Thursday, May 10, 2007

108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!

எட்டு எட்டா, மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ!
நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!
- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா?
அதான் இன்னிக்கி 108! இந்தப் பதிவும் 108ஆம் பதிவு!

நம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.
அது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான்! ஆனா நாம அப்படி இல்லீங்க!
ஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...
பதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....
இதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.

ஆனா 108 ஆம் படி வந்த போது,
சரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு!
அப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல! அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்!

புரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.
ஆறு மாசத்திலே வெறும் நூறு தானா? - அட போப்பா!
(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)


மொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம்! (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா? :-)
கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது!
சரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;
அதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன? - அப்பிடின்னு துவங்கி விட்டேன்! சரி துவங்கியாச்சு;
என்னாத்த எழுதலாம் அண்ணாத்த?


நாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.
அதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்!
இந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,
நம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க!
(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...!)

அப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)
இது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க!
ரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...
சொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க!
சரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா!


சும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.
சில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;
பெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல!

சரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு!
டேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க! நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு! :-)

அடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.
யாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா?
இவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க!
இதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)
அதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு!

நம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.

ஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,
அதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல! :-)
அதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல பல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.
என்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.
ஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,
நமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ? :-)


ஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு!
சரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....
நீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்!
அன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்!
மொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று! :-)

சரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.

1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?

எது எப்படியோ,
வாசித்துச் செல்லும் அன்பருக்கும்
வாசித்துச் சொல்லும் அன்பருக்கும்
வாசியா நின்ற அன்பருக்கும்
இந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு,
அடியேனின் நன்றிகள் பல!

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல! பின்னூட்டில் முயல்கிறேன்!
இப்போது, "அந்தரிகி வந்தனமுலு!"



கருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்
பிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்
நம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்! - என்ன அது?

இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,
பதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.
சிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்
- அது கண்ணாடி அன்று! தொலைக்காட்சி ஆகி விடும்! :-)

பத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்
பத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் பதிவுலகம் தான்,
தமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது!
இப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது!


இந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,
நாளும், காட்சிகள் படைக்கின்றோம்!
நாளை, மாட்சிகள் படைத்திடுவோம்!

அதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...
நம் எல்லாப் பதிவர்களுக்கும்
நலமும் இன்பமும் நல்குமாறு
நீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!



தலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி?
நம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,

108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்!

108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்
108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்!

108 சக்தி பீடங்கள்
108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்

108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)
108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)
108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை
108 கூறுகள் சீன மருத்துவத்தில்

மற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்!
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்
- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108?

சுருக்கமாப் பார்ப்போம்.
(1) x (2x2) x (3x3x3) = 1x4x27 = 108

(3x3x3) =
ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,
சத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,
நேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்

(2x2) =
அறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்

(1) = 1 ரே மனத்துடன்,
ஒருமுகமாக
எம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்!

Read more »

Thursday, May 03, 2007

புதிரா? புனிதமா?? - 4

விடைகளும், வின்னர்களும் (வென்றவர்களும்)
ஜெயஸ்ரீ 10/10
குமரன் 10/10
இராமநாதன் 10/10

பரிசேலோர் எம்பாவாய்!
வென்றவர்க்கும் மற்றும்
உடன் நின்றவர்க்கும்
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(கம்பன் பிறந்த ஊரான, தேரழுந்தூர், ஆமருவியப்பன்-தேவாதிராஜப் பெருமாள் வண்ணப்படம்)

அடுத்த பதிவு கொஞ்சம் தாமதம் ஆகலாம்-ஏனென்றால் அது ஒரு ஸ்பெஷல் பதிவு!


கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாமல் போன பதிவர் பற்றிய அறிவிப்பில், நம்ம வெட்டிப்பயல்,
புதிரா புனிதமான்னு இந்தப் பதிவுக்கு வந்தவங்க பல பேருக்கு ஆப்பு - அவரையும் சேர்த்துத் தான் - என்று குறிப்பிட்டிருந்தார்.

சரி, பொங்கல் வைச்சு ரொம்ப நாளாயிடுச்சேன்னு,
நியுஜெர்சி பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு,
இதோ அடுத்த ஆப்பு - சாரி, புதிரா புனிதமா!
இந்த முறை ஆப்புடு பொருள் - கம்ப ராமாயணம்.


(ஹிஹி...ஜெயஸ்ரீ எள்ளா, உளுந்தா - எதைப் போடலாம்னு கம்ப ராமாயணப் பாடல்களைப் போட்டு, மனசில் ஆசையைக் கிளறி விட்டுட்டார்)

சரியான விடைகள் நாளை மதியம்/மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு ராமா!


1

இராமாயணத்தை முதன் முதலாக, ஒரு கதையாக அமைத்து, "வாயால்" சொன்னவர் யார்?

1

அ) வால்மீகி
ஆ) வசிஷ்டர்
இ) கம்பர்
ஈ) நாரதர்

2

இவன் இராமனால் கொல்லப்பட்டவனுக்கும் பிள்ளை; இராமனின் தம்பிக்கும் பிள்ளை. அதாச்சும் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்;

இவன் யார்?

2

அ) மேகநாதன்
ஆ) அங்கதன்
இ) சுபாகு
ஈ) குசன்

3

வால்மீகியின் மூல நூலில் குறிப்பிடாத ஒரு அவதாரக் கதையை,

கம்பராமாயணத்தில் குறிப்பிடுகிறார் கம்பர். அது எந்த அவதாரம்?

3

அ) பரசுராமர்
ஆ) வாமனர்
இ) நரசிம்மர்
ஈ) கல்கி

4

இலங்கேஸ்வரன் இராவணனின் தாய்-தந்தையர் பெயர் என்ன?

4

அ) ப்ரிதி-புலஸ்தியர்
ஆ) கைகசி-புலஸ்தியர்
இ) சுமாலி-மால்யவான்
ஈ) கைகசி-விஸ்ரவசு

5

கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்று தெரியும். அவர் சொந்த ஊர் எது?

(கம்ப ராமாயணத்திலேயே இந்த ஊர் பாட்டிலே சொல்லப்படுகிறது!)

5

அ) தேரழுந்தூர்
ஆ) சீர்காழி
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருவரங்கம்

6எந்த மலையின் மீதிருந்து அனுமன் முதலில் இலங்கைக்குப் பறந்தான்?6

அ) கந்தமாதானப் பர்வதம்
ஆ) மகேந்திரகிரி
இ) மைனாக பர்வதம்
ஈ) தண்டகாரண்யம்

7

அசோக வனத்தில் உள்ள சீதைக்கு அறிவுரை சொல்ல, மருத்தன் என்னும் அரக்கனை ஏவினான் இராவணன். அயோத்தியைக் கூடப் போரில் வென்று விட்டதாகச் சொல்லச் சொல்லுகிறான்.

அதுவும் ஒருவரைப் போல் மாய வேடம் போட்டுக் கொண்டு; யார் வேடத்தில்?

7

அ) திரிசடை
ஆ) விபீஷணன்
இ) ஜனகன்
ஈ) பரதன்

8கும்பகர்ணனும், இந்திரசித்தும் முறையே யாரால் கொல்லப்பட்டார்கள்?8

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இலக்குவன்-இராமன்
இ) சுக்ரீவன்-இலக்குவன்
ஈ) இலக்குவன்-அனுமன்

9

இராமன் போரில் வெற்றி பெற்ற பின், சீதையிடம் சேதி சொல்ல,

யார் முதலில் சென்றார்கள்?

9

அ) திரிசடை
ஆ) இலக்குவன்
இ) அனுமன்
ஈ) விபீஷணன்

10

பெரும் நெருப்பில் இருந்து தம்பியைக் காத்தான் ஒரு அண்ணன்! பின்னர் அவனால் தான் கதைக்கே ஒரு பேருதவி கிட்டியது!

அந்த அண்ணன்-தம்பி யார்?

10

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இராவணன் - விபீஷணன்
இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) வால்மீகி ஆ) வசிஷ்டர் இ) கம்பர் ஈ) நாரதர்

2 அ) மேகநாதன்ஆ) அங்கதன் இ) சுபாகு ஈ) குசன்

3 அ) பரசுராமர் ஆ) வாமனர் இ) நரசிம்மர் ஈ) கல்கி

4 அ) ப்ரிதி-புலஸ்தியர் ஆ) கைகசி-புலஸ்தியர் இ) சுமாலி-மால்யவான் ஈ) கைகசி-விஸ்ரவசு

5 அ) தேரழுந்தூர் ஆ) சீர்காழி இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருவரங்கம்

6 அ) கந்தமாதான பர்வதம் ஆ) மகேந்திரகிரி இ) மைனாக பர்வதம் ஈ) தண்டகாரண்யம்

7 அ) திரிசடை ஆ) விபீஷணன் இ) ஜனகன் ஈ) பரதன்

8 அ) இராமன்-இலக்குவன் ஆ) இலக்குவன்-இராமன் இ) சுக்ரீவன்-இலக்குவன் ஈ) இலக்குவன்-அனுமன்

9 அ) திரிசடை ஆ) இலக்குவன் இ) அனுமன் ஈ) விபீஷணன்

10 அ) இராமன்-இலக்குவன் ஆ) இராவணன் - விபீஷணன் இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


Read more »

Sunday, April 22, 2007

துலுக்கா நாச்சியாரும், லுங்கி அலங்காரமும்! - 2

சுல்தானி பீவியின் விளையாட்டுப் பொருள் ஆனான் அல்லவா நம்ம பெருமாள்? ஆனால் இப்போது கதை மாறி அவன் வழக்கமாய் ஆடும் விளையாட்டை ஆடுகிறான்; பார்க்கலாமா? இதற்கு முந்தைய பாகம் இங்கே!

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே!
அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது"
- சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.
தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,
எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

nuja4

இராமானுசரின் மடியில் செல்வப் பிள்ளை

ஆ...என்ன அதிசயம்!
செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல்,
சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!

49704388.P1010092



அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள்.
ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்!
அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!
பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்!
கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்"
கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!
ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!


அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!
நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.
அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி!
உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.
உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?
சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்;
இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

2006040603530201melkote


துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.
800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர்.
வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே,
செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.


மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!
பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது!
வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

49203441_Thirunarayana
கண்ணன் காலடியில்...


உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்ய வில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!
இரு கை தலை மேல் குவித்தாள்!
மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது!
கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!
கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே

யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்; எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன.
அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்!
இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!
துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!


மேற்கண்ட கதையை வரலாற்றுப் பூர்வமாக அறிய முடியவில்லை.
என்றாலும் குரு பரம்பரைக் கதைகள் இவளைப் பற்றியும் இராமானுசர் காலத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வுகள் பற்றியும் குறிப்புகள் செய்கின்றன.
இவளின் பெருமாள் ஈடுபாடு இராமானுசரை மிகவும் ஈர்த்து விட்டது. அதனால் இவளுக்கு என்று பல நியமங்களைக் கோவில் பூசைகளில் செய்து வைத்தார்.

திருவரங்கத்தில் உள்ள துலுக்கா நாச்சியாரும் இவள் தான். இராமானுசர் இவள் பக்தியை மெச்சி, வைணவத் தலைநகரமாம் திருவரங்கத்தில் இவளுக்கு என்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தினார் என்று சொல்கின்றனர்.
ஆனால் அங்கு உள்ளவள் தில்லி சுல்தான் மகள் என்று கருதுவோரும் உண்டு!
மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.
இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில், ஐந்தாம் பிரகாரத்துக்கு முன்பு, கிளி மண்டபம் அருகே, இவள் சன்னிதி உள்ளது! வரையப்பட்ட படமாகத் தான் அவள் சன்னிதியில் இருக்கிறாள்!
அந்த மண்டபத்தில் முகம்மதியக் கலாச்சாரங்கள் பற்றிய சில சிற்பங்களும் காணப்படுகின்றன. இராமானுசர் ஓவியமும் அங்கு உள்ளது!

பகல் பத்து உற்சவத்தின் போது,
பெருமாள் இவள் சன்னிதிக்கு, கைலி வஸ்திரம் (லுங்கி) அணிந்து வருகிறான்.
மூலவருக்கும் கூட லுங்கியால் அலங்காரம் செய்யப்படுகிறது;
வட இந்திய உணவான ரொட்டி, வெண்ணெய், பருப்புப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகிறது!

இப்படி அனைவரையும் பெருமாளிடத்தில் அரவணைத்துச் சென்றவர் இராமானுசர்.
அவர் அவதாரத் திருநாள் இன்று! அவர் மறைந்த நாளும் இன்றே!
சித்திரைத் திருவாதிரை (Apr 22, 2007) - இராமானுச ஜெயந்தி அன்று அன்னாரின் தொண்டு உள்ளத்துக்கு, அனைவரும் தலை தாழ்த்தலாம் வாருங்கள்!

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் இராமானுசன் திருவடிகள் வாழியே!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!
Read more »

Friday, April 20, 2007

புதுஜெர்சியில் பதிவர்கள் ஆடப்போகும் கிரிக்கெட்!

இன்று அட்சய திருதியையாமே? இந்த நாளில் எது செய்தாலும், இரு மடங்காகத் திரும்பி வருமாமே! ஒரு பவுன் தங்கம் வாங்கினா, இரண்டு பவுன் வருமா?

* வரும் டா, வரும்! இப்ப எனக்கு நல்லா வருது!
அட, இதெல்லாம் சுத்த டுபாக்கூர்-பா; நகைக்கடை முதலாளிகள் எல்லாம் ஒண்ணா உக்காந்து யோசிச்சு, அடிச்சு ஆடும் கும்மிப்பா, கும்மி!

அட, அப்ப எது தான்பா சரி?
அட்சய திருதியை அன்று என்ன தான் செய்யணும்? நீயே சொல்லேன்!

* ஆங், இது கேட்டியே, நியாயமான கேள்வி. இதைப் பதிவர்கள் கிட்ட போய்க் கேள்! அவங்க தான் கரெக்டா சொல்லுவாங்க!

அதாச்சும், இந்த விசேடமான நாளில்,
நாம எவ்வளக்களவு மத்த பதிவுகளில் பின்னூட்டம் போடுறமோ,
அதை விட இரண்டு மடங்காய்,
நமக்குப் பின்னூட்டங்கள் கொட்டிக்கிட்டு வரும்!

புரியுதா? இது தான் அட்சய திருதியையின் மகிமை! :-)
அதுனால, சும்மா காலங்காத்தால நகைக்கடை முன்னாடி போய் நிக்காம,
ஒழுங்கா எல்லாப் பதிவுக்கும் போயிட்டு வா! இன்னா...புரிஞ்சுதா?

* ஆ..மெய்யாலும் தான் சொல்லுறியாப்பா?
ஆமாம்பா, கருட புராணத்தில் சொல்லியிருக்கு; தெரியுமா?
வேணும்னா, அம்பி கிட்ட கேட்டுக்குறியா? பதிவர் அம்பி இல்லப்பா....நம்ம அந்நியன் அம்பி!

* அட, அப்படியே, இதெல்லாம் செய்தாக் கூட பெருசா என்ன பிரயோஜனம், பிரதர்?
அதான் நாப்பது பின்னூட்டம் மேல அலவுட் இல்லை என்று ஆண்டவன் விதி எழுதிட்டானே! :-) பாவம்...எத்தனை பதிவர்கள் இது பற்றி நொந்து போய், இன்னும் பதிவு போட்டுக்கினு இருக்காங்க தெரியுமா?
அட்சய திருதியை அன்று நான் இருவது பின்னூட்டம் தான் போடுவேன்;
அது டபுள் ஆகி நாப்பது வந்தாப் போதும்! :-)


என்னடா இது இம்மாம் பில்டப்பு என்று பாக்கறீங்களா?
அதான், நாள் நெருங்குதுல!

கொற்றவன் கொத்தனார் தலைமையில், புது ஜெர்சியில்,
பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி, மட்டையடி அடிக்கப் போறாங்களாமே!
அதுக்குத் தான் இந்த வெள்ளோட்டப் பதிவு!
(நன்றி: mid-day.com ponnappa cartons)


ஏற்கனவே, எல்லாரும்,
தமிழ்மணத்தில் நீங்க எதிர்பார்ப்பது என்ன?
என்கிற பதிவு பார்த்திருப்பீங்க! பலப்பலக் கருத்துக்களை விவாதம் செஞ்சிருப்பீங்க! அது எல்லாத்தையும் எங்கே வந்து சொல்லி அசத்தணும்-னு தெரிய வாணாமா?

அதாகப்பட்டது,
2007, ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 28 ஆம் நாள்,
("சர்வே"-ஜித் வருடம், சித்திரை மாசம், 15ஆம் தேதி)
ஆஸ்திரேலியாவும், இலங்கையும்
சம்பந்தி மரியாதை செய்து கொள்ளப் போகும் நன்னாளில்,


பிற்பகல் 2:00 மணியில் இருந்து, எல்லார் தெம்பும் தீரும் வரை
ஆட்டம் நடைபெறப் போகுதுங்க!

ஃபோர், சிக்ஸர் என்று வீரர்கள் சக்கையடி அடிக்கப் போறாங்க என்று காத்துவாக்கில் ஒரு செய்தி பரவுகிறது!
பதிவர்கள் மட்டுமல்லாது, பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் - இவர்களும் வரப் போறாங்க!

தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)

மைதானம்:
510 Thornall Street
Edison NJ 08837
மைதானத்தின் படத்துக்கும், செவிக்கு உணவுக்கும்(:-0)
இங்கு க்ளிக்கவும்!


தொடர்புக்கு:
elavasam@gmail.com
shravan.ravi@gmail.com
மின்னஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி எண்ணும் பகிர்ந்து கொள்ளலாம்.


//அதுசரி
ஆடியோ ரிகார்டிங் (open/secret),
போட்டா கிராப்பி (flash/secret),
விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை,
வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?//

முதல் மூன்று கிடையாது என்று "வழக்கம் போல" சொல்லிட வேண்டியது!
கடைசிக் கேள்விக்கு, வடை....
சாரி விடை,
பட்டாணி சுண்டலுடன் பொற்கால மீட்டிங்!

யார் எல்லாம் வருகிறார்கள்? (துளசி டீச்சர் - ஹெல்ப் ப்ளீஸ், அட்டண்டன்ஸ்)
பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
ஷைலஜா
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்-இவர் வசந்தமும் கூட!
கோபிநாத்
CSRK
எடிசன் ரங்கா
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி
.
.
.
என்று பட்டியல் வளர்கிறது!

Floralia 2007 - பூக்கள் உற்சவம் என்பதாலும்,
தலைவர் இலவசம் என்பதாலும்
எல்லாருக்கும் "இலவசமாகப்" "பூ" சுத்தப்படும்! :-)


வருக! வருக!!
வருக! வருக!!
Read more »

Sunday, April 15, 2007

அழகிகள் ஆறு பேர்!

ஆழகுகள் ஆறு பற்றித் தான் எழுத வேண்டுமா? அழகிகள் ஆறு பேர் பற்றி எழுதினால் என்ன?
ஆகா - இப்படின்னு தெரிஞ்சிருந்தா அழைத்திருக்கவே மாட்டேனே என்று நண்பர் குமரன் சொல்லி விடுவாரா என்ன? :-))
நன்றி குமரன்!

"அழகுன்னு இன்னாப்பா?", என்று யாரையாச்சும் கேட்டுப் பாருங்கள்! உடனே பதில் வருவது சற்றுக் கடினம் தான்.
ஆனா ஒரு ஃபோட்டோவைக் காட்டி, இவங்க அழகா இருக்காங்களான்னு கேளுங்க. - உடனே பதில் வரும்!
(ஃபோட்டோவில் உள்ளவர் அப்போது உடன் இருக்கக் கூடாது என்பதை நான் சொல்லவும் வேணுமா என்ன? :-)

ஃபோட்டோவில் உள்ளவர் பெரிய தலைவராகவோ, பிரபலமானவராகவோ இருக்கலாம். இல்லை சும்மானாச்சும் எங்கோ புடிச்ச ஃபோட்டாவாகவோ கூட இருக்கலாம்.
புற அழகோ, அக அழகோ, ஏதோ ஒன்று - இது அழகுன்னு கண்டிப்பா சொல்ல முடியும்!

கன்னடத்துப் பைங்கிளி ஐஸ்வர்யா ராய் கண்களை அழகு என்று ரசிப்பவரும் உண்டு!
கல்கத்தா அன்னை, தெரேசாவின் முகத்தைப் பேரழகு என்று ரசிப்பவரும் உண்டு!!

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
"விநயம்" என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! - எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! - அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! - ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! - இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு - அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! - அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! - அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்...இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்....
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், - இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை - இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! - ஆண்டாள் அழகு!!





(பின் குறிப்பு:திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன், பழனியில் தேவயானியைக் கண்டேன், என்றெல்லாம் பதிவைப் படித்து விட்டு, ஸ்ரீதேவி தான் அழகு என்று சொல்வேனோ என்று யாராச்சும் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல :-)
ஆனா அவங்களும் ஒரு அழகு தானேப்பா! என்ன வெட்டிப்பையலாரே - சரி தானே :-)


நண்பர்கள்,
சிவமுருகன், யோகன் அண்ணா, கீதா சாம்பசிவம் (கீதாம்மா)
அவர்களை, அழகு விளையாட, அன்பாக அழைக்கிறேன்!

துளசி டீச்சர் அழைப்பு - அப்படியே இருக்கட்டும்! கொத்ஸ் ஏற்கனவே அழைத்து விட்டாராம்! ஆனாலும் அழைத்தவர்களை வாபஸ் வாங்குவதெல்லாம் நம்மளால முடியாதுப்பா!
பின்னே என்னவாம், டீச்சரின் வகுப்பில், வீட்டுப்பாடம் பண்ணாம வரலாம்னு ஒரு ஐடியா யோசிச்சா...விடமாட்டாங்க போல இருக்கே! :-)))
Read more »

Wednesday, April 11, 2007

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே!

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனார்! - அட, இது என்ன மதமாற்றமா?
கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம் பாயவில்லையா? காட்டுக் கூச்சல்கள் எதுவும் ஓயவில்லையா? :-)

இருங்க, இருங்க...நீங்க பாட்டுக்குன்னு பேசிக்கினே போனா எப்படி?
யாருங்க இந்த சுல்தானி பீவி? அவங்க ஏன் நாச்சியார் ஆனாங்க?
நமக்குத் தெரிஞ்ச நாச்சியார், நம்ம வல்லியம்மா என்கிற பதிவர் தானே! அவங்க தான் வலைப்பூவுக்குத் நாச்சியார்-ன்னு பேரு வைச்சிருக்காங்க.

அது சரி. கேக்கணும்னு நினைச்சேன்.
இந்த நாச்சி நாச்சி-ங்கறாங்களே, நாச்சி-ன்னா என்னாங்க?
ஆச்சி, பேச்சி போல இந்த நாச்சியும் வட்டார வழக்கா? தமிழ் மாதிரி தான் தெரியுது்;
ஆனா இந்தக் காலத்துல சொன்னா, ஏதோ கிராமத்தான், காட்டான்-ங்கிற மாதிரி பாக்குறாங்களே!

வாங்கய்யா வாங்க! நியாயமா, சொல் ஒரு சொல் பதிவுல போய் நீங்க கேக்கோணும்.
உங்களுக்கு நாச்சி-ன்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா?

ஆண்டாள் நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார், நிலமங்கை நாச்சியார், திருவிளக்கு நாச்சியார், திருவாதிரை நாச்சியார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்...
இதுல ஒருத்தராச்சும் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பொன்னியின் செல்வன் குந்தவை நாச்சியார் - இவங்க என்ன கிராமமா - பட்டணமா?

நாயன்=ஆண் பால்; நாச்சி=பெண் பால்
நாயன், நாச்சி
நாயனார், நாச்சியார்!
நாயன்மார், நாச்சிமார்!
தலைவன், தலைவி - அப்பிடின்னு பொருள்!
இன்னொரு வாட்டி பேசினீரு, வாட்டி எடுத்துடுவோம், ஞாபகம் வைச்சிக்குங்க!:-)

சரிப்பா..சரிப்பா...கோச்சிக்காதே! நீ சுல்தானி நாச்சியாருக்கு வா; அது என்ன கதை?


இந்தக் காலத்தில் ஒரே சாதியில் கல்யாணம் பண்ணிக்கறத்துக்கே ஆயிரம் நொள்ளை, சொள்ளை சொல்லறாங்க!
கொஞ்சம் நிறைய பாசம் வச்சி வளர்த்துட்டுங்கன்னா, வேற சாதி வேற மதம்-ன்னு வரும் போது, ஒரு இறுக்கமும் கூடவே வந்து விடுகிறது.
என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் ஆரம்பத்தில் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது!
ஆனா அதையெல்லாம் மீறி வருபவர்கள், இப்பல்லாம் கொஞ்சம் அதிகம்.

ஆனா ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முன்னே, முகம்மதியப் பெண் ஒருத்தி, இந்துப் பையன் ஒருவனைக் காதலித்தால்?
அதுவும் அவனைப் பற்றி ஒன்றுமே கேள்விப்படாமல், காதலித்தால்?
அதுவும் அவனிடம் எதுவுமே பேசாமல், காதலித்தால்?
சாட்டிங், ஆர்குட் இவை எல்லாம் எதுவும் கிடையாது அப்போது.

அவன் உருவத்தை மட்டுமே வைத்து நெஞ்சு நிறைய காதல்!
சரி அவன் இருக்கும் ஊருக்கே வந்து பேசலாம்-ன்னு அந்தப் பொண்ணு கிளம்பி வந்தா, பையன் தெய்வமாய் நிக்கறான்!
வந்தவளும் உயிரை விட்டுத் தெய்வமாக நின்று விட்டாள்!
பையன் பெயர் = சம்பத்குமாரன் என்கிற திருநாராயணப் பெருமாள்
பெண்ணின் பெயர் = சுல்தானி பீவி என்கிற துலுக்கா நாச்சியார்
(சூரத்தானி பீவி என்றும் அழைக்கிறார்கள்)


மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான்.
இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.
ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!
முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!
தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி!
பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார்.
பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

57971640.17KalyaniKolam

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!
மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.
ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா?
கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?
# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள்.
(இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.
சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான்.
வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன்.
செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.
செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....
ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்?
ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

sultani


இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது.
"நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,
"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!
பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்;
இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை;
இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது!
நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன்.
இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்?
போங்க வாப்பா! தர முடியாது!
தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)
அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?
நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

(விக்ரகம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா? சுல்தானி பீவி எப்போது நாச்சியார் ஆனார்?
மேலக்கோட்டையில் இருந்த விக்ரகம் இது என்றால், திருவரங்கத்தில் எதற்கு பீவிக்குக் தனிச் சந்நிதி? - எல்லாம் அடுத்த பதிவில்!)
Read more »

Monday, April 02, 2007

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2

"அரங்கன் கதி அதோகதி. முடிஞ்சாருடா மனுசன்!", என்று சிலர் கண்ட கனவெல்லாம் ஒரு நொடியில் என்ன ஆனது?
சென்ற பதிவில், மட்டையால் பெருமாள் அடி வாங்குவதைக் கண்டு, ஒரு சிலர் மட்டும் தான் பரிதாபப்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் தாயார் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்! அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு! :-)

முகத்தை வெடுக் என்று திருப்பிக் கொண்ட பெண்டாட்டி, அரை நொடியில் "அத்தான், உங்கள் சிரித்த முகம் பார்த்துக் கொண்டு, உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளட்டுமா?" என்று கொஞ்சினா என்ன செய்வீங்க!

வாழை மட்டையால் பெருமாளைப் பெண் வீட்டார் தாக்க, பார்த்தார் பெருமாள்! Total Surrender! பரிபூர்ண சரணாகதி செய்தார்!
ஆகா...சரணாகதி வாங்குறவரே சரணாகதி செய்ய வேண்டிப் போச்சா? யாரிடம்? மாறன் சடகோபன் என்ற நம்மாழ்வாரிடம்!
நல்லா இருக்கு கதை! சாமி தான் பக்தனைக் காப்பாத்தணும்! இங்க என்னடான்னா பக்தன் சாமியக் காப்பாத்த ஓடோடி வருகிறான்.

நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறது! பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, "பார்த்தாயா என் நிலையை?" என்று பாவமாய்க் கேட்கிறார்.
அடி வாங்கிய பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே! இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? :-)

திருமேனி அலங்காரம் எல்லாம் கலைந்து போய், பரிதாபமாய் நிற்கும் பெருமாளைக் கண்டவுடன், ஆழ்வார் கண்கலங்கி விடுகிறார்.
நேரே ஓடிப்போய் தாயாரின் திருக்கதவைத் தட்டுகிறார்.

"என்னம்மா இது? ஆயிரம் இருந்தாலும் கணவனை இப்படி வெளியில் நிறுத்திக் கதவடைக்கலாமா? எதுவா இருந்தாலும் உள்ளே அழைத்து, அப்புறம் சிவக்கவோ, சினக்கவோ தெரியாதாம்மா உனக்கு?

உன்னைச் சொல்லி என்ன செய்வது?
இதே பாண்டி நாட்டுப் பெண்ணாய் இருந்தால் இப்படிச் செய்வாளோ?
"அன்பாக" அல்லவோ "ஆண்டிரு"ப்பாள்!
சோழ நாட்டுப் பெண் என்று காட்டி விட்டாயே", என்று ஒரே போடாகப் போட்டார் பாருங்க!
ஏன்னா அவரு பாண்டி நாடு! அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு! மதுரையில் ஆட்சி யாருன்னு! :-)



கதவின் பின்புறம் மெல்லிய சிணுங்கல், விசும்பல்; இரண்டாம் முறை!
"சரி, விடு...
நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்?
உன்னிடம் மார்பில் கை வைத்துக் கேட்டாரே! அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?"
- இதை அப்படியே கட்டியம் என்று அழகுத் தமிழில் கவிதை சொல்லி வாசிப்பார்கள் அரையர்கள்;
"அவமானப் படுத்தலாமா?" என்று சொல்லும் இடத்தில் வார்த்தை வராமல் நெஞ்சு அடைக்கும் அந்த அரையருக்கு!

மீண்டும் சிணுங்கல்; மூன்றாம் முறை!
"பார், கல்யாணம் முடித்த கையோடு, கல்யாண விருந்து கூட உண்ணாமல், உன் மனம் பதைக்குமே என்று ஓடி வந்தான் அரங்கன்.
உன் பிறந்த நாள் வேறு இன்று!
அதை மறக்காமல் ஒடி வந்தவன், பசி மயக்கத்தில் விழுந்து தடுமாறி விட்டான்; மேனியெல்லாம் ஒரே காயமாகி..."

கதவுகள் திறந்து விட்டன..."அச்சச்சோ...என்னங்க...என்னாச்சு...." என்ற குரல் குழைந்து விட்டது!
பெருமாள் ஓடியே வருகிறான். அரங்க நாயகியை ஒரு கண்ணாலும், ஆழ்வாரை மறு கண்ணாலும், கண்டு மென்னகை பூக்கிறான்.
கள்ளச் சிரிப்பில் கரையாதார் யார்?



இருந்தாலும் ஒரேயடியாக எந்தப் பெண்ணாச்சும் சமாதானம் ஆனதாகச் சரித்திரம் உண்டா? கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும்! "ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும்!"
"நம் பால் அன்பினர் ஆன நம்-ஆழ்வார் சொன்னதாலே உம்மை ஏற்றுக் கொண்டோம்", என்று தாயார் கட்டியக் கவி சொல்கின்றது!

பின்பு கணவனும் மனைவியும் பூப்பந்து விளையாடிக் கொண்டே, பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.
அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!
கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.
அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!
அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க,
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!

Divyadampathi

2004043001390601

(சேர்த்தியைச் சேவிக்கும் இராமானுஜர்)

அதனால் அன்பர்கள் கூட்டம் அலை மோத, அதிலும் புதுமணத் தம்பதிகள் அலைமோத, அர்ச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இராமானுஜர் முன்பொரு நாள், இதே உத்திர நன்னாளில் பாடி அருளிய கத்ய த்ரயம் என்ற கவிதையை மாலை வேளையில் ஓதுகிறார்கள்.
சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் - இவை மூன்றுமே கத்ய த்ரயம்!
இது ஒரு வசன கவிதை. இதை நீட்டியும் சுருக்கியும் ஓதும் அழகே, கேட்பவரை மயக்கி விடும்.

1. தாயாரும் பெருமாளும், ஒரு சேர இருக்கும் இந்த நாளுக்காகக் காத்திருந்து, தாயாரின் தாள் பற்றிச் சரணாகதி செய்கிறார் இராமானுஜர் - இது சரணாகதி கத்யம்
2. பின்னர் அரங்கனிடம் மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்றி என்றென்றும் நம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் - இது ஸ்ரீரங்க கத்யம்
3. உடனே பெருமாள் இருந்த இடத்தில் இருந்தே, அவருக்கு வைகுந்தம் காட்டியருள்கிறார். அதை இராமானுஜர் அப்படியே நமக்கெல்லாம் விளக்கிக் காட்ட - இது வைகுந்த கத்யம்.

76374780_XZzbuFHr_DSC00209

உனக்கும், உன் சம்பந்தா சம்பந்தங்களுக்கும் மோட்சம் அருளினோம் என்று பெருமாள் உறுதி சாதிக்க, இராமானுஜர் அரங்கன் சேவடியில் தலை தாழ்த்துகிறார். பின்பு,
18 முறை திருமஞ்சனம் (நன்னீராட்டு) நடைபெறுகிறது
18 * 6 கலசங்கள் = 108 கும்ப ஆராட்டு, விடிய விடிய!
மறுநாள் பங்குனித் தேர்.
உற்சவம் இனிதே நிறைகிறது!

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே,
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!
Read more »

Tuesday, March 27, 2007

படகோட்டியா? பரதனா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்? விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி,வடை, (கவனிக்கவும் "இட்லிவடை" இல்லை! "இட்லி கமா வடை" :-)
தோசை, சாம்பார்,காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் மாநாடோ, மற்றது எல்லாம்?

ஆனால் ராமன் என்ன செய்தான்?
அவனும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்குகிறான். பதினாலு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வருகிறான். நேரே எங்கு போகிறான்?

இராமாயணம் போல் புகழ் அடைந்த காவியமும் இல்லை!
இராமாயணம் போல் சர்ச்சைக்குள்ளான காவியமும் இல்லை!
அப்படி ஒரு ராசி குணசீலனான இராமனுக்கு! எந்த இந்திய மொழியாகிலும் சரி, அதில் மகாபாரதம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இராமாயணம் இருக்கும்! - ஏன்?

காவியமாக இல்லையா?
சரி, இலக்கியங்களிலோ இசையிலோ விரவி வரும். அதுவும் இல்லையா?
சரி, கிராமத்து எசப்பாட்டாக இருக்கும். இப்படி எல்லார் மனத்துக்கும் இனியவன் தான் நம் இராமன்!
இன்று அவன் பிறந்த நாள்; இராம நவமி! (March 27, 2007)

So, Happy Birthday - ராமா!
அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா?
Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா!

எனக்கு என்னவோ, இராமனைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.
அனுமனைப் பற்றி பேசலாம் தான்; ஆனால், அனுமனுக்கோ இராமனைப் பற்றிப் பேசுவது தான் பிடிக்கும்! இராமனுக்கோ அனுமனைப் பற்றிப் பேசினால் தான் மனம் களிக்கும்! என்ன செய்வது?.... ஹூம்...

இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் கிடையாது!
இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா?
ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.
* இளைய பெருமாள் - இலக்குவன்
* குகப் பெருமாள் - குகன்


குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

0171

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

முருகப் பெருமானுக்கும் குகன் என்ற பெயருண்டு.
பெரிய மலைகள் இருந்தும் அங்கு வாழாது,
ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் தான் குகன்!
நிடத நாட்டுக் காட்டுத் தலைவன்; கங்கைக் கரைப் படகோட்டி. இராமனிடம் பார்க்காமலேயே பேரன்பு கொண்டு இருந்தவன்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.


இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்! பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு! ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும்.
பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான். சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!
அப்புறம் என்ன வாழ்ந்து, என்ன பயன்?
விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? சொல்லின் செல்வர் தானே!


"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ என்னவோ?
என்னமோ தெரியவில்லை, உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது.
நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம். அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக! இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!"

ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான்.
"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன்.
அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன் இந்த அவசரத்தில் இது தேவையா என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
எனவே, குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்...

சிந்தை பின் வரச் செல்பவன்,
குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம் கூறி
, மேல் வான்வழிப் போனான்.



0169

யாருக்கு வரும் இந்த கருணை? இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்;
அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான். முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு!
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
, என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது. வேலையும் முடிந்து விட்டது. இனி யார் தயவும் தேவை இல்லை.
அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!
அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்! கூட்டணி பலமாக அமைந்து விட்டது! :) இனி யார் என்ன செய்ய முடியும்?

எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்? - அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்?


அங்கு தான் மறைபொருள் உள்ளது. பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள். ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி,
தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!
தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத், தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,
'ராமா' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக், கண்களின் தெரியக் கண்டான்!


காட்டு வாசி; கறியும் மீனும் உண்பவன்; குளித்தானோ இல்லையோ; தாழ்ந்த சாதி; தொட்டால் தீட்டு! - இப்படி எல்லாம் பார்க்க முடிந்ததா இராமனால்? தொட்டால் தீட்டு! - ஆனால் தழுவினால் கூட்டு!! :))

ஏன் இப்படி?...
ஏன் என்றால், இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை!
சாதி இல்லை, சுத்தம் இல்லை!
மனிதன் இல்லை, மிருகம் இல்லை!
உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை!
இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்! "நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"
- இது பெரியாழ்வார் திருமொழி
- இது குகப் பெருமாளின் இதய மொழி
- இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!

அன்பே சிவம். அன்பே இராமம்!
குகப் பெருமாள் திருவடிகளே சரணம்!
Read more »

Saturday, March 24, 2007

மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!

என்னாது?
பெருமாள் மட்டையால் அடி வாங்கினாரா? இன்னாப்பா சொல்ற நீ?
கிரிக்கெட் மட்டைய சொல்றியா நீ? வேர்ல்ட் கப்-ல நம்ம பசங்க எல்லாம் கப்-வச்சிட்டாங்களே; டெண்டுல்கர் டக் அவுட் ஆயிட்டாரேன்னு, உனக்கு புத்தி கித்தி ஏதாச்சும் கலங்கிப் போச்சா? சொல்றத தெளிவாச் சொல்லுப்பா!

அட நெசம் தான்பா!
திருவரங்கம் மற்றும் இன்னும் பல கோவில்கள்-ல பெருமாளுக்கு இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் உண்டு, தெரியுமா?
பங்குனி உத்திரம், பங்குனி உத்திரம்-னு ஒரு விழா. இந்த வருடம் ஏப்ரல் 1 அன்று வருகிறது.
அன்னிக்கி தான் இந்த காட்சிய கண்கொள்ளாம பார்க்கலாம். எல்லாப் பக்தர்களும் சும்மா ஜாலியா அடிக்கலாம். நீயும் வரியா? பெருமாளைச் சும்மா ஜாலியா நாலு சாத்து சாத்திட்டு வரலாம்?

தர்மத்தின் நாயகனுக்கு தர்ம அடியா? அடப் பாவிங்களா?
சாத்தமுது சாத்தமுது-ன்னு நீ சொல்றப்பவே நினைச்சேன். இப்படிப் பெருமாளைச் சாத்தி விட்டுத் தான் சாத்தமுது-ன்னு சொல்றீங்களாடா?


டேய், டென்சன் ஆவாதடா மச்சான். Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!
பெருமாளைப் போய் யாராச்சும் மனசு வந்து அடிப்பாங்களா?
ஆனா இப்படி அடிப்பதற்கு என்றே மட்டையடி உற்சவம்-ன்னு ஒரு உற்சவம் இருக்குடா!
திருவரங்கம் சென்று என்ன தான் நடக்குதுன்னு பாத்துட்டு வருவோம். இன்னா, நீயும் வரியா?


templeFront

திருவரங்கத்தின் அழகனான அரங்கன்
பங்குனி மாதம், பக்கத்து ஊரான உறையூர் சென்று வருகிறான். எதற்கு?
அவன் மேல் காதலால் உருகி நின்றாள் ஒரு மங்கை - சோழர்குல வல்லி, கமலவல்லித் தாயார் என்ற திருப்பெயர்; மகாலக்ஷ்மியின் அம்சம்.
அரங்கன் வருவானா வருவானா என்று கதவருகே நின்று, ஏங்கி ஏங்கி, அவள் கதவைப் போலவே மரத்து விட்டாள்.

அவளை ஆட்கொள்ள வந்தான் அரங்கன்; அவனை, உறையூரே வேண்டிக் கேட்டுக் கொள்கிறது!
"ரங்கா, எங்கள் வல்லியைத் தவிக்க விட்டு விடாதே; அவள் அன்பை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால், ஒரு பெண் கொடியைச் சித்ரவதை செய்தான் அரங்கன் என்று இந்த உலகமே உன்னைத் தூற்றும் படி செய்து விடுவோம்".

அச்சச்சோ! அவன் மார்பில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். மார்பில் மகாலக்ஷ்மி ஆயிற்றே!
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை,
என்றும் இருந்திட ஏது குறை உறையூருக்கு?
அவள் தலை அசைந்து விட்டாள்! இதற்கு இசைந்து விட்டாள்!!
மன்னனாய் வந்த அரங்கன் இப்போது மாப்பிள்ளையாகி விட்டான்.
திருமணம் முடிந்து, மீண்டும் திருவரங்கம் செல்கிறார் புது மாப்பிள்ளை!

வந்தது வினை! புது மாப்பிள்ளை தான் ஏற்கனவே பழைய மாப்பிள்ளை ஆயிற்றே! வரும் வழியில் பழைய கல்யாண மோதிரத்தைத் தொலைத்து விடுகிறார் சுவாமி.

போச்சுடா! திருவரங்கத்தில் மகாலக்ஷ்மி என்கிற அரங்கநாயகி, சும்மா விடமாட்டாளே! பெண்கள் எதை விட்டாலும் விடுவார்கள், செண்டிமெண்டை விடமாட்டார்களே! :-)
"ஏங்க, உங்களுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கவும் இசைந்தேனே! அப்படிப்பட்ட என் மோதிரத்தைப் போய் தொலைத்து விட்டீர்களே! அதே போல் என்னையும் தொலைத்து விடுவீர்களா? ஏங்க...ஏங்க...", என்று அவள் ஏங்கி விடுவாளே!

கணவன் அரங்கனைப் பயம் கப்பிக் கொண்டது.
தி.நகரில் கடைக்கு வெளியே நிற்கும் கணவன்மார்களின் பரிதாபமான முகம் அரங்கனுக்கும் வந்து விட்டது! :-)
பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான். கீழே குனிந்து எல்லோரும் தேடிக் கொண்டே பல்லக்கு செல்கிறது. ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை! என்ன செய்வது, பாவம்?
நீங்களே பாருங்கள் அந்தத் தேடும் காட்சியை!




சரி, வேறு வழியில்லை!
கோவிலுக்குள் அவசர கதியில் புகுந்து அரங்கநாயகியின் சந்நிதிக்குள் ஓடோடி வருகிறான்.
மகாலக்ஷ்மி ஒப்புக்கு இசைந்தாலும், மனதுக்கு ஒப்பவில்லை போலும்.
அரங்கன் வரும் நேரம் பார்த்து, கதவு மூடிக் கொள்கிறது!
சர்வேஸ்வரன், உலக நாயகன், தன் வீட்டுக்குள் கூட நுழைய முடியாது திணறுகிறானே! கதவைச் சாத்தி விடுகிறாள் அரங்கநாயகி. ஐயோ பாவம்!
பாருங்கள் காட்சியை! காணக் கிடைக்காத காட்சி!
வாசவன் வாசற்படியில் காத்துக் கிடக்கும் காட்சி!!

srirangam_renganathar_enlar


சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர்.
தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.
பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.
தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல் வாங்குகிறார்.
சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.
உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...
படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....
இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் போங்க!


தாயார் சார்பாக உள்ள மக்கள் எல்லாரும், "ரங்கா, எங்கள் பெண்ணையா ஏமாற்றுகிறாய்", என்று அடிதடிக்குத் தயாராகிறார்கள்!
பூக்களாலும், பழங்களாலும், வெண்ணெய் உருண்டையாலும்
போட்டுத் தாக்கு! இது தான் சாக்கு!
சிறு வயதில் வேண்டிக் கொண்ட பின்பும் தேர்வில் ஃபெயிலான மக்கள்ஸ் எல்லாம், இன்னைக்குன்னு பாத்து தாயார் பக்கம் சேர்ந்துக்கறாங்க! பாவம் பெருமாள்!
அடுத்த அடி என்ன தெரியுமா? மட்டையடி!

என்ன மட்டை? கிரிக்கெட் மட்டையா?
இல்லை இல்லை...
மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!
அதுவே மட்டையடி உற்சவம்.
கணவன் மனைவி கலாட்டா என்ன ஆனது? அரங்கனுக்குக் கதவு திறந்ததா?
பங்குனி உத்திரத்தின் புகழ் பெற்ற சேர்த்தி சேவை.
எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா?....

(Video Courtesy: oppiliappan.org)
Read more »

Monday, February 19, 2007

ஏழு விளையாட்டு (சிவராத்திரி-2)

பதிவர்கள் எல்லாம் ஆறு விளையாட்டு விளையாடினர் அல்லவா, ஒரு காலத்தில்? இந்திரன் ஏழு விளையாட்டு விளையாடினான்!
பெருமாள் கொடுத்த தியாகராஜரைப் போலவே, இன்னும் ஆறு தியாகராஜ மூர்த்திகளை, மாயமாக உருவாக்கினான்.
"முசுகுந்தா, இவை ஏழு உருவங்களுமே தியாகராஜர்கள் தான்; உனக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள்! உனக்குக் கடன்பட்டவன் நான்; உனக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன்?" - சாமர்த்தியமாகப் பேசினான்.

முசுகுந்தன் செய்வதறியாது இறைவனைத் தியானிக்க, அஜபா மூர்த்தி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது; "வா, என்னை எடுத்துக் கொள்; பெருமாளின் திருவுள்ளப்படி ஆரூரில் என்னை அமர்த்து" என்றது!
அரசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை! ஒடோடிச் சென்று அஜபா மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்.
இந்திரனுக்கோ பெரும் வியப்பு! இறைவன் கணக்குக்கு முன் எழும் கணக்கு, ஏழும் கணக்கு எம்மாத்திரம்?

arielview

உளம் திருந்தினான்; அந்த ஏழு மூர்த்திகளையுமே, முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். பொதுநலத்துக்காக, தன்னலம் விட்டான்.
அரசன் அவற்றைப் பூமிக்குக் கொண்டு வந்து, மூலத் தியாகராஜ மூர்த்தியை ஆரூரில் இருத்தினான். மற்ற மூர்த்திகளை அந்தந்தத் தலங்களில் இருப்பித்தான். சப்த விடங்க தலங்கள் உருவாயின! (சப்த=ஏழு)
1.திருவாரூர் - அஜபா நடனம்,
2.திருக்குவளை - பிருங்க நடனம்,
3.திருக்காறாயில் - குக்குட நடனம்,
4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,
5.திருநாகை - பராவர நடனம்
6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,
7.திருவாய்மூர் - கமல நடனம்
- இவையே சப்த விடங்க தலங்கள்.

இன்றும் திருவாரூரில் விஷ்ணுவின் மூச்சில் நடனம் புரிந்த அழகிய அஜபா மூர்த்தியைக் காணலாம்.
திருவாரூர், நாகைக் காரர்கள் யாராச்சும் வந்து அவன் அழகைச் சொல்லுங்க!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!



ஆரூர், ஆதி ஊர். மிகப் பழமையான ஊர்.
ஆரூரில் பிறக்க முத்தி, காசியில் துறக்க முத்தி என்பார்கள்!
அன்னை கமலாம்பிகையுடன் அருள் ஆட்சி செய்கிறான் தியாகராஜன்...
அங்கு கோயில் பாதி, குளம் பாதி!
ஆரூரில் எல்லாமே பெரிது! ஆலயம், அதே பரப்பளவு உள்ள குளம், ஆழித் தேர், அகண்ட விளக்கு இப்படி எல்லாமே பெரிது!

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டு, ஈசன் காலாற நடந்து தூது சென்ற ஊர்.
இசை மும்மூர்த்திகள் என்று சொல்கிறோமே, தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்...
இவர்கள் மூவரும் சொல்லி வைத்த மாதிரி, இந்த ஊரில் தான் அவதரித்தனர்.
இது ஒன்றே போதும் திருவாரூர் பெருமை சொல்ல!
மனு நீதிச் சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய ஊர்.
இன்றைய காலகட்டத்தில் சொல்ல வேண்டும் என்றால், தமிழக முதல்வர், கலைஞரின் சொந்த ஊர்.

சிவனார் தான் ஊருக்கே ராஜா - தியாகராஜா!
அவர் வீட்டில் விளக்கு வைத்த பின் தான், மற்ற அனைத்து ஆலயங்களிலும் இல்லங்களிலும் விளக்கிடுதல் நிகழும். இந்த ஆரூரில் சிவராத்திரி மிகவும் விசேடம்!
சிவராத்திரியின் கதையே இந்த ஊர் தானே!

இருண்ட தனிக் காட்டில் புலிக்குப் பயந்து, வேடன் ஒருவன் மரத்தில் ஏறிக் கொண்டான். இரவு முழுதும் உண்ணாது உறங்காது விழித்து இருந்தான்.
போதாக்குறைக்கு தூங்கி விடுவோமோ என்று பயந்து, மரத்தின் இலைகளைக் கிள்ளிக் கிள்ளிக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.
அந்த மரத்தின் கீழோ ஒரு சிவலிங்க உருவம்.
வேடனுக்குத் தெரியாது அன்று சிவராத்திரி என்று!
வேடனுக்குத் தெரியாது அவன் கிள்ளிப் போட்டது வில்வ இலை என்று!

அறியாமல் தெரியாமல் செய்த சிவராத்திரி உபவாசம் மற்றும் வில்வார்ச்சனை. அதனால் தான் மறு பிறப்பில், முசுகுந்தச் சக்ரவர்த்தியாகப் பிறந்தான்.
அவன் கடைத்தேறியதோடு மட்டும் இல்லாமல், நம்மையும் கடைத்தேற்ற தியாகராஜ உருவத்தை மேல் உலகில் இருந்து கொண்டு வந்தான்.
(சிலர், வேடன் என்பதற்குப் பதிலாக, குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இலைகளைக் கிள்ளிப் போட்டது என்றும் சொல்லுவர்)

2004043001350601

இந்தச் சிவராத்திரி நன்னாளில் இந்தக் கதையைப் படித்து மனத்தில் இருத்துவோம்!
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
அறியாமலே செய்த வழிபாட்டின் மகிமை இதுவென்றால், அறிந்து உணர்ந்து உருகி வழிபடும் போது, சித்திப்பது எது?
சிவமே சித்திக்கும்! சீவனே தித்திக்கும்!!

தியாகராஜரைப் பூமிக்கு அனுப்பிய பெருமாளையும், சிவராத்திரி அன்றே,
வழிபடுவோம் வாங்க!
வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், சிந்தையில் எங்கேனும் ஒரு ஓரத்தில் சிவ வைணவ பேதங்கள் நமக்குக் கூட இருக்காலாம்; அதையும் அகற்றி,
நெறிபடுவோம் வாங்க!

திருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.
திருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்! இப்படிப்
பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?

சிவ சிவ = ராம ராம = மங்களம் மங்களம்!
Read more »

Thursday, February 15, 2007

விமானத்தில் ஒரு சிவராத்திரி

சிவராத்திரி, சிவனின் ராத்திரி என்று தான் எல்லாருக்கும் தெரியுமே! அப்புறம் சிவராத்திரி அன்று என்ன பதிவு போடுவதாம்?
அதுவும் விமானத்தில் அமர்ந்து எழுதும் போது, ஜன்னல் வழியாக ஒரே மேகக் கூட்டம். அப்படியே திருவிளையாடல் படத்தில் வருமே, திருக்கயிலாய எஃபெக்ட்! புகை மண்டலம்!!

நந்தி தேவரான பைலட் அடிக்கடி அறிவிப்புச் செய்கிறார், ஒழுங்கு முறைகளைப் பற்றி. கந்தர்வ லோக விமானப் பணிப்பெண்கள், தேவ கானம் இசைக்கிறார்கள். (ஆனா யாருமே ரம்பை, மேனகை, ஊர்வசி போல, அப்படி ஒண்ணும் ஓகோன்னு இல்லை என்பது தனிக்கதை :-)

பூத கணங்கள் யாரும் இல்லையா என்று எடக்கு மடக்கா, கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது, சொல்லிட்டேன்!
என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தான் அப்சரஸ் என்று நினைக்கிறேன்...
ச்சே என்ன இது, புத்தி இன்று இப்படிப் போகிறது! எல்லாம் இந்த வெட்டிபையல் பாலாஜியைச் சொல்லணும்! அவர் தான் பழனியில் தேவயானியைச் சந்தித்தேன்-னு பதிவு போடச் சொன்னார்.

சிவ சிவ....சரி, நாம் பதிவுக்கு வருவோம்!



சிவனாரைப் பூமிக்குக் கொண்டு வந்ததே அவரின் ஆப்தரான திருமால் என்று தெரியுமா? - என்னது, சிவனைப் பூமிக்கு அனுப்பியது விஷ்ணுவா?
இப்படி ஒரு நல்லிணக்கமா நமது தர்மத்தில்!
அப்புறம் ஏனாம் வீணாகச் சண்டை இடுகிறார்கள், அதுவும் மெத்தப் படித்தவர்கள்?

ஹிஹி....மெத்தப் படித்ததனால் தான்! படித்தனர் சரி, ஆனால் பிடித்தனரா?
கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே
!

எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் திருமார்பில் கொலு இருப்பவள் மகாலக்ஷ்மி.
ஆனால் அவன் இதயத்துக்கு உள்ளே இருப்பவன் யார் தெரியுமா?
- சாட்சாத் சிவபெருமான் தான்!
ஈசன், பெருமாளின் இதயத்தில் தாண்டவம் புரிகிறான். எப்படி?

பெருமாளின் மூச்சுக் காற்று மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. அதனால் அவனுக்குள் இருக்கும் ஈசனும் ஏறி ஏறி இறங்குகிறான்.
இந்தச் சிவ தாண்டவத்துக்கு "அஜபா நடனம்" என்று பெயர்.
சிவ யோகிகளும், மதங்களைக் கடந்த சித்தர்களும் பெரிதும் காண விழையும் தாண்டவம் இது!

ThiyagarajaMain


கஷ்ட காலத்தில் இருந்த இந்திரனுக்கு மனமிரங்கினார் விஷ்ணு.
தன்னுள் இருந்த இந்தச் சிவானாரின் உருவை, இந்திரனுக்குக் கொடுத்து அருள் புரிந்தார். தியாகராஜ மூர்த்தி என்று அதற்கு நாமமும் சூட்டினார்.
சிவம்=மங்களம்; அதனால் இந்திரன் சங்கடம் தீர்ந்தான்.
தினமும் அஜபா நடனச் சிவனாரை வழிபடத் தவறவில்லை.

ஆனால் அப்படியும் வந்தது ஒரு சோதனை. அசுரர்களின் வாயிலாக.
வழக்கம் போல் பெருமாளிடம் முறையிட்டான். பெருமாளோ பதவிச் சண்டைகளுக்கு எல்லாம் தான் உதவ இயலாது என்றும்,
தர்மத்துக்குத் தீங்கு வரும் போது மட்டுமே தான் தலையிட முடியும் என்று சொல்லிவிட்டார்.
போரில் உதவிக்கு, பூலோக அரசன் முசுகுந்தச் சக்ரவர்த்தியை வேண்டுமானல் நாடிக் கொள்ளவும் என்று ஆலோசனை வழங்கினார்.

முசுகுந்தனின் உதவியால் போரில் பெரும் வெற்றி பெற்றான் இந்திரன். ஆனால் மனதுக்குள் ஒரு ஏக்கம்.
ஒரு மானுடன் உதவியால் தான் வென்றோமா? அஷ்ட திக் பாலகரில் ஒருவனான அமரேந்திரன் மானுடன் உதவியை நாடிப் பெற்றான் என்று வரலாறு பேசாதோ?

ஆகா....பாருங்கள் கதையை, வெற்றியும் வேண்டும் ஆனால் கம்பீரமும் தொலையக் கூடாது! அப்படியே இந்தக் கால மனிதர் பலரின் அலை பாயும் மனம். இந்திரன் பக்தன் தான், ஆனால் பக்திக்கும் ஆசைகளுக்கும் இடையே தடுமாறுகிறவன்.
பார்த்தார் பெருமாள்! முசுகுந்தனின் கனவில் தோன்றி, ஒரு உபாயத்தைச் சொன்னார். மறுநாள் காலை, அரசன் விடைபெற்று பூவுலகம் திரும்ப முனைகிறான்.

worship2


இதோ இந்திரனின் பூஜையறை...
காலையில் வாழி பாடு-வழி பாடு முடிகிறது.
இந்திரன், "நண்பா, தக்க சமயத்தில் உதவினாய்! உனக்கு அன்புடன் ஏதாவது அளிக்க வேண்டும் போல் உள்ளது; விரும்பியதைக் கேட்டுப் பெறுவாயாக", என்று மொழிந்தான்.
முசுகுந்தனோ, முன்பே பெருமாளிடம் பேசி வைத்த படி,
"நண்பா, இந்திரா, எனக்கும் என் குடிமக்களுக்கும் ஆரூரில் யாது குறையுமில்லை. ஆனால் நீயே விரும்பிச் கேட்பதால், இதோ பூசையில் உள்ளதே அஜபா மூர்த்தி, தியாகராஜம் என்ற திருவுருவம்! அதை வேண்டுமானால் கொடுத்தருள்வாய்!"

இந்திரனுக்கோ சப்த நாடியும் ஒடுங்கி விட்டது! அவனும் பக்தன் தானே! சுயநலப் பக்தன்!
தியாகராஜ மூர்த்தியைப் பிரிய மனமில்லை; பூவுலகிற்குக் கொடுக்கவும் மனம் வரவில்லை!
ஆனால் நன்றி மறப்புக்கும், மறுப்புக்கும் அஞ்சினான் அமரர் தலைவன்; எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டே! செய்நன்றி கொண்டவர்க்கும் உண்டோ?
பத்தி விலகி, புத்தி வேலை செய்யத் துவங்கியது...

மனிதர் தேவர் அசுரர் எல்லாரும் போடும் கணக்கு ஒன்று. ஆனால் அதில் யாரும் இறைவன் போடும் கணக்கைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையே!
இந்திரன் போட்ட கணக்குக்கு எண்ணிக்கை ஏழு!
ஏழு விளையாட்டு விளையாடினான்! அடுத்த பதிவில்!!

(அப்பாடி...தாயகம் வந்து சேர்ந்தேன்! தாய் மண்ணே, வணக்கம்!
சொர்க்கமே என்றாலும்...அது நம்மூரு போல வருமா?
இந்தியக் காற்றே, இந்தியக் காற்றே...எனக்கும் சேர்த்தே வீசுகிறாயா?

சரி சரி இரு... அலுவலகம் எட்டிப் பாத்து வருகிறேன்...)
Read more »

Sunday, January 14, 2007

பொங்கல் - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல், இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி, எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும், சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் தொலைக்காட்சியிலும், நடிகை ஸ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62


பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் Manhattanஇல் நடுரோட்டுல பண்ணா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!
Read more »

Sunday, January 07, 2007

திருவையாத்துச் சாமீ ஆராதனைங்களா? - எந்தரோ மகானுபாவுலு!

சுந்தரத் தெலுங்கு என்று ஒரு காலத்தில் பாடி வைத்தான் பாரதி. தெலுங்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் "எந்தரோ மகானுபாவுலு" என்ற சொற்றொடர் மட்டும் நம்மில் பல பேருக்குத் தெரியும்!
எந்தரோ மகானுபாவுலு - அப்படின்னா என்ன?

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி, ஆராதனை இன்று! (Jan 8 2007)
அவர் பாட்டுடன் ராகமாய், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.

தமிழிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை, மெல்லிசை என்று இப்படி எந்தத் துறையில் இருந்தாலும் எல்லாரும் மதித்துப் போற்றி வழிபடும் ஒருவர் ஸ்ரீ தியாகராஜர். அவருக்கும் முன்பாகவே பல கலைஞர்கள் இசையில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். ஆனால் யாருக்கும் இப்படி ஒரு உன்னத நிலை அமையவில்லை! ஏன்?

உள்ளார்ந்த பக்தியை இசைப்பாடல்களாக வெளிப்படுத்தியவர்.
அவர் இசையில் தான் எத்தனை எத்தனை புதுமைகள் செய்தார்!
எவ்வளவு கஷ்டமான ராகங்களையும், தன் இனிய மெட்டால் எத்தனை எளிமை ஆக்கினார்!

115858699_771cce968c

பணத்தின் மு்ன்னோ, அரசாங்க ஆணையின் முன்னோ, பெரிய மனிதர்களின் சிபாரிசின் முன்னோ, பளபள சரிகை வேட்டிகளின் முன்னோ, பணிந்து வளைந்தாரா இவர்? இல்லையே! மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி.

நாம் எல்லாம் இன்று தானே, தினம் ஒரு பதிவு போடுகிறோம்! ஆனால் தியாகராஜர் அன்றே தினம் ஒரு பாடல், கவிதை எழுதியவர்!
தேர்ந்த வித்வான்கள் எல்லாம் அவர் பாடல்களை அலசி அராய்ந்து சாரமாய்ப் பொழிய முடியும்.
இல்லை என்றாலும் அந்நியன் படக் காட்சிகள் போல் கிண்டல், நையாண்டி செய்தும் மகிழலாம்! :-)
ஆனால் கிராமத்தில் வாழும் சாதாரண மக்கள் அவர் பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கூட்டமில்லாத நாட்களில் திருவையாறு சென்று பாருங்கள், தெரியும்!
சுத்துப் பட்டு கிராமங்கள், சுந்தர பெருமாள் கோவில், கபித்தலம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் இன்னும் பல இடங்களில் இருந்தும் கிராமத்து மக்கள் யாராச்சும் வருவார்கள்; வந்துக் காவிரிக் கரையோரமாக உட்காருவார்கள்.
"நீ தய ராதா", "சீதம்மா, மாயம்மா", "ரா ரா மா இண்டி", என்று ஏதாச்சும் ஒரு எளிமையான பாட்டை நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டிருப்பார்கள்!
அவர்களிடம் போய் இது என்ன ராகம் என்றெல்லாம் கேட்டு வைக்கக் கூடாது!:-)

கச்சேரிகளில் கூட இப்படி ரசித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்! ஆனால் இங்கே சர்வ சாதாரணமாக, "Casual " என்று சொல்கிறோமே, அது போலப் பாடிக் கொண்டிருப்பார்கள்! அவர்கள் வீட்டு விசேடங்களுக்குச் சென்று பாருங்கள்.
நலங்கு, ஆரத்தி, அழைப்பு இப்படி எல்லாத்துக்கும் இவர் பாட்டு தான். "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடாவிட்டாலும், வாய்விட்டு சொல்லாதவர் தான் யார்!

இப்படி மக்கள் கலைஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் தியாகராஜர்!
காவிரிக்கரைச் சாமீங்களா, திருவையாத்துச் சாமீங்களா என்று தான் அவர்கள் எல்லாரும் பாசத்துடன் கேட்கிறார்கள்!

நம் அபிமானத்தால் இறைவனைப் பீடத்தில் ஏற்றினாலும் அவன் எங்கும் பரந்து விரிந்து இருக்கிறான் அல்லவா?
அதைப் போலேவே தியாகராஜரின் பக்தியும் இசையும், கச்சேரிகளையும் தாண்டி நிற்கும்;
எங்கும் பரந்து விரிந்து, எளிய மக்களின் மனங்களில் நிழலாடிக் கொண்டே இருக்கும்!


எந்தரோ மகானுபாவுலு! = அன்பால் உயர்ந்த பக்தர்கள் தான் எத்தனை பேர் இந்த உலகத்தில்? அவர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? (எனக்கு மட்டும் ஏன் இந்த போலி அகங்காரம், திமிர் எல்லாம்?)
அந்தரிகி வந்தனமுலு! = அவர்கள் அத்தனை பேரையும் அடியேன் வணங்குகிறேன்!

இது மிகவும் முக்கியமான பாடல்! பணிவு ஒன்றையே பண்பாகக் கொண்ட தொண்டர்களின் பெருமையைப் பற்றிப் பாடும் பாடல் அல்லவா?
கீழே அவருடைய ஆராதனையில், "எந்தரோ மகானுபாவுலு" என்று பாடப்படும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

பழைய DD Recording என்று நினைக்கிறேன்.
அன்றைய பல முன்னணி இசைக் கலைஞர்கள், மற்றும் சினிமாக் கலைஞர்கள் தெரிகிறார்கள். யார் யார் என்று நீங்க தான் பார்த்துச் சொல்லணும்! :-)
ஒரு சிலர் என்ன பட்டுப்புடைவை, என்ன அட்டிகை, என்ன நகை, என்ன மோதிரம் தெரிகிறது என்றும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்வதையும் பார்த்திருக்கிறேன்:-)

ஆனால் அந்தக் கூட்டத்திலும் முகம் தெரியாத ஒருவர் உட்கார்ந்து ஆழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம்! அவருக்கும் நம் வந்தனங்கள்!!
கடைசியில் மிக முக்கியமான ஒரு பத்திக்கு மட்டும் விளக்கம் தந்துள்ளேன்; அதில் பலப்பல பக்தர்களையும் வரிசைப்படுத்திப் பாடி வணங்குகிறார் தியாகராஜர்! நாமும் வணங்குவோம்!!

பகுதி-1


பகுதி-2


வீடியோவிற்கு நன்றி: CoolCrave


7 ஆம் சரணம்:
பரம பாகவத மௌனி வர சசி
விபாகர சனக சனந்தன
திகீ்ச சுர கிம்புருஷ
கனகக சிபு சுத நாரத தும்புரு

பவன சுனு பால சந்திர தர சுக
சரோஜ பவபூ சுரவருலு

பரம பாவனுலு கனுலு சாச்வதுலு
கமல பவ சுகமு சதானு பவுலு காக

(எந்தரோ மகானுபாவுலு)

பரம பாகவத = பெரும் பக்தர்கள், அடியவர்கள்
மௌனி = முனிவர்கள்
வர சசி = அழகான் சந்திரன்
விபாகர = சூரியன்
சனக சனந்தன = சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் குழந்தை ரிஷிகள்

திகீ்ச = திக்+ஈச = அஷ்டதிக் பாலகர்கள்; எண் திசைக் காவலர்கள்
சுர = முப்பத்து முக்கோடி தேவர்கள்
கிம்புருஷ = கிம்புருட பிரதேசத்தில் வாழும் இசை ஞானிகள்
கனகக சிபு சுத = கசிபுவின் மகனான பிரகலாதன்
நாரத தும்புரு = நாரதர் மற்றும் தும்புரு ஆகிய ரிஷிகள்

பவன சுனு = பவன (வாயு) புத்திரன்; அன்பன் ஆஞ்சநேயன்
பாலச்சந்திர தர = பாலச் சந்திரனைப் பிறை சூடிய இறைவன், சிவபெருமான்
சுக = சுகப் பிரம்ம மகரிஷி
சரோஜ பவ = தாமரையில் தோன்றிய பிரம்ம தேவர்
பூ சுரவருலு = பூ உலகைக் காக்கும் தன்னலமில்லாத் தலைவர்கள்

பரம பாவனுலு = பரிசுத்தமான நல் இதயம் கொண்டவர்கள்
கனுலு சாச்வதுலு = நித்ய சிரஞ்சீவிகள்
கமல பவ சுகமு = இறைவன் திருவடித் தாமரைச் சுகத்தை
சதா அனுபவுலு காக = எப்போதும் அனுபவித்து, ஆழந்து கொண்டுள்ள
இன்னும் எத்தனையோ முகம் தெரியாத பக்தர்கள்!
இப்படி, எந்தரோ மகானுபாவுலு, அவர்கள் அந்தரிகி வந்தனமுலு!
Read more »

Friday, January 05, 2007

முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5

முந்தைய பதிவு இங்கே!
எம்பெருமான் எக்கி எக்கிப் பார்க்கிறான்! சரியாகத் தெரியவில்லை!
இன்னும் உயரத் தூக்குங்கள் என்கிறான்! தூக்குகிறார்கள்! ஆகா...மோகினியின் அழகில் மயங்கி விழுகிறான்!
என்னது இது அதிசயம்! அவன் தானே மோகினி வேடத்தில் சிவ பெருமானையே சிந்தை கலங்கச் செய்தவன்!
அவனே மயங்குகிறானா? ஆனானப்பட்ட மாயவனையே மயக்கும் மோகினி யாரப்பா? அவள் தான் பராங்குச நாயகி!

யார் அது? கேள்விப்பட்டதே இல்லையே! அவள் எந்த ஊர் நாயகி?
அட நம்ம நம்மாழ்வார் தான்! ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!
ஒரு காலத்தில் பெருமாளிடம் மனத்தைப் பறிகொடுத்து, ஒரு காதலியாய் உருகி உருகிப் பொழிந்தார் பாசுரங்களை!
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே, தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே என்று மயங்கிக் கிடந்தார்!


38077112.ParankusaNayaki
பராங்குச
நாயகி


39499196_KAITHALASEVA

கைத்தல சேவை

ஆனால் பாருங்கள்! இன்று நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது!
ஆழ்வார் என்னும் நாயகியை, அரங்கன் எம்பி எம்பிப் பார்க்கிறான்!
அவனை வாகனத்தில் வைத்தோ, தோள் மேலே வைத்தோ தூக்கவில்லை இன்று! பின்னே வேறு எப்படித் தூக்கி வருகிறார்கள்?
அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் தாங்கித் தாங்கித் தூக்கி வருகிறார்கள்!
கைத்தல சேவை என்று பெயர்!

கைகளால் உயர உயரத் தூக்கி, அவனுக்கு நம்மாழ்வரின் அழகுத் திருக்கோலத்தைக் காண்பிக்கிறார்கள்!
ஒரு அடியவருக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும் சொல்லுங்கள்!
அருமா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே!
ஒருமா நொடியும் பிரியான் என்ஊழி முதல்வன் ஒருவனே!



எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறியை விழாவாக நடித்துக் காட்டுகிறார்கள்! தங்கக்குதிரை வாகனம்! அது ஒரு சுவையான நாடகம் அல்லவா?
கால்மெட்டியை மட்டும் திருடமுடியாது போய், இறுதியில் காலமெல்லாம் நாராயணா என்று ஆன கதை ஆயிற்றே! பெருமாள் திருமங்கை மன்னனைக் கள்வர் தொழிலில் இருந்து மீட்டு, ஆட்கொண்டதை இந்தப் பதிவில் காணலாம்!

renganathar_visit_8

முன்பு ஒரு நாள், சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது இதே உற்சவம்;
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.

அவர் என்ன பெரிய செல்வந்தரா இல்லை உபயதாரரா, அருகில் செல்ல?
இல்லையே! தனக்கு மாலை மரியாதை எல்லாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளும் தலைவரும் கிடையாது! பரம சாது!

குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் ஹூஹூம்.
அர்ச்சகரின் மேல் ஆவேசம் வந்து, ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.

உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனைகளைத் தனியாகப் பாடி அருளினார்!


பத்து நாட்கள் ராப்பத்து விழா முடிந்து, இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சம்!
இது தான் விழாவின் மிக முக்கியமான கட்டம்;
பல அன்பர்கள் கண்ணிலும் நீர் வரவழைத்து விடும்!

முன்பே சொன்னது போல் நம்மாழ்வாருக்காக வாசல் திறக்கப்படும் வைபவம் தான் சொர்க்க வாசல்.
அதில் பெருமாள், தானே ஒரு சாதகனாய் நுழைகிறான்! ஒரு சாதகன் (முமுட்சு) எப்படி அனைத்து நிலைகளையும் கடந்து, பரமபதத்தில் எப்படி எல்லாம் வரவேற்கப்பட்டு, தன்னிடம் வந்து சேர்கிறான் என்பதைத் தானே நடித்துக் காட்டுகிறான்!

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின என்ற பாசுரம் முழங்குகிறார்கள்.
நம்மாழ்வார் திருவுருவச் சிலை சகல மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு நம்பெருமாள் முன் வைக்கப்படுகிறது.

nammalwar

நம்மாழ்வார்

அலங்காரங்கள் எதுவுமே இல்லை! வெறும் வெள்ளை உடையும் துளசி மாலை மட்டுமே! பன்னிரெண்டு திருமண் காப்பு திருமேனியில்!
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
என்று பாடுகிறார்கள்! பாடிக் கொண்டே, துளசி தளங்களால் அர்ச்சனை!

நம்மாழ்வார் திருவுருவச் சிலையை, அவர் தலை அப்படியே அரங்கன் திருவடிகளில் படுமாறு கிடத்துகிறார்கள்! தலையாலே கீழே விழுந்து வணங்கிப், பற்றற்றான் பற்றினைப் பற்றுகிறார்!
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே!

என்று அன்று பாடினார் அல்லவா? அது அப்படியே இன்று நம் கண்முன்னால் நடக்கிறது!

39499221_alwar

நம்மாழ்வார் மோட்சம்

துளசி அர்ச்சனை இடையறாது நடந்து கொண்டே இருக்க, அச்சோ!...சிறிது நேரத்தில் நம்மாழ்வாரைக் காணவில்லை!
ஆம்! துளசியால் முழுதும் மூடப்பட்டு விடுகிறார்!!
சற்று முன்னர் வரை நம் கண் முன்னே, திருவாய்மொழி பாடிக் கொண்டே வந்தவர், இப்போது காணவில்லையே!

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


பாசுர முழக்கம் நிறைவு பெற்றது!
எங்கும் ஒரே நிசப்தம்! துளி சத்தம் கிடையாது!

எல்லார் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்!
மணியோசை எதுவுமில்லை!
எம்பெருமானுக்கு மகா தீப மங்கள கற்பூர ஆரத்தி!
பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
இது நம்மாழ்வார் மோட்சம்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!!


இத்துடன் திருவரங்கத்து வைகுந்த ஏகாதசித் தொடர் பதிவு நிறைந்தது!
ஆர்வமுடன் வாசித்தளித்த அன்பர்கள், அடியார்கள் அனைவருக்கும் நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

ஆழ்வார் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம்!!

chatary

ஆராத அருள்அமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தான் அயோத்திமன்னர்க்கு அளித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுதகோயில்
துணையான வீடணார்க்குத்துணை ஆனகோயில்

சேராத பயன்எல்லாம் சேர்க்கும்கோயில்
செழுமறையின் முதல்எழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினை அனைத்தும் தீர்க்கும்கோயில்
திருஅரங்கம் எனத்திகழும் கோயில்தாமே!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP