Thursday, October 21, 2010

புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!

மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?

நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?


* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?

* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே! கவியரசர் தாகூரே விரும்பி மொழி பெயர்த்த கவிதைக்குச் சொந்தக்காரர் யார்?

* இன்று பலரும் போற்றுகிறார்கள்! ஆனால் அன்று இவரைத் தூக்கில் போடாமல் ஊரை விட்டு மட்டும் துரத்தினார்கள், காசி நகரத்துக் குருமார்கள் - இவர் யார்?

* இவர் சொன்னது...முதலில் எட்டிக்காயாகக் கசந்தது பல பேருக்கும்! பல ஆன்மீக குழாம்களிலிருந்து ஒதுக்கப்பட்டார்!
உண்மையை எதிர்கொள்ளும் துணிவு மனிதர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லவா? உண்மை நெல்லிக்காய் போலவோ?
முதலில் ஒரு சுவை, உள் இறங்கும் போது தண்ணீரோடு இன்னொரு சுவை! அதான் உண்மையை உள்ளங்கை "நெல்லிக்கனி" என்கிறார்களோ?

* மனைவி-குழந்தைகளுடன் வாழ்ந்த தத்துவத் "துறவி"! எதைத் துறக்க வேண்டுமோ, அதை மட்டுமே துறந்தவர் - இவர் யார்?

என்னது, திடீர்-ன்னு யார் யார்-ன்னு இத்தனை "யார்" போடுகிறேன்-ன்னு பார்க்கறீங்களா? ஆத்ம விசாரணையில் "யார்" என்ற கேள்வி மிகவும் முக்கியம்-ன்னு சொல்வாங்களே!
ஏன் திடீர்-ன்னு, "யார்?" என்பதற்கு இவ்ளோ பில்ட்-அப் போடுறேன்-ன்னு பார்க்கறீங்களா?
எல்லாம் ஒரு நூறாவது பதிவு காணும் ஐந்தாண்டுப் பதிவுக்குத் தான்! :)


இவர் பதிவுகள், இவர் எடுத்துக் கொண்ட பொருள் போலவே எளிமையானவை!
* இவர் பதிவுகள், இறைவனைப் பேசுபவை அல்ல!
* இவர் பதிவுகள், அடியார்களைப் பேசுபவை! - அதனாலேயே என்னை மிகவும் கவர்ந்தவை!
* அவர்களின் பிரச்சனை, எதிர்கொள்ளல், ஆன்மீக வழித்தடங்கள், அதற்கான உபகரணங்கள் பற்றிப் பேசுபவை!

நம் வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளை ஒட்டிப் பதிவுகளைப் பின்னுவதில் இவர் வல்லவர்!
வீட்டு மோட்டார் ரிப்பேர், எந்த ரேட்டிங் ஒயரை எதற்குப் பயன்படுத்தினால் ஓவர் லோடு ஆகாது! சைக்கிளைத் துரத்தும் நாய், துரத்த முடியாமல் களைத்துப் போனாலும், அடுத்த சைக்கிளையும் அதே போல் துரத்தும் நாய்ப் புத்தி, நம் புத்தி...

என்று பாலு மகேந்திரா சினிமா பார்ப்பது போல் இவர் ஆன்மீகப் பதிவுகளைப் படிக்கலாம்! :)
நீங்களே வாசித்துப் பாருங்கள்!
குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது. விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது.

கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.
அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது.

இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி.
ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது!


இந்நேரம் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்கும்! = கபீரன்பன்!



ஆன்மீகப் பதிவுலகில் ஒரு துருவ நட்சத்திரம் கபீர் வலைப்பூ! எளிய நடையில், எளிய கதைகள், எளிய கவிதை என்று எதிலுமே எளிமை!
சடங்கு சார்ந்த ஆன்மிகம் பேசுவதில்லை! மனம் சார்ந்த ஆன்மீகம் பேசுபவர்!

இந்திக் கவிதை என்ற மொழி அசூயையோ,
தத்துவக் குப்பை என்ற கருத்து அசூயையோ...
என்று பிரிவினையை ஒட்டிப் பதிவுகள் வளர்க்காது,
மன-ஒற்றுமையை ஒட்டி வளர்ப்பவர்!

ஏன்னா அவர் பேசு பொருளே அப்படி! = கபீர்!

கபீர் என்பவர்...
* கவிஞரா? ஆன்மீகவாதியா?
* தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
* இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
* சாஸ்திர விற்பன்னரா?
* சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர்.....மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல!
அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!
Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!
முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் விரும்பும் வலைப்பூவில்!
இதோ! இங்கே சென்று விளையாடுங்கள், கபீரன்பன் வலைப்பூவுக்கு!
பரிசும் கொடுக்கறாரு! லம்ப்பா வாங்கிக்கோங்க! :))
Read more »

Wednesday, October 06, 2010

திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்?

திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)

ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!
வள்ளுவம் பெருஞ்சொத்து!
அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)


திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))
திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)

அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!
* திருவள்ளுவர் சமணர்!
* இல்லவே இல்லை அவர் சைவ சித்தாந்தியே!,
* அவர் பெளத்தராய்க் கூட இருக்கலாம்!
* அவர் வைணவக் கருத்துகளை ஆங்காங்கே உதிர்க்கிறார்!
வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!

அவ்வளவு ஏன்... வள்ளுவருக்கு விபூதிப் பட்டை போட்டு, வள்ளுவ தேவ நாயனார் என்றெல்லாம் கூடச் சொல்பவர்கள் உண்டு!
இன்றும் விபூதி போட்ட வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலே, சிலையாக நடு ரோட்டில் காட்சி அளிக்கிறார்! :)

மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு வடக்கே, வள்ளுவர் கோயில் வேற ஒன்னு இருக்கு! கோயிலின் மூலவர் ஏகாம்பரேஸ்வரர்! :)
யாரு கட்டினாங்களோ? கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தான் இருக்கும்! வள்ளுவரின் அம்மா-அப்பா = ஆதி பகவன்??? அவங்களுக்கும் கோயிலில் சிலை உண்டு! :)

"ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதை வைத்துக் கொண்டு, அவர் தாய் தந்தையர் பேரு = ஆதி பகவன்-ன்னு சொன்னா எப்படி? :)
தன்னுடைய அம்மா-அப்பா தான், உலகம் முழுமைக்கும் முதல், முதற்றே உலகு-ன்னு சொல்லக் கூடியவரா என்ன வள்ளுவப் பெருந்தகை? :)

அடக் கடவுளே! இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லியா? சிறந்த ஒன்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள வேணும்-ன்னா, அதுக்காக இப்படியெல்லாமா செய்வது? ஒரு நல்ல தலைவரின் கொள்கைகளை ஒன்னுமில்லாப் போகச் செய்யணும்-ன்னா, அவருக்குச் சிலை வைச்சி, அபிஷேகம் பண்ணாப் போதும் போல இருக்கே? :)

இப்படித் தான், சிறந்த சங்கத் தமிழ்க் கவிஞர்களான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் - பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி....
அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் "நாயனார் இரட்டை மணிமாலை"-யை, பன்னிரு திருமுறைகளில் வேறு வைக்கப்பட்டு விட்டது!

நல்ல வேளை, வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், "திருவடிகள்" பற்றி நிறைய பேசுவதால், அவருக்கு "நாமம்" போடாமல் இருந்தார்களே! அது வரைக்கும் ரொம்ப சந்தோசம்! :)

இப்படி, தனிப்பட்ட ஒருவரை/ஒன்றை, இத்தனை பேர் "உரிமை" கொண்டாடுவது வேறு எந்த தமிழ் நூலுக்காவது உள்ளதா?
இப்படித் தமிழர் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அற்புத சக்தி = வள்ளுவம்!



வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவது ஒரு வழியில் மகிழ்ச்சியே என்றாலும்...
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவோர் கட்டாயம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்!

* வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* நக்கீரர் செய்ய வந்தது = சமய நூல்!

* நக்கீரர் - கடைச் சங்க காலம் - அவர் செய்தது திருமுருகாற்றுப்படை என்னும் சமய நூல்! அதை அவரே வெளிப்படையாகச் சொல்கிறார்!
* வள்ளுவர் - நக்கீரருக்கும் பின்னால் - சங்கம் மருவிய காலம் - வள்ளுவர் ஒரு சமயநூலைச் செய்ய வந்திருந்தால், அந்தச் சமயக் கோட்பாடு, அதன் கதைகள் என்றெல்லாம் நக்கீரர் போலவே அவரும் விளக்கி இருப்பாரே! ஆனால் வள்ளுவத்தில் அப்படி ஒன்னும் இல்லையே!

நினைவில் வையுங்கள்: வள்ளுவரின் நோக்கம்: ஒரு சமய நூலைச் செய்வது அல்ல!

அவரே அப்படிச் செய்யாத போது...
அவர் பயன்படுத்திய சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு...
வள்ளுவர்=சமணம்,சைவம்,பெளத்தம் என்று மல்லுக்கு நிற்பது ஏனோ? :(


ஒரு படைப்பாளியின் மேல், அவரவர் தனிப்பட்ட முத்திரைகளைக் குத்தல் என்பது சான்றாண்மை ஆகாது!

அப்படிப் பார்த்தால் என் பதிவுகளில், அன்னை மரியாள் பற்றிச் சிலாகித்துப் பலமுறை எழுதி உள்ளேன் - நான் கிறித்தவனா?
கூகுளில் "பக்ரீத் - சரணாகதிப் பார்வை"-ன்னு தேடுங்கள்! என் பதிவு தான் வந்து நிற்கும்! "பக்ரீத்/ஈமான்" என்ற "சொல்லை"ப் பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக, நான் முஸ்லீம் என்று முடிவு கட்டி விடுவீர்களா? :)

* வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது = எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
* வள்ளுவத்தில், "எண்குணத்தான்" என்ற சொல் வருகிறது = எனவே அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது = எனவே அது இந்து மதம்! => இப்படியெல்லாம் கிளம்புவது நமக்கே லூசுத்தனமா இல்லை?:)
ஆறு குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாகத் தான் முடியும்!

வள்ளுவரின் கால கட்டத்தில், அவர் கண்ட சமூகத் தாக்கங்களை, தன் நூலில் பதிந்து வைத்திருப்பார் - ஒரு சமூகக் கண்ணாடி போல!

இந்திரன் ஒழுக்கம் தவறி, சாபம் பெற்ற கதை, மக்களிடையே அன்று பேசப்படுமானால்...
அதைத் தன் கவிதையில் குறித்துக் காட்டி...தான் சொல்ல வந்த நெறியை விளக்குவது...
- இது எந்தவொரு கவிஞரும் செய்யக் கூடியது தான்! அதற்காக "இந்திரன் கதையை" சொன்னதால் அவர் "தமிழ்-ஹிந்து" என்று கிளம்புதல் தகுமா?

* இந்திரன் கதை வள்ளுவருக்குத் தெரியும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* பொறி வாயில் ஐந்து அவித்தல் - ஆசை அறுத்தல் என்னும் சமணக் கோட்பாடு வள்ளுவருக்குத் தெரிந்திருக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* திருவடிகளே தஞ்சம் என்று வள்ளுவம் பேசுவதும், வைணவத் தத்துவமும் ஒத்துப் போகின்றது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!

ஆனால் அதற்காக வள்ளுவருக்கு, சைவர்/சமணர்/வைணவர்/நாத்திகர் என்றெல்லாம் முத்திரை குத்துவது என்பது கூடவே கூடாது!
அவர்
செய்ய வந்தது சமய நூல் அல்ல! அவர் செய்ய வந்தது அறம்-பொருள்-இன்பம்!

* வள்ளுவத்தின் கருத்துக்கள் போல எங்கள் சமயத்திலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்!
* ஆனால் வள்ளுவம் = சைவமே, சமணமே, வைணவமே என்பதெல்லாம் சான்றாண்மையே இல்லாத ஒன்று!



ஆத்திக -நாத்திக ஒற்றுமை:

சரி ஆத்திகர்கள் தான் இப்படி-ன்னா, இதே தவறைத் தான் நாத்திகர்களும் செய்கிறார்கள்! அடக் கொடுமையே! என்னமா ஆத்திக-நாத்திக ஒற்றுமை! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


இந்தக் குறளில், "இறைவன்" என்பதை அழுத்தமாகவே குறிக்கிறார் வள்ளுவர்! "பிறவிக் கடல்" என்று வேறு சொல்கிறார்!
ஆனால் இதற்கு உரை எழுதும் தமிழ்ப் பற்றுள்ள நாத்திகர்கள் (அ) அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள், இறைவன் = தலைவன் என்று எழுதுகின்றனர்! :)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில்...நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

ஓபாமா கட்சிக் காரவுக, ஓபாமா அடி சேரலீன்னா, அட்லாண்டிக் கடல் நீந்த முடியாது-ன்னு வேணும்-ன்னா சொல்லலாம்! ஆனா, பிறவிக் கடல் நீந்த முடியாது-ன்னு சொன்னா எப்படிப்பா? :)

தங்கள் நாத்திகக் கருத்தை, வள்ளுவத்தில் வலியத் திணிப்பது என்பதும் கூடாது!
வள்ளுவத்தில் நாத்திகம் பேசப்பட்டு இருக்கு! அறம் பேசப்பட்டு இருக்கு! மறம் பேசப்பட்டு இருக்கு! = எல்லாப் பொருளும் இதன் பால் உள!

"இறைவன் அடி" என்று வள்ளுவர் சொன்னால்.... அதை ஏதோ "தலைவன் அடி" என்று வலிந்து மாற்றிப் பொருள் கொள்வது...போலியான விளக்கம் என்று தானே பல் இளித்து விடும்! :) ஓபாமா வழியில் போவாதவங்க எல்லாம் பிறவிக் கடலில் மாட்டிப்பாங்க-ன்னு படிங்க! ஒங்களுக்கே சிரிப்பு வருது-ல்ல? :)))



இன்னொரு சான்றையும் எடுத்துக் கொள்வோம்!

திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்!
எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படிப் பழக்கத்திலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை!

ஆனால்...அதற்காக...வள்ளுவர் முதல் பத்து குறட்பாக்களிலும், திருவடிகளைப் போற்றுகிறார்! எனவே வள்ளுவம் = வைணவ நூல்! வள்ளுவர் = வைணவர் என்று சொன்னால், அதை விட முட்டாள்தனம் வேறில்லை! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை-ன்னே நினைக்கிறேன்!

வேண்டுமானால், குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளை, வைணவத் தத்துவங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்!
அவ்வளவு தான்! அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

வள்ளுவர் காலத்துக்கு முன்னமேயே, தொல்காப்பியர் காலம் தொட்டே, மாயோன் வழிபாடு இருந்திருக்கு! = மாயோன் மேய காடுறை உலகமும்! மாயோன் அன்ன மன் பெரும் சிறப்பின்....தாவா விழுப் புகழ்!
அப்படி, சமூக வாழ்வியலில் காணலாகும் திருவடி வணக்கம் வள்ளுவர் கருத்தையும் கவர்ந்திருக்கு! என்று வேண்டுமானால் "ஊகிக்கலாமே" தவிர...
"திருவடி" என்ற சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு, வள்ளுவர் = வைணவர் என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனம்!

இன்னொரு முறையும் சொல்கிறேன், வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* அவர் திருமுருகாற்றுப்படை போல் ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு!
* ஆனால், நோக்கமே = அறம், பொருள், இன்பம் என்னும் போது...
* அந்த நூலில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் சொற்களை வைத்து...
* வள்ளுவர் இந்த சமயம் தான், அந்த சமயம் தான் என்ற விவாதம் - யானையை அளந்த ஆறு குருடர்கள் கதையாகத் தான் முடியும்!

சமயம் வளர்க்க எத்தனையோ நல்ல சமய-நூல்கள் உள்ளன!
அதை விடுத்து,
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
இப்படி ஒரு பிக்கல்-பிடுங்கல் மெய்யாலுமே தேவையில்லை!


திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!
அது மொத்த உலகுக்கும் தமிழ் மொழி வழங்கிய தமிழ்க் கொடையாகவே இருக்கட்டும்!
திருக்குறள் = உலகப் பொது மறை!
அது உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!


சரி, தமிழ்க் கடவுள் என்னும் இந்தத் தொடர் பதிவுகளில், நாம் எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்கு வருவோம்! = தமிழ்க் கடவுள் திருமாலும், முருகனும்!

"திருமால் பண்டைத் தமிழ்க் கடவுள் அல்ல! முருகன் மட்டுமே பண்டைத் தமிழ்க் கடவுள்" என்ற ஒரு சிலரின் வாதத்தால், இந்த முயற்சியை முன்னெடுத்தேன்!
சங்க இலக்கியங்களில், தமிழ்க் கடவுளான திருமால் எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறான் என்று தக்க தரவுகளோடு சொல்லப் போந்தேன்! இதோ! http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

தொல்காப்பியத்தில், நற்றிணையில், அகநானூற்றில், கலித்தொகையில்...என்று பல சான்றுகளைப் பார்த்தோம் அல்லவா?
ஆனால்.....அதற்காக பரிபாடல் என்பது வைணவ நூல்! அதில் எழுதிய நல்லந்துவனார் ஒரு வைணவர் என்று சொல்வேனா என்றால்?
..............மாட்டேன்! அது தவறான போக்கு! உடன்பட மாட்டேன்!

சங்க நூல்கள், சங்க காலத்தைக் காட்டும் கண்ணாடி!
அதில் பண்டைத் தமிழர், திருமாலை, தங்கள் வாழ்வியலில் எப்படி வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதோடு மட்டும் சரி!
ஒரு தலைவன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சத்தியம் செய்கிறான்! இப்படி ஒரு நிகழ்வைக் காட்டுவது கலித்தொகை!

ஆனால் அதற்காக கலித்தொகை வைணவ நூலாகி விடாது!
அது சங்க இலக்கியமே!
பண்டைத் தமிழ் வாழ்வியலின் அகச் சான்று மட்டுமே!

இந்தத் தெளிவோடு, நாம் திருக்குறளை அணுகுவோம்!
திருமால் பற்றி வள்ளுவர் ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா? பார்ப்போமா?



பலரும் உடனே எடுத்துக் காட்டும் குறள்...

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?

குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

இவள் தோளில் தூங்கும் சுகம், அந்தத் தாமரைக் கண்ணான் உலகிலும் இருக்குமோ? இச்-சுவையை விட அச்-சுவை பெரிதோ??

தாமரைக் கண்ணான் = திருமால் என்றே பலரும் நினைத்து விடுகிறார்கள்! இதற்கு உரையாசிரியர்கள் என்ன சொல்லுறாங்க-ன்னு பார்ப்போமா?

மு. வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

கலைஞர் கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
தாமரைக் கண்ணான் உலகு = நீ மிகச் சிறந்ததாக உயர்த்திக் கூறும் செங்கண் மாலின் வீட்டுலகம்;
தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல் = ஐம்புல இன்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில் போல இன்பஞ் சிறந்ததோ?

தாமரைக்கண்ணான் உலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது" என்றும் காளிங்கர் கூறியதும் பெருந்தவறாம்.

இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கர் அடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல்.
திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர்:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர்:
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ;
தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

என்ன மக்களே, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

தாமரைக் கண்ணான் = திருமால் என்று தேவநேயப் பாவாணரே சொல்லியது தான் எனக்கு வியப்பிலும் வியப்பு! அவர் தனித் தமிழ் இயக்கத் தந்தை!

டாக்டர் மு.வ, சாலமன் பாப்பையா, இவர்களும் தாமரைக் கண்ணான் = திருமால் என்கின்றனர்!
கலைஞர், தாமரைக் கண்ணானுக்கு ஒன்னுமே சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்! இவர்கள் அனைவரும் இக்கால அறிஞர்கள்!

முற்கால அறிஞர்களில் மணக்குடவர் மட்டும் தான் தாமரைக் கண்ணான் = இந்திரன் என்கிறார்! ஆனால் இது சுத்தமாகப் பொருந்தவில்லை! யாரும் இப்படி இந்திரனை முன்பும் சொன்னதில்லை! பின்பும் சொன்னதில்லை!

பரிமேலழகர் உரையோ நம்பத் தகுந்தது அல்ல என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்தறிவுவாதிகள் உருவாக்கி விட்டமையால், நானும் அவர்களையே ஃபாலோ பண்ணிக்கறேன்! பரிமேலழகரைப் படிப்போம்! ஆனால் அவர் பரி மேல் ஏற வேணாம்! :)

பெரும்பான்மையாக....
தாமரைக் கண்ணான் = திருமால் என்று தான் காட்டுகிறார்கள்!


ஆனால், என் மனம் இன்னமும் அலை பாய்கிறது! ஒரு வேளை, தாமரைக்கு + அண்ணான் என்றும் பொருள் கொள்ளலாமோ? (அண்ணான் என்றால் அண்ணன்/தமையன், அண்ணாதவர்/பகைவர் என்றும் பொருள் உண்டு - அண்ணார் புரம் அவிய நின்று நகை செய்த...என்னும் பாட்டும் இருக்கு! ஆனால் அண்ணார் என்னும் சொல்லின் பயன்பாடு மிகவும் குறைவு)

அண்ணான் = பகைவன்/பொருந்தாதவன்!
தாமரைக்குப் பொருந்துவது = கதிர்! பொருந்தாது = நிலவு!
எனவே தாமரைக்கு, அண்ணான் உலகு = நிலாவுலகு!

பெண்ணே, உன் தோளில் சாய்ந்து கொள்ளும் இன்பத்தை விட, அந்த நிலா உலகமா எனக்கு இன்பம்? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோமா?
இதில் எந்தச் சமயமும் இல்லை! கே.ஆர்.எஸ் உரை-ன்னு போட்டுறலாமா? :)

எது எப்படியோ....வள்ளுவரின் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு திருமால் உலகு என்பதே பெரும்பான்மை உரையாசிரியர்கள் கருத்து!
ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்:
தாமரைக் கண்ணான் என்று ஒரு இடத்தில் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக, வள்ளுவர் = வைணவர் என்று கும்மி அடிக்கக் கூடாது!

வள்ளுவர் சொன்ன தாமரைக் கண்ணான் திருமாலாகவே கூட இருக்கலாம்!
ஆனால் அவர் நோக்கம் = "காதலர்க்கு, அச்சுவையை விட இச்சுவையே இனிது" என்று காட்டுவது தான்!
முல்லைத் தெய்வமான திருமாலுக்கு அர்ச்சனை செய்வது நோக்கமல்ல! :)

இதைப் புரிந்து கொண்டால் போதும்!
திருக்குறள் சமய நூல் அல்ல! சமூக நூல்! - சமூகத்தில் அன்று விளங்கிய தாமரைக் கண்ணானை ஒரு உவமை காட்டுகிறார், அவ்வளவே!!!



அடுத்த குறளைப் பார்ப்போம்! "அடி அளந்தான்" என்று குறிக்கிறார்!
இது திருமால் தானா என்பது ஒரு சிலருக்கு ஐயம்!
ஆனால் திருமால் என்று பெரும்பான்மை உரையாசிரியர்கள் கொள்கிறார்கள்!

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு
குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை

மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள், தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன், கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் கருணாநிதி உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடம் அனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மடி இலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன்; 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் - ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் மூவுலகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால், அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது. கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.

வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம்' என்னும் நூலிற் கண்டுகொள்க.

கதிரவன் நாள்தோறும் அளந்தாலும், முன்னை நிகழ்ச்சி பற்றி 'அடியளந்தான்' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. ' தாஅய' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

மணக்குடவர் உரை:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று

பரிமேலழகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

என்ன விளங்கிச்சா? :)
இப்படி, உரையெல்லாம் படிக்கறதுக்கு, பேசாம, மூல நூலான திருக்குறளையே படிச்சிறலாம் போல தோனுதா? :)

சூப்பர்! அப்படி வாங்க வழிக்கு!
எது மூல நூலோ, அதை வாசித்துச் சரி பார்க்கும் பழக்கம் வந்து விட்டால், பல கசடுகள் தானே மறைந்து விடும்!

அதற்காக உரை நூல்கள் தேவையில்லை என்பதில்லை!
பல மூலப்பாடல்களின் சுவடி கிடைக்காத போது, உரைகளில் மேற்கோள் காட்டியதில் இருந்து தான், மூலப் பாடல்களையே திரட்டித் திரட்டி எடுத்தார்கள் தமிழ் அறிஞர்கள்! அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!



திருமால் பற்றிய இன்னொரு குறளும் உள்ளது!
* முன் சொன்ன இரண்டு குறள்களாவது.....தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்பதில் சிலருக்கு மட்டும் ஐயம் இருந்தது!
* ஆனால் இந்தக் குறளில் ஒருவருக்குக் கூட சந்தேகம் இல்லை! ஏன்-னா திருமாலை நேரடியாகக் காட்டாது...திருமகளைக் காட்டுகிறார்!

வூட்டுக்கார ஐயாவை எப்படி வேணும்-ன்னாலும் பேசலாம்! ஆனா வூட்டுக்கார அம்மா-ன்னு வந்துட்டா கலைஞர் உட்பட அத்தனை உரையாசிரியர்களும் ஏனோ ஒத்துப் போய் விடுகிறார்கள் :))

மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை

மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர் கருணாநிதி உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டப் பயன்படுவனவாகும்

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்;
தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்;

என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர். கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால், பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம்.

அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத் தன்மையாலும், அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால், தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப் பெயர் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது.

வறுமையும் செல்வமும் அமைவதை, அணி வகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று, வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)


இப்படியாகத், திருக்குறளில், திருமால் பற்றிய குறிப்புகள் உள்ளன!

அவற்றில்...இரண்டு குறட்பாக்களில்...
தாமரைக் கண்ணான், அடி அளந்தான்
என்பதற்கு, ஒரு சிலர் மட்டும் வேறு ஒரு பொருள் கொண்டாலும்,
பெரும்பான்மை உரையாசிரியர்கள் திருமால் என்றே கொள்கின்றனர்!

இன்னொன்றில் தாமரையாள்...
என்று திருமகளைக் குறிப்பது பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இல்லாமல்.......அனைத்து உரையாசிரியர்களும் ஒத்துப் போகின்றனர்!

தாமரையாளுக்கு ஒத்துப் போகும் இவர்கள், அதே தாமரைக் கண்ணானுக்கு ஏன் ஒத்துப் போகவில்லை என்பது அந்தத் தாமரைக் கண்ணனுக்கும் வள்ளுவப் பெருந்தகைக்கும் மட்டுமே வெளிச்சம்! :)

எது, எப்படியோ....
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
சமய முத்திரை குத்தக் கூடாது!

திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!

திருக்குறளில் திருமால் பற்றிய குறிப்புகள், ஒரு இடத்தில் நேரடியாகவும், இரண்டு இடங்களில் குறிப்பாகவும் வருகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்! அவ்வளவே!

திருக்குறள் வைணவ நூல் அல்ல! திருவள்ளுவர் வைணவர் என்று சொல்ல எந்தவொரு தரவும் கிடையாது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP