Sunday, June 20, 2010

நரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் ?


அரங்கன் தானே தன் அவயங்கள் எல்லாவற்றையும் காட்ட, ஒரு முனிவரின் மீது அமர்ந்து, அவன் திருமுடி முதல் திருவடி வரை அமலனாதிபிரான் எனும் 10 பாசுரங்கள் கொண்ட திருமொழி மூலம் அனுபவித்து, தன் கண்கள் மற்ற எதையும் பார்க்கக் கூடாது என்று அரங்கனிடமே சேர்ந்தவர் திருப்பாணாழ்வார்.

அமலனாதிபிரான், பிரணவ சாரம் என்பர் பெரியோர்!

அ - உ - ம

முதல் மூன்று பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் பிரணவத்தையும் (அ+உ+ம = ஓம்), 5,6,7 பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் நாம் பற்ற வேண்டியதைப் பற்றியும் (பா+து + கை = திருவடி) கூறுகின்றன.

எட்டாம் பாசுரத்தில், நரசிம்மனின் கண்களைப் பற்றிப் பாடுகிறார் திருப்பாணாழ்வார்.

***

பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்
பெரியவாய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே.
அமலனாதிபிரான்-8

(பரி - உயர்ச்சி, கருமை, பெருமை; பரியன் - உயர்ந்தவன், பெருமை படைத்தவன், பருத்த உடம்புடையவன்; ஆதிப்பிரான் = ஆதி + பிரான் - முதிலில் தோன்றியன், முதல் தெய்வம்; புடை பரந்து - மலர்ந்து; மிளிர்ந்து - பிரகாசத்துடன்; செவ்வரி ஓடி - சிவந்த கோடுகள் பெற்று)

மிகவும் பெருத்த உருவத்துடன் வந்த இரணியன் உடலைப் பிளந்த, தேவர்களும் அருகில் செல்ல அஞ்சும்படி இருக்கின்ற ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.
***

திருப்பாணாழ்வார், 'ஆதிப்பிரான்' என்று அரங்கனை வருணிக்கிறார். ’முதலில் தோன்றியவன், பிறருக்குக் கொடுப்பவன்' என்று பொருள். இந்த ஆதிப்பிரானின் பெருமைகளை, பெரிய திருமொழில் நரசிம்மனைக் காணும்போது விவரிக்கின்றேன்.

நம்மாழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' எனும் திவ்ய தேசத்தில் (#87) எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரும் ’ஆதிப்பிரான்’.

நம்மாழ்வார், 'ஒன்றும் தேவும்' என்று தொடங்கும் திருமொழியில் (திருவாய்மொழி 4-10), இந்த ஆதிப்பிரானுடைய பெருமைகளை வர்ணித்துள்ளார் - முடிந்தால் படியுங்கள்.
***

ரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில், அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.

சிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும்! சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும்! சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும்! சிலருடைய கண்கள், நம்மை மயக்கும்! சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும்! சில கண்கள், எப்போதும் சோகமாகவே இருக்கும்!

மனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை!


ஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே! எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்! எப்படி?

முகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து)! கருப்பு (கரியவாகி)! விசாலம் (புடை பரந்து)! ஒளி வீசும் (மிளிர்ந்து)! நீண்ட கண்கள் (நீண்டு)! செம்மை (செவ்-)! வரி ஓடும் (வரி ஓடி)! கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய)! அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம் (பேதமை செய்தன)!

அவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான்! அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா? என்று தோன்றும்!

திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்? பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்?

இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்!

ஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்!

இந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன்! பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம்! மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை! குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது!


’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே!’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.

அதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா! நீ அழகு! உன் கண்கள் அழகு! இந்த அழகு முடிவில்லாதது! 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்!


ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?
***

இடம்: பிரயாகை
நேரம்: கதை சொல்லும் நேரம்

ஸஹஸ்ராணிகர்:
ஓ மார்க்கண்டேயரே! பகவானுக்கு, பிரகலாதனுக்கு மீது மட்டும் என்ன இவ்வளவு அன்பு? அப்படி அவன் என்ன செய்தான்?

மார்க்கண்டேயர்:
அவன் கதையைச் சொல்வதற்கு முன், அவன் தந்தையின் கதையைச் சற்றுக் கேள்!
தாயாருக்கும், தம்பி மனைவிக்கும் அறிவுரை சொல்லி விட்டு, இரணியன், தவம் செய்யக் கிளம்புகிறான். அப்போது, பூகம்பம் ஏற்படுகின்றது; காடுகள் பற்றி எரிகின்றன. பல கெட்ட சகுனங்களைக் கண்ட அசுர குரு, ’நீ இப்போது தவம் செய்யப் போகக் கூடாது’ என்று கூற, குருவின் அறிவுரைகளையும் மீறித் தவம் செய்யக் கைலாயத்திற்குச் செல்கிறான்.

(மார்க்கண்டேயர், அந்தக் காட்சிகளை விவரிக்கிறார் ...)
***

இடம்: பிரம்ம லோகம்
நேரம்: குழம்பும் நேரம்

நாரதர்: அப்பா! வணக்கங்கள்!


பிரமன்: வாப்பா! இன்று என்னிடமேயா? நானே குழப்பத்தில் இருக்கிறேன்! நீயும் சேர்ந்தால் அவ்வளவு தான்!


நாரதர்: நாராயணா! ... அப்பா! விளையாடாதீர்கள்! என்ன குழப்பம் உங்களுக்கு?

பிரமன்: இரணியன் மிகவும் கடுமையான தவம் செய்கிறான்!


நாரதர்: அதனால் என்ன? உலகில் இருப்பவர்களுக்காகக் கவலைப் பட்டால் நம்முடைய ஆயுள் விரைவில் முடிந்து விடும்!

பிரமன்: அவன் செய்யும் தவத்தைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ விபரீதம் ஏற்படும் என்று தோன்றுகிறது!

நாரதர்: நீங்கள் நாராயணனின் புத்திரர் ஆயிற்றே! உங்கள் நெஞ்சில் அவர் இருக்கும் வரை, நீங்கள் கவலைப் படத் தேவையில்லை!

பிரமன்: இருந்தாலும், பயமாக இருக்கிறது!

நாரதர்: இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

பிரமன்: அவன் தவத்தைக் கலைத்தே ஆகவேண்டும். உன்னால் முடியுமா?

நாரதர்: முயற்சி செய்கிறேன் அப்பா! எம்பெருமான் அருளால் எனக்கு வெற்றி கிட்டட்டும் என்று நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்!

(நாரதர் மறைந்து விடுகிறார்)
***

(மார்க்கண்டேயர் மீண்டும் தொடர்கிறார் ...)

மார்க்கண்டேயர்: நாரதரும், பர்வத முனிவரும், இரு கலவிங்கப் பட்சிகளாக (Red Strawberry Finch) உரு மாறி, இரணியன் தவம் செய்யும் மரத்திற்கு வந்து அமர்கின்றனர். அவன் தவத்தைக் கலைக்க முற்படுகின்றனர்.


மார்க்கண்டேயர்: முனி பட்சிகள் எவ்வளவு பேசியும், அவன் கவனத்தைக் கெடுக்க முயற்சித்தாலும், முடியவில்லை. கடைசி உபாயமாக, நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்று மூன்று முறை சொல்லி, நிறுத்தி விடுகின்றார்.

எம்பெருமானின் நாமம் கேட்டுத் தவம் கலைந்த அவன், அருகில் இருந்த அம்பை பறவைகள் மீது விட, அதற்குள் பறவைகள், இரணியன் தவம் கலைந்த உற்சாகத்துடன் பறந்து விடுகின்றன.

(இதன் பின்னர், மார்க்கண்டேய முனிவர், இரணியனின் அரண்மனையில் நடந்ததை விவரிக்கிறார்)
***

(தவம் கலைந்த இரணியன், அரண்மனைக்குத் திரும்புகிறான். அன்று இரவு இரணியனும், அவன் மனைவி கயாதுவும் தனிமையில் அந்தரங்கமாக இருக்கின்றனர் ...)

கயாது: நாதா! என்ன கோபம் உங்களுக்கு?

இரணியன்: தவத்தில் இருந்தபோது, இரண்டு பட்சிகள் வந்து தவத்தைக் கெடுக்கும் விதமாகப் பேசிக்கொண்டே இருந்தனர்.

கயாது: அதனால் என்ன நாதா? தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே? நாம் தானே அதற்கெல்லாம் செவி சாய்க்க்காமல் தவம் செய்ய வேண்டும்?



இரணியன்: அதனால் கூட நான் கவலைப் படவில்லை. ஆனால், கடைசியில் அந்தப் பறவைகள் மிகவும் சப்தமாக, 'ஓம் நமோ நாராயணாய' எனும் சொற்களை மூன்று முறை, எனக்காகவே சொல்வது போலச் சொல்லின. என் எதிரியின் பெயரைச் சொன்னவுடன், என் கோபத்தினால் தவம் கலைந்து விட்டது.

(14 உலகங்களிலும் எல்லோரும் மதித்துப் போற்றக் கூடிய அஷ்டாக்ஷர மந்திரத்தை அன்று இரவு இரணியன் தன் வாயாலேயே சொல்லி விடுகிறான். அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்)

கயாது: நீங்கள் மீண்டும் தவம் செய்யச் செல்லுங்கள்! இம்முறை, அவன் நாமம் சொல்லப் பட்டாலும் தவம் கலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

(அடுத்த சில நாட்களில், இரணியன் மீண்டும் தவம் செய்யச் செல்கிறான்)
***

தைச் சொல்லி, கதையை நிறுத்திய மார்க்கண்டேய முனிவர், அங்கு கூடியிருந்த முனிவர்களைப் பார்த்து,

'நம்மைப் போல் அல்லாது, விஷ்ணுவின் அந்தரங்கனான சங்கு கர்ணன், விஷ்ணுவின் அருளாலும், பிரம்மன் மற்றும் நாரதரின் ஆசீர்வாதத்துடனும், அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே கருவில் நுழைந்து விடுகிறான்! இப்படிப் பிறந்தவனே பிரகலாதன்!

இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'

***

ரு வழியாக, முதலாயிரத்தையும், பிரகலாதன் பிறப்பையும், நரசிம்மன், KRS, Raghavan, Kumaran, போன்றோரின் உதவியுடனும், இதனைப் பொறுமையுடன் படித்து, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பல அன்பர்கள் மூலமும், முடித்துக் கொடுத்து விட்டார்!

இப்படி, அதிசயமாகப் பிறந்த பிரகலாதனைப் பற்றியும், அவனுக்காக எம்பெருமான் என்னவெல்லாம் செய்தான் என்பதையும்,

நாலயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரமான பெரிய திருமொழி மூலம் நரசிம்மனை திருமங்கையாழ்வார் அனுபவிக்கும்போது நாமும் சேர்ந்து அனுபவிக்கலாம்.

அனைவருக்கும் எனது நன்றியுடன், முதலாயிரத்தை முடித்துக் கொள்கிறேன்.


நரசிம்மன் திருவடிகளே சரணம்!

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா பிரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து
Read more »

Thursday, June 10, 2010

குறுங்குடி நரசிம்மன்



திருமழிசையாரின் நரசிம்ம வைபவம் தொடர்கிறது ...
***

*கரண்டமாடு பொய்கையுள்* கரும் பனைப் பெரும் பழம்*
புரண்டு வீழ, வாளை பாய்* குறுங்குடி நெடுந்தகாய்!*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்*
இரண்டு கூறு செய்து உகந்த* சிங்கம் என்பது உன்னையே?!
திருச்சந்த விருத்தம்-62

(கரண்டமாடு = கரண்டம் + ஆடு - கரண்டம் - நீர்க் காக்கை, ஆடு - விளையாடும்; கரண்ட மாடு - கறவைக் கூட்டம்; வாளை - வயல்களில் வாழும் மீன்; நெடுந்தகாய் = நெடும் + தகை - பெரும் சக்தி, பெருமை, அறிவு; ஆகம் - உடல்)

நீர்க்காக்கைகள் விளையாடும் பொய்கையிலே, கரிய பெரிய பனம்பழங்கள் விழுந்து புரள, வாளை மீன்கள் அதைத் தின்ன பாய்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் உள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களுடன், கோபத்துடன் வரும் இரணியனுடைய உடலை, இரண்டு கூறுகளாகச் செய்த நரசிம்மம் என்பது நீதானோ?

***

ரு பெரிய பொய்கை! அதில் (பொய்கையுள்), நீர்க் காக்கைகள் (கரண்டம்) விளையாடுகின்றன (ஆடு).

பொய்கையின் கரை ஓரத்தில், சில பனை மரங்கள்! அவற்றிலிருந்து, கருமை நிறம் (கரும்) கொண்ட பெரிய (பெரும்) பனம் (பனை) பழங்கள் (பழம்) கீழே விழுகின்றன. அவை நிலத்திலே விழுந்தாலும், சில பழங்கள் உருண்டு புரண்டு, நீரிலே வந்து விழுகின்றன (புரண்டு வீழ)!


அந்தப் பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் (வாளை), புரண்டு நீரில் விழும் பனைப் பழங்களை, நீர்க்க்காக்கைகள் என்று நினைத்து, 'நமக்கு இன்னிக்கு பார்ட்டி தான்' என்று அவற்றின் மீது பாய்கின்றன (பாய்)! பாவம் மீன்கள்!

ஆழ்வாரின் வார்த்தைகளைச் சற்று கவனித்தால், இயற்கைக் காட்சி எப்படி உள்ளது என்று விளங்கும்:

பனைப் பழம்’ என்றோ, ‘பெரும் பனைப் பழம்’ என்றோ மட்டும் வர்ணித்தால், அது வாளை மீன்களைக் கவரும் அளவு இருக்காது! வாளை மீன்கள் பாய்ந்து வருமளவு இருக்கவேண்டுமென்றால், அவை, நீர்க்காக்கைகளைப் போல, கருப்பாக, பெரியதாக, இருக்க வேண்டும். எனவே, ஆழ்வார் இந்தக் காட்சியை, ‘கரும் பனைப் பெரும் பழம்’ என்று வர்ணிக்கிறார்.

கீழே விழும் பழங்கள், உருண்டையாக இருந்ததால், அவை விழுந்த வேகத்தில், அதிக தூரம் புரண்டு விழுந்தன என்பதை, ‘புரண்டு வீழ’ என்கின்றார் (நீர்க்காக்கைகள், சாதாரண காக்கைகளை விட, சற்றே பருத்து இருக்கும். எனவே, இதனைப் பார்த்த வாளை மீன்களுக்கு, இவை நீர்க்க்காக்கைகளைப் போலத் தோன்றைனவாம்!)

இப்படி ஒரு காட்சி எப்போதும் நடப்பது - திருக்குறுங்குடியிலே (திவ்விய தேசம் #78)!

('கரண்டமாடு' எனும் சொற்றொடருக்கு, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் கொண்டு,

'கறவை மாடுகள் கூட்டம் பொய்கை உள்ளே இருக்க, பனம் பழங்கள் உருண்டு வீழ, வாளை மீன்கள் பாய ...',

என்றும் பாசுரத்தின் பொருள் கூறுவது உண்டு. இந்த விளக்கத்தை, அடியேன் '108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு' எனும் நூலில் கண்டுள்ளேன்.

ஆனால், முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள் கற்பிக்கும் போது, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் அவ்வளவு பொருந்தாது என்பது அடியேன் கருத்து.

வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 'கரண்டமாடு பொய்கையுள்' என்பதற்கு, 'நீர்க்காக்கைகள் பொய்கையில் ஆட' எனும் பொருளிலேயே வியக்கியானம் செய்துள்ளார்)

நீர்க்காக்கைகள் விளையாடும் பெரிய பொய்கையைத் தவிர, திருக்குறுங்குடிக்கு வேறு ஏதும் விசேடம் உள்ளதா?

***

குறுங்குடியில் (அருகே உள்ள மஹேந்திரகிரி மலை அடிவாரத்தில்) பிறந்த நம்பாடுவான் எனும் பாணன், ஒரு ஏகாதசியில் விரதம் இருந்து, குறுங்குடி எம்பெருமான் (அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, திருக்குறுங்குடி நம்பி, வராஹ நம்பி, நம்பி ராயர் எனப் பல பெயர்கள்) மீது கைசிகப் பண் பாடி அவனை உகப்பித்து, அதனால் கிடைத்த பயனில் பாதியைத் தானம் செய்து, ஒரு பிரம்ம ராட்சதனுக்கு சாப விமோசனம் அளிக்கிறான்!



உயர்ந்த ஏகாதசி விரதத்தின் பலனையே தானம் செய்ததால், நம்பாடுவான் நினைவாக, இந்த ஏகாதசி (கார்த்திகை மாதம், வளர்பிறை), கைசிக (22-வது மேளகர்த்தா ராகமான கரகரப்ரியாவின் ஜன்ய ராகம், கைசிகம்) ஏகாதசி எனப்படுகிறது!

வைணவர்களைப் பொருத்தவரையில், வைகுண்ட ஏகாதசியை விட, கைசிக ஏகாதசி மிக உயர்வாகக் கருதப்படுகிறது!

இதன் காரணத்தினாலேயே, கைசிக ராகத்தை தொடர்ந்து பாடியோ, கேட்டோ வந்தால், ஆயுள் நீடிக்கும் என்றும், மோட்சமும் உறுதி என்றும் கருதப்படுகிறது!


இவ்வரலாற்றை, வராக மூர்த்தியே தன் மடியில் இருந்து பூமிப் பிராட்டிக்கு உரைத்ததாக, வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது!
***

வ்வூர்க் கோயிலின் கோபுரத்தில் உள்ள சிற்பங்களின் உயர்வு கருதி, இது சித்ரகோபுரம் எனப்படுகிறது.

நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுப்பதற்காகவே கோயில் கொடிமரம் நகர்ந்ததால், இங்கு கொடிமரம் எம்பெருமானுக்கு நேராக இல்லை!

திருமங்கை மன்னன் பரமபதம் பெற்ற ஊர் இதுவே! இங்கிருந்தே மங்கையாரின் மங்கள விக்கிரகத்தை திருவாலி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திருக்குறுங்குடி = திரு + குறு + குடி - பெரும் உருவமாக இருந்த வராகப் பெருமான், குறுகிய உருவம் கொண்டு, பூமாதேவியுடன் சில காலம் இங்கு இருந்ததாலேயே, இந்த ஊருக்கு பெரும் புகழ்!


எம்பெருமானே இராமாநுஜரின் சீடரான வடுக நம்பி வேடமிட்டு, அவருக்குத் திருமண் காப்பிட்ட வைபவம், இந்தத் தலத்திலேயே நடந்தது!

நம்மாழ்வாரின் பெற்றோர், பிள்ளைப் பேறு வேண்டி, வைஷ்ணவ நம்பியை ஆராதித்து வந்ததாலேயே நம்மாழ்வார் அவதரித்தார். இன்றும் பிள்ளைப் பேறு வேண்டி, இந்தத் தலத்திற்கு வந்து வேண்டிச் செல்வோர் பலர்!

இராமாநுஜர், குறுங்குடி நம்பிக்கே, நாராயண மந்திரத்தை உபதேசம் செய்துள்ளார்! இறைவனே உபதேசம் வாங்கிக் கொண்ட தலம் இது!

இந்தத் தலத்தில் சிவபெருமான் சன்னிதி உண்டு. மங்கையார், 'அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்' என்று சிவன் இவரோடு இருக்கும் நிலையை உணர்த்துகிறார். இப்போதும், குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள், 'பக்கம் நின்றார்க்குக் குறையேதும் உண்டோ?' என்று கேட்கும் வழக்கம் நடைமுறையில் உண்டு.



ஒரு சமயம், சில மன்னர்கள் நம்பியைச் சேவிக்க வந்தனர். அப்போது, தெய்வநாயகன் (வானமாமலைப் பெருமான்), இவர்கள் முன் அசரீரியாய், 'நான் பூமியில் அமிழ்ந்து கிடக்கிறேன். நீங்கள் அங்கு செல்லுங்கள். கருடன் எந்த இடத்தைச் சுற்றிப் பறக்கிறானோ அங்கு நான் கிடப்பேன்' என்று சொல்ல, அதன் பின்னரே வானமாமலை திவ்விய தேசம் (#79) உருவாயிற்று என்பர்!

பெரியாழ்வார், மங்கையார், மழிசையார், நம்மாழ்வார் தவிர, இராமாநுஜர், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், புகழேந்திப் புலவர் போன்றோரும் அழகிய நம்பிக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

அறிவரிய பிரானை* ஆழி அங்கையனயே அலற்றி*
நறிய நன்மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன் மேல்*
அறியக் கற்று வல்லார்* வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.
திருவாய்மொழி 5-5-11

என்று, நம்மாழ்வார், 'குறுங்குடியையும், அதன் பெருமைகளையும் பற்றி அறிந்தால் மட்டுமே ஒருவன் வைணவன்' என்று கூறுகின்றார் அவ்வளவு சிறப்பு இந்த ஊருக்கு!

(பிரபந்தங்களின் பலன்களைக் கூறும் பாசுரங்களிலேயே, சிறிது வித்தியாசமான பாசுரம் இது! 'இதைச் சொன்னால் இந்தப் பலன்' என்று பெரும்பாலான பாசுரங்கள் கூறும். ஆனால், 'இதைச் சொன்னால் தான் நீ வைஷ்ணவன்' என்று கூறுகின்ற 'தகுதிப் பாசுரம்' இது!)

***

ப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் இருக்கும் பெருமானைப் பார்த்து, திருமழிசையாழ்வார், 'பெருமையுடையவனே (தகாய்!)! நீ தானே அன்று, வலிமை வாய்ந்த இரணியனை, விளையாட்டாகக் கிழித்தாய்?' என்று கேட்கின்றார்.

உன்னையே! - உன்னைப் பார்த்தால், மிக அமைதியாக, அழகாக, கருணை உள்ளவனாக இருக்கின்றாய்! நீயா அன்று பயங்கரமான சிங்க உரு எடுத்தாய்? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்று, ஆச்சரியமும், சந்தேகமும் தொனிக்க, 'உன்னையே?' என்று விளிக்கிறார்!

***

சென்ற பதிவில், சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று கூறியிருந்தேன்.

சங்க நூல்களிலும், ஆழ்வார்களின் பிரபந்தங்களிலும் கூறப்பட்டுள்ள திருமால் பெருமையும், கதைகளும், வேத முறைகளும், அடியவர்களின் வாழ்க்கை நெறியும், அதிக ஒற்றுமை கொண்டதாய் அமைந்துள்ளன.



பல ஒற்றுமைகள் இருந்தாலும், நரசிம்மர் பாசுரங்கள் நான்றிற்கும், சங்கநூல்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

உதாரணத்திற்கு, பரிபாடலில் நரசிம்மாவதாரக் காட்சி:

...
செயிர் தீர் செங்கச் செல்வ! நிற்புகழப்-
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்-
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட, அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு, இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பல பட - வகிர் வாய்த்த உகிரினை;
...
பரிபாடல்-4:10-22

கடுவன் இளவெயினனார் இயற்றிய நான்காம் பரிபாடலில், இவ்வாறு நரசிம்மாவதாரத்தைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.


இதே போல, நம் நரசிம்மர் பாசுரத்தில் கூறப்பட்ட வாமனாவதார வைபவமும் (கங்கைநீர் ... - திருச்சந்த விருத்தம்-24), முருகனைப் பற்றிய 9-ம் பரிபாடலில் (9.4-7) கூறப்பட்டுள்ளது.

(கடைச் சங்கத்துப் புலவர்கள் எழுதிய எட்டுத் தொகையில், 5-வது தொகை, பரிபாடல். 13 புலவர்கள் இயற்றிய 70 பாடல்கள் இருந்ததாக வரலாறு கூறினாலும், கிடைத்திருப்பது, 22 முழுப் பாடல்களே! புறத்திரட்டுத் தொகையில் இருந்து, மேலும் இரண்டு பாடல்களும், சில உறுப்புக்களும், பகுதிகளும் கிடைத்துள்ளதாக அறிஞர்கள் கூறுவர். பரிபாடலில், 6 பாடல்கள் - 1,2,3,4,13,15 - திருமால் மேல் இயற்றப் பட்டவை)

***

ழிசையார் வாக்கில், நம் நாராயணன், 'பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன்' (திருச்சந்த விருத்தம்-23)! அவன் வயிற்றில் இருந்த தாமரையில் இருந்து பிரமன் தோன்றினான்.

பெரும்பாணாற்றுப் படையில், காஞ்சி மாநகரின் மாண்பு பேசப்படுகிறது. அதில், பிரமன் பிறந்த காட்சி கீழ்க்கண்டவாறு விவரிக்கப் படுகிறது:
...

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்
...
பெரும்பாணாற்றுப்படை 402-405

'நீல நிறத்தில் உள்ள நெடியவனான நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் தோன்றிய நான்முகன்' என்கின்றது ஆற்றுப் படை!


(பெரும்பாணாற்றுப் படை, சங்க நூற்தொகைகளில் ஒன்றான பத்துப் பாட்டில் 4-வது. இதை இயற்றியவர், தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்க்கண்ணனார்)

இப்படி, சங்க நூல்களில் பல கருத்துக்கள், ஆழ்வார் பாசுரங்களை ஒட்டி அமைந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் படித்து (எழுதவும் தான்!) அனுபவிக்க, இந்த ஆயுள் போதாது!
***

திருமழிசையார் அநுபவித்த நரசிம்மர், திருப்பாணாழ்வாரிடம் சென்று, தன்னைப் பாடச் சொல்கிறார் ...

- நரசிம்மர் வருவார் ...

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP