Showing posts with label திருமலைக் கதைகள். Show all posts
Showing posts with label திருமலைக் கதைகள். Show all posts

Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!

"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"

"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"


தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.

"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.

"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.

வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"

தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"

"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"



தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.

"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"

"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!

எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"

திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!


115858699_771cce968c

தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு

(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி

(தெர தீயக ராதா)

(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ

திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்

(திரை விலக்க மாட்டாயா)

வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்

(திரை விலக்க மாட்டாயா)




கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!

கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....

குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!

பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!

தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!

அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!

நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.

மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!



மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!

Read more »

Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!

அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள் நுழைஞ்சீங்களோ.....இல்லையோ, அர்ச்சகர் கதவைப் படார்னு சாத்திடறாரு! - எப்படி இருக்கும் உங்களுக்கு?

கைக்கடிகாரத்தைப் பார்க்கறீங்க...மணி 11:10 தான் ஆவுது! பொதுவா 11:30 மணிக்குத் சாத்தறது தான் அங்கிட்டு வழக்கம்! அன்னிக்கி மட்டும் என்ன பிரச்சனையோ! ஐயா சாத்திப்புட்டாரு! உடனே நீங்க என்னவெல்லாம் பேச ஆரம்பிப்பீங்க? அதுவும் நீங்க ஒரு பெரும்புள்ளியாகவோ இல்லை பெரிய பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சவராகவோ இருந்தீங்கன்னா? அப்படியே கற்பனையில் ஓட்டிக் கொள்ளுங்கள்! :-)

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி நாள் இன்று! அவர் பாட்டுடன் ராகம் போல், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.
இன்னிக்கி தியாகராஜ ஆராதனை! (Jan 27, 2008). மேலே சொன்னது போல் அவர் வாழ்விலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்திருக்கு! பார்ப்போம், வாங்க!


சங்கீத மும்மூர்த்திகளில் இன்று முதலாவதாக வைத்துப் போற்றப்படும் தியாகராஜர், அன்றோ பரம ஏழை! அவருக்கோ "நிதியை" விட "சந்-நிதியே" சுகமாய் இருந்தது!

அவருடைய பாடல்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியில் பரவ ஆரம்பித்த போது தான், அவருக்கென்று சில சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனா குருதட்சிணை வாங்கிச் சம்பாதிக்கத் தெரிய மாட்டாமல், நாளொரு இராமன் பொழுதொரு இராமனாகவே இருந்தாரு தியாகராஜர்.

அன்னிக்கு என்னமோ திடீரென்று அவருக்குத் திருப்பதி யாத்திரைக்குப் போகணும் போல ஒரு உணர்வு! இதுவரை போனதே இல்லை!

அவர் இருப்பதோ தென் தமிழ்நாட்டில்! அதுவோ வட வேங்கடம்! தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் திருவையாறு கிராமத்தில் இருந்து, வண்டி கட்டிக்கிட்டுப் போகணும்னாக் கூட குறைஞ்சது ஏழு நாளாச்சும் ஆகும்! கைச்செலவுக்கு காசு வேறு வேணும்! என்ன செய்யலாம்?...தள்ளிப் போடலாம்!
அன்றிரவு புரண்டு புரண்டு படுக்கிறார்! தூக்கமே வரலை! ஏன் திடீர்னு இப்படி ஒரு உந்துதல்? இராமனிடம் மட்டுமே லயித்த தன் மனம், இன்று வேங்கடவனைக் காணத் துடிப்பது ஏனோ? ச்சே...எல்லாம் அந்தச் சிறுவனால் வந்தது!


போன வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த அந்தப் பொடிப் பையன் என்னமாப் பேசி விட்டான்! திருவரங்கம் இராமானுச மடத்தில் இருந்து ஊர் ஊராய் போய்த் தொண்டு செய்யறவன் போல! பேச்சு வாக்கில் வேங்கடவன் கோலமும் இராமனின் கோலமும் எப்படி எல்லாம் ஒத்துப் போகுது என்று அவன் சொல்லச் சொல்ல...இப்படி ஒரு ஆவல் தம்மைப் பற்றிக் கொண்டு விட்டதே!



வேங்கடவனுக்கும் இராமனைப் போல் அதே சடைமுடி! இன்றும் சடைமுடியைச் சற்றே தூக்கி விட்டுத் தானே நீராட்டுகிறார்கள்! மூர்த்தியின் தோளிலே காணப்படும் வில் ஏந்திய தழும்பு!

அதே கஸ்தூரி திலகம்! மார்பில் அதே திருமறு மச்சம்!
முழங்கால் வரை அதே போல் நீண்டு தொங்கும் கைகள்! அதே போல் மெல்லிய புன்சிரிப்பு!
இராமனுக்கு ஒரு சபரித் தாய் என்றால் இவனுக்கோ ஒரு வகுளைத் தாய்!
சபரி எச்சில் பழத்தை இராமனுக்குக் கொடுத்தாள்; அவனும் உண்டான்!
இந்த வகுள மாலிகையும் ருசியைச் சோதிக்க பழத்தைக் கடித்துப் பார்த்துக் கொடுக்கிறாள்! அதை இவனும் உண்கிறானே!

அனுமன் அவதரித்த மலை தானே திருமலை! இராமன் இல்லாமல் அங்கு அனுமன் தோன்றுவானா என்ன?
மேலும், மதுரையில் இருந்து வந்த ஒரு இராமனின் உற்சவ மூர்த்தியைத் திருமலைக் கருவறையில் இராமானுசர் நிறுவி இருக்காராமே!....


இப்படி எல்லாம் யோசித்து யோசித்து, உறங்காமலே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜருக்கு, சிற்றஞ்சிறு காலை ஒரு வழியாய்ப் புலர்ந்தது!
சிற்றஞ்சிறு காலை, "வந்துன்னைச் சேவிக்க ஒரு வழியும்" சேர்த்தே புலர்ந்தது!...

சென்னையில் இருந்து தன் பரம ரசிகர், கோவூர் சுந்தரம் முதலியார், கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு ஓலையும் உடன் அனுப்பி இருக்கிறார்!

திருமலை யாத்திரைக்குத் தியாகராஜர் சென்று வரவேண்டும்; அப்படியே வரும் வழியில் சென்னைக் கோவூரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்து அளவளாவ வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அந்தக் கோவூரில் உள்ள சிவபெருமான் மேல் தியாகராஜர் வாயால் சில பாடல்கள் பாட வேண்டும் என்று ஓலையில் தனியாக விண்ணப்பம் வேறு வைத்துள்ளார்.

அட, ரெண்டு நாளுக்கு முன்னால் தானே நமக்கே திருப்பதி போகணும்-னு தோனிச்சி? அதுக்குள்ள முதலியாருக்கு யாரு சொல்லி இருப்பா?
சரி, அப்படியே யாராச்சும் சொல்லி இருந்தால் கூட, சென்னையில் இருந்து திருவையாறு வருவதற்கே அஞ்சு நாள் ஆயிடுமே! - ஒன்றுமே புரியவில்லை தியாகராஜருக்கு! சரி.....இறைவன் திருவுள்ளம் வைத்ததால் தான், தரிசன பாக்கியம் அமைகிறது போலும் என்று நினைத்துக் கொண்டார்.

தம் சீடர்கள் சிலருடன் உடனே கிளம்பி விட்டார். திருமலை யாத்திரை கிளம்பும் முன் மறக்காமல் தன் குலதெய்வத்தையும் வழிபட்டுவிட்டு, பின்னரே கிளம்பினார்.
திருவையாறு, கும்பகோணம், கடலூர்,
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி,
காஞ்சிபுரம், திருத்தணிகை, புத்தூர்,
ரேனிகுண்டா, சந்திரகிரி, நாகலாபுரம் என்று எல்லா ஊர்களையும் தாண்டி இதோ வந்து விட்டார்கள் திருமலையின் அடிவாரம்!



திருச்சுகனூர் குளக்கரையில் அன்னையை - அலர்மேல் மங்கையைக் கண்ணாரக் கண்டாகி விட்டது! இனி அப்பனைக் காண்பதொன்றே கருத்து! அடிவாரத்தில் ஆழ்வார்களை வணங்கி விட்டு, கிடுகிடுவென்று மலை ஏறுகின்றார்கள் குருவும் சீடர்களும்! அச்சோ, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதே!

தியாகராஜருக்கும் சற்றே வயதாகி விட்டதல்லவா? முன்போல் அவ்வளவாக நடக்க முடியவில்லை! ஆனாலும் ஆசை விடவில்லை! ஆசை உந்த உந்த, உலகத்தில் "முடவனுக்கும்" வாழ்க்கை "நடக்கிறது" தானே?
தியாகராஜரையும் ஆசை தான் உந்தி உந்தித் தள்ளியது! எந்த ஆசை? பொன்னாசையா? பணத்தாசையா? புகழாசையா? சரி....இசை ஆசையா? - உம் அது கூட இல்லை! பின் எது?
நோயே பட்டு ஒழிந்தேன், "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!!
- மெல்லப் பாசுரம் முணுமுணுக்கப்படுகிறது!

இதோ ஏழு மலையும் ஒருவழியாக ஏறி விட்டனர்! இரவும் நன்கு கவிந்து விட்டது! ராத்திரி ஆகி விட்ட படியால், சுவாமி புஷ்கரிணி எனப்படும் கோனேரியில் யாரும் நீராடவில்லை! கை கால்களை மட்டும் சுத்தம் செய்து கொள்கின்றனர்! அது மட்டும் தானா? யாருமே மனதைச் சுத்தம் செய்து கொள்ளவில்லையா என்ன?....அன்று தியாகராஜருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை! அவர் மனத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருக்கு!

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன்!
பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!
அரியே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருளே!!


குளத்தின் நன்னீரால் சுத்தமாவதற்கு முன்பே, அந்தப் பாசுரத்தைக் கேட்டு வந்த கண்ணீரால், மனது எப்போதோ சுத்தமாகி விட்டது!
குளத்தின் கரையில் உள்ள வராகப் பெருமாளை முதலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் ஓடோடிச் செல்கின்றனர் கோபுர வாசலுக்கு!

தங்க வாசல் தாண்டி இதோ ஆனந்த நிலையத்துக்குள் வந்தாகி விட்டது! சற்றுக் கண் திரும்பினால் போதும், வைத்த மா நிதி கிடைத்து விடும்! எம்பெருமான் அகப்பட்டு விடுவான்! அதோ தீப ஒளி தெரியுது! பச்சைக் கர்ப்பூர வாசனை துளைக்குது!
இதோ கரியவன், நெடியவன் தெரிகி..... ஐயகோ! இது என்ன கொடுமை?
அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!

அன்று ஏனோ, அர்ச்சகர்கள் கடுகடு என்று உள்ளனர்! கொஞ்சம் கூடச் சிரிப்பு இல்லை!! - உம்...எல்லாரும் வெளியே போங்க! போங்க!! இத்தோட நாளைக்குக் காலையில் தான்!
அடப் போங்கைய்யா! எத்தன வாட்டிய்யாச் உங்களுக்கெல்லாம் சொல்லுறது? கேக்கவே மாட்டீங்களா? ஜருகும்மா ஜருகு! பதண்டி பதண்டி!! எவரய்யா அக்கட? வெள்ளு, வெள்ளு!
ஏம்பா...பெரியவரே...காது என்ன செவிடா? உனக்கு மட்டும் தனியாச் சொல்லனுமா? போ...போ!!

தியாகராஜர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகுது! யாராவது திட்டினால் இந்த மனுசன் திருப்பித் திட்ட வேண்டியது தானே? அதை விட்டுட்டு, ஏன் இப்படிக் கண் கலங்குறார்?

ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்??

எம்பெருமானுக்கும் தியாகராஜருக்கும்.....இடையே.....அந்தக் கரிய பெரிய திரை!!!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா!

(திரை விலகுமா?...அடுத்த பாகத்தில்!)



Read more »

Saturday, November 04, 2006

"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!
அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!
சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!
இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.

ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!
ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த போதும், அவர் கூடவே இருந்து, அவருக்குத் தொண்டு புரிவது என்பது வேறு!
அதுவும் வயதான காலத்தில், ஊஞ்சல் ஆடிக் கொண்டு, மஞ்சூரியன் ஃப்ரைஸ் சாப்பிட்டோ, இல்லை பஹாமாஸ் வெகேஷன் போயோ, ஜாலியாக இருக்கலாமே!
அதை விட்டு விட்டுத் தினமும் நாலு மைல் நடந்து தண்ணிக் குடம் சுமக்க தலையெழுத்தா என்ன?

சிற்றஞ் சிறு காலை; லேசான இருட்டு!
ஓத்தையடிப் பாதை; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; பயந்த தனி காட்டு வழிக்குத் துணை எம்பெருமான் நாமங்கள்!
வயதான ஒரு பெரியவர், தலை மேல் பெரிய தண்ணீர்க் குடம் சுமந்து கொண்டு கிடுகிடு என்று நடந்து செல்கிறார்......எங்கே? எதற்கு?
பாபவிநாசம் என்ற நீர்வீழ்ச்சி திருமலையின் மேல் உள்ளது. மிகப் பழமையானது; தூய்மையான, சுவையான, பாறை நீர்!!
அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் சன்னிதி நோக்கிச் செல்கிறார் அம்முதியவர்.
எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கும் (நீராட்டு/அபிஷேகம்), மற்றும் பூஜை தீர்த்ததிற்கும் அந்த நீர் மிகவும் உகந்தது!

"பற்றே ஒன்றும் இலேன்; பாவமே செய்து பாவியானேன்,
மற்றே ஒன்று அறியேன்; மாயவனே, எங்கள் மாதவனே.
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா,
அற்றேன் வந்துஅடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டு அருளே!"
என்ற திருமங்கை மன்னனின் பெரியதிருமொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டே, ஓடுகிறார் நம்பிகள்! மலை இறக்கம் ஆயிற்றே!

"தாத்தா கொஞ்சம் நில்லு!
களைப்பா இருக்காப் போல இருக்கு! கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்!"
யாருப்பா அது, இவ்வளவு காலையில்?...அட ஒரு வேடன்! தொழிலுக்குக் கிளம்பிட்டான் போல!
"அப்பா, இது எம்பெருமான் தீர்த்தம்! ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது! அதனால் ஒண்ணு பண்ணு!
இந்தா இதைப் பருகி விடு! ஒரு கல் தூரம் கூட இல்லை பாபவிநாசம்;
பருகி விட்டு, அங்கு போய் எனக்கு மீண்டும் புது நீர் எடுத்து வாப்பா!
நான் வயதானவன், மீண்டும் மேடு ஏறக் கஷ்டமாய் உள்ளது!
இன்னும் பல தூரம் செல்லணும்; நீ சீக்கிரம் வந்தால், எம்பெருமான் திருமஞ்சனம் தடையிலாமல் நடக்க ஏதுவாய் இருக்கும்!"

பாபவிநாசம்

ஆகாசகங்கை

"அட போ தாத்தா, தண்ணி கேட்டா கொடுப்பியா, அதை வுட்டுட்டு பெருசா கதை சொல்ற!
அதுவும் என்னை வேற வேலை வாங்குற!
நான் ஒண்ணும் தவிச்ச வாய்க்குத் தண்ணி கேக்கல! சும்மா தான் கேட்டேன்;
அது சரி, உன்னை அடிச்சுப் போட்டுக் குடத்தைப் புடுங்குனா நீ என்னா பண்ணுவே?"

நம்பிகளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! இவனிடம் என்ன பேசமுடியும்? பார்வையும் பேச்சும், தாகத்தால் தவிப்பவன் மாதிரியும் தெரியவில்லை!
விடுவிடு என்ற நடக்க ஆரம்பித்தார்.
விடுவானா ஆன்ம வேட்டையாளன்?
வேங்கடத்தான் அல்லவோ அவன்!
"யோவ் தாத்தா, நில்லு!" - "அப்பா, என்னைத் துரத்தும் தூரத்துக்கு, அந்தச் சுனை கிட்டத் தானே இருக்கு! வீண் அலம்பல் பண்ணாதப்பா"
"எனக்கு அடிச்சுப் புடிங்கித் தான் எப்பவும் பழக்கம்; ஏதோ வயசாளின்னு பாத்தா ரொம்ப தான் பண்ணுறியே"

மீண்டும் விடுவிடு நடை தான்! வேங்கடத்தான் வேடிக்கை வேட்கையாளன் ஆயிற்றே!
பார்த்தான்....வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்தான். குடத்தில் ஓட்டை!
நீர் பொத்துக் கொண்டு வருகிறது. பின்னாலேயே வந்து இரு கைகளாலும் பருகினான்!
நம்பிக்குச் சுமை குறைவது தெரிந்து, திரும்பிப் பார்க்க, அழுகையே வந்து விட்டது!
"அடேய், உனக்கு நீர் தரக் கூட நான் மறுக்கவில்லையே! இப்படிப் பாத்திரதையே உடைத்து விட்டாயே! இன்று திருமஞ்சனமாயிற்றே!
மீண்டும் சிரமப்பட்டு எடுத்து வந்தாலும், ஓட்டைக் குடம்; எல்லாம் வீணாகி விடுமே" என்று அழ ஆரம்பித்து விட்டார்!

வேடன் பார்த்தான். வயதானவரும் குழந்தையும் ஒன்றல்லவா?
அழக் காண அழகாகுமா?
வில் அம்பால் அங்குள்ள ஓர் உச்சியைத் துளைத்து நீர் பிரவாகம் செய்தான்!
"தாத்தா, இதோ பார் ஆகாச கங்கா தீர்த்தம்! இது நீர் விழ்ச்சி இல்லை என்றாலும், இதுவும் சுனை தான்!
இனி அவ்வளவு தூரம் நடந்து வருந்தாதீர்!
நீர், இதில் இருந்தே நீர் - எடுத்துச் செல்லும்!!
இதுவும் விஷ்ணுப் ப்ரீதியே! இதோ உம் குடம்", என்று சொல்லி மறைந்து விட்டான்.

நம்பிகள் வாயடைத்துப் போய் விட்டார். புதிய ஆகாச கங்கை நீர் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேரத் தாமதம் ஆனது!
அர்ச்சை ரூபத்தில் உள்ள இறைவன், அர்ச்சகர் மேல் ஆவேசித்து, காட்டு வழி நிகழ்ச்சியை அனைவரும் அறியுமாறு உரக்கச் சொன்னான்.
"தாத்தா" என்று என் வாயால் நானே விரும்பி அழைத்த திருமலை நம்பிகள், இனி "தாத்தாச்சார்யர்" என்றும் அறியப் படுவர் என்று அருளினான்!

தண்ணீர் அமுது உற்சவம்



திருமலை நம்பிகள்

மேலும் மழையினாலோ, இன்ன பிற காரணங்களாலோ, இந்தப் புதிய ஆகாச கங்கை தீர்த்தம் வரத் தாமதம் ஆனால் கூட,
கோவிலுக்குள்ளேயே இருக்கும் பொற்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கக் கடவது என்று வரையறுத்து அருளினான்!
அடியவர், பணி செய்கையில் கூட, எந்த இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்று எண்ணும் நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
"என்ன செய்வியோ, ஏது செய்வியோ (hook or crook); எனக்கு வேலை முடிய வேண்டும்", என்று சொல்லும் தலைவர்கள் மத்தியில்,
தலைவர்க்குத் தலைவன் அல்லவா நம் வேங்கடத்து அண்ணல்!
தயாசிந்து உடைய தயை சிந்தும் வள்ளல் அல்லவோ அவன்!

இன்றும் இந்த வேடுவன்-கிழவர் விளையாட்டை மார்கழி மாதத்தில் திருமலை மீது நடித்துக் காட்டுகிறார்கள். தண்ணீர் அமுது உற்சவம் என்று இதற்குப் பெயர்!
நீர் வண்ணா, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!



திருமலை நம்பிகள் குறிப்பு:
மேலே நாம் கண்ட திருமலை நம்பிகள் (ஸ்ரீசைல பூர்ணர்), ராமானுசரின் தாய்மாமனும் ஆவார். ராமானுசருக்கு அவ்வாறு பெயர் இட்டதே இவர் தான்;
இராமாநுஜன் = இராம+அநுஜன் = இராமனின் தம்பி = அதாவது இலக்குவன்!
ஆதிசேஷனின் அம்சமானதால் இவ்வாறு பெயர் சூட்டினார்.
(லக்ஷ்மண முனி என்ற பெயரும் இராமானுசருக்கு உண்டு-ஆதிசேஷன் தானே இலக்குவனாகவும், பின்னர் பலராமனாகவும், பின்னர் ராமானுசராகவும், அதன் பின் மாமுனிகளாகவும் வந்தது!)

ஆளவந்தாரின் சீடரான திருமலை நம்பிகள், திருவரங்கத்தில் இருந்து, பின்னர் கைங்கர்யத்துக்காக (இறைத்தொண்டுக்காக) திருமலையில் வந்து தங்கி விட்டார்.
இராமானுசருக்கு ராமாயணம் கற்பித்த குருவும் கூட!
திருமலை அடிவாரத்தில் நடந்த இந்த வகுப்புகளின் போது,
மதுரையில் இருந்து ராமனே - இலக்குவன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோருடன், விக்ரக உருவில் வந்தது தனிக்கதை!
பழுத்த வயதில், தொண்டில் சிறந்து, பின்னர் இறைவன் அடி சேர்ந்தார் நம்பிகள்!

ராமானுஜர் காலத் திருமலையில் முதற்குடிமகன்கள் என்றால் (First Citizens of Tirumala) அது திருமலை நம்பிகள், மற்றும் அனந்தாழ்வான் தான்!
அவர்கள் செய்த பணி தான், இன்று நாம் வசதியாகத் தரிசனம் செய்ய முடிகிறது!


ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில குறிப்பு:

பொற்கிணறு (தெலுங்கில்: பங்காருபாவி), தரிசனம் முடித்து வெளி வந்த உடனேயே தென்படும்.
படியேறி தீர்த்தம் வாங்கச் செல்லும் வழியில் உள்ளது இது.
அதை ஒட்டினாற் போல் உள்ள அறை தான் அன்னப்பிரசாதங்கள் செய்யும் சமையல் அறை (லட்டு செய்யும் இடம் வேறு).
அங்கு பெருமாளின் பசி போக்கிய தாயாகக் கருதப்படும் வகுளா தேவி, சிலை உருவில் இருக்கின்றாள்; இன்றும் சமையலை அவளே கவனிப்பதாக ஐதீகம்!

பொற்கிணறு

திருமலை நம்பிகள் வாழ்ந்த குடில், தெற்கு வீதியில் உள்ளது; ஊஞ்சல் மண்டபத்துக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் ஏறும் இடத்தில், இக்கோவிலைக் காணலாம்.
க்யூ வரிசையில் இருந்தே இதைப் பார்க்க முடியும்! கண்டு வாருங்கள் அடுத்த யாத்திரையில்!
Read more »

Thursday, October 12, 2006

பாகம்2 - கடப்பாரையால் இறைவன் வாங்கிய இடி

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்.)

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

அழகாக உடுத்திக்கொண்டு, நகைகள் பூண்டு, ஒரு நடுவயதுப் பாலகனாய், அனந்தனின் மனைவியார் முன் தோன்றினான்.
"அம்மா, இவ்வளவு சிரமப் படுறீங்களே; விலகுங்க நான் உதவி செய்யறேன்; உங்க புருஷனுக்கு மனசாட்சியே இல்லியா? உங்கள இப்படி வேல வாங்குறாரே!"
அய்யோ, அவர் வேணாம்ன்னு தான் சொன்னாரு. நான் தான் தனி ஒரு ஆளா கிடந்து கஷ்டப்படுறாரேன்னு, அவர் திருப்பணியிலும் துணை செய்கிறேன்.
"சரிம்மா, மண்கூடைய இப்பிடி கொடுங்க; நான் கொட்டிட்டு வர்றேன். நீங்க அப்பிடி போய் மர நிழலில் உக்காருங்க.."
கூடையை வாங்கின கூடாரை வெல்லும் கோவிந்தன், தன் வேலையைக் காட்டினான்.

மண்ணை நேராகக் கொண்டு போய் அனந்தன் வெட்டும் பள்ளத்திலேயே, அதன் மறுபக்கத்தில் கொட்டினான். அனந்தனும் இதை கவனிக்க வில்லை!
வெறும் கூடையைக் கொண்டு போய் அவளிடம் கொடுத்து, "போங்கம்மா, போய் எடுத்து வந்து தாங்க. கொட்டிட்டு வர்றேன். நானே போய் எடுத்துக் கொள்வேன்; ஆனா உங்க புருஷனைப் பாத்தா கொஞ்சம் பயமாயிருக்கு. பெருமாள் பக்தர் மாதிரி தெரியாறாரு. அவங்க கிட்டே எல்லாம் நான் வம்பே வச்சிக்க மாட்டேன்!" என்றான் கபடன்!

அவளும் விவரம் அறியாது, சிரித்துக் கொண்டே செல்ல, இதுவே வாடிக்கையானது.
சிறிது நேரத்தில் அனந்தன் கண்டு பிடித்து விட்டார். மெல்லச் செய்யும் மனைவி இன்று இவ்வளவு வேகமாகச் செய்கிறாளே என்று திரும்பிப் பார்க்க, அய்யோ அவருக்கு அழுகையே வந்து விட்டது! பாடுபட்டு வெட்டும் கேணியிலேயே மீண்டும் மண் அள்ளிப் போட்டால், சும்மாவா? நமக்கெல்லாம் கோபம் வரும்; எரிந்து விழுவோம்! ஆனால் இராமானுசரின் அடியவர் ஆயிற்றே! கண்கள் சிவப்பதற்குப் பதிலாகப், பனித்தன!

"ஏம்மா, ஏன் இப்படி செய்தாய்? பேறுகாலக் குழப்பமா? யாராவது வெட்டின இடத்திலேயே மீண்டும் கொட்டுவாங்களா? எவ்வளவு உழைப்பு வீணாப் போச்சு! சரி நானே பார்த்துக் கொள்கிறேன். நீ போ!"
அய்யோ இல்லீங்க, அந்தப் பையன் தான் உதவி செய்யறேன்னு...என்று முழுதும் சொல்லி முடிக்க....பாலகனும் முன்னே வந்து நின்றான்!
"அப்பா, உன்னைப் பாத்தாலே தெரியுது, தங்கச் செம்பில் மண் வைத்து விளையாடுபவன் நீ. அந்த வேங்கடவன் போல! இந்த மாதிரி வேலை எல்லாம், உழைக்கும் இராமானுசரின் அடியார் கூட்டம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! நீ சென்று வாப்பா"


அனந்தாழ்வான்



அனந்தனும்,
ஆசார்யர் இராமானுசரும்

..அய்யோ எனக்கு வெட்டும் இடம் எதுன்னு சரியா தெரியாதுங்க. இனிமே ஒழுங்கா செய்யறேன் சாமி!
அனந்தனும் சரியெனச் சொல்ல, "மிகச் சரியாக" மீண்டும் அதே இடத்திலேயே வந்து மண்ணைக் கொட்டினான் பாலகன். அவ்வளவு தான்! வந்ததே கோபம் அனந்தனுக்கு! கையில் கடப்பாரையுடன் பையனைத் துரத்தி ஓட, நம் கண்ணனுக்கு ஓடி ஓளியக் கற்றுத் தர வேண்டுமா என்ன?

"சரி பையன் இனி வர மாட்டான், நாம் திரும்பி விடுவோம்", என்று எண்ணிய அனந்தன் காலில் கல் தடுக்கி கீழே வீழ,
பாலகன் என்ன ஏது என்று திரும்பிப் பார்க்க,
விழும் அனந்தன் கையில் இருந்த கடப்பாரை எகிறி, பையன் முகத்தைப் பதம் பார்க்க,
எல்லாம் கணப்பொழுதில் நடந்து விட்டது!
பாலகன் முகவாய்க் கட்டையில் சரியான அடி, வீக்கம், இரத்தம்.
ஓடியே போய்க் கோவிலுக்குள்ளே மறைந்தான் சிறுவன்.
அலைமகளும், மண்மகளும் பதறி விட்டனர்!
ஆனால் நாடகம் இன்னும் முடியவில்லையே!
சிரித்தான் கள்ளச்சிரிப்பழகன்!!
அனந்தன் மிகவும் பயந்து போய் விட்டார். நேராகக் கோவிலுக்குள் ஓடினார்.

அதற்குள் கோவிலில் இருந்து பதறியடித்து அர்ச்சகர் வெளியே ஓடி வர, என்ன ஏது என்று சிறு கூட்டமும் சேர்ந்து விட்டது. "ஐயோ, பெருமாள் முகத்தில், மோவாயில் இருந்து இரத்தம் வழிகிறது" என்பதே எங்கும் பேச்சு! திருமலை நம்பிகளைக் கூட்டி வர ஆள் அனுப்பினார்கள். காலையில் நடை சாத்தும் போது கூட நன்றாகத் தானே இருந்தது! இதுவரை இப்படி ஒன்று நடந்ததே இல்லையே என்று, இயலாமையால் அர்ச்சகர் அரற்றினார்! அனந்தனுக்கு இதயமே வெடித்து விட்டது.

"என்ன காரியம் செய்து விட்டோம். பையனின் விளையாட்டு விபரீதமாகப் போயிற்றே! அறியாது செய்தது தான் என்றாலும் அரியை அல்லவா துன்புறுத்தி விட்டேன்!
மலர்ப்பணி செய்யச் சொன்னால், மாப்பிணி அல்லவா உண்டாக்கி விட்டோம்; எப்படி விழிப்பேன் என் இராமானுசர் முகத்தில்!" என்று கண்ணீர் மல்கினார். குழந்தைக்கு அடிபட்டதால், மாலை வீடு வரும் கணவன் என்ன சொல்வாரோ என்று அஞ்சும் சாதாரணத் தாயின் நிலைமை போல் இருந்தது! கூட்டத்தின் முன்னிலையில், நடந்ததை எல்லாம் சொல்லி அழுதார்கள் கணவனும் மனைவியும்!

"என்ன தான் பக்தியும் ஞானமும் இருந்தாலும், ஹூம், இறைவன் நேரே வந்து நின்ற பின்னர் கூட, அறிய முடியாத பாவியாகிப் போனேனே!
இது தான் என் பக்தியின் லட்சணம்", என்று நொந்து கொண்டார்.
திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை,

"அய்யோ இறைவனுக்கு வலிக்குமே" என்ற எண்ணம் பளிச்!
உடனே ஓடினார். பச்சைக் கர்ப்பூரம் பொடிசெய்து, மருதஇலை, மகரந்தப்பொடி, துளசிச்சாறு விட்டுப் பிசைந்து, உருண்டையாக்கி அர்ச்சகரிடம் கொடுத்தார்.
"ஐயா, சுவாமிக்கு வலிக்குமே, இதை அடிபட்ட இடத்தில் பூசுங்கள்", என்று சொல்ல, வெறும் கல்லா அவன்? நம் கண்ணுக்குள் நிற்கும் கண்ணன் அல்லவா!!!

பொடியைப் பூசவும் இரத்தம் நிற்கவும் சரியாக இருந்தது!
அடியார் கூட்டம் வாயடைத்து நிற்க, அர்ச்சகர் மேல் சுவாமி அரூபமாகச் சொன்னதை, அத்தனை பேரும் காதாரக் கேட்டார்கள்!
"வருந்த வேண்டாம் அனந்தான் பிள்ளாய்! உன் உள்மனதை இன்று ஊர் அறிந்தது!
எப்படி எம் மார்பில் ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமாய், ஸ்ரீவத்சம் என்ற மச்சம் (திருமறு) உள்ளதோ, அதேபோல்,
இனி என் மோவாயிலும் இந்தப் பச்சைக் கர்ப்பூரப் பொட்டு அனுதினமும் சார்த்தப்படும்!!
என்னைத் தரிசிப்பவர் எல்லார்க்கும், என் மார்பில்,
அலைமகள் அடையாளம் தெரிவது போல், மோவாயில்
அடியவர் அடையாளமும் தெரிவதாக
!!" என்று அருளினான் நம் அண்ணல்!!

மோவாயில் பொட்டழகன்

இன்றளவும் இந்தப் பச்சைக்கர்ப்பூரப் பொடியை இறைவன் மோவாயில் சார்த்துகிறார்கள்!
பக்தன் கொடுத்த அடியை அவமானமாக மறைக்கத் தோன்றாது, பெருமையுடன் வெளிக்காட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!!
திருமுகத்தில் உள்ள இந்த வடுக்கு "தயா சிந்து" என்பது பெயர்!
இந்தத் "தாயினும் சாலப் பரிந்து", 'தயை சிந்தும்' உள்ளம் வேறு யாருக்கு வரும்???

பின்னர், நந்தவனமும், கேணியும் அனந்தன் முயற்சியால் அழகாக அமைந்தது. மலர்கள் எல்லாம் மனங்களைப் போல் பூத்துக் குலுங்கின!
துளசியோடு, மல்லிகை, முல்லை, மாலதி என்னும் குடமல்லி, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரி, செந்தாமரை, தவனம், மரு, மகிழம், செண்பகம் எனப் பலப்பல மலர்கள்.
அதுவும் முதலில் பூத்த மகிழச் செடியின் மேல் தனி பாசம் நம் அனந்தனுக்கு!
இன்றும் உற்சவர் மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தில்(அதாங்க, காட்டுல கூட்டாஞ்சோறு:-)), இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதை தரப்படுகிறது!


அந்த மகிழ மரம்


இவர் அனந்த நாகத்தின் அம்சம் (ஆதி சேஷன் என்றும் சொல்லுவார்கள்). ஒருமுறை தோட்டத்தில் பாம்பு தீண்டியும், "நாகத்தையே நாகம் தீண்டுமா" என்று தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருந்துவிட்டார்!
மலர் மொட்டுகள் மலர்ந்து, வண்டுகளின் எச்சில் படுவதற்கு முன்பே பறித்து விடுவார்; மாலைகள் கட்டி, திருவேங்கடமுடையானுக்கு மலர்ப்பணி செய்து வந்தார்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழி தனியன் பாடல், "திருமலைக் கோவில் ஒழுகு விதிகள்" (code of conduct) மற்றும் வடமொழியில் "திருவேங்கடமலை வரலாறு" போன்ற நூல்களும் எழுதினார்!

பின்னர், பலகாலம் திருமலையை விட்டு நீங்காது, நகரப் பணிகளையும் செய்து, தன் குருவான இராமானுசருக்குப் பின், இறைவன் திருவடி நீழலை அடைந்தார் அனந்தன்!

இன்று திருமலையில் உள்ள இவ்வளவு உற்சவச் சிறப்புக்கெல்லாம் ஆதி காரணம் இந்த அடியவர், அனந்தாழ்வார் தான், என்றால் அது மிகையே இல்லை!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!
(அடுத்த பதிவில், அடியார்: பெரிய திருமலை நம்பிகள்;
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் குழு, Tirumala.org, Thanjavurpaintings.com)



ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில தகவல்:

இப்பவும் திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்!

அனந்தன் பூத்தொடுத்த இடத்திற்கு யமுனைத்துறை என்று பெயர். இன்றும், அவன் திருமேனியில் சார்த்தப்படும் மாலைகள் இங்கு தான் தொடுக்கப்படும்; தரிசனம் முடிந்து, உண்டியல் செலுத்தி, பின் நரசிம்மர் சந்நிதியைச் சுற்றி வரும் போது இம்மண்டபத்தைக் காணலாம். காலை (அ) மாலை என்றால் மாலை தொடுப்பதையும் நேரே காணலாம்.


திருமலையில், இறைவன் அணிந்த மலர்கள்,மாலைகள், பிரசாதமாக யாருக்கும் தரப்படுவது கிடையாது! அனைத்தும் பூங்கிணறு (தெலுங்கில்:பூல பாவி) என்னும் கிணற்றில் போட்டு விடுவார்கள்! இக்கிணற்றுக்குள் மண்மகள் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இலவச பிரசாதம், தொன்னையில் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது இந்தக் கிணற்றைக் காணலாம்! சில சமயம், மேலே பூமாலைகள் வழிந்தும் கிடக்கும்!

அடுத்த முறை திருமலை யாத்திரையில் இவற்றை மறக்காமல் கண்டு,களித்து வாங்க!

Read more »

Friday, October 06, 2006

இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1

மோவாய்க் கட்டையில் ஒரு பெரிய வெள்ளைப் பொட்டு. எங்கனாச்சும் பாத்தா மாதிரி இருக்குதுங்களா? ஒரு கடவுளின் திருவுருவச் சிலையில் தான்!
யாருன்னு தெரியுதுங்களா?
ஏன் அந்தப் பொட்டு? சும்மா இல்லை! அடிபட்டதற்கு மருந்து! என்னது அடியா?
ஏன் என்ன ஆச்சு, பாக்கலாம் வாரீகளா?

நடந்தாய் வாழி காவேரி!
ஒரே ஆறாக ஓடி வரும் காவேரி, அரங்கத்துக்குச் சற்று முன்னால் இரண்டாகப் பிரிகிறாள்!
அரங்கத்தைத் தாண்டிய பின் மீண்டும் சேர்ந்து ஒரே ஆறாக ஓட்டம்!
தாம் ஓடும் வழியில் அரங்கன் துயில்கிறானே!
அவனுக்கு மாலையாகப் பிரிந்து, நீர் மாலை சூட்டி, பின்னர் மீண்டும் சேர்ந்தாளோ? கங்கையிற் புனிதமாய காவிரி ஆனாளோ!

ஆறிரண்டும் காவேரி...
அழகான தென்னைமரம்!
அழகான மரம் நடுவில், அமைதியாய் ஒரு குடிசை. குடிசைக்குள், சுமார் ஒரு ஐம்பது பேர் உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து தங்கள் மெய்மறந்து இருந்தனர்.
தீவெட்டி வெளிச்சமும், புகையும் மணமும் அப்படியே அந்தச் சூழலில் கலந்து ஒரு வித ஜொலிப்பை ஏற்படுத்தி இருந்தது!
அத்தனை பேருக்கும் நடுவில் ஒரு வயதான மனிதர். வசீகரமான குரல். கருணை பொழியும் கண்கள்!!

தம் சீடர்கள் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். கூடவே அன்று தீவெட்டி பிடிப்போரும், அவர் தம் குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்கள். இது அவர் அன்றாட வழக்கம் தான். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், சமூகத்தின் கடைநிலையில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு பிரிவினரை அழைத்து, அவர்களைத் திருக்குலத்தார் எனச் சிறப்பிப்பார். அவர்களின் தொண்டினைப் பாராட்டிப், பிரசாதங்கள் அளித்துப் பின்னர் தான், தம் உரையைத் தொடங்குவது அவர் வழக்கம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே
"

என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாட, கூட்டம் அப்படியே சொக்கிப் போய் இருந்தது!
திருவாய்மொழி சொற்பொழிவு அல்லவா?
"என் தந்தை, தந்தைக்கும் தந்தை, முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் பாட்டன் என்று எல்லாரும் தரிசித்தவனே! அவ்வளவு மூத்தோனே! அழகிய இளையோனே! வானவர்கள், தங்கள் தலைவனோடு வந்து உன்னைத் தரிசிக்கிறார்கள். எங்கும் பூக்கள் சிந்தி, உன் இல்லம் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தப் பூ மணத்தில் மகிழும் இறைவா..." என்று சொல்லிக் கொண்டே சென்றவர், அப்படியே நிறுத்தி விட்டார்! கண்களில் கண்ணீர் தாரை தாரையாக!!

எல்லோருக்கும் அதிர்ச்சி; ஏன் இந்த இராமானுசர் திடீர் என்று அழுகிறார்? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்! ஒரு சிறுவன் ஓடி வந்து, "தாத்தா, அழுவாதீங்க, இந்தாங்க", என்று தன் முண்டாசைக் கொடுக்கிறான். அவரும் சற்றே ஆறி மேலும் தொடர்கிறார்.

"பாத்தீங்களா இந்தப் பாசுரத்தை. "சிந்துபூ" என்று பூக்கள் குலுங்குவதாகச் சொல்கிறது. எப்போதும் கும்மென்று வாசம் வீசும் மலர்கள் அவன் அணிவதாகச் சொல்கிறார் நம்மாழ்வார்! ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன தெரியுமா?
ஒரு பூமாலைக்கே வழியின்றி இருக்கிறான் அவன்! ஏதோ காட்டுச் செடிகள் படர்ந்துள்ளன. அவனுக்கா இந்த நிலை? சென்ற முறை நான் சென்ற போது, பார்த்து விட்டு மிகவும் வருந்தினேன்! அடியவரும், என் தாய்மாமனும் ஆன பெரிய திருமலை நம்பிகளை அங்கேயே விட்டு விட்டு வந்தேன். அவரும் வயதானவர்...பாவம் தன்னால் முடிந்த தண்ணீர் கைங்கர்யத்தை அவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்."
(குறிப்பு: இராமானுசருக்கு இராமாயண பாடம் சொல்லிக் கொடுத்த குருவானவர் திருமலை நம்பிகள்; இருப்பினும் இராமானுசர் இப்போது வைணவ தர்மத்துக்குத் தலைமை வகிப்பதால், ஏனையோர் அனைவரும் தொண்டர்களாகக், கருதப்படுகின்றனர்.)


"என் மனதில் ஒன்று ஓடுகிறது. பேசாமல், திருமலையில் ஒரு குளம் வெட்டி, நந்தவனம் அமைத்து, மலர்களைத் தொடுத்து, அவனுக்கு பூப்பணி (புஷ்ப கைங்கர்யம்) செய்தால் என்ன?

பாம்பணி இறைவனுக்குப் பூப்பணி செய்ய இங்கு உள்ள யாரேனும் முன் வருகிறீர்களா?"

அவ்வளவு தான்; ஒரே நிசப்தம்!
ஒரு சிலருக்கு இராமானுசரைப் பிரிய வேணுமே என்று ஏக்கம். அரங்கனைப் பிரிவதா என்ற துக்கம்.
பல பேருக்கு திருமலைக் குளிர் என்றாலே பயம்.
இன்னும் சிலர் மடத்தில் கிடைக்கும் உணவு மற்றும் இதர வசதிகள் இன்றித் திருமலையில் தனியாக வாழணுமா என்ற தயக்கம்.
ஒருவரும் முன் வரவில்லை.
உடையவருக்கே (இராமானுசர்) வருத்தமாகப் போய் விட்டது. யாரையும் வற்புறுத்திக் கடனே என்று தொண்டு செய்யுமாறு சொல்ல அவர் மனம் இசையவில்லை!

"நானும் என் மனைவியும் செல்கிறோம் சுவாமி!"
ஆ...யார் அது...பின் பக்கத்தில் இருந்து குரல் வருகிறதே! ஓ சில மாதங்களுக்கு முன்பு தான் வந்து சேர்ந்தான் ஒரு அடியவன்! அவன் தான்!
"உன் பேர் என்னப்பா?"
அனந்தாழ்வான்
"உன் மனைவி கர்ப்பவதி ஆயிற்றே"
கவலை வேண்டாம் சுவாமி; நான் பார்த்துக் கொள்கிறேன்.
"ரொம்பவும் குளிருமே"
பாசுரங்களின் கதகதப்பு போதும் சுவாமி.
"ஆகா நீர் அல்லவோ ஆண் பிள்ளை. பயண ஏற்பாடுகளைச் செய். மனைவியை மலை ஏற விடாதே; டவாலிகள் உதவியுடன் தூக்கிச் செல்"
இன்றே கிளம்புகிறேன் சுவாமி. குருவின் ஆணையே பெரிது!

அவன் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் இராமானுசர். பின்னர் சீடர்களைச் சிரித்தபடியே பார்க்க, அனைவரும் தலை குனிந்தனர்! அவருக்குத் தெரியும், "திருமலையில் இனி எல்லாம் சுகமே"!

சொன்ன வண்ணம் செய்தான் அந்தச் சீடன். மலை மேல் மனைவியுடன் சென்று வராகரை வழிபட்டான்.
பின்பு நெட்டழகன, நீல மேனியால் நிறை கொள்ளும் நிவாசனைத் தரிசித்தான்.
குரு சொன்னதை விடக் கொடுமையாக இருந்தது! ஒரே சிறிய விளக்கு; ஆழ்ந்து நோக்கினால், அலங்காரங்கள் ஏதுமின்றி, ஒற்றைத் துணி உடுத்தி, ஓங்கி நின்று கொண்டிருந்தான் செல்வத்தின் நாயகன்!
கண்களில் நீர் வழிய அன்றே பணிகளை ஆரம்பிக்க உறுதி பூண்டார்கள் இருவரும். பெரிய திருமலை நம்பிகள் தன் தள்ளாத வயதில், தன் வீட்டிலேயே இடம் கொடுக்க, அவர்களும் அங்கேயே தங்கினர்!

பூங்காவுக்கு இடம் பார்த்தாயிற்று! பலி தேவதைகளையும் எல்லைக்காவல் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாயிற்று! பூங்காவிற்கு நீர் வேண்டுமே! அருகிலேயே கேணி ஒன்று தோண்ட முடிவாயிற்று! நம் அனந்தன் தோண்டத் தோண்ட, அவன் மனைவி, அவளால் முடிந்த வரை மணலை அள்ளிக் கொட்ட முடிவு செய்தனர். அனந்தன் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். ஆனால் அவள் தான் ஜாடிக்கேத்த மூடியாயிற்றே!
நல்ல கணவன், நல்ல மனைவி!

கர்ப்பவதிக்கு மூச்சு வாங்குகிறது. திருமலை வாசனுக்கே பொறுக்கவில்லை. அவளுக்கு உதவி செய்ய வேடம் போட்டு வந்தான் வேதன்.
ஐயாவிற்குத் தான் எப்போதும் பக்தர்களிடம் விளையாடுவதே பொழுது போக்கு ஆயிற்றே!
அதை இங்குக் காட்டலாம் என்று நினைத்தான் போலும்! அவனுக்குத் தெரியாது, நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

Read more »

Sunday, September 24, 2006

பாகம்2 - கண்டேன் ஸ்ரீதேவியை!

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்)

இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான். முழங்கால் முறிச்சு என்று சொல்லப்படும் படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வந்து விட்டோம்.
பெரிய பெரிய மின்-காற்றாடிகள் தெரிகின்றன மலை மேல். அடைந்தாயிற்று வேங்கடத்தை! இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை! பூந்தோட்டங்கள் தென்படுகின்றன.


குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்ற நம்மாழ்வார் பாடல் நிழல் ஆடுகிறது. எதற்கு இவர் இறைவனைத் தொழச் சொல்லாது, மலையைப் போய் தொழச் சொல்கிறாரே!

சரி, உடைமைகளை எடுத்துக் கொண்டு, பதிவு செய்த அறையில் போய் நண்பர்கள் எல்லாரும் தங்கினோம். உடல் தூய்மை மட்டும் செய்து கொண்டோம்.
நண்பர் ராஜ் iodex தைலம் தானும் தடவி, எங்களுக்கும் தடவி விட்டார். பின்ன ஸ்ரீதேவிய எங்களுக்கு முந்திப்போய் படம் எடுத்தாரே, எப்படி பிராயச்சித்தம் செய்வதாம்? :-)

சரி பசி எல்லோருக்கும். ஒரு வெட்டு வெட்டி விட்டு, கொங்குரா ஊறுகாய ஒரு கடி கடிச்சிக்கினோம். நேராக ஸ்வாமி புஷ்கரிணி என்று சொல்லப்படும் குளத்துக்கு சென்று, நீர் தெளித்துக் கொண்டோம்.
கோனேரி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இதற்கு உண்டு. முதலில் கோனேரியின் வடமேற்கு மூலையில் உள்ள வராகப் பெருமாள் ஆலயம் சென்று வழிபட்டோம்.
திருமலை "ஆதி வராகத் தலம்". எனவே திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் முன்னர், வராகப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பது நியமம். கோவிலில் முதல் பூஜையும், நிவேதனமும் இவருக்கே!
சிறிய உருவம். பூமகளை மடியில் சுமந்து, அவளுக்கு ஞான உபதேசம் செய்யும் ஞான வராகராக திகழ்கிறார்! வராகத்தை கேழல் என்று ஆழ்வார் தூயதமிழில் அழைத்தது நினைவுக்கு வந்தது! சொன்னேன் ஆனந்திடம். அவன் என்னை ஒரு முறை முறைத்தான், செல்லமாக!

அனந்த நிலையம் எனப்படும் அவன் கருவறைக் கோபுரம் தங்கப் பூச்சில் தகதக என மின்னியது! மின்னுவதெல்லாம் பொன்னல்ல! ஆணிப்பொன் மேனி உள்ளே இருக்கிறது! வாருங்கள் என்பது போல மின்னியது!!

கையில பார் கோட் போட்ட டோக்கனைக் கீழ்த் திருப்பதியிலேயே கட்டிக்கிட்டோமே! நேரே வரிசையில் போய் நின்னுட்டோம்.
இந்த பார் கோட் ஐடியா IIM மாணவர்கள் பிராஜெக்டாம்! சூப்பர் அப்பு! இதனால் முன்பு போல் பல மணி நேரம் கொட்டகையில் அடைந்து கிடைக்காமல் திருமலையின் மற்ற ஆன்மீகப் பகுதிகளைப் பார்த்து வரலாமே.அம்மணிகளுக்கு ஷாப்பிங் டைம் வேறு எக்ஸ்ட்ரா கிடைக்கும்:)

வரிசையில் நின்று விட்டோம். பலவிதமான மனிதர்கள். ஆனால் ஒரே நோக்கம்! இறை முகம் காணல்!
பணம் படைத்தவர்கள், அவ்வளவாகச் செல்வச் செழுமை இல்லாதவர்கள்,
குணம் படைத்தவர்கள், அவ்வளவாகக் குணச் செழுமை இல்லாதவர்கள்,
பல மொழிகள், பல உடைகள், பல கதைகள், பல சுவைகள்!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

"நின்றனரே" என்று நம்மாழ்வார் வரிசையில் நிற்பதையும் சேர்த்தே தான் குறிப்பிட்டாரோ?


சுற்றுலா சென்றால் கூட, ஒரே குடும்பத்தார் கூட அவர் அவர் விரும்பும் ஸ்பாட்டுகளுக்குச் சென்று திரும்பலாம். ஆனால் இங்கே எல்லோரும் ஒரே பொருளைக் காணத் தான் ஓயாது நிற்கிறார்கள்!
அவர்கள் மேம்போக்காக தரிசனம் செய்கிறார்களோ, இல்லை.... "வினையேன் அழுது" அவனைப் பெறுகிறார்களோ, ஆக மொத்தம் அந்தப் "புன்னகை மன்னன்" குளிர் முகம் காணத் தான் இவ்வளவு விழைவு. அதுவன்றிப் பிறிதொன்று இல்லை!
ஆகவே, அந்தக் கணத்தில் எல்லாருமே அவன் அடியார் தான்! அடியார்க்கு அவனே ஆரமுதன்!

பிரபலங்கள், பிரபலங்களின் சபலங்கள் என சிறப்பு அனுமதியோ, பணம் கொடுத்தவரோ, பண்பாளரோ, தொண்டரோ, துறவியோ எவராயினும் எனக்கென்ன? எவராயினும் சரி, சற்றுக் கூட கைபடாது கால்படாது உள்ளே செல்லத் தான் முடியுமா? அப்படிச் சொல்லத் தான் முடியுமா?

வரிசையில் ஊர்ந்து கோபுர வாசல் கிட்டே வந்து விட்டோம். இரவு சுமார் 10:30 மணி. கோவில் மணியோசை, பேரிக் கொம்பு முழக்கம். ஓகோ அவனுக்குப் பசி போலும்! நிவேதனம் ஊட்டுகிறார்கள்! சரி சாப்பிடட்டும். பசியால் வாடும் முகத்தைப் பார்க்க மனம் வருமா? நாம் காத்திருந்து பொறுமையாகவே பார்ப்போம்! ஹேய்....என்ன ஏதோ சலசல சத்தம் கேட்கிறதே? எதற்கு கூச்சல்??

ஆனந்த் தான் கூவினான். "டேய் ஸ்ரீதேவி தான்பா; அங்கே பாரேன்!".

மச்சி, குச்சி என்ற விளிப்புகள் ஏனோ அப்போது அவன் வாயில் வரவில்லை!
ஆமாம் ஸ்ரீதேவி தான், குடும்பத்தாருடன்!

வழியில் பார்த்தற்கும் இப்போதைக்கும் வித்தியாசங்கள்! பொறுப்பான உடுப்புகள் உடுத்தி இருந்தனர். நாங்கள் கூப்பிடும் தொலைவே இருந்தனர்!கோவில் அதிகாரியும், அவர் கூட திருமண்காப்பு நெற்றியில் துலங்கும் ஒரு அர்ச்சகரும் அவர்களை வரவேற்றனர்!
உள்ளே அவர்கள் அனைவரும் நுழையும் போது, வரிசையில் உள்ள கூட்ட மிகுதியாலும், அந்தக் கோபுர வாசலில் தடுப்புகள் வெறும் கயிறாகவே இருந்த காரணத்தாலும் சற்றே தள்ளு முள்ளு!

உடனே அந்த அர்ச்சகர், பணியாளர்களை விட்டு வரிசையை நிறுத்தச் சொன்னார்! நல்லது தான்!!ஆனால் ஒருபடி மேலே போய் "இந்தக் காட்டுமிராண்டிக் குரங்கு கூட்டம் எப்பவுமே இப்படித் தான்; ஏமி புத்தி லேது ஈ கோட்டி (குரங்கு) ஜனாலுக்கி.....xxxxxxxxxxxxxxxxxx.....நு ராம்மா", என்று படபடவென பொரிந்து விட்டார்... பல வார்த்தைகள் பதிவின் தன்மை கருதி சென்சார்!!

எங்கிருந்து தான் எனக்குக் கோபம் வந்ததோ தெரியவில்லை. குரலை நன்றாக ஓங்கி, "யாரைக் காட்டுமிராண்டிக் குரங்குகள்-ன்னு சொல்றீங்க? ஆஞ்சனேயர் அவதரித்த மலையில் அடியார்களை இழிவாகப் பேச உங்களுக்கு நாக்கு எப்படி வந்தது?

'அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ' என்று அடியவரைத் தான் தினம் தினம் முதலில் துதிக்கிறீங்க. மறந்துடாதீங்க!
' சர்வ அந்தர் ஆத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்' என்பதை மறந்து விட்டீர்களா?
சமூகத்தில் பிரமுகர்கள்-னா அவர்களுக்கு மரியாதை செய்து அழைத்து போங்க, வேண்டாம்-ன்னு சொல்லலை. அதற்காக வாய்த்துடுக்கு வேண்டாம்" என்று கண்கள் பனிக்கக் கத்தி விட்டேன்.

ஒரே நிசப்தம். நண்பர்கள் என்னைப் பிடித்துக் கொண்டனர். அர்ச்சகர் சற்று விக்கித்து தான் போய் விட்டார். அந்த அதிகாரி என்னை ஒரு முறைமுறைத்தார். யாரும் மேற்கொண்டு பேசவில்லை!
நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர். அனைவரும் உள்ளே சென்று விட்டனர்.கூட்டம் என்னையே பார்த்தது! எனக்கே ஒருமாதிரி ஆகி விட்டது!

நண்பர்கள், "டேய், உனக்கு இவ்ளோ கோபம் கூட வருமா? முன்ன பின்ன நீ இப்படிக் கத்தி பாத்ததே இல்லடா. போலீஸ்-ல்லாம் பக்கத்துல இருக்காங்க. பாத்து டா." என்றனர்.

ஆனந்த் மட்டும் "அந்த நாமக்கார ஐயிருக்கு இருக்குடா. வச்சி வாங்கணும். இவ்ளோ பேசிட்டு ராம்மா ராம்மா -ன்னு கொஞ்சி கொஞ்சி கூட்டினு போறாரு.இதே நாங்க சத்தம் போட்டிருந்தா எகிறி இருப்பாங்க; ஆனா நீ ஏதோ மந்திரம் எல்லாம் சொன்னியா. வுட்ட சவுண்டுல ஆளூ கப்சிப்", என்றான்.
"சரிடா விடு, வயசுல பெரியவர்" என்றேன். மனம் மட்டும் கனம்!! நாம ஏதும் தப்பா பேசிடலையே என்ற பயம்!

நகர்ந்தோம்....நகர்ந்தோம். கொடி மரம் கடந்து, சன்னிதியில் நுழைந்து...கருடன் இரு கரம் கூப்பிச் சேவித்துக் கொண்டிருந்தான்.
சரி நாமும் முகத்தை இப்படி இடப்பக்கம் திருப்பினால்...அய்யோ!

நெடிது உயர்ந்த நீல மேனி நெட்டழகன், முகம் கொள்ளாச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்??

கண் அழகா? சிவந்த வாய் அழகா?
சிரிக்கும் முகம் அழகா? திரண்ட தோள் அழகா?
கை அழகா? கருத்த இடுப்பழகா?
கால் அழகா? இல்லை மால் அழகா?
அய்யோ!
தீப விளக்கொளியில், பூலங்கி சேவை (பூக்களால் ஆன அங்கி).

இளங்கோவடிகள் வியந்தது போல்,
பகை அணங்கு ஆழியும்(சக்கரம்) பால் வெண் சங்கமும்(சங்கு)
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய


திருவேங்கடமுடையான் திருமுகம், திருமார்பு, திருக்கரங்கள்...சேவித்து....அதற்கு மேல் முடியவில்லை. ஜரிகண்டி, ஜரிகண்டி, தய சேசண்டி....திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, கண்கள் பனிக்க வெளியே வந்தோம்.
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் என்று ஆண்டாளே தரிசன மகா பாக்கியம் கிடைக்க வில்லையே என்று புலம்பும் போது, நாமெல்லாம் எங்கே?

தீர்த்தம், திருப்பாதம்(சடாரி) பெற்று, உடையவர், நரசிம்மர் சேவித்து, உண்டியல் செலுத்தி, வலம் வந்து, வெளி வந்தோம். முன்பெல்லாம், கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத்துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்களைப் பார்ப்பேன். உடனிருப்பார்க்கு விரும்பினால் சொல்லுவேன். இம்முறை ஏனோ லயிக்கவில்லை!

அருண் மீண்டும் பழைய நிகழ்ச்சியைப் பற்றி எழுப்பினான். லட்டு சாப்பிட்டுக் கொண்டே, "ஒண்ணுமே இல்லீங்க. எல்லாம் பணம் தான் பேசுது! எப்படியோ நல்லா ஏத்தி வுட்டுட்டாங்க இந்தக் கோயிலை!
நம்ம தஞ்சாவூர் பக்கம் எல்லாம், எவ்ளோ பெருமாள் கோயில் ஆள் அரவம் இல்லா இருக்குது! யாரோ பெரிய பெரிய முனிவங்க, அப்பறம் ஆழ்வார்-ன்னு சொல்றாங்களே, அவுங்க எல்லாம் பாட்டு படிச்சு இருக்காங்களாம் தஞ்சாவூர்ல! ரொம்ப பக்தி கதையெல்லாம் இருக்குதாம். இந்த திருப்பதி-ல அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னாலும் பணம் மட்டும் கொழிக்குது! அதை வச்சிக்குனு இவங்க ரொம்பவே ஆட்டம் போடறாங்க", என்றான்.

நான் அப்போது அவனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒன்றும் சொல்லவில்லை. பூமாலைக்கே வழியின்றி இருந்த திருவேங்கடமுடையான் பற்றியும் அவன் அருளுக்கு உருகி உருகிக் காதலித்த ஆழ்வார்கள், இராமானுசர், அனந்தாழ்வான், திருமலை நம்பிகள், தியாகராஜர், அன்னமாச்சார்யர், வட இந்திய ஹதிராம்ஜி மற்றும் பலப்பல கதைகளைப் பதிவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் உதித்தது. அதற்கு இப்போது தான் வேளை வந்தது!

//இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன. அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை// என்று குமரன் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டேன். வெறும் கதையாக இல்லாமல், இலக்கிய நயமாகச் சொன்னால், வடையுடன் கூடிய பொங்கலாக இருக்கும் அல்லவா:-) ? இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம மீட் பண்ணலாம். பயந்துறாதீங்க, இனி குறும்-பதிவாகவே இடுகிறேன்!!!

பி.கு:திருமலையான் பிரம்மோற்சவம் Sep 25 துவங்கி Oct 3 வரை, ஒன்பது நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிப் பதிவு! ஒரு/இரு வாகனம் (படத்துடன்);
ஒரு ஆழ்வார் பாடல் (12-இல், 10 பேர் நம்ம பாலாஜி மேல ஒரே லவ்-ஸ் பா)
அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்க!
Read more »

Saturday, September 23, 2006

பணமா? பக்தியா? ஸ்ரீதேவியே செப்புமா! - பாகம்1

இந்தப் பதிவில் ஸ்ரீதேவி என்பது நம்ம "மீண்டும் கோகிலா" ஸ்ரீதேவியைத் தான் குறிப்பிடுகிறேன். ஆனால் அவர்களைப் பதிவின் இறுதியில் சந்திக்கும் வரை, கொஞ்சம் அவரை மறந்து விடுவோமே? :-)

ஒரு புரட்டாசி மாதம். நண்பர்கள் ஐவர் புடை சூழ திருப்பதி சென்றோம். ரொம்ப நாள் கழித்துக் கூட்டாகச் செல்கிறோம். அவரவர் வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்து அனைவரும் நல்ல உற்சாக மனநிலையில் இருந்தனர்.
மலை ஏறிச் செல்வதாகப் பேச்சு. ரயிலில் ஒரே கும்மாளம்.

நவீனத் தமிழ் பண்பாட்டின் படி, "நமக்குத் தொழில் கலாய்த்தல்" என்று நாங்கள் எல்லாரும் கருமமே கண்ணாக இருந்தோம்.
ரேணிகுண்டாவில் வடை, சாயா (அட நம்ம SK, மற்றும் மன்னாரு கொடுத்து வுட்டாங்களா-ன்னுல்லாம் கேட்கக் கூடாது, சரியா?)
மலை ஏறப் போவதால் நிறைய சாப்டாதீங்கடா-ன்னு அட்வைஸ் பண்ணாரு ஒரு சின்சியர் சிகாமணி (அட நான் தானுங்க!)

வண்டி நகரத் தொடங்கியதும் சிறிது நேரத்தில் ஆனந்த் என்ற நண்பர், கதவு அருகே போய் நின்று கொண்டார்(ன்). (டேய், வலைப்பூக்காக உன்னை எல்லாம் அவர்,இவர் ன்னு சொல்ல வேண்டியதாப் போச்சே! கொடுமைடா சாமி :-))

என்ன என்று நான் அருகில் போய் கேட்க, அவன் திருப்பதி மலையைத் தூரத்தில் இருந்து பார்ப்பது தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினான்.
பச்சை பார்டர் போட்ட புடைவையில், மலை உச்சிகள் மட்டும் வெறும் செம்பாறைகளாகத் தெரிய, குட்டி குட்டி வெள்ளைக் கோபுரங்கள் கண்ணுக்குப் புலப்பட, இரவு விளக்குகள் மாலையிலேயே ஒளிர்விட, நீல மேகங்கள் சூழ்ந்த மாலை வானத்தை பார்க்கும் போது, ஏதோ rmkv பட்டுப் புடைவை டிசைன் போல பளிச் என்று இருந்தது.



வண்டியை விட்டு இறங்கி நேரே திருச்சானூர் சென்றோம். கலாய்த்தல் எல்லாம் நின்று போய் இருந்தது. பசங்க எல்லாம் பக்திமான்களாக மாறி இருந்தாங்க. கோவிலில் கண்ணனை முதலில் கண்டு, பின்னர் தாயாரை மனங்குளிர சேவித்தோம் (கும்பிட்டோம்). கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையாக பட்டர் (அர்ச்சகர்) தீபாராதனை காட்ட, அலங்காரத்தில் ஜொலித்தாள் மகாலக்ஷ்மி.



"அம்மா, அடுத்தது உன் புருஷனைத் தான் பாக்க போயிக்குனு இருக்கோம். எதுனா மெசேஜ் இருந்தா சொல்லும்மா, சொல்லிடறோம்" என்று நான் அவளிடம் சொல்ல, இதழ்க் கோட்டோரம் மென்முறுவலாக அவள் சிரிப்பது போல் தோன்றியது. பின்னர் வெளியே வந்து இலவச பிரசாதமான தயிர் சாதத்தைச் சுடச்சுட தொன்னையில் வாங்கிச் சாப்பிட்டோம். நண்பன் அருண், "இதுக்குப் பேர் தாண்டா ததியோதன்னம்" என்று சொன்னான். தயிர்சாதத்தைத் தப்பு தப்பா சொன்ன அவனை ஒரு மொத்து மொத்தி விட்டு, வண்டி பிடித்து மலை அடிவாரம் வந்து சேர்ந்தோம்.

அலிப்பிரி (அடிப்புளி) என்னும் அடிவாரத்தில் சூடம் எல்லாம் கொளுத்தினான் நவீன் என்ற இன்னொரு நண்பன். காலணி, பெட்டி எல்லாம் க்ளோக் ரூமில் கொடுத்து விட்டோம். அவர்கள் இலவசமாக மேல் திருப்பதிக்கு அனுப்பி விடுவார்கள். மேலே சென்றவுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். "உடன் பிறவா சகோதரன்" காமிராவை மட்டும் எடுத்துக் கொண்டோம். முதல் முதலில் பெருமாள் வாகனமான பெரிய கருடன் சிலையைக் கிளிக்கினோம்.

ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனால் தான் அதற்கு அடிப்புளி என்று பெயர். ராமானுஜர் இங்கு தான் ராமாயாண பாடத்தை தன் குருவிடம் கேட்டாராம்.
இங்கு பன்னிரு ஆழ்வார்களுக்கும் கோவில் உள்ளது. ஆழ்வார்கள் ஆதிசேடன் ரூபமாக உள்ள திருமலையின் மேல் கால் வைக்கவும் அஞ்சி, மலை ஏறாது கீழே இருந்தே இறைவனை வழிபட்டார்களாம். பெருமாள் பாதம் கோவில் ஒன்றும் உள்ளது. காலணிகளைக் காணிக்கை செலுத்துவார்களாம்.

வணங்கி விட்டு, ஏற ஆரம்பித்தோம். போட்டி வேறு! யார் சளைக்காமல் ஏறுகிறார்கள் என்று. எல்லாம் காளி கோபுரம் வரை தான். அப்புறம் பாக்கணுமே பசங்கள! இஞ்சி மிட்டாய் சாப்பிட்ட ஏதோ ஒன்று மாதிரி இருந்தோம். ஆனந்த், "டேய் மச்சான் ஒரு லெமன் சோடா அடிச்சுட்டு போலாம்டா" என்றான். உப்பு கரிக்க ஆகா, "உழைச்சு சாப்பிட்டா தாண்டா அருமை தெரியும்" என்பது இப்போது தான் தெரிந்தது.

மொத்தம் 4000 படிக்கட்டாமே. 11 கிமீ...இதுக்கே நமக்கு தாவு தீருது! இத்தனைக்கும் gym body! அங்க பாருடா அந்த குண்டு அம்மா, ஒவ்வொரு படியா குனிஞ்சி, குங்குமம் வச்சிகிட்டே வருது! எப்படித் தான் இதெல்லாம் பண்றாங்களோ. நமக்கு சும்மா நடக்குறதுக்கே மூச்சு முட்டுது!
சரி சரி ஒரு ஜென்டில்மேன் அக்ரீமெண்ட். போட்டி எல்லாம் வேண்டாம். அவரவருக்குத் தெரிந்த பாட்டு, கதை எல்லாம் சொல்லிக் கொண்டு, காலாற மெல்ல நடந்து செல்வோம் என்பதே அது!



படியேறும் போது, அவ்வளவாகத் திருப்பதியின் பகட்டும், தற்போதைய நாகரீக மயமாக்கலும் தெரிவதில்லை. எளிய மனிதர்கள், எளிய பக்தி தான் பரவலாக தெரிந்தது. இதற்காகவே ஒவ்வொரு முறையும் காலாற மலை ஏறிப்போக வேண்டும் போல் இருந்தது.

மலை ஏறஏற மனதில் ஒரு குளிர்ச்சி, "சில்லுனு ஒரு காற்றில்" செடிகொடிகளின் வாசனை. பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. "மலையில் ரிஷிகளும், இன்ன பிற பக்தி உள்ளங்களும் அரூபமாக வாசம் செய்கிறார்கள். அதனால் கண்டதையும் கூச்சல் போட்டுக் கொண்டு எல்லாம் ஏறக் கூடாது" என்று சொல்லுவாள். லேசான மழைத் தூறல்... தவளைகள் படிகளில் சத்தம் போட்டன. படிக்கட்டுகளும் செங்குத்து குறைந்து, நடக்க எளிதாக இருந்தது.
வழியில் அஞ்சனாத்ரி என்ற தகவல் பலகை. ஆகா திருமலை அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் அவதாரத் தலம் அல்லவா? மொத்தம் 7 மலைகள் ஆயிற்றே...மற்ற மலைகளின் பெயர்கள் என்ன? அடடா வழியில் போட்டிருப்பார்கள். நாங்கள் தான் பார்க்காமல் வந்து விட்டோம். வருத்தம் தான். ஆஞ்சனேயர் சிலை மற்றும் நடு வழி நரசிம்மர் கோவிலும் தாண்டி வந்து விட்டோம்.

மான், மயில் கூட்டங்கள் ஒரு இடத்தில். புள்ளி மான்கள் நிறைய இருந்தன. அந்தி மாலை இள வெயில் நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. மழைச் சாரல் வேறு. மேகக் கூட்டங்கள் ஒரு மலை மேல் அப்படியே படர ஆகா! ஏதோ குலு மனாலி மாதிரி ஒரு ஃபீலிங். ஏழைகளின் குலு மனாலி என்று நினைத்துக் கொண்டோம்!

இந்த மேகங்களைத் தான் ஆண்டாள் வேங்கடவனிடம் தூது விட்டாளோ? ஓர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே. "ஓ மேகங்களே போய் சொல்லுங்கள் உங்கள் வேங்கடத்தானிடம்; இப்படி எல்லாம் அவன் என்னைச் சோதித்தால், உலகில் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!" நண்பர்களிடம் சொன்னேன். ஆச்சரியப் பட்டார்கள். ஒருவன் கேட்டே விட்டான். "என்னடா இது சாமிய இப்படி எல்லாம் திட்டிப் பாட்டு எழுதி இருக்காங்களா...இல்லாக்காட்டி ஏதோ எங்களுக்கு தெரியாதுன்னுட்டு நீயே தமிழ்ல அள்ளி வுடறீயா?"



படிகளும் சாலையும் சேரும் இடத்தில், சர்சர் என்று இரண்டு கார்கள்....க்றீச் சப்தம்...காரிலிருந்து ஒரு பெரிய குடும்பம் இறங்கியது. அதற்குள் ஆனந்த் "மச்சான் டேய் 'நம்ம' ஸ்ரீதேவி டா" என்றான். அட ஆஆமாம் 'நம்ம' ஸ்ரீதேவி தான். சேசே...இல்லையில்லை...'நம்ம' வைக் கட் பண்ணுங்கடா!
கணவருடன் வந்துள்ளார் போல. நாங்கள் மற்றும் ஒரு கேரளக் குடும்பம். வேறு யாரும் இல்லை. எங்களைப் பாத்து மெலிதாகச் சிரித்தார். நாங்களும் ஹிஹி என்று சிரித்து வைத்தோம். (வேறு என்ன செய்ய).......?

மேகக் கூட்டங்களைப் பாத்து அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். "Excuse me, could you take a picture of the whole family behind the clouds?" என்று கேட்டார் அவர் கணவர்.
நான் ஒ யெஸ் என்று சொல்லிக் காலை முன்வைக்கும் முன் ராஜ் என்ற இன்னொரு நண்பர்(?) காமிராவை வாங்கி கிளிக்கி விட்டார். வாடா வா இவ்ளோ நேரம் கால்வலி அது இது....நடக்க முடியலன்னு வந்தவன், இப்ப மட்டும் இன்னா ஸ்பீடு! தாங்க்யூ படலம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்ப, மற்ற நண்பர்கள் எல்லாம் நம்ம ராஜை அன்பாக விசாரித்தார்கள் :-)

ஆனால் யாருக்கும் அப்போது தெரியாது, இதே ஸ்ரீதேவி்-யிடம் கோவில் வாசலில் சண்டை போடப் போகிறோம் என்று!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP