Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! சுந்தரர் அம்மா என்பதற்காகவும், மதுரைக்கு வாதம் செய்ய சம்பந்தரை அழைத்து வந்தமைக்காகவும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற செல்வாக்குப் பின்புலம் ஏதும் இல்லாமல்...
ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!


கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ,
இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று சற்று நேரம் கலங்கி நின்ற சாதாரணப் பெண் இவள்! "ஈசனே, மந்திர மாங்கனி தா"-என்று மேஜிக் எல்லாம் செய்து காட்டவில்லை! தானாக வந்தது! ஈசனின் எண்ணமோ ஏதோ, கனி வந்தது! வாழ்க்கை போனது!

கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் அவன் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு இளம்பெண் பேரிலேயே "புனித"வதி! கேட்கணுமா?
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்! அடா அடா அடா!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது!
கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதா தான் "புனிதள்" ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(((

தில்லை இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

ஆனால் இன்னிக்கும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! அதில் பரமதத்தன் என்னும் கணவனுக்கு மாலை மரியாதைகள் செய்து, பல்லாக்கில் ஏற்றி, அவனை ஆற்றங்கரை விடு விழா வேறு நடத்துகிறார்கள்! :(( - இது இந்தக் காலத்திலும் தேவையா?


புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு பசியாறுகிறாள் என்றால்? அங்கேயே வாழ்கிறாள் என்றால்?...இருவது வயசு தான்! :((
பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?
* இளம் சம்பந்தருக்கு கல்யாண ஏற்பாடு பேசத் துணிந்த சமூகம், இளம் புனிதாவுக்கு மட்டும் சுடுகாட்டு வாச ஏற்பாட்டுக்குத் தான் துணியுமா?

தோழி கோதையின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன்,
தோழி புனிதாவின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்! - புனிதா...உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு......:(

வைணவ இலக்கியத்தின் - தமிழ் மொழி, சாதி, பெண்மை, சமூகம் - என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்! யம்மா புனிதா, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை! தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் அம்மையார் தான்! அனைத்து நாயன்மார்களையும் விடக் காலத்தால் முந்தியவர்! முதலாழ்வார்களின் கால கட்டம்! இலக்கியத்தில் வெண்பா மாறி அந்தாதி துவங்கிய கட்டம்!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்கள் D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை எல்லாம் அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்!
என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! அதனால் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை! அட, ஆன்மீகம் தானே, அதுல பெருசா என்ன இலக்கியம் இருக்கப் போவுது என்ற நம்மவர்களின் "பார்வை"! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர் என்று சொன்னேன் அல்லவா? சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் முதலில் சிவக்கவி செய்த புனிதாவின் நூல்கள், 11ஆம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை! அப்போது ஆரூர் தான் தில்லையினும் சிறப்பு!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!

திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன! அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை! சுடுகாடு, ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் வாயளவில் இல்லாமல், வாழ்க்கையிலும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயான நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்!
* ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
* அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
* குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? யாரேனும் சொல்லுங்கள்! அந்தச் சிவப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்!
அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு; அரா=அரவு (பாம்பு)

* திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்!
* திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
* நடுவில், கழுத்தில் இருக்கும் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் - தலையில் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் - மார்பில் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது! மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இவ்ளோ தான் தேவாரக் கவிதை! இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொல்லட்டுமா? பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்!
ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! அட, இந்தியாவில் மட்டும் தானா இது? இல்லை, பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

* கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
* மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
* இரண்டுமே ஒரே தோற்றம்/வளைவு கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி-ன்னு தெரியும்! இருந்தாலும், பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு = கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் = மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது தான் மதி (சந்திரன்) என்று தேறாது! மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் கீழான இச்சை, மேலான நெறி-ன்னு ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது: இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! என் தோழி புனிதா!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு *** சிவன் பாட்டில் இட்டது! ஆனால் திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)

141 comments:

  1. அருமையான படைப்பு கே ஆர் எஸ், இந்தப் படைப்புக்கள் ஏதாவது அச்சு இதழ்களிலும் வந்து பலரையும் சென்றடைய வேண்டும்.

    ReplyDelete
  2. காலால் நடக்காம தலையால் நடந்து போனவங்க இவங்க தானே

    ReplyDelete
  3. //கானா பிரபா said...
    அருமையான படைப்பு கே ஆர் எஸ்//

    நன்றி காபி அண்ணாச்சி!

    //இந்தப் படைப்புக்கள் ஏதாவது அச்சு இதழ்களிலும் வந்து பலரையும் சென்றடைய வேண்டும்//

    :)
    எதுக்கு இப்படி என்னைய திட்டறீங்க?

    ReplyDelete
  4. //சின்ன அம்மிணி said...
    காலால் நடக்காம தலையால் நடந்து போனவங்க இவங்க தானே//

    அவங்களே தான்-கா!
    கயிலை நோக்கித் தலையால் ஊர்ந்து செல்வாங்க என்பது கற்பனை கலந்த கதை! பேய் ஆகிட்டாங்கல்ல? அதனால் தலையால் நடக்க முடியுது!

    சிவபெருமான் அம்மா என்று கனிவுடன் அழைத்து தனது ஊர்த்துவ நடனத்தை ஆலங்காட்டில் காட்டி அருள்வார்!

    ReplyDelete
  5. அருமையான பதிவு,அதுவும் காரைக்கால் அம்மையார் பற்றிய செய்திகள்,மாங்கனி திருவிழா பற்றி படித்ததும் பழைய நினைவுகள் வந்தது அடியேன் ஊர் காரைக்கால்

    ReplyDelete
  6. //* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
    * ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?//

    ஆண்டாள் வேண்டியது என்ன??
    மானிடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!" என்று மன்மதனையே வென்றாள். இந்த அம்மையார் அப்படி ஒன்றும் ஈசனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிச்சதாயும் தெரியலையே?? :P:P:P:P இந்த அம்மையார் மானுடனுடன் திருமணம் செய்து கொண்டு, குடும்பமும் நடத்திய பின்னரே அவரின் புனிதத் தன்மை வெளிப்படும் நேரம் வந்தது. தவிர, அவர் ஒன்றும் ஆண்டாள் போல் திருமணமே வேண்டாம் என ஒதுங்கவில்லையே, சந்தோஷமாய்த் திருமணம் செய்து கொண்டார் தானே? அப்புறம் தானே தெரிந்தது அவரின் அற்புத இறை சக்தி! அது தெரிஞ்சதும் எந்த ஆண் அவளைத் தொடுவான்?? யாராலும் முடியாது!
    கணவன், ஆன்மீகத்தில் திளைத்திருந்தால் கட்டாயம் பெண் உதவி செய்வாள் தான். அவளால் எப்படியும் இருக்க முடியும் என்பதாலேயே. ஆனால் ஒரு ஆணால் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ முடியுமா?? ஏதேனும் ஒரு விதத்தில், அம்மா இல்லை எனில் சகோதரி, மனைவி இல்லை எனில் மகளோ, மருமகளோ, பெண்ணின் துணையோ அருகாமையோ அவங்க கவனிப்போ இல்லாமல் ஆணால் இருப்பது கஷ்டமே. இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :)))))))) ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்.



    //ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?//

    எதுவுமே இல்லை, தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்.

    *// ஆணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!//

    சம்மந்தருக்கும் ஒரு பெண் தான் வந்து ஞானப் பால் கொடுத்து ஞானத்தை ஊட்டினாங்க, இல்லையா??? வயது என்ன தடைனு சொன்னது யாரு? இங்கே அந்தப் பேச்சே இல்லை! நீங்களா நினைச்சுக்கறீங்க! :P:P:P


    //* பெண்ணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?//

    அதனால தான் தன் உண்மை உருவே வேண்டாம்னு பேயுரு எடுத்துட்டாங்க போல! வயதும், இளமையும் இருந்தால் ஆன்மீகத்துக்குத் தடை எந்தக் காலத்திலும் ஆண்களால் இருந்திருக்கு இல்லையா? இது ஒண்ணு மட்டுமே சரி, ஒளவையும் அதான் பாட்டியாகிட்டாங்க, வம்பே இல்லைனு! என்றாலும் ஜெயிச்சாங்க தானே இரண்டு பேருமே!

    புனிதவதியாருக்கு நடந்ததை நான் புரிந்து கொண்ட கோணம் கீழே கொடுக்கிறேன்.


    கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட கணவன், அவரிடம் பயந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயந்தான். பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? இது பெண்ணை அடிமையாகவே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் வழிபட வேண்டிய ஒருத்தியைத் தான் மனைவியாக்கிக் கொண்டு விட்டதால் மனம் பதறியே ஒதுங்குகின்றனர். இதனாலேயே நம் தமிழ் மூதாட்டியான ஒளவையும் இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ???

    வரேன், கல்லெடுத்து அடிக்கிறவங்க அடிக்கட்டும், மெதுவா வந்து வாங்கிக்கறேன். :)))))))))

    ReplyDelete
  7. //ஆண்டாளின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன், புனிதவதியின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்!
    வைணவ இலக்கியத்தின் மொழி, சாதி, பெண்மை, சமூகம் என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!//

    ஹிஹிஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நொ.கு.ச.சா???? சைவக் குடும்பத்தில் பிறந்தாலும், வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் இதை எல்லாம் ரசிக்க மனப்பக்குவம் போதுமே இல்லையா??? ஆண்டாளின் ஆசையே வேறே, புனிதவதியாரின் நோக்கமே வேறே, வெவ்வேறு திக்கில், அல்லது வெவ்வேறு துருவங்களில் உள்ளவர்களை இப்போதைய காலம் வேண்டுமானால் இணைக்கலாம், ஆனால் அடிப்படையே வேறேங்கறப்போ??? யோசிங்க, ஆண்டாளின் எண்ணம் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சரி, அதே போல் புனிதவதியாருக்கு நடந்தது அப்போதைய காலகட்டத்தில் சரியானதே.

    ReplyDelete
  8. //அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை.//

    நினைச்சேன், நடுவிலே சில வரிகள் விடுபட்டிருக்கோனு, அதே போல் ஆயிருக்கு!


    அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். //ஆனால் புனிதவதியார் போன்ற பெண்கள் பவளமல்லிக்குச் சமமானவர்கள். // (இந்த வாக்கியம் விடுபட்டிருக்கு) ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை.

    ReplyDelete
  9. Every thing was excellent My dear Ravi Sankar Knnabiran.

    ReplyDelete
  10. முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))

    ReplyDelete
  11. கீதா மேடம், ரொம்பவே ஆழ்ந்த, ஆணித்தரமான, ஜல்லியடிக்க முடியாத வாதங்களை தந்தமைக்கு வணங்குகிறேன். :)

    *ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))

    ReplyDelete
  12. //இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! //

    தம்மால் மனைவியின் புனிததுக்கு பங்கம் வந்து விட கூடாதுன்னு நினைத்து இருக்கலாம் இல்லையா?

    பாசிடிவா பாருங்க கேஆரேஸ்.

    சந்தான விருத்தி என்பதை கிரஹஸ்ததில் ஒரு அங்கமாக கருதியுள்ளனர். நீங்க பயன்படுத்தி உள்ள சொல்லாடல் ரொம்ப சீப்பா இருக்கு. :(

    ஏதோ இதான் முழு முதல் வேலை என்பது போல. you could have avoided.

    ReplyDelete
  13. சொல்ல போனால் வைஷ்ணவத்தில் எல்லா பெரியவர்களும்(ஜீயர்களும்) (there could be exceptions, i am not sure)
    கிரஹஸ்தத்தில் இருந்து விட்டு தான் சன்யாசத்துக்கு வருகிறார்கள்.

    பதிவு திசை திரும்பும் என்பதால் சொல்ல விரும்பவில்லை,

    இருந்தாலும் ஆண்டாளுடன் ஒப்பிட்டதால் சொல்ல வேண்டியுள்ளது.

    ReplyDelete
  14. மருத்துவ லோகோ பத்தி இப்ப தான் உங்களால் அறிகிறேன்.

    நுண்ணிய தகவலுக்கு நன்னி.

    ReplyDelete
  15. //*ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))//

    @வம்பி, சேச்சே, அம்பி, நீங்க கணேசன் சொல்லியோ எழுதிக் கொடுத்தோ எழுதறாப்போல் நினைச்சீங்களா என்ன?? நறநறநறநறநறநற :P:P:P:P:P

    ReplyDelete
  16. //ambi said...

    முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

    I am also

    ReplyDelete
  17. //RAHAWAJ said...
    அருமையான பதிவு,அதுவும் காரைக்கால் அம்மையார் பற்றிய செய்திகள்,மாங்கனி திருவிழா பற்றி படித்ததும் பழைய நினைவுகள் வந்தது அடியேன் ஊர் காரைக்கால்//

    நன்றி ரஹாவாஜ்! மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து காட்டுவார்களாமே? உண்மையாகவா?

    ReplyDelete
    Replies
    1. //...பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து காட்டுவார்களாமே? உண்மையாகவா?

      உண்மைதான். நான் காரைக்காலில் வளர்ந்தவன்தான்.

      Delete
  18. //கீதா சாம்பசிவம் said...
    ஆண்டாள் வேண்டியது என்ன??
    மானிடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!" என்று மன்மதனையே வென்றாள். இந்த அம்மையார் அப்படி ஒன்றும் ஈசனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிச்சதாயும் தெரியலையே??//

    ரொம்ப சரி கீதாம்மா!
    ஈசனைக் கல்யாணம் பண்ணிக்க பிடிவாதம் பிடிக்கலை தான்! ஆனால் இல்வாழ்க்கை வேண்டாம்-ன்னு பிடிவாதம் பிடிச்சாளா? அப்புறம் எப்படித் தள்ளி வைக்கலாம்? இது தான் கேள்வி!

    //அப்புறம் தானே தெரிந்தது அவரின் அற்புத இறை சக்தி! அது தெரிஞ்சதும் எந்த ஆண் அவளைத் தொடுவான்?? யாராலும் முடியாது!//

    இதைச் சொல்ல உங்களுக்கு எப்படி வாய் வருது?
    சம்பந்தப் பெருமானின் அற்புத இறை சக்தி தெரியாதா? எந்த ஒரு பெண் அவரைத் தொடுவாள்?
    அது தெரிஞ்ச பின்னும், எப்படிக் கல்யாணம் செய்து வைத்தார்கள்?
    சம்பந்தர் ஆண் என்பதால் பரவாயில்லை! இங்கே புனிதவதி பெண்! அதானே தங்கள் நியாயம்?

    //கணவன், ஆன்மீகத்தில் திளைத்திருந்தால் கட்டாயம் பெண் உதவி செய்வாள் தான். அவளால் எப்படியும் இருக்க முடியும் என்பதாலேயே//

    ஓ...அவளால் எப்படியும் இருக்க முடியும்! இதைச் சொல்வது அவளா இல்லை மற்றவர்களா?
    அவனால் எப்படியும் இருக்க முடியாது! அவளால் எப்படியும் இருக்க முடியும்!
    அருமையான நியாயம்! :(

    //இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :))))))))//

    உங்களைத் தவறாகப் பேசும் எந்த பின்னூட்டத்துக்கும் இடம் கொடுக்க மாட்டேன்! வேண்டுமானால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்து வைக்கட்டுமா?

    //ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்//

    ஆணால் தனிச்சி வாழ முடியும்-ன்னு சொல்லவே இல்லையே!
    புனிதவதி அவனுடன் வாழ்கிறேன்-ன்னு தானே சொல்கிறாள்?

    மேலும் அவள் தவறு ஒன்னும் செய்யவில்லையே! அப்படி செஞ்சாலும் அவளுடன் வாழ முடியாது-ன்னு சொல்லலாம்! ஆனால் அவள் புனிதள்! அதனால் வாழ முடியாது என்பதல்லவோ பேசுகிறார்கள்? சம்பந்தர் புனிதர், வாழ முடியாது என்று பேச்சு வரவில்லையே! கல்யாணப் பேச்சுல்ல வந்திச்சி?

    //தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்//

    ஓ...ஏய் இங்க வாடி-ன்னு கூப்பிடத் தான் கல்யாணம் போல! :(

    //சம்மந்தருக்கும் ஒரு பெண் தான் வந்து ஞானப் பால் கொடுத்து ஞானத்தை ஊட்டினாங்க, இல்லையா???//

    சூப்பர்! அந்தப் பெண்ணை அவிங்க புருசன் இந்தக் காரணம் காட்டித் தள்ளி வச்சாரா? சொல்லுங்க!

    //வயது என்ன தடைனு சொன்னது யாரு? இங்கே அந்தப் பேச்சே இல்லை! நீங்களா நினைச்சுக்கறீங்க! :P:P:P//

    நானா எதுவும் நினைச்சிக்கலை கீதாம்மா!
    வயது பற்றிய பேச்சு எதுக்குன்னா, வயதான "புனிதப்" பெண்களைச் சமூகம் ஒன்னும் சொல்லுறதில்லை!
    My question is very straight forward and simple!
    * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
    * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?

    புனிதவதியின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை! அருமையாக ஜெயித்தார்கள்! அதான் நானே சொல்லி உள்ளேனே! அவர்கள் குறியீட்டுக் கவிதையும் காட்டி உள்ளேனே! அப்பறம் எதுக்கு எனக்கே திருப்பிக் காட்டறீங்க, ஜெயிச்சாங்களே, ஜெயிச்சாங்களே-ன்னு?

    கேள்வி அவள் ஜெயித்தது பற்றி இல்லை!
    அவளுக்கு அவள் விருப்பத்தை மீறி நடந்த கொடுமையைப் பற்றி!

    ReplyDelete
  19. //பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம்//

    ஜூப்பரு!
    சம்பந்தர் பவள மல்லிப்பூவா? சாதாரண பிச்சிப் பூவா?
    சொல்லுங்க கீதாம்மா, சொல்லுங்க!

    இறைவனுக்கே சூட வேண்டியவராச்சே சம்பந்தர்! புனிதவதியாச்சும் ஏதோ ஒரு மாம்பழ அற்புதம் தான்! ஆனா சம்பந்தர் பலப்பல அற்புதங்கள் செய்து காட்டியவர் ஆச்சே! அப்புறம் எப்படி இறைவனுக்கே சூட வேண்டியவரை, கல்யாணம் கட்டி வைக்கறாங்க?

    அவர் "புனிதர்"-ன்னு நினைப்பு வந்தா, "ஏங்க, அத்தான்"-ன்னு எப்படி ஒரு பொண்ணு அழைக்க முடியும்? உங்க லாஜிக் தான்! ஆனால் ஆணுக்கும் அதே லாஜிக் தானே? :)

    //அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//

    ஓ...அந்தப் பெண் படைக்கப்பட்டதின் நோக்கம் இப்போ தான் உங்களுக்குத் தெரியுது! அதுவும் அவள் சாதித்துக் காட்டிய பின்னால்! ஆனால் அப்போ, அவனுக்கும், அவன் சார்பாகப் பேசிய சமூகத்துக்கும் இந்த நோக்கம் தெரியுமா? அவள் ஈசனைப் பாடப் பிறந்தவள்-ன்னு தெரியுமா? அவள் பேய் ஆவதற்கு முன் ஒரு கவிதை, ஒரு பதிகம் கூட எழுதியதில்லை! சாதாரண பக்தை! அவ்ளோ தான்!

    நோக்கம் தெரிஞ்சா நல்லபடியாப் பிரிச்சி விட்டிருப்பாங்களே! எதுக்கு ஆதரவு ஒன்றும் கொடுக்காமல் ஒதுங்கிப் போகணும்? அவளைத் தனித்து விடணும்? பேய் மகளிர் ஆக்கணும்?

    தன்னைப் போலப் பேய் மகளிரின் நிலை பற்றி அம்மை எழுதிய பதிகங்களைப் படிச்சிப் பாருங்க! சமூக அவலம் தெரியும்! வெறுமனே புனிதப் பூச்சுகள் உதவாது!

    ReplyDelete
  20. //அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//

    * அவள் விருப்பத்துக்கு மாறாக மறுக்கும் உரிமை யாருக்கு இருக்கு? எப்படி மறுக்கலாம்? என்ன நியாயம் இது?
    * அவள் படைக்கப்பட்ட நோக்கத்தைத் தீர்மானிப்பது யார்? அவளா? இல்லை இவர்களா?
    * சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?

    Can someone give plain answers to this?


    //புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள்//

    புனிதத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாகவே அடியேன் இருந்து விட்டுப் போகிறேன் பரவயில்லை!
    ஆனால் புனிதத்தின் அர்த்தத்தை முழுதும் புரிந்து கொண்டவர்கள், மேற்சொன்ன கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்!

    ReplyDelete
  21. //Mani Pandi said...
    Every thing was excellent My dear Ravi Sankar Knnabiran//

    ஆகா, நன்றிங்க மணி பாண்டி! :)

    ReplyDelete
  22. //ambi said...
    முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

    இந்த அதிசய ஒற்றுமைக்குக் காரணமான கேஆரெஸ் என்னும் சிறுவனை மனம் குளிரப் பாராட்டுகிறேன்! :)

    ReplyDelete
  23. // ambi said...
    கீதா மேடம், ரொம்பவே ஆழ்ந்த, ஆணித்தரமான, ஜல்லியடிக்க முடியாத வாதங்களை தந்தமைக்கு வணங்குகிறேன். :)//

    ஹா ஹா ஹா!
    ஆணித் தரமான வாதம் = "ஆணி" என்பது உ.கு இல்லை தானே அம்பி?

    //*ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))//

    ஆணித்தரமான வாதம் தான் ஆணி அடிக்கப்பட்டு விட்டதே! :)
    இதுல இருந்தே தெரியலையா, இது சாம்பு மாமா அவர்களின் வாதம் அல்ல என்று! :)

    ReplyDelete
  24. அய்யோ நிஜம்மாவே பாதி படிக்கும்போதே உங்கள் கேள்விகளை படிச்சிட்டு கன்ணில் நீ ர் கட்டிடிடுச்சு.. அப்பறம் பார்த்தா நீங்களே எழுதி இருக்கீங்க கண்ணீர் வரும்ன்னு..

    பின்னூட்டத்தில் நீங்க நிற்கும் பக்கம் தான் நானும்.. கணவரோட வாழ விரும்பிய பெண்ணை தள்ளிவைப்பது நியாயமில்லை. என்னதான் புனிதம் அது இது என்றாலும்.. ஒரு பெண்ணுக்கு அநீதி தான் என்பதில் ஐயமில்லை.. அப்படித்தான் புனிதம் என்று கடவுள் படைத்து பிரித்து வைப்பாரா என்ன.. ? :((

    ReplyDelete
  25. //ambi said...
    தம்மால் மனைவியின் புனிததுக்கு பங்கம் வந்து விட கூடாதுன்னு நினைத்து இருக்கலாம் இல்லையா?//

    இதுக்குப் பதில் சொல்லியாச்சு அம்பி!
    இல்வாழ்க்கையில் சாதாரண பக்தி, ஒருவரின் புனிதத்துக்கு, பங்கம் உண்டாக்கி விடாது!
    எ.கா = சம்பந்தப் பெருமான், திருமங்கை ஆழ்வார், சுந்தரமூர்த்தி நாயனார்...இன்னும் பலர்

    //பாசிடிவா பாருங்க கேஆரேஸ்//

    :)
    ஆண்களுக்கும் இதே நியாயம் தான். அதைப் பாசிடிவா பாருங்கன்னு தான் நானும் கேட்டுக் கொள்கிறேன்!

    //சந்தான விருத்தி என்பதை கிரஹஸ்ததில் ஒரு அங்கமாக கருதியுள்ளனர். நீங்க பயன்படுத்தி உள்ள சொல்லாடல் ரொம்ப சீப்பா இருக்கு. :(
    ஏதோ இதான் முழு முதல் வேலை என்பது போல. you could have avoided//

    Pardon me if it had sounded cheap! I could have avoided in the context of punitham, but didnt want to!
    எது உறுத்த வேண்டுமோ அது உறுத்தாமால் தங்களுக்கு இதுவே உறுத்தலாய்ப் படுகிறது! ஏன் என்றால் பார்வை அங்கே "மட்டும்" பதிந்து விட்டது!

    இங்கே இது தான் முழு முதல் வேலை என்றா சொல்லி இருக்கேன்? சரியாகப் படித்துப் பாருங்கள்! யோகம், சரியை என்ற முதற் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு என்று தானே சொல்லி இருக்கேன்!

    சந்தான விருத்தி கிருஹஸ்தத்தில் முக்கியமான, புனிதமான கடமையும் கூட! அதைத் தவறாகச் சொல்லவில்லையே! அதைச் செய்ய அவனுக்கு இருக்கும் அதே கடமை அல்லவா மனைவிக்கும் இருக்கு? அதைத் தானே சொல்லி இருந்தேன்!

    இத்தனை பெரிய பதிவில், ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்ளாமல், சைவ/வைணவ பேதக் கணக்குகள் போடாமல், அவரை/இவரை மனசில் வச்சி எழுதி இருப்பாரோ என்று சிறுபிள்ளைத்தனமாக எண்ணாமல்...
    I invite you to see it in a wider context. positive-aa paarunga ambi!

    (பி.கு:
    பொன்னாச்சியைத் தள்ளி வைக்க வில்லிதாசன் முடிவு கட்டிய போதும், அதையும் மறைக்காமல், அப்படியே தான் எழுதினேன்! அவனுக்குத் தான் ஆணவம், அவளுக்கு இல்லை என்றும் சொன்னேன்! இங்கு பேதக் கணக்குகள் கிடையாது)

    ReplyDelete
  26. //கீதா சாம்பசிவம் said...
    ஹிஹிஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நொ.கு.ச.சா????//

    நொ.கு.ச.சா = அப்படின்னா என்ன கீதாம்மா? தலைவி தான்! அதுக்காக CBI கோட் வோர்ட் மாதிரியே பேசறீங்களே! :)

    //சைவக் குடும்பத்தில் பிறந்தாலும், வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் இதை எல்லாம் ரசிக்க மனப்பக்குவம் போதுமே இல்லையா???//

    புனிதளாய் இருந்தாலும், அது பாட்டுக்கு அது, இல்லறக் கடமைக்கு இது என்று ரசிக்கவும் கொஞ்சம் மனப்பக்குவம் போதுமே இல்லையா?

    //ஆண்டாளின் ஆசையே வேறே, புனிதவதியாரின் நோக்கமே வேறே,...வேறேங்கறப்போ??? யோசிங்க//

    ஹிஹி!
    ஆண்டாளின் "லூசுத்தனமான" ஆசையையே நிறைவேற்றிக் கொடுக்கப்படும் போது...
    புனிதவதியின் நோக்கம் வெரி வெரி சிம்பிள்! She wanted to be an ideal & devout house wife! Can she not?

    அவள் நோக்கம் அதுவாய் இருக்கக் கூடாது, இதுவாய்த் தான் இருக்கணும், இன்னும் நிறைய பாட்டு எழுதணும், அதுக்கு அவளை விட்டொழிச்சாத் தான் சரி, அவள் பேய் மகளிர் ஆவட்டும் என்று தீர்மானிப்பது யார்? அவளா இல்லை...இவர்களா?

    அவ நல்லபடியா பாட்டெழுதி, சிவத் தொண்டு செய்யணும்-னு தான் பரமதத்தனும் மற்றவர்களும் அவளைப் புறம் தள்ளினார்களா?
    சுய நலம் இன்றி, சிவ நலம் கருதித் தான் அப்படிச் செஞ்சாங்க போல! ஆகா! ஆகா!

    ReplyDelete
  27. // Mani Pandi said...
    //முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

    I am also//

    ஹா ஹா ஹா! மணிபாண்டி, நீங்களுமா? கீதாம்மாவின் வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைத்துள்ளேன்! கீதாம்மாவைக் காத்திடக் களம் இறங்குங்கள்! :)

    ReplyDelete
  28. சிவன் பாட்டுப் பதிவில் வந்த பின்னூட்டங்களும் சில ஆழமான விவாதங்கள் என்பதால்...இங்கும் பதிக்கிறேன்!

    Kailashi said...
    //தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!//

    பதிகத்திற்க்கும் முன்னோடி அம்மையார்தான்.

    கணவன் அம்மையாரை கைவிட்டாலும், ஆண்டவன் கைவிடவில்லை, என்றும் ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா. பதஞ்சல்லி வலப்புறம் நடுவில் அம்மையார் இடப்புறம் வியாக்ரபாதர் எப்போதும் நித்யமாக ஐயனின் பாதத்தில் நின்றுள்ளனரே.

    கார்த்திகை சோமவார வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Kailashi said...
    கணவன் அம்மையாரை கைவிட்டாலும்//

    கணவன் மட்டுமல்ல,
    அவர்கள் மொத்த சமூகமே அம்மையாரைக் கைவிட்டது என்பது தான் அடியேன் வருத்தம்!

    //ஆண்டவன் கைவிடவில்லை//

    இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!

    //ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா//

    மிகவும் உயர்ந்த பேறு தான் கைலாஷி ஐயா! அதை மறுக்கவில்லை!

    சம்பந்தர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் என்று மற்ற பலரும் குடும்ப சகிதமாகத் தாளம் போட, அதற்கும் தானே ஐயன் ஆடுகிறான்?

    ஈசன் திருவடி நீழலில் அம்மைக்கு என்றுமே இடம் உண்டு!
    நான் சுட்டிக் காட்ட விரும்பியது சமூகத்தின் போலி பக்தியின் தன்மையை மட்டுமே!

    கார்த்திகைச் சோமவாரம் என்று தான் இப்பதிவை இட்டேன்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

    ReplyDelete
  30. Kailashi said...
    //இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!//

    கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது, நடுவில் வரும் கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரன், மக்கள் என்னும் எல்லா உறவும் மாயைதான் என்று எடுத்துக்கொண்டால் சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?

    November 17, 2008 10:07 AM


    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Kailashi said...
    கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது...
    சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?//

    புனிதவதியின் கர்ம வினையாக அது இருக்கலாம்! ஆனால் அதையே காரணமாகச் சொல்லி, அந்தச் சமூகம் தப்பித்துக் கொள்ள முடியாது.

    இங்கே இரு பார்வைகள்
    * புனிதவதியின் கர்ம வினை - அது ஆன்மீகப் பார்வை
    * பெண்களின் ஆன்மீகத் தன்மை - இது சமூகப் பார்வை!

    கணவனின் புனிதத் தன்மையை மதிக்கும் சமூகம், மனைவியின் புனிதத் தன்மையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மனைவி தன்னை விட புனிதளாக இருந்தால், அவளைக் கும்பிட்டு ஓடி விடும் எஸ்கேபிசம் கூடாது என்பது தான் சொல்ல வந்தேன்!

    November 17, 2008 11:53 AM

    ReplyDelete
  31. குமரன் (Kumaran) said...
    முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி. நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே.

    November 18, 2008 4:43 PM


    கவிநயா said...
    நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம். நன்றி.

    November 18, 2008 9:35 PM


    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    // குமரன் (Kumaran) said...
    முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி//

    மெளலி அண்ணா காரைக்கால் அம்மையார் ஜெயந்தியின் போது போட்ட பதிவில், கொஞ்சம் பாடல்களைப் போட்டிருந்தார்-ன்னு நினைக்கிறேன்!

    //நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே//

    அரவின் பெயர் தெரியுமா குமரன்? வாசுகி, அனந்தன், ஆதிசேடன் என்பது போல் ஏதாச்சும் பேரு இருக்கா?

    November 18, 2008 10:41 PM


    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கவிநயா said...
    நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம்//

    நன்றிக்கா!
    ஆமாம் மதி "ஒன்று"படாத மனிதா தான்! :)

    ReplyDelete
  32. குமரன் (Kumaran) said...
    நீங்கள் மீண்டும் கேட்ட பின் கூகிளாண்டவரைக் கேட்டேன். அவர் சொன்னது:

    காதுகளில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: பத்மன், பிங்களன்
    தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்
    கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்
    இடுப்பைச் சுற்றிய அரவின் பெயர்: நீலன்.

    கழுத்தைச் சுற்றும் அரவின் பெயரை அந்தப் பக்கம் சொல்லவில்லை. மேலே உள்ள தகவல் வாமன புராணத்தில் இருப்பதாக அந்தப் பக்கம் சொல்கிறது.

    http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-Shiva.htm

    November 19, 2008 6:37 AM


    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்//

    சூப்பர்! இதுக்குத் தான் குமரன் வேணும்ங்கிறது!
    சைவச் செம்மல் குமரன் வாழ்க! வாழ்க! :)

    நன்றி குமரன்! தோளில் என்பதைக் கழுத்தில் என்றும் கொள்ளலாம்-ன்னு நினைக்கிறேன்!

    //கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்//

    இதே தக்ஷகன் பெயர் கொண்ட பாம்பு தானே பரீட்சித்தையும் தீண்டும்?

    November 19, 2008 10:08 AM

    ReplyDelete
  33. //ambi said...
    சொல்ல போனால் வைஷ்ணவத்தில் எல்லா பெரியவர்களும்(ஜீயர்களும்) (there could be exceptions, i am not sure)
    கிரஹஸ்தத்தில் இருந்து விட்டு தான் சன்யாசத்துக்கு வருகிறார்கள்//

    உண்மை! நிராதரவாகவோ இல்லை சம்மதம் பெறாமலோ வந்தால் தவறு தான்! அதையும் எழுதுவேன்! அப்படித் தான் அவர்கள் செய்கிறார்கள் என்று அறிவீர்களா? அறியத் தருவீர்களா?

    இங்கு பேசப்படுவது என்ன?
    இளம் பெண்கள் ஆன்மீகத்தில் திகழ்ந்தால்,அவர்களை ஆண்கள் புனிதப் பட்டம் கொடுத்து தள்ளி வைப்பதா? இது என்ன நியாயம் என்பது தான் பேச்சு!

    இதே காரைக்கால் அம்மையார் துறவு பூண்டிருந்தால் பிரச்சனையே இல்லை! அவர் ஒரு சாதாரண இல்வாழ்க்கை பக்தர்!
    அம்மையார் விரும்பியது இல்வாழ்க்கையையே! ஆனால் பரமதத்தனும் சமூகமும் அவளைப் புனிதள் என்பதால் தள்ளியது! அது தான் பிரச்சனை!

    நீங்கள் சொன்ன ஜீயர்களின் நிலை என்ன? புனிதர் என்ற காரணத்தால் அவர்களில் யாரும் தள்ளி வைக்கப்படுவதில்லை! பல காலம் "புனிதர்களாக" இல்லறத்தில் இருந்து, முதிர்ந்த வயதில் துறவறம் பூணும் போது, சம்மதமும் பெற்று வருகிறார்கள்! இங்கு தள்ளி வைத்தல் இல்லை! அப்படி இருந்தால் சொல்லுங்கள்! தயங்காமல் சபையில் முன் வைக்கிறேன்!

    //பதிவு திசை திரும்பும் என்பதால் சொல்ல விரும்பவில்லை,
    இருந்தாலும் ஆண்டாளுடன் ஒப்பிட்டதால் சொல்ல வேண்டியுள்ளது.//

    ஹா ஹா ஹா!
    திசை திரும்பினாலும் பரவாயில்லை அம்பி.
    ஒன்னும் சொல்வதற்கு முன்னரே பல கும்மிகள் நடக்கும் போது, இதற்கு நடக்கும்-னு எனக்குத் தெரியாதா என்ன? :)

    இந்தப் புறம் தள்ளிய கொடுமை உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. சைவ/வைணவ பேதம் தானா இதில் தெரிகிறது? என்னால் ரங்கராஜ நம்பி போலிக் கற்பனைப் பாத்திரம் என்றும் துணிந்து எழுத முடியும்!பேதமில்லை!

    ReplyDelete
  34. //ambi said...
    மருத்துவ லோகோ பத்தி இப்ப தான் உங்களால் அறிகிறேன்.
    நுண்ணிய தகவலுக்கு நன்னி//

    இதைப் புரிந்து கொள்ளும் நீங்கள்
    இதற்கு விநாயகர் அகவலை எடுத்துக்காட்டாய் தந்ததைப் புரிந்து கொள்ளும் நீங்கள்...

    இது சைவ பேதம் என்றோ, இல்லை கிருஹஸ்தாஸ்ரம தர்மத்துக்கு மாறானது என்றோ, கர்ம நிஷ்டானுஷ்டானங்களுக்கு எதிரானது என்றோ தவறாகவும் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  35. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    அய்யோ நிஜம்மாவே பாதி படிக்கும்போதே உங்கள் கேள்விகளை படிச்சிட்டு கன்ணில் நீ ர் கட்டிடிடுச்சு.. அப்பறம் பார்த்தா நீங்களே எழுதி இருக்கீங்க கண்ணீர் வரும்ன்னு..//

    இன்னும் அந்தப் பதிகம் எல்லாம் இங்கிட்டு கொடுக்கலை முத்தக்கா!
    கொடுத்தா எனக்கு முத்திரையே குத்திருவாங்க! :)

    //பின்னூட்டத்தில் நீங்க நிற்கும் பக்கம் தான் நானும்.. கணவரோட வாழ விரும்பிய பெண்ணை தள்ளிவைப்பது நியாயமில்லை//

    நன்றிக்கா! சரியான புரிதலுக்கு!

    //அப்படித்தான் புனிதம் என்று கடவுள் படைத்து பிரித்து வைப்பாரா என்ன.. ? :(( //

    இல்லக்கா! சிவபெருமான், பிணக்கு கொண்ட கணவன்-மனைவியை (திருநீலகண்டர்) கூடச் சேர்த்து தான் வச்சாரு!

    ஈசன் வரப் ப்ரசாதி! பக்த கோலாகலன்! கருணை அதிகம்! ஆனால் அவர் பேரைச் சொல்பவர்கள்?

    திருநீலகண்டர் ஆண்! அவர் புனிதர் என்றாலும் அவர் மனைவி அவருடன் சேர்ந்துகிட்டாங்க!
    இங்க புனிதவதி பெண்! ஈசனே வந்து சொல்லியிருந்தாலும், சேத்து வச்சிருப்பாங்களோ என்னவோ? சிவநலத்தை விடச் சுயநலம் தானே பெரிது! :(

    ReplyDelete
  36. அடியேனின் சிறு கருத்து.

    ஆண்டாளுக்கும் , அம்மையாருக்கும் ஒப்பு நோக்குதல் சிறிதே இடறுகிறது.

    ஆண்டாள், தாயாரின் அவதாரமாகவே பிறந்தவள்.மானிடருக்கென்னு பேச்சுப் படில் வாழகில்லேன் என்று சபதமிட்டு வாழ்ந்து , வென்று காட்டியவள்.

    திலகவதி அம்மையார், சிவனாரின் அருள் கிடைக்குமுன்பே,சம்ஸார சாகரத்தில்,மூழ்கி விட்டவர்.

    தவிரவும் , இருவரும் வாழ்ந்த , கால தேஸ , வர்த்த மானங்கள் எல்லாம் , முற்றிலும் வேறு
    பட்டவை.

    ஆண்டாளிடம், இறைவன் மீதான் காதல் நெறி மற்றும் பக்தி நெறி மிகவும் அதிகம். அம்மையாருக்கு பக்தி நெறி மட்டுமே அதிகம் இருந்தது.

    கீதா அம்மா அவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் , சரியாகவே உள்ளன.

    ஆனால் அதே நேரத்தில் , கே ஆர் எஸ் அவர்களின் உள்ளக் குமுரலும் சரி தான். ஆண்டாள் காலத்தில், பெண்களுக்கு சம உரிமை, அல்லது ஆண்களைக் காட்டிலும், மேலான உரிமை இருந்து இருக்கலாம்.(அதுனால தான் திருப்பாவைக்கு ரொம்ப முக்கியத்துவம் தராங்களோ?

    பெண்கள் மிகக்குறைவாகவே சாமியாராக வருகிறார்கள்.ஒரு வேளை பெண்களை வணங்கக்கூடாது எனும் , உணர்வு அதிகம் இருந்திருக்கலாம்.

    சிவனாரின் திருவிளையாடல் மட்டுமே இங்கு முக்கியம் . அதனால் சில நிகழ்வுகள், நமது யதார்த்த சிந்தனைக்கு அப்பாற் பட்டு நிகழ்கின்றன.

    திலகவதியாரின் இறைத்தன்மை கண்டு, அவளது கணவன் பயப்பட்டது போல், ஆண்டாளின் இறைக்காதலை நினைத்து, பெரியாழ்வாரும் ஒரு நிலையில், மனக்கலக்கம் , அடைந்தார்.
    ஆனால், ஆண்டாளின் மன உறுதியே வென்றது..

    அம்மையார் விஷயத்தில், அவரது கணவரின் பயமே வென்றது.

    திருமங்கை ஆழ்வார், இறை தரிசனம் கண்ட பின்னும், குமுத வல்லியுடன் இணைந்தே, இறைப்பணி ஆற்றினார்.
    அதே போல், அம்மையாருடன் , இணைந்தே, இறைப் பணியை அவரது கணவர் ஆற்றி இருக்கலாம் என்பது கே ஆர் எஸ் போன்ற, உயர்ந்தோர்களின் கருத்தாக இருக்கலாம்.

    ReplyDelete
  37. அன்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே அம்மையாரைத் தாழ்த்தியோ, சைவ நெறியைத் தாழ்த்தியோ, இல்லை முக்கண் முதல்வனை எள்ளியோ, ஏதாச்சும் வாசகம் இருக்கா-ன்னு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    இது வரை அம்மையாரின் மாறுபட்ட Icon Poetry பற்றி சைவ அன்பர்கள் யாராவது வெளிக் கொணர்ந்தீர்களா? அடியேன் அதையும் இங்கு கொணர்ந்து வைத்துள்ளேனே!

    அம்மையின் DH Lawrence-க்கு ஈடான கவிச் சிறப்பு பற்றி யாரேனும் ஏதேனும் பேசினீர்களா? அதை விடுத்து, புனிதவதிக்கு இல்வாழ்க்கை மறுக்கப்பட்டது சரி என்று தானே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?

    தமிழ்ப் பெண்மணி பாடிய பதிகத்தைப் பற்றித் திறனாயும் பதிவு! அதில், என்னளவில் ஏற்பட்ட மாற்றத்தையும் குறித்துச் சென்றேன்! அவ்வளவு தான்! அம்மையின் வரலாற்றைத் திரித்தோ/மாற்றியோ எழுதவில்லை! இன்னொரு பார்வையைக் காட்டினேன் அவ்வளவே!

    பரமதத்தனையும் அவனின் அன்றைய சமூகத்தையும் தான் குறை கூறினேன்! இன்றும் மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனை படகு ஏற்றி விட்டுத் தான் வருகிறார்கள்:(

    ஆண்டாளை ஒப்புமை காட்டுவது, ஒரு பெண் என்கிற முறையில் தான்! பெண்ணின் துணிவு என்கிற முறையில் தான்! இரு பெண் கவிஞர்கள் என்கிற முறையில் தான்!
    அப்படிக் காட்டுவது இலக்கிய வழக்கு!


    அப்படியெல்லாம் செய்யக் கூடாது, வந்தோமா, கதா காலட்சேபம் சொன்னோமா, போனோமா-ன்னு இருக்கணும் என்று சொல்லுதல் யார்க்குமே அழகல்ல!

    மீராவையும் ஆண்டாளையும் ஒப்புமை காட்டிப் பல இலக்கிய இதழ்கள் வந்துள்ளன! நான் மீராவை எழுதினால், அப்போதும் ஆண்டாளின் துணிவு, மீராவுக்கு ஏன் இல்லாமற் போனது என்று தான் எழுதுவேன்! இதை எப்போதுமே அடித்து அடித்துப் பழக்கப்பட்ட சைவ/வைணவ ஜல்லியின் கண் கொண்டு பார்த்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை! :(

    ReplyDelete
  38. //paravasthu said...
    அடியேனின் சிறு கருத்து//

    வாங்க சுந்தர் அண்ணா!

    //தவிரவும் , இருவரும் வாழ்ந்த , கால தேஸ , வர்த்த மானங்கள் எல்லாம் , முற்றிலும் வேறு
    பட்டவை//

    அம்மையாருக்கு இரு நூற்றாண்டுக்குப் பிந்தியவள் ஆண்டாள்! அவ்வளவு தான்! ஒன்னும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை!

    //ஆண்டாளிடம், இறைவன் மீதான் காதல் நெறி மற்றும் பக்தி நெறி மிகவும் அதிகம். அம்மையாருக்கு பக்தி நெறி மட்டுமே அதிகம் இருந்தது.//

    உண்மை! அதெல்லாம் ஒன்னுமே சொல்லலையே! இங்கு பேசுவது வெறும் துணிவும், அந்தத் துணிவிற்கு சமூகத்தின் ஆதரவும்! அவ்வளவு தானே!

    அது இறைவனைக் காதலித்தாளோ, மனிதனை மணந்தாளோ, அவதாரமோ, இல்லையோ, எல்லாம் அடுத்த கதை! இரு பெரும் பெண் கவிஞர்கள்! சமூகம் அவர்கள் துணிவை எப்படி எதிர்கொண்டது? = இது தான் புலனம்!

    //அல்லது ஆண்களைக் காட்டிலும், மேலான உரிமை இருந்து இருக்கலாம்.(அதுனால தான் திருப்பாவைக்கு ரொம்ப முக்கியத்துவம் தராங்களோ?//

    இதற்கு தக்கவர்களே வந்து பதில் சொல்லட்டும்!

    //பெண்கள் மிகக் குறைவாகவே சாமியாராக வருகிறார்கள். ஒரு வேளை பெண்களை வணங்கக்கூடாது எனும் , உணர்வு அதிகம் இருந்திருக்கலாம்//

    சாமியாராக எல்லாம் வரச் சொல்லலை! அந்த லெவலுக்கே போக வேணாம்! ஒரு சாதாரண பக்தை, கவிஞர், இறையருள் பெற்ற பெண்!-அது தான் பேச்சு!

    //திலகவதியாரின் இறைத்தன்மை கண்டு, அவளது கணவன் பயப்பட்டது போல், ஆண்டாளின் இறைக்காதலை நினைத்து, பெரியாழ்வாரும் ஒரு நிலையில், மனக்கலக்கம் , அடைந்தார்//

    ஆனால் மகளைக் கை விட்டாரா? பேயாய் அலைந்தாளா? சமூகம் அவளை விரட்டியதா?

    //ஆனால், ஆண்டாளின் மன உறுதியே வென்றது..
    அம்மையார் விஷயத்தில், அவரது கணவரின் பயமே வென்றது//

    அது தான் நானும் சொல்லி உள்ளேன்! ஏன் இப்படி என்றும் கேட்டுள்ளேன்! என் கேள்வி சமூகத்தை நோக்கி மட்டுமே!

    சம்பந்தர் இறைப்பணிக்கே பிறந்தவர்! அற்புதங்கள் செய்தவர்! அது தெரிந்தே தானே, பிற்பாடு அவருக்குத் திருமணம் நடத்தி வைத்தார்கள்? கீதாம்மா சொல்லும் இறைப்பணிக்காக அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது என்ற வாதத்தில் கிஞ்சித்தும் நியாயம் இல்லை!

    பரமதத்தனுக்குப் பிடிக்கலை, அது, இது-ன்னு வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள்! பெண் ஆன்மீகத்தில் இருப்பவள்! அதனால் தான் என்று சொத்தையான காரணத்தை மட்டும் சொல்லாதீர்கள்!

    //அதே போல், அம்மையாருடன் , இணைந்தே, இறைப் பணியை அவரது கணவர் ஆற்றி இருக்கலாம் என்பது கே ஆர் எஸ் போன்ற, உயர்ந்தோர்களின் கருத்தாக இருக்கலாம்//

    ஹைய்யோ! உயர்ந்தோரா? அண்ணே I am just 5ft 11" :)

    கணவன் அவளை விட்டிருந்தாலும், சமூகம் அவளைக் காக்க முயற்சி எடுத்திருக்கணும்! பேயாய் அலைய விட்டிருக்கக் கூடாது என்பது தான் அடியேன் ஆதங்கம்!

    என் கேள்வி சமூகத்தை நோக்கி மட்டுமே!
    ஒருத்தராவது, "உமையவள் ஈசனுக்கு இருப்பது போல், இவள் மனை வாழ்க்கையில் இருக்கலாமே-ப்பா" என்று பரமதத்தனுக்கு எடுத்துச் சொன்னார்களா? இல்லையே! அத்தனை பேரும் புனிதப் பூச்சு அல்லவா அவளுக்குப் பூசினார்கள்? பூசியது தான் பூசினார்கள்! அவளைப் போஷித்தார்களா? ஆசிரமம் அமைத்துக் கொடுப்பது தானே? சம்பந்தரைப் போல் முத்துப் பந்தல் கொடுப்பது தானே?

    ஒரு பச்சிளம் பெண், சைவக் கொழுந்து, பேயாய்ப் போனது தான் மிச்சம்! அதற்கு இன்னும் நாம சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்! மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனைப் படகு ஏத்தி விட்டு வருகிறோம்! வெட்கம்! :(

    ReplyDelete
  39. ஆமாம்,முன்பு 10நாட்களுக்கு மேல் திருவிழா கானூம் தற்ப்போது பொருளாதாரத்தினால் நாட்க்கள் குறைந்து விட்டது

    ReplyDelete
  40. நல்ல உரையாடல். எல்லா பின்னூட்டங்களையும் இப்போது தான் படித்தேன்.

    ReplyDelete
  41. பெண் என்ற வகையில் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பேசும் போது தஞ்சமாம்பாளும் நினைவிற்கு வருகிறார்கள். இக்கால நியாயங்களின் படி உடையவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

    ReplyDelete
  42. //குமரன் (Kumaran) said...
    நல்ல உரையாடல். எல்லா பின்னூட்டங்களையும் இப்போது தான் படித்தேன்//

    :)
    நன்றி குமரன்! எல்லாப் பின்னூட்டங்களையும் படித்த பின், என்ன தோன்றுகிறது? :)

    ReplyDelete
  43. //குமரன் (Kumaran) said...
    பெண் என்ற வகையில் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பேசும் போது தஞ்சமாம்பாளும் நினைவிற்கு வருகிறார்கள்//

    மிகவும் சரியான நினைவு தான்! வருவதில் தவறே அல்ல! :)

    //இக்கால நியாயங்களின் படி உடையவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே//

    உடையவர் என்ன செய்தார்?
    தஞ்சமாம்பாள் என்ன செய்தார்கள்?
    யார் யாருக்கு அநீதி இழைத்தார்கள்?
    சொல்லாமல் கொள்ளாமல் சுயநலமாய் வெளியூர் ஓடி, யார் புதிதாக மணமுடித்து வந்தார்கள்?
    புனிதர் ஆகி விட்டதாலேயே, வாழத் தகாது என்று மறுப்புச் சொன்னது யார்?
    "ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற பயத்தினால் மட்டுமே தள்ளி வைத்தது யார்?

    முடிந்தால் தனிப் பதிவாகவே இடுங்களேன் குமரன்!
    இங்கு பல பேருக்கு நீங்கள் சொல்வது தெரிந்திருக்க இயலாது-ன்னே நினைக்கிறேன்! அதனால் தனியாகப் பதிவிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும் அல்லவா?

    அது யாராயினும் சரி, அடியேனுக்கு ஒன்று தான்!
    பெரியோரை வியத்தலும் இலமே!
    சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே! :)

    ReplyDelete
  44. //RAHAWAJ said...
    ஆமாம்,முன்பு 10 நாட்களுக்கு மேல் திருவிழா கானூம் தற்ப்போது பொருளாதாரத்தினால் நாட்க்கள் குறைந்து விட்டது//

    உம்...அப்படியா ரஹாவாஜ்?
    வெள்ளை சார்த்துதல் எல்லாம் இன்றும் உண்டு-ன்னு தான் நினைக்கிறேன்!
    அம்மையார் கையால் உணவு படைப்பது போல் இருக்கும்! அன்னதானம் நடைபெறுகிறது அல்லவா? அது ஒன்றே போதும்! மிகவும் நன்று!

    ReplyDelete
  45. @குமரன்
    இங்கே சமூகத்தின் பார்வை பற்றிப் பேசுவதால்...

    அப்படியே தஞ்சமாம்பாளைச் சமூகம் ஆதரவு காட்டவில்லையா? அவர்கள் நியாயம் கேட்கப்படாமலேயே, சமூகம் அவர்களை விரட்டிற்றா? ஆதரவின்றி அவர்கள் உள்ளம் நொந்தார்களா? பேய் ஆனார்களா? என்பதையும் உரைத்திடுங்கள்!

    இன்னும் ராகவேந்திர சுவாமிகள் வேறு உள்ளார்! அருணகிரியார் உள்ளார்! இவர்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்! இவர்கள் எல்லாம் சுயநலத்திற்காகவோ, புனிதக் காரணங்களுக்காகவோ மட்டும், அபலைகளை ஆதரவு காட்டாமல் தள்ளி வைத்திருந்தால் நிச்சயம் அது தவறு தான்!

    ReplyDelete
  46. கே ஆரெஸ் , இந்த பதிவைப்பத்தி அப்பாகிட்ட பேசிட்டிருந்தேன். அவர் சொன்னார் காரைக்காலம்மையார் பாடினது தேவாரம்னு சொல்லறதில்லை. திருமுறைன்னு தான் சொல்லறதுன்னு. மூவர் தேவாரம்னுதான் சொல்வாங்க. அந்த மூவர் யாருன்னு உங்களுக்கே தெரியுமே.

    ReplyDelete
  47. //சின்ன அம்மிணி said...
    கே ஆரெஸ் , இந்த பதிவைப்பத்தி அப்பாகிட்ட பேசிட்டிருந்தேன். அவர் சொன்னார் காரைக்காலம்மையார் பாடினது தேவாரம்னு சொல்லறதில்லை. திருமுறைன்னு தான் சொல்லறதுன்னு//

    ஆகா! அப்பா கிட்ட பேசனீங்களா? சூப்பர்-க்கா! என்ன சொன்னார்? அவருக்கு என் நன்றி சொல்லுங்க, தகவலுக்கு!

    அவர் சொல்வது உண்மை தான்! தேவாரம்-ன்னு ஒரு பொதுப் பெயர் இப்போ தான் புழக்கத்தில் எல்லாத்துக்கு வந்திரிச்சி! ஆனா மொத்தம் பன்னிரு திருமுறைகள்!

    அம்மையார் பாடியது பதினோராம் திருமுறையில் இருக்கு! அதற்கு பிரபந்தம்-னு பேரு!
    இதில் அம்மையார் மட்டும் இல்லாமல் நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள், நக்கீரர், பட்டினத்தார்-ன்னு இன்னும் பல பேரின் நூல்களும் இருக்கு!

    //மூவர் தேவாரம்னுதான் சொல்வாங்க. அந்த மூவர் யாருன்னு உங்களுக்கே தெரியுமே//

    ஹிஹி!
    சம்பந்தர், அப்பர், சுந்தரர் தானே-க்கா?

    இன்னொன்னு தெரியுமா-க்கா?
    அப்பர் சுவாமிகள் செய்தது மட்டும் தான் தேவாரம்-ன்னு முதலில் குறிக்கும் வழக்கம்!
    அப்புறம் அது மூவருக்கும் பொதுவாகி, இப்போ பன்னிரு திருமுறைக்கும் பொதுப்பெயர் ஆகி விட்டது! :)

    திருமுறை
    1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
    4,5,6=தேவாரம்(அப்பர்)
    7=திருப்பாட்டு(சுந்தரர்)
    8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
    9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
    10=திருமந்திரம்(திருமூலர்)
    11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
    12=பெரிய புராணம்(சேக்கிழார்)

    ReplyDelete
  48. @குமரன்
    நீங்க சொன்ன பின்பு, இன்னும் எடுத்துப் படித்துப் பார்த்தேன்!

    அக்கம்மகா தேவியார் - மல்லிகார்ஜூன சுவாமி மேல் பற்று கொண்டவர்
    முருகம்மையார் - முருகப் பெருமான் மேல் பற்று கொன்டவர்
    என்று இந்தப் பெண் அடியவர்களுக்கும் அதே கதி தான்! :(
    கணவனை விடுங்கள்! சுற்றி இருந்த சமூகமும் இவர்களை இப்படித் தான் நடத்தியுள்ளது!

    தாரிகொண்ட வெங்கமாம்பா = இந்தப் பெண்ணை மதித்து, அன்னமாச்சார்யர் வழியில் வந்தவர்கள், ஆலயத்துக்குள் சிறப்பு காட்டி உள்ளார்கள்! எந்த ஆலயம், எந்த சமயம் என்பதெல்லாம் அவரவர் தேடிப் பார்த்துக் கொள்ளட்டும்! நான் சொன்னால் நன்றாக இராது!

    எதேச்சையா தேடிப் பார்க்கும் போது கூட இப்படித் தான் மாட்டுது! என்ன செய்ய! :(

    சமூகப் பார்வையில் பார்க்காமல், அவரவர் சமயம் காக்கும் பார்வையில் பார்த்தால் இது தான் வினை!

    ரிஷி பத்தினிகளை மதித்து நடத்திய வேத காலச் சமூகம் எங்கே போனது?

    சமணத்தில் பெண்களுக்கு வீடுபேறு இல்லை! அவர்கள் ஆணாகப் பிறந்து தான் வீடு பெற வேண்டும்-ன்னு இருக்காம்!
    ஆனால் பெளத்தம் அப்படி அல்ல! புத்த சங்கத்திலேயே சில பெண்களைச் சேர்த்தார் புத்த பெருமான்!

    இப்படிச் சில சமூகங்கள் தான் பெண்களுக்கு ஓரளவு மென்மை காட்டி இருக்கின்றன!

    வைணவத்தில், பெளத்ததில், பெண் அடியவர்களைச் சமூகம் சிதைத்து விரட்டியுள்ளதா என்றும் நண்பர்கள் தேடித் தாருங்கள்! நானும் தேடுகிறேன்! இங்கே ஒளிவு மறைவின்றி இடுகிறேன்! சமயப் போர்வை போர்த்தி யார் தவறு புரியினும் தவறு, தவறு தான்!

    கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகளாரே!

    ReplyDelete
  49. பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்த இதே ஆண்கள் சமூகம் தான்,
    இறை உணர்வை உணர வேண்டிய நிலை வரும் போது மட்டும்,

    தன்னைப் பெண்ணாக எண்ணிக் கொண்டு இறைவனைப் புருஷனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடியது!

    இது ஒன்றே போதும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆன்மீகத்தில் எப்படி ஆத்மார்த்தமாக ஈடுபட முடியும் என்பதற்கு!

    எத்துறையிலும் கொடி கட்டும் பெண்கள், ஆன்மீகத்திலும் கொடி கட்டிப் பறக்க வேண்டும்!

    அமிர்தானந்த மயீ போன்றவர்கள் தங்களுக்கு என்று மடங்கள் ஏற்படுத்திக் கொண்டாலும்...
    பாரம்பர்ய மடங்களிலும் நிலைமை மாற வேண்டும். பெண்கள் அங்கும் செழிக்க வேண்டும்!

    அது வைணவ மடங்களே ஆகட்டும்! அங்கும் பெண் மடத் தலைவர்கள் இப்போதெல்லாம் வருவதில்லை! இதுவும் மாற வேண்டும்!
    பருத்திக்கொல்லை நாச்சியார்
    பொன்னாச்சி
    அத்துழாய்
    என்று இருந்தவர்கள், இன்று அப்படிக் காணோமே! அதிலும் அடியேனுக்கு வருத்தம் தான்!

    ReplyDelete
  50. Geetha Said //ஆனால் ஒரு ஆணால் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ முடியுமா?? ஏதேனும் ஒரு விதத்தில், அம்மா இல்லை எனில் சகோதரி, மனைவி இல்லை எனில் மகளோ, மருமகளோ, பெண்ணின் துணையோ அருகாமையோ அவங்க கவனிப்போ இல்லாமல் ஆணால் இருப்பது கஷ்டமே. இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :)))))))) ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்.//

    கீத்தாம்மா துணைங்கறது உறவுகள் மட்டுந்தான்னு எடுத்துக்க முடியாது; நீங்க சொன்ன அவ்வையருக்கும் அதியமனு ஒரு நண்பர் இருந்தார்
    . மனிதன் ஒருவரை ஒருவர் எபோதும் சார்ந்தேதான் இருக்காங்க.

    தன்னோட தெய்வ ஆற்றலை உணர்ந்தவங்க அதை உணரதவ்ங்க்ள விட்டு தனியே இருக்காங்க அவ்வளவுதான்

    ReplyDelete
  51. Geetha Said//
    எதுவுமே இல்லை, தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்.
    //
    பரம தத்தனும் அவனுடன் இருந்தவர்களும் புனிதவதியாரின் தெய்வத்தன்மை மட்டும் அல்ல ஏதும் அறியாதவர்கள், அவர்கள் வணிகர்கள் வணிகத்தை தவிர ஏதும் தெரியாது, தெய்வ அதிசியங்களை கண்டவுடன் பெரியது நம்மால் நெருங்க முடியாது என்ற எண்ணம் வந்து விடுகிறது

    ஆனால் ஆண்டாளோ தன்னுடைய தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் போது அவர் தந்தை உடன் இருந்து பார்த்து புரிந்து ஏற்று கொள்ள முடிந்தது,


    அதனால் அவரகள் பிரியவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை

    ReplyDelete
  52. நான் சேம் சைடில் கோள் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  53. @Mani Pandi Or Geethamma
    //வணிகர்கள் வணிகத்தை தவிர ஏதும் தெரியாது, தெய்வ அதிசியங்களை கண்டவுடன் பெரியது நம்மால் நெருங்க முடியாது என்ற எண்ணம் வந்து விடுகிறது

    ஆனால் ஆண்டாளோ தன்னுடைய தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் போது அவர் தந்தை உடன் இருந்து பார்த்து புரிந்து ஏற்று கொள்ள முடிந்தது//

    என் கேள்வி ரொம்ப சிம்பிள்!

    புனிதத்தன்மையப் பார்த்தவுடன் கூட வாழ எல்லாம் வேண்டாம். சரி!
    ஆனாள் அவளைக் குறைந்த பட்சம் போஷித்து காக்கலாம் அல்லவா? அவள் திரிந்து பேயாக அலைய விடாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா? :(

    புனிதவதி கணவன் வேண்டாம் என்று சொன்ன ஓவர் நைட்டில் பேயாகி விடவில்லை! பல இயலாமைகளுக்கு அப்புறம், அலைந்து திரிந்து தள்ளப்பட்டாள்!

    ஆண்டாளின் விபரீத ஆசையைக் கண்டு விட்டு சித்தர் கலங்கினாலும், அவளை அவரோ, அந்தச் சமூகமோ அலைய விடலையே! அது ஏன் புனிதவதிக்கு நடக்கவில்லை?

    ReplyDelete
  54. //அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்//

    கீதாம்மாவின் இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! :(

    ReplyDelete
  55. ஆழமான சிந்தனைகள் கொண்ட பதிவு.

    காரைக்காலாரின் கவிதையை iconic poetryக்கு எடுத்துச் சென்ற உங்கள் பார்வைக்குப் பாராட்டுக்கள்.

    உங்கள் சிந்தனைக்கு மேலும் சில:

    எல்லாச் சமயங்களிலும் பெண்கள் ஆண்டவனை நெருங்குவது மற்றவர்களுக்கு அச்சம் தருவதாகவே இருந்திருக்கிறது.
    அவர்களை அசாதாரண்மாகக் கருதி அவர்களுக்கு இறைமை நிலையோ, பிசாசு நிலையோ அளிக்கப்பட்டு அவர்களிடமிருந்து விலகி நிற்பதே எல்லாச் சமூகங்களிலும் உள்ள நிலை.

    இது நம் 'கீழ் உள்ளவர்கள்' அதிகாரம் பெறும் போது ஏற்படும் எதிர்வினை. (empowerment of subordinates)
    இதன் வேர்களை பெண்களுக்கு சமூகத்தில் இருந்த நிலை குறித்து ஆராயும் போது உணர்ந்து கொள்ளலாம்.


    பாம்பு கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் காமத்துடன் தொடர்பு கொண்ட குறியீடாகவே காணப்படுகிறது. ஆதாமை 'முதற்பாவம்' செய்யத் தூண்டியது ஒரு பாம்பு என்பதை நினைவு கூர்ந்தால் இது உங்களுக்கு விளங்கும்.

    அன்புடன்
    மாலன்

    ReplyDelete
  56. நன்றி தல..;))

    ஏற்கனவே இவுங்களை பத்தி படிச்சிருக்கேன். உங்களின் பதிவின் மூலம் இன்னும் தெரிஞ்சிக்கிட்டேன் ;)

    ReplyDelete
  57. தானை தலைவி கீதா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் என்னோட ஸ்பெசல் ரீப்பிட்டே ;))

    ReplyDelete
  58. //Mani Pandi said...
    நான் சேம் சைடில் கோள் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்//

    ஹா ஹா ஹா
    எல்லா கோலும் இறைவனுக்கே! :)

    ReplyDelete
  59. //மாலன் said...
    ஆழமான சிந்தனைகள் கொண்ட பதிவு.
    காரைக்காலாரின் கவிதையை iconic poetryக்கு எடுத்துச் சென்ற உங்கள் பார்வைக்குப் பாராட்டுக்கள்//

    வாங்க மாலன்! நன்றி!
    காரைக்கால் அம்மையார் இன்னும் பல புதுமைக் கவிதைகள் எல்லாம் செய்துள்ளார். அடுத்த சில பதிவுகளில் பதிக்கிறேன்!

    சிவபெருமான் பாட்டுக்கென்று தனியான வலைப்பூ உள்ளது! அங்கு தான் பதிக்கிறோம்! அங்கேயே பாருங்கள்! இங்கு இதைப் பதிந்தது Technical Faultஇன் காரணமாகத் தான் :)
    http://sivanpaattu.blogspot.com

    //எல்லாச் சமயங்களிலும் பெண்கள் ஆண்டவனை நெருங்குவது மற்றவர்களுக்கு அச்சம் தருவதாகவே இருந்திருக்கிறது//

    உண்மை தான்!
    ஆனால் அதே ஆண்கள் தான் நாயகி பாவமாகவும் இறைவனைப் பாடுகின்றனர்! இது தான் முரண்! :)
    அவர்களை அசாதாரண்மாகக் கருதி

    //இது நம் 'கீழ் உள்ளவர்கள்' அதிகாரம் பெறும் போது ஏற்படும் எதிர்வினை. (empowerment of subordinates)
    இதன் வேர்களை பெண்களுக்கு சமூகத்தில் இருந்த நிலை குறித்து ஆராயும் போது உணர்ந்து கொள்ளலாம்//

    பெண்களின் சமூக நிலை முன்னேறிய அளவுக்கு, ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் என்பது இக்காலத்திலும் மிகவும் குறைவு தான்! திருமடங்களில் முதல் பெண்மணித் தலைவர் யாரோ?

    //ஆதாமை 'முதற்பாவம்' செய்யத் தூண்டியது ஒரு பாம்பு என்பதை நினைவு கூர்ந்தால் இது உங்களுக்கு விளங்கும்//

    அட, ஆமாம்!
    ஆனால் நம் பண்பாட்டில் பாம்பு, காமம் மட்டுமே குறிக்கவில்லை-ன்னு நினைக்கிறேன்! குண்டலினி, ஆன்ம வேட்கை, சேஷத்துவம் (வழுவிலா அடிமை) என்று பல நிலைகளில் வருகிறது!

    ReplyDelete
  60. //கோபிநாத் said...
    ஏற்கனவே இவுங்களை பத்தி படிச்சிருக்கேன். உங்களின் பதிவின் மூலம் இன்னும் தெரிஞ்சிக்கிட்டேன் ;)//

    :)
    கதையைப் படிச்சிருப்பீங்க மாப்பி!
    கவுஜயைப் பத்திச் சொல்லுங்க!

    ReplyDelete
  61. //கோபிநாத் said...
    தானை தலைவி கீதா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் என்னோட ஸ்பெசல் ரீப்பிட்டே ;))//

    ஹா ஹா ஹா
    "ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது - இதுக்குமா கோப்பி? :)

    ReplyDelete
  62. //நன்றி குமரன்! எல்லாப் பின்னூட்டங்களையும் படித்த பின், என்ன தோன்றுகிறது? :)//

    நல்ல உரையாடல் என்று தோன்றுகிறது. அதனைத் தான் சொன்னேன். :-)

    ReplyDelete
  63. //முடிந்தால் தனிப் பதிவாகவே இடுங்களேன் குமரன்!
    இங்கு பல பேருக்கு நீங்கள் சொல்வது தெரிந்திருக்க இயலாது-ன்னே நினைக்கிறேன்! அதனால் தனியாகப் பதிவிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும் அல்லவா?
    //

    ஏற்கனவே எழுத வேண்டிய பட்டியல் ரொம்ப பெரிசு. உடையவர் வாழ்க்கையை நீங்கள் எழுதினால் தான் நன்றாக இருக்கும். எழுதுங்கள்.

    ReplyDelete
  64. சமூகத்தை ஒரு நிலைமைக்கு மேல், கண்டுக்கக் கூடாது கே ஆர் எஸ் அவர்களே,

    சிறிய உதாரணம். திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு பெண்ணாக பாவித்து, இறைவனை அடைய நினைக்கிறார்.ஆனால் அது நிகழவில்லை.உடனெ மடல் ஏற நினைக்கிறார். ஆனால் பெண்கள் மடல் ஏறுதல் என்னும் நிகழ்வு, சமூகத்தால் ஏற்க்கப்படாத ஒரு செயல். ஆனால் ஆழ்வாரால், தன்னுடைய பக்தி என்னும் விரக தாபத்தைத் தாங்க முடியாமல், கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

    “மன்னு மடல் ஊரார் என்பதோர் வாசகமும், தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாந்தெளியோம் மன்னும் வட நெறியே வேண்டினோம்” என்கிறார்.பெண்கள் மடல் ஏறுதல், பொருந்தா நெறி என்று மருதளிக்கும்போது, தென்னெறியே வேண்டாம் , யாம் வட நெறியைக் கொள்வோம் என்று அறிவிக்கிறார். இறுதியில், கடவுள் பக்திக்கு மனித விதிகள் , பொருந்த வேண்டிய கட்டாயம் இல்லை என்ற எண்ணமும் வருகின்றது.

    அதே போல் ஒரு நிலைமைக்கு மீறி , சமூகம் , ஒருவரது, பக்தி மற்றும் தனிவாழ்வின் மீது கட்டுபாட்டைத் திணிக்கும் போது, அதை மீறலாம்.

    வணக்கத்திற்கு உரிய காரைக்கால் அம்மையார் அல்லது அவரது கணவர், இந்த விஷயத்தில் சமூகத்தைக் கண்டுக்காம விட்ருக்கலாம்.

    ReplyDelete
  65. உடையவரின் பிராட்டியார் தன் தாய் வீட்டிற்கு பொய்யான காரணம் சொல்லி அனுப்பப்பட்டது மட்டும் தான் வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவர் தமது பெற்றோர்களால் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டாரா? உடையவர் சந்யாசி ஆன பிறகு மீண்டும் வந்து பார்த்தாரா? போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாது. அதனால் உங்கள் கேள்விகளுக்கு உண்டு இல்லை என்ற பதில்களைச் சொல்ல என்னால் இயலாது.

    இராகவேந்திரரும் தன் மனைவியாரைப் பிரிந்து சென்று சந்யாசம் ஏற்றுக் கொண்டார் என்று தெரியும். செய்தி தெரிந்த பின்னர் அந்தப் பெண்மணி உயிரை மாய்த்துக் கொண்டு பேய் உருவில் திரிந்ததாகவும் இராகவேந்திரர் அவருக்கு ஆத்ம விமோசனம் தந்ததாகவும் படித்திருக்கிறேன். திரைப்படத்திலும் காட்டுவார்கள்.

    அருணகிரிநாதர் திருமணம் செய்து கொண்டாரா? எனக்குத் தெரியவில்லை.

    சுயநலத்திற்கோ புனிதக் காரணங்களுக்கோ வேறு எந்த காரணத்திற்காகவோ இப்பெண்களைப் பிரிந்தார்கள் உடையவரும் இராகவேந்திரரும் இன்னும் பல பெரியவர்களும். ஆனால் தங்கள் விருப்பத்திற்கு எதிராகப் பிரிவைப் பெற்றவர்கள் படும் வேதனை எல்லோருக்கும் உண்டு தானே.

    ReplyDelete
  66. //திருமுறை
    1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
    4,5,6=தேவாரம்(அப்பர்)
    7=திருப்பாட்டு(சுந்தரர்)
    8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
    9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
    10=திருமந்திரம்(திருமூலர்)
    11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
    12=பெரிய புராணம்(சேக்கிழார்)
    //

    இந்த விவரங்கள் எல்லாம் தெரியாததால் விரைவில் இத்திருமுறைகளையும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இறைவா, விரைவில் ஆசைப்படும் எல்லா இலக்கியங்களையும் படிக்கும் வாய்ப்பினை அருள வேண்டும்.

    ReplyDelete
  67. //குமரன் (Kumaran) said...
    இத்திருமுறைகளையும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இறைவா, விரைவில் ஆசைப்படும் எல்லா இலக்கியங்களையும் படிக்கும் வாய்ப்பினை அருள வேண்டும்//

    ததாஸ்து! அப்படியே ஆகட்டும்! அப்படியே சிவன் பாட்டில் ஒவ்வொன்றாக இடுங்கள் குமரன்!

    ReplyDelete
  68. பரமதத்ததனையும், அக்கால சமூகத்தையும் கூட விடுங்கள்!

    இன்றும் மாங்கனி உற்சவத்தில், பரம தத்தனைக் கப்பலேற்றி விட்டு வருதல் உற்சவமாக நடைபெறுகிறதே! அது சரியா? ஒருவரும் அதைப் பற்றிப் பேசவே இல்லையே!

    Iconic Poetry பற்றிக் கூட மாலன் மற்றும் வெகு சிலரே பேசியுள்ளனர்!

    மற்ற பலருக்கும் பதிவில் எது கண்ணுக்குப் பட வேண்டுமோ, அதைத் தவிர எல்லாமே கண்ணுக்குப் படுது! :))

    ReplyDelete
  69. //குமரன் (Kumaran) said...
    ஏற்கனவே எழுத வேண்டிய பட்டியல் ரொம்ப பெரிசு. உடையவர் வாழ்க்கையை நீங்கள் எழுதினால் தான் நன்றாக இருக்கும்.//

    ஹா ஹா ஹா
    அடியேன் தேசிகருக்கு மாறிட்டேன்! :)

    ReplyDelete
  70. ஒரு நல்ல பதிவுக்கு நன்றி.

    திருவாலங்காடு கோயில் அற்புதமானது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத்துக்கு உரியது. இங்குதான் அம்மையார் தலையால் நடந்து சென்றார். இவ்வூருக்குள் வர மற்ற மூன்று சமயக் குரவர்களும் மறுத்து விட்டார்கள். காரணம் அம்மையார் தலையால் நடந்த இடத்தில் தங்கள் கால் படக்கூடாது என்பதற்காகவே. இதை எழுதும் போதே நான் நெகிழ்ந்து போகிறேன்.

    ஆணாதிக்கம் என்பது ஒரு கற்பனை. அப்படியொன்று இல்லவே இல்லை. உடல் வலிமையினால் செய்யும் சில பலாத்காரங்கள் அன்றி நமது சமுதாயத்தில் பென்களுக்குச் செய்யப்படும் கொடுமைகள் வேறு பெண்களின் ஆதரவினாலும் அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் தூண்டுதலினாலும் துர்போதனையாலும் துணையினாலும் செய்யப்படுபவை. நமது சமுதாயம் முழுக்க முழுக்க பெண்ணாதிக்க சமூகம். (எல்லா தொலைக்காட்சித் தொடர்களும் இதற்கு ஒரு சிறிய சாட்சி.) ஆனால் அதே நேரம் ஆண்களுக்கு அன்பையும் அழகுணர்ச்சியையும் அறிவின் சிறப்பையும் அறிய வைப்பது பெண்கள்தாம். அந்த வகையிலும் இது பெண்ணாதிக்க சமூகம்தான். பெண்களில்லாத ஆண்கள் உலகில் அராஜகம் மட்டுமே இருக்கும். ஆண்கள் இல்லாத பெண்கள் உலகு என்று ஒன்றும் இருக்கப்போவதில்லை.

    அம்மையாரின் இன்னல்களுக்கு ஆணாதிக்கம் காரணம் என்று சொல்வதற்கில்லை. யாரையாவது காரணம் சொல்லவேண்டுமென்றால் அவருக்கு அருள் செய்த அரனைத்தான் சொல்லவேண்டும். ஆயிரமாயிரம் பெண்களில் அம்மையாரைத் தேர்ந்தெடுத்த சிவனுக்கு அதனால் ஏற்பட்ட அம்மையின் இன்னல்கள் வலிக்காமலா இருந்திருக்கும்?
    ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!!
    பேயுருவம் இன்னலென்று நித்தம் சுடலையாடும் அந்த நீறணிந்த நீலகண்டரும் நினைப்பாரோ?
    நீச்சல் பயிலுதற்கு நிர்தாட்சன்யமாய் நீரில் விட்டெறியும் நிபுணரையும் நீர் கண்டதில்லையோ?
    நித்யகல்யாணிக்கு தன்னுடலில் நேர்பாதி நீங்காத இடமளித்த நிமலரும் பெண் குலத்தை நிந்திப்பரோ!

    நேரமிருந்தால் தொடர்வேன்....

    ReplyDelete
  71. //குமரன் (Kumaran) said...
    அதனால் அவர் தமது பெற்றோர்களால் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டாரா? உடையவர் சந்யாசி ஆன பிறகு மீண்டும் வந்து பார்த்தாரா? போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாது//

    தவறான நடத்தையும், கேட்கக் கூசும் வார்த்தைகளும் ஊரறிய பல முறை பேசிய பிராட்டியார். அவரை அனுப்பிய போது, செல்வமும் கொடுத்து, சொத்தும் கொடுத்துத் தான் அனுப்பி வச்சிருக்காரு!

    காஞ்சி வரதனிடம் துறவு பெற்ற போது, துறவுக்கு முன்னுள்ள சொத்தையும் பிராட்டியாருக்கே அனுப்பி இருக்காரு! வாங்கிக்கிட்ட பிராட்டியாரும், ஒன்னும் பெருசா கவலைப்படலை! சுகமாத் தான் இருந்திருக்காங்க!

    ரொம்ப வருஷம் கழிச்சி தான், ஊர் தூற்ற, உடையவர் ஆனவரிடம் வந்து சந்திச்சி இருக்காங்க! மன்னித்தும் அனுப்பி இருக்காரு! குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்பட்டிருக்கு!

    //இராகவேந்திரரும் தன் மனைவியாரைப் பிரிந்து சென்று சந்யாசம் ஏற்றுக் கொண்டார் என்று தெரியும்//

    அந்த அம்மாள் பேரு சரஸ்வதி! இங்கே ரொம்ப இக்கட்டான நிலை! என்ன சொல்லியும் சரஸ்வதியைக் கன்வின்ஸ் செய்ய முடியவில்லை! பொது நன்மைக்குத் தர மறுக்கிறாள்! நிராதரவாக விடாமல் ஊரில் உள்ள அக்கா, மாமாவிடம் (குருவும் கூட) விட்டுச் செல்ல, அவர்களுடன் வர மறுத்து, அவர்களையே அனுப்பி விடுகிறாள்! இராகவேந்திரர் நிலை மிகவும் இக்கட்டு தான்! ஏன் என்றால் இங்கே மனைவியும் நல்லவள்!

    //அருணகிரிநாதர் திருமணம் செய்து கொண்டாரா? எனக்குத் தெரியவில்லை//

    அக்காவும் மனைவியும் தான் தொழு நோயிலும் அவரைக் காப்பாற்றுவார்கள்! அப்போது பரத்தையர் விரட்டிய போது, இச்சை தீராமல் மனைவியை நெருங்க, அவள் ஆசை காட்டாமல், அன்பை மட்டுமே காட்ட, வெறியில் இவரும் சினக்க,

    அக்கா "என்னிடம் வேணுமானால் சேர்ந்து கொள்" என்று சொல்ல, அந்த ஒத்தை வார்த்தை தான் அருணகிரியைப் புடம் போட்டது! அருணகிரிநாதர் ஆன பின்னர், அக்காவையும் மனைவியையும் அம்போ என்று கைவிட்டு விடவில்லை அருணகிரி!

    //ஆனால் தங்கள் விருப்பத்திற்கு எதிராகப் பிரிவைப் பெற்றவர்கள் படும் வேதனை எல்லோருக்கும் உண்டு தானே//

    எல்லாருக்கும் உண்டு தான் குமரன்!
    மறுப்பதற்கே இல்லை!
    அதனால் தான் அந்தந்த நிலைக்கேற்றவாறு பார்க்கிறோம்! அபலையை அலைக்கழிக்காமல், அபலையை ஒதுக்கி, இன்னொருத்தியிடம் செல்ல, ஆன்மீகத்தைக் காரணம் காட்டாமல், அதற்கு அந்தச் சமூகமும் ஆமாம் சாமி போடாமல்...இதெல்லாம் பார்த்த பின்னர் தான் முடிவுக்கு வர வேண்டி இருக்கு அல்லவா?

    ReplyDelete
  72. @All
    இது பற்றி நண்பன் ராகவன் முன்பு எப்பவோ இட்ட சிறுகதை, இப்போ மீண்டும் படிக்க நேர்ந்தது. இங்கே!

    ReplyDelete
  73. //paravasthu said...
    சமூகத்தை ஒரு நிலைமைக்கு மேல், கண்டுக்கக் கூடாது கே ஆர் எஸ் அவர்களே//

    ஹா ஹா ஹா!

    //கடவுள் பக்திக்கு மனித விதிகள் , பொருந்த வேண்டிய கட்டாயம் இல்லை என்ற எண்ணமும் வருகின்றது//

    திருமங்கை என்ற ஆண்மகனே தன்னைப் பெண்ணாகப் பாவித்துத் தான் மடல் ஏறுகிறார் அண்ணா! கடவுள் பக்திக்கு மனித விதிகள் பொருந்தாது தான்! ஒப்புக் கொள்கிறேன்!

    ஆனால் அம்மையாருக்கு இங்கு அதிசயம் நிகழ்ந்ததே தவிர, அவர் சாதாரண இல்லற பக்தராக இருக்கத் தானே ஆசைப்பட்டார்? அதற்கு அவர் கணவன் ஒப்பாமல் சுயநலமாய் நடந்து கொண்டான்! போகட்டும் விடுங்கள்!

    //சமூகம் , ஒருவரது, பக்தி மற்றும் தனிவாழ்வின் மீது கட்டுபாட்டைத் திணிக்கும் போது, அதை மீறலாம்//

    இங்கே தான் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை!
    சமூகம் அவளைப் பக்தி செய்யாதே-ன்னும் சொல்லலை! அம்மையார் யாரையும் மீறவும் செய்யலை! சாதாரண இல்லற பக்தராகவே இருக்க விரும்புகிறார்.

    அடியேன் கேள்விகள் ரொம்ப எளிது!
    1. கணவனை விடுங்கள். ஆனால் அவனோ/அந்தச் சமூகமோ அவளை அதற்குப் பிறகு நிராதரவாக விட்டது ஏன்?

    2. ஏதோ காரைக்கால் அம்மையை மட்டும் வைத்து நான் இப்படிச் சொல்லவில்லை! அவருக்குப் பின்னால் வந்த ஆண்டாள் ஓக்கே! ஆனால் ஆண்டாளுக்கும் பின்னால் வந்த
    * அக்கம்மா தேவியார்
    * முருகம்மையார்
    எல்லாருக்கும் இதே கதி தான்! ஏன்?

    3. சரி, போகட்டும்!
    இந்தக் காலத்திலாவது, அம்மையின் உற்சவம் நடத்தும் போது, பரமதத்தன் உற்சவமும் நடத்தி, அவனைப் படகில் போய் விட்டு வருதல் எல்லாம் நியாயம் தானா?

    அதனால் தான் இதைச் சபையில் முன் வைத்தேன்! சிந்தனைக்கும் அவரவர் மனச்சாட்சிக்கும்! அவ்வளவு தான்!

    ReplyDelete
  74. //ஓகை said...
    ஒரு நல்ல பதிவுக்கு நன்றி//

    ஓகை ஐயா. உங்கள் மேலான கருத்துக்குக் காத்திருக்கிறேன்!

    //திருவாலங்காடு கோயில் அற்புதமானது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத்துக்கு உரியது//

    தில்லை அல்லவோ ஆகாசம்?

    // இவ்வூருக்குள் வர மற்ற மூன்று சமயக் குரவர்களும் மறுத்து விட்டார்கள். காரணம் அம்மையார் தலையால் நடந்த இடத்தில் தங்கள் கால் படக்கூடாது என்பதற்காகவே//

    ஆமாம்! தேவார மூவர், அம்மையின் மேன்மையை எப்படி மனத்தால் நினைத்து இப்படிப் போற்றி இருக்க வேண்டும்! அதை நினைக்கும் போது உள்ளம் உவக்கிறது!

    //ஆணாதிக்கம் என்பது ஒரு கற்பனை. அப்படியொன்று இல்லவே இல்லை//

    :)

    //வேறு பெண்களின் ஆதரவினாலும் அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் தூண்டுதலினாலும் துர்போதனையாலும் துணையினாலும் செய்யப்படுபவை//

    இருக்கலாம்!
    ஆனால் அவையும் "பெரும்பாலும்" பெண்களை நோக்கித் தான்! ஆண்களை நோக்கி என்பது மிகவும் குறைவு!

    //ஆண்களுக்கு அன்பையும் அழகுணர்ச்சியையும் அறிவின் சிறப்பையும் அறிய வைப்பது பெண்கள்தாம். அந்த வகையிலும் இது பெண்ணாதிக்க சமூகம்தான்//

    சரி! அதற்காக?

    //யாரையாவது காரணம் சொல்லவேண்டுமென்றால் அவருக்கு அருள் செய்த அரனைத்தான் சொல்லவேண்டும்//

    சிவ சிவ!
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!

    //நீச்சல் பயிலுதற்கு நிர்தாட்சன்யமாய் நீரில் விட்டெறியும் நிபுணரையும் நீர் கண்டதில்லையோ?//

    நீச்சல் நிபுணரைக் குறை சொல்லவில்லையே!

    ஆனால் நிபுணர் இன்னும் வராத நேரத்தில்,
    நீச்சல் பயில்பவரை நீச்சல் குளத்திலேயே நசுக்கப் பார்த்த நீசரை,
    அதுவும் திருக்குளம் என்ற பேரில் ஒளிந்து கொண்டு! அதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்!

    அன்னை குன்றின் மேல் இட்ட விளக்காக ஆக வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் என்றெல்லாம் அடியேனுக்கும் தெரிகிறது!
    ஆனால் அதைக் காரணம் காட்டி, சமூகம் ஒளிந்து கொள்ளக் கூடாது! அப்புறம் "அவன் செயல்" என்று சொல்லிச் சொல்லியே பலரும் தப்பித்துக் கொள்வார்கள்!

    நிராதரவா நின்னா அன்னையின் முலைப்பால் கிடைக்கும்-னு தான், குழந்தையின் பெற்றோரைக் கொன்றேன்-ன்னு, ஒருத்தன் சொன்னா, விட்டு விடுவோமா?
    பரவஸ்து அண்ணாவுக்கு என் மூன்று கேள்விகளைப் பாருங்கள்!

    //நேரமிருந்தால் தொடர்வேன்..../

    தங்கள் கருத்துரைகளுக்குக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  75. அக்கமாதேவியார் வீர சைவ மரபின் படி ஜங்கமராக இருந்ததாகத் தான் படித்த நினைவு. அவருக்கும் திருமணம் ஆகியிருந்து கணவரால் துறக்கப்பட்டார் என்று தெரியாது. உண்மை தானா?

    முருகம்மையாரைப் பற்றி கேள்விபட்டதில்லை.

    தாரிகொண்ட வெங்கமாம்பாவின் கதையையும் நீங்கள் எழுதினால் மகிழ்வேன். இதுவரை அறியாதது.

    புத்தர் முதலில் பெண்களைச் சங்கத்தில் சேர்க்கத் தயங்கியதாகவும் பின்னர் சீடர்களின் வற்புறுத்தலின் பேரில் சேர்த்துக் கொண்டதாகவும் படித்த நினைவு.

    பொன்னாச்சியைப் பற்றியும் அத்துழாயைப் பற்றியும் கொஞ்சம் தெரியும். அவர்கள் அடியார்களாக இருந்தார்கள். சரி தான். ஆனால் துறவிகளாக இருந்தார்களா? காரைக்கால் அம்மையாரைப் போல் அற்புதம் நிகழ்த்தினார்களா? அப்படி நடந்திருந்து அவர்களை அவர்கள் கணவர்கள் துறந்து செல்லவில்லை என்றால் அவர்களைப் பற்றி இங்கே பேசலாம். அப்படி எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அடியார்களாக இருந்தார்கள் - அவர்களைத் மங்கையற்கரசியாருக்கு வேண்டுமானால் ஒப்பிடலாம். மங்கையற்கரசியார் நாயன்மார்களில் ஒருவர் என்று உயர்த்தப்பட்டவர். சைவத்தில். அவரை கூன் பாண்டியனாரும் ஒதுக்கவில்லை. சைவத்திற்கு மாறிய பின்னரும்.

    பருத்திக்கொல்லை நாச்சியாரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  76. //திருமடங்களில் முதல் பெண்மணித் தலைவர் யாரோ?
    //
    திருவதிகை வீரட்டானத்தில் ஒரு சைவத் திருமடம் இருக்கின்றது; அங்கே பரம்பரையாகப் பெண்களே மடாதிபதிகளாக இருக்கிறார்கள் என்று நினைவு. அப்பரின் திருத்தமக்கையாரின் திருப்பெயரில் அமைந்த திருமடம் - பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

    ReplyDelete
  77. //அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்//

    எல்லாப் பின்னூட்டங்களையும் படிச்சேன், என்னோட இந்தக் கருத்தில் இப்போவும் மாற்றம் இல்லை. ஏனென்றால் இது தான் உண்மை, சத்தியம், அம்மையாருக்கு வேண்டுமானால் உலக வழக்கை ஒட்டி கணவனுடன் சேர்ந்து இருத்தல் தான் முறை என்ன எண்ணம் இருந்திருக்கலாம், அதில் தவறும் இல்லை, அதே சமயம் அம்மையாரினுள்ளே இருக்கும் ஆத்மஜோதியைத் தரிசனம் செய்ததுக்குப் பின்னும் அவரைச் சாதாரணப் பெண்போல் நடத்த எந்தக் கணவனாலும் முடியாது தான். அவன் புரிந்து கொண்டான். அதனாலேயே அதே ஊரிலே கூட வாழ்க்கை நடத்தாமல் வேறே ஊருக்குப் போனான். கல்யாணமும் செய்து கொண்டான். குழந்தையும் பெற்றுக் கொண்டு, அம்மையாரின் பெயரையே வைத்தான் அந்தக் குழந்தைக்கும். சாதாரணமாய் முதல் குழந்தைக்குக் குடும்பத்தின் மூத்தவர்கள் பெயரோ, குலதெய்வம் பெயரோதான் வைப்பது வழக்கம். அம்மையாரைத் தெய்வமெனக் கருதியதால் அம்மையாரின் பெயரையே வைத்தான். தாயாக வணங்க வேண்டிய பெண்ணைத் தாரமாக நினைத்து வாழ்ந்திருக்கின்றோமே என்ற அச்சம் கொண்டிருக்கின்றான். ஆனால் அம்மையாரின் பயமும், எதிர்பார்ப்பும் சகஜமே. ஏனெனில் ஒரு பெண் தனித்திருப்பது என்பதை எந்தக் காலத்திலும் யாரும் ஒப்புக் கொள்வதில்லை அல்லவா? அவர் தன்னைத் தான் உணரக் காலம், நேரம் வரவில்லை, எத்தனை பேருக்குத் தாங்கள் பிறந்ததின் அர்த்தம் அந்தப் பிறவியிலேயே தெரிய வருகின்றது?? கணவன் கைவிட்டதுமே இவருக்குப் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது. இதை விதி என்று சொல்வதை விட இறைவன் அவர் மனம் பக்குவம் அடைகின்றதா? இல்வாழ்வா? ஈசன் திருவடியா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் என்பதற்கு வைத்த சோதனையாகவே கொள்ளவேண்டும். சம்மந்தருக்கு சாவகாசமாய் வரேன். நேரமின்மையால் மேற்கொண்டு இது பற்றி ஏதும் சொல்லவில்லை, நிறுத்திக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  78. http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_21.html

    ReplyDelete
  79. //இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! //

    இன்னைக்கு தான் குறியீட்டுக் கவிதைன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.. நிறைய விஷயங்கள் நல்லாவே சொல்லிருக்கீங்க..

    ReplyDelete
  80. //* அவள் விருப்பத்துக்கு மாறாக மறுக்கும் உரிமை யாருக்கு இருக்கு? எப்படி மறுக்கலாம்? என்ன நியாயம் இது? //

    எனது விருப்பம் இதுதான் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்களே என்று எங்காவது அழுதிருகிறாரா?
    "எனக்கு வாழ்க்கை தர மறுத்து விட்டாரே" என்று எந்த இடத்திலாவது புலம்பியிருக்கிறாரா?
    என் மனதில் இப்படியெல்லாம் திட்டம் போட்டு வைத்திருதேனே" எல்லாவற்றையு வீணாக்கி விட்டீர்களே, இது என்ன நியாயம் என வாதிட்டிருக்கிறாரா?

    எமது மனநிலையை வைத்து அடுத்தவர் மனநிலையை கணிப்பதால் தான் எல்லா பிரச்சனைகளுமே:)

    * அவள் படைக்கப்பட்ட நோக்கத்தைத் தீர்மானிப்பது யார்? அவளா? இல்லை இவர்களா?

    யாரானாலும் அவர் அவர் நிலைக்கு அவரவரே உரியவராவார்,

    அவளாகவே தன் வாழ்வை தீர்மானித்துக் கொண்டாள்,
    இந்த இல்வாழ்க்கை தான் வேண்டுமென நிணைத்திருந்தால். மாம்பழத்தை சிவனிடமிருந்து பெற்றதைப் போல், பரமதத்தனின் மனமாற்றத்திற்காகவும் வேண்டி இல்வாழ்வைத் தொடர்த்திருப்பாரே!
    ஏன் அப்படிச் செய்ய வில்லை?

    நண்ணீர் பொய்கைக்கு வழி அறிந்த பின் அழுக்கு குட்டையை எவராவது நாடுவார்களா?

    //* சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?//

    அவர் இங்கு இருந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தை குட்டி பெற்று வாழவில்லையே!
    அவரும் அப்படியே எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டாரே.

    ReplyDelete
  81. \\ கணவனை விடுங்கள். ஆனால் அவனோ/அந்தச் சமூகமோ அவளை அதற்குப் பிறகு நிராதரவாக விட்டது ஏன்?//

    நிராதரவாக அவளை சமூகம் விட்டு விட்டது என்று சொல்வதை விட, அவள் தான் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் சூழ்நிலை உருவாகி விட்டது.மானிட, மாங்கனி மங்கை தெய்வீக மங்கை ஆகிவிட்டாள். இறைவனே மாங்கனி கொடுத்து விட்டான்.அதை விடப் பெரிதாய் நாம்/சமூகம் அவளுக்கு என்ன செய்து விட முடியும்? அப்படியே செய்தாலும் அது காம்யமான விஷயமாகத்தான் இருக்க முடியும்.

    நம்மாழ்வார் திருவாய் மொழி 10ம் பத்து 10ம் திருவாய்மொழியில் சொல்லிய படி, சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து , உயர்ந்து, முடிவில் பெரும்பாழாகிய, பர நன்மலற் சோதியாகிய , சுடர் ஞான இன்பம் , நம்மை அவாவரச் சூழ்ந்த பின், வேறு இன்பம் எதற்கு?
    பர லோகமே கிடத்தாலும் வேண்டாம் , உன்னைக்காணும் இன்பம் மட்டுமே வேண்டும்என நினைத்ததால் பெறற்கரிய பேற்றினை அடைந்தனர்.

    இறைவனின் ஆதரவு பெற்று விட்டாள். இனிமேல் நாம் அளிக்கும் ஆதரவு எல்லாம் நிரந்தரம் இல்லை.தவிரவும், ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முற்படும் போது பூத உடல் முக்கியம் இல்லை. அம்மையார் என்னும் ஜீவாத்மா, இறைவன் எனும் பரமாத்மாவை அடியும் போது அதற்கு, ஆண் பெண் மானிட மற்றும் உருவம் என்ற பேதம் கிடையாது.நம்மைப் போன்ற மானிடர்கள், அதை அறியாது மறு பிறப்பில் உழன்று கொண்டு இருக்கின்றோம்.அம்மையார் வடிவில் இருந்த ஜீவாத்மா, பரம்பொருளை அறிந்து கொண்டது.பேய் எனும் உருவம் கொண்டும் அவனையே நினைத்தது.

    இதற்கும் மேல் சில செய்திகள் பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்களின் திருமொழிகள், மூலம் இதற்கு விடை காணலாம். நேரமின்மையால் இப்போது அதை எடுக்க இயலவில்லை.

    திருவரங்கத்தமுதனாரின் கூற்றுப்படி,

    “ஓதிய வேதத்தின் உட்பொருளாய், அதன் உச்சி மிக்க சோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்கள் “எனும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

    அம்மையார் தமக்குள் இருக்கும் பரம்பொருளை உணர்ந்து கொண்டார்.

    ஆதி சங்கரர் ”கனகதாரா” என்னும் வேண்டற் பாவைப் பாடி, பொன் கொடுத்து, ஏழைக் குடும்பத்திற்கு பண நிறைவு அளித்தார். ஏனெனில் அவர்கள் விரும்பியது இவ்வுலக வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அம்மையார் எந்த பொன்னையும் பொருளையும் வேண்டவில்லை. மாறாக இறைவன் அருள் தானே வேண்டினார்?

    அது கிடைத்த பின், உடல் என்னிலைமை அடந்தால் என்ன, எவ்வுருவம் கொண்டால் என்ன?அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்தத்தை அடைந்த பின், மற்றெப்பொருளும் இழிவு தானே?

    பிறந்து ஒரு வயதே ஆன ஒரு மகவுக்கு எது இன்பம்? கையில் கிடைக்கும் பொன்னா? பொருளா?மாடமாளிகையா? பொன் வட்டிலா?பணமா? நிச்சயமாக இல்லை. தாயின் பேரன்பும், அதன் வெளிப்பாடாக விளங்கும் தாய்ப்பாலும் தானே?
    பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை, அம்மையார் கண்டு கொண்டாரோ?

    இங்கு அம்மையாருக்கு, ஈசனின் கடைக்கண் பார்வை எனும் ஞானப் பால் கிடைத்தபின், சமூகம் எனும் காம்யமான விஷயங்கள் பெரிய விஷயம் இல்லை.

    \\ ஏதோ காரைக்கால் அம்மையை மட்டும் வைத்து நான் இப்படிச் சொல்லவில்லை! அவருக்குப் பின்னால் வந்த ஆண்டாள் ஓக்கே! ஆனால் ஆண்டாளுக்கும் பின்னால் வந்த
    * அக்கம்மா தேவியார்
    * முருகம்மையார்
    எல்லாருக்கும் இதே கதி தான்! ஏன்?//

    அக்கம்மா தேவியார் மற்றும் முருகம்மையார் பற்றி அடியேனுக்கு எதுவும் தெரியாது. அதனால் அப்பெறியோர்களைப் பற்றிப் பேச இயலவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தால், அதைப் பற்றி அறிந்த பின் இக்கேள்விக்கு விடை பகர முயல்வேன்.

    \\ஆண்டாளைப் போற்றிய சமூகம் இவர்களைப் போற்ற வில்லை. //

    சரிதான். ஒரு வேளை இவர்களை மற்ற மானிடப்பிறவி போல நடத்தி இருந்தால், தெய்வீக நிலை என்னும் உயர்வு கிட்டி இருக்காது.ஆண்டாள் மற்ற பெண்களைப்போல் ஒரு ஜீவாத்மாவைத் திருமணம் செய்து இல்லற வாழ்வு எய்தி இருந்தால் , இச்சிறப்பு எய்தி இருக்க முடியாது என்பது அடியேனின் சிறு கருத்து.

    \\சரி, போகட்டும்!
    இந்தக் காலத்திலாவது, அம்மையின் உற்சவம் நடத்தும் போது, பரமதத்தன் உற்சவமும் நடத்தி, அவனைப் படகில் போய் விட்டு வருதல் எல்லாம் நியாயம் தானா?//

    பரமதத்தன் , மனக்கலக்கத்தினால் உலகிற்கு ஒரும் பெரும் நன்மை கிடைத்து, திருமுறை பாடும் ஓர் அம்மையார் கிடைத்தார். அவர் சாதா(ரண) இல்லற வாழ்வு நடாத்தி இருந்தால், அம்மையாருக்கு இப்பெறும் பேறு கிடைத்திருக்குமா?

    மற்றும் ஈசன் அருளால் கிடைத்த கனியை உண்டவன்.இப்பேற்பட்ட உத்தமி, உலகிற்குக் கிடைக்க அடையாளம் காட்டும் கருவியாய் இருந்தவன். மாங்கனி பற்றிய சரியான விசாரணையை பரமதத்தன் நடத்தியதால் தானே அம்மையாரின் பெருமை உலகிற்குத் தெரிய வந்தது?(இது சாதா(ரண)கரகாட்டக்காரன் வாழைப் பழ விசாரணை அல்ல. அது தான் இது என்று சொல்லி மழுப்புதற்கு.)

    எனவே, பிறப்பில் கருமாயம் பேசில் கதை , எனும் கூற்று போல , இங்கு ஒரு விந்தை நிகழக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் மதிக்கப் படுகிறார். அவ்வளவே.


    உதா(ரண)ம்.
    பள்ளியில் படித்து, பின்னாளில் ஒரு அரசியல் வாதியாக வந்த ஒருவர் தன்னுடைய ஆசிரியரை மிகவும் மதிப்பார். ஏன் எனில் அந்த ஆசிரியர், இந்த மண்ணாங்கட்டி மாணாக்கணுக்குப் படிப்பு ஏறாது என்று விரட்டி விட்டதால் , இவர் பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்து விட்டார்.அவர் விரட்டிய விதி, இங்கு வந்து விட்டார்.

    அது போல அம்மையின் உயர்வுக்கு, ஏதோ ஒரு வழியில் காரணகர்த்தா வாக வந்த பரமதத்தனுக்கு நம்மால் ஆன ஒரு சிறு பிறிவு உபசார விழா.

    அடியேனின் கருத்திலோ , கூற்றிலோ , சொல்லிலோ பொருளிலோ பிழை இருந்தால், பொருத்து அருளவும்.

    ReplyDelete
  82. //கீதா சாம்பசிவம் said...
    http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_21.html//

    கீதாம்மாவின் இந்தப் பதிவையும் அன்பர்கள் படித்துப் பார்க்கவும்!

    கீதாம்மா, அங்கு உங்களுக்கு இட்ட என் பின்னூட்டம் இதோ.

    நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் திருவடிகளே சரணம்!

    //ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடனேயே இறை ஜோதியுடன் ஐக்கியம் ஆனார் என்ற விஷயம் இது வரையிலும் கேஆரெஸ்ஸுக்குத் தெரியாதென்றால் நம்பவும் முடியவில்லை//

    ஹா ஹா ஹா
    அடியேன் சம்பந்தர் திருமணத்தைப் படிச்சிருக்கேன் கீதாம்மா!

    //சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒருகன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர்//

    உங்கள் வாதங்களை நீங்களே முறியடிக்கிறீர்கள்!
    சுற்றத்தாருக்கும் சமூகத்துக்கும் நல்லாத் தெரியுமே, சம்பந்தப் பெருமான் அற்புதங்கள் புரிந்தவர், இறைப்பணிக்கே அவதரித்தவர்-ன்னு! அப்புறம் எப்படி இல்வாழ்க்கை மறுக்காம, இல்வாழ்க்கை பேச்சை அவரிடம் மட்டும் எடுத்தார்கள்?

    அதே காரைக்கால் அம்மையார் ஒரு அற்புதமும் ஊரறிய பெருசாப் பண்ணலை! பாட்டும் பதிகமும் அப்போது ஒன்னு கூட எழுதலை! அப்படி இருக்க, அவளுக்கு இல்வாழ்க்கை கிடையாது-ன்னு எப்படி பேச்சு எடுக்கலாம்? இது தான் கேள்வி!

    இங்கே சம்பந்தரையோ, அம்மையாரையோ ஒப்பிட்டுப் பேசவில்லை! ஆனால் ஆளுக்கு ஏற்றாற் போல் நியாயம் பேசும் சமூகத்தின் அவலத்தை தான் முன் வைத்தேன்!

    அந்தச் சமூகத்துக்குத் தான் நீங்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தேடுகிறீர்கள்! :(

    ReplyDelete
  83. உள்ளேன் கீதாம்மா! :)
    அனைவரும் வந்து கருத்துரைக்கட்டும்! பிறகு வருகிறேன்!

    ஆனால்....
    அடிப்படை என்ன தெரியுமா?
    எத்தனை நாட்கள் வாழ்ந்தார்? என்பது இல்லை!
    அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதா என்பது தான்!

    சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்!

    ஆனால் சொன்னீங்க பாருங்க ஒன்னு. புனிதம் என்றும் இறைப்பணி என்றும் அற்புதம் செய்தவர் என்றும் ஆனதால் "தான்" காரைக்கால் அம்மையாருக்கு இல்வாழ்க்கை "மறுக்கப்பட்டது"-ன்னு!
    அது தான் மாபெரும் தவறு!

    அதனால் தான் கேட்டேன், அதை விட அற்புதங்கள் புரிந்த சம்பந்தருக்கு ஏன் மறுக்கப்படவில்லை-ன்னு?

    இங்கே மணம் செய்து கொண்டு எத்தனை நாள் வாழ்ந்தார் என்பது கேள்வியே அல்ல!
    அவருக்கு மட்டும் ஏன் மறுக்கப்படவில்லை என்பது தான் கேள்வி!

    புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  84. //குமரன் (Kumaran) said...
    //திருமடங்களில் முதல் பெண்மணித் தலைவர் யாரோ?
    //
    திருவதிகை வீரட்டானத்தில் ஒரு சைவத் திருமடம் இருக்கின்றது; அங்கே பரம்பரையாகப் பெண்களே மடாதிபதிகளாக இருக்கிறார்கள் என்று நினைவு. அப்பரின் திருத்தமக்கையாரின் திருப்பெயரில் அமைந்த திருமடம் - பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை//

    தவறான தகவல் குமரன்!
    சரி பாருங்கள்!

    அப்பர் சுவாமிகளின் திருத் தமைக்கையார் பெயர் திலகவதி. பெண் குலத்து குணவதி! அப்பர் மீண்டும் சைவத்துக்கு வந்த போது இவர் தான் திருவதிகை ஈசரிடம் அழைத்துச் செல்கிறார். அங்கு தான் அப்பரின் முதல் தேவாரம் பிறக்கிறது - "கூற்றாயினவாறு விலக்கலீர்"!

    திலகவதி திருவதிகை கோயிலில் தொண்டு புரிந்தார். ஆலயம் பேணுதல், மாலை தொடுத்தல் என்று பல கைங்கர்யங்கள் செய்தார்.

    ஆனால் நீங்கள் சொல்வது போல் தனி மடம் எல்லாம் எதுவும் அவர் அமைக்கவும் இல்லை! அதற்கு பெண்களே இன்று வரை தலைவியாகவும் இல்லை!

    இன்னும் தகவல்கள்:
    சிவகாமியின் சபதத்தில் கூட திருவதிகைத் திருமடம் வரும்! அங்கு ஆண்கள் தான் மடாதிபதி! அங்கு வந்து தான் மகேந்திர வர்மன் அப்பர் காலடிகளில் வீழ்வான்!

    ReplyDelete
  85. //குமரன் (Kumaran) said...
    அக்கமாதேவியார் வீர சைவ மரபின் படி ஜங்கமராக இருந்ததாகத் தான் படித்த நினைவு. அவருக்கும் திருமணம் ஆகியிருந்து கணவரால் துறக்கப்பட்டார் என்று தெரியாது. உண்மை தானா?//

    உண்மை தான் குமரன்.
    ஜைன செல்வந்தனை (மன்னன்) மணந்து, கொடுமைகள் தாங்காது, பின்னர் மணவாழ்வில் இருந்து தானே விரும்பி வெளிவந்தவர்.

    //முருகம்மையாரைப் பற்றி கேள்விபட்டதில்லை//

    அடியேன் எழுதுகிறேன்! என்னை மிகவும் கவர்ந்த அன்பான முருக பக்தை!

    //தாரிகொண்ட வெங்கமாம்பாவின் கதையையும் நீங்கள் எழுதினால் மகிழ்வேன். இதுவரை அறியாதது//

    வெங்கமாம்பா வேங்கடவன் பக்தை! அதனால் அடியேன் சொல்வது தகாது! வேறேனும் ஒருவர் சொல்லட்டும்!

    //புத்தர் முதலில் பெண்களைச் சங்கத்தில் சேர்க்கத் தயங்கியதாகவும் பின்னர் சீடர்களின் வற்புறுத்தலின் பேரில் சேர்த்துக் கொண்டதாகவும் படித்த நினைவு//

    ஆமாம்! ஒரே மடத்தில் ஒழுக்கமாக இருந்தாலும் ஊர் ஜல்லியடித்து ஜல்லியடித்து, நோக்கமே சிதறும் அல்லவா? அதனால் தான் புத்த பகவான் யோசித்திருப்பார்.

    ஆனால் பெண்கள் தொண்டினை மிகவும் மதித்தார். பிற்பாடு அவர்களுக்குத் தனி மடம் கண்டார். இராமானுசரும் பின்னாளில் பெண்களைத் தன் மடத்தில் தங்க வைக்காது, வெளியில் தான் தங்க வைத்தார்.

    //பொன்னாச்சியைப் பற்றியும் அத்துழாயைப் பற்றியும் கொஞ்சம் தெரியும். அவர்கள் அடியார்களாக இருந்தார்கள். சரி தான். ஆனால் துறவிகளாக இருந்தார்களா? காரைக்கால் அம்மையாரைப் போல் அற்புதம் நிகழ்த்தினார்களா? அப்படி நடந்திருந்து அவர்களை அவர்கள் கணவர்கள் துறந்து செல்லவில்லை என்றால்//

    அவர்களை அம்மையோடு எங்கும் ஒப்பிடவில்லையே! பெண்கள் முனைப்பாகப் பங்களிக்கும் ஆன்மீக இயக்கம் பற்றிச் சொல்ல வந்த போது குறிப்பிட்டேன். அவ்வளவே!

    //மங்கையற்கரசியார் நாயன்மார்களில் ஒருவர் என்று உயர்த்தப்பட்டவர். சைவத்தில். அவரை கூன் பாண்டியனாரும் ஒதுக்கவில்லை. சைவத்திற்கு மாறிய பின்னரும்//

    பாண்டியன் சமணனாய் மாறிய பின்னர், மங்கையற்கரசியார் மாறாமல் இருந்தார்! அவ்வளவு தான்!

    கணவனுக்குப் பயந்து பயந்து தான் அதிகமாக வெளியில் தெரியாமல் சிவ வழிபாடு நிகழ்த்தினார். பாண்டியன் நோயால் அவதியுற்ற போது தான், சற்றே துணிந்து, கணவனின் உத்தரவு பெற்று, சம்பந்தப் பெருமானை மதுரைக்கு வரவழைத்தார், அமைச்சர் குலச்சிறையார் உதவியோடு!

    //பருத்திக்கொல்லை நாச்சியாரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றியும் எழுதுங்கள்//

    மன்னிக்கவும்! அடியேன் எழுதுவதை விட இன்னொருவர் எழுதினால் தான் நன்றாக இருக்கும்! :)

    ReplyDelete
  86. அடிப்படையாக சொல்ல வந்ததில் தவறான தகவல் இல்லை இரவி. திருவதிகையில் இந்த திருமடம் இல்லை. திலகவதியாரின் திருப்பெயரால் புதுக்கோட்டையில் இருக்கிறது. அந்த மடத்தைப் பற்றியும் அங்கே பெண்மணியார் மடாதிபதியாக இருப்பதைப் பற்றியும் படித்திருக்கிறேன்; படங்களும் பார்த்திருக்கிறேன். இப்போது கூகிளார் ஒன்றையும் காட்ட மாட்டேன் என்கிறார்.

    இம்மடம் அவர் அமைத்ததாக நான் சொல்லவில்லை. அவர் திருப்பெயரில் இருக்கும் திருமடம் என்றே சொன்னேன்.

    சிவகாமி சபதத்தில் வரும் திருமடம் இந்த மடம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  87. வெங்கமாம்பாவைப் பற்றியும் பருத்திக் கொல்லை நாச்சியாரைப் பற்றியும் வேறு யாராவது அறிந்திருந்தால் அவர்கள் எழுதட்டும். யாரும் எழுதவில்லை என்றால் நீங்கள் தான் எழுத வேண்டும். இறைவன் திருமுக உல்லாசத்திற்காக.

    ReplyDelete
  88. //கீதா சாம்பசிவம் said...
    எல்லாப் பின்னூட்டங்களையும் படிச்சேன், என்னோட இந்தக் கருத்தில் இப்போவும் மாற்றம் இல்லை.//

    ஹா ஹா ஹா
    உங்க கருத்து மாற எல்லாம் வேணாம் கீதாம்மா. அதுக்காக எல்லாம் இதை எழுதலை. இது நியாயமா சிந்திச்சி பார்க்க மட்டுமே!

    //அம்மையாரினுள்ளே இருக்கும் ஆத்மஜோதியைத் தரிசனம் செய்ததுக்குப் பின்னும் அவரைச் சாதாரணப் பெண்போல் நடத்த எந்தக் கணவனாலும் முடியாது தான்//

    ரொம்பவும் சரி!
    நீங்க சொல்வது மிகவும் அற்புதமான ஆழமான தெய்வீக நோக்கம்!

    ஆத்ம ஜோதி தரிசனம் பாக்குறது-ன்னா சும்மாவா? அந்தக் கணவன் பாத்தானே! ஆகா! பெரும் பேறு!
    உங்களை வரிக்கு வரி ரீப்பீட்டறேன் கீதாம்மா! :)

    //கல்யாணமும் செய்து கொண்டான். குழந்தையும் பெற்றுக் கொண்டு, அம்மையாரின் பெயரையே வைத்தான் அந்தக் குழந்தைக்கும்//

    என்ன ஒரு பக்தி! என்ன ஒரு தியாகம்! என்ன ஒரு தாய் அன்பு! அடா அடா அடா!

    //தாயாக வணங்க வேண்டிய பெண்ணைத் தாரமாக நினைத்து வாழ்ந்திருக்கின்றோமே//

    ஒரு கேள்வி கீதாம்மா:
    தாய் அன்பு, மரியாதை எவ்ளோ இருக்கு அவனுக்கு! அடடா!

    வேற ஊருக்குப் போய் புதுசா குடும்பம் தேடிக்கிட்டாலும், அம்மா மேல அன்பு இருக்கும்-ல? ஐயோ, என்ன ஆனாளோ? எப்படி உண்கிறாளோ-ன்னு ஒரு சின்ன அக்கறையாச்சும் இருக்கும்-ல தாய் மேல?

    விசாரிச்சானா? இவிங்களாத் தானே தேட ஆரம்பிச்சிக் கண்டு புடிச்சாங்க!


    வூட்டை வுட்டு ஓடிப் போன குழந்தை கூட, மொத மாச சம்பளம் வாங்கும் போது அம்மாவை நினைச்சிக்கும். இல்லீன்னா ஏதாச்சும் ஒப்புக்கு அனுப்பிக் காப்பாத்தும்! இல்ல திரும்பி வந்த பிறகாச்சும்,

    தாயாக வணங்க வேண்டிய அம்மாவை,
    பேயாக ஓட விடாது போஷிக்கும்!

    என்ன தாயன்பு! என்ன தாயாக வணங்க வேண்டிய குணம்! சூப்பரா எடுத்துக் காட்டினீங்க!
    பரம தத்தா, உன் காலைக் காட்டுப்பா! உனக்கு உற்சவம் நடத்துறது தப்பே இல்லை!
    அறியாச் சிறுவன், உன்னைய தெரியாமச் சொல்லிட்டேன்! ஆத்ம ஜோதி தரிசனம் பெற்ற உன் மகிமையே மகிமை!

    ReplyDelete
  89. @கீதாம்மா
    //இறைவன் அவர் மனம் பக்குவம் அடைகின்றதா? இல்வாழ்வா? ஈசன் திருவடியா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் என்பதற்கு வைத்த சோதனையாகவே கொள்ள வேண்டும்//

    இங்கே இறைவனையோ, காரைக்கால் அம்மையாரையோ, இல்லை சம்பந்தப் பெருமானையோ சிறு துளி கூட குற்றம் சொல்லலையே!

    இது காரைக்கால் அம்மையாரின் கர்ம வினை தான்! அவர் ஆன்மீக ஏற்றம் பெற கயிலைப் பெருமான் நடாத்திய நாடகம் தான்!
    அது அம்மைக்கும்-ஈசனுக்கும் உண்டான இறைத் தொடர்பு.

    ஆனால்...
    ஆனால்...
    ஆனால்...
    அந்தத் தொடர்பில் அம்மையின் சுற்றமும் சமூகமும் "நியாயமாக" நடந்து கொண்டதா?
    இதே கர்மவினை கான்செப்ட்டை, எல்லா கொடுமைக்கும் நிராதரவுக்கும் காட்டலாமா?
    நிராகரித்தவர்கள் எல்லாம் இறை நாடகத்தில் மக்கள்-ன்னு, அத்தனை நிராகரித்தவருக்கும் வருடா வருடம் உற்சவம் நடத்தலாமா?

    சிவ சிவ!
    புனிதப் பூச்சுக்கும் ஒரு அளவு வேணும்!
    இப்படிப் பூசப் பூச, தசாவதாரம் அப்துல்லா மேக்கப் போல், பூச்சு பளிச்சுன்னு தெரியுது! :(

    ReplyDelete
  90. //Raghav said...
    இன்னைக்கு தான் குறியீட்டுக் கவிதைன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.. //

    நன்றி ராகவ்! குறியீட்டுக் கவிதைகள் இப்பல்லாம் தமிழிலக்கிய அரங்கில் பிரபலம் தான்! கனிமொழி கூட எழுதுகிறார். ஆனால் இது ஆறாம் நூற்றாண்டு குறியீட்டுக் கவிதை! அதான் அம்மையின் சிறப்பே!

    ReplyDelete
  91. //Anonymous said...
    எமது மனநிலையை வைத்து அடுத்தவர் மனநிலையை கணிப்பதால் தான் எல்லா பிரச்சனைகளுமே:)//

    ஆகா, யாருங்க அனானி ஐயா/அம்மா நீங்க? பெயர் சொல்லுங்களேன்! நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள்! மிகவும் சரி!

    //எனது விருப்பம் இதுதான் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்களே என்று எங்காவது அழுதிருகிறாரா?
    "எனக்கு வாழ்க்கை தர மறுத்து விட்டாரே" என்று எந்த இடத்திலாவது புலம்பியிருக்கிறாரா?//

    பாடல்களையும் பதிகங்களையும் முன் வைக்கட்டுமா?
    அம்மையார் அழுது புலம்பவில்லை!
    ஆனால் இது போன்ற பேய் மகளிரின் பரிதாப நிலையைப் பதிகங்களில் காட்டியுள்ளார்.

    நீங்கள் வாசித்துவிட்டு வருகிறீர்களா? இல்லை அத்தனை பதிகத்தையும் இங்கு எடுத்து வைக்கட்டுமா? வாசிங்க! உங்களைப் போல மனசாட்சி இல்லாதவங்க கண்ணுல கூடத் தண்ணி தானா கொட்டும்!

    //யாரானாலும் அவர் அவர் நிலைக்கு அவரவரே உரியவராவார்//

    ஆமாம்! ரொம்ப சரி!
    கொலையுண்டவர் சம்மதித்ததால் தானே கொலையாளி கொல்ல முடிந்தது? வாழணும்-னு நினைச்சிருந்தா எப்படியாவது எதிர்த்துப் போராடி இருக்க மாட்டாங்களா என்ன? ஹா ஹா ஹா! நல்லா இருக்குங்க உங்க நியாயம்!

    அவரவர் வாழ்விற்கு அவரவர் தான் ஆதாரம்!
    ஆனால் அதுக்காக சமூகக் கொடுமைகளைத் தடுத்துக் கேட்கக் கூடாதுன்னு ஒன்னுமில்லை!


    //இந்த இல்வாழ்க்கை தான் வேண்டுமென நிணைத்திருந்தால். மாம்பழத்தை சிவனிடமிருந்து பெற்றதைப் போல், பரமதத்தனின் மனமாற்றத்திற்காகவும் வேண்டி இல்வாழ்வைத் தொடர்த்திருப்பாரே!
    ஏன் அப்படிச் செய்ய வில்லை?/

    அதானே உங்கள மாதிரி சில பேரின் ஸ்ட்ராங் பாயிண்ட்?
    அந்தப் பொண்ணு பேதை! புருஷனுக்காக வேண்டத் தெரிஞ்சவளுக்கு தனக்காக வேண்டத் தெரியலை!:(
    உங்க பாஷையில் சொல்லணும்னா "பத்தினித் தெய்வம்"!


    //
    //* சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?//
    அவர் இங்கு இருந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தை குட்டி பெற்று வாழவில்லையே!
    அவரும் அப்படியே எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டாரே
    //

    இல்லை, அனானி என்பதால் கடுமையாவே கேக்குறேன்! தெரிஞ்சே தான் ஜல்லி அடிக்கறீங்களா? எத்தனை முறைய்யா சொல்லுறது? விளங்கல உமக்கு?

    சம்பந்தப் பெருமான் கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியா இருந்தாரே-அப்படின்னா கேட்டேன்?
    அவர் ஜோதியில் ஐக்கியமானாரு! சரி தான்! அதெல்லாம் அப்புறம்!

    அவர் இறைப்பணி செய்ய வந்தவர்! இறைவனுக்கே ஆட்பட்டவர்! அற்புதங்கள் புரிந்தவர் - இதெல்லாம் முன்னாடியே தெரியும் தானே உங்களுக்கு? அப்புறம் எப்படி முதற்கண் கல்யாணப் பேச்சையே எடுத்தீங்க? கல்யாணமும் கட்டி வச்சீங்க? அதைச் சொல்லுங்க பர்ஷ்ட்டு!

    அற்புதங்கள் புரிஞ்ச ஒரு மகானோடு, ஒரு சாதாரணப் பெண் எப்படி வாழ்வாள்? அவரைப் பாக்கும் போதெல்லாம் எம் இறையே, ஈசா-ன்ன-ல்ல அவளுக்குத் தோனும்?

    அதைத் தானே பரம தத்தனுக்குச் சொன்னீங்க? புனிதாவைப் பாக்கும் போதெல்லாம் இறையே, எம் அம்மா - அப்படின்னு தானே தோனனும்! அதானே நியாயமும் கூட! :(

    புனிதவதி கதையிலாச்சும் அவ புனிதள்-ன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது !
    இங்கே சம்பந்தரைப் பத்தி தான் முன்னாடியே தெரியுமே? தெரிஞ்சே எப்படி ஐயா கட்டி வச்சீங்க?
    அதச் சொல்லுங்கய்யா மொதல்ல! வந்துட்டாங்க புனிதப் பூச்சு பூச!

    அந்தப் பொண்ணுக்கு நடந்தது பாவம் கொடுமை தான்! ஆனா அப்புறம் முழுநேர இறையடியாரா ஆயிட்டா! - அப்படின்னு சொல்ல வாய் வருதா உங்களுக்கு எல்லாம்?

    ReplyDelete
  92. //paravasthu said...//
    சுந்தர் அண்ணா, மன்னிச்சிருங்க என்னை! நீங்க எம்புட்டு தத்துவம் எடுத்து வச்சாலும், மொதல்ல ஒரு அபலையின் கண்ணீர்! அப்புறம் தான் எல்லாம்!

    //அப்படியே செய்தாலும் அது காம்யமான விஷயமாகத்தான் இருக்க முடியும்//

    ஒரு சரணாகதன் உலக வாழ்வில் காம்யமான கடமைகளையும் செய்யறான் என்பதை மறக்காதீங்க! ஏதோ தனியா வாழ்ந்தா தன் இளமை கேலி பேசப்படுமே-ன்னு எல்லாம் அவ பேயாப் போயிடலை!
    பேய் நிலைக்குத் தள்ளப்பட்டாள்! அவளை யார் கூடவும் சேக்க வேணாம்! காக்க கூடவா வேணாம்?

    //ஆனால் அம்மையார் எந்த பொன்னையும் பொருளையும் வேண்டவில்லை. மாறாக இறைவன் அருள் தானே வேண்டினார்?//

    இறையருளும், இனிய வாழ்வுமே வேண்டினார். இல்லறத்தில் இருந்தே எளிய இறைப்பணி செய்யத் தான் விரும்பினார்!

    அதுக்காகத் தானே காணமற் போனவனைத் தேடு தேடு-ன்னு தேடினார்! அவன் கெளம்பிப் போயிட்டான் என்றவுடனேயே பேயாப் போக வேண்டியது தானே? ஏன் போகலை?


    //அது கிடைத்த பின், உடல் என்னிலைமை அடந்தால் என்ன, எவ்வுருவம் கொண்டால் என்ன?அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்தத்தை அடைந்த பின், மற்றெப்பொருளும் இழிவு தானே?//

    இதை விடத் தத்துவமாக அடியேன் பேசட்டுமா? திருவாய்மொழி எடுத்து வைக்கட்டுமா?
    அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்தத்தை, வேதியர் விழுப் பொருளை, அரங்க நகர் அப்பனைத் தான் மனக் கண்ணால் எப்பவோ கண்டு விட்டாரே திருப்பாணாழ்வார்? புறக் கண்ணால் கண்டால் என்ன? காணா விட்டால் என்ன?


    அப்பறம் எதுக்கு அரங்கன் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னான்?
    அதுவும் அவரைக் கல்லால் அடித்த அந்தணரின் தோள் மீது ஏற்றி, ஏன் எடுத்து வரச் சொன்னான்?
    அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்த அரங்க நகரப்பனுக்கு புறக் கண்ணை விட, அகக் கண்ணின் அருமை தெரியாதோ?

    அது ஆன்மீகமோ, வேறு எந்த மீகமோ, எதிலும் சமூக நீதி மிகவும் முக்கியம்! எல்லாவற்றுக்கும் தத்துவம் சொல்லிச் சமாதானம் தேடி விட முடியாது!

    //ஆண்டாள் மற்ற பெண்களைப்போல் ஒரு ஜீவாத்மாவைத் திருமணம் செய்து இல்லற வாழ்வு எய்தி இருந்தால் , இச்சிறப்பு எய்தி இருக்க முடியாது என்பது அடியேனின் சிறு கருத்து//

    அடிப்படையே தவறாகப் புரிஞ்சிக்கிட்டீங்க! ஆண்டாளை மானிடனைக் கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லலை! மாறாக அவள் "விபரீத ஆசையை", கண்ட தத்துவங்களும் சொல்லி ஒதுக்காது, நியாயமாக நடந்துக்கிட்ட சமூகத்தைப் பாராட்டவே செய்கிறேன்!

    //இப்பேற்பட்ட உத்தமி, உலகிற்குக் கிடைக்க அடையாளம் காட்டும் கருவியாய் இருந்தவன்.
    அம்மையின் உயர்வுக்கு, ஏதோ ஒரு வழியில் காரணகர்த்தா வாக வந்த பரமதத்தனுக்கு நம்மால் ஆன ஒரு சிறு பிறிவு உபசார விழா//

    இராமானுசரின் ஸ்ரீபாஷ்யமே கிருமி கண்ட சோழன் விரட்டியதால் தான் கிடைச்சது! அவன் விரட்டாம இருந்திருந்தா மேலக்கோட்டையாவது ஒன்னாவது?

    பேசாம மேலக்கோட்டையில் வருசத்துக்கு ஒரு நாள், இல்லை, ஒரு அரை நாழிகை...கிருமி கண்ட சோழனுக்கு உற்சவம் ஒன்னு எடுக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம், தத்துவ தர்சன வைஷ்ணவப் பெருமக்களை!

    எல்லாமே இறையருள்! இறை நாடகம்! இறைத் திருவிளையாடல் தானே! ஏதோ ஒரு வழியில் காரணகர்த்தா வாக வந்த கிருமி கண்ட சோழனுக்கு நம்மால் ஆன ஒரு சிறு உபசார விழா! ஹரி ஓம்! :(

    ReplyDelete
  93. //குமரன் (Kumaran) said...
    அடிப்படையாக சொல்ல வந்ததில் தவறான தகவல் இல்லை இரவி. திருவதிகையில் இந்த திருமடம் இல்லை. திலகவதியாரின் திருப்பெயரால் புதுக்கோட்டையில் இருக்கிறது//

    ஓ..அப்படின்னா சரி குமரன்!

    //படங்களும் பார்த்திருக்கிறேன். இப்போது கூகிளார் ஒன்றையும் காட்ட மாட்டேன் என்கிறார்//

    உம்...திலகவதியார் பெயரில் பெண்களே திருமடம் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் அண்மையில் தோன்றாது, முன்னரே இருந்திருக்குன்னா இரட்டிப்பு மகிழ்ச்சி!

    நானும் விசாரிக்கிறேன்! தேடுகிறேன்! தகவல் கிடைத்தவுடன் அதைத் தனியாகவே பதிவிடுவதில் அடியேனுக்கு பெருமையும் விம்மிதமும் மகிழ்ச்சியும் கூட!

    ReplyDelete
  94. //குமரன் (Kumaran) said...
    வெங்கமாம்பாவைப் பற்றியும் பருத்திக் கொல்லை நாச்சியாரைப் பற்றியும் வேறு யாராவது அறிந்திருந்தால் அவர்கள் எழுதட்டும். யாரும் எழுதவில்லை என்றால் நீங்கள் தான் எழுத வேண்டும். இறைவன் திருமுக உல்லாசத்திற்காக//

    ஹா ஹா ஹா!
    அடியேன் சொன்னது அடியேனுக்கேவா? :)
    சரி! ஆனால் இங்குள்ள அடியவர்கள் திருமுக உல்லாசமும் இருக்கு! அதையும் பாக்க வேண்டி இருக்கு! :)

    ReplyDelete
  95. காரைக்காலம்மையாரிடமிருந்து பரமத்தன் விலகியமையை சமுதாயக் குற்றமாக்கி நீலிக்கண்ணீர் வடிப்பவருக்கு.....

    வேங்கடநாதர் (ராகவேந்திரர்) தனது மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்றது ஏன் சமுதாயக் குற்றமாக இவர் அறிவுக்கு எட்டவில்லை?

    (இப்படி எழுதையத்தற்கு அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.)

    அவரவர் விரும்பிய மார்க்கங்களை மெச்சுவதில் தவரில்லை.

    ஆனால் அடுத்தவர் மார்க்கங்களை மாசு பண்ணுவது மன்னிக்க முடியாதது,

    ஆண்டவன் அறிவைக் கொடுத்தது அப்பால் போவதற்கு!

    அடாவடித்தனம் செய்வத்ற்கல்ல.....

    ReplyDelete
  96. \\காரைக்காலம்மையாரிடமிருந்து பரமதத்தன் விலகியமையை சமுதாயக் குற்றமாக்கி நீலிக்கண்ணீர் வடிப்பவருக்கு.....

    வேங்கடநாதர் (ராகவேந்திரர்) தனது மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்றது ஏன் சமுதாயக் குற்றமாக இவர் அறிவுக்கு எட்டவில்லை?

    (இப்படி எழுதையத்தற்கு அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.)//

    திருவாளர்,திருமதி கரந்துரு கொண்டவரே(anonymous)

    ராகவேந்திரர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.மீண்டும் இல்வாழ்க்கை கொள்ளவில்லை. இந்து மதக்கோட்ப்பாட்டின் படி பிரம்மச்சரியம், க்ருஹஸ்தாஸ்ரமம், முடித்த பின், முறைப்படி சன்னியாஸம் கொள்கிறார்.அதுவும் சமூகத்திற்காக. தன் சுயநலத்திற்காக வேரு ஒரு மருமணம் செய்யவில்லை.

    மாறாக,
    பிரமதத்தன், தன் குடும்பத்திற்கும் நன்மை செய்யவில்லை, சமூகத்திற்காக, இறைப்பணியும் மேற்கொள்ளவில்லை.தன் மனைவி எப்படி இருப்பாளோ என்று சற்றும் கவலை கொள்ளவில்லை. மாறாக, தமிழ்த் திரைப்பட இலக்கணங்களில் உள்ளது போல காதலியின்/மனைவியின் பெயரை, குழந்தைக்கு வைத்துவிட்டு, போலி மரியாதை செய்கிறார். அவ்வளவு தான்.(ஒரு வேளை, இதை முன் உதாரணமாகக் கொண்டு தான், தமிழ் திரைப் படங்களில், காதலி பெயரைக் குழந்தைக்கு வைக்கிறார்களோ?

    இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒப்பு நொக்கு, பெண் பக்தர்களை, சமூகம் சரியாக நடத்தவில்லை என்பது தான்.

    அப்படியே நீங்கள் கூறீயபடி ராகவேந்திரர் தவறு செய்து இருந்தார் என்று கொண்டாலும், இங்கு கூறப்படும் முக்கியக் குற்றச் சாட்டு, ஆண்களை சமூகம் வேறு மாதிரி நடத்துகிறது. பெண்களை வேறு மாதிரி நடத்துகிறது என்பது தான். தாங்களே கூறிவிட்டீற்கள், ராகவேந்திரர், தவறு செய்தார் என்று. அப்படி இருக்கும் போது , சமுதாயம், அவரை ,கேள்வி கேட்டதா? இல்லையே.மாறாக, அவரை வணங்கி வழிபட்டது. இங்கு திலகவதியார், நல் வாழ்க்கை வாழவோ, கணவரைக் கண்டு பிடிக்கவோ யாரும் முயற்சி செய்யவில்லை.அது தான் கேள்வி.

    (தாங்கள் பெயர்/ஊர் தெரிவித்து, விவாதம் செய்தால், அது பயனுள்ளதாக இருக்கும். நாம் சரியோ தவறோ யாரும் நம்மைத் தாக்கப்போவதில்லை. மற்றும் இது அரசியல் மேடை இல்லை(வீட்டிற்கு யாரும் ஆட்டோ(auto) அனுப்ப மாட்டார்கள்.

    ReplyDelete
  97. //Anonymous said...
    காரைக்காலம்மையாரிடமிருந்து பரமத்தன் விலகியமையை சமுதாயக் குற்றமாக்கி நீலிக்கண்ணீர் வடிப்பவருக்கு.....//

    வாங்கய்யா! நான் நீலிக்கண்ணீர் வடிக்கறது இருக்கட்டும்! உங்க கிட்ட அந்தக் கண்ணீர் கூட இல்லையே!

    //வேங்கடநாதர் (ராகவேந்திரர்) தனது மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்றது ஏன் சமுதாயக் குற்றமாக இவர் அறிவுக்கு எட்டவில்லை?//

    அட, எனக்கு அறிவு இருந்தாத் தானே எட்டுவதற்கு?
    மொதல்ல கண்ணைத் தொறந்து பாருங்க, ராகவேந்திரரை இங்கு குறிப்பிட்டதே அடியேன் தான்!

    //அவரவர் விரும்பிய மார்க்கங்களை மெச்சுவதில் தவரில்லை.
    ஆனால் அடுத்தவர் மார்க்கங்களை மாசு பண்ணுவது மன்னிக்க முடியாதது//

    யார் இங்கே அடுத்த மார்க்கத்துக்கு மாசு தூசு எல்லாம் கற்பிக்கறாங்க?
    நல்லா உங்க ஸோ கால்ட் அகக் கண்ணைத் தொறந்து வச்சிப் பாருங்க! மார்க்கத்தைப் பழிக்கலை! மாறாக மார்க்கத்தின் பெருமையைச் சொல்லி, மார்க்கத்தின் முதல் Iconic Poetryஐ வெளியில் கொண்டு வந்திருக்கேன்!

    எதுனா ஒன்னுன்னா, உடனே எடுப்பீங்களே ரெடிமேட் ஆயுதம், மார்க்கத்தைப் பழிக்கறாங்க, சுழிக்கறாங்க-ன்னு?

    இன்றும், இந்த மேன்மை கொள் மார்க்கம், தமிழைப் பரவலாக அணைக்க முடியாமல், நந்தனாரை இருந்த இடத்தில் மீண்டும் நிறுத்த முடியாமல், தில்லையிலும் மற்ற தலங்களிலும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டுத் தவியாய் தவிப்பதற்குக் காரணமே, உங்களைப் போன்ற சிவ எதிரிகள் தான்!

    உங்களுக்குச் சிவம் பெரிதில்லை!
    உங்கள் சட்ட திட்ட அவம் தான் பெரிது!

    //ஆண்டவன் அறிவைக் கொடுத்தது அப்பால் போவதற்கு!
    அடாவடித்தனம் செய்வத்ற்கல்ல.....//

    அதான் சொல்றேன்!
    அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய்...நீங்க அப்பால் போங்க!
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டித் தான், இந்தப் பதிவை இட்டேன்!

    அடாவடித்தனம் நீங்க செய்யாதீங்க! நீங்க யாருன்னு தெரியும்! உங்க ஐ.பி.முகவரியும் தெரியும்!

    ReplyDelete
  98. //அடாவடித்தனம் நீங்க செய்யாதீங்க! நீங்க யாருன்னு தெரியும்! உங்க ஐ.பி.முகவரியும் தெரியும்! //

    பாவம் அவரை விட்டுவிடுங்கள். பொழைச்சுப் போறார், பிரம்மஹத்தி தோஷத்தை வரவழைச்சிக்காதிங்க அம்புட்டுதான் சொல்வேன்
    *****

    இங்கு பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுதல் பற்றிய புலனத்தில் பேசுகிறீர்கள். நன்றாக இருக்கிறது. இறைவனின் குழலோசைக்கு மயங்கும் பெண்கள் காலம் காலமாக இருந்துவருகிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். எனக்கு இவைப் பற்றி பலவிடயங்கள் தெரியும் என்றாலும் அதனை வழக்கம் போல் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  99. //யார் இங்கே அடுத்த மார்க்கத்துக்கு மாசு தூசு எல்லாம் கற்பிக்கறாங்க?//ந்

    நீங்கள் எழுதியவற்றை முழுவதும் 4தடவை படித்துப் பாருங்கள். இருக்கும் தூசு மாசு தெரியும்.

    //உங்களுக்குச் சிவம் பெரிதில்லை!
    உங்கள் சட்ட திட்ட அவம் தான் பெரிது!//

    உங்களுடைய கொள்கையை எனது பக்கம் திருப்பிவிட்டதற்கு நன்றி.

    //அடாவடித்தனம் நீங்க செய்யாதீங்க! நீங்க யாருன்னு தெரியும்! உங்க ஐ.பி.முகவரியும் தெரியும்!//

    நானே அங்கன இங்கன என்னு தொக்கிகிட்டு திரியிறோ நீங்களு முகவரி தேடிபிடிச்சு வரபோறீங்களா?



    என்னய பொழக்கவச்சதுக்கு கோவி.கண்ணனுக்கு தாங்ஸ்.

    ReplyDelete
  100. மிஸ்டர் நீலிக் கண்ணீர் அனானி அவர்களே!
    உங்களை முகமாக வைத்து, இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்!

    நீங்கள் யாரை வேண்டுமானாலும் தக்க நிலைப்பாடுகளுடன் விமர்சனம் செய்யலாம். அது ராகவேந்திரரோ, ராமானுசரோ, சங்கரரோ, அருணகிரியோ - யாராயினும் சரி! விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று யாருமே கிடையாது!
    அடியேன் பதிவில் நாத்திக/ஆத்திக கருத்துரையாடல்களுக்குக் கூட இது வரை தடை இருந்ததில்லை!

    ஆனால் ஒரு சமூகப் பார்வையைக் காட்டும் போது, அதைத் திரித்து, சைவ/வைணவ பேதம் ஆக்கிக் குளிர் காய நினைத்தால்....முத்திரை குத்த நினைத்தால்.....

    தக்க ஆதாரங்களுடன், இனி அடி பலமாக விழும் என்பதையும் இங்கே விஞ்ஞாபித்துக் கொள்கிறேன்!

    வீணான சைவ/வைணவ ஜல்லி, ஜஸ்ட் ஃபார் ஃபன் என்று அடித்து அடித்து, ஆளை முத்திரை குத்திப் புறம் தள்ளும் பழைய டெக்னிக்குகள் இனி வொர்க் அவுட் ஆகாது!

    பழைய "அடியேன் அடியேன்" கேஆரெஸ்-ஸையும் நீங்கள் இனி பார்க்க முடியாது! என்றும் உங்களை முகமாக வைத்துச் சொல்லிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  101. @சுந்தர் அண்ணா
    //அப்படியே நீங்கள் கூறீயபடி ராகவேந்திரர் தவறு செய்து இருந்தார் என்று கொண்டாலும், இங்கு கூறப்படும் முக்கியக் குற்றச் சாட்டு, ஆண்களை சமூகம் வேறு மாதிரி நடத்துகிறது. பெண்களை வேறு மாதிரி நடத்துகிறது என்பது தான். தாங்களே கூறிவிட்டீற்கள், ராகவேந்திரர், தவறு செய்தார் என்று. அப்படி இருக்கும் போது , சமுதாயம், அவரை ,கேள்வி கேட்டதா?//

    சரியான புரிதலுக்கு நன்றி அண்ணா!
    ராகவேந்திர சுவாமிகள் பற்றிய நுண்ணிய ஆய்வை இந்த அனானி அவர்கள் தனிப் பதிவாக இடட்டும்! தவறே இல்லை! அதில் உள்ள பார்வைகளைக் கண்டு, நியாயங்கள் இருந்தால் புரிந்து கொள்ளப் போகிறோம்! இல்லையேல் அப்படி இல்லை என்று விவாதிக்கப் போகிறோம்!

    அதை விடுத்து, மாசு கற்பித்தாய், தூசு கற்பித்தாய் என்று ஒருக்காலும் சொல்லப் போவதில்லை!

    @அனானி
    //நீங்கள் எழுதியவற்றை முழுவதும் 4தடவை படித்துப் பாருங்கள். இருக்கும் தூசு மாசு தெரியும்//

    400 முறை படித்துக் கொள்ளுங்கள்! ஒரு தூசும் இல்லை! மாசும் இல்லை!
    இங்கே பெண்கள் படித்துக் கருத்து சொல்லி உள்ளார்கள்! மாலன் போன்றவர்கள் வாசித்துப் பேசி உள்ளார்கள்! பிரபா அண்ணாச்சி அச்சு இதழுக்கு அனுப்பச் சொல்லி இருக்கார். யாருக்கும் மாசு தூசு தெரியலை!

    மார்க்கத்தைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, மகேஸ்வரனையே புறம் தள்ளும் மார்க்க சீலர், உங்களுக்குத் தான் அப்படித் தெரியுது!

    அடியேனின் எண்ணிலாத் தேவாரப் பதிவுகளும், கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைச் சிவபெருமான் பதிவுகளும், முருகப் பெருமான் தரிசனப் பதிவுகளும், அன்னையின் அடிக்கமலப் பதிவுகளும் சொல்லும் என்னுடைய மாசு தூசு பற்றி!

    மகேஸ்வரப் ப்ரீதயர்த்தம்-ன்னா இருக்கீங்க?
    மார்க்கப் ப்ரீதயர்த்தம்-ன்னு தானே இருக்கீங்க!
    ஏன்னா, நீங்க உண்டாக்கினதாச்சே!

    மாணிக்கவாசகர் உம்மைப் போன்றவர்களைத் தெரிஞ்சு தான் பாடி இருக்காரு!
    பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
    பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
    நேசமும் வைத்தனையோ?

    முடிந்தால் இங்கு பேசப்பட்ட அத்துணைக் கேள்விகளுக்கும் பதில் எடுத்து வையுங்கள்!
    ஆட்களுக்கு முத்திரை குத்துறதை விட்டுட்டு, கருத்துக்கு விவாதம் செய்யுங்கள்!

    ReplyDelete
  102. //கோவி.கண்ணன் said...
    பிரம்மஹத்தி தோஷத்தை வரவழைச்சிக்காதிங்க அம்புட்டுதான் சொல்வேன்//

    ஹா ஹா ஹா! நீங்க வேற கோவி அண்ணா!
    எங்கும், எதுவுமே பிரம்மமாகத் தான் இருக்கு! இதுல பிரம்ம ஹத்தியாவது? சுத்தியாவது? :)

    //இங்கு பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுதல் பற்றிய புலனத்தில் பேசுகிறீர்கள். நன்றாக இருக்கிறது//

    நன்றி!

    //இறைவனின் குழலோசைக்கு மயங்கும் பெண்கள் காலம் காலமாக இருந்துவருகிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். எனக்கு இவைப் பற்றி பலவிடயங்கள் தெரியும்//

    சூப்பர்! :)

    //என்றாலும் அதனை வழக்கம் போல் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்க்கிறேன்//

    ஹிஹி!
    நீங்கள் இங்குப் பகிர்ந்து கொள்ளத் தடை ஏதுமில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!

    நீங்கள் பகிர்ந்து கொண்டால், அதன் மீது "தெளிந்த நல்" விவாதங்கள் நடக்கும்! தெரிந்து தெளிவோம்!
    உங்களை மாசு தூசு கற்பிக்கிறாய்-ன்னு முத்திரை குத்த மாட்டோம்! - என்பதும் உங்களுக்குத் தெரியும்!

    அப்புறம் உங்கள் விருப்பம் தான் கோவி அண்ணா!

    ReplyDelete
  103. புனிதவதியாருக்கு இழைக்கப்பட்டது கொடுமை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது. பக்தியோடு இருந்தார். ஆனால் குடும்பம் நடத்த வேண்டும் என்றுதானே விரும்பினார். அதற்கு வழியில்லை என்றுதான் வேறுவழி தேடிப் போனார். அப்படித் தேடிய வழி நல்வழியாகப் போனதால் நாமும் அவ்வம்மையாரைப் பாராட்டுகிறோம்.

    என்னைப் பொருத்த வரையில் பரமதத்தன் செல்வம் மட்டுமே அறிந்த மூடன் என்பேன்.

    தன்னை விட மனைவி பெரியவளாகி விட்டாலே உண்டாகும் ஒருவித தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இந்தத் தாழ்வு மனப்பாங்கு இயல்பானது என்று யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஆணாத்திக்கதிற்கு கிரீஸ் ஊற்றுகின்றவர்கள்.

    நான் நினைக்கிறேன்.... பக்தியுடைய ஆண்களின் மனைவிகளுக்கு அவரோடு வாழ வேண்டுமா... கூடாதா என்று யோசிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்படி அவள் விலகியிருக்க விரும்பியிருந்தால்... அவளையும் தவறாகத்தான் பேசியிருக்கும்.

    அந்த வகையில் காரக்காலம்மையார் வருத்தத்திற்குரியவரே. இங்குள்ள பெண்களையெல்லாம் ஒன்று கேட்கிறேன். உங்களில் எத்தனை பேருக்கு பக்தி இருக்கிறது? உங்கள் கணவருடைய பக்தியை விட அது பெரியதா? சிறியதா? ஆண்கள் கோயிலுக்குப் போவதை விட பெண்கள் கோயிலுக்குப் போவதுதானே நிறைய. அப்படியானால் எல்லா ஆண்களும் தத்தமது மனைவியை விட்டு விலகிட வேண்டியதுதானே. ஒத்துக்கொள்வீர்களா?

    ராகவேந்திரரைப் பற்றிப் பேச்சு வந்தது. என்னுடைய கருத்துப்படி ராகவேந்திரர் செய்ததும் பிழையே. பொதுநலம் என்ன வந்தது அங்கு? ராகவேந்திரர் சாமியார் ஆகவில்லையென்றால்... வேறொருவர் சாமியார் ஆகிவிட்டுப் போகிறார். ஆனால் சரஸ்வதி அம்மாளுக்கு? வேறொரு துணையைத் தேடுவது என்ற யோசனை கூடத் தோன்றத் தெரியாத அப்பாவித்தனத்தில்தானே கிணற்றில் குதித்தார். பெற்ற பிள்ளையை வளர்ப்பதை விட பெரிய கடமை என்ன? சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே. அதை வெறொருவர் செய்திருந்தாலும்.... தான் செய்யாமல் விட்டது தவறு என்பதே என் கருத்து.

    பொதுவாகவே இந்தியச் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு ஒரு நீதிதான். ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்றுதான் 20ம் நூற்றாண்டிலும் எழுத வைத்திருக்கிறது தமிழ்ப் பண்பாடு. அத்தனை கதாநாயகர்களையும்.. கதாநாயகி எப்படியிருக்க வேண்டும் என்று பாட வைக்கிறது.

    எலும்பை மெல்லும் பட்டினி நாய்...நன் குருதியைத் தானே சுவைப்பது போல.... இந்தப் பெண்ணடிமைத்தனத்திற்கு நாம் இன்னும் கிரீஸ் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  104. இன்னொரு விதமாகவும் யோசிக்கத் தூண்டுகிறது இந்தப் பதிவு....

    ஆண்டாளுக்கு அவளுக்கு விரும்பிய வாழ்வு கிடைத்தது.... சம்பந்தருக்கு ஞானப்பாலை உண்டு பல தமிழ்ப் பாக்களைக் கொண்டு தந்த பிறகும் பெண்டு கிடைத்தது. சுந்தரரைக் கேட்கவே வேண்டாம். மாலயன் காணாத அடியும் முடியும்... சங்கிலியார் வீட்டு நிலை கண்டது.

    இவர்கள் எல்லாம் ஒரு பக்கம்....

    மறுபக்கத்தில்..... தன்னந்தனியாளாய்....உழவாரஞ் செய்த அப்பர்...

    பேயாய் அலைந்தும் தீயாய் வாழ்ந்து ஈசனைச் சேயாய்க் கொண்ட புனிதவதியார்.

    அக்காவையும் மனைவியையும் கைவிடாவிட்டாலும்... கூடி வாழாமல் பிரிந்தே இருந்த அருணகிரி.

    அளப்பறியாச் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மனையாளைப் பிரிந்த பட்டினத்தார்.

    இவர்கள் எல்லாரும் ஒரு பக்கம்...

    எங்கேயோ இடிக்கிறதே... ஏன் இடிக்கிறது?

    திருநீலகண்டரை இதில் சேர்க்க முடியாது. ஏனென்றால் அங்கு அருள் இருவருக்குமே கிடைத்தது.

    ReplyDelete
  105. ஆன்மீகத்தில் பெண் துறவிகள் பற்றிப் பேசும் போது ஒன்றை மறந்துவிடுகிறோம். லட்சக்கணக்கான கன்னிகா ஸ்திரிகள் எனப்படும் கிறித்துவ சகோதரிகள் அனைவருமே இறைச் சேவையில் தன்னையே அற்பணித்துக் கொண்டு வாழ்பவர்கள், உலக அளவில் பேசப்படும் பெண் துறவி என்றால் அன்னை தெரசா வுக்கே அதில் முதலிடம் அதை இந்துக்களும் ஒப்புக் கொள்வார்கள்.

    பதிவர் நண்பரின் சகோதரி ஒருவரும் கன்னிகா ஸ்திரியாக சேவை நடத்துகிறார். மணிமேகலை பெளத்த துறவியாகவும், நீலிகேசி சமணத்துறவியாகவும் போற்றப்பட்டு அவர்கள் பற்றிய இலக்கிய புனைவுகளும் இருக்கின்றன.

    ReplyDelete
  106. அடியவர்கள் வரலாறு எழுதுங்கள்,
    ஆனால் அதை உங்கள் உணர்வுகளின் விருப்பப்படி மாற்றி சித்தரிக்க முயலாதீர்கள்.
    அது ஒன்றும் சினிமாக் கதையல்ல விமர்சிப்பதற்கும் வேடிக்கை செய்வதற்கும்,


    இங்கு பரமதத்தனை, புனிதவதியாரை பேயுருவில் அலைய விட்டவன், அவ வாழ்வையே கெடுத்து விட்டான், தான் மட்டும் இன்னெருத்தியைக் கட்டி இன்பமாக வாழ்ந்தான், அவனை படகில் ஏற்றி விழா செய்வதெல்லாம் வெட்கம் வெட்கம்
    என்றெல்லாம் எழுதி அவனை வில்லனாக சித்தரித்துக் கட்ட முயலுகிறீகள். அது தவறு,


    உள்ளதை உள்ள படி ஒவ்வொரு தலைமுறையினரும் அறிய வேண்டியே...
    இலகுவாக விளங்கிக் கொள்ளவேண்டியே

    புராணங்களை, இதிகாசங்களை, அடியவர்கள் வரலாறுளை...

    திருவிழாக்களாக, நாடகங்களாக, பாடல்களாக, கதைகளாக நம்முன்னோர்கள்
    வடிவமைத்திருக்கிறார்கள்.

    அந்தந்த சீனை அப்படி அப்படியே காட்ட வேண்டியது தானே அவர்கள் கடமை.

    இவையெல்லாம் உங்களுக்கு தெரியாதவையல்ல..... அப்படியிருந்தும் ஏன் இப்படியெழுதுகிறீகள்,
    அதுதான் எங்கேயோ உதைக்கிறது,

    ReplyDelete
  107. //Anonymous said...
    இவையெல்லாம் உங்களுக்கு தெரியாதவையல்ல.....//

    அனானி ஐயா/அம்மா
    எனக்குத் தெரியும்-னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
    மீண்டும் சொல்கிறேன்! உங்கள் பெயரைச் சொல்லிவிட்டு பின்னர் இப்படியெல்லாம் உரையாடுங்கள்!

    //அப்படியிருந்தும் ஏன் இப்படியெழுதுகிறீகள்,
    அதுதான் எங்கேயோ உதைக்கிறது//

    எங்கே உதைக்கிறது?
    எதை உதைக்கிறது?
    யாருக்கு உதைக்கிறது?

    //அடியவர்கள் வரலாறு எழுதுங்கள்//

    அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
    என்று அடியார்களை ஆண்டவனை விட முன்னுக்கு வைப்பவன் தான் அடியேன்! உங்களைப் போல அடியவர்களை "நீலிக் கண்ணீர் வடிக்கறாங்க"-ன்னு எல்லாம் பேசத் தெரியாது!

    //ஆனால் அதை உங்கள் உணர்வுகளின் விருப்பப்படி மாற்றி சித்தரிக்க முயலாதீர்கள். அது ஒன்றும் சினிமாக் கதையல்ல விமர்சிப்பதற்கும் வேடிக்கை செய்வதற்கும்//

    சினிமா என்றால் அவ்வளவு இளக்காரமா?
    இங்கே யாரும் எதையும் பொய்யாக இட்டுக் கட்டவில்லை! அதே சமயம் பொய்யான புனிதப் பூச்சும் பூச முடியாது!

    அடியவர் திருக்கதைகளை உள்ளது உள்ளபடித் தந்தால் தான், மக்களும் தங்களை அதில் நிறுத்திச் சிந்தித்துப் பார்ப்பார்கள்! வெறுமனே ரெண்டு சொட்டு ஜலம் விட்டு, தூப தீபம் காட்டி, வேலை முடிஞ்சிச்சி-ன்னு போற ஆளு நானில்லை!

    //அவனை படகில் ஏற்றி விழா செய்வதெல்லாம் வெட்கம் வெட்கம்
    என்றெல்லாம் எழுதி அவனை வில்லனாக சித்தரித்துக் கட்ட முயலுகிறீகள். அது தவறு//

    தவறு என்று சமூகம் சொல்லட்டும்! இறை அடியார்கள் சொல்லட்டும்! இறைவன் சொல்லட்டும்!

    அவனை வில்லனாகச் சித்தரிக்கவில்லை! வில்லத்தனமான வேலைகள் செய்தவனை நீங்கள் தான் உற்சவம் நடத்திப் புனிதனாகச் சித்தரிக்கிறீர்கள்! :(

    ReplyDelete
  108. //திருவிழாக்களாக, நாடகங்களாக, பாடல்களாக, கதைகளாக நம் முன்னோர்கள்
    வடிவமைத்திருக்கிறார்கள்.
    அந்தந்த சீனை அப்படி அப்படியே காட்ட வேண்டியது தானே அவர்கள் கடமை//

    தோடா!
    சீதை தீக்குளித்த சீனை அப்படியே காட்ட வேண்டியது தானே! உற்சவ சீதா விக்ரகத்தை நெருப்புக்கு நடுவில் எடுத்துப் போவீர்களா? சூர சம்ஹாரம், ராவண சம்ஹாரம் எல்லாம் அப்படியே காட்டறீங்க! சீதா மாதாவின் அக்னிப் பிரவேசம் காட்டுவீர்களா? ஐயோ, எதுக்கு இராமனுக்கு வம்பு-ன்னு எஸ்கேப் ஆகறீங்க-ல்ல?

    பரம தத்தன் சொல்லாம கொள்ளாம தானே ஊரை விட்டு ஓடினான்? அப்படியே காட்ட வேண்டியது தானே! அவனுக்கு எதுக்கு மாலை மரியாதை? எதுக்கு ஊர்வலம்? அப்புறம் எதுக்கு படகில் ஏத்தி விடறது?

    ஒன்னு சொல்றேன் அனானி! பகவானிடத்தில் பாரத்தை வைத்து விட்டு யோசிச்சிப் பாருங்க!

    மகரிஷிகளும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் எதையும் மறைக்காம தான் எழுதினாங்க! இராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னதை அப்படியே தான் மறைக்காமச் சொன்னாங்க! வாலி வதமும் அப்படியே! புனிதப் பூச்சு எல்லாம் பூசவே இல்லை!

    அவதாரங்கள்-நல்ல மனிதர்கள் கூட நெறி தவறும் சந்தர்ப்பம் வரும்! தவறு செய்த காலங்களில் அற நெறியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று காட்டவே எதையும் மறைக்கவில்லை! மக்கள் அதைச் சீர் தூக்கிப் பார்க்கணும் என்பதற்காகத் தான் அத்தனையும் வைத்தார்கள்!

    ஸோ கால்டு தாழ்ந்த குலத்து திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்தார் லோக சாரங்கர் என்னும் அந்தணர்! குரு பரம்பரை எழுதியவர்கள், நாளைக்கு இந்த அந்தணரை வில்லனாகப் பார்ப்பாங்களே என்று எதையும் "நைஸ்" செய்யவில்லை! லோக சாரங்கர் கல்லால் அடிக்கலை, துண்டை உதறி பாணனின் கவனத்தை ஈர்த்து, தள்ளிக்கத் தான் சொன்னாரு-ன்னு மாத்தி இருக்கலாமே? ஏன் மாத்தலை? எதுக்கு புனிதப் பூச்சு பூசலை?

    தில்லையில் நந்தனார் நுழையும் போது, நந்தனார் ஒன்னும் பெரிய ஆளு கிடையாது அப்போ! தில்லை வாழ் அந்தணர்கள் அவரையா உள்ளே விடுவாங்க?
    அவருக்குப் போய் பூரண கும்பம் கொடுத்து, மரியாதை எல்லாம் செய்தார்களாம்! அவர் மேல தங்களுக்கு ஒன்னுமே இல்லையாம்!
    நீங்க நேரா உள்ள வந்தாக் கூட எங்களுக்கு ஒன்னும் இல்லை! ஆனா தெய்வ கட்டளை என்பதால் தீக்குளிச்சிட்டு உள்ள வாங்க-ன்னு = படிக்கும் போதே தெரியலையா, புனிதப் பூச்சு?

    இதைத் தான் சொன்னேன்! உடனே வைணவம் எதையும் மறைக்காம சொல்லுது! சைவம் மறைக்குதா? அப்படின்னு சைவ-வைணவ ஜல்லியைக் கையில் எடுப்பீங்க தெரியும்! ஆனா இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்! என்னால் இராமனைக் கடிந்தும் சொல்ல முடியும்! இதே பின்னூட்டத்தின் முதற் பகுதியில் சீதை அக்னிப் பிரவேசம் பற்றிச் சொல்லியும் உள்ளேன்! இராமன் மனித வாழ்வு வாழ்ந்து காட்ட வந்தவன்! நல்லதும் பண்ணுவான்! தீயதும் பண்ணுவான்! ஆனால் தீயதுக்குப் புனிதப் பூச்சு பூசிக் கொண்டிராமல், பிராயச்சித்தமும் தேடுவான்!

    பகவானிடத்தில் பாரத்தை வைத்து விட்டு நல்லா யோசிச்சிப் பாருங்க!
    உண்மை சுடும்!
    ஆனாலும் உண்மையே வெல்லும்!
    சத்யமேவ ஜயதே!

    நானும் அடுக்கடுக்கா கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இது வரை பதில் இல்லை உங்களிடம்!

    ஆனால் அடிப்பதற்கு முன்பே, அய்யோ அடிச்சிட்டாங்களே, அடிச்சிட்டாங்களே என்ற கூச்சல் மட்டும் இருக்கு! என்னத்த அடிச்சாங்க-ன்னு கேட்டா பதில் வராது! இப்படி எல்லாம் எழுதாதீங்க-ன்னு அறிவுரை மட்டும் வரும்! :(

    நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே!

    ReplyDelete
  109. //G.Ragavan said...
    புனிதவதியாருக்கு இழைக்கப்பட்டது கொடுமை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது//

    நன்றி ராகவா! துன்பியல் நிலைமையைப் புரிந்து கொண்டதற்கு!

    //தன்னை விட மனைவி பெரியவளாகி விட்டாலே உண்டாகும் ஒருவித தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்//

    அப்போது அம்மையார் ஊரறிய ஆன்மீகப் புகழ் பெறவில்லை! அதனால் தாழ்வு மனப்பான்மை புகழில் அல்ல! ஆன்மீக நிலையில் வேண்டுமானால் இருக்கலாம்! அதையும் விட தன் சுகம் தடைபடுமோ என்ற அவனின் உச்ச கட்ட சுயநலம் இன்னொரு காரணம்!

    //இந்தத் தாழ்வு மனப்பாங்கு இயல்பானது என்று யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஆணாத்திக்கதிற்கு கிரீஸ் ஊற்றுகின்றவர்கள்//

    சரியாகச் சொன்னீர்கள்!

    //பக்தியுடைய ஆண்களின் மனைவிகளுக்கு அவரோடு வாழ வேண்டுமா... கூடாதா என்று யோசிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்படி அவள் விலகியிருக்க விரும்பியிருந்தால்... அவளையும் தவறாகத்தான் பேசியிருக்கும்//

    அதைத் தான் கரடியாய்க் கத்துறேன் இம்புட்டு நேரம்!
    சம்பந்தருக்குக் கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்குது இதே சமூகம்! அப்போது இதே ஆன்மீகத்தைக் காரணம் காட்டி, நான் சம்பந்தரைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன் என்று அந்தப் பெண் சொல்லியிருந்தா என்னென்ன எல்லாம் பேசி இருக்கும்? கொடுத்து வச்சிருக்கணும் டீ-ன்னு பேசி இருக்க மாட்டாங்க? :(

    தன் வசதிக்கு ஏத்தாப் போல இரட்டை நாக்கு ஆன்மீகம் பேசுறவங்க! இவிங்கள எல்லாம் ஈசன் என்ன தான் பண்ண மாட்டாரு! ச்சே!

    ReplyDelete
  110. //ராகவேந்திரரைப் பற்றிப் பேச்சு வந்தது. என்னுடைய கருத்துப்படி ராகவேந்திரர் செய்ததும் பிழையே//

    அவரை அடியேன் தான் விவாதத்துக்குள் இழுத்து வந்தேன்!
    அவர் நிலைமை மிகவும் இக்கட்டான நிலைமை-ன்னு சொன்னேன்! நீங்க பிழை தான் என்று இன்னும் உறுதியாகச் சொல்லி விட்டீர்கள்!

    ஆனால் ஒன்று! அவர் நிராதரவாக விடாமல் ஏற்பாடுகளாவது செய்தார்! சரஸ்வதி அம்மாள் அதைத் தன் அதீத பாசத்தால் ஏற்காமல் மாய்த்துக் கொண்டார்! மிகவும் சோகமானது!

    ஆனால் ஒன்று! அது பிழை அல்லது கட்டாயப்படுத்திய துறவறம் என்று ஆன பின்பு, இங்கிருக்கும் சில மக்களைப் போல், ராகவேந்திரர் தான் செஞ்சதுக்கு சப்பைக் கட்டு கட்டலை!
    பிராயச்சித்தம் செய்தார்! துறவியான பின்னும், ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதியைப் போற்றி, அவள் ஆராதனைக்கு வழி வகுத்தார்! அவள் மனக் கேதமாச்சும் தீர்ந்தது!

    //ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்றுதான் 20ம் நூற்றாண்டிலும் எழுத வைத்திருக்கிறது தமிழ்ப் பண்பாடு//

    ஆதிக்க நாயகி சாதிக்க வந்தால், அவள் அம்பாள் சொரூபம் தானே-ன்னு பேசச் சொல்லுங்க பார்ப்போம்? அப்ப மட்டும் அம்பாள் சொரூபத்தை வசதிக்கு ஏத்தா மாதிரி மறந்துருவாங்க! :(

    ReplyDelete
  111. ////திருவாலங்காடு கோயில் அற்புதமானது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத்துக்கு உரியது//

    தில்லை அல்லவோ ஆகாசம்? //

    தில்லைதான் ஆகாசம்.
    தவறாகச் சொல்லிவிட்டேன்.

    தில்லையில் நடந்த சிவபார்வதி திருநடம் இங்கு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தலம் பஞ்சசபைகளில் இரத்தின சபை என்று அழைக்கப்படுகிறது. மேலும் உங்களை நீலிக்கண்ணீரார் என்று ஒருவர் அழைத்தாரல்லவா அந்த நீலியின் ஊரும் இந்தத் தலத்தின் அருகிலேயே அமைந்திருக்கிறது. பழையனூர் நீலி என்ற பகழ்பெற்ற நீலியின் பழையனூர் இங்குதான் இருக்கிறது.

    கேயாரெஸ்,
    இந்தப் பதிவில் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நீங்கள் இத்தனை சொல்லியும் அம்மையாருக்கு எந்த சமூகக் கொடுமையும் நிகழ்ந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. சிறுவயதில் அவர் விரும்பிய இல்லற வாழ்வு அவருக்கு வாய்த்தது. நற்பண்புகளொடு சிவபக்தியும் நிறைந்த அவர் மனதில் சிவனாரின் விளையாடல் வரும்வரை மகிழ்ச்சியே நிறைந்திருந்தது. அதன் பின்னர் அவனருளால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டார். பொதுவாக நாயன்மார்களின் வரலாற்றில் சிவனே அடியார்களைத் தேடிச் சென்றருளியிருக்கிறார். இத்தகைய பெரும்பேறு பெற்ற ஒருவருக்கு என்னதான் துன்பம் வந்துவிட முடியும்? அவர்களெல்லாம் துன்பங்களுக்கு அப்பாற்பட்டு விட்டவர்களாகவே நான் கருதுகிறேன். நான் கருதும் ஆன்மீகம் அவ்வாறே இருக்கிறது. நீங்கள் அம்மைக்காக இப்போது வருந்தும் அளவுக்கு அப்போது அம்மை அவருக்காக வருந்தியிருப்பார் என்றா எண்ணுகிறீர்கள்? பதிகங்களை இடட்டுமா என்று ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள், தன் நிலைக்காக அவர் வருந்தி கழிவிரக்கம் கொண்ட பதிகங்கள் இருந்தால் இங்கு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பரமதத்தன் குற்றமற்றவன். அரனால் அன்னையென அழைக்கப்பட்டவளை முன்னால் அடைந்திருந்த பெருமைக்கே அவனுக்கு இன்றும் பெருமை செய்யப்படுகிறது. விற்றதில் வாங்கியதைக் கழித்த இலாபமே தொழிலும் வாழ்வுமாய்க் கொண்டவனுக்கு இறையருள் செய்த மாங்கனியும் கிடைத்ததே, எப்பிறவியில் எத்தனை நன்மை செய்திருந்தானோ? அவனையும் பழிப்பதோ? அன்னையென துதிக்கத் தகுந்தவரை அதற்கு மேலும் அடிசிற்கினிவளாய்க் கொள்ளவும் முடியுமா? அற்பநரன் (அற்பனல்லன்) அவன்தான் என்ன செய்வான்? அவனறிந்ததைச் செய்தான். அருகிலிருந்தால் வரும் குற்றவுணர்வை அகற்றல் அறியாமல் அபலன் அவனே அகன்றுவிட்டான். நீங்கள் இங்கு பொதுவில் வைக்கும் வாதத்தை அவனிடமே கேளுங்கள் 'ஏனடா பரமதத்தா இப்படியும் செய்வாயோ' என.

    பரமதத்தனைப் பழிப்பதை பரம சிவனும் பொருப்பானோ? தன் பரமபக்தைக்குப் பதியாய் ஒரு பதரையா பார்த்துவைப்பான்? எல்லாம் அவன் செயல் இல்லையென மறுத்தால் மாங்கனியையும் மறுத்துவிடலாமே! பாதமாய் தலைகொண்டு நடப்பதைப் பார்த்துப் பதறிய பராசக்தியிடம் பார் என் அன்னையை எனப் பகன்ற பசுபதியின் பாற்படாமல் பார்வதியின் பாற்பட்டீரே! பரமன் சொல் கேட்டார் பார்வதி. நீரும் இந்தப் பாமரன் சொல் கேளீரோ? எத்தகைய துன்பமும் பக்தியின் பொருட்டு ஏற்பது இனிமை என்ற ஓதுதல் அறிதல் விடுத்து எத்துனை துன்பமென தேம்புதல் தெரிந்தீரே!
    அம்மையை அபலை என்றீர்! அகத்து வந்த சின்னஞ்சிறு சிசுமுதலாய் ஆளான நாள்வரை பெற்ற அம்மையப்பரின் அரவனைப்பில் வாழ்ந்து ஆடவனொருவன் உடன் சேர்ந்து ஆசை மனையாளாய் அகநிறைந்து அகநிறைத்து பின் ஆலால சுந்தரனின் அருள்பெற்று அவ்வரனே தத்தாய் வந்த அம்மையையா அபலை என்று சொல்லத் துணிந்தீர்?

    பரமசிவனே தத்தாகிப் போவதை முன்னுணர்த்த பரமதத்தனை பதியாகக் கொண்டாரோ அம்மையார்!

    அறிவு திறந்தது முதல் அரங்கனைத் தொழுது பின் அறிவு தெளிந்தது முதல் அவனையே வரித்த ஆண்டாளின் வழி இன்னொரு வழிதானே, இணையான வழியென வாதித்தல் முறையா? இவர்களைத் தொழுவதில் நாம் என்னதான் பேதம் பார்த்தோம்?

    சம்பந்தருக்கும் சுந்தரருக்கும் அவனருள் வந்தது. பின் அகவாழ்வு கிடைத்தது. அம்மைக்கோ அவர் வேண்டிய அகம் முன்கிடைத்து பின்னர் அருள்தொண்டு வந்தது. ஆண்டாளோ அருள்தொண்டு முடிந்து அரங்கனைச் சேர்ந்து விட்டார். நீங்கள் ஒப்பிட்ட மற்றவரைப் பற்றி நான் அறிந்திலேன். ஆயினும் இவையனைத்தும் நமக்குரைக்கும் அருள்முறையே அடையத் தகுந்தது.


    தாங்கள் பதிலுரைக்கும் போது நான் சொன்ன அனைத்திற்கும் பதிலுரைக்குமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    நடராஜன்.

    ReplyDelete
  112. //G.Ragavan said...
    இன்னொரு விதமாகவும் யோசிக்கத் தூண்டுகிறது இந்தப் பதிவு....//

    புரியுது புரியுது! :)
    சம்பந்தர், சுந்தரர் இவர்கள் எல்லாம் ஒரு பக்கம்....
    அப்பர், புனிதவதியார், அருணகிரி, பட்டினத்தார், மறு பக்கம்!

    //எங்கேயோ இடிக்கிறதே... ஏன் இடிக்கிறது?//

    :))))
    ஆண்டாள் பிறப்பறியாதவள் என்று அனைவருக்கும் தெரியும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

    //திருநீலகண்டரை இதில் சேர்க்க முடியாது. ஏனென்றால் அங்கு அருள் இருவருக்குமே கிடைத்தது//

    அருளை விடுங்க! அம்மையார் தான் தொடேல்-ன்னு ஆர்டர் போட்டது, திருநீலகண்டர் வேற வீட்டுக்குப் போய் வந்த போது! அது துணிவு!

    அருணகிரியின் மனைவியும் இதே துணிவைக் காட்டி இருக்கணும்! பொறுத்துப் பொறுத்துப் போனதால் தான், கணவனுக்கும் நோய், தனக்கும் கஷ்டம், அம்மாவாய் வாழ்ந்த அக்காவுக்கும் மன உளைச்சல்!

    உடனே அப்படி எல்லாம் ஆனதால் தான் முருகனின் அநுபூதி கிடைச்சது-ன்னு கெளம்பிடாதீங்கப்பா ஆன்மீகச் செல்வர்களே! என் செல்லக் குழந்தை முருகவேள் எப்படியும் அநுபூதி கொடுக்க வல்லவன்! இங்கே பேசுவது சமூக நியாயம் மட்டுமே! கர்ம வினைகள் அல்ல!

    ReplyDelete
  113. //கோவி.கண்ணன் said...
    லட்சக்கணக்கான கன்னிகா ஸ்திரிகள் எனப்படும் கிறித்துவ சகோதரிகள்//

    சரியாக எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி-ண்ணா! ஏசுபிரான் காலத்தில் பெண் சீடர்கள் கிடையாது! ஆனால் கால வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் ஆன்மீகமும் வளரலை?

    //அன்னை தெரசா வுக்கே அதில் முதலிடம் அதை இந்துக்களும் ஒப்புக் கொள்வார்கள்//

    கன்னிகா ஸ்திரீகளுக்கும் நிறைய சங்கடங்கள் அவங்க சமயக் குருமார்களும் கொடுக்கறாங்க! அன்னை தெரேசா-வே முதன் முதலில் Missionaries of Charity துவங்கிய போது, கொல்காத்தா பிஷப் முதற்கொண்டு, ஃபாதர் சுப்பிரீயர் வரை, பல ஆண்கள் போட்ட தடைக்கற்கள் பற்றி எல்லாம் சொல்லி இருக்கார். ஆனால் அவர்கள் அடிப்படையில், கை வைப்பது இல்லை! வாய் அளவிலாச்சும் ஒப்புக் கொள்கிறார்கள்!

    //பதிவர் நண்பரின் சகோதரி ஒருவரும் கன்னிகா ஸ்திரியாக சேவை நடத்துகிறார்//

    யாருண்ணா? தனி மடலில் கேட்கிறேன்! எனக்குத் தெரியும்-னு நினைக்கிறேன்! :)

    //மணிமேகலை பெளத்த துறவியாகவும், நீலிகேசி சமணத்துறவியாகவும் போற்றப்பட்டு அவர்கள் பற்றிய இலக்கிய புனைவுகளும் இருக்கின்றன//

    உண்மை! புத்த சங்கத்தில் பெண் துறவிகள்!

    இங்கே துறவு பற்றிக் கூட பேசலை! புனிதாவின் ஆன்மீக ஈடுபாடு பற்றித் தான் பேச்சு! அதுக்கே எப்படிப் பொங்கறாங்க பார்த்தீங்க-ல்ல?

    எல்லாம் ரிஷி பத்தினிகள் காலத்தோட போச்சு போல! கீதாம்மா சொல்லும் அதே லாஜிக்கை வசிட்டர்-அருந்ததிக்குச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்!
    அருந்ததி படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது - இப்படிச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்! :(

    ReplyDelete
  114. //ஓகை said...
    தில்லைதான் ஆகாசம்.
    தவறாகச் சொல்லிவிட்டேன்//

    பரவால்லீங்க ஐயா!
    நம் புனிதாவுக்காக, அம்மையும் அப்பனும் இன்னொரு முறை ஊர்த்துவ தாண்டவம் நடத்திய இடம் தானே திருவாலங்காடு!

    //மேலும் உங்களை நீலிக்கண்ணீரார் என்று ஒருவர் அழைத்தாரல்லவா அந்த நீலியின் ஊரும் இந்தத் தலத்தின் அருகிலேயே அமைந்திருக்கிறது//

    ஆமா! பழையனூர் நீலி! நீதிபதிகள் விழுந்த அந்தக் குழி கூட இருக்கு! பார்த்து இருக்கேன்!

    //கேயாரெஸ்,
    இந்தப் பதிவில் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்.//

    உணர்ச்சி எல்லாம் படலை ஐயா! நான் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்ல! எப்பவோ நடந்தது, நடந்தது தானே! என்ன இன்னிக்கும் மிஸ்டர் பரமுவுக்கு உற்சவம் நடக்குது! சரி ஓக்கே!

    பரமதத்தன் பண்ணது கூட எனக்கு ரொம்ப வருத்தமில்லை! ஆனா அதை வரிஞ்சி கட்டிக்கிட்டு, அது நியாயம் தான்-ன்னு பேசறாங்க பாருங்க இப்பவும்! அதான் ஆறலை!
    ஏய், இங்கே வாடி-ன்னு கூப்பிட முடியாதாம்! அவ நோக்கம் தெரிஞ்சவுடனே இல்வாழ்க்கை மறுக்கப்பட்டதாம்!


    இதே ஆன்மீகத்தைக் காரணம் காட்டி, சம்பந்தர் நோக்கம் தெரிஞ்சவுடனே, அத்தான்-னு அவரை நான் சகஜமா கூப்பிட முடியாது! ஸோ, சம்பந்தரைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்-ன்னு அந்தப் பெண் சொல்லியிருந்தா? அப்போ மட்டும், அடி சிறுக்கி, கொடுத்து வச்சிருக்கணுமே டீ-ன்னு இதே வாய் பேசாது? :(

    அடியேனின் வருத்தம் பரமதத்தன் மேல இல்லை!
    ஆன்மிகம்-ன்னும், அம்பாள்-ன்னும், தாயாரைப் பற்றிச் சரணாகதின்னும் பேசுறவங்க, இப்படி எல்லாம் வரிஞ்சு கட்டறது தான் வருத்தமா இருக்கு!

    பரமதத்தன் பண்ணது தப்பு தான்! போறான் விடுங்க! நமக்கு ஒரு அம்மா கெடைச்சாங்க! என்ன பண்ணுறது? - அப்படின்னு ஒரு வாய் வருதா?
    :(((((((

    ReplyDelete
  115. @ஓகை ஐயா
    உங்கள் மற்ற கருத்துக்கள் எல்லாம் இயல்பாக ஓக்கே தான்! அவற்றுக்குக் கொஞ்ச நேரம் கழிச்சி வருகிறேன்!

    ReplyDelete
  116. சம்பந்தர் இறைவனுடன் கலப்பதற்கு அவருக்கு எல்லாவித லட்சனங்களும் இருக்கு, ஏன் அவர் பயணம் செய்ய பல்லாக்கை ஈஸ்வரனே கொடுத்தார் என்றும் சேக்கிழாரால் கூறப்படுகிறது. சைவ பழமான 85 வயது அப்பர் சாமிகள் கூட 10 வயது சிறுவன் ஞான சம்பந்தரின் பல்லக்கை தூக்கிய பின்பு தான் சம்பந்தரை தரிசிக்கவே முடிந்ததாம்.

    அவருக்கு ஏன் கட்டாய திருமணம் முடிக்கப்பட்டது, அதுவும் திருமணக் கோலத்திலேயே இறைவன் ஆண்கொண்டார் என்று சொல்வது ஆராய்ச்சிக்குரியது. ஒருவர் முழுமையடைய திருமணம் என்பதன் தேவை என்பதை ஒப்புக் கொண்டாலும், தாலியை கட்டி நெருப்பை வலம் வந்தாலே திருமண நோக்கம் நிறைவேறிவிடுமா ?

    இல்லற துய்ப்பை / இல்லற இன்பம் பெறுவதே திருமண நோக்கமாக இருந்தால் தான் திருமணத்தை ஞானசம்பந்தருக்கு வலியுறுத்துவதிலோ, அதன் பிறகு அவரை சம்சார சாகரத்துடன் இறைவன் ஆட்கொண்டான் என்று சொல்வதோ பொருத்தமாக இருக்கும். கதைபடி ஞான சம்பந்த இல்லற துய்பை அடையவில்லை.

    இதைவிட கூத்து நால்வரில் ஒருவரான அப்பர் சாமிகளுக்கு கிடைக்காத 'இறைவன் ஆட்கொள்ளும்' பேறு, சம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டவர் அனைவருக்கும் கிடைத்ததாகச் சொல்லப்படுவதும் ஆராய்ச்சிக்குரியதே.

    8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமணத்தின் போது மண்டபம் தீ பிடித்து மணமகன் அங்கேயே பலியான நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது, கூடவே சிலர் இறந்தாலும் மணமகள் தப்பி பின்னாளில் வேறொருவரை மணம் முடித்தார், மணமகளும் இறந்திருந்தால் அந்த ஜோடி 21 ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தர் தாம்பதிகள் ஆகி இருக்கும்.

    *****

    மன்னிக்க வேண்டும் !

    சிவன் பெயரைக் கெடுக்க முயன்றவர்களில் தமிழகத்தில் சேக்கிழாரே முதன்மையானவராக தெரிகிறார். :(

    ReplyDelete
  117. //கோவி.கண்ணன் said...
    சைவ பழமான 85 வயது அப்பர் சாமிகள் கூட 10 வயது சிறுவன் ஞான சம்பந்தரின் பல்லக்கை தூக்கிய பின்பு தான் சம்பந்தரை தரிசிக்கவே முடிந்ததாம்//

    தவறு-ண்ணா!
    ஒருவருக்கொருவர் முன் பின் முகம் பார்த்தது இல்லை! திருப்பூந்துருத்தியில் அப்பர் பல்லக்கு தூக்கியது சம்பந்தப் பெருமானுக்குத் தெரியாது! ஆலயம் வந்தவுடன், இங்கு நாவுக்கரசரும் வந்திருக்கார் என்று கேள்விப்பட்டனே என்று கேட்க, அப்பரும் அடியேன் இதோ என்று சொல்ல, அலறி அடித்து மன்னிப்பு கேட்கிறார்!

    சம்பந்தர் குட்டிச் சிறுவன்! தூக்கிக் கொஞ்சலாம்! ஆனால் அவனை அப்பர் தூக்கியதை, நீங்கள் ஒரு மாதிரி இழிவாகப் பார்ப்பதால் உங்களுக்கு அப்படித் தெரிகிறது!

    திருநாவுக்கரசரை அப்பா என்றும் கூப்பிடாது, அப்பரே என்றும் இன்னும் மரியாதையாகக் கூப்பிட்டது சம்பந்தப் பெருமானே! அப்பர் என்ற சொல்லே அவர் அழைத்துத் தான் பரவியது!

    //இல்லற துய்ப்பை / இல்லற இன்பம் பெறுவதே திருமண நோக்கமாக இருந்தால் தான் திருமணத்தை ஞானசம்பந்தருக்கு வலியுறுத்துவதிலோ, அதன் பிறகு அவரை சம்சார சாகரத்துடன் இறைவன் ஆட்கொண்டான் என்று சொல்வதோ பொருத்தமாக இருக்கும்//

    நோ கமென்ட்ஸ்!
    அறிவன் ஐயா சம்பந்தப் பெருமானின் இறுதி பற்றிச் சொல்லி இருப்பதைக் கீதாம்மா பதிவில் காணுங்கள்!

    //இதைவிட கூத்து நால்வரில் ஒருவரான அப்பர் சாமிகளுக்கு கிடைக்காத 'இறைவன் ஆட்கொள்ளும்' பேறு, சம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டவர் அனைவருக்கும் கிடைத்ததாகச் சொல்லப்படுவதும் ஆராய்ச்சிக்குரியதே//

    நோ கமென்ட்ஸ்!

    தகவல் மட்டும் தருகிறேன்!
    அப்பர் பெருந்தகையை இறைவன் ஆட்கொண்டது திருப்புகலூர்!
    சம்பந்தரை உற்றார், உறவினர், மற்றார் சூழ ஆட்கொண்டது திருநல்லூர்!

    //மணமகளும் இறந்திருந்தால் அந்த ஜோடி 21 ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தர் தாம்பதிகள் ஆகி இருக்கும்//

    அந்த ஜோடிகள் இறைப்பணியும் தமிழ்ப்பணியும் செய்து, பின் இவ்வாறு ஆகியிருந்தால், அப்போ 21 ஆம் நூற்றாண்டு சம்பந்தமாய் ஆகி இருக்கும்!

    //மன்னிக்க வேண்டும் !
    சிவன் பெயரைக் கெடுக்க முயன்றவர்களில் தமிழகத்தில் சேக்கிழாரே முதன்மையானவராக தெரிகிறார். :(//

    தவறான கருத்து!
    ஈசனை இழித்துப் பேச பெரிய புராணம் எழுதவில்லை, சேக்கிழார்!
    சேக்கிழார் பல நல்லதும் செய்திருக்கிறார்! தொகை அடியார் என்று தனியாகவும் தொகுத்துள்ளார்!

    சில சமயம் அதீத கற்பனை, பூசி மெழுகல்கள் இருப்பதால் உங்கள் கண்ணுக்கு அப்படிப் படுகிறது! ஆனால் சேக்கிழாரின் சிவ பக்தியை அதை வைத்து எல்லாம் குறை சொல்ல முடியாது!

    சேக்கிழார் சிற்சில இடங்களில் புனிதப் பூச்சினைச் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சைவப் பெரியோர்களே கருதி இருக்காங்க!

    இராமன் வாலி வதத்தைச் சில பேரு வரிந்து கட்டி ஓவர் நியாயம் கற்பிப்பாங்க-ல்ல? அது போலச் செய்து விட்டார் சேக்கிழார்! வாலி வதம் தவறுன்னு இராமனே ஒப்புக் கொண்ட பின்னும், ஒப்புக் கொள்ளாத கூட்டம் போல தான் இது! :)

    சேக்கிழார் செய்த சிற்சில இடறல்களாகக் கருதப்படுவன:
    * சம்பந்தரின் இறுதி
    * கிழவரான அப்பரைக் கலைக்க தேவ கன்னிகைகள் வருதல்!
    * நந்தனார் தீக்குள் பாய்தல்
    * காரைக்கால் அம்மையார் மேல் அவர் பழைய கணவரின் அம்மா பாசம்! (ஆனா அம்மா உயிரோட இருக்காங்களா-ன்னு மட்டும் கண்டுக்கிற மாட்டாரு! ஆனா தாய் போல மதிச்சாரு! :)
    * சடையனார்-இசைஞானியார் பற்றிய ஒரு குறிப்பும் தராமல் சேர்த்தது

    உள்ளது உள்ளவாறே தந்திருந்தால் இன்னும் நன்றான பாடமாகவும் இருந்திருக்கும்! என்ன செய்ய! சிவோஹம்!

    ReplyDelete
  118. //சில சமயம் அதீத கற்பனை, பூசி மெழுகல்கள் இருப்பதால் உங்கள் கண்ணுக்கு அப்படிப் படுகிறது! ஆனால் சேக்கிழாரின் சிவ பக்தியை அதை வைத்து எல்லாம் குறை சொல்ல முடியாது!
    //

    மதவெறியர்கள் அனைவருமே இறை பற்றாளர்கள் தான் :) அந்த ஒருகாரணத்தினாலேயே அவர்கள் சிறந்த பக்தியாளர்கள் என்று சொல்லிவிட முடியாமா ?

    ஞான சம்பந்தரின் பல்லாக்கை தூக்கியது குறித்து உங்களுக்கு பற்றிய தகவல்களை மின் அஞ்சலில் அனுப்புகிறேன். இங்கே கட்டுரை சேக்கிழார் பற்றியல்ல என்பதால் இத்துடன் சேக்கிழாரின் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்.
    :)

    ReplyDelete
  119. //தவறு-ண்ணா!
    ஒருவருக்கொருவர் முன் பின் முகம் பார்த்தது இல்லை! திருப்பூந்துருத்தியில் அப்பர் பல்லக்கு தூக்கியது சம்பந்தப் பெருமானுக்குத் தெரியாது! ஆலயம் வந்தவுடன், இங்கு நாவுக்கரசரும் வந்திருக்கார் என்று கேள்விப்பட்டனே என்று கேட்க, அப்பரும் அடியேன் இதோ என்று சொல்ல, அலறி அடித்து மன்னிப்பு கேட்கிறார்!//

    இதை எப்படி நம்புகிறீர்கள் ? அப்பர் ஞான சம்பந்தரை சந்தித்த பிறகே திருநாவுக்கரசராகிய அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பது போல் இருக்கிறது இந்த கூற்று. ஒரு சிவனடியார் ஒரு ஊருக்குச் சென்றால் மாறுவேடத்திலெல்லாம் செல்ல மாட்டார், அதுவும் அப்பர் பெருமான் 85 வயதில் அந்த இடத்திற்குச் செல்லும் போது அவரை தெரியாதவர்கள் என்றோ, அவர் வருகையை முன்கூட்டி அறியாதவர்கள் என்றோ எவருமே இருக்க முடியாது. 10 வயது சிறுவனையே பலர் அறிந்திருக்கும் போது 85 வயது பெரியவர் எவருக்கும் தெரியாமல் பல்லக்கை சுமந்தார் என்று சொல்வது பொருத்தமாகவா இருக்கிறது.

    சமணராக இருந்து சைவராக மாறியதால் பாவ நிவர்த்தி செய்ய அப்பரை பல்லக்கு தூக்க வைத்தானோ சிவபெருமான் ?

    சேக்கிழாருக்குத் தான் தெரியாது, புனித பூச்சில் எழுதப்படும் அனைத்துமே பிற்காலத்தில் கேலி செய்யப்படும் என்று. உங்களுக்குமா ?

    நான் இங்கே அப்பர் சாமிகளையோ, ஞான சம்பந்தரையோ குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இருவரையும் வைத்து மிதமிஞ்சிய கற்பனையில் சேக்கிழார் எழுதி இருப்பது அனைத்துமே சைவமே அற்புதமானது என்ற காட்டுவதற்கான சைவ சமய வெறியாகத் தான் தெரிகிறது. :(

    ReplyDelete
  120. \\பரமதத்தன் பண்ணது தப்பு தான்! போறான் விடுங்க! நமக்கு ஒரு அம்மா கெடைச்சாங்க! என்ன பண்ணுறது? - அப்படின்னு ஒரு வாய் வருதா? :(((((((//

    அடியேன் இதை முன்பே பதிந்து விட்டேன்.

    மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்

    அது போல அம்மையின் உயர்வுக்கு, ஏதோ ஒரு வழியில் காரணகர்த்தா வாக வந்த பரமதத்தனுக்கு நம்மால் ஆன ஒரு சிறு பிறிவு உபசார விழா.

    இதை நீங்கள் கிருமி கண்ட சோழனுக்கு ஒப்பு செய்தீர்கள்.

    :))

    \\இதை விடத் தத்துவமாக அடியேன் பேசட்டுமா? திருவாய்மொழி எடுத்து வைக்கட்டுமா?
    அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்தத்தை, வேதியர் விழுப் பொருளை, அரங்க நகர் அப்பனைத் தான் மனக் கண்ணால் எப்பவோ கண்டு விட்டாரே திருப்பாணாழ்வார்? புறக் கண்ணால் கண்டால் என்ன? காணா விட்டால் என்ன//

    அகக்கண் புரக்கண் என்பதல்ல

    ஆண்டவனைக்காண பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தவே அரங்கன் விளையாடுகிறார்.

    மற்றும் அர்ச்சாவதார மகிமையை வேறு எப்படி அறிய முடியும்?

    அவர் பாடல் எழுதும்பொழுது, அரங்கனின் உருவம் அரியாமல் எப்படி எழுதுவது?

    மற்றும் கிருமி கண்ட சோழன் பற்றிச் சொன்னீர்கள்.

    நரகாசுர வதம் கொண்டாடும் நாடி இது.ராவணன் வேண்டி இருந்தால், அவனது நினைவு நாளையும் கொண்டாடி இருப்போம்.

    ReplyDelete
  121. //கோவி.கண்ணன் said...
    மதவெறியர்கள் அனைவருமே இறை பற்றாளர்கள் தான் :) அந்த ஒருகாரணத்தினாலேயே அவர்கள் சிறந்த பக்தியாளர்கள் என்று சொல்லிவிட முடியாமா ?//

    கோவி அண்ணா!
    1. மத வெறியர் இறைப் பற்றாளர் இல்லை! இறைவனைச் சுயநலத்துக்குப் பயன்படுத்துபவர்! அவ்வளவு தான்!
    2. சேக்கிழார் சுவாமிகள் எதிலுமே வெறியர் அல்ல! அவர் சிறந்த பக்தியாளர் தான்!

    //இங்கே கட்டுரை சேக்கிழார் பற்றியல்ல என்பதால் இத்துடன் சேக்கிழாரின் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்.:)//

    அதான் உங்களுக்கும் நல்லது! இல்லீன்னா பொங்கி எழுவேன்! :)

    ReplyDelete
  122. //அப்பர் ஞான சம்பந்தரை சந்தித்த பிறகே திருநாவுக்கரசராகிய அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பது போல் இருக்கிறது இந்த கூற்று//

    பேத்தல்!
    நாவுக்கரசரைப் பலருக்கும் முன்னமே தெரியும்!
    சம்பந்தரைப் பலருக்கும் முன்னமே தெரியும்!
    ஆனால் அவரவர் தொண்டர் குழாம் மற்றும் அன்பர் குழாம்களில் தான் கண்ணால் பார்த்து இருக்காங்க! மற்றவங்க எல்லாம் கேள்வி ஞானத்தோட சரி!

    அதே போல் இரு நாயனார்களுக்கும் இருவரின் எழுத்தும் பணியும் தான் தெரியுமே தவிர, முகத்தை orkut-லயோ, இல்லை ஜிடாக் வீடியோ சாட்லயோ பாக்கலை :)

    யாரும் மாறு வேடத்தில் எல்லாம் போகலை! திருப்பூந்துருத்தி நாவுக்கரசருக்குப் புதிய ஊர்! அங்கு அவரைப் பத்திப் பல பேர் கேள்விப்பட்டிருக்காங்க! ஆனா ஆளைப் பார்த்து இவர் தான் அவர்-ன்னு தெரியாது! நாவுக்கரசரோ, இல்லை அவரின் மாணாக்கர் குழாமோ சொன்னால் தான் உண்டு!

    ஆனால் நாவுக்கரசர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெற்றி பெற்று வந்த சின்ன பிள்ளையை ஒரு ஓவர் உவகைக்குத் தூக்குகிறார்! அவ்ளோ தான்! நாவுக்கரசருக்கு இயல்பாகவே வெளிக் காட்டிக் கொள்வது பழக்கம் இல்லை! ஓவர் பணிவு அண்ணலிடம்!

    அப்பூதி அடிகளும் தொண்டர் தான்! நாவுக்கரசர் மடம்-ன்னு அவர் பேரையே வச்சி நடத்தினாலும், அவருக்குத் தெரிந்ததா வந்திருப்பவர் அவர் தான் என்று?

    பகுத்தறிவாகவே யோசிக்க மாட்டீங்களா? :)

    //சமணராக இருந்து சைவராக மாறியதால் பாவ நிவர்த்தி செய்ய அப்பரை பல்லக்கு தூக்க வைத்தானோ சிவபெருமான் ?//

    பேத்தலோ பேத்தல்!
    சமணரா இருந்தது பாவமும் அல்ல!
    அதுக்கு நிவர்த்தியும் தேவை இல்ல!

    ReplyDelete
  123. //paravasthu said...
    அடியேன் இதை முன்பே பதிந்து விட்டேன்.
    மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்//

    உங்களைச் சொல்லலை-ண்ணா!
    இங்கு வரிந்து கட்டியவர்களைத் தான் சொன்னேன்! புனிதா நிலைமை பாவம்-ன்னு ஒரு வாய் வருதா என்று!

    //ஆண்டவனைக்காண பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தவே அரங்கன் விளையாடுகிறார்//

    உண்மை தான்!
    சமூகம் ஜாதி பார்த்து திருப்பாணாழ்வரை அடித்த போது, அரங்கன் அதைத் திருப்பி முறியடித்தான் அல்லவா? ததுவம் பேசிக் கொண்டு இருக்கவில்லையே! அரங்கனுக்கு இருந்த சமூக அக்கறை, நமக்கும் வேணும் என்று சொல்லவே அதைக் குறிப்பிட்டேன்!

    //நரகாசுர வதம் கொண்டாடும் நாடி இது.ராவணன் வேண்டி இருந்தால், அவனது நினைவு நாளையும் கொண்டாடி இருப்போம்//

    கூடக் கூடப் பேசுறதுக்கு மன்னிச்சிகுங்கண்ணா!
    பரமதத்தன் வேண்டினானா கொண்டாடச் சொல்லி?

    ReplyDelete
  124. \\கூடக் கூடப் பேசுறதுக்கு மன்னிச்சிகுங்கண்ணா!
    பரமதத்தன் வேண்டினானா கொண்டாடச் சொல்லி?//

    சில நிகழ்வுகளை , சம்பந்தப்பட்ட நபர்கள் வேண்டியதால் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. சில நிகழ்வுகள், அவர்கள் வேண்டாத போதும் நடைபெறுகிறது.

    ReplyDelete
  125. @ஓகை ஐயா
    உங்கள் கருத்துக்கள் அத்தனையும் வாசித்தேன்! யோசித்தேன்!
    பலவற்றுக்கு முன்னரே பதில் சொல்லி இருக்கேன்! இருந்தாலும் இதோ:

    நீங்கள் தத்துவக் கண் கொண்டு மட்டுமே பாக்கறீங்க!
    சரி, அப்படியே பாருங்க, வேணாங்கலை! ஆனால் அதைப் பெண்ணுக்கு மட்டுமே பாக்கறீங்க! ஆணுக்குப் பாக்க மாட்டேங்கறீங்க! அதான் என் குற்றச்சாட்டே!

    கணவன் வாழ விரும்பலை - சரி ஓக்கே! ஆனால் அவன் சொன்ன காரணத்தைச் சமூகமும் சேர்ந்து தானே ஆதரித்தது! அவளையே திருப்பியது! நிராதரவாக விட்டது!
    காரணம்: அவள் படைக்கப் பட்ட "புனித" நோக்கம்! அதனால் அவளுக்கு பரிந்து பேச முடியாமல், அவன் செய்தது சரியே என்று சொல்லி, அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது!

    இப்போ சம்பந்தர்:
    விரும்பாத ஆளுடைய பிள்ளைக்குக் கட்டாயப்படுத்தி செஞ்சாங்க, சரி! ஏன்? சமூகமும் சுற்றமும் விரும்பியது!
    காரணம்: அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது.(ஆனாலும் இல்வாழ்வு மறுக்கப்படவில்லை!)

    இப்போ ரெண்டையும் பொருத்திப் பாருங்க!
    பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!
    ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!
    Cant you not just see that?


    //சிவனே அடியார்களைத் தேடிச் சென்றருளியிருக்கிறார். இத்தகைய பெரும்பேறு பெற்ற ஒருவருக்கு என்னதான் துன்பம் வந்துவிட முடியும்?//

    இதை நானும் மறுக்கலை!
    நான் காட்ட வந்தது சமூகத்தின் போக்கு மட்டுமே!
    அதே "புனிதம்"! ஆனால் வேறு வேறு நியாயம்! அவ்வளவே!

    //பதிகங்களை இடட்டுமா என்று ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள், தன் நிலைக்காக அவர் வருந்தி கழிவிரக்கம் கொண்ட பதிகங்கள் இருந்தால் இங்கு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்//

    முன்பே சொன்னது போல் தன்னை ஒத்த பேய் மகளிரின் துன்பங்களைப் பதிகங்களில் காட்டியுள்ளார்.

    கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
    புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணா
    தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே

    இன்னும் இருக்கு! இது சும்மா வர்ணனை-ன்னு சொல்லிறாதீங்க!
    பேய்க்கு ஏது குழந்தைக் குட்டி? அம்மையார் வெளிப்படையாத் திட்டாம, உள்ளேயே ரொம்பவும் புழுங்கி இருக்கார்...நாம அதைப் பக்திப் பாட்டா ஆக்கி, தாளம் போட்டுக்கிட்டு இருக்கோம்! :(

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எல்லாப் பெண்களுக்கும் இறைவா போற்றி!


    //பரமதத்தன் குற்றமற்றவன்//

    இதுக்கு மேல ஒன்னும் பேசறத்துக்கு இல்லீங்க!

    //விற்றதில் வாங்கியதைக் கழித்த இலாபமே தொழிலும் வாழ்வுமாய்க் கொண்டவனுக்கு இறையருள் செய்த மாங்கனியும் கிடைத்ததே, எப்பிறவியில் எத்தனை நன்மை செய்திருந்தானோ? அவனையும் பழிப்பதோ?//

    சேக்கிழாரே, 63-லிஸ்ட்டில் பரமதத்தனை விட்டு விட்டீரே ஐயா!
    பரமதத்த நாயனார் வாழ்க வாழ்க!
    பரமதத்தன் அடியார்கள் எல்லாருக்கும் அடியேன்!

    ReplyDelete
  126. * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
    * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?
    என்று கேட்டிருந்தேன்! கீதாம்மா பதிவில் அடியேனுக்கு விடை கிடைத்து விட்டது! அது போதும்!
    http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_22.html

    திவா said...
    //* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
    * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//

    இல்லைதான்.
    இயற்கையாக பெண்களுக்கு லிபிடோ குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதனாலதான்.
    ஆண் இல்லாம பெண் இருந்துடமுடியும். உண்மையில் குழந்தைகள் பெற்ற பின் அவர்கள் கவனம் அவர்கள் மேல்தான்.
    ஆனால் ஆண் பலகாலத்துக்கு அப்படி இருக்க முடிவதில்லை

    கணவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு? ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை.

    ReplyDelete
  127. ரொம்பவே சீரியசாவே போயிக்கிட்டு இருந்தா எப்படி?
    அம்பியின் பின்னூட்டம் கீழே தருகிறேன்! ஜாலியாச் சிரிங்க! :)

    ambi said...
    ஹிஹி, உங்க பதிவு + பின்னூட்டம் பாத்ததும் இது தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

    கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.

    கீமே: என்ன பழம்?

    கேஆரெஸ்: வாழைப்பழம்

    கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))

    ஆமா,

    புனிதவதி யாரு?
    ஞானசம்பந்தர் யாரு?
    மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாய்யா அம்பி! நான் ஒரு கொய்யாப் பழக் கதை சொல்லட்டுமா!

    கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.

    கீமே: என்ன பழம்?

    கேஆரெஸ்: கொய்யாப்பழம்

    கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: இன்னோன்னு இதோ என் கையில் இருக்கு மேடம்!

    கீமே: அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் பார்க்க மாட்டேன்! என் கையை மட்டும் பாத்து பேசு!
    ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: ஐயோ! இன்னோன்னு இதோ என் கையில் இருக்கே மேடம்!

    கீமே: என்ன வெள்ளாடுறியா? நான் அதெல்லாம் பார்க்கவே மாட்டேன்! நீ என் கையை மட்டும் பாத்து பேசு!
    ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: ஐயோ! இந்தாங்க! ஒரு கையில் அது இருக்குல்ல? இன்னோரு கையில் இப்ப இதைப் புடிங்களேன் சொல்றேன்!

    கீமே: ஏய்...என்ன வெள்ளாடுறியா? அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்! ஒழுங்கா பதில் சொல்லு! ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    :)))))

    ReplyDelete
  128. //பரமன் சொல் கேட்டார் பார்வதி. நீரும் இந்தப் பாமரன் சொல் கேளீரோ?//

    கேட்கிறேன் ஓகை ஐயா!
    கீதாம்மா சொன்னது போல் பக்குவம் இன்னும் வரலையே!
    புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ள வில்லையே!
    அதான் நீலிக் கண்ணீர் வடிக்கிறேன் போல! :(

    //எத்தகைய துன்பமும் பக்தியின் பொருட்டு ஏற்பது இனிமை என்ற ஓதுதல் அறிதல் விடுத்து எத்துனை துன்பமென தேம்புதல் தெரிந்தீரே//

    பக்தியின் பொருட்டு எவ்வளவு துன்பத்தை அந்தப் பரமதத்தன் ஏற்றான்! ஆகா! ஊரை விட்டே ஓடினான்! புதுக் கல்யாணம் செய்து கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டான்! புதுக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் துணிந்தான்! பக்திக்காக இப்படியெல்லாம் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று இருந்தானே! ஆகா! ஆகா!

    யாருக்கு வரும் இந்த அழிவிலாப் பேறு!
    இறைவன் பிரசாதித்த மாங்கனி உண்ட மகான்!
    பரமதத்த நாயனாரைப் பழித்துச் சொன்ன அடியேனை எல்லோரும் மன்னியுங்கள்!

    //அம்மையையா அபலை என்று சொல்லத் துணிந்தீர்?//

    அடியேன் தவறு தவறே!

    நம பார்வதீ பதயே!
    அம்மா தாயே, மீனாட்சி என்னும் மானிடப் பெண்ணே!
    ஆன்மீகத்தில் உயர்ந்தவளே! தாயே! உன்னோடு சுந்தரேசன் வாழ முடியாதம்மா! வாழ முடியாது! :(

    * சாரதா மணி தேவியார் - இராம கிருஷ்ண பரம ஹம்சர் திருவடிகளே சரணம்!
    * பொன்னாச்சி - வில்லிதாசன் திருவடிகளே சரணம்!
    * அருந்ததி அம்மையார் - வசிஷ்ட மகரிஷிகள் திருவடிகளே சரணம்!
    * சூத்ரவதி - விஷ்வக்சேனர் திருவடிகளே சரணம்!

    அம்மா வேத மாதா காயத்ரி - நல்ல காலம் உனக்குத் துணைவன் காட்டப்படவில்லை! அதனால் நீ தப்பித்தாய்!

    இல்லையென்றால் உன் மந்திரச் சக்திக்கு, உனக்கும் மறுக்கப்பட்டு இருக்கும்!
    அது நியாயமே என்று மொத்த ஆன்மீக உலகமும் பேசி இருக்கும்!

    ஓம் பூர் புவ ஸுவ!
    திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
    (நிறைந்தது)

    ReplyDelete
  129. //பகுத்தறிவாகவே யோசிக்க மாட்டீங்களா? :)//

    பகுத்தறிவோட யோசிச்சா,

    திருநாவுக்கரசர் மட்டும் தொண்டர் படையே இல்லாமல் 85 வயதில் ஒத்தையாளாக சென்று, பார்பன சிறுவனின் அதுவும் சிவன் அளித்த பல்லாக்கை தூக்குவதே பெருமையானது என்று கருதி தூக்கி இருக்கலாம் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சேக்கிழார் காலத்தில் பார்பன சேவை பஞ்சபூத சேவையாமே.

    ReplyDelete
  130. //ஓம் பூர் புவ ஸுவ!
    திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
    (நிறைந்தது) //

    வாழ்க உங்கள் தெளிவு!

    சிவனடியாரைப் போல வேடமிட்டு தன்னைக் கொல்ல ஒருவன் வந்தாலும் அவனுடைய சிவனடியார் கோலத்தினால் 'தத்தா நமர்' எனத்தடுத்த மெய்ப்பொருள் நாயனாரைப்போல் நானும் உங்கள் தெளிவு பொய்யாகவே இருந்தாலும் நடிப்பாகவே இருந்தாலும் மெய்யெனவே எண்ணி மகிழ்கிறேன்.

    மிக்க அன்புடன்
    நடராஜன்.

    ReplyDelete
  131. //கோவி.கண்ணன் said...
    திருநாவுக்கரசர் மட்டும் தொண்டர் படையே இல்லாமல் 85 வயதில் ஒத்தையாளாக சென்று//

    நாவுக்கரசர் மடம் உண்டு! அவருடன் சீடர்கள் செல்லும் வழக்கமும் உண்டு! சீடர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் உண்டு!
    சிவகாமியின் சபதம் நாவுக்கரசர் மடம் பற்றிப் படியுங்கள்! சினிமாவை மட்டுமே பாத்துட்டு பேசுவது உங்க வழக்கம்-னு எனக்குத் தெரியுமே :)

    //பார்பன சிறுவனின் அதுவும் சிவன் அளித்த பல்லாக்கை தூக்குவதே பெருமையானது என்று கருதி தூக்கி இருக்கலாம் என்று நினைக்க வேண்டி இருக்கிறது//

    நினைப்பு மட்டுமே தரவு ஆகாது! :)
    அப்படிச் சொல்வது பகுத்தறிவும் ஆகாது! :)

    ReplyDelete
  132. //ஓகை said...
    வாழ்க உங்கள் தெளிவு!//

    ஆசிக்கு நன்றி ஐயா!

    //மெய்ப்பொருள் நாயனாரைப்போல் நானும் உங்கள் தெளிவு பொய்யாகவே இருந்தாலும் நடிப்பாகவே இருந்தாலும் மெய்யெனவே எண்ணி மகிழ்கிறேன்//

    அடியேனைக் "கொல்ல வந்தவன்" என்றும் "திருநீற்று வேடம் தரித்தவன்" என்றும், "பொய்யும் நடிப்புமான தெளிவு" என்று நீங்கள் நல்ல தமிழில் திட்டினாலும், அதையும் அடியவர் வாக்காகவே ஏற்கிறேன்!

    சக அடியவரான ஏயர்கோன் கலிக்காமர் போல் தாங்கள் வெறுப்பு காட்டினும், வெறுப்பையும் சிறப்பாய்க் கொண்ட வன் தொண்டனாகவே அடியேன் இருந்து விட்டுப் போகிறேன்!

    கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
    வாளினைப் பிடித்துக் கொள்ள "வன் தொண்டன்" வணங்கி வீழ்ந்தேன்!

    ReplyDelete
  133. //சிவகாமியின் சபதம் நாவுக்கரசர் மடம் பற்றிப் படியுங்கள்! சினிமாவை மட்டுமே பாத்துட்டு பேசுவது உங்க வழக்கம்-னு எனக்குத் தெரியுமே :)//

    அறிஞர் அண்ணா எழுதியதைவிட தெளிவாக இருக்குமா ? :)

    //இப்போ ரெண்டையும் பொருத்திப் பாருங்க!
    பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!
    ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!//

    கேஆர்எஸ், நாயன்மார்களில் பெயருக்கு ஒரு பெண்ணை பேயாக்கி சேர்த்ததே பெரிய விசயம், அதுவும் தமிழ்சூழல் என்பாதல் பெரிய மனது பண்ணி இருக்கிறார்கள், ஞாயமாக நீங்கள் பாராட்டி இருக்கனும், அதை விட்டுவிட்டு இப்படி நோண்டப்படாது.

    :)

    ReplyDelete
  134. //அனானி ஐயா/அம்மா
    எனக்குத் தெரியும்-னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
    மீண்டும் சொல்கிறேன்! உங்கள் பெயரைச் சொல்லிவிட்டு பின்னர் இப்படியெல்லாம் உரையாடுங்கள்!//

    நான் யார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியாதோ அப்படியே உங்களையும் எனக்குத் தெரியாது.

    உங்களது பதிவுகளில் பக்தியும் நெகிழ்ச்சியும் நிறம்பிய சிலவற்றை படித்து மகிழ்ந்துள்ளேன்,

    அவற்றை வைத்துதான் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் கணித்துக் கொள்ளுவீர்கள் என்ற எண்ணியே எனது சிற்றிவுக்கு பட்டதை எழுதினேன்,

    உங்கள் கத்தலும் குளறலும் ஆர்ப்பாட்டமும் கண்டு திகைத்து விட்டேன்.
    அவன் அருள் இன்றி அணுவும் அசையாது, புரிந்தது,

    கணனியுலகில் எழுத்துகள் உடலாகவும் கருத்துக்கள் ஜீவனாகவும் ஆகிறது,
    அவற்றுடன் தான் நாம் உரையாடுகிறேமே அன்றி தனிபட்ட உங்களுடன் இல்லை,

    அதற்கு தனிப்பட உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  135. //கோவி.கண்ணன் said...
    கேஆர்எஸ், நாயன்மார்களில் பெயருக்கு ஒரு பெண்ணை பேயாக்கி சேர்த்ததே பெரிய விசயம், அதுவும் தமிழ்சூழல் என்பாதல் பெரிய மனது பண்ணி இருக்கிறார்கள், ஞாயமாக நீங்கள் பாராட்டி இருக்கனும், அதை விட்டுவிட்டு இப்படி நோண்டப்படாது.
    :)//

    நீங்க தான் நோண்டி வெள்ளாடுறீங்க, இப்படி ஒரு சான்ஸ் கெடைச்சவுடன்! ஆன்மிகவியலாரே குறைகளை எடுத்துக் காட்டும் போது, அது பகுத்தறிவுப் பாசறைக்கு கொண்டாட்டம் தான்-னு எனக்குத் தெரியாதா என்ன? :)

    ஆனாலும் அதுக்குப் பயந்துகிட்டு, வீட்டுக்கு ஒட்டடை அடிக்காம இருக்க முடியுமா? அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே! அம்மையைப் பாராட்டி அவர் எழுதிய Iconic Poetry-ஐ வெளிக்கொண்டு வந்துள்ளேனே!

    நோக்கம்: பரமதத்தன் உற்சவம் போன்ற ஒவ்வாத நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி, அவரவர் ஆன்மீக மனசாட்சியைக் கேள்வி கேட்க வைப்பது தான்! பலரும் இப்போது இதை யோசிப்பார்கள்! பார்வைகள் நெறிப்படும்! சிவோஹம்! சிவோஹம்!

    ReplyDelete
  136. //Anonymous said...
    நான் யார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியாதோ//

    :))

    //உங்களது பதிவுகளில் பக்தியும் நெகிழ்ச்சியும் நிறம்பிய சிலவற்றை படித்து மகிழ்ந்துள்ளேன்//

    மிகவும் நன்றிங்க!

    //அவற்றை வைத்துதான் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் கணித்துக் கொள்ளுவீர்கள் என்ற எண்ணியே எனது சிற்றிவுக்கு பட்டதை எழுதினேன்//

    தவறில்லை! தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்! நாத்திகக் கேள்விகளையே ஒதுக்காத போது, தங்களின் ஆத்திக சுட்டிக்காட்டல்களையா ஒதுக்கப் போகிறேன்?

    //உங்கள் கத்தலும் குளறலும் ஆர்ப்பாட்டமும் கண்டு திகைத்து விட்டேன்//

    மன்னிக்கவும்!
    நீலிக் கண்ணீர் என்றும், புனிதம் அறியாதவர்கள் என்றும், ஒன்றின் நல்லதைக் காட்ட இன்னொன்றைத் தாழ்த்துகிறாய் என்றும் அபாண்டமாகப் பேசியது யார்?

    நீங்கள் பேர் சொல்லி வந்திருந்தீர்களேயானால், அறிந்தவராயிற்றே என்று கடுமை கூட காட்டியிருக்க மாட்டேன்! அடியேன் அடியேன் என்று தான் சொல்லிக் கொள்வேன்!

    கருத்தைக் கருத்தாக வாதாடாமல், "இது சமயத் தாழ்ச்சி இல்லை, இது சமூக சுய விசாரணக்கே" என்று விளக்கிய பின்னரும் கூட, நீலிக் கண்ணீர் என்றெல்லாம் பேசி, அடியேனின் நோக்கத்துக்கே மாசு கற்பிக்க முனைந்ததால் தான் அத்தனை சீற்றமும்!

    கோவிக்குச் சொல்லியுள்ள பதிலைப் பாருங்கள்!
    //ஆனாலும் அதுக்குப் பயந்துகிட்டு, வீட்டுக்கு ஒட்டடை அடிக்காம இருக்க முடியுமா? அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே! அம்மையைப் பாராட்டி அவர் எழுதிய Iconic Poetry-ஐ வெளிக்கொண்டு வந்துள்ளேனே!//

    உங்களுக்கு Iconic Poetry கூடக் கண்ணுக்குப் படவில்லை! ஆன்மீகத்தில் சமூகப் பார்வை கலந்தேன் என்ற கோபம் தான் தெறித்தது! அடியேனின் அத்தனை பின்னூட்ட பதில்களையும் இன்னொரு முறை வாசியுங்கள்! அடியேன் நிலைப்பாட்டின் சிறிதளவு நியாயம் நிச்சயம் உங்கள் கண்ணுக்குப் புலப்படும்! சிவனருளாலே சிவன் தாள் வணங்கி....

    //அவன் அருள் இன்றி அணுவும் அசையாது, புரிந்தது//

    சிவபிரான் பதிவல்லவா! சீற்றம் இருக்கத் தான் செய்யும்! இது வரை சீறாதவன், திடீரென்று சீறியதாலோ இப்படி எடுத்துக் கொண்டீர்கள்? சாது மிரண்டால் கதை போல! :)

    சரி...போகட்டும்!
    நீங்கள் வருத்தப்பட்டதற்கு அடியேன் வருத்தப்படுகிறேன்!வருத்தமும் தீர்ந்து
    மகிழ்ந்து ஏல்-ஓர்-எம்பாவாய்!

    ReplyDelete
  137. உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. பதிவை மிகவும் ரசித்தேன். ஆனால், உங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து எழுதும் அன்பர்களை நீங்கள் வரிக்கு வரி பிராண்டி எடுக்கும் குணத்தை ரசிக்கமுடியவில்லை. அதுதான் உங்களின் எதிரி என்பது திண்ணம். மேலும் உங்களின் எதிரி உங்களின் உள்ளே என்பதை அறிக !!.

    ReplyDelete
  138. திரு அனானி
    என்னிடம் மகாத்மாத்தனத்தை எதிர்பார்க்காதீர்கள்!

    எதிர்க்கருத்து எழுதும் அன்பர்கள் பலருக்கு, நான் கருத்துக்கான விளக்கம் மட்டுமே தருவது வழக்கம்!

    ஆனால் இங்கே "நீலிக் கண்ணீர் வடிக்காதீங்க"-ன்னு எல்லாம் பேசினவங்க யார்?
    அப்படிக் கருத்தை விட்டு, பர்சனல் ஆகப் பேச/ஏசத் துவங்கினால், அடியேன்-ன்னு போகச் சொல்றீங்களா என்னை?
    அப்படித் தான் போய்க் கொண்டிருந்தேன் முன்பெல்லாம்..ஆனால் இப்போது இல்லை!

    //வரிக்கு வரி பிராண்டி எடுக்கும் குணத்தை ரசிக்கமுடியவில்லை//

    ஒருவர் என்ன கருத்து வேண்டுமானாலும் வைக்கலாம்-என்பது எப்படி அவர்கள் உரிமையோ
    அந்தக் கருத்தில் உள்ள பிழைகளை, அந்த வரிகளில் இருந்தே எடுத்து எடுத்தும் வைக்கலாம் என்பதும் அவரவர் உரிமை தான்! - யாரையும் தனிப்பட்டு தாக்காத வரை!

    உங்கள் அறிவுரைக்கும் அன்பார்ந்த feedbackக்கும் நன்றி!

    ReplyDelete
  139. அன்பு ரவி,
    அற்புதமான பதிவு.

    இன்றளவுக்கும் சமூகத்தில் நிலவும் ஆண் பெண் இனவேறுபாடு மற்றும் உரிமைகள் சுகங்கள் நோக்கில் பெண்கள் இரண்டாம் தரத்தினராகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    ஒரு ஆணாக நான் இதற்கு வெட்கப்படுகிறேன்.

    மாலனின் கருத்து என்னுடைய கருத்தும்.

    பெண்களின் உளப்பாங்கில் அவர்கள் ஆண்களுக்கு சேவை செய்வதற்காகவே படைக்கப் பட்டவர்கள் என்ற கருத்தாக்கம் நிறைந்து அப்படி நினைப்பவர்களே பவித்ரமான பெண்கள் என்ற சமுதாய உருவகம் இழைத்த அநீதியின் விளைவுதான் இது.

    புனிதவதியார் வேண்டித்தான் பேய்க்கோலம் பெற்றார் எனினும் அவ்வாறு வேண்டியதற்கான காரணம் வலி நிரம்பியது

    நல்ல வாசிப்புக்கான பதிவு.

    சந்தடி சாக்கில் வேறு பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்களைப் படிப்பது மட்டுமின்றி நினைவிலும் கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.

    நன்றி.

    ReplyDelete
  140. இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீகப் பணியை தொடரச் செல்லவும் அவரது மனைவி சாரதி அமமையார் யாருடைய வற்புறுத்தலும் இன்றி துறவு பூண்டு அவருக்கு சீடராக இருந்து உதவி புரிந்து ஆன்மீகப் பணியில் தன்னை ஈடு படுத்திக் கொண்டார் இந்த உயர்ந்த மனப்பான்மை ஏன் பரமதத்தனுக்கு ஏன் வரவில்லை

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP