***யார் தமிழ்க் கடவுள்?
"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள்! இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க? என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு?" :-)
"ஹிஹி! நீங்க சொன்ன பதில்...பாதி தாங்க சரி! பதிலை முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்! ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?"
"அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க் கடவுளும் இருக்காப் போலத் தெரியுதே! யாருங்க அவரு?"
"உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், "அரி"முகமானவர் தான்! "பெருமாள்" என்று நாட்டு வழக்காக அழைக்கும் திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள்!"
"அப்படியா சேதி! நான் பெருமாள் எல்லாம் வடக்கத்திச் சாமீ! தமிழகத்துக்கு உள்ளாற அப்பறமா வந்த சாமீ, வடமொழியோடு இறக்குமதி செய்யப்பட்ட சாமீ-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்!"
"ஹிஹி! உங்க நினைப்பு தப்பு! முருகன் என்றிலிருந்து தமிழ்க் கடவுளா இருக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே பெருமாளும் தமிழ்க் கடவுளாத் தான் இருந்திருக்காரு! நம்ம முதல் நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், இலக்கணங்களில் இது பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக் கொட்டிக் கிடக்கு!"
"அச்சச்சோ! அவரை இம்புட்டு நாளாத் தமிழ்க்கடவுள் இல்லைன்னு கண்டுக்காம வுட்டுட்டனே! முன்னமே சொல்லி இருந்தா நானும் ரொம்ப மகிழ்ந்து இருப்பேனே!"
"அட விடுங்க! இதுக்குப் போயி ஃபீல் பண்ணலாமா? புரட்சித் தலைவர்-ன்னு சொல்லுறோம்! எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவாரு! ஆனா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செய்யாத புரட்சியா?
பெரியாரைப் புரட்சித் தலைவர்-ன்னு குறிப்பிடாததால், அவர் புரட்சியே பண்ணலை-ன்னு ஆயீருமா என்ன? அது போலத் தான்!"
முருகப் பெருமானுக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கும் உள்ள "புராண ஐதீகத்தின்" காரணமாகப், பின்னாளைய புலவர் சில பேர், "தமிழ்க் கடவுள்" என்ற அடைமொழியை முருகனுக்குத் தந்து மகிழ்ந்தாங்க! ஆனால், எங்கே தந்தாங்க, தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லுற பாட்டு எங்கே இருக்கு?-ன்னு கேட்டுப் பாருங்க....பதில் வராது! :-)
சினிமாவில்.....ஏ.பி.நாகராஜன் வசனத்தில் கேட்டுக் கேட்டு, தமிழ்க் கடவுள் அடைமொழி, அப்படியே இன்னிக்கும் நிலைத்து நிற்கிறது! :-) அதனால்...முருகன் மட்டுமே "தமிழ்க் கடவுள்", "தமிழர் கடவுள்" என்ற எண்ணம் பரவலாக இருக்கு!
"பகுத்தறிவு" பேசும் சிலர் கூட, இந்தத் "தமிழ்த் தொடர்பு" என்ற ஒரே காரணத்துக்காக, முருகனை மட்டும் "நம்புவதில்" ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கொள்கிறார்கள்! :-)
ஆனால் உண்மையிலேயே, நம் தமிழ் இலக்கியங்கள், "தமிழ்க் கடவுள்" பற்றி என்ன தான் சொல்கின்றன? வாங்க பார்க்கலாமா?
(மு.கு: இன்றைய காலத்தில் முத்திரை குத்துதல் என்பது மிகவும் சுலபமான ஒன்று! சொல்லும் "கருத்தை" விட, அதை யார் சொல்லுறாங்க என்பது தான் பார்வை! அதனால் ஒரு மு.கு-வை இப்பவே சொல்லிக்கறேன்பா: பலரும் நினைத்துக் கொண்டபடி, அடியேன் வைணவன் கிடையாது! எங்கள் குடும்பம் சைவக் குடும்பம்! குல தெய்வம் முருகப் பெருமான் :) இனி மகிழ்ச்சியா மேற்கொண்டு படிங்க!)
பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!
அது தான் இயற்கையை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது!
பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்!
* மாயோன் = பெருமாள் = முல்லைக் கடவுள்
* சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள்
மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்
- என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி விட்டு அப்புறம் தான் குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர்! ஏங்க இப்படிச் சொல்லுறாரு? = சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் - சிறப்புடைய பொருளை முதலில் சொல்லுதல் என்பதோர் தமிழ் மரபு!
பொதுவாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்...என்று தானே நாம் எல்லாரும் வரிசைப்படுத்துகிறோம்? ஆனால் தொல்காப்பியர் சொல்லும் வரிசையைப் பாருங்க!
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!
முல்லை, குறிஞ்சி-ன்னு வரிசை மாறி இருக்கு! இது ஏன் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று! எது எப்படியோ...இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை!
தொல்காப்பியர் காலத்தில் இயற்கை/நடுகல் வணக்கம் தான் பரவலாக இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம் பற்றிப் பல செய்திகளைத் தருகிறார் தொல்காப்பியர்!
நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக அறிகிறோம்! வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன!
மறைந்த முன்னோர்கள் நினைவாக, மாட்டுப் பொங்கல் அன்று, நடுகல் வைத்துப் படையல் போடும் வழக்கம், எங்கள் கிராமத்தில் - எங்கள் வீட்டில் இன்னிக்கும் உண்டு!மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்பவர்கள் அந்தந்த நிலத்தின் வீரர்களாகக் கூட இருந்திருக்கலாம்! நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.
இதில் மாயோனும் சேயோனும் அதிகமாகப் பேசப்பட்ட அளவுக்கு, வேந்தன், வருணன், கொற்றவை மக்களால் அவ்வளவாகப் பேசப்படவில்லை!
சங்க இலக்கியங்கள் மாயோன், சேயோன் கோயில்களைத் தான் காட்டுகின்றன! (திருவேங்கடம், செந்தில், அரங்கம், திருவேரகம்)! மக்களும் தங்கள் கூத்துகளில், அன்றாட வாழ்வியலில், மாயோன்/சேயோனையே வைக்கின்றனர்!
தமிழர் பண்பாட்டில் ஆரியம் கலப்பதற்கு முன்னரே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன...
முதலில் இயற்கை என்பது நடுகல்லானது! பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது! இயற்கை வழிபாட்டின் படி, மாயோன், முல்லைக் கடவுள் ஆனான்!
முல்லை நிலத்தின் கருப்பொருள்/உரிப்பொருளைக் கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க! தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை சாய்ஸில் வுட்டுட்டீங்களா? :-)
* முல்லை-காடும் காடு சார்ந்த இடமும் = பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!
* முல்லை-பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
* முல்லை-சிறுபொழுது = மாலை! அதனால் மால் - திருமால்!
* முல்லை-ஆயர்கள் நிலம்! அதனால் ஆயர் தம் கொழுந்தே!
* முல்லை-தொழில் = ஆநிரை மேய்த்தல்! = பசுக்களை மேய்த்தான்!
* முல்லை-விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தான்!
* முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் இவன் காதல் மன்னன்! :-)
இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகத் தான் மாயோன்/திருமால் அறிமுகமானான்!
![]() குறிஞ்சிப்பூ | முல்லைப்பூ |
அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்துவது என்பது தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. இதற்குப் பூவை நிலை என்று பெயர்.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
என்பது தொல்காப்பியத்தில் புறத்திணை இயலில் வரும் பாடல். தமிழரிடையே மாயோனுக்கு "மன்பெரும்" சிறப்பாம்! சொல்லுவது தொல்காப்பியர்! தொல்காப்பியர், பின்னாளைய கவிஞரான நக்கீரரைப் போல "பக்தர்" அல்லர்! பக்தர் அல்லாத ஒருவரே சொல்லுறாரு-ன்னா, அப்போ "மன்பெரும்" சிறப்பு தெரிகிறது அல்லவா?
சிறப்பான ஒன்றைத் தானே இன்னொன்றுக்கு உவமையாகச் சொல்லுவாங்க? மாயோனின் சிறப்பை உவமையாச் சொல்றதுக்குன்னே ஒரு தனித் துறை - பூவை நிலை-ன்னு பண்டைத் தமிழர்கள் உருவாக்கி இருக்காங்க-ன்னா......மாயோன் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறான் என்பது தானாகவே விளங்கும்.
தொல்காப்பியருக்குப் பின் வந்த காலகட்டத்தில், ஆரியம் நன்றாகவே வந்து விட்டது! நம் பண்பாட்டில் பிறர் பண்பாடும் கலக்கத் துவங்கிய போது இன்னும் பலப்பல மாற்றங்கள் (சில வேண்டாத மாற்றங்களும் கூட)!
ஆனால், வேள்வி/பலிகளை வழிபாடாகக் கொண்ட ஆரியப் பண்பாடு, தமிழிடம் கடன் வாங்கியது!
பூவை நிலை, பூஜை நிலை ஆக மாறியது! தமிழ் மரபுப்படி மலரால் வழிபடுவது வழக்கமானது!
* நடுகல், இயற்கை முறை ஆனது!
* ஆயர் குல மாயோன் = ஆயர் குலக் கண்ணன் ஆனான்!
* காக்கும் தொழில் அரசன் = காக்கும் தொழில் திருமால் ஆனான்!
ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......
* முருகன் ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் விஷ்ணு ஆனான்!
ஆனால் அப்போது கூட மாயோனும் சேயோனும் தத்தம் தனித்தன்மைகளை இழக்கவில்லை! ஆரியர்கள் தமிழோடு சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம்! ஆரிய இனமல்லாத கண்ணனைத் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள்!
கார் மேக வண்ணன், ஆயர் குலம், பசுக்களை மேய்த்தல் என்று ஏற்கனவே எல்லா அம்சங்களும் பொருந்தி இருந்ததால், இணைப்பதற்கு இன்னும் ஈசியாப் போயிடுச்சி :-)
கூடவே பலராமன் வழிபாடு, வாலியோன் வழிபாடாகச் சேர்ந்து கொண்டது!
தொல்காப்பியருக்குப் பின்னர்.....
புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற சங்க நூல்களில் திருமாலைப் பற்றிய பலப்பல குறிப்புக்களைக் காணலாம். காதலன், காதலை நிரூபிக்கத் திருமால் மேல் சத்தியம் செய்யறானாம் - கலித்தொகை சொல்வது!
சங்க காலத்தின் இறுதியில் சமணம், பவுத்தம், ஆரியம் என்று தமிழரிடையே பல சமயங்கள் பரவி விட்டன!
பின்னாளில் வந்த சிலப்பதிகாரம்...மாயோன், சேயோன், வேந்தன், வருணன் - இந்த மண்ணின் மைந்தர்களோடு மட்டும் நின்று விடவில்லை!
வாலியோன், பிறவா யாக்கைப் பெரியோன் (சிவன்), அருகன், புத்தன் என்று அனைத்து தெய்வங்களின் குறிப்புகளையும் தரத் துவங்கி விட்டது!
சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு நிற்கும் காட்சி வர்ணிக்கப்படுகிறது! இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும், வேங்கடவன் திருமாலே என்பதற்கு?
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
என்று வேங்கடத்து நெடியவனை இளங்கோவடிகள் பாடுகிறார்!
அதே சிலப்பதிகாரத்தில், திருவரங்கக் காட்சிகள் சொல்லப்படுகின்றன! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே! என்றும் கேட்கிறார்!
சிலம்புக்குப் பின் வந்தது மணிமேகலை! அது இன்னும் ஒரு படி மேலே போகிறது! தமிழ்-ஆரிய கலப்பு விளக்கங்களும் அதில் வரத் தொடங்கி விட்டன! காத்தல் தொழில், அலகிலா விளையாடல், பரந்து நிற்றல் போன்ற குணங்கள் எல்லாம் மணிமேகலையில் சொல்லப்படுகிறது!
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்!
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்!
முல்லைப் பாட்டுக்கு நச்சினார்க்கு இனியர் உரை இருக்கு! ஆனால் அதை மறுத்து மறைமலை அடிகள் செய்த உரையை இங்கு படிக்கலாம்!
அதில் அடிகளார் //'மாதாங்கு' என்பதனை 'மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க// வேண்டும் என்று தான் சொல்லுகிறார்!
பரிபாடல், கலித்தொகை இரண்டிலும் திருமால் அடிக்கு அடி வருவாரு! அத்தனை பாட்டையும் பதிவிலேயே கொடுத்தேன்னு வையுங்க...என்னைப் போட்டுத் தாக்கிருவீங்க! :-)
இல்லையில்லை! அத்தனைப் பாட்டையும் கண்ணால் பார்த்தால் தான், திருமாலைத் தமிழ்க் கடவுள்-ன்னு ஒத்துப்பேன்னு உங்களில் சில பேர் சொன்னீங்கனா, ஒன்னும் சொல்வதற்கு இல்லை! :) பின்னூட்டத்தில் வேணும்னா ஒவ்வொரு பாட்டா தெரிஞ்சவங்க கொடுங்கப்பா! நானும் கொடுக்கிறேன்! :-)
ஆனால்...ஒன்னே ஒன்னை மட்டும் இங்கே கட்டாயம் கவனிக்க வேண்டும்!
இத்தனை கலப்புகள், இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட...
இரண்டே இரண்டு தெய்வங்கள் மட்டும்....
தங்கள் தனித் தன்மையை, தமிழ்த் தன்மையை இன்னும் இழக்கவில்லை!
* இலக்கியத்தில் சேயோன் என்றால் பேச்சு வழக்கில் முருகன்!
* இலக்கியத்தில் மாயோன் என்றால் பேச்சு வழக்கில் பெருமாள்!!
முருகன் என்பது தமிழ்ப் பெயர்! முருகன் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்!
பெருமாள் என்பது தமிழ்ப் பெயர்! பெருமாள் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்!!
யாரும் விஷ்ணு கோயில்-ன்னு சொல்லறதில்லை! பெருமாள் கோயில் என்று தான் அண்டை மாநிலத்தவர் கூடச் சொல்கிறார்கள்!
கூக்குரல் போடணும்னாக் கூட யாரும் "சுப்ரமண்யா", "விஷ்ணுவே"-ன்னு யாரும் கூப்பிடறதில்லை! "முருகா", "பெருமாளே" ன்னு தமிழ் மட்டும் தான், தமிழர்கள் வாயில் தானா வருது! :-)
![]() | ![]() |
அட இம்புட்டு எதுக்குங்க?
"தமிழ்க் கடவுள்" முருகப் பெருமான் ஆலயங்களில், இன்னிக்கி தமிழ் இடையறாது ஒலிக்குதா? சந்தேகம் தான்! தில்லையில் தமிழ் நுழைய இன்னமும் கூத்தாட வேண்டியிருப்பதைப் பாக்குறோமே! ஆனால்...
"தமிழ்க் கடவுள்" திருமால் ஆலயங்களில், இன்னிக்கும் தமிழ் இடையறாது முழங்கிட்டுத் தான் இருக்கு! தமிழ்ப் பாசுரங்கள் ஒலிக்காமல் ஒரு பூசையோ, ஒரு புறப்பாடோ யாராச்சும் நடத்திறத் தான் முடியுமா?
ஒவ்வொரு புறப்பாட்டிலும் இறைவனுக்கும் முன்னால், தமிழ் தான் முழங்கிச் செல்கிறது! தமிழுக்கும் பின்னால் இறைவன்! அவனுக்கும் பின்னால் தான் வேதங்கள்! இதைப் பார்த்துவிட்டு "அச்சோ....இது போல் முருகன் ஆலயத்தில் இல்லையே"-ன்னு பெருமூச்சு விடுகிறார் ஒரு முருக பக்தர்! யாரு?...."பச்சைத் தமிழின் பின்னால் செல்லும் பசுங் கொண்டலே"-ன்னு தமிழ்க் கடவுள் திருமாலைப் பாடுகிறார் "குமர"குருபரர்! அட, நம்ம அருணகிரி?..."வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்"....தமிழை ஓதிச் செல்பவர் பின்னால் திரிகின்றவனாம் திருமால்! ஆகா, இதுவல்லவோ தமிழ்ப் பற்று!
பழம்பெருமை எல்லாம் விட்டுத் தள்ளுங்க! இன்றைய கதையை மட்டும் பேசுவோம்! தமிழைத் தாங்கிப் பிடிப்பவன் தானே தமிழன்! தமிழை அன்றாடம் தாங்கிப் பிடிக்கும் கடவுள் தானே தமிழ்க் கடவுள்! - இப்போ சொல்லுங்க மக்களே, தமிழை வழிபாட்டில் அன்றாடம் தாங்கிப் பிடிக்கும் திருமால் தமிழ்க் கடவுள் தானே?
உம்...
எல்லாம் நல்லாத் தான் சொல்றீங்க! ஆனால் எனக்கென்னமோ...எனக்கென்னமோ....
இல்லப்பா...நான் ஒத்துக்க மாட்டேன்! பெருமாள் தமிழ்க் கடவுள் இல்லை! :-)
அடப் பாவி...இவ்ளோ நேரம் வாய் கிழியக் கத்திப்புட்டு, பதிவை முடிக்கும் போது, இப்படி ஜகா வாங்குறியே கே.ஆர்.எஸ்?
பின்ன என்னாங்க?...
மேலே சொன்னபடியெல்லாம், வாதாடி வாதாடித் தான், திருமாலைத் தமிழர் கடவுள், தமிழ்க் கடவுள்-ன்னு நிறுவணுமா என்ன?
*** சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - பெரியார் என்னிக்குமே புரட்சித் தலைவர் தான்!
*** சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - திருமால் என்னிக்குமே தமிழ்க் கடவுள் தான்!
கோதைத் "தமிழ்" ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை, வையம் சுமப்பதும் வம்பு! :-)
முருகப் + பெருமாள் திருவடிகளே சரணம்!
உசாத்துணை (References):
தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர். தமிழண்ணல்
தமிழர் மதம் - தேவநேயப் பாவாணர்
முல்லைப் பாட்டு - மறைமலை அடிகள் உரை
தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத் திரட்டு = http://www.tamilvu.org/library/l0100/html/l0100001.htm
பிற்சேர்க்கை:
இந்தப் பதிவை இட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து...,சங்க இலக்கியம் முழுதும், திருமால் எங்கெங்கு எல்லாம் வருகிறார்-ன்னு ஒரு வாசிப்பு செய்ய முடிந்தது!
அதை அப்படியே பதிவாக.....இதோ, இங்கே....சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்!





114 comments:
ரவி,
தெரிந்த தகவல்கள் தான் என்றாலும் உங்கள் எழுத்தில் படிப்பதன் சுவையே தனி.
இந்த வழிபாட்டு முறைகள், தெய்வங்களெல்லாம் இயற்கையில் இருந்து தோன்றி பரிணமித்தது என்று அழகாக ஆதாரம் தந்து இருக்கிறீர்கள். அதற்காக எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
:)
அருமை அருமை...
ஜி.ரா வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம்...
ஆனா இப்பவெல்லாம் ஜி.ரா எங்கேயும் விவாதம் செய்யறதேயில்லை :-(
நல்லதொரு பதிவு..
//ILA(a)இளா said...
நல்லதொரு பதிவு..
.//
ரவி,
இப்பதான் என்பதிவில் வந்து சொல்லிட்டுப் போனார், உங்க பதிவை படிப்பதில்லையாம். அதனால் சர்டிபிகேட்டை நம்பாதிங்க. அது றெம்ப்ளேர் (நன்றி இகொ) பின்னூட்டம்.
கேஆர்ஸ், கலக்கிட்டீங்க... நிறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிஞ்சுது... 'எங்க' பார்த்தசாரதியின் படம் போட்டுட்டீங்க.. எவ்வளவு தடவை பார்த்தாலும் போதாது...
ஒரு கேள்வி... ' நினைத்தபோது நீ வரவேண்டும்' என்று டி.எம்.எஸ் பாடுவாரே, அந்த பாட்டில் 'மாயோன் மருகா, முருகா' என்று வரும், அப்படித்தானே? (கேள்வியே தவறாக இருந்தாலும் சொல்லவும்!!). அதற்கு என்ன பொருள் என்று சொல்லமுடியுமா?
//ILA(a)இளா said...
நல்லதொரு பதிவு..//
எந்தப் பதிவு இளா? :-))
இத எல்லாம் ஒத்துக்க மாட்டோம்!
பின்னூட்டத்துல ஒரு இளநி சீவிக் கொடுங்க! :-)
//கோவி.கண்ணன் said...
ரவி,
தெரிந்த தகவல்கள் தான் என்றாலும்//
கோவி அண்ணா
தகவல் ஒங்களுக்கு மட்டும் தான் தெரியும்! ஏன்னா நீங்க ஒரு நடமாடும் ஆன்மீக நூலகம்!
பகுத்தறியும் பக்திப் பகலவன்!
ஆனா மத்தவங்களுக்கும் எடுத்துச் சொல்லணூம்-ல! எனக்குக் கூட மொத்த தமிழ்க் கடவுள் விசயம் இன்னிக்குத் தான் தெரிஞ்சுது! :-))
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்!
///பகுத்தறிவு பேசும் சிலர் கூட, இந்தத் "தமிழ்த் தொடர்பு" என்ற ஒரே காரணத்துக்காக, முருகனை மட்டும் "நம்புவதில்" ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கொள்கிறார்கள்! :-)///
இதில் உங்களுக்கு ஏற்படும் ஓர் இனம் புரிந்த மகிழ்ச்சி எனக்குப் புரிகிறது. எனக்கும் மகிழ்ச்சிதான்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா!
///முல்லை, குறிஞ்சி-ன்னு வரிசை மாறி இருக்கு! இது ஏன் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று!///
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற வரிசை மனித நாகரிகத்தின் எழுச்சி வரிசையைக் குறிப்பதாக இருக்கலாம். வாழ்வாதாரங்கள் இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் முல்லையும் அதே வளத்துடன் ஆனால் வாழுஞ்சூழலில் சற்றே கடுமைகொண்ட குறிஞ்சியும் முன்னேறிய பின் சமூகங்கள் நன்கு வாழும் வகையிலான மருதமும் அதன்பின் நெய்தலும் என வரிசைப் படுத்தப் பட்டிருக்கலாமென எனக்குப் படுகிறது.
///தில்லையில் தமிழ் நுழைய இன்னமும் கூத்தாட வேண்டியிருப்பதைத் தான் பாக்குறோமே! ஆனால்...///
சாதாரன கூத்தா என்ன? ஆரியக் கூத்தை நாம் கண்டிருக்க வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் இது திராவிடக் கூத்தல்லவா!
///*** சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - பெரியார் என்னிக்குமே புரட்சித் தலைவர் தான்!///
அதான் இப்ப நீங்க சொல்லிட்டீங்களே!
*****
பல செய்திகளைத் தொகுத்து அருமையான ஓர் இடுகை தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
//வெட்டிப்பயல் said...
அருமை அருமை...//
நன்றி! நன்றி!
//ஜி.ரா வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம்...//
ஏன் வெட்டி வந்து என்ன சொல்லறாரு-ன்னு பாக்கலாம்-னு சொன்னாக் கொறைஞ்சாப் போயிடுவீங்க?
//ஆனா இப்பவெல்லாம் ஜி.ரா எங்கேயும் விவாதம் செய்யறதேயில்லை :-(//
எங்க ஜிரா அண்ணாத்த நல்லவரு! :-)
சேயோனை சிவன் என்று கருதப்பட்டு பிறகே அது முருகனுக்கு என மாறியது என்ற கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?
// வெட்டிப்பயல் said...
அருமை அருமை...
ஜி.ரா வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம்...
ஆனா இப்பவெல்லாம் ஜி.ரா எங்கேயும் விவாதம் செய்யறதேயில்லை :-( //
அட நான் என்ன விவாதம் செய்றது? அதெல்லாம் விவரம் தெரிஞ்சவங்க செய்றது. என்னைக்கு எனக்கு விவரம் பத்தாதுன்னு புரிஞ்சதோ அன்னைக்கே வாயை மூடிக்கிட்டேன்.
இப்பிடியெல்லாம் பதிவு போட்டு ரவிக்கு இன்னார்தான் தமிழ்க்கடவுள்னு நிரூபிக்க வேண்டிய நெலமை. எனக்கு அப்படியில்லையே. இன்னும் சொல்லப் போனா.... இவரு நிரூபிச்சத அவரு கூட இருக்குற எல்லாரும் ஏத்துப்பாங்களான்னே சந்தேகம்தான்.
அட... தமிழன் கும்புடுற எல்லாக் கடவுளுமே தமிழ்க் கடவுள்தான். ஒவ்வொருத்தருக்கும் அதை நிரூபிக்குறதுல ஒரு ஆர்வம்...ஒரு லாபம். கே.ஆர்.எஸ் இப்பத்தான தொடங்கீருக்காரு. நாங்க ரொம்ப நாளாவே சொல்லீட்டிருக்கோம். ஆனா இவ்ளோ நாளா அவங்க ஏன் சொல்லிக்கலைன்னு கேள்வி கேட்டா அதுக்கு என்ன சொல்வாரோ தெரியலை. தமிழ்ப் புலவருங்க எல்லாம் முருகன் தமிழ்க்கடவுள்னு சொல்லீட்டாங்கன்னா...வைணவத்துல தமிழ்ப் புலவர்கள் இருக்கலையா அப்ப... ஏதோ கே.ஆர்.எஸ் ஆசைக்குச் சொல்லிக்கிறாரு. சொல்லீட்டுப் போகட்டுமே. நீங்க சொல்லுங்க கே.ஆர்.எஸ். Keep it up. Good show.
தொல்காப்பியத்தில் இறைவழிபாடு அப்படின்னு எழுதப்போறதா முன்னே சொன்னது இதானாண்ணே?
///இலக்கியத்தில் சேயோன் என்றால் பேச்சு வழக்கில் முருகன்!
இலக்கியத்தில் மாயோன் என்றால் பேச்சு வழக்கில் பெருமாள்!!
முருகன் என்பது தமிழ்ப் பெயர்! முருகன் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்!
பெருமாள் என்பது தமிழ்ப் பெயர்! பெருமாள் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்!!///
சங்கம் வளர்த்த மதுரை ஒன்று போதாதா? ஊரை ஒட்டி ஒருபக்கம் பரங்குன்றத்தில் சேயோன்
மறுபக்கத்தில் கள்ளழகர். இருவருமே தமிழ்க் கடவுள் என்பது முண்டாசு கட்டிய அத்தனை
பாரமரனுக்கும் தெரியும். அதிகம் படித்தவர்கள்தான் இலக்கியத்தில் சான்றுகளைத் தேடி
மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள்!
சரிதானா கே.ஆர்.எஸ்?
இறைவனுக்கு ஏது மொழிப்பிரச்சினை?
மொழிப் பிரச்சினை இருந்தால் அவர் எப்படி இறைவனாக முடியும்?
முருகன் தமிழர்களுக்கு மட்டும்தான் கடவுளென்றால்
பழனிக்கு வரும்கூட்டத்தில் பாதிக்கு மேல் ஏன் கேரள மக்கள்?
இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லாதவர்தான் இறைவன்!
எல்லோருக்கும் பொதுவானவர் அவர்!
ஆகவே, முருகனையும், பெருமாளையும் நாம் தமிழ்க் கடவுள் என்று சொல்லிக் கொள்வோம்
அதே நேரத்தில், மற்றவர்கள், இல்லை அவர் எங்களுக்கும் கடவுள் என்று சொன்னால் மறுப்பின்றி ஏற்றுக் கொள்வோம்!
//ஓகை said...
சேயோனை சிவன் என்று கருதப்பட்டு பிறகே அது முருகனுக்கு என மாறியது என்ற கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?//
ஜிரா? கருத்துக்கள் ஏதும்? (any comments?)
//இப்பிடியெல்லாம் பதிவு போட்டு ரவிக்கு இன்னார்தான் தமிழ்க்கடவுள்னு நிரூபிக்க வேண்டிய நெலமை//
பதிவை இன்னொரு முறை படியுங்கள் ஜிரா! நிரூபிப்பதற்காக இப்பதிவு இடவில்லை! அதைப் பதிவிலும் சொல்லி உள்ளேன்!
//இவரு நிரூபிச்சத அவரு கூட இருக்குற எல்லாரும் ஏத்துப்பாங்களான்னே சந்தேகம்தான்//
யாரெல்லாம் என் கூட இருக்காங்க ஜிரா? :-))
தமிழர் தெய்வமான இறைவனை நிரூபிக்க நான் யார்?
கடந்து உள்ளவனைக் கடத்த யாரால் முடியும்?
இது நிரூபணம் அல்ல! உண்மை அறியும் முயற்சி!
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இரவிசங்கர்.
என்னைக் கேட்டீங்க பதிவிடும் கருவி வைத்திருக்கிறேனா என்று. நேற்றிரவு (அமெரிக்க இரவு) தொடங்கி உங்கள் நாட்காட்டி வாரம் தொடங்கி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அடுத்தடுத்து இப்படி அருமையான இடுகைகளாக அடித்துத் தாக்குகிறீர்களே?! :-)
என்னுடைய நாட்காட்டி (நட்சத்திர) வாரத்தில் தொடங்கிய உரையாடல் இது. அப்போது நம் நண்பர் இராகவப் பெருமாள் வைத்த சில வாதங்களுக்கு அப்போதே பதில் சொன்னேன். பின்னர் அடுத்தடுத்து நிறைய வாதங்களைக்/ காரணங்களைச் சொல்லி வந்தார். அவற்றிற்கெல்லாம் இந்த இடுகையில் அடுத்தடுத்து நீங்கள் பதில் சொல்லியிருப்பது தெரிகிறது. அடி மேல் அடி வைத்து அம்மியை நகர வைக்கலாம் என்று எண்ணி :-)நீங்கள் தொடங்கிய இடத்திலேயே தொடங்கினேன் இந்த இடுகையில். ஆனால் என் வழக்கப்படி ரொம்பவும் மெதுவாக என் பக்கத்துக் கருத்துகளை வைத்து வருகிறேன். நீங்கள் ஒரே அடியாக அடுத்த அடுத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டீர்கள். அருமை. நம் நண்பர் அடுத்தக் கேள்வி கேட்டிருக்கிறார். உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன். நம் நண்பர் அதற்கடுத்த கேள்விகளும் கேட்பார் என்பது தெரியும். இந்த வகையில் நான் இனி மேல் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை எல்லாம் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிவதால் உங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
பதிவின் நோக்கம்:
எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது இல்லை!
நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே!
இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல!
இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!
என் நாட்காட்டி வாரத்தில் நடந்த உரையாடலை இங்கே பார்க்கலாம். :-)
//பதிவின் நோக்கம்:
எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது இல்லை!
நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே!
இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல!
இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!
//
இந்தத் தலைப்பில் நான் உரையாடுவதும் இந்த நோக்கத்தில் தான் என்பதால் இரவிசங்கர் சொன்னதை வழிமொழிகிறேன்.
பெருமாளை ஆரியக்கடவுளாக சிலர் நினைக்க காரணமென்ன?
முருகனுக்கு தமிழ் சபைல இடம் கொடுத்த தமிழ் புலவர்கள் திருமாலுக்கு இடம் கொடுக்காத காரணமென்ன?
/////இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!////
நம் (இறைப்) பண்பாட்டில் பல குளறுபடிகள் இருக்கின்றன.
இலக்கியவாதிகளுக்கு இயற்கையைத் தெரிந்த அளவிற்கு இறைவனைத் தெரியாது.
இலக்கியங்களில் தேடினால் சரியான விடை கிடைக்காது!
சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களைப் படித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் வாங்கிப் படிக்க வேண்டுகிறேன்.
//ச்சின்னப் பையன் said...
'எங்க' பார்த்தசாரதியின் படம் போட்டுட்டீங்க.. எவ்வளவு தடவை பார்த்தாலும் போதாது...//
ஹிஹி
"உங்க" பார்த்தசாரதியா? சூப்பரு! :-)
தல சிவா,
நீங்க சென்னையா?
//' நினைத்தபோது நீ வரவேண்டும்' என்று டி.எம்.எஸ் பாடுவாரே, அந்த பாட்டில் 'மாயோன் மருகா, முருகா' என்று வரும், அப்படித்தானே?//
ஆமாம்!
//அதற்கு என்ன பொருள் என்று சொல்லமுடியுமா?//
மாயோனின் மருமகன் முருகன் - அப்படின்னு பொருள்!
முருகன் எப்படிப் பெருமாளின் மருமகன் ஆவான்?
அதுக்குப் பல்வேறு பார்வைகள்!
1. சகோதரியின் பையன் நமக்கு மருமகன்; மலையன்னை பெருமாளின் சகோதரி - அதனால் முருகன் மாயோனின் மருகன்.
2. மாயவனின் இரு "ஐதீகப்" புதல்விகள் - அமிர்தவல்லி, சுந்தரவல்லி. அவர்கள் தான் தேவயானை வள்ளியாகத் தோன்றி முருகனை மணந்தனர் என்பது இன்னொரு கதை. அதனால் முருகன் மாயவனுக்கு மருமகன் ஆகிறான்!
3. புராணக் கதைகள் பற்றிய கலப்பு இல்லாமல் குறிஞ்சி-முல்லை நிலங்களுக்குரிய கொடுக்கல் வாங்கல் வழக்கமாகவும் சேயோன், மாயோன் பெண்டிரை மணந்து இருக்கலாம்!
//அட... தமிழன் கும்புடுற எல்லாக் கடவுளுமே தமிழ்க் கடவுள்தான். ஒவ்வொருத்தருக்கும் அதை நிரூபிக்குறதுல ஒரு ஆர்வம்//
தமிழர் எத்தனையோ தெய்வங்களை கும்புடறாங்க! பிள்ளையார், சரஸ்வதி, யேசுநாதர், மரியன்னை, இன்னும் பல மதங்கள்...
அவர்கள் எல்லாரும் தத்தம் தெய்வங்களைத் தமிழ்க் கடவுள் என்று சொல்ல வருவதில்லை ஜிரா!
அதனால் இங்க யாருக்கு அப்படி ஒரு ஆர்வம் கிடையாது!
//அப்ப... ஏதோ கே.ஆர்.எஸ் ஆசைக்குச் சொல்லிக்கிறாரு//
என் ஆசைக்குத் தெய்வத்தைத் திரிக்கும் வழக்கம் அடியேனிடம் இல்லை!
//சொல்லீட்டுப் போகட்டுமே//
ஹிஹி! சொல்லிட்டு எங்கும் போக மாட்டேன்! சென்னைக்குத் தான் வாரேன்!
//நீங்க சொல்லுங்க கே.ஆர்.எஸ். Keep it up. Good show//
போதும் அங்கதம்!
வேண்டும் விளக்கு!
விளக்கு ஏற்ற விளக்க வாருங்கள் ஜிரா!
//ஓகை said...
சேயோனை சிவன் என்று கருதப்பட்டு பிறகே அது முருகனுக்கு என மாறியது என்ற கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?//
ஜிரா? கருத்துக்கள் ஏதும்? (any comments?)//
குமரன்
நம்ம ஜிரா அடையார் அரங்கனை நினைச்சிக்கிட்டே உறங்கப் போயிட்டாரு போல! அதுனால ஓகை ஐயா கேள்விக்கு விளக்கம் காண, உங்களைத் துவக்கி வைக்குமாறு அழைக்கிறேன்!
//மதுரையம்பதி said...
தொல்காப்பியத்தில் இறைவழிபாடு அப்படின்னு எழுதப்போறதா முன்னே சொன்னது இதானாண்ணே?//
இல்லீங்க மெளலி அண்ணே!
அது இன்னும் பெரிது!
வேலன் வெறியாட்டம், ஆய்ச்சியர் குரவை, பூவை நிலை, கொற்றவை நிலை-ன்னு நிறைய!
அதுல இது ஒரு சின்னப் பகுதி! அம்புட்டு தான்!
C&P from http://koodal1.blogspot.com/2006/01/134.html
// இதற்கு இன்னொரு காரணம் மேலே சொன்னபடி 'தென்னாடுடைய சிவன்' என்று சொல்வதும் 'முருகனை மட்டும் தமிழ்க்கடவுள்' என்று சொல்வதும் என்று நினைக்கிறேன். பழந்தமிழ் மரபில் மாயோனும் ஐந்து நிலக் கடவுளர்களில் ஒருவன் தானே? அப்படி என்றால் அவனையும் தமிழ்க் கடவுள் என்று கூறுவதில் என்ன தயக்கம்? சிவனும் முருகனும் எப்படித் தமிழ்க் கடவுளர்களோ அதே மாதிரி மாயவனும் கொற்றவையும் தமிழ்க் கடவுளர்களே!!! //
குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது. மருதத் தலைவன் மாயனும் இன்றைய மாலும் ஒருவரா என்ற ஆய்வும் ஏற்கப்பட வேண்டியதே. அந்த மாயந்தான் இந்த மாயனா என்று என்னால் உறுதியிட்டுக் கூற முடியாது.
விஷ்ணுவைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில் தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு என்றுதான் இப்பொழுது கேட்க வேண்டும்.
G.Ragavan said...
// இராகவன், எத்தனையோ இலக்கியங்கள் அழிந்துப் பட்டுப் போகின்றன. அவை இன்று கிடைக்கவில்லை என்பதாலோ ஆராய்ச்சியாளர்களுக்குச் சிக்கவில்லையென்பதாலோ அவை இருந்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ தனிப்பாடல்களாவது இருந்தது என்று ஒத்துக் கொள்கிறீர்களே. அது சரி. திருமுருகாற்றுப் படை முதல் சமய நூல் என்று இந்த ஆராய்ச்சியாளர் தமக்குக் கிடைத்த நூலை வைத்துச் சொல்வதால் மட்டுமே முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று நிறுவிவிட முடியுமா? அப்படி என்றால் அந்த தமிழ்ப் பாடல்களிலும் மேலே நான் சொன்ன இலக்கியங்களிலும் வரும் கண்ணனைப் பற்றிய செய்திகளை எங்கே சேர்ப்பது? //
குமரன், பரிபாடல் காலத்திற்கு முன்னாலேயே சமணக் கருத்துகளும் பவுத்தக் கருத்துகளும் கூட தமிழ் இலக்கியங்களில் இருந்தன. மூன்று சமணக் காப்பியம். ஒரு பவுத்தக் காப்பியன். ஒன்றுதான் தமிழ்க்காப்பியம். அதுதான் நிலைத்தது. அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?
மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை. அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர். முருகனோடு தொடர்புடைய அனைத்தும் தமிழோடும் தமிழ் மக்கள் வாழுமிடத்தோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது.
திருமாலை நானும் வழிபட்டாலும் மாயனை மன்னு வடமதுரை மைந்தன் தானே. திருமாலைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வதிலும் வணங்குவதிலும் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. ஆனால் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி..ம்ம்ம்ம்...என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால்தான் அதைத் தமிழறிஞர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டேன்.
மேலே போட்ட பின்னூட்டத்துக்கு எல்லாம் குமரன் அருமையா விளக்கம் கொடுத்திருக்காரு...
இந்த பதிவுக்கு போய் பாருங்க ;)
//SP.VR. SUBBIAH said...
இலக்கியவாதிகளுக்கு இயற்கையைத் தெரிந்த அளவிற்கு இறைவனைத் தெரியாது//
உண்மை தான் ஐயா!
//இலக்கியங்களில் தேடினால் சரியான விடை கிடைக்காது!//
என்ன தேடுறோம் என்பதைப் பொருத்தது!
இலக்கியத்தில் இறைத் தத்துவங்களைத் தேடினால் விடை கிடைக்காது. அதுக்குச் சமய நூலை நாட வேண்டும்!
அதே போல், மொழி, கலாச்சாரத்தை(பண்பாட்டை) சமய நூல்களில் பெரிதும் காண முடியாது! அதுக்கு இலக்கியத்தை நாட வேண்டும்!
இந்தப் பதிவில் தத்துவத்தோடு, நம் வேர்களையும் சேர்த்தே அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சி தான்!
//சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களைப் படித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் வாங்கிப் படிக்க வேண்டுகிறேன்//
சென்னை வரும் போது தொலைபேசுகிறேன் ஐயா! நல்ல நூல்களை அடையாளம் காட்டுங்கள்!
சுவாமிகளின் நூல்களில் படித்தது இரண்டே இரண்டு தான்! அதுவும் இணைய நூல்கள்!
1. How to Become a Hindu
2. லிங்க வழிபாடு
//வெட்டிப்பயல் said...
மேலே போட்ட பின்னூட்டத்துக்கு எல்லாம் குமரன் அருமையா விளக்கம் கொடுத்திருக்காரு...
இந்த பதிவுக்கு போய் பாருங்க ;)//
அந்த இடுகையை இடும் முன் அந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பல முறை முழுசா வாசித்தேன் பாலாஜி!
பொய் சொல்க அரங்கன் அருள்வான் பதிவிலும்
http://madhavipanthal.blogspot.com/2006/12/1.html
இந்த கருத்தரங்கம் தலை தூக்கியது! அப்போ தான் குமரனின் (ஜிராவின்) அந்தப் பதிவு எனக்குத் தெரியும்! :-)
அங்கு விவாதம் முற்றுப் பெறாத நிலையில் இரு தரப்பிலும் சில கேள்விகளை அப்படியே விட்டூ வைத்திருந்தார்கள்! அதில் ஒன்று சங்கத் தமிழ்/தொல்காப்பிய வழிபாட்டு நிலை!
அதான் Right from Scratch, Back to Basics-ன்னு அங்கிருந்தே தொடங்கினேன்!
தொடர்ந்து பேச விருப்பம் தான். ஆனால் ஆணிகள் நிறைய இருக்கே பிடுங்க. நேரம் கிடைக்கிறப்ப வர்றேன். ஆனால் இங்கே சிலருக்கு 'ஏற்கனவே தெரிந்த தகவல்கள் இவை'; சிலருக்கு 'ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது இது'. அப்படி இருக்க முல்லா கதையில வர்ற மாதிரி தெரிஞ்சவங்க தெரியாதவங்க கிட்ட சொல்லுங்கன்னு சொல்லிட்டு பேசாம இருக்கலாம்ன்னு பாக்குறேன். :-)
//குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது//
குமரன் எங்கும் சறுக்கியதாகத் தெரியவில்லை ஜிரா!
//மருதத் தலைவன் மாயனும்//
முல்லைத் தலைவன் மாயன் - திருத்திக் கொள்ளவும்!
//அந்த மாயந்தான் இந்த மாயனா என்று என்னால் உறுதியிட்டுக் கூற முடியாது//
என்னால் உறுதியிட்டுக் கூற முடியும்! பதிவிலும் கூறி இருக்கேன். பூவை நிலை to சிலப்பதிகாரம் வரை! இனி வந்து உங்கள் ஆக்கங்களை முன் வையுங்கள்!
//விஷ்ணுவைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில் தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு//
ஜிரா, நீங்கள் இங்கு தான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது
விஷ்ணு தமிழ்க் கடவுள் அல்ல!
மாயோன், பெருமாள் தான் தமிழ்க் கடவுள்!
சுப்ரமணியன் தமிழ்க் கடவுள் அல்ல!
முருகன், சேயோன் தான் தமிழ்க் கடவுள்!
//குமரன் (Kumaran) said...
ஆனால் இங்கே சிலருக்கு 'ஏற்கனவே தெரிந்த தகவல்கள் இவை'; சிலருக்கு 'ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது இது'//
அவர்கள் ஒருவரோ, இருவரோ, தான் குமரன்! மூவரோ, தேவார நால்வரோ இல்லை! :-)
இங்கே நாம் சொல்வது அவர்களுக்காக மட்டும் இல்லை!
இது பொதுவில் வைப்பது! பொது முயற்சி!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காணும் முயற்சி!
அதனால் நீங்களும் ஜிராவும் இங்கு கட்டாயம் வரணும்! இன்ன பிற அறிஞர்களும் சேரட்டும்!
அவரவர் மனிதில் உள்ள தெய்வ விருப்பை (இருப்பை அல்ல!) கழற்றி வைத்து விட்டூ உரையாடினால் தெளிவு ரொம்ப ஈசி!
அடியேன் பெருமாள் விருப்பை/பச்சையம்மன் விருப்பை/முருகப் பெருமான் விருப்பைக் கழற்றி வைத்து விட்டு வரச் சித்தமாய் உள்ளேன்!
//திருமுருகாற்றுப் படை முதல் சமய நூல் என்று இந்த ஆராய்ச்சியாளர் தமக்குக் கிடைத்த நூலை வைத்துச் சொல்வதால்//
திருமுருகாற்றுப்படை சமய நூல்! சம்யம் சார்ந்து தான் பேசும்!
தொல்காப்பியம் சமய நூல் அல்ல! அது மாயோனைத் தமிழர் கடவுளாக உயர்த்திக் காட்டுகிறது!
மேலும் தொல்காப்பியம் முருகாற்றுப்படைக்கும் முந்தையது!
ஜிரா-குமரனை நீங்கள் அன்று கேட்ட கேள்வி! இன்று விடை கிடைத்ததா?
இயற்கைய கும்பிட ஆரம்பித்த மனிதன் தன்னுடை கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு கடவுளை நிறுவிக்கொண்டான்(உருவத்திலும் பெயரிலும்). அப்படி உருவானதில் பெருமாளும் முருகனும்(சிவனின் மைந்தன்) இருவருமே தமிழ் கடவுள்கள் தான். சைவத்திற்கு, வைணவமுமே அதற்கு அத்தாட்சி. 1950களில் பிற்பாடு வந்த அரசியல் மாற்றங்களால் பெருமாளின் கோவிலான திருப்பதி ஆந்திரம் சென்றதால் மட்டும் அது தமிழ் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. கருப்பனாரும், மதுரை வீரனும் கூட தமிழ் கடவுள் தான். ஆந்திர காரர்கள் பெருமாள் யார் கடவுள்னு கேட்ட என்ன பதில் சொல்லுவீங்க?
ஐயா, தெரியாத்தனமா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன் கும்மிறாதீங்க.
//அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?//
இந்த வாதமும், தொல்காப்பியத்தைக் காட்டியதால் அடிபட்டுப் போகிறது ஜிரா! பல இலக்கியங்களும், முருகாற்றுப்படை உட்பட, தொல்காப்பியத்துக்குப் பிந்தியவை!
தொல்காப்பியம் புத்த பகவானையோ, அருக பகவானையோ நால்வகை நிலத் தெய்வங்களாகக் காட்டவில்லை! So your argument is ruled out!
நால்வகை நிலத் தெய்வங்களில் வேந்தன்(இந்திரன்), வருணன் - இருவரைப் பற்றி அதிகம் பேச்சில்லை!
பாட்டுடைத் தலைவர்கள் பெரும்பாலும் மாயோனும், சேயோனும் தான்! ஒப்புக் கொள்கிறீர்களா?
//மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை//
முருகனிலும் தமிழை முழுதுமாக அகற்றி விட்டு ஸ்கந்த புராணம் படிக்க முடியும்.
பெருமாளிலும் தமிழை முழுதுமாக அகற்றி விட்டூ விஷ்ணு புராணம் படிக்க முடியும்!
//அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர்//
நக்கீரர் முருக பக்தர்! பக்தர் அல்லாத ஒருவர் அப்படிச் சொல்வதை உம்மால் காட்ட முடியுமா?
தொல்காப்பியர் மாயோன் பக்தர் அல்லர்!
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் என்கிறார்!
//முருகனோடு தொடர்புடைய அனைத்தும் தமிழோடும் தமிழ் மக்கள் வாழுமிடத்தோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது//
மாயோனோடு தொடர்புடைய அனைத்தும் தமிழோடும் தமிழ் மக்கள் வாழுமிடத்தோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது. அதான் பதிவிலும் காட்டியுள்ளேன். பச்சை மாமலை போல் மேனி! ஆயர் தம் கொழுந்தே, சிறு பொழுது, பெரும் பொழுது, கருப் பொருள், உரிப் பொருள் வாயிலாக!
சொல்லப் போனால் குமரன் பதிவில் நீங்கள் கேட்ட இலக்கியக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் இங்கு விடையிறுத்துள்ளேன்! அடியேன் முயற்சிக்கு மதிப்பளித்து மேல் கருத்தாக்கங்களை நீங்கள் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
//அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?//
அன்று வைத்த அந்த வாதத்தின் மறு வடிவம் தான் இன்று வைக்கப்பட்டிருக்கும் இந்த வாதம்.
//அட... தமிழன் கும்புடுற எல்லாக் கடவுளுமே தமிழ்க் கடவுள்தான். //
:-)
தமிழ்க்கடவுள்ன்னா அது முருகன் மட்டுமே தான். வேறு ஏதாவது தரவு கொண்டு வந்து நீங்கள் காட்டினால் உடனே இப்படி சொல்லிடுவோம். ஆனா பெருமாளும் முருகனைப் போல பழந்தமிழர் வணங்கிய இறைஉருவம் தான் -ங்கறதை ஏத்துக்கவே மாட்டோம். :-)
//திருமாலை நானும் வழிபட்டாலும் மாயனை மன்னு வடமதுரை மைந்தன் தானே//
முருகனை நான் வழிபட்டாலும் வடகயிலை, சரவணப் பொய்கையான் தானே!
//ஆனால் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி..ம்ம்ம்ம்...என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால் தான் அதைத் தமிழறிஞர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டேன்//
தமிழறிஞர் தொல்காப்பியர் என்றோ தீர்மானித்து விட்டார்! அவர் தமிழறிஞர் தானே?
சேயோன் என்பது செம்மையுடையவன்; சிவந்தவன் என்ற பொருளில் சிவபெருமானுக்கு வழங்கப்பட்டுப் பின்னர் அது முருகனுக்கு ஆனது என்று இராம.கி. ஐயா ஒரு முறை சொல்லிப் படித்திருக்கிறேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும். இதற்குரிய தரவுகளை நான் அவரிடமும் கேட்கவில்லை. நானும் தேடிக் கண்டதில்லை.
மாயோன் என்பது கருத்தவனைச் சொன்னது போல் சேயோன் என்பது சிவந்தவனைச் சொல்லியிருக்கலாம். பல பழந்தமிழ் நூற்களுக்கு இறை வணக்கமாக நஞ்சுண்டவன் புகழ் பாடப்படுவதால் சேயோன் முதலில் சிவனைக் குறித்தது என்று உய்த்துணரலாம் போலும். ஆனால் உறுதியாகச் சொல்லத் தகுந்த தரவினை அறியேன்.
நஞ்சுண்டவன் புகழ் பாடப்படுகிறது என்று சொன்னதற்குக் காரணம் சிவனைப் போற்றும் பாடல்களில் பெரும்பாலும் நஞ்சினை உண்டவன் என்பது புகழப்பட்டுள்ளது என்பதோர் தோற்றம் அந்தப் பாடல்களைப் படித்ததில் தோன்றியிருப்பது தான். அதே போல் இலிங்க வடிவத்தைப் போற்றும் பழந்தமிழ் பாடல் ஒன்றினையும் இது வரையில் கண்டிலேன். பார்த்தவரையில் எல்லா பாடல்களும் சிவபெருமானைப் போற்றும் போது உருவத்தை விளக்கமாகச் சொல்லியே போற்றுகின்றன. இலிங்க வழிபாடு தமிழர் வழிபாடாக இருந்து பின்னர் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டனர் - அதனால் தான் வடமொழி வேதங்களில் இலிங்க வழிபாடு செய்பவர்களைச் சிசுன தேவர்கள் என்று இழிவாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் ஆய்வு செய்து சொல்லியிருப்பவர்களின் கூற்றினைப் பார்க்கும் போது இலிங்க வழிபாட்டை இன்னும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணாதது பெரும் வியப்பாக இருக்கிறது. தேடல் தொடரும்.
//ஓகை said...
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்!//
நன்றி ஓகை ஐயா!
//இதில் உங்களுக்கு ஏற்படும் ஓர் இனம் புரிந்த மகிழ்ச்சி எனக்குப் புரிகிறது//
எனக்கு இனம் புரிந்த மகிழ்ச்சியா? ஹா ஹா ஹா! ஓகை ஐயா! அடியேன் சிறிது நாள் திராவிடர் கழகத்தில் இருந்தேன்னு மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கறேன்! அப்போ நானும் பகுத்தறியாம அதே தப்பைத் தான் பண்ணிக்கிட்டு இருந்தேன் :-)
//தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா!//
என் சதை வைணவம் இல்லை!
//வாழ்வாதாரங்கள் இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் முல்லையும் அதே வளத்துடன் ஆனால் வாழுஞ்சூழலில் சற்றே கடுமைகொண்ட குறிஞ்சியும் முன்னேறிய பின் சமூகங்கள் நன்கு வாழும் வகையிலான மருதமும் அதன்பின் நெய்தலும் என வரிசைப் படுத்தப் பட்டிருக்கலாமென எனக்குப் படுகிறது//
அழகாச் சொன்னீங்க! The evolution that you say is natural! உடன்படுகிறேன்!
//ஆரியக் கூத்தை நாம் கண்டிருக்க வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் இது திராவிடக் கூத்தல்லவா!//
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
இரண்டு தரப்புமே கூத்தாடுவது தெரிகிறதே!
//பல செய்திகளைத் தொகுத்து அருமையான ஓர் இடுகை தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி//
நன்றி ஐயா! இதுக்குத் தான் அதிக உழைப்பு பிடிச்சிது! படித்ததையும் உள்வாங்கிக் கொண்டு, அலசிப் பார்த்து மெள்ள மெள்ளவே எழுதினேன்!
இதுவரை வந்த தகவல்கள், இனி வரும் தகவல்கள் யாவும் படிப்பேன்.
குறிஞ்சி மலர் படத்துக்கு சிறப்பு நன்றி!!
அய்யா... கே.ஆர்.எஸ். ஐயா..
ஏமாத்தி போட்டீங்களே ஐயா..
தமிழ்க்கடவுள் முருகனைப் பத்தி பதிவு போடுறேன்னு சொல்லிட்டு இப்படி பிளேட்டை திருப்பி போட்டுட்டீங்களே ஐயா..
தமிழ்க்கடவுள் பத்தி பதிவு உண்டுன்னு பொடி வெச்சு பதில் சொன்னப்பவே நினைச்சேன் வில்லங்கம் பண்ணித்தான் பதிவு போடப் போறீங்கன்னு...
தமிழ் கடவுள் முருகனுக்கு பொண்ணு கொடுத்த முறையில வேணும்னா, முருகனுக்கு மாமனா பெருமாளையும் போனா போகுதுன்னு தமிழன்னு வேணா ஒத்துக்கறேன்.
ஆனா தமிழ்க் கடவுளா எல்லாம் ஒத்துக்க முடியாது.
//இப்பிடியெல்லாம் பதிவு போட்டு ரவிக்கு இன்னார்தான் தமிழ்க்கடவுள்னு நிரூபிக்க வேண்டிய நெலமை//
ரைட்டோ ஜிரா. பாயிண்டை பிடிச்சீங்க.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா. தமிழ் மணக்க இருக்கும் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்பதில் சந்தேகம் தேவையா.
"முருகு" என்னும் பெயரிலேயே தமிழ் மணக்கவில்லையா.
மு - மெல்லினம்
ரு - இடையினம்
கு - வல்லினம்.
அத்துனையும் ஒருங்கே அமைந்த பெயர்கொண்ட முருகன் மட்டுமே தமிழினம்.
பெருமாளோ, வெறும் மாலோ இவ்வாறு தமிழ் மணக்கும் ஒரு பெயரை சுட்ட முடியுமா.
தமிழ் கண்ட தலைவன் முருகன்தான் என்பதை தட்ட முடியுமா.
முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு.
தமிழுக்கு உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு.
முருகனுக்கு முகங்கள் ஆறு..
தமிழ் வல்லின,மெல்லின, இடையினங்கள் ஆறு.
முகத்திற்கு மூன்று கண்களென (நெற்றிக்கண்ணாம் ஞானக்கண்ணொடு) கண்கள் பதினெட்டு.
தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல்.
தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ
தமிழாக தமிழ் எழுத்தாக நிறைந்தவன் முருகன் மட்டுமே என்பதில் ஐயமும் உண்டோ.
//அரை பிளேடு said...
"முருகு" என்னும் பெயரிலேயே தமிழ் மணக்கவில்லையா.
மு - மெல்லினம்
ரு - இடையினம்
கு - வல்லினம்//
தலீவா அரைபிளேடு
எத்தினி நாளைக்குத் தான் இப்பிடி ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கப் போறீங்க? :-)))
தி=வல்லினம்
ரு=இடையினம்
மா=மெல்லினம்
ல்=இடையினம்,அவனோடு கூடிய பெண்ணுக்கும் ஒரு இடை-இனம்!
அத்துனையும் ஒருங்கே அமைந்து, பெண்ணுக்கும் இடம் தந்த தமிழாண், தமிழன்! - அவன் திருமால் மட்டுமே!
//அரை பிளேடு said...
"முருகு" என்னும் பெயரிலேயே தமிழ் மணக்கவில்லையா.
மு - மெல்லினம்
ரு - இடையினம்
கு - வல்லினம்//
தலீவா அரைபிளேடு
எத்தினி நாளைக்குத் தான் இப்பிடி ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கப் போறீங்க? :-)))
தி=வல்லினம்
ரு=இடையினம்
மா=மெல்லினம்
ல்=இடையினம்,அவனோடு கூடிய பெண்ணுக்கும் ஒரு இடை-இனம்!
அத்துனையும் ஒருங்கே அமைந்து, பெண்ணுக்கும் இடம் தந்த தமிழாண், தமிழன்! - அவன் திருமால் மட்டுமே!
சரி, அரைபிளேடு வெளையாடுவதால் அடியேனும் வெளையாட்டுக் களத்தில் இறங்குகிறேன்! வேடிக்கை பாருங்க மக்கா! :-))
தி-ரு-மா-ல் பெயரிலேயே தமிழும் கொண்டு, தமிழ்ப் பெண்ணும் கொண்ட தமிழ் மறவ ஆண்மகன்!
இப்படித் தமிழ் மணக்கும் திருப் பெயரைச் சுட்டத் தான் முடியுமா?
தமிழ்த் தலைவன் திருமால் எனத் தட்டத் தான் முடியுமா??
தொடர்கிறது அரைபிளேடு விளையாட்டு!
மேல இருக்குற படத்தைப் பாருங்க!
அக்கால மறவனின் அடையாளம் என்ன? - மீசை!
அருந்தமிழ் ஆண்மகனின் அடையாளம் என்ன? - மீசை!
அன்புருகும் தமிழ்ப்பெண்ணின் ஆசை என்ன? - மீசை!
தமிழ் மறவன் கண்ணனுக்கு இருப்பதும்-மீசை!
முருகனுக்கு மீசையினைக் காட்டத் தான் முடியுமா?
மீசையுள்ள மறவனென நாட்டத் தான் முடியுமா??
:-)))))))))))))
ரவி,
இங்கே எனக்கு ஒரு ஐயம் தோன்றுகிறது,
சங்கக்கடவுள் முருகனை சைவர்கள் லபக்கிக் தனதாக்கிக் கொண்டது போல் வைணவம் ஏன் முயலவில்லை. திருமால் வழிபாட்டு தனித்துவத்தை காத்தது என்று சொல்லக் கூடாது. முருகன் சைவம் / வைணவன் சார்ந்தவன் அல்ல என்பது என் எண்ணம்.
All Jokes Apart....
நண்பர்களே
மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்!
இங்கு நடப்பது அவர் பெரிதா, இவர் பெரிதா என்னும் போலி விளையாட்டு அல்ல! எவரையும் உயர்த்தல் தாழ்த்தல் பதிவில் இல்லை என்பது உங்க மனசாட்சிக்கே தெரியும்!
இது நம் வேர்களின் தேடல் அவ்வளவே!
அடியேன் காட்டிய தொல்காப்பியத் தரவுகளுக்கு மாற்றுத் தரவுகளும் தந்து, கருத்தாக்கங்களை முன் வைக்கப்படுமேயானால்,
என் கருத்தைத் திருத்திக் கொள்வதில் கூச்சமோ, ஆணவமோ கொள்ள மாட்டேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஐயன் வள்ளுவன் சொன்னது தான்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
அனானி ஐயா
ஓகை ஐயாவின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டுள்ள தாங்கள், அதை வெளிப்படுத்த ஆபாசச் சொல்லைக் கையாண்டதால், உங்கள் பின்னூட்டத்தை அழித்து விட்டேன்! மன்னிக்கவும்!
பணிச்சுமை காரணமாக நட்சத்திர வாரத்தில் மட்டும், மறுமொழி மட்டுறுத்தலைத் தற்காலிகமாகப் பதிவில் நீக்கி வைத்திருந்தேன்!
இது வரை ஆபாசச் சொற்கள் கொண்ட பின்னூட்டங்கள் மாதவிப் பந்தலில் வந்ததே இல்லை - எத்துணை சிக்கலான பதிவென்றாலும் கூட! (May be 0.01%)
இனியும் அவ்வண்ணமே தொடர அவா! உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறேன்.
தற்சமயத்துக்கு,
அனானி ஆப்ஷனை மட்டும் எடுத்து விட்டு, மட்டுறுத்தாமலேயே பின்னூட்டங்கள் வெளியிடப்படும்!
உண்மையான அனானிகள் சிறிது காலம் என்னை மன்னிக்கவும்!
கோவி அண்ணா மற்றும் நண்பர்களே,
இந்தியப் பயணமும், பணிச்சுமையும் சேர்ந்துகிட்டதால, உடனுக்குடன் பதில் சொல்ல முடியலை! கோச்சிக்காதீங்க! ஆனா எப்படியும் சொல்லி விடுகிறேன்!
இப்ப கோவி அண்ணா பதிவுக்குப் போகணும்! அங்கிட்டு எக்கச்சக்கமா கேள்வி கேட்டு வச்சிருக்காரு! :-)
ஏய்யா....கேஆரெஸ்,
என்னதான்யா உம் மனசுலே நினைச்சுக்கிட்டு இருக்கீர்?
பதிவைப் படிச்சோமா, ரெண்டு வரி பின்னூட்டிட்டு வீட்டுவேலையைப் பார்த்தமா இருக்கவிடமாட்டீகளோ?
ஒவ்வொண்ணையும் இப்படி ஆராய்ஞ்சு அனுபவிச்சுப் படிச்சா வெளங்கிருமே மத்த வேலைகள்!
போய்யா.போ ..போ............
இன்னும் நல்லா எழுதுய்யா. இன்னும் 6 நாள் கிடக்கு.
ஒருவாரம் கழிச்சுப் பாத்திரம் தேச்சா கொறைஞ்சாபோயிரும்:-)
//ILA(a)இளா said...
இயற்கைய கும்பிட ஆரம்பித்த மனிதன் தன்னுடை கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு கடவுளை நிறுவிக்கொண்டான்(உருவத்திலும் பெயரிலும்)//
சூப்பர் இளா! பதிவிலும் இப்படித் தான் சொல்லத் துவங்கி இருக்கேன்!
//அப்படி உருவானதில் பெருமாளும் முருகனும்(சிவனின் மைந்தன்) இருவருமே தமிழ் கடவுள்கள் தான். சைவத்திற்கு, வைணவமுமே அதற்கு அத்தாட்சி//
ஓரளவு தான் ஓக்கே!
சைவம்-வைணவம் என்ற பெயர்களே பின்னால் வந்தவை தான்! சிவன்-பெருமாளைச் சுட்டிக்காட்ட!
முருகன்-பெருமாளைச் சுட்டிக்காட்ட அல்ல!
ஆனால் அதற்கும் முன்பே சேயோனும் மாயோனும் மதமோ, மதப் பெயர்களோ இல்லாமல் இயல்பாக இருந்திருக்காங்க!
//1950களில் பிற்பாடு வந்த அரசியல் மாற்றங்களால் பெருமாளின் கோவிலான திருப்பதி ஆந்திரம் சென்றதால் மட்டும் அது தமிழ் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது//
ஹிஹி! உண்மை தான்!
ஆனால் திருப்பதி மட்டுமே மாயோன் கோயில் இல்லை!
தமிழகத்தில் சிலப்பதிகாரம் காட்டும் இன்ன பிற மாயோன் கோயில்களும் (திருவரங்கம் உட்பட), சேயோன் கோயில்களும் (திருவேரகம் என்னும் சுவாமிமலை உட்பட்) உள்ளனவே! அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!
//கருப்பனாரும், மதுரை வீரனும் கூட தமிழ் கடவுள் தான//
உண்மை தான்!
சங்கத் தமிழ் இலக்கியங்கள் இவர்களைக் காட்டவில்லை என்றாலும் கூட, தமிழர்கள் வாழ்வில் நாட்டார் தெய்வங்களின் பங்கு மிகப் பெரிது! எங்க கிராம தெய்வம் - வாழைப்பந்தல் பச்சையம்மன், வாமுனி, செம்முனி, கருப்பண்ண சாமி!
இவர்கள் தமிழ்க் கடவுளோ இல்லையோ
ஆனால் நிச்சயம் தமிழர் கடவுள்!
//ஆந்திர காரர்கள் பெருமாள் யார் கடவுள்னு கேட்ட என்ன பதில் சொல்லுவீங்க?//
அதான் பின் வந்த கலப்பால்
பெருமாள் விஷ்ணுவாகவும் ஆயிட்டாரே!
முருகன் சுப்ரமணியனாகவும் ஆயிட்டாரே!
கர்நாடகாவில் சுப்ரமண்யா முருகன் தலமும் இருக்கு! உடுப்பி விஷ்ணு தலமும் இருக்கு!
//ஐயா, தெரியாத்தனமா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன் கும்மிறாதீங்க.//
கேளுங்கள்! கும்மப்படும்! :-)))
//
முருகனுக்கு மீசையினைக் காட்டத் தான் முடியுமா?
மீசையுள்ள மறவனென நாட்டத் தான் முடியுமா??
:-)))))))))))))
//
முருகன் குமரன். பாலகனாக போர்க்களம் கண்ட தண்டாயுதபாணி.
போர்க்களம் புகுந்த போது மீசை முளைக்காத சிறுவனாகவே இருந்தான் முருகன்.
தமிழன் தன்னை போர்க்களத்தில் காத்த கடவுளை அந்த கோலத்திலேயே காண விரும்பியதால்தான முருகனுக்கு மீசை இல்லை.
வள்ளியை ஏய்க்க மீசையோடு தாடியும் கொண்டு வந்தவராக்கும் முருகர்.
---------
//மேல இருக்குற படத்தைப் பாருங்க!//
அப்பாலிக்கா பார்த்த சாரதி கோவில் பெருமாளைக் காண்பிச்சு இங்க பாரு மீசைன்னு கதை விடறீங்களா.
வேற எங்கயாச்சும் பெருமாள் மீசையோட இருக்காரா.
அது பெருமாள் நாமம் போட்ட கையால முகத்தை துடைக்கப் போக அது மீசையாயிடுச்சு. பின்ன அது ஏன் வெள்ளையா இருக்காம்.
இல்லாட்டி பெருமாளுக்கு வயசாகி மீசை நரைச்சிடுச்சோ :)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அனானி ஐயா
ஓகை ஐயாவின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டுள்ள தாங்கள், அதை வெளிப்படுத்த ஆபாசச் சொல்லைக் கையாண்டதால், உங்கள் பின்னூட்டத்தை அழித்து விட்டேன்! மன்னிக்கவும்!
//
ரவி,
உங்கள் நட்சத்திர வாரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு யாரோ திருஷ்டி 'கழிசல்' செய்து இருக்கிறார்கள்.
அதை 'கழித்து'(நீக்கி)விட்டீர்கள். நல்லதுதான்.
:)
மால் என்ற வார்த்தைக்கு முன்னாடி திரு போட்டு "திருமால்" ஆக்கி நிறுவுகிறீர்கள். செல்லாது. செல்லாது.
தன் தனிப்பெயர்கொண்டு தமிழ் கொண்டவன் முருகன்.
அதனினும் வல்லின மெல்லின இடையின ஒற்றுக்கள் அனைத்திலும் "உகரம்" ஏற ஒலிக்கும் மென்மையே தமிழ் கொண்ட தன்மை.
அதை விடுத்து "இ"ஆ" எல்லாம் ஏறி வர எப்படி ஒப்புக் கொள்ள முடியும்.
"முருகு" என "உருகு"
"தமிழ்" அவனென "பருகு"
தாங்கள் "திருகு"மாலென கட்டியெழுப்பிய பெயர் "சருகு."
மாமனிலும் மருகன் முருகனே தமிழுக்குரியவன்.
தமிழர் தம் வாழ்வோடு பெருமளவு இயைந்தவன் மாயோனை விட சேயோனே.
தமிழனின் ஆயுதமான வேல் "வேலனின்" ஆயுதம்.
மாலவனோ "கதை","சக்கரம்" என தமிழரோடு பொருந்தாத ஆயுதங்களை உடையவன்.
தமிழன் தன் வாழ்வோடு இணைத்து காவடி எடுத்து திருவடி நாடுவது முருகனிடம்தான்.
வேலாட்டமும், வெறியாட்டமும், சிலம்பாட்டமுமாய் தமிழன் தொன்மையான கலைகளும் வேலனை சுற்றியவையே.
மாலவனோ அந்நியப்பட்டுத்தான் நிற்கிறான்.
இரண்டொரு பாடல்களால் சுட்டப்படுவதால் எல்லாம் தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது.
தமிழாகவே இருக்கும் கடவுள்தான் தமிழ்க்கடவுள்.
அவ்வையிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று விளையாடியதாகட்டும், நக்கீரருக்கு அருளியதாகட்டும், அருணகிரிக்கு நாவில் தமிழ் எழுதியதாகட்டும் தமிழ்ப் புலவர்களோடு விளையாடித் திரிந்தவன் முருகன் அல்லவா.
முருகன் தமிழோடு விளையாடினான்.
தமிழ் அவனோடு விளையாடியது.
அவன் ஒருவனே "அழகிய தமிழ் மகன்"
அவன் ஒருவனே "தமிழ் கடவுள்"
தமிழுக்கும் "முருகு" என்று பேர்.
அந்த "அழகு"க்கும் தமிழ் என்று பேர்.
ஆதாரங்களுடன் நல்ல ஒப்பீடு... நல்ல பதிவு .. வாழ்த்துக்கள் KRS !!!!! :)
அன்பு ரவி,
நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில் உங்க்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.
ஆச்சரியமாகவும் இருக்கிறது.
அவனே நிலை நாட்டிக் கொண்டான் தன் தமிழ்ப் பெருமையை. விட்டுணுசித்தன் முன் தோன்றி, சங்கப் பலகையில் அவர் வைத்த தமிழ் மேல்நின்றதால்
அவனும் பெரும் ஆளாகக் கருடன் மேல் காட்சி தந்தான்.
பல்லாண்டும் பிறந்தது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.
வாழ்த்துகள்.எனக்கும் முருகன் அழகன் மேல் அதீதப் பாசம் உண்டு:)
தமிழகச் சைவக் கோவில்களில் நாயுடன் இருக்கும் பைரவர் ராஜஸ்தானில் Bheru பேரு என்ற பெயரில் இருக்கிறார். இசக்கியம்மனை Eski (எஸ்கி) என்று அழைக்கிறார்கள்.
அல்லா தான் தமிழ் கடவுள், ஏசு தான் தமிழ் கடவுள் என்று வாதாட ஒரு கும்பல் உருவாகாமல் இருந்தால் சரி.
///ஓகை ஐயாவின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டுள்ள தாங்கள், அதை வெளிப்படுத்த ஆபாசச் சொல்லைக் கையாண்டதால், உங்கள் பின்னூட்டத்தை அழித்து விட்டேன்! மன்னிக்கவும்!///
தவறு செய்தவன் நான் தான். இன்றைய இணைய சூழலில் எதிர்வினைகளையும் யூகித்தே செயலாற்றவேண்டும். பின்னூட்டவேண்டும். நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதுண்டு. இங்கு சற்று தவறிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த சிறு எள்ளலும் எழுத்தில் வராமல் பார்த்துக் கொள்கிறேன். சிரமத்துக்கு வருந்துகிறேன் இரவிசங்கர்.
அரை பிளேடு,
சூப்பர்...
ஜி.ரா இல்லாத குறையை நீங்க நீக்கிட்டீங்க...
KRS,
இதுக்கு பதில் சொல்லுங்க...
//ஓகை said...
சிரமத்துக்கு வருந்துகிறேன் இரவிசங்கர்//
அட...என்னங்க ஐயா, இதுக்குப் போயி வருந்தறேன், மருந்தறேன்னு சொல்லிக்கிட்டு!
அவர் உங்களைப் பற்றிச் சொன்ன சிறுசொற்களை நீக்கிட்டுப் பார்த்தா, அவர் கருத்தும் ஒரு ஆதங்கக் கருத்து தான்! மத்தபடி ஒன்னும் இல்லை!
அனானி ஆப்ஷனைக் கூடிய விரைவில் மறுபடியும் வைத்து விடுகிறேன்! Take it Ez :-)
அன்புள்ள அண்ணாச்சி,
மிகவும் நல்ல பதிவு. ஒரு சின்ன கேள்வி.
முல்லை நிலத்தோடு பெருமாளை ஒப்புமை செய்தது போல்...
/*
முல்லை-காடும் காடு சார்ந்த இடமும் = காடு பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!
முல்லை-பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
முல்லை-சிறுபொழுது = மாலை! அதனால் மால்! திருமால்!
முல்லை-ஆயர்கள் நிலம்! அதனால் ஆயர் தம் கொழுந்தே!
முல்லை-தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் தான் பசுக்களை மேய்த்தான்!
முல்லை-விளையாட்டு = ஏறு தழுவுதல் = அதனால் காளைகளை அடக்கி மணம் புரிந்தான்!
முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் இவன் காதல் மன்னன்! :-)
*/
குறிஞ்சி நிலத்தோடு முருகனின் ஒப்புமையை தயை கூர்ந்து விளக்கவும்?
////இன்னும் நல்லா எழுதுய்யா. இன்னும் 6 நாள் கிடக்கு.
ஒருவாரம் கழிச்சுப் பாத்திரம் தேச்சா கொறைஞ்சாபோயிரும்:-) ///
வீட்டுக்கார அய்யா பாடுதான் பெரும்பாடு;
பாவம்!
அருமை... அருமை.
இரரம கி ஐயா அவர்களின் பதிவுகளில் ஏற்கெனவே படித்ததுதான்... என்றாலும், மாயோன், சேயோன் தகவல்கள் அற்புதம். வாலியோன் என்றால் வெண்மை நிறத்தவன் என்று பொருள் அல்லவா...
ஒரு பக்கம் இதை மேலும் மேலும் ஆராய ஆவல் பிறக்கிறது. ஆனால் பாருங்கள், எவ்வளவு ஆதாரங்கள் காட்டினாலும் சில கருத்துகள் மாறாமல்தான் இருக்கும் என்ற நிலையில் எதற்கு இந்த ஆராய்ச்சி... 'முருகனுக்கு அரோகரா! ஏழுமலையானுக்கு கோவிந்தா!' என்று சொல்லிவிட்டு போய்விடலாம் என்றும் தோன்றுகிறது.
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி!
//அரை பிளேடு said...//
தல, அடிச்சி ஆடறீங்க! ஜூப்பரு!
//முருகன் குமரன். பாலகனாக போர்க்களம் கண்ட தண்டாயுதபாணி//
தோடா! தண்டாயுதபாணி பழத்துக்கு கோச்சிக்கிட்டு கா வுட்டுட்டு போன போது!
//போர்க்களம் புகுந்த போது மீசை முளைக்காத சிறுவனாகவே இருந்தான் முருகன்//
போர்க்களத்துல ஜெயிச்ச அடுத்த முகூர்த்தத்துல கண்ணாலம் நடந்துச்சே! அப்போ சிறுவனா? பால்ய விவாகமா? :-))
என்னய்யா சொல்றீரு?
//வள்ளியை ஏய்க்க மீசையோடு தாடியும் கொண்டு வந்தவராக்கும் முருகர்//
அது ஒட்டு மீசை/விக்கு! :-)
கோயில்ல எங்கும் மீசை இல்லியே!
//வேற எங்கயாச்சும் பெருமாள் மீசையோட இருக்காரா//
எல்லா நரசிம்மப் பெருமாளுக்கும் மீசை உண்டு! பரசுராமப் பெருமாளுக்கு மீசை உண்டு!
//அது பெருமாள் நாமம் போட்ட கையால முகத்தை துடைக்கப் போக அது மீசையாயிடுச்சு//
தோடா! தினம் தினம் நாமம் போட்ட கையை மூஞ்சில துடைச்சிப்பாரோ?
//பின்ன அது ஏன் வெள்ளையா இருக்காம்//
இது கேள்வி! பச்சைக் கர்ப்பூரப் பொடியில் வரைவதால் வெள்ளை கலரு! அப்படி வரையாம வுட்டா சிலையும் கருப்பு! மீசையும் கருப்பு! உங்க கண்ணுக்கே தெரியாதே!
கண்ணுக்கு நேராத் தமிழ்க் கடவுள்-னு தெரியும் போதே தெரியலை-ன்னு சொல்றீங்க! இதுல கருப்பு மீசை, கருப்புச் சிலையில் தெரிஞ்சிருமா என்ன? :-)))
//இல்லாட்டி பெருமாளுக்கு வயசாகி மீசை நரைச்சிடுச்சோ :)//
மீசை நரைச்சாலும் பெருமாளுக்குத் தமிழ் மேல் ஆசை நரைக்காதாம்! :-))
//மால் என்ற வார்த்தைக்கு முன்னாடி திரு போட்டு "திருமால்" ஆக்கி நிறுவுகிறீர்கள். செல்லாது. செல்லாது//
அதானே பார்த்தேன்! திரு-ன்னு பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்காது, மால்-ன்னு மட்டுமே சொல்லும் ஆணாதிக்கப் பதிவரு நீங்க தானே? :-))
//"உகரம்" ஏற ஒலிக்கும் மென்மையே தமிழ் கொண்ட தன்மை//
உகரம் மட்டுமே ஏறினால் போதுமா?
அனைத்து தமிழ்ச் சொற்களும் ஏற இடம் கொடுக்கும் மாயோன் தமிழனா?
இல்லை போனாப் போவுது-ன்னு உகரம் என்னும் ஒரே ஒரு தமிழ் எழுத்துக்கு மட்டும் இடம் கொடுக்கும் முருகன் தமிழனா? :-)))
//"முருகு" என "உருகு"
"தமிழ்" அவனென "பருகு"
தாங்கள் "திருகு"மாலென கட்டியெழுப்பிய பெயர் "சருகு"//
முருகு ஒன்றே உருகு
அஃது வெறும் குறுகு
திரு-மால் கொண்டே திருகு
தமிழில் வளம் பெருகு!
//அரை பிளேடு said...
தமிழர் தம் வாழ்வோடு பெருமளவு இயைந்தவன் மாயோனை விட சேயோனே//
அப்ப மாயோன் இயைந்திருக்கான்-ன்னு ஒத்துக்கறீங்க! ஒருத்தர் சுத்தமா இல்லை-ன்னு சாதிச்சாரு! :-)
//தமிழனின் ஆயுதமான வேல் "வேலனின்" ஆயுதம்//
தமிழனின் ஆயுதம் சங்கு! சங்கே முழங்கு என்பது பாரதிதாசன் வாக்கு!
அச்சங்கே மாலவன் ஆயுதம்!
//தமிழன் தன் வாழ்வோடு இணைத்து காவடி எடுத்து திருவடி நாடுவது முருகனிடம்தான்//
காவடி தூக்கியே பழக்கப்பட்டுப் போன தமிழனின் மானம் மீட்க, மூவடி வென்றான் மாலவன்!
காவடியா? மூவடியா?
//வேலாட்டமும், வெறியாட்டமும், சிலம்பாட்டமுமாய் தமிழன்//
குரவைக் கூத்து, உறி ஆடுதல் எல்லாம் மாலவனுக்கே!
தமிழன் வீர விளையாட்டான ஏறு தழுவல் - ஜல்லிக் கட்டில் வென்று மணம் முடித்தவன் மாலவன்!
முருகன் ஏறைத் தழுவினான்?
கிழவேடம் பூண்டு யாரைத் தழுவினான்?
//இரண்டொரு பாடல்களால் சுட்டப்படுவதால் எல்லாம் தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது//
இரண்டொரு பாடலா?
ஈராயிரம் பாடலால் சுட்டப் பெறுகிறான்!
பூவை நிலை என்று தனித் துறை மாலவனுக்கே! வேலவனுக்கு என்ன துறை? அதுவே குறை!
//அவ்வையிடம் சுட்ட பழம்
நக்கீரருக்கு அருளியதாகட்டும்
அருணகிரிக்கு நாவில் தமிழ் எழுதியதாகட்டும்//
பொய்கையை இடைகழியில் நெருக்கியதாகட்டும்
ஆண்டாளின் தமிழ் மாலை ஏற்றதாகட்டும்
கம்பனுக்கு அரங்கேற்றம் நிகழ்த்தியதாகட்டும்
பாவம் வயதான காலத்தில் ஒளவை போன்ற தமிழ்ப் புலவர்களைச் சீண்டித் துன்புறுத்தாமல், மாலை சூடி அன்புறுத்தியவன் மாலவன் என்னும் தமிழ்த் தெய்வம்! இதை மறுப்பரும் உளரோ! கதை திரிப்பரும் சிலரோ!
//முருகன் தமிழோடு விளையாடினான்//
ஆக மொத்தம் முருகனுக்கு தமிழ் ஒரு விளையாட்டுப் பொருள்! கருப்பொருளோ, உரிப்பொருளோ அல்ல! என்ன கொடுமை முருகா?
விளையாடி விட்டு எறியும் பந்து போல அதான் தமிழை எறிந்து விட்டான் போல! முருகன் கோயில்லயும் தமிழை வெளியே எறிஞ்சிட்டாங்க! :-((
//அவன் ஒருவனே "அழகிய தமிழ் மகன்"//
பாவம் முருகனை, விஜய் ஆக்கிட்டீங்களே!
:-)))))))))))))))
என்ன தலீவா அரைபிளேடு...ஆட்டம் போதுமா? இப்படி டகால்ட்டி ஆட்டம் ஆடுறத்துக்குப் பதிலா, தமிழ் இலக்கியத் தரவுகள் தரலாம்! :-)
//வெட்டிப்பயல் said...
அரை பிளேடு, சூப்பர்...
ஜி.ரா இல்லாத குறையை நீங்க நீக்கிட்டீங்க...//
ஜிரா வாங்காத அடியை நீங்க வாங்கிட்டீங்க! :-)))))
//KRS,
இதுக்கு பதில் சொல்லுங்க...//
குருநாதா
பதில் சொல்லியாச்சி! பாருங்க தமிழ்க் கடவுளே! :-)))
முருகா.. தம்பி கண்ணபிரான் தன்னை மேவும் உன் 'மாமன்' மேல், என்னைப் போலவே... நான் உன் மீது கொண்டிருக்கும் மையல் போலவே... அபரிமிதமான காதல் கொண்டவர்..
அதுதான் உனக்கும், உன் மாமனுக்கும் ஒரு சைடா லின்க் கொடுத்திருக்காரு..
அவ்வளவுதான்..
யார் என்ன சொன்னாலும்.. அந்தப் பெருமாளே இன்னொரு அவதாரம் எடுத்து வந்துச் சொன்னாலும், நீயே சாமி.. பெருமாளே சாமி.. சிவனே சாமி.. பிரம்மனே சாமி..
எல்லா சாமியும் ஒண்ணுதான்ங்கிறேன்..
சாமில்லேயும் எதுக்கு மொழி பிரச்சினை.. ஜாதி பிரச்சினை.. அது நம்ம பதிவர்களோட போகட்டும்ன்றேன்..
முருகா.. முருகா.. முருகா..
ஒண்ணூம் சொல்ல முடியல..பிரமிப்பா இருக்கு ரவி! பேசவரல எனக்கு..எவ்வளோ தெரிஞ்சி வச்சிருக்கீங்க! அரங்கன் அருள்வான் என்றுமட்டும் சொல்லிக்கறேன் இப்போதைக்கு.
\ஷைலஜா said...
ஒண்ணூம் சொல்ல முடியல..பிரமிப்பா இருக்கு ரவி! பேசவரல எனக்கு..எவ்வளோ தெரிஞ்சி வச்சிருக்கீங்க! அரங்கன் அருள்வான் என்றுமட்டும் சொல்லிக்கறேன் இப்போதைக்கு.\\
ஆகா தலைவா இப்போதைக்கு ரீப்பிட்டே தான்...
பின்னூட்டங்களை எல்லாம் படிக்கானும்..வரட்டா ;)
கே.ஆர்.எஸ் அண்ணா,
பின்வருவது கொஞ்சநாள் முன்னாடி படித்த ஒரு கட்டுரையில் படித்தது. மேலதிக விவரம் (புத்தகத்தை) தேடினேன், கிடைக்கவில்லை. இருப்பினும் அதன் சாரம், என் மனதில் இருப்பதை இங்கே தருகிறேன்.
தொல்காப்பியர் 'கொற்றவை நிலை' என்று புறத்திணைக்கு பெயர் வைத்ததால் அன்றே சக்தி வழிபாடும் இருந்திருக்கு. :-)
திருமந்திரத்தில் தாந்திரிக நெறி பற்றியும் சில சக்கரங்கள்/யந்திரங்கள் பற்றியும் திருமூலர் தந்திருக்கிறார் என்றும் படித்தேன்.
அந்த கட்டுரையினை இன்னுமொரு முறை தேடி, கிடைத்தால் மீண்டும் வருகிறேன்.
//நக்கீரர் முருக பக்தர்! பக்தர் அல்லாத ஒருவர் அப்படிச் சொல்வதை உம்மால் காட்ட முடியுமா?
தொல்காப்பியர் மாயோன் பக்தர் அல்லர்!
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் என்கிறார்!//
"ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"
மலைமகள், கொற்றவை, பழையோள் என்று பல சொற்களால் அன்னையை துதிக்கிறார் நக்கீரர்.
இளங்கோ அடிகள் அன்னையின் திருப் பெயர்களை தொகுத்து தனி நாமாவளியே தந்திருக்கிறார். கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த சமயத்தில் அவளை சப்த மாதர்களுடன் ஒப்பீட்டு எழுதியுள்ளார்.
அதுமட்டுமா, குமரகுருபரர் எழுதிய மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் இருக்கிறதே?.
மாலும் மருகனும் தமிழ்கொண்டாடிய கடவுள்கள்.அதுசரி தமிழில் பாடப்படாத கடவுள் ஒன்றைக் குறிப்பிடுங்கள் பார்க்கலாம்
//மதுரையம்பதி said...
"ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"//
மெளலி அண்ணா
கலக்கல்! செந்தமிழ் இலக்கியம் எல்லாம் இனிமேத் தான் பயில வேண்டும்னு சொல்லுவீங்க! இப்ப பாருங்க, முருகாற்றுப்படை மேற்கோள் எல்லாம் காட்டறீங்க! சூப்பர்!
மக்களே!
இப்படிக் கருத்து மட்டும் முன்வைத்து உரையாடும் உரையாடல்களால் என்னவெல்லாம் நன்மை பாருங்க!
* தத்தம் நிலைப்பாடுகளை உறுதி செய்து கொள்ள பழந்தமிழ் நூல்களை எல்லாம் நாடுகிறோம்
* கருத்துக் கோர்வை உருவாகுது
* இலக்கிய வாசிப்புக்கும், சங்கத் தமிழ் மொழியை உரைகளின் துணை கொண்டு மேலும் படிக்கத் தூண்டுது!
இப்படி எல்லாம் விவாதங்கள் உரையாடல்கள் அமைந்தால் collective understanding அமைய ஏதுவா இருக்கும்.
உணர்ச்சிப் பூர்வமாக மட்டும் இல்லாமல், மேற்கோள்களுடன் அழகாக வாதங்களை முன் வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!
கோபித்துக் கொண்ட நண்பர்கள் யாராச்சும் இருந்தா, புரிந்து கொண்டு, மீண்டும் வந்து சுவை கூட்ட வேண்டும் என்பதே என் ஆசை! வாங்க! வாங்க!
தமிழ் தாங்கத் தாங்க!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முருகா.. தம்பி கண்ணபிரான் தன்னை மேவும் உன் 'மாமன்' மேல், என்னைப் போலவே... நான் உன் மீது கொண்டிருக்கும் மையல் போலவே... அபரிமிதமான காதல் கொண்டவர்..//
அண்ணாச்சி நீங்க சொன்னாச் சரி தாங்க! :-))
//யார் என்ன சொன்னாலும்.. அந்தப் பெருமாளே இன்னொரு அவதாரம் எடுத்து வந்துச் சொன்னாலும், நீயே சாமி.. பெருமாளே சாமி.. சிவனே சாமி.. பிரம்மனே சாமி.. //
சூப்பர்! இதைத் தான் நானும் சொன்னேன் அண்ணாச்சி!
//இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல!
இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!//
//சாமில்லேயும் எதுக்கு மொழி பிரச்சினை.. ஜாதி பிரச்சினை.. அது நம்ம பதிவர்களோட போகட்டும்ன்றேன்..//
ஹிஹி! பதிவர்கள் மட்டும் என்ன பாவம் பண்ணாங்களாம்? அவிங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் வேண்டாம்!
இது தமிழினம் தன் வேர்கள் முருகனும் மாயனும்-ன்னு தெரிஞ்சிக்கிற முயற்சி தானுங்க! இதுல ஒஸ்தி தாழ்ச்சி-ன்னு பேச வரலீங்க!
சில பேரு தான், அதீத பாசத்துல, அவங்க "மட்டுமே" தமிழினம்-ன்னு "பகுத்தறியாம" சாதிக்கறாங்க! :-)))
//வெட்டிப்பயல் said...
பெருமாளை ஆரியக்கடவுளாக சிலர் நினைக்க காரணமென்ன?//
வெட்டிக்கு நேத்தே பதில் சொல்லணும்னு நெனச்சேன். விட்டூப் போச்சு! அதாச்சும் பாலாஜி
தமிழ்த் தாயின் இரண்டு குழந்தைகள், கலாச்சார மாற்றத்தால், வடக்குப் பக்கமும் போச்சுதுங்க!
ஆனா அங்கிட்டு ஒரு குழந்தைக்கு மட்டும் ஓவரா அலங்காரம், கவனிப்பு-ன்னு நடக்க ஆரம்பிச்சிருச்சு! இன்னொரு குழந்தைய அப்பப்ப கண்டுகிட்டாலும், முன்சொன்ன அளவுக்கு கண்டுக்கல!
இதப் பாத்த நம்மாளுங்க, புத்தி கெட்டுப் போயி, வடக்கத்தான் சரியாக் கண்டுக்காதவன் தான் தெக்கத்தான், இன்னொருத்தன் தெக்கத்தன் இல்ல-ன்னு, தான் பெத்த குழந்தையையே தள்ளி வைக்கற முட்டாள்தனத்தைப் பண்ணிக்கிட்டு இருக்குதுங்க!
அவன் கண்டுக்குன்னா என்னா, கண்டுக்கிலன்னா என்னா, நம்ம குழந்தைங்க நம்ம கிட்ட வளரப் போவுதுங்க! நாம் ரெண்டையும் ஒன்னாக் கண்டுப்போம்-ங்கிற புத்தி வந்துருச்சுன்னா போதும்! அது வரைக்கும் இப்படி அரைகுறை ஆட்டம் தான்!
நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூட, வடக்கை வச்சிப் பார்க்கும் மாயை தான் இப்பிடி பிடிச்சு ஆட்டுது!
வடக்குல பேசப்படாதவன் எவனோ அவனே தெக்கத்தான் என்னும் உச்சகட்ட அபத்தத்தின் லாஜிக் தான் இது! :-((((((
Hope I touched the root cause and answered your question!
//கோவி.கண்ணன் said...
//சங்கக்கடவுள் முருகனை சைவர்கள் லபக்கிக் தனதாக்கிக் கொண்டது போல் வைணவம் ஏன் முயலவில்லை//
சைவர்களிடம் சங்கக் கடவுள் (நால் நிலத் தெய்வங்கள்) அப்போது இல்லை! - அதனால் லபக்!
வைணவர்களிடம் ஏற்கனவே மாயன் இருந்ததால் புதுசா இன்னொன்னை லபக்கத் தோனலை போலும்!
//முருகன் சைவம் / வைணவன் சார்ந்தவன் அல்ல என்பது என் எண்ணம்//
மிகவும் சரி! திருமாலும் சைவம் / வைணவன் சார்ந்தவன் அல்ல என்பதே நான் சொல்ல வருவது!
சைவம்/வைணவம் என்ற பெயர்களே பின்னால் வந்தவை தான்!
அதுக்கு முன்னாடியே சேயோனும் மாயோனும் உண்டு!
என்ன...
விஷ்ணுவாக்கப்பட்ட மாயோனை அவனுங்களும் ஓவராக் கொண்டாடியதால்...இப்படி ஒரு மாயை!
இதுல ஐயம் இருந்தாக் கேளுங்க! இன்னும் தரவுகளோடு சொல்லுறேன்!
(ஒரு காலத்துல தி.க-ல இருந்தது எப்படி எல்லாம் இப்ப உதவுதுப்பா சாமீ, நினைச்சிக் கூடப் பாக்கலை!:-)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இதுவரை வந்த தகவல்கள், இனி வரும் தகவல்கள் யாவும் படிப்பேன்//
நன்றி யோகன் அண்ணா!
நான் முருகப்பெருமானைப் பதிவில் எங்கும் தாழ்த்திப் பேசவில்லை என்பதை நீங்களாச்சும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்!
//குறிஞ்சி மலர் படத்துக்கு சிறப்பு நன்றி!!//
மலைநாடான் ஐயா ஒருமுறை போட்டிருந்தாரே!
அன்பே கடவுள்!
//கலக்கல்! செந்தமிழ் இலக்கியம் எல்லாம் இனிமேத் தான் பயில வேண்டும்னு சொல்லுவீங்க! இப்ப பாருங்க, முருகாற்றுப்படை மேற்கோள் எல்லாம் காட்டறீங்க! சூப்பர்!//
அதுசரி, ஆனா நீங்க இன்னும் எனக்கு பதில் சொல்லல்லை. சக்தி / பெண் தெய்வ வழிபாடு பழந்தமிழரிடத்து உண்ட&