Sunday, May 27, 2007

திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்!

அட, என்னாப்பா சொல்லுற நீ! கழகம், கட்சி, கொடி இது எல்லாம் தெரியும்! தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட "திராவிட" என்னும் சொல்லை, பெயரில் கட்டாயாம் கொண்டுள்ளன! ஆனா...அது இன்னா திராவிட வேதம்?
யாராச்சும் புதுசா, புரட்சிகரமா எழுதி இருக்காங்களா? அவங்களுக்குத் தமிழக அரசு சிறப்புகள் செய்து இவ்வாறு பட்டம் அளித்துள்ளதா?

அட, அது இல்லப்பா இது!...நான் சொல்லும் திராவிட வேதம் எட்டாம் நூற்றாண்டுக்கும் முன்னர்!
அட, அப்பவே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்களா?...யாருப்பா அது? என்ன தான் விடயம்? சொல்லேன்!

திராவிடக் குழந்தை ஒன்று பிறந்துச்சுப்பா. அதுக்குப் பேரு மாறன்!
(நீ உடனே பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, அவசரப்பட்டு, வேறு கணக்குகள் போடாதே! :-)
பாரேன்...திராவிடக் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அவதரித்த தினத்தில் தான் அதுவும் பிறந்தது. வைகாசி விசாகம்!

உழவுத் தொழில் புரியும் வேளாளர் குடியில் பிறந்த குழந்தை அது! நாலாம் வருணம் என்று சொல்லுவார்களே...அது!
நாலாம் வருணம் தான், நால் வேதமும் தமிழ் செய்தது!
அதைத் தான் இன்று அந்தணர்கள் முதலான எல்லோரும், முதலிடம் கொடுத்து, முழங்கிப் பாடுகிறார்கள்!

அட, அப்படியா விடயம்? மேற்கொண்டு சொல்லு!

அந்தக் குழந்தையின் கதையைப் பிறகு சொல்கிறேன். இப்ப வேறொரு கதை கேளூ! அதுக்கு முன்னாடி ஒரு விடயம்.
மாறன் என்ற அந்தக் குழந்தை தான், இன்று பலராலும் வணங்கிப் போற்றப்படும் நம்மாழ்வார்!
அவர் செய்த திராவிட வேதம் தான் திருவாய்மொழி! தமிழ் வேதம் என்றும் போற்றப்படுகிறது!

ஆகா! இவரைப் பற்றி நானும் கொஞ்சம் கேள்விப்பட்டுள்ளேனே!
பிறவியில் இருந்தே பேசாமல் இருந்து, பின்னர் யாரோ ஒரு அந்தணர் இவர் காலடியைப் பற்றினாராமே! அவருக்குச் சொல்வது போல், பல பாசுரங்களைப் பொழிந்தவர் தானே இவர்? இவருக்குச் சடகோபர் என்று பெயரும் உண்டா?

ஆமாம்பா...சடகோபர் தான்!
இன்றும் கோவிலுக்குப் போனால், தலையில் சடகோபம்/சடாரின்னு வாங்கிக்கறயே! அவரே தான் இவர்!
இறைவனுடைய திருப்பாதங்களின் அம்சமாய் வந்தவர்;
இன்றும் கூட அந்த மென் மலர்ப் பாதங்களை, நமக்காகக் கொண்டு வந்து,
நம் தலையின் மீது வைத்து, நம்மை எல்லாம் ஆட்கொள்பவர்!
சரி, நாம் கதைக்கு வருவோம்!


மதுரைக்கு அருகே உள்ள ஊர், அழகர் கோவில். அழகர் ஆற்றில் இறங்குவாரே அந்தக் கோவில் தான்! திருமால் இருஞ் சோலை என்று பெயர்!
அந்த மலையின் கீழே அழகர்! மலையின் மேலே அழகன்!
பழமுதிர் சோலை என்னும் படைவீட்டில், மலையின் மேல் முருகன்!
அந்த மதுரையம்பதியில், அன்று வைகாசி விசாகத் திருவிழா!
நம்மாழ்வார் பாசுரங்களை எல்லாம் சொல்லி, பெருமாள் கோவிலில், சிறப்பு ஊர்வலம்.
அதை முன்னின்று நடத்துகிறார் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார்!

தன்னுடைய ஆசிரியர், குருநாதரான நம்மாழ்வார், மண்ணுலகை விட்டு நீங்கிய பின்,
அவர் அருளிய பாசுரங்களை எல்லாம் தொகுத்துப் பாடி வருகிறார்!
அவருக்குப் பெருமாள் பக்தி அதிகம்! அதை விட குரு பக்தி, மிக மிக அதிகம்!!
நம்மாழ்வாரின் திருமேனியும், பாசுரங்களையும் பல்லக்கிலே சுமந்து, பெருமாள் கோவிலில், வீதியுலா அழகாக நடைபெறுகிறது!

"வேதம் தமிழ் செய்த மாறன்
தமிழ் மறைப் பெருமாள் எழுந்து அருளுகிறார்...
திருமால் திருவடி நிலையர்
சடாரி சடகோபர் பொன்னடி சாத்துகிறார்
..."
என்று கட்டியம் கூறிக் கொண்டு, பல்லக்கு தூக்கிச் செல்கிறார்கள்!


அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் சிலர்!
அவர்கள் எல்லாருக்கும், மனத்துக்குள் பெரும் குழப்பம்!
"அது எப்படி பொத்தாம் பொதுவாக, தமிழ் மறை என்று நீங்கள் கூறலாம்?
அப்படிக் கூற என்ன ஆதாரம்?
தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்டதா உங்கள் திருவாய்மொழி நூலை?
சங்கத்தில் அரங்கேறியதாகவும் தெரியவில்லையே!
அப்படி இருக்க, இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்!"

துவங்கியது சர்ச்சை!
மதுரகவிக்கோ மனம் கலங்கியது! "இது ஆழ்வார் தத்துவ மார்க்கமாக அருளியது! அதனால் தான் மற்ற நூல்கள் போல, அரங்கேற்றம் என்றெல்லாம் செய்ய முடியாமற் போனது!
விழா முடியட்டும்!
அடியேன் நானே வந்து, தமிழ்ச் சங்கத்தில், நூலை முன் வைக்கிறேன்.
விவாதங்களும், நூல் ஆராய்ச்சியும் செய்து பின்னர் ஒரு முடிவுக்கு வராலாம்", என்று கூறினார்.

ஆனால் சங்கப் புலவர்களோ விடுவதாக இல்லை! "நெற்றிக் கண்ணே திறப்பினும், குற்றம் குற்றமே!
கண் மூன்று கொண்டானுக்கே அஞ்சாத நாங்கள், கண்ணன் பாட்டுக்கா அஞ்சுவோம்?
சங்கப் பலகையில் இதை வைத்து விட்டுத் தான் மறுவேலை!
எப்போது தமிழ் மறை என்று கொண்டாடுகிறீர்களோ, அப்போதே சங்கத்தின் ஒப்புதல் தேவை!
நாளையே வந்து சங்கப் பலகையில் இதை வையும்!
அது, நூலை அள்ளுகிறதா, இல்லை தள்ளுகிறதா என்று ஒரு கை பார்த்து விடலாம்!"

விழா பாதியில் நின்றது!
மதுரகவி துடிதுடித்துப் போனார். என்ன செய்வது என்று அறியாது கண்கலங்கினார்!
யாராய் இருப்பினும், தமிழ் காக்கும் சங்கத்தை மீறத் தான் முடியுமா? அப்படியே மீறுவது தான் அழகாகுமா?
ஆனால் அவர் கவலை எல்லாம், தன் ஆசானின் நூலை, சாதாரண மாணாக்கன்... தான் எப்படி திறம்படச் சங்கத்தில் வைக்க முடியும் என்பதே!

இரவு தூக்கமின்றிக் கழிந்தது!
பெருமாளை இறைஞ்சாமல், தன் ஆசிரியரை இறைஞ்சி நின்றார் மதுரகவிகள்!
ஆழ்வார்களிலும் ஒருவர், ஆசாரியர்களிலும் ஒருவர் - அது யார் இரண்டிலுமே இருப்பது என்றால், ஒருவர் மட்டும் தான்! - நம்மாழ்வார் தான் அவர்!

பெருமாளின் படைத்தலைவரான சேனை முதலியாரின் அம்சம் அல்லவா அவர்!
இறைவன் திருமகளுக்கு உபதேசிக்க,
அதை நம் அன்னை, சேனை முதலியாருக்கு அல்லவா உபதேசித்து அருளினாள்!
இப்படி அன்னையிடமே பாடம் கேட்ட அன்பர் ஆயிற்றே!

வயோதிகப் புலவர் ஒருவராக மதுரகவியின் முன் வந்து நின்றார், நம்மாழ்வார்!
"மதுரகவிகளே, கலங்காதேயும்! இதோ பாடங்களைக் கூறுகிறேன்...மீண்டும் கேட்பீராக" என்று சொல்லி, மயர்வறு மதி நலம் அருளினார்.
"நாளை காலை, முழு நூலையும் கூடச் சங்கப் பலகையில் நீங்கள் வைக்க வேண்டாம்...
இந்த ஒற்றை ஓலையே போதுமானது! நான் வருகிறேன்", என்று ஒரு ஓலையைக் கிள்ளிக் கொடுத்து மறைந்து விட்டார்!

மதுரகவிக்கு உடல் நடுங்கியது! கை கூப்பினார்!
அழுவன், தொழுவன், ஆடிக் காண்பன், பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்....

மறு நாள் காலை...காரிருள் அகன்றது காலை அம் பொழுதாய்!
சங்கத்தில் திரண்டனர் மக்கள் எல்லாரும்!
மதுரகவிகள் செஞ்சொற் பிரவாகமாய், திருவாய் மொழி பொழிந்து அருளினார்!
சங்கப் புலவர்களும் தன்னை மறந்தனர்!
ஆனாலும் அவர்கள் இன்னும் "தன்னை" இழக்க வில்லையே!

மதுரகவிகளே! எல்லாம் சரி தான்; ஆனால் இது சங்கப் பலகை ஏறுமோ?
- மாறன் ஏறு அல்லவா இது; இதோ ஏறட்டும் புலவர்களே!
சங்கப் பலகையில் வைத்தனர், அந்த ஒற்றை நறுக்கு ஓலையை!
அதில் எழுதி இருந்த வரிகள்...

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே


நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே


சங்கப் பலகை என்ன செய்தது? அடுத்த பதிவில் பார்க்கலாம்!


வரும், May 30 2007, வைகாசி விசாகம்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள்! - அன்று தான் நம்மாழ்வாரின் அவதார தினமும் கூட!
அதை ஒட்டி, ஒரு மூன்று தொடர் பதிவுகள் இட எண்ணம்!

நம்மாழ்வார் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி,

அவர் செய்தருளிய தமிழ், ஆலயங்களில் எப்படி எல்லாம் கோலோச்சுகிறது!
பின்னால் வந்த ஆசாரியார்களும், கவிஞர்களும், மற்ற சாதியினரும், அந்தணர்களும், மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும்,
வைணவர், வைணவர் அல்லாதோர் எனும் பாகுபாடுகள் எதுவும் இல்லாது,
மானுடக் கண்ணோட்டத்தில் எப்படி எல்லாம் பாடித் திளைக்கிறார்கள் என்றும் பார்க்கலாம், வாங்க!

42 comments:

  1. ரவி,

    அரசியில் தலைப்பு வைத்தாலும் அதையும் சுவையாக சொல்லும் உங்கள்பாங்கு மிகச் சிறப்பானது.

    சிறப்பான நடை,

    அடுத்த பகுதி படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  2. கண்ணன் கழலிணை....என்ற வரிகள் மட்டுமே சங்கம் ஏறியதாகச் சொல்லும் வழக்கமும் உண்டு. திருவாய்மொழி பெருமாள் கோயில்களில் சாற்றுமுறையாக சோழ அரசர்களும், பாண்டியர்களும் அறக்கட்டளை நிறுவிய சேதிகள் கல்வெட்டுக்களில் உள்ளன. இராமாயணமும், திருவாய்மொழி என்ற இருபெரும் தூண்கள் இருக்கும் வரை வைணவத்திற்கு ஒரு குறையும் கிடையாது என்று சோழ அரசன் சொன்னதாக தகவல் உண்டு. வாழ்க.

    ReplyDelete
  3. நல்லா இருந்தது. ஆனா நீளம் ரொம்பவே பெருசாப் போச்சோ?

    ReplyDelete
  4. ரவி

    என்னுடைய ப்ளாக்கிலிருந்து நம்மாழ்வாரின் அன்ன வாஹன புகைப்படத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

    www.vishnuchittan.blogspot.com

    ReplyDelete
  5. ரவி

    அதே ப்ளாக்கில் நம்மாழ்வாரின் புளியமர வாஹனமும் உள்ளது. இந்த வாஹனம் வேறு எந்த ஊரிலும் கிடையாது. உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

    நன்றி

    ReplyDelete
  6. தரமான தர வேண்டிய தலைப்பு.

    சரித்திரம் சொல்லும் நிகழ்ச்சிகளைக் கோர்வையாகச் சொன்னீர்கள்.

    மே முப்பதா. நன்றி.

    சங்கரரும் ராமானுஜரும் இணைவது போல மாறனும் வேலனும் இணைகிறார்கள்.
    அடுத்த பதிவைச் சீக்கிரமே போடுங்கள்.

    ReplyDelete
  7. நம்மாழ்வார் பற்றிய தகவல்கள் அறிந்திருந்தாலும், தங்கள் நடை தொடர்ந்து வாசிக்க வைத்தது. பாராட்டுக்கள், வாழ்க, வளர்க !

    அப்படியே, சில திருவாய்மொழிப் பாசுரங்களையும் அள்ளித் தெளியுங்கள், அடுத்த பகுதியில் !

    எ.அ.பாலா

    ReplyDelete
  8. அறிந்த தகவல்கள் ஆனால் தங்களது நடையில் அருமை, காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு மற்றும் சில திருவாய்மொழிப் பாடல்களுக்கும்......


    வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்.

    ReplyDelete
  9. சுந்தரத் தமிழில் கண்ணன் மட்டுமில்லாது நம்மாழ்வாரும் கொஞ்சி விளையாடும் அழகைப் படிக்க என்னிரு கண்கள் போதவில்லையே! நான் சொன்னது அந்த மாயக் கண்ணனை! :))))))))))))))

    ReplyDelete
  10. ராமானுஜருக்கு கூரத்தாழ்வார்போல நம்மாழ்வருக்கு மதுரகவி. குருபக்தியில் இரு சீடர்களும் உன்னதமானவர்கள்.
    திரு -வாய் =மொழி எனும்போதே அதன் சிறப்பு புரிகிறதே! தமிழின் சிறப்புச் சொல்லான 'திரு' வைணவப்பழக்க வழக்கங்களில் இணைந்தே வரும். எம்பெருமானைப்பற்றிக் கூறுவதால் ஆழ்வார்தம் வாய்மொழி வந்தவைகள் திருவாய்மொழிஆகின.அவற்றில் நம்மாழ்வாரின் மொழி ஆழ்ந்த தமிழில்
    வேதப் பொருளை விளக்குவது.'அற்றது பற்றெனில் உற்றது வீடு' எனும்வரிகளைப்போல் ஆயிரம் வரிகள்! ரவியின் நடையினில் மதுரகவியைக் கொண்டு
    நம்மாழ்வாரின் பெருமையைப் படிக்கவும் ஆனந்தமாய் உள்ளது.பாராட்டுக்கள் ரவி!

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    ரவி,
    அரசியில் தலைப்பு வைத்தாலும் அதையும் சுவையாக சொல்லும் உங்கள்பாங்கு மிகச் சிறப்பானது//

    ஆகா...GK இது என்ன வம்பு! அரசியல் தலைப்பா? "திராவிட" ன்னாலே அரசியல் தானா? :-)
    திராவிட உத்கல பங்கா-ன்னு தேசிய கீதம் எல்லாம் வருதே!
    திராவிடத்தை, திருவிடம் என்றும் பாரதிதாசன் பாடுவார்!

    திராவிடம் வாழ்க! :-)
    திராவிட வேதம் வாழ்க!!

    //அடுத்த பகுதி படிக்க ஆவலாக இருக்கிறேன்//

    இன்று மாலை இடுகிறேன்!

    ReplyDelete
  12. //நா.கண்ணன் said...
    கண்ணன் கழலிணை....என்ற வரிகள் மட்டுமே சங்கம் ஏறியதாகச் சொல்லும் வழக்கமும் உண்டு.//

    ஆமாம் கண்ணன் சார்.
    கண்ணன் கழலினை...என்பது தான் சாராம்சம்...

    //இராமாயணமும், திருவாய்மொழி என்ற இருபெரும் தூண்கள் இருக்கும் வரை வைணவத்திற்கு ஒரு குறையும் கிடையாது என்று சோழ அரசன் சொன்னதாக தகவல் உண்டு//

    ஆகா....யார் அந்த "உத்தம" சோழன்?

    ReplyDelete
  13. //இலவசக்கொத்தனார் said...
    நல்லா இருந்தது. ஆனா நீளம் ரொம்பவே பெருசாப் போச்சோ//

    தமிழ்மண நட்சத்திரமே வருக!

    யாரங்கே...கத்திரிக் கோல் கொண்டு வாங்க...கொத்தனார் நீள அகலம் பத்திச் சொன்னா கரீட்டா தான் இருக்கும்! :-)

    ReplyDelete
  14. //Alagar said...
    ரவி
    என்னுடைய ப்ளாக்கிலிருந்து நம்மாழ்வாரின் அன்ன வாஹன புகைப்படத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டிக்கொள்கிறேன்//

    வாங்க அழகர்!
    இரண்டாம் பாகத்துக்கு, உங்கள் வலைப்பூவில் இருந்து புளிய மர வாகனம் எடுத்துக் கொள்கிறேன்.
    கேட்காமலேயே கொடுக்கும் வள்ளல் நீங்க!

    நண்பர்களே,
    அழகரின் விஷ்ணுசித்தன் வலைப்பூவில் சென்ற ஆண்டு வைகாசி உற்சவம், திருக்குறுங்குடியில் கொண்டாடிய படங்கள் உள்ளன. கண்டு மகிழுங்கள்!!!

    ReplyDelete
  15. //வல்லிசிம்ஹன் said...
    சங்கரரும் ராமானுஜரும் இணைவது போல
    மாறனும் வேலனும் இணைகிறார்கள்//

    ஆமாம் வல்லியம்மா...
    மாறனும் மால் மருகனும் இப்படித் தான் இணைகிறார்கள்!

    ReplyDelete
  16. // enRenRum-anbudan.BALA said...
    நம்மாழ்வார் பற்றிய தகவல்கள் அறிந்திருந்தாலும், தங்கள் நடை தொடர்ந்து வாசிக்க வைத்தது. பாராட்டுக்கள், வாழ்க, வளர்க !//

    நன்றி பாலா!
    நம்மாழ்வாரின் படைப்புகள் சங்கப் பலகை ஏறிய செய்தி, சிலருக்குப் புதிது என்பதால் அங்கிருந்து துவங்கினேன்!

    //அப்படியே, சில திருவாய்மொழிப் பாசுரங்களையும் அள்ளித் தெளியுங்கள்//

    தங்கள் ஆணை!

    ReplyDelete
  17. //மதுரையம்பதி said...
    வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்//

    ஆகா...எனக்குப் புதிய செய்தி!
    இவ்வளவு மகத்துவமா விசாகத்துக்கு!
    நன்றி மெளலி சார்!

    ReplyDelete
  18. //கீதா சாம்பசிவம் said...
    சுந்தரத் தமிழில் கண்ணன் மட்டுமில்லாது....நான் சொன்னது அந்த மாயக் கண்ணனை! :)))))//

    வாங்க கீதாம்மா...
    சுந்தரத் தமிழில் கொஞ்சும் பின்னூட்டம் தரும் நீங்கள் பெயரிலேயே அந்த மாயக் கண்ணன் சொன்னதைத் தானே வைத்துள்ளீர்கள்!

    இருங்க, இந்தக் கண்ணனும் கொஞ்சம் மாயம் செய்து விட்டு வருகிறேன்! :-))

    ReplyDelete
  19. //ஷைலஜா said...
    ராமானுஜருக்கு கூரத்தாழ்வார்போல நம்மாழ்வருக்கு மதுரகவி. குருபக்தியில் இரு சீடர்களும் உன்னதமானவர்கள்//

    ஆமாம் ஷைலஜா.
    என்னப்பனை விட குருகூர் நம்பி என்றக்கால், அமுதூறும் என்று பாடினவர் தானே மதுரகவிகள்!

    //தமிழின் சிறப்புச் சொல்லான 'திரு' வைணவப்பழக்க வழக்கங்களில் இணைந்தே வரும்.//

    ஆமாங்க!
    இறைவனும் இறைவியும் நீங்காது நிலைப்பது போலே, பெருமாள் சம்பந்தமான எதைச் சொன்னாலும் "திரு" சேர்த்துச் சொல்வது மரபு!

    உயர்திணை/அஃறிணை வேறுபாடுகள் கூட இருக்காது! திருக்குலத்தார் என்று மனிதரையும் திரு சேர்த்துச் சொல்லுவர்.
    திருக்கதவம் என்று கதவுக்கும் திரு தான்!

    திருக்கண் அமுது தானே, சாப்பாட்டு அயிட்டம் கூட! :-)

    ReplyDelete
  20. மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த விவரங்கள் தெரியாது. புதிய தகவல்கள். நன்றாக படிக்க எளிமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.

    ReplyDelete
  21. RAVI SIR,
    please write more and more about Nammazhwar,and his passurams.
    ARANGAN ARULVANAGA.
    anbudan
    k.srinivasan

    ReplyDelete
  22. // G.Ragavan said...
    மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த விவரங்கள் தெரியாது//

    ஆமாம் ஜிரா. சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று! அதனால் தான் அனைவரும் அறிய வேண்டும் என்று இங்கு் இட்டேன்!

    //நன்றாக படிக்க எளிமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்//

    நன்றி ஜிரா.

    ReplyDelete
  23. //Anonymous said...
    please write more and more about Nammazhwar,and his passurams.
    ARANGAN ARULVANAGA//

    ஸ்ரீநிவாசன் சார்,
    திருவாய்மொழிக்கு தனி வலைப்பூவே தொடங்கலாம் என்று எண்ணம்.
    ஆழ்வார் திருவுள்ளம் என்னவோ!
    பார்ப்போம்!

    ReplyDelete
  24. Nalla ezhuthureenga!
    Please write about the whole Thiruvaimozhi...All meanings!
    -Dr.Balu

    ReplyDelete
  25. //வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்///

    ஏதோ நினைவில் மேற்கண்ட தவறான தகவலை தந்துவிட்டேன்.

    மகா பெரியவரின் ஜெயந்தி வைகாசி அனுஷம்....(விசாகதிற்கு அடுத்த நட்சத்திரம்)....தவறுக்கு வருந்துகிறேன். இன்றுதான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    மெளலி...

    ReplyDelete
  26. வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத்த பதிவிற்கு எதிர் நோக்கியுள்ளேன்

    ReplyDelete
  27. //Anonymous said...
    Nalla ezhuthureenga!
    Please write about the whole Thiruvaimozhi...All meanings!
    -Dr.Balu//

    நன்றி Dr.Balu
    திருவாய்மொழி தனிப் பதிவு விரைவில் தொடங்க எண்ணம்!

    ReplyDelete
  28. //மதுரையம்பதி said...
    //வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்///

    ஏதோ நினைவில் மேற்கண்ட தவறான தகவலை தந்துவிட்டேன்.
    மகா பெரியவரின் ஜெயந்தி
    வைகாசி அனுஷம்//

    மெளலி சார்
    தெரிந்ததும் வந்து திருத்தினீர்களே!
    உங்க ஈடுபாடு கண்டு மகிழ்ச்சி!

    வைகாசி அனுஷம் தான் மகா பெரியவர் ஜெயந்தி!
    அட, எவ்வளவு ஒற்றுமை பாருங்க!
    பராசர பட்டரின் ஜெயந்தியும் வைகாசி அனுஷம் தான்!

    ReplyDelete
  29. //தருமி said...
    வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத்த பதிவிற்கு எதிர் நோக்கியுள்ளேன்//

    நன்றி தருமி ஐயா!
    அடுத்த பதிவு போட்டாச்சு! உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  30. பாருங்க. நான் இந்தியாவுக்கு போன நாளா பாத்து இந்த இடுகையைப் போட்டுட்டீங்க இரவிசங்கர். அதான் அப்ப படிக்காம விட்டுட்டு இப்ப படிக்கிறேன்.

    சங்கப்புலவர்கள் சவால் விடறதை எல்லாம் படிச்சப்ப அட 'நம்ம' நண்பரைப் போல அந்தக் காலத்திலயும் இருந்திருக்காங்களேன்னு நினைச்சேன். சரி. அடுத்தப் பகுதியையும் இப்பவே படிக்கிறேன்.

    திராவிடன்னு தலைப்புல போட்டாலே அரசியல் பேசுறதா? சரியா போச்சு போங்க. :-)

    //
    சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று
    //

    அப்ப நம்ம நண்பர் ஆழாதவர்ன்னு சொல்றீங்களா? :-))

    ReplyDelete
  31. //குமரன் (Kumaran) said...
    பாருங்க. நான் இந்தியாவுக்கு போன நாளா பாத்து இந்த இடுகையைப் போட்டுட்டீங்க இரவிசங்கர். அதான் அப்ப படிக்காம விட்டுட்டு இப்ப படிக்கிறேன்.//

    என்ன குமரன் இன்னிக்கி பயங்கர தோண்டும் படலமா இருக்கே?
    ஏதாச்சும் அகழ்வாராய்ச்சி விரதமா? :-))

    ஜிரா பதிவை மீள்பதிவு பண்ணீங்க!
    இப்போ இதுக்குப் பின்னூட்டறீங்க!
    அடுத்து எதுவோ?
    தீட்சிதர்களுக்கு அன்றே ஆப்படித்த கே.ஆர்.எஸ்-ன்னு எதை மீள்பதிவு பண்ணப் போறீங்களோன்னு ஒரே பயமாப் போயிரிச்சி! இந்த முறை இந்தியப் பயணத்தின் போது சிதம்பரம் போறேன் பாருங்க, அதான்! :-)))

    //சங்கப்புலவர்கள் சவால் விடறதை எல்லாம் படிச்சப்ப அட 'நம்ம' நண்பரைப் போல அந்தக் காலத்திலயும் இருந்திருக்காங்களேன்னு நினைச்சேன்.//

    நம்ம நண்பர் மட்டும் அப்போ இருந்திருந்தா மதுரகவி ஆழ்வார் கொஞ்சம் திணறித் தான் போயிருப்பாரு! சங்கப் பலகை பாசுரத்தை எல்லாம் ஏத்துக்குச்சே-ன்னு கோவத்துல, காதல் குளிர் கதையில் வில்லனாப் போட்டிருப்பாரு! :-))

    //திராவிடன்னு தலைப்புல போட்டாலே அரசியல் பேசுறதா? சரியா போச்சு போங்க. :-)//

    போகட்டும் (கோவி) கண்ணனுக்கே! :-)))

    //சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று
    //
    அப்ப நம்ம நண்பர் ஆழாதவர்ன்னு சொல்றீங்களா? :-))//

    இதுக்கு நான் என்ன சொல்லுறதுன்னு தெரியலையே சாமீ...
    சரி ஜிரா இஷ்டைலிலேயே சொல்லுறேன்!
    அவர் தா+ஆழாதாவர், என்றும் வீ+ழாதவர்...போதுங்களா? :-)
    கே.ஆர்.எஸ் நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டானாக்கும்!

    ReplyDelete
  32. உங்க பதிலெல்லாம் நல்லா இருக்கு. :-)

    ReplyDelete
  33. ரவி,
    நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி.

    இதுவரை கண்ணிலை தென்படாமல் இருந்த இந்தப் பதிவை, கடைசிப் பின்னூட்டத்தைப் போட்டு, தமிழ்மண முகப்பிலை தெரிய வைச்ச குமரனுக்கும் ஒரு சிறப்பு நன்றி.

    ReplyDelete
  34. நான் திருவாய்மொழி படித்ததில்லை. அதனால் அதை திராவிட வேதமாக ஒத்துக்கொள்ள முடியாது.

    தேவார, திருவாசகங்கள்தான் தமிழ் வேதம்.
    பன்னிரு திருமுறைகளே தமிழ் மறை
    :)

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...
    உங்க பதிலெல்லாம் நல்லா இருக்கு. :-)//

    நன்றி குமரன்! :-)
    நல்லா இருக்குறா மாதிரி பதில் சொல்லணும்-னு நண்பர் ஆர்டர்! :-)

    ReplyDelete
  36. //வெற்றி said...
    ரவி,
    நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி//

    வாங்க வெற்றி! ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு உங்க கிட்ட பேசி!
    கூட்டியாந்த குமரனுக்கு நன்றி! :-)

    //இதுவரை கண்ணிலை தென்படாமல் இருந்த இந்தப் பதிவை, கடைசிப் பின்னூட்டத்தைப் போட்டு, தமிழ்மண முகப்பிலை தெரிய வைச்ச குமரனுக்கும் ஒரு சிறப்பு நன்றி//

    இது நல்ல ஐடியாவா இருக்கே!
    இனி மீள்பதிவு எல்லாம் தேவையே இல்லை! இதையே ஃபாலோ பண்ணலாம் போல இருக்கு! :-))

    ReplyDelete
  37. /5:15 PM, March 07, 2008
    அரை பிளேடு said...
    நான் திருவாய்மொழி படித்ததில்லை. அதனால் அதை திராவிட வேதமாக ஒத்துக்கொள்ள முடியாது//

    சரி...
    ஆனா இப்போ மாட்டுனாருப்பா அரை பிளேடு! :-)

    //தேவார, திருவாசகங்கள் தான் தமிழ் வேதம். பன்னிரு திருமுறைகளே தமிழ் மறை
    :)//

    பன்னிரு திருமுறை தான் தமிழ் வேதம்-னா அப்போ முருகன் பாட்டெல்லாம் தமிழ் வேதம் கிடையாதா! என்ன கொடுமை ராகவன்!
    ஜிரா...ஓடியாங்க! அரை பிளேடை ஒரு சீவு சீவுங்க! :-)

    சீரியசா ஒரு கேள்வி!
    வாய்க்கு வாய் பன்னிரு திருமுறை-ன்னு சொல்லுறோம்! பன்னிரு திருமுறை லிஸ்ட்டு வரிசையா நம்ம எத்தனை பேருக்குத் தெரியும்?

    திருக்குறள்-ன்னா மூனு அதிகாரமும் சொல்லுவோம்!
    திருமுறைக்கு எப்படியோ?

    ReplyDelete
  38. பன்னிரு திருமுறைகளே வேதம்.

    முருகன் வேதத்தின் மூலப்பொருள்.

    முருகன் பாடல்கள் அந்த வேதப்பொருளின் விரிவுரை. :)

    முழுவேதமும் இங்கே...

    http://www.thevaaram.org

    ReplyDelete
  39. ஆஹாஹா..
    திருவாய்மொழி'யை என் ப்ளாக்'ல வச்சாங்களா!!!!!!!

    ரொம்ப சந்தோஷம்யா..

    ReplyDelete
  40. //அரை பிளேடு said...
    //முருகன் வேதத்தின் மூலப்பொருள்//
    தோடா! :-)
    //முருகன் பாடல்கள் அந்த வேதப்பொருளின் விரிவுரை. :)//
    தோ தோடா! :-))
    தேவாரத்தில் "முருகன்" என்ற சொல் எங்கெல்லாம் வருதுன்னு சொல்லுங்க! :-)

    //முழுவேதமும் இங்கே...
    http://www.thevaaram.org//

    அட, தேவாரம்.ஓர்க் தெரியாதா தல!
    நான் கேட்டது, நீங்க மனப்பாடமா சொல்லுங்க பன்னிரு திருமுறைகளின் பேரையும்-னு சொன்னேன்!:-)

    1,2,3=சம்பந்தர்
    4,5,6=அப்பர்
    7=சுந்தரர்
    8=மாணிக்கவாசகர்
    9=திருவிசைப்பா, பல்லாண்டு
    10=திருமூலர்
    11=காரைக்கால் அம்மையார் முதலானோர் திரட்டு
    12=சேக்கிழார் பெரிய புராணம்

    ReplyDelete
  41. //அறிவன் /#11802717200764379909/ said...
    ஆஹாஹா..
    திருவாய்மொழி'யை என் ப்ளாக்'ல வச்சாங்களா!!!!!!!
    ரொம்ப சந்தோஷம்யா..
    //

    ஓ சங்கப் பலகையைச் சொல்றீங்களா அறிவன் சார்?
    நல்ல காலம், வாடகை கேக்காம வுட்டீங்களே! இல்லீன்னா உங்க ஃபளாக்-ல மதுரகவி தான் வந்து பின்னூட்டம் போடணும்! :-)

    ReplyDelete
  42. அன்புள்ள நண்பருக்கு,

    வணக்கம்.
    ‘அண்ட கோள மெய்ப்பொருள்’ எனும் அரியதொரு புத்தகம்.
    ஸ்வாமி நம்மாழ்வார் அருளியது.
    உங்களுக்கு வேண்டுமானால்
    மெயிலில் அனுப்புகிறேன்.

    தேவராஜன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP