Wednesday, April 30, 2008

அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 2

"காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?" - சென்ற பாகம் இங்கே!

துடிதுடித்துப் போய் விட்டான் இராமன்! இவர்கள் இலக்கு இலக்குவனா?
இலக்குவனைக் கொல்வதற்காகவே இப்படி ஒரு திட்டம் தீட்டினார்களா தேவர்கள்? அன்று இந்திரனுக்காக இந்திரசித்தைக் கொன்றவனுக்கு இன்று அதே இந்திரன்-சித்து காட்டுகிறானே?
பட்டாபிஷேகம் பறி போன போது கூட படபடக்காத இராமன் இன்று ஏனோ அப்படிப் படபடக்கிறான்! சிந்தைக்கு இனியவர்களுக்கு மட்டும் ஏதாவது ஒன்றென்றால் நம் சிந்தை ஏன் செயல்படாது போகிறது சில நேரம்?

யமன்: இராமா...இன்னும் தேவ ரகசியம் சொல்லி முடியவில்லை! லட்சுமணா...இன்னும் சில விநாடிகள் நீ வெளியே நில்!
(இலக்குவன் வந்த வழியே வெளியேற...)

நாராயணா, இன்னுமா இந்த மனித வேடம்? சிவபெருமான் தம் பணியைத் துவங்கி விட்டார்! அவதார முடிவின் சூட்சுமங்கள் தொடங்கி விட்டன! இதை உணர்ந்து தயாராகி விடுங்கள்!
மானிடனைக் கேட்டால் தான் பெண்ணுக்குக் கல்யாணம், பையனுக்குக் காதுகுத்தல் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருப்பார்கள்! நீங்களுமா? உலகுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சீக்கிரம் சொல்லி விட்டுச் சீக்கிரம் தயாராகுங்கள்!

இராமன்: எல்லாம் சரி தான் தர்மராஜரே! ஆனால் இலக்குவன்.....?

யமன்: சுவாமி, உங்களுக்குமா பந்த பாசம்? நீங்கள் வைகுந்தம் வரும் போது அங்கு ஆதிசேடன் இருக்க வேண்டும் அல்லவா! ஆதிசேடன் அல்லவா இலக்குவனாய் வந்தது! உங்களுக்கு முன் இலக்குவன் விண்ணேக வேண்டும் என்பது விதி!
பாருங்கள், விதிப்பவன் உங்களுக்கே விதியைக் காட்டும் வினோத விதி எனக்கு!
இலக்குவன் விண்ணேக வேண்டும்! சங்கு சக்கரங்களான பரத சத்ருக்கனர்களும் உங்களுடன் ஏகி விடுவார்கள்! பிராட்டியும் தங்கள் வருகைக்குக் காத்துக் கொண்டுள்ளார்! நினைவிருக்கட்டும்! இன்னும் ஒரு பட்ச காலம் (பதினைந்து நாட்கள்) தான் உங்களுக்கு அவகாசம்!
நான் கிளம்புகிறேன்! கடமையால் வந்த கடுஞ்சொற்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் இராமா! இலக்குவன் தண்டனையை மறந்து விடாதீர்கள்!

(துர்வாசருடன் இலக்குவன் உள்ளே வரவும், துறவி (யமன்) வெளியேறவும் சரியாக உள்ளது...துர்வாசரும் யமனும் ஒருவரை ஒருவர் உள்ளர்த்தப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொள்கிறார்கள்...)


துர்வாசர்: இராமா...அகோரப் பசியாய்ப் பசிக்கிறது...நீ உண்ட உணவை உன் கையால் எனக்கு இப்போதே இட வேண்டும்! "முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு", ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் ரகு குலத்தில் இவ்வாறு உண்பது என் விரதம்!

இராமன்: ஆகா...அப்படியே ஆகட்டும் முனிவரே! இதோ கொண்டு வரச் சொல்கிறேன்! சற்று அமருங்களேன்! நானும் களைத்துப் போயுள்ளேன். மனத்தை அரிக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் கிடுகிடுவென்று நடந்துவிட்டன...

துர்வாசர்: இராமனா இப்படிப் பேசுவது? விருந்தினர் முன் சொந்த துயரங்களைப் பேசுவதா பண்பு? முதலில் என்னைக் கவனி! அரச-அதிதி முறை தெரியுமல்லவா உனக்கு? நீ அதன் லட்சணம் அறியாதவனோ? இல்லை ஹரி யாதவனோ??

இராமன்: மன்னிக்க வேண்டும் முனிவரே! இதோ உணவு! களைப்பு தீர உண்டு பசியாறுங்கள்!

துர்வாசர்: ஆ...என்ன இது அவமதிப்பு? வெறும் சோறும் கறிச் சேறுமா எனக்கு விருந்து? நான் வந்தது அரண்மனையா இல்லை ஆண்டிமனையா?

இராமன்: முனிவரே! கோபம் வேண்டாம்! நீங்கள் கேட்டது நான் உண்டு, அதன் மீதி மிஞ்சிய உணவு! சீதை சென்றபின் இதுவே எனக்கு உணவாகி விட்டது! என்னால் இளையவனுக்கும் இதையே உண்கிறான்! அருள் கூருங்கள்! இல்லை விருந்து தேவை என்றால் உள்ளே வாருங்கள்...அன்னக் கூடம் செல்லலாம்!

துர்வாசர்: உம்...உன் மனைவி போனபின் உனக்கு மரத்துப் போன உணவா? இதனால் எல்லாம் நீ நல்ல கணவன் என்று சொல்ல மாட்டேன்! நீ உண்டு சேஷமான (மீதமான) உணவே எனக்குப் போதும்!
ஆதி சேஷமே இதை உண்ணும் போது, மீதி சேஷமாய் நானும் உண்கிறேன்!
(முனிவர் உண்டு பசி ஆறியவுடன் இராமன் சில கேள்விகளை முனிவரிடம் முன் வைக்கிறான்!)

இராமன்: முனிவரே...நான் நல்ல கணவன் என்றெல்லாம் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை! எனக்குத் தெரியும் என்னைப் பற்றி! பொதுவுடைமைக்குத் தனியுடைமையை விற்ற சிறியேன் நான்!
வாலி வதத்துக்குக் கூட அடுத்த பிறவியில் கர்ம வினையால் நான் கழுவாய் தேடிக் கொள்வேன்!
ஆனால்...சீதை விஷயத்தில் தான் என் மனம் சதா சஞ்சலப்படுகிறது!
எங்கள் இருவரின் பரஸ்பர அன்பையும் ஆழமான காதலையும் எங்களைத் தவிர நாட்டு மக்கள் வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லையோ? எனக்கு அமைதி காட்டுங்கள், முனிவரே!

துர்வாசர்: கலங்காதே இராமா! உங்கள் இருவருக்கும் உங்கள் இருவரின் அன்பு புரிந்ததல்லவா? அது போதும்! மற்றவர்க்குப் புரிய வைக்க, புரிய வைக்கப் புண்ணாகத் தான் ஆகும்! அதனால் அப்படியே விட்டுவிடு!
உன் காலம் இன்னும் சிறிது நாள் தான்! அமைதி பெறு! இனி வரும் காலங்களிலும் உங்கள் இருவரின் அன்பும் செயல்களும் விவாதப் பொருளாகத் தான் அமையப் போகிறது!

உன் அவதாரம் போதனைக்கு அல்ல! சோதனைக்கு! - சத்திய சோதனைக்கு!
அவரவர் உங்களைச் சோதித்து அவரவர் தீர்ப்பு எழுதிக் கொள்வார்கள்! அந்தத் தீர்ப்பு உங்களுக்கு அல்ல! அவரவர்க்கே தான்!
உங்கள் வாழ்க்கை அதற்கு உதவும் ஒரு சிறு தீத்துளி! அதைக் கொண்டு தீபம் ஏற்றவோ கோபம் ஏற்றவோ, அது அவரவர் விளையாட்டு!

உன் விளையாட்டு முடிந்ததல்லவா? விடை பெற்றுக் கொள்! தனித்தருள் செய்தது போதும்! திருமகளுடன் சேர்ந்து திருவருள் செய்வாயாக! என் நல்லாசிகள்! நாராயண இதி சமர்ப்பயாமி!
(துர்வாசர் விடை பெறுகிறார்...உடனே அந்தரங்க அரச ஆலோசனை சபை கூடுகிறது)



இராமன்: இலக்குவனுக்கு நானே மரண தண்டனை விதிக்கும் தர்ம சங்கடம் இப்போது ஏற்பட்டுள்ளது! முனிவர் இலக்குவனிடமே கேட்டிருக்கலாம்! அரச குடும்பத்தைச் சூழுப் போகும் விபரீதம் அறியாமல் இப்படி எல்லாம் நிகழ்ந்து விட்டது! அப்படியும் போக முடியாமல், இப்படியும் போக முடியாமல் - இது தான் தர்ம சங்கடம் என்கிறார்கள் போலும்! என்ன செய்யலாம் சான்றோர்களே?
(அனைவரும் அதிர்ச்சியில் உறைய...நடந்த நிகழ்வுகள் எல்லாம் உரைக்கப்படுகிறது...)

அமைச்சர் (தயங்கித் தயங்கி): மன்னா...புதல்வர்களுக்கு இப்போது தான் பட்டம் கட்டினோம்! இது அரசியல் சட்டப்படிக் கருணைக் காலம்! நீங்கள் சொல்லும் ஒரு பட்சத்துக்குள்....நம் நாட்டில் இலக்குவனுக்கு மட்டுமில்லை, வேறு எவருக்குமே மரண தண்டனை நிறைவேற்ற முடியாது!
பேசாமல் இளையவரை நிரந்தரமாகக் காட்டுக்கு அனுப்பி விடுங்கள்! உங்கள் பிரிவே அவருக்கு மரண வேதனை தான்!
தர்ம சாஸ்திரமும் இதற்கு ஒப்புதல் அளிக்கிறது! துறவியின் வாக்கைக் காத்தது போலும் ஆகும்! நாட்டின் சட்டத்தை மதித்தது போலும் ஆகும்!

இராமன்: காட்டுக்கும் எனக்கும் இப்படி ஒரு ராசியா? ஹா ஹா ஹா...எனக்குப் பிரியமான அனைத்தும் ஒவ்வொன்றாய்க் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது விதியா? விளையாட்டா? கண்ணா இலட்சுமணா...நீ என்ன சொல்கிறாய்?

இலக்குவன்: அண்ணா...என்ன நடக்கிறது என்றே ஒன்றும் புரியவில்லை! யார் அந்த தேவ ரகசியத் துறவி என்றும் தெரியவில்லை!
ஆனால் தப்ப வழியில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது!
மனதார வஞ்சனை செய்ய உனக்கு என்றுமே தெரியாது! அதனால் உன் எண்ணம் எதுவோ அதுவே என் விதி என்று எடுத்துக் கொள்கிறேன்!

ஏதோ ஒன்று நிறைவடையப் போகிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது! நான் காடேகி விடுகிறேன்! பின்னர் யாரும் என்னைத் தேட வேண்டாம்!
ஊர்மிளையிடமும், மக்கள் சித்ரகேது/சித்ராங்கதனிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்! என்னைத் தனியாக நீங்களே காட்டில் கொண்டு போய் விட்டுவிட வேண்டும். இதுவே என் விண்ணப்பம், அண்ணா!

இராமன்: தம்பி...அன்று உன்னை விட்டுவிட்டு நானும் சீதையும் மட்டும் காட்டுக்குப் போக நினைத்த போது சண்டை போட்டாயே? இப்போது மட்டும் ஏன் அமைதி காக்கிறாய்?

இலக்குவன்: கணவனை விட்டுச் சில நாள் மனைவி பிரிந்திருக்க முடியும்! மக்களை விட்டுப் பெற்றோர் சில நாள் பிரிந்திருக்க முடியும்! ஆனால் பச்சிளங் குழந்தை? உன்னை விட்டுப் பிரிந்து இருக்க என்னால் இயலுமோ அண்ணா?
சில நாள் அண்ணியும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க முடிந்தது! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது!
நீர் உள எனின் உள மீனும், நீலமும்
பார் உள எனின் உள யாவும், பார்ப்புறின்
நார் உள தனுவுளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளேம்? அருளுவாய் என்றான்!

ஊருக்குத் தான் நாம் அண்ணன்-தம்பி உறவுக்குள் கட்டுப்பட்டோம்! ஆனால் உண்மையில் எனக்கு நீ யார்?
தலைவன்? குரு? தாய்? தகப்பன்? - இல்லை...எதையும் மறைக்காத ஆருயிர் தோழன்? இல்லை அதையும் தாண்டி...
உன்னுள் ஆழ்ந்தவன் நான்! - ஆழ்வான்! இளையாழ்வான்! - உன் அடி ஒற்றும் அடியவன்! உன் அருளே புரிந்து இருப்பேன்! இனி என்ன திருக்குறிப்பே?

(காட்டுக்கு வெளியே தனிமையில்...அண்ணனும் தம்பியும் மட்டும்...)
இராமன்: இலட்சுமணா....அன்று தனிமையில் சீதை உன் கற்பை வார்த்தையால் சுட்டெரித்தாள்! அன்று குனிந்த உன் தலை, அவள் முன்னர் மட்டும் என்றுமே நிமரவில்லை!
அன்று அவள் எரித்த சொற்களை இன்று சரயு நதியில் குளிர்வித்து விடு! வாய்ச்சொல் தலைச்சுமை! அவள் தனியாகச் சுமந்தது போதும்! இனி நானும் அவளும் உன் பெருமையைச் சேர்ந்தே சுமக்கிறோம்!

இலக்குவன்: அண்ணா...இனி நாம் தான் ஒருவருக்கொருவர் பேசப் போவதில்லையே!
உங்கள் திருக்கரத்தை என் நெஞ்சில் வைத்து அமைதி ஆக்குங்கள்! உங்கள் தோளில் சாய்த்துக் கொண்டு நான் ஆறுதல் அடைய வழிகாட்டுங்கள்!

(இலக்குவன் மெள்ள மெள்ள சரயு நதியில் இறங்குகிறான்...விசுவாமித்திரர் சிறு வயதில் கற்றுக் கொடுத்த ஜலயோகம் செய்து மூழ்குகிறான்...இந்திர விமானம் தோன்றுகிறது! நாகத்துக்குப் பகையாம் கருடன், சேஷனைச் சேவித்து வரவேற்கிறான்...வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!)


(ஆங்கே...அயோத்தியின் சபையில்...இராமன் தனிமையில்...)
குளத்தில் இருந்து கரையில் எடுத்துப் போட்ட பின்னர், நீர்ப் பசை உள்ள அளவு தானே மீனும் இருக்கும்! இதோ இன்னும் ஒரு பட்சம் தான்! நாங்களும் சரயு நதிக்குள் யோக நிலையில் மூழ்கப் போகிறோம்!

உழைக்கும்; வெய்து உயிர்க்கும்;
ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான்,
"இலக்குவா! இலக்குவா!" என்று,

அழைக்கும்; தன் கையை
வாயின், மூக்கின் வைத்து அயர்க்கும்;
"ஐயா! பிழைத்தியோ!" ‘என்னும்
மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்.


பெற்றதனால் வந்த பாசம் அன்னை தந்தையர் காட்டுவது - தொட்டு
உற்றதனால் வந்த பாசம் மனைவியர் காட்டுவது! உன்னை நான் பெற்றேனும் இல்லை! தொட்டு உற்றேனும் இல்லை! பின் எதனால் இவ்வளவு ஒட்டுதல்?

மனைவிகளில் நூறு பத்தினிகளைக் காட்டலாம்! உறவுகளில் ஆயிரம் நண்பர்களைக் காட்டலாம்!
ஆனால் உன்னைப் போல் ஒரு தம்பியைக் காட்ட முடியுமா? "அண்ணா" என்ற ஒற்றைச் சொல்லுக்கு உன்னால் அல்லவா உயிர்ப்பு!
நட்பிலும் கற்பைக் காட்டிய காகுத்தா!
நம் இருவர் இடையே உள்ள ஆத்ம உறவை எந்தப் பொருளால் விளக்குவது?

பயந்த தனிமைக் காட்டில், செல்வத்தைத் மறந்து, மனையாளைப் பிரிந்து, தனியே அல்லல் உற்றுக் கிடந்தேன்! அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்!
ஆனால் உயிருக்கு உயிராய் முன் எப்போதை விடவும் தனிமையில் துணை நின்றாய் தம்பீ! என்னை நீ வந்து உற்ற பின்னர் தான், சீரே உயிர்க்கு உயிராய், பாலைவனத்தில் பன்னீராய்த் தித்தித்ததே!
வாராது வந்த நண்பனாய் வந்த தம்பி.......
உன் பேச்சை மீறி, உன்னை அயோத்தியிலேயே விட்டு வந்திருந்தால்? இன்று இந்த அண்ணன் தான் ஏது??
கேளிக்கையில் உடன் இருப்பவனைக் காட்டிலும் கேட்டில் உடன் இருப்பவன் அல்லவா உற்ற தோழமை கொள்வான்!

காரேய் கருணை ராமானுஜா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவார் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்து உற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராய், அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


மற்றவர்களுக்கு எல்லாம் இராமாவதாரத் தத்துவம் என்பது மானுட தத்துவம்! சரணாகதித் தத்துவம்!
ஆனால் என்னைப் பொருத்தவரை இது இராமாவதாரம் இல்லை! இது இலக்ஷ்மணாவதாரம்! இதன் தத்துவம் கைங்கர்ய தத்துவம்!
தன் கடன் அடியேனைத் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே!
தொண்டின் ஆரம்ப நிலை - இறைத் தொண்டு - பகவத் கைங்கர்யம்!
தொண்டின் முழுமை நிலை - அடியார் தொண்டு - பாகவத கைங்கர்யம்!
நன் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

என் இராமாவதார ஆசை இதுவே!
நான் இலக்ஷ்மணனாய் மாற வேண்டும், நீ இராமனாய் ஆக வேண்டும்!
அடுத்து நீயே இராமன்! என் அன்புக்குப் பலன் ராமன்! நீ பல-ராமன்!
உனக்கு ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நான்!

லக்ஷ்மணோ லக்ஷ்மீ சம்பந்ந: செல்வத்துள் செல்வம் கைங்கர்ய லட்சுமி! நானும் திருமகளும் உனக்குக் கைங்கர்யம் செய்து வாழப் போகிறோம்!
இது அவதார முடிவு என்றா நினைத்தாய்? இல்லையில்லை! கிருஷ்ணாவதாரத்துக்கான தோற்றம்! அதை இன்று தான் என் மனதில் சங்கல்பித்தேன்! உறுதி பூண்டேன்!

உலகிற்கு எப்போதும் நீயே இராமனின் அனுஜன்! என் இராமானுஜன்!
இளைய பெருமாள் திருவடிகளே சரணம்!
இலக்குவன் திருவடிகளே சரணம்!!
Read more »

Tuesday, April 29, 2008

பெங்களூர் பதிவர்களா? சென்னைப் பதிவர்களா? - Part 1

வணக்கம் மக்களே!
தாயகப் பயணம் முடிஞ்சி வந்தாப் பிறகு கண்டிப்பா ஒரு பதிவு போடணுமாம்-ல! இந்தப் பதிவின் தலைப்பைப் பாத்துப்போட்டு ஏதோ பட்டிமன்றம்-னு நெனச்சி வந்தீங்கன்னா...
நீங்க நெனச்சி வந்தது சரி தான்! பட்டிமன்றம் தான் இங்கன நடக்கப் போவுது! ஆனா நடுவரா யாரைப் போடலாம்-னு தான் ஒரு சின்னக் கன்பூசன்!

இது மாதிரிச் சூடு பறந்து ஆவியாகிப் பாவியாகிப் போற பட்டிமன்றத்துக்கு எல்லாம் நம்ம கைப்புள்ள தான் எப்பமே நிரந்தர நடுவரு!
ஆனா இப்போ அவரு பெங்களூரு மனைக்கு ஹோகிட்டாரா! அதுனால அவரு தகுதி நீக்கம் செய்யப்பட்டுட்டாரு!
என்ன தான் இருந்தாலும், நடுவர்-ன்னா நடுவுல இருக்கணும்-ல! பெங்களுருக்கும் சென்னைக்கும் நடுவுல இருக்குற ஊரு ஜோலார்பேட்டை தானே? ஜோலார்பேட்டைக் காரவுங்க யாருப்பா? அவிங்களையே நடுவராப் போட்டுறலாம்! என்னா சொல்றீங்க? :-)


சரி...நானு மேட்டருக்கு பர்த்தேனே! ஏப்ரல்-5, 2008...சென்னை காமராசர் உள்நாட்டு வானூர்தி நிலையம்...நம்ம ஆன்மீகப் பதிவரு கேஆரெஸ் தெருப்பாவை பாடிக்கிட்டே கருடா ஏர்பஸ் புடிக்க வராரு! அது என்ன தெருப்பாவை?
சிச்சம் சிறு காலே பெண்களூர் விமானம் ஏறி
மிச்சம் மீதி உள்ள கடலைக்குப் பொருள் கேளாய்!
சொச்சமும் ஜொள்ளி உண்ணும் ப்ளைட்டில் ஏறி நீ
அச்சமும் ஆசையும் கொள்ளாமல் போகாது!


யாகீ கேஆரெஸ்ஸை கிங் பிஷ்ஷர் ப்ளைட்டுலே ஹோகாலிக்க ஹெள்ளிதே?
ஓ அதுவா? கிங் பிஷ்ஷர்-ல தான் நல்ல குயின் பிஷ்ஷர்கள் எல்லாம் இருக்காங்களாம்! சிவப்புக் கலர் தாவணியில சும்மாச் சிலுசிலுக்கறாங்களாம்! அஷ்டே! :-)

நான் வேற 12B-இல் (அட, சீட்டு நம்பர்-ங்க) ஏறி உக்காந்தேனா...நேரம் போவதே தெரியலை! 12B-ன்னாலே ஒரு ராசி தான் இல்ல?
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் பத்து நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

கேஆரெஸ்ஸின் கோணத்தில் - இது என்னா? கோயிலு கொடிமரம்?? :-)

அட, பத்து நிமிசம் தானே பரவாயில்லை! இத்தனை கிங்பிஷ்ஷர் அக்காக்கள் இருக்கும் போது, அங்கிட்டு ப்ளாக் யுனியன் டிடி அக்கா காத்துக்கிட்டு இருந்தா ஒன்னும் கொறைஞ்சிற மாட்டாங்க! :-)
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மேலும் முப்பது நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

அடப் பாவிங்களா! ஒக்க ரன்வேயில் என்னய்யா ஒக்கனேக்கல் பிரச்சனை? யாராச்சும் தண்டவாளத்தில் தலை கொடுக்கும் போராட்டம், ரன்வேயில் ரயில் மறியல் போராட்டம் நடத்துறாங்களா என்ன?
பெங்களூர் போகாதே-ன்னு கோவி அண்ணா அப்பவே சொன்னாரு! டிபிசிடி வேற என்னைய வட்டாள் நாகராஜ் கிட்ட பாசமாப் போட்டுக் கொடுக்கச் சொன்னதெல்லாம் இப்ப பார்த்து ஞாபகம் வருது! ஆதாரம்+தரவு: இதோ!
தானைத் தலைவி டிடி அக்காவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சிட்டு, நான் உண்டு என் கடமை உண்டு-ன்னு "சிவனே"-ன்னு (சைட்டிக்கிட்டு) இருந்தேன்!

ஒரு வழியா ஒக்க ரன்வே பிரச்சனை முடிஞ்சி விமானம் கெளம்பியது!
ஆனா அப்ப யாருக்குத் தான் தெரியும், ஒக்க ரன்வே பிரச்சனை மட்டும் இல்ல, ஒக்க-னேக்கல் பிரச்சனையே தீரப் போகுது-ன்னு? எல்லாம் கேஆரெஸ் பெங்களூருவில் கால் வைக்கும் நேரம்! சாந்தி நிலவுது! சரோஜாவும் நிலவுது! :-)
வெஜ்ஜி சான்ட்விச் வித் மெட்ராஸ் காபி சாப்பிட்டு முடிக்கக்குள்ளாற ஊரு வந்துருச்சி! சிகப்பு ரோஜாக்களுக்குப் பிரியா விடை கொடுத்திட்டு வெளிய வந்தாக்கா..........நம்ம டிடி யக்கா........யக்காஆஆஆ...தம்பீஈஈஈஈ...

"எப்படித் தம்பி இருக்க?"

"எப்பிடிக்கா இருக்கீக? சாரி ப்ளைட் லேட்டு!"

"அலோ இதான் கோட் வோர்டா? நீ தான் கேஆரெஸ்-ன்னு எப்படி நம்புறது? பெங்களூரில் போலிப் பிரச்சனை ஜாஸ்தி...தெரியுமா?"

"யக்கா...இதுக்காக என்னை ஏர்போர்ட் புல் தரையில சாய்ஞ்சி படுத்துக் காட்டச் சொல்லப் போறீங்களா என்ன? வேணாம்க்கா இந்த தண்டனை!"

"அதுக்குத் தான் கடவுச் சொல் கேக்கறேன்...ஒழுங்காச் சொல்லு"

"சர்வேசன்=a+b!"

"கரெக்ட்! இதோ என் கோட் வோர்ட்...வவ்வால்=a+b+c! என்னா சரியா?"

"மார்வலஸ்! அசத்திட்டீங்க அக்கோவ்"

"வாங்க கேஆரெஸ்! பெங்களுருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக! நேத்து வரை பெய்ஞ்சுகிட்டு இருந்த மழை நீங்க வந்ததும் நின்னுருச்சு பாருங்க! வண்டியில் உக்காருங்க! வூட்டுக்குப் போகலாம்!"


வழியில் கொரமங்கலா கடந்தவுடன் என் பழைய பெங்களூரு வாசம் எல்லாம் சுவாசம் வீச...பல விசயங்களைக் கதைத்துக் கொண்டே ஆர்.டி நகர் போய்ச் சேர்ந்தோம். வீட்டில் புதிய சோனி இல்லத் திரையரங்கு! அதில் இன்னிசை ஒலிக்க...அங்கே ப்ளாக் யூனியனின் சுமதி அக்காவும் சேர்ந்து வரவேற்க...
அடடா என்ன பாச மழை! இந்த மழைக்குத் தான் அந்த மழை நின்னுருச்சு போல! சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-)

ஷைலஜாவின் அட்சய மைசூர் பாத்திரம்

ஷைலஜா மைசூர்பாக்கு கொடுப்பாங்களோ மாட்டாங்களோ-ங்கிற (அவ)நம்பிக்கையில், சுமதியே ஆன்மீக அல்வா கிண்டிக்கிட்டு வந்தாங்க! சூப்பரோ சூப்பர்! டிடி அக்கா வீட்டிலேயே மதியச் சாப்பாடு ஒரு வெட்டு வெட்டிட்டு...திரும்பிப் பார்த்தா...
மிஸஸ் Congeniality & மிஸ்டர் அம்பி! கூடவே அவர் தம்பி கணேசன்! அட்ரா சக்கை! இனிய முகமன்கள்!
மாவு அரைச்ச கையோட வெள்ளையும் சொள்ளையுமா வந்திருந்தாரு அம்பி! நமக்கு இந்தப் பதிவர் அம்பியைக் கண்டாலே உள்ளூர ஒரு பயம் தான்!

மாவுக்குப் பதம் கேட்டே நம்மள பதம் பார்த்துடுவாரு! ஜிரா வேற என் சம்பந்தமா ஏதோ இவருக்கு ஏதோ அசைன்மென்ட் கொடுத்திருந்தாரு! ஆனா அது எல்லாமே மாயக் கண்ணன் முன் நிக்குமா என்ன? மாயமா மறைஞ்சு போச்சு! திருமதி& திரு அம்பி மிக அழகான பொம்மை ஒன்றைப் பரிசாகக் கொடுக்க...முருகா முருகான்னு சொல்லிக்கிட்டே பொட்டியைத் தொறந்து பார்த்தா அதுல கண்ணன் சிரிக்கிறான் :-))

ஒரு வழியா எல்லாரும் கும்மிக்கு செட்டில் ஆக... கும்மியடி கர்-நாடகா முழுதும் குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி-ன்னு பாடிக்கிட்டே வந்தாரு நம்ம பாசமிகு மெளலி அண்ணா என்னும் மதுரையம்பதி! அதான் சென்னை உண்ணாவெரதத்துல சத்யராஜ் குலுங்கினது போதாதா? இனி நாங்க வேற என்னாத்த கும்மியில் குலுங்கறது? :-)

குலுங்கி அடித்த கும்மீஸ் இதோ:
* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
* ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
* நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?

- இப்படிப் போன விவாதம்...அப்படியே லால் பாக்குக்குத் தாவியது! மெளலி அண்ணா வண்டியில் கும்மிகள் தொடர....அண்ணா...சேப்புக் கலர் Maruti Swift நல்லாக் கீதுங்கோ!


ஜீவ்ஸ் அண்ணாச்சி பதிவுல கொடுக்கன்னே வளர்க்கும் ஸ்பெசல் செடி! :-)

லால் பாக்கில் உரக்கத் தமிழ் பேச முடியுமா? பதிவர்கள் மாறு வேசம் கட்டிக்கிட்டு தான் மீட் போடணுமா? பேசாம எல்லாரும் அனானியா கலந்துக்கிட்டா என்ன? கன்னட மணம்-னு சொல்லிக்கலாமா? இப்படி ஒரு வித மனப் பிராந்தி, ஜின்னு, ரம்மு-ன்னு லால் பாக் கண்ணாடி இல்லத்தில் அனைவரும் கூட...அங்கே...

* பெங்களூரிலும் ஒரு காமிராக் கவிஞர்! Digital SLR ராயல் ராமு!
* கங்கைக் கரை காமிராக் காட்சி நிபுணர்! எங்கள் சங்கத் தமிழ், சங்கத் தல, சங்க நிதி, அண்ணன் கைப்புள்ள
* மஞ்சள் பட்டு உடுத்தி, மஞ்சள் மைசூர் பாக் வந்திருக்குன்னு குறிப்பாலேயே உணர்த்திய கவிக்குயில் ஷைலஜா
* PIT-இன் founding father...வெண்பாவிற் ஜீவ்ஸேந்தி...அண்ணியார் மற்றும் மழலைப் பதிவருடன்,
* நம்ம நாட்டு நடப்பு அரவிந்தன்
* மெளலி அண்ணாவின் தொலைபேசியில் கொஞ்ச நேரம் கூடல் குமரன்

ராயலின் கோணத்தில் லால் பாக் கண்ணாடி அறை

கேஆரெஸ்ஸின் செல்பேசி சிணுங்கியது...
"அலோ...நான் சிங்கையில் இருந்து குசும்பன் கல்யாணத்துக்காகச் சென்னை வந்திருக்கேன்! நீங்க வந்ததும் வராததுமா சென்னைப் பதிவர்களைக் கூடப் பார்க்காம அப்பிடி என்ன பெங்களூரூக்கு ஓட்டம்? உங்க பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
தமிழுக்கும் தமிழ்ப் பதிவருக்கும் துரோகம் செய்து விட்டு கன்னட வீட்டில் கைகுலுக்கவும் விருந்து சாப்பிடவும் போனீங்களா?"

"ஏங்க...அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லீங்க! நான் மறத் தமிழ் பதிவனுங்கோ! இங்கன இருக்குற எல்லாரும் தமிழ்ப் பதிவரு தானுங்கோ! நாங்களே பயந்து பயந்து லால் பாக்குல மைசூர் பாக்கு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்! நீங்க வேற!"

"மறுபடியும் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
ஏன் தமிழ்நாட்டுல பாக்கு வெளயலையா? பாக்குக்கு கமுகு-ன்னே ஒரு தூய தமிழ்ப் பேரு இருக்கு தெரியுமா? மைசூர் பாக்காம் மைசூர் பாக்கு! ஏன் ஒரு மைலாடுதுறைப் பாக்கு, மதுரைப் பாக்கு-ன்னு சாப்புடறது?"

"ஆகா..."

"என்ன ஓகோ? ஒங்க மேல ஒங்க நண்பர்களே கோவமா இருக்காங்க! லக்கி அண்ணாச்சி, தேசிகன், தேவ் அண்ணாத்த, சிபி, சந்தோஷ், இம்சை அரசி, JK, G3-ன்னு இவிங்க கோபத்துக்கு எல்லாம் அளவே இல்ல!
நீங்க சென்னைக்கு எப்படித் திரும்பி வரீங்கன்னு பார்த்துடலாம்! அப்படியே அங்க இருந்தே பிளைட்டு புடிச்சி நியூயார்க் போய்ச் சேருங்க!"

"அலோ...இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே! யாருங்க நீங்க?"

"அது எதுக்கு உங்களுக்கு? அனானி பவர் தெரியும்-ல?
சரி சரி....அங்க உங்க கூட யாரெல்லாம் இருக்கா? கொஞ்சம் விலகுங்க! யாரும் தெரிய மாட்டங்கிறாங்க! - ம.த.செ.வி"

"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"

"நான் தான் கோவி கண்ணன் பேசறேன்!"
(தொடரும்...)
Read more »

Monday, April 14, 2008

இராமநவமி: அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 1

காவியத்தில் இராமனைப் பிடிக்குமா, இலக்குவனைப் பிடிக்குமா-ன்னு பல பதிவர்களைக் கேட்டுப் பாருங்க! இலக்குவனைத் தான் பிடிக்கும்-னு சொல்லுவாய்ங்க! ஏன் தெரியுமா?
ஹிஹி...இராமனைச் சுத்தமாப் பிடிக்காது! அவர்களைப் பொறுத்தவரை புனித பிம்பம்! Unrealistic:-)
ஆனா இலக்குவன் அப்படியில்லை! கோவக்காரன்! Straightforward! :-)

சரி இலக்குவனைப் பிடிக்கும்-னு சொல்றீங்களே, இலக்குவன் செய்தது போல் நீங்களும் செய்வீங்களா-ன்னு கேட்டுப் பாருங்க! எல்லாரும் ஓடி விடுவோம்!
உடன் பிறந்த பரதனும் சத்ருக்கனனும், உடன் பிறவாத குகனும் சுக்ரீவனும் வீடணனும் எவருக்கும் இராமானுஜன் என்ற பெயர் இல்லை! இளைய பெருமாள் இலக்குவன் ஒருவனுக்கே உண்டு!

எனக்கும் இலக்குவனைத் தான் ரொம்ப பிடிக்கும்! ஆனா மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல! இராமன்+தம்பி = இராம+அனுஜன் = இராமானுசன்!
உலக வழக்கத்தைப் பொறுத்தவரை தாய் என்றால் அது பொம்பளை! தம்பி என்றால் ஆம்பிளை! இப்படிப் பலப்பல உறவுகள்!
ஆனால் உண்மையான உறவு...பாலாலோ, பேராலோ அமைவதில்லை! உள்ளத்தால் அமைவது!
தாய்மையும் தாண்டிய மாறா அன்பு இலக்குவன் கொண்டது! அதைக் கீழ்த்தரப்படுத்தியவர் எவராயினும், அன்னை திருமகளே ஆயினும், அப்பன் பெருமாளே ஆயினும், அவர்களும் அல்லல் உற்றார்கள்!

அண்ணன்-தம்பி உறவு பற்றித் தனியாக ஒரு தொடர் பதிவு வரும்! அப்போ அண்ணன் செஞ்ச தப்பையெல்லாம் ஒவ்வொன்னாப் பட்டியல் போட்டுத் தாக்கலாம்! இன்னிக்கு விட்டுருவோம்! என்ன இருந்தாலும் இன்று பிறந்தநாள் பையன் அல்லவா இராமன்? :-)

இப்ப மேட்டருக்கு வருவோம்! அது என்ன...அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணன் இராமன்? இலக்குவனைக் கொன்றது இராமனா? அடப் பாவி! இராமனைப் புனித பிம்பம்-னு இல்ல எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க! அவனா இந்த அடாத செயலைச் செய்தான்?

இல்லை சேது, இராமர் பாலம்-ன்னு நடக்குற பல விஷயங்களால், இந்த மாதிரி ஒவ்வொன்னா யாராச்சும் கிளப்பி விடுறாங்களா? இப்போ கொலைகாரன் என்ற பட்டம் வேறா இராமனுக்கு? சேது வந்தாலும் வந்தது! சே(த்)து வச்சி வாங்குறாங்களா இராமனை? :-)
இல்லையில்லை! இலக்குவனைக் கொன்றது இராமனே தான்! பாக்கலாம் வாங்க!


ராமாயணத்தின் கடைசிக் கட்டம்! (உத்தர ராமாயணம்) - அவதாரம் முடியப் போகும் கால கட்டம்!
மனிதனாகப் பிறந்த இறைவன், சராசரி மனிதனாகவே வாழ்கிறான்! தான் செய்த பாவங்களின் பழியை எல்லாம் ஒளிக்காது மறைக்காது அடுத்த பிறவிக்கும் சேர்த்தே சுமக்கிறான்! அபார தெய்வ சக்தியை எல்லாம் எதுவும் காட்டவில்லை!

அதான் அவதார நோக்கம் நிறைவேறி விட்டதே! இன்னும் திரும்பி வராமல் இருக்கிறானே! தூக்கம் கலைந்தால் விழிப்பு தன்னால் வரவேண்டுமே! அது தானே உயிரின் இயக்கம்! இன்னும் இராமன் விழித்த பாடில்லையே! தான் இறைவன் என்று அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ? - இப்படி ஒரு சந்தேகம் வானுலகத்தினருக்கு! இராமனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி வருமாறு யமனை அனுப்புகிறார்கள்! அவனும் பழுத்த துறவி போல் வேடம் இட்டுக் கொண்டு அயோத்தி நகருக்குள் வருகிறான்!

அயோத்தியின் அரண்மனைக்குள் நுழைந்ததும், சங்கை முழங்குகிறான்!
அதி முக்கியமான தேவ ரகசியத்தை அரசனிடம் "மட்டும்" தனியாகப் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்! தம்பிமார்கள், அமைச்சர்கள் கூட இருக்கக் கூடாதாம்! சேதி இராமனின் காதுக்கு வருகிறது! புன்முறுவல் பூக்கிறான் இராகவன்.
"இலக்குவா, நீயே சென்று நம் வெளிவாயிலில் காவல் இரு! இந்த அறைக்குள் வேறு எவரும் நுழைய வேண்டாம்! சேவகர்களும் எல்லாரும் வெளியேறி விடுங்கள்!"

இலக்குவனுக்கு எப்பவுமே சந்தேகம் தான்! இராமனை மீதைத் தவிர!
"அண்ணா, அத்தனை பேரும் வெளியேறிவிட்டு, நீங்கள் மட்டும் முன்பின் தெரியாத ஒரு துறவியிடம் உரையாடுவது எனக்குச் சற்று அச்சமாகவே இருக்கிறது! அதான் முன்பே ஒரு முறை பட்டோமே! அது தெரிந்தும் இப்படி வலியச் சென்று முன்பின் தெரியாதவர்களிடம் அன்பு காட்டுகிறீர்களே! இதெல்லாம் தேவையா?
வேண்டுமானால் உள்வாயிலில் காவல் இருக்கிறேன்! நீங்கள் கூப்பிட்ட கணத்தில் ஓடி வரும் தொலைவில் இருப்பது தான் முறை!"


யமன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான்!
("அடேயப்பா! இராமனைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பது இவன் தானோ? இருக்கட்டும் இருக்கட்டும்! இவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்ளலாம்!")

"ஐயா, இது பரம தேவ ரகசியம்! அதனால் தான் சொல்கிறேன். எவரும் அறியாமல் கூட கேட்டுவிடக் கூடாது! எனக்கு ஒரு வாக்குறுதி கொடுங்கள். நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, யாரும் உள்ளே வரக் கூடாது! அரசாங்கம் சார்பாக யாரும் ஒற்றுக் கேட்கவும் கூடாது! அப்படியே காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!"

இராமனுக்குச் சிரிப்பு வருகிறது!
"அடேயப்பா...இவ்வளவு பீடிகையா! என் தம்பிக்குத் தெரியாத ஏதும் எனக்கும் தெரிய வேண்டாம் என்று நான் பொதுவாக இருந்து விடுவேன்! ஆனால் தேவ ரகசியம் என்று சொல்வதால்....
சரி, அப்படியே ஆகட்டும்! லக்ஷ்மணா, காவல் பலமாக இருக்கட்டும்! உள்வாயிலில் உளவாய் நீ!"

அண்ணன் ஆணையைச் சிரமேற் கொண்ட தம்பி, உள்வாயிலில் காவலுக்கு நிற்கிறான்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் இலக்குவப் பெருமாளுக்கு இடக்கண் துடிக்கிறது...இடுக்கண் அழைக்கிறது!
என்னமோ நிகழப் போகிறது! அனைவரும் வெளியேறிவிட, கொலு மண்டபத்தில் பேச்சு மூச்சு இல்லை!

யமன் வந்த வேலையைத் துவக்குகிறான்.
"பெருமாளே! இது என்ன கொடுமை! உம்மை அறியாமல் நீரே இப்படி வாளா இருப்பதா?
அவதார நோக்கம் தான் பூர்த்தியாகி விட்டதே! மீண்டும் வைகுந்தம் ஏகுங்கள்! இதைச் சொல்லத் தான் சிவபெருமானே அடியேனை அனுப்பி உள்ளார்!
மனித உயிர்களைக் கவர்பவன் நான்! தர்மராஜன்! அதே பொறுப்போடு மனிதனாய் இருக்கும் உமக்கும் சொல்கிறேன்! உமது காலம் முடியப் போகிறது! உம்...கிளம்புங்கள்!"

"யமதர்மரே, வணக்கம்!
என் முடிவினை அந்தரங்கமாக அறிவித்து உங்கள் கடமையைச் செய்து விட்டீர்கள்!
எனக்கும் எந்த ஆசையும் பெரிதாக இல்லை! என் சீதையும் என்னை விட்டுப் போய் விட்டாள்! உலகத்துக்காக உத்தமியின் இதயத்தை ஒரு நாள் நோகடித்தேன்! அவளுடன் என் திரு நாள் சென்று விட்டது!
ஏழ் இரண்டு ஆண்டு யான் போய் எரி வனத்து இருக்க என்றேன்
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடந் தோள் வீர, பார்த்திலை போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறை இன்பம் என்னோ?

அவள் இல்லாமல் தனியாக எனக்கு இன்பங்கள் எதுவும் தேவை இல்லை! அரச பொறுப்பில் உள்ளவர்கள் மண்மகளையும் பற்றி, குடும்பத்தின் திருமகளையும் பற்றினால் என் போன்ற நிலைக்குத் தான் ஆளாவர்கள் போலும்!
நான் ஒதுக்கினாலும் என்னை ஒதுக்காத அன்புச் செல்வம் சீதை; அவளை மேலுலகிலாவது சந்திக்கிறேன்! புறப்படலாமா?
அதற்கு முன் என்னுயிர்த் தம்பியிடம் மட்டும் ஒரே ஒரு வார்த்தை!......"



அழைக்கவே இல்லை! அதற்குள் "அண்ணா....அண்ணா....." என்று இலக்குவன் காவலை விட்டு ஓடோடி வருகிறான்!

"அண்ணா, துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்துள்ளார்! நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், உங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்! அவரிடம் நீங்கள் அந்தரங்கப் பேச்சு வார்த்தையில் இருப்பதாகச் சொல்லிச் சற்று நேரம் காக்கச் சொன்னேன்! அயோத்தியையே சபித்து விடுவதாக மிரட்டி உள்ளே நுழையப் பார்க்கிறார்!"

"ஆகா, என்ன காரியம் செய்தாய் லக்ஷ்மணா? அயோத்தியின் சீருக்கு ஊறா? அயோத்திக்காக அல்லவா என் அன்னத்தையும் அனைத்தையும் இழந்தேன்! பொதுவுடைமையைப் பற்ற தனியுடைமையை விற்றேன்! இப்போது முனிவர் எங்கே இருக்கிறார், சொல்?"

"நீங்கள் தேவ ரகசியம் பேசும் போது குறுக்கே நுழைவார் முனிவர்! கொடுத்த வாக்கின் படி அவரை உங்களால் கொல்ல முடியுமா? மகரிஷிக்கு மரண தண்டனையா? அதைச் சொல்லத் தான் ஓடோடி வந்தேன் அண்ணா! முனிவர் வந்து கொண்டே இருக்கிறார்! இவரைச் சீக்கிரம் பேசி அனுப்பி விடுங்கள்!!"

யமன்: "அட! என்னை அனுப்புவது இருக்கட்டும் இராமா! தேவ ரகசியம் பேசும் போது அத்து மீறி வந்த இலக்குவன் இவன்! முதலில் இவனை அனுப்பு!
என்ன பார்க்கிறாய்? கொடுத்த வாக்கின் படி முதலில் இவனுக்கு மரண தண்டனையை விதிப்பாய் இராகவா!"

இராமன்: "ஆகா...என்ன சொல்கிறீர்கள்!
இலக்குவன் என் காவலன்! அயோத்தியின் கோவலன்! அவனைக் கொல்வதா? என்ன குற்றம் செய்தான் அவன்? துர்வாசருக்கு முன்னால் வெறும் சேதி அல்லவா கொண்டு வந்தான் இளையவன்?"

யமன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் இன்னும் ரகசியத்தை முழுமையாகச் சொல்லவில்லை! அதற்குள் அத்து மீறி வந்தான் உன் தம்பி!
காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?"
(தொடரும்...)
Read more »

Wednesday, April 09, 2008

PIT போட்டிக்கு அல்ல! ராயல் ராமின் "தனிமை"!

மக்களே! ரொம்ப நாளா PIT போட்டியில கலந்துக்கணும்-னு நெனச்சிக்கிட்டு இருந்தேனா? கடந்த வாரயிறுதியில் பெங்களூர் பதிவர் சந்திப்புக்குப் போனேனா? அங்கிட்டு ஒரு ஷாட்!
அட நம்ம சங்கத்தின் நிரந்தரச் சிங்கத்தைப் பாருங்க! இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல!

PIT-இன் இந்த மாதத் தலைப்பு ஏதோ "தனிமை" யாம்-ல!
சிங்கம் இப்படித் "தனிமை"யில இருக்குறத பார்த்து, எனக்கு ரத்தக் கண்ணீரே வந்துருச்சி! வாடிய புலியைக் கண்ட போதெல்லாம் வாடினேன்! ஓடிய சிங்கத்தைக் கண்ட போதெல்லாம் ஓடினேன்!
நீங்களே பாருங்க மக்கா, ராயலின் தனிமையும் ஏக்கத்தையும்! :-(

ராயலுக்கு என்ன ஒரு ஏக்கம்! என்ன ஒரு பார்வை! என்ன ஒரு தவிப்பு! என்ன ஒரு சலிப்பு!
இதைப் பார்த்துவிட்டு நீங்க சும்மா போக மாட்டீங்களே? அதுக்கு ஒங்க மனச்சாட்சி எடம் கொடுக்காதே? ராயலுக்கு உதவிக் கரம் நீட்ட துடிக்குமே! தலைக்குள்ளாற ஆயிரம் சிவகாசி பட்டாசு வெடிக்குமே?

அந்தச் சேப்புச் சொக்காக்காரன் மட்டும் பெஞ்சில் ஒக்காந்துக்கிட்டு் ஜாலியா இருக்க,
எங்கள் தங்கம், சங்கத்தின் சிங்கம், நம்ம ராயலு தரையில் உட்கார்ந்து தவிப்பதும் தகுமோ? முறைப்பதும் முறையோ?
ராயலுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க! என்ன செய்யணுமோ செய்யுங்க!

தனிமையிலே ராமைக் காண முடியுமா?
லால்-பாக்கினிலே லவ்வு செய்யத் தெரியுமா? ஓஓஓ :-))


(பிற்சேர்க்கை:
பதிவில் அவையடக்கம் கருதிக் கீழ்க்கண்ட படத்தை முதலில் வெளியிட மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!
ஆனா புலிப் பால் கறந்த சபரிமலை PIT நிபுணரு, சிங்கப் பாலையும் கறந்தே ஆகணும்-னு கனவுல அருள் வந்து ஆடுனாரா? அதான்...கீழ்க்கண்ட படம்...ஹே ராம்!

பாவம், எங்க ராயலு நல்லவரு! ரொம்பவே கும்மிறாதீங்க மக்கா! :-)))

அடுத்து எதிர்பாருங்கள்...."ராமின் ரூமு" - ராயலின் பேச்சிலர் அறை பற்றிய ஒரு வரலாற்றுப் புதினத் தொடர்!


(அட! பெங்களூர் சந்திப்பு - பதிவு இன்னும் போடலை! அதுக்குள்ளாற அடுத்துடுத்து சென்னைச் சந்திப்புகள்! இப்ப தான் பிக்காசாவுல படம் எல்லாம் போஸ்ட் ப்ரொடக்சன் பண்ணிக்கிட்டு இருந்தேனா! இந்தப் படத்தைப் பார்த்ததும் அப்படியே பத்திகிச்சி! :-) அதான் அடுத்த பதிவு போடுறத்துக்குள்ளாற...
ச்சும்மா ஒரு Fill in the Blank...I mean, Fill in the Blog...என்சாய் மாடி!)
Read more »

Thursday, April 03, 2008

வடபழனி சென்றேன்! ஜிராவிடம் தோற்றேன்!

அதாச்சும் சில பேருக்கு "வட"-ன்னு சொன்னாலே கோவம் பொத்துக்கிட்டு வரும்! ஆனா அதை மாற்றி அருள நினைத்தான் போலும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்!
"வட" பழனிக்கு வா-ன்னு உத்தரவு போட்டான்! வடபழனி சென்றேன்! ராகவனிடம் தோற்றேன்! :))
திருமலைக்குச் செல்லும் போதெல்லாம்..
திருவேங்கடமுடையானை ஒரு முறை பார்த்தால் மட்டும் என் ஏக்கம் தீராது! குறைஞ்சது ரெண்டு மூனு தரிசனம்; அப்பத் தான் ஏக்கம் ஓரளவுக்காச்சும் தீரும்!
அது போல என் இனிய நண்பன் ராகவனை இந்த முறை சென்னையில் நாலைஞ்சு முறை தரிசனம் பண்ணியாச்! :-)

போதும் போதும் என்று ஓதும் வரை,
காதும் காதும் வைத்தாற் போலே,
தீதும் தீதும் தீர்ந்தே போக,
சேர்தும் சேர்தும் என்று அடியேனைச்
சேயோன் சேவடியில் சேர்த்திட்டான் ஜிரா!

வடபழனி போகலாம் வாரீங்களா,
அம்மா அப்பாவும் கூட வாராங்க-ன்னு ஜிரா கேட்க,
ஜீரா பேச்சை மீறா வண்ணம், தீரா நின்றேன்!

டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்?
முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?
பஞ்சாமிர்த சுவையானைச் சுவைக்க ஓடினேன் வடபழனி!
வாயிலோ திருப்புகழ் தென்பழனி!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
முதலில் ஜிரா பெற்றோர் தரிசனம்! அவர்களின் அன்புக் கரிசனம்!

அதன் பின்னர் கரிசனத் தலைவன் கரிமுகன் பிள்ளையாரப்பன் தரிசனம்! தலையில் குட்டிக் கொண்டேன்!
ரவிக்கு "வைணவ மாயை" நீக்கி நல்ல புத்தி கொடுப்பா-ன்னு வேண்டிக்கிட்டு ஜிரா நடையைக் கட்டினாரு! தொடையைத் தட்டினாரு! :-)

ஆலய வரிசைக்குள் நுழையும் முன்னர் ஒரு சிறு நெருடல்! (சிறப்புத் தரிசன வழி...பிறகு சொல்கிறேன்)!
ஆனால் அது பட்டென்று மறைந்து உடனே அன்பின் வருடல்! உள்ளம் திருடல்!

என்ன தான் எந்தை-திருமால், அப்பாவின் பொண்ணு-ன்னாலும், அப்பா திருமால் பெருமையே பேசிக்கிட்டாலும்,
முன்னாலே அத்தான் முருகன் நிக்கும் போது என்ன நடக்கும்???:)
பிறந்த மேனியாய் நிற்கும் உலக ஆணழகனைக் கண்டால்???:))
ஆமாம்!
அந்த முருகு ஆண், பிறந்த திருமேனியாய், திறந்த கோலத்தில்,
ஒற்றைக் கோவணம், ஒய்யார இடுப்பு,
அதில் ஓங்கிக் கை வைத்து,
கள்ளச் சிரிப்பழகாய்ப் பழிப்பழகு காட்டி...

என் பெம்மான் என் முன்னே!
= "வெவ்வவ் வெவ்வே"

அவனைப் பார்த்தவுடன் கும்பிட மாட்டேன்; இதான் எனக்கு வரும்:)
இதை மோப்பம் பிடித்து விட்ட ஜிரா..
என்னைப் பார்த்து, "ஏய், வக்கணம் காட்டுறதை முதலில் நிறுத்து"-ன்னாரு:)


உச்சி கால வேளை அல்லவா? திருமுழுக்கு (அபிஷேகம்) நடைபெறப் போகுது போல! அதான் அத்தனை உடையும் களைந்துள்ளான்!

இன்று பார்த்து எங்களுக்காகவே கூட்டமும் அதிகம் இல்லை! ஒண்டியாய்க் கண்டோம் ஆண்டியை!

விண்மீன் வாரத்தில் "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்று அடியேன் இட்ட பதிவுக்கு, 
மற்ற பதிவர்களைப் போலவே ஒண்டிக்கு ஒண்டி ஆட நினைத்தானோ என்னவோ அந்த ஆண்டி? :-)

ராகவனார், அன்பராயும் வன்பராயும் மாறி மாறி மாறினாரு! 
பதிவுச் சீண்டலைச் செல்லமாய்ச் சீண்டியபடி வந்தாரு! அதனால் எனக்குச் சற்றே தயக்கம்! மெல்ல மெல்லத் தான் கால் பதித்தேன்!

கந்தனைக் கண்ட மாத்திரத்தில், எப்போதும் எனக்கு முருகாஆஆஆ என்று வாயும் மூச்சும் சேர்ந்தே முணுமுணுக்கும்! 
அந்த முணுமுணுப்பைக் கண்டான். முறுவல் பூ பூத்தான்!
வாடும் என் முகம் கண்டு, 
"வாடா" என்றழைத்தான் 
அந்த வாடாப் பழனியான்! வட பழனியான்!
அவ்வளவு தான்! இனி என்ன தயக்கம்? கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலே, உடனே ஒட்டிக் கொண்டேன் அவனிடம்!

எனக்கு முன்னால் இருந்தவர் சற்று உயரம் போல! 
(ஜிரா அல்ல! ஜிரா என்னைய விடக் குள்ளக் கத்திரிக்கா:-)))) 
மேலும் ஜிரா நண்பர் ஆகையால் எனக்கு மிக நெருக்கமாக நின்றார்)

முன்னிருந்த பக்தரின் உயரத்தால் அவனின் திருவுருவை, பாதாதி கேசம், முழுசாய்க் காண முடியவில்லை!
* எக்கி எக்கி நின்றேன்!
= "என்ன ஆணவம்? முருகனை விட நீ உயரம் காட்டுகிறாயா ரவி?" என்றார் ஜிரா!
* சொக்கிச் சொக்கி நின்றேன்!
= "சொக்கன் மகனைச் சொந்தம் கொண்டாடிக்கப் பாக்குறியா கேஆரெஸ்?" என்றார் ஜிரா!

ஜிராவைப் பார்த்து நான் சிரிக்க, அவர் என்னைப் பார்த்துச் சிரிக்க, செங்கோடன் எங்கள் இருவரையும் பார்த்துச் சிரியோ சிரியெனச் சிரித்தான்! 
இந்தச் சிரிப்பலையில் பிரிப்பலை சிறிதும் இல்லை என்று உரைத்தான்!


அர்ச்சகர் திருக்குடம் (பூர்ண கும்பம்) ஏந்தி வர..
தொடங்கியது திருமுழுக்கு!

எண்ணெய்க் காப்பு! உடனே தீப ஆராதனை! ஏனோ அவசரம் அவசரமாகச் செய்தார்கள்! ஆனால் அழகில் லயிக்கும் போது அழுக்கா தெரியும்? 
"எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்" என்பதல்லவா ஐயன் வள்ளுவன் வாக்கு?

வடபழனி ஆண்டவர், பழனி மூலவர் போலவே அப்படி ஒரு அமைப்பு!
(நவபாஷாணம் மட்டும் தான் இல்லை)! 
வேல் கைகளில் இல்லை! தோளில் சார்த்தப்பட்டு இருக்கு! 
வலக்கையில் யோக தண்டம்! இடக்கையோ இடுப்படியில்!
* இடுப்போ அதி பயங்கர வளைவு = அத்தனை கவர்ச்சி நடிகைகளும் பிச்சை வாங்க வேண்டும் இந்த ஆண்டியின் இடுப்பு பெற!
* திண் புயத்து மார்பு = அத்தனை ஆர்க்குட் நடிகர்களும் பிச்சை வாங்க வேண்டும் இந்த மாரனின் மார்பு பெற!

அய்யன் முருகன் பேசினான்:
"இதே போல் எக்கி எக்கிப் பார்த்து தானே பதிவிலும் உண்மையை உரைத்தாய்! தான் தோன்றித் தனமாய் நீ ஏதும் சொல்லவில்லையே!
தொல்காப்பியம் தமிழின் நல்காப்பியம் அல்லவா? அதிலிருந்து சொன்ன உனக்கு இப்போ சன்னிதியில் மட்டும் வீண் தயக்கம் ஏன்?

எனக்கு மலை என்றால், மாமனுக்குக் காடு! = காடில்லாமல் ஒரு மலையுண்டோ? 
மலை இறங்கி வந்தல்லவா மாமனிடம் பெண் கேட்டேன்! தாய் மாமன் = தாயும் மாமனும் ஒன்றாய் அமைந்த இது தோழமை உறவல்லவா? "


எண்ணெய்க் காப்பு முடிந்த உடனே சந்தன முழுக்கு! 
நெற்றிக்குப் பொட்டிட்டு..
நேத்ரானந்த தீப சேவை (கண்ணழகுச் சுடரொளிச் சேவை)! 
மந்திர உபாசனை!
"முல்லையின் மணம் குறிஞ்சியில் வீசக்கூடாதுன்னு யார் தடை போட முடியும்? முல்லையின் ஆயர்கள் கறந்த பால் அல்லவா எனக்குத் திருமுழுக்கு! அந்த அன்-பால் முழுகுகின்றவன் தானே நான்?

எங்கள் உறவுக்கு வட கதை இல்லை! 
ஆனால் தமிழ் விதை உண்டு தானே ரவி?

வடபுலத்தில் எங்கள் உறவு தெரியவில்லை! 
அதனால் இங்கவர்க்கும் எங்கள் உறவு புரியவில்லை! 
ஆனால் இயற்கை வழிபாடு அதுவல்லவே!
* காடும் மலையும் தமிழ் நிலங்கள்!
* நானும் மாலும் தமிழ் இறைகள்!

அதைத் தானே சொன்னாய்? 
தயங்காமல் சொன்ன உனக்குத் தருவேன் நூறு முத்தம்" 
-என்று முத்தைத் தரு பத்தித் திரு நகையால் என் முருகன் புன்னகை பூத்தான்!

களைந்து பஞ்சாமிர்த முழுக்கு! 
தேனுடம்பில் தேன் வழிந்து ஓடியதே! 
பொட்டிட்டு இந்த முறை..
புஜங்க தீப சேவை (தோளழகுச் சுடரொளிச் சேவை)!


மற்றவர் என் பிளாக்கர் பதிவை மட்டுமே கண்டார்! உற்றவன் என் உள்ளப் பதிவைக் கண்டான்!
மற்றவர் கோள் கண்டார் கோளே கண்டார்! நண்பர்கள் தோள் கண்டோம் தோளே கண்டோம்!

தங்கள் ஆயுதங்களுக்கு முதலில் நெய் பூசி விட்டு, பின்னரே தமக்கு எண்ணெய் பூசிக் கொள்வது மறவர் வழக்கம்!
அதே போல், வேலுக்கு தான் முதலில் முழுக்காட்டப்படுகிறது! பின்பு தான் முருகனுக்கு!
திருமலையில் சக்கரப் படைக்கும் இவ்வாறே செய்து விட்டு, பின்னரே இறைவனுக்கு முழுக்காட்டுகிறார்கள்!

ஆவின் பால் முழுக்கு!
உடனே ஆவின் தயிர் முழுக்கு!
உடனே பன்னீர் முழுக்கு!

உடனே திரை!

நிமிடங்களில் அந்த அழகை மின்னலாய்த் தோன்றி மறைத்து விட்டார்களோ?


திரையிட்ட பின் என் நண்பனும் நானும் பேசிய சென்சார் பேச்சுகளை, அவரே வந்து சொல்லுவார்! :-)
திரை விலகல் ஆகாதா? தெர தீயக ராதா?
இதோ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, திரை விலகியது! கரை விளங்கியது!
அடுக்கு தீபம் சுற்றிச் சுற்றி ஆடுகிறது!

சந்தனக் காப்பில் சரவணன் ஜொலிக்கிறான்!
ராஜ அலங்காரம்!
திருமுடி மாலை, தோள் மாலை, இடைமாலை சூடி நிற்கிறான் அழகன்!

கண் மை வரையப்பட்டுக், 
கன்னத்தில் கருஞ்சாந்துப் பொட்டிட்டுக்,
காலடிகள் சதங்கையிட்டு, 
தீபத் தட்டு திருமேனியெங்கும் சுழலச் சுழலக்....

கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!


"அரோகரா" என்ற கோஷம் அடியவர்கள் ஒலிக்க, 
ஓதுவா மூர்த்தி ஒரு ஓரத்தில் இருந்து...
"விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்" என்று பாட...
ராகவனும் நானும் கரைந்தோம்! கந்தனில் உறைந்தோம்!

உட்பிரகாரம் வலம் வந்து, அபிஷேகத் தொட்டித் தீர்த்தம் எடுத்து ஜிராவின் கையில் கொடுத்தேன். 
வீரபாகு சந்நிதி கடந்து, நால்வரையும், அப்பன் சொக்கனையும், அன்னை மீனாட்சியையும் கண்டோம்!

உற்சவ மூர்த்தியின் கண்ணாடி அறையில் வள்ளி-தேவயானையுடன் சண்முகப் பெருமான் ஜொலிக்க, 
அங்கு (எனக்காகவே போலும்) முருகன் சன்னிதியில் தீர்த்தம் கூடத் தருகிறார்கள்! :-)

வெளி வலத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முருகனைப் பார்த்தவாறு சந்நிதி கொண்டுள்ளார்! 
ஆனா ஜிரா வராததால், நானும் செல்லவில்லை:)
ஆனா "நைசா" மனத்தில் இருந்தே அவரைச் சேவித்தேன்!:) "மனசால போன தானே?" -ன்னு அதையும் துல்லியமாக் கண்டுபுடிச்சிக் கேட்டாரு தோழரு:))

வெளி வலத்தில் சித்தர் சன்னிதியும், அதை ஒட்டிய தியான மண்டபமும் உள்ளது.
சுமார் நூறு ஆண்டுக்கு முன்னால் அண்ணாசாமித் தம்பிரான், அவர் நண்பர் ரத்னசாமித் தம்பிரான் அவர்களின் முயற்சியாலும் அருள்வாக்காலும் வடபழனி ஆலயம் தோற்றம் பெற்றது.

ஆனால் முழுமை பெறும் முன்பே அவர்கள் மறைந்து விட..
வாரியார் சுவாமிகள் திருப்பணிகளை முன்னின்று முடித்து வைத்தார். இவர்களின் சன்னதியே இந்தச் சித்தர் சன்னிதி!

அருணகிரி சன்னிதியை ஒட்டி பிரசாதம் சுடச்சுடத் தரப்பட, அனைவரும் இலையில் உண்டு, அமைதியாகக் கிளம்பினோம்!
பின்னர் வடபழனி சரவண பவனில் எங்க எல்லாருக்கு மதிய உணவை ஜிரா வாங்கித் தந்தாரு!

கேசரி அவர் மட்டும் ஒரு பிளேட்டு எக்ஸ்ட்ரா சாப்பிட்டாரு! எனக்குத் தரவே இல்லை! :-)


புகைப்பட வைபவம் எல்லாம் முடிந்து,
சரவண பவ என்னும் திருவாறெழுத்தின் (சடாட்சரம்) பொருள் என்ன ராகவா? என்று கேட்டேன்!

மாதவச் சிரிப்பே பதிலாய் வந்தது! பாசமும் தந்தது!


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! - மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்! - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
!
Read more »

பெங்களூரு! பதிவரு! சந்திப்பு! ஆன்மீகம் அல்ல! பெண்மீகம் பேச!

அட சத்தியமா நம்புங்க தல! நம்புங்க!
இந்த வாரயிறுதி பெங்களூர் வாரான் ஒருத்தன்! நிராயுதபாணியா வேற வாரான்! பெண்களூரில் பெண்மீகம் பேச! :-))
நல்ல சான்ஸ்! பல நாள் கணக்கைத் தீர்த்துக்கலாம்!
என்னா சொல்றீங்க? :-))

*இப்போதைக்கு நம்ம பிளாக் யூனியன் டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க! தலைமை தாங்குவாங்களா, தலையை வாங்குவாங்களா? கரீட்டாச் சொல்லுங்க பார்ப்போம்!
*பெங்களூரம்பதி ச்ச்ச்சே மதுரையம்பதி அண்ணா தான் சந்திப்பு சாக்ரடீஸ்!
*ராயல் ராம் மீல்ஸூக்கு பிரம்ம கூழு ஊத்தறேன்னு வாக்கு கொடுத்துருக்காரு!

*நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி, அத்தினி பேரையும் பொகைப்படத்துல புகை போடறதா சொல்லி இருக்காரு!
*அம்பி, கணேசன் வில் வித்தைப் போட்டி, நிகழ்ச்சியின் ஸ்பெசல்
*வேதாக்கா மீட்டிங்கை வேதா-ளத்தில் இல்லீன்னா பாதாளத்தில் வச்சிக்கலாம்-னு சொல்லி இருக்காக

*நம்ம கவிதாயினி ஷைலஜா அவர்களின் நான் ஸ்டாப் இன்னிசைக் கச்சேரி தான் போனஸ்!

*சிவமுருகன் காளைக்கு ஒடம்பு சரியில்லைன்னு மயில் மேல் வரதா சொல்லி இருக்காரு!
*மோகன்தாஸ் "சித்திரம் பேசுதடி"-ன்னு பாட்டு வரையப் போறாராம்!
*தலைவர் தேசிகன் சென்னைப் பயணத்தைப் பொறுத்து அருள்வாக்கு கொடுப்பாரு!

***என்றும் போல் இன்றும், தி ஒன்லி தல ஆப் சங்கம், செவ்வாழைச் சித்தப்பு, நம்ம கைப்புள்ள, தேசிய கீதம் பாடி நிகழ்ச்சிய முடிச்சிப் போடுவாரு!

சிவப்பு பாக்கில் (லால் பாக்கில்), வெத்தலை (மொக்கை) போடலாம்னு இப்போதைக்குத் திட்டம்!
நாள்: சனிக்கிழமை ஏப்ரல்-5
நேரம்: மாலை 03:00
நட்சத்திரம்: அதைத் தமிழ்மணம் பாத்துக்குவாங்க!
பொருள்: (அட ஏதாச்சும் ஒரு கருப்பொருள் இல்லாம எப்படிப் பதிவெழுதறதாம்?) 2008-இல் திருமணம் ஆகும் பதிவர்கள்!

சரி,
பல பேரு என் லிஸ்ட்டில் விட்டுப் போச்சு!
பின்னூட்டத்தில் சொல்லி ஜோதியில் சேர்ந்தீங்கன்னா, கும்மி சந்திப்பிலும் களை கட்டும்!
வர்ட்டா :-)))
Read more »

Monday, March 24, 2008

KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!

புதுசா ஜொலிக்கும் விண்மீனுக்கு என் வாழ்த்துக்கள்! (இதை எழுதும் போது பேர் சொல்லி வாழ்த்த அவரு யாருன்னு தெரியலை)
விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!

ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.
மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப் செஞ்சிடலாம்! (இப்படிச் சொல்வதாலயே நீங்கள் ஸ்கிப் செய்யப் போவதில்லை என்பது தனிக்கதை!:-)
நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே?

பொதுவா நான் பதிவுலக அரசியல், பின்னூட்ட விளையாட்டுகளில் அதிகம் புழங்காதவன். ஆனால் இந்த வாரம், வரிசையாக இரண்டு மூன்று இடுகைகளில் அடியேன் பொங்கியது எனக்கே தெரியும்! பலருக்கு வியப்பும், சிலருக்கு நட்சத்திர வார ஆணவமோ என்றும் தோன்றி இருக்கலாம்! நெருங்கிப் பழகுபவர்களுக்கு அப்படி இல்லைன்னு நல்லாத் தெரியும்! ஆனால் எனக்குத் தோன்றியது என்னான்னா...

* எதிர்பார்ப்புகளை அடியேன் மேல் சில நல்லன்பர்கள் அதிகம் வளர்த்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்குப் பிடித்தமானதை எல்லாம் நானும் சுமக்க வேண்டும் என்ற அதீத ஆவல்!

* உங்கள் தமிழ் நடையில் முருகனைப் பாடுங்களேன், திருவண்ணாமலை பற்றி எழுதுங்களேன்-னு நேயர் விருப்பங்கள் தருவது தவறே இல்லை!
ஆனால் அப்படி விருப்பமாய்த் தாராமல், அதைப் பற்றியே எழுதுகிறாயே, ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, அவனுக்குக் குடை பிடிக்கிறாயே, ஏன் இவருக்குப் பிடித்தால் குறைந்து விடுவாயா என்னும் சட்டாம்பிள்ளை போக்கு நலம் பயக்காது!

* நான் இணையத்தில் படித்து விட்டு, அதைப் பதிவு போடும் சுபாவம் உள்ள பையன் இல்லை! ஆன்மீக விஷயத்தில் மட்டும் உள்-வாங்காமல் (Internalizing) அவ்வளவு சீக்கிரம் எழுதவே மாட்டேன்! இதனால் தான் சில சமயங்களில், வெட்டிப்பயல், "எப்பமே லயிச்சி எழுதுவது போல் இன்னிக்கி எழுதல போல இருக்கே"-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுவாரு!

வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்!

முருகனருள் வலைப்பூவில், என் குலதெய்வம் முருகப்பெருமான் மேல் ஆறு நாளும் சஷ்டிப் பதிவு போடுறேன். ரத்னேஷ் ஐயா போன்றவர்கள் படிச்சிட்டு, திருச்செந்தூருக்கு நேராப் போனாக் கூட இப்படித் தரிசனம் கிடைக்குமாத் தெரியாது-ன்னு சிலாகித்துச் சொல்றாங்க!
அவங்க ஜிராவை இப்படிச் சொன்னாக் கூட அர்த்தம் இருக்கு! ஆனா அவிங்க என்னைத் தான் சொல்லுறாங்க! என் ஆதங்கம் என்னான்னா, எதிர் தரப்பில் இருப்பவருக்கும் தெரியும் போது, நம் தரப்பில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளாது சொல்லாடுவது தான் வேதனை தருகிறது!

முருகப்பெருமான், சிவபெருமான், அம்பாள், பிள்ளையார், சண்டேஸ்வரர், திருவாரூர், தில்லைக்களி, நாட்டார் தெய்வ மாரியம்மன், அவ்வளவு ஏன்,
கிறிஸ்துமஸ் அன்று இயேசு பிரான்
இப்படிப் பதிவிட்டது எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! எத்துணை ஆன்மீக அன்பர்கள் இயேசுபிரான் மீது பதிவிட்டு உள்ளீர்கள்?

எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! இல்லை மற்ற தெய்வங்கள் மீது இடப்படும் உங்கள் பதிவுக்கு எல்லாம் அடியேன் பின்னூட்டியது இல்லையா? கீதாம்மாவைத் தில்லைக் கொடிக்கவி வரலாற்றை ஊருக்கே சொல்லுங்க-ன்னு வேண்டுகோள் வைக்கலையா? SK ஐயாவிடம் இந்தத் திருப்புகழ், அந்தத் திருப்புகழ்-ன்னு மாறி மாறி நேயர் விருப்பம் வைக்கலையா? நீங்க என்ன நேயர் விருப்பம் வைத்தீர்கள் அடியேனிடம்? ஏண்டா பெருமாளைப் பத்தி மட்டும் எழுதற-ன்னு அதிகாரமா மட்டும் கேக்கறீங்க!

ராமானுசரை எழுதும் நீ ரமணரை எழுதக் கூடாதா-ன்னு கேட்டா, அடியேன் விக்கியில் இருப்பதைப் பார்த்து எழுத முடியும்! ஆனால் பரிபூர்ணமாக உள்வாங்காமல் எழுதுதல் எனக்கு வராத ஒன்று! அதைத் தான் லயிப்பு-ன்னு சொல்றீங்க போல!
உங்களில் பல பேருக்கு அடியேனின் தமிழும் நடையும் பிடிச்சிருக்கு அப்படின்னா, அதுக்கு அதன் பின்னுள்ள இந்த நேர்மையும் ஒரு காரணமா இருக்கலாம்!

அதனால் தான் என்னைப் பிடித்து அழுத்தாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!



* ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன.
அதிகம் பேசாது, கேள்விகள் ஏதும் கேட்காது, தனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!
அடியார்களுடன் அடியார்களாக, கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும், பாடுவதும், கேள்வி கேட்பதும், விடை தேடுவதும் ஒன்று!

அப்படி எல்லாம் இல்லை! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்டால் குழப்பத்தில் இருக்கிறாய்-ன்னு சொல்றீங்க!
அதுவும் நல்ல பூக்களை அறிமுகப்படுத்தும் ஒரு வலைச்சரத்தில், நல்ல பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தலாமே! குழப்பவாதப் பூக்களை அறிமுகப்படுத்த வலைச்சரம் தேவையில்லை! குழப்பத்தின் தலையில் குட்டத் தலைச்சரம் என்று தனியாகத் துவங்கி விடுவது நல்லது!

சமயக் குழப்பத்தில் இருக்கிறாய் என்று சொன்னால் அடியேன் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஆனானப்பட்ட அருணகிரியாரும், மதுரகவி ஆழ்வாருமே சமயக் குழப்பத்தில் இருந்தவர்கள்! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அதுக்கு தான் இன்னொருத்தன் இருக்கானே என்றால், இன்னொரு பெரியார் அவதரிக்க இப்போதே துண்டு போட்டு வைக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! நம் வீட்டை நாமே துடைப்பதற்கும், சானிடரி இன்ஸ்பெக்டர் வந்து துடைப்பதற்கும் உள்ள வேறுபாடு நீங்கள் அறியாதது அல்ல! உங்களுக்கு அடுத்து ஆண்டவன் அவதாரம் வேண்டுமா இல்லை பெரியார் அவதாரம் வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்!

* உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே?

எது உங்களை இப்படி எல்லாம் சொல்லத் தூண்டுது? சொல்லட்டுமா?
யார் சொன்னாலும், நான் சொல்லக் கூடாது என்ற உங்களின் அதீத அன்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது!
ஆன்மீக வலையுலகப் பெரியவர்களே, உங்கள் குழந்தை கேஆரெஸ் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
வெறும் அலங்காரங்கள், கோயில் விளக்கங்கள், ஸ்லோகங்களுக்குப் பொழிப்புரைகள், கதைகள்-ன்னு சொல்லிக்கிட்டு போவதால் மட்டும் ஆன்மீகம் வளர்ந்து விடாது!

தில்லை தீட்சிதருக்கு மடல் தீட்ட அடியேனுக்கு என்ன உரிமை இருக்கு-ன்னு சில அன்பர்கள் நினைக்கிறாங்க!
தில்லையை விட்டுடுவோம்! இதே விசயம் திருமலையில் நடந்திருந்தால் அதை விட இன்னும் சினந்தே எழுதி இருப்பேன். வலையுலகில் என் முதல் பதிவே திருமலை அர்ச்சகர்களுடன் பேசிய வாய்ச் சண்டையில் தான் துவங்கியது என்பது ஞாபகம் இருக்கா?

தமிழ் தில்லையில் நுழைய இன்னும் கூத்தாட வேண்டி இருக்கு-ன்னு ஒரு வரிக்கு - அதுவும் நான் சொல்லி விட்டதால் - உங்கள் மென்மையான மனம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும்!
KRS சொல்லிட்டாரே! KRS சொல்லிட்டாரே-ன்னா, என்னய்யா பெரிய இவனா இந்தக் கேஆரெஸ்ஸு? பச்சைப் பய புள்ள அவன்! அவன் சொன்னா எதுக்கு இம்புட்டு டென்சன் ஆவறீங்க?

அவன் திருவாரூர் சிவன் கோயில்-ல தமிழ் இல்லேன்னோ, குன்றக்குடி கோயில்ல தமிழ் இல்லேன்னோ சொல்லலையே? தில்லையை மட்டும் தானே சொன்னான்!
தில்லையில் தமிழை நீச பாஷை-ன்னு தீட்சிதர்கள் சொல்லிட்டாங்க-ன்னு சும்மா ஏதாச்சும் இட்டுக் கட்டினானா? //தீட்சிதர்களே, நீங்களே பெருமான் பாதம் பள்ளியறை எழும் போது, தமிழ்ப் பதிகம் பாடறீங்க-ன்னு// அவன் சொன்னதை நீங்க பாக்கலையா?
கருவறையில் தமிழில் பாடாததையும், அன்பர்களைக் கரடு முரடாக நடத்துவதையும் தானே அப்பதிவில் சுட்டிக் காட்டினான்?

ஆனா அதே சமயம் தீட்டு கழிச்சாங்க-ன்னு, பிரச்சனை முடிஞ்சாப் பிறகும் ஒரு பிரச்சனை பண்ண போது என்ன சொன்னான்? பாக்கலையா?
//ஆனா இதுல நான் பெரியாரைத் தான் ஃபாலோ பண்ணுவேன்!
டெய்லி பாடப் போற! ஆறு காலமும் பாடப் போற! எத்தனை வாட்டி கழுவித் தள்ளுவான்? பெண்டு கழண்டிடும்! சாப்பாடக் கூட நேரம் இருக்காது! பக்கெட்டும் கையுமா நிக்கவே டயம் சரியா இருக்கும்! வெங்காயம்! உன் வேலை ஆச்சா! உனக்குப் பிரச்சனை பண்ணலையே! போயிக்கிட்டே இரு! :-)//
தத்துவ வித்தகர் ஜீவா வந்து Hats Off KRS-ன்னு சொல்லிட்டுப் போனாரு!

ஒரு விசயம் கேக்குறேன்.
இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தான் இறைவனின் பொன்னம்பலம். அந்த அம்பலத்தை எண்ணெய் அம்பலம் ஆக்கியது யார்? எண்ணெயை வீசி வீசி அசுத்தப்படுத்தியது யார்?
(கறி மாமிசம் உண்டு, ஒடம்பைக் கும்முன்னு வச்சிருக்கும்) போலீஸ் கூட, அவ்வளவு களேபரத்திலும், விதிகளை மதித்து, சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் அம்பலத்துக்குள் போகிறது! அமெரிக்கப் போலீஸ் இப்படிச் செய்யுமா?
எண்ணெய் வீசி அம்பலத்தை அசுத்தப்படுத்தியதை ஆன்மீகம் பதிபவர்கள் யாரேனும் இது வரை கண்டித்தார்களா?

நடனமாடும் இறைவன் எண்ணெயிலா நடனமாடுவான்? வீட்டில் கூட ஐயோ குழந்தைக்கு வழுக்கிறப் போகிறதே-ன்னு பதறுகிறோம்! ஆனால் சைவத்தின் தலைநகரில், அம்பலத்துக்குப் பொறுப்பானவர்களே, பொறுப்பா அம்பலத்துல எண்ணெய் ஊத்தி, ஆடுறா நடராசா-ன்னு சொல்லுவாங்க! அதை யாரும் கண்டுக்கிட மாட்டோம்! உங்களுக்கு நடராஜரின் மேல் பாசமா இல்லை வேறு எவரின் மீதாவது பாசமா??

தமிழ் தில்லைக் கருவறைக்குள் நுழையக் கட்டப்படுது-ன்னு கேஆரெஸ் மட்டுமா சொன்னான்? எத்தனை பேர் சொல்கிறார்கள்? சைவ மடங்கள் மறைமுகமாச் சொல்லலையா?
ஆனா அவன் சொன்னா மட்டும் உங்களுக்குக் கோவம் வருகிறது! உடனே வைணவத்தை தூக்கி நிறுத்த சைக்கிள் கேப்பில் சைவத்தைத் தாழ்த்தறான்-ன்னு, குழந்தைத்தனமா பேசலாமா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?
பெரியவங்க நீங்க குழந்தையா? இல்லை பச்சப் புள்ள கேஆரெஸ் குழந்தையா? :-)))


நாத்திகம் பேசுவோர் கருத்தை விட்டுவிட்டு ஆட்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்-ன்னு சொல்லுறோம்! ஆனா நாம மட்டும் என்ன பெருசா செய்யறோம்? Are we walking our talk?

தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா?

இதே திருமலைத் தெய்வம் யார் என்ற விவாதத்தில், அடியேனோ இல்லை குமரனோ இப்படி attributing motive செய்தோமா? இப்போது தில்லைக்குப் பாய்ந்து வரும் ஆன்மீக அன்பர்கள், அப்போது எங்கு இருந்தீர்கள்?
என் இனிய நண்பன் ஜிரா, திருமால்-சிவன் அனைவரும் தங்கள் தலைகளை முருகப் பெருமான் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு எழுதின போது (அவர் மத மாச்சர்யம் கருதி எழுதவில்லை! அது வேறு விடயம்), அப்போது எங்கே இருந்தீர்கள்? நகைச்சுவை பதிவுகளை அதிகம் இட்டு விளையாடும் வெட்டிப்பயல் அல்லவா வந்து வழக்குரைத்தார்? ஆன்மீகப் பதிவர்களின் கடமை அன்று எங்கே இருந்தது?

வாதங்கள் செய்வதை விடுத்து பேதங்கள் செய்வது யாருக்குமே அழகல்ல! புகழும், பிரபந்தமும், அனுபூதியும் ஓதும் நமக்கு இன்னும் அழகல்ல!

விவாதங்கள் அவசியம் தேவை! கேள்வி தான் வேள்வி வளர்க்கும்! மூடி மூடி மறைக்காமல் நம் வீட்டை நாம் சுத்தம் செய்து கொள்வது போல் வரவே வராது! இந்த விஷயத்தில் ஆன்மீகப் பதிவராய் என்னை அதிகம் கவர்பவர் அரைபிளேடு!
எதையும் ஒளிக்காது விவாத களமாய் முன் வைப்பவர்! அரசியல் பெற அல்ல! தெளிவு பெற! தரவுக்கு தரவு தர முயற்சிப்பாரே அன்றி, ஆன்மீகக் குழப்பவாதிகள் மலிந்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்!
அவர் மட்டும் ஆன்மீகப் பதிவில் இன்னும் தீவிரமாக இறங்கினால்...அச்சோ...எனக்கு நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது! :-)


பெரியவர்களை எதிர்த்துப் பேசி இருக்கேன்! பிழை பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும், எது ஒன்றுக்கு மட்டும் அடியேன் முக்கியத்துவம் தருவேன் என்று!

அடியார் பழித்தல் (பாகவத அபசாரம்) அறவே கூடாது என்ற கருத்துக்குத் தரப்படும் அளவில்லாத மதிப்பு ஒன்று தான்,
நாத்திகன் ஒருவனை ஆத்திகன் ஆக்கியது (உங்களைப் பொறுத்த வரை வைணவன் ஆக்கியது!:-)

பகவத் கீதையோ, சுப்ரபாதமோ, தொல்காப்பியமோ, தேவாரமோ, பிரபந்தமோ, கந்தர் அனுபூதியோ அந்த நாத்திகனை ஆத்திகன் ஆக்கவில்லை!
அந்த ஏட்டில் உள்ளதை எல்லாம்
இந்த நாட்டில் கொண்டு வந்த இயக்கம் - சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை, அடியார் பழியாமை - இவை தான் நாத்திகனை ஆத்திகன் ஆக்கியது! அதனால் தானோ என்னவோ இராமானுசரைப் பற்றிச் சொல்லப் புகும் போது, என் பதிவுகளில் வைணவ வாடை வீசுதுன்னு நினைச்சிக்கறீங்க போல!

அந்த அனுபவத்தில் ஐயா பெரியாரிடம் கடன் வாங்கி, ஆன்மீகப் பதிவுலகத்துக்கு அடியேன் ஒரு சொல் சொல்லிக் கொள்கிறேன்!
நாத்திகர்கள் உருவாவதில்லை! உருவாக்கப்படுகிறார்கள்!

இதை ஆன்மீகம் பேணுபவர்கள் சிந்தையில் இருத்தினால், மீண்டும் ஒரு பெரியார் தோன்ற மாட்டார்! மீண்டும் ராமர் சிலைகளும் பிள்ளையார் சிலைகளும் உடைக்கப்படமாட்டாது!
நான் இன்னும் உறுதியாக நம்புவது: பிள்ளையார் சிலைகளைப் பெரியார் உடைக்கவில்லை! நம் அருமைத் தெய்வங்கள் உடைய நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம்! நாம் தான் பெரியாரின் திருக்கரங்களில் தூக்கிக் கொடுத்து உடையுங்கள்-ன்னு சொல்லி இருக்கோம்!

(இது போன்ற தன்னிலை விளக்கப் பதிவுகளை அடியேன் ஜென்மத்துக்கும் இட்டதில்லை! இப்படி இட்டதற்கு நானே வெட்கப்படுகிறேன்! முதலில் இதை இட வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா இது ரொம்ப நாளா நீறு பூத்த நெருப்பா இருக்கு! அந்த நேரத்துக்கு அடியேன் அடியேன்-ன்னு சொல்லி, நானும் குமரனும் இன்ன சிலரும் அதை அணைக்கிறோம்! ஒற்றுமைப் பதிவுக்காகவே மெனக்கெட்டு முருகனருளில் எக்ஸ்ட்ரா ரெண்டு பதிவு போட்டு சூட்டைக் குறைக்கிறோம்!
ஆனாத் திருப்பி ரெண்டு மாசம் கழிச்சி வேற உருவத்தில் வரப் போகுது. அதான் ஒரு நிரந்தரத் தீர்வாக....நம் மனங்களை நாமே கேட்டுக் கொள்ளும் முகமாக...)

மேலே காணும் ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, உங்கள் எண்ணங்களை அடியேனுக்குச் சொல்லி உதவினால், எனக்கு நானே course correction செய்து கொள்ள ஏதுவா இருக்கும்! தயங்காமல் உங்கள் எண்ணங்களை வாக்காகச் சொல்லுங்கள்! திருத்திக் கொள்கிறேன்!

ஆன்மீகமே எழுதாதே!
சமூகப் பிரச்சனைகளை ஆன்மீகத்தில் கலக்கும் குழப்பவாதிகள் "தூய்மையான" ஆன்மீகத்துக்குத் தேவை இல்லை! சமூகம் வேறு, ஆன்மீகம் வேறு என்றால்...
அடியேன் புன்சிரிப்புடன் ஒதுங்கிக் கொள்கிறேன்! சிறு வயதில் நகைச்சுவை, டகால்ட்டி-ன்னு எழுதிக்கிட்டு ஜாலியா இருக்குறத வுட்டுப்போட்டு தேவையில்லாம எதுக்கு இதெல்லாம்? காதல் மில்லிமீட்டர்-ன்னு எழுதி வச்ச நாவல் வேற இன்னும் நாலு பாகம் முடிக்காம இருக்கு!:-)

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - அரகரோகரா!!!
அண்ணாமலைக்கு - கோவிந்தா கோவிந்தா!!!

ஆன்மிகப் பதிவு எழுதி அடியேன் பெருசா ஒன்னும் கிழிச்சிடலை! அடியார்களும் அன்பர்களும் வருத்தப்படும் அளவுக்கு எழுதுகிறேன் என்றால், வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-ன்னு பாடுறதல பொருளே இல்லை!
வேணும்னா விட்டுறலாம்! பிரச்சனையே இல்லை!
ஆனா நல்லபடியா ஊருக்குப் போய்வர ஆசி கூறி விடைகொடுத்து அனுப்புங்க! மறக்காம மேலே வாக்களித்து அடியேன் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க! பண்ணிறலாம்!



Results of the Poll:

Read more »

Sunday, March 23, 2008

***அத்தை மகளே, போய் வரவா?

அன்புடை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், வாழிய நலம்! இந்த ஒரு வாரம் முழுதும், உங்களுடன் அளவளாவி இருந்தது மிகவும் மகிழ்ச்சி.
பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா அடியேன் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! இந்தப் பாட்டை அவசியம் இங்கே கேட்டுக்கிட்டே படிங்க!

அனைவருக்கும் பதில் சொல்ல முடியலை! காரணம் உங்களுக்கும் தெரியும்! குறிப்பாக வவ்வால், அரைபிளேடு, கோவி அண்ணா, சிறில் அண்ணாச்சி, VSK ஐயா, மதுரையம்பதி, கோபிநாத் - இவர்கள் எல்லாம் சில நுட்பமான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். இவற்றுக்கு எல்லாம் இன்னும் சில வாரங்கள் கழித்து, நான் அறிந்த வரை பதில் தருகிறேன். மின்னஞ்சலும் செய்கிறேன்.ஆரோக்கியமான விவாதங்கள் அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என மனமார்ந்த நன்றி!

பதிவுலக விவாத களங்களில், தனி மனிதத் தாக்குதல் இருக்குன்னு பல பேர் சொல்லுறாங்க! ஆனா கடந்த ஒரு வாரத்தில, இங்கு பல சூடான தலைப்புகளின் மேல் விவாதங்கள் நடந்தன! எவ்ளோ தனி மனிதத் தாக்குதல் நடந்ததது-ன்னு சொல்ல முடியுமா?
இத்தனைக்கும் பதிவின் உரிமையாளர் என்கிற முறையில் அடியேனோ, இல்லை வேறு எவரும் மாடரேட் கூடச் செய்யவில்லை! பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்படவில்லை! (இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டுத் தான் Comment Moderation எடுத்தேன்!:-)

அப்படி இருந்தும், கருத்தை ஒட்டி மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது!
கருத்துக்குக் கருத்து தான் இருந்ததே தவிர, கருத்துக்கு மனுசன்-ன்னு இல்லை! பொறுப்புடன் விவாத நோக்கம் அமைந்து விட்டால், விவாதங்களும் பொறுப்புடன் அமைந்து விடும்! (Garbage In - Garbage Out)!

இது ஒன்றே போதும்,
தமிழ்ப் பதிவர்கள் அப்படி ஒன்னும் பொறுப்பற்றவர்கள் அல்லர் என்று ஊருக்குச் சத்தம் போட்டுச் சொல்ல!
(நான் தான் பார்க்கிறேனே, Rediff போன்ற தளங்களில் எப்படி எல்லாம் நடக்கிறது என்று)
குறிப்பாக E=mc^2 பதிவில் ஆத்திக-நாத்திக வாதங்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல், எப்படித் தரம் வாய்ந்தவையாக இருந்தன என்பது கண்கூடு!
இதற்காக, முன்னாள் நாத்திகன் - இந்நாள் (அரைகுறை) ஆத்திகன் என்ற முறையில் அடியேன் இரண்டு பங்கு மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்தச் சமயத்தில் அரைபிளேடு, சிறில், திவா, கோவி, ஜீவா, ஸ்ரீதர் ஆகியோருக்கு நன்றி சொல்லலை-ன்னா எனக்குச் சென்னையில் சோறு கிடைக்காது!(பிரியாணி கிடைக்குமா-ன்னு கேக்காதீங்க! :-)
குறிப்பு: ஆன்மீகப் பதிவுலகில் அரைபிளேடு, ஜீவா, ஸ்ரீதர் போன்ற சிறப்பான தத்துவ வித்தகர்கள், இன்னும் அதிகமாக வளைய வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆவல்!

ஒரு தம்பிக்கு எடுத்துச் சொல்வது போல், என் பதிவுலகப் பயணத்தை Critical Review செய்து தந்த கோவி அண்ணாவுக்கும், அண்ணா என்று நான் அழைக்காவிட்டாலும் அப்படியே கருதும் நண்பர் குமரனுக்கும் என் நன்றி!
டீச்சருக்கு எப்பமே நான் செல்லப் பிள்ளை தான்! அதனால் நன்றி-ன்னு சொல்ல மாட்டேன். அதுக்குப் பதிலா ரெண்டு வடையை மட்டும் வாங்கிக்குறேன்!(டீச்சர், யானை மோதிரம் வந்து சேர்ந்துச்சா?)
ஆன்மீகப் பதிவுலகத்துக்கு வினை ஊக்கிய பாபாவுக்கு, ரவிசங்கருக்கு என் நன்றிகள்!

விளையாட்டோ வினையோ, ஒரு கட்டத்தில் சைவ/வைணவ வேறுபாடு எல்லை மீறிப் போகவே, ஓகை ஐயாவிடம் சினக்க வேண்டி வந்தது!(நான் சினந்தாலும் எப்படிச் சினப்பேன்-னு உங்களுக்கே தெரியும்! (அடியேன்-னு சொல்லிக்கிட்டு நிப்பேன் :-)
என் சினத்தையும் பொருட்படுத்தாது, அதன் பின்னர் நான் இட்ட பதிவுகளுக்கும் வந்து கருத்துகள் சொன்னாரு ஐயா! அவருக்கு என் நன்றியறிதல்கள்!

பின்னூட்டிக் கருத்துச் சொன்ன எல்லாப் பதிவர்களுக்கும்,
தனி மடலில் உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும், (குறிப்பா கெ.பி.அக்காவுக்கும்),
வராது வந்த மாமணி போல் நட்புடன் வந்த விடாதுகருப்பு அண்ணாச்சி இதர நண்பர்கள் அனைவருக்கும்
ஆர்க்குட்டில் புதிரா புனிதமா விடை சொன்ன நண்பர்களுக்கும் = நன்றி! நன்றி! நன்றி!
(என்னது ஆர்க்குட்டில் புதிரா புனிதமா-வா? ஹிஹி! நாங்க அடுத்த கட்டத்துக்குப் போயிட்டோம்-ல)

அப்பறம் முக்கியமா, நான் ரொம்பவே பீட்டர் வுட்டுட்டேன்...பின்னூட்டத்தில் மட்டும் தான்...அவசரம்...நேரமின்மை...இந்த மாதிரி நேரத்துல் பீட்டர் பட்டுன்னு ஓடியாந்துறான்! பீட்டர் எதுக்கு வரணும்? பிரிசில்லா வந்தா எம்புட்டு நல்லா இருக்கும்! :-)

இரண்டு பிறந்த நாட்களுக்குப் பதிவிட்டது (ஷைலஜா, குமரன்), நம்ம கல்யாண மாப்ள குசும்பன் அண்ணாச்சிய செந்தமிழால் கலாய்ச்சதெல்லாம் எனக்கு நட்சத்திர வார உவகை!
பங்குனி உத்திரம், புனித வெள்ளி, மீலாது நபி - இவை மூன்றும் ஒன்னா வந்து அடியேனின் நட்சத்திர வாரத்தில் அமைந்தது,
அதுவும் ஆன்மீகப் பதிவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருத்தனின் வாரத்தில் அமைந்தது திருமலை எம்பெருமானின் திருவருளாகவே கருதிக் கொள்கிறேன்.



எழுதலாம் என்று நினைத்து விட்டுப் போன இடுகைகள்:

1. தந்தை பெரியார் - இராமானுசர் கற்பனை உரையாடல் (பெரியார் நொடித்துப் போன ஆலயத்தை மேம்படுத்திக் காட்டுவார் அல்லவா? ஆலய நிர்வாகத்தைச் சீர்திருத்தி நடத்துவது பற்றிய இந்த இடுகையை அப்புறமா போடட்டுமா என்ன? :-)
2. Magical Realism/கம்பர்/கப்பி பய
3. கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, சிவன் பாட்டு குழுப் பதிவுகள் அறிமுகம்
4. பங்குனி உத்திரம் - திருமணமா/லிவிங் டுகெதரா?
(அடியேனுக்கு நிச்சயம் குழப்பவாதி ஆன்மீகப் பட்டத்தைக் கொடுத்திருப்பார்கள் வலையுலக ஆன்மீகப் பெரியவர்கள்!:-)
5. கம்பர்/இயேசு காவியம்/சீறாப் புராணம்
சும்மா ஒவ்வொரு பாடல் கொடுக்கலாம்-னு இருந்தேன் மும்மத விழாவில்! முடியலை! (ஆனால் பாடலை மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்)

இறுதிப் பாகம் போடாத இடுகை:

* பெண்ணழகு-கண்ணழகு-முன்னழகு-பின்னழகு Part 2!

ஆன்மீக அன்பர்கள் சிலரிடம் மட்டும் இப்போது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சைவ/வைணவ மனக்குறைகள்! இதற்கு மூல காரணம் (root cause) அடியேன் தில்லைப் பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு! அன்பர்களின் மனக்குறை நீங்காத வரை, அடியேன் இந்தக் கதையைப் பூர்த்தி செய்யப் போவதில்லை!
தமிழுக்கு முகம் காட்டி (முன்னழகு), வடமொழிக்கு முதுகு காட்டும் (பின்னழகு) அரங்கன்! இந்த மனக்குறை தீர முகம் காட்டுவானா?
மனக்குறையை நீக்கி அருளும் வரை, அரங்கனை (திருவரங்கனை மட்டும்), அடியேனும் பதிவில் எழுதப் போவது இல்லை! :-( ரங்கா! ரங்கா! ரங்கா!!!


பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா நான் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! அந்தப் பாட்டைக் கேட்டீங்கல்ல? இல்லீன்னா இங்கே கேட்டுக்கிட்டே படிங்க! அதுவும் கடைசிப் பத்தியில் மிகவும் மென்மையான எம்.எஸ்.அம்மா, ரொம்பவும் அழுத்தி, ஆணித்தரமாச் சொல்லுவதைத் தட்டாமக் கேளுங்க! சின்ன வயசுப் பதிவன் ஒருத்தன் எண்பது வருசத்துக்கு முன்னாடி எழுதன பாட்டு!

கருத்து வேற்றுமை நாட்டுல வருது! பதிவுல வராதா? ஒற்றுமைக்கு என்னவெல்லாம் பண்ணலாம்-னு அப்பவே ஆக்கப் பூர்வமா யோசிச்ச பதிவன் நீ தான்-யா!
நாங்களா? அடச்சே! சேதுவுக்கு இன்னும் கேது தோஷ பரிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்! போய்யா போ! ஏதோ உன்னளவு இல்லீன்னாலும், உன்னை மாதிரி யோசிச்சி ப்ளாக் எழுத முயற்சிக்கிறோம்!

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்



படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!

அடியேனும் அவ்வண்ணமே...
பார்த்தாலும்
படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்
பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும்
பிடித்தாலும்
இறுகிக் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே என்னும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலையைத் தாழ்த்தி, இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்!

உங்கள் சிறுவனுக்கு ஆசி கூறி அனுப்புங்கள்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
Read more »

***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்!

நீங்க எத்தனை பேர், நடுக் கூடத்தில் மரப்பலகை ஊஞ்சலில் ஆடி இருக்கீங்க? இல்லை யாரையாச்சும் உட்கார வச்சி ஆட்டி இருக்கீங்களா?
ஊஞ்சலில் தூங்கும் சுகம் என்னன்னு தெரியுமா? அப்பப்பா...! அப்படி ஒரு சாய்வு! இப்படி ஒரு சாய்வு! - சங்கிலிகள் உரசும் சத்தம்! கூடவே ஒரு சுகமான பாட்டு!

இப்பல்லாம் மர ஊஞ்சல் இருக்கான்னு தெரியலை! தோட்டத்துல மூங்கில் கூடையில் ஊஞ்சல் கட்டுறாங்க. அதுல ஆடினா ஒரே குத்தும்! :-) சரி குத்துதேன்னு அதுல ஏதாச்சும் மெத்தை போட்டா, அது கட்டில் ஆயிடுமே தவிர, அந்த ஊஞ்சல் சுகம் போயிடும்! ப்ளாஸ்டிக் கம்பி, இரும்புக் கம்பி போட்டெல்லாம் ஊஞ்சல் புதுப்புது அவதாரங்களில் பட்டினத்தில் வந்தாலும், எங்க கிராமத்து மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்!

அந்த ஊஞ்சல் சங்கிலிகள் ஒவ்வொன்னும் நல்ல கனமா இருக்கும்! இடம் அடைக்காதபடி அதை சுவர்-ல இருக்கும் ஆணியில் தொங்க விட்டுறலாம்! பலகையைக் கழட்டி வச்சிடலாம்! வேணும் போது மட்டும், எங்க பாட்டி ரெண்டே நிமிஷத்தில் அசெம்பிள் பண்ணிடுவாங்க! :-)

கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?

இன்னிக்கி நாம பாக்கப் போற ஊஞ்சல் பாட்டு, சும்மானாங்காட்டியும் பாட்டு இல்ல! ஊஞ்சலில் ஆடுவதற்கே என்று ஒரு பாட்டு இருக்கு!
கேட்டுப் பாருங்க! அப்படியே ஊஞ்சலில் போய் வராப் போலவே இருக்கும்! நீலாம்பரி ராகத்தில்...உய்யால லூகவய்யா என்று பாடுகிறார். ஊஞ்சலும் கூடவே ஆடுகிறது! கூடவே அந்தக் க்றீச் க்றீச் சத்தம்!

தமிழில், தியாகராஜரை அணைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக....இதோ!

கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்.
அப்படியே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே, அதே மெட்டு வருதான்னும் பாருங்க!

* தாலாட்டு - வேதவதி பிரபாகர் பாடுவது (nice)
** Saxophone-கத்ரி கோபால்நாத் (Must Hear!)
*** Clarinet - AKC Natarajan



பாடல்: உய்யால லூகவய்யா
எழுதியவர்: தியாகராஜர்
ராகம்: நீலாம்பரி
தாளம்: கண்டசாபு


உய்யால லூகவய்யா - ஸ்ரீராம
உய்யால லூகவய்யா
ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா
ஊஞ்சலில் ஆடுமய்யா


சய்யாட பாடலனு
சத்சார்வ பெளம
உடனுறங்கு பாடலதில்
உலகாளும் உத்தமா
(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

கமலஜாத்ய அகில சுருலு நின்னுகொலுவ
விமலுலைன முனீந்த்ருலு
த்யானிம்ப கமனீய பாகவதலு குணகீர்த்தன-முலு
நலபம்புல செய்யக

தாமரையில் நான்முகனும் தேவரும் உனைத்துதிக்க
முனிவர்களும் தியானிக் கவே
காமரும் குணங்களைக் காதலால் அடியவரும்
கீர்த்தனைகள் வாசிக் கவே

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நாரதா துலு மெரயசு நுதியிம்ப சாரமுலு, பாகா......வினுச்சு.....
நின்னு நம்முவாரல சதா ப்ரோசுசு, வேதசார சபலனு சூசுசு, ஸ்ரீ்ராம

நாரதாதி முனிவரும் போற்றி-உனைப் பாடிடும்
சாரமதை நன்கு கேட்டு
நம்பியவர் தமைக்காக்க நான்மறைகள் ஓதிடும்
சபையிலுன் காட்சி கண்டு

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நவமோகன ஆங்குலைன சுரசடுலு விவரமுக, பாடக நா பாக்யமா
நவரத்ன மண்டபமுன த்யாகராஜ வினுத, க்ருதி பூணின ஸ்ரீராமா

இளமுருகு வடிவழகு தேவியர்கள் விரிவாகப்
பாடவும் என் பாக்கியமா
நவரத்ன மண்டபத்தில் தியாகராஜன் வேண்டவும்
உருக் கொண்ட ஸ்ரீராமா

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)


அடிக்குறிப்பு:
தியாகராஜர் கிட்டத்தட்ட 600 சாகித்யங்களைச் செய்துள்ளார். அவர் தமிழில் செய்த சில சாகித்யங்கள் நமக்குக் கிடைக்காமற் போனது, நம் (என்) நற்பேறின்மையே!
சமதர்மத்தில் சத்குரு தியாகராசருக்கு நாட்டம் இருந்ததில்லை போலும்!
அவர் செய்த 600 சாகித்யங்களில்,
ராமன் மேல் செய்த பாடல்கள் 560க்கும் மேல்.
சிவபெருமான் மேல்=4-5,
பர்வதவர்த்தினி அம்பாள் மேல்=6-8,
இதர சிவாலயங்கள் கோவூர் திருவொற்றியூர் முதலானவை=10-15,
இன்ன பிற=5,
முருகப்பெருமான் மேல் செய்தருளியவை=0 (all figures approx)

இனி அடியேனின் ஒவ்வொரு பதிவுகளிலும் இப்படியே கணக்கு வாசிக்கப்படும்! வைணவம் தாண்டி அனைத்தையும் எழுதி என் கணக்கை நானே நேர் செய்து கொள்ளும் வரை இது தொடரும்!
வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள் அனைவரும் கருணை கூர்ந்து என் பதிவுகளைத் தணிக்கை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
Read more »

Saturday, March 22, 2008

***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!

நட்சத்திர வாரத்தில் மாயா பஜார் ரேஞ்சுக்கு விருந்து கொடுக்காவிட்டாலும், கூப்பாடு போடாத அளவுக்காச்சும் சாப்பாடு போடணும்-ல!
இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!
மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...
யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு கெளப்பறது? ஓ...கொத்தனாரா?

வாய்யா! வா! கொத்தனார் கிட்டத் தான் இந்த மாதிரி அறிவியல் பூர்வமான கேள்வி எல்லாம் கேக்கோனும்! விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!
கொத்ஸ் அண்ணே: அவரைக்காய் என்றால் என்ன? கொத்ஸ்வரங்காய் என்றால் என்ன? அதை அமேரிக்காவில் இங்க்லிபீஷ்-ல என்னன்னு சொல்லி வாங்கணும்ணே?
இதைத் தீர்த்து வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிகோ செக்சன் 356 படி, உங்க மேலச் சுமத்தப்பட்டுள்ளது.

நாம சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம்! இந்த அவரக்கா தெரியுங்களா ஒங்களுக்கு, அவரக்கா?
என்னாது? அவர் அக்கா, இவர் அக்கா-ன்னு எல்லாம் கேக்கறீங்களா?
போச்சுடா! பதிவுலகில் எனக்கு நிறையவே அக்காங்க!
கெ.பி.அக்கா மொதக் கொண்டு, ஜி3 அக்கா இடைக்கொண்டு, துர்கா அக்கா கடைக்கொண்டு, சர்வம் அக்கா மயம்!
இதுல நான் எவர் அக்காவைச் சொல்வது? நான் சொல்லுறது அவரைக்காய்-ங்க! பச்சையா இருக்கும்-ல!

இதுக்குத் தான் சென்னை போகும் போதெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்கு ஒரு நடை போயி வரணும்ங்கிறது! இங்கிட்டு பார்க்காத காய்கறி எல்லாம் அங்கிட்டு பார்த்துக்கலாம்!
அம்மாவின் ஸ்பெசாலிட்டிகளில் இந்த அவரைக்காயும் ஒன்னு! அவரைக்காய் புளிக்குழம்பு-ன்னு ஒன்னு வைப்பாங்க பாருங்க! யம்மாடியோவ்!

அந்த உறைப்புக்கும் காரத்துக்கும் சாப்பாடு கூட வேணாம்! சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! அதுக்குக் கூடவே தொட்டுக்க அவரைக்காய் பொரிச்ச கூட்டு! - இப்பவே எனக்கு நாக்கு ஊறுதே!
இன்னும் கொஞ்ச நாளு தானே! இதோ சென்னைக்குப் போனவுடன், நான் கேட்காமலேயே இந்த ஐயிட்டம் எனக்காகச் செய்து வைக்கப்பட்டிருக்கும்! வூட்டாண்ட வாங்க, 50-50 போட்டுக்கலாம்! :-)


அவரைக்காய் பொரிச்ச கூட்டு எப்படிச் செய்யறது?
(அந்தப் அவரைப் புளிக் கொழம்பு அம்மா கிட்ட இது நாள் வரை கேட்டுக்கலைங்க! சாரி, கூட்டு மட்டும் இன்னிக்கி பார்க்கலாம்)

1. மொதல்ல கிச்சன் எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சிக்குங்க! வழி தெரியலையா? இந்தாங்க!

2. தேவையான பொருட்கள்:
அவரைக்காய் = 1/4 கிலோ (அரிஞ்சி வைச்சா, 3 கப் வரும்)
கடலைப் பருப்பு = ?
(கடலை போடும் போதே இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்! சரி போனாப் போவட்டும்! சொல்லிடறேன்! 1/4 கப்)
புளி பேஸ்ட் = 1 தேக், பெருங்காயம் = 1/2 தேக்

உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பலை, உ.பருப்பு, காய்ஞ்ச மிளகாய்(3) = இதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்கே தெரியும்! ஒங்களுக்குத் தெரியாதா என்னா? தேங்காத் துருவல்= ஒரு கைப்பிடி போட்டா இன்னும் மஜாவா இருக்கும்!

3. அவரைக்காயைக் மொதல்ல அந்த இழை உரிக்கணும்! இல்லீன்னா சாப்பிடும் போது நூடுல்ஸ் மாதிரி வந்து உயிரை வாங்கும்.
அப்பறம் அவரைக்காயைத் துண்டு துண்டா அரிஞ்சி வைச்சிக்குங்க! நீளவாட்டில் பொடிசா அரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! French Fries மாதிரி ஒரு மொரமொரப்பு கெடைக்கும்!

4. கடலைப் பருப்பைத் தனியாக் குக்கரில் வேக வச்சிக்குங்க! அட, அரிசி வைக்கும் போது, கூடவே இதையும் வச்சிக்குங்க அப்பு! :)

5. இனி மேல் தாண்டி வேலை!
வாணலியில்(கடாய்) எண்ணெய் விட்டு, காய்ஞ்ச மிளகாய், உ.பருப்பு எல்லாம் கொட்டி பொன்னிறமா வறுத்துக்குங்க! இது கூடத் தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்சியில் நல்லா விழுதா, ஒரு அரை அரைச்சிக்கிடணும்!

ஏற்கனவே கட் பண்ணி வச்ச அவரைக்காயை வாணலியில் கொட்டி, கீப் ஆன் வதக்கிங்!
வேக வைத்த கடலைப் பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்! உப்பும், மஞ்சள் தூளும் தேவையான அளவு முன்னாடியே சேர்த்துக்கிடணும்!
நெருப்பைக் குறைச்சி, தட்டு போட்டு மூடிருங்க! கொஞ்ச நேரம் ஆவியில் வேகட்டும்!

திரும்பவும் வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு/கறிவேப்பிலை/பெருங்காயம் போன்ற தாளிப்பு சமாச்சாரங்களை எல்லாம் கவனிச்சுக்குங்க! கடுகு கொஞ்சம் நல்லாவே வெடிச்சா வாசனையும் தூக்கலா இருக்கும்!

பத்து நிமிசம் கழிச்சி, மூடி வைச்ச தட்டைத் தொறந்து,
உப்பு, புளி பேஸ்ட், ஏற்கனவே அரைச்சி வைச்ச தேங்காய்ப் பேஸ்ட், இப்ப தாளித்த ஐட்டம்-இது எல்லாத்தையும் ஒன்னாக் கொட்டிக் கிளறி, ஒரு ரெண்டு நிமிடம் வதக்கினாக்கா...பொரியலா, மொரமொர-ன்னு வரும்!
மணக்க மணக்க....பொரிச்ச அவரைக்காய்க் கூட்டு!

சுடச்சுட ஆவி பறக்கும் மல்லிப்பூ சாதத்துடன் தொட்டுக்கிட்டுச் சாப்பிடலாம்! ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)
ஜவ்வரிசி வத்தல், தனியாத் துவையல், புதினாத் துவையல் கூட, இந்த அவரைக்காய்க் கூட்டை வச்சி சாப்பிட்டாக்கா...சொர்க்கம் நிச்சயம்! :-))

அவரைக்காய் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! நீரிழிவு/அலசர் நோயாளிகளுக்கு இப்போது அறிவுறுத்தப்படும் ஓர் உணவு! நார்ச் சத்து (Fiber) அதிகம் உள்ளது! உள்குத்து...ச்சே உள்காயங்களுக்கு நல்ல மருந்தும் கூட!

தெலுங்கு=சிக்குடு காய், கன்னடம்=அவேரக்காயி, மலையாளம்=அவரா, இந்தி=செம்; இங்கிலிபீஷ்-ல என்னான்னு தெரிஞ்சா ஓடிப் போயி, பாத்மார்க் கடையில் வாங்கியாந்துறலாம்! கொத்ஸ், என்ன ரெடியா? மக்களே, நீங்க அதுக்குள்ள ஒரு கை அள்ளி வாயில் போட்டுக்குங்க! இன்னா, எப்படி இருக்கு அவர் அக்கா, இவர் அக்கா, எவர் அக்கா பொரிச்ச கூட்டு? :-)

Read more »

Friday, March 21, 2008

***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்! கண்டபிணி ஓடிவிடும்!

இஸ்டார் வீக்குல முடிஞ்ச மட்டும் வெளம்பரம் தேடிக்கணுமாம், நம்ம கண்ணன் பாட்டு வித்தகர் வெட்டிப்பயல் ஐடியா கொடுக்கறாரு! ஞாபகம் இருக்குல்ல? தில்லாலங்கடி தாங்கு-ன்னு எம்பெருமான் முதலடி எடுத்துக் கொடுக்க, நம்ம வெட்டி ஈற்றடி எடுத்து, கண்ணன் பாட்டையே வித்த "வித்த"கர் அவரு! :-)

மேட்டர் இன்னான்னா, பல பதிவுகள் வைத்திருந்தாலும், நட்சத்திர வாரத்தில் ஒரே பதிவில் இருந்து பதிவது தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்!
அச்சச்சோ, அப்போ என் மத்தக் குழந்தைகள் - கண்ணன் பாட்டு, இசை இன்பம், முருகன் அருள், சுப்ரபாதம், பிள்ளைத் தமிழ் - இதெல்லாம்?

எலே வெண்ணை! இப்போதைக்கு அதை எல்லாம் மாதவிப் பந்தலில் போடு; அந்த வலைப்பூவுக்கு இலவசமா நட்சத்திர வெளம்பரம் பண்ணு!
அப்பாலிக்கா இஸ்டார் வீக்கு முடிஞ்ச பிறகு, அதை எல்லாம் அந்தந்த வலைப்பூவுக்குள் கூடு விட்டு கூடு பாஞ்சிக்கணும்! என்னாப் புரியுதா? :-)

இது சூப்பர் ஐடியாவா இருக்கே! இப்படியே பண்ணீறலாம்!

கண்ணன் பாட்டு குழுப்பதிவு பத்திப் பலருக்கும் தெரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! சினிமாப் பாடல்கள், ஆல்பம், மேடைக் கச்சேரிகள், தனிப் பாடல்கள், நீங்களே எழுதிப் பாடிய பாடல்கள்-ன்னு,
கண்ணனும் கண்ணன் நிமித்தமும் இருக்கிற பல பாடல்களின் களஞ்சியம் தான் அந்த வலைப்பூ! It's an one stop shop for Kannan Songs! இன்னும் கொஞ்ச நாளில் சதம் அடித்து விடும்!

மலைநாடான் ஐயா, குமரன், ஷைலஜா, திராச, மடல்காரன் பாலு, டிடி அக்கா, வெட்டிப்பயல், அடியேன்-னு ஒரு கூட்டமே கும்மாளம் போட்டிக்கிட்டு இருக்கு அங்கே!
ஜிரா, கோவி.கண்ணன், மதுரையம்பதி, வல்லியம்மா, நா.கண்ணன் என்று வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளும் இருக்காய்ங்க!
வெளியுலகில் அச்சில் வராத பாடல்களும் அதில் இருக்கு! அதை மெளலி அண்ணா போன்றவர்கள் தேடிப் பிடித்துக் கொடுக்க, நம்ம அன்பு வல்லியம்மா போன்ற பதிவர்கள் சொந்தக் குரலில் பாடியும் கொடுத்திருக்காங்க!

பல அருமையான பாடல்களின் வரிகள், இசை, ஒலி, ஒளி, படங்கள்-னு...உங்களுக்கு மிகவும் பிடிச்சிப் போயிடும்! எட்டிப் பாருங்க!
வாங்க இன்னிக்கு ஒரு சூப்பர் கண்ணன் பாட்டைப் பார்க்கலாம்!


(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

"மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா" என்பதை TMS அழுத்திப் பாடும் போது, நம் மனதில் திருநீறும் சேர்ந்தே அழுந்தி விடும்!
அப்படி என்ன பெருசா மகிமை இருக்குதுங்க திருநீறில்? பின்னூட்டதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! (க்ளூ வேணும்னாக் கொடுக்கறேன்! சம்பந்தப் பெருமான் திருவாலவாயன் மீது பாடிய பாட்டின் வரிகளை எடுத்துக்கிட்டா, மகிமை-1, மகிமை-2...அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே கிடைத்து விடும்!)

* திருநீறுக்கு ஐஸ்வர்யம் என்ற இன்னொரு பேரு இருக்கு தெரியுமா?
வாரியார் சுவாமிகளிடம் ஒரு ஊரில் பழங்குடி மக்கள் ஐஸ்வர்யம் கேட்டனர். வாரியாருடன் போன பழுத்த சைவர்கள் சிலர், சரி ஜனங்க ஏதோ துட்டு கேக்குதுங்க-ன்னு நினைச்சிக்க, வாரியார் அவர்களைத் திருத்தினார். ஐஸ்வர்யம்=திருநீறு என்பது நமக்கே இப்பல்லாம் தெரியாது! மறந்து போச்சி! எங்கேயோ பாட்டில் வரும்! அது எப்படி இந்த ஆதிவாசி ஜனங்களுக்குத் தெரிந்தது?-ன்னு மிகவும் வியந்தாராம்!

* திருக்கண்ணமங்கை பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருநீறு பூசி வழிபடுகிறார்கள் தெரியுமா? அப்போது அர்ச்சகர்கள், பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கூடவே தாங்களும் திருநாமத்தின் மீதே திருநீறு பூசிக் கொள்வதை யாராச்சும் பார்த்திருக்கீங்களா?

* விபூதி என்றும் வழங்கப்படும் திருநீறு, பகவத் கீதையில் எங்கே வருதுன்னு தெரியுமா? (அடியேன் பெகாவத் கீதையைச் சொல்லவில்லை! அங்கு தேடினால் ஒன்னும் கிடைக்காது!:-)


சிறிய, மனப்பாடம் செய்ய எளிதான பூசைப் பாடல்! படித்து மகிழவும்!
பாடலை இங்கே கேட்கவும்!
குரல்: TMS வரிகள்: MP Sivam

கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்

(கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்

(கந்தன்)

மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)
Read more »

***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்? - பாஸ்டன் பாலானாந்தா!

நம்ம பாபாவைப் பற்றி என்ன சொல்லுறது? நானும் எத்தனையோ பதிவு போட்டிருக்கேன்! ஆனா இவரைப் பத்தி எழுத உட்கார்ந்தா ஒன்னுமே வரமாட்டேங்குதே! என்ன கொடுமை பாலாஜி!

ஆங்...இதோ வந்திரிச்சி! பதிவு எழுத நேரமே இல்லை-ன்னு சொல்லுறவங்க எல்லாம் உடனே பாபாவை மீட் பண்ணுங்க! அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு தொன்னூத்தியாறு மணி நேரம் என்பது பிரம்ம சிருஷ்டியின் ரகசியம்! :-)
அவர் கிட்ட இருந்து கொஞ்ச நேரத்தையும் காலத்தையும் வட்டிக்குக் கடன் வாங்கினீங்கனா, நீங்க எங்கயோ போயிருவீங்க!

சுட்டி நிபுணர் நம்ம பாஸ்டன் பாலா, ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)
அப்படிப்பட்ட தலைவரு, அடியேன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆன்மிகத் தமிழ்ப் பதிவுகளின் அடுத்த கட்டத்தை ஒரு அக்கு அலசி இருக்காரு பாருங்க!
அதுவும் சும்மாவா?
வார இறுதியின் சிற்றஞ் சிறுகாலே, ஜிமெயிலில் வந்துன்னைச் சேவித்து, 04:24 மணிக்குத் தன் முத்தான பதில்களை அனுப்பி வச்சாரு!
இப்படிப்பட்ட பாபாவுக்கு, ஆன்மீக டிபார்ட்மென்ட்டில் இருந்து என்ன பட்டம் கொடுக்கலாம்? அடியார்கள் எல்லாரும் வந்து அடிச்சி விளையாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!:-)


இங்கு இன்னொரு செய்தியையும் சொல்லிக் கொள்ள பாபாவின் அனுமதியை வேண்டுகிறேன்!
பாபாவின் அன்னையார் திருமதி ஆர்.பொன்னம்மாள் அருமையாக ஆன்மீகக் கட்டுரைகள் எழுத வல்லவர்!
காமகோடி இதழில் இவரின் கட்டுரைகளை நான் சென்னையில் இருக்கும் போது தவறாமல் வாசிப்பேன்! ரொம்ப அடர்த்தியா சொல்லாது, என்னைப் போலவே லோக்கலாகப் பேச்சுத் தமிழில் ஆன்மீகத்தைச் சொல்லுவாய்ங்க!

ஆனா அப்போ, இவங்க தான் பாபாவின் அம்மா என்பது எனக்குத் தெரியாது!
இந்த ஒட்டக்கூத்தர் ஒலிப்பேழைப் பதிவைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன்!
திருமதி ஆர்.பொன்னம்மாள் அவர்களின் வலைப்பூ இங்கே!

முன்பு ரவியின் நேர்காணலில் சொல்லப்பட்ட அதே எண்ணங்களும், விழைவுகளும் தான் பாபாவையும் நேர் காண வைத்தது!
பாபாவின் பல்லூடகப் பார்வைகள், நிச்சயம் மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் என்பது அடியேன் நம்பிக்கை! அந்த நம்பிக்கை இந்த நேர்காணலில் மேலும் வலுப்பட்டது!
Thus Spake Baba....


1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?

முதல் கேள்வி: 'தானாய் தெரிந்து கொள்வது'.இது சாத்தியமில்லை. புத்தகம், பட்டறிவு, நண்பனுக்கு தொலைபேசி போட்டு கேட்டறிவது போன்றவை மட்டுமே எனக்கு சாத்தியம். குறுங்கதை மூலம் இதை விளக்கலாம்.

மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்ய (கொஞ்சம் பேக்கிரவுண்ட் விரும்புபவர்களுக்கு: கீதா சாம்பசிவம்: "வெற்றியைக் குறிக்கும் நாள் இது!") சங்கரர் செல்கிறார். செல்லும் வழியில் 'தேங்காய் மண்டிக்காரனை' பார்க்கிறார்.

எல்லாரும் தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்தால், அவன் வித்தியாசப்படுகிறான்.
சன் டிவியில் வடிவேலு பிள்ளை போல் 'மாயாஜாலம்' என்று உரைத்தவுடன்,
'அர்ஜூனா.. அர்ஜூனா' பாடலில் சமத்துவ சரத்குமார் முன் நமீதா வளைவதைப் போல் நெளிந்து இளநீர்களைப் பறிப்பதற்கு வசதியாக தென்னை மரம் சாய்கிறது. அவனும் பறித்துக் கொண்டவுடன், வழக்கம்போல் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த டெக்னிக், ஆதிசங்கரருக்குத் தெரியாது.
'தெரிந்து என்ன ஆகப் போகிறது?' என்று அலட்சியப்படுத்தாமல், அவனிடம் சென்று சீடனாக சேர்ந்து, மரங்களை வளைவிக்கும் நுட்பத்தை அறிந்து கொள்கிறார்.

ஆதிசங்கரரோ ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்க விரும்புபவர். தேங்காய் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு ஏறி 'காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு' என்று ரஜினி கூட அட்வைஸ் விடும் நிலைக்கு ஆகிவிடுவார். என்றாலும் புதியது அறிய உற்சாகத்துடன் கற்றுக்கொள்ள விரும்புகிறார்.

இதெல்லாம் முடிந்து மண்டனமிச்ரரின் வீட்டுக்கு சென்றால், அவர் வீட்டில் அன்று திவசம் என்பதால் வாசற்கதவு தாளிட்டிருக்கிறது. எதிர்த்தாப்பில் பார்த்தால் தென்னை மரம் நின்று கொண்டிருக்கிறது.. வளைய சொல்கிறார். வளைகிறது. மேலேறி நின்று செர்ஜி பூப்காவாக உயரந்தாண்டி வீட்டுக்குள் சூப்பர் ஸ்டார் எண்ட்ரி கொடுக்கிறார்.
கதையின் முடிவில் மாரல்: 'களவும் கற்று மற; ஆன்மிகமும் கற்று வை'

இரண்டாவது கேள்வி: 'ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?'
எல்லாமே அவசியந்தான். எலியட் ஸ்பிட்சர்களுக்கு சிற்றின்பம் தேவையில்லாமல் மோட்சம் பெற வைக்கவாவது ஆன்மிகம் தமிழ்ப் பதிவுலகத்துக்கு அவசியம்.


2. நீங்கள் ஆன்மீகம்/இலக்கியம் கலந்த பதிவுகள் படிப்பீர்களா? இல்லை போரடிக்கும் என்று ஓடிவிடுவீர்களா? எதைப் படிப்பீங்க? எதை விடுப்பீங்க?

நான் பெரும்பாலும் படிப்பதில்லை. அலுவலில் கொடுக்கும் பத்து பக்க ஒலை போல் இருந்தால் ஒவ்வாமை இன்னும் அதிகரிக்கிறது.
தங்களின் புதிர்களில் 'இந்து சமயத்தில் எனக்கு எல்லாமே தெரியும்' என்னும் அகந்தையைப் போக்கிக் கொள்ள மேலோட்டமாகவாது பார்ப்பதுண்டு. இதற்கும் இன்னொரு குட்டிக்கதை.

இப்பொழுது ஆதிசங்கரரின் சிஷ்யருக்கு செல்வோம். அவருடைய பெயர் பத்மபாதர். இவருக்கு இஷ்ட தெய்வம் நரசிம்மர். எல்லா முனிவர்களும் போல் காட்டுக்குப் போய் நரசிம்மர் கண் முன்னே பிரத்யட்சம் ஆவதற்காக மோனநிலையில் இருக்கிறார். காடு மாறி காடு வரும் ஃப்ரெஷர் வேடன் இவரைப் பார்க்கிறான்.
தட்டியெழுப்பி, 'அய்யா.. சாமீ! எதுக்கு இப்டி ஃபீலிங்கா உக்காந்துண்டு இருக்கீங்க? ஊர்வசி மேல லவ் ஃபெய்லியரா!' என்று கொக்கி போடுகிறான்.

பத்மபாதரும் பொறுமையாக, 'இந்தக் காட்டில் சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் இருப்பவரை கண்ணுறுவதற்காக தியானித்துத் தேடுகிறேன்' என்று குறிக்கோளை விளக்குகிறார். 'அம்புட்டுதானே... ராவுக்குள்ளாற உங்களுக்கு யுபிஎஸ்ஸிலோ டிஎச்ல்லிலோ டெலிவரி செஞ்சுடலாம்' என்று சூளுரைத்து விட்டு கிளம்புகிறான்.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.'

என்று குமரகுருபரர் சொன்னது போல் அவனுடைய அன்றாட வேலையான வேட்டையை விட்டான். நண்பகல் பழரசம்; மதியத்திற்கான மான் ஃப்ரை; சாயங்கால கேடோரேட்; கொஞ்சம் சியஸ்டா என்று எல்லாமே நினைவில் வரவில்லை. சூரிய அஸ்தமனமும் ஆகிவிடுகிறது. குத்தீட்டியை எடுத்து மாய்த்துக் கொள்ள செல்கிறான். கண்ணப்பருக்கு வந்தது போல் காட்சியளிக்கிறது அந்த மிருகம்.

கொஞ்சம் உல்லுவா காட்டி சண்டைக்குப் பின் அடிபணிந்து நாயாக கூடவே வருகிறது.
பத்மபாதர் மிரண்டு போகிறார். கணித அரசி சகுந்தலா தேவியாகக் கணக்கிட்டு, 'உமக்காக 87,600+ மணி நேரம் தவமிருந்தேனே! பத்து மணி நேரத்தில் அவனுக்கு வந்துவிட்டீரே!!' என்று க்ளையண்டிடம் பில்லிங் ரேட்டை பெருக்கும் குந்துரத்தராக கேள்வியெழுப்பினாலும் விடை+நீதி எளிது: 'வேண்டும் என்கிறபோது வேடனைப் போல் வேங்கடவனைக் கட்டியிழுத்துக் கொள்ளலாம்; இன்றைய தேவை சி#, இன்ன பிற மைக்ரோசாப்ட் நுட்பமும் ஊசிப் போகாத தமிழ்ப்பதிவு மசாலாவும்'.


3. ஆன்மீகப் பதிவுகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்துக்கும் ஏதாச்சும் நன்மை இருக்கா?

சுருக்கமான பதில்: நிச்சயமாக.

விரிவான தோட்டாப்புள்ளிகள்:
  • அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களுக்கு சன் டிவி பொழுதுபோக்கு போரடிக்கும்போது
  • புதிய வார்த்தைகளை, சொற் குவியல்களை, பதங்களை, ஆக்கங்களை வெளிக்கொணரும் பழங்கால இலக்கியங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும்போது
  • சோறு ஊட்டும்போது 'காக்காய் வடை' கதைக்கு பதில் புதிதாய் புனைவதற்கு உதவும்போது
  • தமிழ்ப்பதிவுகள் எல்லாமே குப்பை என்று பொதுமைப்படுத்தும்போது 'தெய்வ நிந்தனை செய்யலாமா?' என்று சுட்டிகளைக் காட்டும்போது
  • அந்தக் கால 'அவர்கள்' சத்தம் போடாதேவாகவும்; மகாபாரதம் 'தளபதி'யாகவும் உருமாறும் கற்பனைப் பஞ்சத்தைப் போக்குவதற்கு உதவி இயக்குநர்களுக்கு ஐடியா கொடுக்கும்போது


4. சமூக அவலங்கள், மொழி வெறுப்பு, தாக்குதல்கள் - இவை மிகும் போதெல்லாம் இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன? (எடுத்துக்காட்டு; தில்லைப் பிரச்சனை)

தில்லை, ஜெயேந்திரர் (அல்லது) இருள்நீக்கி சுப்பிரமணியன், பிரேமானந்தா போன்றவை வெளிப்படையாக தெரிபவை. ஆனால், இது போன்ற வெளியில் தெரியாத அவலங்களை வெளிக் கொணருவதில் தான் ஆன்மிகப் பதிவுகளின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

சுதா சேஷய்யனைப் படித்து கொண்டிருந்த காலத்தில் அவரின் எழுத்துகளில் பிழைகள் மலிந்து இருந்ததை உணர்ந்திருந்தேன். அந்த வருட கல்கி/இன்ன பிற இப்பொழுது கிடைப்பதில்லை என்றாலும், இது போன்ற வெகுசன ஊடக பத்தி எழுத்தாளர்கள் தவறாக எழுதுவதை தெளிவாக்கலாம்.

தெரிந்தவர் குடும்பத்தில் நடப்பவை, அதற்கான பொலிடிகலி கரெக்ட் 'ஆன்மீக'த் தீர்வுகளை 'கேள்வி-பதில்' போல் தரலாம்; இந்த மாதிரி நேரடி கைங்கரியங்கள் சிரமம்.

உதாரணத்திற்கு, என்னையே எடுத்துக் கொள்ளலாம்: சமீபத்தில் என் அம்மா எழுதி வெளியான நூலுக்கு 'இந்தப் புத்தகத்தை இந்த மாதிரி ஆண் பெயர் போட்டு இன்ன அடையாளங்களுடன் வெளியிட்டால்தான் இன்னார் வாங்குவார்கள்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு முகமூடி பெயரில்தான் வெளியிட்டிருக்கிறார்கள். இது கூட சமூக அவலம்தான். பெண் மீது நடக்கும் வெளிப்படையான அடக்குமுறை தாக்குதல்.

இவற்றை பெரிய அளவில் எடுத்துச் செல்ல ஜெயமோகனைக் காட்சிப்படுத்தும் விகடன் க்ரூப்பும் முன்வரப்போவதில்லை; அவர்களை வெளிக்காட்ட 'ஃப்ரீயா விடுப்பா' என்று அமைதிகாக்க சொல்லும் அம்மாவும் இடம் தரப் போவதில்லை. எனினும், இது போன்ற கழுத்தை நெறிக்கும் ஆன்மிகச் சூழலை உள்ளிருந்தே வெளிக் கொணர்வதில் பதிவுகளின் பங்கு மிகவும் முக்கியம்.


5. பதிவுலகம் தன்னைத் தானே முதிர்ச்சி கொள்ளும் நிலை வரத் துவங்கியுள்ளது (இதைச் சொல்ல, யாருப்பா உனக்குப் பிரியாணி வாங்கிக் கொடுத்தா?:-) திரட்டிச் சார்பின்மை, குழுப்பதிவுகள், துறைசார் பதிவுகள், ஒரே பதிவர்-பல்துறைப் பதிவுகள் என்று வளரும் சூழ்நிலையில்...
ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?

நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா என்று நீங்கதான் சொல்ல வேண்டும்:

  • நடை: சுருக்கமாக, நவீனமாக, சுய எள்ளலுடன் (உதாரணம்: Nothing New: The Story of Diwali to an ABCD) எழுதினால், இன்னும் சிலரைக் கவரலாம்.
  • உடை: பதிவு என்றாலே நேரடி வர்ணனை, புகைப்படம் (உதாரணம்: thirumylai: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்), விழியம் போன்ற பெர்சனல் டச் வேண்டும்; கொணரலாம்.
  • கோர்ப்பு: ஆபிராம், ஆகார், சாரா(ள்) கதைக்கும் ஆதிசேஷன், அதிதி, அருணனுக்கும் முடிச்சுப் போட்டு, பல் மத ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகலாம்.
  • இணைப்பு: புதியதாக வருபவர்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எது பிடிக்கும் என்பதில் குழப்பம் இருக்கலாம்.
    பல்வேறு பதிவுகளை 'மகளிர் சக்தி' போல் ஒருங்கிணைத்து ஓடை உருவாக்கலாம்.
    பகுதிவாரியாகப் பிரித்து மா சிவகுமார் (annotated archives) போல் தொகுக்கலாம்.
    ஐம்பது வார்த்தைகளில் உபநிஷத்துகள், ஐந்து பதிவுகளில் இந்து மதம் என்று எளிமையான அறிமுகங்களைக் கொடுத்து இணைக்கலாம்.
  • ஊடக விமர்சனம்: அன்றைய 'வணக்கம் தமிழக'த்தின் தென்கச்சியை பிரித்து மேயலாம். சக்தி விகடன் போன்றவற்றில் வரும் நல்ல பதிவுகளுக்கு வெளிச்சம் பாய்ச்சலாம்; தனிப்பதிவில் சேமித்து வைக்கலாம். நாளிதழ்களில் வரும் ஆன்மிக சிந்தனைகளுக்கு விவாத மேடை அமைக்கலாம்.

    தங்களின் பதிவில் இடமளித்தமைக்கு நன்றிகள் பல :)

    அன்புடன்
    பாலாஜி
    பாஸ்டன்


    //நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா//
    ஹிஹி! அடுத்த கட்டமே தான்! அதையும் தாண்டிப் புனிதமானது!
    நன்றி என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன் பாஸ்டன் பாலானந்த சுவாமிகளே! :-)

    என்ன மக்களே!
    மாதவிப் பந்தலுக்குப் பிரதான ஆசாரியரா பாபாவை நியமித்து விடலாமா? கதை சொல்றாரு! குமரகுருபரர் கவுஜ சொல்றாரு! பட்டைய கெளப்புறாருல்ல?
    நகைச்சுவை/சுய எள்ளல் கலந்து தான் ஆன்மிகம் தரணும் என்பது அடியேனின் அசைக்க முடியாத நம்பிக்கை! தீர்த்தம்-னா கொஞ்சம் சுறுசுறுன்னு பச்சைக் கர்ப்பூரம் போட்டாத் தான் தீர்த்தம்! திருநீறின் மகிமையே தனி தான் என்றாலும், அதனுடன் பன்னீரும் ஜவ்வாதும் சேர்க்கும் போது நா மட்டும் மணக்காது, நாமும் மணக்கிறோம்! அது போலத் தான் ஆன்மீகத்துக்கும் நகைச்சுவை!

    ஆன்மீகப் பதிவாளர்களும் பின்னூட்டாளர்களும், பாபாவின் கருத்துக்கள் பற்றி திரண்டு வந்து எது நல்லது, எது அல்லது என்று விவாதிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
    ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டத்துக்கு - தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ஊர் கூடித் தேர் இழுக்க வாருங்கள்!
  • Read more »

    ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

    வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
    கே.ஆர்.எஸ்,
    கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
    குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

    உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
    Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

    ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

    Sri Kamalakkanni Amman Temple said...

    ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
    பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
    பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

    இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

    இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

    Back to TOP