108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!
நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!
- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா?
அதான் இன்னிக்கி 108! இந்தப் பதிவும் 108ஆம் பதிவு!
நம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.
அது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான்! ஆனா நாம அப்படி இல்லீங்க!
ஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...
பதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....
இதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.
ஆனா 108 ஆம் படி வந்த போது,
சரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு!
அப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல! அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்!
புரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.
ஆறு மாசத்திலே வெறும் நூறு தானா? - அட போப்பா!
(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)
மொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம்! (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா? :-)
கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது!
சரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;
அதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன? - அப்பிடின்னு துவங்கி விட்டேன்! சரி துவங்கியாச்சு;
என்னாத்த எழுதலாம் அண்ணாத்த?

நாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.
அதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்!
இந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,
நம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க!
(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...!)
அப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)
இது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க!
ரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...
சொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க!
சரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா!
சும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.
சில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;
பெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல!
சரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு!
டேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க! நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு! :-)
அடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.
யாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா?
இவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க!
இதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)
அதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு!
நம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.
ஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,
அதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல! :-)
அதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல பல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.
என்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.
ஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,
நமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ? :-)
ஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு!
சரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....
நீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்!
அன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்!
மொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று! :-)
சரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.
1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?
2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?
எது எப்படியோ,
வாசித்துச் செல்லும் அன்பருக்கும்
வாசித்துச் சொல்லும் அன்பருக்கும்
வாசியா நின்ற அன்பருக்கும்
இந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு, அடியேனின் நன்றிகள் பல!
எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல! பின்னூட்டில் முயல்கிறேன்!
இப்போது, "அந்தரிகி வந்தனமுலு!"
கருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்
பிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்
நம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்! - என்ன அது?
இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,
பதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.
சிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்
- அது கண்ணாடி அன்று! தொலைக்காட்சி ஆகி விடும்! :-)
பத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்
பத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
ஆனால் பதிவுலகம் தான்,
தமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது!
இப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது!
இந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,
நாளும், காட்சிகள் படைக்கின்றோம்!
நாளை, மாட்சிகள் படைத்திடுவோம்!
அதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...
நம் எல்லாப் பதிவர்களுக்கும்
நலமும் இன்பமும் நல்குமாறு
நீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
தலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி?
நம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,
108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்!
108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்
108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்!
108 சக்தி பீடங்கள்
108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்
108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)
108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)
108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை
108 கூறுகள் சீன மருத்துவத்தில்
மற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்!
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்
- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108?
சுருக்கமாப் பார்ப்போம்.
(1) x (2x2) x (3x3x3) = 1x4x27 = 108
(3x3x3) =
ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,
சத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,
நேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்
(2x2) =
அறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்
(1) = 1 ரே மனத்துடன்,
ஒருமுகமாக
எம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்!
![]() ![]() |










