும் கர்மமும் நமக்கு எதற்கு கவிகளே? பெற்றவளை ஞானத்தாலும் கர்மத்தாலுமா ஒருவன் அறிந்து விட முடியும்? பாவித்தால் அல்லவோ உறவு? பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!"

மதுரகவிகள்: "அதான் தங்களைப் பாவிக்கிறேன் ஆழ்வாரே! ஆனால் நீர் தான் எம்மை விட்டுவிட்டு மேலுலகம் செல்வதில் உறுதியாக உள்ளீர்! அடியேன் என்ன சொல்லி உம்மை நிறுத்த?"

மாறன்: "பிள்ளைகளுக்குப் பெற்றோர் பேச்சைக் கேட்கத் தான் கசக்கும்! அதான் எம்பெருமானின் அவதாரங்கள் எடுபடுமாற் போனது!
பிள்ளைகளுக்குச் சக பிள்ளைகள் பேச்சைக் கேட்கத் தான் பிடிக்கும்! அதான் எம்பெருமான் இனி அவன் அவதரிக்காது, நம்மை அவதிரிப்பித்தான்!
நாமும் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில், தமிழ் வேதத்தைக் கொடுத்தாகி விட்டது! நம் பணி முடிந்து விட்டது! இனி வரப்போவது தமிழ்ச் சமயத்தில் அடுத்த அத்தியாயம் தான்!"

மதுரகவிகள்: "செல்ல முடிவே கட்டி விட்டீர்களா?"

மாறன்: "கவிகளே! கவலைப்படாதீர்கள்! நீரும் உமது பணி முடித்து விரைவில் எம்முடன் வந்து சேர்ந்து விடுவீர்! அது வரை உமக்குத் துணையாக, எம்மைப் போல் ஒன்றைத் தருகிறோம்!
இதோ, இந்த கனிம வளமான, தாமிரபரணி ஆற்று நீரை இப்போதே காய்ச்சுங்கள்! எம்மைப் போல் ஒன்று உருவாகும்!"



மதுரகவிகள்: "ஆகா! இது என்ன வித்தியாசமான உருவமாக வந்து விட்டதே! இதைப் பார்த்தால் தங்களைப் போல் தெரியவில்லையே சுவாமி? வழவழ மழமழ என்று செதுக்கியும் செதுக்காமலும் ஒரு உருவமா?"

மாறன்: "ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும் எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!"

மதுரகவிகள்: "ஆகா! இவர் பின்னாளில் தோன்றப் போகிறவரா? முன்னமேயே அறிவிக்கை செய்யப் போந்தீரே! தீர்க்க தரிசனமோ? அறிவுடையார் ஆவது அறிவார் என்பதல்லவோ குறள்?"

மாறன்: "ஆம்! மதுரகவிகளே! நீரும் நானும் செய்யாததை எல்லாம் இவர் செய்யப் போகுவார்! கைங்கர்யம் என்னும் திருத் தொண்டே இவர் லட்சணம்! லட்சுமணம்!
சாதிப் பாகுபாடு எல்லாம் அறவே நீக்கி, ஒருவர் விடாது, அனைவரையும் அரங்கனுக்கு ஆக்கும் செயல் வீரர் இவரே! இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த உருவத்தை வழி வழியாக நாளைய தலைமுறையிடம் கொண்டு சேருங்கள்!"

மதுரகவிகள்: "மிக்க மகிழ்ச்சி சுவாமி! அப்படியே செய்கிறோம்! அடியேனுக்குத் தங்கள் உருவத்தையும் தந்தருள வேண்டும்!"

மாறன்: "மறுமுறை தாமிரபரணியைக் காய்ச்சி நம்மை பெற்றுக் கொள்ளும்! அடியேன் விடை பெறட்டுமா?!"

முடிச்சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய், நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே!


அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகலொன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே!



காய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி, பின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்! நம்மை அவனுக்கு உடையவராக்கினார்!

குலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்! இன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்!

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!

இன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்!
"பின்னாள் ஆசான்" என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்!

செதுக்கிய சிலையாய் இல்லாமல், கையால் பிடித்த சிலையைப் போல், கூர்மையும் கூர்மையில்லாமலும், சாதாரண மானுட உருவம் போலவே இருக்கும்! இது தான் பின்னாளில் உடையவர் முகத்தையும் ஒத்து இருந்தது!

* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை!
* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே!

பொருநைத் துறைவன் பிறந்த நாள் அதுவுமாய்,
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் பிறந்த நாள் அதுவுமாய்,
வேதம் "தமிழ்" செய்த மாறன் திருவடிகளே சரணம்!!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP