Friday, March 30, 2012

ஆண்டாள் என்னும் "பறை"ச்சி! பறை என்றால் என்ன?

(முன்குறிப்பு: "தீவிரமான" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

கோதையை "ஆன்மீகமாக" மட்டுமே புரிந்து கொள்ளாமல், 
அவள் "ஆன்மா"-வாகவும் புரிந்து கொள்ளும் பதிவே இது!
நான் இப்போதுள்ள நிலையில்... தோழியின் மனப்பாங்கு, முன்னெப்போதை விடவும் "மெல்லியலாகப்" புரிகிறது்)



"பறை" என்றால் என்ன?

மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான = "பறை",
ஆதிக்க மனப்பான்மை கொண்டோரின் செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது!
பாணன் ""பறையன்" துடியன் கடம்பன்
இந்நான்(கு) அல்லது குடியும் இலவே
- என்பது புறநானூறு! நெறிகளை, அரசுக்கே "பறை"ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்!

ஆனால்... சிறந்த ஒன்றைக், கும்மியடித்து கும்மியடித்தே, தவறாகப் பலுக்கிப் பலுக்கி, இழிவு பெறச் செய்தல் என்பது ஆதிக்கப் புத்தி!
சிறுபான்மையினரும் தங்கள் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம், ஆனால் எங்களுக்கு உட்பட்டே/அடக்கி வாசித்தே... = இதுவொரு மேலாளப் போக்கு:(

இதுக்கெல்லாம் போராடித் தான் மீளணும்!
போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும்,
"பறை" என்ற அழகான தமிழ்ச் சொல்லு போனது போனது தானே?

நெருடல் இல்லாமல் நம்மாலேயே பலுக்க முடிகிறதா? யோசித்துப் பாருங்கள்?
இன்று: பறையன்/பறைச்சி = வசைச்சொல்! சொல்லாடினால் சட்டப்படிக் குற்றம்!


ஆனால் என் தோழியை நான் "பறைச்சி"-ன்னு சொல்லலாமா?
இதற்காக, கோதை என் தோழமையை மறுதலிப்பாளா என்ன?

அப்படிப் பார்த்தா, என் கிட்ட தினப்படி திட்டு வாங்குறான் முருகன்:)
"Hey PoRkki Muruga" என்பதற்காக அவன் என்னை மறுதலித்து விடுவானா?
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் என்ற பந்தமாகி விட்டதே!

என்னடா இது, ரொம்ப நாள் கழிச்சி, இப்படி ஒரு பதிவு-ன்னு பாக்குறீங்களா?
பந்தலின் புதிய வாசக அன்பர் ஒருவர்...
நேற்றிரவு, என்னையப் பார்த்து,  திடீர்-ன்னு இப்படிக் கேட்டுட்டாரு:

"பந்தலில் (2008-09) வந்த திருப்பாவைப் பதிவுகள் இப்போது தான் பார்த்தேன். ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். 
ரொம்ப எளிமையா, அப்படியே மனசிலேயே தங்கி விட்டது. ஆனால் ஒரே ஒரு குறை. 
பறை என்பது பற்றி ஒன்றுமே சொல்லாமல் திருப்பாவை விளக்கம் எப்படி ரவி பூர்த்தி ஆகும்?
நீ (ங்க)முழு ’ஜஸ்டிஸ்’ பண்ணலை"

ஆகா! இப்படியொரு கணையா?
அப்படி என்ன எழுதி இருந்தேன் -ன்னு எனக்கே ஞாபகம் இல்லை! சரி, பொடிநடையா போய்ப் பார்த்தாக்கா...
Yes! வாசகர் சொல்வது சரியே! போதையில் தான் எழுதி இருக்கேன்:)

How did I forget lime and salt, when drinking Tequila?
Only, if I was already under the influence of my beloved's salty tamizh lips, I wud have forgotten :)

திருப்பாவைப் பதிவுகளில் என்னென்னமோ சொல்லிட்டு,
"பறை" பற்றி மட்டும் பொத்தாம் பொதுவாத் தான் சொல்லி இருக்கேன்; என் தவறு தான்!

"பறை" என்ற குறிப்புச் சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார்-நாயன்மார் பாட்டிலும் காண முடியாது!
ஒரு பெண்-கவிஞராக அவள் மட்டுமே செய்து காட்டிய Poetical Abstraction - கவிதை மறைக்கரு!

எதையோ மறைபொருளாச் சொல்லி வைக்கிறா = என்ன அது?
"வாய்ச்சுவையும் நாற்றமும்" எல்லாம் வெளிப்படையாச் சொன்னவ... இதை மட்டும் மறைபொருளா வைக்கிறாளே? ஏன்?
ஒரு பெண், தன் ஆணிடம் மிக விரும்பும் ஒன்றைத் தானே = மறைபொருளாச் சொல்லுவா?

* உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியில்....
* அவனே அவனே என்று ஊறித் திளைக்கும் ஒருத்திக்கு...
* அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே, தன் சம்பந்தமாகக் கொண்டு வாழ்பவளுக்கு...
"அவனுடைய" பறை -ன்னா என்ன?

தோழிக்குக் குறை வைக்க மனசு வருமா?
இதோ இரவிலே எழுதி, காலையில் "பறை"ந்து விடுகிறேன்! வாருங்கள்!


ஏய்.....இரு, இரு, ரவீ! அதுக்கும் முன்னாடி ஒரு கேள்வி!
ஆண்டாளை எப்படி நீ "பறைச்சி"-ன்னு சொல்லலாம்? அவள் ஒரு பிராமணப் பொண்ணு அல்லவா? :)

ஹிஹி! இன்றைய நிலைமைகளை அன்றைய உள்ளங்களின் மேல் ஏற்றிட முடியாது!
மேலும் ஆண்டாள் என்பவள் பிராமணப் பெண்ணல்ல! அப்படியான வீட்டில் வளர்ந்தவள் மட்டுமே!

கோதை, பிராமண வீட்டில் வளர்கிறாளே தவிர, அவள் ஒரு "இடைச்சி" போலவே தான் வளர்கிறாள்!
அவள் ஓர் அனாதைக் குழந்தை! "அயோனிஜை" என்று சமயத்தவர் சொல்லுவார்கள்! = யோனி தெரியாதவள்!
"அப்பன் பேர் தெரியாதவள்" என்ற கேலியும் இருந்திருக்குமோ என்னவோ?
= பட்டர்பிரான். கோதை, விட்டுசித்தன். கோதை
என்று வரிக்கு வரி, தன் இனிஷியலைப் போட்டுக் கொள்ள அவள் தவறுவதே இல்லை! வேறெந்த ஆழ்வார்களும் இப்படிச் செய்யவில்லை! (பிறப்பறியா முதலாழ்வார்கள் உட்பட)

* ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமின்றி..
* தமிழ் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
* காதல் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
"உளவியல்" அன்பர்களுக்கும் அவள் வாழ்வு = ஒரு பெரும் பொக்கிஷம்!

"இதே சொந்த மகளாக இருந்திருந்தா, பெரியாழ்வார் இப்படித் திருமணப் பேச்சு எடுக்காமல் விட்டு வைப்பாரா?" - என்று திருமால் பெருமை படத்தில், ஊர் கேலி பேசுவது போல் ஒரு காட்சி காட்டுவார்கள்!
என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலேயே, கண்ணனை ஊட்டி ஊட்டி வளர்த்தாகி விட்டது!
தோழனாய்த் துவங்கிய பாவனை, அறுக்க முடியாத காதலாகவே மாறி முடிந்து விட்டது! :(

ஆண்டாளின் கதை 
= இன்று வேண்டுமானால் ஒரு Fairy Tale போல இருக்கலாம்! 
= ஆனால் அவள் காலத்தில்?

காரைக்கால் அம்மை (எ) புனிதாவை, "பேய் மகளிர்" ஆக்கிச், சுடுகாட்டுக்குத் துரத்தியது போல் துரத்தவில்லையே தவிர,
கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ, நாம் அறியோம்!
அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ, நாம் அறியோம்!
தன் உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதலின் உயர்வு!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்" என்பது சமயப் பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது.. இன்று!
ஆலயம் தோறும் அவள் தான்! முன்பு நப்பின்னையைத் தொலைத்த தமிழ்க்குடி.. நல்ல வேளை, கோதையாவது மீட்டுக் கொண்டது!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்"
* ஆனால், அவள் "கலந்தாளா"?...
* ஒருத்தன் நினைப்பிலேயே "கரைந்தாளா"?

யார் அந்த "ஒருத்தன்"?
வெளியிற் சொல்ல வழியின்றி, இறையை ஏறிட்டுக் கொண்டாளா?
சரி, "இறையை" ஏறிட்டுக் கொண்டவள், "பறையை" ஏன் ஏறிடுகிறாள்??

அவள் கடைசிப் பாட்டு இங்கே இனியதில் இருக்கு; பாருங்க; அவள் மனப்போக்கை உங்களுக்கு எடுத்துக்காட்டக் கூடும்!
மருந்தாம் என்று தன் மனத்தே, 
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்..
அவனைப் பிரியாது, என்ன்ன்றும் இருப்பார்களே!

மனசாலேயே வைச்சிக்கிட்டு வாழ்ந்தால் = அவனைப் பிரியாது இருக்கலாம்
..... என்று தன் கவிதை அனைத்தையும் முடித்து விடுகிறாள்!

அரங்கன் சிலையில் கலந்தாளா?
= இப்படி எழுதுவதால், ஆன்மீக அன்பர்கள், சில வைணவ அன்பர்கள் கூட என் மேல் கோவித்துக் கொள்ள வாய்ப்புண்டு!
"நீயே இப்படியெல்லாம் எழுதலாமா ரவி?" என்று கேட்கவும் கூடும்! :)

ஆனால் என்னையத் தான் இப்படியான "நிறுவன"க் கட்டுகளில் கட்டிவைக்க முடியாதே! தோழனும் நண்பர்களும் நன்கு அறிவார்களே!
கோதையை, அவள் "ஆன்மாவை" ஒட்டியும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு "இடைச்சி" போலத் தான் வளர்ந்தாள்-ன்னு சொன்னேன் அல்லவா?
(இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சேலை கட்டி, இடைச்சி போலவே அலங்காரம் செய்து வைக்கிறார்கள்)

இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்!
கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...

இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன?

எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
பசு தானே "புனிதம்"?:)
எருமையைப் போய், "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? ha ha ha:)

பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்!
ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்!

அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு "சிறுவீடு"!
கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க!

உங்கள்-ல்ல எத்தனை பேருக்குச் "சிறுவீடு" பற்றித் தெரியும்? சின்ன வீடு-ன்னா தெரியும்:)
நகரத்தை விடுங்க! கிராமங்களில் இருந்து வந்தவர்கள்?
அவிங்களுக்குச் "சிறுவீடு" தெரிவது கூடக் கொஞ்சம் கஷ்டம் தான்!

பறைச் சேரி/ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...
எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்...
தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு!

இது மட்டுமல்ல..
* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

= யார் அந்த ஒருத்தன்?

கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும்,
உடம்பிலே வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்...
அவனையே நினைச்சி நினைச்சி,
தன்னையும் அவன் குடும்பமாகவே பாவித்து பாவித்து,

அவளும் அப்படியே ஆயிட்டாள்!
= பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!

பறை:
பறை = Drums!
பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா பொருள்? :)
பசங்க மட்டும் தான் பறையடிச்சி குத்துப்பாட்டுக்கு ஆடலாமா? நாங்களும் எறங்கறோம் பாரு-ன்னு இறங்கிட்டாளா? :)

* பறை = மோட்சம்      (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம்    (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (உண்மையா, காதல் ரீதியில்)

அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி..
அது எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தை எல்லாம் குறிக்கும்???

சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!

பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்!
போர், உழவு, கூத்து-ன்னு ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்!
அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக கொண்டாந்து வைக்கிறா கோதை!
(வேற எந்த இந்து மத-"உயர் வகுப்பு" விரதத்திலாச்சும் பறை இருக்கா?
இதெல்லாம் வீட்டுல தான் விடுவாங்களா? இதென்ன கோதை செய்யும் பழக்கம்?)

மலையாளத்தில் "என்ன பறையும்"-ன்னு கேக்கறோம்-ல்ல?
பறை = சொல்!
இசையால் அடித்துச் சொல்வது = பறை!
ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா?
= இல்லை! சமூக வழக்கிலே அது "அளக்கும் கருவி"யாகவும் மாறி விட்டது!

மேலே படத்தைப் பாருங்க! தட்டைப் பறை;
அதைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்!

கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?

முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!
* அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை!
* காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை!

காதல் ரீதியில்:
அவனுக்கு என்னையே குடுத்து, அவன் தரும் கூலியையும் என்னுள்ளேயே வாங்கிக் கொள்வேன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

ஆன்மீக ரீதியில்:
* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

சரணம் ஆகும் தன-தாள் அடைந்தோர்க்கு எல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று மாறன்-நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஒப்பு நோக்குங்கள்!



இப்படி, கூலி கொடுக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை!
* யார் தருவார் பறை? = நாராயண"னே"!
* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!
நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!

"பறை" என்பது "உள்ளுறை உவமம்" | Abstraction in Poetry

* வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத...
* ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய...
* அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!

"பறை" எங்கெல்லாம் வருகிறது? = மொத்தம் 11 இடங்களில்
---------------------------------------------------------------------------------------

1. நமக்கே "பறை" தருவான் (தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு (தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் (தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை" மாயன் மணிவண்ணன் (தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை" கொள்வாம் (தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் (தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் (தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
---------------------------------------------------------------------------------------

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = பறை!
அதுவும் Last 7 Songs = தொடர்ச்சியா வரும் சொல்லாட்சி! (24-30)

* துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...
* நடுவிலே, பறை=யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைச்ச பரிசைச் சொல்லி...
* இறுதியிலே, பறை=பேரின்பக் கூலி...

இற்றைப் பறையெல்லாம் வேணாம்,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே! உன் உறவே"-ன்னு முடிக்கிறாள்!

இப்போது தெரிகிறதல்லவா?
பறை = அவள் தனித்துவமான கவிதை!
ள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை = இசைக்கருவி
* பறை = அதில் படியளந்து பெறும் கூலி
* பறை = "எனக்கு-அவனே" என்ற பேரின்பக் கூலி! = பேறு

ஒரு காதல் உள்ளத்துக்கு, 
 "அவன்" கொடுக்கும் உச்ச கட்ட இன்பம் | இன்பக் கூலியே=பறை!
என் தோழி ஆண்டாளின் அடிமனசே...
அவன் பெருமாளோ? பெருமாள் என்று ஏறிட்டுக் கொண்டு வேறு யாரோ? எவனாயினும்...
"உனக்கு-அவனே" என்னும் "பறை" ஏல்-ஓர் எம்பாவாய்!!!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP