Tuesday, November 20, 2007

திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2

ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,
என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!

யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே!
ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே! மிருகமும் இல்லை! விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம்! இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :-)

பூதம்: ஹூம்! இது தான் சரி! நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்!
விளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு! - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்!
நாமே ஏற்றலாம்! பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று! சரி, எதை வச்சி ஏற்றுவது?
அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
இல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!

எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!

இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
நமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது!
ந ம
= ந (இல்லை) !
= ம (எனது)!!
= எனதில்லை! எனதில்லை!

ஓம் நமோ நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
அனைத்தும் பரம்பொருள் தந்தது! அனைத்தும் பரம்பொருள் தந்தது!

ஆகா! தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்! தமிழ் வேதம்!
பொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்!
அவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!


உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
உயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே! மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது!
ஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க! இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே!
விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


அன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
இன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...
ஞான விளக்கு ஏற்றினேன்! நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே!
என்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது!

(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்?
ஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்?
முதல் விளக்கு புற அழுக்கு அகற்ற! - அதான் உலகமும், சூரியனும்!
இரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற! - அதான் அன்பும், சிந்தனையும்!!

இறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!!!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்!)



முதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன!
இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று!
ஆகா...பெருந்திருடன் தான் அவன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது?

பொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று


விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்? கடவுளா? இல்லை! - ஒரு பெண்! - ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள்! மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்?
இருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்!ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்?
அவளே இவள்! - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை!
திரு! மகாலக்ஷ்மி! அவளைக் கண்டேன்!

திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!

பொன்மேனி கண்டேன்! - அடுத்து அப்பனைக் காண்கிறார்! தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்!

அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு!
பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும்! - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே! ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன?
பொய் விளக்கல்லவே இது!
மெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே! அப்பறம் எப்படி இப்படி?
(அடுத்த பகுதியில் நிறையும்)



இன்று கைசிக ஏகாதசி! (Nov 21, 2007)
தறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்!
சென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்!
//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள்! :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும்! அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்!

இந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்!
முதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்!

Read more »

Wednesday, November 07, 2007

திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!

திருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க! அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்! - ஹிஹி...புரியலீங்களா?
சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!

ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).
அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்!
தமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள்! சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது!

ஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள்! அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்!
இந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்!

பல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்!

இப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா?
வாய்ச்சொல் புரட்சியா? வாழ்வில் புரட்சியா? - எது வேண்டும்?

இறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது! இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்!
அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு!
இது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா? பதிவின் தலைப்பைப் பாருங்க! :-)

1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?

2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?

3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?

4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?

5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?

6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?

7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?




அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்!
(பூங் "கோவல்" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு! அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது!

தமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள்! பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்!)

புறநானூற்றிலும் திருக்கோவலூர் சொல்லப்படுகிறது! (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று!!
எங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்!
கடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க! காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி!

எதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா? - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது! (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)
அவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்!
அவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள்! முதலாழ்வார்கள் என்றே பெயர்! அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First! ஆக நிக்குது :-)
இப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது!

திவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு? அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி?
திரும்பி எப்படிக் கிடைச்சது?
திருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி? - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க!




திருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை! கும்மிருட்டு வேறு!
பெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்! அவர் பெயர் பொய்கையார்.

பொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே! இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம்! இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது!
உலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க! உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே!

அது ஒரு பக்தரின் வீடு போலும்! எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள்! அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும்! திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?

பொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு! குளிரத் தொடங்கி விட்டது! இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா? உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை! திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.
அதுவும் இல்லை! அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே!
(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!)
நாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன்! நான் நம்பிக்கையான ஆள் தான்! பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி!

சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்!
வீட்டில் உணவு தீர்ந்து விட்டது! பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி!

பொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி! நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்! வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க!

ஹூம்...என்னமோ தெரியலை இன்னிக்கி!
பசியும் எடுக்குறா மாதிரி இருக்குது! ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை!
ஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது! இறைவா!
கையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்!
டக் டக் டக்!
- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்!

பூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்!
இவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்!
நாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! (உட்காரலாம்)

இருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்!
மீண்டும் டக் டக் டக்!
இன்னொருவர் தட்டுகிறார்! அவரும் அடியவர் போல் தான் உள்ளார்!
பேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே!

பொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க! இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே!
இது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா?
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்!
குறுகலான இடம்! ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை!
நீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை!
கூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை!

திடீரென்று...கும்மிருட்டில்...
மூவருக்கும் மூச்சு திணறுகிறது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு!
யாரோ பிடித்து நெருக்கறாங்க! அச்சோ வலிக்கிறதே!!! - கள்வனோ?
(நாளை தொடரும்...)

Read more »

Wednesday, October 31, 2007

அமெரிக்கா ஆடும் பேயாட்டம்! (மீள்பதிவு)

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.
சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.
ஏன்? எதற்கு?
என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.
ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.
ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.





அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.
அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?
இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.
வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!






உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!
தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)
சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!
அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)
மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!


பழைய பதிவின், பின்னூட்டங்களின் சுட்டி இதோ
Read more »

Sunday, October 28, 2007

இராவணன் கோவில் மூடப்பட்டது!

தினமலர் செய்தி: (Oct 28, 2007)
ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.
கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.
ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்
.

அதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.

கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.

ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.



மேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது!
இராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது! அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா?
முதலில் பதிவிட எண்ணவில்லை!
எப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.

அப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே! அதை யாரும் பார்க்கவில்லையா? பார்க்காமலேயே சண்டை போடுகிறார்களா?
சரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்! :-)


பல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.

மேட்டர் ரொம்ப சிம்பிள்!

1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)

2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை!

3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம்! திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்!

அதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர்! அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி!
சிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்!
இராவணனின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்!
அதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது! :-)

காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!

ஆனால் நாம் தான்,
ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே! கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்!
இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?
இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)

Read more »

Sunday, October 21, 2007

புதிரா? புனிதமா?? - சிலப்பதிகாரம்!

வடைகளைச் சுட்டுடலாமா? :-) கீழே விடைகள் Bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள் பின்னூட்டங்களில்!
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

நமக்கே உரிய நம் தமிழக இலக்கியங்களில் நாம் ஆர்வம் காட்டினால் தான், அடுத்த தலைமுறைக்கு தமிழ் நயம் பாராட்டல் கொஞ்சமாவது மிஞ்சும்!
நாக இளங்கோவன், அவருடைய சிலம்பு மடல்கள் பற்றிப் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்! நன்றாக இருக்கு! உரை நடையில் இருப்பதால், படிக்க எளிதாகவும் இருக்கு! ஆங்காங்கே முக்கியமான பாடல்களை கொடுத்து, உரைநடையும் செய்யுளுமாய் வளைய வருகிறது! தவறாமல் படிங்க!! இதோ சுட்டி!

வெற்றியாளர்கள் யாவர்? (முதலிலேயே சரியாகச் சொன்னவர்கள் வரிசையில்.....)
வரலாறு.காம் - கமல், கெக்கேபிக்குணி, குமரன், ஜி.ராகவன், அனந்த லோகநாதன்


பரிசு? - சிலம்பு?
கழட்டிக் கொடுத்து கட்டுப்படியாவாது!
சுழட்டிச் சுழட்டிச் சிலம்பாட்டம் ஆட வேணும்னா சொல்லிக் கொடுக்கலாம் :-) வூட்டாண்ட வாங்க! சொல்லித் தாரேன்!

இதோ...முழு சிலப்பதிகாரக் கதையும்...ஈசியா புரியற மாதிரி...சிற்பங்களில் வடித்து வைத்துள்ளார்கள்! சிற்பத்தின் புகைப்படம் - பக்கத்திலேயே அதன் கதை! இது எங்கு இருக்கு? பூம்புகார் கூடத்தில் தான்!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆர்வம் மற்றும் முயற்சியால் உருவான கலைக் கூடம்! நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தளத்தில் உள்ள சுட்டி இது! இதோ பரிசு! க்ளிக்கோங்க!!

அடுத்த புதிரா புனிதமாவில் - வழக்கம் போல் கேள்விகளா இல்லாமல், ஒரு மாற்றம் இருக்கப் போவுது!




ஆதி காவியம்-னு இராமாயணத்தை வடமொழியில் குறிப்பிடுவாங்க! ஆனா நம் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை முதற் காப்பியம் என்று அறியப் பெறுவது சிலப்பதிகாரம் தான்!

மற்ற கதைகளை எல்லாம் அறிந்துள்ள நாம், நம் பண்பாட்டுக் காப்பியமான
சிலப்பதிகாரத்தை அதே அளவுக்கு அறிந்துள்ளோமா? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அதில் ஏதாச்சும் கதைகள் இருக்கா? அப்படியே இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சா தானே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு!

மூச்சுக்கு முந்நூறு முறை, தமிழ் தழைக்க வேண்டும் என்று குரல் கொடுக்குறோம். ஆனா நம்முடைய தமிழ்க் காப்பியங்களை நாமே முழுதும் அறிந்து வைத்துள்ளோமா? இல்லை அறியத் தான் முயற்சிகள் செய்துள்ளோமா?......
இல்லை, அறிந்த பின், அதன் கதையைத் தமிழுலகுக்கு மேலும் எடுத்துச் சொல்ல எண்ணியுள்ளோமா?

எனக்கு சிலப்பதிகாரத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதே கல்லூரியில் தான். சக மாணவர் ஒருவர் அதைச் சிலப்பதி"ஹாரம்" என்று சொல்லி கொஞ்சம் டகால்டி பண்ண, அப்போது கோபம் வந்து படிக்கத் துவங்கினேன் :-)

வள்ளுவர் அறம்-அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
ஆனால் எளிய மக்களும் அதைத் தொடர்புபடுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் பொழைக்கத் தெரியாதவள், "புனித பிம்பம்" என்று இக்காலத்தில் ஒரு சொல்லில் அடக்கி, கேலி பேசலாம் சிலர்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்.

2. அதுவும் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் சாதாரண குடிமக்கள்.
அரசனைப் பாடாது, அன்புடையாரையும் அடியவரையும் பாடும் பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்! குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண்,
நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" வேண்டும்! அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து! எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது!

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம். ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்.

கேள்வி கேட்டாலே போதும், வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)
அது ராமாயணம் ஆகட்டும் சரி, சிலப்பதிகாரம் ஆகட்டும் சரி... நெறிகளைத் தாங்கிப் பிடிக்காது, ஆட்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பது என்பதில் ஆத்திகம்-நாத்திகம் கூட கை கோர்த்துக் கொள்வது தான் வேடிக்கை!

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று இளங்கோ, மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன?
குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள்.(அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணர் ஆக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய வளம் பற்றியும் மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்". அதனால் தான் போலும், பாரதி "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான்.

நெஞ்சை அள்ளும் சிலம்பில் எத்தனை முத்துக்கள், மாணிக்கங்கள் நமக்குத் தெரியும்-னு பாக்கலாம், வாரீங்களா?
இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-) சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு இளங்கோவடிகள்!

1

பாண்டியனிடம், தன் தந்தையார் பெயரைக் குறிப்பிடாமல், கணவனின் தந்தையார் பெயரைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறாள் கண்ணகி. ஆனால் அவள் தந்தையாரின் பெயர் என்ன?

1


அ) மாசாத்துவான்
ஆ) அப்பூதியடிகள்
இ) மாநாய்க்கன்
ஈ) மாடலன்

2

மாதவியும் கோவலனும் பிரியக் காரணமாக இருந்த பாடல் எது?

2


அ) கானல் வரி
ஆ) குன்றக் குரவை
இ) ஆய்ச்சியர் குரவை
ஈ) இந்திர விழா எடுத்த காதை

3

இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

3


அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்
ஆ) கூல வாணிகன் சாத்தனார்
இ) கவுந்தி அடிகள்
ஈ) சமண குரு

4கோவலனை ஏமாற்றிய பொற்கொல்லனின் பெயர் என்ன?

4


அ) மதுரைப் பொன்னான்

ஆ) மாநகர் வழுதி
இ) குறிப்பிடவில்லை
ஈ) சித்திரக் கொல்லன்

5மாதவி, கோவலனிடம் தூது அனுப்பும் ஆட்களின் பெயர் என்ன?

5


அ) மாதரி/கோசிகன்
ஆ) மாடலன்/மாதரி
இ) வசந்தமாலை/கோசிகன்
ஈ) சித்ராபதி/வசந்தமாலை

6மாதவிக்கு அரசன் கொடுத்த மாலையைப் பொருள் கொடுத்து வாங்க வல்லவரே, மாதவியின் கணவர் என்று மாதவியின் தாயார் அறிவிக்கின்றாள். கோவலன் எவ்வளவு பொன் கொடுத்து மாலையைப் பெறுகிறான்?

6


அ) 1,008 பொன்
ஆ) 1,000 கழஞ்சு
இ) 1,008 கழஞ்சு
ஈ) 11,000 பொன்

7கோவலனையும் கண்ணகியையும், மதுரைக்கு வெளியே உள்ள ஒர் இடைச்சேரியில், இரு பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் கவுந்தியடிகள்! அவர்கள் யார்?

7


அ) மாதரி/ஐயை
ஆ) குரல்/துத்தம்
இ) விளிரி/ஐயை
ஈ) கைக்கிளை/ஐயை
8

சிலப்பதிகாரத்தில் சுவாமிமலை எனப்படும் திருவேரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இளங்கோவால் வர்ணிக்கப்படும் வைணவத் தலங்கள் எவை?

8


அ) திருவரங்கம்/காஞ்சி
ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்

9மணிமேகலை என்று குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் மாதவியும் கோவலனும். யார் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்?

9


அ) கோவலன் குலதெய்வம்

ஆ) மாதவியின் ஆபரணம்
இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
ஈ) மாதவியின் தாயார்

10கண்ணகிக்கு கோவில் எடுக்க, இமயத்தில் இருந்து கல்லெடுக்க விரும்பினான் செங்குட்டுவன். அப்போது ஏற்பட்ட வடதிசைப் போரில் எந்த வடநாட்டு மன்னர்களைப் போரிட்டு வென்றான்?

10


அ) கனகன்/சஞ்சயன்
ஆ) கனகன்/அழும்பில்வேள்
இ) கனகன்/விசயன்
ஈ) விசயன்/கங்கன்

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மாசாத்துவான் ஆ) அப்பூதியடிகள் இ) மாநாய்க்கன் ஈ) மாடலன்

2 அ) கானல் வரி ஆ) குன்றக் குரவை இ) ஆய்ச்சியர் குரவை ஈ) இந்திர விழா எடுத்த காதை

3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள் ஆ) கூல வாணிகன் சாத்தனார் இ) கவுந்தி அடிகள் ஈ) சமண குரு
4 அ) மதுரைப் பொன்னான் ஆ) மாநகர் வழுதி இ) குறிப்பிடவில்லை ஈ) சித்திரக் கொல்லன்
5 அ) மாதரி/கோசிகன் ஆ) மாடலன்/மாதரி இ) வசந்தமாலை/கோசிகன் ஈ) சித்ராபதி/வசந்தமாலை
6 அ) 1,008 பொன் ஆ) 1,000 கழஞ்சு இ) 1,008 கழஞ்சு ஈ) 11,000 பொன்
7 அ) மாதரி/ஐயை ஆ) குரல்/துத்தம் இ) விளிரி/ஐயை ஈ) கைக்கிளை/ஐயை
8 அ) திருவரங்கம்/காஞ்சி ஆ) திருவரங்கம்/அழகர் கோவில் இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்
9 அ) கோவலன் குலதெய்வம் ஆ) மாதவியின் ஆபரணம் இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம் ஈ) மாதவியின் தாயார்
10 அ) கனகன்/சஞ்சயன் ஆ) கனகன்/அழும்பில்வேள் இ) கனகன்/விசயன் ஈ) விசயன்/கங்கன்

Read more »

Sunday, October 14, 2007

தசாவதாரம் படமும், கமலஹாசப் பெருமாளும்!

கமலஹாசப் பெருமாளா? - இது என்ன மாதவிப் பந்தலில் கூத்துன்னு பாக்கறீங்களா? அய்யோடா! நீங்க தசாவதாரம் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் பாக்கலீங்களா? அட என்னங்க நீங்க?
உலக நாயகன் கமலுக்காக இல்லீன்னாலும், நம்ம உள்ளத்து நாயகி அசினுக்காக-வாச்சும் பாருங்கப்பு பாருங்க!

அசின் கையில் ஒரு பெருமாள் சிலை! அது எப்படி அவிங்க கைக்கு வந்துச்சு? சரி, கமலோட வருங்கால மாமனார் கொடுத்தாருன்னு வச்சுக்குங்களேன்!
(யாருப்பா அது, கமலுக்கே இன்னும் மாமனார் ஆகும் கடமை ஒண்ணு பாக்கியிருக்கு-ன்னு சவுண்ட் வுடறது?)
அந்தச் சிலையை எடுத்துக்கின்னு ஊர் ஊராச் சுத்தறாங்க இந்த ஜோடி!
ஏன்? எதுக்கு? அட போங்கப்பா...எல்லாம் சிலையைக் கொள்ளைக்காரப் பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த தான்! (பொண்ணுங்க, சிலையைத் துரத்தறாங்களா இல்லை கமலைத் துரத்தறாங்களா என்பது தனிக் கதை)
சிலையைப் பாத்து பாத்து அசின் அழுவுறாங்க! அதப் பாத்து பாத்து நம்ம கமல் அழுவுறாரு!
அசின் கண்ணீரில் கமல் பிம்பமாய் ப்ரதிபலிக்க,
கமல் கண்ணீரில் அசின் ப்ரதிபலிக்கறாங்க!

அப்படியே ஒரு ஜூம் ஆங்கிள் ஷாட்! கேமிராவில் காதல் ஆராய்ச்சி செய்யும் கொலையாளிகள்...சாரி...கலையாளிகள் யாராச்சும் வாங்கப்பு!



அசின் செம்பவள வாய் திறந்து அழாதீங்கன்னு சொல்ல வாயெடுக்க,
கமல் அந்த வாயை, வண்ணமாக மூட...கமல் "கமாலு"க்குத் தயாராக...
பூசை வேளையில் கரடியாய் வில்லிகள் துரத்த...அருகில் இருந்த வண்டியில் ஏறிக் குதிக்குது ஜோடி!
ஆனா அது ஒரு காய்கறி வண்டி. அதில் பறந்து பறந்து skiing செய்யுது நம்ம ஜோடி!
அன்னிக்குப் பூரா நம்ம பெருமாளுக்கு Vegetable Skiing Vahanam தான்னு வச்சிக்குங்களேன்! :-)


எனக்கு என்னவோ அந்தச் சிலையைப் பார்த்தா "செல்லா" ஞாபகம் தான் வருது! அட நம்ம மேலக்கோட்டை செல்வப்பிள்ளையைச் சொன்னேங்க! திருநாராயணபுரத்து பெருமாளான செல்வப் பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்த காதல் கதையைத் தான் துலுக்கா நாச்சியார் இடுகையில் முன்னமேயே படிச்சிருப்பீங்களே!



தசாவதாரம் படம் தீபாளீ ரிலீஸ்-ன்னு சொன்னாய்ங்க!
இப்போ அது புஸ்வாணம் ஆயி, பொங்கல் ரீலீஜு-ன்னு சொல்லுறாய்ங்க!
அது சரி...
அது இன்னா பத்து வேஷம் கட்டுறாரு கமலு? உங்களுக்குத் தெரியுமா?

1 கோயில் அர்ச்சகர்
2 குள்ளன்
3 விஞ்ஞானி
4 சண்டை வீரர்
5 ஆப்பிரிக்கப் பையன்
6 சுற்றுலா கைடு
7 திருடன்
8 மன்னன்
9 வயசான பிகரு
10 இளமையான பிகரு

இது போதாதுன்னு வெள்ளை மாளிகை போல் ஒரு செட் போட்டாங்களாம் சென்னையில்! உடனே ஜார்ஜ் புஷ் போல வேஷம் கட்டப் போறாரு-ன்னு ஒரு வதந்தி பரவிப் போச்சு!
ஈழத் தமிழராகவும், ஜப்பானியராகவும், ஆப்கானிஸ்தான் ஆளைப் போலவும், தலேர் மெகந்தியைப் போலவும்-னு பல வதந்தி உலவுது!


இதுல, மூனு ரோல்-ல கமலை யாருன்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு மேக்கப்பாம்! ஹாலிவுட்டின் மைக்கேல் வெஸ்ட்மூர் தான் இந்த மேக்கப் டகால்டி வேலை எல்லாம் பண்ணறாராம்! கமலே ஹீரோவாகவும், வில்லனாகவும் பின்னிப் பெடல் எடுக்க, அசினுக்கும் டபுள் ரோலாம்!

மல்லிகா ஷெராவத் அக்கா வேற படத்துல ஜோடி போடறாங்களாம். CIA ஏஜென்ட்டாம்!
ஹைய்யா! அப்படின்னா மல்லிக் நியுயார்க் வருவாங்கல்ல?
வெல்கம் டு நியுயார்க், மல்லிக்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்களே வரீங்க! வாவ்! :-)
ஜெயப்ரதா ஆண்ட்டி படத்துல ஒரு ரோல் பண்ணறாங்க-ன்னு பேச்சு!

முதல் ஷாட்டுக்கே மூன்று கோடியாச்சாம்!
பாவம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் என்னன்னல்லாம் பண்ணப் போறாரோ தெரியலை!
சிதம்பரம் கோவிலை recreate பண்ணி ஒரு செட்டு!
சுனாமி காட்சி - உருவாக்கம்
நெப்போலியன் அரண்மனை-ன்னு மெகா பண முழுங்கிக் காட்சிகள் வேறு இருக்காம்!

சரி...படத்துக்கு மீஜிக் யாரு? ஹிமேஷ் ரசம்சாதம்-ன்னு யாரோ ஒருத்தர் பாலிவுட்ல இருந்து வராராமில்ல!
சும்மா அதிரப் போதாமில்ல! நமக்கும் சும்மா ஒதறப் போதாமில்ல!
அட அதாங்க பாப் மீசிக் ஸ்டார், மீசிக் டைரக்டர், Himesh Reshammiya தான் அவரு! கோலிவுட்-ல மொதல் என்ட்ரி கொடுக்கறாரு! அக்ஷர், தில் தியா ஹை படத்துக்கு மீசிக் போட்டு ஹிட்டாச்சுதே, அவரே தான் இவரு!

நடிகர் திலகம் கொடுத்த நவராத்திரி படத்துக்கு இணையாக கமலின் தசாவதாரம்-னு சொல்லிக்கறாங்க!
பார்க்கலாம்...
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்!
பொங்கலின் போது தசாவதாரம் பொங்கி விளையாடப் போகுதா-ன்னு, ஹைப் கூடிக்கிட்டே இருக்கு!
மேலும் ஹைப்புக்கு, இந்தாங்க orkut-இல் தசாவதாரம்!
(படங்களுக்கு நன்றி: dasavatharam.info)

Read more »

Friday, September 28, 2007

ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

இந்தச் செய்தித் துணுக்கைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது! ஏன்னு கேக்கறீங்களா?
சும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!
திருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு! அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா? :-)

அதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.
பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?


காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)


நன்றி: தினமணி.
நகரி, செப். 29:
திருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


திருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.
அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.

அதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.
Read more »

Monday, September 24, 2007

ராமர் பாலமும், ராமானுசரும்!

ராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள்! ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா? இதோ! இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு! இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்! பிடிக்க வேண்டியவர் பிடிக்கட்டும்!!

முன் குறிப்பு:
பாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா?-ன்னு "அந்தக்" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது! :-)
பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்! :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
அழகிய இராமர் கோவில்! கோவில் மட்டுமா அழகு?
கோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு! வித்தியாசமான விக்ரகமும் கூட! தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்!
பொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.
இங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்!

அந்நியர் படையெடுப்பு! சூறையாடல்!
அகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள்! கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
இராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா? தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள்! கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்!

அந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்!
என்ன பாடம்? இராமாயணப் பாடம்!
பாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்!
அப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது? "உம்" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது! அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்!

அன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்!
சுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....
அதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க!
இராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை!
சுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே!


திருமலையில் இராமன்

அனுமன்


சாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ!
இந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ!
நீங்க பெரிய மகான்! நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல!
நீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ!

சரி ஜனங்களே, ஆவன செய்யலாம்! மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே! என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.
(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)

நிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்!
அவர்கள் திரும்பி வந்து, "குருவே! கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது! அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்! படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும்! இப்போது காலம் கடந்து விட்டது!
அங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே!" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்!

யோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா?
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்! - இந்த "ராமா" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே!
- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா? இல்லை சாபம் கொடுப்போமா? இல்லை அடித்து நொறுக்குவோமா?

மதுரைக் கிராமத்து மக்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
உங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு! அவ்வளவு சின்ன ஊர்! நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான்! ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்!

ஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!
சமயம்-ன்னா என்ன? சமைத்தல் தான் சமயம்!
அரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்!
அது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்! பக்குவப்படுத்த வேண்டும்!


ராமானுசர்


அறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது! ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம்! அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம்!
இந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன்! திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்!

எங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும்! அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு!
ஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா?
மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம்! இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம்! - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்!
வில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை! விளங்கக் கொடுத்தனர்!
இடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்!

இன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்!
இராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.
எங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்!

இராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல!
அரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்!
மக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம்! = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல!

ஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம்! அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம்! = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா! என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல!
இப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்!
ஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ?

துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு! தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது!
ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்!

இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?



References:
1. திருமலைக் கோவில் ஒழுகு
2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை
Read more »

Wednesday, September 19, 2007

திருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை!

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?

முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!

என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன். பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்?

உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! " என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.


யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவையின் மீள்பதிவு. மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாப் படங்கள் உடனுக்குடன் tirumala.orgஇலும் தினமலர் நாளிதழிலும் தரவேற்றப்படுகின்றன!
இதோ சுட்டிகள்:
தேவஸ்தானப் படங்கள் - tirumala.org
தினமலர் படங்கள்
Read more »

Saturday, September 15, 2007

திருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்!

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!

வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Sep 23 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.

இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.

முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.

பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.

அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).

துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)

நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்! அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள். அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!

முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!

சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)

(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.



இன்று,
பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்

உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!

(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் மீள்பதிவு! (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன?)
இந்த ஆண்டு கருடசேவை, ரதோற்சவம், சக்ர ஸ்னானம் மட்டும் மீள்பதிய எண்ணம்!

மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

Read more »

Friday, September 14, 2007

காங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்!

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!

அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!

இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!



"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.

"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.

காமராஜர் பதில்
இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.

தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"
இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.

இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.

எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.


18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.

சட்டசபையில் தீர்மானம்:
இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.

தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?

முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

அண்ணா பதில்
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தமிழ்நாடு வாழ்க"
பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
Read more »

Wednesday, September 12, 2007

புதிரா? புனிதமா?? - மகாபாரதம்!

விடைகள் கீழே Bold செய்யப்பட்டுள்ளன. விளக்கங்கள் எல்லாம் வெட்டிப்பயல் கொடுத்துள்ளார். இன்னும் விரிவான விளக்கம் வேணும்னா, பின்னூட்டத்தில்!

வின்னர்கள்:
வெட்டிப்பயல், கெக்கேபிக்குணி - 10/10
பராசரன், குமரன் - 8/10


வென்றவர்க்கும், போட்டியில் நின்றவர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அடுத்த புதிரா புனிதமாவில் என்ன கேக்கலாம்-ணு போட்டியில் பங்கு பெற்று வரும் நீங்களே சொல்லுங்க! (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையாட்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா? என்ன நினைக்கிறீங்க?

இந்தப் போட்டியின் பரிசு இதோ! அள்ளிக்கோங்க!
(Blowup Pictures என்பதால் சற்று தாமதம ஆகலாம்!)

1. பார்த்தசாரதி - திருமுக மண்டலம்
பார்த்தனுக்காக, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டான்;
முகமே புண்ணாகிப் போன, பொன்னன் கண்ணன் - ஒத்தை ரோஜா மாலையில் ஏகாந்த சேவை! திரு அல்லிக்கேணி கண்டேனே
2. திருவல்லிக்கேணியில், மீசையோடு் ஆசைக் கண்ணன் - ஆலய ஓவியம்



மகாபாரதத்துக்கு மட்டும் தான் "மகா" அடைமொழி உண்டு! மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது! ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.
காலத்தால் பிந்திய காப்பியம் ஆதலால், எல்லா நீதிகளும், கதைகளும் இதில் அடங்கி விட்டன! அதனால் "மகா" பாரதம் என்று பெருமை பெற்றது - வாரியார் சுவாமிகள்.

நல்லவர்கள் பேராசை பீடிக்க எப்படித் தீயவர்களாக மாறுகிறார்கள், தர்மத்தின் பாதையில் நடக்கும் போது வரும் தர்ம சங்கடங்கள், அதை எதிர் கொள்வது எப்படி, இறையருள் யாரிடம் அமையும் என்று பலப்பல தத்துவங்கள்!
திருக்குறளில் இருக்கும் ஒவ்வொரு குறட்பாவுக்கும் ஒரு கதையைக் காட்டலாம் இக்காவியத்தில்! அவ்வளவு பரந்த காவியம்!
குழந்தை, வளர்ப்பு, கல்வி, கல்யாணம், இல்லறம், தொழில், போட்டி, ஆன்மீகம், தர்மம், மறைவு என்று வாழ்வின் எல்லாக் கட்டங்களும் கொண்ட காவியம்!

ராமாயணம் போல் அல்லாது, அனைத்துமே நிறை குறை, இரண்டுமே உள்ள பாத்திரங்கள்!
சைவ, வைணவ பேதங்கள் இல்லாத நூல். விநாயகப் பெருமானின் எழுத்தாணி பட்ட காவியம்! கண்ணன் கதையும் ஒன்றாய்க் கலக்கும் நூல்!
கதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை....
என்று இதில் ஆழம் மிகுதி! பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று! :-))

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு வேத வியாசர்!



1

பாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்?

1

அ) பாண்டியன் சோற்றுணை வழுதி
ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்
இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்
ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2பீஷ்மர் தெரியும்! பீஷ்மகர் யார்?

2

அ) துரியோதனன் மாமனார்
ஆ) பீஷ்மரின் தந்தை
இ) கண்ணனின் மாமனார்
ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3

மகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்?

3

அ) நகுலன்
ஆ) துச்சாதனன்
இ) சால்வன்
ஈ) புரோசனன்

4போரில், பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன?

4

அ) கடோத்கஜன்
ஆ) அரவான்
இ) அபிமன்யு
ஈ) உத்தர குமாரன்

5போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்?

5

அ) விகர்ணன்
ஆ) துச்சலா
இ) யுயுத்சு
ஈ) அஸ்வத்தாமன்

6

விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்? அவன் பெயர் என்ன?

6

அ) கங்கன்
ஆ) பிருகந்நளை
இ) கீசகன்

ஈ) ஜெயத்ரதன்

7கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன?

7


அனுமன்

8

துரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்?

8

அ) அபிமன்யு
ஆ) சாத்யகி
இ) சிகண்டி
ஈ) திருஷ்டத் துய்மன்

9கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன?

9

அ) அதிரதை
ஆ) ஷோன்
இ) ராதை
ஈ) பானுமதி

10பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே! அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன?

10

அ) பரீட்சித்து
ஆ) யுயுத்சு
இ) ஜனமேஜயன்
ஈ) சித்ராங்கதன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!

1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்

4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்

5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்

6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்

7 ______________________

8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்

9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி

10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்

Read more »

Monday, August 20, 2007

பூரம்3: கருடா செளக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு என்ன கேட்டது? - கருடா செளக்கியமா? அதற்குக் கருடன் என்ன பதில் சொன்னது?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது என்று பாடுவார் கண்ணதாசன்.
அந்நியன் படத்திலும் கருட புராணம் அடிக்கடி தோன்றி பயமுறுத்தும்! :-)

பாம்பு பரம்சிவன் கழுத்தில் இடம் பெற்று விட்டது - அதனால் அது செளக்கியமே!
ஆனால் பாவம், கருடனின் நிலை? பார்க்கலாம் வாங்க, கருடனின் இடம் எங்கே என்று? கருடன் எப்போதும் பெருமாளின் வாகனம் (ஊர்தி) மட்டும் தானா? இறைவனைச் சுமக்கும் வேலை மட்டும் தானா கருடனுக்கு?
கருட பஞ்சமி இப்ப தான் வந்து போனது! (Aug 18, 2007) - அதே நாள் தான் நாக பஞ்சமியும் கூட!

பெரியாழ்வார் கருடனின் அம்சம் என்று சொல்லப்படுபவர். இருவருமே சுவாதி நட்சத்திரம் தான்! அதனால் தான் வில்லிபுத்தூரில் கருடனுக்கு மிகவும் ஸ்பெஷல் இடம். அது என்ன இடம்?
பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம்!

பொதுவாக கை கூப்பிய படி, பெருமாளின் முன்னே கருடன் நிற்பது தான் எல்லாக் கோவில்களிலும் வழக்கம்! ஆனால் வில்லிபுத்தூரில் மட்டும்,
ஆண்டாளும் பெருமாளும், மனைவியும் கணவனுமாய் நிற்க,
அவர்களுடன் ஜோடியாய் அதே ஆசனத்தில் கருடன்! - இது எப்படிச் சாத்தியம்?

பணியாளும் பரமனும் தோளோடு தோள் நிற்கும் அளவுக்கு சோஷியலிசமா என்ன வில்லிபுத்தூரில்? முதலாளியும் தொழிலாளியும் காம்ரேடுகள் (Comrade) ஆகி விட்டார்களா என்ன? :-)


பதிவர்கள் யாராச்சும், கருடனை வானில் பார்த்திருக்கீங்களா? கழுத்தில் வெள்ளைப் பட்டை - இல்லை தலையில் வெள்ளைப் பட்டை இருக்கும்! கருடனுக்கும் கழுகுக்கும் என்ன வேறுபாடு? சொல்லுங்க பார்ப்போம். அமெரிக்காவின் தேசியப் பறவை Bald Eagle எனப்படும் கருடன் தான்!
புத்த மதத்திலும், இலங்கை, ஆங்கர் வாட்-கம்போடியா, தாய்லாந்திலும் இந்தக் கருடன் உண்டு!

பெருமாளின் வாகனம் கருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்! கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் தானே! "ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!

காச்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவர் தான் அருணனும், கருடனும்.
அருணன் சூரியனின் தேரோட்டி. கருடனோ பகவானுக்கே வாகனம்!
ஆனால் முதலில் இறைவனுக்கும் கருடனுக்குமான உறவு சண்டையில் தான் தொடங்கியது, இக்காலக் காதலர்களைப் போல! :-)
கருடன் பெருமாளிடமே சண்டையிட்டுத் தோற்றார்.

கத்ருவும், வினதையும் காச்யபரின் மனைவிகள்.
கத்ருவுக்கு ஆயிரம் குழந்தைகள், அனைத்தும் நாகங்கள். வினதைக்கு இரண்டு மகன்கள். அருணன், கருடன்.
சூழ்ச்சியால் வினைதையை அடிமை ஆக்கிக் கொண்டாள் கத்ரு. காமதேனுவின் நிறம் வெள்ளை என வினதை சொல்லினாள்; தன் நாகப் புதல்வர்களை அனுப்பி அதைச் சூழ வைத்துக் கருப்பாக்கி பொய்யாக வென்று விட்டாள் கத்ரு. வினதையை அடிமை ஆனாள்.
தாயின் சாபம் தீர்க்க வேண்டுமானால், அமிர்த கலசம் எடுத்து வர வேண்டும் என்று, சிற்றன்னையால் ஏவப்பட்டான் கருடன்.

அமிர்த கலசத்தை எடுத்து வரும் போது, இந்திரனிடம் போரிட்டான் கருடன். கருடனின் ஆற்றல் தாளாமல் இந்திரன் தவிக்க, அமிர்தத்தைக் காப்பாற்ற, பெருமாளே போருக்கு வந்தார். பெருமாளிடம் தோற்ற கருடன், அவர் திருவடிகளில் பணிந்து, அவருக்கே வாகனம் ஆனான். சிறிதளவு அமுதமும் பெற்று தாயின் சாபமும் தீர்த்தான்.


விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என்று பல பெயர்கள் கருடனுக்கு உண்டு!
கருடன் வேதங்களின் அம்சம், மங்கலச் சின்னம் என்று சொல்லுவார்கள்.
பல கோவில் நிகழ்ச்சிகளில், கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும், மங்களகரமான ஒன்று!
இது பெருமாள் ஆலயங்கள் மட்டும் அல்ல! எல்லா ஆலயங்களுக்கும் பொருந்தும்! கருடத்வனி என்ற ஒரு ராகமே உண்டு, சாம கீதம் இசைப்பதற்கு!
கிராமங்களில் கருடக் கிழங்கு என்ற ஒரு கிழங்கு உண்டு. அதை மாவிலை போல் வீட்டு வாசலில் சொருகி வைப்பார்கள், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்க! மேலே பறக்கும் கருடனின் நிழல், பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புவார்கள்!

கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
எதிரிகளை வெல்வதற்கும், விஷமங்களை முறிக்கவும், மந்திர தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவதற்கும், வாதங்களில் வெல்வதற்கும் கருட மந்திரம் ஜபிப்பார்கள்!
கடலூருக்கு அருகில் உள்ள திருவந்திப்புரம் (திவஹீந்தரபுரம்) என்னும் ஊரில், கருட மந்திரம் ஜபித்து தான், சுவாமி தேசிகன் என்னும் ஆசார்யர், சகல கலா விற்பன்னராகத் திகழ்ந்தார். கருட தாண்டகம் என்னும் நூலையும் பாடினார்!

பாண்டவர்கள் கூட கருட வியூகம் அமைக்கும் போது தான் முதல் வெற்றி பெறுகிறார்கள்!
நீதி விளக்கமும், தண்டனைகள் மற்றும் திருத்தங்களைச் சொல்வது கருட புராணம்!
கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால், கருடன் சனி பகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துவர் என்றும் சொல்லுவார்கள்!

அது சரி....
உலகத்தில் எங்காச்சும் வாகனத்துக்கே வாகனம் இருக்கா?
முருகனுக்கு மயில் வாகனம், ஆனா மயிலுக்கு வாகனம் உண்டா?
பாருங்க...கருடனுக்கு ஒரு வாகனம் உண்டு! சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!
வாயு பகவான் தான் கருடனுக்கு வாகனமாய் அமைகிறார்!


பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம், கருடனுக்கு என்று பார்த்தோம்!
அது ஏன் என்றும் பார்க்கலாம் வாங்க!

வில்லிபுத்தூரில் ஊர் அறியத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த அரங்கன், திருமண நாள் அன்று வரத் தாமதம் ஆகிறது. ஏற்கனவே அவனுள் கலந்து விட்ட ஆண்டாளும் அவனோடு வரத் தாமதம் ஆனதால் பெரியாழ்வார் துடிக்கிறார். திருவரங்கத்தில் காணாத காட்சியை, வில்லிபுத்தூரில் காணக் கூடி விட்டனர் ஊர்மக்கள். ஆனால் பெருமாள் வருவதாகத் தெரியவில்லை!

அப்போது கருடன், ஆழ்வார் நிலை அறிந்து ஓடோடி வருகிறான். பறப்பதில் வேகம் கூட்டுகிறான்.
அன்று கஜேந்திர மோட்சத்தில் பெருமாளுக்கு எப்படி உறுதுணையாக கருடன் இருந்தானோ, அதே துடிப்போடு பறக்கிறான்!
ஆண்டாளையும் இப்போது சேர்த்து சுமப்பதால் அவனுக்கு வியர்க்கிறது. இருந்தாலும் வாயு வேகமாகப் பறந்து வந்து, குறித்த நேரத்தில் வில்லிபுத்தூரில் தம்பதிகளைச் சேர்க்கிறான் கருடன்!

பெரியாழ்வார் கலக்கம் நீங்கி அமைதி அடைகிறார். பெண்ணின் தந்தைக்கு உதவிய பிள்ளை வீட்டுக்காரன் அல்லவா கருடன்?
இதற்கு நன்றியாகவே, ஆண்டாள் பெருமாளிடம் பேசி, தங்களோடு கருடனுக்கும் அதே ஆசனத்தில் இடம் அளித்தாள்! அதுவே வில்லிபுத்தூரில் இன்றும் அழகிய காட்சி!

மேலால் பரந்த வெயில்காப்பான்
"வினதை சிறுவன்" சிறகென்னும்,
மேலாப்பின் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
என்று நாச்சியார் திருமொழியில், மாப்பிள்ளையான பெருமாள் மேல் வெயில் படாது, கருடன் தன் சிறகால் மேலாப்பு விரித்து, மாப்பிள்ளையை அழைத்து வருவதாகப் பாடுகின்றாள்.


ஓம்காரப் பிரணவ தத்துவம் இந்தக் காட்சியில் ஒளிந்துள்ளது.
ஓம் = அ + உ + ம்
அகாரம் = பரமாத்மா = பெருமாள்
மகாரம் = ஜீவன் = கோதை
இவர்கள் இரண்டையும் ஒன்று சேர்ப்பது எது?

"அ"வும், "ம"வும் சேர்ந்து "ஓம்" என்று ஆக வேண்டுமானால், அதற்கு அ-வுக்கும், ம-வுக்கும் இடையே "உ" தேவை!
உகாரம் = சரணாகதி சம்பந்தம் = இவனே கருடன்!
பெருமாளையும் ஆண்டாளையும் ஒன்று சேர்க்க ஓடோடிப் பறந்து வந்த உகார மூர்த்தி இவன். உகாரமே சரணாகதி. அது ஒன்று தான் பரமனையும் ஜீவனையும் சேர்க்கின்றது!
அதுவே வில்லிபுத்தூரில் மூவராய் நாம் காணும் காட்சி!
(வேறொரு பதிவில், ஓங்காரம் பற்றி விரிவான விளக்கம் பேசலாம்...)

கல்யாணம் ஆகும் வரை மைனர் முறுக்கில் வலம் வந்த தலைவன், தொண்டர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை போலும்!
அதான் கல்யாணமானவுடன், வந்து சேர்ந்த புண்ணியவதி, புருஷனிடம் பரிந்து பேசி...
என்னங்க, பாவம் அவரும் எவ்வளவு தான் வேலை செய்வாரு? கொஞ்சம் ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று சொல்வது போல, தொண்டனுக்கும் சரி நிகர் ஆசனம் வாங்கிக் கொடுத்து விட்டாள்! அது தான் தாயாரின் கருணை!
புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று திருப்பாவையிலும் புள் அரையன் (பட்சி ராஜன்) பெயரை நிரந்தரமாகப் பதித்து விட்டாள்!

கருடாழ்வார்=பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
அரங்க நகரப்பன் திருவடிகளே சரணம் சரணம்!!!


இத்துடன், திருவாடிப்பூரம் தொடர் முற்றிற்று!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP