Tuesday, June 26, 2007

அ என்றால் 8!

எல்லாரும் விதம் விதமா எட்டு போட்டுட்டாய்ங்க! கடைசியா எட்டு போடறவங்களுக்கு ஒரு ஈசியான வேலை என்னன்னா அடுத்த எட்டுக்கு யாரைக் கூப்பிடலாம்-னு மண்டைய போட்டு ரொம்ப உடைச்சிக்க வேணாம்.

ஏன் என்றால் ஏற்கனவே பல பேர் உடைச்சிட்டு போயிட்டுருப்பாங்க!
தேர்தல் நாள் அன்று சாயந்திரமா ஓட்டு போடப் போனா, எதுனா மிஞ்சுமா? உங்க ஓட்டு உங்களுக்குச் சிரமம் இல்லாம ஏற்கனவே அரங்கேறி இருக்கும்!

அன்பர் SK ஐயா, குட்டிப் பிசாசு என்னும் சுட்டி அருண், தளபதி CVR, மற்றும் கதாநாயகன் சந்தோஷ் அவர்கள் எல்லாருக்கும் ஒரு வாயி நன்றி சொல்லிட்டு, இதோ நம்ம எட்டு!

அட இன்னிக்கி தேதி June 26...இதன் கூட்டுத் தொகையும் 8-ப்பா! ச்சே...
சொல்ல வந்தது என்னன்னா...ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
பெரியாழ்வார் திருநட்சத்திரம்...அதான்பா Birthday!
இன்னிக்கி இந்தப் பதிவ போட்டதனால, நாளைக்கு பெரீய்ய்ய்ய்ய் ஆழ்வாரைப் பற்றித் தனியா பதிவு போட்டுடறேன்! :-)


௧.1
எட்டு-ன்னதும் மொதல்ல ஞாபகத்துக்கு வர்றது எட்டெழுத்து தானுங்கோ!
அதுக்குத் திரு எட்டு எழுத்து-ன்னும் ஒரு பேரும் உண்டுங்கோ! அஷ்டாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவாங்க...ஆனா எதுல எப்படிக் கூட்டினாலும் எட்டு எழுத்து தான் வரும்!

எது என்னான்னு நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கோவ்!
அதைத் தான்
"குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்.....என்னும் நாமம்"
என்று பாடினார்கள்!


௨.2
எங்க ஆயா சின்ன வயசுல, யானையில போட்டு என்னை ஆட்டுவாங்க!....அட நீங்க ஒண்ணு...யானை எங்க வீட்டுச் செல்லப் பிராணி கிடையாது.
தூளி, தொட்டில் என்பதைத் தான் ஊர் வழக்குல யானை-ன்னு சொன்னேன்!
அவங்க அப்பிடி ஆட்டும் போது, ஏதாச்சும் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டுவாங்க. பாதி நேரம் திருப்பாவை தான்! நான் தூங்குறாப் போலத் தெரிஞ்சிச்சுனா பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திடுவாங்க!

நான் அப்பவே கொஞ்சம் அதிகப் பிரசங்கி போல! பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்! அதுல அவுங்களுக்கு ஒரே புளகாங்கிதம்! தன் இறுதி நாட்களில் கூட அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்! இதுனால என் தங்கச்சிக்கு ஒரே stomach burning என்பது தனிக்கதை :-)


௩.3
எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள். நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க! ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம். இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்ப கஷ்டம்ங்க! ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்! ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசு வர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க. அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன். ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!


ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கினு கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்! கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க. நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல! உடனே பளார்!
வீட்டுக்கு வந்து அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார். என்னை வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நான் ஒரே அழுகை! இதுவும் சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாருன்னு justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல!

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க. என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான். அவனைப் போயி எல்லோரும் வையறீங்களே"ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க! நானும் அழுகைய நிறுத்திச் சமாதானம் ஆனேன்!
ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)


௪.4
பள்ளி/கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை!
அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.

சென்னை, தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள பெரியார் திடலில் தான் ஐயா பெரியாரின் நினைவிடமும், தி.க அலுவலகமும்!
வீரமணி ஐயாவிடம் நேரடியாவே பேசலாம்! ரொம்ப பந்தா எல்லாம் கிடையாது!
கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!


ஆனாலும் அவை ஒரு போராட்டத்தில் எரிக்கப்பட்ட போது, எனக்குள் தோன்றியது முதல் விரிசல்!
பின்பு கல்லூரியில் பேராசிரியர் மதி சீனிவாசன் அவர்கள் பார்வை பட்டு, எப்படியோ அரங்கனிடம் மீண்டும் வந்து சேர்ந்தேன்!
சென்னைப் பல்கலையில், துறைத் தலைவர் டாக்டர் M.A வேங்கடகிருஷ்ணன் அவர்கள், சாதி வித்தியாசங்கள் எதுவும் பாராது, ராமானுசர் வழியில் அரவணைத்துக் கொண்டதும், திருவரங்கத்து நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணும் நற்பேறு ஏற்படுத்திக் கொடுத்ததும்...
...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
குலதெய்வம் முருகன். சென்றது பெரியார் கழகம். மீண்டது பெருமாளிடத்தில்! :-)


௫.5
கல்லூரி ஆண்டு மலருக்கு பல பிரபலங்களைப் பேட்டி கண்டது மறக்க முடியாத ஒன்று!
அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்று பலரைப் பேட்டி கண்டோம். அப்போது தான் கல்லூரிக்கு வெளியே கிடந்த, போட்டி நிறைந்த professional life பற்றி ஒரு பார்வை கிடைச்சுது!

நான் எங்கள் Batchக்கு Placement Representative ஆகவும் இருந்தேன். எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களும் அதிகம். ஆங்கிலம் சரளமாக வரவும், Campus நேர்காணல், ஆளுமை வளர்ச்சி (Personality Development) ன்னு பல முயற்சிகள்!
Day Scholarஆக இருந்த நான் பாதி நாள் ஹாஸ்டல் வாசம் செய்து வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன்!
இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!

பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!


௬.6
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. அவர் இந்தியாவுக்கு வந்த போது எங்கு பார்த்தாலும் ஒரே craze. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் அவருடன் கை குலுக்க ஒரே போட்டா போட்டி.
அது என்னடான்னு அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது...மோனிகாவைப் பிடித்த கையை இவர்களும் பிடிக்க ஒரே ஆர்வக் கோளாறு என்று :-)

அவர் ஓய்வு பெற்ற போது, இந்திய-அமெரிக்க நல்லுறவு மலர்ந்தது பற்றி அவருக்குச் சும்மானா ஒரு கடுதாசி போட்டேன்! அமெரிக்கா வந்த புதுசு அப்போ. தமிழ்மணம் எல்லாம் கிடையாது அல்லது எனக்குத் தெரியாது! அப்புறம் அதை மறந்தே போயிட்டேன்!
திடீர்ன்னு ஒரு நாள் தபால்காரர் என்னைக் கூவி அழைத்தார். என்னடானு பார்த்தா வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு கடிதம்.

சரி சும்மானா நன்றி என்ற வாழ்த்து அட்டையா இருக்கும்னு நினைத்துப் பிரிச்சா,
தலைவர் ஒரு பக்கப் பதில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு அனுப்பி வைச்சார். ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!


௭.7
குழந்தைகள் நலத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டது நியூயார்க் வந்த பிறகு தான்!
Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, மற்றும் அதற்கு நிதி சேர்க்க நியூயார்க் five borough சைக்கிள் டூர் என்று ஓடுகிறது...
இதோ சுட்டி!



௮.8
வெட்டிப்பயல் பாலஜியும் நானும் விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கிய பேச்சு மறு நாள் வைகறை 4:30 மணிக்குத் தான் நின்றது!
அப்படி என்னடா பேசிக்கிட்டீங்கன்னு கேக்குறீங்களா?

ஹிஹி...அது என்னன்னா பேச்சுக்கு பேச்சும் ஆச்சு, வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசியும் ஆச்சு என்று அந்த ஏகாதசிக்கு அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது!


அப்பாடா...எட்டு எட்டுன்னு எட்டியாச்சுப்பா!
அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...அய்யோ கொத்தனார் என்னைக் கொத்த வரா மாதிரியே இருக்கே! :-)

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

நான் அழைப்பது:
செல்வன்
சிவபாலன்
வாத்தியார் ஐயா
தமிழ் சசி
நா.கண்ணன்
சாத்வீகன்
அன்புத் தோழி
திராச

47 comments:

  1. //ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு..//


    சரியான பொதிங்க நீங்க!!



    (அதாங்க பொறுமைத் திலகம்!! :))

    ReplyDelete
  2. 1) நாராயணன். Narayana

    ReplyDelete
  3. எட்டெழுத்தில் தொடங்கி, ஒரு பெரிய சுற்று வந்து, மீண்ட்டும் எட்டெழுத்திலேயே முடித்த உங்கள் எட்டு வைபவம், உங்கள் வாழ்வில் நீங்கள் சுற்றி வந்த எட்டு போலவே அமைந்தது, எப்படி இருக்கிறதென்றால்,

    எட்டெழுத்துப்
    பேரைக் கேட்டாலே,

    ச்ச்ச்ச்ச்ச்சும்மா ஆ..தி.... ரு...தில்ல!!

    :))

    ReplyDelete
  4. Nalla matters :)

    Naanum, romba alakkaama, innoru ettu podanumnu nenaikkaren :)

    ReplyDelete
  5. ஓம் நமோ நாராயணா


    அழகான எட்டா இருக்கு.

    தீவிர ஆத்திகர்கள் ஒரு சுத்து நாத்திகம் பேசியே ஆகணுமாம்:-))))

    ஆவோ நாவோ எல்லாமே 'அவன்'தான்:-)

    ReplyDelete
  6. //நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!
    //

    இது சூப்பர்,

    வெறும் பக்தி உணர்வு மட்டுமே உள்ளவர்களுக்கு இதுபோல் செய்யத் தோன்றாவே தோன்றாது. அதையும் தாண்டி புனிதமானது. சிலர் அசட்டுத்தனம் என்று நினைத்தாலும், இது உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ஆன்மீக திலகமாக அறிமுகமாகியிருந்த உங்களின் அடுத்த பரிமாணங்கள் புதுமையாக இருக்கின்றது.

    பெரியார் திடலிலிருந்து, வெள்ளை மாளிகை வரை பல தொடர்புகளை வைத்திருக்கிறீர்கள் போல. சரிதான்... பாத்துதான் பழகனும்...

    வைகுண்ட ஏகாதசி விஷயம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  8. ஆ..தி.... ரு...தில்ல!!அதே
    பெருமாள் தில் லுல திருத் தாயார் இருக்க எட்டியதை எட்டிய ரவிக்கும் எண்ணில்லா வாழ்த்துக்கள்.
    மாலுக்கு வத்திச் சுருளா...1
    பாவைப் பாட்டுக்கு ...2
    கலாமுக்கு ஜூனியர்...3
    க்ளிண்டனுக்கும் மெயிலியவர்...4
    ரஜினி ரசிகர்...............5
    சோஷல் சர்வீஸ்.......6
    ஏணைக்கண்ணபிரான்......7
    பிரபந்தசேவை........8

    இன்னும் நிறைய சொல்லலாம்.
    பெரியாழ்வாருக்கு வெயிட்டிங்.:))

    ReplyDelete
  9. நல்ல 8

    ஓம் நமோ நாராயணாய? (ஆனா 9 எழுத்து இருக்கே)

    ReplyDelete
  10. நல்ல விஷயம். ரவி: MS பத்தி சில உதவி வேணும்னா உங்களை கூப்பிடற லிஸ்ட்ல சேர்த்தாச்சு, பரவாயில்லையா?

    என்னோட மகனும் அப்பாடித்தான், பாப்ஸிகள் இருந்து பாதி எடுத்து மேடையில வைக்கிற ரகம். மாம்பழம் மட்டும் பெருமாளுகு தர மாட்டான், அது அவனுக்கு ரொம்ப விருப்பமான பழம்:)

    ReplyDelete
  11. ஒம் நமோ நாராயணா....

    அருமையான எட்டு...

    //ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!//

    எல்லாம் மாயை என்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லுதோ....

    ReplyDelete
  12. //ஓம் நமோ நாராயணாய//
    ஓம் என்பதை ஓரெழுத்தாக கொள்ள வேண்டும். அப்ப 8-தானே...:-)

    ReplyDelete
  13. // தளபதி CVR,//
    ஆஆஆஆ!!!
    ஏன் இந்த கொலை வெறி???
    ரத்தம் பாக்காம உட மாட்டீங்க போல!! :-ஸ்

    //பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்!//
    அதனால தான் இப்போ ஆன்மீக பதிவுகளில் வெளுத்து வாங்கறீங்க!!!

    //ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Body//
    சொல்லின் செல்வரே!!!
    வார்த்தை விளையாட்டுல உங்களை அடிச்சிக்க முடியாது போங்க!! :-)

    //ஒன்று!
    அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்த//
    தல!!!
    யாரையாவது விட்டு வைய்யுங்க!!

    //பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!
    //
    அதான் அவரும் உங்களை மாதிரி பிரில்லியன்ட்டா இருக்காரு!! :-D

    //ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!//
    அடங்குனதே பெரிய விஷயம் தான்!! :-)

    //விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம//
    உங்க கூடவுமா???
    ஆனா பொதுவாக வாதங்களில் ஈடு பட இரும்புவதில்லை என்பதால் ரொம்ப நேரம் நீளாது,ஆனால் வெட்டி கூட பேச ஆரம்பித்து விட்ட மணி கணக்காகி விடும்!!!

    சூப்பரா தாக்கிட்டீங்க(Tag-இட்டீங்க??) அண்ணாத்த!!!
    என் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!!
    என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  14. //அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...//


    இது உங்களுக்கே தௌசன்ட் மச்-ஆ தெரியல???
    எப்படி இதெல்லாம்??? :ஓ

    ReplyDelete
  15. அருமையான எட்டெழுத்து மந்திரம், நினைவு படுத்தி இருப்பதற்கு நன்றி. உங்களைப் போல் பெரியார் கட்சியில் இருந்தும் சரி, கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறியவர்களும் சரி,பின்னாட்களில் மாறி இருப்பதைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். (அதுவும் நெருங்கிய உறவுகளிலேயே,). மனமாற்றம் என்ற மிகவும் சாதனையான ஒன்றை ரொம்பவே தன்னடக்கத்துடன் சொல்கிறீர்கள். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தன்னைத் தான் உணர்ந்திருந்தால் ஒழிய இந்த அடக்கம் கைவராது. மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஃ - அசந்துட்டேன் .

    ஆனா ... over தன்னடக்கம் .

    ReplyDelete
  17. //இலவசக்கொத்தனார் said...
    //ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு..//
    சரியான பொதிங்க நீங்க!!
    (அதாங்க பொறுமைத் திலகம்!! :))//

    டேங்க்யூ கொத்ஸ்!
    ரெண்டு முறை பாத்ததுக்கே பொதின்னு வையறீங்க...மக்கள்ஸ் நாலு முறை பாத்தாங்களாம்! அதுவும் 2nd part மொட்டை ரஜினிக்காகவே! :-)

    ReplyDelete
  18. //Sathia said...
    1) நாராயணன். Narayana//

    வாங்க சத்தியா. சத்தியமாத் தான் சொல்லி இருக்கீங்க!

    //VSK said...
    எட்டெழுத்துப்
    பேரைக் கேட்டாலே,
    ச்ச்ச்ச்ச்ச்சும்மா ஆ..தி.... ரு...தில்ல!!//

    ஆகா, SK! பெருமாளுக்கேவா? கலக்கல் தான் போங்க!

    ReplyDelete
  19. //SurveySan said...
    innoru ettu podanumnu nenaikkaren :)//

    போடுங்க! போடுங்க!
    எட்டும் எட்டும் அறுபத்து நாலு ஐட்டம் பாக்கி இருக்கே!:-)

    //துளசி கோபால் said...
    தீவிர ஆத்திகர்கள் ஒரு சுத்து நாத்திகம் பேசியே ஆகணுமாம்:-))))//

    ஹிஹி; அதை எல்லாம் இப்ப நினைச்சா சிரிப்பு தான் வருது டீச்சர்!

    //ஆவோ நாவோ எல்லாமே 'அவன்'தான்:-) //

    ச்சூப்பரு! இது தான் ச்சும்மா அதிருதில்ல!
    உளன் எனில் உளன்
    உளன் அலன் எனில் உளன்
    உளன் என இலன் என, உளன்
    என்று நம்மாழ்வார் சொல்றதை, அப்பிடியே லோக்கலா சொல்லி அசத்துறீங்களே டீச்சர்!

    ReplyDelete
  20. //கோவி.கண்ணன் said...
    சிலர் அசட்டுத்தனம் என்று நினைத்தாலும், இது உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது//

    நன்றி GK! அது எல்லாம் ஒரு அறியாக் காலம்! சிரிப்பா இருக்கு!

    உங்களுக்குப் பெரியார் திடல் பற்றிய நிகழ்வுகள் தான் மிகவும் பிடிக்கும்னு நினைச்சேன்! இதுவும் உங்களைக் கவர்ந்துடுச்சா? :-)

    ReplyDelete
  21. //ப்ரசன்னா said...
    ஓம் நமோ நாராயணாய? (ஆனா 9 எழுத்து இருக்கே)//

    // Sridhar Venkat said...
    //ஓம் நமோ நாராயணாய//
    ஓம் என்பதை ஓரெழுத்தாக கொள்ள வேண்டும். அப்ப 8-தானே...:-)

    Sridhar Venkat கரீட்டா சொல்லியிருக்கார் ப்ரசன்னா!
    ஓம் என்பது ஓரெழுத்து. ஏகாட்சரம்! அ,உ,ம என்ற மூன்று சப்தங்களின் சேர்க்கையாக இருந்தாலும் ஒரே மாத்திரையாகத் தான் ஒலிக்கும்!

    இது பற்றி இன்னொரு நாள் தனிப்பதிவா போடுறேன்! ஆனா நீங்க கேட்டதால ஒண்ணே ஒண்ணு மட்டும்!

    மூலாதார மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆழ்ந்த நுண்பொருள் கொண்டவை!
    நம சிவாய = திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்)
    சரவண பவ = திருவாறெழுத்து (சடாட்சரம்)
    ஓம் நமோ நாராயணாய = திருவெட்டெழுத்து (அஷ்டாட்சரம்)
    இவற்றின் பெருமை சொல்லி மாளாது! ஓதி உணர்வதால் மட்டுமே பயனுற முடியும்!

    அதுல இன்னொரு விசேடம் என்னன்னா, பொதுவா எந்த மூலாதார மந்திரங்களுக்கும், ஓம் என்கிற பிரணவம் சேர்த்து அமையாது! மந்திரம் தனியா நிற்கும், பிரணவம் தனியா நிற்கும்!
    ஓம் + நம சிவாய
    ஓம் + நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் + சரவண பவ
    என்று தனித்தனியாத் தான் நிற்கும்!
    நாம் தான் ஓதும் போது, சேர்த்து ஓதிட வேண்டும்!

    ஆனால் ஒரே ஒரு மூலாதார மந்திரம் மட்டும் தான் பிரணவத்தையும் தன்னுள்ளே சேர்த்து ஒலிக்கிறது!
    ஓம் நமோ நாராயணாய
    என்று ஓங்காரமும் சேர்த்தா தான் திருவெட்டெழுத்து!


    இது சமய பேதமின்றி எல்லா வேதங்களிலும் உபநிடதம் மற்றும் பல சித்தாந்தங்களிலும் அப்படியே சொல்லப்படுகிறது! இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்!

    ReplyDelete
  22. //Sridhar Venkat said...
    //பெரியார் திடலிலிருந்து, வெள்ளை மாளிகை வரை பல தொடர்புகளை வைத்திருக்கிறீர்கள் போல. சரிதான்... பாத்துதான் பழகனும்...//

    அய்யோ, நான் என்னங்க தப்பு பண்ணினேன், பாத்த்து பழகறத்துக்கு! :-)

    வெள்ளை மாளிகையில் யாருடனோ தொடர்பு வைத்துள்ளீர்கள்-ன்னு சொல்லாம இருந்தீங்களே! அது வரைக்கும் நிம்மதி! :-)

    ReplyDelete
  23. //வல்லிசிம்ஹன் said...
    ஆ..தி.... ரு...தில்ல!!அதே
    பெருமாள் தில் லுல திருத் தாயார் இருக்க எட்டியதை//

    அட வார்த்தை விளையாட்டு! பின்னி எடுக்கறீங்களே வல்லியம்மா!

    //இன்னும் நிறைய சொல்லலாம்.
    பெரியாழ்வாருக்கு வெயிட்டிங்.:))//

    நன்றி வல்லியம்மா! சீக்கிரம் எழுதி விடுகிறேன்!

    ReplyDelete
  24. //கஜேந்திர வரதராஜப் பெருமாள்//
    KRS,
    நீங்க திருப்பத்தூரா? இல்ல எங்க ஊருல இந்த கோவில் இருக்குது. அது தான் கேட்டேன்.

    நல்ல பக்திமயமான எட்டு KRS.

    ReplyDelete
  25. //பத்மா அர்விந்த் said...
    ரவி: MS பத்தி சில உதவி வேணும்னா உங்களை கூப்பிடற லிஸ்ட்ல சேர்த்தாச்சு, பரவாயில்லையா?//

    தாராளமாச் சொல்லுங்க பத்மா!

    //என்னோட மகனும் அப்பாடித்தான், மாம்பழம் மட்டும் பெருமாளுகு தர மாட்டான், அது அவனுக்கு ரொம்ப விருப்பமான பழம்:)//

    ஹிஹி...பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நாலும் கலந்துனக்கு நான் தருவேன்னு தான் சொல்லி இருக்கு!

    ஸோ, சுண்டல், முறுக்கு, சீடை, பழம் எல்லாம் லிஸ்ட்டில் இல்லை! எனவே அவை எல்லாம் நமக்குத் தான்! நீ ஜமாயுப்பா, வருண்! :-)

    ReplyDelete
  26. //நாகை சிவா said...
    //ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!//

    எல்லாம் மாயை என்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லுதோ...//

    ஆகா...புலிக்குள் இப்படிக் கவுஜ ஊற்று எடுக்குதே! பின்னறீங்க தலைவா!

    ReplyDelete
  27. //சந்தோஷ் said...
    //கஜேந்திர வரதராஜப் பெருமாள்//
    KRS,
    நீங்க திருப்பத்தூரா? இல்ல எங்க ஊருல இந்த கோவில் இருக்குது. அது தான் கேட்டேன்//

    ஆர்க்காடு, ஆரணி, செய்யாறு தெரியுமுங்களா?
    இல்லை திருவண்ணாமலை?

    அதுக்குக் கிட்ட இருக்கும் ரம்மியமான கிராமம் வாழைப்பந்தல்! அதாங்க நம்ம ஊர்ஸ்!
    திராச ஐயாவும் எங்கூர் காரங்க தான்!

    ReplyDelete
  28. @ தோழரே,

    எட்டும் அருமை!!

    //ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)//

    ஆன்மீகத்தில் பொதுநலம், சுயநலம் என எல்லாத்தையும் கலந்து கொசுவர்த்திய சக்கரத்தாழ்வார்னு வேற கருத்து சொல்லி பெரிய திருவிளையாடல் நடத்தி இருக்கீங்க!!

    //Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி//

    சேவைகள் தொடரட்டும்!!

    //கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!//

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. மிக நல்ல எட்டு. தாங்கள் நாத்திகரை இருந்தது நம்பவே முடியவில்லை.
    உங்களை ஜீனியராய் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  30. எட்டும் மெட்டை எட்டாக் குரலில் பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மெட்டைக் கேட்கும் நாள் எந்நாளோ!

    திருப்பாவை ஒரு கவிதை நூல். பக்தியெல்லாம் ஒரு பக்கத்துல இருக்கட்டும். அட இல்லாமலும் இருக்கட்டும். அது கவிதை. நல்ல கவிதையை ரசிக்கிறவங்க திருப்பாவையை ரசிப்பாங்க.

    // ஓம் + நம சிவாய
    ஓம் + நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் + சரவண பவ
    என்று தனித்தனியாத் தான் நிற்கும்!
    நாம் தான் ஓதும் போது, சேர்த்து ஓதிட வேண்டும்!

    ஆனால் ஒரே ஒரு மூலாதார மந்திரம் மட்டும் தான் பிரணவத்தையும் தன்னுள்ளே சேர்த்து ஒலிக்கிறது!
    ஓம் நமோ நாராயணாய
    என்று ஓங்காரமும் சேர்த்தா தான் திருவெட்டெழுத்து! //

    புரியலை. இங்கயும் ஓம் + நமோ நாராயணாய தானே.

    ReplyDelete
  31. கண்ணபிரான்

    அதிகாலை 4:15 மணிக்கு முதல் முதலில் கண்னபிரான் எனும் பெயரைத்தான் மடலில் பார்த்தேன்.மங்களகரமாக சகுனத்துடன் துவங்கிய நாள் இதோ...இந்த நிமிடம் வரை நல்லபடியாக போகிறது.

    கொத்ஸ் எஸ்கே வெங்கட்ராமன் சந்தோஷ் விழியன் என பல நண்பர்கள் அன்புடன் அழைத்து விட்டார்கள். பாதி எழுதி வைத்திருக்கிறேன்.நடு நடுவே அரசியல் வந்து ஆட்கொண்டு விடுவதால் பல இன்ஸ்டண்ட் பதிவுகள் போட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டி இருக்கிறது:)

    லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பதை மட்டும் தமிழ்நெஞ்சங்களுக்கு (மலையாள, தெலுங்கு, கன்னட,ஆங்கில நெஞ்சங்களுக்கும்) சொல்லிக்கொண்டு இருப்பது ஒரு உயிர் அது போவது ஒரு முறை என்பதையும் சொல்லிக்கொண்டு, எதற்கும் கலங்கா மாவீரன் இந்த அஞ்சாநெஞ்சன் என்பதையும் அடித்து சொல்லிவிட்டு இந்த சிற்றுரையை முடித்துக்கொண்டு அமர்கிறேன்.
    நன்றி வணக்கம்.

    (ஸ்ஸப்பா....இது அழைப்புக்கு நன்றி பின்னூட்டம். பதிவுக்கு கருத்து நீங்க 40 டார்கெட்டை தொட்டதும் விரிவா எழுதறேன். குறிப்பா மோனிகா அம்மையார் பத்தி சில விசயம் கேக்கணும்:)

    ReplyDelete
  32. அன்பு கேஆரெஸ்,

    அருமையான எட்டு, மேலும் தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது......நன்றி.

    மெளலி...

    ReplyDelete
  33. //அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.//

    நீங்களுமா? உடனே அதே கேள்விய என்ன கேட்க்ககூடாது :). நான் இருந்ததில்லை சும்மா புஸ்தகம் நூலகத்தில இருந்து படித்துள்ளேன். அவ்வளவே!

    //இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!//

    இது தான் சார் சூப்பரு.

    அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல்....
    ...ஆங்கே ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். புண்ணியமையா உங்களுக்கு, வாழ்நாள் முழூவதும் உங்களோடு இருக்கும்.

    ReplyDelete
  34. // இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்!//

    விளக்கத்துக்கு நன்றி KRS. கண்டிப்பா இன்னொரு பதிவு விரிவாக எழுதுங்கள்....

    //புரியலை. இங்கயும் ஓம் + நமோ நாராயணாய தானே.//

    ஜிரா மாதிரியே எனக்கும் இது புரியலை.

    ٌٌٍ

    ReplyDelete
  35. //புரியலை. இங்கயும் ஓம் + நமோ நாராயணாய தானே//

    ஜிரா, ப்ரசன்னா

    நம சிவாய = 5 அட்சரம்
    சரவண பவ = 6 அட்சரம்
    நமோ நாராயணாய = 7 அட்சரம் தான்
    இதில் ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் (8) அஷ்டாட்சரம் பூர்த்தியாகும்!

    மற்ற மகா மந்திரங்கள் எல்லாம் ஓம்காரம் சேர்க்காமலேயே எண்ணப் படுகின்றன!
    நம சிவாய = திரு ஐந்து எழுத்து - ஓங்காரம் சேர்க்காமல்!
    சரவண பவ = திரு ஆறு எழுத்து - ஓங்காரம் சேர்க்காமல்!

    ஜெபிக்கும் போது நாம் தான் அவற்றுடன் ஓங்காரத்தைத் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
    இப்படி மந்திரம் தனியா நிற்கும்! ஓங்காரம் விலகி நிற்கும்!

    அஷ்டாட்சரத்தில் மட்டுமே ஓங்காரமும் மந்திரமும் சேர்ந்தே இருக்கும்!
    நமோ நாராயணாய என்ற 7-உடன் ஓம் என்பதையும் சேர்ந்தால் தான் 8 அட்சரம்!

    பிரணவமும் மந்திரமும் பிரியாத தத்துவமாக இருப்பதால் இதற்கு மட்டும் பிரணாவாகாரம் என்ற சிறப்பு!
    அதனால் தான் சைவ, வைணவ, சாக்த என்று எல்லாச் சமயத் தலைவர்களும் நாராயண ஸ்மிருதி என்று ஒப்பம் இடுகிறார்கள்! சமய பேதம் இல்லாது அனைவரும் காலைச் சந்தியிலே ஒரு முறை தவறாது ஓதுகிறார்கள்!

    அடியேன் இயன்ற வரை சொல்லியுள்ளேன்! மேலும் வேண்டுமாயின் கேளுங்கள்!

    ReplyDelete
  36. //CVR said...
    //பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!
    //
    அதான் அவரும் உங்களை மாதிரி பிரில்லியன்ட்டா இருக்காரு!!//

    CVR அண்ணா! மாதவிப்பந்தலுக்கே உள்குத்தா? :-)

    //ஆனால் வெட்டி கூட பேச ஆரம்பித்து விட்ட மணி கணக்காகி விடும்!!!//

    செல்லு பில்லு வெட்டி தலையில தான் கட்டறீங்களா? பாவம் பாலாஜி! :-)

    //என் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!!//

    மாப்பிள்ளை அழைப்பை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும் CVR :-)

    ReplyDelete
  37. //கீதா சாம்பசிவம் said...
    உங்களைப் போல் பெரியார் கட்சியில் இருந்தும் சரி, கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறியவர்களும் சரி,பின்னாட்களில் மாறி இருப்பதைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். (அதுவும் நெருங்கிய உறவுகளிலேயே,).//

    ஹிஹி!
    டீச்சர் சொன்னதைப் பாருங்க கீதாம்மா!
    "ஆவோ நாவோ எல்லாமே 'அவன்'தான்"

    //தன்னைத் தான் உணர்ந்திருந்தால் ஒழிய இந்த அடக்கம் கைவராது. மீண்டும் வாழ்த்துக்கள்//

    உங்க அன்புக்கு நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  38. //சுந்தர் / Sundar said...
    ஃ - அசந்துட்டேன் .
    ஆனா ... over தன்னடக்கம்//

    அய்யோ நீங்க வேற சுந்தர்!
    தன்னடக்கம் எல்லாம் இல்ல! இப்ப எல்லாம் குறை குடம் கூட தளும்பறது இல்ல! :-)

    ReplyDelete
  39. //குட்டிபிசாசு said...
    ஆன்மீகத்தில் பொதுநலம், சுயநலம் என எல்லாத்தையும் கலந்து கொசுவர்த்திய சக்கரத்தாழ்வார்னு வேற கருத்து சொல்லி பெரிய திருவிளையாடல் நடத்தி இருக்கீங்க!!//

    ஆகா...நானாச்சும் சக்கரம் "போல" என்று தான் சொன்னேன்!
    நீங்க சக்கரத்தாழ்வார்னே சொல்லிட்டீங்க! :-)

    //கால்கரி சிவா said...
    தாங்கள் நாத்திகரை இருந்தது நம்பவே முடியவில்லை//

    எனக்குக் கூடத் தான் சிவாண்ணா...நம்பவே முடியலை! :-)

    //உங்களை ஜீனியராய் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்//

    டேங்க்யூ :-)
    எப்படிப் பார்த்தாலும் கலாமுக்கு நீங்க தான் நெருக்கம்! ஏன்னா நீங்களும் எனக்குச் சீனியர் தானே! :-)

    ReplyDelete
  40. RAVI SIR.
    Vanakkam, Aranganin vimaanam pranavakaram,also known as vimanarajan.
    ARANGAN ARULVANAGA.
    Anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  41. //G.Ragavan said...
    எட்டும் மெட்டை எட்டாக் குரலில் பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மெட்டைக் கேட்கும் நாள் எந்நாளோ!//

    ஆகா! மெட்டைப் "போட்டுக்" கொடுத்தவர் யாரோ?
    நாம நேரே சந்திக்கும் நாள் தான் கேட்கும் நாள் ஜிரா!

    //திருப்பாவை ஒரு கவிதை நூல். பக்தியெல்லாம் ஒரு பக்கத்துல இருக்கட்டும்.....திருப்பாவையை ரசிப்பாங்க//

    கோதைத் தமிழ் வெறும் கவிதை நூல் மட்டுமா ஜிரா?
    காதல் கவிதை! அதையும் சேர்த்துச் சொல்லுங்க! காதலிக்காமல் இருப்பவங்க மட்டும் தான் திருப்பாவையப் படிக்காம இருக்க முடியும்!

    காதலிக்காதவங்க யாராச்சும் உலகத்தில் உண்டாப்பா? :-)

    ReplyDelete
  42. //செல்வன் said...
    அதிகாலை 4:15 மணிக்கு முதல் முதலில் கண்னபிரான் எனும் பெயரைத்தான் மடலில் பார்த்தேன்.மங்களகரமாக சகுனத்துடன் துவங்கிய நாள் இதோ...இந்த நிமிடம் வரை நல்லபடியாக போகிறது.//

    ஆகா
    செல்வனுள் செல்வன் செவிச்செல்வன் சொல்றத கேட்டீங்களா?:-)
    பெயரில் இருக்கும் மங்களம் பெருமாளுடையது மட்டும் தான் செல்வன்!

    //லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பதை மட்டும் தமிழ்நெஞ்சங்களுக்கு (மலையாள, தெலுங்கு, கன்னட,ஆங்கில நெஞ்சங்களுக்கும்) சொல்லிக்கொண்டு//

    அட, சொல்லவே இல்ல! மதுரைத் தேர்தலில் நீங்க ஆத்திய பெரும் பணிக்கு வாரியத் தலைவர் கொடுத்திருக்காங்க போல! சிற்றுரையும் அப்படியே இருக்குது செல்வன்! :-)

    //40 டார்கெட்டை தொட்டதும் விரிவா எழுதறேன். குறிப்பா மோனிகா அம்மையார் பத்தி சில விசயம் கேக்கணும்:)//

    தொட்டுருச்சு!
    மோனிகா உன் மோனாலிசா-ன்னு என்னத்த கேட்கப் போறீங்களோ! :-)

    ReplyDelete
  43. //Anonymous said...
    அருமையான எட்டு, மேலும் தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது......//

    நன்றி மெளலி சார்!

    ReplyDelete
  44. //சிவமுருகன் said...
    நீங்களுமா? உடனே அதே கேள்விய என்ன கேட்க்ககூடாது :). நான் இருந்ததில்லை சும்மா புஸ்தகம் நூலகத்தில இருந்து படித்துள்ளேன். அவ்வளவே!//

    சிவா, நீங்களுமா? :-)
    கேட்டுட்டம்-ல! புத்தகம் தானேங்க! நல்லாத் தான் இருக்கும்! நான் இப்ப கூடப் படிக்கிறேன்! :-)

    //அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல்....
    ...ஆங்கே ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்//

    எழுத்து எல்லாம் அறிவிக்கலீங்க!
    அவங்க எழுத்தே சிறப்பானது தான்! அதை அவங்களே உலகத்துக்கு அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு ஒரு ஏற்பாடு!

    ReplyDelete
  45. //Anonymous said...
    RAVI SIR.
    Vanakkam, Aranganin vimaanam pranavakaram,also known as vimanarajan.//

    ஆமாங்க ஸ்ரீநிவாசன் சார்!
    பிரணாவாகர விமானம் தான் அரங்கத்தில்! அதான் அஷ்டாட்சரம் போலவே அவ்வளவு பெருமை!

    ReplyDelete
  46. vanakkan KRS
    MADHAVI PANTHAL blog miga arumai.
    unga posts nalla irukku.aana tamil
    letters padikka konjam kashtamayirukku.athai konjam mathi nalla tamilil pottal padikka migavum
    sulabamayirukkum.en blog SRIVATSANGAM
    parunga.comment pannunga.guide pannunga please.keep it up.
    bye
    KVB kooram varadarja Bhattar

    ReplyDelete
  47. //ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)//

    ரவி! சூப்பர்! ஓங்கி உலகை அளந்தவர்
    அவருக்கு துணி எடுத்து கட்டுப்படி ஆகுமா அதான் barebody போலும்!
    உங்க கொசுவத்தி நிகழ்ச்சி ரொம்ம்பவே நெகிழ்ச்சி! முழுப்பதிவும் படிக்கவே மகிழ்ச்சி..ரொம்ப தாமதமா பின்னூட்டமிடும் எனக்கு சொல்லிடாதீங்க ச்சிச்சீ:)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP