Friday, March 21, 2008

***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்? - பாஸ்டன் பாலானாந்தா!

நம்ம பாபாவைப் பற்றி என்ன சொல்லுறது? நானும் எத்தனையோ பதிவு போட்டிருக்கேன்! ஆனா இவரைப் பத்தி எழுத உட்கார்ந்தா ஒன்னுமே வரமாட்டேங்குதே! என்ன கொடுமை பாலாஜி!

ஆங்...இதோ வந்திரிச்சி! பதிவு எழுத நேரமே இல்லை-ன்னு சொல்லுறவங்க எல்லாம் உடனே பாபாவை மீட் பண்ணுங்க! அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு தொன்னூத்தியாறு மணி நேரம் என்பது பிரம்ம சிருஷ்டியின் ரகசியம்! :-)
அவர் கிட்ட இருந்து கொஞ்ச நேரத்தையும் காலத்தையும் வட்டிக்குக் கடன் வாங்கினீங்கனா, நீங்க எங்கயோ போயிருவீங்க!

சுட்டி நிபுணர் நம்ம பாஸ்டன் பாலா, ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)
அப்படிப்பட்ட தலைவரு, அடியேன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆன்மிகத் தமிழ்ப் பதிவுகளின் அடுத்த கட்டத்தை ஒரு அக்கு அலசி இருக்காரு பாருங்க!
அதுவும் சும்மாவா?
வார இறுதியின் சிற்றஞ் சிறுகாலே, ஜிமெயிலில் வந்துன்னைச் சேவித்து, 04:24 மணிக்குத் தன் முத்தான பதில்களை அனுப்பி வச்சாரு!
இப்படிப்பட்ட பாபாவுக்கு, ஆன்மீக டிபார்ட்மென்ட்டில் இருந்து என்ன பட்டம் கொடுக்கலாம்? அடியார்கள் எல்லாரும் வந்து அடிச்சி விளையாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!:-)


இங்கு இன்னொரு செய்தியையும் சொல்லிக் கொள்ள பாபாவின் அனுமதியை வேண்டுகிறேன்!
பாபாவின் அன்னையார் திருமதி ஆர்.பொன்னம்மாள் அருமையாக ஆன்மீகக் கட்டுரைகள் எழுத வல்லவர்!
காமகோடி இதழில் இவரின் கட்டுரைகளை நான் சென்னையில் இருக்கும் போது தவறாமல் வாசிப்பேன்! ரொம்ப அடர்த்தியா சொல்லாது, என்னைப் போலவே லோக்கலாகப் பேச்சுத் தமிழில் ஆன்மீகத்தைச் சொல்லுவாய்ங்க!

ஆனா அப்போ, இவங்க தான் பாபாவின் அம்மா என்பது எனக்குத் தெரியாது!
இந்த ஒட்டக்கூத்தர் ஒலிப்பேழைப் பதிவைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன்!
திருமதி ஆர்.பொன்னம்மாள் அவர்களின் வலைப்பூ இங்கே!

முன்பு ரவியின் நேர்காணலில் சொல்லப்பட்ட அதே எண்ணங்களும், விழைவுகளும் தான் பாபாவையும் நேர் காண வைத்தது!
பாபாவின் பல்லூடகப் பார்வைகள், நிச்சயம் மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் என்பது அடியேன் நம்பிக்கை! அந்த நம்பிக்கை இந்த நேர்காணலில் மேலும் வலுப்பட்டது!
Thus Spake Baba....


1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?

முதல் கேள்வி: 'தானாய் தெரிந்து கொள்வது'.இது சாத்தியமில்லை. புத்தகம், பட்டறிவு, நண்பனுக்கு தொலைபேசி போட்டு கேட்டறிவது போன்றவை மட்டுமே எனக்கு சாத்தியம். குறுங்கதை மூலம் இதை விளக்கலாம்.

மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்ய (கொஞ்சம் பேக்கிரவுண்ட் விரும்புபவர்களுக்கு: கீதா சாம்பசிவம்: "வெற்றியைக் குறிக்கும் நாள் இது!") சங்கரர் செல்கிறார். செல்லும் வழியில் 'தேங்காய் மண்டிக்காரனை' பார்க்கிறார்.

எல்லாரும் தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்தால், அவன் வித்தியாசப்படுகிறான்.
சன் டிவியில் வடிவேலு பிள்ளை போல் 'மாயாஜாலம்' என்று உரைத்தவுடன்,
'அர்ஜூனா.. அர்ஜூனா' பாடலில் சமத்துவ சரத்குமார் முன் நமீதா வளைவதைப் போல் நெளிந்து இளநீர்களைப் பறிப்பதற்கு வசதியாக தென்னை மரம் சாய்கிறது. அவனும் பறித்துக் கொண்டவுடன், வழக்கம்போல் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த டெக்னிக், ஆதிசங்கரருக்குத் தெரியாது.
'தெரிந்து என்ன ஆகப் போகிறது?' என்று அலட்சியப்படுத்தாமல், அவனிடம் சென்று சீடனாக சேர்ந்து, மரங்களை வளைவிக்கும் நுட்பத்தை அறிந்து கொள்கிறார்.

ஆதிசங்கரரோ ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்க விரும்புபவர். தேங்காய் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு ஏறி 'காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு' என்று ரஜினி கூட அட்வைஸ் விடும் நிலைக்கு ஆகிவிடுவார். என்றாலும் புதியது அறிய உற்சாகத்துடன் கற்றுக்கொள்ள விரும்புகிறார்.

இதெல்லாம் முடிந்து மண்டனமிச்ரரின் வீட்டுக்கு சென்றால், அவர் வீட்டில் அன்று திவசம் என்பதால் வாசற்கதவு தாளிட்டிருக்கிறது. எதிர்த்தாப்பில் பார்த்தால் தென்னை மரம் நின்று கொண்டிருக்கிறது.. வளைய சொல்கிறார். வளைகிறது. மேலேறி நின்று செர்ஜி பூப்காவாக உயரந்தாண்டி வீட்டுக்குள் சூப்பர் ஸ்டார் எண்ட்ரி கொடுக்கிறார்.
கதையின் முடிவில் மாரல்: 'களவும் கற்று மற; ஆன்மிகமும் கற்று வை'

இரண்டாவது கேள்வி: 'ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?'
எல்லாமே அவசியந்தான். எலியட் ஸ்பிட்சர்களுக்கு சிற்றின்பம் தேவையில்லாமல் மோட்சம் பெற வைக்கவாவது ஆன்மிகம் தமிழ்ப் பதிவுலகத்துக்கு அவசியம்.


2. நீங்கள் ஆன்மீகம்/இலக்கியம் கலந்த பதிவுகள் படிப்பீர்களா? இல்லை போரடிக்கும் என்று ஓடிவிடுவீர்களா? எதைப் படிப்பீங்க? எதை விடுப்பீங்க?

நான் பெரும்பாலும் படிப்பதில்லை. அலுவலில் கொடுக்கும் பத்து பக்க ஒலை போல் இருந்தால் ஒவ்வாமை இன்னும் அதிகரிக்கிறது.
தங்களின் புதிர்களில் 'இந்து சமயத்தில் எனக்கு எல்லாமே தெரியும்' என்னும் அகந்தையைப் போக்கிக் கொள்ள மேலோட்டமாகவாது பார்ப்பதுண்டு. இதற்கும் இன்னொரு குட்டிக்கதை.

இப்பொழுது ஆதிசங்கரரின் சிஷ்யருக்கு செல்வோம். அவருடைய பெயர் பத்மபாதர். இவருக்கு இஷ்ட தெய்வம் நரசிம்மர். எல்லா முனிவர்களும் போல் காட்டுக்குப் போய் நரசிம்மர் கண் முன்னே பிரத்யட்சம் ஆவதற்காக மோனநிலையில் இருக்கிறார். காடு மாறி காடு வரும் ஃப்ரெஷர் வேடன் இவரைப் பார்க்கிறான்.
தட்டியெழுப்பி, 'அய்யா.. சாமீ! எதுக்கு இப்டி ஃபீலிங்கா உக்காந்துண்டு இருக்கீங்க? ஊர்வசி மேல லவ் ஃபெய்லியரா!' என்று கொக்கி போடுகிறான்.

பத்மபாதரும் பொறுமையாக, 'இந்தக் காட்டில் சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் இருப்பவரை கண்ணுறுவதற்காக தியானித்துத் தேடுகிறேன்' என்று குறிக்கோளை விளக்குகிறார். 'அம்புட்டுதானே... ராவுக்குள்ளாற உங்களுக்கு யுபிஎஸ்ஸிலோ டிஎச்ல்லிலோ டெலிவரி செஞ்சுடலாம்' என்று சூளுரைத்து விட்டு கிளம்புகிறான்.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.'

என்று குமரகுருபரர் சொன்னது போல் அவனுடைய அன்றாட வேலையான வேட்டையை விட்டான். நண்பகல் பழரசம்; மதியத்திற்கான மான் ஃப்ரை; சாயங்கால கேடோரேட்; கொஞ்சம் சியஸ்டா என்று எல்லாமே நினைவில் வரவில்லை. சூரிய அஸ்தமனமும் ஆகிவிடுகிறது. குத்தீட்டியை எடுத்து மாய்த்துக் கொள்ள செல்கிறான். கண்ணப்பருக்கு வந்தது போல் காட்சியளிக்கிறது அந்த மிருகம்.

கொஞ்சம் உல்லுவா காட்டி சண்டைக்குப் பின் அடிபணிந்து நாயாக கூடவே வருகிறது.
பத்மபாதர் மிரண்டு போகிறார். கணித அரசி சகுந்தலா தேவியாகக் கணக்கிட்டு, 'உமக்காக 87,600+ மணி நேரம் தவமிருந்தேனே! பத்து மணி நேரத்தில் அவனுக்கு வந்துவிட்டீரே!!' என்று க்ளையண்டிடம் பில்லிங் ரேட்டை பெருக்கும் குந்துரத்தராக கேள்வியெழுப்பினாலும் விடை+நீதி எளிது: 'வேண்டும் என்கிறபோது வேடனைப் போல் வேங்கடவனைக் கட்டியிழுத்துக் கொள்ளலாம்; இன்றைய தேவை சி#, இன்ன பிற மைக்ரோசாப்ட் நுட்பமும் ஊசிப் போகாத தமிழ்ப்பதிவு மசாலாவும்'.


3. ஆன்மீகப் பதிவுகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்துக்கும் ஏதாச்சும் நன்மை இருக்கா?

சுருக்கமான பதில்: நிச்சயமாக.

விரிவான தோட்டாப்புள்ளிகள்:
  • அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களுக்கு சன் டிவி பொழுதுபோக்கு போரடிக்கும்போது
  • புதிய வார்த்தைகளை, சொற் குவியல்களை, பதங்களை, ஆக்கங்களை வெளிக்கொணரும் பழங்கால இலக்கியங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும்போது
  • சோறு ஊட்டும்போது 'காக்காய் வடை' கதைக்கு பதில் புதிதாய் புனைவதற்கு உதவும்போது
  • தமிழ்ப்பதிவுகள் எல்லாமே குப்பை என்று பொதுமைப்படுத்தும்போது 'தெய்வ நிந்தனை செய்யலாமா?' என்று சுட்டிகளைக் காட்டும்போது
  • அந்தக் கால 'அவர்கள்' சத்தம் போடாதேவாகவும்; மகாபாரதம் 'தளபதி'யாகவும் உருமாறும் கற்பனைப் பஞ்சத்தைப் போக்குவதற்கு உதவி இயக்குநர்களுக்கு ஐடியா கொடுக்கும்போது


4. சமூக அவலங்கள், மொழி வெறுப்பு, தாக்குதல்கள் - இவை மிகும் போதெல்லாம் இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன? (எடுத்துக்காட்டு; தில்லைப் பிரச்சனை)

தில்லை, ஜெயேந்திரர் (அல்லது) இருள்நீக்கி சுப்பிரமணியன், பிரேமானந்தா போன்றவை வெளிப்படையாக தெரிபவை. ஆனால், இது போன்ற வெளியில் தெரியாத அவலங்களை வெளிக் கொணருவதில் தான் ஆன்மிகப் பதிவுகளின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

சுதா சேஷய்யனைப் படித்து கொண்டிருந்த காலத்தில் அவரின் எழுத்துகளில் பிழைகள் மலிந்து இருந்ததை உணர்ந்திருந்தேன். அந்த வருட கல்கி/இன்ன பிற இப்பொழுது கிடைப்பதில்லை என்றாலும், இது போன்ற வெகுசன ஊடக பத்தி எழுத்தாளர்கள் தவறாக எழுதுவதை தெளிவாக்கலாம்.

தெரிந்தவர் குடும்பத்தில் நடப்பவை, அதற்கான பொலிடிகலி கரெக்ட் 'ஆன்மீக'த் தீர்வுகளை 'கேள்வி-பதில்' போல் தரலாம்; இந்த மாதிரி நேரடி கைங்கரியங்கள் சிரமம்.

உதாரணத்திற்கு, என்னையே எடுத்துக் கொள்ளலாம்: சமீபத்தில் என் அம்மா எழுதி வெளியான நூலுக்கு 'இந்தப் புத்தகத்தை இந்த மாதிரி ஆண் பெயர் போட்டு இன்ன அடையாளங்களுடன் வெளியிட்டால்தான் இன்னார் வாங்குவார்கள்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு முகமூடி பெயரில்தான் வெளியிட்டிருக்கிறார்கள். இது கூட சமூக அவலம்தான். பெண் மீது நடக்கும் வெளிப்படையான அடக்குமுறை தாக்குதல்.

இவற்றை பெரிய அளவில் எடுத்துச் செல்ல ஜெயமோகனைக் காட்சிப்படுத்தும் விகடன் க்ரூப்பும் முன்வரப்போவதில்லை; அவர்களை வெளிக்காட்ட 'ஃப்ரீயா விடுப்பா' என்று அமைதிகாக்க சொல்லும் அம்மாவும் இடம் தரப் போவதில்லை. எனினும், இது போன்ற கழுத்தை நெறிக்கும் ஆன்மிகச் சூழலை உள்ளிருந்தே வெளிக் கொணர்வதில் பதிவுகளின் பங்கு மிகவும் முக்கியம்.


5. பதிவுலகம் தன்னைத் தானே முதிர்ச்சி கொள்ளும் நிலை வரத் துவங்கியுள்ளது (இதைச் சொல்ல, யாருப்பா உனக்குப் பிரியாணி வாங்கிக் கொடுத்தா?:-) திரட்டிச் சார்பின்மை, குழுப்பதிவுகள், துறைசார் பதிவுகள், ஒரே பதிவர்-பல்துறைப் பதிவுகள் என்று வளரும் சூழ்நிலையில்...
ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?

நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா என்று நீங்கதான் சொல்ல வேண்டும்:

  • நடை: சுருக்கமாக, நவீனமாக, சுய எள்ளலுடன் (உதாரணம்: Nothing New: The Story of Diwali to an ABCD) எழுதினால், இன்னும் சிலரைக் கவரலாம்.
  • உடை: பதிவு என்றாலே நேரடி வர்ணனை, புகைப்படம் (உதாரணம்: thirumylai: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்), விழியம் போன்ற பெர்சனல் டச் வேண்டும்; கொணரலாம்.
  • கோர்ப்பு: ஆபிராம், ஆகார், சாரா(ள்) கதைக்கும் ஆதிசேஷன், அதிதி, அருணனுக்கும் முடிச்சுப் போட்டு, பல் மத ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகலாம்.
  • இணைப்பு: புதியதாக வருபவர்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எது பிடிக்கும் என்பதில் குழப்பம் இருக்கலாம்.
    பல்வேறு பதிவுகளை 'மகளிர் சக்தி' போல் ஒருங்கிணைத்து ஓடை உருவாக்கலாம்.
    பகுதிவாரியாகப் பிரித்து மா சிவகுமார் (annotated archives) போல் தொகுக்கலாம்.
    ஐம்பது வார்த்தைகளில் உபநிஷத்துகள், ஐந்து பதிவுகளில் இந்து மதம் என்று எளிமையான அறிமுகங்களைக் கொடுத்து இணைக்கலாம்.
  • ஊடக விமர்சனம்: அன்றைய 'வணக்கம் தமிழக'த்தின் தென்கச்சியை பிரித்து மேயலாம். சக்தி விகடன் போன்றவற்றில் வரும் நல்ல பதிவுகளுக்கு வெளிச்சம் பாய்ச்சலாம்; தனிப்பதிவில் சேமித்து வைக்கலாம். நாளிதழ்களில் வரும் ஆன்மிக சிந்தனைகளுக்கு விவாத மேடை அமைக்கலாம்.

    தங்களின் பதிவில் இடமளித்தமைக்கு நன்றிகள் பல :)

    அன்புடன்
    பாலாஜி
    பாஸ்டன்


    //நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா//
    ஹிஹி! அடுத்த கட்டமே தான்! அதையும் தாண்டிப் புனிதமானது!
    நன்றி என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன் பாஸ்டன் பாலானந்த சுவாமிகளே! :-)

    என்ன மக்களே!
    மாதவிப் பந்தலுக்குப் பிரதான ஆசாரியரா பாபாவை நியமித்து விடலாமா? கதை சொல்றாரு! குமரகுருபரர் கவுஜ சொல்றாரு! பட்டைய கெளப்புறாருல்ல?
    நகைச்சுவை/சுய எள்ளல் கலந்து தான் ஆன்மிகம் தரணும் என்பது அடியேனின் அசைக்க முடியாத நம்பிக்கை! தீர்த்தம்-னா கொஞ்சம் சுறுசுறுன்னு பச்சைக் கர்ப்பூரம் போட்டாத் தான் தீர்த்தம்! திருநீறின் மகிமையே தனி தான் என்றாலும், அதனுடன் பன்னீரும் ஜவ்வாதும் சேர்க்கும் போது நா மட்டும் மணக்காது, நாமும் மணக்கிறோம்! அது போலத் தான் ஆன்மீகத்துக்கும் நகைச்சுவை!

    ஆன்மீகப் பதிவாளர்களும் பின்னூட்டாளர்களும், பாபாவின் கருத்துக்கள் பற்றி திரண்டு வந்து எது நல்லது, எது அல்லது என்று விவாதிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
    ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டத்துக்கு - தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ஊர் கூடித் தேர் இழுக்க வாருங்கள்!
  • 19 comments:

    1. ///சுட்டி நிபுணர் நம்ம பாஸ்டன் பாலா, ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)////

      ஆட்டோ அணுப்பனுமா?

      ReplyDelete
    2. ரவி,

      மூத்த பதிவர் அல்லது பதிவில் மூத்தவருக்கு மரியாதை செய்துள்ள உங்கள் செயல் பாராட்டத்தக்கது !

      பாபா பிடியுங்கள் வாழ்த்துக்களை !

      ReplyDelete
    3. பா. பாலாவின் பதில்கள் மிக அருமை. மிக நல்ல பதிவு.

      ReplyDelete
    4. நல்ல பதில்கள். பாபான்னா சும்மாவா?

      :)

      ReplyDelete
    5. இதுக்கு இன்னும் ஆன்மீகப் பதிவர்கள் யாரும் வந்து கருத்துரைக்க வில்லையா என்ன?
      ஓ....வாத்தியார் ஐயா முதல் ஆளா வந்திருக்காரு! நான் தான் கவனிக்கத் தவறி விட்டேன்!
      மற்ற நண்பர்களும் வாருங்கள்!

      ReplyDelete
    6. ஓ...மீண்டும் கவனிக்கத் தவறி விட்டேன்!
      கோவி வந்திருக்காரே ஆன்மீகப் பதிவராய்!
      வெட்டி, ஓகை ஐயா வேறு இருக்காங்க!

      கொத்ஸ்! சாரி...உங்களை ஆன்மீகப் பதிவர்-ன்னு என்னால் சொல்ல முடியலை!
      ஏன்னாஆஅ..
      நீங்க அதையும் தாண்டிப் புனிதமானவரு!!!! :-))))))

      ReplyDelete
    7. சுருக்கமான சுவையான பதிலகள்.

      ReplyDelete
    8. //குமரன் (Kumaran) said...
      சுருக்கமான சுவையான பதிலகள்//

      சுருக்கமான சுவையான பின்னூட்டம் :-)

      என்ன குமரன் சுருக்கமான-ன்னு உ.கு எல்லாம் வைக்கறீங்க? :-)
      எங்க பாபா, எவ்ளோ நீளமா, ஆழமாச் சொல்லி இருக்காரு!

      ReplyDelete
    9. சுட்டி மூலம் “ஒட்டக்கூத்தரை” பார்க்கமுடிந்தது,வீட்டுக்கு போய் தான் கேட்கனும்.
      மிக்க நன்றி - பாபா & அவுங்க அம்மாவுக்கும்.

      ReplyDelete
    10. நல்லதொரு நேர் காணல் - வாழ்த்துகள்

      ReplyDelete
    11. பாபா அவர்களை முன்பொருமுறை தில்லி பதிவர் சந்திப்பில் காணவேண்டியது! ஆனால் என்ன காரணமோ முடியவில்லை!

      //ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)//

      இல்லையே என்னோட பதிவுகள் வந்திருக்கே! :-)

      //'தானாய் தெரிந்து கொள்வது'.இது சாத்தியமில்லை. புத்தகம், பட்டறிவு, நண்பனுக்கு தொலைபேசி போட்டு கேட்டறிவது போன்றவை மட்டுமே எனக்கு சாத்தியம். குறுங்கதை மூலம் இதை விளக்கலாம்.//

      உடன்படுகிறேன், ஒரு அர்ஜுனனை உருவாக்குவதில் அக்கரையும், ஊக்கமும், உற்சாகமும் இருவருக்கும் (கற்பவர், குரு)தேவை! அதில் அழுக்காறு வந்தால் அவன் துர்யோதனன் ஆவான் - இது தான் குரு பக்தி பற்றி மஹாபாரதம். சொல்கிறது!

      //நான் பெரும்பாலும் படிப்பதில்லை. அலுவலில் கொடுக்கும் பத்து பக்க ஒலை போல் இருந்தால் ஒவ்வாமை இன்னும் அதிகரிக்கிறது.
      தங்களின் புதிர்களில் 'இந்து சமயத்தில் எனக்கு எல்லாமே தெரியும்' என்னும் அகந்தையைப் போக்கிக் கொள்ள மேலோட்டமாகவாது பார்ப்பதுண்டு.//
      :(. என்ன பாபா சார், மேலோட்டமா பார்துண்டுன்னு சொல்லிட்டு, அடிமனதில் ஆழமான சிந்தனை கொண்ட பத்மநாபர் கதை சொல்றீங்க?

      அதுக்கும் ஏதாவது காரணமிருக்கும்! :)

      //உதாரணம்: thirumylai: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்//
      இந்த சுட்டி மிக அருமை!

      ReplyDelete
    12. கதைசொல்லும் பாணியிலான பதில்கள்.

      //
      கோர்ப்பு: ஆபிராம், ஆகார், சாரா(ள்) கதைக்கும் ஆதிசேஷன், அதிதி, அருணனுக்கும் முடிச்சுப் போட்டு, பல் மத ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகலாம்.
      //

      இது போல படிப்பது It will be interesting.

      நோவா கால பிரளயத்தையும் மனு கால பிரளயத்தையும் ஒப்பிட்டு படித்திருக்கிறேன்.

      கிரேக்க கடவுள்களையும் இந்தியக் கடவுள்களையும் ஒப்பிடலாம்.

      ஒரு சில நம்பிக்கைகள் மதங்களை கடந்து எல்லா இடங்களிலும் இருப்பதையும் விவாதிக்கலாம்.

      ReplyDelete
    13. ////ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)//

      இல்லையே என்னோட பதிவுகள் வந்திருக்கே! :-)//

      யோவ் சிவா...அது snap judge!
      நான் சொல்லுறது நிரந்தரச் சுட்டி - இ தமிழ்- முன் பக்கத்துல!
      நடுவுல இப்படி வந்து காரியத்தைக் கெடுக்கறியேப்பா நண்பா!

      ஆசானே! நீங்க பாஸ்டனுக்கு ஆட்டோ அனுப்புங்க! :-))

      ReplyDelete
    14. இந்த பதிவு ரீடர்ல படிச்சேன். பின்னூட்டங்களும் படிச்சாச்சு... பாபா பற்றி, மூத்த பதிவர், அவர் பின்புலம்னு கொஞ்சம் தான் தெரியும். அவர் தாய் பற்றியும் அறிமுகத்துக்கு நன்றி.

      //பதிவுலகம் தன்னைத் தானே முதிர்ச்சி கொள்ளும் நிலை வரத் துவங்கியுள்ளது (// இரண்டு வருட பதிவுலக அனுபவம் கழிந்தும் இந்த முதிர்ச்சி நிலைக்கு மெள்ள நான் போய்கிட்டுருக்கேன்!

      என்னைப் பொறுத்த வரை, ஆன்மிகப் பதிவும், மொக்கைகளும் இல்லையென்றால், எப்பவோ, நான் வாக் அவுட்டு.. (ஸோ, என்னைத் துரத்தறது கஷ்டம்!) . //ஐம்பது வார்த்தைகளில் உபநிஷத்துகள், ஐந்து பதிவுகளில் இந்து மதம் என்று எளிமையான அறிமுகங்களைக் கொடுத்து இணைக்கலாம்.// இந்த ஐடியா மிகவே பிடித்திருந்தது. ஆன்மிகப் பத்திரிகைகள் கண்ணில்/கைகளில் அகப்பட்டால் ஒழிய தேடிப் போய்ப் படித்ததில்லை. இங்கே படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை:( இந்து மதத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் கட்டாயம் தேவை.

      ReplyDelete
    15. பாபாம்மாவைப் பத்தி இந்தப் பதிவின் மூலம் இப்பத்தாந்தெரியவந்துச்சு.

      அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

      ReplyDelete
    16. Usual BaBa Style / Syndrome.

      Dilutes the point with unwanted comparisons and references. Grrrr...

      Aanmeega stylil sollanumna..

      Ramanand Sagar madiri javvu bathilgal, testing readers patience.

      We need answers like new Ramayan.

      ReplyDelete
    17. //Anonymous said...
      Usual BaBa Style / Syndrome.
      //

      யாருப்பா இது? பாபாவை ராமானந்த் சாகர் ரேஞ்சுக்குப் போட்டு தாக்குறது!
      பாபா-கையைக் கொடுங்க! எங்கேயோ போயிட்டீங்க! :-)

      ReplyDelete

    எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

    ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

    வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
    கே.ஆர்.எஸ்,
    கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
    குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

    உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
    Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

    ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

    Sri Kamalakkanni Amman Temple said...

    ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
    பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
    பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

    இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

    இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

    Back to TOP