Wednesday, December 31, 2008

மார்கழி-17: ஆண்களா? பெண்களா?? - Who is தூங்குமூஞ்சி? :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! Wish u All a Very Happy New Year-2009! :)
இறைவன் எம்பெருமானின் ஆசியுடன், தங்கள் இல்லத்தில், இனிதே இன்பம் பொங்க, வாழ்த்துகிறேன்!


இன்றைய பாவை, புத்தாண்டுப் பாவை! குடும்பத்தைக் காட்டும் பாவை! குடும்ப மகிழ்ச்சியைக் காட்டும் பாவை! பார்க்கலாமா?

தூக்கத்தில் பிஸ்து யாருங்க? யாருக்கு நல்லாத் தூக்கம் வரும்? ஆண்களா? பெண்களா??
இதைக் கேட்டா ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாய்ங்க! வாழ்க்கை பூரா அரட்டை அரங்கம் நடத்தும் அளவுக்கு மேட்டர் இருக்கு இந்தக் கேள்வீல! :)

காதலி: எனக்குத் தூக்கமே வரதில்லை! இவன் நினைப்பாவே இருக்கு! இவன் எப்படித் தான் நல்லாக் கொஞ்சிட்டு, வீட்டுக்குப் போனவுடன், என்னை மறந்துட்டு தூங்கறோனா? :)
புது மனைவி: ஏம்ப்பா! தூக்கமே வர மாட்டேங்குது! புது இடமா வேற இருக்கு! நல்லாக் கொஞ்சிட்டு, நீங்க மட்டும் எப்படித் தான் இப்படிக் கொறட்டை விட்டுத் தூங்கறீங்களோ? :)
புது அம்மா: என்னாங்க! குழந்தை அழுவறது காதுல விழலை? அப்படி என்ன தூக்கம்? எழுந்து போயி, குழந்தைக்குக் கொஞ்சம் போக்கு காட்டுங்க! :)
பழைய மனைவி: அலோ! பையன் காலிங் பெல் அழுத்தறான்! எழுந்து போயி கதவைத் திறங்க! எப்பமே நான் தான் எழுந்து போகணுமா? :)

காதலன்/புது கணவன்/புது தந்தை/பழைய கணவன்(மனைவன்): அது எப்படித் தான், வண்டி பின் சீட்டில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிஷம், உங்களுக்கெல்லாம் தானா தூக்கம் வருதோ? :)

இந்த செல்லப் பட்டிமன்றத்துக்கு என்ன தான் தீர்ப்பு? ஆண் தூங்குமூஞ்சியா? பெண் தூங்குமூஞ்சியா?
* கோதை சொல்லுறா: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)
* நானும் சொல்லுறேன்: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!


அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!



சென்ற பாட்டில் வாயிற் காப்போனைப் பாடினார்கள். (கவனிக்கவும்: வாயிற் காப்போனை எழுப்பவில்லை! ஜஸ்ட் பாடினார்கள்! ஏன்னா அவன் தூங்கவில்லை! வாயில் "நிஜமாலுமே" காத்துக் கொண்டிருந்தான்:)

இந்தப் பாட்டில் கண்ணனின் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்கள்! இதிலிருந்து பாத்துக்குங்க கண்ணன் வீட்டில் எவ்வளவு எளிமை-ன்னு! கெடுபிடிகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! எல்லா அடியவர்களும் அன்போடே நடத்தப்படுவார்கள் அவன் வீட்டில்!

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும் = உடை, தண்ணீர், உணவு என்று மூன்று அறங்களையும் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய் = எம்பெருமானின் தகப்பனாரே! பெருமாளுக்கே பெருமானே! நந்த கோபன் அப்பா (மாமா)! எழுந்திருங்க!

அடிப்படைத் தேவை: உடுக்க அம்பரமே=உடையே! உண்ண சோறே=உணவே!
ஏன் உடையை மொதல்ல சொல்லி, உணவை அப்புறமா சொல்றாரு?

ஏன்னா மனிதனுக்கு மானம் முக்கியம்! பசித்த பசியிலும், சோறு வாங்கத் துணியில்லாம வெளியில் வரமுடியுமா? அதான் முதலில் உடை கொடுத்து, பின்னர் உணவும் கொடுத்து, தர்மங்கள் செய்கிறாராம் நந்தகோபன்! தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரும் தண்ணீர் பந்தல் அறங்களும் செய்கிறார்! எங்கூரு தண்ணி உனக்கு கிடையாது-ன்னு சொல்லாதவர்! :)

இன்னொரு பார்வை:
அம்-பரம் = ஓம்! சோ-றே! = நமோ! தண்ணீரே = நாராயணா!

* அம்-பரம் = அந்தப் பரத்துவமான மோட்ச வீடு = ஓம்!
* சோ-றே! = சோற்றைத் தனக்கு-ன்னு சேமிச்சிக்க முடியாது! அழுகிடும்! எனதில்லை = ந+மோ!
* தண்ணீரே = தண்ணீர்/தீர்த்த வடிவாய் இருப்பவன் = நாராயணாய!

நாரணம்=தண்ணீர் என்று முன்னரே சொல்லி இருக்கேன்!
நீர், கலத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவம் கொள்வது போல், நாரணன் நம் மனத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெய்வ வடிவம் கொள்கிறான்!
மதங்கள் வேறாக இருந்தாலும், அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத என்று கொள்கைகள் வேறாக இருந்தாலும், அவனே பரப்பிரம்மம் என்பது சங்கரர்-இராமானுசர்-மாத்வர் மூன்று ஆச்சார்யர்களின் வாக்கு!



கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே = பெண்கொடிகளுக்கு எல்லாம் கொழுந்தே! ஆயர் குலத்தின் விளக்கே!
கொழுந்து இலை = அது துளிர் விடும் போது தான் ஒரு உயிரின் அருமை நமக்குத் தெரியுது! அது போல் யசோதை! அவளை வைத்துத் தான் நமக்கு நம்பிக்கையே பிறக்குது!

குலவிளக்கே = கண்ணன் மனித குலச் செல்வம்! அந்தப் புதையலை எப்படித் தேடுவது? விளக்கை வைத்துத் தானே இருளில் தேடணும்? அதான் குலத்தின் விளக்காக அம்மா யசோதை!
மாதா->பிதா->குரு->தெய்வம்! = அன்னை முதல் விளக்கை ஏற்றி அப்பாவைக் காட்ட, அப்பா இரண்டாம் விளக்கை ஏற்றி நல்ல கல்வியைக் காட்ட, குரு மூன்றாம் விளக்கை ஏற்றி, இறைவனைக் காட்டுகிறார்!
இப்படி அத்தனை விளக்குக்கும் முதல் விளக்கு, அம்மா = குல விளக்கு!

எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய் = எம்பெருமானின் தாயாரே! பெருமாளுக்கே பெருமாட்டியே! யசோதாம்மா (அத்தை)! முழிச்சிக்கோங்க! :)

******* முக்கியமான பாயிண்ட்********
நந்தகோபனுக்கு = எழுந்திராய்! யசோதைக்கு = அறிவுறாய்!
* நந்தகோபனை உலுக்கி, குலுக்கி, அலாரம் வச்சி, சகலமும் செஞ்சி "எழுப்பணும்"
* யசோதையை "அறிவுறாய்" - முழிச்சிக்கோங்க-ன்னா போதும்! உடனே தூக்கத்தில் இருந்து எழுந்திருவாங்க!
இப்போ சொல்லுங்க! தூங்குமூஞ்சி - ஆண்களா? பெண்களா?? :))


1189lordvamana

அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த = ஆகாசம் என்னும் வெளியை(அம்பரம்) ஊடு அறுத்து, ஓங்கினான்! உலகு அளந்தான்! நம் எல்லாரையும் அளந்தான்!
அவன் பரத்துவம்(அம்-"பரம்")! அந்தப் பரத்தையே நமக்காக ஊடு அறுத்தான்! பரத்தை விட்டுக் கீழிறங்கி வந்து நமக்காக உலகளந்தான்!

உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய் = தேவாதி தேவர்களின் கோமகனே! உறங்கியது போல் உறங்கியது போதும்! நாங்க எல்லாம் வந்திருக்கோம்-ல? எங்களை முதலில் கவனி!

வாமனன் - திரிவிக்ரமன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா? கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி!
* அவதாரங்களிலேயே நடு-நாயகமான அவதாரம்! இது வரை ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் (வாமன-திரிவிக்ரம) இரட்டை அவதாரம்!
* இதற்கு முன்பு விலங்குகள், இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
* நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்! அப்படி நடுவிலே நின்ற அவதாரம்!
* அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது தான்!
* இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன! அதில் மிக முக்கியமான ஒன்று = கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்!
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம்! முருக பக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்! சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா-சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும்! அத்தனை பெருமை இவனுக்கு மட்டும்!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
* முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
* இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த
* மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு!


அப்போது செய்த இலக்குவத் தொண்டுக்கு, இப்போது கால் பிடிச்சி விடறான், பலராமனுக்கு!


செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா = செம்பொன்னால் ஆன வீரக் கழல்! அதைத் திருவடியில் மாட்டி இருக்கும் பலதேவா!
பலதேவன் = வாலியோன் என்பது சங்க காலத் தமிழ்ப் பெயர்! இவனுக்குப் பனைமரக் கொடியும், கலப்பையும் கொடுக்குது சங்கத் தமிழ் இலக்கியம்!

ஏன் பலராமன் அவ்வளவு முக்கியம்? அவனுக்கு மட்டும் தனி அவதார அந்தஸ்து ஏன்?
ஏன்-னா அவன் தான் தொண்டின் அடையாளம்!
அவன் தான் சென்ற முறை இலக்குவன்! இந்த முறை பலராமன்!

அன்பு,தொண்டு = இரண்டிலும் சிறந்து விளங்கினான் இலக்குவன்!
மற்றவர்கள் இராமனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தொண்டில் இருந்து சற்றே ஒதுங்கினர்! ஆனால் இவன் மட்டும் தொண்டை விடவே இல்லை! கைங்கர்யம் செய்தே தீருவேன் என்று பெருமாளிடமே சண்டை போட்டு தொண்டு செய்தான்! :)

மனசால் அன்பு செய்தால் மட்டும் போதாது! கையாலும் தொண்டு செய்யணும்! இறைவனைப் பேசி/பாடிக் கொண்டும், பதிவு போட்டுக் கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது! மானுடத் தொண்டும் கொஞ்சமாச்சும் செய்யணும்!
* இதைக் காட்டவே இலக்குவனை மட்டும் முன்னிறுத்துகிறான் இறைவன்!
* அதான் அவனுக்கு மட்டும் அடுத்த முறை தனி "அவதார அந்தஸ்து = பலராம அவதாரம்"!

நின்றால் மரவடியாம் = பாதுகை!
அதுவே ஆதிசேஷன்! அதுவே இலக்குவன்! அதுவே பலராமன்!
செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை! தொண்டுக்குக் கிடைத்த பரிசு இது! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!


உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய் = பலராமனைத் தான் கோதை முதலில் சொல்கிறாள்! தலைச்சன் புள்ள தான் எப்பமே எல்லாத்தையும் தாங்குது! அதான்:)
கண்ணனை, As Usual, வெளிப்படையாச் சொல்ல மாட்டாள்! பலராமா, நீயும் உன் தம்பியும் என்று சொல்லி விடுகிறாள்! :)

நீயும், உன் தம்பியும் (கண்ணனும்) தூங்காதீர்கள்/தூங்குங்கள் = உறங்கேல்/உறங்கு+ஏல்!
* உறங்கேல் (தூங்காதீர்)+ ஓர் (எண்ணுங்கள்) எம்பாவாய்!
* உறங்கு (தூங்கு)! ஏல்-ஓர் (ஏற்றுக்கொள்-எண்ணுங்கள்) எம்பாவாய்!
ஹா ஹா ஹா! இது என்ன குழப்பமாப் பேசுறாளோ கோதை? காதலன் கண்ணன் பாவமாத் தூங்குறான், சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்-ன்னு விட்டுடறாளோ? ஹிஹி! அடுத்த பதிவு இட்டாகி விட்டது! அதில் படியுங்கள் இப்படி ஏன் சொல்கிறாள் என்று!

நாங்க கண்ணன் இல்லம் வந்திருக்கோம்-ல? இப்போ எங்களை ஏல்-ஒர் எம்பாவாய்! ஏல்-ஒர் எம்பாவாய்!
இலக்குவ-பலராம-தொண்டர்கள்-அடியார்கள் திருவடிகளே சரணம்! சரணம்!
Read more »

Y2K போலவே Y2K9! Microsoft-க்கு ஆப்பு!

யாரெல்லாம் IPod-க்கு பதிலா Microsoft Zune வச்சீருக்கீங்க? அத்தினி பேருக்கும் New Year Eve ஆப்பு! :)
Dec-31 காலையில் எழுந்தவுடன் அத்தனை பேரும் ஜெர்க் ஆனார்கள்! ஏன்?

Y2K போலவே Y2K9! Z2K9! = Zune-2K9 Bug! :)

உலகெங்கிலும் உள்ள Microsoft Zune வாடிக்கையாளர்கள் இதனால் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்! இதைப் படிங்க! 30GB Zunes Failing Everywhere, All At Once


//Apparently, around 2:00 AM today, the Zune models either reset, or were already off. Upon when turning on, the thing loads up and... freezes with a full loading bar (as pictured above).
I thought my brother was the only one with it, but then it happened to my Zune.
Then I checked out the forums and it seems everyone with a 30GB HDD model has had this happen to them!//

இங்க பாத்துகிட்டே இருங்க.....தீர்வுக்கு!

அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)
இன்னும் சில ஹாலிவுட் கிறுக்குப் பய புள்ளைக, வேற்று கிரக மாந்தர்கள் செய்த சதி-ங்கிறாங்க! விஸ்டாவுக்காக பில் கேட்ஸை மன்னிப்பு கேட்க வைக்க, இதைத் திடீர்-ன்னு முடக்கி இருக்காங்களாம்! :)

நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
பாட்டு வருதா?
ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
காத்து தாங்க வருது! :)

இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மைக்ரோசாஃப்ட்! :)

(நல்ல வேளை! திருப்பாவைப் பாசுரங்களைப் ப்ளாக்பெர்ரி-இல் சேமிச்சி வச்சிருந்தேன்! இன்று காலையும் கேட்க முடிந்தது! அவனவன் கவலை அவனவனுக்கோ? :)))
மீண்டும், இனிய 2009 - புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Read more »

Tuesday, December 30, 2008

மார்கழி-16: தொழிலாளிக்கு பென்ஸ் கார் கொடுப்பாரா முதலாளி?

தான் விரும்பி உபயோகிக்கும், தனக்கே உரிய ஒன்றை, முதலாளி தொழிலாளிக்கு விட்டுக் கொடுப்பாரா? எடுத்துக்காட்டா ஒரு பென்ஸ் காரு-ன்னு வச்சிக்குவோம்! அது முதலாளியின் ஆளுமைச் சின்னம்! அதைத் தன் தொழிலாளி கிட்ட கொடுத்து, நீயும் யூஸ் பண்ணிக்கோ-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? ஹிஹி! அவ்ளோ நல்லவரு யாருங்க?

வேற யாரு? இறைவன் தான்! :)
* பெருமாளுக்கே உரிய அடையாளம் எது? = சங்கு-சக்கரம்!
* துவார பாலகர்கள் (வாயிற் காப்போர்) கையில் என்ன இருக்கு பாருங்க! = சங்கு-சக்கரம்!

ஆகா! இது எப்படிச் சாத்தியம்? இது எப்படிச் சாத்தியம்? ஹிஹி!
அதான் அவன் பெருமாள்=பெரும்+ஆள், நாம சிறுமாள்=சிறும்+ஆள்!


வீட்டில் நம் பொருட்களை, அம்மா-அப்பா ஏதாச்சும் அவசரத்துக்குத் தொட்டால் கூட கத்தறோம்! நண்பனுக்குக் கூட நம்மை மிஞ்சித் தான் தர்மம்! காதலிக்குத் தண்ணியா செலவழிச்சாலும், நம் ஈகோ, இமேஜ் சம்பந்தப்பட்ட பொருட்களை விட்டுக் கொடுப்பது கிடையாது! தங்கச்சிக்கு மட்டும் எப்பவாச்சும் கொஞ்சூண்டு பாசம் காட்டுறோம்! :)
ஆனால் ஆனானப்பட்ட சங்கு சக்கரங்களையே, பக்தர்களுக்காக விட்டுக் கொடுக்கிறானே! இது எப்படி முடிந்தது?
* சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கரில், இன்றும் ஆஞ்சநேயர் கைகளில் சங்க-சக்கரம்! தனக்கே உரிய உடைமையைத் தன் அன்பன் அனுமனுக்குக் கொடுக்கிறான்!
* திருமலை திருப்பதியில், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, தனக்கே உரிய உடைமையான சங்கு சக்கரங்களை விட்டுக் கொடுத்து நின்றான்! வந்தது வினை! இவன் பெருமாளே அல்ல என்று சிலர் கும்மியடிக்கும் நிலைக்குச் சென்று விட்டது!

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள், இன்றுள்ள பெருமாளை அப்போதே படம் பிடித்துக் காட்டுகிறாரே! அட, கும்மிக்கு இளங்கோவாவது? தமிழாவது? தரவாவது? அதெல்லாம் எதுவுமே பொருட்டல்ல! அந்த இறைவனுக்கே விதி விலக்கு கொடுக்க மாட்டார்கள்! :)
வீங்கு நீர் அருவி "வேங்கடம்" என்னும்
ஓங்குயுர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு "ஆழியும்" பால் வெண் "சங்கமும்"
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
செங்கண் "மால்" "நெடியோன்" நின்ற வண்ணமும்!


அப்போது கூடப் அவன் தன்னைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! அதனால் தான் அவன் பெரும்+ஆள்! கடைசியில் இராமானுசர் வந்து தான் அவனை நிலைநாட்ட வேண்டிய நிலை!
இப்படித் தன்னையும் தன் உடைமையையும் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு, நம் அருளே புரிந்து இருக்கிறான்! நமக்காக விட்டுக் கொடுத்து நிற்கிறான் இறைவன்! - அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!


இறைவன் "வீட்டின்" துவாரபாலகர்கள் = கோயில் காப்போர்! கொடி தோன்றும் தோரண வாயில் காப்போர்! அவர்களைப் பற்றிய பாட்டு இன்றைக்கு!
* கிழக்கு = ஜய-விஜயன் (பிரதான நுழைவாயில்)
* மேற்கு = சண்டப்-பிரசண்டன்
* தெற்கு = பத்ர-சுபத்ரன்
* வடக்கு = தாத-விதாதன்

ஆலயத்துக்குள் செல்லும் முன்னர், இவர்களையும் வணங்கிச் செல்வதே முறை! அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
சக அடியார்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொண்டால், ஆண்டவனின் ஆன்மீகம் தானே வளரும்!

ஜய-விஜயன் தான், இறைவனுக்காக, இறைவனுடன் அவதாரம் எடுத்தனர்!
* இரண்யாட்சன்-இரணியகசிபு
* இராவணன்-கும்பகர்ணன்
* சிசுபாலன்-தந்தவக்ரன்

நமக்காக-அவனுக்காக, தாங்கள் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளக் கூடத் துணிந்த இவர்களின் பக்தி தான் என்னே! தம்மைப் பின்னிறுத்தி, இறைவனை முன்னிறுத்தும் குணத்தை நாம இவிங்க கிட்ட இருந்து தான் கற்றுக் கொள்ளணும்!
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, இந்த ஜய விஜயர்களைப் பார்த்து ஒரு "ஹாய்" ஆச்சும் சொல்லுங்க! :))

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை

மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!




இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த பதினைஞ்சு பாடல்கள்! சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, நாராயணா-ன்னு சொல்லியாச்சு
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டிக்கிட்டாச்சு!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாகி விட்டது!
* எல்லாரும் நோன்பில் இருக்கிறாங்க!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்சி!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்சி!
* நேரே கண்ணன் வீட்டுக்குப் போறாங்க அத்தனை பேரும்!

அங்கே சக அடியார்கள் - காவலர்கள்! அவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள் கோதை! அவர்கட்கு முதல் வணக்கம் வைக்கிறாள்!
தங்களுக்குப் பறை தருவதா கண்ணன் நேற்றே சொல்லிட்டானே! இனி இவிங்கள எதுக்கு நாம மதிக்கணும்?-ன்னு அகந்தை காட்டலை! 200 Rs. டிக்கெட் வாங்கி ஸ்பெஷல் என்ட்ரென்ஸ் வழியா நுழையலை!
பொறுமை காட்டி, பணிவு காட்டி வணங்குகிறார்கள்! பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து!

சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலுக்குள் போகும் போது, திருவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை எல்லாம் வணங்கிக் கொண்டே செல்வாராம்! அப்புறம் தான் சிவ வணக்கமே!
ஆனால் ஒரே ஒரு நாள், ஏதோ சிந்தனையில் சென்று விட, அப்போது தான் சிவபெருமான் காட்டி அருளினான் - திருத்தொண்டர் தொகை என்னும் அடியார்கள் நூல் பிறந்தது! அடியார்க்கும் அடியேன், அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடினார்!

அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ-ன்னு சாற்றுமுறையில் கூட அடியார்கள் தான் மொதல்ல வருது! அதையே கோதை காட்டுகிறாள் இந்தத் திருப்பாவையில்!



நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! - உள் காவலர்கள்!

மணிக் கதவம் தாள் திறவாய் = கதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்-ன்னு

மாயன் = தமிழ்க் கடவுளான மாயோன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்!
(நெருநல் என்பது நேற்றைய காலம்! என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நெருனல் = நென்னல்! ஆண்டாள் தான் வட்டார வழக்கு வித்தகியாச்சே!)

தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்திருக்கோம்!
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ, பள்ளி எழுச்சி பாடுறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிலா! இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை முதலிலேயே ஏதாச்சும் சொல்லி மறுத்துடாதீங்க!

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = தாழ் நீக்கி, திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!

அடியார்கள்
* அவர்கள் கருத்து எந்த வடிவில் இருந்தாலும், அது இறைக் கருத்து அல்லவா!
* அவர்கள் வழி என்னவாக இருந்தாலும், அது இறை வழி அல்லவா!
* சக அடியார்களிடம் துவேஷம் காட்டாது, அன்பும் மதிப்பும் காட்டுவோம்!

"நேயமாய்", நம் மனசின் நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்! ஏல்-ஒர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
Read more »

Monday, December 29, 2008

மார்கழி-15: Duet Song முதலில் போட்டது யாரு?

காதலன்-காதலி மாறி-மாறிப் பாடும் Duet Song, தமிழில் முதன் முதலாப் போட்டது யாரு? - இது என்னய்யா கேள்வி? நான் எம்.எஸ்.வி-ன்னு சொல்லுவேன்! அப்பறம் இளையராஜா விசிறிகள் வந்து விசுறுவாங்க! ரஹ்மான் விசிறிகள், "டூயட்" படம் போட்டதே எங்காளு தான்-பாங்க!

இவிங்க யாருமே இல்லை, ஜி.ராமநாதன் என்கிற ஜிரா தான் இப்படிப் போட்ட இசை மேதை-ன்னு சொல்லுவாரு ஒரு இசை நிபுணர்! அட, யாருப்பா Duet Song-ஐ மொத மொதல்ல தமிழுக்கு அறிமுகம் செஞ்சது? :)

வேற யாரு! என் தோழி ஆண்டாள் தான்! :)

அட, இவனுக்கு இதே பொழைப்பாப் போச்சி! எதுக்கெடுத்தாலும் ஆண்டாள், ஆண்டாள்-ன்னு சொன்னா எப்படி? ஆண்டாள் எப்படி டூயட் போடுவா? யாரு கம்போசர்? யாரு மியூசிக் டைரக்டர்? :)

ஹிஹி! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
@ வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

* ஒல்லை நீ போதாய்! @உனக்கென்ன வேறுடையை?
@ எல்லாரும் போந்தாரோ? * போந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்!



அட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன்! கோதை தான் மொத டூயட் போட்டா! அப்பறம் தான் அது செம ஹிட் ஆச்சு! இன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு! :)

இந்தப் புன்னகை என்ன விலை? = எல்லே இளங் கிளியே!
என் இதயம் சொன்ன விலை! = இன்னும் உறங் குதியோ?

அதே மெட்டில், பி. சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க! ஹா ஹா ஹா! எப்படி இருக்கு? கோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான்! காதல் டூயட் அல்ல! Conversational Tunes, Dialogue Tunes-ன்னு சொல்லுவாய்ங்க!
முதலடி ஒருத்தர் கொடுக்கணும்! அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்!

* இந்தப் புன்னகை என்ன விலை? @ என் இதயம் சொன்ன விலை!
* இவள் கன்னங்கள் என்ன விலை? @ இந்த கைகள் தந்த விலை!

* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!


எப்படி இருக்கு டூயட்டின் முதல் வரி? இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு!
Donna: I work all night, I work all day!
Group: Ain't it sad? That's too bad! (Mamma Mia Musical)

You are sixteen going on seventeen!
I am sixteen going on seventeen - என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகை!

இது போல பாடல்கள் இப்போ பெரிய விஷயமில்லை தான்! ஆனா அந்தக் காலத்தில்? யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால?
பொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும்! ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க!
* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே
@ தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே!

ஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல! அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்! அதுவும் பக்தி இலக்கியத்துக்கு!
* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!



சங்கப் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில், சில குரவையர் கூத்துக்களில், இப்படிச் சில Tunes வரும்! திருவெம்பாவையில் கூட வருகிறது!
ஆனால் அவற்றிலெல்லாம் ஒரு வரிக்கு அடுத்த வரி-ன்னு இருக்காது! Line after Line என்று டூயட் போல இருக்கணும்! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது-ன்னு பாடலை ஒப்பிட்டுப் பாருங்க! அவள் ஹம் பண்ண, அவன் பாட, அது Dialog Tune!

இந்தத் திருப்பாவைப் பாட்டில் இன்னோரு சிறப்பும் இருக்கு! இந்தப் பாட்டை அம்மானைப் பாடல்களுக்கு முன்னோடி-ன்னு சொல்லலாம்-ன்னு நினைக்கிறேன்! ஏன் இது வரை யாருமே அப்படிச் சொல்லலை-ன்னு தெரியலை! அம்மானை பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை! பெண்கள் ஆடும் விளையாட்டு!

ஒருத்தி ஒன்னு சொல்ல, அதை இன்னொருத்தி மறுத்துச் சொல்ல, கடைசியில் பொதுவான தோழி சமரசமா ஒரு வரி சொல்லி முடிச்சிருவா! ஒரு வகையான கவிதை விளையாட்டு!
இங்கேயும் அப்படித் தான் இருக்கு! ஒருத்தி எழுந்திருடீ-ன்னு ஒத்தை வரி சொல்ல, இன்னொருத்தி சரி தான் போடீ-ன்னு ஒத்தை வரியில் மறுக்க, கடைசியில் மாயனைப் பாடு-ன்னு எல்லாரும் சமரசமா ஆயிடறாங்க! :)

* பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி-ன்னு பெரியாழ்வார் பாட்டைச் சொல்லுவாங்க!
* அம்மானைக்கு முன்னோடி-ன்னு ஆண்டாள் பாட்டை யாருமே சிந்தித்துப் பார்க்கலையோ?
நாம இன்னிக்கித் திருப்பாவைக்குப் போயி, இந்த Dialog Tune-ஐ மாறி மாறிப் பாடிப் பார்ப்போமா?


சரி, உங்க வீட்டுல, யாரு உங்களை எழுப்புவாங்க? அவங்க எழுப்ப எழுப்ப, நீங்க என்ன உளறுவீங்க? அதைக் கற்பனையில் ஓட்டிக்கிட்டே படிங்க! ஓக்கேவா? :)

* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ? = எலே, இளம் கிளியே, இன்னுமா தூங்குற?

எல்லே என்பது தான் எலே ஆகி, என்ன-லே, சொல்லு-லே, சொகமா இருக்கியா-லே-ன்னு தென் பாண்டித் தமிழாய், நெல்லைத் தமிழாய் ஆனது! இப்படி வட்டார வழக்கை எல்லாம் பக்தி இலக்கியத்தில் அன்னிக்கே கலந்தடிச்சவ நம்ம கோதை! :)
ஹா ஹா ஹா! அவ தோழன் நான், ஆன்மீகப் பதிவில் இது மாதிரி வட்டார வழக்கைக் கலந்தடிக்கக் கூடாதா? ஆன்மீகப் பதிவுப் பெரியவர்கள் என் நிலைப்பாட்டைக் கொஞ்சமே யோசிச்சிப் பார்க்க வேணுமாய்க் கேட்டுக்கறேன்! :)

@ சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்! = அடச்சீ! சில்-லுன்னு கூப்பிடாதீங்க! ஏற்கனவே மார்கழிச் சில்! இதுல நீங்க வேறயா? இருங்க பைய வருகிறேன்!

* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்! = யம்மாடி! நீ பெரிய ஆளு தான்! (வல்லை)! வல்லிய மோனே-ன்னு மலையாளத்திலும் வல்லை உண்டு!
உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்! யார் யார் கேட்டாக்கா, என்னென்ன excuse கொடுக்கலாம்-ன்னு முன்னமே யோசிச்சி வச்சிருக்க போல!

@ வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக? = ஆகா! நானா வல்லை? நீங்க தான் வல்லை! உங்க ஆட்டத்துக்கு நான் வல்லை! சமயத்துக்கு ஏத்த மாதிரி நீங்க தான் பேசுவீங்க! (சமயானிகி தகு மாட்லாடென-ன்னு தியாகராஜர் கீர்த்தனை)


* ஒல்லை நீ போதாய்? = சீக்கிரம் நீ வர மாட்டே?
@ உனக்கென்ன வேறுடையை? = உங்களுக்கென்ன? வேறு வேலை இல்ல?

@ எல்லாரும் போந்தாரோ? = சரி, எல்லாரும் வந்துட்டாங்களா?
* போந்தார் போந்து எண்ணிக் கொள்! = ஆங்! இது வேறயா? எல்லாரும் வந்தாச்சி! வந்து நீயே எண்ணிக்கோ!

வல்-ஆனை கொன்றானை = கம்சன் ஏவி விட்ட குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்றவன்!
மாற்றாரை மாற்று அழிக்க = மாற்றாரை (எதிரிகளை) அழிப்பது தான் அவன் வேலையா? இணங்காதாரையும், இறையை வணங்காதாரையும் அழிப்பானா? அவன் மாற்றாரை அழிக்க மாட்டான்! மாற்றாறின் "மாற்றை"த் தான் அழிப்பான்!

பொன்னை "மாற்று"ரைத்தல்-ன்னு சொல்வாய்ங்க! தங்கத்தின் மாற்றைச் (தூய்மையை) சோதித்துப் பார்ப்பது! அதே போல மாற்றாரின் தவறான செயல்களை, தவறான கொள்கைகளை, "மாற்று"ரைத்து விடுவான்! அதனால் அவர்கள் கருத்துக்களின் வீக்னெஸ் அவர்களுக்குத் தானே தெரிந்து போய் விடும்! இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அதை உணரத் தான் வேணும்!

* மாற்றாரை அழிப்பது இறைவன் நோக்கமல்ல!
* மாற்றாறின் "மாற்றை" அழிப்பதே இறைவனின் விளையாடல்!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்போன்! சிறு பேர் அழைத்தனவும் சீறி, "அருளா"தே!

வல்லானை மாயனைப் பாடு = இப்படி மாற்றழிப்பதில் வல்லவன் எங்கள் தலைவன்! அவன் மாயன்=மாயோன்=தமிழ்க் கடவுள்! அவனைப் பாடு, பாடு, பாடு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, December 28, 2008

மார்கழி-14: உங்க வீட்டில் புழக்கடை(Patio) இருக்கா?

* புழக்கடை-ன்னா என்ன? இந்தக் காலத்து வீடுகளில் புழக்கடை இருக்கா? இருந்தா அதன் பேரு என்ன? பார்க்கலாமா?
* அல்லி-ன்னா என்ன? தாமரை-ன்னா என்ன? இரண்டும் வேறு வேறா? அப்போ ஆம்பல்-ங்கிறது என்ன பூ? வெள்ளை, சிகப்புத் தாமரை போலவே நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள்-ன்னு எல்லாம் தாமரையைப் பார்த்து இருக்கீங்களா? இின்னிக்கிப் பார்க்காலாமா? :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள் = உங்க புழக்கடைத் தோட்டக் குளத்திலே!

புழக்கடை-ன்னா என்னாங்க? இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்! புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை! கடை-ன்னா கடைசி; புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை! என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் எல்லாம் கூட இருக்கும்! பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்! துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்! கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்! :)
வாவி = சிறு குளம், நீர் நிலை! கிணற்றைக் கூட வாவி-ன்னு சொல்லுவாய்ங்க! தெலுங்கிலும் இந்த வாவி தான் பாவி ஆனது! திருமலைக் கோயிலுக்குள் இருக்கும் பொற் கிணற்றுக்கும் பங்காரு பாவி-ன்னு பேரு!

இன்றும் கேரளத்தில் பல வீடுகளுக்குப் பின்னால் சிறு குளம் இருப்பதைக் காணலாம்! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் = செந்தாமரை மலர்கள் பூக்கின்றன! ஆம்பல மலர்கள் குவிந்து மூடுகின்றன!

ஆம்பல்

செங்கழுநீர்


செங்கழுனீர் = செந்தாமரை மலர்கள்! ஆம்பல் = அல்லி மலர்கள்!
இது காலையில் கதிரவனுக்கு மலரும்! அது மாலையில் சந்திரனுக்கு மலரும்! அதைக் காட்டி எழுப்புகிறாள் கோதை!
பகல் காலம் தாமரைகளின் காலம்! அதனால் தாமரை தான் வாய் தொறக்கணும்! ஆம்பல் வாய் மூடணும்!
அதே போல நாங்க பரமனடி பாடி வாய் நெகிழ்வோம்! நீ உன் தூக்க புராணம் பாடாம வாயை மூடு!:)

அல்லி-ன்னா எப்பமே வெண்மை அல்ல! செவ்வல்லி, நீல அல்லி கூட இருக்கு! அதே போலத் தான் தாமரையும்! வெண்டாமரையும் இருக்கு!
இது இல்லாம கருங்குவளை, நீலோற்பலம்...இப்படி நீர்ப் பூக்கள் நிறைய நிறைய!

சொல்லப் போனா செங்கழுநீர் மலர்களுக்கும், தாமரைக்குமே சிறு சிறு வித்தியாசம் இருக்கு!
தாமரை-ன்னா நல்லா விரிந்த இதழ்கள்! வளைவா இருக்கும்! கழுநீர்ப் பூக்கள் நீட்டு நீட்டா, நீட்டிக்கிட்டு இருக்கும்! படத்தைப் பாருங்க, உங்களுக்கே தெரியும்!

தாமரை

ஆனால் எல்லாமே நல்ல சுகந்த மணம் கொண்டவை! எல்லாத்துக்குமே பொதுவா இலை-ல தண்ணி ஒட்டாது! தாமரையிலை நீர் போல-ன்னு சொல்வது அல்லிக்கும் பொருந்தும் தான்!

தண்ணி கொறைஞ்சா தாமரைக் காம்பும் தானா சுருங்கி, நீர் லெவலுக்கு தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கும்! நீர் அளவே ஆகுமாம் நீர்-ஆம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நும் தரவு-ன்னு சும்மாவா சொன்னாங்க?:)

தாமரைக் காம்புகளை வச்சி விதம் விதமான நீர் விளையாட்டு எல்லாம் விளையாடலாம்! கிணத்துக்குள்ள வரிசையா முடிச்சி போட்டு, கிணற்றில் இருந்து ஸ்ட்ரா போல நேரடியா உறிஞ்சிக் குடிப்போம்! உம்ம்ம்ம் அதெல்லாம் அப்போ!...இப்போல்லாம் குச்சி வச்சி பனி தள்ளவே வாடிக்கை சரியா இருக்கு! :)


செங்கல் பொடிக் கூறை, வெண் பல்-தவத்தவர் = ஆகா, செங்கல் பொடியால் வெண் பல் துலக்கறாங்களா? அப்படியாச் சொல்லுறா ஆண்டாள்! ஹிஹி!
செங்கற்பொடி போல சிவப்பா, காவி நிறத்துல கூறை ஆடை! கூறைப் புடைவை-ன்னு சொல்றோமே அது போல! அந்தக் காவியைத் தரித்த பல-தவத்தவர்கள்! பல்-முனிவர்கள்! அவர்கள் தவம் வெண்மையான (தூய்மையான) தவம்! வெண் மனசு போல வெண் தவம்!

(* சிலர் காவி உடை, வெள்ளைப் பல்லு என்றும் விளக்கம் சொல்லுவார்கள்; ஆனால் சம்பந்தமே இல்லாம திடீர்-ன்னு அவிங்க பல்லை எல்லாம் எதுக்குப் பாடப்போறா ஆண்டாள்? அதான் அடியேன் விளக்கம் சற்றே மாறி இருக்கு! :)

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = சங்கு ஊதி வழிபடனும்-ன்னு கோயிலுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அந்த முனிவர்கள்! "தங்கள்" திருக்கோயில்! என்ன ஒரு உரிமை உணர்வு பாருங்க! இது போல இன்றும் சமயத் தலைவர்கள் எல்லாம் தங்கள் கோயில் என்று உரிமையுடன் கவனம் செலுத்தினால், ஆலயங்கள் எல்லாம் ஆ+லயங்கள் ஆகிடாதோ?

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் = ஏதோ பெருசா, எங்களை எல்லாம் வந்து எழுப்பறேன்-ன்னு முன்னே சொன்னியே! வாய் மட்டும் நல்லா இலக்கணமாப் பேசு! ஆனா துயில் எழுப்பும் போது மட்டும் கோட்டை விட்டுரு! :)

நங்காய்! எழுந்திராய், நாணாதாய், நாவுடையாய் = ந.நா.நா!
நங்கையே! நாணம் இல்லாதவளே! நாக்கை மட்டும் நீட்டி நீட்டி, தேனொழுகப் பேசுறவளே! எழுந்திரு!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் = சங்கு-சக்கரம் ஏந்தும் வலிமையான கைகளை உடைய நம் பெருமாள்!
சக்கரம் முதன்மையான ஆயுதம் என்றாலும், சொல்லும் போது "சங்கு-சக்கரம்" என்று தான் சொல்கிறார்கள்! ஆண்டாளும் அப்படியே சொல்கிறாள்! இளங்கோவடிகள் மட்டும் பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் என்று "சக்கர-சங்கை"க் காட்டுகிறார்!

சக்கரத்தின் பெயர் சு+தர்சனம்! சங்கின் பெயர் பாஞ்ச சன்னியம்! நமக்கு மட்டுமில்லை, எம்பெருமானுக்கே காப்பாக இருப்பவை இவை! இவைகளை விழிப்பாக இருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்! உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே,சங்கே!-என்று சங்கு சக்கரத்தைத் தூங்கக் கூட விட மாட்டேங்கிறார் நம்ம பெரியாழ்வார்!
சங்கு சக்கரப் பெருமை ஒரு பதிவில் சொல்லி மாளாது! வேதாந்த தேசிகரின் சுதர்சனாஷ்டகத்தைத் தான் படிக்கணும்! ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன! ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன!

பங்கயக் கண்ணானைப் பாடு = அந்தத் தாமரைக் கண்ணானைப் பாடு!
தன் காதலன் கண்ணன் தான் என்பதை அவ்வளவு சீக்கிரம் போட்டு உடைக்க மாட்டேங்கிறா கோதை! இங்க கூட பாருங்க! "கண்ணானை"ப் பாடு-ன்னு சொல்றா! "கண்ணனை"ப் பாடு என்று சொல்லலை! இதற்கு முன்பும் ஆழி "மழை-கண்ணா"-ன்னு மழையோடு சேர்த்துட்டா!

ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா? :)
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
Read more »

Saturday, December 27, 2008

மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

ஆண்டாளும், அப்துல் கலாமுமா? என்ன பேச்சு இது? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?
அட, வெரி சிம்பிள்! வெள்ளிக் கிழமை வந்துருச்சி! வியாழக் கிழமை போயிருச்சி! இந்தப் பாட்டை வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஆண்டாள் எழுதி இருக்காளா என்ன? ஹிஹி! வாங்க இன்றைய பாசுர விளக்கத்தில் பார்க்கலாம்! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!


புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!



வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று - இதைப் பார்த்து விட்டு அப்புறம் மற்ற விளக்கத்துக்குப் போவோம்!

வெள்ளி=Friday! வியாழன்=Thursday-ன்னு பொதுவா எடுத்துக்கலாம்!
வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு ஆண்டாள் சொல்ல வராளா? ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் வேறெங்கும் பாடினா மாதிரி தெரியலையே!
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு! மேலும் இன்னும் சூர்யோதயம் வேற ஆகவில்லை! அதனால் (தமிழ்க் காலக் கணக்குப்படி) இன்னும் வெள்ளிக்கிழமை வரலை! அப்போ இது என்ன?

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!


பொதுவா சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்! இன்னிக்கிக் கூட புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிர்க்கே போகாதே-ன்னு பெரியவங்க சொல்லுவாய்ங்க!

* அதிகாலைச் சூரியன் உதயம் ஆவதற்கு முன்னால் வானில் வெளிச்சம் அதிகம் இருக்காது! அதனால் பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!

வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய, எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது! வானில் சந்திரனும் இன்னும் மறையவில்லை! மேற்றிசையில் இருக்கு! சூரியன் இன்னும் ஒரு மணியில் இதோ உதிக்கத் துவங்கப் போகிறது!
பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்! ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! நாம் அந்த ஆய்வுக்குள் போகாமல், இந்த நுட்பத்தை மட்டும் இப்போதைக்கு ரசிப்போம்!

ஆண்டாள் காலத்தில் மட்டும் தான் இப்படி நடந்ததா? அதுக்கு அப்பறம் இப்படி நடக்கவே இல்லையா? நம் காலத்தில் இவ்வாறு எல்லாம் நடந்துள்ளதா? இல்லீன்னா உனக்கு வைணவம் ரொம்பப் பிடிக்குமே-ன்னு கோதையை ரொம்பத் தான் ஓவராப் புகழறீயா? :)

Pic Shot on Dec-01-2008, during Venus-Jupiter Conjunction


ஹிஹி! அரண்டவன் கண்ணுக்கு அடியேன் தொட்டதெல்லாம் வைணவம்! :) ஒரு இனிய அதிர்ச்சி பார்த்தீங்களா? இது போன்ற அதிசய நிகழ்வு, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கல், இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் நடந்திருக்கு! Nov 28 - Dec 01, 2008! இதோ செய்தி!

* நீங்க யாராச்சும் அன்னிக்கி இதைக் கண்டீர்களா?
* உடனே பாவையோடு தொடர்பு படுத்திப் பார்த்தீங்களா?
* டைரியில் குறிச்சி வச்சீங்களா?
* பதிவு ஏதாச்சும் போட்டு, பதிஞ்சு வச்சீங்களா? :)
ஹிஹி! அறிவியல் காலத்தில் வாழும் போதே நாமெல்லாம் இப்படின்னா, கிராமத்துப் பொண்ணு கோதை இது பற்றி அன்றே பதிஞ்சி வைப்பதைப் பாருங்கள்!
இப்போ தெரியுதா அவளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்? இனி இந்த நிகழ்வு வரப் போவது அடுத்த May-11-2011 இல் தான்! :)

மன்னர்களின் அந்தப்புர லீலைகளைச் அக்காலப் புலவர்கள் சிலர் உலாவாகப் பதிந்து வைத்தார்கள்! மானிடனைப் பாடாது, இறைவன் அருளை மட்டுமே பாட்டாக வடித்து வைத்தார்கள் இன்னும் சில அருட்கவிஞர்கள்! ஆனால் ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்!
இப்போ தெரிகிறது அல்லவா, அவள் பாவை மட்டும் தனித்து நிற்கக் காரணம் என்ன-ன்னு?

* அப்துல் கலாம் ஐயா விஞ்ஞானியாக இருந்து கொண்டு, கவிதையும்-இறையும் நேசித்தார்!
* கோதை கவிதாயினியாக இருந்து கொண்டு, விஞ்ஞானம் நேசித்தாள்!
Space Data Aggregator, Andal திருவடிகளே சரணம்! :)


புள்ளின் வாய் கீண்டானை = கொக்காக வந்த பகாசுரன் அலகைப் பிளந்தானை (கண்ணனை)
(பீமன் கொன்ற பகாசுரன் வேறு! இந்தக் கொக்குப் பகாசுரன் வேறு! அப்பவே பெயர்க் குழப்பங்கள் போல!) இந்தப் பகாசுரனின் அலகைப் பிளப்பதை, திருமலையில் எம்பெருமானுக்கு அலங்காரமாகச் செய்து, மீள் பதிந்து காட்டுகிறார்கள் (Re-enactment)!

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை = இந்தப் பொல்லா அரக்கன் இராவணன் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் சென்ற பாட்டில் இராவணனைக் கோமான் (Gentleman) என்று பாடி விட்டாள்! மேலும் இராவணன் தலையை இராமன் கிள்ளிக் களையவில்லை! அப்போ இது யாரா இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!

கீர்த்திமை பாடிப் போய் = இப்படி மூர்த்தியின் கீர்த்தியை பாடிக் கொண்டு
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் = புள்ளைங்க (பொண்ணுங்க) எல்லாம் பாவை நோன்பு நடக்கும் படித்துறைக்குப் போகுதுங்க!
பாவைக் களம் என்றால் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து நோன்புக்கு உண்டான சில சடங்குகளைச் செய்யும் படித்துறை! அப்பவே பொண்ணுங்களைப் புள்ளைக-ன்னு கூப்பிடும் பழக்கம் இருந்திருக்கு போல! :)

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = வெள்ளிக் கிரகம் தோன்ற, அதன் முன் வியாழன் கிரகம் மறையுதே! இது என்ன அதிசயம்!


புள்ளும் சிலம்பின காண் = பறவைகள் பலவும் சிலம்ப ஆரம்பித்து விட்டன! இந்த அதிசய வானியல் நிகழ்வைப் பார்த்தா? இல்லை இது அதிகாலைப் பறவைச் சத்தமா? இப்போதும் கிரகணங்களின் போது பறவைகள் பலமாகக் கத்துவதைப் பார்க்கலாம்!

போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!
பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது! இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வா! (ஆண்டாள் காட்டும் உவமையின் சக்தியைப் பாருங்க....முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்)

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? = ஆற்றிலும் குளத்திலும் முங்கி முங்கிக் குளிக்கும் சுகம் போல வருமா? அதுவும் சில்லுன்னு தண்ணி உடம்பில் படும் போது, முதலில் குளிரெடுத்தாலும், பிற்பாடு எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கும்!

காக்காய் குளியல், யானைக் குளியல் போலவா குளிப்பது? நல்லா முங்கி முங்கி நீராட வேணாமா? திருநாமங்களைச் சொல்லிக்கிட்டே குடைந்து குடைந்து நீராடாமல், நீ ஏதோ அரைத் தூக்கம் தூங்கிக் கிட்டு இருக்கியே? போதும்!
குகுகு = குள்ள-குளிர-குடைந்து! :) இதை யாராச்சும் பின்னூட்டத்தில் விரித்துப் பேசுங்க!

பாவாய், நீ நன்னாளால் = பெண்ணே, நல்ல நாளு அதுவுமா இன்னிக்கி கூடவா தூக்கம்?
கள்ளம் தவிர்ந்து கலந்து = உன் கள்ளமான அரைத் தூக்கம் போதும்! வா, எங்களுடன் கலந்து விடு! எம்பெருமானிடத்தில் "கலந்து" விடு!

திருக் "கலந்து" சேரும் மார்ப தேவ தேவ தேவனே,
இருக் "கலந்த" வேத நீதி ஆகி நின்ற நின்மலா,
கருக் "கலந்த" காள மேக மேனி யாய நின்பெயர்,
உருக் "கலந்து" ஒழிவி லாது உரைக் குமாறு உரைசெயே
!

இப்படிக் கலந்து கலந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
Read more »

Friday, December 26, 2008

மார்கழி-12: Sweet Heart = மனத்துக்கினியான்!

ஆண்டாள் கண்டுபுடிச்சது தான் "Sweet Heart" என்னும் சொல்! இன்னிக்கி அந்த மந்திரச் சொல் இல்லாம ஒரு காதலும் இல்லை! :) நற்செல்வன் தங்கையே-ன்னு வேற பாட்டில் வருது! யார் இந்த நற்செல்வன்? அவன் தங்கச்சி யாரு? அவளுக்கும் கோதைக்கும் என்ன தொடர்பு? பார்க்கலாமா?


இன்னிக்காச்சும் ஒன்-லைனர் விளக்கம் சொல்லிட்டு வேகமா எஸ்கேப் ஆக முடியுதா-ன்னு பார்க்கிறேன்! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,


சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!



கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி = மாஆஆஆஆ என்று கனைக்கிறது! இந்த எருமையே ஒரு இளமை எருமை! அதற்கு ஒரு கன்று! அந்தக் கன்றின் மேல் அம்புட்டு பாசம்! தலைச்சன் கன்றாக இருக்குமோ?

நினைத்து, முலை வழியே நின்று பால் சோர = அந்தக் கன்றை நினைத்த மாத்திரத்தில், பால் தானாகச் சொரிகிறது!
நனைத்து, இல்லம் சேறாக்கும்! = பால் கறக்க ஆளில்லாத வேளை! இப்படித் தானாகவே பால் கசிந்தும் சொரிந்தும் கொண்டு இருந்தால்? அந்த வீடே சேறாகி விட்டது! பால் சேறு! பாற்கடல் தெரியும்! இது பாற்சேறு! அம்புட்டு வளமை அந்த வீட்டில்!
நற் செல்வன் தங்காய் = நல்ல செல்வனின் தங்கையே!
யாரும் அண்ணனைப் தன் முன்னே பப்ளிக்கா புகழவும் கூடாது! அதே போல "தன்னைத் தவிர" வேறு யாரும் அண்ணனைத் திட்டவும் கூடாது! - இதில் சில தங்கச்சிங்க, தங்கச் சங்கிலிகளா நிப்பாங்க! :)
அதான் அண்ணனை "நல்ல அண்ணா"-ன்னு கூப்பிடறா! அதைக் கேட்டாச்சும், இவ சுருக்குன்னு எழுந்துக்கறாளா-ன்னு பாக்குறா கோதை! :)

இந்த நற்செல்வன் யார்? கண்ணனுக்கு மிக மிக நெருக்கமானவன்! இராமனுக்கு இலக்குவன் போல! அவன் போயும் போயும் உனக்கு அண்ணனா வந்து வாய்ச்சானே! இவ்வளவு சாதகமான சூழல் இருக்கேடீ உனக்கு? எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருந்தா, அந்தக் கண்ணனை எப்பவோ மடக்கிப் போட்டு இருப்போம்! :)


நற்செல்வன் = நப்பின்னையின் அண்ணன்! அவள் நற்+பின்னை! இவன் நற்+செல்வன்!
குழந்தைகளுக்குச் சூட்ட அழகான தமிழ்ப் பெயர்கள் அல்லவா - நப்பின்னை, நற்செல்வன்!
இவனை ஸ்ரீதாமன் என்றும் வடமொழியில் சொல்லுவார்கள்! ராதையின் அண்ணன்! ஸ்ரீதாமன் = நற்செல்வன்! அதே பொருள் தான் வருகிறது ரெண்டு பேருக்குமே!

இந்த நற்செல்வன் கண்ணனின் மனத்துக்கு அவ்வளவு பிடித்தமானவன்! மிகவும் மென்மையான பையன்!
கண்ணன்-நற்செல்வன் உறவு வெறும் ஆருயிர்த் தோழமை மட்டுமே அல்ல! அதையும் தாண்டி ஒரு ஜென்ம-ஜென்ம பந்தம் இருவருக்குள்ளும்!

வெண்ணெய் களவாடும் போது எப்பமே உடன் இருப்பவன் ஸ்ரீதாமன் (எ) நற்செல்வன்! கண்ணன் மாட்டிக் கொள்ளும் போது, அவனைத் தப்புவிக்க, தான் அடி வாங்கிக் கொள்வானாம்! வெண்ணெய்க் கட்டியின் மேல் சில சமயம் காரம் தடவி வைப்பார்களாம் சில அம்மணிகள்! அன்றிலிருந்து தான் தின்று பார்த்துவிட்டு, அப்புறம் தான் அந்த எச்சில் கட்டியைக் கண்ணனுக்குத் தருவானாம் நற்செல்வன்! இப்படி ஒரு பந்தம்!:)

இந்த நற்செல்வன்-நப்பின்னையை ஏனோ வடமொழி இலக்கியங்கள் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை! :(
ஆனால் நற்செல்வன் (எ) ஸ்ரீதாமனை இஸ்கான் நிறுவனத்தினர் மிகவும் போற்றுகிறார்கள்! சைதன்ய மகாபிரபு ஸ்ரீதாமனைக் கொண்டாடி அவனுக்கு பாண்டீரவடம் என்னும் இடத்தில் ஆலயமும் எழுப்பினார்!

ஊரெல்லாம் கண்ணனைத் தூக்க, கண்ணனோ ஸ்ரீதாமனைத் தன் தோள் மேல் தூக்கி அன்பு பாராட்டுவானாம்! இவர்கள் நட்புறவு மிக மிக அலாதியானது! ஆனால் அவனையும் கண்ணன் பிரிந்தான்! அந்தப் பிரிவு பெரும் பிரிவு! சோகமான பிரிவு! :(

துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! எல்லாக் கோபிகைகள் கிட்டேயும் விடைபெற்றாகி விட்டது! ஆனா இந்த நற்செல்வனை மட்டும் அன்னிக்குன்னு பார்த்து எங்கு தேடியும் காணோம்!
கண்ணன் மனசு அடிச்சுக்குது! தன் "உயிர்" கிட்ட சொல்லாம கொள்ளாம எப்படிப் போவது? இந்த அண்ணன் பலராமன் வேறு அவசரப்படுத்துகிறான்! ஆற்றங்கரைக்கு வந்தாகி விட்டது!

ஆகாஆஆஆ! ஆங்கே நற்செல்வன்! மரத்தின் அடியில் கலங்கிய கண்களுடன்!
கண்ணன் ஓடியே போய் செல்வனைக் கட்டிக் கொள்கிறான்!
பிரிய வேண்டுமே என்ற பிரிவு ஆற்றாமை இரு தோழர்களின் நெஞ்சிலும்! கண்ணன் வழமை போல பொய் சொல்கிறான்!

"நாளைக்கே திரும்பி வந்துடுவேன் நற்செல்வா!"

"பொய்! கம்சன் பொல்லாதவன்! அவனை ஒரே நாளில் எல்லாம் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது! என்னைக் கூட அழைத்துப் போ என்றாலும், அதுக்கு வந்திருக்கும் மதுரைப் பெரியவர் முட்டுக்கட்டை போடுகிறார். நான் என்ன செய்ய கண்ணா?"

"டேய், நாளை இல்லீன்னா நாளன்னைக்கு! இல்லீன்னா இன்னும் ஒரு நாள்! எப்படியும் வந்துருவேன்-டா!"

"சரி, உனக்காக இந்தக் கரையில் தினமும் வந்து வந்து காத்துக்கிட்டே இருப்பேன்! சரியா?"
போனவன் போனவன் தான்! காத்துக்கிட்டு இருந்தவன், காத்துக்கிட்டு இருந்தவன் தான்!
பெற்றோர், உற்றோர், ஏன் கோபியரே விட்டுவிடு என்று சொன்ன போதும், விடாமல் கண்ணனுக்குக் காத்துக் கொண்டே இருந்தான்! பலப்பல ஆண்டுகள் ஓடி விட்டன! இறுதியில் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டான்!

கோபிகைகளைக் காட்டிலும் அதிக ப்ரேமை கொண்டவன் நற்செல்வன்! கோபிகைகளாவாது கண்ணனிடத்தில் மயங்கி அவன் தீண்டலை வேண்டி நின்றார்கள்! ஆனால் இவனுக்கோ அந்த முகாந்திரமும் இல்லை! கைங்கர்ய ப்ரேமை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அதனால் தான் சென்ற பாட்டில் "கறந்து" என்று கோபிகைகளைக் காட்டிய கோதை, இந்தப் பாட்டில் பால் "தானாகவே சொரிகிறது" என்று சொல்லி நற்செல்வனைக் காட்டுகிறாள்!

* கோவலர் பொற்கொடியான கோபிகைக் "காதல்" = கற்றுக் கறவை கணங்கள் பல "கறந்து"
* நற்செல்வன் "அன்பு" = நினைத்து, முலை வழியே, நின்று பால் "சோர"

அன்"பால்" சொரியும் நற்செல்வன்-ஸ்ரீதாமன் திருவடிகளே சரணம்!



பனித் தலை வீழ, நின் வாசற் கடை பற்றி = காலை இளம் பனி எங்க தலை மேல வந்து விழுகிறது! இருந்தாலும் உன் வாசற்கடையில் வந்து நிக்குறோம்! இதுக்காக வாச்சும் எழுந்திருடீ!

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற = இராவணப் பெருந்தகை! அரக்கன் என்றோ அசுரன் என்றோ அவனை ஆண்டாள் வையவில்லை! இராவணனைக் கோமான் என்கிறாள்! கோமான் = Gentleman! ஹா ஹா ஹா! ஏன்?
ஆண்டாள் ரொம்ப ஓப்பன் டைப்பு-ங்க! உள்ளது உள்ளபடித் தான் பேசுவாள்! ஹிஹி, நீங்க நீட்டும் புனிதம்-ஆன்மீகச் சட்டம் எல்லாம் அவகிட்ட எடுபடாது! :)

* இராவணன் ஒரு பெண்ணிடம் வலிய முடியாது! அவன் வாங்கிய சாபம் அப்படி! ஆனால் காமம் தலைக்கேறினாலும், அவன் பிராட்டியிடம் "அபசாரப்" படவில்லை! போகப் பொருளாக மட்டுமே அவளைக் கருதவில்லை! போற்றவே எண்ணினான்!
* ஆனால் தேவேந்திரன் மகன் ஜெயந்தனோ, போகம் மட்டுமே கருதினான்! பிராட்டியிடம் "அபசாரப்" பட்டான்! அதனால் "தேவனாய்" பிறந்தாலும் "காகாசுரன்" ஆனான்!
அதான் இராவணன்=கோமான், ஜெயந்தன்=அசுரன்! இதையே கோதை காட்டுகிறாள்!

இராமன் இராவணனைச் "சினத்தினால்" செற்றானாம்! அதாச்சும் பெரும் கோபத்தால் அழித்தானே தவிர வஞ்சனையாலோ, மாய மந்திரத்தாலோ அழிக்கவில்லை! இன்று போய் நாளை வா என்றே நடந்து கொண்டான்! Gentleman-lism!
இராவணனை Gentleman என்றவள், இராமனை Gentle-Gentleman என்கிறாள்!
மனத்துக்கு இனியான் என்று போற்றுகிறாள்! Sweet Heart என்று சொல்லிக் காதலன் கண்ணனை இன்னும் வெறுப்பேத்துகிறாள்!:)

மனத்துக்கு இனியானை = இராமன் மனத்துக்கு இனியான்! ரம்மியம்=ராமன்!
ரம்யதி இதி ராமஹ: ரமந்தே அஸ்மின் இதி ராமஹ: மனிதனாய் இராமனும் தவறுகள் செய்தான்! ஆனால் மறைக்கவில்லை! ஒப்புக் கொண்டு கழுவாய் தேடினான்!
* ஊருக்கு உபதேசம் செய்யப் போகிறான் கிருஷ்ணாவதாரத்தில் = கீதை!
* முதலில் ராமாவதாரத்தில் தான் நடந்து காட்டிவிட்டு, பிற்பாடு ஊருக்கு உபதேசம்!
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார் நம்மாழ்வார்! உண்மை விளிம்பியான மாறனே அப்படிச் சொல்கிறார் என்றால் அது சும்மா இல்லை!

பாடவும், நீ வாய் திறவாய்! = அவனைப் பாடுகிறோம்! நீ வீட்டு வாயையும் திற! உன் வாயையும் திற! திறந்து எங்களுடன் சேர்ந்து பாடுவாய்!

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்? = இன்னுமா எழவில்லை? அப்படி என்ன உனக்குப் பெரும் தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து = அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் தெரியப் போவுது உன் தூக்க மகாத்மியம்! உன் வருங்கால மாமியார் கிட்ட உன்னைத் தூக்கராணி, கும்பகர்ணி-ன்னு போட்டுக் கொடுக்கப் போறாங்க! :)

பாடவும், நாம் வாய் திறப்போம்! பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, December 25, 2008

மார்கழி-11: புற்று அரவு "அல்குல்" என்றால் என்ன?

"எலே பெண்டாட்டி! சிற்றாதே பேசாதே!"-ன்னு மனைவிமார்களை எல்லாம் அதட்டுகிறாளோ கோதை? கணவன்மார்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறாளோ ஆண்டாள்? இவளா புதுமைப் பெண்? :) அப்படியே "அல்குல்" என்ற சூடான சொல்லையும் கையாளுகிறாளே ஆண்டாள்! பார்க்கலாமா இன்னிக்கி? :)

புதிர்-11:
"தோத்தாத்ரி"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருக்கீங்க தானே? அப்படின்னா என்ன பொருள்? அதுக்கு "வானமாமலை" என்பது நேர்த் தமிழ்ப் பெயர்! ஜீவாவின் பதிவில் க்ளூ இருக்கு! இங்கே செல்லவும்!


"ஏல்-ஓர்" எம்பாவாய் விளக்கம் ஞாபகம் இருக்கு தானே? இந்தப் பதிவுக்கும் அது ரொம்ப ரொம்ப பொருந்தும்! :) கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!


சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!



கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!
சில பேரு "கற்று" என்பதற்குப் பால் கறப்பதைக் கற்றுக் கொண்டு வரணும்-ன்னு பொருள் கொள்வார்கள்! ஹிஹி! பால் கறப்பதற்கு ட்யூஷன் எல்லாமா வைக்க முடியும்? பால் கறப்பது மிகவும் எளிது! ஒரு முறை கண்ணு பார்த்தா அடுத்த முறை கை செய்யும்! சொல்லுங்கப்பு, யாராச்சும் கறந்து இருக்கீயளா? காசை அல்ல! பாலை! :))

மாட்டைத் தடவிக் கொடுத்து, அன்பு காட்டி, கெஞ்சம் வைக்கோல் போட்டா போதும்! கறக்கும் போது கன்று அருகில் இருந்தாக்கா இன்னும் தானா சுரக்கும்! நீங்க காலால் பாத்திரத்தைக் பிடிச்சிக்கிட்டு, கையால் சும்மா இழுத்தாலே போதும்! பால் பெருகும்!
அதுக்காக கடேசி சொட்டு வரை இழுக்கக் கூடாது! அது சுயநலம்! பெரும் பாவம்! மாட்டின் மடியில் கொஞ்சமாச்சும் பால் தங்கணும்! கன்றுக்கு இரவு பசிக்கும் போது, இந்தப் பால் தேவைப்படும்!

கறவை கரவாது கொடுக்கும்! கறந்துக்கிட்டே இருப்போம்! என்பது அறமும் அன்று! ஆண்மையும் அன்று!

இந்த தர்மம் "புனிதப்" பசு மாட்டுக்கு மட்டுமல்ல! எல்லா மாட்டுக்கும் பொருந்தும்! இந்தப் "புனிதம்" என்பதெல்லாம் மனிதன் தன் சொந்த பிசினஸ்-க்காக உருவாக்கிக் கொண்டது தான்! மாடுகளுக்குத் தெரியப் போவதில்லை, தாங்கள் "புனிதப் பசு" என்று!
மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)

எல்லாக் கறவை மாடும் புனிதமானது தான்! பசு மட்டுமே புனிதம் அல்ல! கோ-சம்ரட்சணம் என்னும் ஆநிரை காத்தல் மிகவும் உயர்ந்தது! அது பசுக்களுக்கு மட்டும் அல்ல! எல்லா மாடுகளுக்கும் தான்! அதனால் தான் ஆண்டாள் எருமைச் சிறு வீடு-ன்னு எருமையையும் பாடுகிறாள், கூடவே பசுவையும் பாடுகிறாள்!


செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

கோ-சம்ரட்சணம் என்பது ஏதோ வடநெறி என்று எண்ணி விட வேண்டாம்! புனிதப் பசு, புனிதமில்லாக் கொசு-ன்னு கேலியும் பேச வேண்டாம்! (குறிப்பாகப் பகுத்தறிவாளர்கள்)
ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!

சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! தமிழ்ச் சொத்தில் அவர்களுக்கும் சம உரிமையுண்டு என்பதை ஏகபோகக் குறிஞ்சிக் காவலர்களும், சில முருகப்பாக்களும் முனைந்து பார்க்க வேணும்! :))

குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!


புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் = புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே! காட்டு மயிலே! வா போகலாம்!

(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்றே மெல்லியலாய் நினைப்பவர்கள், அடுத்த சில பத்திகளைத் தவிர்த்து விட்டு, பத்தி Resume-இல் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி!)

ஆண்டாள் இச்சொல்லைக் கையாள்வது என்னவோ நிஜம்! இதற்காக அவளை யாரும் தள்ளியும் வைக்க முடியாது! அவள் பதிவும் பாடலும் இடறவும் இடறாது! :)

இந்த "அல்குல்" என்னும் சொல், மிக மிகச் சூடான குறிச் சொல்! :)
அண்மைக் காலங்களில் பெரும் சச்சரவுக்குள்ளான சொல்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிஞ்சிக்கிட்டு, ஆனா மொத்தமா புரிஞ்சிக்காம, வீண் கும்மி அடித்த ஒரு மாபெரும் சொல்!
கவியரசர் கம்பரை இதை வைத்துக் கொண்டே பேரறிஞர் அண்ணா அவர்கள் கிழிகிழி-ன்னு கிழித்த சொல்! அப்படி என்னாங்க இருக்கு இந்த மந்திரச் சொல்லுல? ஹிஹி! மேலப் படிங்க!

அல்குல் = இடை (அ) பெண்குறி (அ) பக்கம்! மொத்தம் மூனு பொருள்!
இலக்கியத்தில் பெரும்பாலும் இடை என்ற பொருளில் தான் வருது! ஆனால் பெண்குறி என்ற ஒரு பொருளும் இருப்பதால், பல விவாதங்களில் இது பத்திக்கிட்டு எரியுது! :)
அப்படியே பெண்குறியைக் குறித்தாலும் அதனால் பாதகமில்லை! உடற் கூறு வகுப்பில் சொல்லித் தருகிறோமே! அதே போல் தானே இலக்கியம்! அவ்வளவு தானே?

ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் வருதே? வரட்டுமே! பகுத்தறிவாளர் நீங்க தானே சொல்லுறீங்க வறட்டு ஆன்மீகம் கூடாது-ன்னு? இது வரட்டும் ஆன்மீகமா வரட்டுமே? :)
ஆன்மீகம் என்பதனாலேயே இச்சொல்லைத் தவிர்த்து விடவேண்டுமா என்ன? தேவை இல்லை! ஆன்மீகம் உடற்கூறு பேணுதல் பற்றியும் பேசுகிறதே!

"வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே!" என்பது கம்ப ரசம்! ஆனால் சில பேரின் எண்ணத்தில் அது காம ரசம்! சோம ரசம்! பீம ரசம்! :)
இராமன் வில்லை முறித்து விட்டான் என்ற செய்தி கேட்டு, சீதையின் மேகலை இற, அவள் அல்குல் வளர்ந்ததே-ன்னு கம்பர் பாடினாலும் பாடினாரு! பாவம் மனுசன்! அதோ கதியாகி நிக்குறாரு!

மேகலை = இடையைச் சுற்றிச் சற்றுத் தாழ்வாக அணியும் (ஒட்டியாணம் போல) ஒரு நகை! மணிமேகலை என்கிறோம் அல்லவா?
மகிழ்ச்சிக் களிப்பில் சீதையின் ஒட்டியாணம் இடையோடு இறுகியது! நல்லா சாப்பிட்டாக்கா, பெல்ட் இறுகும்ல? இறுகினா என்ன ஆகும்? உங்க பெல்ட்டை இறுக்கி விட்டுக்கிட்டு அடியில் பாருங்க!

தொப்பை இருக்கிறாப் போலத் தெரியும்! இடுப்புல ஒரு கயிறு/பெல்ட் கட்டி இறுக்கினா, இடுப்பின் மேலும், கீழும் சதை விரியும்ல? அதே தான் கம்பர் பாடினாரு! மேகலை இறுக்க, இடை வளர்ந்ததே! ஆனாப் பாவம், சர்ச்சைக்குரிய சொல்லைப் பயன்படுத்திட்டாரு! நம்ம மக்கள் சூடாக்கிட்டாய்ங்க! :)

அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை! இரு பாலருக்கும் பொது! இடையும், தொப்புள்/இடைக் கீழுள்ள வளைந்த சதைப் பகுதியும் அல்குல் என்று வழங்கப்படும்! முருகனுக்கும் அல்குல் உண்டு! ஹா ஹா ஹா! யாராச்சும் பழனியாண்டியின் திருமுழுக்கைப் பார்த்து இருக்கீங்களா? அப்படிப் பார்த்து இருந்தா, இப்படிவே பேசவே மாட்டீங்க!

ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, எங்க முருகனோட இடுப்பு! வள்ளியின் இடை கொடியிடை மட்டுமே! ஆனா முருகனின் இடை, புற்று அரவு இடை! பாம்பு போல் நெளிந்து வளைந்து மேலே செல்லும் உயிர்ப்புள்ள இடை! கோலி,பாலி,ஹாலி எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் இப்பேர்ப்பட்ட இடுப்பு அழகுக்கு!
அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும், எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))

அதுக்காக இலக்கியத்தில் வரும் அல்குல் எல்லாமே இடை-ன்னு சொல்ல வரலை! அந்த Contextக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேணும்! அவ்ளோ தான்! சிம்பிள்! :)
சென்ற பாட்டில் நாற்றத் துழாய்-ன்னு பார்த்தோம் அல்லவா? நாத்தம் புடிச்ச துளசியைச் சூடும் நாராயணன்-ன்னா பொருள் கொண்டோம்? நாற்றம்=மணம் என்று தானே கொண்டோம்! அதே போலத் தான்!

பெரியாழ்வாரும் அல்குல் என்று பாடுகிறார்! குழந்தையைத் தன் அல்குலில் ஏற்றி அமர்த்திக் கொள்கிறாளாம் தாய்! அப்படின்னா அல்குல் இங்கே என்ன பொருள்? இடை தானே!!!
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்,
இருவர் அங்கம் எரி செய்தாய்! உன்
திரு மலிந்து திகழும் மார்வு
தேக்க வந்து என் "அல்குல்" ஏறி
ஒரு முலை வாய் மடுத்து உண்ணாயே!


ஆண்டாளும் அப்படியே தான் பாடுகிறாள்! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே!
வளைந்த "இடுப்பு" கொண்டவளே! காட்டு மயிலே! வா போகலாம்! - இதுக்கு மேல Curves பத்தி கல்லூரி மாணவர்கள் கிட்ட கேட்டுக்கோங்கப்பா! இதுக்கே ஆன்மீக பேரன்பர்கள் சிலர் என் மேல் படு பயங்கரக் கோபமா இருக்காங்க-ன்னு இப்போ தான் சேதி வந்துச்சி :))

அடியேன் நோக்கம்: ஆண்டாள் பயன்படுத்தும் இந்தத் தமிழ்ச் சொல், கோதையின் தெய்வத் தமிழ் - இதனால் எந்த "இடறலும்" இல்லை என்று காட்டவே, இதை விளக்கப் புகுந்தேன்! அடுத்த முறை இந்தப் பாசுரத்தை ஓதும் போது, மன நெருடல் இல்லாமல், வாய்விட்டு, உரக்கவே ஓதலாம்! ஆண்டாள் தேவை இல்லாமல் இப்படி ஒரு சொல்லைப் போட மாட்டாள்!

(திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம்-பரிசுத்தம்! ஆன்மீகத்தை அன்றாட வாழ்வியலோடு கலக்கக் கூடாது! அது பத்தடி தள்ளியே வைக்கப்படணும்! தேவைப்படும் போது அதை எடுத்து யூஸ் பண்ணிக்கனும் என்பது ஆண்டாளும் அறியாத ஒன்னு! அடியேனும் அறியாத ஒன்னு! தனிமையில் என்னிடம் சினந்தவர்கள் அடியேனை மன்னிக்கவும்! முடிந்தால் இச்சொல்லுக்குக் கோதையையும் மன்னிக்கவும்!)


(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்று மெல்லியலாய் நினைத்தவர்கள்...Resume here...இங்கே தொடருங்கள்! புரிதலுக்கு நன்றி)

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!
நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!
முற்றம் = முன்றில், முன்வாசல்! இந்தக் கண்ணன் என்னும் காதலனைக் காண, பின் வாசல் வழியா பயந்தாங்கொள்ளி போல் ஓடத் தேவையில்லை! தைரியமா முன் வாசல் வழியாகவே வா! போகலாம்!

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?
ஹும், ஹும்...நான் இப்போ வெளியில் வர மாட்டேன்...தூக்கம் வருது...நீங்க போயிக்கோங்க....என்னைப் ஃப்ரீயா விடுங்க! ஹூம்...என்று சிணுங்குவது, அப்படியே நம் கண் முன் தெரிகிறது பாருங்கள்!:)

பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! கொஞ்சம் மிதப்புல இருப்பவ!
மிதப்பு என்றவுடன் பெண்டாட்டி=மனைவி-ன்னே எல்லா ஆண்களும் அர்த்தம் எடுத்துக்காதீங்கப்பா சாமீகளா!:)

நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? வாடீ வெளியே! :)
ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
Read more »

மார்கழி-10: துளசி தளமா? தாமரை தளமா? - எது உசத்தி?

துளசியின் கதை என்ன? துளசி தளத்தை விட தாமரை தளம் உசத்தியாமே? பாக்கலாமா இன்னிக்கி? :)
புதிர்-10:
Thirupavai Crossword - குறுக்கெழுத்துப் புதிரை நீங்க ஆடித் தான் ஆகணும்! மொதல்ல அதைப் போயி ஆடுங்க! :)


"ஏல்-ஓர்" எம்பாவாய் என்றால் என்ன-ன்னு சொல்லியாச்சு சென்ற பதிவில்! அதை ஞாபகம் வச்சிக்கிட்டே இனி வரும் பதிவுகளை வாசியுங்கள்!
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்


கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் = அம்மாடி, நோன்பு நோற்றுச் சுவர்க்கம் போறவளே!
இங்கு தோழியை அம்மா-ன்னே விளிக்கிறா ஆண்டாள்! ஏன்? அடியே பெரிய மனுஷி-ன்னு கூப்பிடுவோம்-ல? அதே போலத் தான்! ஏதோ மார்கழி நோன்பு நோற்று, ஐக்கிய மோட்ச நாடுகளுக்கு விசா வாங்கப் போறேன்னு சொன்னியேடீ-ன்னு கிண்டல் தொனிக்கத் தோழியைக் கலாய்க்கிறாள் கோதை!:)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற = நோன்பு நோற்றால் தேவலோகம்/ சொர்க்கலோகம் கிடைக்கும்! அங்கே போய், ரம்பா-ஊர்வசி-மேனகா எல்லாம் டான்ஸ் ஆட, அதைப் பாத்துக்கிட்டே, கோப்பையில் குடிச்சிக்கிட்டே, ஜாலியா இருக்கலாம் என்றா கோதை சொல்கிறாள்? சேச்சே!

"சுவர்க்கம்" என்று இந்திரலோகத்தைச் சொல்லவில்லை ஆண்டாள்! ஒழுக்கங்கெட்ட இந்திரனைக் கண்ணனுக்கும் பிடிக்காது! அவன் காதலிக்கும் பிடிக்காதே!
வேள்வி மறையோர்கள் நிறுவி வைத்தார்கள் இந்திர பூஜையை!
அதைக் கேள்வி கேட்டு நிறுத்தி வைத்தான் கண்ணன்!
அதுவும் அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே! அப்போ, எத்தனை பேர் கண்ணன் மேல் பொங்கி இருப்பார்கள்? ஆனால் கண்ணன் அசைந்து கொடுத்தானா? வலுவான வாதங்களை முன் வைத்தான் அல்லவா! கோவர்த்தன கிரியைப் பூசைக்குரிய பொருளாக்கினான்!
வழிபாட்டில் புரட்சிக்கு வித்திட்டவன் கண்ணனே! சமுதாயத்துக்குப் பயன் தருமாறு ஆன்மீகம் வளர்த்தவன் கண்ணன்!

கண்மூடித்தனமான வழக்கங்களை எல்லாம் தள்ளி வைத்து, சமூக நோக்குள்ள ஆன்மீக வழியைக் காட்டியமைக்கு கண்ணனே முதல் குரு!
கண்ணனின் இதயம் அறிந்தவர்கள் ஆச்சார்யர்கள்! ஆச்சார்ய ஹ்ருதயம்! அதனால் தான் இராமானுசர், மாமுனிகள் போன்றவர்களால் சமூக-ஆன்மீகத்தை வளர்க்க முடிந்தது!

* சுவர்க்கம் <> இந்திரலோகம்!
யாருக்கு வேணும் அந்த இந்திரலோகம்? இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!
* சுவர்க்கம் = சு+வர்க்கம்!!
நல்ல வர்க்கம்! நல்ல குலம்!
குலம் தரும், செல்வம் தந்திடும் = அடியார் குலம்! அதுவே சு+வர்க்கம்!
வைகுந்தம் என்னும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியம்! அதுவே நம்-அவன் வீடு! அதுவே சு+வர்க்கம்! அதைத் தான் கோதை குறிக்கிறாள்!


மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? = ஒருத்தர் குரல் கொடுத்தா, நாமளும் பதில் குரல் கொடுக்கணும்! ஒருத்தர் பின்னூட்டம் இட்டாங்கன்னா, அவர்களுக்குப் பதில் பின்னூட்டம் சொல்லணும்! :)
நாங்க உன்னைக் கூப்புடறோம்? நீ வாசக் கதவைத் தான் திறக்கலை! மாற்றமும் தர மாட்டியா? மாற்று பதில் கூடவா கொடுக்க மாட்டே? - என்று கேட்கிறாள் கோதை!

நாற்றத் துழாய் முடி நாராயணன்! = நாராயணன் நாற்றம் புடிச்சவன்! :)
ஹா ஹா ஹா! அப்படியா சொல்லுறா கோதை? முன்பே சொன்னது போல் பாட்டைக் கோதையின் மனசில் இருந்து படிக்கணும்! கோதையின் காலத்தில் இருந்து படிக்கணும்!
நாற்றம் = மணம்! துர்நாற்றம் = கெட்ட வாசனை! நன்னாற்றம் = நல்ல வாசனை!
இப்போ தான் நாற்றம் என்றாலே பொருள் மாறி விட்டது! இப்படி எத்தனையோ தமிழ்ச் சொற்களின் உண்மையான பொருள், கும்மியடிச்சி கும்மியடிச்சி, பொருளே மாறிப் போச்சி! :)

* பட்டை = விபூதி! ஆனா இன்னிக்கி கிண்டலா=சரக்கு! இன்னும் அரை நூற்றாண்டில் இதுவும் டோட்டலாவே மாறிடும்!
* நாமம் = திருமண் காப்பு! ஆனா இன்னிக்கி கிண்டலா= ஏமாந்து போதல்! இன்னும் அரை நூற்றாண்டில் இதுவும் டோட்டலாவே மாறிடும்!
மக்களே, இது தான் தொடர் கும்மியின் பவர்! தெரிஞ்சிக்கோங்க! :))

நாற்றத் துழாய் முடி நாராயணன் = வாசம் மிக்க துழாய் என்னும் துளசி தளம்! அதை முடிந்து கொள்ளும் (சூடிக் கொள்ளும்) நாராயணன்!

துழாய் = தமிழுக்கே உரிய ழகரம் துலங்கும் துழாய் = தமிழ்க் கடவுளான மாயோனுக்கு பிடித்தமான மலர் ஆகி விட்டது பார்த்தீர்களா?
அத்துழாய், பைந்துழாய், கருந்துழாய்-ன்னு வைணவ இலக்கியங்களில் தமிழ்த் துழாயின் வாசம் வீசும்!

ஏன் இந்தத் துளசி தளத்துக்கு மட்டும் இத்துனை மதிப்பு?
மற்ற செடிகள் போல், துளசிச் செடிக்குப் பூக்கள் பூத்துக் குலுங்காதே! அப்புறம் எப்படித் துளசியைப் போயி அழகு-ன்னு சொல்லலாம்?
சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!

மற்ற பூக்களை எல்லாம் கொய்யாமல் செடியில் விட்டால் கூட, ஒரு சில நாளில் வாடி விடும்! ஆனா வாடாத மலர் என்றால் அது துளசி மட்டும் தானே? ஒட்டு மொத்த செடியே ஒரு வாசனைக் கொடின்னா அது துழாய்ச் செடி மட்டும் தான்!

* கருங்குவளை! அதை விடப் புனிதமானது செந்தாமரை!
* அதை விடப் புனிதமானது நூறு இதழ் கொண்ட செந்தாமரை!
* அதை விடப் புனிதமானது ஆயிரம் இதழ் கொண்ட புண்டரீகம் என்னும் தாமரை!
* அதை விடப் புனிதமானது பொற்றாமரை என்னும் ஸ்வர்ண கமலம்!
* ஆனால் இவை அத்தனையும் தராசுத் தட்டில் வைத்து,
* அது கூடவே கண்ணனையும் வைத்தாலும்,
ஒரு சிறு துளசி தளம் எதிர்த் தட்டில் அனைத்தையும் சமன் படுத்தி விடும்! இது எப்படிச் சாத்தியம்? துளசி = அன்பு! அதனால் தான்! கிருஷ்ண துளசி என்றே பெயரும் வந்து விட்டது!

பொதுவாகச் சொல்லப்படும் ஜலந்திரன்-துளசி கதை! ஆனால் அதுவல்ல பெருமாள்-துளசி பந்தம்! ஜலந்திரன்-துளசி கதை வேறு! இந்தத் துளசி வேறு! இந்தத் துளசி ஆதித்துளசி! பின்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!

திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!
அதுவே எம்பெருமானின் மார்பைச் சென்று சேர்ந்தது! அகலகில்லேன் என்று அலர்-மேல்-மங்கை உறையும் திருமார்பு! அந்த மார்பைத் துளசி அலங்கரிப்பதால் அன்னைக்கும்-அப்பனுக்கும் ஒருசேரக் கட்டக் கூடிய ஒரே மலர் இந்தத் துழாய் மலர்! பச்சைத் துளசி தாயாருக்கும், கருந்துளசி பெருமாளுக்கும் சார்த்தப்படும்!

ஆகம விதிகளிலும் துளசிக்கே ஏற்றம்! இன்னின்ன மலர்கள் தான் இந்திந்த பாகங்களில் அலங்கரிக்கணும் என்ற ஆகம விதி இருக்கு! ஆனா அதற்கு ஒரே விதி விலக்கு = துளசி!
எந்த மலரைச் சூட்டும் முன்னரும், துளசி மலரே முதலில் சார்த்தப்பட வேண்டும்! நைவேத்தியத்திலும் துளசி உண்டு! தீர்த்தத்திலும் துளசி உண்டு! வேள்விகளில் தர்ப்பைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே போல் பூசைகளில் துளசிக்கு முக்கியத்துவம்!

துளசி, துழாய், பிருந்தா, விருந்தை என்று பல நாமங்கள்! துளசி = இலை, மணி, கட்டை, வேர் என்று பல மருந்துகள்! இன்னும் சொன்னால் தனிப் பதிவு தான் இடணும்! "அகிலமுண்ட மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்" என்று அருணகிரியும் துளசீ மணத்தில் ஆட்படுகிறார்!

இன்று கிறிஸ்துமஸ் என்பதால் இதையும் சொல்கிறேன்!
* இயேசுநாதப் பெருமானின் சிலுவைக்கு அடிக் கீழ் வளர்ந்ததும் Holy Basil என்னும் துளசியே!
* துளசியின் அடிக் கீழ் தோன்றி வளர்ந்ததும், கோதை என்னும் துளசியே!
துளசி நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்!


நம்மால் போற்ற, பறை தரும் புண்ணியனால் = நாம் அவனைப் பாட, நமக்கு அவன் பறை தருவான்! என்ன பறை? மோட்சப் பாதைக்கு வேண்டிய உபகரணங்கள் (பறை) = சிந்தனை, சொல், செயல்! அதை நமக்குத் தருவான்! தயார் படுத்துவான்!

பண்டு ஒரு நாள், கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் = அன்னிக்கி ஒரு நாள், எமன் வாயில் விழுந்து மாண்டு போனானே! கும்பகர்ணன்!

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? = அவன் தோற்றுப் போய், தன் தூக்கத்தை உனக்குக் கொடுத்திட்டுப் போயிட்டானோ? ஹா ஹா ஹா! கும்பகர்ணி! எழுந்திருடீ!
(இன்னொன்று கவனித்தீர்களா? கர்ணன் என்று பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவே, தீமை பக்கம் இருந்து, கூற்றத்தின் வாய் வீழ்வார்கள் போல! கும்ப-கர்ணன், கர்ணன், வி-கர்ணன், இன்னும் வேற யார்னா இருக்காங்களா?)

ஆற்ற+அனந்தல் உடையாய் = அனந்தல்-ன்னா என்ன-ன்னு சென்ற பாட்டிலேயே சொன்னேன்! ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு கேட்டாள்!
ஆற்ற(செயல்) = கர்மச் செருக்கு! அனந்தல் = ஞானச் செருக்கு!

விறகுக் கட்டையைக் கொளுத்திக் குளிர் காயலாம்! ஆனால் நாம் வாங்கிய கட்டை என்று இறுக்கி அணைத்துக் கொள்ள முடியுமா? அதே போலத் தான்!
* இறைவனை அறியத் தான் ஞானானுஷ்டானம் செய்கிறோம்!
* இறைவனை அறியத் தான் கர்மானுஷ்டானம் செய்கிறோம்!
ஆனால் பழகப் பழக, குளிரைப் போக்கத் தான் கட்டை என்பது மறந்து போய், கட்டையையே அணைத்துக் கொள்கிறோம்! அதுவே தடையாகப் போய்விடுகிறது!

கட்டைக்கு ரொம்ப தூரமும் போக முடியாது! ரொம்ப அருகிலும் போகக் கூடாது! அப்போது தான் வெப்பம் கிடைக்கும்! இதை உணர்ந்து கொண்டால் போதும்!

அருங்கலமே = தயாபாத்திரமே! தாயார்-பெருமாளின் கருணைக்கு உரிய பாத்திரமே!
(ஆற்ற+அனந்தல்) செருக்கு தந்த சுகத்தில், சுகமாத் தூங்குபவளே! போதும்! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!

தேற்றமாய் வந்து திற = தேற்றமாய் வா! வேகமாய் வா! வந்து கதவைத் திற! தேற்றம் = வேகம்/தேறுதல்! நீ தேறணும்-ன்னா தேற்றமாய் வா!
(ஆற்ற+அனந்தல்) மேல் உள்ள பிடிமானத்தை/செருக்கை விட்டுட்டுத் தேற்றமா வா!

ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

இயேசுக் குழந்தை பிறந்தநாள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP