Tuesday, August 31, 2010

சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

சிலப்பதிகாரம்:

* நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்!
* யாம் அறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்....

இதெல்லாம் சிலம்பின் பெருமைகள்!
சிலம்பு பேதைப் பெண் கண்ணகியை மட்டுமா காட்டுகிறது? மேதைப் பெண் கண்ணகியையும் அல்லவா காட்டுகிறது!
ஊரு விட்டு ஊரு வந்து, புது மாநிலத்தில் ஒரு பொண்ணு, அந்தூரு முதலமைச்சரை....நேரடியாகத் "தேரா மன்னா"-ன்னு கேட்க முடியுமா? நம்ம பெண் எம்.பி.க்கள் கூட இலங்கைக் குழுவில் அமைதியாகத் தானே போய் வருவாங்க? :)) * வள்ளுவர் அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
* ஆனால் எளிய மக்கள் அதைத் தொடர்புப்படுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் "பொழைக்கத் தெரியாதவள்", "புனித பிம்பம்" என்று ஒரு சொல்லில் அடக்கி, இந்தக் காலத்தில் கேலி பேசலாம்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்!

2. ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் வெகு சாதாரண குடிமக்கள்! அரசனைப் பாடாது, மக்களையும் அடியவரையும் பாடும் வித்தியாசமான பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்!
குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண், நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" இருக்க வேண்டும்? அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து, எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது?

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம்! ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்? கேள்வி கேட்டாலே, வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன? = குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள் (அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணத் துறவியாக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய நாட்டின் பெருமை பற்றியும்...மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்"! அதனால் தான் போலும், அந்த நெஞ்சத்தைப் போற்றும் வகையில், "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான் பாரதி!


கண்ணகியைக் காட்டும் காவியம், கண்ணனையும் நடுநடுவே பல இடங்களில் பேசுகிறது! தமிழ்க் கடவுளராகிய பெருமாள்-முருகன், தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் எப்படி இயைந்து இருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது!
அரங்கம், வேங்கடம், செந்தூர் என்ற ஆலயங்கள் எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன என்றால் நம்ப முடிகிறதா? சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது, பார்க்கலாமா?


திருவேங்கட மலையில் நிற்பவன் யார்? = பெருமாளா? முருகனா??

இன்றளவும் சிலர் குழம்பித் திரிந்து, குழப்பியும் திரிகிறார்களே! அவர்களுக்கு இளங்கோவடிகள் பதில் சொல்கிறார் பாருங்கள்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
...
...
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய 50
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்


என்கண் காட்டென்று என்னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்!!!
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - காடு காண் காதை)

பகை அணங்கு ஆழியும் = சக்கரமும்,
பால் வெண் சங்கும் = சங்கும்,
தாமரைக் கையில் ஏந்தி,
பூவாலேயே ஆடை அணிந்து (பூலங்கி = பூ+அங்கிச் சேவை என்று இன்றும் நடக்கிறது)

நெடியோன் நிற்கிறானாம், எங்கு? = வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் மலையில்! சங்கு-சக்கரம் ஏந்திக் கொண்டு!
ஒரு படத்தையே தமிழ்ச் சொற்களால் வரைந்து காட்டுகிறார் பாருங்கள்!


இன்னொரு இடத்திலும், வேங்கடம் யாருடைய மலை என்று காட்டுகிறார்!
தமிழகத்தின் எல்லைகளை "வடவேங்கடம்-தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்" என்று தொல்காப்பியம் காட்டியது அல்லவா!
அதில் வடவேங்கடம் என்று தான் வருகிறதே தவிர, அந்த வேங்கடத்தில் யார் நிற்பது என்று அதில் சொல்லப்படவில்லை!
அதனால் இளங்கோ தன் கேமராவை இன்னும் Zoom செய்து காட்டுகிறார் போல! :)

புகார்க் காண்டம் - வேனில் காதை
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு (2)

நெடியோன் குன்றம் = நெடியோனாகிய திருமாலின் குன்றம் - திருவேங்கடம்
தொடியோள் பெளவம் = தொடியோளாகிய குமரியின் கடல்
தமிழ் வரம்பு அறுத்த = தமிழ் நாட்டு எல்லையாக வரம்பு செய்து
தண்புனல் நன்னாட்டு = நீர்வளம் கொழிக்கும் நாட்டில்

குமரி ஆறு என்னாது குமரி பெளவம் என்று சொல்வது எதுக்கு-ன்னா, குமரி ஆறு கடல் கோளால் கடலுள் உள் வாங்கி விட்டது!
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
என்று இதே இளங்கோ, சிலம்பில் முன்பு சொல்லி விட்டார் அல்லவா!

இப்படி, இவ்வளவு தெளிவாக, வேங்கட மலையில் நிற்பது யார் என்பதை, ஒரு தமிழ் அறிஞர்...இளங்கோ படம் பிடித்துக் காட்டுகிறார்!

ஆனால் வேண்டுமென்றே கிளப்பி விட்டு, அப்பாவி மக்களைக் குழப்பித் திரியும் சில மதவாதிகள்.....அது முருகனோ, அவனோ, இவனோ...என்று இந்தக் காலத்திலும் குட்டையைக் கலக்கி, மீன் பிடிக்க எண்ணுகின்றனர்!
"வேங்கட சுப்ரமண்யம்" என்றெல்லாம் பேர் வைத்து, தங்கள் குல அபிமானத்தையும், வடமொழி வெறியையும், சமயப் போர்வையும் ஒன்றுமறியாக் குழந்தைகளின் மேல் திணிக்கின்றனர்! :(((

பழுத்த தமிழர் - சமய விருப்பு/வெறுப்பு இல்லாதவர் - இளங்கோ அடிகள் சொல்வதைக் கூடக் காது கொடுத்து கேளாதவர்கள், தமிழைக் கேளாதவர்களே!

சரி, இளங்கோ சொல்வதைத் தான் கேட்கவில்லை! ஆனால் பின்னால் வந்த அரும்பெரும் முருக பக்தர் அருணகிரி சொல்வதைக் கூடவா கேட்க மாட்டார்கள்? இளங்கோவடிகள் காட்டும் அதே காட்சியை - திருமால் திருவேங்கட மலை மேல் நிற்பதை - அருணகிரியும் காட்டுகிறார்! இதோ....

உலகீன்ற பச்சை உமை அண்ணன்
வடவேங்க டத்தில் உறைபவன்
உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே
திரை பாய்ந்த பத்ம தட வயலி-
இல் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சி யத்தில் அமரர்....பெருமாளே!

இலக்கியம், வரலாறுகளைத் தங்கள் "மனம் போன" போக்கில் மட்டுமே கொள்வது, உண்மை அறிந்த பின்னும் பழையதே சாதித்துக் கொண்டுத் திரிவது......இதெல்லாம் தமிழும் அல்ல! முருகும் அல்ல! அவரவர் செய்து கொள்ளும் "சுய இன்பங்களே"!



சிலப்பதிகாரம் காட்டும் மாயோன் பற்றிய இதர பல செய்திகள்:

1. புகார்க் காண்டம் - மாதவி நாட்டியம் - முதல் வணக்கம் யாருக்கு?

இந்திர விழாவின் தொடக்கத்தில், மாதவி நடனம் ஆடுகிறாள்! பதினோரு ஆடல்! அனைத்து ஆடல்களுக்கும் முதன்மையான ஆடல் எது? = காக்கும் கடவுளான மாயோன் ஆடல்! மாயோன் பாணி!

புகார்க் காண்டம் - கடலாடு காதை
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர் (35)
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க

உரை: பதினோரு ஆடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி என்ப. அது,

"மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்;
மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன்;
இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்;
இன நிரைத் தொகைகளை இசைத்தலில் அழைத்தவன்"
எனத் துவங்கும்; எண்சீரான் வந்த கொச்சக ஒருபோகு; பண் - கௌசிகம். தாளம் - இரண்டு ஒத்துடைத் தடாரம்


2. மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவை - பொது மக்கள் ஆடும் திருமால் கூத்து

2005112600220301

இந்தப் பாடல், முத்தமிழில், இசைத் தமிழ்!
பண்ணுடன் பாடவல்ல சிலப்பதிகாரப் பாடல்!

கண்ணகி, மதுரைக்கு வெளியே, ஆயர்ப்பாடியில் இருக்கும் போது....
அவள் தனிமையைத் தணிவிக்க....
மாதரி-ஐயை மற்றும் இதர ஆயர்கள் ஆடும் கூத்து!

மாயோனாகிய பெருமாளை மையப் பொருளாக வைத்து = குரவைக் கூத்து!
பண்டைத் தமிழ் மக்களின் நாட்டிய அமைப்பினை/பண்ணிசையை, சிலப்பதிகாரம் மிகவும் நுணுக்கமாகக் காட்டும் கட்டம் இங்கு தான்!

தமிழ்க் கடவுளும், ஆயர்களின் அன்பனுமான கண்ணன்! அவன் அழகும் பெருமையும் பாட்டில் ஒவ்வொன்றாக வருகிறது! அடியே தோழீ, கண்ணன் நம்ம வீட்டுக்கு வந்தால், அவனைப் பிடிச்சி, அவன் குழல் வாசிக்கும் இனிமையைக் கேட்போமா?- என்று பெண்கள் திட்டம் போடுகிறார்கள்! :)

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த கோதையாகிய ஆண்டாளும் சிலப்பதிகாரம் படிச்சி இருப்பாள் போல! அவளும் அதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறாள் பாருங்கள்! = கன்றுக் குணிலா எறிந்தாய் கழல் போற்றி!!

மதுரைக் காண்டம் - காதை: ஆய்ச்சியர் குரவை
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
(இளங்கோ "குருந்து ஒசித்த மாயவன்" என்கிறார்! கோதையோ, "மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய்ச்சுவையும் நாற்றமும்" என்கிறாள்!)

முன்னிலைப் பரவல்

இது மாயோனுக்கென்றே ஆன மிக அழகான சங்கத் தமிழ்ப் பாடல்! ஆழ்வார் தமிழுக்கும் முந்தைய தமிழ்! ஆலயங்களில் கூடப் சிலம்பைப் பாடலாம்! அவ்வளவு அழகு!

நாராயணா என்னாத நாவென்ன நாவே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?


என்றெல்லாம் இளங்கோ என்னும் தமிழ்க் கொண்டல் பொழிகிறது! இதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா சபை நிகழ்ச்சியில் பாடி, அனைவரையும் கவர்ந்து இழுத்தார்கள்! இதோ ஒலிச்சுட்டி!


madhavipanthal.podbean.com

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிக் 1
கடல்வண்ணன் பண்டொருநாள், கடல்வயிறு கலக்கினையே!
கலக்கிய கை அசோதையார், கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க் கமல உந்தியாய்.....மாயமோ மருட்கைத்தே?

அறுபொருள் இவன் என்றே, அமரர்கணம் தொழுது ஏத்த 2
உறுபசி ஒன்று இன்றியே, உலகடைய உண்டனையே!
உண்டவாய் களவினான், உறிவெண்ணெய் உண்ட வாய்
வண்டுழாய் மாலையாய்.....மாயமோ மருட்கைத்தே?

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே?

பெரிய கயிறாலும் கட்டுப்படாதவன், தாயின் தாம்புக் கயிற்றுக்கு அடங்கினாயே, உலகையே உண்ட வாய், வெண்ணெய்க்கு அலையுமோ? இப்படி இனிய மாயம் செய்யும் மாயோனே....இந்த மாயமெல்லாம் உன் மேல் எங்களுக்கு ஒரு மருட்கை (மயக்கத்தை) உண்டாக்குது!

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் 1
தாவிய சேவடி சேப்பத், தம்பியொடும் கான்போந்து
சேர் அரணும் போர் மடியத், தொல் இலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத....செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத...செவி என்ன செவியே?

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனை - கண்ணும்
திருவடியும், கையும், திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ண கண்ணே?

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?

நாரணம் என்பது தூய தமிழ்ச் சொல்லே!
=நாரம் (நீர்) + அணம் (அருகில்/இடம்) = நீர்மை தங்கும் இடம் = நாரணம்!
இது குறித்த இராம.கி ஐயாவின் பதிவுகளையும் வாசியுங்கள்! சுட்டிகள் மேலே!

இப்படிப் பல அழகான இசைப் பாடல்களோடு, கண்ணன் கூத்து-ஆய்ச்சியர் குரவை முடிகிறது!


3. மதுரைக் காண்டம் - பழமுதிர் சோலை - மதுரைக்குப் போகும் "ரூட்"

மதுரைக்கு எந்த ரூட்டில் போகணும்?
கொடும்பாளூரில் இருந்து இரண்டு வழிகள் பிரியும்! மதுரைக்குச் செல்லும் அந்த இரண்டு வழிகளைச் சொல்கிறார் இளங்கோ! ஒன்று வலப்பக்க வழி! இன்னொன்று இடப்பக்க வழி!
29567009_tirumaliruncholai

அந்த இடப்பக்க வழியில் சென்றால் வருவது, ஆறாவது படை வீடான = பழமுதிர் சோலை! அது என்ன மலையாம்? = திருமால் குன்றமாம்! :) அட, சொல்வது நான் இல்லீங்க! இளங்கோ! :)
சரவணம் என்னும் பொய்கையையும் அங்கே காட்டுகிறார்! மாயோனும் சேயோனும் இணைந்து உறையும் சோலைமலை அல்லவா!

மதுரைக் காண்டம் - காடு காண் காதை
அவ்வழிப் படரீர் ஆயின் இடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண்டு அரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து 90

திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்
பெருமால் கெடுக்கும் பிலம் உண்டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகாரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி 95
...
...
ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது 105
சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்றலை

இளங்கோ, சமண அடிகளாய் இருந்தாலும், காப்பியத்தில் தன் சொந்த விருப்பு-வெறுப்புகளைப் புகுத்தவே மாட்டார்! தமிழைத் தமிழாய்ப் பார்ப்பார்! அதான் அவரு "நெஞ்சை அள்ளும்" இளங்கோ!

இதில் கூடப் பாருங்க.....திருமால் குன்றம்-சரவணப் பொய்கை-ன்னு வழிப்போக்கன் (மறையவன்) சொன்னாலும், கவுந்தி அடிகள் சமணர் அல்லவா? அவர் கூற்றையும் மறைக்காமல் சொல்லுவார்!
"எங்களுக்குச் சரவணப் பொய்கையில் குளிக்கும் வழக்கமெல்லாம் இல்லை மறையவரே, எனினும் நன்றி"-ன்னு கடந்து செல்வதையும் இளங்கோ காட்டுவார்! = பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை-ன்னு ஒரே வரியில் சொல்லி விடுவார் கவுந்தி அடிகள்!

இப்படி,
* திருமால் குன்றம்-சரவணப் பொய்கையின் பெருமையும்,
* அதே சமயம் சமண அடிகளுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்றும்
ஒருங்கே, உள்ளது உள்ளபடிக் காட்ட, இளங்கோவால் மட்டுமே முடியும்! muruga..i like this elango very much da:)


4. புகார்க் காண்டம் /மதுரைக் காண்டம் = திருவரங்கம்

திருவரங்கத்தில் பெருமாள் என்னும் மாயோன், பாம்பணையில் துயில் கொண்டு இருப்பதையும், தன் கேமராவில் படம் பிடிக்கிறார் இளங்கோ!

ஒரு பெரிய நீல மேகம், வெள்ளி மலை உச்சியில் படுத்து இருப்பது போல் இருக்கிறதாம் = கருந் தெய்வமான மாயோன், வெண் பாம்பில் படுத்து இருப்பது!
இப்படிக் காவிரியின் நடுவில், திருவாழ் மார்பன் கிடந்த வண்ணம் என்கிறார்!

மதுரைக் காண்டம் - காடு காண் காதை
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35
பால்விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திரு-அமர் மார்பன் கிடந்த வண்ணமும்




5. வஞ்சிக் காண்டம் - சேடக மாடப் பெருமாள்! (திருவனந்தபுரம்)

வஞ்சிக் காண்டம் முருகப் பெருமானோடு தான் துவங்குகிறது! குன்றக் குரவை! குறவர்கள் ஆடும் கூத்து!
முன்பு ஆயர்கள் ஆடும் கூத்து பார்த்தோம் அல்லவா? அது போல் இது குறவர்கள் ஆடும் குத்து! அது முல்லை, இது குறிஞ்சி! அது பெருமாள், இது முருகன்!

கூத்து நடக்கும் போது, அங்கு வந்த சேரன் செங்குட்டுவனுக்கு, இந்த மலைக் குறவர்கள் தான், கண்ணகி கோவலனோடு வானில் போன நிகழ்வைச் சொல்லுகிறார்கள்! சாத்தனார் முழுக் கண்ணகி கதையினைச் சொல்கிறார்!

அதன் பின்னரே, செங்குட்டுவன், வடபுல மன்னரை வெற்றி கொள்ளச் செல்கிறான்! அப்படியே கண்ணகி சிலை செய்ய, கங்கைக் கரையில் கல் எடுத்து வரவும் திட்டம்!
போருக்குச் செல்லும் முன், வஞ்சிப் பூ சூடி, தெய்வம் பரவி, யானை மேல் ஏறுகிறான்! அப்போது இறைவன் மாலைகளைக் கொணர்வித்துத் தருகிறார்கள்!

வஞ்சி மாலையைப் போட்டுக் கொண்டு யானை ஏறும் முன்னால், சிவப் பிரசாதமாக மாலை தர, அதைச் சென்னியில் சூடிக் கொள்கிறான்!
யானை ஏறிய பின், சேடகமாட ஆலயத்தில் இருந்து, இறைவன் அருட் கொடையாக இன்னொரு மாலை வருகிறது! (சேடகமாடம் = இன்றைய திருவனந்தபுரத்து ஆலயம் என்று கருதுவர்)

அதையும் செங்குட்டுவன் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்! ஏற்கனவே ஈசனின் மலர் சென்னியில் உள்ளதால், தலையில் வைக்க இடமில்லாமல், இந்த மாலையைக் கழுத்தில்/தோள்களில் தாங்கிக் கொள்கிறான்! பின்னர் சேர குலத்தின் மாலையான வஞ்சி மாலையும் அதே தோளில் சூடிக் கொண்டு உலா வருகிறான்!

வஞ்சிக் காண்டம் - கால்கோள் காதை
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க’ என, (61)
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழ

ஈசனின் மாலை ஏற்கனவே தலையில் உள்ளதால், சேடகமாடத்தின் திருமால் மாலையை, "அணி மணி புயங்களில்", "தாங்கிக்" கொள்கிறான், தகைமையோடு!

ஆனால், ஒரு சிலர் மட்டும் இதை "வேறு மாதிரி" செல்லுவார்கள்! :)
செங்குட்டுவன் சைவ மரபினன்! அதனால் ஈசன் மாலையைத் தலையில் வைத்துக் கொண்டான்! ஆனால் பெருமாள் மாலையை, "சரி...ஒழியுது, குடுக்கறாங்களே"-ன்னு அலட்சியமாய் வாங்கி, ஒப்புக்கு "ஒற்றைத் தோளில்" போட்டுக் கொண்டானாம்! :)

பாட்டைக் கொடுத்திருக்கேன்-ல்ல? நீங்களே பாருங்க! எங்கேயாச்சும் "ஒற்றைத் தோள்" இருக்கா? :) "அலட்சியம்" இருக்கா?

அணி மணி புயங்களில், சேரன், சும்மானா போட்டுக் கொள்ள வில்லை! "தாங்கிக்" கொண்டானாம்! ஏன்? இறைவன் அருட்கொடை என்பதால்! = தாங்கினன் ஆகித் தகைமையுடன் செல்வுழ!
அப்பறம் வஞ்சிப்பூ மாலையைக் கூடத் தான் தோள்களில் போட்டு வருகிறான்! உடனே சேர குல அடையாளமான வஞ்சிப் பூ மாலைக்கு அவ்வளவு தான் மரியாதை என்றா சொல்வோம்? :)

தங்களின் "ஏற்றம்" மிகு செயல்களைச் சொல்லலாம்-ல்ல? மாட்டார்கள்! அடுத்தவரை "இறக்கிக்" கொண்டு மட்டுமே இருப்பார்கள்! ஆலயக் கருவறைகளில் தமிழை முன்னிறுத்த மாட்டார்கள்! ஆனால் பெருமாள் கோயில் கருவறையில் தமிழ் ஓதி வழிபடுவதை ஒதுக்கித் தள்ளுவார்கள்! திருமால் தமிழ்க் கடவுள் அல்ல என்று ஒதுக்கித் தள்ளுவார்கள்!

சிறுபான்மைச் சமூகங்கள் தங்களுக்கு அடங்கியே தங்கள் மரபைப் பேண வேண்டும்! நல்லதே செய்தாலும், ஒரு போதும் தங்களை மிஞ்சிடக் கூடாது என்ற "புத்தி"!
தமிழைத் தாங்கள் தான் முன்னிறுத்தவில்லை! அடுத்தவர்களாச்சும் தமிழை முன்னிறுத்துகிறார்களே என்று "ஏற்ற" எண்ணம் வராது! "இறக்க" எண்ணமே வரும்! :(

சிலப்பதிகார வரிகளை, பொதுமக்கள் யார் போய்ப் படிக்கப் போகிறார்கள் என்ற துணிவில், சும்மானா அடித்து விடுவது! - "சேரன் செங்குட்டுவன் ஒற்றைத் தோளில் அலட்சியமாக திருமால் மாலையை வாங்கிக்கிட்டான்" என்று! :) அடக் கொடுமையே!
தமிழைப் படிக்கும் போதாவது, சமயத்தைத் தாண்டி, தமிழைத் தமிழுக்காகவே படித்தால், தமிழ் தழைக்கும்!



6. புகார்க் காண்டம்: கோவலன்-கண்ணகி ஊரை விட்டுக் கிளம்பும் முன், திருமால் கோயிலுக்குப் போதல்!


கோவலன்-கண்ணகி ஒன்று சேர்ந்த பின்னர், பொருள் ஈட்டும் பொருட்டு, சுற்றம் அறியாது தன்மானத்துடன், மதுரைக்குச் செல்ல முடிவெடுக்கிறான்!

சொந்த ஊரை விட்டு மதுரைக்குக் கிளம்பும் முன், கோவலன்-கண்ணகி, முதலில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, பின்னரே கிளம்புகிறார்கள்!
அதன் பின்னர் இந்திர கோட்டமான புத்த விகாரத்தையும், சமணப் பள்ளியான திலாதலத்தையும் வணங்கிச் செல்கிறார்கள்!

புகார்க் காண்டம் - நாடு காண் காதை
வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப (4),
...
...
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-
அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து
(10)

அரவத்தின் மேல் அறி துயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டத்தை (கோயிலை) வலம் செய்து, சென்றார்கள்!

பெருமாள் கோயிலை மட்டுமா வலம் செய்தார்கள்? இல்லை!
அடுத்து பெளத்த விகாரத்தையும், அதற்கு அடுத்து சமணப் பள்ளியாகிய சிலாதலத்தையும் வணங்கி...
பின்னர் காவிரிக் கடைமுகம் தாண்டி, வடக்காகப் பயணம் துவங்கினார்கள்! கவுந்தி அடிகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்!

அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து 15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி

இதில் இருந்தே கோவலன்-கண்ணகியின் சமயப் பொறைமையும், கண்ணகியின் மாசில்லாத அன்பும் தெரிகிறது அல்லவா? காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் "யாவினும்" கைக்கொடுத்து...யம்மாடி கண்ணகி, நீ நல்லா இருக்கணும்! உன் உள்ளம் வாழி வாழி!!

மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்!!!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

28 comments:

  1. திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!
    கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
    நாராயணா என்னா நாவென்ன நாவே!

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இரவி! :-)

    ReplyDelete
  2. "வடவரையை மத்தாக்கி"...எம்.எஸ் அம்மா குரலில் இந்தப் பாடலை கேசட் தேயும் வரை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. //Radha said...
    "வடவரையை மத்தாக்கி"...எம்.எஸ் அம்மா குரலில் இந்தப் பாடலை கேசட் தேயும் வரை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன்//

    எம்.எஸ் அம்மா பிரபலப்படுத்திய அழகான சிலப்பதிகார வரிகள் இவை ராதா! சிலப்பதிகார நடனம் பற்றி அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றும் பார்த்தேன்! நன்றாக முயற்சி செய்திருந்தார்கள்! ஆனால் இன்னமும் சிலம்பில் இருந்து நிறைய எடுக்க வேண்டி இருக்கு!

    ReplyDelete
  4. // குமரன் (Kumaran) said...

    திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!
    கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
    நாராயணா என்னா நாவென்ன நாவே!

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இரவி! :-)//

    :)
    எதுக்கு "மிகவும்" பிடிக்கும் குமரன்? அதைச் சொல்லுங்க!

    கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? - இது ராகவனுக்கு ரொம்ப பிடித்தமான வரிகள்! :)

    ReplyDelete
  5. பின்வரும் தகவல்களை தங்களை போன்ற தூய முருகன் அடியார்கள் புரிந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் :

    வேங்கடசுப்பிரமணியன்

    “பண்டு தான்வரு வேங்கடகிரியையும் பார்த்தான்!” என்று கச்சியப்பர் கூறுகிறார். அதாவது, முற்காலத்தில் தான் வந்த திருவேங்கட மலையையும் கண்டான் என்று உரைக்கிறார்.

    "அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
    தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
    மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
    பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்"
    முருகனும் உமையம்மையும் ஒரு முறை, ‘கண்ணாமூச்சி’ விளையாடினர். முருகன் ஓடி ஒளிந்தான். அவனை எங்கும் காணாமல், தேடி வந்தாள் உமை. ஓர் இடத்தில் முருகனின் சிரிப்பொலி கேட்டது! கண்ணைத் திறந்து பார்த்தாள் அம்பிகை! அங்கு ஒரு மலையின் மீது முருகன் நின்று கொண்டிருந்தான்! அந்த மலைதான் வேங்கடம் என்பர். முருகனுக்கு, ‘வேங்கட சுப்பிரமணியன்’ என்ற பெயரும் தோன்றியது. வேங்கடமலையில் குமாரதாரை என்ற அருவியும், சுவாமி புஷ்கரணி என்ற பொய்கையும் முருகனின் பெயரில் தோன்றின. ‘சுவாமி’ என்றால், ‘கஜகானுஜன் (யானை முகத்தோனின் தம்பி) என்று அமரம் குறிப்பிடுகிறது, ‘பாலாஜி’ என்ற பெயரும் குழந்தைத் தெய்வமாகிய முருகனைக் குறிக்கும் சொல்லாகும்.

    “நாகாசல வேலவா!” என்று அருணகிரிநாதர் தமது கந்தர் அநுபூதியில் உரைக்கிறார். நாகாசலம் என்பது வேங்கடமலையின் பெயர்களுள் ஒன்று.

    “சுப்ரம்மண்யேன ரக்ஷிதோஹம்” என்று தொடங்கும் கிருதியில், முருகன் வேங்கடேசுவரன் என்ற பெயரும் உள்ளவன் என்ற பொருளில், “வேங்கடேஸ்வர நாம ரூபேண”என்று பாடுகிறார், சங்கீதமூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் அவர்கள்.

    அருணகிரிநாதர் அவர்கள் திருப்புகழ் பாடல் 524-529 வரை "வடவேங்கடம் வாழ் பெருமாளே" என்கிறார்!!!

    லிங்க்:http://www.kaumaram.com/thiru/nt0524.html

    மேலும்,திருமலை கோயில் வரலாற்றின்படி பிருகு முனிவர் கலியுக தொடக்கத்தில்தான் முக்கண் முதல்வனை "உருவ வழிபாடு" இல்லாது போகுமாறு சபிக்கிறார்.ஆனால் அதற்கு முன்பே ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்கிறார்.அது எப்படி?

    பெருமாள் பூமிக்கு வருவதை அவதாரம் என்கிறோம்.ஆனால் திருப்பதி ஸ்ரீனிவாசன் தசாவதாரங்களுக்குள் இல்லையே?

    பத்மாவதி தாயார் எனப்படும் இராமாயண வேதவதி (முற்பிறவி)பற்றி வால்மீகி இராமாயணத்தில் ஒரு தகவலும் இல்லையே? கோவிலை கைப்பற்றிய பின் சேர்க்கப்பட்ட கதையோ?

    ஒருவேளை கச்ச்சியப்பரும் ,அருணகிரியாரும் பொய் உரைக்கிரார்களோ?

    கோபப்படாமல் நிதானமாக பதில் உரைக்கவும் :)

    அன்புடன்,
    முருகபக்தன்.

    ReplyDelete
  6. அன்புள்ள முருக பக்தரே, வணக்கம்!
    நல்ல கேள்விகள்; முன்பே சிலவற்றுக்குப் பதில் சொல்லியுள்ளேன்; உங்கள் அத்தனை கேள்விக்கும் பதில் சொல்கிறேன், "கோபப்படாமல்" :))

    ஆனால் ஒரு உதவி நீங்கள் செய்ய வேணும்! தங்கள் profile, murugan.org என்று காட்டுகிறது; நீங்கள் அத்தளக் குழுவினரா? தங்கள் பெயர் சொல்லி உரையாட வேணுமாய் முருகன் பேரால் கேட்டுக் கொள்கிறேன்!

    Sent from my iPhone

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. //தங்கள் பெயர் சொல்லி உரையாட வேணுமாய் முருகன் பேரால் கேட்டுக் கொள்கிறேன்!//

    பெயருக்கு ஏற்றவாறு பதில் மாறுபடுமா?

    சரி,என் பெயர் ஜெய்கணேஷ் !!! சிங்கார(?!?!) சென்னையிலிருந்து!!! நான் murugan.org இன் உறுப்பினர் இல்லை.

    ReplyDelete
  9. //சரி,என் பெயர் ஜெய்கணேஷ் !!! சிங்கார(?!?!) சென்னையிலிருந்து!!! நான் murugan.org இன் உறுப்பினர் இல்லை//

    நன்றி ஜெய்கணேஷ்! பெயருக்கு ஏற்றவாறு பதில் மாறாது! அதுவே என் காதல் முருகன் காட்டிய வழி!

    Murugan.org என்று உங்களுக்கு நீங்களே முகவரி கொடுத்துக் கொள்ளும் போது, அருமையான தளமான அவர்கள் தான் இப்படி இங்கே உரையாடுகிறார்கள் என்று தோற்றம் வந்து விடக் கூடாதல்லவா! அதான் கேட்டேன்! புரிதலுக்கு நன்றி! :)

    ReplyDelete
  10. விளக்கங்களுக்கு முன்னால் ஒரு வார்த்தை:

    தமிழ்த் திறனாய்வு - Logical Reasoning என்று வரும் போது, அவரவர் தமக்குப் பிடித்திருக்கே என்னும் நிலைப் பாடுகளையும் தாண்டித், தமிழைத் தமிழாகவே அணுகினால், தமிழ் தழைக்கும்!

    முருகன் பால் மாறாத காதலும், முருகனருள் வலைப்பூவில் தொடர்ந்து பாடல்கள் இடும் நான், திறனாய்வு என்று வரும் போது, சொந்த நிலைப்பாடுகளைத் தள்ளித் தான் வருகின்றேன், வருவேன்!

    எப்பொருள் "எத்தன்மைத்" தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு!
    -------------------

    இப்போது விளக்கங்கள்....

    வேங்கட சுப்பிரமணியம்:
    கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் மிகவும் பின்னாளையது! பண்பாட்டுக் கலப்புக்குப் பின்னால் எழுதப்பட்டது! "சுப்ரமணியம்" என்ற பேரே காட்டி விடுகிறதே! :) எப்படியும் இவர் சங்க காலம் அல்ல! கோவைக்கு அருகில் உள்ள பேரூர் புராணம் எழுதியதும் இவரே!

    இளங்கோவடிகள் கி.பி. 200! அவர் ஏன் வேங்கட மலையில் நிற்பவனைச் சங்கு சக்கரங்களோடு, திருமால் என்று காட்ட வேணும்? அதற்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! :)

    ReplyDelete
  11. //முருகனும் உமையம்மையும் ஒரு முறை, ‘கண்ணாமூச்சி’ விளையாடினர்//
    :)

    //அந்த மலைதான் வேங்கடம் என்பர். முருகனுக்கு, ‘வேங்கட சுப்பிரமணியன்’ என்ற பெயரும் தோன்றியது//
    :)
    உம்...அப்புறம்? :) இந்தக் "கண்ணாமூச்சி விளையாட்டுக்கான" தரவுகள் இருக்க வேண்டுமே! நக்கீரர் முதலான பல கவிஞர்களும் சொன்னா மாதிரி தெரியலையே! வெறுமனே சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் மட்டும் தான் தரவா?

    //சுவாமி புஷ்கரணி என்ற பொய்கையும் முருகனின் பெயரில் தோன்றின. ‘சுவாமி’ என்றால், ‘கஜகானுஜன் (யானை முகத்தோனின் தம்பி) என்று அமரம் குறிப்பிடுகிறது//

    அது பேரு அமரகோசம்-ங்க! அமர சிம்மன் வடமொழியில் எழுதியது! நீங்க சொல்வது போல் "அமரம்" இல்லை :)
    அமர கோசம் ஒரு வடமொழி இலக்கண அகராதி போல! சுவாமி=சுப்ரமணிய சுவாமியைக் காட்டுகிறது! = தேவஸேனாபதி; சூர ஸ்வாமி கஜமுகாநுஜ

    அதனால் எல்லா சுவாமியும் சுப்ரமணியம் என்றே ஆகி விடுமா? மல்லிகார்ஜூன சுவாமி, நரசிம்ம சுவாமி இவங்க எல்லாம் சுப்ரமணியரா? :)

    அதே அமரகோசம் லோகமாதா என்று இலக்குமியைக் குறிக்கிறது! = லோகமாதா மா க்ஷிரோத தனயா, ரமா பார்கவீ லோகஜனனீ லக்ஷ்மீ:
    உடனே உமையன்னை லோகமாதா இல்லை-ன்னு சொல்லிடுவீங்களா? :)

    //‘பாலாஜி’ என்ற பெயரும் குழந்தைத் தெய்வமாகிய முருகனைக் குறிக்கும் சொல்லாகும்//
    :)
    பாலாஜி என்பது பாவாஜி என்ற இந்தி மொழிப் பக்தர் (ஹதிராம்ஜீ பாவா)பின்னாளில் செல்லமாய் அழைத்தது! ஹதிராம்ஜி மட் என்று இன்றும் திருமலை மேல் இருக்கு! அவர் பெருமாளைத் தான் அப்படி அழைச்சாரு-ன்னு அவங்களே சொல்லுறாங்க! அப்பறம் எப்படி அவங்க "பாலாஜியை" நீங்க எடுத்துக்கிட்டு, "குமரன் ஜி", "முருகன் ஜி" என்று பேசுவது? :)))
    http://www.thehindu.com/arts/books/article840610.ece

    ReplyDelete
  12. இளங்கோவடிகள் சமணர்!!! அதனால் அவர் அவ்வாறு எழுதி இருக்கலாம்!!!அல்லது அங்கு இருக்கும் ஆதிவராஹ சுவாமியை பற்றி இருக்கலாம்!!! இதில் இவர்தான் ஸ்ரீனிவாசனுக்கு மலையில் தங்க அனுமதி கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
    (பெருமாளே,பெருமாளுக்கு அனுமதி கொடுத்தாரா?!?!) சைவ-வைணவ சண்டையில் குளிர்காய நினைத்து இருக்கலாம் !!!அவர் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று எப்படி எண்ணுவார்?
    சமணம் உண்மையை சொல்கிறது என்றால் ஏன் அப்பரும்,சம்பந்தரும் அதை
    தென்னாட்டை விட்டே விரட்ட வேண்டும்?
    சம்பந்தர் ஆகிய முருகப்பெருமான் கழுவேற்றிய சமணத்தை பின்பற்றியவரை நம்புவீர்கள் ஆனால் "திகட சக்கர" என்று ஆறுமுக வள்ளல் கொடுத்த கந்த புராணத்தை "பிற்காலம்" என்று கூறி மறுக்கிறீர்கள் !!!

    கண்ணகிக்கு சிலை வைத்து விட்டால் சிலப்பதிகார கதை உண்மையாகி விடுமா?
    மதுரை சுடுகாடாகத்தான் இருக்க வேண்டும்!!! மீனாட்சி அம்மன் கோவில் தீக்கிரையாகி இருக்க வேண்டும்!!! ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக கோவில் வரலாற்றில் இல்லை!!!

    சிவபக்தரான திருமூலரின் திருமந்திரம்:
    வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
    வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
    வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
    தாங்கவல் லாருயிர் தாமறி யாரே

    முருகன் கோவிலில் வழக்கம் போல சிவன் சந்நிதியும் இருந்திருக்கும்!!!அதை பற்றி திருமூலர் பாடி இருக்கிறார்.வேங்கட நாதன் சிவன் என்கிறார்.


    கிருபானந்த வாரியாரும்,பாம்பன் சுவாமிகளும்,காஞ்சி மஹா சுவாமிகளும் கந்த புராணத்தை பொய் என்று மறுக்கவில்லையே? சதி? முருகன் அவதாரம் அவர்களை விட யாருக்கு நன்றாக தெரிந்து இருக்க முடியும்?

    //பண்பாட்டுக் கலப்புக்குப் பின்னால் எழுதப்பட்டது! "சுப்ரமணியம்" என்ற பேரே காட்டி விடுகிறதே! :)//
    நீங்களும் ஆரியன்,திராவிடன் என்ற அர்த்தமற்ற மோதலை ஆதரிக்காதீர்கள்.
    அந்தணர் குல திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார் சங்கரர்.

    என்னுடைய கேள்வி இதுதான்:

    "பிற்காலத்தை" சேர்ந்த கச்சியப்பரும் ,அருணகிரியாரும் முருகன் அருள் பெற்றவர்கள் என்று பொய் உரைக்கிரார்களோ? தங்கள் எழுத்து மூலம் பெருமாள் கோவிலை முருகன் கொவிலாக்க முற்பட்டார்களோ? :|

    ஜெய்கணேஷ்

    ReplyDelete
  13. @ஜெய்கணேஷ்
    //என்னுடைய கேள்வி இதுதான்:
    பிற்காலத்தை" சேர்ந்த கச்சியப்பரும் ,அருணகிரியாரும் முருகன் அருள் பெற்றவர்கள் என்று பொய் உரைக்கிரார்களோ?//

    :)
    அப்படீன்னா, இளங்கோ அடிகள் "பொய்" உரைக்கிறாரா?-ன்னு நான் கேட்டா என்ன சொல்வீங்க? சொல்லுங்க பார்ப்போம்!

    கச்சியப்ப சிவாச்சாரியாருக்காவது தன் கட்சியை நிலைநாட்ட ஒரு முகாந்தரம் இருக்கு! ஆனால் இளங்கோவுக்கு அது கூட இல்லையே!
    இளங்கோ பாடாத "சீர்கெழு செந்திலா"? அவர் முருகனையும், திருமாலையும், சமண அருகனையும், அனைத்தையும் போற்றிப் பாடுகிறார்! அவருக்குக் கட்சி நிலைநாட்ட இங்கு முகாந்திரமே இல்லை! இதற்கு என்ன சொல்வீர்கள்?

    அப்படின்னா அருணகிரி "பொய்" உரைக்கிறாரா என்றால்....

    இல்லை!
    தற்கொலைக்கே துணிந்த பேதை நெஞ்சம் அருணகிரிக்கு "பொய்" உரைக்கத் தெரியாது! என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் "பொய்" உரைப்பது! சிவ பெருமானை எண்ணாது, சமய நிறுவனப்படுத்தல் என்பதிலேயே திளைக்கும் சில மக்கள் தான் "பொய்" உரைப்பது! மேலும் சொல்கிறேன்....

    ReplyDelete
  14. உ.வே.சா., "பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கிறேன். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும், குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது
    என்கிறார். (சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், பக்.14)

    மேலும், அவர் "அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது

    என்று கூறுவதால், வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.


    இப்போ இவரும் டுபாக்கூரா?:)

    ReplyDelete
  15. //அப்படீன்னா, இளங்கோ அடிகள் "பொய்" உரைக்கிறாரா?-ன்னு நான் கேட்டா என்ன சொல்வீங்க? சொல்லுங்க பார்ப்போம்!//


    ஆம்,பொய்தான் சொல்கிறார்.......
    முருகனை போற்றும் நெஞ்சு ஏன் சமணத்தை தேடி தழுவ வேண்டும்? அநாதியான வேத மதத்தில் இருந்து தானே சமணத்திற்கு மாறி இருக்கிறார்?
    ஒருவேளை முருகன் அவ்வளவு கொடியவனோ? தன்னை போற்றுபவர்களை காக்க மறந்து விட்டானோ? முருகா!!!!:|

    ReplyDelete
  16. //“நாகாசல வேலவா!” என்று அருணகிரிநாதர் தமது கந்தர் அநுபூதியில் உரைக்கிறார். நாகாசலம் என்பது வேங்கடமலையின் பெயர்களுள் ஒன்று//

    நாகாசலம்-ன்னு பல மலைகளைச் சொல்வதுண்டே! திருச்செங்கோடு கூட நாகாசலம் தான்! :)
    http://www.kaumaram.com/thiru_uni/tpun0554.html

    அருணகிரியார் "பொய்" உரைக்கிறாரோ?
    இல்லை! என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் "பொய்" உரைப்பது!

    திருச்சிராப்பள்ளித் தலத்தில், தாயுமானவ சுவாமி கோயிலில் இருக்கும் முருகன் சன்னிதியை மட்டுமே அருணகிரி அப்படிப் பாடுகிறார்! உடனே, உச்சிப்பிள்ளையார் கோயில், முருகன் கோயில் தான், அருணகிரியே பாடிட்டாரு-ன்னு கிளம்புங்களேன் பார்ப்போம்! :)

    அதே போல் தான் திருவேங்கடமும்! வேங்கடமலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் உள்ள முருகனைப் பாடும் போது, அவ்வாறு பாடுகிறார்! அதுக்கு இம்புட்டு கூத்து! :)

    நாகாசலம், கழுகாசலம் என்பது பல ஆலயத்து மலைகளுக்கு இருக்கும் பெயர் தான்! குற்றாலம் பக்கம் திருமலை என்ற குமாரசுவாமி கோயிலே உண்டு! அருணகிரி அந்தத் திருமலையைப் பாடினா, ஒடனே திருவேங்கடம் ஹைய்யா-ன்னு குதிப்பீங்க! :) நல்ல வேளை அதே பாடலில் பக்கத்தில் பாயும் ஆற்றின் பேரைச் சொன்னார் அருணகிரி! அதைக் கூடப் படிக்காம, "திருவேங்கடம், திருவேங்கடம்"-ன்னே கண்ணு அலைஞ்சா, இப்படித் தான் ஆகும்! :)))

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. //இல்லை! என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் "பொய்" உரைப்பது! //

    காலம் பதில் சொல்லும்!!!

    ReplyDelete
  19. இறுதியாக, நீங்கள் அடுக்கிய பிழையான தகவல்களுக்கு எல்லாம் தரவுகள் இதோ:

    //மேலும், திருமலை கோயில் வரலாற்றின்படி பிருகு முனிவர் கலியுக தொடக்கத்தில்தான் முக்கண் முதல்வனை "உருவ வழிபாடு" இல்லாது போகுமாறு சபிக்கிறார்.ஆனால் அதற்கு முன்பே ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்கிறார்.அது எப்படி?//

    அடங் கொப்புரானே! சிவபெருமான்-பிருகு முனிவர் episode லிங்க புராணத்திலேயே வருகிறதே! :)
    மேலும் அது "கலியுக ஆரம்பம்"-ன்னு எங்கே சொல்லி இருக்கு திருமலைக் கோயில் வரலாற்றில்? உங்க வசதிக்கு கப்சா அடிக்கறதுக்கு அளவே இல்லீயா? :)
    http://www.tirumala.org/opage2.html

    //பெருமாள் பூமிக்கு வருவதை அவதாரம் என்கிறோம்.ஆனால் திருப்பதி ஸ்ரீனிவாசன் தசாவதாரங்களுக்குள் இல்லையே?//

    மோகினி, ஹயக்ரீவர், தத்தாத்ரேயர் - இவிங்க எல்லாம் கூடத் தான் தசாவதாரத்தில் இல்லை! உடனே இறங்கி வரலை-ன்னு சொல்லிடுவீங்களோ, ஒங்க ஓட்டை லாஜிக்கை வச்சி? :) தசாவதாரங்கள் = பூர்ணாவதாரம்! அப்படி இல்லாமல் 24 லீலாவதாரங்கள்-ன்னா என்ன-ன்னு படிச்சிப் பாத்துட்டு, அப்பாலிக்கா வந்து பேசுங்க! அருணகிரியார் இது போன்ற அவதாரங்களையும் குறிக்கிறார்! சொல்லட்டுமா? :)

    //பத்மாவதி தாயார் எனப்படும் இராமாயண வேதவதி (முற்பிறவி)பற்றி வால்மீகி இராமாயணத்தில் ஒரு தகவலும் இல்லையே? கோவிலை கைப்பற்றிய பின் சேர்க்கப்பட்ட கதையோ?//

    :)
    தல புராணங்கள் பெரும்பாலும் கதைகள் தான்! அதை ஒப்புக் கொள்ளும் அற நேர்மை என்னிடம் உள்ளது? உங்களிடம்? :)
    உங்க லாஜிக் படியே பார்த்தா, இராமன் சிவபெருமானை இராமேஸ்வரத்தில் வணங்கியதாக வால்மீகி சொல்லவில்லை! உடனே இராமேஸ்வரம் சிவபெருமான் கோயிலை "பொய்"-ன்னு இடிச்சிருவீங்களோ? :) அடக் கொடுமையே!

    ReplyDelete
  20. //"அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார்//

    உண்மை தானே! கீழே அழகர் கோயில், மேலே பழமுதிர் சோலை! இதுல கூட உங்க ஆட்டமா? :)

    //அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது//

    ஹிஹி! "சில", "பழைய" நூலா? நூல் வுடற நூலா? என்னன்ன "நூல்"-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :))

    //வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
    இப்போ இவரும் டுபாக்கூரா?:)//

    அடேங்கப்பா! என்ன மாதிரி திரிக்கிறீங்க?

    பனம்பாரனார் டுபாக்கூர் இல்ல! இது போல மக்கள் தான் டுபாக்கூர்!
    பனம்பாரனார் வேங்கடத்தை வடக்கெல்லையாத் தான் காட்டுறாரு! அவருக்கும் முன்னாடி தொல்காப்பியரே காட்டுறாரு! ஆனா பனம்பாரனார், வேங்கடத்தில் முருகன்-ன்னு சொல்லவே இல்லையே! எல்லையை மட்டும் தானே சொல்றாரு! அப்பறம் எப்படி பாவம் அவரை வம்புக்கு இழுத்தீங்க? :))

    ReplyDelete
  21. //ஆம், இளங்கோ பொய்தான் சொல்கிறார்.......
    முருகனை போற்றும் நெஞ்சு ஏன் சமணத்தை தேடி தழுவ வேண்டும்?//

    நீங்க பேசலை! அந்த "வெறி" பேசுகிறது:(

    சமணம்-ன்னா அவ்ளோ மட்டமாப் போயிருச்சா ஒங்களுக்கு எல்லாம்? சமயப் பொறை கூடவா இல்லை?
    களப்பிரர் காலம், "இருண்ட காலம்"-ன்னு பொய்யா எழுதி வச்சவங்க தானே, பெரும்பான்மைத்தனம் தந்த அதிகாரத்தால்?


    சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட, இது போன்ற உங்கள் "வெறித்தனங்களை" சுட்டிக் காட்டியுள்ளார்கள்!
    http://www.jeyamohan.in/?p=4032

    கருத்துக்கு, பதில் கருத்து வைக்கத் தெரியாது, பதில் தரவும் சொல்லத் தெரியாது, தனிப்பட்ட முறையில், "மீசை-மண் ஒட்டலை" என்ற உங்கள் பின்னூட்டத்தை அழித்து விட்டேன்!

    எங்கேயாவது, அருணகிரி பற்றியோ, கச்சியப்பர் பற்றியோ தனிப்பட்ட அளவில் தவறாக என்னால் பேச முடிந்ததா? ஆனால் இளங்கோவைப் "பொய்யர்" என்று நாக் கூசாமல் சொல்கிறீர்கள்! சமணத்தை இழிக்கிறீர்கள்! முருகா! இது தான் உன்னை விடுத்து, மதத்தை மட்டும் பிடித்துக் கொள்ளும் வெறிஞர் வழியோ?:((

    பானுகுமார் போன்ற சமண வல்லுநர்களையும் நான் பதிவுக்கு அழைத்தால், காணாமல் போய் விடுவீர்கள்! எச்சரிக்கை! கருத்தை ஒட்டி மட்டுமே பேசவும்! சமய வெறியை அல்ல!

    ReplyDelete
  22. //சைவ-வைணவ சண்டையில் குளிர்காய நினைத்து இருக்கலாம் !!!அவர் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று எப்படி எண்ணுவார்?//

    இளங்கோ எதுக்கு அப்படி "உங்க நீதி உலகெலாம் விளங்க" எண்ண வேணும்? வேற வேலை இல்லை அவருக்கு?

    ஆலமர் செல்வனான சிவபெருமானையும், குன்றக் குரவையில் முருகனையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் செழுந்தமிழில் எழுதிய உள்ளம், இளங்கோவின் உள்ளம்! "குளிர் காயும்" உள்ளம் அல்ல அவர் உள்ளம்! இப்படியெல்லாம் பேச/ஏச உங்களால் மட்டுமே முடியும்!

    சிவனை மறந்து, நிறுவன சமயமே பெருசு-ன்னு தானே இறைவன் ஆடும் அம்பலத்தில் எண்ணெயை ஊத்தினீங்க? இப்படிப் பேசுவதில் வியப்பில்லை தான்!

    //சமணம் உண்மையை சொல்கிறது என்றால் ஏன் அப்பரும்,சம்பந்தரும் அதை
    தென்னாட்டை விட்டே விரட்ட வேண்டும்?//

    யாரும் யாரையும் விரட்டிட முடியாது! தமிழும் நாடும் உங்க பாட்டன் சொத்தல்ல!

    அப்பர் சுவாமிகள் பற்றி மட்டும் இப்போது சொல்கிறேன்! அவர் சமண வெறுப்பாளர் அல்லர்! சமண சமயம் வேறு, ஒரு சில சமணர்கள் அப்பருக்கு இழைத்தது வேறு! ஆனால் அப்பர் சுவாமிகள் தன் தொண்டோடு நின்று விட்டார்! சமண வெறுப்பு பிடித்து அவர் அலையவில்லை! அவர் வெறியாளர் அல்ல! நெறியாளர்!

    ReplyDelete
  23. //சிவபக்தரான திருமூலரின் திருமந்திரம்:

    வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
    வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
    வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
    தாங்கவல் லாருயிர் தாமறி யாரே//

    இதுக்கு வெளக்கம் என்னா-ன்னு பத்தாம் திருமுறையில் போய் படிச்சிட்டு வாங்கய்யா! "வேங்கடம்"-ன்னு ஒரு சொல்லைப் பாத்துறக் கூடாதே! ஒடனே வேங்கட மலை-ன்னு தைய்யா தக்கா-ன்னு பொருள் தெரியாமலேயே குதிக்க வேண்டியது! :)

    வேங்+கடம் = வெம்மை+கடன் (கடன்பட்ட உடம்பு)
    வேம் கடம் என்று - வெந்தொழியும் உடம்பு என்று அறிந்து.
    விரகு - உபாயம்; உபாயத்தால், என உருபு விரிக்க. `தாங்க வல்லதாகிய ஆருயிர்` என்க.

    இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.

    போதுமா? நான் எழுதுன வெளக்கம் இல்லை! திருமுறை விளக்கம் தான்!

    ReplyDelete
  24. //காலம் பதில் சொல்லும்!!!//

    ஹா ஹா ஹா
    ஆக மொத்தம் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க! தெரிஞ்சாத் தானே சொல்லுறத்துக்கு? :)

    வெறியும் அறியுமோ நெறி?
    முருகா, எங்கிருந்து இவர்களுக்கு இத்துணை சமணக் காழ்ப்போ? :((

    ReplyDelete
  25. //ஒருவேளை முருகன் அவ்வளவு கொடியவனோ?//

    இன்னொருகா, முருகனை இப்படிப் பேசினீர்கள் என்றால் உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்துவேன்!

    //ஆம்,பொய்தான் சொல்கிறார்.......//

    இளங்கோ "பொய்யர்" அல்லர்!
    அருணகிரி "பொய்யர்" அல்லர்!
    அருணகிரியைத் தம் மனப் போக்குக்குத் திரிக்கும் வெறிஞரே பொய்யர்!

    அருணகிரி திரிச்சிராப்பள்ளி மலை மேல் முருகன்-ன்னு பாடுவதை எடுத்துக் காட்டியாகி விட்டது! அதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம், தில் இருந்தா?

    //முருகனை போற்றும் நெஞ்சு ஏன் சமணத்தை தேடி தழுவ வேண்டும்//

    என் காதல் முருகனைப் போற்றும் என் மடநெஞ்சு!
    அது சமணைத்தை வெறுக்கவும் வெறுக்காது!
    முருகனை விடுத்து மதத்தில் முழிக்கவும் முழிக்காது!

    ReplyDelete
  26. @ஜெய்கணேஷ், @சிவோஹம்
    இனி சான்று காட்டிப் பதில் சொல்லும் உங்கள் பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிப்பேன்! பிறவற்றை அல்ல!

    ReplyDelete
  27. @சிவோஹம்
    இதையும் படிச்சிப் பாருங்க, என்னைப் பத்தி ரொம்ப பேசுவதற்கு முன்னாடி!
    விவாகரத்து செய்து வைப்பாரா சிதம்பரம் சிவபெருமான்?
    அப்படியே பந்தலில் இதர நாயன்மார் திருக்கதைகளையும்...

    ஆனா, உங்களுக்கு அடங்கி, மாலவனை, ஈசனுக்கு அப்பறமா வச்சி, பக்குவமா "அடக்கி வாசிக்கணும்"-ன்னு எல்லாம் எதிர்பாக்காதீங்க! :)

    நான் பாட்டுக்கு பல நாட்கள் பதிவுகள் பக்கமே வராம, சிவனே-ன்னு இருந்தேன்! இழுத்துக்கிட்டு வந்துட்டீக! :)

    முத்தாய்ப்பாக...
    அருணகிரியார் என்றுமே "பொய்" உரைப்பதில்லை! என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் "பொய்" உரைப்பது!

    மேலும் அந்தத் திருப்புகழில் எல்லாம் "வடமலை நின்ற பெருமாளே"-ன்னு தான் பாடுறாரு? "வடமலை"-ன்னா அது வேங்கடம் தானா? ஸ்ரீசைலத்தைக் கூடத் "திருமலை"-ன்னு சொல்றாரே, அதுக்கு என்ன பண்ணப் போறீங்க? :)

    http://www.kaumaram.com/thiru_uni/tpun0554.html
    திருச்சிராப்பள்ளி மலையுறை முருகா-ன்னு பாடுறாரே! திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் தானே? :) அருணகிரிப் பெருமான் "பொய்" சொல்றாரா? :)

    திருச்சிராப்பள்ளித் தலத்தில், தாயுமானவ சுவாமி கோயிலில் இருக்கும் முருகன் சன்னிதியை மட்டுமே அருணகிரி அப்படிப் பாடுகிறார்! உடனே, உச்சிப் பிள்ளையார் கோயில், இனி முருகன் கோயில் தான், அருணகிரியே பாடிட்டாரு-ன்னு கிளம்புவீங்களா? :)

    அதே போல் தான் திருவேங்கடமும்!
    வேங்கடமலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் உள்ள முருகனைப் பாடும் போது, அவ்வாறு பாடுகிறார்! அதுக்கு இம்புட்டு கூத்து! :)

    உலகீன்ற பச்சை உமை அண்ணன்
    வடவேங்க டத்தில் உறைபவன்
    உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே

    -ன்னும் அதே அருணகிரியார் பாடும் போது என்ன சொல்வீங்க? அருணகிரியார் டபுள் கேம் ஆடுறாரு-ன்னா சொல்வீங்க? :( முருகா! இனி அவரவர் சொந்த Id-இல் வாங்க! Murugan.org என்னும் நல்ல தளத்தை அல்லவா தப்பாக எண்ணி இருப்பார்கள் வாசகர்கள்? முருகா...குறியைக் குறியாது...கரவாகிய கல்வியுளார் கடை சென்று, இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?

    ReplyDelete
  28. வீங்குநீர் அருவி வேங்கடம்!
    https://www.youtube.com/watch?v=PdglOcZneUU

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP