Thursday, December 30, 2010

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1

அவள் ஒரு தயிர்க்காரி! பேரு "தும்பையூர் கொண்டி"! கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா! அவள் மோட்சம் போவாளா?



என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)

தும்பையூர்!

எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!
செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு!(Ramana Maharishi College of Engg)

அது என்ன தும்பையூர்?
தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ! தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல?

தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட!
போர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது! திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? :)

அந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள்! சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி!
வாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும்! எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்!

தும்பையூர் கொண்டி! பேரே நல்லா இருக்கு-ல்ல? :)


திருமலை அடிவாரம்! = அடிப்படி!
இன்னிக்கி "அலிபிரி" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்! அங்கே...........குருவுக்கும் சீடனுக்கும் வாக்குவாதம்!

ஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான்? இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே! :)
பாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு!
ஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....

குலம் தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
அருளோடு பெருநிலம் அளிக்கும்..


"சுவாமி, நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க!"

"எதுக்குப்பா நிறுத்தச் சொல்லுற? எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள்! இரு முடிச்சிடறேன்! அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா?"

வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,
நாரணா என்னும் நாமம்!

"ஆகா! சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே! பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா?"

"ஆமாம் ஆமாம்!"

"உண்மை தான் குருவே! அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம்! ஆனால் "அம்மா என்னும் சொல்"?
நம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க! ஏம்மா படுத்தற? என்போம்! அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம்? = "அம்மாடி"! :)

பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்!"
அது போலத் தான் "அவன் என்னும் சொல்"!
அவன் பேரே என்னையும் தாங்கும்! அவன் பேரே என்னையும் தாங்கும்!

"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா! என்னால் உனக்குப் பெருமையா? உன்னால் எனக்குப் பெருமையா? ஆகா!"

"அதை விடுங்கள் குருவே! எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை! ஏதோ "தரும் தரும்"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே! அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனம் தருமா? கல்வி தருமா?? என்ன தரும்?"


"ஓ அதுவா?
* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்!
* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்! "நீங்காத செல்வமும்" தரும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்!"

"அருமை! ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா!"

"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா! நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்!
அதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...
அப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்?
முதலில் சொன்னது அருளில்லாத மோட்சம்! பின்னே சொன்னது அருளோடு மோட்சமா? - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே....."

"உம்ம்ம்ம்............அது வந்து....அது வந்து....."

"சொல்லுங்க சுவாமி! எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது!"

"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...
* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா.....அப்படி இருக்காது சுவாமி! புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க! ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு!
கேவலம், இந்திர லோகத்தையா "நாரணா" என்னும் சொல் கொடுக்கும்? நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு! அப்படி இருக்காது சுவாமி!"

"ஆகா! ஆரம்பித்து விட்டாயா? இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா?"

"மன்னிச்சிக்குங்க சுவாமி! புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை! ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்!"

"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற?"

"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்?
அன்பர் மனசுக்கெல்லாம்.....
சொர்க்க வாசல் என்பதே....
அவன் வீட்டு வாசல் தானே
சுவாமி?"

"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்!
ஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட!
என்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது?"



அடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....

"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல! என் பேரு தும்பையூர் கொண்டி!
தயிர்க் காரி! திண்ணாமலை பக்கம்! இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்!
ஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை! கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க...."

"சரிம்மா! இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற? பார்க்க லட்சணமா வேற இருக்க! இந்தக் காட்டில் தனியா வரலாமா? தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே!"

"அது இல்லீங்க! நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்! இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே! இவரு தான் இராமானுசரா?"

"ஆமாம், அதுக்கென்ன இப்போ? என் பேரு திருமலை நம்பி! அவரோட குரு!"

"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும்? நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க!
நல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ! இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க"

"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார்! தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம்! வெளியில் வாங்கும் வழக்கமில்லை!"

"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு! பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே! நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்!"

"சரி! தினப்படிக்கு மூன்று படி தயிர்! அளந்து விட்டுப் போம்மா! மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ!"

தும்பையூர் கொண்டி (மனசுக்குள்): "உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க! வேறு ஏதோ வாங்கப் போகிறேன்!"

(தொடரும்....)
Read more »

Tuesday, December 28, 2010

இவன், எந்த முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்!

பந்தலில், மார்கழி மாசம் அதுவுமா, ஒரு பதிவு கூடவா இல்லை?-ன்னு என்னிடம் இமெயிலில் குறைபட்டுக் கொண்ட உள்ளங்களுக்காக...இந்தப் பதிவு! :)
மன்னிக்க வேண்டுகிறேன், தனித்தனியா பதில் அனுப்பாமைக்கு! முடிஞ்சா, ஒரேயொரு புதிரா புனிதமா மட்டும் அப்பாலிக்கா போடுறேன்! :)

சென்ற ஆண்டு...இதே நாள் - Dec 28 - மோட்ச ஏகாதசி!
யாரோ ஒரு முகம் தெரியாத குருவாயூர் யானையின் கதை!
.....நினைவுகளில் இப்போ இருக்கேன்!
So, just for a post, here we go,...Can you tell which ooru murugan boy is this?

இவன், எந்த ஊரு முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்! - குடை கவிக்க வரும்....இவன் தலையில் சடை, ஜடை, கொண்டை....தோள் மாலை....வேல்...இவன்? இவன்? இவன்?




(one day later....)

என்ன கண்டுபுடிச்சிட்டீங்களா?
இதோ...இந்தத் திருவரங்க "முருகன்"! :) கையில் வேல் வச்சிக்கிட்டு, ஆனா நாமம் போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க! :))

மேற்கண்ட படங்கள், கோயில் என்று சிறப்பித்துப் பேசப்படும் திருவரங்கம், அங்கே இந்த ஆண்டு (2010) தமிழ் விழாவில் (இராப் பத்தில்) எடுத்தது! - படங்களுக்கு நன்றி: திருக்கோவிலூர் ஜீயர்!

பெரும்பாலும் வடமொழி உற்சவங்களுக்கிடையே,
இந்தத் தமிழ்ப் பெரும் விழாவை,
ஆயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே
துவக்கி வைத்து, பெருமை பெற்ற "முருகன்" இவன்!


நீலன் என்பது இயற்பெயர்!
பரகாலன் என்பது பட்டப் பெயர்!

1. ஆலிநாடன்
2. அருள்மாரி
3. அரட்டமுக்கி
4. அடையார் சீயம்
5. கொங்குமலர் குழலியர் வேள்
6. மங்கை வேந்தன்
7. பரகாலன்
8. கலியன்

என்பதோடு...
9. திருமங்கை ஆழ்வார் என்று சொன்னால் அனைவரும் அறிவார்கள்! :)



கள்ளர் குல முனையரையர் - பிறப்பால் சைவர் - குமுதவல்லியின் காதலுக்காகப் பெருமாளைப் பிடித்துக் கொண்டார்! :)
ஆனால்....அதற்கு அப்புறம்....பெருமாளோ இவரைப் பிடித்துக் கொண்டார்! :)

இவரால் அவரை விடவே முடியவில்லையாம்!
குமுதவல்லியைக் கூட மறக்கத் துணிவு வந்ததாம்! ஆனால் அவரை மறக்க முடியவே இல்லையாம்! :)


இவர் எப்படி "முருகன்" ஆவான்(ர்)? = கையில் வேல் இருப்பதாலா? :)

கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24

முருகன்=அழகன்!
இவர் வடிவழகு, தமிழழகு அப்படி! அதனால் இவரை "முருகு+அன்" என்று சொல்வது பாதகமில்லை!
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை, "பெருமாளே=பெரும்+ஆளே" என்று வரிக்கு வரி அருணகிரி பாடவில்லையா?
அதே போல் தான் இதுவும்! திருமங்கை அழகோனே-முருகோனே! :)

* இவரே கருவறைக்குள் தமிழை முதன்முதலில் புகுத்தினார்!
* இவரே தமிழுக்கென்று தனிப்பெரும் விழாவை, தலைநகராம் அரங்க நகரில் எடுப்பித்தார்!
* இவரே தமிழ் வேதமான மாறன் மொழியை, (திருவாய்மொழியை), அரங்கன் முன்னிலையிலே, ஓதுவார்கள் ஒதுங்கி இருந்து ஓதாமல், ஓதுவார்கள்-அர்ச்சகர்கள் உட்பட, அத்தனை பேரையும் ஓதச் செய்தார்!

தமிழுக்கு வாழ்வு என்னும் போது, அங்கே தமிழ்க் கடவுளாம், என் முருகனின் வாசனை வீசாதா என்ன?

* திருமங்கையின் பிறந்த நாள் = முருகன் உகந்த, கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம்!
* திருமங்கையின் கையில் = வேல்!
* காவடிச் சிந்தின் மெட்டை, வழிநடைச் சிந்தாக...முதன் முதலில் இலக்கியத்தில் பாடிச் சேர்த்தார்!
- இப்படி "தெரிந்தோ/தெரியாமலோ" திருமங்கை வரலாற்றில் முருக வாசம் வீசுகிறது!


முருகன் என்றால் அழகு! இந்த மங்கை மன்னனின் முருகை - வடிவழகு என்றே இசைக் கவிதையாக எழுதியுள்ளார் மணவாள மாமுனிகள்!

அணைத்த "வேலும்", தொழுத கையும்,
அழுந்திய திரு நாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
குளிர்ந்த முகமும், பரந்த விழியும்.
...
என்றெல்லாம் போகும்! பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்! அதன் கடைசிப் பத்தியை மட்டும் இப்போது பாருங்கள்!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கும் திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாள் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!

இதுவோ திருவரசு? இதுவோ திருமணங் கொல்லை?
இதுவோ எழிலாலி என்னும் ஊர்? - இதுவோ தான்
வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த இடம்!!!

எப்படி, எப்படி? = எட்டெழுத்தைப் "பறித்தாராம்"!
"வேலை"க் காட்டிப் பெருமாளையே பயங் கொள்ளச் செய்து,
எட்டெழுத்தைப் பறித்து,
அதை நமக்கெல்லாம் கொடுத்த திருமங்கை அழகே "முருகு"!


சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்?

அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்! பார்ப்போமா?
ஆனால் இது ஒரு "போலிக்" கதை! சுவைக்கு மட்டும் வாசியுங்கள்! :)

திருஞான சம்பந்தர் = தந்தையைக் காணோமே என்ற மலைப்பால் முலைப்பால் உண்ட தமிழ்ப்பால்!

இவரை முருகனின் அம்சமாகவே/அடையாளமாகவே சைவ சித்தாந்தத்தில் சொல்வது வழக்கம்! அருணகிரியும் அப்படியே பாடியுள்ளார்! முன்பெல்லாம், சம்பந்தர் கையிலும் ஒரு வேல் இருக்கும்!

இவரின் சொந்த ஊர் சீர்காழி! பக்கத்து ஊரோ, திருமங்கை மன்னனின் ஊரான திருவாலி! இருவருமே தலம் தலமாகச் சென்று பாடிய அடியார்கள்!

ஒரு முறை, திருமங்கை மன்னன், சீர்காழித் தலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வர (காழிச் சீராம விண்ணகரம்), கூடவே அவர் குழாமும் வந்தது! விருதுகளைக் கூவிக் கொண்டே வந்தது! அழகன் திருமங்கை, அவன் ஆடல் மா என்னும் குதிரை மேல் வரும் அழகை எண்ணிப் பாருங்கள்!

வீதியில், சம்பந்தப் பிள்ளையின் மடத்தைத் தாண்டிச் சென்றாக வேண்டும்!
என்ன இருந்தாலும் சொந்த ஊர் அல்லவா! தலைவர் அடக்கமாக இருந்தாலும், தலை இருக்க வால்கள் ஆடுமே! சம்பந்தர் மடத்தில் உள்ளவர்கள், சம்பந்தர் வீதியில் மட்டும் கோஷம் போடாமல் மவுனமாகப் போகச் சொன்னார்களாம்!

நம்ம திருமங்கை தான் எதிலுமே பொசுக் பொசுக்-கென்று செயல்படுபவர் ஆயிற்றே! இதென்ன நாட்டாமைத்தனம்-ன்னு நினைச்சாரோ என்னவோ, அவரிடமே கேட்டு விடுவோம் என்று, விறுவிறு-சுறுசுறு...சைவ மடத்துக்குள் வைணவர் நுழைந்தே விட்டார்! :)

உள்ளே சென்றால்...பச்சிளம் பாலகன்! அன்னையின் முலைப்பால் உண்டவன், அவனை மலைப்பால் பார்த்த இந்தக் கள்ளர் குலத் தலைவன்...என்ன இருந்தாலும், கற்றாறைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

இருவரும் அன்புடன் முகமன் கூறிக் கொள்ள...நம் திருமங்கை, "உம்ம ஆட்களின் அதிகாரம் பார்த்தீரா" என்று கேட்க...
ஆளுடைய பிள்ளையான சம்பந்தப் பிரான் குறும்பாக, "எம் ஆட்களுக்கு உம்மை நிரூபித்துத் தான் காட்டுங்களேன் பார்ப்போம்" என்று சொன்னாராம்!

இரு பெரும் தமிழ் மலைகள்!
சம்பந்தர் முதலில் பாட...

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா!

படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடி
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே!

ஆலிநாடரான திருமங்கை மன்னா, எம் பெண்ணை மயக்கிக் கொண்டு போய் விட்டீரே, நியாயமா? என்று ஒரு தாய் பாவனையில் சம்பந்தர் கேட்க....
திருமங்கை, தம்மையே தலைவியாகப் பாவித்து, அதே சூட்டில் மறுமொழி உரைக்கிறார், ஞானக் குழந்தைக்கு! :)

வருக்கை நறுங்கனி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகில் ஓடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்

அருட்குலவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே!

நீர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்தது போல், நான் இவளுக்கு உயிர் கொடுத்தால் மட்டும் ஏலாதா என்ன? என்று எதிர்க்கவிதை, எசப்பாட்டு :)
இப்படி வீசியவுடன் சிரித்தே விட்டார் சம்பந்தர்! தம்மையே மடக்கிய மங்கை மன்னனுக்கு, நாலுகவிப் பெருமான் என்று பட்டம் சூட்டி, அதுகாறும் தான் வைத்திருந்த வேலை, கொடுத்துவிட்டதாகக் கதை சொல்கிறார்கள்!


கதை நல்லாத் தான் இருக்கு.....ஆனாலும், கே.ஆர்.எஸ் இதுகெல்லாம் மயங்கீற மாட்டான்! :)
அது வைணவமே ஆனாலும் சரி! பெருமாளே ஆனாலும் சரி, வாய்மையே வெல்லும்! :)

என்னைப் பொருத்தவரை, இதை ஏன் "கட்டுக்கதை", உண்மைக் கதை அல்ல என்று சொல்கிறேன் என்றால்...

1. வரலாற்றின் படி, சம்பந்தர் காலத்தால் முந்தியவர்! மகேந்திர வர்ம - நரசிம்ம வர்ம பல்லவன் காலம் என்றும் சொல்வார்கள்! 640-656 CE!
திருமங்கையோ, நந்தி வர்ம பல்லவன் காலம்! 730-800 CE! குறைந்தது நூறு ஆண்டாச்சும் பின்னால் வந்தவர்! அப்படி இருக்க, இருவரும் எப்படிச் சந்தித்து இருக்க முடியும்? :)

2. திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தைச் சொல்லும் வைணவ நூல்கள்/குரு பரம்பரை கூட, இந்த நிகழ்ச்சியைச் சொல்லவில்லை!

3. ஐயோ! அப்போ இந்த ரெண்டு பாட்டு? எசப்பாட்டு மாதிரி கொடுத்தியே-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! அந்தப் பாட்டெல்லாம் யாரோ பின்னாளில் எழுதியது போலத் தான் இருக்கு! சந்த அமைப்பிலோ/நடையிலோ, ஆழ்வாரைப் போலவும் இல்லை! சம்பந்தரைப் போலவும் இல்லை!
மிகவும் முக்கியம்: அந்தப் பாடல்கள் தேவாரத்திலும் இல்லை! திவ்ய பிரபந்தம் என்னும் அருளிச் செயலிலும் இல்லை!

இப்படி, வைணவ நூல்களே குறிப்பிடாத ஒரு நிகழ்ச்சியை, யாரோ கதை கட்டி விட,
அதையே அங்கொன்றும் இங்கொன்றுமாக, "பகூத் அறிவுள்ள" சிலர் எழுதி வைக்க,
தரவே தராமல்.....பத்து முறை சொன்னதையே சொன்னால், வெறுமனே கும்மி அடித்தால், பொய்யும் "மெய் போல்" ஆகும் அல்லவா நம்ம பதிவுலகில்?

அப்படித் தானே "தொல்காப்பியத் திருமால் தமிழ்க் கடவுள் இல்லை! முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்" என்று கும்மியடித்து கும்மியடித்து, நம்ப வைக்கப்பட்ட கூட்டம்? :)

* ஏபி நாகராஜன் சினிமாவில், "தமிழ்க் கடவுள்" என்று பத்து முறை வசனம் வருவது தான் தரவு,
* எங்கோ சிவன் கோயில் யானைக்கு ஓம் போட்டு பார்த்து இருக்கேன் என்ற சிங்கைத் தரவு! :))
அது போலத் தான் இதுவும்! திருஞான சம்பந்தர் - திருமங்கை சந்தித்தார்கள்! திருமங்கை வாதில் வென்று, வேலைப் பெற்றார் என்பதெல்லாம்!

அது வைணவமே ஆனாலும்.......தவறான தகவல் என்று ஓப்பனாகச் சொல்லும் அறத் துணிவு, எனக்கு உண்டு! :)
எப்பொருள், "எத்தன்மைத்" தாயினும் - அப்பொருள்
"மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

இதுக்கு, நான் ரெண்டு பக்கமும் வாங்கிக் கட்டிக் கொள்வேன்-ன்னு நல்லாவே தெரியும்! :) சைவத்திலும் பிடிக்காமல் போகலாம்! வைணவத்திலும் பிடிக்காமல் போகலாம்! :) இருப்பினும்......
சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே பார்த்தால், தமிழ் தழைக்கும்!



எல்லாஞ் சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்? அதைச் சொல்லவே இல்லீயே?

பண்டைத் தமிழ் மறவன் - கள்ளர் குலத் தலைவனான நீலன், திருமங்கை ஆனான்! இவன் பெருநில மன்னன் அல்ல! மிகவும் குறு நில மன்னன்! இவனுக்கு யானை கூடக் கிடையாது! வெறும் குதிரை மட்டுமே! அது போல் தான் வேலும்!

பெரிய வாள் என்பதை விட, கத்தி தான் இருக்கும்! கேடயம் இருக்கும்! வேல் இருக்கும்! அப்படித் தான் வைணவ ஆலயங்களிலும் சிலையாக வடித்துள்ளார்கள்! தொலைவில் இருந்து எறிய வல்ல வேல்! நேருக்கு நேர் வாள் வீசிச் சண்டை போடும் பெருநில மன்னன் அல்ல! கள்ளர் குலத் தலைவன்! ராபின்ஹூட்! :)

இவன் கையில் வேலும், கத்தியும், கேடயமும் தானே!
அப்படித் தான் "வேல்" தாங்கிற்றே அன்றி..........
சம்பந்தரை வென்று வாங்கிய வேலாக இருக்கச் சாத்தியமே இல்லை!

* முருகப் பெருமானின் திருக்கை ஆயுதம் "வேல்" என்பதாலும்,
* இவர் தோன்றிய கார்த்திகை நட்சத்திரத்தாலும்,
* ஆழ்வார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு கருதியும், - தமிழ்க் கடவுளான முருகனோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்! அவ்வளவே!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச் செவியும் - தாளின் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!


ஆழ்வார்கள் ஈரத் தமிழ் வாழ...ஆலயக் கருவறைக்குள்ளும் தமிழ் வாழவென்றெ வாழ்ந்த............திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

அந்தத் தமிழுக்குக் குறிஞ்சித் தலைவனாய் நிற்கும்.............என் காதல் முருகப் பெருமான் இணையடிகளே சரணம்!!

Read more »

Thursday, October 21, 2010

புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!

மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?

நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?


* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?

* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே! கவியரசர் தாகூரே விரும்பி மொழி பெயர்த்த கவிதைக்குச் சொந்தக்காரர் யார்?

* இன்று பலரும் போற்றுகிறார்கள்! ஆனால் அன்று இவரைத் தூக்கில் போடாமல் ஊரை விட்டு மட்டும் துரத்தினார்கள், காசி நகரத்துக் குருமார்கள் - இவர் யார்?

* இவர் சொன்னது...முதலில் எட்டிக்காயாகக் கசந்தது பல பேருக்கும்! பல ஆன்மீக குழாம்களிலிருந்து ஒதுக்கப்பட்டார்!
உண்மையை எதிர்கொள்ளும் துணிவு மனிதர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லவா? உண்மை நெல்லிக்காய் போலவோ?
முதலில் ஒரு சுவை, உள் இறங்கும் போது தண்ணீரோடு இன்னொரு சுவை! அதான் உண்மையை உள்ளங்கை "நெல்லிக்கனி" என்கிறார்களோ?

* மனைவி-குழந்தைகளுடன் வாழ்ந்த தத்துவத் "துறவி"! எதைத் துறக்க வேண்டுமோ, அதை மட்டுமே துறந்தவர் - இவர் யார்?

என்னது, திடீர்-ன்னு யார் யார்-ன்னு இத்தனை "யார்" போடுகிறேன்-ன்னு பார்க்கறீங்களா? ஆத்ம விசாரணையில் "யார்" என்ற கேள்வி மிகவும் முக்கியம்-ன்னு சொல்வாங்களே!
ஏன் திடீர்-ன்னு, "யார்?" என்பதற்கு இவ்ளோ பில்ட்-அப் போடுறேன்-ன்னு பார்க்கறீங்களா?
எல்லாம் ஒரு நூறாவது பதிவு காணும் ஐந்தாண்டுப் பதிவுக்குத் தான்! :)


இவர் பதிவுகள், இவர் எடுத்துக் கொண்ட பொருள் போலவே எளிமையானவை!
* இவர் பதிவுகள், இறைவனைப் பேசுபவை அல்ல!
* இவர் பதிவுகள், அடியார்களைப் பேசுபவை! - அதனாலேயே என்னை மிகவும் கவர்ந்தவை!
* அவர்களின் பிரச்சனை, எதிர்கொள்ளல், ஆன்மீக வழித்தடங்கள், அதற்கான உபகரணங்கள் பற்றிப் பேசுபவை!

நம் வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளை ஒட்டிப் பதிவுகளைப் பின்னுவதில் இவர் வல்லவர்!
வீட்டு மோட்டார் ரிப்பேர், எந்த ரேட்டிங் ஒயரை எதற்குப் பயன்படுத்தினால் ஓவர் லோடு ஆகாது! சைக்கிளைத் துரத்தும் நாய், துரத்த முடியாமல் களைத்துப் போனாலும், அடுத்த சைக்கிளையும் அதே போல் துரத்தும் நாய்ப் புத்தி, நம் புத்தி...

என்று பாலு மகேந்திரா சினிமா பார்ப்பது போல் இவர் ஆன்மீகப் பதிவுகளைப் படிக்கலாம்! :)
நீங்களே வாசித்துப் பாருங்கள்!
குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது. விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது.

கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.
அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது.

இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி.
ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது!


இந்நேரம் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்கும்! = கபீரன்பன்!



ஆன்மீகப் பதிவுலகில் ஒரு துருவ நட்சத்திரம் கபீர் வலைப்பூ! எளிய நடையில், எளிய கதைகள், எளிய கவிதை என்று எதிலுமே எளிமை!
சடங்கு சார்ந்த ஆன்மிகம் பேசுவதில்லை! மனம் சார்ந்த ஆன்மீகம் பேசுபவர்!

இந்திக் கவிதை என்ற மொழி அசூயையோ,
தத்துவக் குப்பை என்ற கருத்து அசூயையோ...
என்று பிரிவினையை ஒட்டிப் பதிவுகள் வளர்க்காது,
மன-ஒற்றுமையை ஒட்டி வளர்ப்பவர்!

ஏன்னா அவர் பேசு பொருளே அப்படி! = கபீர்!

கபீர் என்பவர்...
* கவிஞரா? ஆன்மீகவாதியா?
* தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
* இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
* சாஸ்திர விற்பன்னரா?
* சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர்.....மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல!
அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!
Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!
முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் விரும்பும் வலைப்பூவில்!
இதோ! இங்கே சென்று விளையாடுங்கள், கபீரன்பன் வலைப்பூவுக்கு!
பரிசும் கொடுக்கறாரு! லம்ப்பா வாங்கிக்கோங்க! :))
Read more »

Wednesday, October 06, 2010

திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்?

திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)

ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!
வள்ளுவம் பெருஞ்சொத்து!
அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)


திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))
திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)

அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!
* திருவள்ளுவர் சமணர்!
* இல்லவே இல்லை அவர் சைவ சித்தாந்தியே!,
* அவர் பெளத்தராய்க் கூட இருக்கலாம்!
* அவர் வைணவக் கருத்துகளை ஆங்காங்கே உதிர்க்கிறார்!
வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!

அவ்வளவு ஏன்... வள்ளுவருக்கு விபூதிப் பட்டை போட்டு, வள்ளுவ தேவ நாயனார் என்றெல்லாம் கூடச் சொல்பவர்கள் உண்டு!
இன்றும் விபூதி போட்ட வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலே, சிலையாக நடு ரோட்டில் காட்சி அளிக்கிறார்! :)

மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு வடக்கே, வள்ளுவர் கோயில் வேற ஒன்னு இருக்கு! கோயிலின் மூலவர் ஏகாம்பரேஸ்வரர்! :)
யாரு கட்டினாங்களோ? கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தான் இருக்கும்! வள்ளுவரின் அம்மா-அப்பா = ஆதி பகவன்??? அவங்களுக்கும் கோயிலில் சிலை உண்டு! :)

"ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதை வைத்துக் கொண்டு, அவர் தாய் தந்தையர் பேரு = ஆதி பகவன்-ன்னு சொன்னா எப்படி? :)
தன்னுடைய அம்மா-அப்பா தான், உலகம் முழுமைக்கும் முதல், முதற்றே உலகு-ன்னு சொல்லக் கூடியவரா என்ன வள்ளுவப் பெருந்தகை? :)

அடக் கடவுளே! இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லியா? சிறந்த ஒன்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள வேணும்-ன்னா, அதுக்காக இப்படியெல்லாமா செய்வது? ஒரு நல்ல தலைவரின் கொள்கைகளை ஒன்னுமில்லாப் போகச் செய்யணும்-ன்னா, அவருக்குச் சிலை வைச்சி, அபிஷேகம் பண்ணாப் போதும் போல இருக்கே? :)

இப்படித் தான், சிறந்த சங்கத் தமிழ்க் கவிஞர்களான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் - பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி....
அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் "நாயனார் இரட்டை மணிமாலை"-யை, பன்னிரு திருமுறைகளில் வேறு வைக்கப்பட்டு விட்டது!

நல்ல வேளை, வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், "திருவடிகள்" பற்றி நிறைய பேசுவதால், அவருக்கு "நாமம்" போடாமல் இருந்தார்களே! அது வரைக்கும் ரொம்ப சந்தோசம்! :)

இப்படி, தனிப்பட்ட ஒருவரை/ஒன்றை, இத்தனை பேர் "உரிமை" கொண்டாடுவது வேறு எந்த தமிழ் நூலுக்காவது உள்ளதா?
இப்படித் தமிழர் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அற்புத சக்தி = வள்ளுவம்!



வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவது ஒரு வழியில் மகிழ்ச்சியே என்றாலும்...
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவோர் கட்டாயம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்!

* வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* நக்கீரர் செய்ய வந்தது = சமய நூல்!

* நக்கீரர் - கடைச் சங்க காலம் - அவர் செய்தது திருமுருகாற்றுப்படை என்னும் சமய நூல்! அதை அவரே வெளிப்படையாகச் சொல்கிறார்!
* வள்ளுவர் - நக்கீரருக்கும் பின்னால் - சங்கம் மருவிய காலம் - வள்ளுவர் ஒரு சமயநூலைச் செய்ய வந்திருந்தால், அந்தச் சமயக் கோட்பாடு, அதன் கதைகள் என்றெல்லாம் நக்கீரர் போலவே அவரும் விளக்கி இருப்பாரே! ஆனால் வள்ளுவத்தில் அப்படி ஒன்னும் இல்லையே!

நினைவில் வையுங்கள்: வள்ளுவரின் நோக்கம்: ஒரு சமய நூலைச் செய்வது அல்ல!

அவரே அப்படிச் செய்யாத போது...
அவர் பயன்படுத்திய சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு...
வள்ளுவர்=சமணம்,சைவம்,பெளத்தம் என்று மல்லுக்கு நிற்பது ஏனோ? :(


ஒரு படைப்பாளியின் மேல், அவரவர் தனிப்பட்ட முத்திரைகளைக் குத்தல் என்பது சான்றாண்மை ஆகாது!

அப்படிப் பார்த்தால் என் பதிவுகளில், அன்னை மரியாள் பற்றிச் சிலாகித்துப் பலமுறை எழுதி உள்ளேன் - நான் கிறித்தவனா?
கூகுளில் "பக்ரீத் - சரணாகதிப் பார்வை"-ன்னு தேடுங்கள்! என் பதிவு தான் வந்து நிற்கும்! "பக்ரீத்/ஈமான்" என்ற "சொல்லை"ப் பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக, நான் முஸ்லீம் என்று முடிவு கட்டி விடுவீர்களா? :)

* வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது = எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
* வள்ளுவத்தில், "எண்குணத்தான்" என்ற சொல் வருகிறது = எனவே அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது = எனவே அது இந்து மதம்! => இப்படியெல்லாம் கிளம்புவது நமக்கே லூசுத்தனமா இல்லை?:)
ஆறு குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாகத் தான் முடியும்!

வள்ளுவரின் கால கட்டத்தில், அவர் கண்ட சமூகத் தாக்கங்களை, தன் நூலில் பதிந்து வைத்திருப்பார் - ஒரு சமூகக் கண்ணாடி போல!

இந்திரன் ஒழுக்கம் தவறி, சாபம் பெற்ற கதை, மக்களிடையே அன்று பேசப்படுமானால்...
அதைத் தன் கவிதையில் குறித்துக் காட்டி...தான் சொல்ல வந்த நெறியை விளக்குவது...
- இது எந்தவொரு கவிஞரும் செய்யக் கூடியது தான்! அதற்காக "இந்திரன் கதையை" சொன்னதால் அவர் "தமிழ்-ஹிந்து" என்று கிளம்புதல் தகுமா?

* இந்திரன் கதை வள்ளுவருக்குத் தெரியும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* பொறி வாயில் ஐந்து அவித்தல் - ஆசை அறுத்தல் என்னும் சமணக் கோட்பாடு வள்ளுவருக்குத் தெரிந்திருக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* திருவடிகளே தஞ்சம் என்று வள்ளுவம் பேசுவதும், வைணவத் தத்துவமும் ஒத்துப் போகின்றது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!

ஆனால் அதற்காக வள்ளுவருக்கு, சைவர்/சமணர்/வைணவர்/நாத்திகர் என்றெல்லாம் முத்திரை குத்துவது என்பது கூடவே கூடாது!
அவர்
செய்ய வந்தது சமய நூல் அல்ல! அவர் செய்ய வந்தது அறம்-பொருள்-இன்பம்!

* வள்ளுவத்தின் கருத்துக்கள் போல எங்கள் சமயத்திலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்!
* ஆனால் வள்ளுவம் = சைவமே, சமணமே, வைணவமே என்பதெல்லாம் சான்றாண்மையே இல்லாத ஒன்று!



ஆத்திக -நாத்திக ஒற்றுமை:

சரி ஆத்திகர்கள் தான் இப்படி-ன்னா, இதே தவறைத் தான் நாத்திகர்களும் செய்கிறார்கள்! அடக் கொடுமையே! என்னமா ஆத்திக-நாத்திக ஒற்றுமை! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


இந்தக் குறளில், "இறைவன்" என்பதை அழுத்தமாகவே குறிக்கிறார் வள்ளுவர்! "பிறவிக் கடல்" என்று வேறு சொல்கிறார்!
ஆனால் இதற்கு உரை எழுதும் தமிழ்ப் பற்றுள்ள நாத்திகர்கள் (அ) அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள், இறைவன் = தலைவன் என்று எழுதுகின்றனர்! :)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில்...நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

ஓபாமா கட்சிக் காரவுக, ஓபாமா அடி சேரலீன்னா, அட்லாண்டிக் கடல் நீந்த முடியாது-ன்னு வேணும்-ன்னா சொல்லலாம்! ஆனா, பிறவிக் கடல் நீந்த முடியாது-ன்னு சொன்னா எப்படிப்பா? :)

தங்கள் நாத்திகக் கருத்தை, வள்ளுவத்தில் வலியத் திணிப்பது என்பதும் கூடாது!
வள்ளுவத்தில் நாத்திகம் பேசப்பட்டு இருக்கு! அறம் பேசப்பட்டு இருக்கு! மறம் பேசப்பட்டு இருக்கு! = எல்லாப் பொருளும் இதன் பால் உள!

"இறைவன் அடி" என்று வள்ளுவர் சொன்னால்.... அதை ஏதோ "தலைவன் அடி" என்று வலிந்து மாற்றிப் பொருள் கொள்வது...போலியான விளக்கம் என்று தானே பல் இளித்து விடும்! :) ஓபாமா வழியில் போவாதவங்க எல்லாம் பிறவிக் கடலில் மாட்டிப்பாங்க-ன்னு படிங்க! ஒங்களுக்கே சிரிப்பு வருது-ல்ல? :)))



இன்னொரு சான்றையும் எடுத்துக் கொள்வோம்!

திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்!
எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படிப் பழக்கத்திலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை!

ஆனால்...அதற்காக...வள்ளுவர் முதல் பத்து குறட்பாக்களிலும், திருவடிகளைப் போற்றுகிறார்! எனவே வள்ளுவம் = வைணவ நூல்! வள்ளுவர் = வைணவர் என்று சொன்னால், அதை விட முட்டாள்தனம் வேறில்லை! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை-ன்னே நினைக்கிறேன்!

வேண்டுமானால், குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளை, வைணவத் தத்துவங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்!
அவ்வளவு தான்! அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

வள்ளுவர் காலத்துக்கு முன்னமேயே, தொல்காப்பியர் காலம் தொட்டே, மாயோன் வழிபாடு இருந்திருக்கு! = மாயோன் மேய காடுறை உலகமும்! மாயோன் அன்ன மன் பெரும் சிறப்பின்....தாவா விழுப் புகழ்!
அப்படி, சமூக வாழ்வியலில் காணலாகும் திருவடி வணக்கம் வள்ளுவர் கருத்தையும் கவர்ந்திருக்கு! என்று வேண்டுமானால் "ஊகிக்கலாமே" தவிர...
"திருவடி" என்ற சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு, வள்ளுவர் = வைணவர் என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனம்!

இன்னொரு முறையும் சொல்கிறேன், வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* அவர் திருமுருகாற்றுப்படை போல் ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு!
* ஆனால், நோக்கமே = அறம், பொருள், இன்பம் என்னும் போது...
* அந்த நூலில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் சொற்களை வைத்து...
* வள்ளுவர் இந்த சமயம் தான், அந்த சமயம் தான் என்ற விவாதம் - யானையை அளந்த ஆறு குருடர்கள் கதையாகத் தான் முடியும்!

சமயம் வளர்க்க எத்தனையோ நல்ல சமய-நூல்கள் உள்ளன!
அதை விடுத்து,
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
இப்படி ஒரு பிக்கல்-பிடுங்கல் மெய்யாலுமே தேவையில்லை!


திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!
அது மொத்த உலகுக்கும் தமிழ் மொழி வழங்கிய தமிழ்க் கொடையாகவே இருக்கட்டும்!
திருக்குறள் = உலகப் பொது மறை!
அது உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!


சரி, தமிழ்க் கடவுள் என்னும் இந்தத் தொடர் பதிவுகளில், நாம் எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்கு வருவோம்! = தமிழ்க் கடவுள் திருமாலும், முருகனும்!

"திருமால் பண்டைத் தமிழ்க் கடவுள் அல்ல! முருகன் மட்டுமே பண்டைத் தமிழ்க் கடவுள்" என்ற ஒரு சிலரின் வாதத்தால், இந்த முயற்சியை முன்னெடுத்தேன்!
சங்க இலக்கியங்களில், தமிழ்க் கடவுளான திருமால் எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறான் என்று தக்க தரவுகளோடு சொல்லப் போந்தேன்! இதோ! http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

தொல்காப்பியத்தில், நற்றிணையில், அகநானூற்றில், கலித்தொகையில்...என்று பல சான்றுகளைப் பார்த்தோம் அல்லவா?
ஆனால்.....அதற்காக பரிபாடல் என்பது வைணவ நூல்! அதில் எழுதிய நல்லந்துவனார் ஒரு வைணவர் என்று சொல்வேனா என்றால்?
..............மாட்டேன்! அது தவறான போக்கு! உடன்பட மாட்டேன்!

சங்க நூல்கள், சங்க காலத்தைக் காட்டும் கண்ணாடி!
அதில் பண்டைத் தமிழர், திருமாலை, தங்கள் வாழ்வியலில் எப்படி வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதோடு மட்டும் சரி!
ஒரு தலைவன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சத்தியம் செய்கிறான்! இப்படி ஒரு நிகழ்வைக் காட்டுவது கலித்தொகை!

ஆனால் அதற்காக கலித்தொகை வைணவ நூலாகி விடாது!
அது சங்க இலக்கியமே!
பண்டைத் தமிழ் வாழ்வியலின் அகச் சான்று மட்டுமே!

இந்தத் தெளிவோடு, நாம் திருக்குறளை அணுகுவோம்!
திருமால் பற்றி வள்ளுவர் ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா? பார்ப்போமா?



பலரும் உடனே எடுத்துக் காட்டும் குறள்...

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?

குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

இவள் தோளில் தூங்கும் சுகம், அந்தத் தாமரைக் கண்ணான் உலகிலும் இருக்குமோ? இச்-சுவையை விட அச்-சுவை பெரிதோ??

தாமரைக் கண்ணான் = திருமால் என்றே பலரும் நினைத்து விடுகிறார்கள்! இதற்கு உரையாசிரியர்கள் என்ன சொல்லுறாங்க-ன்னு பார்ப்போமா?

மு. வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

கலைஞர் கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
தாமரைக் கண்ணான் உலகு = நீ மிகச் சிறந்ததாக உயர்த்திக் கூறும் செங்கண் மாலின் வீட்டுலகம்;
தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல் = ஐம்புல இன்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில் போல இன்பஞ் சிறந்ததோ?

தாமரைக்கண்ணான் உலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது" என்றும் காளிங்கர் கூறியதும் பெருந்தவறாம்.

இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கர் அடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல்.
திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர்:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர்:
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ;
தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

என்ன மக்களே, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

தாமரைக் கண்ணான் = திருமால் என்று தேவநேயப் பாவாணரே சொல்லியது தான் எனக்கு வியப்பிலும் வியப்பு! அவர் தனித் தமிழ் இயக்கத் தந்தை!

டாக்டர் மு.வ, சாலமன் பாப்பையா, இவர்களும் தாமரைக் கண்ணான் = திருமால் என்கின்றனர்!
கலைஞர், தாமரைக் கண்ணானுக்கு ஒன்னுமே சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்! இவர்கள் அனைவரும் இக்கால அறிஞர்கள்!

முற்கால அறிஞர்களில் மணக்குடவர் மட்டும் தான் தாமரைக் கண்ணான் = இந்திரன் என்கிறார்! ஆனால் இது சுத்தமாகப் பொருந்தவில்லை! யாரும் இப்படி இந்திரனை முன்பும் சொன்னதில்லை! பின்பும் சொன்னதில்லை!

பரிமேலழகர் உரையோ நம்பத் தகுந்தது அல்ல என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்தறிவுவாதிகள் உருவாக்கி விட்டமையால், நானும் அவர்களையே ஃபாலோ பண்ணிக்கறேன்! பரிமேலழகரைப் படிப்போம்! ஆனால் அவர் பரி மேல் ஏற வேணாம்! :)

பெரும்பான்மையாக....
தாமரைக் கண்ணான் = திருமால் என்று தான் காட்டுகிறார்கள்!


ஆனால், என் மனம் இன்னமும் அலை பாய்கிறது! ஒரு வேளை, தாமரைக்கு + அண்ணான் என்றும் பொருள் கொள்ளலாமோ? (அண்ணான் என்றால் அண்ணன்/தமையன், அண்ணாதவர்/பகைவர் என்றும் பொருள் உண்டு - அண்ணார் புரம் அவிய நின்று நகை செய்த...என்னும் பாட்டும் இருக்கு! ஆனால் அண்ணார் என்னும் சொல்லின் பயன்பாடு மிகவும் குறைவு)

அண்ணான் = பகைவன்/பொருந்தாதவன்!
தாமரைக்குப் பொருந்துவது = கதிர்! பொருந்தாது = நிலவு!
எனவே தாமரைக்கு, அண்ணான் உலகு = நிலாவுலகு!

பெண்ணே, உன் தோளில் சாய்ந்து கொள்ளும் இன்பத்தை விட, அந்த நிலா உலகமா எனக்கு இன்பம்? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோமா?
இதில் எந்தச் சமயமும் இல்லை! கே.ஆர்.எஸ் உரை-ன்னு போட்டுறலாமா? :)

எது எப்படியோ....வள்ளுவரின் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு திருமால் உலகு என்பதே பெரும்பான்மை உரையாசிரியர்கள் கருத்து!
ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்:
தாமரைக் கண்ணான் என்று ஒரு இடத்தில் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக, வள்ளுவர் = வைணவர் என்று கும்மி அடிக்கக் கூடாது!

வள்ளுவர் சொன்ன தாமரைக் கண்ணான் திருமாலாகவே கூட இருக்கலாம்!
ஆனால் அவர் நோக்கம் = "காதலர்க்கு, அச்சுவையை விட இச்சுவையே இனிது" என்று காட்டுவது தான்!
முல்லைத் தெய்வமான திருமாலுக்கு அர்ச்சனை செய்வது நோக்கமல்ல! :)

இதைப் புரிந்து கொண்டால் போதும்!
திருக்குறள் சமய நூல் அல்ல! சமூக நூல்! - சமூகத்தில் அன்று விளங்கிய தாமரைக் கண்ணானை ஒரு உவமை காட்டுகிறார், அவ்வளவே!!!



அடுத்த குறளைப் பார்ப்போம்! "அடி அளந்தான்" என்று குறிக்கிறார்!
இது திருமால் தானா என்பது ஒரு சிலருக்கு ஐயம்!
ஆனால் திருமால் என்று பெரும்பான்மை உரையாசிரியர்கள் கொள்கிறார்கள்!

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு
குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை

மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள், தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன், கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் கருணாநிதி உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடம் அனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மடி இலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன்; 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் - ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் மூவுலகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால், அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது. கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.

வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம்' என்னும் நூலிற் கண்டுகொள்க.

கதிரவன் நாள்தோறும் அளந்தாலும், முன்னை நிகழ்ச்சி பற்றி 'அடியளந்தான்' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. ' தாஅய' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

மணக்குடவர் உரை:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று

பரிமேலழகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

என்ன விளங்கிச்சா? :)
இப்படி, உரையெல்லாம் படிக்கறதுக்கு, பேசாம, மூல நூலான திருக்குறளையே படிச்சிறலாம் போல தோனுதா? :)

சூப்பர்! அப்படி வாங்க வழிக்கு!
எது மூல நூலோ, அதை வாசித்துச் சரி பார்க்கும் பழக்கம் வந்து விட்டால், பல கசடுகள் தானே மறைந்து விடும்!

அதற்காக உரை நூல்கள் தேவையில்லை என்பதில்லை!
பல மூலப்பாடல்களின் சுவடி கிடைக்காத போது, உரைகளில் மேற்கோள் காட்டியதில் இருந்து தான், மூலப் பாடல்களையே திரட்டித் திரட்டி எடுத்தார்கள் தமிழ் அறிஞர்கள்! அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!



திருமால் பற்றிய இன்னொரு குறளும் உள்ளது!
* முன் சொன்ன இரண்டு குறள்களாவது.....தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்பதில் சிலருக்கு மட்டும் ஐயம் இருந்தது!
* ஆனால் இந்தக் குறளில் ஒருவருக்குக் கூட சந்தேகம் இல்லை! ஏன்-னா திருமாலை நேரடியாகக் காட்டாது...திருமகளைக் காட்டுகிறார்!

வூட்டுக்கார ஐயாவை எப்படி வேணும்-ன்னாலும் பேசலாம்! ஆனா வூட்டுக்கார அம்மா-ன்னு வந்துட்டா கலைஞர் உட்பட அத்தனை உரையாசிரியர்களும் ஏனோ ஒத்துப் போய் விடுகிறார்கள் :))

மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை

மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர் கருணாநிதி உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டப் பயன்படுவனவாகும்

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்;
தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்;

என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர். கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால், பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம்.

அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத் தன்மையாலும், அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால், தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப் பெயர் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது.

வறுமையும் செல்வமும் அமைவதை, அணி வகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று, வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)


இப்படியாகத், திருக்குறளில், திருமால் பற்றிய குறிப்புகள் உள்ளன!

அவற்றில்...இரண்டு குறட்பாக்களில்...
தாமரைக் கண்ணான், அடி அளந்தான்
என்பதற்கு, ஒரு சிலர் மட்டும் வேறு ஒரு பொருள் கொண்டாலும்,
பெரும்பான்மை உரையாசிரியர்கள் திருமால் என்றே கொள்கின்றனர்!

இன்னொன்றில் தாமரையாள்...
என்று திருமகளைக் குறிப்பது பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இல்லாமல்.......அனைத்து உரையாசிரியர்களும் ஒத்துப் போகின்றனர்!

தாமரையாளுக்கு ஒத்துப் போகும் இவர்கள், அதே தாமரைக் கண்ணானுக்கு ஏன் ஒத்துப் போகவில்லை என்பது அந்தத் தாமரைக் கண்ணனுக்கும் வள்ளுவப் பெருந்தகைக்கும் மட்டுமே வெளிச்சம்! :)

எது, எப்படியோ....
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
சமய முத்திரை குத்தக் கூடாது!

திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!

திருக்குறளில் திருமால் பற்றிய குறிப்புகள், ஒரு இடத்தில் நேரடியாகவும், இரண்டு இடங்களில் குறிப்பாகவும் வருகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்! அவ்வளவே!

திருக்குறள் வைணவ நூல் அல்ல! திருவள்ளுவர் வைணவர் என்று சொல்ல எந்தவொரு தரவும் கிடையாது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

Friday, September 10, 2010

பனையோலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகறீங்களா?

பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் + ஈத் முபாரக்!
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! நாம முழுங்குகிறோம்! அவரோ முழுகுகிறார்! :)

நடக்கும் காரியம் விக்கினம் இல்லாமல் நடக்க நாமெல்லாம் விநாயகரை வணங்கினால்...
அவரோட சதுர்த்திக்கு, அவர் விக்கினமில்லாமல் கரைய,
பாவம்...அவர் எந்த முழுமுதற் கடவுளை வேண்டுவார்? :))

மெரீனாவில் பிள்ளையாரின் அல்லோலகல்லோலங்கள்-ன்னு பதிவு போடலாமா? :)

* களிமண் பிள்ளையாரை ஒவ்வொரு ஆண்டும் கரைக்கக் கஷ்டமாக இருக்கா?
* குளம்/கடல்-ன்னு கரைக்கும் நேரத்தில் மண்ணும் சகதியுமாய் ஆகி, பிள்ளையாருக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டமா?

பேசாமல், இந்த ஆண்டு, பனை ஓலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகிப் பாருங்களேன்! இதோ...மங்கலம் கொழிக்கும்...அழகியவாரணப் பிள்ளை!ஹாரித் தாரங் என்பவர் எளிமையாக வடிவமைத்துள்ள இந்தப் பிள்ளையார் சுற்றுச் சூழல் கெடாத பிள்ளையார்!
எளிமையான பிள்ளையார்! அழகானவரும் கூட! பனையோலையால் சுருட்டிச் சுருட்டியே தலைப்பாகையும், காதும், துதிக்கையும், தொந்தியும் அழகாகச் செய்துள்ளார்கள்! = தால விருட்ச கணபதி! திருப்பனந்தாள் பிள்ளையார்!

சென்னையில் வாங்கணும்-ன்னா இதோ தகவல்கள்:
Rajen’s Square,
40, Bazzullah Road,
T.Nagar,
Chennai – 600 017.
Phone: 044 – 65275990,
Mobile: 98412-79881, 98419-37297
(http://chennaionline.com/City360/City-Feature/Get-eco-friendly-this-Chaturthi-with-Palm-leaf-Ganeshas/20101409011403.col)


பனையோலை பிள்ளையார்-ன்னா சாஸ்திரத்துக்கு ஒத்து வருமா-ன்னு எல்லாம் குழம்பாதீங்க! :)
நாம நல்லா இருக்கணும்-ன்னு, பிள்ளையாரை அலைக் கழிப்பதுவா பக்தி??? யோசிச்சிப் பாருங்க!

மஞ்சளில் பிடித்து வைக்கும் பிள்ளையார் தான் மங்களகரமானவர்!
அடுத்து இயற்கையாகச் செடி கொடிகளில் செய்யப்படும் விநாயகர்! - வெள்ளெருக்கு விநாயகர் கேள்விப்பட்டு இருப்பீயளே? அதே போலத் தான் பனையோலையும்!

* தோரணத்துக்கு பனையோலை தானே பயன்படுத்துகிறோம்?
* காதோலை/கருகமணி என்று இன்றும் பனையோலையில் தானே கிராமத்தில் அம்மனுக்குச் சார்த்துகிறோம்?
* ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றிப் பாடி, பனையோலைக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா ஞானசம்பந்தர்! இந்தத் தலம் = செய்யாறு (திருவத்திபுரம்), எங்கூரு வாழைப்பந்தலுக்கு அருகில் தான்!

வெள்ளை வெளேர் என்று = சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று பனையோலையிலும் அப்படியே இருக்கிறார்! கரைக்கவும் எளிது! இலைகள் எளிதாகத் தானே மஃகி விடும் அல்லவா? பிள்ளையாரைக் கரைக்கிறேன் பேர்வழி என்று அவரைக் கலங்கடிக்க வேண்டாம் அல்லவா?

அவளை முருகனிடம் கூட்டி வைத்த முதல்வன்! தேனினும் இனிய திருப்புகழ்! அக்குற மகளொடு அச்சிறு முருகனை அக்கண மணம் அருள் பெருமாளே!

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்(டு)
எச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல் வகைத் தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு
விக்கின சமர்த்தன் எனும் அருளாழி
வெற்ப குடிலச் சடில விற்பரம அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!


பிள்ளையார்-ன்னாலே எளிமை தானே? எளிமையானவரை எளிமையாகவே வணங்கலாம்!
நாம் குழந்தையாய் இருந்த போது, நம்மை எளிமையாகவே வந்து தொட்ட முதல் தமிழ்ப் பாடலால் போற்றுவோம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா!


கோலம் செய் கரிமுகனை,
அலங்-கோலம் செய்யாது,
அலங்-காரம் செய்து வணங்குவோம்!!


உங்கள் தெரிவு என்னவோ?

1) ஜெய் ஸ்ரீ கணேஷா

2) பிள்ளையார் பிள்ளையார்! 3ஆம் நாள்...வரிசை வாய்ந்த பிள்ளையார்!

3) அந்தி வானம் அரைத்த மஞ்சள்! அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்!
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள்! கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!
மஞ்சள்! மஞ்சள்! மஞ்சள்!
Read more »

Wednesday, September 08, 2010

மூக்கறுத்த நாயன்மார்! மீனவ நாயன்மார்!!

அடியார்களின் திருக்கதைகளைப் புனைவுகள் அதிகம் இன்றி..
மூல நூல்களில் (திருத்தொண்டர் தொகை/திருவந்தாதி) உள்ளது உள்ளவாறு..
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல..
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில்..
ஒவ்வொரு நாயன்மாரின் நினைவு நாளின் (குருபூசை) போதும், இதோ...பந்தல் பதிவுகள்...

அந்த வரிசையில் இன்று...இவர்களைப் பார்க்கலாமா?

1. செருத்துணை நாயனார் (ஆவணிப் பூசம் - Sep 5, 2010)
அரசியின் மூக்கை, பொது மண்டபத்தில், அதுவும் அரசன் இருக்கும் போதே, அனைவரும் பார்க்க அறுத்தவர்! - ஐயோ! ஏன் இப்படிச் செஞ்சார்?
* அரசன் இவர் தலையை உடனே சீவி இருப்பானோ?
* இல்லை தன்னாலும் அடக்க முடியாத பெண்டாட்டியை அடக்கியவரே-ன்னு பரிசு கொடுத்திருப்பானோ? :)

2. அதிபத்த நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
மீனவ நாயன்மார் - மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்று முதலில் பாடியதே இவரு தான்! :)

3. புகழ்த் துணை நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
உறவுகள், உற்ற நண்பர்கள் கூட உதறி விட்டு நீங்கும் காலத்தில்,
பஞ்சம் வந்த போதும், பரமனை விட்டு நீங்காமல்...!


செருத்துணை நாயனார்:

அது என்ன செருத் துணை? செரு = போர்!
"செருவில் ஒருவன்" என்று முருகனைச் சொல்வது சங்கத் தமிழ்!
போரில் துணை நிற்பவர் = செரு+துணையார்!

வேளாளர் குடியில், தஞ்சையில் தோன்றியவர்! திருவாரூருக்கு இடம் பெயர்ந்து, சிவத் தொண்டிலேயே இருந்து விட்டார்! விளைச்சல் பூமியான தஞ்சையை இவரு எதுக்கு திருவாரூருக்கு இடம் பெயரணும்?

"மேன்மை கொள் சைவ நெறி, விளங்குக உலகமெல்லாம்" என்று சைவம் கொடி கட்டிப் பறந்த போது...சைவத்தின் தலை நகரம் எது?

"தென்னாடுடைய சிவனே" என்னும் தென்னாட்டில், தில்லை என்னும் சிதம்பரம் தானே, அப்போதும் இப்போதும் எப்போதும் சைவத்தின் தலைநகரம்?
எப்படி வைணவத்துக்கு ஒரு திருவரங்கமோ, அது போல் சைவத்துக்குத் தில்லை அல்லவா? இதென்னடா புதுசாத் தலைநகரக் கேள்வி-ன்னு நினைக்கறீங்களா? :)

தில்லை-ஆரூர்

தில்லை என்றுமே பெருமை மிக்க தலம் தான்! மறுப்பில்லை!
பொன்னம்பலத்துக்கு உள்ளே ஒரு சிறு அம்பலம்!
ஆடல் வல்லானின் அழகு அம்பலமாகும் அம்பலம் = சிற்றம்பலம்!
ஆனால் தில்லைக்கும் முன்னால்...
சைவத் தலைநகரமாகத் திகழ்ந்து விளங்கியது = திருவாரூர்!


"திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்" என்றெல்லாம் புகழப் பெற்றது! இன்னிக்கும் திருவாரூரில் மாலை விளக்கு ஏற்றிய பின்னரே, பல சுற்று மாவட்ட சிவாலயங்களில் எல்லாம் விளக்கீடு செய்வது வழக்கம்!
"கோயில் பாதி, குளம் பாதி" என்னும் படிக்கு, மொத்த கோயிலின் நிலப்பரப்பும், குளத்தின் நிலப்பரப்பும் ஒன்றே என்று அமைந்த ஆலயம்!

* உலக நன்மைக்காக விடமுண்ட கண்டன்! அந்தத் தியாகத்தை நினைத்துப் பெருமாள் மனத்தளவில் ரசிக்கும் போது, அவரது மூச்சிலே மேலும் கீழும் இறங்கிய ஈசன்! அதே நடனக் கோலம் காட்டும் "தியாகேசன்" = திருவாரூர்!
* சுந்தரர் முதலான பல அடியார்கள் ஒன்று திரண்டு சைவம் வளர்த்த தலம் = திருவாரூர்! தேவாசிரிய மண்டபம் என்றே இன்றும் உள்ளது!

* "புற்றிடம் கொண்ட பெருமான்" என்று இறைவனுக்குப் திருப்பெயர்! இயற்கைச் சூழலில் புற்றில் தோன்றிய பெம்மானாக ஈசன் விளங்கும் தலம் = திருவாரூர்!
* புற்றிடங் கொண்ட பெருமான்-அல்லியங் கோதை என்று மூலவரும், வீதி விடங்கர்-முருகன்-மனோன்மணி அம்மன் என்று உற்சவரும் (ஊருலா மூர்த்தியும்), செங்கழுநீர் ஓடை முதலான செந்தமிழ்ப் பெயர்களை இந்த ஆலயத்தில் காணலாம்!

"ஆரூர்" என்று தமிழ்ச் சமயமாக, சைவம் தழைத்த காலம்!
பின்னர் தில்லைக்குப் பெயர்ந்து..பலவும் பெயர்ந்து போனது!
:(

ஓதுவார்கள், சைவத் திருமுறைகளை ஓதும் போது, "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பது தான் வழக்கம்! (சிற்றம்பலம் = தில்லைச் சிற்றம்பலம்)
ஆனால் திருவாரூர் தலம், தில்லைக்கும் தொன்மையானபடியால்...இந்தத் தலத்தில் மட்டும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பதில்லை! தேவாரம் சொல்லி, அப்படியே நிறுத்தி விடுவார்கள்!

அனைத்து ஆழ்வார்களாலும் அதிகம் பாடல்களைப் பெற்ற தலம் என்று திருவரங்கத்துக்கு எப்படிப் பெருமையோ...
அதே போல், அதிகமான தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை திருவாரூருக்கே உண்டு! மொத்தம் 353 பாடல்கள்!

பின்னம் அவனுடைய "ஆரூர்" கேட்டேன்!
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!


சரி, நாம் கதைக்கு வருவோம், வாங்க...

செருத்துணையார் திருவாரூரில் சிவத் தொண்டில் காலங் கழிக்கலானார்!
என்ன, கொஞ்சம் கோவக்காரர்! வன்-தொண்டர்! சிவத் தொண்டுக்கு யாராச்சும் வலியப் போய் இடையூறு செஞ்சா பிரிச்சி மேஞ்சிருவாரு! :)

ஒரு முறை பல்லவ நாட்டு அரசர், கழற்சிங்கர் தம் மனைவியோடு ஆரூர் ஆலயத்துக்கு வந்தார்! ஒரே படோபடம்! அரசன் சும்மா வந்தாலும், கூட இருப்பவர்கள் அடிக்கும் கொட்டம் அப்பவே இருந்தது போல! ஆலயத்தில் "அனைவரும் அடியார்கள் தான்" என்ற நிலை மறந்து போனது! படோபடங்கள் தலை தூக்கியது! அரசரின் குழாம் தேவாசிரிய மண்டபத்துக்குள் நுழைகிறது!

முன்பு சுந்தர மூர்த்தி நாயனாரையே, அவர் சுற்றியுள்ள அடியார்களை ஏறெடுத்தும் பாராமல், செல்வாக்கால் நேரே வணங்கச் சென்ற போது, இதே தேவாசிரிய மண்டபத்தில் அல்லவா ஒருவர் (விறன்மிண்டர்) வெடித்துக் கிளம்பினார்?
"சுந்தரனும் அடியார் குழாத்தில் இல்லை; அவனுக்கு அருளும் ஈசனும் இனி நம் குழாத்தில் இல்லை! சுந்தரனும் புறகு! அவனை ஆளும் ஈசனும் புறகு!" என்று அறச் சீற்றம் கொண்ட இடம் அல்லவா இந்த தேவாசிரிய மண்டபம்?

அரசன் முன்னே வேகமாகச் சென்று விட...அரசி தான் சற்றுத் தாமதம்!
எப்பமே வீட்டில், பெண்கள் தானே கிளம்ப லேட் ஆகிறது? :)) ஒருவர் Fast Passenger என்றால் இன்னொருவர் Goods வண்டி போல் வந்தால் எப்படி? :))
ஏன் அரசியார் தாமதமாகச் செல்கிறார்? அவரை ஏதோ ஒன்னு ஈர்க்கிறது! என்ன அது?

மல்லிகை, முல்லை, இருவாட்சி, கதம்பம், அல்லி, அளரி, செந்தாமரை என்று பூசைக்காக மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன பூங்கோயில் மண்டபத்துள்!
மொத்த வாசனையும் அழகும் திரண்டு வந்து அரசியை நிலை கொள்ளாமல் செய்கிறது! என்ன தான் அரசியாய் இருந்தாலும், இப்படி அனைத்து மலர்களும் ஒரு சேர அவள் இது வரை கண்டதும் இல்லை! சூடிப் பரப்பி அனுபவித்ததும் இல்லை! ஆசை துடிக்கிறது!

அரண் மனையிலே காணாத சுகத்தை,
அரன் மனையிலே காண்கிறாள்!

முறையாக அனுபவிக்கலாமே? பூசைக்குப் பின் பிரசாதமாக அவளுக்கே தரப்படுமே!
ஆனால் ஆசை வெட்கம் அறியுமா?

இப்போதே அனுபவித்தாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால்??
யார் தன்னைக் கேட்டு விட முடியும் என்ற அலட்சியத்தில், நடந்தாள் ராணி, தடந்தாள் பேணி! பூந்தொடையல் கையில்! பூவாசம் மெய்யில்! முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தாள்!

எங்கிருந்து தான் வந்தாரோ செருத்துணை? இத்தனை படோபடங்களையும் ஆலயத்தில் பார்த்து வெறுத்துப் போனவர், அரசியின் அலட்சியம் கண்டு இன்னும் கோபமானார்! அருகில் உள்ள பூ-நார் சீவும் குறுங்கத்தி எடுத்து, அவள் நாசிக்கும் மலருக்கும் இடையே நீட்ட, வெள்ளல்லி எல்லாம் செவ்வல்லியாகிப் போனது! குபுகுபு என்று இரத்தம்!!


அடப் பாவி, அரசியின் மூக்கில் கத்தி பட்டு விட்டதா? இப்படிப் பெண்மயில் போல் துடிக்கிறாளே! பலரும் பாய்ந்து செருத்துணையைப் பிடித்துக் கொண்டனர்!

முன்னே போன பல்லவ அரசர் கழற்சிங்கர், சத்தம் கேட்டு ஓடோடி வருகிறார்! இந்த அடாத செயலைச் செய்தது யார் என்று சீறுகிறார்! அதிகாரம் அதட்டும் போது, பதில் உடனேவா வருகிறது? அனைவரும் தயங்கத் தயங்க...

செருத்துணை, குற்றத்தை ஒப்புக் கொண்டு, தானே இதைச் செய்ததாகக் கூறுகிறார்! நடந்த அத்தனையும் அவர் எடுத்துச் சொல்லச் சொல்ல...
ச்சே, இப்படியும் ஒரு எதிர்வினையா? அரசன் வாளை உருவி...

ஐயோ, செருத்துணை இன்றோடு காலியா?
யாரும் எதிர்பார்க்கும் முன்பே, மன்னன், அரசியின் கைகளை வாளால் வெட்டுகிறான்! வெட்டித் தலை குனிகிறான்! வெட்கித் தலை குனிகிறான்!
மக்கள் அதிர்ச்சியால் அரண்டு போகிறார்கள்!

காதலியிடம் Public Display of Affection கேள்விப்பட்டுள்ளோம்!
இது என்ன Public Display of Punishment-ஆக அல்லவா இருக்கு! :(

"முதல் தவறு கைகள் மீதல்லவா? அப்புறம் தானே மூக்குக்குச் சென்றது?" - இது அரசன் சொன்னது!
"முதல் தவறு மனதின் மீதல்லவா? அப்பறம் தானே கை மீறியது?" - இது நாம் சொல்வது!

மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே.....
மனத்தை உணர வைக்காமல்......, விழிக்கோ,கைக்கோ,நாசிக்கோ தண்டனை தந்து பயன் என்ன?
சுழற்றியதோ சாட்டை! சாபம் பம்பரத்துக்கா? இதென்ன போலிப் பண்பு??

* பூசைக்குரிய மலர் என்று பாராதது சிவ அபராதம் என்று சொன்னாலும்...
* ஆலயத்தில் அதிகாரம் காட்டியது அரசியின் பிழையே ஆனாலும்...
* அதற்கு, செருத்துணையார், அவசரத்தில் குறுங்கத்தி நீட்டி விட்டாலும்...
* அரசியே ஆனாலும் சிவாபராதம் அபராதமே என்று...இப்படிப் பலர் முன்னிலையில், அரச நீதி காட்டி விட்டார் கழற்சிங்கர்!

இது அரச நீதி வேண்டுமானால் ஆகலாம்! ஆனால் மேன்மை கொள் சைவ நீதி ஆகுமோ? = அன்பே சிவம்!
* இறைவனுக்குரிய மாலையைத் தான் சூடிக் கொண்டவள் = அவள் கைகளை யாரும் அரியவில்லையே! "சூடிக் கொடுத்த சுடர் கொடி" அல்லவோ ஆனாள்!
* இங்கோ, அரசிக்கு வேறு விதமாய் ஆகிப் போனது! ஏன்?

அவளுக்கோ மாலையின் மேல் ஆசையில்லை! அதை அணிந்தால், தான், அவனுக்கு ஏற்றவளாக இருப்போமா என்ற ஆதங்கம்!
இவளுக்கோ இறைவன் பால் உள்ள பற்றினால் அல்ல! தன் ஆசைக்கு, தன் வேட்கையை, பொதுவில் தணிவித்துக் கொள்ள முயன்று...அதுவும் தன் அதிகார பலத்தால்!

= நோக்கமே முக்கியம்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் "தத்தம்
கருமமே" கட்டளைக் கல்!

என்ன தான் அரச நீதியாகத் தண்டனை தந்தாலும், கழற்சிங்கர் சிறந்த சிவ பக்தரே! சைவத் தொண்டிலே சிறந்து, நாயன்மாராக விளங்கி நிற்கிறார்!
செருத்துணை நாயனார் குரு பூசையின் போது, இந்த இருவரையுமே வணங்கி நிற்போம்!


அதிபத்த நாயனார்:

நாகைப்பட்டினம் நுளைப்பாடி என்னும் மீனவச் சேரியில் பிறந்தவர் அதிபத்தர்! இவருக்கு ஈசனின் பால் எப்படியோ, அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிட்டது! யாரிடமும் போய் வேதமோ, திருமுறையோ கேட்கவில்லை! ஈசனின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து முடித்து அவரைப் பற்றிக் கொள்ளவில்லை! இயல்பாகவே இயற்கையாகவே அமைந்து விட்ட ஈச-அன்பு!

ஒவ்வொரு நாளும் தான் கடலில் பிடிக்கும் மீன்களுள் சிறந்த மீனை, சிவனுக்கே அர்ப்பணம் என்று சொல்லி, மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்! மீன் பிடித்து மீண்டும், ஆற்றில் விட ஆசை-ன்னு அப்பவே பாடி இருக்கார் போல! :)

அதென்ன ஒத்தை மீனை மட்டும் விடுவது? அதென்ன, பிடித்துத் தானா விட வேண்டும், அப்படியே விடலாமே-ன்னு ஆளாளுக்குப் சில சக மீனவர்கள் கேலி பேசினாலும்...
அதிபத்தர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! அவர் சிவ-அன்பு அவர் மனத்தளவில்! அது ஊருக்கே விளம்பரம் செய்து அளித்த "சிவார்ப்பணமஸ்து" அல்ல! நடுக்கடலில் அளித்த சிவக்கொடை!

ஆனால் அன்றோ, அவர் கெட்ட நேரம், வலையில் ஒரு மீனும் சிக்கவில்லை! இன்னும் ஆழம் சென்று பார்த்தார்! ஆகா! ஏதோ பலமாக இழுக்கிறது! கொழுத்த மீன்கள் போல! வலையை மேலே இழுத்துப் பார்த்தால்...கொழுத்த மீன்"கள்" அல்ல!.........வெறும் ஒரு கொழுத்த மீன் மட்டுமே!

இப்பச் செய்வாரா சிவார்ப்பணம்? கொள்கை?? சிவம்???
ஹிஹி! ஞான, கர்ம யோகம் என்று விதம் விதமாய் அறிவுப் பசியெல்லாம், வயிற்றுப் பசிக்கு அப்புறம் தானே?
நமக்கெல்லாம் வாழ்க்கைக்கு, மிஞ்சி ஃப்ரீ டைமில் தானே தெய்வம்! அதுவும் நமக்கு ஒத்து வரும் கதைகள் கொண்டதாய் இருந்தால்! :)
அதிபத்தருக்கோ தெய்வத்தை மிஞ்சித் தான் வாழ்க்கை! என்ன செய்வார் அந்த ஒரே மீனை?

சிவார்ப்பணம் என்று வழக்கம் போல் கடலிலேயே விட்டார்! இவர் அதி-பத்தரா? அதி-பித்தரா?

அடப் பைத்தியமே, புவ்வா-வுக்கு என்ன பண்ணுவ? என்று சக மீனவர்கள் கேட்க...வெறும் புன்னகை மட்டுமே அவரால் அவர்களுக்குத் தர முடிந்தது!

மறு நாள், அந்த ஒரு மீன் கூடப் பிடிபடவில்லை! போச்சுறா...நல்ல சிவார்ப்பணம்! பகர் ஆர்வம் ஈ என்று கேட்காமலே சிலருக்குத் தரவல்ல இறைவன், இவருக்கு மட்டும் இவர் நிலை கண்டும் தரவில்லை போலும்! ஒரு வேளை ஈசனும் ஆராய்ந்து அருளேலோ ஆகி விட்டாரோ? :(

சேலெல்லாம் செவேல் செவேல் என்று மின்ன, இது சிலா மீனோ அல்லது சிலையோ என்னும் படிக்கு, பொற்சிலையாய் ஒரு பொன் மீன்...
வலையில் வந்து விழுந்தது! தகதகதக தகவென்றே ஓடி வா! சிவ சக்தி சக்தி சக்தியோடு ஓடி வா!

அதிசய மீனை விற்றால் வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போகுமே! பொன்மீன், பொன்மீன் என்று உடன் இருந்த பரதவர்கள் எல்லாம் மகிழ்ந்து கூச்சல் இட...
அதிபத்தர் சற்றும் தாமதியாமல், அன்றைக்கு கிடைத்த ஒரே மீனை, பொன் மீன் என்றும் பாராமல்....."சிவார்ப்பணம்".....அலையிலேயே இட்டு விட்டார்!

கடல் நஞ்சை உண்டவன், இவர் ஈந்த மீனையும் உண்டானோ என்னவோ?
கீழைக் கடலில் நஞ்சுண்டவன் மேற்குச் சூரியனும் மறைந்து போகும் அளவுக்கு மின்ன...
பொன்னார் மேனியனே....மின்னார் செஞ்சடை மேல்....மன்னே மாமணியே...

அதிபத்தர் சிரம் மேல் கரம் கூப்பி, சிவசிவா என்றும் சொல்லத் தெரியாது, நாத் தழுதழுக்க...
சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும் வண்ணம் இந்த அன்பனைத் தலையளித்து ஆண்டு கொண்டார் அம்பலவாணப் பெருமான்!

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
தங்கக் கவசம், வெள்ளிக் கதவு என்றெல்லாம் கொட்டும் கூட்டத்துக்கு இடையில்... அதிபத்த நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, September 02, 2010

பழமொழி நானூறில் தமிழ்க் கடவுள்!

பழமொழி நானூறு என்பது திருக்குறள், நாலடியார் போல பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று!

மொத்தம் 400 பழமொழிகள்...ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு பழமொழி கோர்க்கப்பட்டு இருக்கு!
அப்பவே தமிழறிஞர்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக நூல்களைச் செஞ்சிருக்காங்க பாருங்க!

பட்டிமன்றத்தில் கலந்துக்கிட்டு, "குடும்பத்தில் அதிகம் கத்துவது ஆண்களா பெண்களா?"-ன்னு வெத்துப் பேச்சு பேசி, கைத்தட்டல் பெறும் தமிழ் "அறிஞர்கள்" அல்ல சங்க காலக் கவிஞர்கள்! "நீ இருமினால் இயற்தமிழ், தும்மினால் இசைத்தமிழ்"-ன்னு எல்லாம் ஆட்சியாளரை உலா பாடத் தெரியாதவர்கள்!

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க வல்ல நூல்களை எழுதி,
பண்டைத் தமிழ்க் குடிகளின் வாழ்வியலைப் பதிந்து வைத்துப் போன பண்பாளர்கள்!
பழமொழி நானூறு என்னும் இந்த நூலை எழுதியவர்: மூன்றுரை அரையனார்

வழி வழியாக மக்களிடையே வழங்கி வரும் பழமொழிகள், சுருக்கமா, ஆனா நச்-ன்னு இருக்கும்! கேட்ட மாத்திரத்தில் பதிந்து விடும்!
"அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு" என்பது இப்போதைய பழமொழி! இறை ஒருமைப்பாட்டுக்கு, பக்கம் பக்கமா புத்தகம் போட்டாலும் இந்த ஒரு பழமொழிக்கு ஈடாகுமா? பழமொழியின் Power அப்படி! :)

நிறை குடம் நீர் தளும்பல் இல் என்ற பழமொழியைப் பாட்டில் வைக்கிறார் ஆசிரியர்! அதே போல் இன்னொரு கவிதையில்...
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும் - என்று வைத்துப் போகிறார்! இப்படி 400 பழமொழிகளின் தொகுப்பு!

தொல்காப்பியரும் தமிழ்ப் பழமொழிகள் (முதுமொழி) பற்றிச் சொல்கிறார் பாருங்கள்!
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்,
ஏது நுதலிய முதுமொழி என்ப
இப்படியான பழமொழிகளை, சங்க காலத்தில் சில கவிஞர்கள் ஆங்காங்கே எடுத்து ஆண்டாலும்,....
ஒரே இடத்தில் திரட்டி வைக்க, புதுமையான யோசனை இந்தக் கவிஞருக்குத் தான் தோன்றியது! அதுவே 18 கீழ்க்கணக்கில் = பழமொழி 400!


பழமொழிகளில், பண்டைத் தமிழ்க் குடிகளின் தெய்வமான திருமால் எங்கெல்லாம் வருகிறார்-ன்னு சும்மா பார்ப்போமா?

நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,
மரையா கன்று ஊட்டும் மலை நாட! - மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு.
(பாடல்: 48)

இதிலுள்ள பழமொழி: நரை ஆன் புறத்து இட்ட சூடு! அதாச்சும் வெள்ளைக் காளைக்குப் போட்ட சூடு போல்!
வெள்ளை மாட்டுக்குச் சூடு போட்டாற் போலே, நல்லவர்கள் செய்யும் தவறுகள் பளிச்-ன்னு தெரியும்!

மரையா கன்று ஊட்டும் மலை நாட = மலையாடு (வரை ஆடு = மரை ஆ);
அது தன் கன்றுக்குப் பாலூட்டும் மலைவளம் கொண்ட மலைநாடனே,
* வெள்ளை மாட்டுக்குப் போட்ட சூட்டை அந்த வெண்மையே எடுத்துக் காட்டுவது போல்...
* சான்றோர்கள் செய்யும் தவறுகளை, அந்தச் சான்றாண்மையே எடுத்துக் காட்டி விடும்!

இதுல எங்க திருமால் வந்தாரா? ஹா ஹா ஹா, முழுப் பாட்டையும் பாருங்க...

நிரை தொடி தாங்கிய, நீள் தோள் மாற்க்கு ஏயும்
= வரிசையாக தோள் வளை சூடிய, நீள் தோள் நெடியோன்
= மாலுக்கேயும் = மாலுக்கே ஆனாலும் = திருமாலுக்கே ஆனாலும்

உரை ஒழியாவாகும், உயர்ந்தோர்கண் குற்றம் = ஒழிக்க இயலாது, உயர்ந்தவர்கள் செய்யும் தவறுகள்!

அதாச்சும், திருமால் போன்று உயர்ந்தவர்களே ஆனாலும்...
உயர்ந்த தன்மையில் இருந்து கொண்டு செய்யும் சிறு குற்றமும், பளிச்-ன்னு தெரியும், வெள்ளைக் காளைக்குச் சூடு போட்டாற் போலே!

உயர்வுக்குத் திருமாலைக் காட்டுகிறார் கவிஞர்!
கடைச் சங்கத் தமிழ்க் குடியிலும், எத்தனை உயர்வு பெற்றிருந்த திருமால்...அந்த முல்லை நில மாயோனை விடவா நீங்கள் உயர்ந்தவர்கள்?
அது மாயோனே ஆனாலும் சரி, உயர்ந்தவர்கள் செய்யும் சிறு தவறும், பெரும் பிழையாய்த் தெரியும்! எனவே, சான்றோர்களே, தவறாது இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்! = Model Code of Conduct, for Models! :)


அடுத்த பாட்டில் "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லையே கையாளுகிறார் கவிஞர் மூன்றுரை அரையனார்!
நாரணம் தமிழ்ச் சொல்லா? என்பதை இராம.கி ஐயாவின் பதிவில் பாருங்கள்!

காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல்.
(பாடல்: 79)

இதில் உள்ள பழமொழி: நரிக்கு நாராயம் கொள்வார்களா? அதாச்சும் ஒரு குறு நரியைப் பிடிக்க, யாராச்சும் நாராய அம்பினை எய்துவார்களா?

காழ் ஆர மார்ப = முத்து மாலை மார்பனே
கசடு அறக் கை காவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை = கசடில்லா ஒழுக்கத்தைக் காக்க மாட்டாத கீழானவர்கள்...அவர்கள் தன்னளவில் செய்யும் ஈனச் செயலுக்காக...

மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல் = மேலான சான்றோர்கள், மனத்தில் எடுத்துக் கொண்டு, பதிலுக்குப் பதில் ஊக்கலாமா?
நரிக்கு நல்ல நாராயம் கொளல் = அது, நரிக்கு நாராய அம்பு எய்தாற் போலே! அது தேவையா?


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)


அன்பர்களே,
18 கீழ்க் கணக்கோடு.....
சங்கத் தமிழிலே தமிழ்க் கடவுள் என்பதற்கான....
இது காறும் வந்த தரவுகள் - பதிவுகள் அனைத்தும் நிறைந்தன!
Read more »

Wednesday, September 01, 2010

பதினெண்கீழ்க் கணக்கில் தமிழ்க் கடவுள்!

18 கீழ்க் கணக்கு நூல்களில், அற நூல்களைத் தவிர்த்து, அகம்/புறம் என்று வாழ்வியல் அழகு நூல்களும் உள்ளன! No Moral Science, Only Life's Beauty! :)

அகத்திணை:
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6. கார் நாற்பது

புறத்திணை:
1. களவழி நாற்பது

இந்த நூல்களிலெல்லாம் தமிழ்க் கடவுள் பற்றி வரும் குறிப்புகளைப் பார்ப்போமா?
மற்ற 18 கீழ்க்கணக்கு நூல்களான - திருக்குறள், திரிகடுகம், நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு - இவற்றுள் எல்லாம் வரும் குறிப்புகளை முன்னரே பார்த்து விட்டோம்! அவை அற நூல்கள்! இன்று பார்க்க இருப்பவை அக நூல்கள்!



கார் நாற்பது:

கார் காலக் குறிப்புகள் (மழைக் காலம்) ஒவ்வொரு கவிதையிலும் வருவதால், இது கார் நாற்பது! எழுதியவர்: மதுரைக் கண்ணங் கூத்தனார்! சங்கப் புலவர்கள் பல பேரு மதுரைக் காரவுங்களாத் தான் இருப்பாங்களோ? :)
தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தல்: கார்கால வானவில்லில் திருமால் சூடும் மாலை

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
வருதும் என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?

கடல் போல் கரு வண்ணனாகிய திருமால்! அவன் மார்பில் தவழும் தார் (மாலை)! எப்பமே அது பல வண்ணங்களைக் கொண்டு தானே இருக்கும்! வனமாலையோ, வண்ணமாலையோ?
அதே போல் இந்த வானவில் (திருவில்) இத்தனை நிறங்களோடு தோன்றுகிறதே! மழைக்காலம் துவங்கப் போகிறதோ?

கார்காலத்தில் வந்து விடுவேன்-ன்னு சொன்ன உன் தலைவன் இன்னும் வரவில்லை-ன்னு ஏங்குகிறாயா? சரி சரி பதறாதே!
அங்கே பார், வானம் கருவுற்றுச் சத்தம் போடுகிறது! பூப்பூவாய் தூவப் போகிறது! அதற்குள் அவர் வந்து விடுவார்! ரொம்ப கவலைப்படாதேடீ!


திணைமாலை நூற்றைம்பது:

இந்த நூல்......குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைப் பாடல்களும் கொண்டது! மொத்தம் 150 கவிதைகள்!

எழுதியவர் ஒருவரே - பெயர்: கணிமேதாவியார்!
ஏலாதி என்ற நூலை எழுதியவரும் இவரே! கணித வல்லுநர் (என்னைய போல), ஆனால் கவிதையிலும் என்னமா கலக்குறார் பாருங்க :))

மாயவனும் தம் முனும் போலே, மறிகடலும்
கானலும் சேர் வெண்மணலும் காணாயோ? - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று?
(நெய்தல் திணை: 58)

மாயவனும் தம் முனும் = மாயோனும், அவன் முன்னவனான வாலியோனும்(பலதேவன்) விளையாடும் இயற்கைக் காட்சியைப் பாரேன்!
* ஒன்று கருங்கடல்!
* இன்னொன்று வெள்ளை மணல் கானல் சோலை! (கடலோரக் கானல் சோலை)

கருமையான கடலின் அலை, அந்த வெள்ளை மணலை முட்டி முட்டி விளையாடுவது, கருப்பான கண்ணன், வெளுப்பான வாலியோனுடன் விளையாடுது போலவே இருக்கே!
அந்தக் கானல் சோலையிலே, ஞாழல் மரம் (கோங்க மரம்), தாழை, புன்னை மரம் என்று அடர்த்தியாக இருக்கே! பாராயோ?

இந்தப் பாடல் "நெய்தல்" திணை என்றாலும், "முல்லை" நில இறைவன் மாயோன்.....இங்கும் அழகாகப் பேசப்படுகிறான் பாருங்கள்!

நெய்தல் நில வருணன்/மருத நில வேந்தன் எல்லாம் வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்; ஆலயமோ, கூத்தோ, மக்கள் வாழ்விலோ அவர்கள் இடம் பெறவில்லை!
மாயோனும் சேயோனும் மட்டுமே நிலம் கடந்து, பல மக்களாலும், வாழ்வியலில் கலந்து பேசப்படுவதை, இதே போல் பல சங்கக் கவிதைகளில் காணலாம்!

அதே திணைமாலை-150 இன் தொடர்ச்சியாக....முல்லைத் திணை (96 & 97)
இருள்பரந்து ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையரவு அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு.

பாம்பு போல் வளைந்த அல்குல் (இடுப்பு) கொண்ட தோழீ...
ஆழிப்படை (சக்கரப்படை) ஏந்தும் மாயோனின் நிறம் போல் இருள் பரவும் வேளை!
அவன் முன்னவன் வாலியோன் போல் வெள்ளொளி மதி பரவும் வேளை!
ஆனால் என்னைப் போல்......காதல் துணை அருகிலே இல்லாதவர்க்கோ....,
இந்த வேளை வேல் போல் கொடியதாய் இருக்குதேடீ!


பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து.

தோழியே, அதோ கதிரவன் மேற்கு மலை-முகட்டை முட்டுகிறான் பார்! மாயோனாகிய திருமாலின் ஆழி (சக்கரம்).....
பகைவரின் யானையை, தலையில் போய் முட்டுவது போல் முட்டும் இந்தச் சிவந்த காட்சியைப் பாரேன்!

அந்த மாயோனுக்கு முன்னவன் வாலியோனைப் போல், வெள்ளையாய் நிலவும் எழுகிறது! இப்படி மயக்கும் மாலைப் பொழுதில், நான் தான் அவரையே நினைத்து ஆற்றாமல் உள்ளேன் போலும்!


ஐந்திணை ஐம்பது: திருமால்+முருகன் என்று இருவரையும் ஒரு சேரக் காணும் கவிதை

இந்த நூலும் ஐந்திணைக்குப் 10 பாடல்கள் வீதம், 50 கவிதைகள் கொண்ட தொகுப்பு! எழுதியவர்: மாறன் பொறையனார்!

மாறன் = பாண்டியப் பெயர், பொறை = சேரப் பெயர்! இவர் இரண்டு வழி வம்சமான இல்லத்தவர் போலும்! அதான் இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள்!
அதான் போலும் இவரும் மாயோன்-சேயோன்-ன்னு இருவரையுமே ஒரு சேரப் பாடுகிறார்!

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலன் ஏருங் கார்.
(முல்லை: 01)

அடி நல்லவளே, என் தோழீ, மேகம் திரளுது பார்! கார் காலம் வந்து விட்டுது!
மல்லரை எல்லாம் அடக்கிய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் - நம் மாயோனின் உருவம் போல கருமேகங்கள் திரண்டு விட்டன!

அந்த மாயோன் மேகத்தில், முருக வேல் மின்னல்!
கருமேகத் திரளில், கடம்ப மாலை சூடிய முருகனின் வேல் போல், பளிச்சென்று மின்னல் மின்னுதே!
மலையரண்களின் மேல் வேல் எய்த முருகனின் கொன்றைப் பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன! கார்காலம் வந்து விட்டதே! சொன்னபடி அவரும் வந்து விடுவார்!

இப்படித் திருமாலும் முருகனுமாய் ஒரு சேரக் காணும் காட்சி, முல்லை நிலத்தில்!
குறிஞ்சியின் முருகன் முல்லைத் திணையிலும் வருவது தெரிகிறது அல்லவா?
இரு பெரும் தமிழ்க் கடவுள், மாயோன்-சேயோன் காட்சிகள் பதினெண் கீழ்க் கணக்கில்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP