Tuesday, April 12, 2011

கம்பன் கள்: காமம் இராமனுக்கா? இராவணனுக்கா??

வாரியார் - ஆன்மீகத் தமிழுக்கு வேறுயார்?

அன்னாரின் காணொளி ஒன்றை youtube-இல் தரவேற்றியுள்ளேன்; கண்டு மகிழுங்கள்! பதிப்புரிமைப் பிரச்சனை வராமல் இருக்கணும்! வாரியார் குறித்த பல நிரல்கள், சிலரின் "தனிப்பட்ட உரிமை" என்ற பேரில் அகற்றப்பட்டு விடுகின்றன! வள்ளல் வாரியார் வலைப்பூவும் இப்படித் தான் முடங்கிப் போனது!  இதுக்கு என்னிக்குத் தான் விடிவோ?

வாரியார் சுவாமிகளின் கம்ப இராமாயணப் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இருந்தேன், இருந் தேன், நறுந் தேன்! அம்புட்டு போதை!
இன்று இராம நவமி அல்லவா! அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்! (12-Apr-2011)


இராமனை அளவுக்கு அதிகமா ஏத்திவிட்டு, பேசியும் எழுதியும் விடுறாங்க என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு!
நாத்திகர்கள்/பகுத்தறிவாளர்கள் மட்டுமன்றி, சைவ அன்பர்கள், முருக அன்பர்கள் சிலரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எதிர்வினை ஆற்றுவதும் வழக்கம்!:)

ஆனால் திருமுருக. வாரியாரே, இராமனுக்கு வரிந்து கட்டும் காட்சிகளைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்!
வாரியார் இப்படித் "தெரிந்தே துணை போவதற்கு", மேற்சொன்னவர்கள் எல்லாம் என்ன சப்பைக் கட்டு கட்டுவார்களோ, நாம் அறியோம்:)

இராமனை, ஆழ்வார் அருளிச் செயல்கள் கூட இப்படித் தாங்கிப் பிடிக்காது!
இராமன் பால் அன்பு பூண்ட குலசேகராழ்வார் கூட, "இராமன் செய்த ஒவ்வொரு செயலும் ஒரு தத்துவம்" என்றெல்லாம் அடுக்க மாட்டார்!

ஆனால் ஆழ்வாருக்கும் ஒரு படி மேலே போய், நம் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலே தத்துவமாக விரிக்கின்றார்!
=> ஒரு பாதுகை = பர ஞானம், இன்னொரு பாதுகை = அபர ஞானம்,
=> இராவணன் = ஆணவம்; கும்பகர்ணன் = கன்மம்; இந்திரஜித் = மாயை!
=> கோசலை/கைகேயி/சுமித்திரை = ஞான சக்தி/இச்சா சக்தி/கிரியா சக்தி என்றெல்லாம் தத்துவ அடுக்குகள் அடுக்கப்படுகின்றன! :)

இது ஏன் என்பது இன்று வரை எனக்குப் புரியாத புதிர்!
வாலி வதம் தவறு என்று இராமனே ஒப்புக் கொண்ட பிறகும், எதற்கு இராமனைக் காப்பாற்ற இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள்?



வாலி வாங்கிய வரம் அப்படி! No Fair Play!
கலைஞரை எதிர்த்து யாரு திருவாரூரில் நின்னாலும், அவிங்க ஓட்டில் பாதி, கலைஞர் ஐயாவுக்குப் போயிரும்-ன்னா, எவன் தேர்தல்-ல்ல நிப்பான் சொல்லுங்க? :) பாதி ஓட்டு அங்கே போயிரும்-ன்னு வரம் பற்றியே தெரியாது, ஒரு புதியவன் வீரத்தை மட்டுமே நம்பிக் களத்துக்கு வந்தால்???
வஞ்சக வரத்தை வஞ்சகத்தால் தான் வீழ்த்த முடியும்! அப்போ தான் வஞ்சமாய் வரம் வாங்கியவனுக்கு வலி-ன்னா என்ன-ன்னு தெரியும்!

திரைமறைவு பேரங்களைத் "திரைமறைவாக" டேப் செஞ்சாத் தானே, ஆ.ராசா/நீரா ராடியாவுக்கு வலிக்கும்? "ஐயோ, எங்கள் சதிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தனி மனித உரிமை மீறல்"-ன்னு அப்போ தானே குதிப்பாய்ங்க? :)
செய்யறது பொதுஜனச் சதி! இதுல உரிமை மீறலா? ஆமாண்டி, மீற வேண்டி இருக்கு, என்னாங்குற? அதே போலத் தான் இதுவும்!

வாலியை எப்படித் தான் வீழ்த்துவது?
மறைந்திருந்து கொல்வது முறையாகாது! மறையாமல் கொல்லணும்-ன்னா, கொல்லவே முடியாது! நம்மோட பாதி பலமும் போயீரும்!
ஓக்கே! மறைஞ்சிருந்து கொன்னு, கெட்ட பேரு வாங்கிக்க யாரு ரெடி?


வரம் கொடுத்தவரு ரெடியா? வரம் வாங்கியவரு ரெடியா?
ஹிஹி...யாருமே இல்லை! ஒரே ஒருத்தரு தான் ரெடி! :)

பேரறத்துக்காகச் சிற்றறத்தைக் கைவிட்டாலும்....
அதனால் வரும் விளைவுகளையும்....
ஒருவன் துணிந்து ஏற்க வேண்டும்! = இதைக் காட்ட வந்ததே காவியம்!


மனுசனா வாழ்ந்து காட்ட வந்த ஒருத்தரு, நல்லதும் பண்ணுவாரு, தப்பும் பண்ணுவாரு! தப்புக்கு Spelling-கே தெரியாத "புனித பிம்பம்" இல்ல அவரு!
ஆனா தப்பு பண்ணா, அதுக்கு எப்படி நடந்துக்கணும் என்பதையும் சேர்த்தே தான் நடந்து காட்டுவாரு! ஏதாச்சும் பரிகாரம்/ஹோமம் பண்ணி சமாளிச்சிறலாம்-ன்னு கணக்குப் போடமாட்டாரு! :)

வாலியை "மறைந்து" கொன்ற "பாவம்" தீர......
தானும் அதே போல் மறைந்தே கொல்லப்படுவாரு!
அவரே காலம்பு வாங்கி, குவலயம் நீங்கி, பாலாழி பாய்ந்த பாதகன்! (பா.பா.பா)

"பிற்பகல் தாமே வரும்" என்னும் வினைச் சுழற்சிக்கு யாருமே அப்பாற்பட்டவர் அல்லர்! அதைத் தனக்கும் சேர்த்தே உட்படுத்திக் கொள்வாரு!  ஹைய்யோ, நான் கடவுள்; அஹம் பிரம்மாஸ்மி, நான் பிறவான்-இறவான்,  I Am excluded-ன்னு சொல்லிக்க மாட்டாரு:)
No one is above Lokpal, incl the Prime Minister! அதானே அன்னா ஹசாரே சொல்வதும்?

அவரைச் சும்மா அவதாரம், அவதாரம்-ன்னு எதற்கெடுத்தாலும் ஓவராக ஏத்தி விடுதல் என்பதை இலக்கியமும், ஆன்மீகமும் செய்யவே கூடாது!
அது அந்த அவதார நோக்கத்துக்கே முற்றிலும் மாறாகப் போய் விடும்!
"அவிங்க எல்லாம் அவதாரம்-ப்பா! நாமளோ சாதாரண மனுசங்க! நம்மால முடியுமா?" என்று மனிதன் எஸ்கேப் ரூட் தேடிக்கொள்வான்! இதற்காகவா அவதாரம்?

இப்படி யோசிச்சா, "இராம போதையை" சமயவாதிகள் ஏற்ற மாட்டார்கள்! இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இப்படி நன்கு யோசிப்பவர்கள்!

இராமனை உச்சி மேல் வைச்சிக்கணும்! ஆனா நடக்க எல்லாம் வேணாம்! நாடு உடையாம இருக்கணும்-ன்னு அவன் காட்டுக்குப் போவான், ஆனா நாம மசூதியை உடைப்போம்! :)
இராமன் தப்பே பண்ணாலும் அது தப்பே இல்ல! ஆனா அடியவனான ஆஞ்சநேயன், தான் என்ற எண்ணத்தால்  இன்னொருவர் செய்த லிங்கத்தை வாலால் அசைப்பான்-ன்னு பின்னாளில் "கப்ஸா" எழுதி வைப்போம் :))

இப்படியெல்லாம் ஏத்தி விட்டதால் தான், அவதாரங்கள் "தோல்வி" அடைந்து போயின!
அவதாரங்கள் தோல்வி அடைந்தன என்று சொல்வதில் எனக்குத் தயக்கமோ, பயமோ இல்லை! கூட இருந்து கீதை கேட்ட அருச்சுனனே போர் முடிந்ததும் சரணாகதி செய்யலையே? நாட்டை ஆண்டு, சுகபோகத்தில் திளைத்து, வழியில் அல்லவோ மாண்டான்?
கூட இருந்து கீதை கேட்டவனுக்கே இந்த லட்சணம்-ன்னா, நாமெல்லாம் கேட்கும் கீதை எந்த லட்சணம்? யோசிச்சிப் பாருங்க :)

மனிதனுடைய "Hypocrisy" முன்னால், தாம் இறங்கி வந்து ஒன்னும் செய்ய முடியாது என்பதைப் புரிந்த கொண்ட இறைவன்...அதனால் தான்...
* ஆழ்வார்களைப் பிறப்பித்து,
* நாயன்மார்களைப் பிறப்பித்து,
* அடியவர்களைப் பிறப்பித்து,
மானைக் கொண்டு மானைப் பிடித்தாற் போலே, மனிதனைக் கொண்டே மனிதனைப் பிடிப்போம் என்று எண்ணி விட்டான் எம்பெருமான்!

கீதையோ, வேதாந்தமோ சற்றே தாழ்வானது! ஆழ்வார்களின் ஈரத் தமிழோ அதனினும் உயர்வானது!
கீதையை யார் வேண்டுமானாலும் வறட்டு வேதாந்தமாகப் பேசி விடலாம்! ஆனால் ஆழ்வாரின் ஈரத் தமிழை, கண் ஈரம்-மன ஈரம் கொண்டே அணுக முடியும்!

அதனால் தான் கீதை சாதித்துக் காட்டாத சரணாகதியை, ஆழ்வார்களின் காதல் நிறைந்த அருளிச்செயல் சாதித்துக் காட்டியது!
இராமானுசர் முதலானவர்களும், ஆழ்வார்களை முன்னிட்டே, மக்களைச் சரணாகதிப் பாதைக்குத் திருப்பினார்கள்!


இராமனைத் துதிபாட இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் எதற்கு தெரியுமா?=ஹீரோவை வில்லன் ஆக்குவது, வில்லனை ஹீரோ ஆக்குவது - இந்த மாயையிலேயே சுழன்றுச் சுழன்று...
ஆக மொத்தம் நமக்குத் தேவை ஒரு ஹீரோ-ஒரு வில்லன்! :)

இதைக் கடந்தால்:
இராகவன் இனிப்பான், இராவணன் இனிப்பான், இராமாயணம் இனிக்கும்!

இதைக் கடக்கா விட்டால்:
இராகவன் கசப்பான் = நாத்திகருக்கு! இராவணன் கசப்பான் = ஆத்திகருக்கு! இராமாயணம் கசக்கும் = எனக்கு! :)

ஆனால் ஒரே ஒரு விஷயம்: "இராம நாடகத்தை" நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்...இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று!
எப்படிச் சூரனை மயிலும் சேவலுமாய் ஆக்கிக் கொண்டானோ திருமுருகன், அதே போல், வைகுந்த வாயிலுக்குச் சொந்தக்காரராகவே ஆகிப் போனார்கள் இராவண-கும்பகர்ண ஜய-விஜயர்கள்!

கற்பனை செய்து பாருங்கள்: இதோ....இராவணன் கையிலும் சங்கு-சக்கரங்கள்! :)
யார் தருவார் அடியவர்க்கு, தன்னுடைய அடையாளமான சங்கு சக்கரங்களை? தனக்கு மயிலாய்/ஊர்தியாய் வைத்துக் கொண்டால் போதாதா? எதற்கு தன் அடையாளங்களை அவர்களுக்கும் தர வேண்டும்? பார்ப்பவர்கள் இவன் தான் பெருமாள் என்று நினைத்து விட்டால்? :)

ஏன்? = தனிப் பெருங் "கருணை"! கருணை என்பதே ஆன்மீகத்தின்/ இறையன்பின் அடிப்படை!
ஹீரோ-வில்லன், நல்லோர்-தீயோர், அசுரர்-தேவர் என்று அனைவரும் ஒரு நாள் அங்கே தான் சேரப் போகின்றார்கள்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! - என்று ஓதுவது திராவிட வேதம் என்னும் திருவாய்மொழி!

அதனால் தான் இராவணின் செத்த உடம்பைத் "திருமேனி" என்று சொல்கிறார் கம்பர்!
பொதுவாகப் பாகவத அடியவர்களின் பூத உடலைத் தான் "திருமேனி" என்று குறிப்பது வழக்கம்! இராவணன் அடியாரா? :) பார்க்கலாமா நம் வாரியார் விருந்தை?


இராவணன் வீழ்ந்து கிடக்கிறான்! துயில் ஆழ்ந்து கிடக்கிறான்!
அவன் அரும் உடலைச் சுவைத்த மனைவி/துணைவி/இணைவிகள் எல்லாம்...
இதோ வெறும் உடலைக் காண விரைந்து வருகின்றனர்!

அத்தனை பேருக்கும் முன்னாக, அலறி அடித்து, ஓடோடி வருகிறாள் அன்னை மண்டோதரி!
அவள் இராவணனின் உடலை மட்டும் சுவைக்கவில்லை! உள்ளத்தையும் சுவைத்தவள்! அதான் அவளுக்கு மட்டும் கண்ணிலும்+நெஞ்சிலும் நீர்! மற்றவருக்கு கண்ணிலே நீர்!

வந்தவளுக்கோ பெரும் அதிர்ச்சி!
இராவணன் உடலை அம்புகள் துளைத்த்த்த்து எடுத்துள்ளன...யாரோ, கண்ட மேனிக்கு, எங்கு படுதோ படட்டும் என்று அம்பு விட்டாற் போலே!
ஆகா! இருக்காதே! இராகவன் சுத்த வீரனாயிற்றே! அவனா இத்தனை அம்புகளை விட முடியாமல் கண்ட மேனிக்கு விட்டிருப்பான்?

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த "திருமேனி" - மேலும் கீழும்
எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம்தேடி - இழைத்த வாறோ?


எருக்கம் பூவைச் சடையில் சூடிய எங்கள் ஈசன் - பொன்னார் மேனியன் - அவர் மலையையே மலைக்க வைத்த  இராவணன்!
பலரும் நினைப்பது போல்...இராவணன் சிவ அன்பன் அல்ல! வெறும் பய பக்தன்! அட, அன்பனுக்கும் பக்தனுக்கும் என்னங்க வேறுபாடு?

* சிவ அன்பன் = இறைவனிடம் அன்பு செலுத்துவான்!
* பய பக்தன் = இறைவனிடம் "பய"-பக்தி செய்வான்!

இராவணன் பய-பக்தன்!
ஈசனைத் தாறுமாறாக இகழ்ந்து பேசியவன் தான்! சுடுகாட்டான் மலையை நான் சுற்றிக் கொண்டு செல்வதா? என்று இறுமாந்த இலங்கையர் கோன்!
நந்தி தேவரை ஏளனம் செய்து சாபம் வாங்கியவன்! ஞானசம்பந்தர் ஒவ்வொரு தேவாரப் பதிகத்தின் எட்டாம் பாட்டிலும் இராவணனை இகழ்ந்து பாடுவார்!

மலையை அசைக்க எண்ணி முடியாமல் போகவே, மலைக்குள் அழுந்திக் கொண்டதால் உயிர்ப் பயம் வந்தது! வாழ்க்கையில் முதன்முதலாகப் "பணிவு" செய்து பார்த்தான் இராவணன்!  அதுவே முதலும் கடைசியுமான பணிவு!
நந்திகேஸ்வரர் உட்பட யாரிடம் சாபம் வாங்கினாலும், சாப விமோசனம் கூடக் கோராது, தவறுக்கு வருந்தாது, ஹா போங்கடா என்று போகிறவன்...
இப்போ போக முடியாததால், ஈசனை வணங்கினான்! "ஆராய்ந்து அருளும் கள்ளத்தனம்" தெரியாத வரப் பிரசாதியான ஈசனாரும், அவனை மன்னித்து வாழ்த்தி விட்டார்!

இப்படி வெற்பெடுத்த வெறும் மேனி, இப்போ "திருமேனி"யாகக் கிடக்கிறது! அதில் எள்ளிருக்க இடமின்றி என்கிறார் கம்பர்!
எள்ளைப் போல் சிறுசிறு துளையாகத் துளைத்திருக்கு-ன்னு பெரும்பாலும் பொருள் கொள்ளுவார்கள்! ஆனால் அதையும் தாண்டிய இலக்கியச் சுவை ஒன்று உண்டு!

இறந்தவனுக்கு நீத்தார் கடனாக எள்ளிறைப்பது வழக்கம்! அந்த எள்ளும் நீரும் தூவும் போது, அதை ஏற்கக் கூட முடியாத அளவுக்கு, உடலில் துளைகள்!

எள் இருக்க இடம் இன்றி = எள் மேனியிலே தங்க முடியாத அளவுக்கு, துளைகளில் போய் சிக்கிக் கொள்கிறதே!
எத்தனை துளைகளைத் தான் நிரப்புவது? மொத்த உடலையும் எள்ளால் மூடினால் தான் உண்டு! பாவி இராமா! இப்படியா துளைப்ப்ப்ப்ப்ப்ப்பாய்?



கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் - கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ - ஒருவன் வாளி?


இவன் உடம்பும் மனசும்...எங்கெங்கெல்லாம் என் மனைவியை ஆசைப்பட்டதோ?
அந்த ஒவ்வொரு இடமாகத் தேடி...
அதில் தேங்கியுள்ள சீதையாசை என்னும் காமத்தை அழிக்கிறேன் பார்...
என்று உடல் முழுதும் தடவியதாம் ஒருவன் அம்பு! (வாளி=அம்பு)

இப்படியுமா எண்ணுவான் ஒரு ஆண் மகன்?
ஆகா! இராவணனுக்குக் காமமா? இராகவனுக்குக் காமமா?

தன்னுடைய போகப் பொருளை இன்னொருவன் வைத்திருந்தான் என்றால், அந்தப் போகப் பொருளைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம்! ஆனால் வைத்திருந்தவனின் உடம்பை....
"டேய்,  இங்கேயா வைத்துக் கொண்டு இருந்தாய்?
இங்கேயா ஆசைப்பட்டாய்?
இந்த உறுப்பா காமத்தை விரும்பியது?" என்றெல்லாம் அணுஅணுவாக யாரேனும் நுணுக்குவார்களா? இராமன் நுணுக்கினானோ இல்லையோ, அவன் வாயிலாகக் கம்பன் நுணுக்குகின்றான்! = உள்ளிருக்கும் எனக்கருதி உடல் முழுதும் தடவியதோ ஒருவன் வாளி?

எந்த அளவுக்கு அவளை உடலாலும் உள்ளத்தாலும் உரிமை கொண்டாடி இருந்தால் இப்படி யோசிப்பான் "காமுக" இராமன்?:) பிரிந்திருந்த மாதங்களின் ஒட்டுமொத்த காமமோ/காதலோ?
* இதை........இராமன் நிலையில் இருந்து "வெறியுடன்" நோக்குவதா?
* இல்லை, இராவணன் நிலையில் இருந்து "காமத்துடன்" நோக்குவதா?
* இல்லை, சீதை நிலையில் இருந்து, "தற்பெருமையுடன்" நோக்குவதா?
* இல்லை, மண்டோதரியின் நிலையில் இருந்து, "ஆற்றாமையுடன்" நோக்குவதா?
உளவியல் வல்லுநர்கள் தான் சொல்ல வேணும்! இது தான் கம்பன் கவி! கம்பன் கவியே கவி!
ஒரே ஒரு வரி = உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

சரிஈஈஈஈஈ....ஆனால் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்???
ஒரு மலரில், தேன் தானே இருக்கும்? கள் எப்படி இருக்கும்? தோண்டிப் புதைச்சி ஊற வச்சா தானே கள்ளு?

இங்கும் கம்பன் தமிழால் விளையாடுகிறான்! = கள்ளிருக்கும் + மலர்கூந்தல் + சானகி!
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதையா?
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதையா? :)

சீதை, அசோக வனத்தில், ஆ-சோகமாகத் தானே இருந்தாள்? இராகவனே இராகவனே என்று ஸ்தம்பித்துப் போய் இருப்பவள், வாழ்வைத் தொலைத்துவிட்டு....வாழாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவள்!
She exists, not lives...அழுக்கு ஆடை, செம்பட்டை முடி.....அவளா புது மலர் சூடிக் கொள்வாள்?

வாடிப் போன சம்பங்கிப் பூவைப் பார்த்து இருக்கீங்களா? அதிலிருந்து ஒழுகி ஒரு வாடை அடிக்கும்!
அவள் காட்டிலே அன்று சூடிய மலர், இராகவன் தன் கையால் வைத்துவிட்ட மலர், அது வதங்கி, இன்றும் அவள் தலையில் தான் இருக்கிறது! அதை எடுக்கக் கூட அவளுக்குத் தோனலை! அது வாடி, ஊறி, அந்தத் தேனே கசந்து போய்க் கள்ளாய் மாறி விட்டது! = கள் இருக்கும் மலரை, சூடிய சானகி!

இராவணனுக்கு அவள் உடம்பு மேல் அப்படியொரு ஆசை! காமக் கடும்புனல்!
அவள் கண் மேல் தன் கண்,
அவள் இதழ் மேல் தன் இதழ்,
அவள் முலை மேல் தன் மார்,
அவள் "அதன்" மேல் தன் "இது"!

இப்படி அவள் உடம்பு முழுக்கக் கள் பொங்குகிறது இராவணனுக்கு! பால், நெருப்பில் தான் பொங்கும்! கள்ளோ, நெருப்பு இல்லாமலேயே பொங்கும்!

கள்ளைப் பூமிக்குள் அடைத்து வைப்பது போல், அவளை மனச் சிறையில் அடைத்து வைத்தான்! அது பரிசுத்தமான காதலா? இல்லை! "கரந்த" காதல்! காமக் கடும்புனல்!
அவள் கண்ணீரிலே ஒன்றும் வடியாதவனுக்கு, அவள் உடம்பில் மட்டும் கள் வடிகிறது!  சீதை உடம்பிலே கள்= மலர் சூடிய, கள்ளிருக்கும் சானகி!

கள்ளிருக்கும் + மலர்க்கூந்தல் + சானகி
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதை!
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதை!!
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

கம்பன் கள் வாழ்க! கம்பன் தமிழ் வாழ்க!!


இந்தச் சொற்றொடரில் "கள்" இருப்பதாலோ என்னவோ கண்ணதாசனுக்கும் இதன் மேல் ஒரு மோகம்! :)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்" என்ற சொல்லாட்சியை அப்படியே எடுத்தாளுகிறார் சினிமாப் பாட்டில்! கொடி மலர் என்னும் படம்! எம்.எஸ்.வி இசை...

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை - அவள்
தேர் செல்லும் பாதையிலே தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை - தன்
பாவமில்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

கானகத்தைத் தேடி இன்று போகின்றாள்,
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி!

என் கண்ணாளா முருகா! இவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை! "என் பாவமில்லை" என்று சொல்லக் கூட இவளுக்கு ஒரு வார்த்தையும் இல்லை! கானகம் தேடிப் போகின்றாள்! முருகா, இவள் பயந்த தனி வழிக்கு நீயே துணை!

கம்பன் கவியை, இதோ, தமிழ்ச் சுவையாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் :)
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை, மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?



மக்களே, Apr-13; ஓட்டு மறக்காம போட்டுருங்க! நாளை (மட்டும்) நமதே!:)
எந்தச் சின்னமா? = தமிழ்த் துரோகச் சின்னத்துக்கு மட்டும் அல்ல! 49-O ஆச்சும் போட்டுருங்க! ஆனா ஓட்டு கட்டாயம் போட்டுருங்க!

33 comments:

  1. இளங்கிளிகள் மட்டும் தான் comnent-அணுமா - நாங்கள் முதிய ஆண்கள் கமெண்டக் கூடாதா - ம்ம்ம்ம் - அன்பின் கேயாரெஸ் - காமம் - இராமனுக்கும் உண்டு இராவணனுக்கும் உண்டு . முன்னது உரிமை உடைய காமம் - மற்றது கள்ளக் காமம். இருப்பினும் அக்கால மரபுப்படி சிறைஎடுத்து - கந்தர்வ மணம் புரியலாம் - அடுத்தவன் மனைவியாய் இருப்பினும். ஆனாலும் அது ஒருதலைக்காமமாய்த்தான் ஆனது. சீதா பிராட்டி பத்தினித் தெய்வமாய் தவக்கோலத்தில் தான் கடைசி வரை இருந்தாள். அவரையும் பாடாய்ப் படுத்தினான் இராமன் - தீப்புகச் சொல்லி. ம்ம்ம்ம்ம்ம்ம் - நலல்தொரு இடுகை - குமரன் என்ன சொல்கிறார். கோவியார் என்ன சொல்லப் போகிறார் - விஎஸ்கே என்ன சொல்வார் - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இராவணன் மனச்சிறையில் காமத்தோடு கள்ளும் இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம் போல இருக்கே...

    அப்போ,இன்னொரு பாரா எழுதனுமோ பதிவில...

    ReplyDelete
  3. ippadiyum oru paarvai. ravi unggaLAlthaan mudiyum.
    mika suvaiyaana pathivu. kaLLiruppathaaloo:)

    ReplyDelete
  4. தொடக்கத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இலக்கியநயம் பேசுவதாகச் சொல்லி இல்லாத பழியெல்லாம் இறைவன் மீது போட்டு அழகுபார்க்கும் இந்தப் பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை.

    கம்பன் எழுதிய வரிகளைச் சொல்வதாகப் படைக்கப்பட்டிருக்கும் பாத்திரம் மண்டோதரியின் கூற்று இதெல்லாம்.
    அவளுக்குத்தான் தெரியும் தன் கணவனின் கள்ள மனமும், காமமும்.
    எத்தனையோ பெண்களை இப்படிக் கொண்டுவந்து கொடுமை செய்த ராவணனின் குணநலன்....?? குணக்கேடு.... தெரிந்ததாலேயே அவளிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை பிறப்பதாகக் கம்பன் சொல்லியிருக்கிறான்.
    அதைப்போய் ராமன் இவ்வாறு நுணுக்கினான் என எழுதியிருப்பது சரியாகப் படவில்லை.... என்னதான் ஒப்புக்கு மண்டோதரியின் ஆத்தாமையா என ஒரு வரி கடைசியில் சேர்த்திருப்பினும்.

    காமுக ராமன், காம ராமன் என்றெல்லாம் சொல்லியிருப்பது மனத்தை வருத்துகிறது.
    தனக்குக் கசக்கக்கூடாதே என ராகவனை இப்படியா கசக்குவது!
    அவன் கருணையுள்ளவன். இதையும் ஒரு சிரிப்புடன் ஏற்றுக்கொள்வான். ஆனால், இதை எழுதியது அவனுக்காக இல்லையே! படிக்கின்றவருக்காக. அவர்களில் சிலரால் இதனைத் தாங்க இயலாது. என்னையும் சேர்த்து.


    முதலில் அவதாரம் என்றால் என்ன எனப் புரிய வேண்டும்.
    ஒரு நோக்கத்துக்காக மட்டுமே கீழே இறங்கிவரும் தெய்வாற்றல், அந்தக் காரியம் முடிந்ததும், மீண்டும் திரும்பிச் சென்றுவிடும். அதன் பிறகு, அந்த அவதார மகிமை இல்லாத அந்த உடலும், உயிரும் ஒரு மானுடமே. மற்றெல்லாரும் அனுபவிக்கும் அனைத்தையும் அதுவும் அனுபவித்தே கடைத்தேறும்.
    நரசிம்மரைப் போல, வெறும் ஒன்றரை நாழிகைக்கு மட்டும் வந்துவிட்டுப் போகின்ற அவதாரமாக ராமாவதாரம் நடக்கவில்லை.
    தேவர்களைக் காத்து, பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கவென ராவண வதத்தை நிகழ்த்தியதும் அதன் பணி முடிந்து சென்றுவிட்டது.
    அதன் பின்னர் அங்கிருந்தவன், ராமன் என்னும் ஒரு அயோத்தி மன்னனே!

    அதனால்தான், வால்மீகி சொன்னதை லவகுசர்கள் பாடி வரும்போது, இதெல்லாம் நானா செய்தேன் எனக் கண்ணீர் உகுக்கிறான்.

    கண்ணன் கதையும் அப்படியே.

    இதே போலத்தான் நாம் காணுகின்ற பல மகான்களின் வாழ்க்கையும்.... சாயிபாபா உட்பட!

    இதற்கு மேல் இதில் சொல்ல ஒன்றுமில்லை.
    என் கருத்தில் ஏதேனும் தவறெனில் மன்னிக்கவும்.

    இப்படியெல்லாம் எதிர்வாதம் வரும், வரணும் என்பதற்காகப் போடப்பட்ட பதிவு மாதிரி இருக்கிறது. ஆனால், வாதம் புரிய நான் தயாரில்லை. வணக்கம்.

    இராமராம இன்னமுதே~!

    ReplyDelete
  5. @சீனா ஐயா
    //அன்பின் கேயாரெஸ் - காமம் - இராமனுக்கும் உண்டு இராவணனுக்கும் உண்டு . முன்னது உரிமை உடைய காமம் - மற்றது கள்ளக் காமம்//

    மிகச் சரியாகச் சொன்னீங்க ஐயா!
    ஏதோ காமம் என்றாலே தகாத சொல் போலவும், இராமன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று சொல்லிச் சொல்லி, நம்ம மக்கள் இராமனையும் இன்னொரு நித்தியானந்தா ஆக்காம இருந்தாச் சரி! :)

    * இராவணன் காமம் = காமித்தவளையே கொடுமை செய்து பார்க்கும் காமம்! அதான் அடங்காமல் போனது!
    * இராமன் காமம் = உரிமையுடைய காமம்! அடங்கிப் போனது!

    //நலல்தொரு இடுகை - குமரன் என்ன சொல்கிறார். கோவியார் என்ன சொல்லப் போகிறார் - விஎஸ்கே என்ன சொல்வார் - பொறுத்திருந்து பார்ப்போம்//

    :)
    VSK சொல்லிட்டாரு! மற்ற இருவரும் வரும் வரை, கம்பன் கள்ளை மாந்துவோம்! :)

    ReplyDelete
  6. @அறிவன்
    //அப்போ,இன்னொரு பாரா எழுதனுமோ பதிவில...//

    ஆகா! எழுதிட்டாப் போச்சு! :)
    இராவணன் மனத்தில் கள் இருக்கு! அந்தக் கள் மனத்தில் சானகியைக் கரந்தான் என்பதும் பொருத்தமே!
    ஆனால் இராவணன் போல ஒரு சுகவாசி, மனத்தில் கள்ளை வைப்பானா? வாயில் கள்ளை வைப்பானா-ன்னு தான் சந்தேகம்! :)

    கள்ளை உடம்பிலும் (புறத்திலும்)
    காமத்தை மனதிலும் (அகத்திலும்)
    என்று புழங்கும் போதே கம்பன் கவி மிளிர்கிறது!

    ReplyDelete
  7. @வல்லியம்மா
    //ppadiyum oru paarvai. ravi unggaLAlthaan mudiyum//

    ஆகா! வாரியார் சொல்லாததையும் சேர்த்துச் சொல்லிட்டேனோ?
    இலக்கியத்தை இலக்கியமாப் பார்த்தால் யாராலும் முடியும் வல்லீம்மா! :)

    //mika suvaiyaana pathivu. kaLLiruppathaaloo:)//

    கள் இறக்கும் போது குடித்தாலே கொஞ்சம் கிர்ர்ர்ர்ரும்....ஊறல் வச்சிக் குடிச்சா அம்புட்டுத் தான் போலிருக்கே! :)

    ReplyDelete
  8. VSK ஐயா, விரிவான கருத்துக்களுக்கு நன்றி! :)

    ReplyDelete
  9. VSK ஐயா சுட்டிக் காட்டியவற்றுக்கு வருவோமா?
    //இலக்கியநயம் பேசுவதாகச் சொல்லி இல்லாத பழியெல்லாம் இறைவன் மீது போட்டு//
    இராமன் இறைவன் அல்ல! மனிதன்! மனிதனாய் வாழ்ந்து காட்டவே வந்தவன்!

    //மண்டோதரியின் கூற்று இதெல்லாம்.
    அவளுக்குத்தான் தெரியும் தன் கணவனின் கள்ள மனமும், காமமும//
    உண்மை! பதிவில் மறுக்கவில்லையே!

    //குணக்கேடு.... தெரிந்ததாலேயே அவளிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை பிறப்பதாகக் கம்பன் சொல்லியிருக்கிறான்//
    இறந்த கணவனைப் பார்த்து அழும் ஒரு நல்ல குலமகள்..."ஐயோ, வசந்தாவை வைச்சிருந்த பாவி, சரோஜாவை சைட் அடித்த சண்டாளா, கனகாவை கரெக்ட் பண்ணிய காமாந்தா"-ன்னு எல்லாம் அழமாட்டாள்! :) அப்பறம் ஏன் கம்பன் இப்படிக் காட்ட வேணும்?

    அன்னை மண்டோதரி இப்படி அரற்ற வில்லை! எள் துளைக்கவுமில்லா உடம்பைப் பார்த்தவுடன், மனத்தால் இப்படி நினைக்கின்றாள்! அவ்வளவே! மண்டோதரியின் கற்பனையாகவே இருக்கட்டும்! ஆனால் இத்தனை அம்புத் துளைகள் எதற்கு? அதற்குப் பதில் சொல்லுங்களேன் பார்ப்போம்!

    //அதைப்போய் ராமன் இவ்வாறு நுணுக்கினான் என எழுதியிருப்பது//
    பதிவைப் பதிவில் இருந்து வாசிக்காம, அவங்கவங்க மனசில் இருந்து வாசிச்சா இப்படித் தான்! :)
    இராமன் நுணுக்கினானோ, இல்லை அவன் மூலமாகக் கம்பன் நுணிக்கினானோ-ன்னு பதிவில் சொல்லி இருக்கேனே! பார்க்கலையா SK ஐயா?

    ReplyDelete
  10. //காமுக ராமன், காம ராமன் என்றெல்லாம் சொல்லியிருப்பது மனத்தை வருத்துகிறது. தனக்குக் கசக்கக்கூடாதே என ராகவனை இப்படியா கசக்குவது!//

    இராகவனே நானே கசக்குவேனா?
    காமம் - கெட்ட சொல்லா என்ன?

    மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோ ரெம்பாவாய்! ஐயனின் "காமத்துப்" பால்!
    காமம் என்பது ஏதோ ஒரு untouchable! இராமன் அதையெல்லாம் கடந்த புனிதன் என்ற பாவனை தான், இது போன்ற "வருத்தங்களுக்கு" காரணம்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ SK ஐயா!

    இப்படித் தான் சாமியார்கள் கிட்டவும் சிக்கிக் கொள்கிறோம்! பின்னாளில் அவர்களின் "காமம்" வெளிவரும் போது, ஆற்றாமையே மிஞ்சுகிறது!

    //முதலில் அவதாரம் என்றால் என்ன எனப் புரிய வேண்டும்//
    ஹா ஹா ஹா!

    //தேவர்களைக் காத்து, பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கவென ராவண வதத்தை நிகழ்த்தியதும் அதன் பணி முடிந்து சென்றுவிட்டது//

    மாபெரும் தவறு! பிழையான கருத்து! அவதார நோக்கம்: ராவண வதம் அல்ல!
    அதென்ன ஆன்னா ஊன்னா, தேவரைக் காத்தல்? ராவண வதம் தான் நோக்கம் என்றால், ஒரு வேல் எறிஞ்சாப் போதுமே! ஒரு சக்கரம் வீசினாப் போதுமே! எதுக்கு பொறந்து, காடேகி, காதலிச்சி, கஷ்டப்பட்டு, சந்தேகப்பட்டு...எல்லாம்?

    இராவண வதம் தான் நோக்கம் என்றால், எதுக்கு முதற்கண் நல்லா இருந்த ஜயவிஜயர்களை, இராவணனா பொறக்கச் சொல்லோனும்? அதை யோசிச்சா, இராவண வதம், பூமி பாரம்-ன்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்க மாட்டோம்!

    தானும்-தன் உறவும் சேர்ந்தே இறங்கி வருதல் = அதுவே அவதாரம்!
    நாமெல்லாம் பிறவியைக் கடக்க, அது பிறந்து வருதலே = அவதாரம்!
    பிறந்து, நல்லது-தீயது ரெண்டுமே செய்துகாட்டி, உணர வைப்பதே = அவதாரம்!


    இதைப் புரிந்து கொள்ள "கருணை" என்ற அடிப்படை வேணும்!
    வெறுமனே அஷ்டாங்க யோக மகா சித்தி, ஞான யோகம், கர்ம யோகம்-ன்னு அடிப்படை இருந்தால் புரியாது! :)

    //இப்படியெல்லாம் எதிர்வாதம் வரும், வரணும் என்பதற்காகப் போடப்பட்ட பதிவு மாதிரி இருக்கிறது//
    ஹா ஹா ஹா!

    //இதற்கு மேல் இதில் சொல்ல ஒன்றுமில்லை. என் கருத்தில் ஏதேனும் தவறெனில் மன்னிக்கவும்//
    ஆகா! கருத்தைக் கருத்தாகப் பேசுவதற்கு ஏன் இந்தப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?
    என் ஆருயிர்த் தோழன் தான்!ஆனாலும் வைக்காத மாற்றுக் கருத்துக்களா என்ன? :)

    //இராமராம இன்னமுதே~!//
    :)
    என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!

    ReplyDelete
  11. @KRS:
    1. Great post
    2. Puthaandu vazhthukkal
    3. ur "welcome board" for me is not working. Or, does it not work in some countries? i am not in india now.
    4. As i was coming abroad, i carried the flowers i got from psp in my handbag (half the time, i thought the customs officer may think it is a new type of bomb) :)

    i saw it wither away, slowly, slowly, till yday, when my sis laughed at me for being stupid enough to pack flowers into my bag in the hurry of packing [!!!] She had thrown it away. :(((
    So, imagine my surprise when i came saw ur post!!!

    ReplyDelete
  12. @KK
    சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    The tamizh typing board script might have been blocked by your local ISP. You can always use google anywhere. http://www.google.com/transliterate

    என்னாது, புஷ்ப வெடிகுண்டா? :) ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பண்ணாப் போல பண்ணி இருக்கீங்க! :)
    முருகனின் திருமேனி மலர்கள் எப்பமே வாடின பின் தான் அதிக மணம்! மலரின் மணம் போய், அவன் மணம் மட்டும் அதில் இருக்கும்! அது எனக்கு ரொம்ப பிடிக்கும்! கள்ளிருக்கும் மலர் அதுவே! :)

    ReplyDelete
  13. SK சொன்ன போதே சொல்லனும்-ன்னு நினைச்சேன்! அவதாரம் கொஞ்ச நேரம் தான்! மத்த நேரத்தில் எல்லாம் அது சாதாரண மனித உடலே-ன்னு சொன்னார்! எங்கிருந்து இப்படி ஒரு "ஐடியா" அவருக்கு கிடைச்சுது-ன்னு தெரியலை! :)

    எந்த நூலை எடுத்தாலும், அது உபநிஷத்தோ, பாரதமோ, பாகவதமோ...இது தவறு-ன்னு தெரிஞ்சிடும்!

    அவதாரம் = சும்மா தேவாளைக் காக்க, இராவணனைக் கில்ல, அந்த instant நேரத்துக்கு மட்டும் செய்யப்படும் wire transfer அல்ல!
    அது, கர்ப்பத்திலே வந்து தங்கி, பிறந்து, வெண்ணை திருடி உண்டு, மொத்து வாங்கி, காதலித்து, வீரம் புரிந்து, அறம் புரிந்து, வாழ்க்கை என்பது முழுக்க வாழ்ந்து - இப்படித் தான் வாழ வேணும் என்பதை எடுத்துக் காட்டியே மறையும்! இதைக் கீதையில் கண்ணனே அருச்சுனனுக்குச் சொல்கிறான்! "பார்த்தா - நீயும் யுகம் தோறும் பிறக்கிறாய், நானும் பிறக்கிறேன்! உன் பிறவிகளை நீ அறிய மாட்டாய், ஆனால் என் பிறவிகளை, உன் பிறவிகளை நான் அறிவேன்! நீ பிறந்தால் பிறப்பு என்பார்கள்! நான் பிறந்தால் அவதாரம் என்பார்கள்! என் அடியார்கள் பிறந்து கொண்டே இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நான் பிறந்து கொண்டே இருக்கின்றேன்! இது என் இச்சை!"

    அவதாரம் என்றால் இப்போ சற்றுப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்! அந்த நேரத்துக்கு மட்டும் செய்யப்படும் Instant Transfer அல்ல! அவதாரம் தோற்றம் முதல் முடிவு வரை = முழுக்க முழுக்க அவதாரமே! நம் பொருட்டே!

    ReplyDelete
  14. அவரைச் சும்மா அவதாரம், அவதாரம் என்று எதற்கெடுத்தாலும் ஓவராக ஏத்தி விடுதல் என்பதை இலக்கியமும், ஆன்மீகமும் செய்யவே கூடாது!
    அது அந்த அவதார நோக்கத்துக்கே முற்றிலும் மாறாகப் போய் விடும்!
    "அவிங்க எல்லாம் அவதாரம்-ப்பா! நாமளோ சாதாரண மனுசங்க! நம்மால முடியுமா?" என்று மனிதன் எஸ்கேப் ரூட் தேடிக்கொள்வான்! இதற்காகவா அவதாரம்? //

    ஆன்மீகத்தில் ஒருவர் பிரபலமானால் நம்மவர்கள் ஒரு Formet வச்சிருக்காங்க

    அவர் எந்த வருடத்தில் பிறந்தார்
    அவர் அம்மா அப்பா யாரு
    அவர் என்ன குலம்
    அவர் முன் பிறவியில் என்னவாக பிறந்தார்
    அவர் யாருடைய அவதாரம்
    இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணியே சொன்ன கருத்தை விட்ருவாங்க

    நம்மாழ்வார் நாதாமுனிகளிடம் ஆழ்வார்களின் பிறந்த ஆண்டையோ அவர் யாரின் அவதாரம் என்றோ சொல்ல வில்லை பாசுரத்தை மட்டுமே கூறினார் என்று கருதுகிறேன்
    சொன்ன கருத்தை மட்டும் ஆராய்ச்சி செய்தால் போதும்:)

    ReplyDelete
  15. வாரியார் சுவாமிகளின் கம்ப இராமாயணப் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இருந்தேன், இருந் தேன், அது நறுந் தேன்! அம்புட்டு போதை! //

    போதைக்கு அடிமை ஆயிடீங்களா
    போதை இல்லாம உயிர் வாழ முடியாதுன்னு தோணுமே:)

    ReplyDelete
  16. இராமன் தப்பே பண்ண மாட்டான்! அப்படியே பண்ணாலும் அது தப்பே இல்ல! ஆனா அடியவனான ஆஞ்சநேயன் தப்பு பண்ணுவான்! தான் என்ற எண்ணத்தால் இன்னொருவர் செய்த லிங்கத்தை வாலால் அசைத்துப் பார்ப்பான்-ன்னு "கப்ஸா" எழுதி வைப்போம் :))

    அதுக்கு பஞ்சமே இல்ல

    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்* பொய்நூலை மெய்ந்நூல் என்று என்றும் ஓதி
    மாண்டு* அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை* கணங்கள் ஏத்தும்
    நீண்ட வத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தைத் தொத்து ஆர் சோலை*
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே

    ReplyDelete
  17. கம்பன் கவியை, இதோ, தமிழ்ச் சுவையாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் :)
    கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை, மனச்சிறையில் கரந்த காதல்
    உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் முழுதும் தடவியதோ ஒருவன் வாளி?

    ..........!!)

    ReplyDelete
  18. பல ஆரங்களுக்கு நடுவில அவதாரத்துக்கு விளக்கம் சொன்னீங்க பாருங்க...வாழ்ந்து காட்டுதல்..
    அருமை...

    அசஞ இந்தப் பொருளில் ஒரு கட்டுரையே எழுதி இருக்கார்.தேடிக் கிடைச்சா படிச்சுப் பாருங்க.
    நன்னி.

    ReplyDelete
  19. @ராஜேஷ்
    //நம்மாழ்வார் நாதாமுனிகளிடம் ஆழ்வார்களின் பிறந்த ஆண்டையோ அவர் யாரின் அவதாரம் என்றோ சொல்ல வில்லை பாசுரத்தை மட்டுமே கூறினார் என்று கருதுகிறேன்//

    கலக்கறீங்க! :)

    //போதைக்கு அடிமை ஆயிடீங்களா//

    இல்லை; போதை இப்போ எனக்கு அடிமை ஆயிருச்சி! :)
    அப்பப்போ நானும் முருகனும் இப்படி மாறி மாறி ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமை ஆகிக்குவோம்! :)

    ReplyDelete
  20. @ராஜேஷ்
    //பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்*
    பொய்நூலை மெய்ந்நூல் என்று என்றும் ஓதி//

    ராஜேஷ் - இது ஏதோ பாசுரம் மாதிரி என் சிற்றறிவுக்கு தெரியுது! சரி தானே? :)
    குமரன் பின்னூட்ட விதி தெரியும்-ல்ல?

    இப்படி ராவா போட்டா எப்படி புரியும் சொல்லுங்கோ-ன்னு முன்பு ராஜேஷ் ராஜேஷ்-ன்னு ஒரு மானஸ்தர் என்னைய மடக்கினாரு! :))

    ReplyDelete
  21. @அறிவன்
    //பல ஆரங்களுக்கு நடுவில அவதாரத்துக்கு விளக்கம் சொன்னீங்க பாருங்க...வாழ்ந்து காட்டுதல்..
    அருமை...//

    :)
    வையத்துள் "வாழ்வு-ஆங்கு வாழ்பவன்" வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்!

    //அசஞ இந்தப் பொருளில் ஒரு கட்டுரையே எழுதி இருக்கார்.//

    பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் கம்பத் தமிழுக்கு கேட்கணுமா? சுட்டி இருந்தா கொடுங்க அறிவன்!

    ReplyDelete
  22. "அவதாரம்" பற்றிய இன்னுமோர் குறிப்பு:

    பொதுவா, "பிறப்பிலி", "தாயிலி" என்பதை ஏதோ ஒரு பெருமையான நிலை போல் சில தத்துவவாதிகள் காட்டி விட்டனர்! தாயின் கர்ப்ப வாசம் என்பது ஏதோ இழிவு போல தத்துவ அடுக்கு அடுக்கப்பட்டு விட்டது!
    சில உபன்னியாசகர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், "ராம நவமி/கிருஷ்ண ஜெயந்தி-ன்னு எல்லாம் இருக்கு, ஆனா முருக ஜெயந்தி-ன்னு ஒன்னு இருக்கா? பிறவான் இறவான் அவனே இறைவன், பிறப்பு என்பதோர் தாழ்மை"-ன்னு பேச நானே கேட்டிருக்கேன்! :)

    உலகம் மாயை-ன்னு சொல்றவங்க தான் பெரும்பாலும் இப்படி, கர்ப்ப வாசம்/பிறவியைத் தாழ்த்துவது!
    I just dont accept this! கர்ப்ப வாசம் = தாழ்மையா? தாய்மையா?

    ஆண்டாள், எற்றைக்கும் ஏழேழ் "பிறவி உன் தன்னோடு"-ன்னு தானே கேட்கிறாள்!
    நாயன்மார்கள், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்-ன்னு தானே சொல்றாங்க!

    ஆனால், சில தத்துவ/சமயவாதிகள் தான், ஏதோ பெருமையடிச்சிக்கும் புத்திக்காக இப்படியெல்லாம் சொல்வது! இதனால் தங்களையும் அறியாமல் என் முருகனைத் தாழ்த்தவே செய்கிறார்கள்!

    முருகன் வள்ளியைப் "பிறந்து நம்மை அடைவாய்"-ன்னு சொல்லலையா? "பிறவாள், இறவாள்" பெருமை அவளுக்கு இல்லையா? எதுக்குப் பிறக்கச் சொன்னான்? = நமக்காக!
    காதலை ஏற்றுக் கொள்வானா என்று தெரியாத நிலையிலும், அவனே அவனே அவனே என்று இருக்கவல்ல காதலை உலகம் உணர்ந்து கொள்வதற்காக! தாயீ வள்ளி - உன் பாதம் வருடிய மணவாளா!

    அதைப் புரிந்து கொள்ளாமல்...முருக ஜெயந்தி-ன்னு ஒன்னு இல்ல, இதுவே உயர்வு, இறை லட்சணம் என்றெல்லாம் வாயில் வந்ததைப் பேசித் திரியும் ஒரு கூட்டம்! :) வெத்துப் பெருமை!!
    ஆனால் முருகனின் கருணை என்னுமோர் குணம் இதனால் அடிபட்டுப் போகிறது என்று புரிந்து கொள்ள மாட்டார்கள்! இறைவனை விட்டுவிட்டு மதத்தை மட்டுமே பிடித்துக் கொள்ளும் "Intellectuals" இவர்களே!

    அவதாரம் = நாம் பிறக்காமல் இருக்க, அவன் பிறப்பது!
    அதுவன்றோ தியாகம்? தாய்மை?
    அவதாரம் = வையத்துள் வாழ்வு-ஆங்கு வாழ்பவன், வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்!


    பிறவான்-இறவான், பிறப்பிலி, தாயிலி என்ற இலக்கியச் சொற்கள் எல்லாம் பெருமையடித்துக் கொள்வதற்காக அன்று! அவதாரம் என்னும் பிறப்பு-இறப்பு நிலையில் தான் இறைவனின் "கருணை" பரிமளிக்கிறது! பிறப்பிலி என்ற வெத்துச் சொல் தான் வேணும்-ன்னா, அது திருமாலுக்கும் இருக்கு! = பிறப்பில் பல்பிறவிப் பெருமான்!

    நம்மாழ்வாரின் திராவிட வேதமான திருவாய்மொழி! இதோ:
    சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
    இறப்பில் எய்துக, எய்தற்க! யானும்
    பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
    மறப்பு-ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே!

    பிறப்பு இல்-ன்னு சொல்லிட்டு, பல்பிறவி-ன்னும் சொல்றாரு! இது என்ன முரண்தொடை?
    நமக்கு அரண் செய்ய அவனுக்கு முரண் செய்து கொள்கிறான் = பிறப்பில் பல்பிறவிப் பெருமான்!
    அதே நோக்கம் தான் வள்ளியும் முருகனும்! அதுவே பரங்"கருணை"! என் ஆசை முருகன் என்றுமே பிறவான்-இறவான் போன்ற வார்த்தை மேலாளத்தனங்கள் செய்வதில்லை! பிறப்பில் பல்பிறவிப் பெருமான் - வள்ளிமுருகப் பெருமான் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  23. அழகான விளகங்களுடன் எப்படி
    முடிகிறது இவ்வளவையும் பதிவு செய்ய முடிகிறது உங்கள் தொழில் மாறியிருந்தால் தமிழ்லிற்கு நல்ல பண்டிதர் கிடைத்திருப்பார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்* பொய்நூலை மெய்ந்நூல் என்று என்றும் ஓதி
    மாண்டு* அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை* கணங்கள் ஏத்தும்
    நீண்ட வத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தைத் தொத்து ஆர் சோலை*
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே//

    எனக்கு புரியுது அப்ப எல்லாருக்கும் புரியும் என்ற எண்ணம் கண்ணை மறைத்து விட்டது .
    மிக்க நன்றி ஞாபகபடுத்தியதற்கு :)


    பூண்டு அவத்தம் - (மாற்றி படிக்க) பூண்டு அவத்தம் - பயனற்றவைகளை ஏற்று கொண்டு
    பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் - பிறரிடம் தஞ்சம் அடைந்து தொண்டு செய்து
    பொய்நூலை மெய்ந்நூல் என்று - பொய்நூலை உண்மையான நூல் என்று
    என்றும் ஓதி மாண்டு அவத்தம் போகாதே - எப்போதும் படித்து கடைசியில் இறந்து வீணா போகாதே
    வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை - வாருங்கள்! என் தந்தை என்னால் வணங்கப்படுபவனை
    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தைக் - ஞானியர்களால் போற்றி வழிபடும் நீண்ட கைகளை உடைய
    கருமுகிலை எம்மான் தன்னை - கரிய மேகமான எம் இறைவனான அவனை
    நின்றவூர் நித்திலத்தைத் - திருநின்றவூர் திருத்தலத்தில் உள்ள முத்தை
    தொத்து ஆர் சோலை காண்டவத்தைக் - கொத்து கொத்தாக உள்ள மரம் செடிகள் பூக்கள் கொண்ட சோலையான காண்டவனத்தை (எரிக்க )
    கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் - கடுமையான சூடான நெருப்பை அக்னி வாயில் பெய்வித்தவனை
    கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே - கண்டது நான் கடல் மல்லை தல சயனத்திலே

    விளக்கம்:-
    பயனற்றவைகளை ஏற்று கொண்டு, பிறரிடம் தஞ்சம் அடைந்து அவர்களுக்கு சேவைகள் செய்து, ஏதேதோ பொய்யான புத்தகங்களை எல்லாம் உண்மையான புத்தகங்கள் என்று எண்ணி எந்நேரமும் அவற்றை வீணாக படித்து கொண்டு காலத்தை வீணாக்கி கடைசியில் இறந்து பயனற்று போகாதீர்கள்.

    வாருங்கள்! என் தந்தையானவனும், என்னை போன்றவர்களால் வணங்கப்படுபவனும், ஞானியர்களால் போற்றி வழிபடுபவனை கேட்பவர்களுக்கு தேடி சென்று கொடுக்கும் நீண்ட கைகளை உடைய கருமையான மேகம் போன்றவனை, என்னோட இறைவனானவனை, திருநின்றவூர் திருதலத்தில் வசிக்கும் என் முத்தை, காண்டாவனத்தை எரிக்க, நல்ல சூடான நெருப்பை அக்னியில் வாயில் மழை போல பெய்வித்தவனை, கண்டது நான் (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!
    -----

    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
    விளக்க உரை - sourse:www.dravidaveda.org

    அவத்தம் பூண்டு ஸ்ரீ அவத்தமாவது அவத்யம்; பொல்லாங்கு; ஸ்வரூபத்துக்கு ஹாநியை விளைக்கவல்ல காரியங்களைச் சொன்னபடி. ஸாத்விகர்களோடு ஸஹவாஸம். வைதிக புருஷார்த்தங்களைப் பெற வேணுமென்னும் விருப்பம் முதலியவற்றைத் தவிர்ந்து, ராஜஸர்களோடும் தாமஸர்களோடும் உறவு பண்ணுதல், நரகத்துக்கு வழிதேடிக்கொள்ளுதல் முதலிய தீமைகளை ஏறிட்டுக்கொண்டு க்ஷத்ரமநுஷ்யர்களிடத்தில் இழி தொழில் செய்தும், மதாந்தரஸ்தர்கள் ப்ரமத்தினாலும் வஞ்சனையினாலும் தப்புந்தவறுமாக எழுதிவைத்த புத்தகங்களை மெய்யான சாஸ்த்ரமென்று கொண்டு அவற்றோடே போது போக்கியும் பாழாய்ப்போகிற மனிசர்களே! இவ்விதமாக நீங்கள் கெட்டுப்போகாமல் என் சொல்லை ஆதரித்து இப்படி வாருங்கள்-என்று ஆழ்வார் அன்பார்ந்த சிந்தையராய் அழைத்தவிடத்தலும் ஒருவரும் மீண்டுவரக்கானாமையாலே, அவர்களை விட்டொழிந்து. திருக்கடல்மல்லைப் பெருமானைத் தாம் ஸேவிக்கப்பெற்ற பாக்கியத்தை வாயாரச் சொல்லி மகிழ்கிறார்-Thirumangai aazhvaar

    ReplyDelete
  25. அருமை! அருமை! அருமை!
    இப்பதிவை படித்ததால்
    எனக்கு தமிழ் மேலும் மேலும் இனிக்கிறது :-) இராகவன் மேலும் இனிக்கிறான் :-), இராவணனும் இனிக்கிறான் :-), கம்பஇராமாயணம் மேலும் இனிக்கிறது :-)

    வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    ReplyDelete
  26. @ராஜேஷ் - நன்றி பாசுர விளக்கத்துக்கு! ராதா இல்லாத குறையைத் தீர்த்து வச்சீங்க! :)
    பூண்டு அவத்தம் பாசுரம் படிக்கும் போதெல்லாம் எனக்கு பூண்டுக் குழம்பு வேற ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது! :))

    ReplyDelete
  27. @நேசன் - தமிழுக்குப் பண்டிதர் கெடைச்சி இருப்பாரா? ஐயோ, நான் தொழிலை மாத்திக்கறதா எண்ணமில்லீங்க! :)
    தமிழ்நாட்டுல, கலைஞர், புலவர்கள்-ன்னு இருக்குற பண்டிதர்களே போதும்! "தொண்டிதர்"கள் தான் இப்போ தமிழுக்குத் தேவை!

    ReplyDelete
  28. @பிரசாத்
    நலமா? என்ன ஆளையே காணோம்? :)

    //இப்பதிவை படித்ததால் எனக்கு தமிழ் மேலும் மேலும் இனிக்கிறது :-) இராகவன் மேலும் இனிக்கிறான் :-), இராவணனும் இனிக்கிறான் //

    சூப்பரு!
    தமிழ் இனிக்கிறது என்று பலர் சொல்லிக் கேட்பது எனக்கும் இனிக்கிறது! :)

    ReplyDelete
  29. தம்பி.. ஒரு வாரமா பந்தலில் வருந்தேன் பருகாமல் இருந்தேன்... ( நாக்க துருத்துறேன்.. ச்சும்மா உன்னை கலாய்க்கத்தான்)
    //ஏதோ காமம் என்றாலே தகாத சொல் போலவும், இராமன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று சொல்லிச் சொல்லி, நம்ம மக்கள் இராமனையும் இன்னொரு நித்தியானந்தா ஆக்காம இருந்தாச் சரி! :)//
    இதை காப்பி குடிச்சிட்டிருக்கப்ப படிச்சேன்.. நல்ல வேளை சிரிச்சதுல சட்டையில தெறிக்கல..மனுச ப்பயலால தன்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னு இறுமாப்புல ராவணன் வரம் வாங்கி வந்துட்டான்.. அப்புறம் மனுசனுக்கு உரிய இயல்போடத்தானே ராம அவதாரமும் இருக்கணும்? காமமில்லாத மனுசப்பிறவி எப்படி சாத்தியம்? வாலி வதம், சீதை தீக்குளிப்பு,விசுவாமித்திரர் கிட்ட இருந்து ஆயுதம் வாங்கியது எல்லாமே இதுல அடங்கும்.

    thambi.. this unicode editor is not working for me too... and typing in azhagi, then cut paste is difficult.. so i'll continue in elle ilangiliyae directly ( un katturaigal pandae ariyamal poyiducho?)
    I mean.. this post is very nice.. and kamban sol, especially the vaaLi searching for seetha.. enna oru nayam, karpanai? athu thaan bharathiyar solleettarulla.. appealae kedaiyathu..

    கோதை சொல்லுக்கு நீ எழுதிய விளக்கம் ரொம்ப பொருத்தம்.

    and this time when i was driving bike in ECR I remembered that only..

    ReplyDelete
  30. உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?-என்பதுதானே கவிக்கூற்று? சில இடங்களில் உடல் 'முழுதும்' என்று சொல்வதில் என்னமோ கொஞ்சம் ஊனப்பட்டாற்போல் உணர்வதைத் தவிர்க்கமுடியவில்லை. மற்றபடி தங்களின் இலக்கிய ஆர்வமும் அதற்கான உணர்வும் புலமையும் பாராட்டிற்குரியன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. @அமுதவன்
    உடல் "புகுந்து" தடவியதோ என்பதே கம்பன் கவி! உடல் "முழுதும்" தடவியதோ என்று பதிவில் சிற்சில இடங்களில் வந்துவிட்டது! பாட்டை நினைவில் இருந்து அவசரத்தில் தட்டச்சியது! பிழை என்னுடைதே! மன்னிக்கவும்! :)

    ReplyDelete
  32. @சரவணன் அண்ணா
    தட்டச்சுப் பலகை இங்கு வேலை செய்யுதே! சரி, என்னான்னு பாக்குறேன் இருங்க! Why all this hassle? Just download NHM Writer! Palagai is for newbies only! You are not a newbie :)

    //காமமில்லாத மனுசப்பிறவி எப்படி சாத்தியம்?//
    அதானே! எப்படிச் சாத்தியம்?
    மற்றை நம் காமங்கள் மாற்று மாற்று!
    என் முருகனின் காமங்களை எனக்குள் ஏற்று ஏற்று! :)

    ReplyDelete
  33. //கீதையோ, வேதாந்தமோ சற்றே தாழ்வானது! ஆழ்வார்களின் ஈரத் தமிழோ அதனினும் உயர்வானது!
    ஆழ்வாரின் ஈரத் தமிழை, கண் ஈரம்-மன ஈரம் கொண்டே அணுக முடியும்!//

    உண்மைதான். உண்மையான இறை அனுபத்தை கண்-ஈரம், மன-ஈரம் கொண்டே உணரமுடியும்.

    “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
    உன் விரையார் கழற்கு என்
    கைதான் தலைமேல்வைத்துக் கண்ணீர் ததும்பி” ன்னு மாணிக்கவாசகர் சொல்வது நினைவுக்கு வருது.

    ”காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” ன்னு ஆழ்வார் சொல்வதும் நினைவுக்கு வருது.

    உங்க வலைப்பூ பார்த்ததுக்கு பிறகு நிறைய படிக்க ஆரமிச்சிருக்கேன். உங்க கிட்ட ஒரு உதவி கேட்கணும். எனக்கு குருந்தொகை படிக்கணும் னு இருக்கு. எந்த உரை எளிமையா இருக்கும் னு சொன்னீங்க னா உதவியா இருக்கும். நன்றி

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP