Thursday, June 28, 2007

நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா?

அது என்ன இவருக்கு மட்டும் பெரியாழ்வார்? "பெரிய" ஆழ்வாரா இவரு?

ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் இவருக்கு மட்டும் என்ன அப்படி உசத்தி? பக்தர்களுடைய பக்தியில் உன் பக்தி உசத்தி, என் பக்தி கொஞ்சம் தாழ்த்தி என்றெல்லாம் பாகுபாடு கிடையாதே!
அப்படி இருக்க, எம்பெருமானிடம் ஆழ்ந்தவர்களான ஆழ்வார்கள் இடையே, பெரிய/சிறிய அடைமொழிகள், ஏற்றத் தாழ்வுகள் எப்படி வரலாம்? - பார்ப்போம் வாருங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (Jun 26, 2007)
அதே போல், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் - நாதமுனிகள் பிறந்த தினம் - (Jun 28, 2007)
மேலும் ஆனி மூலம் - மாணிக்கவாசகர் குரு பூஜையும் கூட!

- இன்று நாம் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தமும் படிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நாதமுனிகள் தான்! தொலைந்த பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!
பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்! இசைப்பாட்டு பாடித் துதிக்கும் அரையர் சேவை என்னும் முறையை அறிமுகம் செய்தவர்! இவருக்கும் பெரியாழ்வாரிடம் அப்படி ஒரு ஈடுபாடு! பார்க்கலாம் வாருங்கள்!


ஆழ்வார்களில், வைணவத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர் நம்மாழ்வார்! அவர் திருவாய்மொழி தான் எல்லாவற்றுக்கும் சாரம்!
வேதத்தையே தமிழ் செய்த மாறன் சடகோபன் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

அவருக்கு அடுத்து திருமங்கை ஆழ்வார். இவர் ஒரு பெரும் நிறுவனத்துக்கு மேலாளர் போல், வைணவம் என்றும் செழித்திருக்கச் செய்தவர்;
பாசுரங்கள் பாடி விட்டதோடு மட்டும் நில்லாது, அடிப்படை வசதிகள் (Basic Infrastructure) செய்து வைத்தவர்! - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

ஆழ்வார்களிலேயே முதலாமவர் பொய்கையாழ்வார்.
திருக்கோவிலூரில் அவர் பாடிய பாசுரம் தான் முதல் பிரபந்தம்! அவருடன் கூடச் சேர்ந்து பாடினர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்கிற இருவரும்! - ஆனால் இவர்களுக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

பெருமாளையே படுக்கையை விட்டு எழுப்பி, மணிவண்ணா, என்னைப் பின்தொடர்ந்து வா, என்று அதிகாரமாய்க் கட்டளையிட்டவர் திருமழிசை ஆழ்வார் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்!
சரி இவளுக்காவது "பெரிய" பட்டம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை! அவளே "பட்டர் பிரான் கோதை சொன்ன" என்று பெரியாழ்வாரின் Initialஐயே தனக்கும் போட்டுக் கொள்கிறாள்!

One and Only One! - பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!

மதுரை நகரம். மல்லி வாசம். கூடல் அழகர்!

பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!
முன்னே பின்னே யானை மீது ஏறியிருந்தா தானே! அப்படி வலம் வரும் அளவுக்குப் பணபலம்/படைபலம் உள்ளவர் அல்லவே!
ரொம்பவும் கூச்சப்பட்டு அமர்ந்து கொண்டு, திருவெட்டெழுத்து ஓதிய வண்ணம் வருகிறார், விஷ்ணுவைச் சித்தத்தில் வைத்த விஷ்ணுசித்தன்.

தன் பிள்ளை ஊர் மெச்ச வரும் காட்சியைக் காண, எந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் தான் மனசு துடிக்காது?
மின்னல் போல் பளிச் என வானத்தில் தோன்றி, சூரியன் போல் பிரகாசித்தார் பெருமாள். கருட சேவையாக! காணக் கிடைக்காத காட்சி...

மன்னனைக் கண்டால் புலவருக்கு என்ன தோன்றும்? - பரிசு, பொற்கிழி, பொன்னாடை?
மந்திரியைக் கண்டால் மாவட்டத்துக்கு என்ன தோன்றும்? - கமிஷன், காண்ட்ராக்ட்?
காதலியைக் கண்டால் காதலனுக்கு என்ன தோன்றும்? - டேய், வாயில வாட்டர் ஃபால்ஸ் வருது பார்! வாயை மூடு என்ற சிவாஜி பட வசனம் :-)
தாயைக் கண்டால் குழந்தைக்கு என்ன தோன்றும்? - பால், பட்சணம், கொஞ்சல்?

எல்லாம் சரி!....ஆனால் தாய்க்குக் குழந்தையைக் கண்டால்?... அதே தான் பட்டர் பிரானுக்கும் தோன்றியது!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் - செவ்வடி செவ்வி திருக்காப்பு!


நான் இருக்கேன் உனக்குப் பிரிவின்றி - ஆயிரம் பல்லாண்டு!
இலட்சுமி மார்பில் இருந்து காப்பாள் - ஆயிரம் பல்லாண்டு!
வலப்பக்கம் சக்கரமும், இடப்பக்கம் சங்கும் எப்போதும் காக்கும் - ஆயிரம் பல்லாண்டு!
கடவுளைக் கண்ட மாத்திரத்தில், கை கூப்பக் கூட இல்லை!......மாறாக, "ஆகா...பேரழகுப் பெட்டகமே! நல்லா இரு! அமோகமா இரு! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு! என்று கடவுளுக்கே ஆசீர்வாதமா?



அட, இது என்ன பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?
உள்ளேயும் மரணம் கூடாது, வெளியேயும் கூடாது...இல்லாக்காட்டி
என்னை மிஞ்சுவார் எவரும் இருக்கக் கூடாது...இல்லாக்காட்டி
ஏழடுக்கு மாளிகையில்....என் பேரனுக்குப் பேரன்....தங்கக் கிண்ணத்துல பால் குடிக்கறத பாக்கணும் - இப்படி எல்லாம் வரம் வாங்கறத வுட்டுபுட்டு,
வரம் தரும் வரதராஜனையே நல்லா அமோகமா இரு-ன்னா என்னா அர்த்தம்?
- பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரேப்பா! தனக்கென்று மோட்சம் கூடக் கேட்கவில்லை! வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!


ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே அவன்! தோள் கண்டார் தோளே காண்பாரே!
என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!

அடேய் சக்கரமே, அடேய் சங்கே, அடே கருடா...
தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சாரங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்!


இப்படித் தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார் ஆனார்!
எந்த ஆழ்வாரின் பிரபந்தங்களை ஓதுவதற்கு முன்னரும், இந்தத் திருப்பல்லாண்டை சொல்லி விட்டே, மற்றவற்றை ஓத வேண்டும் என்பது கோவில் மரபு ஆகி விட்டது! அது மட்டுமா?......................


மற்ற ஆழ்வார்கள் எல்லாம், கண்ணன் வராவிட்டால்....
ஒன்று தூது அனுப்புவார்கள், இல்லை இப்படி என்னை வதைக்கிறானே பாவீ.... என்று வசைமாரி பொழிவார்கள்!
ஆனால் யசோதை மட்டும் தான்,
"கண்ணனை வீட்டுக்குள் பூட்டியும் வைக்க முடியாது. அப்படி செய்தால் உலக அனுபவம் அவனுக்கு இல்லாமல் போய்விடும்! அய்யோ வெளியில் சென்றானே, இன்று எந்தப் பாவி எந்த ரூபத்தில் குழந்தையைச் சூழ்ந்தானோ" - என்று தினம் தினம் செத்துப் பிழைத்தாள், ஓராயிரம் முறை!

அப்படியே தான் பெரியாழ்வாரும் செத்து செத்துப் பிழைக்கிறார், கண்ணனைப் பற்றிய கவலையில்!
அவன் பிறந்த நாளை அக்கம் பக்கத்தார்க்கு நேரடியாகச் சொன்னால், கம்சன் கண்டு பிடித்து விடுவானோ என்று பயப்படுகிறார்! அதனால் "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" என்கிறார்!

ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! கம்சனும் அவன் ஆளுங்களும் குழம்பட்டும்! நாம குழந்தையின் பிறந்த நாளைக் கொஞ்சம் மறைஞ்சே கொண்டாடுவோம் - என்று அப்படி ஒரு பரிவு பட்டர் பிரானுக்கு!

ஷைலஜா ஒரு பதிவில் கதை போல் சொல்லி இருந்தார்கள்; மிக வயதான ஒரு அம்மா, புகைவண்டி Upper Berth-இல் தூங்கும் தன் "ஐம்பது வயதுக் குழந்தை", எங்கே புரண்டு விழப் போகிறானோ என்று பயந்தார்களாம்!
எத்தனை முறை நம் வீட்டிலேயே, நம்ம அம்மா,
"டேய்...பாத்து போய் வாடா, ரோடு க்ராஸ் பண்ணும் போது ஜாக்கிரதை!", என்று இந்த வயதிலும் சொல்லுகிறார்கள்! :-)

- இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்!
- ஏனையோர் தங்களைத் தலைவியாக்கிக் கொண்டு, தலைவனைச் சேர விரும்பி இருக்க, இவர் மட்டும் கடமையை மட்டுமே கைக்கொண்டு, கைங்கர்யம் புரிந்ததால் பெரிய ஆழ்வார்!

- ஜனகன் வில் தூக்கும் போட்டி வைத்து பின்னர் தான் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். ஆனால் இவரோ போட்டா போட்டி எல்லாம் எதுவும் வைக்காது, பெருமாளை ரொம்பவும் வருத்தாது, மகளைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார். அவன் செல்வம் செழித்திருக்க, திருவை அவனுக்குக் கொடுத்ததால் பெரிய ஆழ்வார்!

- பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
- ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
- இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்!


கீழே பாட்டைப் பாருங்கள்! இந்தப் பாட்டு தான், ஏன் "பெரிய" ஆழ்வார் என்பதற்கு முக்கியமான பிரமாணம்!
இதைப் பாடியவர், மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சார்யர்! - திருவரங்கக் கோயிலில் தமிழ் வழிபாட்டுக்கு இடைஞ்சல் வந்த போது, தமிழைத் தாங்கிப் பிடித்தவர்! நீங்களே ஒரு முறை வாய் விட்டுப் படியுங்கள்!

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி -
பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!

விருத்திபெறு வில்லிபுத்தூர் விளங்கவந்தான் வாழியே!
பெருமைமிகு ஆண்டாளைப் பெற்றபிரான் வாழியே!

பட்டர்பிரான் வாழியே! பட்டர்பிரான் வாழியே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!!

Read more »

Tuesday, June 26, 2007

அ என்றால் 8!

எல்லாரும் விதம் விதமா எட்டு போட்டுட்டாய்ங்க! கடைசியா எட்டு போடறவங்களுக்கு ஒரு ஈசியான வேலை என்னன்னா அடுத்த எட்டுக்கு யாரைக் கூப்பிடலாம்-னு மண்டைய போட்டு ரொம்ப உடைச்சிக்க வேணாம்.

ஏன் என்றால் ஏற்கனவே பல பேர் உடைச்சிட்டு போயிட்டுருப்பாங்க!
தேர்தல் நாள் அன்று சாயந்திரமா ஓட்டு போடப் போனா, எதுனா மிஞ்சுமா? உங்க ஓட்டு உங்களுக்குச் சிரமம் இல்லாம ஏற்கனவே அரங்கேறி இருக்கும்!

அன்பர் SK ஐயா, குட்டிப் பிசாசு என்னும் சுட்டி அருண், தளபதி CVR, மற்றும் கதாநாயகன் சந்தோஷ் அவர்கள் எல்லாருக்கும் ஒரு வாயி நன்றி சொல்லிட்டு, இதோ நம்ம எட்டு!

அட இன்னிக்கி தேதி June 26...இதன் கூட்டுத் தொகையும் 8-ப்பா! ச்சே...
சொல்ல வந்தது என்னன்னா...ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
பெரியாழ்வார் திருநட்சத்திரம்...அதான்பா Birthday!
இன்னிக்கி இந்தப் பதிவ போட்டதனால, நாளைக்கு பெரீய்ய்ய்ய்ய் ஆழ்வாரைப் பற்றித் தனியா பதிவு போட்டுடறேன்! :-)


௧.1
எட்டு-ன்னதும் மொதல்ல ஞாபகத்துக்கு வர்றது எட்டெழுத்து தானுங்கோ!
அதுக்குத் திரு எட்டு எழுத்து-ன்னும் ஒரு பேரும் உண்டுங்கோ! அஷ்டாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவாங்க...ஆனா எதுல எப்படிக் கூட்டினாலும் எட்டு எழுத்து தான் வரும்!

எது என்னான்னு நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கோவ்!
அதைத் தான்
"குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்.....என்னும் நாமம்"
என்று பாடினார்கள்!


௨.2
எங்க ஆயா சின்ன வயசுல, யானையில போட்டு என்னை ஆட்டுவாங்க!....அட நீங்க ஒண்ணு...யானை எங்க வீட்டுச் செல்லப் பிராணி கிடையாது.
தூளி, தொட்டில் என்பதைத் தான் ஊர் வழக்குல யானை-ன்னு சொன்னேன்!
அவங்க அப்பிடி ஆட்டும் போது, ஏதாச்சும் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டுவாங்க. பாதி நேரம் திருப்பாவை தான்! நான் தூங்குறாப் போலத் தெரிஞ்சிச்சுனா பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திடுவாங்க!

நான் அப்பவே கொஞ்சம் அதிகப் பிரசங்கி போல! பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்! அதுல அவுங்களுக்கு ஒரே புளகாங்கிதம்! தன் இறுதி நாட்களில் கூட அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்! இதுனால என் தங்கச்சிக்கு ஒரே stomach burning என்பது தனிக்கதை :-)


௩.3
எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள். நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க! ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம். இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்ப கஷ்டம்ங்க! ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்! ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசு வர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க. அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன். ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!


ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கினு கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்! கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க. நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல! உடனே பளார்!
வீட்டுக்கு வந்து அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார். என்னை வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நான் ஒரே அழுகை! இதுவும் சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாருன்னு justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல!

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க. என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான். அவனைப் போயி எல்லோரும் வையறீங்களே"ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க! நானும் அழுகைய நிறுத்திச் சமாதானம் ஆனேன்!
ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)


௪.4
பள்ளி/கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை!
அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.

சென்னை, தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள பெரியார் திடலில் தான் ஐயா பெரியாரின் நினைவிடமும், தி.க அலுவலகமும்!
வீரமணி ஐயாவிடம் நேரடியாவே பேசலாம்! ரொம்ப பந்தா எல்லாம் கிடையாது!
கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!


ஆனாலும் அவை ஒரு போராட்டத்தில் எரிக்கப்பட்ட போது, எனக்குள் தோன்றியது முதல் விரிசல்!
பின்பு கல்லூரியில் பேராசிரியர் மதி சீனிவாசன் அவர்கள் பார்வை பட்டு, எப்படியோ அரங்கனிடம் மீண்டும் வந்து சேர்ந்தேன்!
சென்னைப் பல்கலையில், துறைத் தலைவர் டாக்டர் M.A வேங்கடகிருஷ்ணன் அவர்கள், சாதி வித்தியாசங்கள் எதுவும் பாராது, ராமானுசர் வழியில் அரவணைத்துக் கொண்டதும், திருவரங்கத்து நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணும் நற்பேறு ஏற்படுத்திக் கொடுத்ததும்...
...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
குலதெய்வம் முருகன். சென்றது பெரியார் கழகம். மீண்டது பெருமாளிடத்தில்! :-)


௫.5
கல்லூரி ஆண்டு மலருக்கு பல பிரபலங்களைப் பேட்டி கண்டது மறக்க முடியாத ஒன்று!
அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்று பலரைப் பேட்டி கண்டோம். அப்போது தான் கல்லூரிக்கு வெளியே கிடந்த, போட்டி நிறைந்த professional life பற்றி ஒரு பார்வை கிடைச்சுது!

நான் எங்கள் Batchக்கு Placement Representative ஆகவும் இருந்தேன். எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களும் அதிகம். ஆங்கிலம் சரளமாக வரவும், Campus நேர்காணல், ஆளுமை வளர்ச்சி (Personality Development) ன்னு பல முயற்சிகள்!
Day Scholarஆக இருந்த நான் பாதி நாள் ஹாஸ்டல் வாசம் செய்து வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன்!
இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!

பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!


௬.6
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. அவர் இந்தியாவுக்கு வந்த போது எங்கு பார்த்தாலும் ஒரே craze. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் அவருடன் கை குலுக்க ஒரே போட்டா போட்டி.
அது என்னடான்னு அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது...மோனிகாவைப் பிடித்த கையை இவர்களும் பிடிக்க ஒரே ஆர்வக் கோளாறு என்று :-)

அவர் ஓய்வு பெற்ற போது, இந்திய-அமெரிக்க நல்லுறவு மலர்ந்தது பற்றி அவருக்குச் சும்மானா ஒரு கடுதாசி போட்டேன்! அமெரிக்கா வந்த புதுசு அப்போ. தமிழ்மணம் எல்லாம் கிடையாது அல்லது எனக்குத் தெரியாது! அப்புறம் அதை மறந்தே போயிட்டேன்!
திடீர்ன்னு ஒரு நாள் தபால்காரர் என்னைக் கூவி அழைத்தார். என்னடானு பார்த்தா வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு கடிதம்.

சரி சும்மானா நன்றி என்ற வாழ்த்து அட்டையா இருக்கும்னு நினைத்துப் பிரிச்சா,
தலைவர் ஒரு பக்கப் பதில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு அனுப்பி வைச்சார். ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!


௭.7
குழந்தைகள் நலத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டது நியூயார்க் வந்த பிறகு தான்!
Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, மற்றும் அதற்கு நிதி சேர்க்க நியூயார்க் five borough சைக்கிள் டூர் என்று ஓடுகிறது...
இதோ சுட்டி!



௮.8
வெட்டிப்பயல் பாலஜியும் நானும் விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கிய பேச்சு மறு நாள் வைகறை 4:30 மணிக்குத் தான் நின்றது!
அப்படி என்னடா பேசிக்கிட்டீங்கன்னு கேக்குறீங்களா?

ஹிஹி...அது என்னன்னா பேச்சுக்கு பேச்சும் ஆச்சு, வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசியும் ஆச்சு என்று அந்த ஏகாதசிக்கு அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது!


அப்பாடா...எட்டு எட்டுன்னு எட்டியாச்சுப்பா!
அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...அய்யோ கொத்தனார் என்னைக் கொத்த வரா மாதிரியே இருக்கே! :-)

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

நான் அழைப்பது:
செல்வன்
சிவபாலன்
வாத்தியார் ஐயா
தமிழ் சசி
நா.கண்ணன்
சாத்வீகன்
அன்புத் தோழி
திராச
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP