Monday, May 10, 2010

மேக விடு தூது - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ



கண்ணனைத் திருமணம் செய்து கொண்டாலும், அது கனவில் தானே? மின்மினி பறந்தது போல இருந்தது. அவள் நெஞ்சில் நிலையாக இல்லை!

அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும், தொடக்கத்திலேயே அவளிடம், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன், என்பது தெரியாது; ஆனால் வர வேண்டிய சமயத்துக்குச் சரியாக வந்துவிடுவேன்!' என்று சொல்லிச் செல்கிறான் கண்ணன்! ஆனால் வரவே இல்லை!

தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!

அவனுடன் பேசுவதற்கு, மற்றக் கலியுலகத்து ஆண்கள் மாதிரி, Mobile, Pre-Paid SIM Card வாங்கித் தரவில்லை அவன்! எனவே, அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, அவன் அருகிலேயே எப்போதும் இருக்கும் சங்கிடம் பேசுகின்றாள்.

பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கு, பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!

ஓடிய சங்கம், மீண்டும் வரவில்லை! கண்ணனும் வரவில்லை! சங்கு கண்ணனிடம் ஏதாவது சொல்லிற்றா என்றும் தெரியவில்லை! 'சங்கம், கண்ணனின் அந்தரங்கனானதால், அவன் சொன்னதை மட்டுமே கேட்கும், நான் சொன்னால் கேட்காது', என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள் பாவை.

சென்ற முறை பிரியும் தருணத்தில், மழைக் காலத்தில் கண்ணன் மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்! மழைக் காலமும் வந்தது. கருமை நிறக் கண்ணன் வரவில்லை. ஆனால் அவன் போல் நிறமுள்ள கருத்த மேகங்கள் முன்னே வந்து நின்றன!

கவலையுற்ற பாவை, மேகங்களை, திருவேங்கவனிடம் தூது அனுப்புகின்றாள்!

***
காலம் காலமாக, மன்னர்கள், காதலர்கள், மற்றவர்களும், தேவைப்படும்போது தூது அனுப்புவதை வழக்கமாகவே கொண்டு இருந்தனர்.

மன்னர்கள் அனுப்பும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தூதுவன் இன்னொரு அரசனிடம் செய்தி சொல்ல வேண்டிய முறை என, பல நியதிகள் தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.

தூதுவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று, நம் வள்ளுவனார் ஒரு அத்தியாயமே (69-தூது) வகுத்துள்ளார். மாதிரிக்கு, அதில் ஒன்று:

தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது.
குறள் 69-5

(காரண காரியங்களை எடுத்துச் சொல்லி, இன்னாத சொற்களை நீக்கி, கேட்பவர்கள் மனம் மகிழ உரைத்து, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து, தம் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதன் ஆவான்!)

தூது செல்பவன், நால்வகை உபாயங்களையும் (அறிவுறுத்துதல், கெஞ்சல், மிரட்டல், பொருள் கொடுத்தல்) கையாண்டு, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும்!


நம் எல்லோருக்கும் தெரிந்த முதல் தூதுவன் - தூதுவனுக்கு மிகச் சிறந்த உதாரணம் - அனுமனே (அனுமனுடைய தகுதிகளே வள்ளுவன் இந்த அத்தியாயம் எழுதக் காரணமாயிற்று என்றும் கூறப்படுவதுண்டு)!

மன்னர்கள், மனிதர்களையும், அனுமனைப் போன்றோரையும் தூது அனுப்பினாலும், காதலர்கள்/காதலிகள் தனிமையில் தவிக்கும்போது, தூது விடுவது மனிதர்கள் மூலம் அல்ல!



கிளிப்பத்து, குயில் பத்து, புறாக்கடிதம், மயில் பத்து, மேக விடு தூது, என்று, பதில் பேசாதவைகளைப் பல விதமாகத் தூது விடுபவர்களே நம் காதலர்கள்!


இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை,
பயன் பெறு மேகம், பூவை, பாங்கி,
நயந்த குயில், பேதை, நெஞ்சம், தென்றல்,
பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை.


(அன்னம், கிளி, மயில், மேகம், நாகணவாய்ப் பறவை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு, தோழி ஆகியோர் தூது செல்லத் தகுந்தவை)


மன்னர்களிடையே தூது செல்ல பெரும்பாலும் ஆண்களே அனுப்பப்பட்டாலும், ஒளவையார், அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது சென்று, போரை நிறுத்தியதாக வரலாறு உண்டு!

நம் பாவை, மேகத்தையும், குயிலையும் தூது விட, சில ஆழ்வார்கள், மற்ற பறவைகளையும், நெஞ்சத்தையும் தூது விட்டுள்ளனர்!

மதுரைச் சொக்கநாதர் அருளிய 'தமிழ் விடு தூது' எனும் நூல் (உ.வே.சாமிநாத ஐயர் தேடிக் கண்டுபிடித்தது) சற்று வித்தியாசமான தூதாக இருப்பது குறிப்பிடத் தக்கது!

***

மேகத்தைத் தூது விடுபவர்கள், ஏனோ, வெயில் கால வெண் மேகத்தைத் தூது விடுவதில்லை (அவை வெகுதூரம் செல்லாததால் இருக்குமோ?). மழை மேகத்தையும், பொழிகின்ற மழையையும் பற்றித்தான் எழுதுகின்றனர்!

மேக விடு தூதிலும், 'தலைவன் வருவான்' என்று மேகம் செய்தி கூறுதல், 'தலைவனிடம் போய்ச் சொல்' என்று தூது அனுப்புதல், இடியுடனும், மழையுடனும், மேகம் பதில் பேசுதல், போன்ற பல வகைகள் உண்டு!

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'திருநறையூர் நம்பி மேக விடு தூது' எனும் கலி வெண்பா இயற்றியுள்ளார் ('இது இவரால் எழுதப் பட்டது அல்ல' என்ற கருத்தும் உண்டு).

ஒரு தலைவி, திருநறையூர் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள நம்பி எம்பெருமான் மீது காதல் கொண்டு, 'நான் அணிந்து கொள்ள, நம்பியிடம் இருந்து துளசி மாலை வாங்கி வா' என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள்.

(200 கண்ணிகள் - சிறிய/பெரிய திருமடல்கள் போல் - கொண்டது. கலி வெண்பாக்களுக்கே உரித்தான கணக்கு விவாதம் - 400 வரிகளா, 200 கண்ணிகளா, 100 பாக்களா, எல்லாம் சேர்த்து ஒரே பாடலா? - இதற்கும் உண்டு. எது எப்படி இருந்தாலும், இதன் சொற்சுவையும், பொருட்சுவையும் மிகவும் நன்றாக உள்ளது)

பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில், ’கார் நாற்பது’ (மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது) எனும் சிறு நூல் உண்டு. மழைக் காலம் வந்து விட்டதை, நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் உரைக்கும். இது தூது உரைக்கும் நூல் அல்ல என்றாலும், ஒரு செய்யுள்,

கடும் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடும் காடு நேர் சினம் ஈன - கொடுங்குழாய்!
'இன்னே வருவர் நமர்!' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.
கார் நாற்பது-2

(சூரியன் வெப்பம் குறைந்து, மழைக் காலம் துவங்கி, காட்டில் எல்லாம், சிறு புல்கள் வளர, 'நம் தலைவர் இப்போதே வருவார்' என மேகம் தலைவர் அனுப்பிய தூதை அறிவித்தது என்று, தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)

'மழைக்காலம் ஆரம்பித்ததே, தூது உரைக்கத் தான்' என்ற பொருளில் வந்துள்ளது.


கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவனான காளிதாசன் எழுதிய 'மேகதூதம்' உலகப் புகழ் பெற்றது! தவறு செய்ததனால், குபேரனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறான்!

கலியுகமாயிற்றே! இவன் சொன்னால் மேகங்கள் உடனே தூது செல்லுமா? அவை தூது செல்வதற்கு, ஏதாவது Incentive வேண்டுமே!

'நீ போகும் வழியில், இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்து கொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்' என்று அவற்றிற்கு, போக வேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான்!

111 சந்தங்கள் கொண்ட இந்தக் காவியத்தை, Horace Hayman Wilson எனும் ஆங்கிலேயர், 1813-ஆம் ஆண்டு 'Megha Duta: The Cloud Messenger' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ('Water' படத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகின்றது).

மேகதூதம், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

***

வான் கொண்டு கிளர்ந்தெழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதற* திரண்டேறிப் பொழிவீர்காள்!*
ஊன் கொண்ட வள்ளுகிரால்* இரணியனை உடலிடந்தான்*
தான் கொண்ட சரிவளைகள்* தருமாகில் சாற்றுமினே.
நாச்சியார் திருமொழி 8-5

'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்'.

(ஊன் கொண்ட - சதைப் பற்றுள்ள, சக்தி வாய்ந்த; சரிவளை - கைகளில் இருந்து சரிந்து விழும் கைவளைகள்; சாற்றுமின் - சொல்லுங்கள்)
***

இந்தத் திருமொழியின் நான்காம் பாசுரம் வரை, 'மழை பொழியும் மேகங்கள்' என்று சாதாரணமாகக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்போது, 'கிளர்ந்து எழுங்கள்' (வான் கொண்டு கிளர்ந்தெழுந்த) என்கின்றாள்! எப்படி?

ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளர்ந்து எழ வேண்டுமாம்! இரணியனை வதைக்க நரசிம்மன் தூணில் இருந்து கிளர்ந்து எழுந்தது போல!


'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று திருப்பாவையில் சொன்ன அதே ஆண்டாள், இங்கு, மலர்கள் அழியும்படி, சிதறும்படி (தேன் கொண்ட மலர் சிதற) ’திரண்டு வந்து மழை பொழியும் மேகங்களே’ (திரண்டேறிப் பொழிவீர்காள்)' என்று சொல்கின்றாள்! ஏன்?

நரசிம்மன், இரணியன் உடன் வந்த அசுரர்கள் சிதறும்படி கிளர்ந்து எழுந்தானாம்! அது போன்று, திருமலையில், 'தேன் ஊறிக் கிடந்த மலர்கள் சிதறும்படி மழை பெய்ய வந்த மேகங்களே!' என்கின்றாள்!

அவை என்ன செய்ய வேண்டுமாம்?

'பிரகலாதன் கூப்பிடாமலேயே, அவனுக்காக, உன் வலிமையான (ஊன் கொண்ட) கைகளால், ஒரு இரணியனை அழிக்க வந்தாய்! ஆனால், நானோ உன்னை அழிக்க வரச் சொல்லவில்லை! என் கைவளைகளை (சரிவளைகள்) மட்டும் திருப்பித் தா! (தருமாகில்)' என்று நரசிம்மனிடம் சொல்ல வேண்டுமாம் (சாற்றுமின்)!

’கைவளைகள்’ என்று கூறாது, ‘சரிவளைகள்’ என்று ஆண்டாள் ஏன் கூற வேண்டும்? கண்ணனைப் பிரிந்த ஏக்கத்தினால், அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். கைகளில் இருந்த வளைகள், கையில் இருந்து சரிந்து விழுந்தன. அதையே கண்ணன் எடுத்துச் சென்றான்!


(’சரிவளை’- வினைத் தொகை = சரிந்த வளை, சரிகின்ற வளை, சரியும் வளை!)

"'சக்தியுள்ள கைகளால் இரணியன் உடலைக் கிழித்தாய்! அதே கைகளால், என் வளையைத் திருடிச் சென்றாய்! அதே கைகளால், என் கைகளில் வளைகளை மீண்டும் அணிந்து விடு!' என்று, நான் சொன்னதாக, திருவேங்கட மலையில் இருக்கும் நரசிம்மனிடம் சொல்" என்று மேகத்தின் மூலம் தூது விடுகின்றாள் ஆண்டாள்!

('வளைகளைத் திருப்பித் தா', என்பதன் பொருள், 'நீயே நேரில் வந்து, உன் கைகளால் என் கையில் அணிவித்தால் தான் நான் வளையல்களை அணிவேன்; அதற்காகவாவது, நீ நேரில் வரவேண்டும்' என்பதே!)

(இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது. அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் அனுபவத்தைப் பார்க்கலாம்)
- நரசிம்மன் வருவான்!

7 comments:

  1. அருமை! அற்புதம்! Fentastic! Super!

    ReplyDelete
  2. தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!::))))
    பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கும் பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!:))

    ஆசையை காண்பித்து விட்டு எங்காவது ஓடி விடுவது!
    அப்பறம் நம்ம தேடி புடிக்கணும்.

    பொதுவாவே கண்ணன் இப்படிதான் போல!

    ReplyDelete
  3. அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும்,:)))

    அந்த காலத்திலேயே அரங்கனுக்கு 143 சொல்லியிருக்காளே ஆண்டாலு!
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று – 143 – I LOVE YOU


    உண்மையான தூய்மையான No:1 காதலர்கள் (Sweet & Cute
    ஆண்டாள் & கண்ணன்) வேற யாரு! – True Love –

    அதனால்தான் போல
    Valentine கிருஷ்ணர் கோவில் சோளிங்குர் அருகே கட்டி கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது::)))

    திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே...
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே...
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
    பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே...
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே...

    ReplyDelete
  5. //அந்த காலத்திலேயே அரங்கனுக்கு 143 சொல்லியிருக்காளே ஆண்டாலு!
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று – 143 – I LOVE YOU//

    ஆஹா! நாச்சியார் திருமொழி = I Love You!

    ஆண்டாளுக்கு அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் தெரியுமோ என்னவோ?

    ReplyDelete
  6. ஆகா அருமையான தொகுப்பு தூது பற்றி!

    ReplyDelete
  7. மதிப்பிற்குரியீர்,

    "தமிழ் விடு தூது" என்ற பெயரில், எத்தனை நூல்கள் உண்டு?

    "முன்னிருந்த பாலி மொழியும் கீர்வாணமும்

    துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே

    பண்டைக் காலத்தே பரவைகொண்ட முன்னூழி

    மண்டலத்திலே பேர்வளநாட்டின் – மண்டுநீர்ப்

    பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்

    சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்

    பேரவையிலே நூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப்

    பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி"

    ----- என்ற பாடலும் "தமிழ்விடுதூது" சார்ந்தது என்று சொல்லப்படுதே, இது எந்த "தமிழ் விடு தூது"

    என்று விபரமாகத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP