Monday, July 16, 2007

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன? - இந்த டயலாக் எங்கு வருகிறது என்று நினைவுக்கு வருகிறதா? திருவிளையாடல் திரைப்படத்தில்!
என்ன அப்பிடிப் பாக்கறீங்க?...."நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?" என்று கேள்வி கேட்பார் பிள்ளையார்! - அதுக்குப் பதில் என்ன சொல்லப்படும்?.....ஞாபகம் வருகிறதா?

அம்மை அப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மை அப்பன்!
அதே போல,
புதினாத் தொகையல் தான் புதினாச் சட்னி!
புதினாச் சட்னி தான் புதினாத் தொகையல்!
என்று சொல்லலாமா....கூடாதா?

- இது தான் இப்போது பேண்டேஜ் பாண்டியனுக்கு எழுந்துள்ள பெருத்த சந்தேகம்!

ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க....
ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,
வெறும் பிரட்டும், சூப்பும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது!
எண்ணெய் வாசமே கூடாது என்று மருத்துவர் உத்தரவு வேறு! (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)

அப்போது தான் காரமா, உறைப்பாச் சாப்பிட ஆசை வந்தது! அம்மா செய்யும் புதினாச் சட்னி, புதினாத் தொகையல் நினைவுக்கு வந்தது!
புதினா மருத்துவக் குணங்கள் கொண்டது எனறு அமெரிக்க நாசா விண்வெளிக் கழகமே சொல்லி இருக்காமே! அதான் அதையே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்! - ஆனா, அங்கு தான் வந்தது வினை!

தாளிக்கலாமா? கூடாதா?? - எண்ணெய்ப் பிரச்சனை! - ச்சே இந்த அமெரிக்காவில் எப்பமே இப்பிடித் தான்....அடுத்தவன் வீட்டு/நாட்டு எண்ணெய்ப் பிரச்சனைக்கும் அமெரிக்கவுக்கும் அப்படி ஒரு ராசி போல! :-)

சரி...என்ன செய்வது என்று தெரியாமல் நம் ஆருயிர் நண்பர் CVR இடம் விஷயத்தைச் சொன்னேன்! சர்வ வல்லமை படைத்த பாலாஜி இருந்திருந்தால் அவரைக் கேட்டிருக்கலாம்! ஆனால் அவரோ ஊரில் இல்லை! சரியென்று CVR-இடம் சொன்னால், அவர் பதறிப் போய் விட்டார்! நான் உங்களுக்கு ஆவியில் சுட்ட இட்லி கொண்டு வருகிறேன் என்று ஆறுதலாகச் சொன்னார். ஆகா என்ன பாசம்! என்ன பாசம்!

சற்று நேரத்துக்கு எல்லாம் ஒடோடி வந்தார் மனுசன்!.......Frozen Idli பாக்கெட்டோடு!
"நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!

எனக்கு ஒரே அழுகையா வந்து விட்டது! உடம்பு சரியில்லீன்னா, ஆப்பிள் பழங்களோடு வந்து பார்ப்பார்கள்! ஆனா இவரு ஒரு கூடை ஆப்பிளைக் கூட வாங்கி வராம,
'ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்' ன்னு பாட்டு பாடிட்டு கிளம்பிட்டாரு!
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! சரி நாமே புதினாவைச் செய்து விட வேண்டியது தான் என்று களத்தில் இறங்கி விட்டேன்! இதோ செய்முறை! சாரி, நான் செஞ்ச முறை!



தேவையானவை:
புதினா 2 கொத்ஸ் (கொத்துவின் pluralஐச் சொன்னங்க! கொத்ஸ் நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு, தெரியும்)
கொத்தமல்லி 1 கொத்து (இலைகளைக் லேசாத் தண்ணீரில் கழுவிக் கொள்ள மறக்காதீங்க)
தக்காளி1
சின்ன வெங்காயம்3
புளி காய்ச்சல்1/4 கப்
உ.பருப்பு/க.பருப்பு2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்3 தேக்கரண்டி
காய்ஞ்ச மிளகாய்3
உப்பு அவங்க அவங்க சூடு சொரணையைப் பொறுத்த அளவு :-)

கொஞ்சம் வித்தியாசமாப் பண்ணனும்-னா......

மாங்காய்

அரை மாங்காய், "வெட்டி" வைத்துக் கொள்ளவும்! வெட்டியையும் சமைக்கும் போது கூட வைத்துக் கொள்ளலாம்! :-)

மேலே CTRL+A- எல்லாம் பண்ணிப் பார்த்து, எதுவும் தேடி ஏமாந்து போகாதீங்க! இது கொத்தனார் கிண்டிய உப்புமா பதிவு போல இல்ல! :-)

சரி, மேட்டருக்கு வாங்க!
1. Frying Pan-இல் எண்ணெய் விட்டு, உ/க பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக்கோங்க.
2. கூடவே வெங்காயம், மிளகாயும் வறுத்து வைச்சுக்கோங்க.
3. புதினா,கொத்தமல்லி இலைகளைக் கொட்டி, நீர் எல்லாம் போகுமாறு, கொஞ்சமா இலைகள் சுருங்குமாறு வறுத்துக்கோங்க. தண்ணி எல்லாம் சேர்க்கத் தேவையே இல்லை! (தாகத்துக்கு குடிக்கிற தண்ணியைச் சொன்னேன்-பா)

அய்யோ....வாசனை இப்பவே தூக்குதே! நாலு இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்! :-)

4. இப்ப தனியாக, இன்னொரு Panஇல் தக்காளி வதக்கிங்கப்பு!
5. மாங்கா பத்தைகளை சும்மா அரை நிமிடம் அப்படி லைட்டா வதக்கிங்க!
6. எல்லாம் கூல் ஆவட்டும்! சிவாஜி ஸ்டைலில் கூல் பேபி கூல்!

7. எல்லாத்தையும் மிக்சியில் கொட்டி, புளிக் காய்ச்ச்ல், உப்பு சேர்த்து அரைச்சிக்கங்க!
8. வேணும்னா, இன்னொரு வாட்டி, உ/க பருப்பு வறுத்து, தாளிச்சி கொட்டிக்கங்க!
9. ஐட்டம் ரெடி...பத்தே நிமிஷம் தான்!
வாழ்க்கையில சந்தோசமான விஷயம் எல்லாம் சீக்கிரமாவே நடந்து முடிஞ்சிடுது பாத்தீங்களா?! (ஆன்மீகப் பதிவு எஃபெக்டு நடு நடுல வந்துடுது, நான் என்ன செய்ய!:-)

10. சரி...இனிமே தான் மேட்டரே! இப்ப நாம செஞ்சதுக்குப் பேரு என்னா? தொகையலா? சட்னியா??.....அதைக் கரீட்டாச் சொல்லிட்டு அப்புறம் வாங்க...
தட்டுல துண்டு இலை பரப்பி, அதுல நெய் தடவி....
அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
இந்தப் புதினா மேட்டரையும் சேர்த்து வச்சித் தாரேன்!

ஒளவையே! - புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?


பின் குறிப்பு:
மொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
என்று தமிழ் மூதாட்டி சொன்ன வழியில் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்! மறந்து விடாதீர்கள் - தொகையலுக்கும், சட்னிக்கும், மொத்தம் ஆறு வித்தியாசங்கள் சொல்லணும்!

பின் பின் குறிப்பு:
மாதவிப் பந்தலில் மொக்கைப் பதிவு ஒன்று கூட போடாத உன்னை எல்லாம் Blogger என்று ஒப்புக் கொள்ளவே முடியாது என்று நண்பர் சபித்து விட, அ
தனால் மிகவும் பயந்து போய், தொகையலும் சட்னியும் அரைத்துச் சாப்பிட்டு எழுதியதே இந்தப் பதிவு!:-)
படங்களுக்கு நன்றி:
SeeC

Read more »

Wednesday, July 04, 2007

புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!

இதோ...விடைகளும், வின்னர்களும்

மோனா, பொன்ஸ், ஜெயஸ்ரீ - 10/10
ஆதித்தன், பினாத்தல் சுரேஷ், ஜி.ராகவன், சத்தியா - 9/10
மனதின் ஓசை, ஸ்ரீதர் வெங்கட் - 8/10
------------------------------------------------------------------------
விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்! நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

பொன்னியின் செல்வனுக்கு, ஓவியர் மணியம் வரைந்த இரண்டு படங்கள்:
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
1. காதல் ஜோடிகள்: குந்தவை-வந்தியத்தேவன், நந்தினி-பழுவேட்டரையர்
2. வீரநாராயணபுரம் ஓவியம் - இது விண்ணகரக் கோவில் என்று நூலின் முதலிலேயே வந்து விடும். அதன் வசனம், சாம்பிளுக்கு இதோ!

//ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்//


படங்களுக்கு நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை-tamilheritage.org


பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது!
சரியான சோம்பேறியாச்சே நானு, எங்கிருந்து படிக்கப் போகிறேன்?
அதான் ஒரு பத்து கேள்வி கேட்டுப்புட்டு, பதில் ஒன்றும் பிடிபடலைன்னா, உடனே புத்தகமும் கையுமா உட்காருவதா ஒரு முடிவெடுத்து விட்டேன்!

இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்!

நீங்க யாரையாச்சும், இல்லாக்காட்டி உங்களையே ரெக்கமண்டேஷன் செய்து கொள்வீர்களா? The Lord of The Rings படமாகுது.....பொன்னியின் செல்வன் ஆக முடியாதா?
நம்ம குருநாதர் Dubukku எப்பயோ ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது!
"பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழம் புடவையை எடுத்துக் கழுத்தில் "டை" யாக கட்டிக் கொள்வது போல"

பார்ப்போம், எத்தனை தூரம் நந்தினியும் குந்தவையும் நினைவில் இருக்கிறார்கள் என்று!
சேந்தன் அமுதனுக்கும் பழுவேட்டரையருக்கும் என்ன தொடர்பு என்று!
இலங்கையின் பட்டினங்கள் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று!

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு பொன்னியின் செல்வன்!

1

"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!....."


இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?

1


அ) அருண்மொழிப் பட்டன்
ஆ) ராமன் கிருஷ்ணன்
இ) வைணவதாசர்
ஈ) கிருஷ்ணன் ராமன்

2

ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?

2


அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி
ஆ) கந்தமாறன் - மணிமேகலை
இ) பினாகபாணி - வானதி
ஈ) முருகையன் - பூங்குழலி

3

இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன்.


பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?

3


அ) யாழ்ப்பாணம்
ஆ) அனுராதபுரம்
இ) மாதோட்டம்
ஈ) திருக்கேதீசுவரம்

4

சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?

4


அ) மந்தாகினி தேவி
ஆ) செம்பியன் மாதேவி
இ) வானவன் மாதேவி
ஈ) இலாட மாதேவி

5இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்?

5

அ) குடந்தை வைத்தியர் மகன்
ஆ) மதுராந்தகத் தேவர்
இ) மதுராந்தக உத்தம சோழர்
ஈ) சேந்தன் அமுதன்

6

தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.


அவரைக் கொன்றது யார்?

6

அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர்
ஈ) நந்தினி

7

மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள்.

ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம் என்கிறார் கல்கி.


அவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?

7


அ) ரவிதாசன்
ஆ) குந்தவை
இ) பழுவேட்டரையர்
ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8

கல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்!


இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்?

8


அ) திருவையாறு
ஆ) நாகைப் பட்டினம்
இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9

ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?

9


அ) திருநாரையூர் நம்பி
ஆ) ஈசான சிவபட்டர்
இ) குடந்தை சோதிடர்
ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10

கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?

10


அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) பூங்குழலி
இ) பிரம்மராயர்
ஈ) வந்தியத் தேவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ) ராமன் கிருஷ்ணன் இ) வைணவதாசர் ஈ) கிருஷ்ணன் ராமன்

2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி ஆ) கந்தமாறன் - மணிமேகலை இ) பினாகபாணி - வானதி ஈ) முருகையன் - பூங்குழலி

3 அ) யாழ்ப்பாணம் ஆ) அனுராதபுரம் இ) மாதோட்டம் ஈ) திருக்கேதீசுவரம்

4 அ) மந்தாகினி தேவி ஆ) செம்பியன் மாதேவி இ) வானவன் மாதேவி ஈ) இலாட மாதேவி

5 அ) குடந்தை வைத்தியர் மகன் ஆ) மதுராந்தகத் தேவர் இ) மதுராந்தக உத்தம சோழர் ஈ) சேந்தன் அமுதன்

6 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர் ஈ) நந்தினி

7 அ) ரவிதாசன் ஆ) குந்தவை இ) பழுவேட்டரையர் ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8 அ) திருவையாறு ஆ) நாகைப் பட்டினம் இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9 அ) திருநாரையூர் நம்பி ஆ) ஈசான சிவபட்டர் இ) குடந்தை சோதிடர் ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) பூங்குழலி இ) பிரம்மராயர் ஈ) வந்தியத் தேவன்

Read more »

Thursday, June 28, 2007

நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா?

அது என்ன இவருக்கு மட்டும் பெரியாழ்வார்? "பெரிய" ஆழ்வாரா இவரு?

ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் இவருக்கு மட்டும் என்ன அப்படி உசத்தி? பக்தர்களுடைய பக்தியில் உன் பக்தி உசத்தி, என் பக்தி கொஞ்சம் தாழ்த்தி என்றெல்லாம் பாகுபாடு கிடையாதே!
அப்படி இருக்க, எம்பெருமானிடம் ஆழ்ந்தவர்களான ஆழ்வார்கள் இடையே, பெரிய/சிறிய அடைமொழிகள், ஏற்றத் தாழ்வுகள் எப்படி வரலாம்? - பார்ப்போம் வாருங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (Jun 26, 2007)
அதே போல், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் - நாதமுனிகள் பிறந்த தினம் - (Jun 28, 2007)
மேலும் ஆனி மூலம் - மாணிக்கவாசகர் குரு பூஜையும் கூட!

- இன்று நாம் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தமும் படிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நாதமுனிகள் தான்! தொலைந்த பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!
பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்! இசைப்பாட்டு பாடித் துதிக்கும் அரையர் சேவை என்னும் முறையை அறிமுகம் செய்தவர்! இவருக்கும் பெரியாழ்வாரிடம் அப்படி ஒரு ஈடுபாடு! பார்க்கலாம் வாருங்கள்!


ஆழ்வார்களில், வைணவத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர் நம்மாழ்வார்! அவர் திருவாய்மொழி தான் எல்லாவற்றுக்கும் சாரம்!
வேதத்தையே தமிழ் செய்த மாறன் சடகோபன் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

அவருக்கு அடுத்து திருமங்கை ஆழ்வார். இவர் ஒரு பெரும் நிறுவனத்துக்கு மேலாளர் போல், வைணவம் என்றும் செழித்திருக்கச் செய்தவர்;
பாசுரங்கள் பாடி விட்டதோடு மட்டும் நில்லாது, அடிப்படை வசதிகள் (Basic Infrastructure) செய்து வைத்தவர்! - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

ஆழ்வார்களிலேயே முதலாமவர் பொய்கையாழ்வார்.
திருக்கோவிலூரில் அவர் பாடிய பாசுரம் தான் முதல் பிரபந்தம்! அவருடன் கூடச் சேர்ந்து பாடினர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்கிற இருவரும்! - ஆனால் இவர்களுக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

பெருமாளையே படுக்கையை விட்டு எழுப்பி, மணிவண்ணா, என்னைப் பின்தொடர்ந்து வா, என்று அதிகாரமாய்க் கட்டளையிட்டவர் திருமழிசை ஆழ்வார் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்!
சரி இவளுக்காவது "பெரிய" பட்டம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை! அவளே "பட்டர் பிரான் கோதை சொன்ன" என்று பெரியாழ்வாரின் Initialஐயே தனக்கும் போட்டுக் கொள்கிறாள்!

One and Only One! - பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!

மதுரை நகரம். மல்லி வாசம். கூடல் அழகர்!

பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!
முன்னே பின்னே யானை மீது ஏறியிருந்தா தானே! அப்படி வலம் வரும் அளவுக்குப் பணபலம்/படைபலம் உள்ளவர் அல்லவே!
ரொம்பவும் கூச்சப்பட்டு அமர்ந்து கொண்டு, திருவெட்டெழுத்து ஓதிய வண்ணம் வருகிறார், விஷ்ணுவைச் சித்தத்தில் வைத்த விஷ்ணுசித்தன்.

தன் பிள்ளை ஊர் மெச்ச வரும் காட்சியைக் காண, எந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் தான் மனசு துடிக்காது?
மின்னல் போல் பளிச் என வானத்தில் தோன்றி, சூரியன் போல் பிரகாசித்தார் பெருமாள். கருட சேவையாக! காணக் கிடைக்காத காட்சி...

மன்னனைக் கண்டால் புலவருக்கு என்ன தோன்றும்? - பரிசு, பொற்கிழி, பொன்னாடை?
மந்திரியைக் கண்டால் மாவட்டத்துக்கு என்ன தோன்றும்? - கமிஷன், காண்ட்ராக்ட்?
காதலியைக் கண்டால் காதலனுக்கு என்ன தோன்றும்? - டேய், வாயில வாட்டர் ஃபால்ஸ் வருது பார்! வாயை மூடு என்ற சிவாஜி பட வசனம் :-)
தாயைக் கண்டால் குழந்தைக்கு என்ன தோன்றும்? - பால், பட்சணம், கொஞ்சல்?

எல்லாம் சரி!....ஆனால் தாய்க்குக் குழந்தையைக் கண்டால்?... அதே தான் பட்டர் பிரானுக்கும் தோன்றியது!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் - செவ்வடி செவ்வி திருக்காப்பு!


நான் இருக்கேன் உனக்குப் பிரிவின்றி - ஆயிரம் பல்லாண்டு!
இலட்சுமி மார்பில் இருந்து காப்பாள் - ஆயிரம் பல்லாண்டு!
வலப்பக்கம் சக்கரமும், இடப்பக்கம் சங்கும் எப்போதும் காக்கும் - ஆயிரம் பல்லாண்டு!
கடவுளைக் கண்ட மாத்திரத்தில், கை கூப்பக் கூட இல்லை!......மாறாக, "ஆகா...பேரழகுப் பெட்டகமே! நல்லா இரு! அமோகமா இரு! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு! என்று கடவுளுக்கே ஆசீர்வாதமா?



அட, இது என்ன பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?
உள்ளேயும் மரணம் கூடாது, வெளியேயும் கூடாது...இல்லாக்காட்டி
என்னை மிஞ்சுவார் எவரும் இருக்கக் கூடாது...இல்லாக்காட்டி
ஏழடுக்கு மாளிகையில்....என் பேரனுக்குப் பேரன்....தங்கக் கிண்ணத்துல பால் குடிக்கறத பாக்கணும் - இப்படி எல்லாம் வரம் வாங்கறத வுட்டுபுட்டு,
வரம் தரும் வரதராஜனையே நல்லா அமோகமா இரு-ன்னா என்னா அர்த்தம்?
- பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரேப்பா! தனக்கென்று மோட்சம் கூடக் கேட்கவில்லை! வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!


ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே அவன்! தோள் கண்டார் தோளே காண்பாரே!
என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!

அடேய் சக்கரமே, அடேய் சங்கே, அடே கருடா...
தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சாரங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்!


இப்படித் தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார் ஆனார்!
எந்த ஆழ்வாரின் பிரபந்தங்களை ஓதுவதற்கு முன்னரும், இந்தத் திருப்பல்லாண்டை சொல்லி விட்டே, மற்றவற்றை ஓத வேண்டும் என்பது கோவில் மரபு ஆகி விட்டது! அது மட்டுமா?......................


மற்ற ஆழ்வார்கள் எல்லாம், கண்ணன் வராவிட்டால்....
ஒன்று தூது அனுப்புவார்கள், இல்லை இப்படி என்னை வதைக்கிறானே பாவீ.... என்று வசைமாரி பொழிவார்கள்!
ஆனால் யசோதை மட்டும் தான்,
"கண்ணனை வீட்டுக்குள் பூட்டியும் வைக்க முடியாது. அப்படி செய்தால் உலக அனுபவம் அவனுக்கு இல்லாமல் போய்விடும்! அய்யோ வெளியில் சென்றானே, இன்று எந்தப் பாவி எந்த ரூபத்தில் குழந்தையைச் சூழ்ந்தானோ" - என்று தினம் தினம் செத்துப் பிழைத்தாள், ஓராயிரம் முறை!

அப்படியே தான் பெரியாழ்வாரும் செத்து செத்துப் பிழைக்கிறார், கண்ணனைப் பற்றிய கவலையில்!
அவன் பிறந்த நாளை அக்கம் பக்கத்தார்க்கு நேரடியாகச் சொன்னால், கம்சன் கண்டு பிடித்து விடுவானோ என்று பயப்படுகிறார்! அதனால் "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" என்கிறார்!

ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! கம்சனும் அவன் ஆளுங்களும் குழம்பட்டும்! நாம குழந்தையின் பிறந்த நாளைக் கொஞ்சம் மறைஞ்சே கொண்டாடுவோம் - என்று அப்படி ஒரு பரிவு பட்டர் பிரானுக்கு!

ஷைலஜா ஒரு பதிவில் கதை போல் சொல்லி இருந்தார்கள்; மிக வயதான ஒரு அம்மா, புகைவண்டி Upper Berth-இல் தூங்கும் தன் "ஐம்பது வயதுக் குழந்தை", எங்கே புரண்டு விழப் போகிறானோ என்று பயந்தார்களாம்!
எத்தனை முறை நம் வீட்டிலேயே, நம்ம அம்மா,
"டேய்...பாத்து போய் வாடா, ரோடு க்ராஸ் பண்ணும் போது ஜாக்கிரதை!", என்று இந்த வயதிலும் சொல்லுகிறார்கள்! :-)

- இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்!
- ஏனையோர் தங்களைத் தலைவியாக்கிக் கொண்டு, தலைவனைச் சேர விரும்பி இருக்க, இவர் மட்டும் கடமையை மட்டுமே கைக்கொண்டு, கைங்கர்யம் புரிந்ததால் பெரிய ஆழ்வார்!

- ஜனகன் வில் தூக்கும் போட்டி வைத்து பின்னர் தான் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். ஆனால் இவரோ போட்டா போட்டி எல்லாம் எதுவும் வைக்காது, பெருமாளை ரொம்பவும் வருத்தாது, மகளைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார். அவன் செல்வம் செழித்திருக்க, திருவை அவனுக்குக் கொடுத்ததால் பெரிய ஆழ்வார்!

- பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
- ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
- இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்!


கீழே பாட்டைப் பாருங்கள்! இந்தப் பாட்டு தான், ஏன் "பெரிய" ஆழ்வார் என்பதற்கு முக்கியமான பிரமாணம்!
இதைப் பாடியவர், மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சார்யர்! - திருவரங்கக் கோயிலில் தமிழ் வழிபாட்டுக்கு இடைஞ்சல் வந்த போது, தமிழைத் தாங்கிப் பிடித்தவர்! நீங்களே ஒரு முறை வாய் விட்டுப் படியுங்கள்!

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி -
பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!

விருத்திபெறு வில்லிபுத்தூர் விளங்கவந்தான் வாழியே!
பெருமைமிகு ஆண்டாளைப் பெற்றபிரான் வாழியே!

பட்டர்பிரான் வாழியே! பட்டர்பிரான் வாழியே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!!

Read more »

Tuesday, June 26, 2007

அ என்றால் 8!

எல்லாரும் விதம் விதமா எட்டு போட்டுட்டாய்ங்க! கடைசியா எட்டு போடறவங்களுக்கு ஒரு ஈசியான வேலை என்னன்னா அடுத்த எட்டுக்கு யாரைக் கூப்பிடலாம்-னு மண்டைய போட்டு ரொம்ப உடைச்சிக்க வேணாம்.

ஏன் என்றால் ஏற்கனவே பல பேர் உடைச்சிட்டு போயிட்டுருப்பாங்க!
தேர்தல் நாள் அன்று சாயந்திரமா ஓட்டு போடப் போனா, எதுனா மிஞ்சுமா? உங்க ஓட்டு உங்களுக்குச் சிரமம் இல்லாம ஏற்கனவே அரங்கேறி இருக்கும்!

அன்பர் SK ஐயா, குட்டிப் பிசாசு என்னும் சுட்டி அருண், தளபதி CVR, மற்றும் கதாநாயகன் சந்தோஷ் அவர்கள் எல்லாருக்கும் ஒரு வாயி நன்றி சொல்லிட்டு, இதோ நம்ம எட்டு!

அட இன்னிக்கி தேதி June 26...இதன் கூட்டுத் தொகையும் 8-ப்பா! ச்சே...
சொல்ல வந்தது என்னன்னா...ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
பெரியாழ்வார் திருநட்சத்திரம்...அதான்பா Birthday!
இன்னிக்கி இந்தப் பதிவ போட்டதனால, நாளைக்கு பெரீய்ய்ய்ய்ய் ஆழ்வாரைப் பற்றித் தனியா பதிவு போட்டுடறேன்! :-)


௧.1
எட்டு-ன்னதும் மொதல்ல ஞாபகத்துக்கு வர்றது எட்டெழுத்து தானுங்கோ!
அதுக்குத் திரு எட்டு எழுத்து-ன்னும் ஒரு பேரும் உண்டுங்கோ! அஷ்டாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவாங்க...ஆனா எதுல எப்படிக் கூட்டினாலும் எட்டு எழுத்து தான் வரும்!

எது என்னான்னு நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கோவ்!
அதைத் தான்
"குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்.....என்னும் நாமம்"
என்று பாடினார்கள்!


௨.2
எங்க ஆயா சின்ன வயசுல, யானையில போட்டு என்னை ஆட்டுவாங்க!....அட நீங்க ஒண்ணு...யானை எங்க வீட்டுச் செல்லப் பிராணி கிடையாது.
தூளி, தொட்டில் என்பதைத் தான் ஊர் வழக்குல யானை-ன்னு சொன்னேன்!
அவங்க அப்பிடி ஆட்டும் போது, ஏதாச்சும் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டுவாங்க. பாதி நேரம் திருப்பாவை தான்! நான் தூங்குறாப் போலத் தெரிஞ்சிச்சுனா பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திடுவாங்க!

நான் அப்பவே கொஞ்சம் அதிகப் பிரசங்கி போல! பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்! அதுல அவுங்களுக்கு ஒரே புளகாங்கிதம்! தன் இறுதி நாட்களில் கூட அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்! இதுனால என் தங்கச்சிக்கு ஒரே stomach burning என்பது தனிக்கதை :-)


௩.3
எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள். நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க! ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம். இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்ப கஷ்டம்ங்க! ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்! ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசு வர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க. அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன். ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!


ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கினு கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்! கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க. நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல! உடனே பளார்!
வீட்டுக்கு வந்து அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார். என்னை வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நான் ஒரே அழுகை! இதுவும் சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாருன்னு justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல!

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க. என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான். அவனைப் போயி எல்லோரும் வையறீங்களே"ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க! நானும் அழுகைய நிறுத்திச் சமாதானம் ஆனேன்!
ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)


௪.4
பள்ளி/கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை!
அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.

சென்னை, தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள பெரியார் திடலில் தான் ஐயா பெரியாரின் நினைவிடமும், தி.க அலுவலகமும்!
வீரமணி ஐயாவிடம் நேரடியாவே பேசலாம்! ரொம்ப பந்தா எல்லாம் கிடையாது!
கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!


ஆனாலும் அவை ஒரு போராட்டத்தில் எரிக்கப்பட்ட போது, எனக்குள் தோன்றியது முதல் விரிசல்!
பின்பு கல்லூரியில் பேராசிரியர் மதி சீனிவாசன் அவர்கள் பார்வை பட்டு, எப்படியோ அரங்கனிடம் மீண்டும் வந்து சேர்ந்தேன்!
சென்னைப் பல்கலையில், துறைத் தலைவர் டாக்டர் M.A வேங்கடகிருஷ்ணன் அவர்கள், சாதி வித்தியாசங்கள் எதுவும் பாராது, ராமானுசர் வழியில் அரவணைத்துக் கொண்டதும், திருவரங்கத்து நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணும் நற்பேறு ஏற்படுத்திக் கொடுத்ததும்...
...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
குலதெய்வம் முருகன். சென்றது பெரியார் கழகம். மீண்டது பெருமாளிடத்தில்! :-)


௫.5
கல்லூரி ஆண்டு மலருக்கு பல பிரபலங்களைப் பேட்டி கண்டது மறக்க முடியாத ஒன்று!
அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்று பலரைப் பேட்டி கண்டோம். அப்போது தான் கல்லூரிக்கு வெளியே கிடந்த, போட்டி நிறைந்த professional life பற்றி ஒரு பார்வை கிடைச்சுது!

நான் எங்கள் Batchக்கு Placement Representative ஆகவும் இருந்தேன். எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களும் அதிகம். ஆங்கிலம் சரளமாக வரவும், Campus நேர்காணல், ஆளுமை வளர்ச்சி (Personality Development) ன்னு பல முயற்சிகள்!
Day Scholarஆக இருந்த நான் பாதி நாள் ஹாஸ்டல் வாசம் செய்து வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன்!
இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!

பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!


௬.6
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. அவர் இந்தியாவுக்கு வந்த போது எங்கு பார்த்தாலும் ஒரே craze. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் அவருடன் கை குலுக்க ஒரே போட்டா போட்டி.
அது என்னடான்னு அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது...மோனிகாவைப் பிடித்த கையை இவர்களும் பிடிக்க ஒரே ஆர்வக் கோளாறு என்று :-)

அவர் ஓய்வு பெற்ற போது, இந்திய-அமெரிக்க நல்லுறவு மலர்ந்தது பற்றி அவருக்குச் சும்மானா ஒரு கடுதாசி போட்டேன்! அமெரிக்கா வந்த புதுசு அப்போ. தமிழ்மணம் எல்லாம் கிடையாது அல்லது எனக்குத் தெரியாது! அப்புறம் அதை மறந்தே போயிட்டேன்!
திடீர்ன்னு ஒரு நாள் தபால்காரர் என்னைக் கூவி அழைத்தார். என்னடானு பார்த்தா வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு கடிதம்.

சரி சும்மானா நன்றி என்ற வாழ்த்து அட்டையா இருக்கும்னு நினைத்துப் பிரிச்சா,
தலைவர் ஒரு பக்கப் பதில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு அனுப்பி வைச்சார். ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!


௭.7
குழந்தைகள் நலத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டது நியூயார்க் வந்த பிறகு தான்!
Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, மற்றும் அதற்கு நிதி சேர்க்க நியூயார்க் five borough சைக்கிள் டூர் என்று ஓடுகிறது...
இதோ சுட்டி!



௮.8
வெட்டிப்பயல் பாலஜியும் நானும் விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கிய பேச்சு மறு நாள் வைகறை 4:30 மணிக்குத் தான் நின்றது!
அப்படி என்னடா பேசிக்கிட்டீங்கன்னு கேக்குறீங்களா?

ஹிஹி...அது என்னன்னா பேச்சுக்கு பேச்சும் ஆச்சு, வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசியும் ஆச்சு என்று அந்த ஏகாதசிக்கு அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது!


அப்பாடா...எட்டு எட்டுன்னு எட்டியாச்சுப்பா!
அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...அய்யோ கொத்தனார் என்னைக் கொத்த வரா மாதிரியே இருக்கே! :-)

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

நான் அழைப்பது:
செல்வன்
சிவபாலன்
வாத்தியார் ஐயா
தமிழ் சசி
நா.கண்ணன்
சாத்வீகன்
அன்புத் தோழி
திராச
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

சங்கப் பலகையில் ஓலையை வைத்தவுடன், அது என்ன செய்தது? அள்ளியதா இல்லை தள்ளியதா? இதோ முந்தைய பதிவு.

தள்ளியது!...
என்ன தள்ளியதா? - ஆமாம்...பலகையின் மீது ஏற்கனவே இருந்த நூல்களை எல்லாம் கீழே தள்ளிக் கொண்டது!
திருவாய்மொழியை மட்டும் அள்ளிக் கொண்டது!
இதைக் கண்ட மக்கள் எல்லாரும் "ஆகா"காரம் செய்ய, ஆகாரம் ஆனது மன்னுயிர்க்கு எல்லாம், இந்தத் திருவாய்மொழி!

சங்கப் புலவர்கள் எல்லாரும் திகைத்துப் போய் விட்டனர்.
இது தமிழ் மறை தான் என்று முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்ச் சங்கம் இதை ஏற்றுக் கொண்டு, தனது நூற் களஞ்சியத்திலே சேர்த்துக் கொண்டது!
சங்கப் புலவரின் தலைவர், மதுரகவிகளை அணைத்துக் கொண்டார்!
தவறுக்கு வருந்தி, கண்ணிர் மல்கி, ஒரு ஆசு கவி பாடிச் சிறப்பித்தார்!

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?

பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,
ஓவாது உரைஆயிரம் தமிழ் மாமறையின்
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!

(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)

நம்மாழ்வார் புளியமரக் காட்சித் திருகோலம் - ஆழ்வார் திருநகரி

புலவர்கள் அனைவரும் முழு மனதுடன், விழாவை மீண்டும் நடத்திக் கொடுத்தனர்!
அன்றில் இருந்து இன்று வரை, முன்பு சொன்ன கட்டியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு தான், எல்லா ஆலயங்களிலும் நம்மாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது!


அட, எல்லாம் சரி!
திருவாய்மொழி வைணவப் பாட்டாச்சே! அதைப் போய் மற்ற மதங்களும் சமயங்களும் எப்படிப் படிப்பாங்க?
இப்படித் தான் சில சைவர்கள் கேட்டார்களாம்,
இடைக்காட்டுச் சித்தர் என்னும் சிவநெறிச் செல்வரிடம்.
இவர் யாருன்னு தெரிகிறதா? தாண்டவக் கோனே, தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!

அவரு, ஒரு படி மேலே போய்,
"ஐயா...இது தமிழ் வேதம். வேதத்துக்கு சிவன் என்றோ, திருமால் என்றோ, அம்பாள் என்றோ பிரிவு உண்டா?...வாங்க எல்லாரும் படிக்கலாம்", என்று கேட்டவர்களுக்கு வகுப்பே எடுக்கத் துவங்கி விட்டாராம்!
அவர் செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டைப் (தனியன்) பாருங்க!

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து


(பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும் ,
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்! ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!)


இப்படிச் சைவ நெறிச் சீலர்களின் மனங்களையும் கவர்ந்தவர் நம்ம நம்மாழ்வார்!
முருகனின் வைகாசி விசாகத்தில் பிறந்த அந்தக் கொழுந்து.
அது செய்த தமிழைச், சைவரும் விரும்பியதில் வியப்பில்லையே!
இறைவனே இப்படித் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறார்! நாம் தான் மெத்தப் படித்து விட்டு, சொத்தை வாதங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்!
சொத்தை வாதங்களால், பெருஞ் சொத்தை இழந்து கொண்டிருக்கிறோம்! :-)

நம்மாழ்வார் அடிநிலையில் இருக்கும் சடாரி


இடைக்காடர், சைவத்தில் இருந்து கொண்டு வைணவத்தைப் புகழ்ந்தார்...சரி தான்!
அதே போல், வைணவம் சைவத்தைப் புகழ்ந்துள்ளதா?
- இது நல்ல கேள்வி!
வைணவத் தத்துவத்துக்கே தலைவரான நம்மாழ்வார், சிவபெருமானை வணங்கி வாழ்த்துவதைப் பாருங்கள்!

அற்றது பற்று எனில் உற்றது வீடு என்று பாடிய நம்மாழ்வார், அந்தப் பற்றை எப்படி அறுத்தார்?
பெருமாள், பிரமன், சிவன் என்று அனைவரையும் அழுது தொழுது, பற்றை அறுத்து, வீடு பெற்றாராம்!
இதை, இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல, அக்காலத்தில் எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்?:-)

அது என்ன பற்று?
இருப்பதிலேயே மிக பயங்கரமான பற்று, உன் சமயம் தாழ்த்தி, என் சமயம் உசத்தி என்ற பற்று.
வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளா விட்டாலும்,
அடி மனம் அதை அசை போட்டு மகிழ்வதில் ஒரு ஆனந்தம் காணுமாம்! அந்தப் பற்று... அது அற்றது பற்று எனில், உற்றது வீடு!

அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


இது திருவாய்மொழியின் நிறைவுப் பாடல்! அதில் மறக்காமல் சிவனையும் சேர்த்துப் பாடித், தமிழ் மறையைப் பொது மறை ஆக்குகிறார் நம்ம ஆழ்வார்!
முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்றும் அதற்கு முன்னால் பாடிப் பரவுகிறார்!


பொதுவாக வைணவர்கள் தீவிரப் பற்றாளர்கள் என்ற ஒரு வழக்கு உண்டு! அவர்கள் மதுரைக் கோவிலுக்குப் போனாலும்,
மீனாட்சியை மட்டும் தரிசித்து விட்டு, வந்து விடுவார்கள் என்றும் சொல்லுவர்.
அதெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரே! மிக மிகச் சொற்பம்!
உண்மை என்னவென்றால், திருச்சின்னங்களான சங்கு சக்கர முத்திரை பதித்துக் கொண்டவர்கள், அந்த விரதப்படி, சிவனார் ஆலயங்களில் வீழ்ந்து வணங்க மாட்டார்கள்! அவ்வளவு தான்!

ஒருமுறை வாரியார் சுவாமிகள், காஞ்சி மாமுனிவர் - மகா பெரியவருடன் கலந்துரையாடப் போய் இருந்தார்.
பெரியவரைக் கண்டவுடன், அவர் காலில் வீழ்ந்து வணங்க முற்பட,
பெரியவர் பதறிப் போய், வாரியாரைத் தடுத்து நிறுத்தினார்.
"மார்பிலே சிவலிங்க மணியைத் தரித்திருக்கும் வீரசைவன் நீ...சிவாலயங்கள் தவிர இப்படிப் பிற இடங்களில் கீழே விழுந்து, சிவலிங்கம் நிலம்பட வணங்கக் கூடாது.
இது தெரிந்தும் என் முன்னே நீ விழலாமா?", என்று வாரியாரைச் செல்லமாகக் கடிந்து கொண்டாராம்.
இதே தான் சங்கு சக்ர முத்திரை பதித்துக் கொண்டவர்க்கும்!

ஆனால் "வைணவர்கள் எல்லாம் தீவிரப் பற்றாளர்கள், பா", என்று சொல்லிச் சொல்லியே, வைணவரிடம் காரியம் சம்பாதித்துக் கொண்டு,
ஆனால் மனத்தளவில் மறந்தும் புறந் தொழாச் சைவர்களும் உண்டு :-)
இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் சைவர், வைணவர் இருவருக்குமே...ஏன்.....மற்ற எல்லாருக்குமே,
நம்மாழ்வார் சொல்லிக் கொள்வதைக் கேளுங்கள்!

சங்கர நாராயணர்

வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே


வணங்கும் துறைகள் = ஒரு மாபெரும் குளம்/ஏரி...
அதன் ஒவ்வொரு பக்கமும் ஒரு துறை...
தனக்குச் சொந்த ஊர் என்பதால், அந்த ஊர்த் துறையில் வசதியாகத் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான் ஒருவன்!
அதற்காக, பக்கத்துத் துறையின் தண்ணீரைப் பழித்துப் பேசுவானா?
அப்படியே பழித்துப் பேசினால், அது அந்தத் தண்ணீரின் குற்றமாகி விடாதா?
அதே ஏரியின் தண்ணீர் தானே இங்கும்? அதனால் தான் "வணங்கும் துறைகள்" என்றார் ஆழ்வார்!

அப்படி நீரின் பிழை இல்லையானால், அது யாரின் பிழை?
"மதி விகற்பால்" பிணங்கும் சமயம் = அவரவர் மதி விகற்பு. அவரவர் அறிவுக்கு எட்டிய வரை கற்பனையான வாதம். தான் தோன்றித் தனம்

அவை அவை தொறும், "அணங்கும் பலபல ஆக்கி" = இது போதாதென்று அதற்குள்ளேயே இன்னும் பலப் பலக் கருத்துகள்/கொள்கைகள்.
தென்கலை/வடகலை...வீரசைவம்/சைவ சித்தாந்தம்...இப்படிப் பலப்பல!

நின்கண் வேட்கை எழுவிப்பனே = இவ்வளவு பிரிவுகளுக்கு இடையேயும், உன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, வேட்கை எழுவிப்பனே!

இது தான் திருவாய்மொழியின் சாரம்!
இப்போது சொல்லுங்கள், திருவாய்மொழியையும் நம்மாழ்வாரையும் வைணவத்துக்குள் மட்டும் அடக்கி வைக்க முடியுமா?

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளும் இன்று தான்!
புத்த பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமாவும் இன்று தான்!
இந்நாளில் தோன்றிய நம்மாழ்வார், எந்நாளும் காட்டிய வழி இது!

இந்த வைகாசி விசாகத்தில்,
நம்மையே ஏமாற்றித் திரியும் நம் மனதினுடைய ஓரத்தில்...இதை போட்டு வைப்போம்! எப்பவாச்சும் இருட்டில் மாட்டிக் கொள்ளும் போது, நந்தா விளக்காய் ஒளி கொடுக்கும்!

மன்னு பொருள் நால் வேதம் தமிழ் செய்தான் வாழியே!
மகிழ் மணக்கும் குருகையர் கோன் மலர் அடிகள் வாழியே!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!


என்னங்க, இந்தப் பதிவில் தத்துவக் கருத்துக்கள் மிகுந்து விட்டனவா?
அடுத்த பதிவில்...
நம்மாழ்வார், ராமானுசரை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு எடுத்து விட்டார். அந்தக் கதையையும், இன்னும் சில தித்திக்கும் பாசுரங்களையும் பார்ப்போம்!
Read more »

Sunday, May 27, 2007

திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்!

அட, என்னாப்பா சொல்லுற நீ! கழகம், கட்சி, கொடி இது எல்லாம் தெரியும்! தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட "திராவிட" என்னும் சொல்லை, பெயரில் கட்டாயாம் கொண்டுள்ளன! ஆனா...அது இன்னா திராவிட வேதம்?
யாராச்சும் புதுசா, புரட்சிகரமா எழுதி இருக்காங்களா? அவங்களுக்குத் தமிழக அரசு சிறப்புகள் செய்து இவ்வாறு பட்டம் அளித்துள்ளதா?

அட, அது இல்லப்பா இது!...நான் சொல்லும் திராவிட வேதம் எட்டாம் நூற்றாண்டுக்கும் முன்னர்!
அட, அப்பவே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்களா?...யாருப்பா அது? என்ன தான் விடயம்? சொல்லேன்!

திராவிடக் குழந்தை ஒன்று பிறந்துச்சுப்பா. அதுக்குப் பேரு மாறன்!
(நீ உடனே பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, அவசரப்பட்டு, வேறு கணக்குகள் போடாதே! :-)
பாரேன்...திராவிடக் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அவதரித்த தினத்தில் தான் அதுவும் பிறந்தது. வைகாசி விசாகம்!

உழவுத் தொழில் புரியும் வேளாளர் குடியில் பிறந்த குழந்தை அது! நாலாம் வருணம் என்று சொல்லுவார்களே...அது!
நாலாம் வருணம் தான், நால் வேதமும் தமிழ் செய்தது!
அதைத் தான் இன்று அந்தணர்கள் முதலான எல்லோரும், முதலிடம் கொடுத்து, முழங்கிப் பாடுகிறார்கள்!

அட, அப்படியா விடயம்? மேற்கொண்டு சொல்லு!

அந்தக் குழந்தையின் கதையைப் பிறகு சொல்கிறேன். இப்ப வேறொரு கதை கேளூ! அதுக்கு முன்னாடி ஒரு விடயம்.
மாறன் என்ற அந்தக் குழந்தை தான், இன்று பலராலும் வணங்கிப் போற்றப்படும் நம்மாழ்வார்!
அவர் செய்த திராவிட வேதம் தான் திருவாய்மொழி! தமிழ் வேதம் என்றும் போற்றப்படுகிறது!

ஆகா! இவரைப் பற்றி நானும் கொஞ்சம் கேள்விப்பட்டுள்ளேனே!
பிறவியில் இருந்தே பேசாமல் இருந்து, பின்னர் யாரோ ஒரு அந்தணர் இவர் காலடியைப் பற்றினாராமே! அவருக்குச் சொல்வது போல், பல பாசுரங்களைப் பொழிந்தவர் தானே இவர்? இவருக்குச் சடகோபர் என்று பெயரும் உண்டா?

ஆமாம்பா...சடகோபர் தான்!
இன்றும் கோவிலுக்குப் போனால், தலையில் சடகோபம்/சடாரின்னு வாங்கிக்கறயே! அவரே தான் இவர்!
இறைவனுடைய திருப்பாதங்களின் அம்சமாய் வந்தவர்;
இன்றும் கூட அந்த மென் மலர்ப் பாதங்களை, நமக்காகக் கொண்டு வந்து,
நம் தலையின் மீது வைத்து, நம்மை எல்லாம் ஆட்கொள்பவர்!
சரி, நாம் கதைக்கு வருவோம்!


மதுரைக்கு அருகே உள்ள ஊர், அழகர் கோவில். அழகர் ஆற்றில் இறங்குவாரே அந்தக் கோவில் தான்! திருமால் இருஞ் சோலை என்று பெயர்!
அந்த மலையின் கீழே அழகர்! மலையின் மேலே அழகன்!
பழமுதிர் சோலை என்னும் படைவீட்டில், மலையின் மேல் முருகன்!
அந்த மதுரையம்பதியில், அன்று வைகாசி விசாகத் திருவிழா!
நம்மாழ்வார் பாசுரங்களை எல்லாம் சொல்லி, பெருமாள் கோவிலில், சிறப்பு ஊர்வலம்.
அதை முன்னின்று நடத்துகிறார் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார்!

தன்னுடைய ஆசிரியர், குருநாதரான நம்மாழ்வார், மண்ணுலகை விட்டு நீங்கிய பின்,
அவர் அருளிய பாசுரங்களை எல்லாம் தொகுத்துப் பாடி வருகிறார்!
அவருக்குப் பெருமாள் பக்தி அதிகம்! அதை விட குரு பக்தி, மிக மிக அதிகம்!!
நம்மாழ்வாரின் திருமேனியும், பாசுரங்களையும் பல்லக்கிலே சுமந்து, பெருமாள் கோவிலில், வீதியுலா அழகாக நடைபெறுகிறது!

"வேதம் தமிழ் செய்த மாறன்
தமிழ் மறைப் பெருமாள் எழுந்து அருளுகிறார்...
திருமால் திருவடி நிலையர்
சடாரி சடகோபர் பொன்னடி சாத்துகிறார்
..."
என்று கட்டியம் கூறிக் கொண்டு, பல்லக்கு தூக்கிச் செல்கிறார்கள்!


அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் சிலர்!
அவர்கள் எல்லாருக்கும், மனத்துக்குள் பெரும் குழப்பம்!
"அது எப்படி பொத்தாம் பொதுவாக, தமிழ் மறை என்று நீங்கள் கூறலாம்?
அப்படிக் கூற என்ன ஆதாரம்?
தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்டதா உங்கள் திருவாய்மொழி நூலை?
சங்கத்தில் அரங்கேறியதாகவும் தெரியவில்லையே!
அப்படி இருக்க, இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்!"

துவங்கியது சர்ச்சை!
மதுரகவிக்கோ மனம் கலங்கியது! "இது ஆழ்வார் தத்துவ மார்க்கமாக அருளியது! அதனால் தான் மற்ற நூல்கள் போல, அரங்கேற்றம் என்றெல்லாம் செய்ய முடியாமற் போனது!
விழா முடியட்டும்!
அடியேன் நானே வந்து, தமிழ்ச் சங்கத்தில், நூலை முன் வைக்கிறேன்.
விவாதங்களும், நூல் ஆராய்ச்சியும் செய்து பின்னர் ஒரு முடிவுக்கு வராலாம்", என்று கூறினார்.

ஆனால் சங்கப் புலவர்களோ விடுவதாக இல்லை! "நெற்றிக் கண்ணே திறப்பினும், குற்றம் குற்றமே!
கண் மூன்று கொண்டானுக்கே அஞ்சாத நாங்கள், கண்ணன் பாட்டுக்கா அஞ்சுவோம்?
சங்கப் பலகையில் இதை வைத்து விட்டுத் தான் மறுவேலை!
எப்போது தமிழ் மறை என்று கொண்டாடுகிறீர்களோ, அப்போதே சங்கத்தின் ஒப்புதல் தேவை!
நாளையே வந்து சங்கப் பலகையில் இதை வையும்!
அது, நூலை அள்ளுகிறதா, இல்லை தள்ளுகிறதா என்று ஒரு கை பார்த்து விடலாம்!"

விழா பாதியில் நின்றது!
மதுரகவி துடிதுடித்துப் போனார். என்ன செய்வது என்று அறியாது கண்கலங்கினார்!
யாராய் இருப்பினும், தமிழ் காக்கும் சங்கத்தை மீறத் தான் முடியுமா? அப்படியே மீறுவது தான் அழகாகுமா?
ஆனால் அவர் கவலை எல்லாம், தன் ஆசானின் நூலை, சாதாரண மாணாக்கன்... தான் எப்படி திறம்படச் சங்கத்தில் வைக்க முடியும் என்பதே!

இரவு தூக்கமின்றிக் கழிந்தது!
பெருமாளை இறைஞ்சாமல், தன் ஆசிரியரை இறைஞ்சி நின்றார் மதுரகவிகள்!
ஆழ்வார்களிலும் ஒருவர், ஆசாரியர்களிலும் ஒருவர் - அது யார் இரண்டிலுமே இருப்பது என்றால், ஒருவர் மட்டும் தான்! - நம்மாழ்வார் தான் அவர்!

பெருமாளின் படைத்தலைவரான சேனை முதலியாரின் அம்சம் அல்லவா அவர்!
இறைவன் திருமகளுக்கு உபதேசிக்க,
அதை நம் அன்னை, சேனை முதலியாருக்கு அல்லவா உபதேசித்து அருளினாள்!
இப்படி அன்னையிடமே பாடம் கேட்ட அன்பர் ஆயிற்றே!

வயோதிகப் புலவர் ஒருவராக மதுரகவியின் முன் வந்து நின்றார், நம்மாழ்வார்!
"மதுரகவிகளே, கலங்காதேயும்! இதோ பாடங்களைக் கூறுகிறேன்...மீண்டும் கேட்பீராக" என்று சொல்லி, மயர்வறு மதி நலம் அருளினார்.
"நாளை காலை, முழு நூலையும் கூடச் சங்கப் பலகையில் நீங்கள் வைக்க வேண்டாம்...
இந்த ஒற்றை ஓலையே போதுமானது! நான் வருகிறேன்", என்று ஒரு ஓலையைக் கிள்ளிக் கொடுத்து மறைந்து விட்டார்!

மதுரகவிக்கு உடல் நடுங்கியது! கை கூப்பினார்!
அழுவன், தொழுவன், ஆடிக் காண்பன், பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்....

மறு நாள் காலை...காரிருள் அகன்றது காலை அம் பொழுதாய்!
சங்கத்தில் திரண்டனர் மக்கள் எல்லாரும்!
மதுரகவிகள் செஞ்சொற் பிரவாகமாய், திருவாய் மொழி பொழிந்து அருளினார்!
சங்கப் புலவர்களும் தன்னை மறந்தனர்!
ஆனாலும் அவர்கள் இன்னும் "தன்னை" இழக்க வில்லையே!

மதுரகவிகளே! எல்லாம் சரி தான்; ஆனால் இது சங்கப் பலகை ஏறுமோ?
- மாறன் ஏறு அல்லவா இது; இதோ ஏறட்டும் புலவர்களே!
சங்கப் பலகையில் வைத்தனர், அந்த ஒற்றை நறுக்கு ஓலையை!
அதில் எழுதி இருந்த வரிகள்...

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே


நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே


சங்கப் பலகை என்ன செய்தது? அடுத்த பதிவில் பார்க்கலாம்!


வரும், May 30 2007, வைகாசி விசாகம்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள்! - அன்று தான் நம்மாழ்வாரின் அவதார தினமும் கூட!
அதை ஒட்டி, ஒரு மூன்று தொடர் பதிவுகள் இட எண்ணம்!

நம்மாழ்வார் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி,

அவர் செய்தருளிய தமிழ், ஆலயங்களில் எப்படி எல்லாம் கோலோச்சுகிறது!
பின்னால் வந்த ஆசாரியார்களும், கவிஞர்களும், மற்ற சாதியினரும், அந்தணர்களும், மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும்,
வைணவர், வைணவர் அல்லாதோர் எனும் பாகுபாடுகள் எதுவும் இல்லாது,
மானுடக் கண்ணோட்டத்தில் எப்படி எல்லாம் பாடித் திளைக்கிறார்கள் என்றும் பார்க்கலாம், வாங்க!
Read more »

Monday, May 21, 2007

அ(ச்)சைவப் புதிரா? புனிதமா?? - 5

இதோ...விடைகளும், வின்னர்களும்
கீதா சாம்பசிவம் 9/10
ஜெயஸ்ரீ, குமரன் 7/10
ப்ரசன்னா, திராச 6/10

விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன.
விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்!
நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(திருக்கடவூரிலே அம்மையும் அப்பனும்)!
பாலாம்பிகை உடனுறை மிருத்யுஞ்ஜய சுவாமி
(மிருத்யு=எமன், ஜெய=வெற்றி) = கால சம்கார மூர்த்தி
படத்தைக் கூர்ந்து கவனித்தால், ஈசனின் காலடியில் எமதர்மனும், அருகே மார்க்கண்டேயரையும் தரிசிக்கலாம்.


என்ன...தரிசித்து மகிழ்ந்தீர்களா?


இந்தப் புதிரா புனிதமாவில், ஒரே ஒரு பதிவர் மட்டும் விலக்கி வைக்கப் படுகிறார்!
ஆகா...இது என்ன அநியாயம்! யார் எந்தப் பதிவர்?
ஏன் விலக்கி வைக்கப் படுகிறார்? என்ன குற்றம் செய்தார்?

....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...
கேள்விகள் எல்லாம் கேட்காதீங்க!
இது சைவப் புதிரா புனிதமா!
அதுனால "அச்சைவம்" சாப்பிடறவங்க அவசியம் கலந்துக்கணும்! :-)

ஓவர் டு நம்ம மருத்துவர் ராமநாதன்!
அவர் தான்பா குவிஸ் மாஸ்டரு! அதான் அவர் மட்டும் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாரு!
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்!
(கவனிக்கவும்: நியுயார்க் நேரப்படி....ரஷ்ய நேரப்படி அல்ல! :-)

ராமனின் தலீவா (நாதா), பரிசுத் தொகை எவ்வளவுன்னு நீங்களே செப்பிடுங்க!


1

அகத்தியருக்கு தமிழிலக்கணம் அறிவித்த பெருமான் எழுந்தருளியுள்ள ஊர்?

1

அ) குற்றாலம்
ஆ) தலைக்காவிரி
இ) இன்னாம்பூர்
ஈ) மதுரை

2

'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி' நின்ற மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் முக்தியளித்த தலம்?

2

அ) திருக்கடையூர்
ஆ) ஒப்பிலியப்பன் கோவில்
இ) திருவையாறு
ஈ) திருச்சேறை

3

பெருமாள் கோயில்களில் அங்கப்பிரதட்சணம் செய்வர். ஆனால் இந்தியாவில் இந்த சிவன் கோயிலில் மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்யும் மரபு இருக்கிறது.

காசிக்கு ஒரு வீசை மேல் என்று எல்லா சிவக்ஷேத்திரங்களும் சொல்லிக்கொண்டாலும் இந்த ஊரே சிவலிங்கமென நால்வர் முதல் ஆதிசங்கரர் வரை இவ்வூரை தனிச்சிறப்புடன் புகழ்ந்திருக்கின்றனர்.

3

அ) ராமேஸ்வரம்
ஆ) சிவபுரம்
இ) திருவாடானை
ஈ) திருவாதவூர்

4

சுந்தரரைக் கல்யாணத்தின் போது தடுத்து ஆட்கொண்ட ஊர்?

4

அ) திருவாரூர்
ஆ) திருவொற்றியூர்
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருமழபாடி

5

நந்தானாருக்காக, "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று சிவன் நந்தியை விலகுமாறு பணித்தது இங்கே தான்..

5

அ) சிதம்பரம்
ஆ) சீர்காழி
இ) திருப்புன்கூர்
ஈ) திருவானைக்கா

6நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்திய சரபேஸ்வரர் தலம் எங்கே?... மிகவும் உக்ர மூர்த்தி.6

அ) திருபுவனம்
ஆ) தாராசுரம்
இ) அகோபிலம்
ஈ) திருக்காளத்தி

7

பாம்பு கடித்து இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய, சம்பந்தர் பதிகம் பாடிய தலம்...

7

அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர்
ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர்
இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர்
ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8பொதுவாய் இராமரைப் பாடும் தியாகராஜர், இத்தலத்திலுள்ள சுந்தரேசுவரரை தரிசித்து ஐந்து கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். மிகவும் பிரபலமானவை.8

அ) கோவூர்
ஆ) திருவையாறு
இ) திருவானைக்கா
ஈ) மதுரை

9

அனுமன் கொண்டு வந்த லிங்கமும் ராமேஸ்வரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது...பெயர் என்ன?

9

அ) ராமலிங்கம்
ஆ) விஸ்வலிங்கம்
இ) ஹனுமத்லிங்கம்
ஈ) உத்தரலிங்கம்

10திருமலை திருப்பதியின் கீழே கோவில் கொண்டு, அருவிச் சாரலில், பெருமாளைச் சேவித்து மகிழ்ந்திருக்கும் ஈசன் யார்?

10

அ) சேஷகிரீஸ்வர சுவாமி
ஆ) கபிலேஸ்வர சுவாமி
இ) சுந்தரேஸ்வர சுவாமி
ஈ) கோவிந்தராஜ சுவாமி




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!



1 அ) குற்றாலம் ஆ) தலைக்காவிரி இ) இன்னாம்பூர் ஈ) மதுரை

2 அ) திருக்கடையூர் ஆ) ஒப்பிலியப்பன் கோவில் இ) திருவையாறு ஈ) திருச்சேறை

3 அ) ராமேஸ்வரம் ஆ) சிவபுரம் இ) திருவாடானை ஈ) திருவாதவூர்

4 அ) திருவாரூர் ஆ) திருவொற்றியூர் இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருமழபாடி

5 அ) சிதம்பரம் ஆ) சீர்காழி இ) திருப்புன்கூர் ஈ) திருவானைக்கா

6 அ) திருபுவனம் ஆ) தாராசுரம் இ) அகோபிலம் ஈ) திருக்காளத்தி

7 அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர் ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர் ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8 அ) கோவூர் ஆ) திருவையாறு இ) திருவானைக்கா ஈ) மதுரை

9 அ) ராமலிங்கம் ஆ) விஸ்வலிங்கம் இ) ஹனுமத்லிங்கம் ஈ) உத்தரலிங்கம்

10 அ) சேஷகிரீஸ்வர சுவாமி ஆ) கபிலேஸ்வர சுவாமி இ) சுந்தரேஸ்வர சுவாமி ஈ) கோவிந்தராஜ சுவாமி


Read more »

Thursday, May 10, 2007

108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!

எட்டு எட்டா, மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ!
நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!
- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா?
அதான் இன்னிக்கி 108! இந்தப் பதிவும் 108ஆம் பதிவு!

நம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.
அது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான்! ஆனா நாம அப்படி இல்லீங்க!
ஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...
பதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....
இதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.

ஆனா 108 ஆம் படி வந்த போது,
சரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு!
அப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல! அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்!

புரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.
ஆறு மாசத்திலே வெறும் நூறு தானா? - அட போப்பா!
(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)


மொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம்! (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா? :-)
கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது!
சரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;
அதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன? - அப்பிடின்னு துவங்கி விட்டேன்! சரி துவங்கியாச்சு;
என்னாத்த எழுதலாம் அண்ணாத்த?


நாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.
அதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்!
இந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,
நம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க!
(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...!)

அப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)
இது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க!
ரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...
சொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க!
சரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா!


சும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.
சில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;
பெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல!

சரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு!
டேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க! நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு! :-)

அடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.
யாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா?
இவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க!
இதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)
அதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு!

நம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.

ஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,
அதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல! :-)
அதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல பல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.
என்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.
ஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,
நமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ? :-)


ஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு!
சரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....
நீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்!
அன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்!
மொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று! :-)

சரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.

1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?

எது எப்படியோ,
வாசித்துச் செல்லும் அன்பருக்கும்
வாசித்துச் சொல்லும் அன்பருக்கும்
வாசியா நின்ற அன்பருக்கும்
இந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு,
அடியேனின் நன்றிகள் பல!

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல! பின்னூட்டில் முயல்கிறேன்!
இப்போது, "அந்தரிகி வந்தனமுலு!"



கருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்
பிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்
நம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்! - என்ன அது?

இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,
பதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.
சிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்
- அது கண்ணாடி அன்று! தொலைக்காட்சி ஆகி விடும்! :-)

பத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்
பத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் பதிவுலகம் தான்,
தமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது!
இப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது!


இந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,
நாளும், காட்சிகள் படைக்கின்றோம்!
நாளை, மாட்சிகள் படைத்திடுவோம்!

அதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...
நம் எல்லாப் பதிவர்களுக்கும்
நலமும் இன்பமும் நல்குமாறு
நீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!



தலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி?
நம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,

108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்!

108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்
108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்!

108 சக்தி பீடங்கள்
108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்

108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)
108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)
108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை
108 கூறுகள் சீன மருத்துவத்தில்

மற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்!
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்
- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108?

சுருக்கமாப் பார்ப்போம்.
(1) x (2x2) x (3x3x3) = 1x4x27 = 108

(3x3x3) =
ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,
சத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,
நேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்

(2x2) =
அறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்

(1) = 1 ரே மனத்துடன்,
ஒருமுகமாக
எம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்!

Read more »

Thursday, May 03, 2007

புதிரா? புனிதமா?? - 4

விடைகளும், வின்னர்களும் (வென்றவர்களும்)
ஜெயஸ்ரீ 10/10
குமரன் 10/10
இராமநாதன் 10/10

பரிசேலோர் எம்பாவாய்!
வென்றவர்க்கும் மற்றும்
உடன் நின்றவர்க்கும்
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(கம்பன் பிறந்த ஊரான, தேரழுந்தூர், ஆமருவியப்பன்-தேவாதிராஜப் பெருமாள் வண்ணப்படம்)

அடுத்த பதிவு கொஞ்சம் தாமதம் ஆகலாம்-ஏனென்றால் அது ஒரு ஸ்பெஷல் பதிவு!


கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாமல் போன பதிவர் பற்றிய அறிவிப்பில், நம்ம வெட்டிப்பயல்,
புதிரா புனிதமான்னு இந்தப் பதிவுக்கு வந்தவங்க பல பேருக்கு ஆப்பு - அவரையும் சேர்த்துத் தான் - என்று குறிப்பிட்டிருந்தார்.

சரி, பொங்கல் வைச்சு ரொம்ப நாளாயிடுச்சேன்னு,
நியுஜெர்சி பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு,
இதோ அடுத்த ஆப்பு - சாரி, புதிரா புனிதமா!
இந்த முறை ஆப்புடு பொருள் - கம்ப ராமாயணம்.


(ஹிஹி...ஜெயஸ்ரீ எள்ளா, உளுந்தா - எதைப் போடலாம்னு கம்ப ராமாயணப் பாடல்களைப் போட்டு, மனசில் ஆசையைக் கிளறி விட்டுட்டார்)

சரியான விடைகள் நாளை மதியம்/மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு ராமா!


1

இராமாயணத்தை முதன் முதலாக, ஒரு கதையாக அமைத்து, "வாயால்" சொன்னவர் யார்?

1

அ) வால்மீகி
ஆ) வசிஷ்டர்
இ) கம்பர்
ஈ) நாரதர்

2

இவன் இராமனால் கொல்லப்பட்டவனுக்கும் பிள்ளை; இராமனின் தம்பிக்கும் பிள்ளை. அதாச்சும் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்;

இவன் யார்?

2

அ) மேகநாதன்
ஆ) அங்கதன்
இ) சுபாகு
ஈ) குசன்

3

வால்மீகியின் மூல நூலில் குறிப்பிடாத ஒரு அவதாரக் கதையை,

கம்பராமாயணத்தில் குறிப்பிடுகிறார் கம்பர். அது எந்த அவதாரம்?

3

அ) பரசுராமர்
ஆ) வாமனர்
இ) நரசிம்மர்
ஈ) கல்கி

4

இலங்கேஸ்வரன் இராவணனின் தாய்-தந்தையர் பெயர் என்ன?

4

அ) ப்ரிதி-புலஸ்தியர்
ஆ) கைகசி-புலஸ்தியர்
இ) சுமாலி-மால்யவான்
ஈ) கைகசி-விஸ்ரவசு

5

கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்று தெரியும். அவர் சொந்த ஊர் எது?

(கம்ப ராமாயணத்திலேயே இந்த ஊர் பாட்டிலே சொல்லப்படுகிறது!)

5

அ) தேரழுந்தூர்
ஆ) சீர்காழி
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருவரங்கம்

6எந்த மலையின் மீதிருந்து அனுமன் முதலில் இலங்கைக்குப் பறந்தான்?6

அ) கந்தமாதானப் பர்வதம்
ஆ) மகேந்திரகிரி
இ) மைனாக பர்வதம்
ஈ) தண்டகாரண்யம்

7

அசோக வனத்தில் உள்ள சீதைக்கு அறிவுரை சொல்ல, மருத்தன் என்னும் அரக்கனை ஏவினான் இராவணன். அயோத்தியைக் கூடப் போரில் வென்று விட்டதாகச் சொல்லச் சொல்லுகிறான்.

அதுவும் ஒருவரைப் போல் மாய வேடம் போட்டுக் கொண்டு; யார் வேடத்தில்?

7

அ) திரிசடை
ஆ) விபீஷணன்
இ) ஜனகன்
ஈ) பரதன்

8கும்பகர்ணனும், இந்திரசித்தும் முறையே யாரால் கொல்லப்பட்டார்கள்?8

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இலக்குவன்-இராமன்
இ) சுக்ரீவன்-இலக்குவன்
ஈ) இலக்குவன்-அனுமன்

9

இராமன் போரில் வெற்றி பெற்ற பின், சீதையிடம் சேதி சொல்ல,

யார் முதலில் சென்றார்கள்?

9

அ) திரிசடை
ஆ) இலக்குவன்
இ) அனுமன்
ஈ) விபீஷணன்

10

பெரும் நெருப்பில் இருந்து தம்பியைக் காத்தான் ஒரு அண்ணன்! பின்னர் அவனால் தான் கதைக்கே ஒரு பேருதவி கிட்டியது!

அந்த அண்ணன்-தம்பி யார்?

10

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இராவணன் - விபீஷணன்
இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) வால்மீகி ஆ) வசிஷ்டர் இ) கம்பர் ஈ) நாரதர்

2 அ) மேகநாதன்ஆ) அங்கதன் இ) சுபாகு ஈ) குசன்

3 அ) பரசுராமர் ஆ) வாமனர் இ) நரசிம்மர் ஈ) கல்கி

4 அ) ப்ரிதி-புலஸ்தியர் ஆ) கைகசி-புலஸ்தியர் இ) சுமாலி-மால்யவான் ஈ) கைகசி-விஸ்ரவசு

5 அ) தேரழுந்தூர் ஆ) சீர்காழி இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருவரங்கம்

6 அ) கந்தமாதான பர்வதம் ஆ) மகேந்திரகிரி இ) மைனாக பர்வதம் ஈ) தண்டகாரண்யம்

7 அ) திரிசடை ஆ) விபீஷணன் இ) ஜனகன் ஈ) பரதன்

8 அ) இராமன்-இலக்குவன் ஆ) இலக்குவன்-இராமன் இ) சுக்ரீவன்-இலக்குவன் ஈ) இலக்குவன்-அனுமன்

9 அ) திரிசடை ஆ) இலக்குவன் இ) அனுமன் ஈ) விபீஷணன்

10 அ) இராமன்-இலக்குவன் ஆ) இராவணன் - விபீஷணன் இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP