Saturday, November 05, 2011

பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

திருக்கோயிலூரில் அடை மழை! கும்மிருட்டு!

அந்தப் பயணி, ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்'ஷ்'டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை!

"அருளிச் செயல்" (4000 திவ்யப் பிரபந்தம்) தன்னோட வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?



பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா?
இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது!

(ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!
திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி!
சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!)

வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி....

டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்!

பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!!

--------------
மீண்டும் டொக் டொக் டொக்! - இன்னொருவர் தட்டுகிறார்!

பேய்: ஐயா, என் பெயர் பேயோன்; நான் மயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக்கறேனே!

பொய்கை: எனக்கு உரிமை இல்லாத இடத்தில், இவங்க ஒவ்வொருத்தரையும் வாங்க-ன்னு கூப்புடுறேனே! இது என்ன விந்தை!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, பேசிப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்! ட்விட்டரில் நாம் கழிப்பதைப் போலவே :)


திடீரென்று...கும்மிருட்டில்...மூவருக்கும் மூச்சு முட்டுது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போ நாலாவதா யாரோ பிடிச்சி நெருக்கறாங்க! அப்பறம் விட்டுடறாங்க! மறுபடியும் நெருக்கறாங்க....
அச்சோ.....இப்படிப் போட்டு நெருக்கினா எப்படி? வலிக்குதே!! - கள்வனோ?


யாருப்பா இந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்னுமே இல்லாத அன்னாடங் காய்ச்சிகள் கிட்டயா திருட வருவான்?
வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே! ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இல்லை! இது மனித வாசனையே இல்ல! விலங்கும் இல்ல! விளக்கு இருந்தாலாச்சும் யாருன்னு பார்க்கலாம்! இந்த நள்ளிரவில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(உம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :)

பூதம்: உம்ம்! அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: "இல்லை இல்லை" என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
ஆனால்........எதுவும் எனது இல்லை, எனது இல்லை! - இந்த "இல்லை"-யை வைத்துக் கொண்டு விளக்கு ஏற்ற முடியுமே!

எனது இல்லை, எனது இல்லை!
= எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ...ஏதோ ஒன்றுக்காக கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா? பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க!
= இப்படி எல்லாமே.....கிடைச்சதும் அடைஞ்சதும் தானே?


இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்தை உச்சரிக்கிறார்!
அவருக்கு நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார்

தமிழ் இலக்கியங்கள் பலவும் "உலகம்" என்னும் முதற் பொருள் வைத்தே தொடங்குவது போல்...ஆதி பகவன் முதற்றே "உலகு" என்பது போல்....
வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, அருளிச்செயல் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
உலகம், கடல், ஞாயிறு போற்றுதும்-ன்னு சிலப்பதிகாரம் போலவே துவங்குது!

வையம்=தகளியா, வார்கடலே=நெய்யாக
வெய்ய கதிரோன்=விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!


உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்கு, தமிழ்ச் சொல்மாலை சூட்டினேன்!
மனித குலத்தின் "இடர்" எனும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது! ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே! விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தார்!

அன்பே=தகளியா ஆர்வமே=நெய்யாக
இன்புருகு சிந்தை=இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்!


அன்பை அகல் ஆக்கினேன், ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
(வேதம், படிப்பு-ன்னுல்லாம் வரைமுறை இல்லாமல், "ஆர்வம்" என்பதே ஆதாரம்)
அவனை உருகி மகிழும் சிந்தனைத் திரி ஆக்கினேன்...
அதில் விளக்கு ஏற்றினேன்! நாராணன் என்பானுக்கு ஞானத் தமிழைச் சொன்னேனே!

* உலகத்தை ஒரு விளக்காகவும்,
* அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்கணும்?
முதல் விளக்கு = புற இருள் அகற்ற = அதான் உலகம்/சூரியன்!
இரண்டாம் விளக்கு = அக இருள் அகற்ற = அதான் அன்பு/சிந்தனை!!

இறைவன் தெரிய வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!
லட்சம் லட்சமாய்ச் செலவழிச்சி, லட்ச தீபம் ஏற்றினாலும் தெரியாதவன்....
இந்த இரண்டு விளக்குக்கும் தெரிவான்!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு ஒளி காட்டினார்கள்!



இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று! ஆகா...பெருந் திருடன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது???
பொய்கை-பூதம் ஏற்றிய விளக்கின் ஒளியிலே, பேயார் அந்தக் கள்வனைக் கண்டு விடுகிறார்!

திருக்கண்டேன்! பொன்மேனி கண்டேன்! திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்! - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக்கண்டேன்!
என்னாழி வண்ணன்பால் இன்று!!


விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்?
கடவுளா? இல்லை! - ஒரு பெண்!
ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பிலே இருக்கிறாள்! = திருக் கண்டேன்!

பொன்மேனி கண்டேன்! - அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து......என்பதல்லவா பாட்டு!

பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! "நீலமேனி கண்டேன்"னு தானே சொல்லணும்? பொன்மேனி கண்டேன் = ஏன் இந்தப் பொய்?
இவரு நெசமாலுமே இறைவனைக் கண்டரா? இல்லை சும்மானா வர்ணனையா? மெய் விளக்க வந்த பொய் விளக்கோ தமிழ்ப் பாசுரங்கள்???


நீலமேகக் கல்-னு ஒரு இரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லா-ன்னு எப்படிச் சோதனை செய்வது?
அதை பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, சொட்டு நீலம் கணக்கா..... நீலமா மாறிடும்!

அதே போல், திருமகள் விலை மதிப்பில்லா பொன் "மணி"! பெண் "மணி"! - அவள் நிறமும் அப்படியே!

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள்!
அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களை இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைக்க...எட்டிப் பார்க்க...
அவள் தீண்டிய அடுத்த நிமிடம்....
அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!

நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், நீலமேனியாய் இருந்தவன், அவள் தீண்டல் பட்டு, மின்ன ஆரம்பித்து விட்டான்!

அதான், திருக் கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்!

பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்! -
பொருட் செல்வம் தரும் அவள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலரு போய், நல்லா செவ செவன்னு, மனைவியின் கலரு ஆயிட்டான் ! :)


அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு! அருக்கண்-அருக்காணி:))

அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்! அவன் "ஆழி வண்ணன்" தான் என்று இறுதியில் சொல்லி, "பொன்மேனி" கண்டேன் என்று தான் முதலில் சொன்னது அவளையே என்றும் காட்டுகிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
இடைகழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!
தூய தமிழ்ப் பெயர்களான ஆயனார் - பூங்கோவல் நாச்சியார் என்றே பெயர்கள்!

திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!


பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்! - நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தக் கோலங்களைச் சொல்லுவாய்ங்க!

ஆனா நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு!
அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு pose! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்! அதில் திருக்கோயிலூர் மிக முக்கியமான ஒன்று!



* பொய்கையாழ்வார் = 100 வெண்பாவும்,
* பூதத்தாழ்வார் =100,
* பேயாழ்வார் = 100
- இந்த முன்னூறும் தான் தமிழ்ப் பாசுரங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர், திருக்கோயிலூர்!

தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை!
* மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!
* இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! = சாதி அந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பார் ஆகில், அவர்கள் தான் புலையர் போலும், அரங்க மா நகருளானே!
சமணத்தை ஏசாமல், சிவனையும் சேர்த்தே போற்றிற்று! ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாட்டிலும் சமணத்தைச் சிலர் ஏசியது போலெல்லாம் அது ஏசவில்லை!

வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு! பெண்கள் ஓதவே கூடாதாம்!
ஆனால் தமிழ் வேதமான திருவாய்மொழி அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!


அந்தப் பாசுரங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைத் தான், பெருமாள் கோவில்களில், "உயர் குலம்" என்று சொல்லிக் கொண்டவர்கள், இன்னிக்கும் ஓதிக் கொண்டு உள்ளனர்!

வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!


சரி...வந்தது வந்தோம்...திருக்கோயிலூர்...தென் பெண்ணை ஆற்றங்கரையில் இறங்கலாமா?

பாரியின் நட்புக்காக, தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர்
- அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!


இன்னிக்கி என்ன, முதலாழ்வார்கள் பற்றிய திடீர் பதிவு-ன்னு பாக்குறீங்களா? = நா. சொக்கனின் இந்தப் பதிவைக் காணுங்கள்! வெவரம் புரியும்!:)

தமிழில்....பல வகை உண்டு
1. செந்தமிழ்
2. செழுந்தமிழ்
3. அந்தமிழ்
4. நற்றமிழ்
5. தீந்தமிழ்

6. பைந்தமிழ்
7. தனித் தமிழ்
8. இன் தமிழ்
ஆனால் ஆழ்வார்களால், தமிழுக்குக் கிடைத்த புதிய தமிழ்...
9. ஈரத் தமிழ்!! = "ஆழ்ந்து" போனதால் வந்த.....ஈரப் பாசுரங்களின்.....ஈரத் தமிழ்!!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP