Wednesday, October 06, 2010

திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்?

திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)

ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!
வள்ளுவம் பெருஞ்சொத்து!
அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)


திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))
திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)

அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!
* திருவள்ளுவர் சமணர்!
* இல்லவே இல்லை அவர் சைவ சித்தாந்தியே!,
* அவர் பெளத்தராய்க் கூட இருக்கலாம்!
* அவர் வைணவக் கருத்துகளை ஆங்காங்கே உதிர்க்கிறார்!
வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!

அவ்வளவு ஏன்... வள்ளுவருக்கு விபூதிப் பட்டை போட்டு, வள்ளுவ தேவ நாயனார் என்றெல்லாம் கூடச் சொல்பவர்கள் உண்டு!
இன்றும் விபூதி போட்ட வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலே, சிலையாக நடு ரோட்டில் காட்சி அளிக்கிறார்! :)

மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு வடக்கே, வள்ளுவர் கோயில் வேற ஒன்னு இருக்கு! கோயிலின் மூலவர் ஏகாம்பரேஸ்வரர்! :)
யாரு கட்டினாங்களோ? கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தான் இருக்கும்! வள்ளுவரின் அம்மா-அப்பா = ஆதி பகவன்??? அவங்களுக்கும் கோயிலில் சிலை உண்டு! :)

"ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதை வைத்துக் கொண்டு, அவர் தாய் தந்தையர் பேரு = ஆதி பகவன்-ன்னு சொன்னா எப்படி? :)
தன்னுடைய அம்மா-அப்பா தான், உலகம் முழுமைக்கும் முதல், முதற்றே உலகு-ன்னு சொல்லக் கூடியவரா என்ன வள்ளுவப் பெருந்தகை? :)

அடக் கடவுளே! இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லியா? சிறந்த ஒன்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள வேணும்-ன்னா, அதுக்காக இப்படியெல்லாமா செய்வது? ஒரு நல்ல தலைவரின் கொள்கைகளை ஒன்னுமில்லாப் போகச் செய்யணும்-ன்னா, அவருக்குச் சிலை வைச்சி, அபிஷேகம் பண்ணாப் போதும் போல இருக்கே? :)

இப்படித் தான், சிறந்த சங்கத் தமிழ்க் கவிஞர்களான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் - பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி....
அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் "நாயனார் இரட்டை மணிமாலை"-யை, பன்னிரு திருமுறைகளில் வேறு வைக்கப்பட்டு விட்டது!

நல்ல வேளை, வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், "திருவடிகள்" பற்றி நிறைய பேசுவதால், அவருக்கு "நாமம்" போடாமல் இருந்தார்களே! அது வரைக்கும் ரொம்ப சந்தோசம்! :)

இப்படி, தனிப்பட்ட ஒருவரை/ஒன்றை, இத்தனை பேர் "உரிமை" கொண்டாடுவது வேறு எந்த தமிழ் நூலுக்காவது உள்ளதா?
இப்படித் தமிழர் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அற்புத சக்தி = வள்ளுவம்!



வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவது ஒரு வழியில் மகிழ்ச்சியே என்றாலும்...
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவோர் கட்டாயம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்!

* வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* நக்கீரர் செய்ய வந்தது = சமய நூல்!

* நக்கீரர் - கடைச் சங்க காலம் - அவர் செய்தது திருமுருகாற்றுப்படை என்னும் சமய நூல்! அதை அவரே வெளிப்படையாகச் சொல்கிறார்!
* வள்ளுவர் - நக்கீரருக்கும் பின்னால் - சங்கம் மருவிய காலம் - வள்ளுவர் ஒரு சமயநூலைச் செய்ய வந்திருந்தால், அந்தச் சமயக் கோட்பாடு, அதன் கதைகள் என்றெல்லாம் நக்கீரர் போலவே அவரும் விளக்கி இருப்பாரே! ஆனால் வள்ளுவத்தில் அப்படி ஒன்னும் இல்லையே!

நினைவில் வையுங்கள்: வள்ளுவரின் நோக்கம்: ஒரு சமய நூலைச் செய்வது அல்ல!

அவரே அப்படிச் செய்யாத போது...
அவர் பயன்படுத்திய சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு...
வள்ளுவர்=சமணம்,சைவம்,பெளத்தம் என்று மல்லுக்கு நிற்பது ஏனோ? :(


ஒரு படைப்பாளியின் மேல், அவரவர் தனிப்பட்ட முத்திரைகளைக் குத்தல் என்பது சான்றாண்மை ஆகாது!

அப்படிப் பார்த்தால் என் பதிவுகளில், அன்னை மரியாள் பற்றிச் சிலாகித்துப் பலமுறை எழுதி உள்ளேன் - நான் கிறித்தவனா?
கூகுளில் "பக்ரீத் - சரணாகதிப் பார்வை"-ன்னு தேடுங்கள்! என் பதிவு தான் வந்து நிற்கும்! "பக்ரீத்/ஈமான்" என்ற "சொல்லை"ப் பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக, நான் முஸ்லீம் என்று முடிவு கட்டி விடுவீர்களா? :)

* வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது = எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
* வள்ளுவத்தில், "எண்குணத்தான்" என்ற சொல் வருகிறது = எனவே அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது = எனவே அது இந்து மதம்! => இப்படியெல்லாம் கிளம்புவது நமக்கே லூசுத்தனமா இல்லை?:)
ஆறு குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாகத் தான் முடியும்!

வள்ளுவரின் கால கட்டத்தில், அவர் கண்ட சமூகத் தாக்கங்களை, தன் நூலில் பதிந்து வைத்திருப்பார் - ஒரு சமூகக் கண்ணாடி போல!

இந்திரன் ஒழுக்கம் தவறி, சாபம் பெற்ற கதை, மக்களிடையே அன்று பேசப்படுமானால்...
அதைத் தன் கவிதையில் குறித்துக் காட்டி...தான் சொல்ல வந்த நெறியை விளக்குவது...
- இது எந்தவொரு கவிஞரும் செய்யக் கூடியது தான்! அதற்காக "இந்திரன் கதையை" சொன்னதால் அவர் "தமிழ்-ஹிந்து" என்று கிளம்புதல் தகுமா?

* இந்திரன் கதை வள்ளுவருக்குத் தெரியும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* பொறி வாயில் ஐந்து அவித்தல் - ஆசை அறுத்தல் என்னும் சமணக் கோட்பாடு வள்ளுவருக்குத் தெரிந்திருக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* திருவடிகளே தஞ்சம் என்று வள்ளுவம் பேசுவதும், வைணவத் தத்துவமும் ஒத்துப் போகின்றது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!

ஆனால் அதற்காக வள்ளுவருக்கு, சைவர்/சமணர்/வைணவர்/நாத்திகர் என்றெல்லாம் முத்திரை குத்துவது என்பது கூடவே கூடாது!
அவர்
செய்ய வந்தது சமய நூல் அல்ல! அவர் செய்ய வந்தது அறம்-பொருள்-இன்பம்!

* வள்ளுவத்தின் கருத்துக்கள் போல எங்கள் சமயத்திலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்!
* ஆனால் வள்ளுவம் = சைவமே, சமணமே, வைணவமே என்பதெல்லாம் சான்றாண்மையே இல்லாத ஒன்று!



ஆத்திக -நாத்திக ஒற்றுமை:

சரி ஆத்திகர்கள் தான் இப்படி-ன்னா, இதே தவறைத் தான் நாத்திகர்களும் செய்கிறார்கள்! அடக் கொடுமையே! என்னமா ஆத்திக-நாத்திக ஒற்றுமை! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


இந்தக் குறளில், "இறைவன்" என்பதை அழுத்தமாகவே குறிக்கிறார் வள்ளுவர்! "பிறவிக் கடல்" என்று வேறு சொல்கிறார்!
ஆனால் இதற்கு உரை எழுதும் தமிழ்ப் பற்றுள்ள நாத்திகர்கள் (அ) அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள், இறைவன் = தலைவன் என்று எழுதுகின்றனர்! :)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில்...நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

ஓபாமா கட்சிக் காரவுக, ஓபாமா அடி சேரலீன்னா, அட்லாண்டிக் கடல் நீந்த முடியாது-ன்னு வேணும்-ன்னா சொல்லலாம்! ஆனா, பிறவிக் கடல் நீந்த முடியாது-ன்னு சொன்னா எப்படிப்பா? :)

தங்கள் நாத்திகக் கருத்தை, வள்ளுவத்தில் வலியத் திணிப்பது என்பதும் கூடாது!
வள்ளுவத்தில் நாத்திகம் பேசப்பட்டு இருக்கு! அறம் பேசப்பட்டு இருக்கு! மறம் பேசப்பட்டு இருக்கு! = எல்லாப் பொருளும் இதன் பால் உள!

"இறைவன் அடி" என்று வள்ளுவர் சொன்னால்.... அதை ஏதோ "தலைவன் அடி" என்று வலிந்து மாற்றிப் பொருள் கொள்வது...போலியான விளக்கம் என்று தானே பல் இளித்து விடும்! :) ஓபாமா வழியில் போவாதவங்க எல்லாம் பிறவிக் கடலில் மாட்டிப்பாங்க-ன்னு படிங்க! ஒங்களுக்கே சிரிப்பு வருது-ல்ல? :)))



இன்னொரு சான்றையும் எடுத்துக் கொள்வோம்!

திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்!
எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படிப் பழக்கத்திலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை!

ஆனால்...அதற்காக...வள்ளுவர் முதல் பத்து குறட்பாக்களிலும், திருவடிகளைப் போற்றுகிறார்! எனவே வள்ளுவம் = வைணவ நூல்! வள்ளுவர் = வைணவர் என்று சொன்னால், அதை விட முட்டாள்தனம் வேறில்லை! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை-ன்னே நினைக்கிறேன்!

வேண்டுமானால், குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளை, வைணவத் தத்துவங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்!
அவ்வளவு தான்! அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

வள்ளுவர் காலத்துக்கு முன்னமேயே, தொல்காப்பியர் காலம் தொட்டே, மாயோன் வழிபாடு இருந்திருக்கு! = மாயோன் மேய காடுறை உலகமும்! மாயோன் அன்ன மன் பெரும் சிறப்பின்....தாவா விழுப் புகழ்!
அப்படி, சமூக வாழ்வியலில் காணலாகும் திருவடி வணக்கம் வள்ளுவர் கருத்தையும் கவர்ந்திருக்கு! என்று வேண்டுமானால் "ஊகிக்கலாமே" தவிர...
"திருவடி" என்ற சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு, வள்ளுவர் = வைணவர் என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனம்!

இன்னொரு முறையும் சொல்கிறேன், வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* அவர் திருமுருகாற்றுப்படை போல் ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு!
* ஆனால், நோக்கமே = அறம், பொருள், இன்பம் என்னும் போது...
* அந்த நூலில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் சொற்களை வைத்து...
* வள்ளுவர் இந்த சமயம் தான், அந்த சமயம் தான் என்ற விவாதம் - யானையை அளந்த ஆறு குருடர்கள் கதையாகத் தான் முடியும்!

சமயம் வளர்க்க எத்தனையோ நல்ல சமய-நூல்கள் உள்ளன!
அதை விடுத்து,
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
இப்படி ஒரு பிக்கல்-பிடுங்கல் மெய்யாலுமே தேவையில்லை!


திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!
அது மொத்த உலகுக்கும் தமிழ் மொழி வழங்கிய தமிழ்க் கொடையாகவே இருக்கட்டும்!
திருக்குறள் = உலகப் பொது மறை!
அது உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!


சரி, தமிழ்க் கடவுள் என்னும் இந்தத் தொடர் பதிவுகளில், நாம் எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்கு வருவோம்! = தமிழ்க் கடவுள் திருமாலும், முருகனும்!

"திருமால் பண்டைத் தமிழ்க் கடவுள் அல்ல! முருகன் மட்டுமே பண்டைத் தமிழ்க் கடவுள்" என்ற ஒரு சிலரின் வாதத்தால், இந்த முயற்சியை முன்னெடுத்தேன்!
சங்க இலக்கியங்களில், தமிழ்க் கடவுளான திருமால் எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறான் என்று தக்க தரவுகளோடு சொல்லப் போந்தேன்! இதோ! http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

தொல்காப்பியத்தில், நற்றிணையில், அகநானூற்றில், கலித்தொகையில்...என்று பல சான்றுகளைப் பார்த்தோம் அல்லவா?
ஆனால்.....அதற்காக பரிபாடல் என்பது வைணவ நூல்! அதில் எழுதிய நல்லந்துவனார் ஒரு வைணவர் என்று சொல்வேனா என்றால்?
..............மாட்டேன்! அது தவறான போக்கு! உடன்பட மாட்டேன்!

சங்க நூல்கள், சங்க காலத்தைக் காட்டும் கண்ணாடி!
அதில் பண்டைத் தமிழர், திருமாலை, தங்கள் வாழ்வியலில் எப்படி வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதோடு மட்டும் சரி!
ஒரு தலைவன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சத்தியம் செய்கிறான்! இப்படி ஒரு நிகழ்வைக் காட்டுவது கலித்தொகை!

ஆனால் அதற்காக கலித்தொகை வைணவ நூலாகி விடாது!
அது சங்க இலக்கியமே!
பண்டைத் தமிழ் வாழ்வியலின் அகச் சான்று மட்டுமே!

இந்தத் தெளிவோடு, நாம் திருக்குறளை அணுகுவோம்!
திருமால் பற்றி வள்ளுவர் ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா? பார்ப்போமா?



பலரும் உடனே எடுத்துக் காட்டும் குறள்...

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?

குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

இவள் தோளில் தூங்கும் சுகம், அந்தத் தாமரைக் கண்ணான் உலகிலும் இருக்குமோ? இச்-சுவையை விட அச்-சுவை பெரிதோ??

தாமரைக் கண்ணான் = திருமால் என்றே பலரும் நினைத்து விடுகிறார்கள்! இதற்கு உரையாசிரியர்கள் என்ன சொல்லுறாங்க-ன்னு பார்ப்போமா?

மு. வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

கலைஞர் கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
தாமரைக் கண்ணான் உலகு = நீ மிகச் சிறந்ததாக உயர்த்திக் கூறும் செங்கண் மாலின் வீட்டுலகம்;
தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல் = ஐம்புல இன்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில் போல இன்பஞ் சிறந்ததோ?

தாமரைக்கண்ணான் உலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது" என்றும் காளிங்கர் கூறியதும் பெருந்தவறாம்.

இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கர் அடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல்.
திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர்:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர்:
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ;
தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

என்ன மக்களே, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

தாமரைக் கண்ணான் = திருமால் என்று தேவநேயப் பாவாணரே சொல்லியது தான் எனக்கு வியப்பிலும் வியப்பு! அவர் தனித் தமிழ் இயக்கத் தந்தை!

டாக்டர் மு.வ, சாலமன் பாப்பையா, இவர்களும் தாமரைக் கண்ணான் = திருமால் என்கின்றனர்!
கலைஞர், தாமரைக் கண்ணானுக்கு ஒன்னுமே சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்! இவர்கள் அனைவரும் இக்கால அறிஞர்கள்!

முற்கால அறிஞர்களில் மணக்குடவர் மட்டும் தான் தாமரைக் கண்ணான் = இந்திரன் என்கிறார்! ஆனால் இது சுத்தமாகப் பொருந்தவில்லை! யாரும் இப்படி இந்திரனை முன்பும் சொன்னதில்லை! பின்பும் சொன்னதில்லை!

பரிமேலழகர் உரையோ நம்பத் தகுந்தது அல்ல என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்தறிவுவாதிகள் உருவாக்கி விட்டமையால், நானும் அவர்களையே ஃபாலோ பண்ணிக்கறேன்! பரிமேலழகரைப் படிப்போம்! ஆனால் அவர் பரி மேல் ஏற வேணாம்! :)

பெரும்பான்மையாக....
தாமரைக் கண்ணான் = திருமால் என்று தான் காட்டுகிறார்கள்!


ஆனால், என் மனம் இன்னமும் அலை பாய்கிறது! ஒரு வேளை, தாமரைக்கு + அண்ணான் என்றும் பொருள் கொள்ளலாமோ? (அண்ணான் என்றால் அண்ணன்/தமையன், அண்ணாதவர்/பகைவர் என்றும் பொருள் உண்டு - அண்ணார் புரம் அவிய நின்று நகை செய்த...என்னும் பாட்டும் இருக்கு! ஆனால் அண்ணார் என்னும் சொல்லின் பயன்பாடு மிகவும் குறைவு)

அண்ணான் = பகைவன்/பொருந்தாதவன்!
தாமரைக்குப் பொருந்துவது = கதிர்! பொருந்தாது = நிலவு!
எனவே தாமரைக்கு, அண்ணான் உலகு = நிலாவுலகு!

பெண்ணே, உன் தோளில் சாய்ந்து கொள்ளும் இன்பத்தை விட, அந்த நிலா உலகமா எனக்கு இன்பம்? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோமா?
இதில் எந்தச் சமயமும் இல்லை! கே.ஆர்.எஸ் உரை-ன்னு போட்டுறலாமா? :)

எது எப்படியோ....வள்ளுவரின் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு திருமால் உலகு என்பதே பெரும்பான்மை உரையாசிரியர்கள் கருத்து!
ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்:
தாமரைக் கண்ணான் என்று ஒரு இடத்தில் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக, வள்ளுவர் = வைணவர் என்று கும்மி அடிக்கக் கூடாது!

வள்ளுவர் சொன்ன தாமரைக் கண்ணான் திருமாலாகவே கூட இருக்கலாம்!
ஆனால் அவர் நோக்கம் = "காதலர்க்கு, அச்சுவையை விட இச்சுவையே இனிது" என்று காட்டுவது தான்!
முல்லைத் தெய்வமான திருமாலுக்கு அர்ச்சனை செய்வது நோக்கமல்ல! :)

இதைப் புரிந்து கொண்டால் போதும்!
திருக்குறள் சமய நூல் அல்ல! சமூக நூல்! - சமூகத்தில் அன்று விளங்கிய தாமரைக் கண்ணானை ஒரு உவமை காட்டுகிறார், அவ்வளவே!!!



அடுத்த குறளைப் பார்ப்போம்! "அடி அளந்தான்" என்று குறிக்கிறார்!
இது திருமால் தானா என்பது ஒரு சிலருக்கு ஐயம்!
ஆனால் திருமால் என்று பெரும்பான்மை உரையாசிரியர்கள் கொள்கிறார்கள்!

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு
குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை

மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள், தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன், கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் கருணாநிதி உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடம் அனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மடி இலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன்; 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் - ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் மூவுலகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால், அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது. கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.

வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம்' என்னும் நூலிற் கண்டுகொள்க.

கதிரவன் நாள்தோறும் அளந்தாலும், முன்னை நிகழ்ச்சி பற்றி 'அடியளந்தான்' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. ' தாஅய' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

மணக்குடவர் உரை:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று

பரிமேலழகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

என்ன விளங்கிச்சா? :)
இப்படி, உரையெல்லாம் படிக்கறதுக்கு, பேசாம, மூல நூலான திருக்குறளையே படிச்சிறலாம் போல தோனுதா? :)

சூப்பர்! அப்படி வாங்க வழிக்கு!
எது மூல நூலோ, அதை வாசித்துச் சரி பார்க்கும் பழக்கம் வந்து விட்டால், பல கசடுகள் தானே மறைந்து விடும்!

அதற்காக உரை நூல்கள் தேவையில்லை என்பதில்லை!
பல மூலப்பாடல்களின் சுவடி கிடைக்காத போது, உரைகளில் மேற்கோள் காட்டியதில் இருந்து தான், மூலப் பாடல்களையே திரட்டித் திரட்டி எடுத்தார்கள் தமிழ் அறிஞர்கள்! அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!



திருமால் பற்றிய இன்னொரு குறளும் உள்ளது!
* முன் சொன்ன இரண்டு குறள்களாவது.....தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்பதில் சிலருக்கு மட்டும் ஐயம் இருந்தது!
* ஆனால் இந்தக் குறளில் ஒருவருக்குக் கூட சந்தேகம் இல்லை! ஏன்-னா திருமாலை நேரடியாகக் காட்டாது...திருமகளைக் காட்டுகிறார்!

வூட்டுக்கார ஐயாவை எப்படி வேணும்-ன்னாலும் பேசலாம்! ஆனா வூட்டுக்கார அம்மா-ன்னு வந்துட்டா கலைஞர் உட்பட அத்தனை உரையாசிரியர்களும் ஏனோ ஒத்துப் போய் விடுகிறார்கள் :))

மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை

மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர் கருணாநிதி உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டப் பயன்படுவனவாகும்

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்;
தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்;

என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர். கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால், பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம்.

அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத் தன்மையாலும், அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால், தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப் பெயர் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது.

வறுமையும் செல்வமும் அமைவதை, அணி வகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று, வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)


இப்படியாகத், திருக்குறளில், திருமால் பற்றிய குறிப்புகள் உள்ளன!

அவற்றில்...இரண்டு குறட்பாக்களில்...
தாமரைக் கண்ணான், அடி அளந்தான்
என்பதற்கு, ஒரு சிலர் மட்டும் வேறு ஒரு பொருள் கொண்டாலும்,
பெரும்பான்மை உரையாசிரியர்கள் திருமால் என்றே கொள்கின்றனர்!

இன்னொன்றில் தாமரையாள்...
என்று திருமகளைக் குறிப்பது பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இல்லாமல்.......அனைத்து உரையாசிரியர்களும் ஒத்துப் போகின்றனர்!

தாமரையாளுக்கு ஒத்துப் போகும் இவர்கள், அதே தாமரைக் கண்ணானுக்கு ஏன் ஒத்துப் போகவில்லை என்பது அந்தத் தாமரைக் கண்ணனுக்கும் வள்ளுவப் பெருந்தகைக்கும் மட்டுமே வெளிச்சம்! :)

எது, எப்படியோ....
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
சமய முத்திரை குத்தக் கூடாது!

திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!

திருக்குறளில் திருமால் பற்றிய குறிப்புகள், ஒரு இடத்தில் நேரடியாகவும், இரண்டு இடங்களில் குறிப்பாகவும் வருகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்! அவ்வளவே!

திருக்குறள் வைணவ நூல் அல்ல! திருவள்ளுவர் வைணவர் என்று சொல்ல எந்தவொரு தரவும் கிடையாது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

106 comments:

நிகழ்காலத்தில்... said...

மகிழ்ச்சி..

திருக்குறள் ஒரு உலகப்பொதுமறை என்பதை நல்லா எடுத்துச்சொல்லி இருக்கறீங்க..

\\பெண்ணே, உன் தோளில் சாய்ந்து கொள்ளும் இன்பத்தை விட, அந்த நிலா உலகமா எனக்கு இன்பம்? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோமா?
இதில் எந்தச் சமயமும் இல்லை! கே.ஆர்.எஸ் உரை-ன்னு போட்டுறலாமா?//

கண்டிப்பா தனிமுயற்சியாக உரை எழுதும் தகுதி உங்களுக்கு இருக்கிறது.

இது வெறும் புகழ்ச்சி அல்ல:))

வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

//அவற்றில்...இரண்டு குறட்பாக்களில்...
தாமரைக் கண்ணான், அடி அளந்தான்
என்பதற்கு, ஒரு சிலர் மட்டும் வேறு ஒரு பொருள் கொண்டாலும்,
பெரும்பான்மை உரையாசிரியர்கள் திருமால் என்றே கொள்கின்றனர்!

இன்னொன்றில் தாமரையாள்...
என்று திருமகளைக் குறிப்பது பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இல்லாமல்.......அனைத்து உரையாசிரியர்களும் ஒத்துப் போகின்றனர்!//

இராமயணம் உள்ளிட்ட பவுத்த சாதகக் கதைகளெல்லாம் திருமால் கதைகளாக ஆன பிறகு திருவள்ளுவர் வைணவர் என்று ஒப்புக் கொள்ள எவரும் தயங்கார் :)

புத்தரே திருமால் தானே சார்.
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கோவி அண்ணா
//புத்தரே திருமால் தானே சார்//

தரவு ப்ளீஸ்!
அப்படி-ன்னு சொல்வது யார்? எது?

//திருவள்ளுவர் வைணவர் என்று ஒப்புக் கொள்ள எவரும் தயங்கார் :)//

எவரும் தயங்கார்-ஆ?
எவரும் ஐயங்கார்-ஆ?? :)

வள்ளுவர் வைணவர் அல்லர் என்ற பதிவின் கடைசி வரிகளைப் படிக்கலையோ?

//இராமயணம் உள்ளிட்ட பவுத்த சாதகக் கதைகளெல்லாம் திருமால் கதைகளாக ஆன பிறகு//

பதிவுக்கும் அதற்குமான தொடர்பு என்ன-ண்ணா? நீங்க என்ன சொல்றீங்க-ன்னே புரியலையே!

நரசிம்மரின் நாலாயிரம் said...

சைவம் , வைணவம் , சமணம் இன்னும் பற்பல இதெல்லாம் நாம் வழிபடும் வழக்கத்தின் வெளிப்புற அடையாள குறிகளே!

திருக்குறள் உலக பொது மறை - ஆதி பகவன் முதற்றே உலகு!

நரசிம்மரின் நாலாயிரம் said...
This comment has been removed by the author.
நரசிம்மரின் நாலாயிரம் said...

ஆதிபகவன் - Who?
தாமரை கண்ணான் - Who?


அவரவர் இறையவர் குறைவிலர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே

உலகத்தில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் நினைக்கலாம்!

Because
திருக்குறள் - உலக பொது மறை

நரசிம்மரின் நாலாயிரம் said...

திருக்குறளையும் திருவள்ளுவரையும் குறிப்பிட்ட ஒன்றில் முத்திரை குத்தாமல்
சுதந்திர பறவையாக பறக்க விடுவது மேலானது

திருக்குறள் - International Bird - உலக பொது மறை

Jo Amalan Rayen Fernando said...

நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கிறீர்கள்.

வள்ளுவர் எழுதியது சமய நூலல்ல. சரிதான்.ஆனால், இப்பெரிய ஆசாமி ஒர் பெரிய சொத்தைத்தந்த ஆசாமி - இவரின் மதம் என்னவாக இருக்கும் என்று நினைப்பது ஒரு கூரியாசிட்டி.
அதை அவர்கள் குறட்பாக்களில் தேடுகிறார்கள். அவர்களைக் குறை சொல்லமுடியாது.

வள்ளுவருக்கு ஒரு ஜைன கோயில் உள்ளது தமிழ்நாட்டில். அவர் ஒரு ஜைன ஆச்சாரியராக வைத்து வணங்கப்படுகிறார். பெயர்:

கொண்டகொண்ட ஆச்சாரியா.

பொதுவாக அவரின் மதக்கொளகை, அல்லது ஆன்மிகக்கொள்கை எது என்பதை அறியலாம். அது ஜெயின் கொள்கையே என்கிறார்கள்.

ஆங்காங்கே பிற கடவுளர்களின் பெயர்கள் சொல்லப்படாலும் பொதுக்கொள்கை என்ன என்று ஆராயலாம். இதற்கு இன்னூல் சமயனூலல்ல என்றெல்லாம் சங்கோஜப்பட வேண்டியத்தேவையில்ல.

சிலம்புவும் சமய நூலலல.ஆனால் அக்கதையில் பவுத்தக் கருத்துகள் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்திலோ அல்லது பிற வைணவத் தமிழ் நூல்களில் இல்லாப் பாட்டை இளங்கோ வியத்தகு முறையில் ‘ஆய்ச்சியர் குரவையில்” திருமாலைப்பற்றிப்போட்டிருக்கிறார். ஆனால் அவர் வைணவரில்லை.

kargil Jay said...

புத்தரே திருமால் அவதாரம்தான்.. ஜாதி, சடங்கு என பாசாங்குகள் நிறைந்த காலகட்டத்தில் புத்தராக தோன்ற, எல்லாமும் பரம்பொருளே என்றுணர்த்த பெருமாள் முடிவுசெய்தார். -- என்ற கூற்று ஹரே கிருஷ்ணா உட்பட பல ஆன்மீக இயக்கங்களில் உண்டு.

திருவள்ளுவர் சொல்லும் சமயக் குறிப்புகள் ஹிந்து மதத்தைச் சார்ந்தவையே. அவர் ஹிந்துவே. ஆனால் அவர் திருக்குறளை ஒரு சமய நூலாக எழுதவில்லை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//kargil Jay said...
புத்தரே திருமால் அவதாரம்தான்..//

பொதுவாகச் சொன்னால் எப்படி ஜே? தரவுகள் தாருங்கள்! பாகவதத்தில் இருந்தோ, இல்லை ஆழ்வார்கள் குறிப்பில் இருந்தோ...வைணவம் புத்தர் = திருமால் என்று ஒப்புக் கொள்கிறதா? :)

//என்ற கூற்று ஹரே கிருஷ்ணா உட்பட பல ஆன்மீக இயக்கங்களில் உண்டு//

அப்படி நம்புகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! ஆனால் அதுவே சான்றாகி விடாது!

//அவர் ஹிந்துவே//

போச்சுறா! :(
ஹிந்து"வே"-ன்னு அடிச்சிச் சொல்லும் அளவுக்கு என்ன ஆதாரம் இருக்கு, வள்ளுவர் பற்றி? இல்லீன்னா சும்மா Blanket Statement-ஆ? :)

//ஆனால் அவர் திருக்குறளை ஒரு சமய நூலாக எழுதவில்லை//

ஏதோ, இம்மட்டிலாவது ஒப்புக்கிட்டீங்களே! நன்றி! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கோவி அண்ணா
உங்க கிட்ட கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு! கேட்கட்டுமா? :)

//இராமயணம் உள்ளிட்ட பவுத்த சாதகக் கதைகளெல்லாம் திருமால் கதைகளாக ஆன பிறகு//

அது எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?
பெளத்த இராமாயணம் தான் திருமால் கதைகளாக ஆச்சி-ன்னு?

நீங்க உங்களுக்குப் பிடிச்சிருக்கே-ன்னு மனம் போன போக்கில் எல்லாம் அடிச்சி விட மாட்டீங்க! எது ஒன்னையும் மெய்ப்பொருள் காண்பது அறிவு-ன்னு பகுத்து அறிந்தே சொல்வீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு! அதனால் கேட்கிறேன்!

1. பெளத்த இராமாயணம் தான் திருமால் கதையாக ஆச்சுன்னா...
அப்போ ஜைன இராமாயணம்-ன்னு ஒன்னும் இருக்கு!

உங்க கூற்றுப்படிப் பார்த்தா, சமணர்கள் கூட பெளத்தத்தில் இருந்து தான் இராமாயணக் கதையை உருவிட்டாங்களா? :) இதுக்கு நீங்க வெளிப்படையாப் பதில் சொல்லியே ஆகணும்! :)

2. பெளத்தம் இராவணன்-ன்னு ஒருத்தனை இராமன் கொன்றதாகவே காட்டலை!
சமண மரபுப் படி = இராவணன் பாவி! நரகத்துக்குத் தான் போனான்! அங்கே அல்லல்பட்டு திருந்திய பிறகு, அடுத்த தீர்த்தங்கரரா ஆவான்-ன்னு சொல்லுது!

அப்படி இருக்க, இராவணனை இந்து மதம் மட்டும் அல்லாது, சமணம்/பெளத்தம் கூட இழிவு படுத்தி விட்டது-ன்னு சொல்வீங்களா? இதுக்கும் வெளிப்படையா நீங்க பதில் சொல்லியே ஆகணும்! :)

//இராமயணம் உள்ளிட்ட பவுத்த சாதகக் கதைகளெல்லாம் திருமால் கதைகளாக ஆன பிறகு//

நல்ல தரவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நிகழ்காலத்தில்... said...//

வாங்க, நலமா? ரொம்ப நாள் ஆச்சுது நான் பதிவு போட்டும், உங்களைப் பார்த்தும்! :)

//திருக்குறள் ஒரு உலகப்பொதுமறை என்பதை நல்லா எடுத்துச்சொல்லி இருக்கறீங்க..//

நன்றி! இது ரொம்ப நாளா எனக்கு இருந்த ஆதங்கம்!

சும்மா அந்தச் சொல் வருது, இந்த சொல் வருது, அதுனால வள்ளுவர் எங்காளு தான்-ன்னு, எத்தனை காலம் தான் ஜல்லி அடிப்பார்களோ? :) அதான் திருமால்=தமிழ்க் கடவுள் தரவுகள் வைக்கும் போது, இதையும் கொட்டித் தீர்த்துட்டேன்!

//கண்டிப்பா தனிமுயற்சியாக உரை எழுதும் தகுதி உங்களுக்கு இருக்கிறது.
இது வெறும் புகழ்ச்சி அல்ல:))//

ஆகா! இது வேறயா? :)

திருக்குறளுக்கு உரை எல்லாம் எழுத வேணாங்க! அதுல கொஞ்சமாச்சும் நல்லபடியாப் புரிஞ்சிக்கிட்டாலே போதும், வள்ளுவர் மனம் மகிழும்! கற்றதனால் ஆய பயன் என் கொல்? உரையால் ஆய பயன் என் கொல்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நரசிம்மரின் நாலாயிரம் said...
முத்திரை குத்தாமல் சுதந்திர பறவையாக பறக்க விடுவது மேலானது
திருக்குறள் - International Bird - உலக பொது மறை//

அதே! அதே!
சரியான புரிதலுக்கு நன்றி ராஜேஷ்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நரசிம்மரின் நாலாயிரம் said...
ஆதிபகவன் - Who?//

முதற்றே உலகு யாரோ, அவரே ஆதிபகவன்! :)

//தாமரை கண்ணான் - Who?//

யார் தோளில் சாய்ஞ்சா கொள்ளை இன்பமோ, அதை விட ஒரு படி குறைஞ்சவர் தாமரைக் கண்ணன்! :)

சாய்ஞ்சி பார்த்திருக்கேன்! அதான் சொல்றேன்! முருகா முருகா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Jo Amalan Rayen Fernando said...
நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கிறீர்கள்//

:)
நன்றி ஜோ! ஆராய்ச்சி எல்லாம் அறிஞர்கள் பண்ணுவது! இது இலக்கிய நேர்மை விழையும் முயற்சி! அவ்வளவே!

//இவரின் மதம் என்னவாக இருக்கும் என்று நினைப்பது ஒரு கூரியாசிட்டி//

Curiosity இருப்பது தவறல்ல! ஆனால் தங்கள் Curiosity-க்காக வள்ளுவரை காவு கொடுத்தல் தகுமா? அப்பறம் சினிமா நடிகையின் "கிசுகிசு" Curiosity-க்கும் இதுக்கும் என்ன பெருசா வித்தியாசம்?

//அதை அவர்கள் குறட்பாக்களில் தேடுகிறார்கள். அவர்களைக் குறை சொல்லமுடியாது//

தேடுவதோடு நிறுத்தினால் எதுக்குக் குறை சொல்லப் போறேன்? தேடுவதையும் மீறி, வள்ளுவர் இவர் தான் என்று முத்திரை குத்தும் போது தான் பிரச்சனை!

//பொதுக்கொள்கை என்ன என்று ஆராயலாம். இதற்கு இன்னூல் சமயனூலல்ல என்றெல்லாம் சங்கோஜப்பட வேண்டியத் தேவையில்ல//

சங்கோஜமா? பொதுக் கொள்கையை ஆராய்ந்து என்ன பண்ணப் போறாங்க? மக்களுக்கு என்ன பயன்? நக்கீரரை ஆய்ந்து கொள்ளட்டும்! எதுக்கு சமயம் வளையத்துக்குள் வராத ஒரு நூலை, தாங்கள் காண விரும்பும் பொதுக் கொள்கைக்காக வளைக்கணும்?

உதாரணமா, உங்கள் வலைப்பூவை எடுத்துக்கோங்க! அதில் உள்ள பொதுக் கருத்தை ஆராய்கிறேன் என்ற பெயரில், உங்கள் சாதி, அதுவா இருக்குமோ, சமயம் இதுவா இருக்குமோ, இவருக்கு இந்த டேஸ்ட்டோ-ன்னு எல்லாம் ஆளாளுக்கு தப்புதப்பா ஆராய்ஞ்சா சும்மா விடுவோமா?
ஆய்வு வலைப்பூவுக்கா இல்லை அந்த மனிதருக்கா?

//இளங்கோ வியத்தகு முறையில் ‘ஆய்ச்சியர் குரவையில்” திருமாலைப்பற்றிப்போட்டிருக்கிறார். ஆனால் அவர் வைணவரில்லை//

உண்மை!
அவர் தான் வேங்கடத்தில் இருக்கும் இறைவன் திருமாலே என்றும் காட்டுவது! சிலம்பு பற்றிய இதே தொடர்புள்ள பதிவு, இதோ!

கோவி.கண்ணன் said...

//அது எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?
பெளத்த இராமாயணம் தான் திருமால் கதைகளாக ஆச்சி-ன்னு?//

பவுத்த மதம் பரவிய தெற்காசிய நாடுகளில் இராமயணம் இருக்கு. வைதீக நெறிகள் சமயம் இல்லாமல் வெறும் கதைகள் மட்டுமே அங்கு செல்ல வாய்ப்பில்லை, எனவே இராமயணம் உள்ளிட்ட தசவாதாரக் கதைகள் புத்தமததிற்கு நெருங்கிய தொடர்புள்ளவை. தாய்லாந்து இந்தோனிசியாவில் கூறப்படும் கதைகள் இந்துக்கதைகள் என்பதாக நாமதான் கதைகிறோம். இந்துமதம் இல்லாது இந்துக்கதைகள் மட்டும் இடம் பெயர்ந்தது எப்படி ? ஒரு சமயம் பிற நாடுகளில் உள்வாங்கப்படும் போது அந்த சமயம் சார்ந்த கதைகளும் சேர்ந்தே உள்வாங்கப்படும், கிறித்துவருக்கு கிறித்துவரலாறு, முகமதியருக்கு இஸ்லாம் வரலாறு, இந்துக்களுக்கு இந்திய சமயவரலாறு...பவுத்தர்களுக்கு ? அவர்கள் சார்ந்த கதைகள் தானே சார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பவுத்த மதம் பரவிய தெற்காசிய நாடுகளில் இராமயணம் இருக்கு. வைதீக நெறிகள் சமயம் இல்லாமல் வெறும் கதைகள் மட்டுமே அங்கு செல்ல வாய்ப்பில்லை, எனவே இராமயணம் உள்ளிட்ட தசவாதாரக் கதைகள் புத்தமததிற்கு நெருங்கிய தொடர்புள்ளவை//

ஹிஹி!

பவுத்த மதம் "பரவிய" தெற்காசிய நாடுகளில்-ன்னு நீங்களே சொல்றீங்க! எங்கிருந்து "பரவியது"? இந்தியாவில் இருந்து தானே? அப்படீன்னா சமயத்தோடு தானே கதையும் போய் இருக்கணும்? "இந்திய பெளத்தத்தில்" இராமாயணம் எங்கே இருக்கு-ன்னு காட்டுங்க?

இந்தோனேசியாவில்/கம்போடியாவில் பெளத்தம் பரவியதால் தான், அங்கே இராமாயணம் இருக்கு! எனவே இராமாயணம் என்பது பெளத்தம்-ன்னு சொல்ற நீங்க...

அதே போல சீனாவிலும் இதே பெளத்தம் தானே? சீனாவில் இராமாயணத்தையும் காட்டுங்க! :)

இன்னும் என் முந்தைய கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை!
இராமாயணமே பெளத்தக் கதை என்றால், சமண இராமாயணத்தின் மூலம் என்ன?

திருமாலோடு "நைசா" இவனுங்க இராமாயணத்தைச் சேர்த்துட்டாங்க! உங்க தரவுகளால் தெளிவைடைய விருப்பம் கோவி அண்ணா! விளக்குங்கள் ப்ளீஸ்!

kargil Jay said...

Kannabiran,
if you lack knowledge in one thing, that does not mean that does not exist or it is wrong.

By giggling at others you dont show your knowledge, but that reveals your quality which i misunderstood initially.

there are 10 evidences about thiruvalluvar is hindu here :

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

kargil Jay said...

வள்ளுவர் இந்து மத தெய்வங்களை வெளிப்படையாகவே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் அவர் கூறியுள்ள இலக்கணங்கள் இந்து மதம் கூறும் பரம்பொருளுக்கே முழுமையாகப் பொருந்துகின்றன.

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், பிறவிப் பெரும் கடல் நீந்த அடி கொடுக்கும் இறைவன் என்றெல்லாம் வருபவை இந்து மதம் காட்டும் தெய்வம்தானே என்பதை மறுப்பவர்கள் உள்ளனர்.
ஆனால் அப்படி மறுக்கும் சமணர்களோ, பிற மதத்தவரோ சொல்ல முடியாத ஒரு தெய்வத்தை மிக வெளிப்படையாக எழுதியுள்ளார் திருவள்ளுவர். அது பாற்கடலைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஜ்யேஷ்டா தேவி என்னும் மூதேவி. குறள் 617 - இல் ‘மாமுகடி’ என்று மூதேவியின் பெயர் வருகிறது. மாமுகடி என்று மூதேவியைத் தான் அவர் சொல்கிறார் என்று மெய்ப்பிக்கும் வண்ணம், அதே குறளில், ஸ்ரீ தேவியையும் குறிப்பிடுகிறார்.

மடியுளாண் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு.

இங்கே அடியளந்தான் என்பது ‘எல்லா உலகையும் அளந்த இறைவன்’ என்று பரிமேலழகர் கூறுகிறார். தாயதெல்லாம் என்று வருவதால், முன்னே அடியளந்தான் என்றது, திருமாலைக் குறிக்கிறது.

அடியளந்தானுக்கும் திருக்குறளுக்கும் ஒற்றுமை இருக்கிறது.
அடியளந்த வாமனனும் குறளன்.
அவன் அளந்தது இரண்டியால் மூவுலகங்களை.

ignorance is not your power. it is just ignorance.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//kargil Jay said...
Kannabiran,
if you lack knowledge in one thing, that does not mean that does not exist or it is wrong//

:)
சரிங்க ஜே! அப்படியே ஆகட்டும்!
எனக்கு அறிவில்லை என்பது எனக்குப் பெருமையே! கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும், குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே!

//By giggling at others you dont show your knowledge, but that reveals your quality which i misunderstood initially//

:)
மிகவும் நன்றி! வாதங்களில் எதிர்க் கேள்வி கேட்பது Giggling ஆகாது! Googling வேண்டுமானால் ஆகலாம்! :)

அது எப்படிங்க எதிர்க் கேள்வி எழுந்தவுடன், பேசுபொருளை விட்டுட்டு, டபக்-குன்னு ஆளைப் பிடிச்சிக்கறீங்க? :)

பரவாயில்லை! இதற்குப் பதில் மட்டும் சொல்லுங்களேன்!
1. //பாகவதத்தில் இருந்தோ, இல்லை ஆழ்வார்கள் குறிப்பில் இருந்தோ...புத்தர் = திருமால் என்று குறிப்பு மட்டும் தர முடியுமா?//

2. Matsya, Koorma, Varaha, Narasimha, Vaamana-Trivikrama, Parsuraama, Raama, Balarama, Krishna, Kalki
தசாவதாரங்களில் புத்தர் சொல்லப்படுவதாக, Not from folklores, But from மூல நூல்களில் இருந்து உங்களால் குறிப்பு தர முடியுமா?

//there are 10 evidences about thiruvalluvar is hindu here :

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

இதைப் பல முறை வாசித்துள்ளேன்! இதை எழுதிய ஜெயஸ்ரீ-ம்மா எனக்கு அறிமுகமானவரே! :)

There are 10 evidences that vaLLuvar is NOT a hindu, but samaNar! here!
http://banukumar_r.blogspot.com/2009/11/blog-post.html

அதுக்கு என்ன சொல்வீங்க? நீங்க தருவது "evidence" என்றால் அவர்கள் தருவதும் "evidence" தானே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//kargil Jay said...
புத்தரே திருமால் அவதாரம்தான்..//

நீங்க தரவே தராமல், நீங்கள் அப்படி "நம்புவதை" அடிச்சிப் பேசறீங்க! தரவைக் கேட்டால், கேட்டவர்களை "அடிச்சிப்" பேசறீங்க! :)

ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட பல அறிஞர்கள் புத்தர் திருமால் அவதாரம் இல்லை-ன்னு ஒப்புக்கறாங்களே! அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?
http://www.vridhamma.org/en1999-13.aspx

Joint Communiqué by Jagadguru Shankaracharya Shri Jayendra Saraswatiji of Kanchi Kamakoti Pith and Vipassanacharya Satya Narayan Goenkaji.
The Maha Bodhi Society Office, Sarnath, Varanasi. 3:30 p.m., 11 November 1999
This joint communiqué is being issued after the cordial talk between Jagadguru Shankaracharya Shri Jayendra Saraswatiji of Kanchi Kamakoti Pith and Vipassanacharya Guruji Shri Satyanarayana Goenkaji.

Both agree and wish that there should be harmonious and friendly relations between both ancient (the Vedic and the Ṣramana) traditions. If there has been any misconception in this matter in the minds of the people of the neighbouring countries, it should be removed at the earliest.

The following was agreed:

1. Due to whatever reason some literature was written (in India) in the past in which the Buddha was declared to be a reincarnation of Vishnu and various things were written about him. This was very unpleasant to the neighbouring countries. In order to foster friendlier ties between the two communities we decide that whatever has happened in the past (cannot be undone, but) should be forgotten and such beliefs should not be propagated.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//kargil Jay said...
வள்ளுவர் இந்து மத தெய்வங்களை வெளிப்படையாகவே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்//

அட அறிவே!
இதைத் தான் நானே பதிவுல சொல்லி இருக்கேனே! படிக்கவே இல்லீயா? :)

ஒரு தெய்வத்தின் பேரை நூலில் ஒரு உவமைக்குச் சொன்னாக்கா, உடனே அவர் "இந்து" ஆகி விடுவாரா? :))

//மடியுளாண் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்//

வெளங்கிரும்!
இதைத் தான் பதிவில் நானும் குறிப்பிட்டு, வள்ளுவர் திருமால்-திருமகளைக் குறிக்கும் ஆதாரமாக கொடுத்துள்ளேன்!

தாமரைக் கண்ணான், அடி-அளந்தான் என்பதில் சிலருக்கு மட்டும் கருத்து வேறுபாடு இருந்தாலும், இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லாதபடி, அனைவரும் ஒப்புகிறார்கள்! திருமகள் குறிக்கப் பெறுகிறாள் என்றும் சொல்லி இருக்கேன்!

உங்களுக்கு வள்ளுவரை "ஹிந்து" என்று சொல்ல வேணும்! அதுக்காக skip பண்ணிக்கிட்டே படிச்சிட்டீங்க போல! :)

//வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், பிறவிப் பெரும் கடல் நீந்த அடி கொடுக்கும் இறைவன் என்றெல்லாம் வருபவை இந்து மதம் காட்டும் தெய்வம்தானே//

இந்த ஒவ்வொரு "சொல்"லுக்கும், சமணத்தில் இருந்தும் ஆதாரம் காட்டி விட்டார்களே! வெறும் "சொல்"லை மட்டுமே பிடிச்சிக்கிட்டா, இப்படித் தான்! :)

* ஒரு தெய்வத்தின் பேரை,
* ஒரு "சொல்" அளவில்
* ஒரு நூலில்,
* ஒரு உவமைக்குச் சொன்னாக்கா,
உடனே அவரை "மதத்துக்குள்" அடக்கப் பார்க்கறீங்க! பேஷ்! பேஷ்! :)

கார்கில்-ஜே ஐயா,
1. Answer to the points only.
2. Dont personalize a discussion.
3. Give me the references where Buddha is one of the "dasaavataarams" of vishnu, from authentic sources like Srimad Bhagavatham or aazhwar paasuram.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@KargilJay
//அடியளந்தானுக்கும் திருக்குறளுக்கும் ஒற்றுமை இருக்கிறது.
அடியளந்த வாமனனும் குறளன்.
அவன் அளந்தது இரண்டியால் மூவுலகங்களை.//

ஹா ஹா ஹா!

அது முருகனோ, பெருமாளோ...
ரெண்டு பேரையும் காமெடி பீஸ் ஆக்காம விட மாட்டீங்க போல! :)

முன்னாடி முருக பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இதே தான் சொன்னாங்க!
18 கண் = 18 மெய்யெழுத்து, 12 கை = 12 உயிரெழுத்து! 6 முகம் = கசடதபற! இப்படித் தான் தமிழே தோன்றியது :)

அப்படீன்னா முருகனுக்கு முன்னாடி தமிழ்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை! ஆதி சிவனாருக்குத் தமிழ் தெரியாது! என் முருகனுக்கே ஆறும் ஒன்னாச் சேர்வதற்கு முன்னாடி தமிழே தெரியாது! ஆறுமுகமும் சேர்ந்தாப்பாரு தான் தமிழே பொறந்துச்சா-ன்னு கேட்டதுக்கு இன்னி வரைக்கும் பதில் இல்லை!:)

நீங்க அதே போல,
பெருமாள் உலகை அளந்தது = ஈரடி
வள்ளுவர் அளந்தது = ஈரடி
-ன்னு லாஜிக் காட்டறீங்க! இதெல்லாம் ஒரு இலக்கியச் சுவைக்குத் தான்! தரவாகாது!

ஒன்பது அடியில் நிலை மண்டில ஆசிரியப்பா எழுதினா அப்போ "நவ"கிரக மண்டிலம் ஆயிருமா? :)

//ignorance is not your power. it is just ignorance.//

Thank you sire!
You are the Wise!
I am just Ignorant!
If I say "Valluvar is a Hindu", then I may become Wise! :)

thiruthiru said...

KRS,
உங்கள் வாதங்களையும், மற்றவர்கள் கருத்துக்களையும் படித்தேன். இந்த விவாதத்தில் இறங்குவதற்கு முன் திரு. கேசவ அய்யங்கார் (முன்னாள் அட்டர்னீ ஜெனரல் திரு பராசரனின் தந்தை) 640 பக்கஙளில் எழுதியுள்ள "வள்ளுவர் உள்ளம்" நூலைப் படித்துவிட்டு எழுதியிருக்கலாம். நீங்கள் இங்கு கேட்டுள்ள தரவுகள் (சான்றுகள் என்று தானே அர்த்தம்?)அங்கே ஏராளமாக உள்ளன. கிடைக்கிறதா பாருங்கள்! இல்லையென்றால் வருடி அனுப்புகிறேன்.
continuing .....

thiruthiru said...

.
அது சரி! இந்த விவாதமே தேவைதானா? சாதாரணமாக ஒரு ஊரில் புகழ்வாய்ந்த ஒருவன் இருந்தால் அவனைத் தனக்கு மிகவும் வேண்டியவன் என்று சொல்லிக் கொள்வது உலக இயல்புதானே!பழைய குடியரசுத் தலைவரை ஒரு முறை கூடப் பார்த்திராத எத்தனையோ இராமேஸ்வரத்துக் காரர்கள் ஏதோ சிறு வயதிலிருந்தே அவர் தங்கள் குடம்ப நண்பர் என்று சொல்வதைக் கண்டு நான் சிரித்திருக்கிறேன். அப்படி இருக்க, வள்ளுவனோ வெறும் கவி மட்டுமில்லை எழுதிய கருத்துக்களாலே வான்புகழ் கொண்டவன். எங்கள் ஆதிஜெகனாதப் பெருமாளைப் பாட வந்த ஒரு புலவர்கூட 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு பாடலை எடுத்து அதனுடன் பொருந்துமாறு பெருமாளின் புகழைப் பாடியுள்ளார். இது வேறு எந்த நாட்டுப் புலவனுக்கும் கிடைக்காத பேறு.
continues

thiruthiru said...

ஆக, ஒவ்வொருவரும் இவர் தம்முடையவர் என்று கொண்டாடும் அளவிலே ஒரு தமிழ்க் கவிஞன் நம் தமிழ் நாட்டிலே தோன்றினான் என்ற அளவிலே பெருமைப்பட வேண்டிய விஷயமாகக் கருதாமல் அவர் இவரில்லை, அவரில்லை என வாதம் செய்வது எதற்காக? என்க்குப் புரியவில்லை. அதுவும் உங்களிடமிருந்து! அந்த வள்ளுவர் சமய ஆச்சாரங்களைக் கொண்டு ஒழுகினாரா ? நமக்குத் தெரியாது! ஆனாலும் அவர் தோன்றிய கால வழக்கப்படி அன்றிருந்த ஏதோ ஒரு சமயத்தைப் பின்பற்றியவர்களுக்கு மகவாகத்தானே அவர் பிறந்திருக்க வேண்டும்? ஆனாலும் ஒன்று! அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமில்லை! அதில் ஒரு 0.00000001 சதவிகிதமாவது நம்மால் பின்பற்ற முடிகிறதா என்பதில் அக்கறையில்லை! ஆனால் அவர் யாரைச் சேர்ந்தவர் அல்லது யாருடன் சேராதவர் என்று ஒரு விவாதம்! ரொம்பத் தேவையா கேஆர்எஸ்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆத்திகமோ, நாத்திகமோ...ரெண்டு பேருமே இப்படித் தான் இருக்காங்க! நான் தான் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் போல! :))))

* ஆத்திகர் இந்தப் பக்கம், "வள்ளுவர் இந்துவே!"-ன்னு தரவே தராமல் "அடித்துச்" சொல்கிறார்!

* கோவி அண்ணா, அந்தப் பக்கம், "திருமால் கதையெல்லாம் பெளத்தக் கதைகளே"-ன்னு தரவே தராமல் அடித்துச் (ஆனா என்னை அடிக்காமல்) சொல்கிறார்! :)

எனக்குத் திருமால் மேல் தத்துவத் தாகம்! என் முருகன் மேல் கொள்ளை ஆசை! வள்ளுவர் மேல் நன்மதிப்பு! தமிழ் மேல் மோகம்! அதான் நடுல மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் போல! :)

திருமால் கதையெல்லாம் பெளத்தமே-ன்னு கோவி அண்ணா சொல்வதும் தவறான தகவல்-ன்னு சொல்லணும்!
வள்ளுவர் இந்து"வே"-ன்னு ஜே அடிச்சிச் சொல்வதையும் தவறான தகவல்-ன்னு சொல்லணும்! உஷ்ஷ்...அப்பாடா... :))

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
"மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க திருத்திரு சார், நலமா?

தங்கள் கேள்வியின் நோக்கம் சிறந்தது! நியாயமான ஆதங்கமே!

இது வாதம்/விவாதம் செய்ய எழுந்த பதிவு அல்ல!
இது ஒரு தொடர்ப் பதிவு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்!

திருமால், தொல்காப்பியம் முதலான சங்க இலக்கியத்தில், அதற்கும் மேலாக, "சங்க வாழ்வியலில்" எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறான் என்பதைச் சங்கத் தமிழ்ப் பாக்களில் காணும் முயற்சியே இது!

அப்படி தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு என்று வரும் போது, கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் பற்றிய பதிவு இது!

திருக்குறளில் திருமால் பேசப்பட்டுள்ளானா? திருமால் என்ற "சொல்" புழங்கப்படுகிறதா என்ற அகச் சான்று!

ஆனால் அப்படித் தேடும் போது, உடனே "திருமால்" என்ற "சொல்" வந்து விட்டதாலேயே, திருக்குறள் வைணவம் என்றும் சொல்லி விடக் கூடாது அல்லவா? அதற்காகத் தான் புறச் சான்று!

இரண்டையும் சேர்த்தே பதிவில் சொன்னேன்!

ஆனால், எப்போதும் ஒரே பக்கச் சார்புச் சிந்தனை உடையவர்கள், வள்ளுவர் இந்து"வே" என்று நிலைநாட்ட உரையாடுகிறார்கள்!

உரையாடுவது தவறல்ல! ஆனால் தக்க தரவுகளோடு உரையாட வேணும்! - தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று!

//சாதாரணமாக ஒரு ஊரில் புகழ்வாய்ந்த ஒருவன் இருந்தால் அவனைத் தனக்கு மிகவும் வேண்டியவன் என்று சொல்லிக் கொள்வது உலக இயல்புதானே!//

:)
தவறில்லை!

ஆனால், அவன் எங்க குடும்பம் தான்! அவன் எழுதியது எங்களைப் பத்தித் தான்! அவன் எங்க அப்பாருக்கு கொடுக்க வேண்டிய காசு கூட பாக்கி இருக்கு-ன்னு அடிச்சி விடுவது...இயல்பு அல்லவே!

//வாதம் செய்வது எதற்காக? என்க்குப் புரியவில்லை. அதுவும் உங்களிடமிருந்து!//

:)
பிழை இருப்பின் மன்னியுங்கள் ஐயா!
இதான் நோக்கம்!

* திருக்குறளில் உள்ள கருத்துக்கள், எங்கள் சமயத்தில் உள்ளவையோடும் ஒத்துப் போகிறது என்று சொல்லலாம்! தவறே இல்லை! பதிவிலும் சொல்லி உள்ளேன்!

* ஆனால், சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு, உவமைக்குச் சொல்லப்பட்ட சொற்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சமய முத்திரை குத்துவது வேண்டாம் என்று மட்டுமே சொல்ல வருவது!


அதைப் பொதுப் பார்வைக்கு வைக்க முயன்றேன்! அவ்வளவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திரு. கேசவ அய்யங்கார் (முன்னாள் அட்டர்னீ ஜெனரல் திரு பராசரனின் தந்தை) 640 பக்கஙளில் எழுதியுள்ள "வள்ளுவர் உள்ளம்" நூலைப் படித்துவிட்டு எழுதியிருக்கலாம். நீங்கள் இங்கு கேட்டுள்ள தரவுகள் (சான்றுகள் என்று தானே அர்த்தம்?)அங்கே ஏராளமாக உள்ளன. கிடைக்கிறதா பாருங்கள்! இல்லையென்றால் வருடி அனுப்புகிறேன்//

நன்றி ஐயா! நூலகத்தில் தேடுகிறேன்! இல்லையென்றால் "நூல் செல்வந்தரான" உங்களிடம் கேட்கிறேன்! :)
சிரமம் இல்லையென்றால், காப்புரிமை மீறாத பட்சத்தில், குறிப்பிட்ட பக்கங்களையாவது ஒளிவருடி அனுப்புங்கள்! மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

//வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!
//

நீங்க தோமா கிறித்தவர்கள் எழுதும் 'ஆய்வு'ப் புத்தகங்களைப் படித்ததில்லை என்று நன்கு தெரிகிறது. கிறித்தவமும் திருக்குறளும் என்றொரு நூலை வத்திராயிருப்பு நூலகத்தில் 1990ல் படித்திருக்கிறேன். அதில் இப்போது நன்கு நினைப்பிருப்பது - சான்றோர்கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருப்பவர்கள் அபோஸ்தலர்கள்; அவர்கள் தேவகுமாரனைப் பற்றி சான்று சொன்னதால் சான்றோர்கள் எனப்பட்டார்கள். இது போக இந்த நூல் முழுவதும் ஏன் திருக்குறள் ஒரு கிறித்தவ நூல்; ஏன் திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று 'சான்றுகளுடன்' விளக்கி இருந்தார்கள்! :-) (இங்கே சிரிப்பான் போடலாமா கூடாதா என்று தெரியலையே!)

குமரன் (Kumaran) said...

ஆனையை அளந்த ஆறு அந்தகர்கள்ன்னு எகனை மொகனையா அடிக்கடி சொல்றீங்களே?! அந்த கதை என்னன்னு தான் சொல்லுங்களேன்?!

குமரன் (Kumaran) said...

திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை! இந்த அறைகூவலுக்கும் அறிவு சார்ந்த மறுப்பு எழுப்பப்படுவதைக் காண்கிறேன். எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நூலையே உலகப்பொதுமறை எனலாம்; வள்ளுவத்தில் இக்காலத்திற்கு ஏற்காத சில கருத்துகளுக்கும் வெளிநாட்டாருக்கு உவக்காத சில கருத்துகளும் இருப்பதால் அதனை உலகப் பொதுமறை என்பது நமக்குள்ளே நாமே போற்றிக் கொள்ள உதவுமே தவிர முழு உண்மையாகாது என்றொரு கட்டுரை படித்த நினைவு. உலகப்பொதுமறை என்று இங்கே சொல்லியிருப்பதைப் படித்தவுடன் நினைவிற்கு வந்தது. சொன்னேன். என்னை அடிக்காதீர்கள்!

குமரன் (Kumaran) said...

அப்ப முருகனை விட தாமரைக்கண்ணன் குறைவுன்னு சொல்றீங்க. அப்படி தானே?! உங்க நெத்தியில பட்டை இல்லாட்டியும் புத்தியில பட்டை இருக்குன்னு காமிச்சிட்டீங்க இரவி! :-))))))

குமரன் (Kumaran) said...

திருக்குறள் என்ற சொல்லுக்குத் தான் எத்தனை மதிப்பு! இந்தத் தொடரில் தொடர்ந்து எத்தனையோ எழுதிக் கொண்டு வருகிறீர்கள். திருக்குறள் என்று தலைப்பில் சொன்னதால் பலர் கண்ணிலும் பட்டது போலும்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
திருக்குறள் என்ற சொல்லுக்குத் தான் எத்தனை மதிப்பு!//

அது என்னமோ முக்காலத்துக்கும் உண்மை தான் குமரன்!
தமிழின் குரல் குறள்!

//இந்தத் தொடரில் தொடர்ந்து எத்தனையோ எழுதிக் கொண்டு வருகிறீர்கள். திருக்குறள் என்று தலைப்பில் சொன்னதால் பலர் கண்ணிலும் பட்டது போலும்! :-)//

ஹிஹி! மற்றதெல்லாம் "ஓர் இரவில் ஒளிந்து வளரும்" ஒளித்து வைக்கப்பட்ட இடுகைகள்! :) திரட்டிக்கும் அனுப்பப்படாது!

ஆனால் இது திருக்குறள் அல்லவா? அதான் சென்ற மாதத்துக்குள் ஒளிச்சி வைக்காம, திரட்டிக்கும் அனுப்பினேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அப்ப முருகனை விட தாமரைக்கண்ணன் குறைவுன்னு சொல்றீங்க. அப்படி தானே?//

ஐயயோ! நான் எங்கே அப்படிச் சொன்னேன்?

பிறந்த வீட்டை நான் விட்டுக் கொடுத்ததா சரித்திரமே இல்லையே! :) அதுவும் புகுந்த வீட்டின் முன்னால் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்! எங்கப்பா பரப்பிரம்மம்! அவர் நீரின்றி அமையாது உலகு! :)

//உங்க நெத்தியில பட்டை இல்லாட்டியும் புத்தியில பட்டை இருக்குன்னு காமிச்சிட்டீங்க இரவி! :-))))))//

ஹைய்யோ! ராகவா ராகவா! இதைப் பாரேன்! எனக்கு கஷ்டத்திலும் சிரிப்பு தாங்கலை! :))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நூலையே உலகப்பொதுமறை எனலாம்;//

அப்படீன்னா எதையுமே "பொது"-ன்னு சொல்லவே முடியாது! :)

//வள்ளுவத்தில் இக்காலத்திற்கு ஏற்காத சில கருத்துகளுக்கும் வெளிநாட்டாருக்கு உவக்காத சில கருத்துகளும் இருப்பதால்//

வெளிநாட்டாருக்கு உவக்காத கருத்தா? என்ன? என்ன? சொல்லுங்க சொல்லுங்க! :)

//அதனை உலகப் பொதுமறை என்பது நமக்குள்ளே நாமே போற்றிக் கொள்ள உதவுமே தவிர முழு உண்மையாகாது என்றொரு கட்டுரை படித்த நினைவு//

ஓரளவு உண்மை தான் குமரன்!
எனக்கும் குறளில் மாறுபட்ட கருத்துக்கள் ரெண்டு மூனு இருக்கு! அதில் முக்கியமானது = கற்பு/பெண்!

"பொது" என்பதே Relative Term தான்! எல்லாருக்கும் "பொதுவானது" ஒருத்தருக்கு மட்டும் ஒவ்வாது! அப்பறம் என்ன "பொது"?

வரைவின் மகளிர் என்னும் விலை மகளிர் பற்றிக் குறள் சில கருத்துக்களைச் சொல்லுது! அதை அந்த மகளிர் ஏற்றுக் கொள்வார்களா? அப்பறம் எப்படித் திருக்குறள் உலகப் "பொது" மறையாகும்? தமிழ்ப் "பொது" மறையாகவே ஆக முடியாதே! வரைவில் தமிழ்ப் பெண்கள் எதிர்ப்பார்களே! :)

இருந்தும், திருக்குறளை "உலகப் பொது மறை" என்று சொல்வதற்கான காரணம் என்ன?

கள் உண்ணும் தலைவர்களும், புலால் விரும்பி உண்ணும் தலைவர்களும் கூட, "பொது" மறை-ன்னு தான் சொல்றாங்க! பொதுமறை சொல்லுதே-ன்னே கள்/புலாலை விட்டுறச் சொல்லுங்க பார்ப்போம்! நானே விட மாட்டேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அப்பறம் எப்படித் திருக்குறள் "பொது" மறை ஆகும்? சும்மா நமக்கு நாமே புகழ்ந்துக்கவா அப்படிச் சொல்லுறோம்?

"பொது"த் தேர்தல்-ன்னு சொல்லுறோம்! எல்லாரும் பொதுவா-வா ஓட்டு போடறாங்க? பதினெட்டு வயசுக்கு கீழே இருக்குறவங்க தங்கள் கருத்தைச் சொல்லக் கூட முடியாத தேர்தல் எப்படி "பொது"த் தேர்தல் ஆகும்? :)

அதே போலத் தான் "பொது" மறையும்!

இனி (என்னளவில்) சொல்லுகிறேன்!
* பொது என்றால் Common For All என்ற பொருள் அல்ல!
* பொது என்றால் General என்ற பொருள்!

பொதுவா என்ன சொல்றீங்க-ன்னு கேட்கறோம்-ல்ல? It means, "generically" what u mean?
அதே போல், கூடுமானவரை எந்தத் தளத்திலும் சாயாது, மானுடம் பற்றி "Generic"-ஆகப் பேசுவதால் = "பொது" மறை!

ஆங்கிலம் கலவாது சொல்லணும்-ன்னா...
பொதுமை என்று குறிப்பிடுவது "அனைவர்க்கும் இதுவே நியதி" என்று சட்டத்தைத் திணிக்கும் ஒருமைத்தன்மை அல்ல!
பொதுமை என்பது பொது-நியதியை மட்டுமே காட்ட வந்தது!

இந்த நியதிகள் மாறுபடலாம் - காலத்துக்கு ஏற்றவாறு, ஊருக்கு ஏற்றவாறு, தனிப்பட்டவர்களின் சுவைக்கு ஏற்றவாறு...

* ஆனால் எந்தத் தளத்திலும் சாராது, "முடிந்த அளவிற்கு", பொதுமைத் தளத்தில் பேச வந்த முதல் தமிழ் நூல் என்பதால் = "பொது"!
* இவர்கள் மட்டுமே ஓதலாம் என்று மறைத்து வைக்கப்படாததால் = "மறை"!
* உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே = "உலகம்" = மானுடம்!

இந்த மூன்றும் உள்ளதால் தான் திருக்குறள் = "உலகப் பொது மறை"!

ஆப்பிரிக்கா கண்டத்தில் பசியோடு அழும் குழந்தைக்கோ, பாலஸ்தீனத்தில் வன்முறைக்குப் பலியாகும் குடும்பத்துக்கோ திருக்குறள் தெரியுமா என்ன? உலகம்-ன்னா ஆப்பிரிக்கா/ பாலஸ்தீனத்தைக் குறிக்கும் சொல் அல்ல! உலகம் = மானுடம்!

அன்று தமிழில் எழுந்த நூல்கள் பலவும் ஏதாவது ஒரு தளத்தில் தான் நின்றன!
* தொல்காப்பியம் கூட, தமிழர் வாழ்வியலை மட்டுமே சொல்லியது!
* திருமுருகாற்றுப்படை முருகனை வியந்தது!
* பரிபாடல் திருமாலையும் முருகனையும் வியந்தது!
* நாலடியார், திரிகடுகம் போன்ற நூல்கள் கூட, பொதுக் கருத்துக்கள் பேசினாலும், துறவு/ஒழுக்கம் என்ற தளத்தில் நின்றன! இன்பம்/காமம் பற்றி பேச மறுத்தன!

ஆனால் திருக்குறள் தான் முதன் முதலாக, வித்தியாசமாக, மாறுபட்டு...
எந்தத் தளத்திலும் நிற்காமல்...
துறவு-இல்வாழ்வு
பேரின்பம்-சிற்றின்பம்
காமம்-காதல்
பணம்-குணம்
என்று அனைத்துமே பேசப் புகுந்தது!

தமிழர் வாழ்வியலைக் கூடப் பேச மறுத்த முதல் புரட்சி = திருக்குறளே!
முல்லை-குறிஞ்சி என்றோ, திணை-துறை என்றோ...தமிழ் வாழ்வியலில் கூடத் தன்னை அடக்கிக் கொள்ளாமல், கூடுமானவரை, மானுடத்தை (உலகத்தை) மானுடமாகவே பார்க்க "முயன்ற" முதல் நூல்!

* உலகம் = மானுடம்
* பொது = தளம் இன்மை
அதான் "உலகப் பொது" மறை!


உலகப் பொது மறை என்பதை ஏதோ புகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! நோக்கத்தைக் காட்டுவதே அந்தப் பெயர்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆனையை அளந்த ஆறு அந்தகர்கள்ன்னு எகனை மொகனையா அடிக்கடி சொல்றீங்களே?! அந்த கதை என்னன்னு தான் சொல்லுங்களேன்?!//

?
நான் எகனை மொகனையா, இங்கே ஒன்னும் பேசலையே குமரன்! யானையைக் குருடர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்ன கதை, அனைவருக்கும் தெரியுமே! என் மேல் ஏதாச்சும் கோபமா? இல்லை வேறு ஏதேனும் கேட்க வருகிறீர்களா? தப்பா ஏதேனும் சொல்லி இருந்தா மன்னிச்சி, எங்கே தப்பு-ன்னும் சொல்லிருங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நீங்க தோமா கிறித்தவர்கள் எழுதும் 'ஆய்வு'ப் புத்தகங்களைப் படித்ததில்லை என்று நன்கு தெரிகிறது//

ஹிஹி! நீங்க அந்த "ஆய்வை"ச் சொல்லுறீங்களா? ஆமாம்! அது செம "ஆய்வு" தான்!

//சான்றோர்கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருப்பவர்கள் அபோஸ்தலர்கள்; அவர்கள் தேவகுமாரனைப் பற்றி சான்று சொன்னதால் சான்றோர்கள் எனப்பட்டார்கள்//

:)
"வால்" அறிவன் = பிறக்கும் போதே வால் நட்சத்திரம் தோன்றியதே! அந்த "வால்" அறிந்தவன் வால் அறிவன்! - இப்படியெல்லாம் செம "ஆய்வுகள்" இருக்குமே! அதானே? :)

//இங்கே சிரிப்பான் போடலாமா கூடாதா என்று தெரியலையே!//

அதெல்லாம் தாராளமா போடலாம்! சிரிக்கக் கூடச் சுதந்திரம் இல்லையா என்ன? "Giggling"ன்னு சொல்லிருவாங்க-ன்னு பயப்படறீங்களா? :) அப்படிச் சொன்னாலும் நமக்கு "Ignorance" வரம் வழங்குவார்களே! Ignorance is Bliss தானே? :))

குமரன் (Kumaran) said...

திரட்டியிலிருந்து வேண்டுமானால் ஒளிக்கலாம் இரவி; ஆனால் ரீடர் எல்லாவற்றையும் கொண்டு வந்து தந்துவிடுகிறது! :-)

---

/தாமரை கண்ணான் - Wகொ?//

யார் தோளில் சாய்ஞ்சா கொள்ளை இன்பமோ, அதை விட ஒரு படி குறைஞ்சவர் தாமரைக் கண்ணன்! :)

சாய்ஞ்சி பார்த்திருக்கேன்! அதான் சொல்றேன்! முருகா முருகா! :)

*

இங்கே தான் சொன்னீங்க முருகனை விட ஒரு படி குறைஞ்சவர் தாமரைக் கண்ணன்னு. வேணும்னா நீங்க சொன்னதை இன்னொரு தடவை படிச்சுப் பாருங்க. அப்ப புரியும். :-)

---

எந்தப் 'பொது'ன்னு நல்லா விளக்கம் சொன்னீங்க. நன்றி.

---

அட. நீங்க குருடர்கள்ன்னு தான் எழுதியிருக்கீங்க. அந்தக் கதை நெறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவங்களும் இருப்பாங்க இல்லை. அவங்களுக்காக அந்தக் கதையைச் சொல்லுங்கன்னு சொல்றேன். அதைச் சொல்றப்ப 'ஆனையை அளந்த ஆறு அந்தகர்கள்'ன்னு மோனைச்சுவையோட எனக்கு எழுத வந்திருச்சு. அதனை அப்படியே கொஞ்சம் திருப்பி 'எகனை மொகனையா' நீங்க சொல்றதா சொல்லிட்டேன். சிரிப்பான் போட மறந்துட்டேன் பாருங்க! நீங்க அதனால கோபம்ன்னு நினைச்சுட்டீங்க போல.

குமரன் (Kumaran) said...

ஜோ அமலன் ஐயா. நீங்கள் சொல்லும் சமண ஆசாரியரின் பெயர் குந்தகுந்தாசாரியர். கொண்டகொண்ட ஆச்சாரியா என்று ஆங்கில விக்கியில் படித்தீர்கள் போலும். குந்தகுந்தாசாரியரின் படத்தைத் தான் இரவி இடுகையிலும் போட்டிருக்கிறார்.

guruparan18 said...

மிக அருமையான கட்டுரை. மிக்க நன்றி. மாயன் கடவுள் பற்றி குறிப்பிட்டு இருக்கீரீகள், சம்மந்தப்பட்ட தரவுகள் தாங்களேன். படிக்க ஆர்வமாக இருக்கு.

Narasimmarin Naalaayiram said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// guruparan18 said...
மிக அருமையான கட்டுரை. மிக்க நன்றி. மாயன் கடவுள் பற்றி குறிப்பிட்டு இருக்கீரீகள், சம்மந்தப்பட்ட தரவுகள் தாங்களேன். படிக்க ஆர்வமாக இருக்கு//

நன்றி குருபரன்!

மாயோன் பற்றிச் சங்க இலக்கியங்களில்/சங்கத் தமிழ் வாழ்வியலில் வருவன எல்லாம் தொகுத்து, பதிவின் கீழேயே சுட்டி கொடுத்திருக்கேனே! Back to Tamizh KadavuL main page-ன்னு இருக்கு பாருங்க! Read & Enjoy! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குந்தகுந்தாசாரியரின் படத்தைத் தான் இரவி இடுகையிலும் போட்டிருக்கிறார்//

யப்பா! படத்துக்குக் கீழே பேரு போடலைன்னாலும் எப்படிப்பா கண்டுபுடிக்கறாரு இந்தக் குமரன்? அ.உ.ஆ.சூப்பர் ஸ்டார்-ன்னா சும்மாவா? :)

ஆமாம் அமலன்/குமரன் - அது KundKund Aacharya தான்!

மகாவீரர், கவுதமருக்குப் பின் ஜைனத்துக்குத் தொய்வு ஏற்பட்ட போது புத்துணர்ச்சி ஊட்டியவர்! சமயாச்சாரம், நியமாச்சாரம், அஷ்ட பாஹு போன்ற வடமொழி நூல்களை எல்லாம் எழுதி இருக்கார்!

ஆனால் இவர் தான் வள்ளுவரா? அடக் கடவுளே! சரி வள்ளுவர் வடமொழிப் புலமை பெற்றவர், ஜைன நூல்கள் எல்லாம் எழுதக் கூடியவர்-ன்னே வச்சிப்போம் ஒரு பேச்சுக்கு! ஆனா அந்த நூல்களை எழுதினாப் போல திருக்குறளை எழுதலையே! காமத்துப் பாலை அல்லவா வைத்திருக்கார்? படை மாட்சியை அல்லவா பேசுகிறார்? இதிலிருந்தே தெரியவில்லையா - திருக்குறள் சமய நூல் அல்ல!

மழித்தலும் நீட்டலும் வேண்டா - உலகம்
பழித்தது ஒழித்து விடின்!

இப்படிப் பாடியவருக்கே ஒரு சிலர் சடாமுடி/விபூதி கொடுத்துட்டாங்க! ஒரு சிலர் டோட்டலா மழிச்சிட்டாங்க! என்ன கொடுமை வள்ளுவா! :)

வள்ளுவர் பிறப்பால் ஏதாச்சும் ஒரு மதமாகத் தான் பிறந்திருப்பார், பெற்றோர்கள் வாயிலாக!
ஆனால் அதற்காக, அவர் நூலை, அதுவும் மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று அவரே சொல்லிய பின்னும், அவருக்கே மழித்தும்-நீட்டியும் செய்யும் "அராஜகம்"...
எப்படியும் அவரைத் தங்கள் நிறுவனப்படுத்தலுக்குள் அடைத்து விட வேண்டும் என்ற "முனைப்பு"...

யப்பா...
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்! முருகா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்
//இங்கே தான் சொன்னீங்க முருகனை விட ஒரு படி குறைஞ்சவர் தாமரைக் கண்ணன்னு. வேணும்னா நீங்க சொன்னதை இன்னொரு தடவை படிச்சுப் பாருங்க. அப்ப புரியும். :-)//

ஹா ஹா ஹா
அது வள்ளுவர் காட்டிய வழி! ஆழ்வார் காட்டிய வழியும் கூட!

அவர் தானே சொல்றாரு? - தோள் சாயும் சுகம், தாமரைக் கண்ணனை விட அதிக சுகம்-ன்னு!
அச்சுவை பெறினும் வேண்டேன்! "இச்"-சுவை தவிர யான் போய்!

அதுவே மன கொள்கைலு! மஞ்சி கொள்கை காதா? :)
தோழி கோதைக்கும் அதே கொள்கை! எனக்கும் அஃதே!

//யார் தோளில் சாய்ஞ்சா கொள்ளை இன்பமோ, அதை விட ஒரு படி குறைஞ்சவர் தாமரைக் கண்ணன்! :)
சாய்ஞ்சி பார்த்திருக்கேன்! அதான் சொல்றேன்! முருகா முருகா! :)//

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனையை அளந்த ஆறு அந்தகர்கள்//

தமிழ்நாடு என்னுமோர் தனிப்பெரும் ஊரில்...
பார்வையற்ற அறு பெரும் மக்கள்...
யானை ஒன்றை முதன் முதலாகப்
"பார்த்தனர்"! உதித்தது ஷட் தரிசனமாம்! :)

ஒருவர் காலைப் "பார்த்தார்" = மரமென்றார்!
ஒருவர் வாலைப் "பார்த்தார்" = கயிறென்றார்!

ஒருவர் துதிக்கை "கண்டு" = பாம்பென்றார்!
ஒருவர் தந்தம் "கண்டு" = வேலென்றார்!

ஒருவர் காது "கண்டு" = பெரும் முறமென்றார்!
ஒருவர் உடலைத் தடவி = நீள் சுவரென்றார்!

ஆர்வக் கோளாறில்..அந்தக அறுவர்
ஆனைத் தீர்ப்பை எழுதத் தலைப்பட...

வள்ளுவ நூலில் "இந்திரச் சொல்" உள!
எனவே வள்ளுவர் தமிழ் இந்து!
வள்ளுவ நூலில் "எண்குணச் சொல்" உள!
எனவே வள்ளுவர் சைவ நீதி!

வள்ளுவ நூலில் "ஐந்தவிச் சொல்" உள!
எனவே வள்ளுவர் சமணச் சான்றோர்!
வள்ளுவ நூலில் "அறவாழி அது" உள!
எனவே பெளத்தம்! தர்மச் சக்கரம்!

அறம்பொருள் இன்பம் பேசிடும் நூலோ?
அல்ல! ஈதோர் மத நன்னூலே!

இது தான் யானை! இது தான் யானை!
இதுவே "அந்தக ஷட் தரிசனம்"!

மரத்தை மறைத்தது மாமத யானை!
மரத்துள் மறைந்தது மாமத யானை!
மனத்தை மறைத்தது மாமத யானை!
மதத்துள் மறைந்தது மாமத யானை!

cheena (சீனா) said...

அன்பின் கேயாரெஸ்

இடுகையின் நீளளளளளம் அயர்ச்சியினை உண்டு படுத்துகிறதே - சிறு சிறு பகுதிகளாக இடலாமோ !

வள்ளுவர் ( தாடிக்காரன்னு நாங்க செல்லமாச் சொல்லுவோம் ) எச்சமயம் என்று யாருக்கும் தெரியாது. அவருக்கு சாயம் பூச வேண்டாம் என்ற ஒரு சிறு கருத்தினை வைத்து ஒரு ஆய்வு செய்து ஒரு இடுகை இட்டது நன்று நன்று. நல்லதொரு பணி.

நல்வாழ்த்துகள் இரவி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கேயாரெஸ்

நீண்ண்ண்ண்ண்ண்ண்டதொரு இடுகை - வள்ளுவனைப் பற்றிய ஒரு இடுகை. அவர் எச்சமயம் என ஆராயாமல் - வள்ளுவத்தினை மட்டும் ஆராயலாமே என வலியுறுத்தும் இடுகை - நல்ல சிந்தனை. நன்று. நல்வாழ்த்துகள் கேயாரெஸ்

நட்புடன் சீனா

கோவி.கண்ணன் said...

//ஹிஹி!

பவுத்த மதம் "பரவிய" தெற்காசிய நாடுகளில்-ன்னு நீங்களே சொல்றீங்க! எங்கிருந்து "பரவியது"? இந்தியாவில் இருந்து தானே? அப்படீன்னா சமயத்தோடு தானே கதையும் போய் இருக்கணும்? "இந்திய பெளத்தத்தில்" இராமாயணம் எங்கே இருக்கு-ன்னு காட்டுங்க?

இந்தோனேசியாவில்/கம்போடியாவில் பெளத்தம் பரவியதால் தான், அங்கே இராமாயணம் இருக்கு! எனவே இராமாயணம் என்பது பெளத்தம்-ன்னு சொல்ற நீங்க...

அதே போல சீனாவிலும் இதே பெளத்தம் தானே? சீனாவில் இராமாயணத்தையும் காட்டுங்க! :)//

இந்தியவில் புத்த மதம் எங்கே இருக்கிறது ? நாகை புத்தவிகாரை உடைத்து பெருமாள் கோவில் கட்டிய கதையெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன ? :)

புத்தமதத்தை சைவம், அசைவம்(ஐ மீன் வைணவம்) என பங்கு பிரித்துக் கொள்ளப்பட்டது, ம்கூம்னு சொன்னவங்க சூத்திர சண்டாளர் ஆக்கப்பட்டாங்க. புத்தர் இருந்த இடங்களில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டார். புத்தர் போஸ்(டர்)களில் ரங்கனாதன் படுத்துக் கொண்டார்.

இராமயணம் புத்தக்கதைகளை தழுவியது இல்லை என்றால் புத்தர் பிறந்த காலத்திற்கு முன்பே இராமயணம் இருந்ததுன்னு நீங்க தான் நிருபனம் செய்யனும்.

சீனாவில் கதைவேறு அது கம்யூனிச நாடு. அங்கு புத்தமதமும் அவர்களுடைய பழங்குடி மதமும் ஒன்றாகிவிட்டது.

********

நான் புத்தமதத்தை சேர்ந்தவனோ அல்லது பெருமாள் எனக்கு எதிரியோ கிடையாது

கோவி.கண்ணன் said...

அன்பின் கேஆர்எஸ் பெருமாளைப் பாடி இருக்கும் வள்ளுவர் முருகனைப் பற்றி மூச்சுவிட வில்லையோ ?

*****
உலகை அளந்தவன் என்றால் பாதங்களால் அளந்தவன் என்ற பொருள் மட்டுமே இல்லை, உலகம் முழுவதும் நடந்து அலைந்து திரிந்து உலகைப் பற்றி அறிந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் அப்பொருள் புத்தருக்கும் உண்டு.

கோவி.கண்ணன் said...

//இது போக இந்த நூல் முழுவதும் ஏன் திருக்குறள் ஒரு கிறித்தவ நூல்; ஏன் திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று 'சான்றுகளுடன்' விளக்கி இருந்தார்கள்! :-)//

:)

திருக்குறள் கிறித்துவ நூல் என்று நிருபனம் ஆகிவிட்டால் அதன் பிறகு அதனை இஸ்லாமிய நூல் என்று நிருபனம் செய்யத் தேவை இல்லாமலேயே அது இஸ்லாமிய சமய நூல் ஆகிவிடும், ஏனென்றால் ஏசு கிறித்து இஸ்லாமைத்தான் பரப்பினார் என்பது இஸ்லாமியரின் கூற்று.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
அன்பின் கேஆர்எஸ் பெருமாளைப் பாடி இருக்கும் வள்ளுவர் முருகனைப் பற்றி மூச்சுவிட வில்லையோ ?//

இதை நீங்க வள்ளுவர் கிட்ட தான் கேட்கணும்! :)

மேலும் வள்ளுவர் திருமாலை நேரடியாகக் குறிப்பிடவில்லை! தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்றே சொல்கிறார்! ஒரே ஒரு இடத்தில் மட்டும் திருமகளை நேரடியாகச் சொல்கிறார்! இதைப் பதிவிலும் "ஒளிக்காது/மறைக்காது/வைணவப் போர்வை ஏதும் போர்த்திக் கொள்ளாது" சொல்லி உள்ளேனே! :))

ஆனால் தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்று சொன்னவர், ஏன் குறிஞ்சிக் கிழவன், முருகுடை முதல்வன், சூர் மடித்தான் என்றெல்லாம் சொல்லலை? - இதை வள்ளுவர் கிட்ட போயி கேட்டுக்கிட்டு வாங்க! நல்லா கேக்குறாரு-ப்பா டீடெய்லு! :)

Radha said...

Very interesting post. :-)
More interesting discussions. :-))
thaamarai kaNNaan ulagu = Krishna's shoulder. :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கோவி அண்ணா
//உலகை அளந்தவன் என்றால் பாதங்களால் அளந்தவன் என்ற பொருள் மட்டுமே இல்லை,//

உம்....அப்புறம்? :)

//உலகம் முழுவதும் நடந்து அலைந்து திரிந்து உலகைப் பற்றி அறிந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்//

ஜூப்பரு!
ஆனா இங்கே உலகளந்தான்-ன்னு பொதுவாச் சொல்லலையே! "அடி அளந்தான்" என்றல்லவா குறிப்பிட்டுச் சொல்றாரு வள்ளுவர்!
தனித் தமிழ்த் தந்தை தேவநேயப் பாவாணர் உரையைப் படித்தீர்களா?

//அப்படிப் பார்த்தால் அப்பொருள் புத்தருக்கும் உண்டு//

புத்தர், தம் நாட்டை விட்டு வெளியே கூட தாண்டியதே இல்லை!
அப்பறம் எப்படி "உலகம் முழுவதும் நடந்து அலைந்து திரிந்து"? :))

எப்படியாச்சும் பொருத்தணும்-ன்னு நினைச்சி கண்ட இடத்தில் ஃபெவிக்கால் ஒட்டினா, இப்படித் தான் பல் இளிக்கும்! :))

அளந்தான் என்பதற்குப் பொருள் என்ன? = "அளப்பது"/அளவை!
நடந்தான், திரிந்தான், போகினான், கடந்தான், நடையாய் நடந்து தேய்ந்தான்-ன்னு எல்லாம் சொல்லலாமே? "அளந்தான்" என்று ஏன் குறிப்பிட்டுச் சொல்லணும்? புத்த பிரான் Surveyor-ஆக போய் ஏதும் அளக்க வில்லையே! தான் நடந்த நடை எவ்வளவு என்று கூட அளந்து பார்த்துக் கொள்ளாத மகான் அவர்!

தனித் தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணரைப் படியுங்கள்!
அடி அளந்தான் = கதிரவன் (அ) திருமால்! அவ்வளவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்தியவில் புத்த மதம் எங்கே இருக்கிறது?//

ஏன் இல்லை? அம்பேத்கார் கேட்டால் உங்களைப் பளார் என்று அறைந்து விடுவார்! எச்சரிக்கை! :)
சாரநாத், சாஞ்சி என்று இன்றும் தலாய் லாமா முதற்கொண்டு யாத்திரை செய்ய விரும்பும் பெளத் தலங்கள் பல உள!

//நாகை புத்தவிகாரை உடைத்து பெருமாள் கோவில் கட்டிய கதையெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன ? :)//

அய்யா சாமீ!
ஒங்கூரு நாகப்பட்டினம் தானே! ஒங்கூரைப் பத்தி ஒங்களுக்கே தெரியலீன்னா எப்படி? :)
எப்பவாச்சும் கோலி ஆடுறதை விட்டுட்டு, புத்த விகாரம் இடிபாடுகளில் போய்த் தேடிப் பார்த்து இருக்கீங்களா? மொதல்ல அதைப் பண்ணுங்க! :)

நாகை விகாரத்து தங்க புத்தர் சிலையைக் களவாடியது மட்டுமே திருமங்கை மன்னன் செய்தது! அப்போ அவர் பக்காத் திருடர்! ஆழ்வார் இல்லை! :)
புத்தரைத் திருடியதும் புத்த மதம் என்பதற்காக இல்லை! சொக்கத் தங்கத்துக்காகத் தான்! புத்தரை மட்டுமா திருடினார்? நாமம் போட்டு ஊரை ஏய்த்த எண்ணைய் வாணிபச் செட்டியார், இன்னும் பல வைணவச் செல்வந்தர்கள் வீட்டிலும் சேர்த்தே தான் திருடினார்! :)

புத்தர் சிலையை நாகை விகாரத்தில் இருந்து களவாடிய போது, துரத்திக் கொண்டே ஓடி வந்தார்கள்! கிணற்றில் புதைத்து விட்டு, ஆளு எஸ்கேப் ஆகி, அப்பறம் தானே தங்கத்தை மீட்டார்? படை பலத்தோடு சென்று புத்த விகாரத்தை இடித்துத் தள்ள வில்லையே! அப்படித் தள்ளி இருந்தா எதுக்குப் பயந்துகிட்டு ஓடியாறணும் அந்த ராபின்ஹூட் மங்கை "மன்னன்" (பேட்டை பிஸ்தா)?

ஒழுங்கா யோசிங்க! :)
சொந்த ஊரிலேயே இடிச்சாங்களா-ன்னு தெரியாம, பதிவுல எல்லாம் இடிக்க வந்துட்டாங்கப்பா கோவியார்கள்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கோவி
//புத்தமதத்தை சைவம், அசைவம்(ஐ மீன் வைணவம்) என பங்கு பிரித்துக் கொள்ளப்பட்டது, ம்கூம்னு சொன்னவங்க சூத்திர சண்டாளர் ஆக்கப்பட்டாங்க//

அதற்கெல்லாம் முன்பே சூத்திர/சண்டாளர் என்னும் கொடுமை இருந்தது! புத்த மதத்தைக் கிடா வெட்டி பங்கு போட்டுக் கொண்ட போது உருவாகவில்லை அக்கொடுமைகள்!

//புத்தர் போஸ்(டர்)களில் ரங்கனாதன் படுத்துக் கொண்டார்//

Sweeping Statement-ன்னா அது கோவி வாசகம்-ன்னு பேரு வாங்கிக்காதீங்க! பகுத்து+அறிந்து, மாற்று உரையுங்கள்! அதுக்குப் பேரு தான் பகுத்து+அறிவு! :)

தொல்காப்பிய, பதிற்றுப்பத்து காலத்தில் புத்த மதமே கிடையாது (அ) பரவலை! அப்போதே "அறி துயில்" அமர்ந்தான் துழாய் மார்பன்-ன்னு சங்கத் தமிழ் காட்டுகிறது! அதுக்கு என்ன சொல்லப் போறீங்க? பொருந்துச் சொல்ல வேணாம்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இராமயணம் புத்தக்கதைகளை தழுவியது இல்லை என்றால் புத்தர் பிறந்த காலத்திற்கு முன்பே இராமயணம் இருந்ததுன்னு நீங்க தான் நிருபனம் செய்யனும்//

தோடா!
இவர் அடிச்சி விடுவாராம்! அது இல்லை-ன்னு நான் நிரூபிக்கணுமாமா? :)

Jatala Tales - புத்த ஜாதகக் கதைகள் - இது தான் இராமாயணம் ஆச்சு-ன்னு தரவே இல்லாமல் சொன்னது நீங்க! சொல்றவங்க தரவு குடுக்க மாட்டாங்களாம்! நாங்க தரவு குடுத்து மறுக்கணுமாமா? தோடா! எந்த ஊர்-ல இருக்கீக? :)

புத்தர் செய்த அருளுரைகளில், "தம்ம பதங்களில்", இராமாயணக் குறிப்பு எங்கே வருது-ன்னு நீங்க நிரூபியுங்க பார்ப்போம்! அட்லீஸ்ட் ஒரே ஒரு குறிப்பு குடுங்க! உங்களுக்கு சல்யூட் அடிக்கறேன்! :)

//சீனாவில் கதைவேறு அது கம்யூனிச நாடு. அங்கு புத்தமதமும் அவர்களுடைய பழங்குடி மதமும் ஒன்றாகிவிட்டது//

கம்யூனிசமோ, வெங்காயமோ...ஆக மொத்தம் புத்த விகாரம் அங்கே இப்பவும் இருக்கு-ல்ல? அப்போ இராமயணக் கதையும் இருக்கணும்-ல்ல? (உங்க லாஜிக் படி) அதைக் காட்டுங்க பார்ப்போம்! அட, கம்யூனிசம் இப்ப வந்தது தானே! அதுக்கு முன்னாடியே தான் புத்த மதம் அங்கே போயிருச்சே! கம்யூனிசம்-ன்னு சொல்லி உங்கள் வாதத்தில் நீங்களே ஓட்டை போட்டால் எப்படி? :) புத்த சமயத்தோடு போன புத்த இராமாயணத்தைச் சீனாவில் ஒரு இடத்திலாச்சும் சான்று காட்டுங்கள் கோவி அண்ணா!

//நான் புத்தமதத்தை சேர்ந்தவனோ அல்லது பெருமாள் எனக்கு எதிரியோ கிடையாது//

சிவசிவ! அதான் ஊருக்கே தெரியுமே! எதுக்கு இந்த டிஸ்கி புஸ்கி எல்லாம்? :)

கோவி.கண்ணன் said...

//புத்தர், தம் நாட்டை விட்டு வெளியே கூட தாண்டியதே இல்லை!
அப்பறம் எப்படி "உலகம் முழுவதும் நடந்து அலைந்து திரிந்து"? :))//


புத்தர் சித்தார்தனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வரவில்லை

//தனித் தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணரைப் படியுங்கள்!
அடி அளந்தான் = கதிரவன் (அ) திருமால்! அவ்வளவே!//

பாவாணர் சொல்லிட்டார், பரிமேலழகர் சொல்லிட்டார் சரியாத்தான் இருக்கும் என்கிற கூற்று எனக்கு ஒப்புதல் இல்லை.

//Sweeping Statement-ன்னா அது கோவி வாசகம்-ன்னு பேரு வாங்கிக்காதீங்க! பகுத்து+அறிந்து, மாற்று உரையுங்கள்! அதுக்குப் பேரு தான் பகுத்து+அறிவு! :)//

மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தவிர்த்து உருவகங்களை 'தாமரை கண்ணன்' என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் வருணனை செய்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை

//ஒழுங்கா யோசிங்க! :)
சொந்த ஊரிலேயே இடிச்சாங்களா-ன்னு தெரியாம, பதிவுல எல்லாம் இடிக்க வந்துட்டாங்கப்பா கோவியார்கள்! :)//

மன்னனாக இருந்த போது களவாடினார். ஆழ்வாரானபோது திருப்பிக் கொடுத்திருக்கலாம் இல்லையா ?

//கம்யூனிசமோ, வெங்காயமோ...ஆக மொத்தம் புத்த விகாரம் அங்கே இப்பவும் இருக்கு-ல்ல? அப்போ இராமயணக் கதையும் இருக்கணும்-ல்ல? (உங்க லாஜிக் படி) அதைக் காட்டுங்க பார்ப்போம்! அட, கம்யூனிசம் இப்ப வந்தது தானே! அதுக்கு முன்னாடியே தான் புத்த மதம் அங்கே போயிருச்சே! கம்யூனிசம்-ன்னு சொல்லி உங்கள் வாதத்தில் நீங்களே ஓட்டை போட்டால் எப்படி? :) புத்த சமயத்தோடு போன புத்த இராமாயணத்தைச் சீனாவில் ஒரு இடத்திலாச்சும் சான்று காட்டுங்கள் கோவி அண்ணா!//

சீனா எப்போதுமே குறிப்பிட்ட மத ஆதிக்கத்தில் இருந்ததே இல்லை. கம்யூனிசம் அங்கே வளர அதுவும் ஒரு காரணம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ கோவி அண்ணா
//புத்தர் சித்தார்தனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வரவில்லை//

புத்தர் புத்தரான பிறகும் தேசம் தாண்டவில்லை! உலகெங்கும் அலைந்து திரிந்து நடந்த கால்கள் is not equal to அடி அளந்தான்!

ஒங்க வீட்டுலேயே கேட்டுப் பாருங்க! ஏங்க இப்படி "நடையா நடக்கறீங்க"-ன்னு தான் சொல்வாங்களே தவிர ஏங்க இப்படி "அடியா அளக்கறீங்க"-ன்னு சொல்லவே மாட்டாய்ங்க! :)

//பாவாணர் சொல்லிட்டார், பரிமேலழகர் சொல்லிட்டார் சரியாத்தான் இருக்கும் என்கிற கூற்று எனக்கு ஒப்புதல் இல்லை//

உங்களை ஒப்பச் சொல்லலை! பாவாணர் சொன்ன பொருளைப் படிச்சிப் பாருங்க-ன்னு தான் சொன்னது! ஏன்-ன்னா அங்கே லாஜிக் இருக்கு! :)

//மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தவிர்த்து உருவகங்களை 'தாமரை கண்ணன்' என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் வருணனை செய்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை//

நீங்க கருத வேணாம்! ஆனா சங்க இலக்கியம் கருதுதே! :)
தாமரைக் கண்ணான்-ன்னு பல இடங்களில் வருதே! நீங்க "கருதலை"ங்கிறதுக்காக அதெல்லாம் ரப்பர் வைச்சி அழிச்சிறலாமா? :)

சரிப்பா, நீங்க தான் சொல்லுங்க! தாமரைக் கண்ணான் உலகு என்றால் என்ன? உங்க உரையா இருக்கட்டும் திருக்குறளுக்கு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மன்னனாக இருந்த போது களவாடினார். ஆழ்வாரானபோது திருப்பிக் கொடுத்திருக்கலாம் இல்லையா ?//

ஜூப்பர்! இது கோவி பேச்சு!
அவர் என்ன அஜீத் ஆழ்வாரா, படம் ஃபெயிலியர் ஆச்சின்னா, திருப்பிக் காசைக் குடுக்கறதுக்கு? :)

மொதல்ல நாகை விகாரத்தை இடிச்சார்-ன்னு அபாண்டமாச் சொன்னீங்க! இல்லை-ன்னு தரவு காட்டியதும், "நைசா" திருப்பிக் கொடுக்கலாம்-ல்ல? ன்னு கேட்கறீங்க! நீங்கள் அபாண்டமாகச் சொன்னதற்கு, தவறான தகவல் பரப்பியமைக்கு முதலில் வருத்தம் தெரிவிப்பீர்களா? :)

நீங்கள் இப்படி கண்ட மேனிக்கு முகாந்திரம் இன்றிப் பேசுவதால், திருமங்கை மன்னன் திருடினான் என்ற உண்மையைக் கூட, அட இது கோவி பேச்சு-ப்பா ன்னு நாளைக்கு யாரும் நம்பாமல் போயிடுவாங்க! :)

திருமங்கை என்ற பேட்டைப் பிஸ்தா திருந்திட்டாரு! அப்பாலிக்கா திருடலை! அவ்ளோ தான்! முன்னாடி திருடினதை எல்லாம் வீடு வீடாப் போய்க் குடு-ன்னா, நானா குடுக்க முடியும்? :)

திருந்திட்டாரு! அப்பாலிக்கா திருடலை! வாடினேன் வாடி வருந்தினேன்-ன்னு ஊர் ஊராக் கிளம்பிட்டாரு! இன்னிக்கும் பெருமாள் கோயில் கருவறையில், தீபாராதானையின் போது, தமிழில் வைபவம் சொல்லி, தீபம் காட்டுறாங்க-ன்னா அது திருமங்கை அன்றே செய்த தமிழ்த் தொண்டு!

//சீனா எப்போதுமே குறிப்பிட்ட மத ஆதிக்கத்தில் இருந்ததே இல்லை. கம்யூனிசம் அங்கே வளர அதுவும் ஒரு காரணம்//

சூப்பர்! இதுக்கும் திருக்குறள் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?
நானும் அப்போதில் இருந்து இதைத் தான் யோசிக்கறேன்! கோவி என்ன சொல்ல வராரு-ன்னு! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
Very interesting post. :-)
More interesting discussions. :-))//

அதுல உனக்கு எதுக்கு ராதா அம்புட்டு சிரிப்பு? :)

//thaamarai kaNNaan ulagu = Krishna's shoulder. :-)))//

No! My Murugan's Shoulder! :)
To sleep there, is sweeter than Vaikuntham! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//cheena (சீனா) said... அன்பின் கேயாரெஸ்
இடுகையின் நீளளளளளம் அயர்ச்சியினை உண்டு படுத்துகிறதே - சிறு சிறு பகுதிகளாக இடலாமோ!//

ஆமாம் சீனா சார்! பல பேரின் உரையைச் சேர்த்ததால் வந்த எஃபெக்ட்! ஆனால் இது தேவை தான்! அவரவருக்கு ஒரு சார்பு நிலை! அதுக்கேத்த உரையைக் கொடுக்கணும்-ல்ல? அதான் நீளளளமாயிற்று போல! Sorry! :)

வள்ளுவர் சொல்லா முக்கியம்? வள்ளுவர் இதைத் தான் நினைச்சிச் சொன்னார் என்று தாங்கள் நினைக்கறது தானே முக்கியம்? :)) நல்ல வேளை திருமகள் குறளுக்குக் கலைஞர் உரை உட்பட எல்லாமே ஒத்துப் போகுது! :)

//அவருக்கு சாயம் பூச வேண்டாம் என்ற ஒரு சிறு கருத்தினை வைத்து ஒரு ஆய்வு செய்து ஒரு இடுகை இட்டது நன்று நன்று. நல்லதொரு பணி//

நன்றி சீனா சார்!
வள்ளுவம் மானுட நூல்! சமய நூல் அன்று, அன்று!

கோவி.கண்ணன் said...

உங்க வாதங்களில் நீங்களே திருப்தி அடைந்தால் சரி. எனக்கு ஒன்றும் இல்லை.

*******

வீடுபேறு அடைதல், விடுதலை, தவம் இவை எல்லாம் சமண பவுத்த மதங்களுக்கே உடைய கொள்கைகள்.

கடுமையான தவம் செய்து காட்சியும், வரமும் பெற்றக் கதைகளை படித்துவந்ததால் உங்களுக்கு திருக்குறள் சை