Sunday, June 10, 2012

தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!

வணக்கம் மக்கா!
சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க!
ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அள்ளிப் போடுறது வழக்கம்! ஏன்?:)

Fresh மாவு, புளிக்கத் துவங்கும் போது, தூவுற உப்புக்கு மகத்துவம் அதிகம்!
கெட்டிப்படும் போது கலந்தா, "குப்பு"ன்னு பூக்கும் = இட்லி நம்பிக்கையோ, தோசை விஞ்ஞானமோ... நாம் அறியோம்:)

அதே போல, பல ஊர்களின் பெயர்கள், ஆரம்பத்திலேயே வந்து விடுவதில்லை!
குடியேறிய பின், ஏதோவொன்று கெட்டிப்பட்டு, அதுவே அந்த ஊரின் பேராகத் தூவப்படுகிறது! நாளடைவில், "குப்பு"-ன்னு பூத்து, அழகுடன் பரிணமிக்கிறது!

ஊர்ப் பெயர் விகுதிகள் = பட்டி, பாளையம், குடி, புரம், பட்டினம்....

* ஊர் = வேற வேற பேரா இருந்தாலும்,
* ஊர்களின் விகுதி = ஒன்னே போல இருக்கும் மாயம் என்ன?
யோசிச்சிப் பார்த்து இருக்கீங்களா?

ஊர்ப் பேரில் இருக்கும் விகுதியை வச்சிக்கிட்டே, அந்தூரு...தெக்கத்தியா-வடக்கா? செட்டிநாடா-கவுண்டம் பாளையமா?...
அட அம்புட்டு ஏன்...., முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தாலா?-ன்னு கூடக் கண்டுபுடிச்சீறலாம்!:))
தமிழக ஊர்களை எடுத்துக் கொள்ளுங்கள்!
- பட்டி ன்னு முடிஞ்சா... பெரும்பாலும் மருதைப் பக்கம்
- பாளையம் ன்னு முடிஞ்சா... கோவைப் பக்கம்
- குடி ன்னு முடிஞ்சா... தெக்கத்தி (அ) செட்டிநாட்டுப் பக்கம்
- பட்டினம் ன்னு முடிஞ்சா... கடற்கரை ஓரம்

தமிழகம் மட்டுமல்ல!
* ஈழத்திலும் இது உண்டு - துறை, மலை, இறவு ன்னு..
* மலையாளத்தில் = குளம், சேரி
* கன்னடத்தில் = ஹள்ளி, சந்த்ரா
* தெலுங்கிலும் உண்டு = பேட்(டை), கொண்டா ன்னு

இப்படி.... ஊர்ப் பெயர்களில் ஏதோவொரு ஒழுங்கு ஒளிஞ்சிக்கிட்டுத் தான் இருக்கு!
அதைச் சன்னமா, நறுவிசா, பிட்டுப் பிட்டுத் தின்பதே... இப்பதிவின் நோக்கம்! = தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!


தொல்காப்பியம் = 2000+ ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் காலக் கண்ணாடி!
தொல்காப்பியரு, அவரா நாலு பேரை எழுதி, இதான்டா ஒங்க எல்லை ன்னு இட்டுட்டுப் போவல! ஏற்கனவே மக்களிடம் வழங்கியதைத், தொகுத்துத் தருகிறார்!

* முல்லை
* குறிஞ்சி
* மருதம்
* நெய்தல்
எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!

முதலில் முல்லை! பின்னரே குறிஞ்சி! - வியப்பா இருக்கு-ல்ல?:)

நாம, இன்னிக்கி மனப்பாடப் பாட்டுல சொல்லுற வரிசை வேற! பின்னாளில் இலக்கியத்தில் கலந்த சமய அரசியல்!
ஆனா, தொல்காப்பியர் பதிஞ்சி வைச்சது, அறிவியல் பூர்வமான sequence; சிறுபொழுது/ பெரும் பொழுது

* முல்லையின் பொழுது = மாலை/ மழைக் காலம்
* குறிஞ்சி்யின் பொழுது   = யாமம் (இரவு)/ குளிர் காலம்

மாலைக்கு அப்பறம் தானே இரவு?
மழைக்கு அப்பறம் தானே குளிர் காலம்?
= அதான் முல்லைக்குப் பிறகு குறிஞ்சி!

* முல்லை = காத்து இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

காத்திருந்து, ஏங்ங்ங்கி..... அப்புறம் புணர்தலின் இன்பம் ஒங்களுக்குத் தெரியுமா?:))

இப்படித் தான்... முல்லை, குறிஞ்சி ன்னு இயற்கையா வச்சாரு தொல்காப்பியர்! ஆனா நாம...
* முல்லை = திருமால்
* குறிஞ்சி = முருகன்
ன்னு வருவதால், வரிசையையே மாத்தீட்டோம்:) பின்னாள் பதிப்பகங்கள்/ பண்டிதர்கள் செய்த வேலை! எதை ஒன்னுமே சமய நோக்கோடவே சங்கத் தமிழில் கலந்தால் வரும் ஆபத்து இதான்!:(

இந்த முல்லை-குறிஞ்சி & மற்ற திணைகளில் வரும் கருப்பொருட்கள் = ஊர்ப் பேரு விகுதிகள்;
இன்னிக்கி, அதெல்லாம் இருக்கா? போயிந்தே, போயேபோச்சு ன்னு போயிருச்சா?
ஒவ்வொரு ஊராத் தொட்டுப் போவோம், கூடவே வாங்க! :)


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

1) முல்லை (காடும், காடு சார்ந்த நிலம்):

* காடு ஆர்க்காடு, ஏர்க்காடு, ஆலங்காடு, களக்காடு

* பட்டி = ஆநிரை (ஆடு/மாடு) மேய்த்தல் என்பதால் பட்டி
கோயில்பட்டி, செவல்பட்டி, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, தி. கல்லுப்பட்டி

(மதுரைக்காரன், மதுரைக்காரன் தான்யா! புதுசா வந்த ஊருக்கும் HarveyPatti ன்னே பேரு வைக்குறான்!
நாமத் தான் Sunrise City, Temple Towers ன்னு சென்னையில் கண்ட பேரையும் வச்சி, காலாவதி ஆவுறோம்:))

* பாடி = ஆநிரைகளைக் காக்க, பாடி வீடு அமைத்துத் தங்குதல்
வேலப்பாடி, மேலப்பாடி, ஆயர்ப்பாடி

* காவு = கா (சோலை) என்று பொருள்
ஆரியங் காவு, புல்லிக் காவு, கொல்லிக் காவு (கேரளத்தில்);

கா+விரி = பல சோலைகளை விரித்துப் பாய்வதால் காவிரி!
ஆனா, இந்தக் "காடு"/"கா" என்பதை "வனம்" ஆக்கி விட்டது, சம்ஸ்கிருதப் பரவல்!:(
* புளியங் காடு = திண்டி வனம்! (வடமொழியில், திண்டி-ன்னா புளி)
* முல்லைக்கா = மல்லீவனம்!
* மரைக் காடு = வேதாரண்யம்

மரைக் காடு = மான்கள் வாழும் காடு!
மரை ஆன் கறந்த, நுரை கொள் தீம் பால், 
மான் தடி புழுக்கிய, புலவு நாறு குழிசி

ஆனா "தல" புராணம் உருவாக்கணுமே? என்ன செய்யலாம்? = ஒத்தை எழுத்தை அசைப்போம்...
மரை = மறை ன்னு ஆக்கீருவோம்...

வேதங்களே வந்து வழிபட்ட 'ஸ்'தலம்! => வேதக் காடு => வேதாரண்யம் ன்னு ஆக்கியாச்சு! பேஷ் பேஷ்!:))
இப்படித் தான் எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, ஒத்தை எழுத்தைக் கிளப்பி விட்டு, அந்தத் தமிழ்ச் சொல்லே இல்லாமப் பண்ணிடுவாங்கோ:( "நகரம்" தமிழா? ன்னு கேட்டவுங்க தானே!:(

* தோப்பு, பொழில் என்ற ஊர்களும் உண்டு!
பைம்பொழில் (பம்புளி), சேத்தியாத் தோப்பு

* மந்தை = முல்லை நிலத்து ஆடு/மாடுகளை ஒட்டி வந்த பெயர்
புஞ்சை மந்தை, நஞ்சை மந்தை ன்னு, எங்க வடார்க்காடு பக்கம் உண்டு!
ஒத்தைக் கல் மந்தை (Ooty) = தோடர்கள் வாழும் மந்தைப் பகுதி!

இங்கிலீசுக்காரன் வாயில் சிக்கி, ஒத்தக் கல் மந்தை =  Oota ca Mund ஆகி விட்டது:)
இது குறித்த தனித்த கட்டுரைகள் உண்டு! இப்படியே, வேர்ச்சொல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்!

2) குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த நிலம்)

* மலை: மலை என்ற நேரடிப் பெயர்; ஆனைமலை, கொல்லிமலை, திரிகோணமலை (ஈழம்), அண்ணாமலை, கழுகுமலை

* கோடு = மலை முகடு என்ற பொருள்
திருச்செங்கோடு, திருவித்துவக்கோடு, கோழிக்கோடு (கேரளம்), கசரக்கோடு (Kasseragode, Kerala)

ஆங்கிலத்தில் எழுதும் போது, kodu->Kassera-gode ஆகி விட்டது; இங்கிலீஷ்காரன் செஞ்சது;
அதை எள்ளி நகையாடுறோமா? இல்லை AdaiyaaRu Ananda Bhavan ன்னு வாங்கித் திங்குறோமா?
ஆனா, Mulla Periyar -ன்னா மட்டும், பெரியார்-குல்லா போட்ட முல்லாவா? -ன்னு ட்விட்டரில், "இலவச" நையாண்டி நர்த்தனங்கள்:( 

Triplicane Fine Arts -ன்னு தான் இன்னிக்கும் சங்கீதம் பாடுறான்; அங்கே Thiruvallikeni Fine Arts ன்னு பாடத் துப்பில்லை!
ஆங்கிலத்தில், Adaiyaaru -ன்னு எழுத மாட்டோம்; Adyar தான்! ஆனா Mulla Periyar ன்னா மட்டும் எகத்தாளம்; 
தமிழ் இலக்கணம் படிச்சதே, அன்பர்களின் "தமிழ் உணர்ச்சி"யை மட்டம் தட்டத் தானே? என்ன பொழைப்போ? முருகா:(

* குன்றம் = சிறிய மலை
திருப்பரங் குன்றம், திருக்கழுக் குன்றம், நெற் குன்றம், பூங் குன்றம்

* குறிச்சி = குன்றக் குறவர்களின் வாழ்விடம்
பாஞ்சாலங் குறிச்சி, ஆழ்வார் குறிச்சி, கள்ளக் குறிச்சி

* பாறை = மலையை ஒட்டிய பெருங் கற்கள்
வால்பாறை, பூம்பாறை, அம்பாறை (ஈழம்), சிப்பிப் பாறை

* கல் = திண்டுக்கல், நாமக்கல், வாரங்கல் (ஆந்திரம்), ஒகேனக்கல்

(ஹொகே-ன-கல் = புகை எழும் கல்,
கன்னடத்தில் ஹொகே = புகை; அருவியால்.. புகை எழும் கல்)

3) மருதம் (வயலும், வயல் சார்ந்த நிலம்):

* ஆறு = நேரடிப் பெயர்; திருவையாறு, மணிமுத்தாறு, ஆழியாறு, கயத்தாறு,
எங்கூரு வாழைப்பந்தல் பக்கம் செய்யாறு

* துறை = Banks ன்னு ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம்!
=> வெறுமனே இருந்தா = கரை
=> மக்கள் இறங்குறாப் போல இருந்தா = துறை

காங்கேசன் துறை (ஈழம்), மயிலாடுதுறை (மாயவரம்), திருவாவடுதுறை, சிந்து பூந்துறை, செந்துறை
# மயிலாடு துறை = மயிலை வெரட்டிட்டு,  "மாய" வரம் ஆக்கீட்டோம்:)
# குரங்காடு துறை = குரங்கை வெரட்டிட்டு, வெறும் ஆடுதுறை ஆக்கீட்டோம்

பொருநை (தாமிரபரணி) யின் கரையில் = குறுக்குத் துறை ன்னே ஒரு ஊரு! அம்புட்டு அழகு!
என் முருகன் ஆத்துக்குள்ள மூழ்கி, வெளிய வருவான் = Scuba Diving Guy:)

மொத்த ஆலயமே, தண்ணிக்குள் மூழ்கி, வெளிய வரும்.... இங்கெல்லாம் இன்னொரு முறை போகணும்..... மனசுக்குப் பிடிச்சவங்களோடு, தோளில் சாய்ஞ்சிக்கிட்டு, முருகன் கதையைப் பேசிக்கிட்டே..!
---------------

அரங்கம்:  ஒரே ஆறு, இரண்டாய்ப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய்க் கூடும், இடைப்பட்ட திட்டு/ துருத்திக்கு = "அரங்கம்" ன்னு பெயர்!

திருவரங்கம் = எந்தை, அரவணை மேல் துயில் அமரும் அரங்கம்! ஆழ்வார்கள் பதின்மரும் பாடிய ஒரே தலம்!

மொழிமுதல் "அ"கரத்தை வெட்டி, அதை ரங்கம்-ன்னு ஆக்கி, ஸ்ரீ சேத்துருங்கோ:)
ஆனா எந்த ஆழ்வாரும் சீரங்கம், ஸ்ரீரங்கம்-ன்னே பாடவே மாட்டாரு! அணி, திரு-வரங்கம் அய்யோ! அரவணை அழகில் பட்டேன்!

அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் இணைவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!
---------------

* கூடல் = ஆறுகளின் கூடல்! திருமுக்கூடல், கூடலூர், பவானிக் கூடல்

* ஓடை, மடை = வயலுக்குப் பாயும் நீர்; காரனோடை, பத்தமடை, பாலாமடை

* ஏரி = பாசனத்துக்குச் சேமிக்கப்படும் நீர்; மாறனேரி, சீவலப்பேரி, பொன்னேரி, நாங்குநேரி

*ஏந்தல், தாங்கல் = சிற்றேரி; மழை நீரை ஓட விட்டு ஏந்துவதால் = ஏந்தல்!
கொம்புக்காரனேந்தல், வேடந்தாங்கல், பழவந்தாங்கல்

* குளம் = மக்களின் அன்றாட நீர்த் தேவைக்குச் சேமிக்கப்படும் நீர் (குளிக்க, குடிக்க, துவைக்க..)
பெரியகுளம், விளாத்திகுளம், பெருங்குளம், கருங்குளம்

* ஊருணி = குளம் போலவே! ஆனால் குடிக்க மட்டும்!
பேராவூருணி, மயிலூருணி

* கேணி, கிணறு = இது ஊற்று நீரால் சுரப்பது! (மழை நீர் அல்ல)
திருவல்லிக்கேணி, கிணத்துக்கடவு, ஏழுகிணறு, நாழிக்கிணறு

* வயல், விளை = இது நேரடி வேளாண் நிலங்கள்!
புதுவயல், நெல்வயல், திசையன்விளை, ஆரன்விளை

* பழனி, கழனி = இதுவும் வயலே! ஆனால் நீர் நிறைந்த வயல்!
தென்பழனி, நடுக்கழனி
(மேலே வயல் சூழ்ந்த பழனிமலைப் படத்தைப் பாத்துக்கோங்க:)

Important Question: பழனியா? பழநியா??
பழம் + நீ = பழநி என்பதெல்லாம் வெறும் புராணக் கதையே!:))

என் முருகனைத் தோத்தவனாக் காட்டுறதல, உங்களுக்கு என்னய்யா அப்படியொரு இன்பம்? All Cheaters!:)
Hey honey! Everytime when I come to your temple, I bring only Mango for u!You are the Winner da!:)

Jokes apart..
பழனம் = வேளாண் நிலம்!
சேல் உலாம் பழனம், செங்கழு நீர்ப் பழனம்
இதான் பழனி, கழனி ன்னு ஆகும்!
"இயற்கை" கொஞ்சும் முருகனை, "பழனி" ன்னே எழுதலாம்! பழம் நீ அல்ல!

4) நெய்தல் ( கடலும், கடல் சார்ந்த நிலம்) 

கரை = நேரடிப் பெயர்; கோடியக்கரை, கீழக்கரை, சேதுக்கரை, மணக்கரை

துறை = துறைமுகத்தை ஒட்டிய பெயர்; குமரித் துறை, கொற்கைத் துறை, காயல் துறை
(இது மருத நிலத்துக்கும் உண்டு! அங்கே ஆற்றுத் துறை, இங்கே கடல் துறை)

பட்டினம் = கடற்கரை நகரம்
காவிரிப் பூம் பட்டினம், குலசேகரப் பட்டினம், நாகைப் பட்டினம், காயல் பட்டினம்
(பட்டணம் = பெரு நகரம்; பட்டினம் = கடற்கரை நகரம்)

பாக்கம் = சிற்றூர்
பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், வில்லிப்பாக்கம், புரசைப்பாக்கம்....
அடடா....சென்னையில் தான் எம்புட்டு பாக்கங்கள்!:))

(பட்டினம் = Seaside Town, பாக்கம் = Seaside Hamlet
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்றே சிலப்பதிகாரம் பேசும்)

குப்பம் = கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகள்
காட்டுக் குப்பம், நொச்சிக் குப்பம், சோலைக் குப்பம்...
(மீனவர் பகுதி என்றும் கொள்ளலாம்; ஆனா பரதவர்/ மீனவர்களே இருக்கணும் ன்னு அவசியம் இல்லை; மருத்துவர், அலுவலர் பலரும் உண்டு)


5) பாலை:

பாலை-ன்னு தனித்த நிலம் இல்லை!
அந்தந்த நிலங்களே, அவற்றின் இயல்பு கெடின், பாலை ஆகும்!

* காடான திருவேங்கடம், காட்டுத் தீ பற்றி எரிஞ்சா = பாலை!
* துறைமுகப் பட்டினம்,  கடல் கொண்டு போனால் = பாலை!

சேர நாடு முழுக்கவே மலை->குறிஞ்சி -ன்னு முடிவு கட்டீற முடியாது!
அதான் தொல்காப்பியர், "அரசியல் அடிப்படையில்" பிரிக்காம, "இயற்கை அடிப்படையில்" பதிஞ்சி வைச்சாரு!

எல்லா ஊர்களிலும், நால்வகை நிலங்களும் இருக்கலாம்! (அ) ஒரு சிலது மட்டுமேவும் இருக்கலாம்!
அடிப்படையில் முல்லை-குறிஞ்சி = ஒன்னுக்குள்ள ஒன்னு; மலையில் காடு உண்டு! காட்டில் மலை உண்டு!

முல்லை-குறிஞ்சி = ஆதி குடி!
காட்டு மக்களே இடம் பெயர்ந்து, நாகரிகம் கண்டனர்;

சேயோன்-முருகன்

மாயோன்-பெருமாள்

* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்

பண்டைத் தமிழ்த் தெய்வங்கள்!
ஆறு-தலை, நாலு-கை ன்னு கதைகள் ஏற்றப்படாத, நடுகல்-இயற்கை வழிபாட்டில் அமைந்த தமிழ்த் தொன்மங்கள்!

காட்டைத் திருத்தி நாட்டாக்கிய போழ்து => மருதம் = வயல்!
பண்பாடு வளர வளர, முல்லை-குறிஞ்சி மக்களே, இடம் பெயர்ந்து, மருதம் கண்டார்கள்!
தங்கள் தொன்மமான திருமாலும், முருகனும்..., முல்லை-குறிஞ்சிக்குள் மட்டும் அடைபடாமல், எல்லா நிலங்களிலும் பரவியது, இதனால் தான்!

* திருச்செந்தூரில் இருப்பது முருகனே அல்ல! நெய்தலில் எப்படி முருகன் இருப்பான்?
* திருமலையில் இருப்பது திருமாலே அல்ல! குறிஞ்சி-ல எப்படித் திருமால் இருப்பாரு?
- ன்னு டைப் டைப்பாக் கிளப்பும் "அறி-வாளி"கள் நம்மிடையே உண்டு:))

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் = எந்தச் சார்பும் இல்லாத, சமணப் பெருமகனாரான இளங்கோ அடிகள் தான்!
திருப்பதி மலை மேல் நிற்கும் மாயவனையும், செந்தூரில் கொஞ்சும் முருகனையும் சிலம்பில் படம் பிடித்துக் காட்டுகிறார்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சியின் மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கன் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
...
...
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே!

கொற்றவை என்பவளும் தமிழ்க் கடவுளே!
ஆனால், இவளைப் பாலை நிலத்தில் வைத்து விட்டனர் = ஏன்னா இவள் பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் - எயினர்களின் தெய்வம்!

கொடுமையான கள்வர் வாழ்க்கை, நாகரீக மேம்பாடு இல்லாத காரணத்தால், இவள் சங்கத் தமிழில் சற்றே அடைபட்டுப் போனாள்!
ஆனால், பின்னாளில், ஊர் தோறும் ஆலயம் கண்டாள்!

வேந்தன் = அரசன்! வருணன் = கடல் காற்று!
மாறிக் கொண்டே இருப்பதால், இவர்கட்கு தனித்த அடையாளமோ, ஆலயமோ, கூத்தோ, துறையோ இல்லை!
மக்கள் வாழ்வியலில் கிடையாது! வெறும் நில அடையாளங்கள் மட்டுமே; வேந்தனை இந்திரன் ஆக்கியது, பின்னாள் "புராணம்":)


பொதுவான "ஊர்" விகுதிகள்:

மேலே பார்த்த ஐந்திணை விகுதி மட்டுமில்லாமல், பல பொது விகுதியும் இருக்கு!

* ஊர் = இது எல்லா இடங்களுக்கும் வரும்!
திருவாரூர், திங்களூர், கஞ்சனூர், நாவலூர், மூவலூர், குறையலூர்... ன்னு அளவே இல்ல!
ஆழ்வார் - நாயன்மார் பாடல் பெற்ற ஊர்களுக்குத், "திரு" ன்னு முன்னால் சேர்த்துக் கொள்வதும் வழக்கம்:)

* நாடு = ஒரத்தநாடு, வழுதிநாடு, வயநாடு (கேரளம்)

* புரம்/ புரி = காவலை உடைய நகர்;
காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்), சோழபுரம், திருவனந்தபுரம் (கேரளம்)

* குடி = சான்றோர்கள் ஒன்றி வாழும் இடம்; குடி-இருப்பு!

நல்ல "குடி"யில் பிறக்கணும், "குடிப்" பிறந்தார் ன்னு சொல்றோம்-ல்ல? குடி-ன்னா சாதி அல்ல! குடி = சான்றோர் சமூகம்!
தூத்துக்குடி, இளையான்குடி, காரைக்குடி, குன்றக்குடி
(என் தோழனின் ஊரும் தூத்துக்குடி தான்! எனவே அவனும் சான்றோன் தான்:))
----------------

வீட்டின் பல அமைப்புகளைக் குறிக்கும் ஊர்கள்:

* இல் = இல்லம்; மருதில், அன்பில், செந்தில்! => சேந்தன் + இல் = செந்தில்!

* அகம் = திருவேடகம், பாடகம், ஏர்-அகம் (சுவாமிமலை)

* வாயில்/ வாசல் = வீட்டுக்கு வாயாக (நுழைவு) இருப்பதால் = வாய் + இல்;
திருமுல்லை வாயில், சித்தன்ன வாசல், குடவாசல்

* முற்றம் = சத்திமுற்றம், குளமுற்றம்

* பள்ளம், மேடு= பீளமேடு, பெரும்பள்ளம்

* சேரி = பல குடிகள் "சேர்ந்து" வாழ்வதால் சேரி; இன்னிக்கி Slum ன்னு ஆக்கீட்டோம்:(
புதுச்சேரி, பறைச்சேரி, சாவகச்சேரி


கடேசீயா....போரை/ தொழிலை அடிப்படையா வைத்தும் பல ஊர்கள்....

பாளையம் = படை வீரர்கள் தங்கும் ஊர்; பாளையக் காரர் ன்னே பேரு!
பெரிய பாளையம், பாப்பா நாயக்கன் பாளையம், இராச பாளையம், கோபிசெட்டிப் பாளையம், மேட்டுப் பாளையம்....

கோவை/ கொங்கு பகுதியில் பாளையங்கள் நிறைய; பின்னூட்டத்தில் கொட்டுங்க மக்கா:))

படைவீடு = முருகனின் படை வீடு வேற! அது ஆற்றுப்படுத்தும் வீடு = ஆற்றுப்படை!
இது, மெய்யாலுமே "படை"-வீடு (Soldiers Barracks)!
படவேடு (ஆரணி) = படைவீடு! மணப்பாடு (Manappad) = மணற் படை வீடு

கோட்டை = படைகள் சூழ, மன்னனின் அரண்
செங்கோட்டை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை...

பேட்டை = தொழில் சார்ந்த ஊர்கள்
செவ்வாய்ப்பேட்டை, சூளூர்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டே, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை...

"பேட்டை ராப்" என்று புகழ் பெற்ற சங்க இலக்கியப் பாடலை, இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டு வாங்கிக்குங்கப்பா!:)
எனக்கு மூச்சு முட்டுது...dei muruga, panneer soda open; வர்ட்டா?:))

நன்றி:

1) Twitter-இல் இந்த சுவையான உரையாடலைக் கிளப்பிய சக ட்வீட்டர்களுக்கு நன்றி!
குறிப்பாக, @ArulSelvan, @nRadhakn, @rexArul, @scanman, @drTRM, @spineSurgeon, @mayilSK, @ezharai, @psankar, @0SGR, @dheepakG

2) டாக்டர். ரா.பி. சேதுப் பிள்ளை - ஊரும் பேரும் - Published by: Palaniappa Brothers, திருச்சி

3) பல தகவல்கள் பகிர்ந்து கொண்ட, நல்-நண்பர், ஐயா, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

74 comments:

  1. ஒவ்வொரு ஊருக்கும் பேர் இப்ப்டித்தான் வந்திருக்கணும் என்ற உங்கள்
    ஆராய்ச்சிக்கட்டுரை சாலச்சிறந்தது.

    ஒரு டாக்டரேட் உங்களுக்கு கொடுக்கலாம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. doctor? me? ha ha ha! only my sister is a doctor with big oosi:)
      dank u sury sir!

      Delete
  2. //அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
    அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் சுருங்குவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!//

    அரங்கம் என்பது போன்றே துருத்தி என்ற சொல்லும் இதே பொருளுடைய இன்னொரு சொல்லாகும். ஆற்றுக்கு இடையே இருக்கிற தீவு போன்ற பகுதியை துருத்தி என்றும் சொல்வர். எடுத்துக்காட்டாக தஞ்சை மாவட்டத்திலுள்ள “திருப்பூந்துறுத்தி”.

    நிற்க.

    தெலுங்கில் கொண்ட என்று கூறப்படுகிற சொல்லுக்கு குன்று என்பது தான் பொருள். சொற்களுக்கான பொருள் என்ற அளவுகோலில் பார்த்தால் பல தெலுங்குச் சொற்கள் தூய்மையான தமிழ்ச் சொற்களின் மருவலாகவே இருக்கிறது. நிறைய பேசுவோம். தெலுங்கு தமிழ் ஒப்பாய்வு குறித்து ஒரு கட்டுரை எழுதுங்கள். இது குறித்த உரையாடலுக்கு பொருத்தமான களமாக அமையும். நன்றி. - விஜய்கோபால்சாமி

    ReplyDelete
    Replies
    1. உண்மை விஜய கோபால், நீங்க சொல்வது ஓரளவு சரியே...
      துருத்தி என்ற பேரும் உண்டு!
      ஆனா துருத்தியே அரங்கம் அல்ல!
      அரங்கம் = தீவு! துருத்தி = ஆற்றில்/நீர் நிலையில் துருத்திக் கொண்டிருக்கும் நிலப் பகுதி! நாலா புறமும் நீர் அல்ல! இரண்டு (அ) மூனு பக்கம் மட்டுமே கூடத் தண்ணி இருக்கலாம்!

      தெலுங்கில் "கொண்ட" பற்றிச் சொன்னமைக்கு மிகவும் நன்றி
      ஏடு-கொண்டல-வாடா:)

      Delete
  3. ஒரு கதையைப் படிப்பது போல உள்ளது. மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் சொல்லியிருக்கும் ஊர் பெயர்கள் அனைத்தும் அறிந்ததே. ஆனால் அதை விதம் விதமாக வகைப் படுத்தி, பிரித்து, ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளதற்கு நன்றி :-) அருமை KRS!

    amas32

    ReplyDelete
    Replies
    1. ஊர்ப் பெயர்கள் அனைத்தும் அறிந்ததாக இருப்பது மகிழ்ச்சி-ம்மா!
      இந்தப் பெயர்களை எல்லாம் இனி குறிஞ்சி-முல்லையோடு பொருத்திப் பாருங்க!:)

      கல்-பாறை-மலை ன்னு வருவது குறிஞ்சி
      ஆறு, நீர் தொடர்பா வந்தா மருதம் etc etc:)

      Delete
  4. நான் நுங்கம்பாக்கம் ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். பழைய பாளையம் என்பது நிறைய இடங்களில் உள்ள ஊர்பெயர். ஓலப்பாளையம், நல்லிபாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், இராசாம்பாளையம், காசிப்பாளையம் (கோபி), வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம் ..... பாலப்பட்டி, எருமைப்பட்டி, முதலைப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வலையப்பட்டி. வையப்பமலை ஆனா அங்க பெரிய மலை இருக்கற மாதிரி தெரியலை கரடு அல்லது குன்று வேணா இருக்கலாம். ஏர்க்காடு மலை மீது உள்ளது அப்ப அது குறிஞ்சி எப்படி முல்லை பெயர் பெற்றது? கடைசியா "மங்கலம்" பாடாம உட்டுட்டீங்களே ;)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் குறும்பன்! நலமா?:)

      பாளையமா அடுக்கியமைக்கு நன்றி!
      மலை ன்னு சேர்த்துக்கிடறது தான்! சென்னையில், பரங்கி மலை ன்னு சொல்லலீயா? ஆனா குன்று தானே?:)

      ஏர்க்காடு = மலை மேல் இருப்பினும், குடியிருந்த பகுதி காடாக இருக்கலாம்! அதான் முல்லை! ஏர் + காடு

      //மங்கலம்" பாடாம உட்டுட்டீங்களே ;)//

      ஒங்க பேரைச் சொல்லி பாடீருவோம்:))
      சேந்தமங்கலம், வடபாதிமங்கலம், வீரமங்கலம், சதுர்வேதிமங்கலம்...
      எங்கூரு வாழைப்பந்தல் பக்கத்துல மேல்சீச மங்கலம்:))
      மங்கலம் = கொடையாக அளிக்கப்படும் கிராமம்/ சிற்றூர் ன்னு நினைக்கிறேன்!

      Delete
  5. நத்தம் என்பது கூட ஒரு விகுதியாக உள்ளது. எடுத்துக்காட்டு :- பழங்கா நத்தம், குருவி நத்தம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமதுரை ஐயா!
      நன்றி, "நத்தம்" விகுதி பற்றிச் சொன்னமைக்கு!

      நத்தம் = வாழை
      பழம் + கா + நத்தம் = பழங்கள் இருக்கும் சோலை(கா), அதிலும் குறிப்பாக வாழை!:) மருதம் ன்னு பொருள் பொருந்துது பார்த்தீங்களா?:)

      நத்தம் = நத்தை/சிப்பி என்ற பொருளும் உண்டு! அப்போ நெய்தல் நிலமாகி விடும் போல!

      Delete
  6. இந்தாரும் என் பங்குங்கு சில ஊர் பேர்கள்

    பாளையம் : கவுண்டம்பாளையம், தேமையன்பாளையம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்,உருமாண்டம்பளையம், நீலிகொனம்பாளையம், பள்ளிபாளையம்(சிக்கன்)

    குறிச்சி : விளாங்குறிச்சி, கள்ளகுறிச்சி

    வயல் : நெல்வயல், ஆறாவயல்

    குன்று : குன்றக்குடி, நெற்குன்றம்

    குடி: காரைக்குடி(சிக்கன்) மங்களக்குடி, மன்னார்குடி.அரியக்குடி, லால்குடி

    பட்டி: பிள்ளையார்பட்டி, வடுகபட்டி, வாடிப்பட்டி,

    கோட்டை: தேவகோட்டை, ஊரணிகோட்டை,

    ReplyDelete
    Replies
    1. இத்தினி ஊர்ல எந்தூர்ல இருந்து பொண்ணு கட்டப் போற?:))
      நன்றி ரகு!

      நீ சொல்ற ஊர் பேர் விகுதியிலும், நிறைய மருதம் தான் (வயல் சார்) கவனிச்சீயா?:)

      Delete
  7. மிகவும் உபயோகமான ஆராய்ச்சி பதிவு.......நன்று தொடருங்கள் மேலும்.....

    அன்புடன்

    ReplyDelete
  8. எங்கள் ஊர் (ஈழத்தில்) மரமொன்றின் பெயர் கொண்டு முடிகிறது.
    கட்டைப்பராய், உரும்பராய். தமிழ்நாட்டிலும் திருப்பராய்த்துறை உண்டல்லவா?

    ReplyDelete
    Replies
    1. Dank u Atpu!
      ஆமாம்! திரு+பராய்+துறை; பராய் என்பது புதரில் வளரும் ஒரு வகை மரம்! அந்தப் பட்டைப் பாலை மருந்து காய்ச்ச எடுப்பாங்க!

      Delete
    2. கண்ணபிரான் அற்புதமான தம்பி / அவருக்குள்ளே உள்ள நந்தி சிறப்பாக ஒளிவிடுகிறது / வாழ்கவே வாழ்க உங்கள் உள்நந்தி

      S.Kumar, Tirumular Foundation, & திருமூலர் அறக்கட்டளை

      Delete
  9. இரவி, அண்மையில் கொற்றவை நாவலைப் படித்து முடித்தேன். கன்னி என்றும் அன்னை என்றும் கொற்றவை என்றும் பல உருவில் மக்கள் நடுவே காலம் காலமாக நினைவுக்கு எட்டாத காலம் முதற்கொண்டு அவள் வணங்கப்பட்டாள் என்ற பார்வையைத் தான் அந்த நாவல் தருகிறது. மாயோனும் சேயோனும் முக்கண் முதல்வனும் முதன்மை கொண்ட நாட்களிலும் அன்னை அவளுக்குரிய தனித்த இடத்தில் தொடர்ந்து வணங்கப்பட்டு வந்தாள் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருக குமரன் அண்ணா!

      கொற்றவை பழந்தமிழ்க் கடவுளே!
      பாலை நில எயினர்/ கள்வர் தெய்வமாக முதலில் அடையாளப்படுத்தப் பட்டதால் தான் போலும், அவள் குறித்த சங்க இலக்கியச் சுவடுகள் குறைவாகவே உள்ளன!

      ஆனால் சிலப்பதிகார காலத்தில், இதெல்லாம் கடந்து, மைய நீரோட்டத்துக்கு வந்து விட்டாள்!
      கண்ணகி வழிபாடு முகிழ்த்த பின், சமூகத்தில் பெண் தெய்வ வழிபாடு தனித்த இடத்தையும் பெற்று விட்டது!

      அதற்கு முன்னரே மதுராபுரித் தெய்வம், மணிமேகலாத் தெய்வம் என்று சிறுதெய்வ அளவில் இருந்த பெண்தெய்வ வழிபாடு, அன்னை கண்ணகியால், மிகுந்த மதிப்பும் ஏற்றமும் கண்டது!
      ஆனால் கண்ணகிக்கும் முன்னரே, கொற்றவை = பழந்தமிழ்த் தொன்மம் என்பதில் மறுப்பேயில்லை! என்ன, பாலை நில "நாகரீகமற்ற" எயினர்கள் என்பதால், சங்கப் பாடல்கள் குறைவு; அவ்வளவே!

      மாயோன், சேயோன், கொற்றவை = பழந்தமிழ்த் தொன்மம்!

      Delete
  10. குடி = சான்றோர் சமூகமா? ஒரு சாதி இப்ப தன்னை சான்றோர் சமூகம்ன்னு சொல்லிக்கிறது உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன். :-)

    தூத்துக்குடிக்காரர் சான்றோனா? இப்ப தெரிஞ்சுது அவர் சாதி! :-) ச்ச்ச்சும்ம்மா. :-)

    நீங்க சேந்தன் + இல் = செந்தில்ன்னு சொல்றீங்க; நண்பர் செம்மையான இல் = செந்தில்ன்னு சொல்றாரு. எது சரி?! அது தான் இது; இது தான் அதுன்னு சொல்லிறாதீங்க. :-) (எங்க வீட்டு பேரை மல்லின்னு சொல்லாம இனிமே செந்தில்ன்னு சொல்லணுமோ?!)

    ReplyDelete
    Replies
    1. ஒரு சாதி, தன்னையே, சான்றோர் சமூகம் ன்னு சொல்லிக்குதா? தெரியாதே!

      சான்றோர் = பிறருக்குச் "சான்று" காட்டும்படி வாழ்பவர்கள்
      குடி = சான்றோர் சமூகத்தில், பலரும் இருந்தார்களே! பாணன், பறையன், துடியன் ன்னு புறநானூறு பேசுமே!

      Delete
    2. செந்து (ஜந்து) = உயிர்
      செந்து + இல் = செந்தில் என்று சொல்வாரும் உளர்;
      ஆனா செந்து/ஜந்து என்பது பிற்கால நிகண்டுகள்! ஆனா அதுக்கும் முன்னாடியே தமிழில் செந்தூர் உண்டு! "சீர்கெழு செந்திலும்" என்பது சிலம்பு!

      அவன் செம்மை + இல் = செந்தில் ன்னு சொல்வதும் சரியே!
      நான் சேந்தன் + இல் = செந்தில் ன்னு சொன்னாலும், சேந்தன் என்பதே செம்மை தானே!
      அவன் சொல்வது சரியே!

      Delete
    3. எனக்கு தெரியும் நீங்க 'அது தான் இது; இது தான் அது'ன்னு சொல்லப் போறீங்கன்னு. :-)

      Delete
    4. :)
      அதான் இது; இதான் அது அல்ல!
      ராகவன் சொன்னது தான் சரி!

      Delete
  11. பாளையம் என்ற பெயருக்கு வரலாற்றுக் காரணமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். விஜயநகர/நாயக்கர் ஆட்சிகாலத்தில் கொங்கு நாட்டுப் பக்கம் வந்து தங்கிய வடுகர்கள் கொண்டு வந்த ஊர்ப்பெயர் விகுதி 'பாளையம்' என்று நினைக்கிறேன். சரி தானா? (இந்த எண்ணம் இப்போது படித்துக் கொண்டிருக்கும் அடுத்த நாவலால் விளைந்த எண்ணம்)

    ReplyDelete
    Replies
    1. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையங்கள் பிரபலமாயின என்பது உண்மையே குமரன்!
      ஆனால் பாளையம் = படைவீரர் குடியிருப்பு என்பது நாயக்கர்களுக்கு முன்னமேயே இலக்கிய வழக்கில் உள்ளது!

      கண் வளர் பாளையம் காண எண்ணியே,
      விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்
      - வில்லிபாரதம்

      Delete
  12. கடைசி குன்றக்குடி அடிகளார் பெயரைச் சொல்லி உங்கள் மேன்மையையும் எங்கள் அளவிற்குத் தாழ்ந்து வந்து சொல்லும் நீர்மையையும் ஒரே நேரத்தில் காட்டிவிட்டீர்கள்! நன்றி இரவி! உங்கள் நீர்மை வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஆகா!
      அவரிடம் தொலைபேசிய போது, அவர் தந்த தகவல்கள் நிறைய! அதற்கு நன்றி சொன்னேன்! அவ்வளவே!
      ஒருவரிடம் பேசுவதாலேயே, "மேன்மை" எனக்கு வந்து விடுமா என்ன?:)) நான் ஒங்களை விடச் சிறியேன்!

      பெரியோரை வியத்தலும் இலமே!
      சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

      கல்லூரி விழா நடுவர் அவர்; அவரையே மேடையில் எதிர்த்துப் பேசி, அப்படியல்ல ன்னு தரவுகளைக் காட்டி, அவர் வியந்து போய்ச் சிரித்து, பின்பு நல்ல நட்பானவர்:))
      தமிழ்க் கடவுள் இலக்கியத் தரவுகளை வாசித்து மகிழ்ந்து - ஆதீன மலரிலும் வெளியிட்டுள்ளார்:)

      Delete
    2. ||கல்லூரி விழா நடுவர் அவர்; அவரையே மேடையில் எதிர்த்துப் பேசி, அப்படியல்ல ன்னு தரவுகளைக் காட்டி, அவர் வியந்து போய்ச் சிரித்து, பின்பு நல்ல நட்பானவர்:))
      தமிழ்க் கடவுள் இலக்கியத் தரவுகளை வாசித்து மகிழ்ந்து - ஆதீன மலரிலும் வெளியிட்டுள்ளார்||

      எந்தக் கல்லூரி? எந்த விழா?
      பொதுவாக இலக்கியம்,திருமுறைகளில் பற்றுக் கொண்டவர்களை அவருக்கு நிரம்பப் பிடிக்கும்;பற்றோடு,பழக்கமும் கொண்டவர்களை இன்னும் பிடிக்கும்..

      மக்கள் சிந்தனை படிக்கிறீர்களா? கிடைக்கிறதா அமெரிக்காவில்?

      Delete
  13. எங்க ஊர் பக்கமும் கொஞ்சம் வாங்க!!
    பாடி => காட்பாடி, வாணியம்பாடி...

    ReplyDelete
    Replies
    1. :)
      காட்பாடி ஒங்கூரு மட்டுமல்ல! எங்கூருக்குப் பக்கத்து ஊரும் தான்!:)

      Delete
  14. அம்பாசமுத்திரம், நமனசமுத்திரம் என்ற பெயர்களிலும் ஊர்கள் உள்ளன.சமுத்திரம் எப்படி வந்தது?

    ReplyDelete
    Replies
    1. சமுத்திரம் என்பது பின்னாள் விகுதியாக இருக்கலாம் ஐயா!
      சமுத்திரம் = வடசொல்!
      சமுத்திரம் போல் அகன்ற (அ) உப்பு நீர் மிகுந்த ஊர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்!

      கடல் என்று முடியும் ஊர்களும் உண்டு! நந்திக்கடல், கடல்குடி, திருக்கடல் மல்லை

      Delete
  15. கேஆரெஸ்,

    நல்லதொரு ஆய்வு,

    குமரன் கூட வந்திருக்கார் இதற்கு முன்னரும் எப்போவோ ஊர் ஆராய்ச்சி செய்த நினைவு,

    பாளையம் என்பது நீங்கள் சொன்னது போல அல்ல குமரன் சொல்லியிருப்பது போல தான், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில், உருவாக்கப்பட்ட வருவாய் வட்டங்கள் அவை ,தமிழகம் எங்கும் பாளையம் விகுதியில் ஊர் உண்டு, வட மொழி பாலிகார் என்பதே பாளையக்காரர் ஆகி அவர் பொறுப்பில் இருந்த ஊருக்கும் பேராகியது.ஒவ்வொரு பாளையத்துக்கும் வரி வசூலிக்க ஒரு பாளையக்காரர். வீர பாண்டியக்கட்ட பொம்மனும் ஒரு பாளையக்காரர்.

    கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் அங்குசெட்டிப்பாளையம் என ஊர் உண்டு.

    -----
    //நத்தம் = வாழை
    பழம் + கா + நத்தம் = பழங்கள் இருக்கும் சோலை(கா), அதிலும் குறிப்பாக வாழை!:) மருதம் ன்னு பொருள் பொருந்துது பார்த்தீங்களா?:)

    நத்தம் = நத்தை/சிப்பி என்ற பொருளும் உண்டு! அப்போ நெய்தல் நிலமாகி விடும் போல!//

    நத்தம்னா வாழையா புதிய தகவ,ஆனால் ஊருக்கு நீங்க சொன்னது வராது.

    வருவாய் துறை நிலப்பிரிப்புல வரி நிர்ணயம் செய்ய நிலங்களை வகைப்படுத்துவார்கள் அதில் நத்தம் பொறம்ம்போக்கு என நில வகை இருக்கும், அதுக்கு நிலவரி ,பட்டா கிடையாது,ஏன்?

    நத்தம் என்பது ஊருக்கு அருகே வயலுக்கும், குடியிருப்புகளுக்கும் இடையே இருக்கும் பொதுவான மேய்ச்சல் நிலம், அங்கே நிறந்தரமாக விவசாயம் செய்ய மாட்டார்கள்.பெரும்பாலும் மேய்ச்சல் நிலமாக இருக்கும். நல்ல மழைக்கிடைத்து தண்ணீர் கிடைக்கும் காலத்தில் மட்டும் விவசாயம் செய்துக்கொள்வார்கள், எனவே நிலத்தில் இருந்து நிலையான வரி வாங்குவது கடினம் ,எனவே அது பொது நிலமாக கிடக்கும் ,வரி வசூலிக்க மாட்டார்கள்.நில உரிமையாளர் என யாரும் இல்லை, அரசரே உரிமையாளர். இன்னும் சொல்லப்போனால் எல்ல நிலமும் அரசுக்கே வரிக்கொடுத்து பயன்ப்படுத்த தான் அக்காலத்தில் உரிமை உண்டு.

    இப்போதும் நத்தம் புறம்ம்போக்கு இடங்கள் அரசு இடங்களே.

    நத்தம் -> நத்து- நகருதல் ,தள்ளுதல், நகர்ந்து செல்வதால் நத்தை.நத்தம் பொறம்போக்கு நிலங்களில் சமயன்ங்களில் விவசாயம் ,சமயங்களில் சும்மாகிடக்கும், அதாவது தேவைக்கு விவசாயம் நகர்ந்து உள்ளே வரும் ஒரு பஃப்ஃபர் நிலம் அதான் நத்தம் நிலம்.

    பழம்னா ஃப்ருட் மட்டும் இல்லை பழம் = பழமையான ,வ்யதான என்றும் பொருள், எனவே பழம்+கா+நத்தம் , அதாவது நத்தம் நிலத்தில் இருக்கும் பழைய சோலை :-))

    உடனே வாழைப்பழம் விக்க போயிட்டார் கேஆரெஸ் :-))

    ----
    திருச்சீறலைவாய் = திருச்செந்தூர் ஆயிற்று , சென்றலை ,செல்லும் அலைனும் சொல்வாங்க,எனவெ சென்றலை ,செந்தூரில் இருந்து செந்தில் வந்தது,செம்மை ,கறுமை எல்லாம் இல்லைனு கேள்விப்பட்டிருக்கிறேன்.

    செந்தில் நாதன் என்றால் அலைகளின் தலைவன், கடலின் தலைவன், என வரலாம் ஏன் எனில் சூரபத்மனை அழிக்க கடலுக்கு தானே முருகன் போனார்,அப்போ முருகனின் சேனைக்கு கடல் அலையும் கட்டுப்பட்டதாக உவமை சொல்லி இருக்கலாம்.

    கரிகாலனின் கடற்படைக்கு கடல் அலையும் ,காற்றும் கட்டுப்படும் என்பது போல சிலப்பதிகாரத்தில் பாடல் உண்டு,அவ்ளோ பெரிய கடற்படை உடையவ்னு சொல்ல அப்படி. இப்போ முழுசா நினைவில்லை.

    இன்னும் நிறைய இருக்கு அப்பாலிக்கா வரேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வவ்வால், பல சுவையான தகவல்களுக்கு!

      //வட மொழி பாலிகார் என்பதே பாளையக்காரர் ஆகி அவர் பொறுப்பில் இருந்த ஊருக்கும் பேராகியது//

      தெரியவில்லை! பாளையக்காரர் அப்படி ஆகி இருக்கலாம்!
      ஆனால், பாளையம் = தமிழ்ச் சொல்லே!

      பாளை = குதிரைப் படைகளில் குளம்புக்குப் பயன்படுத்துவது...
      பாளையம் = போர்வீரர்கள் படைவீடு என்றே இலக்கியங்கள் பேசும்! குமரனுக்கும் சொல்லியுள்ளேன் பாருங்க!

      கண் வளர் பாளையம் காண எண்ணியே,
      விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்
      - வில்லிபாரதம்
      ---------

      //பழம் = பழமையான ,வயதான என்றும் பொருள், எனவே பழம்+கா+நத்தம் , அதாவது நத்தம் நிலத்தில் இருக்கும் பழைய சோலை
      உடனே வாழைப்பழம் விக்க போயிட்டார் கேஆரெஸ் :-))//

      ha ha ha!
      மன்னிக்கவும்! நன்றி விளக்கத்துக்கு!
      ரஜினி படத்தில் கபாலி வாழைப்பழம் வித்த கதை தான் டக்குன்னு ஞாபகம் வந்துச்சி! சிரிச்சிட்டேன்!:)

      Delete
    2. //திருச்சீறலைவாய் = திருச்செந்தூர் ஆயிற்று//

      இதை மட்டும் மறுக்கிறேன்!
      சீரலைவாய்! ற கரம் அல்ல! ரகரம்!
      சீர் + அலை + வாய் = அலை வாயிலில் உள்ள சீர் மிக்க நகரம்!
      இதுவும் ஒரு பேரு! ஆனா செந்தூர் என்பது இன்னொரு பேரு!

      //சென்றலை = செந்தூர்//

      கற்பனை நல்லா இருக்கு:)
      சீறலை=சென்றலை=செந்தூர்:))

      ஆனா, சென்றலை என்ற பெயர் செந்தூருக்கு எங்கும் சொல்லப்படவில்லை!
      செந்தூர் ன்னு தூய தமிழில், இளங்கோ அடிகளே சொல்லுறாரு!

      //முருகனின் சேனைக்கு கடல் அலையும் கட்டுப்பட்டதாக உவமை சொல்லி இருக்கலாம்//

      :)
      No Puraanams:)
      BTW, சூரசங்காரம் நடந்தது செந்தூர் அல்ல! ஈழத்தில் ஏமகூடம்! (கந்தபுராணம் - யுத்த காண்டம்)

      Delete
    3. கேஆரெஸ்,

      //கண் வளர் பாளையம் காண எண்ணியே,
      விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்
      - வில்லிபாரதம்//

      வில்லிப்பாரதம் எழுதிய காலம் 17 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆட்சிக்கு அதுக்கு முன்னரே வந்தாச்சு.

      அப்புறம் பாளையம் என்ற ஊரெல்லம் கொங்கு மண்டலம்னும் சொல்லுறிங்க அப்படியும் அல்ல,

      தமிழகம் முழுக்கவே உண்டு, கடலூர் மாவட்டத்தில் சேடப்பாளையம், அங்கு செட்டிப்பாளையம்,சாணார் பாளையம்,புதுப்பாளையம், பாளைய நல்லூர் என ஊர்களும் , திருவள்ளூர் கிட்டெ பெரியப்பாளையம் எனவும் ஊர் இருக்கு.

      ஊர் , புரி ,புரம் எல்லாம் இந்தியா முழுக்கவே இருக்கு, புரி என்பது வடமொழி தமிழில் புரமாகி இருக்க வேண்டும்.

      டெல்லில சாணக்கியபுரினு இடம் இருக்கு,

      திருப்பூர் தமிழ் நாடு ஜெய்ப்பூர் ,நாக்பூர் எல்லாம் அப்போ தமிழா :-))

      ---

      சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடக்கவில்லை ஆனால் அங்கு தானே முருகன் படைகளுடன் முகாமிட்டது. வதம் முடிந்து கோபம் தணியாமல் திருத்தணி மலையில் வந்து குந்தி வேர்த்தாராம் ,அங்கே தான் கோவம் தணிந்தது அதனால் செறுத்தணிகை என சொல்லப்பட்டது திருத்தணிகைனு மாறிப்போச்சு சொல்றாங்க.

      -----

      பாடி வீடுனு சொலுறிங்க, அதனால் பாடினா ஆயர்குலம் வசித்த ஊர் என வரும்னு சொல்ல முடியாது,

      தரங்கம்பாடி கடற்கர ஊர்,

      தரங்கம்= அலை, பாடி =பாடுதல் ,எனவே அலை ஓசை பாட்டு மாதிரி கேட்கும் ஊர் தரங்கம் பாடியாம்.

      எனவே பாடலுக்கு பெயர் பெற்ற ஒரு தலமாகவும் பாடி என வரும் ஊர்கள் இருக்கலாம்,

      குறிஞ்சிப்பாடி, சாத்தப்பாடி ,காட்பாடி எல்லாம் ஏதேனும் திணையில் பாடல் பெற்ற தலமாக இருக்க கூடும்.

      குடி என்றால் சான்றோன் என வருமா நல் குடினு சேர்த்துக்கிட்டா வரும், குடி னா வசிப்பது, சிட்டிசன்=குடிமகன், ,மக்கள் , வசிக்கும் மக்கள் எனவும் மாறிக்கொள்ளும்,

      டெமாக்ரடிக்=குடியரசு போல.

      குடிசை வசிப்பிடம் ,சான்றோர் இடம் ஆகிடுமா ?

      தூத்துக்குடிக்கு ஒருவர் சொன்ன விளக்கம் என்னவெனில், ஆதியில் அங்கே குடிநீர் இல்லையாம், மக்கள் கடல் கரையோரத்தில் சிறிய மணற்கேணி போல வெட்டி அதில் ஊறும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக முகர்ந்து எடுப்பார்களாம், தூர்த்தல் என்றால் மொள்ளுதலாம்.

      கடற்கரைல நல்ல தண்ணி வருமானு கேட்காதிங்க வரும் அதுக்கு பேரு அக்குஃபையர் ,மெரினா பீச்சில் கூட பள்ளம் வெட்டி நல்ல தண்ணீர் எடுப்பார்கள்.

      ஊர்ப்பேரெல்லாம் பலமொழியில இருந்தும் கலந்துக்கட்டி வந்திருக்கும் என நினைக்கிறேன்.

      ஹாமில்டன் பிரிட்ஜ் ஐ அம்பட்டன் வராவதி ஆக்கினாப்போல தமிழ் ஆக்கிடுறாங்க.

      சென்னையில இருக்க பார்க் ரெயில்வே ஸ்டேஷன் ஐ தமிழில் பூங்கா நிலையம்னு எழுதி வச்சு இருப்பாங்க. ஆனா அது பூங்காவினால் வந்த பெயர் அல்ல ஒரு வெள்ளைக்கார அதிகாரிப்பேரு பார்க், அவர் கமிஷ்னரோ ,மேயரோ தெரியலை. இது போல தமிழாக்கி ,அதுக்கு சங்க இலக்கிய தரவுகளும் காட்டலாம் :-))

      நான் தமிழ் இல்லைனு சொல்றதா நினைச்சுக்காதிங்க, உண்மையான மூலக்காரணம் தெரியனும், நடுவில மாறிய பெயரையே தமிழ்னு சொல்லி இதான் தமிழ்னு சொல்லிக்க வேண்டாம் என்றே சொல்கிறேன்.

      திருஆவினன்குடி என்ற பெயர் எப்போ பழனி ஆச்சு, ஏன் ? மலையில் பழமையான வயல் இருக்கா?

      Delete
    4. //வில்லிப்பாரதம் எழுதிய காலம் 17 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆட்சிக்கு அதுக்கு முன்னரே வந்தாச்சு//

      Nopes
      வில்லிபாரதம் - அருணகிரி ஒரே காலகட்டம் = 14-15 CE
      மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் = பிற்பாடு
      திருமலை நாயக்கர் = 1623

      பாளையம் எல்லாம் கோவைப் பக்கம் ன்னு சொல்லலை; பெரும்பான்மை ன்னு சொன்னேன்!
      சென்னைக்கு அருகே பெரியபாளையம் அம்மன் கோயிலுக்கு எத்தனை முறை கூப்பிட்டுப் போய் மொட்டை அடிச்சிருக்காக வீட்டுல:))
      ----

      //ஜெய்ப்பூர் ,நாக்பூர் எல்லாம் அப்போ தமிழா :-))//

      ஜெயபுரி, நாகபுரி/ ஜெய்ப்பூர், நாக்பூர் = தமிழ் அல்ல!
      ஆனால் திரு-ஆரூர், மயில்-ஆர்ப்பூர் = தமிழே!

      தமிழில் உள்ள பூர்/ ஊர் வேறு; ஜெய்ப்பூர் வேறு!
      வேறொரு மொழியில், வேறு மாதிரி புழங்குவதால், அத்தனைக்கும் ஒரே மூலம் தான் என்று நீங்கள் Stretch மட்டுமே செய்கிறீர்கள்! அப்படி அல்ல!

      இடைச் சங்கம் இருந்த ஊர் = கபாடபுரம்
      மதுரை = கடைச்சங்கம்
      கபாடபுரம் என்ன "புரி"யில் இருந்து வந்ததா? சாணக்கியபுரி, ஜனக்புரி??:))

      வடக்கிலும் மதுரா உண்டு!
      அந்த மதுரா வேற; இந்த மதுரை வேற!
      புரம் = தமிழ்ச் சொல்! அரண்-காவலை உடைய ஊர் என்பது பொருள்!

      Delete
    5. //திருஆவினன்குடி என்ற பெயர் எப்போ பழனி ஆச்சு, ஏன் ? மலையில் பழமையான வயல் இருக்கா?//

      மலையின் கீழ் வயல் இருக்கு! வயல் சூழ்ந்த மலை!
      சாமிமலை ன்னு கீழே இருக்கும் ஊரையும் சேர்த்துச் சொல்லுறது வழக்கம்! ஊரே மலை மேல் இருக்கா? ன்னா கேட்பீங்க??
      அதே போல் பழனி என்பது, மலைக்கும் ஆகி வருகிறது! பழனியில் உள்ள மலை = பழனி மலை!

      திரு ஆவி நன் குடி = கீழுள்ள தலமே! பழனி/கழனி என்பது வயலே!
      -----------

      பாடி = பாடி வீடு அமைத்து தங்குதல் என்று தான் சொல்லியுள்ளேன்!
      முல்லை நிலத்தில் இது ஆநிரை காக்க!
      வேறு நிலங்களிலும் பாடி வீடுகள் உண்டு!

      //குறிஞ்சிப்பாடி, சாத்தப்பாடி ,காட்பாடி எல்லாம் ஏதேனும் திணையில் பாடல் பெற்ற தலமாக இருக்க கூடும்//
      - காட்பாடி = என்னென்ன பாடல் பெற்ற தலம் ன்னு சொல்லுங்க பார்ப்போம்:)
      ------------

      குடி = சான்றோர் தங்கிய குடி ன்னு பழங்காலப் பொருள்
      குடில்/ குடிசை என்பதும் அப்படியே!
      அது வெறுமனே குடி-இருப்பு = தங்குதல் ன்னு காலப் போக்கில் மாறலாம்; நான் சொல்லியுள்ளது, அனைத்துப் பொருள்களும் சேர்த்தே!
      ------------

      Park Station என்பதைப் பூங்கா என்று ஆக்கியது தற்காலக் குழப்படி! அமட்டன் வாராவதி போல:))
      ஆனால் அதற்காக, அதை ஒன்றையே வைத்து, அரங்கம் = தமிழல்ல! ரங்கம் என்பதையெல்லாம் ஏற்க மாட்டேன்:))
      ஏன்-ன்னா அரங்கம், பல நூற்றாண்டுகளாக, இலக்கியம் + வாழ்வில் பயின்று வருவது! யாரும் Park Stationஐ மாற்றியது போல் அல்ல!
      ------------

      //நான் தமிழ் இல்லைனு சொல்றதா நினைச்சுக்காதிங்க, உண்மையான மூலக்காரணம் தெரியனும்//

      :))
      உண்மையான மூல காரணம் தெரியணும்-ன்னா ஆய்வு செய்யணும்!
      ஆனால், வேறு இடத்தில் லாகூர், கோலாப்பூர் என்று இருப்பதாலேயே, திரு-ஆர்-ஊர் என்பதும் பூர்/ ஊர்/ புரி/ பாத் இல் இருந்து வந்திருக்க"லாம்" என்ற OverStretch களை ஏற்க முடியாது!
      ஊர் = பழம் பெரும் தமிழ்ப் பெயர்! (இங்கு)

      Delete
    6. கேஆரெஸ்,

      //Nopes
      வில்லிபாரதம் - அருணகிரி ஒரே காலகட்டம் = 14-15 CE
      மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் = பிற்பாடு
      திருமலை நாயக்கர் = 1623//

      திருமலை நாயக்கர் எல்லாம் பின்னாடி வந்தவர்கள்,அதற்காக நாயக்கர்களே பின்னர் வந்தவங்க ஆயிடுவங்களா,

      கி.பி 1377 இல் குமார கம்பணன் என்ற விஜயநகர மன்னர் மதுரைக்கு படை எடுத்து அலாவுதின் கில்ஜியின் படையை வென்று ,மதுரையையும் மொத்த தமிழகத்தையும் கைப்பற்றினார் என்பது வரலாறு,பின்னரே பாளையங்கள் வந்தன.

      நீங்க சொன்ன காலம் ஒத்து வருதான்னு நீங்களே சர்ப்பார்த்துக்கொள்ளவும்.

      மற்றவை எல்லாம் வழக்கில் ,இங்கும் அங்கும் சென்று இருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஏன் எனில் களப்பிறர் காலத்தில் வட மொழி தமிழில் கலந்துவிட்டது. சிலப்பதிகாரம் எல்லாம் மணிப்பிரவாள நடையே.

      நன்றி!

      Delete
    7. //கி.பி 1377 இல் குமார கம்பணன்//

      1377 CE-க்கு முன்னமேயே, பதினெண்கீழ்க் கணக்கு நூலிலும், "பாளையம்" ன்னு சொல்லு வருதே! அதற்கு என்ன சொல்லுவீர்கள்?:)

      //மற்றவை எல்லாம் வழக்கில் ,இங்கும் அங்கும் சென்று இருக்கலாம் என்றே நினைக்கிறேன்//

      இது தான் பிரச்சனை! நீங்கள் "நினைக்கிறேன்" என்று தான் சொல்கிறீர்கள்; ஆனால் அது தரவு ஆகாது!
      அரங்கம் = தீவே என்பதை Google Map-இல் பார்த்தீர்கள் அல்லவா? Even your Sri"ranga"patna!:)

      //ஏன் எனில் களப்பிறர் காலத்தில் வட மொழி தமிழில் கலந்துவிட்டது//

      களப்பிரர் காலத்தில் சமணம் தழைத்தோங்கியது! சாதிப் பாகுபாடுகள் அரசில் ஊக்குவிக்கப்படவில்லை!
      சமணர்கள் தங்கள் சமய நூல்களை வேண்டுமானால் ஸ்ரீபுராணம் என்று மணிப்பிரவாளமாக எழுதினார்களே தவிர, தமிழ் இலக்கியத்தில், நல்ல தமிழையே கையாண்டார்கள்...

      பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பலவும் = களப்பிரர் காலமே! ஒன்று கூட மணிப்பிரவாளத்தில்-வடமொழிச் சொல்லோடு இருக்காது!

      பண்பாட்டுக் கலப்புகள், கடைச்சங்க காலத்திலேயே கலக்கத் துவங்கி விட்டது; எனினும் தமிழ் இலக்கியம், நல்ல தமிழையே பலகாலம் கையாண்டு வந்துள்ளது!
      இளங்கோ காட்டும் "அரங்கம்" என்னும் சொல் = தமிழே!

      //சிலப்பதிகாரம் எல்லாம் மணிப்பிரவாள நடையே//

      I object to this sweeping statement:)
      நெஞ்சை அள்ளும் சிலம்பு = மணிப்பிராவளம் அல்ல! அல்ல! அல்ல!

      Delete
    8. வவ்வால்,
      மிக்க நன்றி உங்கள் சுவையான பின்னூட்டங்களுக்கு; நல்ல உரையாடல்;
      பழங்+கா+நத்தம் = நீங்கள் சொல்லியதே தான்; ஏற்றுத் திருத்திக் கொண்டேன்:)

      இதர சொற்களான அரங்கம், பாளையம் போன்றவை தமிழ்ச் சொற்களே என்பதைத் தமிழ் இலக்கியங்கள் கொண்டு நிறுவ முடியும்; சில நிறுவியும் உள்ளேன்;

      இதர மாநிலங்களில், அதே சாயல் கொண்ட விகுதிகள் இருக்கலாம்; ஆனால் பூர் தான் தமிழில் புரம் ஆயிற்று என்பதை மட்டுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனெனின், அந்த "பூர்" தோன்றுவதற்கு முன்னே, தமிழில் பல புரங்கள் இருந்தன; அதுவே நான் சொல்ல விழைவது

      வெவ்வேறு மொழிகளில், ஓசையில் சில சொற்கள், ஒன்றே போல் இருக்கலாம்!
      இந்தியில் = முருகி என்றால் கோழி
      உடனே கோழிக் கொடியோன் = முருகன் = அதான் இந்தியில் கோழிக்கு முருகன் பேரை வச்சாங்க-ன்னா சொல்லுவோம்?:))

      அரங்கம், ஆதி போன்ற தமிழ்ச் சொற்கள் பலவும், காலத்தால் மிக முந்தியவை; அவற்றைக் கடன் வாங்கப்பட்ட சொற்கள் என்பதை நான் ஒப்பவே மாட்டேன்:))
      தங்கள் இயைந்த புரிதலுக்கு மிக்க நன்றி:))

      Delete
    9. கேஆரெஸ்,

      நன்றி!

      நான் நினைத்தது என்னவெனில் இந்தியா முழுக்க சில கலாச்சார ,பழக்க வழக்க இணைப்பு இருந்து அதனால் இப்படி ஒரு ஒத்த பெயர்கள் வழங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில். ஏன் எனில் சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என ஒரு கூற்று உண்டு. மேலும் அக்காலத்தில் விந்திய -சாத்புரா மலைகளுக்கு இந்த பக்கம் வரையில் தென்னாடு தான்.

      இமயத்தில் கொடி நாட்டியவர்கல் என தமிழக மன்னர்களுக்கு பெருமை உண்டு எனவே வடக்கும் தெற்கும் கைக்கோர்த்திருக்க பல வாய்ப்புகள் இருக்கு அதன் அடிப்படையில் மொழி பரிமாற்றம் கலப்பு ஆகி இருக்கலாம் என்பதே சொல்ல வந்தது.

      இவ்வளவு ஏன் இராஜ ராஜன், இராஜேந்திர சோழன் காலத்தில் தற்காலத்திய மும்பையின் கல்யாண் வரைக்கும் ஆண்டு இருக்கிறார்கள்.சாலுக்கிய இளவரசர்களே மருமகன்கள், பின்னால் வந்த சோழர்கள் எல்லாம் சாலுக்கிய சோழர்கள் எனப்பட்டார்கள்.

      பல்லவர்கள் நந்திவர்மன் காலத்திய செப்பேடுகளில் எல்லாம் வடமொழி இருக்கு அது கி.பி 650 ஆகும்.

      இப்படி பல செப்பேடுகள்,கல்வெட்டுகளில் வடமொழி கலப்பு இருக்கும் போது இலக்கியத்திலும் இருக்கலாம் தானே.
      எனக்கு இருந்த சந்தேகங்களையும்,கருத்துக்களையுமே பகிர்ந்து கொண்டேன், மற்றப்படி இதில் பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது.

      விரிவாகவும் பொறுமையாகவும் உரையாடியதற்கு நன்றி!

      //இது தான் பிரச்சனை! நீங்கள் "நினைக்கிறேன்" என்று தான் சொல்கிறீர்கள்; ஆனால் அது தரவு ஆகாது!
      அரங்கம் = தீவே என்பதை Google Map-இல் பார்த்தீர்கள் அல்லவா? Even your Sri"ranga"patna!:)//

      நான் நினைக்கிறேன் என சொல்லக்காரணம் ,நமக்கு அந்த அளவுக்கு தமிழ் அறிவு இல்லை ,எல்லாம் கேள்வி ஞானம் தான்,இல்லாதப்போ முன்னெச்சரிக்கையாக நினைக்கிறேன் சொல்லிக்கணும் :-))

      ஶ்ரீரங்க பட்டணம், திப்பு வசந்த மாளிகை எல்லாம் போய் இருக்கேன் ,அங்கே ஆறு சுற்றிக்கொண்டு ஓடுவது என் கண்ணுக்கு தெரியவில்லை அதனால் அப்படி கேட்டேன்.ஆறு அங்கு இடப்பக்கமாக ஒரு பக்கம் ஓடுகிறது. இன்னொறு பக்கம் ஓடுகிறது என்பது நீங்கள் சொல்லி தான் தெரிகிறது, அடுத்த முறை போனால் பார்த்து விடுகிறேன்.

      Delete
    10. ’விளை’ எனும் பெயரில் ஊர்கள்,
      நாஞ்சில் நாட்டில் - திசையன் விளை,
      களியக்கா விளை.

      ஏரியின் பெயரில் -
      வரகனேரி,சீவலப்பேரேரி, ஆறுமுகனேரி,
      நான்குநேரி

      பெரியபாளையம் சென்னைக்கருகில்


      தேவ்

      Delete
    11. சிலப்பதிகாரம் - அதிகாரம் வடசொல்.
      சிலம்பில் ‘கஞ்சகாரர்’ காம்ஸ்யகார எனும் வடசொல் திரிபு;சங்க இலக்கியத்தைக்
      காட்டிலும் சிலம்பில் வடசொற்கள் மிகுதி. முழு மணிப்ரவாளம் என்று சொல்வது
      நோக்கமன்று

      தேவ்

      Delete
    12. சிலப்பதிகாரத்தில் உள்ள "அதிகாரம்" = வடசொல் அன்று!

      தொல்காப்பியத்திலும் எழுத்து அதிகாரம்/ சொல் அதிகாரம்/ பொருள் அதிகாரம் உண்டு!
      குறளிலும், 133 அதிகாரங்கள் உண்டு!

      தொல்காப்பியம்: தமிழ்க் "காப்பியம்" என்பதே சம்ஸ்கிருத "காவியம்" தான்-ன்னு பேசற பாஷாபிமானிகளும் நம்மிடையே உண்டு:)

      //முழு மணிப்ரவாளம் என்று சொல்வது நோக்கமன்று//

      தாங்கள் அப்படிப்பட்டவர் அல்ல -ன்னு எனக்குத் தெரியும் தேவ் ஐயா!
      நலமா ஐயா?

      என்ன திடீர்-ன்னு பந்தலில் பழைய பதிவெல்லாம் தேடிப் பின்னூட்டம்?
      நானே பெரும் இடைவெளிக்குப் பிறகு இப்ப தான் வந்தேன் என்பது வேறு விடயம்:)

      Delete
    13. இப்பதான் உங்க ஊருக்கு [Fremont]வந்தேன். பெண்ணரசியில் இல்லத்தில் வாசம்;முழு ஓய்வு, மாடியில் அறையில், மடிக்கணினியுடன் அமர்த்தி விட்டாள்.ஒவ்வொன்றாக விட்டதைப் பிடிக்கிறேன்

      Delete
    14. >>>> தமிழ்க் "காப்பியம்" என்பதே சம்ஸ்கிருத "காவியம்" தான்-ன்னு பேசற
      பாஷாபிமானிகளும் நம்மிடையே உண்டு:) <<<


      ’காவ்ய’ [Skt] பாலி மொழியில் ‘காப்ப’ என வடிவு பெற்றுத்
      தமிழில் ’காப்பியம்’ என ஆனது. பவுத்தச் சார்புடைய சொல்.

      Kabba
      Kabba (nt.) [cp. Sk. kāvya] a poem, poetical composition,
      song, ballad in ˚ŋ karoti to compose a song J vi.410;


      http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=pali&query=kabba&matchtype=exact&display=utf8


      திவ்ய -> திப்ப
      தமிழில் ’திப்பியம்’ ஆகும்.
      பவுத்த நூலான மணிமேகலையில் -

      பையர வல்குல் பலர்பசி களையக்
      கையி லேந்திய பாத்திரம் திப்பியம்*
      முத்தை முதல்வி அடிபிழைத் தாயெனச்
      சித்திர முரைத்த இதூஉந் திப்பியம்*
      இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின்....

      காப்பியம் பெருவழக்காகி விட்டது;
      திப்பியம் அவ்வாறு ஆகவில்லை.

      பாலியின் அவஹத்தமான வங்க மொழியில்
      ‘வ’ ஒலிப்புக் கிடையாது,’ba' மட்டுமே

      Delete
    15. //இப்பதான் உங்க ஊருக்கு [Fremont] வந்தேன்//

      நல்வரவு! நல்வரவு!:)

      //பெண்ணரசியில் இல்லத்தில் வாசம்; முழு ஓய்வு,
      மாடியில் அறையில், மடிக்கணினியுடன் அமர்த்தி விட்டாள். ஒவ்வொன்றாக விட்டதைப் பிடிக்கிறேன்//

      அருமை! வாழ்க!
      நல்ல ஓய்வும், அதே சமயம், மகிழ்வும் கொள்ள என் வாழ்த்துக்கள்!

      மனத்துக்குப் பிடித்தமானவர்களோடு, "அகலாது-அணுகாது", அன்பே நிறைந்து, உடன் இருந்து வாழ்வது ஒரு வரம்!
      அதை, எந்தை திருவேங்கடமுடையானும், என் காதல் முருகனும் தங்களுக்கு மட்டின்றி அருளட்டும்!

      டாய் முருகா, தேவ் சாரைக் கவனிச்சிக்கோ! நான் சொல்லுறது காதுல விழுது-ல்ல?:))

      Delete
    16. //’காவ்ய’ [Skt] பாலி மொழியில் ‘காப்ப’ என வடிவு பெற்றுத்
      தமிழில் ’காப்பியம்’ என ஆனது. பவுத்தச் சார்புடைய சொல்//

      எனக்கு, இதில் மாற்றுக் கருத்து உண்டு!
      "காவ்ய" என்பது அங்கு இருக்கலாம்!
      ஆனால் அது தான் தமிழில் காப்பியம் ஆனது, என்பதற்கு நேரடித் தரவு ஒன்றுமில்லை!

      தங்கள் சுட்டிகள் எல்லாம், அங்குள்ள பொருள் சொல்கின்றனவே அன்றி,
      அந்தப் பொருள் தான், தமிழில் வழங்கலானது என்பதற்கு நேரடித் தரவு எதுவும் தரவில்லையே!

      காப்பியம்
      காப்பியாறு
      காப்பியக்குடி
      பல்காப்பியனார்
      காப்பியாற்றுக் காப்பியனார்
      -ன்னு சங்கத் தமிழில் நிறையவே காப்பியம் உண்டு!

      காப்பு + இயம் = காப்பியம்!
      (காவ்யா திரிபு அல்ல)

      சீவக சிந்தாமணியில் காப்பியம் = Epic என்ற பொருளில் வருது!
      = கருதுவது அங்கு ஒன்று உண்டோ காப்பியக் கவிகள்!

      மணிமேகலையில் கூடப் புழங்கும் சொல் தான்!
      = நாடகக் காப்பியம் நன்னூல் நுனிப்போர்

      தொல்காப்பியர் = ஆதித் தமிழ்த் தந்தை!
      அவர் பெயரில் உள்ள காப்பியம், "காவ்யா" -வில் இருந்து வந்தது என்பது சிலருக்கு உவப்பாக இருக்கலாம்! எனக்கு உவப்பில்லை! மற்றவர் உவப்புக்குத் தரவும் இல்லை!

      ஒரு சொல், பிற மொழிகளிலும் ஒன்றே போல் தோற்றமளிக்கலாம்!
      முருகி = கோழி (இந்தியில்)
      உடனே, கோழிக் கொடியோன் முருகன் தான் = இந்தியில் முருகி ஆனது;
      பாருங்கள் முருகனின் பெருமையை-ன்னுல்லாம் நான் பெருமை பீத்த மாட்டேன்:))

      Delete
    17. ஆனால் தமிழ் முருகன் என்பதே -> சம்ஸ்கிருத ம்ருகி (Hunter) -இல் இருந்து வந்தது தான் -ன்னு சொல்லிக்குவாரு Dr Nagaswamy!

      இவரு தொல்பொருள் ஆய்வுத் துறையில் முன்னாள் தலைவரு; Academic Influence மிக்கவரு!
      ஆனால் அதைத் தன் தனிப்பட்ட மனப் போக்குக்கும், இனப் போக்குக்கும், பயன்படுத்திக் கொள்ளும் அவலப் போக்கு = இந்திய நாட்டின் சாபக்கேடு:(

      *உதட்டில் தமிழ் இருக்கும்!
      *உள்ளத்தில் ஆழ்ந்து இருப்பது சம்ஸ்கிருதம்!

      இருக்கட்டும் தப்பில்லை!
      வடமொழி மிக நல்ல மொழி தான்! = செம்மொழி
      வடசொற்கள் பிரபலம் ஆகட்டும்;
      ஆனா, எங்கு ஆகணுமோ, அங்கு ஆகணும்!

      சம்ஸ்கிருதம் ஓங்கிய பாடாலிபுத்ரம் (எ) Patna –வில், “மங்களாம்பாள், கமலாம்பாள், செளந்தரபுரீஸ்வரி” –ன்னு பேரு பிரபலம் ஆவதில் தப்பேயில்லை!
      ஆனா, உண்மை என்ன-ன்னா, ) Patna –விலேயே அப்பிடியெல்லாம் இன்னிக்கி பேரு வைக்க முடியாது:)
      சந்தோஷி மாதா, ஜீவன் கி மாதா-ன்னு இந்தி கலந்தே வைக்க முடியும்:))

      ஆனா,
      தமிழ் கொஞ்சும் அப்பர் பெருமான் வைப்புத் தலம்/ தேவாரத் தலம்; இங்க மட்டும் “அபயாம்பிகா” –ன்னு ஆயிருச்சி!:(
      மாத்துனது தான் மாத்துனாங்களே, ஒழுங்கா மாத்தப்பிடாதா?

      “அஞ்-சொலாள்” (அழகிய சொல்லாள்);
      அதை “அஞ்சலாள் (அஞ்சாதே) –ன்னு நினைச்சிக்கிட்டாங்க; Literalஆ “அபயாம்பாள்”-ன்னு மாத்தீட்டாங்க:(
      இதே போல திரு-மரைக்-காடு (மான் வாழ் காடு); அதைத் திரு-மறைக்-காடு –ன்னு நினைச்சிக்கிட்டு, வேதாரண்யம் –ன்னு ஆகிப் போச்சி; அதுக்குக் கதையும் கட்டியாச்சி:(
      ——

      தப்பா எடுத்துக்க வேணாம்; யாரையும் “பழிக்கும்” சுபாவம் எனக்குப் பிறவியிலேயே இல்லை!
      பெயர்ச் சொல்லில் கிரந்தம் தவிர்க்கக் கூடாது; ஸ்ரீதர் –ங்கிற ஒருத்தர் பெயருக்கு மதிப்பளிக்கணும் –ன்னு நினைக்கிறவன் தான்;

      =ஆனா, ஸ்ரீதரை, சிறீதர் –ன்னு யாராச்சும் எழுதினாக் கோபம் வருகுது அல்லவா?
      =அதே போலத் தானே, அஞ்-சொலாளை, அபயாம்பாள்-ன்னு மாத்தினா வரும்? (காலங் காலமா)
      =இந்த இரு-வழி நியாயம், two way truth மட்டும் நமக்குப் புரிவதே இல்லை:( பகை பாராட்டி விடுகிறோம்!

      தமிழ் மொழி, தனித்து இயங்க வல்லது தான்; ஆனா பண்பாடுகள் சற்றுக் கலக்கத் தான் செய்யும்!
      ஆனா, அது மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கலா இருக்கணும்; முதலுக்கே மோசம் போயீறக் கூடாது!

      =பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
      சோறு=சாதம், சொல்=வார்த்தை, இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்

      =இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன!
      பண்பாடு=கலாச்சாரம்! எடுத்துக்காட்டு=உதாரணம்

      =ஒருபுடை உருவகம்= இன்னிக்கி “ஏக”தேச உருவகம்-ன்னு தான் இருக்கு பாடநூலில் கூட;
      Does Sanskrit Grammar have ஒன்றிரண்டு? Why shd Tamizh Grammar have ek & ekam? No answer:( மனசாட்சி is the answer

      Delete
  16. அருமையான ஆராய்ச்சி!!!!

    வேள்விகள் ஏகத்துக்கும் நடந்த வேள்விச்சேரிதான் வேளச்சேரி ஆச்சாம்.

    Mango ஓக்கே

    MaadhuLampazham ஒய்? ஒய்? யாரு உரிச்சு முத்தெடுத்து ஊட்டுவது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர்
      வாரியார் சொல்வது படி: அது மாதுளம்பழம்! மாம்பழம் ன்னு ஏபி நாகராஜன் சினிமாவில் காட்டிட்டாரு! அன்னிக்கி மார்க்கெட்ல மாதுளை விக்கலை போல:))

      Delete
    2. வேளிர் சேரி என்பதே சரி!

      வேத ஸ்ரேணி-ன்னும், வேள்விச் சேரி-ன்னும் டைப் டைப்பாச் சொல்லுவாய்ங்க:) தல பு(ருடா)ராணத்துக்குச் சொல்லணுமா என்ன?:))

      Delete
  17. krs,

    //அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
    அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் சுருங்குவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!//

    அரங்க தமிழா? வட மொழி என்றே நினைக்கிறேன், அல்லது இங்கிருந்தும் அங்கு போய் இருக்கலாம்.

    கூலி தமிழிலும்,வட மொழியிலும் புழங்குவது போல.

    ரங்கம் என வட மொழியில் இருப்பதை அ சேர்த்து அரங்கம் என தமிழ் ஆக்கி இருக்கலாம். ராமன் , இராமன் போல.

    ரங்கம் = இடம், சபை, கூறை,குடை ,மூடிய இடம் என பொருள் இருக்கிறது.

    ரங்க ராட்டிணம் =குடை ராட்டிணம்.

    கூறையுடன் கூடிய இடம் அரங்கம்= உ.ம்: திரையரங்கம்.

    பெருமாளுக்கு மட்டும் குடை விஷேஷம் உண்டு, திருப்பதி குடை என்று குடையை மட்டும் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

    ஏன் அவர் வெயில் தாங்க மாட்டாரா? ஆதி சேஷன் குடை எப்போதும் பிடிப்பதால் அவருக்கு குடை கொடுத்து இருக்கலாம்.

    ரங்க நாயகம்=சபாநாயகம், எனப்பெருமாலை சொல்கிறார்கள்.

    சிவனுக்கு இரத்தின சபாபதி போல பெயர்கள் உண்டு.அதுவும் நடராஜராக இருக்கும் போது வேண்டுமானால் கூறையின் கீழ் இருக்க வேண்டும் எனக்கட்டாயம் இருக்கலாம்,லிங்கமாக வெட்ட வெளியிலும் வைக்கிறார்கள். ஆனால் பெருமாள் என்ற நிலையில் எப்போதும் திறந்த வெளி ஆலயங்கள் அமைப்பதே இல்லை.எனவே அரங்கநாயகம் பெருமால் என்பது சரியாக வருது.

    தமிழில் அ சேர்த்து அரங்கநாயகம் என எழுதுக்கொள்கிறோம் என நினைக்கிறேன்.

    பெருமாள் அவரோட சபைக்கு நாயகர், அவரோட சபை வைகுந்தம் அதுவே சொர்க்கம் ,எனவே ரங்கம் என்றால் சொர்க்கம் என்று பொருளாம்.

    ஶ்ரீரங்கம் என்பதற்கு தமிழ் பெயர் திருநாவலத்தீவு என்று சொல்கிறார்கள்.

    மைசூரில் உள்ள ஶ்ரீரங்கப்பட்டினம் ஆதிரங்கம் என்றும்,அங்கிருந்து 70 கி.மீ தள்ளி இருக்கும் சிவனாச சமுத்திரம் என்ற ஊர் மத்தியரங்கம் என்றும் ,திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கத்தினை அந்தரங்கம்= முடியும் ரங்கம், என்றும் சொல்கிறார்கள்.

    http://srirangaminfo.com/Srirangam-Temple.php

    அதனால் தானோ என்னமோ ராமனுஜர் அங்கே சொர்க்கம் புகுந்தார், அங்கு ஆண்டு தோறும் சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது.

    எனவே ரங்கம் என்ற அரங்கம் ஆறு சுற்றி வருவதால் என்றோ, தமிழ் என்று சொல்வது சந்தேகத்துக்குறியது.

    -------
    நீங்கள் சொன்னது சரி தான்.
    மங்கலம் என்ற பெயரில் இருக்கும் ஊர்கள் மன்னர்களால் மங்கலாசனம் எழுதிக்கொடுக்கப்பட்ட மாநிய ஊர்கள்,வரி செலுத்த தேவையில்லை.

    கோயிலுக்கு என கொடுக்கப்பட்ட ஊர்கள் மடப்புரம், மடவிளாகம் என்ற பெயரில் இருக்கும்.

    இதே போன்று முகலாயர்கள் காலத்திலும் மாநியமாக இலவசமாக ஊர்க்கொடுத்திருக்கிறார்கள் உதாரணம் இனாம்புதூர். வரி விலக்கு அளிக்கப்பட்ட இலவச இடம்.

    ---------

    பாக்கம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் நிறைய ஊர்கள் இருக்கு, ஆனால் சென்னையில் இருக்கும் பாக்கம் அப்படி வந்தது அல்ல ,முகலாயர்கள் சூட்டியது
    "Bhag"=sector,zone என்ற பொருளில் அதுவே பின்னாளில் பாக்கம் ஆயிற்று.

    கோடம்பாக்கம் =கோடோ=குதிரை ,பாக் =ஸோன், குதிரைப்படைகள் தங்கியிருந்த இடம்.

    பேட்டை என்பதும் முகலாயர்களால் வந்திருக்க வேண்டும், ஹைதராபாத், செகந்திராபாத்,அலகாபாத் இல் உள்ள பாத் தான் தமிழில் பேட்டை ஆகிவிட்டது.

    ஆர்க்காடு நவாப்பினால் உருவாக்கப்பட்ட ஊர் ராணிப்பேட்டை, நவாப்புடன் நடந்த போரில் தேசிங்கு இறந்து விடவே ராஜா தேசிங்கின் மனைவி ,உடன்கட்டை ஏறி இறந்தார் , எதிரியாக இருப்பினும் அவர் நினைவாக உருவாக்கினார். .

    இப்பொழுதும் பேட்டை என முடியும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதைக்காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை வவ்வால்!
      அரங்கம் தமிழே!

      அரங்கம்=துருத்தி ன்னு இளங்கோ அடிகளும் சொல்லுவார்!
      விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
      திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்...

      இளங்கோவுக்கும் முன்னரே, சங்கப் பாடல்களில் கூட காவிரி-அரங்கம் உண்டு!
      பங்குனி விழா கொண்டாடப்பட்ட திருவரங்கம்...

      ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
      பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
      தீஇல் அடுப்பின் "அரங்கம்" போல,
      பெரும்பாழ் கொண்டன்று - என்பது அகநானூறு!
      --------------

      நிறைய கலந்து கட்டி அடிச்சிட்டீக:)))

      //ரங்க நாயகம்=சபாநாயகம்//
      ரெண்டும் வேற! சபாநாயகர் = சிவபெருமான்!
      சபை=வடசொல்! தமிழ்ச் சொல்=அவை!

      //ஶ்ரீரங்கம் என்பதற்கு தமிழ் பெயர் திருநாவலத்தீவு என்று சொல்கிறார்கள்//

      நாவலந்தீவு என்பது ஒட்டுமொத்த பண்டை நிலத்தையும் குறிக்கும்!
      ஜம்புத்வீபே, பாரதவர்ஷே ன்னு அவங்களும் சொல்லுவாய்ங்க!

      //அதனால் தானோ என்னமோ ராமனுஜர் அங்கே சொர்க்கம் புகுந்தார், அங்கு ஆண்டு தோறும் சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது//

      சொர்க்க வாசல் இராமானுசருக்கு முந்தைய காலத்திலேயே நடந்துக்கிட்டுத் தான் இருக்கு!:)
      இராமானுசர் சொர்க்கம் புகுந்ததால் சொர்க்க வாசல் அல்ல!
      சொர்க்கம் = சபை = அரங்க நாயகம் = சபா நாயகம் = பாம்பு = குடை = நிழல் ன்னு ரொம்பவே கற்பனை பண்ணிட்டீங்க!:))) Asst Director ஆகும் முயற்சியா?:)

      Delete
    2. Bhaag = பாக்கம் என்பதும் அவ்ளோ சரியாத் தெரியல!
      கோடம் பாக்கம் = Ghoda Bhaag ன்னு வழங்கி இருக்கலாம்:)) கோடா=குதிரை!

      ஆனா, கோடம்பாக்கத்தைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், பாக்கம் தமிழ்ச் சொல்லே! தமிழ் ஊர்ப் பேர் விகுதியே! பட்டினப்பாக்கம் என்பதெல்லாம் சிலப்பதிகாரக் காலந் தொட்டு வந்த பெயர்கள்!

      "கோடா" என்பதோடு தமிழ்ப் பாக்கத்தைச் சேர்த்து, கோடம்பாக்கம் ஆக்கி இருக்கலாம்!
      ஆங்கில Chrome-உடன் பேட்டை சேர்த்து, கிரோம்பேட்டை ஆகவில்லையா?
      -------------

      பேட்டையும் அப்படியே!

      பேட்டைத் துள்ளல் என்ற ஆட்டம் இன்றும் உண்டு! கேரளத்திலும் பேட்டை உண்டு!
      ஹைதரா பாத், செகந்தரா பாத்; பாத் = பேட்டை ஆனது என்பதற்கு தரவுகள் இல்லை!

      வேண்டுமானால், நவாப்புகள் உருவாக்கிய பின்னாள் ஊர்களுக்கும் "பேட்டை" விகுதி சேர்த்திருக்கலாம்!
      அதனாலேயே "பேட்டை" தமிழ் அல்ல என்று சொல்லி விட முடியாது!

      பைந்தரு விளங்கு கரு வல்லாடி தன்னோடு
      பகரமாப் "பேட்டை" பொன்னிப்
      பழநதிக் கரை வளவயல் தன்னோடு
      -------------

      தேசிங்கு ராசன் - ராணிப் பேட்டை தகவலுக்கு நன்றி!
      Rani Bath ன்னு பேரு வச்சிருந்தா, ராணி குளிக்கிறதைப் பார்த்தாப் போல ஆயீரும்!:))
      வேணாம்! ராணிப் பேட்டையே நல்லா இருக்கு!:))

      Delete
    3. கேஆரெஸ்,

      ஹி...ஹி எனக்கு முன்னாடி நீங்க கதாசிரியர் ஆகிட்டிங்க,நான் இனிமே தான் ஆகனும்,

      அரங்கம் தமிழிலும் இருக்கலாம் அல்லது வட மொழியாகவும் இருக்கலாம்னு கூலி சொல்லை உதாரணம் காட்டினேன்,

      அடுத்து ஆறு சுற்றி வருவதால் இருக்காது என சொன்னதற்கு நீங்கள் சொன்னது பொருந்தவில்லையே.

      மைசூரில் இருக்கும் ஶ்ரீரங்கப்பட்டினம் கூட சொல்லியுள்ளேன் அங்கே ஆற்றுக்கு நடுவிலா இரூக்கு.

      ரங்க ராட்டினம் என்பதை குடை ராட்டினம் சொல்வதையும் சொன்னேன்.

      தமிழ் படம் கோ வை தெலுங்கில் ரங்கம்னு டப்பிங் செய்து வெளியிட்டாங்க, அதுக்கு பொருள் நாடு ,தேசம் தெலுங்கில்.

      மலையாளத்தில் ரங்கம்னா காட்சி எனப்பொருள் இருக்காம்.திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்பதால் இப்பொருள்கள் தமிழுக்கும் பொருந்தும் இல்லையா.
      ரங்க ராஜன்= நாட்டுக்கு ராஜா, பெருமாலின் நாடு வைகுந்தம் அதற்கு ராஜா னு பொருள் வருமோ?

      ஶ்ரீ ரங்கத்துக்கு அந்தரங்கம்னு ஒரு பெயர் அதாவது மோட்சம் அடைவதை சொல்லுதுனு சொல்லி தான் அதனால் ராமானுஜர் மோட்சம் புகுந்தார்னு சொல்லி இருக்கேன்,அவர் மோட்சம் அடைந்ததால் அங்கு சொர்க்க வாசல் திறக்கப்படுதுனு சொல்ல வரவில்லை.

      Delete
    4. வவ்வால்
      கூலி என்ற எடுத்துக்காட்டுக்கு நான் போகவில்லை
      அரங்கம் என்ற சொல், இளங்கோவடிகள் காலத்தில் இருந்து தமிழே!
      அதற்கும் முன்பே அகநானூற்றிலும் பயில்கிறது;

      //மைசூரில் இருக்கும் ஶ்ரீரங்கப்பட்டினம் கூட சொல்லியுள்ளேன் அங்கே ஆற்றுக்கு நடுவிலா இரூக்கு//

      YES!
      Mysore SriRangaPatna is an island too = https://maps.google.com/maps?hl=en&q=srirangapatna&ie=UTF-8
      Adi Rangam, Madhya Rangam, Andha Rangam are all island-water based formations

      ரங்கம் = குடை, நாடு ன்னு பிற மொழிகளில் இருப்பதைப் பார்த்து, அதை வலிந்து தமிழுக்கு ஒட்ட வைக்கப் பார்க்கிறீர்கள்
      ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், அரங்கம் = துருத்தி/தீவு என்பது சங்க காலத்திலேயே உண்டு.
      காவிரி-திருவரங்கத்தை அரங்கம் ன்னே சொல்லும் பாடலைக் காட்டிவிட்டேன்..

      But you are "stretching" that it "may be" sanskrit or other...But as far as thiruvarangam is concerned it is tamizh via aka naanooRu. dot.

      Delete
    5. //ஶ்ரீ ரங்கத்துக்கு அந்தரங்கம்னு ஒரு பெயர் அதாவது மோட்சம் அடைவதை//

      This is over stretch:)

      காவிரியில் மூன்று தீவுகள் - அரங்கங்கள் சிறப்பாகச் சொல்லப்படுவது உண்டு!
      1. ஆதி ரங்கம் = ஸ்ரீ ரங்க பட்னா
      2. மத்ய ரங்கம் = சிவ சமுத்திரம் அருகேயுள்ள ஊர்
      3. அந்த ரங்கம் = திருவரங்கம்

      இந்த அந்த (இறுதி) ரங்கம் = திருவரங்கமே தவிர...
      அரங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்கும், மோட்சம்/சொர்க்க வாசலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை!

      Delete
    6. ’அரங்கம்’ தமிழ்ச்சொல்; முக்தி எனும்
      பொருள் தராது

      Delete
  18. நிறைய விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன் :)

    //அரங்கம்: ஒரே ஆறு, இரண்டாய்ப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய்க் கூடும், இடைப்பட்ட திட்டு/ துருத்திக்கு = அரங்கம் ன்னு பெயர்!

    திருவரங்கம் = எந்தை, அரவணை மேல் துயில் அமரும் அரங்கம்! ஆழ்வார்கள் பதின்மரும் பாடிய ஒரே தலம்!//

    இதை படித்தவுடன் ஜிவ்வுன்னு ஏறுது . பழைய ஞாபகம்
    மீண்டும் ஒரு முழு ஆன்மீக பதிவு போடுங்களேன் .:)

    ReplyDelete
    Replies
    1. புது மாப்பிள்ளை பேசுற பேச்சா இது?
      கோதை: Kissing For Dummies எடுத்துப் படிங்க!:))

      Delete
  19. எங்க ஊர் பக்கமும் கொஞ்சம் வாங்க!!
    திருமுல்லைவாயில்
    கலவை
    இதெல்லாம் List- la இல்லையே :)

    ReplyDelete
    Replies
    1. திருமுல்லைவாயில் சொல்லி இருக்கேனே!
      நம்மூரு எடுத்துக்காட்டு ஆங்காங்கே காட்டியுள்ளேன்; இதுக்கு மேலக் காட்டினா, சொந்தூரு சார்பு ன்னு சொல்லிடுவாங்க:)

      Delete
  20. சூப்பரா எழுதிருக்கீங்க'ணா

    ReplyDelete
  21. சூப்பரா எழுதிருக்கீங்க'ணா

    ReplyDelete
  22. ட்விட்டர் மூலமா இன்னைக்குத்தான் பாத்தேன். என்னோட பங்குக்கு.

    குள்ளம்பாளையம் (என்னோட ஊரு. :-))

    கீழ இருக்குற ஊரெல்லாம் எங்க ஊரைச் சுத்தி இருக்குற சில பாளையங்கள். :-)

    நாதிபாளையம்
    வெள்ளாளபாளையம்
    பொலவக்காளிபாளையம்
    அய்யம்பாளையம்
    கங்கம்பாளையம்
    தாசம்பாளையம்
    பிச்சாண்டாம்பாளையம்
    மணியம்பாளையம்
    மாரப்பம்பாளையம்
    சின்னியம்பாளையம்
    புலவம்பாளையம்
    செம்பூத்தான்பாளையம்
    கரட்டடிபாளையம்
    புதுப்பாளையம்
    நாகர்பாளையம்
    தூக்கநாயக்கன்பாளையம்
    கொங்கர்பாளையம்
    கெம்பநாயக்கன்பாளையம்
    செம்புளிச்சாம்பாளையம்
    சுண்டக்காம்பாளையம்

    ReplyDelete
    Replies
    1. ஆர்க்காடு ஆற்காடு எனத் திரிந்து விட்டது;
      ஆரூர் சோழவள நாட்டில்

      Delete
  23. நாகப்பட்டினமாவட்டத்திலுள்ள வேதாரணியம்வட்டத்தில்,

    'ஆயக்காரன்புலம்' எனப்படுவது என் ஊர்.

    அதைச்சுற்றிலும், தென்னம்புலம் கருப்பம்புலம் கத்தரிப்புலம் குரவப்புலம் செட்டிப்புலம் என ஊர்ப்பெயர்கள் உள்ளன.

    'புலம்' என்பது எதைக்குறிக்கும்? நிலத்தையா, நீர்நிலையையா, அல்லது இரண்டையுமா?

    ReplyDelete
  24. நாகப்பட்டினமாவட்டத்திலுள்ள வேதாரணியம்வட்டத்தில்,

    'ஆயக்காரன்புலம்' எனப்படுவது என் ஊர்.

    அதைச்சுற்றிலும், தென்னம்புலம் கருப்பம்புலம் கத்தரிப்புலம் குரவப்புலம் செட்டிப்புலம் என ஊர்ப்பெயர்கள் உள்ளன.

    'புலம்' என்பது எதைக்குறிக்கும்? நிலத்தையா, நீர்நிலையையா, அல்லது இரண்டையுமா?

    ReplyDelete
  25. அருமையான பதிவு...

    ReplyDelete
  26. ஜயா எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா கோடாங்கிபட்டி மற்றும் மேட்டுப்பட்டி தேசியம்பட்டி என்று உள்ளது இதர்க்கும் அர்த்தம் கூறவும்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP