Friday, March 30, 2012

ஆண்டாள் என்னும் "பறை"ச்சி! பறை என்றால் என்ன?

(முன்குறிப்பு: "தீவிரமான" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

கோதையை "ஆன்மீகமாக" மட்டுமே புரிந்து கொள்ளாமல், 
அவள் "ஆன்மா"-வாகவும் புரிந்து கொள்ளும் பதிவே இது!
நான் இப்போதுள்ள நிலையில்... தோழியின் மனப்பாங்கு, முன்னெப்போதை விடவும் "மெல்லியலாகப்" புரிகிறது்)



"பறை" என்றால் என்ன?

மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான = "பறை",
ஆதிக்க மனப்பான்மை கொண்டோரின் செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது!
பாணன் ""பறையன்" துடியன் கடம்பன்
இந்நான்(கு) அல்லது குடியும் இலவே
- என்பது புறநானூறு! நெறிகளை, அரசுக்கே "பறை"ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்!

ஆனால்... சிறந்த ஒன்றைக், கும்மியடித்து கும்மியடித்தே, தவறாகப் பலுக்கிப் பலுக்கி, இழிவு பெறச் செய்தல் என்பது ஆதிக்கப் புத்தி!
சிறுபான்மையினரும் தங்கள் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம், ஆனால் எங்களுக்கு உட்பட்டே/அடக்கி வாசித்தே... = இதுவொரு மேலாளப் போக்கு:(

இதுக்கெல்லாம் போராடித் தான் மீளணும்!
போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும்,
"பறை" என்ற அழகான தமிழ்ச் சொல்லு போனது போனது தானே?

நெருடல் இல்லாமல் நம்மாலேயே பலுக்க முடிகிறதா? யோசித்துப் பாருங்கள்?
இன்று: பறையன்/பறைச்சி = வசைச்சொல்! சொல்லாடினால் சட்டப்படிக் குற்றம்!


ஆனால் என் தோழியை நான் "பறைச்சி"-ன்னு சொல்லலாமா?
இதற்காக, கோதை என் தோழமையை மறுதலிப்பாளா என்ன?

அப்படிப் பார்த்தா, என் கிட்ட தினப்படி திட்டு வாங்குறான் முருகன்:)
"Hey PoRkki Muruga" என்பதற்காக அவன் என்னை மறுதலித்து விடுவானா?
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் என்ற பந்தமாகி விட்டதே!

என்னடா இது, ரொம்ப நாள் கழிச்சி, இப்படி ஒரு பதிவு-ன்னு பாக்குறீங்களா?
பந்தலின் புதிய வாசக அன்பர் ஒருவர்...
நேற்றிரவு, என்னையப் பார்த்து,  திடீர்-ன்னு இப்படிக் கேட்டுட்டாரு:

"பந்தலில் (2008-09) வந்த திருப்பாவைப் பதிவுகள் இப்போது தான் பார்த்தேன். ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். 
ரொம்ப எளிமையா, அப்படியே மனசிலேயே தங்கி விட்டது. ஆனால் ஒரே ஒரு குறை. 
பறை என்பது பற்றி ஒன்றுமே சொல்லாமல் திருப்பாவை விளக்கம் எப்படி ரவி பூர்த்தி ஆகும்?
நீ (ங்க)முழு ’ஜஸ்டிஸ்’ பண்ணலை"

ஆகா! இப்படியொரு கணையா?
அப்படி என்ன எழுதி இருந்தேன் -ன்னு எனக்கே ஞாபகம் இல்லை! சரி, பொடிநடையா போய்ப் பார்த்தாக்கா...
Yes! வாசகர் சொல்வது சரியே! போதையில் தான் எழுதி இருக்கேன்:)

How did I forget lime and salt, when drinking Tequila?
Only, if I was already under the influence of my beloved's salty tamizh lips, I wud have forgotten :)

திருப்பாவைப் பதிவுகளில் என்னென்னமோ சொல்லிட்டு,
"பறை" பற்றி மட்டும் பொத்தாம் பொதுவாத் தான் சொல்லி இருக்கேன்; என் தவறு தான்!

"பறை" என்ற குறிப்புச் சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார்-நாயன்மார் பாட்டிலும் காண முடியாது!
ஒரு பெண்-கவிஞராக அவள் மட்டுமே செய்து காட்டிய Poetical Abstraction - கவிதை மறைக்கரு!

எதையோ மறைபொருளாச் சொல்லி வைக்கிறா = என்ன அது?
"வாய்ச்சுவையும் நாற்றமும்" எல்லாம் வெளிப்படையாச் சொன்னவ... இதை மட்டும் மறைபொருளா வைக்கிறாளே? ஏன்?
ஒரு பெண், தன் ஆணிடம் மிக விரும்பும் ஒன்றைத் தானே = மறைபொருளாச் சொல்லுவா?

* உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியில்....
* அவனே அவனே என்று ஊறித் திளைக்கும் ஒருத்திக்கு...
* அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே, தன் சம்பந்தமாகக் கொண்டு வாழ்பவளுக்கு...
"அவனுடைய" பறை -ன்னா என்ன?

தோழிக்குக் குறை வைக்க மனசு வருமா?
இதோ இரவிலே எழுதி, காலையில் "பறை"ந்து விடுகிறேன்! வாருங்கள்!


ஏய்.....இரு, இரு, ரவீ! அதுக்கும் முன்னாடி ஒரு கேள்வி!
ஆண்டாளை எப்படி நீ "பறைச்சி"-ன்னு சொல்லலாம்? அவள் ஒரு பிராமணப் பொண்ணு அல்லவா? :)

ஹிஹி! இன்றைய நிலைமைகளை அன்றைய உள்ளங்களின் மேல் ஏற்றிட முடியாது!
மேலும் ஆண்டாள் என்பவள் பிராமணப் பெண்ணல்ல! அப்படியான வீட்டில் வளர்ந்தவள் மட்டுமே!

கோதை, பிராமண வீட்டில் வளர்கிறாளே தவிர, அவள் ஒரு "இடைச்சி" போலவே தான் வளர்கிறாள்!
அவள் ஓர் அனாதைக் குழந்தை! "அயோனிஜை" என்று சமயத்தவர் சொல்லுவார்கள்! = யோனி தெரியாதவள்!
"அப்பன் பேர் தெரியாதவள்" என்ற கேலியும் இருந்திருக்குமோ என்னவோ?
= பட்டர்பிரான். கோதை, விட்டுசித்தன். கோதை
என்று வரிக்கு வரி, தன் இனிஷியலைப் போட்டுக் கொள்ள அவள் தவறுவதே இல்லை! வேறெந்த ஆழ்வார்களும் இப்படிச் செய்யவில்லை! (பிறப்பறியா முதலாழ்வார்கள் உட்பட)

* ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமின்றி..
* தமிழ் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
* காதல் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
"உளவியல்" அன்பர்களுக்கும் அவள் வாழ்வு = ஒரு பெரும் பொக்கிஷம்!

"இதே சொந்த மகளாக இருந்திருந்தா, பெரியாழ்வார் இப்படித் திருமணப் பேச்சு எடுக்காமல் விட்டு வைப்பாரா?" - என்று திருமால் பெருமை படத்தில், ஊர் கேலி பேசுவது போல் ஒரு காட்சி காட்டுவார்கள்!
என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலேயே, கண்ணனை ஊட்டி ஊட்டி வளர்த்தாகி விட்டது!
தோழனாய்த் துவங்கிய பாவனை, அறுக்க முடியாத காதலாகவே மாறி முடிந்து விட்டது! :(

ஆண்டாளின் கதை 
= இன்று வேண்டுமானால் ஒரு Fairy Tale போல இருக்கலாம்! 
= ஆனால் அவள் காலத்தில்?

காரைக்கால் அம்மை (எ) புனிதாவை, "பேய் மகளிர்" ஆக்கிச், சுடுகாட்டுக்குத் துரத்தியது போல் துரத்தவில்லையே தவிர,
கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ, நாம் அறியோம்!
அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ, நாம் அறியோம்!
தன் உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதலின் உயர்வு!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்" என்பது சமயப் பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது.. இன்று!
ஆலயம் தோறும் அவள் தான்! முன்பு நப்பின்னையைத் தொலைத்த தமிழ்க்குடி.. நல்ல வேளை, கோதையாவது மீட்டுக் கொண்டது!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்"
* ஆனால், அவள் "கலந்தாளா"?...
* ஒருத்தன் நினைப்பிலேயே "கரைந்தாளா"?

யார் அந்த "ஒருத்தன்"?
வெளியிற் சொல்ல வழியின்றி, இறையை ஏறிட்டுக் கொண்டாளா?
சரி, "இறையை" ஏறிட்டுக் கொண்டவள், "பறையை" ஏன் ஏறிடுகிறாள்??

அவள் கடைசிப் பாட்டு இங்கே இனியதில் இருக்கு; பாருங்க; அவள் மனப்போக்கை உங்களுக்கு எடுத்துக்காட்டக் கூடும்!
மருந்தாம் என்று தன் மனத்தே, 
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்..
அவனைப் பிரியாது, என்ன்ன்றும் இருப்பார்களே!

மனசாலேயே வைச்சிக்கிட்டு வாழ்ந்தால் = அவனைப் பிரியாது இருக்கலாம்
..... என்று தன் கவிதை அனைத்தையும் முடித்து விடுகிறாள்!

அரங்கன் சிலையில் கலந்தாளா?
= இப்படி எழுதுவதால், ஆன்மீக அன்பர்கள், சில வைணவ அன்பர்கள் கூட என் மேல் கோவித்துக் கொள்ள வாய்ப்புண்டு!
"நீயே இப்படியெல்லாம் எழுதலாமா ரவி?" என்று கேட்கவும் கூடும்! :)

ஆனால் என்னையத் தான் இப்படியான "நிறுவன"க் கட்டுகளில் கட்டிவைக்க முடியாதே! தோழனும் நண்பர்களும் நன்கு அறிவார்களே!
கோதையை, அவள் "ஆன்மாவை" ஒட்டியும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு "இடைச்சி" போலத் தான் வளர்ந்தாள்-ன்னு சொன்னேன் அல்லவா?
(இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சேலை கட்டி, இடைச்சி போலவே அலங்காரம் செய்து வைக்கிறார்கள்)

இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்!
கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...

இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன?

எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
பசு தானே "புனிதம்"?:)
எருமையைப் போய், "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? ha ha ha:)

பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்!
ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்!

அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு "சிறுவீடு"!
கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க!

உங்கள்-ல்ல எத்தனை பேருக்குச் "சிறுவீடு" பற்றித் தெரியும்? சின்ன வீடு-ன்னா தெரியும்:)
நகரத்தை விடுங்க! கிராமங்களில் இருந்து வந்தவர்கள்?
அவிங்களுக்குச் "சிறுவீடு" தெரிவது கூடக் கொஞ்சம் கஷ்டம் தான்!

பறைச் சேரி/ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...
எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்...
தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு!

இது மட்டுமல்ல..
* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

= யார் அந்த ஒருத்தன்?

கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும்,
உடம்பிலே வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்...
அவனையே நினைச்சி நினைச்சி,
தன்னையும் அவன் குடும்பமாகவே பாவித்து பாவித்து,

அவளும் அப்படியே ஆயிட்டாள்!
= பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!

பறை:
பறை = Drums!
பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா பொருள்? :)
பசங்க மட்டும் தான் பறையடிச்சி குத்துப்பாட்டுக்கு ஆடலாமா? நாங்களும் எறங்கறோம் பாரு-ன்னு இறங்கிட்டாளா? :)

* பறை = மோட்சம்      (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம்    (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (உண்மையா, காதல் ரீதியில்)

அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி..
அது எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தை எல்லாம் குறிக்கும்???

சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!

பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்!
போர், உழவு, கூத்து-ன்னு ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்!
அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக கொண்டாந்து வைக்கிறா கோதை!
(வேற எந்த இந்து மத-"உயர் வகுப்பு" விரதத்திலாச்சும் பறை இருக்கா?
இதெல்லாம் வீட்டுல தான் விடுவாங்களா? இதென்ன கோதை செய்யும் பழக்கம்?)

மலையாளத்தில் "என்ன பறையும்"-ன்னு கேக்கறோம்-ல்ல?
பறை = சொல்!
இசையால் அடித்துச் சொல்வது = பறை!
ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா?
= இல்லை! சமூக வழக்கிலே அது "அளக்கும் கருவி"யாகவும் மாறி விட்டது!

மேலே படத்தைப் பாருங்க! தட்டைப் பறை;
அதைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்!

கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?

முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!
* அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை!
* காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை!

காதல் ரீதியில்:
அவனுக்கு என்னையே குடுத்து, அவன் தரும் கூலியையும் என்னுள்ளேயே வாங்கிக் கொள்வேன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

ஆன்மீக ரீதியில்:
* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

சரணம் ஆகும் தன-தாள் அடைந்தோர்க்கு எல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று மாறன்-நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஒப்பு நோக்குங்கள்!



இப்படி, கூலி கொடுக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை!
* யார் தருவார் பறை? = நாராயண"னே"!
* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!
நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!

"பறை" என்பது "உள்ளுறை உவமம்" | Abstraction in Poetry

* வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத...
* ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய...
* அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!

"பறை" எங்கெல்லாம் வருகிறது? = மொத்தம் 11 இடங்களில்
---------------------------------------------------------------------------------------

1. நமக்கே "பறை" தருவான் (தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு (தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் (தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை" மாயன் மணிவண்ணன் (தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை" கொள்வாம் (தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் (தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் (தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
---------------------------------------------------------------------------------------

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = பறை!
அதுவும் Last 7 Songs = தொடர்ச்சியா வரும் சொல்லாட்சி! (24-30)

* துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...
* நடுவிலே, பறை=யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைச்ச பரிசைச் சொல்லி...
* இறுதியிலே, பறை=பேரின்பக் கூலி...

இற்றைப் பறையெல்லாம் வேணாம்,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே! உன் உறவே"-ன்னு முடிக்கிறாள்!

இப்போது தெரிகிறதல்லவா?
பறை = அவள் தனித்துவமான கவிதை!
ள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை = இசைக்கருவி
* பறை = அதில் படியளந்து பெறும் கூலி
* பறை = "எனக்கு-அவனே" என்ற பேரின்பக் கூலி! = பேறு

ஒரு காதல் உள்ளத்துக்கு, 
 "அவன்" கொடுக்கும் உச்ச கட்ட இன்பம் | இன்பக் கூலியே=பறை!
என் தோழி ஆண்டாளின் அடிமனசே...
அவன் பெருமாளோ? பெருமாள் என்று ஏறிட்டுக் கொண்டு வேறு யாரோ? எவனாயினும்...
"உனக்கு-அவனே" என்னும் "பறை" ஏல்-ஓர் எம்பாவாய்!!!

Read more »

Tuesday, February 07, 2012

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.orgஅதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!

Murugan.org -இல் இன்று பதிப்பித்து உள்ளார்கள்! அதன் சுட்டி இதோ)


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
...இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் ஏந்திய நாளே = தைப்பூசம்! -ன்னு "புராணம்" சொல்லும்

ஆனா, இட்டுக் கட்டிய புராணமா இல்லாம, இயற்கைத் தமிழாக...
 "வேல்" என்றால் என்ன? -ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


1. வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு!
திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்!
இரும்பு + கரிமம் (Carbon) குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!

ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க,
வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!



4. வேலின் தோற்றம்!

வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
எறிந்தால், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லக்கூடிய லேசான பளுவில் தான் வேல் செய்யப்படும்!
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடு அற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்!:))
ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும்!
ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே!
சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா?

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது 
என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு= அம்பு, யானைக்கு= வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:
கூர் வேல், நெடு வேல்
சுடர் வேல், கொற்ற வேல்
வீர வேல், வெற்றி வேல்...
-ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

- இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!

வேல் வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
-ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே
(ஐங்குறுநூறு, கபிலர்)

* அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து,
அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி
அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறி புடிச்சி ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன், என்னைத் திடீரென்று ஒதுக்கும் போக்கிலே துடிச்சிப் போய் நானே நொந்து போய் வாழுறேன்!
இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"
-ன்னு...இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி....

இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!


அவன் வேடத்தில் அவள்!

முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!

இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

சிலப்பதிகாரத்தில் வேல்:
பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொல்லுவாரு; அதை ஈடுகட்டவோ என்னவோ....
சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக விரிவாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
-ன்னு முருக பக்தரான நக்கீரரே, இரண்டு அடிகள் மட்டுமே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?
- என்று வேல் விருத்தத்தை, அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
-ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, நம்ம அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
....
இணை இன்றி, தான் உடையான் - ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் - திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!
* இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது,
அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல....
இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி, அதிலே மனம் பறிகொடுத்து,

திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்!
இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
* வேல் வகுப்பு
* வேல் விருத்தம்
= இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!
தனித்து வழி நடக்கும் என 
திடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணை அதாகும் 


திருத்தணியில் உதித்தருளும் 
ஒருத்தன்மலை விருத்தன் என 
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே !!
(- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்!
பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!


சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

"புராணப்படி" முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று கிளப்பிச் சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!
எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கிளப்பிக் கூறுவர்!:)

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு! பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
தழுவ இனியது வேல்!
அவனைத் தழுவும் போது அவன் நழுவினால்.. போடா-ன்னு..
அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...
முருகா என்று ஓதுவார் முன்!

உசாத் துணை (References):

1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் (kaumaram.com) & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
6. Tamil Traditions on Murugan - Dr.Kamil Zvelebil
Read more »

Saturday, January 14, 2012

கோதைத்தமிழ்30: தமிழில் 12 வித மாலை @raama.ki.ayya

மக்களே வணக்கம்!
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!



கடந்த ஒரு மாதமாய், ஆடி ஆடி, அசைந்து அசைந்து...
துண்டெழுத்து வீதியான ட்விட்டரில்...
சிறப்புடன் வலம் வந்த தமிழ்த் தேர்...
இதோ நிலைக்கு வந்து விட்டது!

* நற்றமிழ் அறிஞர், நுட்பியல் பொறியாளர்,
* SPIC நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர்...
* துறை சார் தமிழ் - அறிவியல் தமிழ் - சங்கத் தமிழ் என முழு வட்டம் சுழல் வல்லார்...
* இணையத் தமிழில் இணையிலா ஈடுபாடு காட்டுபவர்...
* பலரையும் தமிழ்ப் பெருமிதம் கொள்ளச் செய்பவர்...

ஆசான் இராம.கி ஐயா-வின் நிறைவு நாள் உரை!
கீச்சர்களின் தமிழ்த் தேருக்கு அணிகலன்! இதோ!
(குறிப்பு: ஐயாவின் பணி நிமித்தங்களால், அவர் எழுத்து உரையை வாசிப்பது, என் தந்தை மு. கண்ணபிரான் அவர்கள்)



நன்றி ஐயா!
உரை சால் உரையுடன், கீச்சர்களின் இந்தத் தமிழ் விழா நிறைந்தது மட்டிலா மகிழ்ச்சி!



பாசுரம்:
வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!

தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்,
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!


உய்யவும் ஆங்கொலோ? என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல்-உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!




இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = தெரியல் (டரியல் அல்ல:)))))

தெரியல் = மாலை!
பல விதக் கதம்பமான மலர்களால், 'தெரிந்தெடு'த்துக் கட்டியதால் = தெரியல்!

தமிழ் மாலைகள் பல உண்டு!
* தொங்கல் = இரு புறமும் தொங்கும் மாலை
* தெரியல் = பல வண்ணப் பூவால் 'தெரிந்தெடு'த்துக் கட்டிய மாலை

* கண்ணி = ரெண்டு ரெண்டு பூவாய்த் தொடுத்த மாலை
* கோதை = கொண்டை/கழுத்தில் நெருக்கமாய்ச் சூடும் மாலை
* கோவை = ஊசியால் கோர்த்த மாலை

* தார் = வாழைத்தாரில் பூக்கள் சொருகிய மாலை (பெரும் அலங்காரத்துக்கு)
* படலை = பச்சை இலைகள+பூக்களால் தொடுத்த மாலை

* அலங்கல் = சரிகை/துணி சுற்றிய மாலை
* பிணையல் = பின்னல் போல் முறுக்கிக் கட்டிய மாலை

* சிகழிகை = தலை மாலை
* சூட்டு = நெற்றி மாலை
* ஆரம் = கழுத்து மாலை

இப்படி பலப்பல மாலையாய் மணக்கும் தமிழ் = நம் கோதைத் தமிழ்!


இந்தத் தமிழ்த் தேரினை இழுத்துக் குடுத்த ட்வீட்டர்கள் அனைவருக்கும் இனிய நன்றி! பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் பரவிய நன்றி!

நன்றி மட்டும் சொன்னால் போதுமா? கீச்சர்-ன்னா சும்மாவா?
இதோ அவள் நினைவாக, அவள் சூடிக் கொடுத்த மாலையும், பாடிப் பேசிய கிளியும்...உங்கள் பரிசாக...பரிசேலோ ரெம்பாவாய்!

எழுத்தாளர் சொக்கனும் & நானும் தோழன் ராகவனும் மட்டுமே பேசுவதாய் இருந்த பாசுரங்களை.....

இந்த மாதம் முழுதும்.....அனைத்து ட்வீட்டர்களும்.....அவரவர் இயல்பில் பேசிக் குடுத்து.....
ஒரு அழகிய தமிழ்ச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ்க் கீச்சர்களுக்கு என் பல்கால் நன்றி!

* அனைத்து ட்வீட்டர்களின் குரல்கள் இங்கே
= https://soundcloud.com/kryes-1/sets/paavaipodcast

ட்வீட்டர்களின் குரல், இது போலவே, தமிழுக்கும் மனிதநேயத்துக்கும் என்றும் ஒலிக்கட்டும்! வர்ட்டா?:)
Read more »

கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryes

வணக்கம் மக்கா!
இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிறைவுறப் போகிறது.....நிலைக்கு வரப் போகிறது.....நாளை க்கு.....தைப்பொங்கல் நாளிலே!
அதுக்கு முன்னால, சின்னதா ஒரு warm down exercise:) யாரு பேசுறா இன்னிக்கி? நீங்களே கேளுங்க!:)




சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!


இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: சிற்றஞ் சிறு காலையில் வந்து உன்னைச் சேவித்தோம்! உன் திருவடிகளையே பாடுகிறோம்! ஏன் தெரியுமா?

மாடு மேய்த்து உண்ணும் குடியில் பிறந்தோம் நாம் இருவரும்! என்னை நீ உன்னுடன் ஏற்றுக்கொள்! மாட்டேன்-ன்னு சொல்லக் கூடாது! மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேணும்!

ஏதோ நோன்பு-பறை ன்னு சடங்காச் செஞ்சோம்-ன்னு நினைச்சிக்காதே கண்ணா! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நீ தான்! உனக்கு நான்-எனக்கு நீ!

இதைத் தவிர வேற எதுவும் எனக்கு வேணாம்!
அப்படியே வேற ஆசை எனக்கு வந்தாலும் அதை மாத்திருடா! அந்த ஆசையெல்லாம் எனக்கு வேணாம்! எனக்கு நீ தான்டா எல்லாம்!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சிற்றஞ் சிறுகாலே!

காலை, சிறுகாலை, சிற்றஞ் சிறுகாலை
Morning, Dawn, PreDawn!

* காலத்தின் துவக்கம் = காலை (Morning)
* காலை-மாலை என ஒரு நாளை இரண்டாகப் பகுப்பதால் = பகல் (Noon)
* ஒவ்வொரு நிமிடமாகப் போவதால் = போது/ பொழுது

இப்படி, தமிழில் காலங்களின் பெயர்களும் காரணப் பெயர்களே!
காலை என்பது காலத்தின் துவக்கம்!
அது விடியலுக்கு முன்-பின் என இரண்டு வகைப்படும்!

சிறுகாலை, வைகறை, விடியல் என பல பெயர்கள் உண்டு! சிற்றஞ் சிறுகாலை = வைகறைக்கும் முன்னே!
நாளை, ஆறாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு மணி நேரங்கள் என்பது தமிழ்க் காலக் கணக்கு!

* வைகறை 2:00 am - 6:00 am
* காலை 6:00 am - 10:00 am
* பகல் 10:00 am - 2:00 pm
(முற்பகல் - நண்பகல் - பிற்பகல்)
* எற்பாடு 2:00 pm - 6:00 pm
* மாலை 6:00 pm - 10:00 pm
* யாமம் 10:00 pm - 2:00 am

வள்ளுவரும், ஒரே குறளில், காலங்களைத் தொட்டுச் செல்வார்!
காலை அரும்பி, பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - (காமத்துப் பால்)

காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!
வைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!

* அதனால் விடியலில் பூக்க வேண்டிய பூ, காலையில் தான் அரும்பே விடுதாம்! = காலை அரும்பி
* பகல் முழுக்க, விரியலாமா வேணாமா-ன்னு குழம்பிக் குழம்பி...விரியத் தயாரா இருக்கு, ஆனா விரியல = பகலெல்லாம் போதாகி
* மாலையில், பறவைகள் தத்தம் துணையோடு சேர, கூட்டுக்குத் திரும்பும் வேளையில், அதைக் கண்டு ஏங்கி, பட்டு-ன்னு விரியுது = மாலை மலரும் இந்நோய்

இப்படிக் காதலால் காலமே மாறுது-ன்னு, காலம்+காதலை ஒரு சேரக் காட்டும் அழகுத் தமிழ்க் கவிதை!

நாளை நற்றமிழ் அறிஞர் இராம.கி ஐயாவின் உரையோடு, தைத்தமிழ் நன்னாளில், இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிலைக்கு வரும்!
Read more »

Thursday, January 12, 2012

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:)

விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:))

ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க?

* இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக!
* துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status Update கீச்சிக் கீச்சியே பிரபலமானவங்க!
* கண்ணாலப் பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுவது போல் சீன் போட்டு, காதல் தூரம் ஓடுபவக....:))
* அப்பாவிகளான என்னையும், @4sn செ.வையும் அடிக்கடி வம்பு பண்ணுபவுக

Any More Difficult Clues??:) கண்டு புடிச்சாச்சா?:)))
அம்மிணி பேசுவதைக் கேளுங்க!
பாசுரத்தின் முதல் வரிக்கு மட்டுமே இத்தனை நுட்ப நுண்ணிய விளக்கம்! மத்த எல்லா வரிக்கும் குடுக்க ஆரம்பிச்சா?



நன்றி அம்மிணி!:) எங்க கிராமத்தின் சாயலை அப்படியே அணுகிப் பேசியமைக்கு!
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்! பொங்கலுக்கு கிராமத்துக்கு போனது போல் ஒரு Effect இப்பவே கிடைச்சிருச்சி!:)



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கறவை மாடுகளுக்குப் பின்னாலேயே சென்று, காட்டை அடைந்து, அனைவரும் சேர்ந்து உண்போம்!
இப்படி, மாட்டை நாங்கள் முன் நடத்திச் செல்லாமல், மாடு எங்களைப் பின் நடத்திச் செல்கிறது! இப்படியான அறிவில்லா ஆயர் குடி!

அதில் நீ வந்து தோன்றினாயே கண்ணா! என்ன புண்ணியஞ் செய்தோமோ? குறை ஒன்னுமே சொல்ல முடியாத கோவிந்தனே!
நீ - உறவு - நான்! = இதை யாராலும் ஒழிக்க முடியாது! ஒழித்தாலும் ஒழிக்க ஒழிக்க ஒழுகும்! நம் உறவு என்னைக்கும் இருக்கும்!

ஏதோ ஆயர் குடிப் பசங்க, அறிவில்லாமப் பேசினா, அதையெல்லாம் மனசுல வச்சிக்காதேடா! நீயே எங்களுக்கு எல்லாமும்! நீயே பறை தருவாய்! எங்களை ஏற்றுக் கொள் பெருமானே!



இன்றைய எழிலான சொல் = உன் தன்னோடு-உறவேல்-நமக்கு!

என்னடா இவ்ளோ பெரிய சொல்லா?-ன்னு பாக்குறீங்களா? - இது தமிழ் மந்திரச் சொல்! ஓங்காரத்தைக் குறிப்பது!

ஓம் என்பது வடமொழி அல்ல! அது ஒரு ஒலிக் குறிப்பு மட்டுமே!
அது பல மொழிகளிலும் இருக்கு, சமணம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இருக்கு! அதை, கோதை தமிழில் காட்டுகிறாள்!

முன்பு அப்பாவுக்குப் பாடஞ் சொன்ன என் முருகன், என்ன சொன்னான்? = யாரும் சொல்ல மாட்டாங்க!:)
பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான்-ன்னு சொல்லுவாங்களே தவிர, அது என்ன பொருள்-ன்னு மூச்சு விட மாட்டாங்க!
ஏன்னா ரகசியமாம்! வேதம் படிக்கறவா மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமாம்!:)

ஆனா, கோதையிடம் இந்தச் சட்ட திட்டம் எல்லாம் வேலைக்காவாது!
எல்லாரும் அவனை அடைய வேணும்-ன்னு நினைப்பவள்!
தான் நரகம் புகினும், மற்ற அனைவரும் திருநாடு புகுவார் அல்லவா என்று பின்னாளில், ஒருவரை, இதுவே கோபுரம் ஏறிப் பேச வைத்தது!

ஓம் = அ + உ + ம்
* அ = 'அ'வன்
* ம் = நா'ம்'
* உ = 'உ'றவு

அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னைக்கும் இருக்கு! அதை அவனே நினைச்சாலும் ஒழிக்க முடியாது! = அதான் ஓம்!
வேதங்கள்/ தமிழ் மறைகளின் உயிர் நாடி = ஓங்காரம்! மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி...என்பர்!

* அம்மா மேல புள்ளைக்கு ஆத்திரம், நீயெல்லாம் அம்மாவா?-ன்னு புதுப் பொண்டாட்டி பேச்சில் மயங்கி அவளை மறுதலிக்கலாம்!
* புள்ளை மேல் அம்மாவுக்கு கோவம்! உன்னைப் போய் பெத்தேனே-ன்னு அழுவலாம்! ஆனா அம்மா-பிள்ளை உறவு? அதை அழிக்க முடியுமா?

அவ தொடர்பையே அறுக்கணும்-ன்னு, அவன் போய், ஆயிரங் கோடி செலவழிச்சாலும், தன்னோட DNAவை மாத்திக்க முடியுமா?:)

* எப்படி DNA-வை மாத்த முடியாதோ, அப்படி ஓங்காரத்தை மாத்த முடியாது! இறைவனாலும் முடியாத ஒரு செயல்-ன்னா, இது ஒன்னு தான்!
நமக்கும் அவனுக்குமான உறவை, அவனே நினைச்சாலும் அழிக்க முடியாது! ஒழிக்க ஒழியாது என்கிறாள் கோதை!

இதுவே முருகன் சொன்ன ஓங்காரப் பொருள்!
மத்த விளக்கமெல்லாம் சும்மா தத்துவம்! அ-உ-ம=பிரம்மா-விஷ்ணு-சிவன், மேல்பாகம்-வயிறு-அடிப்பாகம், குண்டலினி ன்னு எல்லாம் ஏதோ சொல்லுவாய்ங்க!
Juz Forget It! Those are Latter Day Hypes for Om!
ரொம்ப தத்துவமெல்லாம் இல்லாம, இறைவனிடம் நம் உறவை முன் வைப்பதே ஓம்! = தமிழ்ப் பொருள்!

ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம் 
= உன்தன்னோடு + உறவேல் + நமக்கு!

நாளை முத்தாய்ப்பாக நான் முடிக்கிறேன்!
30ஆம் பாசுரத்தை, நற்றமிழ் அறிஞர், இராம.கி. ஐயாவின் உரையோடு, இந்த #TamilTwittersPodcast என்னும் தமிழ்த் தேர், அசைந்து நிலைக்கு வரும்!
Read more »

கோதைத்தமிழ்27: கூடாரை வெல்லும்!

இன்று பேச வேண்டியது ஒரு பிரபல எழுத்தாளர்! அவரின் நேரமின்மையால், ஒலித் துண்டு இல்லாத ஒரு பதிவு இது! Konjam Adjust Maadi:)

இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்!
பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! எங்கள் வீட்டுக் காட்சி இதோ....அம்மா காலையில் செஞ்ச சர்க்கரைப் பொங்கல்:)

ஆனா நான் தான் ரொம்பச் சாப்பிட முடியாம, என்னமோ யோசனையாவே இருக்கேன்!
ஒரு குரலைக் கேட்டா, அது இந்தப் பொங்கலை விட இனிப்பா இருக்கும்! நேற்று சில நொடிகளே கேட்டேன்!

இந்தப் பொங்கலுக்கு, ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டேன்! அம்மா ஒரு மாதிரியாப் பார்த்தாங்க:))



இதோ, பாவை நோன்பு முடியப் போகுது! தன் தோழிகளுக்கெல்லாம் கண்ணனிடம் சொல்லி, பரிசு வாங்கிக் கொடுக்குறா கோதை!
ஆண்டாள் ஒரு மிகச் சிறந்த பெண் மேலாளர்! Team Player!

* பாசுரங்கள் 1-5 = நோன்பின் விதிகளைச் சொன்னாள்! Vision Statement! Specifications! அதைக் கொடுத்தாத் தானே நாமும் தெளிவாக வேலை பாக்க முடியுது! Spec இல்லீன்னா எம்புட்டு குழம்ப வேண்டி இருக்கும்?
* பாசுரங்கள் 6-15 = நோன்பு துவக்கம்! அத்தனை பேரையும் வீடு வீடாகப் போய் எழுப்பி, தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்! Human Resource = Mobilization, Optimization & Motivation!

* பாசுரங்கள் 16-25 = கண்ணன் வீட்டில் Project நடக்குது! வாயிற் காப்போன், நந்த கோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை-ன்னு மொத்த Team இருக்கு!
* பாசுரம் 26 (நேற்றைய பாசுரம்) = Project Delivery! கருவிகள் எல்லாம் கேட்டு வாங்கி, டெஸ்டிங் எல்லாம் முடிச்சி.....

* பாசுரம் 27 (இன்றைய பாசுரம்) = Success! அதனால் PROJECT PARTY! :) - பாற் சோறு, மூட நெய் பெய்து...முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோ....




* நோன்பு ஆரம்பிக்கும் போது நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பாற் சோறு, மூட நெய் பெய்து"...
* நோன்பு ஆரம்பிக்கும் போது மையிட்டு எழுதோம், மலரிட்டு முடியோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பல்கலனும் யாம் அணிவோம்"...


இப்போ நோன்பு முடிகிறது அல்லவா?
அதனால், நன்றாக அலங்காரங்கள் செய்து கொண்டு, மையிட்டு, மலர் இட்டுக் கொள்கிறார்கள்!
அவன் அலங்காரத்துக்கு ஒப்பாக, அவன் கண்ணுக்கு இனிமையாக, கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்!

பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி, உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி...இதோ...அந்த இனிப்பான பாசுரம்!

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!


பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!


மேலோட்டமான பொருள்: தன்னோடு கூடாதவர்களையும் வெல்லும் கோவிந்தனே, உன்னைப் பாடி நோன்பிருந்து நாங்கள் பெற்ற இன்பம்!

சூடகம் = கைவளை(Bracelet)! தோள்வளை=வங்கி! தோடு=பெண்கள் காதணி! செவிப்பூ=காது மடலில் குத்திக் கொள்ளும் பூ! பாடகம்=கால் வளை

இப்படிப் பல அணிகள் அணிந்து, ஆடை உடுத்தி, தண்ணீரில் பொங்காமல் பாலில் பொங்கிய சோற்றில் நெய் பெய்து, முழங்கையில் நெய் வழியுமாறு, மகிழ்வுடன் உண்போம்! கூடி இருந்து உண்போம்! கூடி இருந்து குளிர்வோம்!


இன்றைய எழிலான சொல் = கூடார்!
அது என்ன கூடார்? எதிரி-ன்னு சொன்னா என்ன?

கூடுதல் = ஒன்றுபடுதல்! கூடார் = ஒன்றுபடாதார்!
கருத்தோடு ஒன்றுபடுதலா? இல்லை அதற்காக ஊரே ரெண்டு படுதலா?:)

கருத்து வேற! மனிதம் வேற!
ஒருவர் கொண்ட கருத்துக்காக, அவர் மேல் வன்மம் வளர்த்துக்கக் கூடாது!
சில சமயம், இந்த வன்மம் மனசுக்குள்ள போய் உட்கார்ந்துகிடும்! சமயம் கிடைக்கும் போது எழுந்து தாண்டவம் ஆடும்!:) அது அறம் அன்று! தமிழ்ப் பண்பும் அன்று!

கூடுமானவரை, அப்படி வன்மம் தரும் சொற்களைத் தவிர்ப்பது நன்று!
எதிரி, பகைவன் ன்னு சொல்லும் போது, ஒரு வெறுப்புத் தன்மை தெரிகிறது! இதெல்லாம் மன்னர்களுக்கு/ நாடுகளுக்கு பொருந்தும்!
நம்ம வாழ்வில் பகைவர்/எதிரி-ன்னு எல்லாம் சொல்லாம, மாற்றார்/கூடார்-ன்னு மென்மையாகவே ஒலிக்கலாம்! என்ன சொல்றீங்க?:)

ஆண்டாளும் அப்படியே ஒலிக்கிறா!
* கூடாரை வெல்லும் = கூடார் = நம்மோடு கூடாதவர்கள்
* மாற்றார் உனக்கு வலி தொலைந்து = மாற்றார் = மாற்று நிலை எடுப்பவர்கள்
இப்படி மென்சொற்களே சரி!

நாளைப் பேசப் போவது, பெயர் குறிப்பிட முடியாத ஒரு பெண் ட்வீட்டர்!:) வர்ட்டா?:)
Read more »

Tuesday, January 10, 2012

கோதைத்தமிழ்26: மாலே மணிவண்ணா @kanapraba

மக்கா, இன்று பேசப் போவது, என்றும் 16, எங்கள் @kanapraba!:)
கா.பி என்று நான் செல்லமாக அழைத்தாலும், கானா என்பது தான் உலகப் புகழ்!:)

இசையின் பால் மாறாத காதல் கொண்ட இந்த உள்ளம், அந்த இசையின் வடிவாகவே தன்னை விதம் விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறது....
அது றேடியோஸ்பதி ஆகட்டும், ATBC வானொலி ஆகட்டும், கானா FM ஆகட்டும்...இந்த Podcastயே ஆகட்டும்....

ஆனா, அந்த இசையினூடே, ஆழ்ந்த தமிழ்ப் பற்று ஒளிந்திருப்பதை, நுட்பமாகக் கவனிப்பவர்கள் அறியலாம்!

ஈழத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வதாக அவர் வாக்குறுதி இன்றும் நிலுவையில் இருக்கு!:)
நான் மிக விரும்பும் இடங்களான.......பன் மதக் கதிர்காமம், கடலை ஒட்டிய மலை திருக்கேதீச்சுரம், வள்ளிபுர ஆழ்வார், நல்லூர்-ன்னு நிறைய!

குறிப்பா ஆனை இறவு = பொன்னியின் செல்வன் முதல் நேற்றைய படுகொலைகள் வரை!
ஈழப் பயணம் கூடி விட்டால், அதற்கப்புறம் எனக்கு வேறேதும் வேண்டாம்! அந்த நல்லூர்க் கந்தனோடு உறங்கி விடுவேன்!

இதோ, கா.பி, உங்கள் முன்னே....
சிவாஜி படப் பாடலான மாலே மணிவண்ணா :) Incidentally Itz திருப்பாவை also:))



நன்றி கா.பி:)
அட, இந்த FM ஆளுங்கள பேசச் சொன்னா, BGM எல்லாம் போட்டு podcasting பேசுறாங்கப்பா!:) - வீணை இசையே இசை!



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே


போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: திருமாலே, கருநீல மணிவண்ணா! மார்கழி நோன்பு நாங்க எதுக்கு இருக்கோம் தெரியுமா?
உன் பால் வண்ணச் சங்கு, பறை, விளக்கு, கொடி, விதானம் - இதெல்லாம் எங்களுக்கு வேணும்-ன்னு தான்! அதை அருள்வாயே!

* சங்கில் = உன் எச்சில் அமுதம் இருக்கு!
* பறையில் = நீ எங்களுக்குப் படி அளப்பாய்
* கொடி = உன் உலகப் புகழ்! மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்...
* விளக்கு = இரவில், உனக்கும்-எனக்குமான சாட்சி
* விதானம் = நம் மீது இருக்கும் ஒரே போர்வையாக, மேற் கூரை

இவள் காதலே, என் முருகக் காதலுக்கு உந்து சக்தி!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மால்!

மால்-ன்னா என்ன? மால் வெட்டு-ன்னு லோக்கலாப் பேசுறோமே அதுவா?:) அல்ல!
திரு.வி.க, முருகன் (அ) அழகு என்னும் நூலில் சொல்வது: "தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, "மால்" என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்"

மால் = மயக்கம்! ஆசை!
மாலுதல் = ஆசைப்படுதல், மயங்குதல்!

காட்டில், மயக்கம் அதிகம்!
* மலை வெட்டவெளி/உச்சி என்பதால் அங்கு தெளிவு அதிகம்! மேலிருந்து அழகு தெளிவாகத் தெரியும் = அதான் முருகு (அ) அழகு! = முருகன்!
* காடு அடர்த்தி என்பதால் அங்கு மயக்கம் அதிகம்! காட்டின் வளம் துய்க்க, அந்த மயக்கத்தில் இறங்கினால் தான் உண்டு! அதான் மால் = திருமால்!

இப்படி நிலமும், குணமுமே = இயற்கையே பண்டைத் தமிழ்க் கடவுள்கள் ஆயின!
மாயோன் மேயக் காடுறை உலகும்
சேயோன் மேய மைவரை உலகும் - என்பது ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியர்!

இப்படிப் பலரையும் மயங்கச் செய்வதால் = மால்!
என் முருகன் தெளிவு குடுப்பான்! இவரு மயங்கச் செய்வாரு:))

இந்த "மயக்கம்" என்பதால்...மால், பல மயக்கங்களைக் குறிக்கத் துவங்கின இலக்கியத்தில்!
* காதல்/காமம் = மால்
* கருமை = மால்
* மாலைப் பொழுது = மால் (மயக்கும் "மாலை"ப் பொழுதே நீ போபோ பாட்டு ஞாபகம் வருதா?:)
* சூடும் மாலை = மால்
* பெருமை = மால் (சின மால் விடைச் சிவன் - மாணிக்கவாசகர்)

மாலுக்கு இளையவள் = மாலினி/ கொற்றவை!
துளசிக்கு = மால்முருகு என்ற பேரும் உண்டு!

மலையும் காடும் ஒன்னோட ஒன்னு சேர்ந்தே இருக்கும்! காடில்லாத மலை இல்லை! மலை இல்லாத காடில்லை!
அதான் முல்லையும் குறிஞ்சியும் = மாலும் முருகும் = சங்கத் தமிழ்!

ஒரு பெண்ணுக்கு என்ன தான் கணவன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், அப்பா மேல எப்பமே ஒரு பெருமிதம்!
அது போலத் தான் நானு! முருகன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், எந்தை மாலவன் மீது எப்பமே ஒரு மதிப்பு - அப்பா-ன்னு போய் நின்னு அவரு கிட்ட அழ முடியும்! = மாலே மணி வண்ணா!

நாளை பேசப் போவது = யாருமில்லாமையால் யாரோ @kryes ஆம்:) subject to last minute changes:)
Read more »

Monday, January 09, 2012

கோதைத்தமிழ்25: திருமதி.செல்வம் @anandraaj04

மக்கா...இன்று பேசுவது, ட்விட்டரின் கப்பல் தளபதி, நாலடியார் நாயகர், நம்ம @anandraaj04 (எ) மகிழ்வரசு....பாட்டிலும் மகிழ்-ந்தேலோ ன்னு வருது!:)

இசை விரும்பி, தமிழ் விரும்பி, தத்துவ விரும்பி.....என்ன சொல்றாரு-ன்னு நீங்களே கேளுங்க:)



நன்றி ஆனந்த் (எ) மகிழ்:) உங்கள் சேவை #365பா-க்கு இன்னும் தேவை:)


ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: ஓர் இரவில், ஒருத்தி மகனாய்ப் பிறந்தாய், அன்றிரவே இன்னொருத்தி மகனாய் விரைந்தாய்!
ஆனால் அதையும் பொறுக்க மாட்டாத உன் மாமன், உனக்குத் தீங்கு நினைத்துக் கொண்டே இருக்க, அவன் எண்ணத்தைப் பிழை ஆக்கினாயே!

வயிற்று எரிச்சல்! அதுவே அவன் வயிற்றில் தீ போல் பரவி அவனை விழுங்கி விட்டது!

உன்னை அருச்சனை செய்து வந்தோம்! எங்கள் அன்புக்கு நீ ஏதாச்சும் தர நினைத்தால்...உன் பணி செய்யவே எங்களுக்கு வாய்ப்பு குடு!
திருத்தக்க செல்வம்! திரு=செல்வம்! செல்வத்துக்கே தக்க செல்வம் = உன் உறவு! அதைக் குடு!
வருத்தம் தீர்ந்து, மகிழ்வுடன் பாடுவோம்!



இன்றைய எழிலான சொல் = திருத்தக்க

திருத்தக்க தேவர் -ன்னு ஒருத்தரு! யாரு-ன்னு தெரியும் தானே? சீவக சிந்தாமணி எழுதியவரு!

அது என்ன திருத்-தக்க செல்வம்? திரு-ன்னாலே செல்வம் தானே! செல்வத்துக்கு தக்க செல்வமா? என்ன உளறுகிறாள் கோதை?:)

ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் வரும்!
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்" & "திருத்தக்க செல்வம்"!

எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்!
ஆனால் யாருக்காக? = நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?

குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?
தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?

கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை!

இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step = மழலைச் செல்வம்!
* சேர்த்த செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!

இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?

அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை!
*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......

வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!

பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

திருத்தக்க செல்வம் = மற்ற செல்வங்களுக்கெல்லாம் தக்க செல்வம் = உன் உறவு! அதுவே வேண்டும்! அருள்வாய்!


நாளை பேசப் போவது....எங்கள் அபிமான Twitter Sound Service! வர்ட்டா?:)
Read more »

Sunday, January 08, 2012

கோதைத்தமிழ்24: தமிழ் அர்ச்சனை தேவையா? @kryes

மக்கா, வணக்கம்! இன்னிக்கிப் பேசப் போவது நானு! நானே நானு:) @kryes
So, No Intro! Just listen & Have Fun:)
கோதை 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்யும் தமிழ் அர்ச்சனை - நாம எல்லாரும் தெரிஞ்சிக்கலாமா?



நன்றிடா @kryes :))
நன்றியை @dagalti க்கு தான் சொல்லணும்! "எல்லாரையும் பேச வைக்கறீக, நீங்களும் பேசுங்களேன்"-ன்னு சொன்னது அவரு தான்:)


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!


எனக்கு மிகவும் பிடித்த பாசுரம் இதுவே!
நின் கையில் "வேல் போற்றி"-ன்னு சொல்லுறாளே! பெருமாள் கையில் வேலா? என்னவன் முருகவன் கையில் வேலா? :)))
- கோதை எனக்குன்னு எழுதி இருப்பதாகவே நினைச்சிக்குவேன்!:)




நன்றாக நினைவில் இருத்துங்கள்: சங்கல்பம் + அர்ச்சனை = இறைவனுக்கு அல்ல! நமக்குத் தான்!
யார் பேருக்குச் சங்கல்பம் பண்ணிக்குறாங்களோ, அவங்களுக்குப் புரியணும்-ல? வீர்ய, வீஜய, ஆயுர், ஆரோக்ய, அபிவிருத்தயர்த்தம்-ன்னு, என்ன வேண்டிக்கறோம்-ன்னு நமக்கே தெரியணும்-ல?

இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைச்சி இருக்கா இந்தப் பொண்ணு! மந்திரமா ஓதுவதற்கு என்றே இப்படி!
* முந்தைய பாட்டு - யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்-ன்னு சங்கல்பம்
* இந்த பாட்டு - தமிழ் அர்ச்சனை!

அரசு சட்ட திட்டங்கள் போட்டு விட்டது! = இங்கு தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! :)
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?

சரி, இவ்வளவு  பதிவில் எழுதி விளாசுகிறோமே!  ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு நாமளே கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்:)

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மன-மலர்ச்சிகள் உருவாவதில்லை!
* மக்களை உணர வைக்கணும்!
** கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்கணும்!
*** நாம தான், எடுத்துச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்க வேணும்!

அப்படி உணரச் செய்தவர் = இராமானுசர்!
அதனால் தான் இன்றும், திருமால் ஆலயக் கருவறைகளில் தமிழ்ப் பாசுரம்-சாற்றுமறை முழங்குகிறது!
* புறப்பாடுகளில், இறைவனுக்கும் முன்னே, தமிழ் ஓதிச் செல்கிறார்கள்!
* இறைவன் தமிழுக்குப் பின்னால் தான் வருவான்!
* அவனுக்கும் பின்னால் தான், வடமொழி வேதங்கள் ஓதி வருவார்கள்!

மக்களே,
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, சும்மாவாச்சும்.....தமிழ் அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முறை கேட்டுத் தான் பாருங்களேன்!
அப்புறம் நீங்களே விட மாட்டீங்க! ஆ+லயம் = லயம், லயம்-ன்னு லயித்துப் போவீர்கள்! கோதைத் தமிழ் போலவே! :)




இன்றைய எழிலான சொல் = குணில்!

Angry Birds Game-இல் பார்த்து இருப்பீங்களே?:))
உண்டிகோல்-ன்னு சொல்றோம்-ல்ல? மரத்தில் இருந்து கனியை வீழ்த்த, கல்லெறியும் கருவி! அதன் அழகிய தமிழ்ப் பெயர் = குணில்!

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்-ன்னு புறநானூறு!
குணித்தல் = அளவிடுதல்! அளவிட்டு எறிந்து கொய்வதால் = குணில்!

நாளைக்குப் பேசப் போவது, கப்பற் படைத் தளபதி! வர்ட்டா?:)
தமிழ் அர்ச்சனையை நினைவில் நிறுத்துங்கள்!!
Read more »

Saturday, January 07, 2012

கோதைத்தமிழ்23: கிரந்தம் தவிர் of ஆண்டாள் @lalitharam

மக்கா, இன்னிக்கி பேச வேண்டியவரு -  நம் இசையாளர், இசை விமர்சகர், இசை எழுத்தாளர் - லலிதாராம் (எ) @lalitharam 

திடீர் வெளிநாட்டுப் பயணத்தால், அவர் ஒலிக்கோப்பு இயலவில்லை! மன்னிக்க!
பதிவின் ஒலியை, இந்த ஆளரிப் பெருமாள் என்னும் சிங்கம் முழங்குவதில் கேட்டுக் கொண்டே படிங்க!:)



மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: மழைக்கால முடிவு! மலைக்குகை! இதுநாள் வரை உறங்கிய சிங்கம், இரை தேடிப் புறப்படுகிறது!
அது விழிப்புற்று, தீப்போல் பார்த்து, உடல்மயிர் பொங்க, உடலை உதறி, திமிலை நிமிர்த்து, ஒரு முழக்கம் செய்து புறப்படுமே!

அது போல், நீயும் நடக்கிறாய் கண்ணா! பூவைப்பூ வண்ணா!
உன் கோயிலில் எல்லாரும் குழுமியுள்ளோம்!
நீ வந்து, அரியணையில் அமர்ந்து, எங்கள் குறைகளைக் கேட்டருள்! நாங்கள் எண்ணி வந்த காரியங்களையெல்லாம் ஆராய்ந்து, பின்னர் அருள்வாயாக!




இன்றைய எழிலான சொற்கள் பல! அதில் சிறப்பானது = "முழங்கும்"!

குயில் கூவும், மயில் அகவும், புலி உறுமும், யானை பிளிறும்!
சிங்கம் = ???

பலரும் சொல்வது சிங்கம் = கர்ஜிக்கும்!
ஆனால் கோதை அன்றே கிரந்தம் தவிர்க்கிறாள்! சிங்கம் = முழங்கும்! <கிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்>

ஏன்??? கர்ஜிக்கும்-ன்னு சொல்லக்கூடாதா-ன்னு கேட்டா, இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் புழங்கினால் தான், தமிழ்ச் சொற்கள் வாழும்!
இல்லையேல் அப்படி ஒரு சொல் இருக்குது-ன்னு தெரியாமலேயே செத்துப் போகும்! இப்படிப் பறிகுடுத்த சொற்கள் நிறைய்ய்ய.....

வேளாண்மை செத்துப் போயி = விவசாயம்-ன்னு ஆயிருச்சி! சோறு = சாதம் ஆயிருச்சி! விடுதலை = சுதந்திரம் ஆயிருச்சி!
இப்படியாக... ஒவ்வொரு சொல்லாக, தமிழ்ச் சொல் இறப்பு, நம் தமிழுக்குத் தேவையா?

வடமொழி, கிரந்தம் மேல் நமக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை!
வடமொழியும் செம்மொழி தான்!
அதைக் கற்கலாம்! ஆனால் தமிழோடு கொண்டு வந்து கலக்கக் கூடாது! - Learn Everything, But Dont Mix Everything!

தேங்க்யூ மச்சி, ரூமுக்கு வாடா -ன்னு பேச்சளவில் புழங்கினாலும், ரூம், தேங்க்ஸ் என்பதெல்லாம் தமிழ்-ன்னு சொல்லுறோமா?
இல்லை தானே! ஏன்னா நமக்கே தெரியும், அது ஆங்கிலம்-ன்னு!

ஆனா கர்ஜிக்கும், சங்கோஜம் என்பவை தமிழ் அல்ல-னு சொல்லும் போது மட்டும், சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது:)
இவர்களுக்கு - வடமொழிக்கு ஏதும் ஆகாத வரை தமிழ் முயற்சிகள் Okay! வடமொழிக்கு ஏதோ ஆகிடுமோ-ன்னு நிலை வந்தா, தமிழ் முயற்சிகளைக் கும்மியடித்து, எள்ளி நகையாடி, விரட்டுவது ஒரு கலை:))

இந்தக் கலை, ஆண்டாளிடம் எடுபடாது! சிங்கம் முழங்கும் என்றே சொல்கிறாள்! கர்ஜிக்கும் அல்ல!!
இது போல, பல தமிழ்ச் சொற்களைத் தொலைத்து விட்டோம்! ஏன் கிரந்தம் தவிர்க்கணும்? = இந்தப் பதிவைப் பாருங்கள், புரியும்!

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வடசொல்லுக்கும்....இணையான, எளிமையான தமிழ்ச் சொல் என்ன?
- என்பதை இந்தத் தளம் = pulveli.com உங்களுக்குக் காட்டும்! முயன்று பாருங்களேன்!


மற்ற அழகிய தமிழ்ச் சொற்கள்:

* முழைஞ்சு = குகை! (முழை = நுழை! குறுகிய நுழைவாயில் உள்ள அறை = முழைஞ்சு)
* வேரி மயிர் = வேர்க் கால் மயிர்
* மூரி = சோம்பல் முரித்தான்-ன்னு சொல்லுறோம்-ல்ல? அந்த முரி தான் மூரி! மூரி என்பது விலங்கின் திமில் (Hunchback)! அதைச் சோம்பல் முரிக்குதாம் சிங்கம்!
* பூவைப்பூ = கருப்பு வண்ணக் காயாம் பூ


சரி..........நாளிக்கிப் பேசப் போவது யாரு?
எவனோ ஒருத்தன் @kryes-ஆமே! சூடான தலைப்பு வேற! முருகா...வர்ட்டா?:)
Read more »

Friday, January 06, 2012

கோதைத்தமிழ்22: பள்ளிக்கட்டு @mSathia

மக்கா, இன்று பேசப் போவது = தமிழ்க் கணிமையாளர்! தமிழ்த் தொழில்நுட்பவியலர்! தமிழ் ஆர்வலர்!
இவர் மட்டுமல்ல! இவர் மொத்த குடும்பமும் கூட!:)

கதை, கதாபாத்திரங்களை அலசுவதில் வல்லவர்! மாபாரதக் கதைமாந்தர்கள் பற்றிய ஒரு iPhone/Android App (செயலியும்) செய்துள்ளார்!
சத்தியா (எ) @msathia என்ன சொல்லுறாரு கேளுங்கோ...



நன்றி சத்தியா, அழகிய விளக்கம்! இதைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பி விடலாமா?:)


அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே


செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: பரந்த உலகத்தின் அரசர்கள் எல்லாம், தங்கள் தற்பெருமை விலகிப் போய், உன் பள்ளிக் கட்டின் கீழே வந்து திரண்டு நிற்கிறார்கள்!
(சென்ற பாட்டிலும் இதையே சொன்னாள்: மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற்கண், ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே)

கால் சதங்கையின் மணிகள், பாதி மூடியும் மூடாமலும் இருக்கும்! அது போல் உன் கண் பாதித் தூக்கம், பாதி விழிப்பில் இருக்கே கண்ணா!

கண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் திறந்து எங்களைப் பாரேன்டா! பகலவனும், பால்நிலவும் ஒரே நேரத்தில் எழுந்தாப் போலே, இரண்டு கண்கள் விழித்து எங்களைப் பார்! எங்கள் சாபங்கள்/துன்பங்கள் எல்லாம் விலகிப் போய் விடும்!
-----------

உவமை நயம்:

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே = கால் சலங்கையில் இருக்கும் சிறுசிறு கிங்கிணிகள்!
ஒவ்வொரு கிங்கிணி வாய்ப்புறமும், பாதி மூடிய தாமரைப்பூ போல இருக்கும்!

அதுக்கு உள்ளாற ஒரு பொட்டு மணி! சல்-சல்-ன்னு சத்தம்!
மணி, ஓட்டையின் வழியாத் தெரியும், ஆனா ஓட்டையில் இருந்தும் விழாது! அப்படி மூடியும் மூடாமலும் இருக்கும்!

ஆண்டாளுக்கு நடனம் தெரியும் போல!
பாதி மூடிய கண்ணுக்கு, சலங்கையின் மணியை உவமை காட்டுறான்னா, இவ எப்பேர் பட்டவளா இருப்பா? Wow! Love you dee, Kothai! :))


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = பள்ளி!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு-ன்னு பாட்டைக் கேட்டிருப்பீங்க! சுள்ளிக்கட்டு தெரியும்! அது என்ன பள்ளிக்கட்டு?

* பள்ளி = பள்ளிக்கூடம் (கல்வி நிலையம்) ன்னு பொதுவழக்கில் ஆகிப் போச்சு!
* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!
* பள்ளி = பள்ளியறை என்பது படுக்கை அறை!
* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை!
இந்தப் பள்ளிகளுக்கெல்லாம் ஒன்னோடவொன்னு எந்தவொரு தொடர்பும் இருக்குறாப் போலத் தெரியலையே! எப்படி எல்லாமே பள்ளி-ன்னு குறிக்குது?

தமிழில், பள்ளி = இடம்!
குறிப்பா, பள்ளத்தில் அமைந்திருக்கும் இடம் = பள்ளி!

வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு! (முக்கூடற் பள்ளு)
பள்ளமான இடம் = பள்ளி!
இப்போ ஒவ்வொன்னாப் பொருத்திப் பாருங்க!

* பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்னாத் தேங்கும் பள்ளம் = பள்ளி! பள்ளியில் உள்ள கூடம்!
* பள்ளி வாசல் = இறைவனின் கருணை பொங்கி வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

* பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி:)

* மடைப் பள்ளி = சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!

எல்லாஞ் சரி, அது என்ன பள்ளிக்கட்டு சபரிமலைக்கு?
பள்ளிக் கட்டில் = பள்ளிக் கட்டு என்று ஆனது!
ஆண்டாளும், வந்து நின் "பள்ளிக் கட்டில்" கீழே, சங்கம் இருப்பார் போல்-ன்னு சொல்லுறாப் பாருங்க!

அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்!  அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!
அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை!
அது சபரிமலையில் இருக்கு! அதான் பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டு! புரியுதா?:)

நாளிக்கிப் பேசப் போவது...பாடகர்! ட்விட்டரின் பாட்டுக்காரர்! வர்ட்டா?:) தூங்கணும்!
(அதென்னமோ தெரியல, இந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் காய்ச்சல் வந்துருது! காதல் குளிர்:)) சென்ற ஆண்டும், அதுக்கு முன்னரும் கூட இப்படியே!:)
Read more »

கோதைத்தமிழ்21: வள்ளல் @SeSenthilkumar

மக்கா, வணக்கம்! இன்றைய தாமதத்துக்கு மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்!
நேற்று அதிகாலை கிளம்பி.......இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன்.....இதோ பதிப்பித்து விட்டுத் தூங்கச் செல்கிறேன்!

இன்னிக்கி பேசுறவரு =  ஒவ்வொரு நாளும் ட்விட்டரில் இடையறாது Good Morning சொல்பவர்!
பலரையும் தம்பி என்று அரவணைத்து அழைப்பவர்! பிள்ளைப் பாசம் மிக்கவர்! தமிழுணர்வு கொண்டவர் = யாரு?
= செந்தில்குமார் (எ) @SeSenthilkumar தான்! கேளுங்கள்!



நன்றி செந்தில் அண்ணே! நீங்களும் என்னை மன்னிக்க!
நான் இல்லாத வேளைகளில் Tweetகளையும் பதிவையும் Schedulerஇல் கொடுத்து விட்டுச் செல்வேன்! ஆனால் இம்முறை முடியவில்லை!
ஆனாலும் சென்ற இடத்தில் பெரும் நிம்மதி + மகிழ்ச்சி! கண் குளிரக் கண்டேன் என்னவன் வாசலை!:)




ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்


தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கலங்களைக் காட்டியவுடனே பால் பொங்கி வழிகிறது! இப்படியான பசுக்களை உடைய நந்தகோபன் மகனே, எழுவாய்!

நீ அன்பு மிக்கவன், பெருமை மிக்கவன், உலகில் மற்றவர் போல் பிறவாது, "தோன்றியவன்"!
மாற்றார்கள், உன் முன்னே வலிமை இழந்து, வாசலுக்கு வந்து, உண்மை உணர்ந்து நிற்பார்கள் அல்லவா! அது போல நாங்களும் நிற்கிறோம்! எங்களுக்காக எழுவாய்!



இன்றைய எழிலான சொல் = வள்ளல்!

அது என்ன வள்-ளல்? வள்-ன்னு எரிஞ்சு விழுவாரா?:)) இல்லை!
வள் என்பதன் வேர்ச் சொல் = வளம்!
வள்/ வளம் = மிகுதி, அதிகம்

நலமா இருக்கேன்-ன்னா = ஏதோ நலமா இருக்கேன்!
வளமா இருக்கேன்-ன்னா? செழிப்போடு இருக்கேன் அல்லவா!
ஆக வள்/வளம் = மிகுதி!

* மிகுதியாகக் குடுப்பது = வண்மை (வள்ளல்)
* பகுதியாகக் குடுப்பது = கொடை!
நாம குடுத்தா கொடை! கர்ணன் குடுத்தா வண்மை!

இப்படி வளமோடு குடுப்பது வள்ளல் ஆகிறது!
இப்படிக் குடுப்பதற்கு முதலில் மன வளம் வேண்டும்! அடுத்துப் பண வளம் வேண்டும்!
இப்படி மனம் + பணம் = இரண்டு வளமும் உள்ளவர் = வள்ளல்!

முதலேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் -ன்னு தமிழ் இலக்கியம் பேசும்!
பாரி, ஓரி, நள்ளி, பேகன்....முதலான கடையேழு பேர்!

* மனவளம் (கருணை) மிக்கவர், பசியால் வாடுவோர்க்கு இடையறாது உணவை வடலூரில் எரித்த வள்ளல் = இராமலிங்க வள்ளலார்
* மனவளம் (கருணை) மிக்கவர், 1000 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோரை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற வள்ளல் = உடையவர் (எ) இராமானுசர்
- பழுத்த நாத்திகர்களான பெரியாரும், பாரதிதாசனும், ஆன்மீக வாதிகளைப் போற்றினார்கள் என்றால், இந்த இருவரை மட்டுமே!

ஆனால்...
மனிதனை வள்ளல்-ன்னு பாடாது....
ஆண்டாள் தான் முதன் முதலாக, ஒரு அஃறிணையை வள்ளல் என்று பாடுகிறாள்!

மாட்டுக்கு மறைக்காது குடுக்கும் மனமும் உண்டு! பால் பொழியும் செல்வ வளமும் உண்டு!
எந்த விலங்கும் ஊருக்கே குடுப்பதில்லை! எனவே மாடு = வள்ளல்!
மாடுன்னாலே செல்வம் தான்! மாடல்ல மற்றையவை!

நாளை பேசப் போவது = ஒரு தமிழ்த் தொழில்நுட்பக் கடல்! வர்ட்டா?:) Sorry again for today's late:)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP