Tuesday, January 03, 2012

கோதைத்தமிழ்19: கொங்கை @Bala_Bose

மக்கா, வணக்கம்!
நேற்றைய காதல்குளிர்/ காய்ச்சல் குறைந்து விட்டது:) அதனால் இன்று தாமதமின்றி, சரியான நேரத்தில் பதிக்கிறேன்:)

இன்றைய பேச்சாளர்-பையன். பாலசுந்தரம் (எ) @Bala_Bose :)
தமிழ் பால் மிக்க ஆர்வம் கொண்ட பாலா, #365பா-வில் கொட்டும் எழிலான பின்னூட்டங்களே சொல்லி விடும்....இவன் தமிழ் வல்லமையை!

இவனை என்னால் கடிந்து கொள்ளவே முடியாது! ஏன்-ன்னா தில்லியில் உள்ள வடக்குச் சாமிமலைக்கு நெருக்கத்தில் இருப்பவன்! (மலை மந்திர் - உத்தர சுவாமிமலை)
சாமிமலை முருகனின் விபூதிக் காப்பு/ சந்தனக் காப்பில், அவன் இடப்பக்க இதழோரம் மட்டும், லேசாக் கீறி விடுவாங்க!
அப்போ 'குபுக்'-ன்னு சிரிப்பான் என்னவன் முருகன்! அன்று நான் கற்பிழந்தது தான் மிச்சம்!:)

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்,
அகன்றேன் அகலிடத்தார் ஆசாரத்தை,
தன்னை மறந்தேன், தன் நாமம் கெட்டேன்,
தலைப்பட்டேன் நங்கை முருகன் தாளே!

மதுரைப் பையனான பாலா, தில்லிக் குளிரில் என்ன சொல்கிறார்-ன்னு கேளுங்க!:) பால-சுந்தரத்-தமிழ்!


நன்றி-டா பாலா! விரைவில் பல இனியதுகளுக்கு உனக்கு நல்வாழ்த்துக்கள்:)


குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்,
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்!


மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்?
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்?
தத்துவம் அன்று! தகவு! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: குத்து விளக்கு இரவெல்லாம் எரிகிறது! யானைத் தந்தக் காலால் ஆன கட்டில்! அதில் மெத்தென்ற பஞ்சணையில் துயின்று கிடக்கும் கண்ணா!

எப்படித் தூங்குற? அவள் கொங்கையில் முகம் வைத்துக் குழந்தை போல் அல்லவா தூங்குற? காதலனே, கள்ளனே!:) போதும் தூக்கம்! வாய்/வாயில் திற!

யம்மாடி நப்பின்னை...உன் காதலனை எழுந்துக்கவே விட மாட்டியா? அப்படியே உன் கூடவே அவன் ஒட்டிக்கிட்டே இருக்கணுமா?
இது நல்லதுக்கு அல்ல! அவன் அருளை நாடி வந்திருக்கும் எங்களை நினைச்சிப் பாரு! அவனை எழுந்திருக்க விடு!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = கொங்கை!

கொங்கை = மார்பகம்!

இதை, ஏதோவொரு பொதுவில் பேசவியலாச் சொல் போல், சிலர் ஆக்கி விட்டார்கள் இன்று!
ஆனா, சங்கத் தமிழிலும் பின்பும், இது ஒரு சாதாரணச் சொல் தான்!
கண் என்று எப்படிக் கூச்சமின்றிச் சொல்கிறோமோ, அதே போல் தான் கொங்கையும் புழங்குதல் வழக்கம்!

கொங்கு = தேன்!
கொங்கு தேர் வாழ்க்கை, அம் சிறைத் தும்பி தெரியும் தானே உங்க எல்லாருக்கும்!:)
பிறந்த குழந்தைக்கு, தேன் போல் தானாய் வடிந்து சுரப்பதால் = கொங்கை!

அமுதகம் என்ற பேரும் உண்டு! கொங்கை, முலை, தனம், மார்பகம் என்ற இதர பேர்கள்!
இது இலக்கியங்களில் மிக எளிதாகப் புழங்கி வரும் சொல்!
பெண்ணின் பெருமிதங்களுள் ஒன்று! - அவள் அன்பை ஒளிக்காது/மறைக்காது காட்டிக் குடுக்கும் இந்தக் கொங்கையில் அருவெறுப்போ, அசூயையோ ஒன்றுமே இல்லை!

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும் - என்பாள் கோதை!

தடமுலை, கூர்முலை, இளமுலை, நுண்முலை, தண்முலை, அழல்முலை, அமுதமுலை -ன்னு பல இலக்கிய வழக்குகள் உண்டு!

என் கொங்கைத் தலம்! இவை நோக்கிக் காணீர்!
இது கோவிந்தனுக்கு அல்லால் வாயில்போகா!!-என்று பாடுவாள்!
இதை இவள் கண்ணனுக்குச் சொன்னாள்! ஆனா, வேறு சில திருவெம்பாவைப் பெண்கள், நம் ஆண் மகன்களுக்கே சொல்கிறார்கள்!
இவிங்களுக்கு யாரு காதலனா வரணுமாம்? = என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க! காமத்திலும் அப்படியொரு உறுதி, என்னைப் போலவே:))

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரா....
என் முருகவா - என் கொங்கை, நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க! சேரற்க! 
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம் - நாங்கடவா வண்ணமே நல்கு!

நாளை பேசுபவர் - ஒரு தேர்ந்த ட்விட்டர் கவிஞரு! வர்ட்டா?

8 comments:

  1. KRS, நீங்க வடபழனி முருகனை பார்த்து இருக்கீங்களா? அவனுடைய குமிழ் சிரிப்புக்கு ஈடு இணை இல்லை! சந்தனக் காப்பிலும் ராஜ அலங்காரத்திலும் அவனை மிஞ்ச யாரும் கிடையாது :)
    பாலா மிகவும் அருமையா பேசியிருக்கீங்க! Not surprising though :-)
    ஆண்டாளின் பெருமையே அவளின் down to earth approach தான். கண்ணன் நப்பின்னையோடு இருக்கும் அழகை அந்த சூழ்நிலையை அழகாக விவரித்து, ஆனாலும் நாங்கள் உனக்காக காத்துக் கிடக்கிறோம் கண்ணா எழுந்திரு, நப்பின்னையே அவனை எழுந்திருக்க விடு என்று இறைஞ்சுகிறாள் கோதை.
    amas32

    ReplyDelete
  2. அருமையான விளக்கம். நன்றிகள் பாலா.

    ReplyDelete
  3. நல்ல பாடல்.மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீதேறி- சயனம் என்றால் தூங்குவது.
    கட்டில் என்ற பொருளும் உண்டா?

    ReplyDelete
  4. இந்தப் பாடலிலுள்ள அந்தரங்கங்களை வரம்பு மீறாமல் அழகாக விளக்கியிருக்கிராய் தம்பி. சற்றுக் கடினமான பாசுரம் தான் இது! ;-)
    ஆங்காங்கே நகைச்சுவையும் தெளித்து விட்டிருக்கிறாய். 10 நிமிடம் போனதே தெரியவில்லை. அருமை. :)

    ReplyDelete
  5. பாலாவின் குரலில் பத்து நிமிடங்களும் பால்பாயசமாய் இனித்தது.

    மிக ஜாக்கிரதையாய் வரம்பை தாண்டாமல் மிகஅழகாக இனிமையாய் விளக்கியிருந்தீர்கள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.. சொன்னதெல்லாம் நாராயணன் அடியேன்மூலம் நவின்றவையே.... நானாக எதுவும் சொன்னதல்ல...

    என்னைப் பற்றி அற்புதமான முன்னுரையைக் கொடுத்த ரவிக்கு மிக்க நன்றிகள்.. ரவியிடம் நேற்று பேசிய போதுதான் உணர்ந்தேன்... தமிழும்,தகைமையும் ஒருங்கே அமைந்திருக்கிறது அவர் பேச்சில்..தகைமையாளர் கேட்டார்.தட்ட முடியவில்லை... மிக்க நன்றிகள்..

    இந்தப் பாடலுக்கு விளக்கம் செய்து,நான் ஒலிப்பதிவு செய்த நேரம் இன்றும் நினைவில் ஆடுகின்றது.. இரவு 1 மணிக்கு டெல்லி பனியில் மொட்டைமாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.. நிச்சயம் நான்கைந்து நாய்களுக்கு இடையூறாக இருந்திருப்பேன்..

    அது ஒரு அற்புதமான அனுபவம்.. வழக்கம்போல், BNC,ROUTER,VIDEO SWITCHER,AUDIO MIXER,MCR ROOM, என்று இருந்தவனுக்கு அற்புதமான மாறுதலை வழங்கிய ரவிசங்கர் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் நவின்றாலும் தீராது...

    மார்கழியில் மாதவனைப் பாடி பரவி இம்மையையும்,மறுமையையும் கடப்போம்..

    ReplyDelete
  7. பாலசுந்தரம், உங்கள் பின்னூட்டங்களைப் போல் பேச்சும் பத்து நிமிடத்திற்கா? :-)

    அனுபவிச்சுப் பேசியிருக்கீங்க. அங்கங்கே நம்ம ஊரு (மதுரை) பாசை தலைகாட்டுது. :-)

    பாரதியார் பாடல்களில் மிகவும் தோய்ந்தவர் போலிருக்கிறதே. பாரதி பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொரு வரியிலும் உங்கள் உணர்வும் தோய்ந்து வருகிறது.

    பல இடுகைகளில் எழுத வேண்டியதை எல்லாம் மொத்தமா ஒரு பத்து நிமிட பேச்சில் பேசிவிட்டீர்கள். அவற்றை விரித்தும் எழுதுங்கள்.

    எங்கேடா இன்னும் 'கேஆரெஸ் ஐயா'ன்னு சொல்லலையேன்னு பாத்தேன். கடேசியில சொல்லிட்டீங்க. :-)

    பல சொற்பொழிவுகளைக் கேட்டவர் என்று தெரிகிறது. செய்ததும் உண்டோ?

    ReplyDelete
  8. @kumaranநம்ம ஊரு பாஷை இல்லாம இவ்ளோ நேரம் பேசினதே பெரிய விஷயம்..எப்பவுமே நான் மதுரைக்காரன் தான்..கூடவே பொறந்துருச்சுல்ல..நம்ம ஊரு பாஷை எப்படிப் போகும்??

    பாரதியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்..எல்லாவற்றையும் வாசிக்க விருப்பம் உண்டு..ஆனால்,வாசித்தேன் எனப் புளுக மாட்டேன்.. இதற்காக "கண்ணன் பாட்டில்" கண்ணன் என் காதலன் என்ற பகுதியை மட்டும் வாசித்து, சில தகுந்த வரிகளை எடுத்துப் போட்டேன்..

    அடியேன் பல சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன்... மிகவும் மனங்கவர்ந்தவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயாவும், வாரியார்,வைகோ அவர்களும்...பள்ளிப் பருவத்தில் சொற்பொழிவுகளில் பரிசு வென்றிருக்கிறேன்... அவ்வளவே...

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP