Wednesday, September 09, 2009

ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் "ரகசியத்" தாலி!

இன்னிக்கி, ஓம் நமோ Dash தொடரின், Climax-க்கு வந்திருக்கோம்!
மாதவிப் பந்தலுக்கும், "ரகசியத் தாலி"க்கும் என்ன சம்பந்தம்? ஹிஹி! அதெல்லாம் பதிவு முடியும் போது தான் தெரியும்! :))


இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு! இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்!

பல சமயங்களில்,
* என்னிடம் வருந்தினோர்க்கு எல்லாம் என் மன்னிப்புகளையும்...
* என்னிடம் அருந்தினோர்க்கு எல்லாம் என் அன்பினையும்...
அன்பரல்லாதார்/அன்பர் என்று.....அடியவர்கள் "அனைவருக்குமே" பல்லாண்டு பாடி,
உங்கள் KRS, உங்கள் "அனைவரையும்" இந்த நேரத்தில் வணங்கிக் கொள்கிறேன்!

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ...
சடகோபன் தண்"தமிழ் நூல்" வாழ...
அனைவரும் இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இந்தப் பதிவில், இராமானுசர் உங்களுடன் பேசப் போகிறார்!
அவர் திருக் கையொப்பத்தையும் நீங்கள் காணப் போகிறீர்கள்!

இந்த Climax பதிவின் Climax என்ன? = கோபுரம் மேல நின்னு ஊருக்கே கூவியது-ன்னு சொல்வாய்ங்களே! அது! :)

* அ-உ-ம்-க்கு = 3 பதிவு!
* நமோ-க்கு = 2 பதிவு!
* நாராயணாய-க்கு = 5 பதிவு!
அத்தனையும் இவரு மூனே நிமிஷத்துல எப்படிப்பா லீக்-அவுட் பண்ணாரு? :))
வாங்க, இன்னிக்கி பார்த்து விடலாமா? சென்ற பதிவு இங்கே!



மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்த உடையவரைச் சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா?
* ஒரு மணி நேரம், ஒருவருக்காக, வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, ஏழை எளிய மக்களிடம், எப்படி வாய் கூசாமல் சொல்வது?
ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்???

குருவின் வார்த்தையை மீறினால் நரகம் தான்! ஆனால் வரப் போவது சொர்க்கமா? நரகமா? மோட்சமா? என்றெல்லாம் அவர் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கவில்லை!
** அவருக்கு இருந்த ஒரே குழப்பம் = குருவைப் பார்ப்பதா? அடியவர்களைப் பார்ப்பதா?
தர்ம சங்கடம்! முன்பு இராமன் வசிட்டரை மீறினான்! இன்று இராம-அனுசன் நம்பிகளை மீறப் போகிறாரா? ஆகா!

அதோ.....திருக்கோட்டியூர் கோபுரம் கண்ணுக்குத் தெரியுதே! அஷ்டாங்க விமானம்! அது ஒரு வித்தியாசமான அமைப்பு!
ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், திருவரங்கம் கோயிலுக்கு கூட 4 பக்கம் - 4 கோணம் மட்டுமே! ஆனா, இந்தச் சின்ன ஊரில்....
ஒரே விமானத்தில்....மூன்று கருவறையும் உள்ளடங்கி இருக்கு!

மொத்தம் 8 கோணமாய் - 3 அடுக்குகள்! (Octagonal Trimetry)
(ஓம்) + (ந-மோ) + (நா-ரா-ய-ணா-ய) = 8 & 3

ஆகா! ஆகா!
* பொறி தட்டுகிறது இராமானுசருக்கு! எம்பெருமானே இப்படி ஊர் அறிய மந்திரத்தைக் காட்டிக் கொடுக்கிறானே? "வெட்ட வெளிச்சமாத்" தானே இந்தக் கோபுரம் இருக்கு?
* கண்டவனுக்கும் சொல்லீறக் கூடாது என்று "ரகஸ்யமாய்" தன்னை மறைந்து கொள்கிறதா என்ன? "கண்டவனுக்கு" எல்லாம், அது தன்னைக் காட்டி விடுகிறதே!


விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார் உடையவர்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!

வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே....
"படக்"கென்று தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை!
அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!

சின்னஞ் சிறு வயதிலேயே அத்தனை கொடுமையும் பார்த்து விட்டார் அல்லவா?
ஆசிரியர் தன்னை விரட்டி விடல், பின்பு, குருவே தன்னைக் கொல்ல முயற்சி,
பின்பு, திருமண முறிவு, பின்பு, உடன் பழகிய பலரின் வெறுப்பு, பின்பு சக அடியவர்கள் தன் மீது பொறாமை...
பின்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்!
- இப்படிப் புடம் போட்டு விட்டது போல! கண்ணீர் மட்டும் வெறுமனே வழிகிறது!

கோபுரத்தில் இருந்து, உரத்த குரலில் கூவிக் கூவி எல்லாரையும் அழைக்கிறார்!
உடன் வந்த சீடர்கள், "இவர் என்ன தான் பண்ணுறாரு?"-ன்னு தெரியாமல் விழிவிழி-ன்னு விழிக்கிறார்கள்!
வயல் வெளிகளில் இருந்தும், ஊர்ச் சந்தைக்கும் வந்த கூட்டம், கீழே அலை மோதுகிறது! கோபுரத்தின் கீழ் நிற்க இடமில்லை!

இந்தச் சின்னப் பையன், வாலிபத் துறவி, இனிக்க இனிக்கப் பேசுகிறான் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா அப்படி என்ன பெருசா சொல்லிடப் போறான்?
உடையவர் கீழே குனிந்து அத்தனை பேரையும் பார்க்கிறார்!
கன்னங் கரேல் என்று அன்றாடம் வெயிலில் வாடிடும் மக்கள்! இவர்களுக்கு என்னா-ன்னு சொல்லுறது? நம்பிகள் தம்மிடம் சொன்னது என்ன???

நர சமூகோ நாரா:
நாரா ஜாதானி தத்வானி
நாரா நிதி ததோ விது:
தான்யேவ சயனம் தஸ்ய - தேன
நாராயண ஸ்மிருதா:

செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாரணா என்னும் நாமம்!


இப்படி எல்லாம் சொன்னா, இவிங்களுக்குப் புரியுமா? சரி, சரி, மிகவும் எளிதாக்கிச் சொல்லீற வேண்டியது தான்! வேறு வழியில்லை.....
இறைவனே பன்றியாய்க் கீழே இறங்கி வருகிறானே! நாம் இறங்கினால் ஒன்னும் குறைந்து விட மாட்டோம்!! என்னை மன்னித்து விடுங்கள் திருக்கோட்டியூர் நம்பிகளே!


ஓம் நமோ Dash.....
அந்த "ரகஸ்யம்",
இதோ.....ஊருக்கே போட்டு உடைக்கப்பட்டு விட்டது! உங்களுக்கு? :))

அனைவர் முகத்திலும் ஏதோ எளிமையாகப் புரிந்து கொண்ட திருப்தி!
எல்லாருக்கும் வாயெல்லாம் சிரிப்பு!
உடையவர் வாயால் திருமந்திர அர்த்தம் கேட்டதே போதும் என்ற மோட்சத் திருப்தி! அடியவர்களோடு கூடி இருந்து குளிந்தேலோ என்ற மோட்சத் திருப்தி!

அப்பாடா....இனி பிறவியே இல்லை என்ற சுயநலம் = வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி = அதுவா மோட்சம்?
இல்லை! இல்லவே இல்லை!
அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!


உடையவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.....எதிரே சாட்சாத் திருக்கோட்டியூர் நம்பிகள்! அவர் முன்குடுமி கோபத்தால் ஆடுகிறது!

பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவ சிவ! :)
கண்கள் சிவ சிவ! பற்கள் நற நற! அதரம் அர அர! :)

நம்பி: "இராமானுஜா! என் முகத்தில் விழிக்காதே! போய் விடு இங்கிருந்து! திருக்கோஷ்டியூர் பக்கம் இனி எட்டியும் பார்க்காதே!"

உடையவர்: "அடியேன் என்றைக்கும் உங்கள்-இராமானுசன் தான், குருவே!"

நம்பி: "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! உதட்டில் பஞ்சு, உள்ளத்தில் நஞ்சா? குருத் துரோகி! போயும் போயும் உன்னையா ஆளவந்தார் நம்பினார்?"

உடையவர்: "ஐயோ...சுவாமீ...."

நம்பி: "ச்சீ....அப்படி அழைக்காதே! நான் உன்னைச் சபித்தால் என்ன ஆவாய் தெரியுமா?"

உடையவர்: "ஆச்சார்யர் திருவடிகளே தஞ்சம் என்று, அப்போதும் உங்கள் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பேன்!"

(நம்பிக்குக் கண் கலங்குகிறது...இவனை என்னவென்று சொல்வது?..எவ்வளவு திட்டினாலும், நம்மை அல்லவா ஏக்கமுடன் பார்க்கிறான்!
சாத்திரத்தை மீறியவன் போலவும் தெரிகிறான்! மீறாதவன் போலும் தெரிகிறானே.........?

நம்பியின் கோபத்தைப் பார்த்து, மொத்த ஊரே அரண்டு போய் நிற்கிறது!)
நம்பி: "குருவின் வார்த்தையை, அரை நாழிகைக்குள் மீறி விட்டாயே! உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?"

உடையவர்: "நரகம் தான் சுவாமி!"

நம்பி: "தெரிந்துமா இப்படிச் செய்தாய்?"

உடையவர்: "கேட்பவர் "எவராயினும்" அவருக்கு மோட்சம் "காட்ட" வல்லது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"

நம்பி: "ஆஆஆஆஆஆஆ...இராமானுஜா!"

உடையவர்: "நொண்டியோ, குருடோ, விகாரமோ, அழகோ.....அத்தனை குழந்தைகளும் தாயிடம் சேரட்டுமே!
அடியேன் ஒருவன் குருத் துரோகி ஆகி நரகத்தைச் சேர்கிறேன்! எனக்கு ஆசி கூறி, நரகத்துக்கு அனுப்பி வையுங்கள் சுவாமி!"

(நம்பியின் காலில் உடையவர் விழ......அதட்ட வந்த நம்பிகள் அரண்டு போகிறார்! இப்படி ஒரு பதிலைத் தன் வாழ்நாளில் அவர் கேட்டதே இல்லை!)

(இளைய இராமானுசனை வாரி எடுத்துக் கொள்கிறார்!)
நம்பி: "காரேய்க் கருணை இராமானுசா! ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி "வரம்பு அறுத்தாயோ"?

எம்பெருமான் தன்னிலை இறங்கி வருவான் தெரியும்! ஆனால் மனிதன் இறங்கி வர மாட்டானே? அவன் பிடிச்சதே பிடியாச்சே! இள ரத்தத்துக்கு இன்னும் அதிகமாச்சே? இந்தச் சின்ன வயதில் இவ்வளவு இரக்கமா உனக்கு? நீ மகாலக்ஷ்மித் தாயாரின் குணத்தை அல்லவா பெற்று இருக்கிறாய்?

அவன் எம்+பெருமான்! ஆனால் நீயோ எம்+பெரும்+ஆனார்! நீரே எம்பெருமானார்! நீரே எம்பெருமானார்!

குறிப்பு:
1. பதிவின் நிறைவு வேறு மாதிரி அமையணும் என்பதற்காக, கோபுரத்தின் மேலிருந்து அப்படி என்ன தான் சொன்னார்-ன்னு, இன்னும் அடியேன் உங்களுக்குச் சொல்லவில்லை! :))

2. "ஓம்" என்பது வேத மந்திரம்! அதில் பெண்கள், நான்காம் வருணத்தவர் உட்பட சில பேருக்கு அதிகாரம் இல்லை!
மேலும், கிழக்கு பார்த்து சொல்லணும் போன்ற நியம ஆச்சாரங்கள் உண்டு - என்றெல்லாம் ஒரு சிலர் கருதுவார்கள்!

அந்த ஒரு சிலர், "இராமானுசர், "ஓம்" என்பதை விட்டுவிட்டு, "நமோ நாராயணாய" என்பதற்கு மட்டுமே விளக்கஞ் சொன்னார்" என்று எடுத்துக்கிட்டு வருவார்கள்! அப்படி வந்தும் இருக்கிறார்கள் பல மின் குழுமங்களில்! :)

ஆனால் அவற்றில் கிஞ்சித்தும் ஆதாரம் இல்லை! "காரேய்க் கருணை" இல்லை! எதையோ கட்டிக் காப்பாத்த வேணும் என்ற எண்ணம் இருக்கே அன்றி "பகவதோஸ்ய தயைக சிந்தோ" இல்லை!

* நம சிவாய(5), சரவண பவ(6) என்று இறைவனின் மற்ற மகா மந்திரங்களைப் போல் அல்லாமல்.....
திரு-எட்டு-எழுத்தின் தன்மையே = ஓங்காரத்தை அதில் இருந்து பிரிக்கவே முடியாது என்பது தான்! ஒழிக்க ஒழியாது = DNA!

ஓம்-ஐ நீக்கி விட்டால், திரு-எட்டு-எழுத்து என்பது ஏழு எழுத்தாகி விடும்! அஷ்டாட்சரம்=சப்தாட்சரம் ஆகி விடும்! :) அதை உடையவர் ஒரு நாளுஞ் செய்யார்!

ஆச்சாரம் பார்ப்பவர்களின் மன நிம்மதிக்கு வேணுமானால்:
வேதம் தான் எல்லாரும் சொல்லக் கூடாது! "வேதம்" என்ற சொல்லையாச்சும் அனைவரும் சொல்லலாம் அல்லவா?
அது போல "ஓம் என்ற சொல்லைச்" சொன்னதாக எடுத்துக்கிட்டு, "அப்பாடா இராமானுஜர் ஆச்சாரத்தை மீறலை"-ன்னு வேணும்-ன்னா அவரவர் திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்! :))
"சாங்கேத்யம் பாரிகாஸ்யம் ச" என்று பரிகாசமாகக் கூட இதைச் சொல்லலாமாம்! அதையும் வேதமே தான் சொல்லுது! உண்மை அப்படி இருக்க......இவர்கள் மட்டும்....ஹைய்யோ ஹைய்யோ! :))


சரி.....உடையவர் கோபுரத்தில் இருந்து சொன்னது தான் என்ன? அவர் வாயாலேயே நாம் கேட்க வேண்டாமா?
.
.
.
எங்கே, உங்கள் காதுகளையும், கண்களையும், உள்ளத்தையும்.....இனி உடையவரிடம் கொடுங்கள்!
.
.
.
இதோ...உங்கள் உள்ளத்திலே...இராமானுசர் கையொப்பமிட்டு...பேசத் துவங்குகிறார்!

"அன்பர்களே, ஆசை உடையோர் எல்லாரும் ஓடி வாருங்கள்!
உழன்றும் உழவே தலை என்று தலையாய இருக்கும் நீங்களா இன்னும் உழன்று கொண்டிருப்பது? இதோ, கேளுங்கள்....
* உங்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள, மந்திரப் பொருள் இதுவே!
* நம் அனைவருக்கும் பொதுச் சொத்தான மந்திரப் பொருள் இதுவே!


நீங்கள் இதைத் தனியாக எங்கு போய்ப் படிப்பீர்கள்? படிக்க, பக்கம் நின்று கேட்டாலே போதும்! பரிந்து உள் உணர்ந்தாலே போதும்!
அதனால் "தெரிந்து/அறிந்து" வைத்துக் கொள்வதை விட, "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
கவனமாகக் கேட்டு, ஆராத ஆசையுடன், "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்! "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!

----------------------------------------------------------------------------------------------------


* ஓம் என்றால் அ-உ-ம்! = அவன்-உறவு-நாம்!

* அ = அனைத்துக்கும் முதல் = அகர முதல = இறைவன்!
* ம் = நாம்!
* உ = உறவு!

அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேணும் என்றில்லை!
அவனுக்கும்-நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!


அவனுக்காகவே நாம்! நமக்காகவே அவன்!
# அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
# "நம் வீட்டிலே அவனும் ஒருவன்" என்று அனுதினமும் அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்! = அது தான் ஓம்!

----------------------------------------------------------------------------------------------------


* நமோ என்றால் ந-ம = எனதில்லை! எனது இல்லவே இல்லை!

# எல்லாம் எனக்குக் "கொடுக்கப்பட்டது"! எல்லாமே வாடகைப் பொருள்!
அதற்காக எல்லாத்தையும் விட்டுறச் சொல்லலை! அவற்றுக்கு நிரந்தர மதிப்பைக் கொடுக்காமல், தற்காலிக மதிப்பைக் கொடுங்கள், போதும்!
உலகம் மாயை அல்ல!
உலகம் உண்மை! நீங்களும் உண்மை!


# ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விடுங்கள்!

அங்கு அதிகம் வைத்து விட்டால், மற்ற "ஆசை"களால் உங்களை "அசை"க்க முடியாது!
ந-மோ = நான் எனக்குச் சொந்தம் இல்லை! நான் அவனுக்கு மட்டு"மே" சொந்தம்!

----------------------------------------------------------------------------------------------------


* நாராயணாய என்றால் நமக்கு அவ"னே" தஞ்சம்! அவனுக்கு நாம், நமக்கு அவன்!
வேறு உபாயங்கள் நடுவில் உள்ளனவா? = இல்லை! இல்லவே இல்லை! அவ"னே" தஞ்சம்!

நாரம் என்றால் நீர்!
அணம் என்றால் அருகில்!
நாரணம் = அந்த "நீர்" நம் எல்லாருக்கும்!


# அவன் நீரைப் போல! = நீர் இன்றி அமையாது உலகு!
# அவன் நீரைப் போல! = எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைக் கொள்வான்!
# அவன் நீரைப் போல! = கீழ் நோக்கியே இறங்கி வருவான்!
நீரே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவையும் அதுவே விளைவிக்கும்!
அது போல் காரணமும் அவனே! காரியமும் அவனே!


அவன் தொலைவில் இருக்கிறவன் என்று பூஜைகளோடு மட்டும் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!
அவன் நம்மில் ஒருவன் என்று அனுதினமும்...
அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்!
அந்த உறவு தான் பலம்! இன்பம்! நிம்மதி! எல்லாம்!



பொதுவாகத் தாலிச் சரட்டில், 8 இழைகள் 2 சரடாய் இருக்கும்! 8x2=16
ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது! 8 எழுத்து x 3 பதம் = 8 இழை x 3 சரடுகளாய், 8x3=24...
இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இன்னும் இறுக்குகின்றது!

1. ஓம் (1)
2. ந-மோ (2)
3. நா-ரா-ய-ணா-ய (5)

* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!
* நம்மை அவனுக்கு மட்டு"மே" கட்டி வைத்துள்ள திருமாங்கல்யம்!
* அவனையும் பிடித்து, நம்மிடத்தில் உறவு ஏற்படுத்தி விட்ட திருமாங்கல்யம்!

பிறவிகள் தோறும் உலகத் தாலி மாறி விடும்!
ஆனால் இந்தத் தாலி மட்டும் என்றும் மாறவே மாறாது!
என்றும் கூடவே வரும்! எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து!


எங்கே.......
திருக்கோட்டியூர் நம்பிகளின் சீடன்,
அடியேன் இராமானுசனுடன் எல்லாரும் சேர்ந்து...

இந்தப் பெரிய திருமந்திரத்தை,
நாடும் நகரமும் நன்கறிய...
சொல்லும் போது...வெறுமனே வாய் அளவில் சொல்லாமல்...


* தாலிச் சரட்டை மனசாரத் தொட்டுக் கொள்ளுங்கள்!
* உறவு, உறவு, உறவு என்று நினைத்துக் கொண்டு,
எல்லாரும் மூன்று முறை சொல்லுங்கள்!


ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!


(நிறைவு)




இத்துடன்....மாதவிப் பந்தலில்,

* ஓம் (அ-உ-ம்) என்பதற்கான விளங்கங்களும் - 1, 2, 3
* நமோ என்பதற்கான விளக்கங்களும் - 1, 2
* நாராயணாய என்பதற்கான விளக்கங்களும் - 1, 2, 3, 4, 5

நிறைந்தே நிறைவானது! மாதவிப் பந்தலும் நிறைவானது! "நிறைந்தேலோ" ரெம்பாவாய்!


புகுந்த வீட்டில் புகுந்தாலும், சில அதீத அன்புள்ள பெண்கள், பிறந்த கிராமத்தையே மனத்தளவில் சுவாசித்துக் கொண்டு இருப்பார்கள்!
அது போலத் தான், பந்தலின் சுவாசத்தில், துளசீ மணமே அதிகம் கமழ்ந்து கொண்டு இருந்தது!

ஆனாலும், எங்கள் குல தெய்வம், தமிழ்க் கடவுள், அடியேன் இள வயதில் புகுந்த பிரான்,
என் முருகப் பெருமானிடத்திலே.....

இது வரை வந்த பந்தல் பதிவுகளையும், அடியார் கைங்கர்யத்தையும், இனி-தே ஒப்புக் கொடுத்து விடுகிறேன்!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி, நாடி நான் கண்டு கொண்டேன் நாரணா என்னும் நாமம்!

காதல் என் பெருமானே,
"உன் தனக்கு-நான்"
என்று "எழுதப்பட்ட" அந்நாள்!


உனக்கே நான் ஆட்செய்வேன்! உனக்கே நான் ஆட்செய்வேன்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
காதலால்...
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!



- உன் இதய வாசல்படி, மாதவிப் பந்தல்!

Read more »

Wednesday, September 02, 2009

நிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்!

மக்கா, எல்லாவர்க்கும் என்டே ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்! :)
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
ஹிஹி! இனிய ஓணம் வாழ்த்துக்கள், அனைவர்க்கும்! :)

* ஓ"ண"த்துக்கு - மூனு சுழி "ண" போடனும் மக்கா! தப்பித் தவறீ ரெண்டு சுழி "ன" போட்டுறப் போறீக! பொருளே மாறீரும்! ஓ"ன"ம் = விஷச் செடி :)
பார்த்தாலே பரவசம் படத்துல, விவேக் மலையாளம் சம்சாரிச்சி, அடி வாங்குன கதையா முடிஞ்சீறப் போவுது! :)



* ஓணம் = திருவோணம் = ஷ்ரவணம் = Shravanam, எல்லாமே திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும்! Aquarii Star!
* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம்! பெருமாளின் திருநட்சத்திரம்!

ஆனா பாருங்க.....இன்னிக்கி (Sep-2-2009), ஓணத்தோடு, பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது!
பெருமாளும், சிவனாரும் ஒன்னா வந்தா...
ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து ஒய்யாரமா வந்தா எப்படி இருக்கும்? சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க! :)

அட, அவிங்க எப்பமே சேர்ந்து தான் வாராங்க!
மனுசங்களுக்குத் தான் அவிங்க தனித்தனியா வரதுல ஒரு லூசுத்தனமான களிப்பு! :)
ஈசனும் பெருமாளும் தில்லையில் ஒன்னா வந்த அழகுக் காட்சி, தாருகா வனத்தின் கர்ம ரிஷிகளையே, செயலற்றுப் போக வைத்ததாம்! பொறுக்க மாட்டாம, சிவன் மேலயே மந்திரம் ஏவி விட்டாங்க, ரிஷிகள்! :)

பெருமாளும், ஈசனும் ஒன்னா வருவது.....
திருவோணம், திரயோதசி (பிரதோஷம்) ஒன்னா வருவது.....
இந்த இனிய நாளில் ஒரு இனிய பாட்டைப் பார்க்கலாமா?
பெருமாள் கேட்ட கேள்விக்கு, சிவனார் பாடும், பதில் பாட்டு! எச பாட்டு! :)

இந்த பாட்டு சந்தப் பாட்டு மட்டுமல்ல! சதா அலைபாயும் மனசுக்கு, அமைதியை, நிமிடத்தில் அளிக்கவல்ல பாட்டு!
இருள் மனத்தில், மின்னல் போல், வெளிச்சம் பாயும் பாட்டு!

நண்பர் ஸ்ரீவத்ஸ், ரொம்ப நாளா, இதை எழுதச் சொல்லி, என்னைய கேட்டுக்கிட்டு இருக்காரு!
பொருள் அறிஞ்சு, மனசுக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்டும் போது,
அதுல கிடைக்கும் ஆனந்த அனுபவமே தனி! அதனால் ஸ்ரீவத்ஸ்-க்காக இன்றைய பதிவு! :)

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
Part 2
Part 1
Very mesmerizing chant! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்கோள்! :)



திருவோணப் பிரதோஷப் பதிவு!

சிவோஹம் சிவோஹம் -ன்னு சொல்லுறாங்களே! அப்படீன்னா என்ன?
சிவோஹம் = சிவ + அஹம்!
சிவம் நான்! நானே சிவம்-ன்னும் கூடச் சிலர் சொல்லிக்கிடுவாய்ங்க! :)

என்னாது.....நான் தான் சிவமா?
* அப்ப நான் தான் சகல சக்தி படைச்ச சிவனா? என்னால எதுவும் பண்ணீற முடியுமா?
* பத்து வேலை பண்ண நினைச்சா, அதுல எட்டு வேலை நடக்க மாட்டேங்குது! ரெண்டு தான் நடக்குது!
* அதுலயும், எது நடக்காது-ன்னு நினைச்சோமோ, அது நடக்குது! எது நடக்கணும்-ன்னு நினைச்சோமோ, அது நடக்க மாட்டேங்குது!
* இந்த லட்சணத்துல நான் எப்படிச் சிவம் ஆக முடியும்? சிவோஹம்-ன்னு சொல்ல முடியும்? :)

அட, நம்ம இரண்யகசிபு கூட அப்படித் தானே சொன்னான்?
நானே கடவுள்! அஹம் பிரம்மாஸ்மி! சிவோஹம்!
அப்போ, இரண்யகசிபு தான் உத்தம புருஷன் இல்லையா? :)
நாம கூட இரண்யகசிபு போல ஆயிறணும்! அப்படித் தானே? அதானே சிவோஹம்! சிவோஹம்! :))

ஹிஹி! சிவோஹம் = நானே சிவம்! இது சரியா? தவறா? :)
இது கிட்டத்தட்ட "அஹம் பிரம்மாஸ்மி" - "நான் கடவுள்" கான்செப்ட் தான்! நாம இன்னிக்கி அதைப் பார்க்க வேணாம்! இன்னொரு நாள் பார்ப்போம்!
மொதல்ல பசி எடுக்கட்டும்! அப்பறமா பந்திக்கு முந்துவோம்! இன்னிக்கி வெறும் Starters & Appetizers! :))

சிவோஹம் = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி!


* "சிவோஹம்" என்று சொல்வது...ஏதோ...."நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல!
* சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால், நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில் மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்!


சிவோஹம் = நானே சிவம்-ன்னு கொள்ளக் கூடாது! அப்படிக் கொண்டால், நாமளும் இரண்யகசிபு ஆயிருவோம்! :))
ரெண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு! அவிங்களை நிக்க வச்சி,
"ஐயா, நீங்க தானே சிவம்? உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்?"-ன்னு சொல்லிப் பாருங்க! :)))))

"நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே "சிவம்" வரும்?
அப்பறம் "நானே" சிவம், "நானே" சிவம்-ன்னு, "நான்"-ஐ புடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி? :)
நான் மறையைக் கற்றவனா ஞானி?
"நான்" மறையக் கற்றவனே ஞானி!


சிவோஹம் = சிவோ + அஹம்
* இங்கே "அஹம்" என்பது = "ஆத்மாவைக்" குறிப்பது!
* இங்கே "சிவம்" என்பது = "ஆத்மாவின் ஆத்மாவைக்" குறிப்பது! = அந்தராத்மா = பரமாத்மா!
என் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில் நிறைந்து தளும்புகிறது! சிவோஹம்!

சிவோ அஹம் = என் "ஆத்மாவில் வந்து நிறைந்த" சிவம்! வந்து நெஞ்சு நிறையப் புகுந்தான்!
திருமாலிருஞ் சோலைமலை என்றேன்! என்ன திருமால் "வந்து என் நெஞ்சு நிறையப்" புகுந்தான்! சிவோஹம்! சிவோஹம்!

எப்படிப் பொருந்தி வருது பார்த்தீங்களா பாசுரமும் சிவோஹமும்? திருவோணமும், பிரதோஷமும்?
* தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் = சிவோஹம்! சிவோஹம்!
* நெஞ்சு நிறையப் புகுந்தான்! = சிவோஹம்! சிவோஹம்!
* அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான்! = சிவோஹம்! சிவோஹம்!

அந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான் "சிவோ அஹம்" என்பதற்கு உண்மையான பொருள்!



இப்போ பாட்டைப் பார்க்கலாமா? ஆதி சங்கரர், சின்ன பொடிப் பையனா இருக்கும் போது எழுதியது! :)
தன் கேள்விகளுக்கான பதிலைத் தேடி, குருவைத் தேடி அலைந்த போது எழுதியது! மொத்தம் ஆறே பாட்டு தான்!

* இந்தப் பாட்டு, மொத்தம் ஐந்து கேள்விகளுக்கான விடை!
* ஆறு பாட்டாகப் பாடினார்!
அட, அஞ்சு கேள்விக்கு எப்படிப்பா ஆறு பதில் கொடுக்க முடியும்? ஹா ஹா ஹா!
அட, கேள்வி கேக்குறவங்க வாயை அடைக்கிறாப் போல, கூடவே ஒரு எக்ஸ்ட்ரா பதிலைக் கொடுக்குறா மாதிரியா இது? :)))

* ஐந்து கேள்விகளைக் கேட்டது திருவோணம் - பெருமாள்!
* ஆறு பதில்களைத் தந்தது பிரதோஷம் - சிவ பெருமான்!
எம்பெருமானின் ஜகன் மோஹனா காரத்தில் லயித்து, ஐந்து ஆறானது! ஆறு முகமான "பொருள்" நீ அருள வேண்டும்!

1. ஜீவன் எது?
2. பரம் எது?
3. ஜீவன் எதை அடைய வேணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

ஐந்தே ஐந்து கேள்விகள்! ஆறே ஆறு பாடல்கள்! வாய் விட்டுப் படிங்க, சந்தம் தானா வந்துரும்!
பொருள் அறிஞ்சு, மனத்துக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்ட...அதே மெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பும் செய்துள்ளேன்...பொருளும் இசையும் சேர்ந்து வருதா-ன்னு நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!



விடுதல் ஆற்றுப்படை - நிர்வாண ஷட்கம்

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!

1. ------------------------------------------------------------------------
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,
ந-ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மனம் புத்தி, ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு, கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி, வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


2. ------------------------------------------------------------------------
ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோச:
ந-வா பாணி பாதம், ந- சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


3. ------------------------------------------------------------------------
ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப, வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


4. ------------------------------------------------------------------------
ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை!
துப்பில்லை, துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


5. ------------------------------------------------------------------------
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

மரணங்கள் கரணங்கள், சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

6. ------------------------------------------------------------------------
அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கடம் நைவ, முக்திர் ந-மே யா
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முக்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


* மந்திர ஒலி வடிவில் - வேகமாக!
* இசை வடிவில் - மென்மையாக!



தியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்! நல்லது தான்!
யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! இன்னும் அஹம் பிரம்மாஸ்மி, அகோரி என்றெல்லாம் கூட சினிமா வரை யோசித்தாகி விட்டது!

ஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது! இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை!

வேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்! :))
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!
வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா?
தானா தூக்கம் வந்துரும்! உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு! படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :))))

எனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....
அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது!
இதை இயல்பாகப் பாவித்து, பழகிக் கொள்ளுங்கள்!

* சிவோஹம் என்றால் "நானே சிவன்" என்பது அல்ல!
* சிவோஹம் என்றால் "சிவ-என்-அஹம்"!

வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்! அதனால் சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குகிறேன்!

இனி...
* அடுத்த முறை சிவோஹம் என்று சொல்லும் போதும்.....
* தியானத்தில் அமரும் போதும்.....
* உங்கள் அகத்தில்.....
* சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது போல எண்ணிக் கொள்ளுங்கள்! நெஞ்சை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள்!

அப்படி ஈரப்படுத்திக் கொண்டு, அப்புறம் தியானம் செய்தால்.....
நிற்கும் போதும், நடக்கும் போதும்,
அலுவலகத்திலும், வீட்டிலும்,
நண்பர்களோடு பேசும் போதும்,
கோபத்தில் சண்டை போடும் போதும் கூட.....தியான மயமாகவே இயல்பாக இருக்கும்!
அனைத்தும் சிக்கலின்றி சீரான ஓடையில் இருக்கும்!
நெஞ்சு நிறையப் புகுந்த சிவன், அங்கேயே உங்களுடன் தங்கியும் விடுவான்!

உங்கள் அகத்தில்.....
"சிவம்" வந்து "நெஞ்சு நிறையப்" புகட்டும்! = சிவோ அஹம்!
சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குங்கள்! மகிழ்ச்சியில் பொங்குங்கள்!

சிவோஹம்! சிவோஹம்!
சிவோஹம்! சிவோஹம்!
ஸ்ரீ ஹரீ: ஓம்!

Photo Courtesy: Simply CVR :)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP