இராவணன் கோவில் மூடப்பட்டது!
ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.
கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.
ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்.
அதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.
கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.
ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.
மேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது!
இராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது! அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா?
முதலில் பதிவிட எண்ணவில்லை!
எப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.
அப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே! அதை யாரும் பார்க்கவில்லையா? பார்க்காமலேயே சண்டை போடுகிறார்களா?
சரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்! :-)

பல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.
மேட்டர் ரொம்ப சிம்பிள்!
1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)
2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை!
3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம்! திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்!
அதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர்! அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி!
சிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்!
இராவணனின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்!
அதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது! :-)
காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!
ஆனால் நாம் தான்,
ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே! கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்!
இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?
இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)






