Sunday, October 28, 2007

இராவணன் கோவில் மூடப்பட்டது!

தினமலர் செய்தி: (Oct 28, 2007)
ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.
கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.
ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்
.

அதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.

கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.

ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.



மேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது!
இராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது! அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா?
முதலில் பதிவிட எண்ணவில்லை!
எப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.

அப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே! அதை யாரும் பார்க்கவில்லையா? பார்க்காமலேயே சண்டை போடுகிறார்களா?
சரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்! :-)


பல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.

மேட்டர் ரொம்ப சிம்பிள்!

1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)

2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை!

3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம்! திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்!

அதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர்! அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி!
சிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்!
இராவணனின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்!
அதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது! :-)

காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!

ஆனால் நாம் தான்,
ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே! கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்!
இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?
இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)

83 comments:

  1. ஏற்கனவே யாரோ பதிந்த செய்திதானே எனச் சொல்ல வந்தேன். முழுப் பதிவும் படித்து வாயடைத்து நிற்கிறேன். ரொம்ப நல்லாச் சொல்லி இருக்கீங்க ரவி.

    ReplyDelete
  2. ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை
    இது தான் செம பஞ்ச்.

    ReplyDelete
  3. உங்கள் கட்டுரையை படித்ததும் ஒன்று புரிந்தது,

    இராவ(ண்)ணன் சைவத்துக்கு அடியார். வைணவத்துக்கு எதிரி !
    சரியா ?

    திரி கொழுத்தியாச்சு...தீபாவளியாச்சே !
    :)

    ReplyDelete
  4. //இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
    மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
    ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
    அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)//

    Raamanum Hanumanum saivama vainama Govi.Kannan???

    //இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)//
    ithuvum Vainavam thaan Govi.Kannan.

    ReplyDelete
  5. //காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!//

    Super...

    I really appreciate u for this post.

    ReplyDelete
  6. அப்ப கடவுள் எங்கும் எதிலும் இருக்காருன்றதை இவுங்களாலெ நம்ம முடியலையா?

    என்னப்பா இது ச்சின்னப்புள்ளைத்தனமா இருக்கு(-:

    ReplyDelete
  7. This is a great INSULT to TAMILS..
    let's set fire on Buses, Temples, and cut "poonool"...
    where is my DK Friends...please "boil and get up" and fight this great insult to tamils and Dravidans (that means 'pongi ezhunthu')

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    திரி கொழுத்தியாச்சு...தீபாவளியாச்சே !
    :)//

    நல்லாவே கொளுத்தனீங்க கோவி!
    தீபாளிப் பட்டாசா? :-)))

    //இராவ(ண்)ணன் சைவத்துக்கு அடியார். வைணவத்துக்கு எதிரி !
    சரியா ?//

    அது எப்படி இம்புட்டு கரீட்டாக் கண்டுபுடிச்சீங்க!
    இராவணனை வைணவம் எப்பவோ மன்னிச்சி வுட்டிருச்சி!
    அவனும் போயி பழையபடி வைகுண்டத்தில் ஜய விஜயனா ஆயிட்டான்!

    ஆனா சைவம் தான் அவனை இன்னும் வுடலை!
    ஒவ்வொரு விழாவிலும் அவன் திமிரை எப்படி அடக்கனாங்க-ன்னு நேரடி விளக்கம் கொடுக்கறாங்க! :-))
    இராவணின் கர்வத்தை எப்படி பங்கம் பண்ணோம் பாருங்க-ன்னு ஊர் ஊரா வாகனம் போட்டுச் சொல்லுறாங்க! :-)))

    இதுவும் தீபாவளித் திரி தான், கோவி! :-)

    ReplyDelete
  9. அருமையான பதிவு, ராவணன் சைவத்துக்கு நண்பனும் இல்லை, வைணவத்துக்கு எதிரியும் இல்லை, ராவணனின் குணாதிசயங்களைப் பற்றி ராமரே அதிசயித்துச் சொல்லுவதாயும் ராமாயணத்திலேயே வருகிறது. சிறந்த சிவ பக்தன். இது அரசியல்வாதிகளால் ஏற்பட்ட பிரிவினை. :((((((

    அது சரி, பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு கேள்வி, மூணு நாளாத் துருதுருவென்றிருக்கிறது. "வெட்டிப்பயல்" குலாப்ஜாமூன் கொடுத்தாரா இல்லையா? அப்புறம் அவர் என்ன "ரேஸிலே" செகண்டா வந்ததுக்கு அவங்க வீட்டிலே குலாப்ஜாமூன் செய்தாங்களாமா? :))))))))மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு! :P :P

    ReplyDelete
  10. //துளசி கோபால் said...
    அப்ப கடவுள் எங்கும் எதிலும் இருக்காருன்றதை இவுங்களாலெ நம்ம முடியலையா?
    என்னப்பா இது ச்சின்னப்புள்ளைத்தனமா இருக்கு(-://

    ஆமாங்க டீச்சர்!
    அவங்களுக்குத் தேவை ராமன் இல்ல! ராவணனும் இல்ல!
    அவங்களுக்குத் தேவை ஒரு ஹீரோ-ஒரு வில்லன்!
    அவ்வளவு தான்! :-(

    தனக்கே உரிய சங்கு சக்கரத்தை பெருமாள் ராவணன் கையில் கொடுத்தாரு-ன்னு சொன்னாக்கா என்னை அடிக்க வருவாங்க! :-))

    ஆனா அது உண்மை!
    ஜய விஜயர்களிடம் சங்கு சக்கரங்கள் பெருமாளைப் போலவே உண்டு!
    ஜயன் தான் இராவணனா வந்து, பேராசைப்பட்டா என்ன கதி-ன்னு நமக்கெல்லாம் காட்டிட்டுப் போனான்!

    அவன் திருப்பியும் பெருமாள் கிட்டயே போயிட்டான்!
    நாம் தான் இராவணன், அசுரன்-ன்னு அடிச்சிக்கிட்டு இருக்கோம்! :-)))

    ReplyDelete
  11. //வெட்டிப்பயல் said...
    Raamanum Hanumanum saivama vainama Govi.Kannan???//

    ஜிரா கொஞ்சம் பிசியா இருக்காரு! நான் பதில் சொல்லவா பாலாஜி?

    இராமேஸ்வரத்தில் லிங்கத்தை வழிபட்டான் இராமன் = So Raman Saivan :-)
    சிவலிங்கத்தைக் காசியில் இருந்து எடுத்து வந்தான் ஹனுமன் = So Hanumanum Saivan! :-)

    அடப் போங்கப்பா...
    கதையில் எல்லாம் ஒற்றுமையாத் தான் இருக்கு!
    நாமத் தான்
    வைணவம்-சைவம்
    தேவன்-அசுரன்
    ஹீரோ-வில்லன்-ன்னு
    ஒற்றுமையில் வேற்றுமை கண்டு கொண்டே இருக்கிறோம்! :-(((

    ReplyDelete
  12. //ஆனா சைவம் தான் அவனை இன்னும் வுடலை!
    ஒவ்வொரு விழாவிலும் அவன் திமிரை எப்படி அடக்கனாங்க-ன்னு நேரடி விளக்கம் கொடுக்கறாங்க! :-))//
    ரவி,

    ஹலோ, ஹலோ ஒரு பக்தன் சிலையை சுமந்து செல்வது திமிரை அடக்குவது என்று பொருளா ? அடுக்குமா இதெல்லாம் ?

    பக்தர்கள் எல்லோரும் செய்வது தானே குருநாதரே !

    ReplyDelete
  13. //Raamanum Hanumanum saivama vainama Govi.Kannan???//

    இராமன் மற்றும் அனுமான் வைனவம், நாமம் அணிந்திருக்கும் அனுமான் எப்படி சைவ சமயம் சார்ந்தவராக இருக்க முடியும் ?

    நான் ஒரு வைணவ நண்பரிடம் கேட்டேன். இராமன் சிவனை வழிபடுவதாக இருக்கிறதே என்று ? இராமன் தானே வணங்கினான், நாங்கள் வணங்க மாட்டோம் என்றார். மேலும் இராமன் ஒரு மனிதன், அவன் யாரை வணங்கினாலும் நாங்களும் அதை வணங்க வேண்டுமா ? என்று கேட்டார்

    5:55 PM me: ஆனால் சிவன் கோவில் போக மாட்டிங்க ! சரியா ?
    5:56 PM கேசவ்: yep
    5:57 PM me: ராமனே சிவனை பூஜை செய்திருக்கிறாரே !
    கேசவ்: that is raman
    me: ராமன் விஷ்னு அவதாரம் இல்லையா ?
    கேசவ்: raman is one of man . he is shathriyan
    raman pirantha kulam

    பாலாஜி !
    சைவம், வைணவம் என்ற பிரிவுகள் இருப்பது உண்மை எனும் போது அனுமனை, இராமனை வைணவர் என்று ஏன் சொல்லக் கூடாது !
    :)

    சைவ இலக்கியங்களில் அனுமான் பற்றி எதுவும் இல்லை. குறிப்பாக தேவாரம் திருவாசகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. //இராமன் மற்றும் அனுமான் வைனவம், நாமம் அணிந்திருக்கும் அனுமான் எப்படி சைவ சமயம் சார்ந்தவராக இருக்க முடியும் ?//

    சரி.. இதை நம்பறீங்க...

    //1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
    மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
    ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
    அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)//

    இந்த பதிவுல இப்படி இருக்கு.

    அப்பறம் இந்த பின்னூட்டம் எப்படி?
    //கோவி.கண்ணன் said...

    உங்கள் கட்டுரையை படித்ததும் ஒன்று புரிந்தது,

    இராவ(ண்)ணன் சைவத்துக்கு அடியார். வைணவத்துக்கு எதிரி !
    சரியா ?

    திரி கொழுத்தியாச்சு...தீபாவளியாச்சே !
    :)//

    இந்த பதிவை வைத்து நீங்க போட்ட பின்னூட்டத்தை மட்டும் வைத்து பேசலாமே!

    ReplyDelete
  15. //கோவி.கண்ணன் said...
    ஹலோ, ஹலோ ஒரு பக்தன் சிலையை சுமந்து செல்வது திமிரை அடக்குவது என்று பொருளா ? அடுக்குமா இதெல்லாம் ?
    பக்தர்கள் எல்லோரும் செய்வது தானே குருநாதரே !//

    ஹிஹி
    கோவி, நான் சொன்னது விளையாட்டுக்குத் தான்! நீங்க சைவத்துக்கு இராவணன் நண்பன்-ன்னு சொன்னீங்களே அதுக்காகச் சொன்னேன்! :-)

    ஆனா...இப்ப கொஞ்சம் சீரியஸ்!
    நீங்க நினைப்பது போல் பக்தன் சிலையைச் சுமந்து செல்வது அல்ல அது!

    அதுக்குப் பேரே இராவண கர்வ பங்க வாகனம்! இராவணன் செருக்கழி வாகனம்! கைலாய மலையில் நந்தி தேவரிடம் குரங்கே என்று முறை தவறிப் பேசி, சாபம் பெறுகிறான்.

    அப்போதும் ஆணவம் அடங்காது, இறைவனைப் பலாத்காரத்தால் அசைக்க முடியும் என்று தான் கயிலையை அசைக்கிறான். தன்னால் அது முடியாத காரியம் என்று தெரிந்த பின்னும் அவன் ஆணவம் அவனைத் தடுக்கிறது!

    மலையின் கீழ் மாட்டுப்பட்ட பின்னர் தான், சற்றே புத்தி தெளிந்து தவறுக்கு வருந்துகிறான்! தவறுக்கு வருந்துதல் என்பது அவன் வாழ்விலேயே இங்கு மட்டும் தான் நடக்கிறது! மற்றபடி அனைத்து சிறப்புக்களையும் ஆணவம் என்ற ஒன்றே ஒன்று மட்டும் எப்படி மறைக்கிறது என்பதற்கு ஒரு picturisation தான் இராவணன்.

    மும்மலங்களில் ஆணவ மலம் ரொம்ப டேஞ்சரானது. சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே மும்மலம் நீக்குதல் தான். அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த வாகனம் வைத்துள்ளார்கள்!

    இதை அப்படியே வாகனத்தில் வடித்திருப்பாங்க, பாருங்க!
    ஈசன் தன் கால் கட்டை விரலால் அழுத்தி அவனைச் செருக்கழிப்பது போல் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்! பாருங்க!

    ReplyDelete
  16. என்னுடைய பங்குக்கு
    http://nigalvukal.blogspot.com/2006/05/113.html

    அட நம்ம மீனாட்சி அம்மன் கோவில்ல கூட இந்த வாகனம் இருக்கே.

    ReplyDelete
  17. //1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
    மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
    ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
    அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)//

    இந்த பதிவுல இப்படி இருக்கு.

    அப்பறம் இந்த பின்னூட்டம் எப்படி?//

    பாலாஜி,

    போற்றுதல், மதித்தல் எல்லாம் எதிரியின் மீது உள்ள ஒரு மரியாதை. அதை பாமரனும் செய்வான். போற்றுகிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன் என்று பொருளல்ல. அதனால் தான் இராவணன் வழிபாட்டை வட இந்தியாவில் தாக்குவதாக நினைக்க முடிகிறது.

    முருகன் வழிபாட்டில் கடம்பா சூரனும், இடும்பா சூரனும் முருகனிடம் சண்டை இட்டு தோற்றவர்கள். ஆனாலும் முருகனுக்கு காவடி எடுப்பவர்கள் இடும்பன் கடம்பனை முதலில் வழிபட்டுவிட்டே முருகனை வழிபடுவார்கள். இதற்க்கென இடும்பன் பூசை முதல்நாளே நடைபெறும். ஐயப்பன் கோவிலிலும் ஐயப்பனிடம் போறிட்ட வாபரை வழிபட்டே ஐயப்பனை காண பக்தர்கள் செல்கிறார்கள். இதெல்லாம் சைவ வழிமுறைகளா இருக்கிறது. வைணவத்தில் ஏன் இராவண வழிபாட்டை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியில் தான், மேலே அங்கே குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  18. //பாலாஜி !
    சைவம், வைணவம் என்ற பிரிவுகள் இருப்பது உண்மை எனும் போது அனுமனை, இராமனை வைணவர் என்று ஏன் சொல்லக் கூடாது !
    :)//

    கோவி
    பாலாஜியும் இராமனை/அனுமனை வைணவர்/சைவர் என்றெல்லாம் சொல்லவில்லை.
    அவர் என்ன கேட்டாருன்னா
    //Raamanum Hanumanum saivama vainama Govi.Kannan???//

    நீங்க வைணவத்துக்கு இராவணன் எதிரி-ன்னு சொல்றீங்களே! அனுமனும் இராமனும் கூட இராவணனைப் புகழ்ந்தவர்கள் தானே என்ற பொருளில் தான் கேட்டார்!

    ஆனா அதுக்குள்ளாற இது சைவ/வைணவ விவாதமாய் போய் விட்டதே! :-)

    ReplyDelete
  19. //சைவ இலக்கியங்களில் அனுமான் பற்றி எதுவும் இல்லை. குறிப்பாக தேவாரம் திருவாசகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்//

    தேவார, திருவாசகங்களில் பெருமாளைப் புகழ்ந்து பல பாடல்களும்...
    ஆழ்வார்களின் வைணவப் பிரபந்தங்களில் சிவபெருமானைப் போற்றியும்...
    பல பாடல்கள் இருக்குங்க, கோவி!

    அனுமனைப் பற்றி இருக்கா-ன்னு தேடிச் சொல்லுறேன்!

    சம்பந்தரும் தன் தேவாரத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு எட்டாம் பதிகத்திலும் இராவணனின் செருக்கை அழித்தது பற்றிப் பாடுவார்!
    அரக்கனின் ஆணவ மலம் பற்றிக் குறிப்பிடுவார்!

    உளையா வலியொல் அரக்கன்
    வளையா விரல் ஊன் றியமைந்தன்
    விளையார் வயல் வீழிம்மிழலை
    அளையா வருவார் அடியாரே
    என்று இது போல பல பதிகங்களில் அரக்கன் வலி அழித்தமை பற்றிப் பாடுகிறார்!

    ஆக சைவமும் சரி, வைணவமும் சரி, இராவணனின் ஆணவத்தை அணைக்கவில்லை! அதட்டத் தான் செய்கிறது!
    அதே சமயம் அவனை வெறுத்து ஒழித்து, புழுதி வாரித் தூற்றவும் சொல்லவில்லை! ஆளை விட ஆணவத்தைத் தான் சைவமும் வைணவமும் கண்டிக்கின்றன!

    ReplyDelete
  20. //முருகன் வழிபாட்டில் கடம்பா சூரனும், இடும்பா சூரனும் முருகனிடம் சண்டை இட்டு தோற்றவர்கள். ஆனாலும் முருகனுக்கு காவடி எடுப்பவர்கள் இடும்பன் கடம்பனை முதலில் வழிபட்டுவிட்டே முருகனை வழிபடுவார்கள்//

    முருகனிடத்தில் ஆணவம் கொண்டு போரிட்டு அவர்கள் தோற்கவில்லை கோவி!
    அவர்கள் இருவரும் குருவின் ஆணையை மேற்கொண்டு வரும் போது, முருகன் அவர்களுக்கு வேண்டுமென்றே இடைஞ்சல் செய்வது போல் செய்து திருவிளையாடல் செய்கிறான்! அதன் பின்னர் அருளுகிறான்!

    காவடியை அவர்கள் முதலில் தூக்கி வந்ததால், காவடி பூசையில் அவர்கள் வழிபாடு உண்டு!

    அதே போல் ஏன் சூரபத்மனை, சிங்கமுகனை, தாருகனை முருக பக்தர்கள் வழிபட்டுச் செல்லலாமே! ஏன் அப்படிச் செய்வதில்லை? அதே கதை தான் இங்கும்!
    இடும்பனை, இராவணன்/சூரனோடு ஒப்பிடாதீர்கள்!

    சூரனும் ஆணவ மலம்; இராவணனும் ஆணவ மலம்! அதனால் தான் கதையும் முடிவும் வேறு!

    //வைணவத்தில் ஏன் இராவண வழிபாட்டை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியில் தான், மேலே அங்கே குறிப்பிட்டேன்//

    பெருமாளுடன் சண்டையிட்டவர்களை வைணவத்திலும் வணங்குகிறார்கள்!
    கருடன் கூட வாகனம் ஆகும் முன் சண்டையிட்டவன் தான்! அவனுக்கு வழிபாடு இல்லையா என்ன?

    இங்கே சண்டையின் காரணமாக கடவுள் அருளமாட்டார் என்பதில்லை கணக்கு!
    ஆணவத்த்தில் உணர மறுக்கும் வரை தான் மருள். அதற்கப்புறம் சைவம்/வைணவம் இரண்டிலுமே அருள் தான்!

    ReplyDelete
  21. விவாதம் வேறு பக்கம் போய்க்கிட்டு இருக்க... ஒரமா நின்னு பாக்குறேன்.

    ஹரியும், சிவனும் ஒன்னு
    அறியாத வாயில் மண்ணு

    என்ற நம் விவேகழ்வார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது... :)

    ReplyDelete
  22. கே ஆர் எஸ்,

    இடும்பா சூரன், கடம்பா சூரன் என்று தான் சொல்வார்கள்,
    சூரபத்மன் தானே சேவலும் கொடியாகவும், மயில் வாகனமாகவும் ஆனான். :)

    நான் சீரியஸ் விவாதம் பண்ண வரவில்லை.
    :)
    எனக்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொண்டேன்.

    வெகுண்டு எழுந்து தலையை கொய்துவிடாதீர்கள். இருப்பது 10 தலைகள் அல்ல.

    /அதுக்குப் பேரே இராவண கர்வ பங்க வாகனம்! இராவணன் செருக்கழி வாகனம்! கைலாய மலையில் நந்தி தேவரிடம் குரங்கே என்று முறை தவறிப் பேசி, சாபம் பெறுகிறான்..../

    இந்த பின்னூட்ட தகவல்களுக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ் !

    நான் எதாவது சொன்னால் திசைத் திரும்பி செல்வதாக சொல்கிறார்கள். ஐயோ சாமி ஆளை விடுங்க.

    எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டு, அருமை, சூப்பர், கலக்கல் என்று பின்னூட்டம் போட கற்றுக் கொள்கிறேன்.

    :)

    ReplyDelete
  23. என் கேள்விக்கு என்ன பதில்?:)))))))

    ReplyDelete
  24. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்.. " திருக்குறள் மேற்கோள் மிக அருமை.. இக்குறளுக்கு இப்படி ஒரு உரை அமையுமென்று எண்ணியதில்லை..

    ReplyDelete
  25. நல்ல பதிவு. இராவணால் சொல்லப் பட்ட சாம கானம் இன்றும் ஈசனுக்கு உகந்ததாக எல்லா இடங்களிலும் பாடப்படுகிறது..

    ReplyDelete
  26. //கோவி.கண்ணன் said...
    கே ஆர் எஸ்,
    சூரபத்மன் தானே சேவலும் கொடியாகவும், மயில் வாகனமாகவும் ஆனான். :)//

    அதே போல் இராவணனும் பெருமாளின் அன்புக்குரிய வயிற்காப்போன் ஜய விஜயன் ஆனான் அல்லவா :-)

    //வெகுண்டு எழுந்து தலையை கொய்துவிடாதீர்கள். இருப்பது 10 தலைகள் அல்ல//

    ஆகா..இதில் வெகுள என்ன இருக்குங்க கோவி? விவாதம் தானே நடக்குது!

    //நான் எதாவது சொன்னால் திசைத் திரும்பி செல்வதாக சொல்கிறார்கள். ஐயோ சாமி ஆளை விடுங்க//

    ஹிஹி! நான் அப்படிச் சொல்ல மாட்டேன்! கவலைய விடுங்க! :-)

    //எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டு, அருமை, சூப்பர், கலக்கல் என்று பின்னூட்டம் போட கற்றுக் கொள்கிறேன்//

    வேண்டவே வேண்டாம்.
    விவாதம்-ன்னா மறுத்தும் பேசினாத் தான் அழகு! :-)
    மறுப்புக்கு மறுப்புக்கு அதை விட அழகு! :-))

    ReplyDelete
  27. //அது சரி, பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு கேள்வி, மூணு நாளாத் துரு துருவென்றிருக்கிறது. "வெட்டிப்பயல்" குலாப்ஜாமூன் கொடுத்தாரா இல்லையா?//

    எனக்குக்
    கொடுக்கவில்லை! கொடுக்கவில்லை! கொடுக்கவில்லை!

    //அப்புறம் அவர் என்ன "ரேஸிலே" செகண்டா வந்ததுக்கு அவங்க வீட்டிலே குலாப்ஜாமூன் செய்தாங்களாமா? :))))))))மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு!//

    ஆகா...அவர் என்ன அஜீத்தா?
    எந்த ரேசில் செகண்டா வந்தாரு!

    அவர் ரூம்மேட் மணக்க மணக்க குலாப்ஜாமூன் செய்ய, அதை அவர் லபக்க லபக்க மட்டுமே செஞ்சாரு என்பது தான் அதிகாரப்பூர்வமான தகவல்!

    அது சரி! இந்த ஜாமூன் மேட்டரு ஒங்களுக்கு எப்பிடித் தெரியும்? :-)))

    ReplyDelete
  28. ரவி சங்கர்!
    நடக்கும் கூத்துக்கள் யாவும் அறியாமையின் வெளிப்பாடு.
    இந்த இராவணனை உடைய வாகனம் எங்கள் ஈழக்கோவில்களிலும் உண்டு. இதை கைலாயவாகனம் என்போம் ; மலையைத் தோளில் சுமந்த வண்ணம் பத்துத் தலை இராவணன் சிற்பம் இருக்கும்; மலையுச்சியில் திருவுலா மூர்த்தியை வைத்து வீதிவலம் வருவோம்.
    இதைக் கைலாய வாகனமென்பதும்; மலையைச் சுமக்கும் அமைப்பும் காரணத்தோடே உள்ளது.
    ஈழத்தில் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரத்தை ,தெட்சண கைலாயம் என்றும் சொல்வர் (தமிழ் நாட்டுக்குத் தெற்குத் திசையில் உள்ளது)அந்தக் கைலாயத்தை பெயர்த்து தன் அரண்மனைக் கருகில் கொண்டு சென்று வைத்து, தன் வயோதிபத் தாயாரின் வழிபாட்டை இலகுவாக்க நினைத்த இராவணனை
    நினைவு கூரும் காட்சியே அந்த வாகனம்.
    அந்த இராவணன் வெட்டு எனும் பகுதி கோணமாமலையில் இன்றும் உள்ளது. அது இராவணன் வெட்டியது என்னும் நம்பிக்கை ,நம்புவோருக்கு உண்டு.

    ReplyDelete
  29. ரவிசங்கர்!
    இதையே கம்பரும்
    வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி என்கிறார்.

    ReplyDelete
  30. //இலவசக்கொத்தனார் said...
    ஏற்கனவே யாரோ பதிந்த செய்திதானே எனச் சொல்ல வந்தேன். முழுப் பதிவும் படித்து வாயடைத்து நிற்கிறேன்.//

    இராமன்-இராவணன் பேரைச் சொல்லி நடக்கும் போரைப் பாத்து நானும் தான் வாயடைச்சுப் போயி நிக்கறேன் கொத்ஸ்!

    //
    வடுவூர் குமார் said...
    ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை
    இது தான் செம பஞ்ச்.///

    ஆமாங்க குமாரண்ணா!
    ஹீரோ-வில்லன் ரெண்டு பேரும் கூட்டணி போட்டுக்கிட்டாலும் ஆச்சரியமில்லை! அப்படித் தான் போகுது ! :-)

    ReplyDelete
  31. //வெட்டிப்பயல் said...
    //காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!//

    Super...I really appreciate u for this post.//

    என்ன பாலாஜி, இப்படி இங்கிலீஷ்ல என்னை வெளூத்து வாங்கறீங்க? :-)

    ReplyDelete
  32. //Anonymous said...
    This is a great INSULT to TAMILS..
    let's set fire on Buses, Temples, and cut "poonool"...
    where is my DK Friends...please "boil and get up" and fight this great insult to tamils and Dravidans (that means 'pongi ezhunthu')//

    அனானி ஐயா
    என்ன சொல்ல வரீங்க?
    சும்மா இருக்கறவங்களையும் இப்படித் தூண்டி விட்டா எப்படி? :-(

    ReplyDelete
  33. //கீதா சாம்பசிவம் said...
    ராவணனின் குணாதிசயங்களைப் பற்றி ராமரே அதிசயித்துச் சொல்லுவதாயும் ராமாயணத்திலேயே வருகிறது. சிறந்த சிவ பக்தன். இது அரசியல்வாதிகளால் ஏற்பட்ட பிரிவினை. :((((((//

    அரசியல் எதுல தான் இல்ல கீதாம்மா?
    நாம தான் விழிப்பா இருக்கணும்! உண்மையைத் தெரிஞ்சக்கணும்!
    இராவணன் மட்டும் உயிரோட இப்ப இருந்தா...? அதுவும் வலைப்பூ எழுத வந்தா எப்படி இருக்கும்? :-)

    ReplyDelete
  34. //சிவமுருகன் said...
    என்னுடைய பங்குக்கு
    http://nigalvukal.blogspot.com/2006/05/113.html
    அட நம்ம மீனாட்சி அம்மன் கோவில்ல கூட இந்த வாகனம் இருக்கே.//

    வாங்க சிவா! எப்படி இருக்கீங்க! பாத்து ரொம்ப நாள் ஆனாப்பல இருக்கு!

    மீனாட்சியம்மன் கோவில் இராவண வாகனம் பார்த்தேன்!
    இன்னும் நெல்லையப்பர், அண்ணாமலை, காஞ்சிபுரம், ஆனைக்கா என்று பல இடங்களில் பார்த்துள்ளேன் சிவா!

    இராவணன் மலையின் கீழ் மாட்டுப்பட்டு வீணா கானம் செய்வது போலவும், ஈசன் தன் கால் கட்டை விரலை அழுத்துவது போலவும் அலங்காரம் செய்திருப்பார்கள்!

    சின்ன வயசில், கோவில்களில் வி.ஐ.பிக்கள் அடிக்கும் கொட்டத்தைப் பாத்து, இதே கதி தாண்டா உங்களுக்கும் என்று சிரித்துக் கொள்வேன்! :-)))

    ReplyDelete
  35. //நாகை சிவா said...
    விவாதம் வேறு பக்கம் போய்க்கிட்டு இருக்க... ஒரமா நின்னு பாக்குறேன்.//

    ஆமாங்க புலி!
    இராவணன்-வில்லனிசம், ஹீரோயிசம்னு பேசத் துவங்கியது சைவ/வைணவ விவாதமா போகத் தொடங்கியது! ஆனால் இப்ப பழையபடி நேராகி விட்டது!

    //ஹரியும், சிவனும் ஒன்னு
    அறியாத வாயில் மண்ணு
    என்ற நம் விவேகழ்வார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது... :)//

    ஹிஹி
    அதே அதே!
    இதப் பல முறை சொல்லிப் பாத்துட்டாங்க! லோக்கலா உன் வாயில மண்ணுடா-ன்னும் சொல்லியாச்சு!
    இலக்கியமா பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து-ன்னும் ஆழ்வார் சொல்லிட்டார்...

    நாம தான் லோக்கலா அடிச்சாலும் சரி, இலக்கியமா அடிச்சாலும் சரி...கேக்க மாட்டோமே! :-)

    ReplyDelete
  36. //Bee'morgan said...
    "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்.. " திருக்குறள் மேற்கோள் மிக அருமை.. இக்குறளுக்கு இப்படி ஒரு உரை அமையுமென்று எண்ணியதில்லை..//

    இராம காவியத்தையே இந்த ஒரு குறளில் அடக்கி விடலாம் Bee Morgan!
    அவ்வளவு சிறப்பான குறள்!
    கருமமே கட்டளைக் கல் என்பதால் தான், இறைவனே தர்ம சங்கடத்தால் தர்மம் மீறும் போது, அந்தக் கருமத்துக்குத் தானே கழுவாயும் தேடிக் கொள்கிறான்!

    வாலி வதம் கட்டளைக் கல்; ஆயிரம் நியாயங்கள் அங்கு இருந்தாலும், வாலியும் அடாது செய்தாலும்...
    கருமம் கட்டளைக் கல்லாக நிற்கிறது!
    அதனால் தான் கண்ணனும் அப்படியே வேடனால் மறைந்திருந்து கொல்லப்படுகிறான்!

    கருமம் கட்டளைக் கல் ஆவதால் அதற்கு இறைவனும் கட்டுப் படுகிறான்! அதைப் பார்த்தாவது நாமும் கட்டுப்பட மாட்டோமா என்ற ஆதங்கம் தான்!

    ReplyDelete
  37. //மதுரையம்பதி said...
    நல்ல பதிவு. இராவணால் சொல்லப் பட்ட சாம கானம் இன்றும் ஈசனுக்கு உகந்ததாக எல்லா இடங்களிலும் பாடப்படுகிறது..//

    மெளலி
    இராவணன் சாமத்தை இயற்றியதாக சிலர் சொல்லுவார்கள்!
    ஆனால் அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். அவன் ஈசனைக் குளிர்விக்க சாமத்தைப் பாட மட்டுமே செய்கிறான்!

    ReplyDelete
  38. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ரவி சங்கர்!
    நடக்கும் கூத்துக்கள் யாவும் அறியாமையின் வெளிப்பாடு.//

    ஆமாங்க யோகன் அண்ணா!

    //இந்த இராவணனை உடைய வாகனம் எங்கள் ஈழக்கோவில்களிலும் உண்டு. இதை கைலாயவாகனம் என்போம் ; மலையைத் தோளில் சுமந்த வண்ணம் பத்துத் தலை இராவணன் சிற்பம் இருக்கும்;//

    தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் அப்படித் தான் இருக்கும் அண்ணா! அண்மைக் காலங்களில் தான் மலையை விட்டு விட்டார்கள்.

    //ஈழத்தில் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரத்தை ,தெட்சண கைலாயம் என்றும் சொல்வர்//

    திருகோணேஸ்வரம் செல்ல வேண்டும் என்று எனக்கு நெடுநாள் ஆசை!
    பொன்னியின் செல்வன் படித்து ஆசையைத் தீர்த்துக் கொள்வேன்! :-)

    //தன் வயோதிபத் தாயாரின் வழிபாட்டை இலகுவாக்க நினைத்த இராவணனை
    நினைவு கூரும் காட்சியே அந்த வாகனம்.//

    இது் எனக்குப் புதிய செய்தி தான்!
    எதுவாகிலும் தன் சொந்த நலத்துக்காக இறைவனிடம் அனுமதி பெறாது, இறைவன் இருக்கும் மலையைப் பெயர்க்க நினைத்தது தவறு தான்! அதனால் தான் ஈசன் இராவணின் செருக்கினை கால் கொண்டு அடக்கினார்!

    ReplyDelete
  39. //இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)//

    நச்சுனு சொன்ன்னீங்க.! இவனுங்க எல்லாம் ஒழுங்கா இதிகாசங்களை படிக்காம, கடவுளை சுயலாபத்துக்கு உபயோகப்படுத்துவதால வரும் தீமைகளை விட எல்லாம் கம்மி தான்...

    ReplyDelete
  40. SHRI KRS,

    //காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்
    குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!//

    மிகச் சரி KRS. ஆனால் ராம காவியத்தில் இராமன் செய்த கருமங்களுக்கு அவன் தான் சிறுமை அடைந்திருக்க வேண்டும். (தந்தையின் பழைய வாக்குறுதிப்படி சகோதரனுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை அவன் இல்லாத போது சொந்தம் கொண்டாடத் தயாரானதில் இருந்து, இன்னொரு சகோதரன் தன் மனைவியை விட்டுவிட்டு தனக்குக் கானகத்தில் காவல் ஊழியம் செய்ய வந்ததை அனுமதித்ததில் இருந்து, காதலைத் தெரிவிக்க வந்த பெண்ணின் மூக்கு முலை போன்றவற்றை அறுத்து மானபங்கம் செய்ததில் இருந்து, வாலி வதம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்).வானரர் முதற்கொண்டு விபீஷணன் வரை ராமன் ராவணனை வதம் செய்ய வேண்டும் என்பதற்காக அவனுக்குத் துணை இருக்கவில்லை, அவன் சீதையை மீட்க வேண்டும் என்பதற்காகவே துணை நின்றனர். (ஏனென்றால் அவர்கள் எவருக்கும் ராவணன் எந்தத் துன்பமும் செய்தவனில்லை). இருந்தும் அத்தனை பேரின் உதவியோடும் மீட்கப்பட்ட சீதையை நாக்கூசும் பழிச்சொல் பேசிய கணத்திலேயே கீழ்த்தரமான ஆடவன் என்று தன்னை அடையாளம் காட்டியவனை திருக்குறள் காட்டியுள்ள "பெருமைக்கு" என்கிற வார்த்தைக்கு இலக்கணம் ஆக்காதீர்கள்.

    //இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?//

    அன்பு, பொறுமை சாத்வீகம் சான்றாண்மை என்கிற வார்த்தைகளுக்கு ராமன் இலக்கணமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறானே ஒழிய அவற்றை நிரூபிக்கும் வண்ணம் கதை அமைப்பில் சித்தரிப்புகள் இல்லை. கண்மூடித் தனமான பக்தி என்கிற கண்ணாடி இன்றிப் படித்தால் ராமாயணத்தால் ராமனுக்குப் பெருமை ஏற்படும் விதமாக ஏதும் இல்லை.

    //ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)//
    இந்த வரிக்கும் ராமன் சிவபூஜை செய்தான் என்பதற்கும் ராமாயணத்தில் சான்று இருந்தால் கொடுங்கள்.

    ReplyDelete
  41. //RATHNESH said...
    SHRI KRS//

    வாங்க ரத்னேஷ்
    இந்த ஸ்ரீ இட்டு விளிப்பது எல்லாம் வேண்டாமே! நான் ரொம்ப பொடிப் பையன்! :-)

    ////இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?//

    //கண்மூடித் தனமான பக்தி என்கிற கண்ணாடி இன்றிப் படித்தால் ராமாயணத்தால் ராமனுக்குப் பெருமை ஏற்படும் விதமாக ஏதும் இல்லை//

    முதலில் ஒன்று உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்!
    ஆன்மீகமும், உயர்ந்த பக்தியும் என்றுமே கண்ணை மூடிக் கொள்ளாது. மாறாக இதயத்தைத் திறந்து வைத்துக் கொள்ளும்!

    இராமாயணத்தைப் பக்திக் கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்கத் தேவையே இல்லை! கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டு படித்தாலே போதும்!

    ராமாயணத்தால் ராமனுக்குப் பெருமை ஏற்படும் விதமாக ஏதும் இல்லை என்று சொல்கிறீர்கள்!
    அப்புறம் எதற்கு இத்தனை இராமாயணங்கள் வந்தன?
    சரி, இராமனை ஆகா ஓகோ என்று புகழ்வதற்கு மட்டும் இராமாயணம் எழுதப்படவில்லை! அது உண்மை தான்!

    காவிய நாயகன் தவறுகளை எல்லாம் மறைத்து எழுதி இருக்கலாமே ஆசிரியர்! ஆனால் அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை? அதை யோசித்தீர்களா?
    நீங்கள் சொல்வது போல பக்திக் கண்ணாடி போட்டுக் கொண்டு, திரித்து மாற்றி எழுதி விட்டுப் போயிருக்கலாமே? வாலியை நேருக்கு நேர் தாக்கினான் என்று எழுதி விட்டுப் போனால் நீங்கள் என்ன அகழ்வாராய்ச்சி செய்தா கண்டு பிடிக்கப் போகிறீர்கள்?

    பாட வந்தது இராமனைப் பற்றி என்றால் ஏன் உள்ளது உள்ளபடிச் சொல்ல வேண்டும்? அதை வைத்துக் கொண்டு நாளைக்கு கேள்வி கேட்பார்கள் என்று வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரியாதா என்ன?

    அன்பு, பொறுமை, சாத்வீகம் சான்றாண்மை என்கிற வார்த்தைகளுக்கு ராமனை இலக்கணமாகச் சொல்லவில்லை!
    ஆனால் ஒரு சாதாரண மனிதன் நிலையில் இருந்தால் அவன் அதை எப்படிக் கடைபிடிப்பான் என்பதைத் தான் அனைத்து ஆசிரியர்களும் காட்டுகின்றனர்!

    நீங்கள் பட்டியல் இட்ட ஒவ்வொரு இராமாயண நிகழ்வுகளும், ஒவ்வொரு பதிவாக விரித்துப் பேசப்பட வேண்டிய ஒன்று!
    பல தமிழ் அறிஞர்கள் இது குறித்து முன்பே பேசியுள்ளார்கள்! அவற்றுள் பக்தி இயக்கம் சாராத அறிஞர்கள் பலரும் அடங்குவர். மபொசி ஐயா, டிகேசி ஐயா என்று பலரும் ஆய்ந்துணர்ந்து சொல்லி உள்ளார்கள்!

    நான் சுருக்கமாக, அடுத்த பின்னூட்டதில் சொல்கிறேன்!

    இராமனும் குணம் குற்றம் உடையவனே!
    இராவணனும் குணம் குற்றம் உடையவனே!

    குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல் - என்பதனால் தான்
    இராமன், மனிதருள் போற்றத் தக்கவன் ஆகிறான்! இன்னும் விரித்துச் சொல்வேன்!

    ஆனால் அதற்கு முன், பக்திக் கண்ணாடியைக் கழற்றுவது போல், நீங்களும் துவேஷக் கண்ணாடியைக் கழற்றி விட்டு, காவியத்தை உள்ளது உள்ளபடி உணரத் தலைப்பட வேண்டும்!

    வெறும் ஆரவார அரசியல் என்றால் விளக்கங்களே தேவை இல்லை!
    உண்மை உணர வேண்டும் என்ற் நோக்கம் இருந்தால் கொஞ்சம் ஆழத் தலைப்பட வேண்டும்!

    ReplyDelete
  42. //இந்த வரிக்கும் ராமன் சிவபூஜை செய்தான் என்பதற்கும் ராமாயணத்தில் சான்று இருந்தால் கொடுங்கள்//

    எதற்கு உங்களுக்குச் சான்று வேண்டும் என்று கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா? சான்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? அதையும் சொல்லுங்கள்!

    பலரும் அறிந்த ஒன்றைக் காவியமாக்கும் போது, ஆசிரியர் ஒரு சிலவற்றை விடுவது இன்றும் உள்ள நடைமுறை தான்!
    இராமயணத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு வேறுபாடுகள்! அவரவர் காலகட்டம், அவர்கள் பார்வை, முன்னவர் சொல்லாது விடுத்த ஒன்றைப் பின்னவர் சொல்வது என்று...அதனால் தான் இத்தனை ராமாயணங்கள்!

    கம்பர் சொல்வது போல் வால்மீகி சொல்லவில்லையே! அப்படி என்றால் கம்பர் பொய்யரா என்று எதிர்வாதம் எந்த நன்மையும் பயக்காது!
    அத்தனையும் மூலத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!

    பெரியார் படத்தில் கூட இயக்குனர் முழுமையாகச் சொல்லவில்லை என்று குறைகள் சொல்லிக் கொண்டு தான் உள்ளனர். இப்போது எடுத்த கதைக்கே இப்படி என்றால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள கதையின் கதி என்ன என்பதைப் பிராக்டிலாக எண்ணிப் பார்த்தீர்களா? ஆனாலும் பெரியார் படம் அது எடுக்கப்பட்டதன் நோக்கத்தை ஒரு நல்ல அளவுக்கேனும் சாதித்தது!
    அது போலத் தான் இதுவும்!

    ஆழ்வார்களில் பல பேர் கூர்மாவதாரத்தைப் பாடவில்லை என்பதற்காக அது இல்லை என்றும் ஆகி விடாது! சான்றுகள் தேடும் போது கூட்டாகப் படித்தல் தான் (collective comprehension) தான் உதவும்!

    நீங்கள் கேட்ட சான்றுகள் இதோ!
    இராவணன் இறைவனின் அன்புக்குரிய வாயிற்காப்போன் என்பதற்கு வியாசரின் பாகவதம் - மூன்றாம் ஸ்கந்தம் சான்று! பாகவதத்திலும் இராமாயணம் சொல்லப்படுகிறது.

    அதே போல் துளசி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், கம்ப ராமாயணம், இன்னும் வேறு பல ராமாயணங்களில் இருந்தும் உங்களுக்குச் சான்று தேவைப்படுகிறதா? சொல்லுங்கள்!

    ReplyDelete
  43. //ஆனால் ராம காவியத்தில் இராமன் செய்த கருமங்களுக்கு அவன் தான் சிறுமை அடைந்திருக்க வேண்டும்.//

    நானும் கண்மூடித்தனமான பக்திக் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்தப் பதிவை எழுதி இருந்தேன் என்றால்...
    இராவணன் படத்தைப் போட்டிருக்க மாட்டேன்! :-)

    பதிவின் நோக்கம் உங்களுக்குப் புரிய வில்லையா? வெட்டிப்பயல் மார்க் பண்ணி இருக்காரு பாருங்க பதிவில் இருந்து!
    //காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!//

    பரதன் இல்லாத போது சொந்தம் கொண்டாட வெண்டும் என்று இராமன் ஏதும் செய்யவில்லை! அப்படிக் கொண்டாடி இருப்பானே ஆனால், அவன் இல்லாத நேரத்தில் வயசான அம்மா அப்பாவையும், எல்லாரையும் ஒரே மடக்காக மடக்கி, ஆட்சியைப் பிடித்து இருக்கலாம்! இலக்குவனும் துணை இருந்திருப்பான்.

    நீங்கள் இதைக் சொன்னதும் சிரிப்பு தான் வருகிறது! யாரு இப்படிக் கிளப்பி விட்டா? உக்காந்து யோசிப்பாய்ங்களோ! :-)

    இல்லீன்னா பரதன் காட்டுக்கு வரும் போது...சரிடா மச்சி, ஆனது ஆயிப் போச்சு, வா...உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்-னு திரும்பி வந்திருந்தா எவனும் ஒன்னும் சொல்லி இருக்க முடியாது!

    அது தசரதன் எடுத்த முடிவு! பரதனுக்கு இமெயில் அனுப்பி வாடா-ன்னும் சொல்ல முடியாது!
    ஜி டாக்கில் இன்பர்மேஷனும் கொடுக்க முடியாது!

    ஒரு அரச குடும்பத்தில் எல்லாரும் இருக்கும் போது தான் பட்டாபிஷேகம்-னு பாத்தா, அந்தக் காலத்துல முடியவே முடியாது! அருண்மொழித் தேவர் பட்டமேற்கும் போது, வந்தியத் தேவர் அருகில் இல்லீன்னா, அவரு என்ன மோசமான ஃபிரெண்டா?

    இந்தக் காலத்தில் உடன் பிறந்தவர்கள் திருமணத்துக்குக் கூட நிஜமாலுமே செல்ல முடியாமல் சிலர் வெவ்வேறு நாடுகளில் பணிச்சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்கள்! அப்படின்னா அவிங்க எல்லாம் மோசமான சகோதர சகோதரிகளா?

    அடப் போங்கப்பா! கெளப்பணும் முடிவு கட்டியாச்சுன்னா கெளப்பிக்கிட்டே இருக்கலாம்! :-)

    உங்கள் மற்ற கேள்விகளுக்கு இன்னும் சில அன்பர்கள் யாராச்சும் வந்து பதில் சொல்லுறாங்களான்னு காத்திருப்போம்!

    ReplyDelete
  44. பத்த வச்சக் கை ரொம்ப ராசியான கை. தீபாவளி ரொம்ப நல்லா கொண்டாடப்படுகிறது போல இங்கே. :-)

    இந்த வருடம் எங்க வீட்டுல தீபாவளி இல்லை. அதனால ஒதுங்கி நின்னு பாத்துக்கிட்டு இருக்கேன். இங்கே எல்லோருமே சேர்ந்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களா அல்லது ஓரிருவர் பத்த வைத்துவிட்டு அடுத்தவர் அடித்துக் கொள்வதைக் கண்டு சந்தோஷத் தீபாவளிக் கொண்டாடுகிறார்களா என்று. :-) நம்மில் யாரும் தாக்கரே, இமாம் புகாரி போன்ற அரசியல்-மதவாதிகள் ஆகவில்லை என்று நினைக்கிறேன். அதனால் முதல் வகைக் கொண்டாட்டம் தான் இங்கே நடக்கிறது என்று நம்புகிறேன்.

    பத்த வச்ச கை யார்ன்னு கேக்கிறீங்களா? அட நீங்க தானே அது இரவிசங்கர். இந்த மாதிரி ஒரு பேசு பொருளை வைத்து எழுதிவிட்டு இப்படி பட்டாசு வெடிக்காது என்று எதிர்பார்க்க முடியுமா? என் கவலை எல்லாம் யார் மேலும் அடி படாமல் (யார் மனமும் வருத்தப்படாமல்) இந்த பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்பது தான்.

    ReplyDelete
  45. Rathnesh ayya does not seem to have read the valmiki ramayanam.Please read the ramayana at
    www.valmikiramayan.net

    (தந்தையின் பழைய வாக்குறுதிப்படி சகோதரனுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை அவன் இல்லாத போது சொந்தம் கொண்டாடத் தயாரானதில் இருந்து,

    Dasarathan promised kaikeyi 3 boons long time back.Kaikeyi chose to use the boons just before rama's pattabhisekam on instaigation of kuni.One of the boon is to make bharathan king and send rama to exile for 14 years.There was no pazhaya vakurithi by dasarathan that bharathan will be made king ever!Rama quietly accepts his father's word because he has to maintain Truth

    இன்னொரு சகோதரன் தன் மனைவியை விட்டுவிட்டு தனக்குக் கானகத்தில் காவல் ஊழியம் செய்ய வந்ததை அனுமதித்ததில் இருந்து
    Again,please read the ramayana online!
    Rama explicitly asks both Lakshmana and Sitha NOT to accompany him.He asks them to enjoy the pleasures of the palace.But, both Lakshmana and Sitha refuse to hear rama's words and forcibly accompany Rama to the forest

    காதலைத் தெரிவிக்க வந்த பெண்ணின் மூக்கு முலை போன்றவற்றை அறுத்து மானபங்கம் செய்ததில் இருந்து

    Surpanakai expresses her love to Rama.Rama says that he is already married and in a humorous way asks her to ask Lakshmana to marry her as he does not have a wife in the forests.Laxshmana also refuses and asks her to go back to Rama.On being rejected again by Rama, surpanakai gets angry and thinks sitha is the cause of this.If sita is alive,rama wont marry her and then she proceeds to kill sitha! it is lakshmana who prevents her from doing this and cuts off her nose,ears.He would have killed her if she had been a man but since she was a lady, he just did this to chase her off.Otherwise, this demoness would have devoured sitha!!! This was a act of self defence by lakshmana

    வாலி வதம்
    i think kabandan sends Rama & lakshmana to sugriva.rama makes a pact before fire to help sugreeva in return for killing the evil Vali.Vali is soneone who mistakenly chases away his own brother and forcibly abducts Ruma-sugriva's wife!When vali is killed bu rama, vali tries to argue his case to which Rama eloquently gives the reasons why Vali had to die.

    Rama had to make sitha go thru agni pravesha because as a king , he had to correct misconceptions of some citizen who blabbered such stuff abt sitha.that was his kshatriya dharma!

    Again , requesting Rathnesh ayya to please read Ramayanam fully on the internet.

    ReplyDelete
  46. குமரன்,

    தங்கள் ஆதங்கத்தை முழுக்க உள்வாங்கிக் கொண்டு தொடர்கிறேன். எனக்கு கம்பராமாயணம் குறித்து (அதன் அழகுத் தமிழுக்காக மட்டும்) உயர் அபிப்ராயமே உண்டு என்பதானால், உணர்ச்சி வசப்படாமல் இந்தப் பொருள் குறித்துப்பேசமுடியும் என்று நம்புகிறேன். இருந்தும் சரியான நேரத்தில் நினைவுபடுத்திய தங்கள் பொறுப்புணர்வுக்கு நட்பான நன்றி.

    கே ஆர் எஸ், எனக்கு துவேஷம் இல்லை என்பதை என் வார்த்தைகளின் மூலம் புரியவைக்க முயற்சிக்கிறேன். கேள்விகள் கோர்வையாக இல்லாமல் முன்பின்னாக இருக்கலாம் தானே?

    (//ஆன்மீகமும், உயர்ந்த பக்தியும் என்றுமே கண்ணை மூடிக் கொள்ளாது. மாறாக இதயத்தைத் திறந்து வைத்துக் கொள்ளும்!// இது போன்ற பொதுப்படை வாக்கியங்களைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதன்படி இன்று நாட்டில் ஆன்மீகமும் இல்லை உயர்ந்த பக்தியும் இல்லை என்கிற கோணத்தில் பார்வை போய்விடும் அபாயம் உள்ளது. திறந்த இதயம் மசூதியை இடிக்குமா? நாட்டுக்குப் பொருளாதார பலன் தரும் மணல் மேட்டினை இடிப்பதற்குக் குறுக்கே தான் நிற்குமா? ஜின்னா, காந்தியிடம் பிரிவினையைத் தவிர்ப்பது குறித்த விவாதத்தின் போது, "India is not full of Mahatmas - not even Congress" என்று சொன்னதை நினைவு கூர்கிறேன். இங்கே குமரன்களும் ரவிஷங்கர்களும் மிகமிகக் குறைவு)


    ராமாயணங்கள் பல இருந்தாலும் வால்மீகி ராமாயணமும், கம்ப ராமாயணமும் மட்டுமே பரவலாக அறியப்பட்டவை. ஏதேனும் ஓரிரு பாயிண்ட்டுக்காக வேறு ராமாயணங்களையும் மேற்கோளிடுவது ராமாயணம் குறித்த விவாதத்துக்கு உதவாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் துளசிதாஸ் ராமாயணம் உச்சகட்ட பக்திபூர்வமான மிகை என்றால் ராவண காவியம் உச்சகட்ட துவேஷபூர்வமானது என்பதால் இரண்டையும் தவிர்த்து விடலாம் என்றே கருதுகிறேன்.

    நான், ராமன் சிவபூஜை செய்ததற்கான சான்று கேட்டது, எகத்தாளத்தில் அல்ல, அப்படிப்பட நிகழ்வுகள் பிற்கால இடைச் செருகல் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே. வேதாரண்யத்தில் ராமன் பாதம் என்றே ஒரு பாறை உண்டு. (நான் பார்த்திருக்கிறேன்). ராமன் அதன் மீது ஏறி நின்று தான் இலங்கையைப் பார்த்தான் என்கிற கதைக்கும் பழைய ஆதாரங்கள் இல்லை.

    வால்மீகியோ கம்பனோ ராமனை இன்னும் பாலீஷ் போட்டு எழுதி இருக்க முடியாதா உள்ளபடி எழுதி இருக்கிறார்கள் என்கிற தங்கள் வாதத்தை நீங்களே இன்னொருமுறை யோசியுங்கள். உள்ளபடி என்றால் அவை இரண்டிலும் ஏன் இவ்வளவு முரண்? அவரவர்க்குத் தோன்றியபடி மூலக்கதையை தமது பாணியில் எழுதியுள்ளார்கள் என்று தான் எடுத்துக் கொள்ளலாம். அதில் பாலீஷ் போடவேண்டும் என்கிற அக்கறை ஏன் ஏற்படவில்லை என்றால் அவர்களின் நோக்கம் ஒரு கதை சொல்வதாக மட்டும் இருந்திருக்கலாம்; (இதை வைத்து நாட்டில் இப்படி இயக்கங்கள் கிளம்பும் என்று எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம்). கடவுள் என்கிற இமேஜுடன் என்ன செய்தாலும் எங்காள் ஏத்துக்குவான்; கேள்வி கேட்க மாட்டான் என்கிற அலட்சியம் காரணமாய் இருந்திருக்கலாம். (இன்றும் அரசியல் தலைவர்கள் நேரடி ஒளிபரப்பு என்று தெரிந்தும் கூட அடாவடி செயல்களைத் துணிந்து செய்கிறார்களே, அதுவே சான்று).

    //பரதன் இல்லாத போது சொந்தம் கொண்டாட வெண்டும் என்று இராமன் ஏதும் செய்யவில்லை! அப்படிக் கொண்டாடி இருப்பானே ஆனால், அவன் இல்லாத நேரத்தில் வயசான அம்மா அப்பாவையும், எல்லாரையும் ஒரே மடக்காக மடக்கி, ஆட்சியைப் பிடித்து இருக்கலாம்! இலக்குவனும் துணை இருந்திருப்பான்.

    நீங்கள் இதைக் சொன்னதும் சிரிப்பு தான் வருகிறது! யாரு இப்படிக் கிளப்பி விட்டா? உக்காந்து யோசிப்பாய்ங்களோ! :-)

    இல்லீன்னா பரதன் காட்டுக்கு வரும் போது...சரிடா மச்சி, ஆனது ஆயிப் போச்சு, வா...உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்-னு திரும்பி வந்திருந்தா எவனும் ஒன்னும் சொல்லி இருக்க முடியாது!

    அது தசரதன் எடுத்த முடிவு! //

    தசரதன் கைகேயியின் தந்தைக்குக் கொடுத்த வாக்கு ராமனுக்குத் தெரியும்.(ஆதாரம் உள்ளது) சகோதரனுக்கு உரிய நாட்டினைத் தனக்கு அளிப்பதாக அப்பாவே முடிவு செய்திருந்தாலும் சராசரி நேர்மையாவது உள்ள அண்ணன் மறுத்திருக்க வேண்டும். ஒரே மடக்காக மடக்குவது, பரதன் சொன்னவுடன் சரிடா மச்சி என்பதெல்லாம் ராமனின் இயல்பே அல்ல. IMAGE PRONE ஆக இருக்கும் ஒரு கோழையின் பாத்திரப் படைப்பே ராமன். தன்னுடைய இமேஜுக்குப் பங்கம் வராமல் எது நடந்தாலும் சரியே; அதற்கு ஒரு பங்கம் வருமென்றால் எதையும் இழந்து விடத் தயாரான ஒரு பாத்திரம். சலசலப்பு என்று வந்தால் நேர்கொண்டு விசாரித்து ஒருமுடிவுக்கு வரும் சித்தரிப்பே முழுக் கதையிலும் இல்லை. வசிஷ்டர் சொன்னார் பட்டாபிஷேகம்; அதற்கும் சரி. சித்தி சொன்னாள் காட்டுக்குப் போ, அதற்கும் சரி. சகோதரன் மனைவியை விட்டு விட்டுத் தான் மட்டும் உடன் வருவேன் என்கிறான்; அதற்கும் சரி. சீதை பொன்மான் கேட்டாள், அதற்கும் சரி. சுக்ரீவன் வந்து அழுதான், உடனடி அடைக்கலம், கடல்கடக்க வேண்டி சமுத்திர ராஜனை அழைக்க அவன் வருவது தாமத மானதும் உடனடி கோபம், சீதையை மீட்டபிறகும் அடுத்தவன் ஏதும் சொல்வதற்கும் முன்னால் அபாண்டமாய்ப் பேசித் தீக்குளிக்க வைத்தது (இது தான் ராமனுடைய கோழைத்தனத்துக்கான உச்சகட்ட சித்தரிப்பு), மீண்டு வந்த பிறகும் கர்ப்பிணி சீதையை எவனோ ஏதோ சொன்னவுடன் உடனடி காடுகடத்தல் என்று எல்லாமே REFLEX TUNED DECISIONS. வில் வீரம் இருந்ததைத் தவிர ராமன் மனத்தளவில் பெரிய கோழை என்பதற்கு ஏராளமான உளவியல் ஆதாரங்கள் ராமாயணம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. சுக்ரீவன் தன் பக்கத்தைச் சொன்னவுடன் அது பற்றி வாலியிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கூடத் தோன்றாததும், சுக்ரீவன் நாடு கிடைத்ததும் சீதையைத் தேட ஆளனுப்பாததற்குக் காரணம் கூடப் புரிந்து கொள்ளும் முன் வெகுண்டு பேசிய வசனங்களும், சீதையை மீட்டபிறகு அவளிடம் பேசிய வார்த்தைகளும் திறந்த மனத்துடன் வாசிக்கப்பட்டால் ரொம்ப வெளிப்படையாக இந்த SYMPTOMS தெரியும். பாத்திரப்படைப்பு விஷயத்தில் மகாபாரதத்தில் இருக்கும் தெளிவு ராமாயணத்தில் அறவே கிடையாது. இலக்கிய ஆராய்ச்சியாக இதனை நான் செய்து கொண்டிருக்கிறேன், உளவியல் நோக்கில்.

    ஒரே மூச்சில் அவ்வளவும் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து தான் பேசுவோமே.

    (Lighter sense - ல் ஒரு கூடுதல் குறிப்பு: ராமாயணத்தில் தெளிவான பாத்திரங்களில் ஒன்று சுமத்திரை என்பேன். மூன்று பட்டத்தரசிகளில் ஒருத்தி மூத்த பட்டத்தரசி இன்னொருத்தி அரசனின் காதல் கிழத்தி என்னும் போது மூன்றாமவள், ஒரு பெண்ணாக என்ன செய்வாளோ அதைச் செய்தவள் (கோசலையுடனேயே ஒட்டித் திரிந்தாள்). இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை மூத்தவன் ராமனுடன் இழைய விட்டாள்; அடுத்தவனை பட்டத்துக்கு உரியவனாகிய பரதனுடன் இழைய விட்டாள். தெளிவு என்பது இது தான்.

    ReplyDelete
  47. //ஒரே மூச்சில் அவ்வளவும் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து தான் பேசுவோமே.//

    ரத்னேஷ்!
    துவேஷம் ஏதும் இல்லாமல் புரிந்துணரத் தலைப்படும் முயற்சிக்கு நன்றி!
    அழகுத் தமிழைச் சுவைக்கும் அதே சமயத்தில் உணர்ச்சி வசப்படாமல் இந்தப் பொருள் குறித்து கண்டிப்பாகப் பேசமுடியும்! பேசலாம்!!

    //பொதுப்படை வாக்கியங்களைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதன்படி இன்று நாட்டில் ஆன்மீகமும் இல்லை உயர்ந்த பக்தியும் இல்லை//

    தவிர்த்தால் எளிதாகும் என்றால் தாராளமாய்த் தவிர்க்கலாம்! இன்று நாட்டில் ஆன்மீகமும் இல்லை உயர்ந்த பக்தியும் இல்லை என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் எனக்குண்டு! நம் பார்வைக்குப் படவில்லையே தவிர இன்றும் இருக்கு!

    ஆனால் நான் சொன்ன "கண்ணை மூடிக் கொள்ளாது இதயம் திறக்கும்" ஆன்மீகம்...வால்மீகி, கம்பர் பற்றியது! அவர்கள் நிச்சயம் தங்கள் கண்களை மூடிக் கொள்ளவில்லை!

    //கடவுள் என்கிற இமேஜுடன் என்ன செய்தாலும் எங்காள் ஏத்துக்குவான்; கேள்வி கேட்க மாட்டான் என்கிற அலட்சியம் காரணமாய் இருந்திருக்கலாம்.//

    நிச்சயமாய் இல்லை; நீங்கள் சொல்வது ஓரிரு இடங்களில் பொருந்தலாம்! ஆனால் ஆன்மீகம் என்பது புலவர், படித்தார், பாமரர் என்ற பல தட்டுகளில் பரவிக் கிடக்கு!

    கம்பர் தம் இராம காதையை அரங்கேற்றும் போது எத்தனை எதிர்ப்புகள்! எத்தனை கேள்விகள்! மூலத்துக்கும் அதற்கும் இடையே ஏன் வேறுபாடுகள் என்று துளைக்கும் கேள்விகள்!
    கடவுள் என்கிற இமேஜுடன் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அப்படி எல்லாம் கேட்டு அரங்கேற்றத்க்குத் தடை உண்டாக்கி இருக்க மாட்டார்கள்!...கம்பர் அத்தனையும் சமாளித்துத் தான் அரங்கேற்ற முடிந்தது!

    //இன்னும் பாலீஷ் போட்டு எழுதி இருக்க முடியாதா உள்ளபடி எழுதி இருக்கிறார்கள் என்கிற தங்கள் வாதத்தை நீங்களே இன்னொருமுறை யோசியுங்கள். உள்ளபடி என்றால் அவை இரண்டிலும் ஏன் இவ்வளவு முரண்? //

    அவை முரண் அல்ல!
    மேலே நான் சொன்ன விளக்கத்தை இன்னொரு முறை படியுங்கள்!
    //கம்பர் சொல்வது போல் வால்மீகி சொல்லவில்லையே! அப்படி என்றால் கம்பர் பொய்யரா என்று எதிர்வாதம் எந்த நன்மையும் பயக்காது!
    அத்தனையும் மூலத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!//

    மேலும், ஒரு காவியம் மக்களைப் பரவலாகச் சென்று அடைந்திருக்கிறது என்றால், பின்னாள் ஆசிரியர்கள், அதை இன்னும் திருத்தமாகவும், புரியாத கோணங்களுக்கு மேலும் வெளிச்சமிட்டுக் காட்டத் தலைப்பட்டார்கள்! பாகவதத்தில் இருந்த ஜய விஜயன் கதையை, இராமயணத்திலேயே கொண்டு வருவது, வால்மீகி சொல்லாத பிரகலாதன் கதையைக் கம்பன் சொல்வது....இவை எல்லாம் காவியத்தை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவும் செழுமையடையச் செய்யவும் தான்!

    //வேதாரண்யத்தில் ராமன் பாதம் என்றே ஒரு பாறை உண்டு. (நான் பார்த்திருக்கிறேன்). ராமன் அதன் மீது ஏறி நின்று தான் இலங்கையைப் பார்த்தான் என்கிற கதைக்கும்//

    இங்கு தான் குழப்பிக் கொள்கிறீர்கள்! பல இடங்களில் மக்கள் தத்தம் சொந்தக் கற்பனைகளை ஏற்றிச் சொல்லும் செவி வழிக் கதைகள் வேறு! காப்பிய ஆசிரியர்கள் கையாளும் கதைப் போக்கு வேறு!
    இராமர் வனவாசத்தின் போது எங்க ஊருக்கு வந்தார், பாலாற்றில் தண்ணி குடித்தார் என்பது எல்லாம் எங்க பாட்டியும் சொல்லி இருக்காங்க! ஆனால் அவை எல்லாம் ஒரு வித பாமர மகிழ்ச்சி தானே அன்றி, யாரும் அதற்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதில்லை!
    காவியத்தின் மையக் கருவும், மக்களுக்கு அவை காட்டும் நெறிகளும் தான் முக்கியம்!

    ReplyDelete
  48. //தசரதன் கைகேயியின் தந்தைக்குக் கொடுத்த வாக்கு ராமனுக்குத் தெரியும்.(ஆதாரம் உள்ளது) சகோதரனுக்கு உரிய நாட்டினைத் தனக்கு அளிப்பதாக அப்பாவே முடிவு செய்திருந்தாலும்//

    தந்தை அன்னைக்கு வாக்கு கொடுத்தார் தெரியும்! பட்டத்தைக் கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாரா?

    அப்படி என்றால் கைகேயி இராமன் பட்டாபிஷேகம் என்று கேட்டவுடன் முதலில் ஏன் மகிழ வேண்டும்?
    வாக்கை மீறிப் பட்டம் கட்டத் துணிந்தான் தயரதன் என்றே வைத்துக் கொள்வோம்! அப்புறம் எதற்கு அவன் உயிரை விட வேண்டும்?
    வாக்கை மீறத் துணிந்தவன், சரி தான் போடி, என்று தொடர்ந்து மீறி இருக்கலாமே?

    உங்கள் சிந்தனையை ஒட்டி நான் ஒன்று சொல்லட்டுமா?
    ஒரு வேளை தயரதனும் image prone போல! கோழை போல! அதான் அதே குணம் hereditary ஆக இராமனுக்கும் வந்து விட்டது என்ற நோக்கிலும் ஆய்ந்துணரத் தலைப்படலாம்! :-)

    ரத்னேஷ்
    பாத்திரப் படைப்புகளில் சிக்கலும் சர்ச்சையும் இன்று நேற்றல்ல! எப்பவும் உண்டு தான்! காந்தியடிகள், போஸ், விவேகானந்தர், சம்பந்தர், மார்ட்டின் லூதர் கிங் என்று எல்லாரின் செயல்களுக்கும் வேறு வேறு கற்பித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

    தற்காலக் கண் கொண்டு அக்கால இலக்கியங்களை வரிக்கு வரிக்கு பார்க்க முடியாது. போர் இன்று தீயது! அன்று வீர லட்சணம்! ஊரை எரித்தல் என்று சிலம்பில் வருவதால், அதை இன்று இழிவாய்ப் பேசி, கண்ணகியைத் தூற்றத் தலைப்படலாமோ?

    காவியங்களில் பாத்திரப் படைப்புக்கள் மக்களுக்கு என்ன பயன் தருகிறது! சமுதாயம் என்ன செழுமை அடைகிறது என்ற நோக்கம் தான் இங்கு முக்கியம்!
    இலக்கியம் = இலக்கை இயம்புவது!

    அந்த அளவில் இராமாயணப் பாத்திரப் படைப்புகள் அத்தனையும், இராவணன் உட்பட, சமூகக் செழுமை உள்ளனவே என்பது தான் பல அறிஞர்கள் துணிபு! சிறியேன் என் துணிபும் அதுவே!

    சீதை தீக்குளித்தல் பற்றி செல்வனின் கற்பின் கனலி பதிவில் விரிவாகக் காணுங்கள்!
    வாலி வதை மற்றும் காவியத்தில் தலைவன் செய்யும் தவறுகள் எல்லாம் ஏதும் மறைக்கப்படாமல் அப்படியே தான் உள்ளன. அந்தத் தவறுகள், அதன் சூழல், அதன் விளைவுகள், அதற்காகத் த்கலைவன் பெறும் தண்டனைகள் என்று ஒவ்வொன்றாகப் பின்னர் விரிவாகப் பேசலாம்!
    இராம காவியத் தொடர் பதிவு ஒன்று மனத்தில் உதித்துள்ளது! அதற்கு வித்திட்ட உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  49. //பாத்திரப்படைப்பு விஷயத்தில் மகாபாரதத்தில் இருக்கும் தெளிவு ராமாயணத்தில் அறவே கிடையாது//

    பாத்திரங்கள் மகாபாரதத்தில் ரொம்பவும் அதிகம்! அதான் தெளிவு போல! :-) ச்ச்சும்மா!
    உங்கள் ஆய்வுக் கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்!

    //இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை மூத்தவன் ராமனுடன் இழைய விட்டாள்; அடுத்தவனை பட்டத்துக்கு உரியவனாகிய பரதனுடன் இழைய விட்டாள். தெளிவு என்பது இது தான்//

    அட்றா சக்கை! சுமத்திரை படா கில்லாடியா இருப்பாள் போல இருக்கே! :-)

    //ஒரே மடக்காக மடக்குவது, பரதன் சொன்னவுடன் சரிடா மச்சி என்பதெல்லாம் ராமனின் இயல்பே அல்ல. IMAGE PRONE ஆக இருக்கும் ஒரு கோழையின் பாத்திரப் படைப்பே ராமன். தன்னுடைய இமேஜுக்குப் பங்கம் வராமல் எது நடந்தாலும் சரியே; அதற்கு ஒரு பங்கம் வருமென்றால் எதையும் இழந்து விடத் தயாரான ஒரு பாத்திரம்//

    இராமன் IMAGE PRONE ஆக இருக்கும் ஒரு கோழையின் பாத்திரம் என்பதற்கான உங்கள் ஆராய்ச்சி முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
    முடிவுகளை எதிர்நோக்கி நானும் காத்துள்ளேன்!
    மருத்துவ, உளவியல் சார்ந்ததாய் ஆய்வு அமையட்டும்!

    ReplyDelete
  50. //Anonymous said...
    Rathnesh ayya does not seem to have read the valmiki ramayanam.Please read the ramayana at
    www.valmikiramayan.net//

    அனானி ஐயா!
    சுட்டிகளுக்கும் விளக்கத்துக்கும் நன்றி!
    இதை இப்படியே சொல்வதை விட, தற்காலச் சூழலுக்குப் பொருத்திச் சொன்னால் புரிய மறுக்கும் மக்களும், சிந்தித்துப் புரிந்து கொள்வார்கள்!

    பார்க்கலாம்...ஒவ்வொன்றாய் இனி வரும் பதிவுகளில் அவ்வப்போதாச்சும் எழுதுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  51. //குமரன் (Kumaran) said...
    பத்த வச்சக் கை ரொம்ப ராசியான கை. தீபாவளி ரொம்ப நல்லா கொண்டாடப்படுகிறது போல இங்கே. :-)//

    ஹிஹி!
    பத்திக்கிச்சு பத்திக்கிச்சு-ன்னு பாட்டு போட்டுடலாமா குமரன்?

    //நம்மில் யாரும் தாக்கரே, இமாம் புகாரி போன்ற அரசியல்-மதவாதிகள் ஆகவில்லை என்று நினைக்கிறேன். அதனால் முதல் வகைக் கொண்டாட்டம் தான் இங்கே நடக்கிறது என்று நம்புகிறேன்.//

    நானும் அப்படியே நம்புகிறேன்!

    //பத்த வச்ச கை யார்ன்னு கேக்கிறீங்களா? அட நீங்க தானே அது இரவிசங்கர். இந்த மாதிரி ஒரு பேசு பொருளை வைத்து எழுதிவிட்டு இப்படி பட்டாசு வெடிக்காது என்று எதிர்பார்க்க முடியுமா? //

    அதானே!
    பத்த வச்சது அடியேன்ன்னு பத்த வச்சிட்டீங்களே பத்தரே (பக்தரே)! :-)))

    ReplyDelete
  52. //Dreamzz said...
    //இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)//

    நச்சுனு சொன்ன்னீங்க.! இவனுங்க எல்லாம் ஒழுங்கா இதிகாசங்களை படிக்காம, கடவுளை சுயலாபத்துக்கு உபயோகப்படுத்துவதால வரும் தீமைகளை விட எல்லாம் கம்மி தான்...//

    சரியாச் சொன்னீங்க தினேஷ் தம்பி!
    புரிஞ்சிக்கலை என்பதை விட புரிஞ்சிக்க வேண்டாம் என்று இருக்காங்க இரு தரப்பிலும்! அதான் அணையாம அப்படியே இருக்கு!

    ReplyDelete
  53. // ஒரே மூச்சில் அவ்வளவும் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து தான் பேசுவோமே.

    (Lighter sense - ல் ஒரு கூடுதல் குறிப்பு: ராமாயணத்தில் தெளிவான பாத்திரங்களில் ஒன்று சுமத்திரை என்பேன். மூன்று பட்டத்தரசிகளில் ஒருத்தி மூத்த பட்டத்தரசி இன்னொருத்தி அரசனின் காதல் கிழத்தி என்னும் போது மூன்றாமவள், ஒரு பெண்ணாக என்ன செய்வாளோ அதைச் செய்தவள் (கோசலையுடனேயே ஒட்டித் திரிந்தாள்). இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை மூத்தவன் ராமனுடன் இழைய விட்டாள்; அடுத்தவனை பட்டத்துக்கு உரியவனாகிய பரதனுடன் இழைய விட்டாள். தெளிவு என்பது இது தான். //

    சூப்பர் சூப்பர்....ஊய் ஊய் இது சூப்பர். ரத்னேஷ்...சூப்பர்.

    என்னோட கருத்துகளும் இந்த வகையிலதான் போகுது.

    ரவி, குணம் நாடிக் குற்றமும் நாடியெல்லாம் சரிதான்...நான் கேக்குறேன். சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே...இப்படியும் கேக்கலாமே.

    அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.

    வெட்டிப்பயல் என்ன சொல்றாருன்னா...ஜிடாக்குல சொன்னாரு....ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம். பங்கம் சொல்லக் கூடாதாம். சிவனே பங்கம் பண்ண முடியாத கருவம் இருந்ததாலதான் அவன் மாண்டான்னு அப்படின்னு வெட்டியார் கூறுகிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  54. //G.Ragavan said...
    சூப்பர் சூப்பர்....ஊய் ஊய் இது சூப்பர்//

    அட, ராகவனின் ராமாவதாரம் விசில் எல்லாம் கூட அடிக்கும் போல இருக்கே! :-)

    //சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே//

    அண்ணே வணக்கமுண்ணே!
    ட்ரெயின் வுடாம இருந்திருந்தா குண்டே வெச்சிருக்கமாட்டாங்களே!
    ட்வின் டவர் கட்டாம இருந்திருந்தா இடிச்சி இருக்கவே மாட்டாங்களே!
    நாட்டுக்கு விடுதலை வாங்காம இருந்திருந்தா லஞ்ச லாவண்யமே பெருகி இருக்காதே!
    அவ்தாரம் பண்ணாம இருந்திருந்தா இராவணனும் தூக்கி இருக்க மாட்டானே!

    ரொம்ப சரி! ரொம்ப சரி!! :-))

    //அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.//

    நீங்க தான் இராகவன். நீங்களே சொன்னீங்கனா நாங்களும் நேரடியாத் தெரிஞ்சிக்குவோமில்ல! :-)

    //ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம்.//

    பங்கம்-னா என்ன ஜிரா?
    சேதப்படுத்தறது-ன்னு பொருள்!
    சேதமாச்சுன்னா, டோட்டல் டேமேஜ் ன்னா சொல்லுறோம்!
    அதைத் தான் வெட்டி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்!

    ஈசனையே அசைத்துப் பார்க்கத் தான் அவன் மனம் போனது. அவன் வருந்தியது எப்பன்னா மலையின் கீழ் மாட்டுப்பட்டு அவதிப்படும் போது தான்!

    ஈசனார் அவன் செருக்கை அடக்கினார். ஆனாலும் அது மீண்டும் துளிர்த்தது! ஈசன் அவனைக் கண்டித்தாரே அன்றி தண்டிக்க வில்லை! ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க இராவணன் முயலவே வில்லை!

    ReplyDelete
  55. //அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.//

    ஜிரா, இங்கு பின்னூட்டங்களில் சூரன் பற்றியும் பேச்சு வந்தது!
    அதனால் நீங்க சூரனும் என்னென்ன தப்பு செஞ்சான்னு சொன்னீங்கன்னா, ரெண்டுத்துல இருந்தும் பாடம் படிக்க பயனுள்ளதா இருக்கும்!

    சூரபாத்மன் செய்த தவறுகள் என்ன ஜிரா?

    ReplyDelete
  56. இராகவன். இங்கே ஓடி வந்து இராமன், இராவணன்னு கொக்கி போடறது இருக்கட்டும். முருகனை பிடிக்காதா உதயசூரியனைப் பிடிக்காதான்னு கூடல் பதிவுக்கு வந்து சொல்லுங்க.

    வேலை முடிஞ்சவுடனே வேலை வணங்க வருவீங்கன்னு பாத்தா சேவல் மாதிரி சிலுத்துக்கிட்டு இங்க வந்து நிக்கிறீங்களே?!

    ReplyDelete
  57. //சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே...இப்படியும் கேக்கலாமே.//
    அப்படி ஜிரா சொல்லுவதுதான் சரிதான்!

    அத்யாத்ம ராமயணத்தில் ராவணன் தூக்கிச்சென்றது உண்மையான சீதையே இல்லை. அவன் அபகரித்தது மாயையான சீதைதான்.

    என்னதான் சிவ பக்தன் ஆனாலும் மாயையினால் சிக்கியது ராவணன் மட்டுமல்ல, நாமும்தான்! இதெல்லாம் நமக்கு புரிய மாயையின் விளக்கும் சக்தியினை புரிய வைப்பதற்கான நாடகம்தான் என்கிறது அத்யாத்ம ராமாயணம்.

    ReplyDelete
  58. //அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.//


    Ravanan was a habitual sex offender
    He raped Punjikasthala.Because of this brahma put a curse that his head will burst into hundreds of pieces if he tried to molest other women.

    Then he raped the wife of Nalakubara who was Rambha.Nala kubera is son of kuberan who is Ravana's half brother.She begged ravana that she is like a daughter in law to him but still he raped her.

    He tried to rape vedavathi who burnt herself to death.Ravana says this in Yudda Kandam which can be read in www.valmikiramyan.net when his minister Mahodara "advises"(!!??) him to rape sitha forcibly!

    AFter this he kidnapped sita.Also, most of the women in his harem were brought by force.

    He invaded the entire world and killed lots of people.Rama's forefather in Ikshvaku dynasty(Aja?) was butchered when Ravana invaded Ayodhya.He curses ravana that a man from his dynasty will wipe out demon race.

    Ravana is also a big egotist.He consideres himself the biggest king on earth and it is because of this he tries to go after trophy wifes.that is everything beautiful should belong to him as he is the biggest king in the world.his quest for women is also because of this as well as his quest for things like pushpaka vimana.All the women, pushpaka etc are tropies to be shown to the outer world

    ReplyDelete
  59. அனானி சார்,

    //Rathnesh ayya does not seem to have read the valmiki ramayanam.Please read the ramayana//
    //Dasarathan promised kaikeyi 3 boons long time back.Kaikeyi chose to use the boons just before rama's pattabhisekam on instaigation of kuni.One of the boon is to make bharathan king and send rama to exile for 14 years.There was no pazhaya vakurithi by dasarathan that bharathan will be made king ever//
    //Again , requesting Rathnesh ayya to please read Ramayanam fully on the internet//

    என்னுடைய கருத்துக்களை பொருத்தமாக மறுப்பதை விட தங்களுக்கு நான் ராமாயணம் படிக்கவில்லை என நிறுவும் முயற்சி தான் அதிகம் இருப்பதால், தங்களுக்குப் பதில் கூறி என்னுடைய ராமாயண அறிவை நிரூபிக்க நான் தயாரில்லை. கைகேயி மூன்று வரம் கேட்ட ராமாயணம் நான் படித்ததில்லை ஐயா. நீங்கள் சுட்டிக் காட்டிய இணைய முகவரியில் இருக்கும் வால்மீகி ராமாயனத்தில் கீழ்க்கண்ட வரிகள் உள்ளன. எங்கே என்று தேடும் சாக்கில் நீங்களாவது ராமாயணத்தை ஒரு முறை படியுங்கள்:
    Rama reveals to Bharata that Kaikey's marriage, stating that Dasaratha would confer the kingdom as a marriage-dowry. Rama also adds that Kaikeyi also received the promise of two boons from Dasaratha as a token of his pleasure and gratitude for the help Kaikeyi rendered during the conflict long ago between gods and demons. Rama further informs Bharata that according to that promise, Kaikeyi asked for the two boons, one for Bharata's throne and another for his own exile to the forest. Rama requests Bharata to make Dasaratha's promises true and asks him to return to Ayodhya and assume its ruler ship
    .
    இந்த அளவாவது அடிப்படை அறிவு இல்லாமல் கே ஆர் எஸ் உடன் பேச வந்திருப்பேனா?.

    //Rama had to make sitha go thru agni pravesha because as a king , he had to correct misconceptions of some citizen who blabbered such stuff abt sitha.that was his kshatriya dharma!//

    சீதையை குடிமக்கள் தப்பாகப் பேசியதற்காக அக்னிப்பிரவேசம் செய்யச் சொன்னான் ராமன் என்கிற காலப் பொருத்தமற்ற வாதமும் தவறு. ராவணனிடமிருந்த மீட்ட உடனே நடந்தது தான் அக்னிப்பிரவேசம்; சீதையைக் குடிமகன் தப்பாகப் பேசியது ராமராஜ்ஜியத்தில்.

    இனி(ய) கே ஆர் எஸ்,
    எனக்கு ஒரு வாசகனாக கீழ்க்கண்ட சந்தேகங்கள் ஏற்படுகின்றன:

    1. வசிட்டன் ராமனிடம் பட்டம் ஏற்பது பற்றிய தசரதனின் கட்டளையைச் சொன்ன போது, "குருவே, இது பாவமில்லையா? தந்தை ஏற்கெனவே பரதனின் தாத்தாவுக்கு வாக்களித்திருக்கிறாரே, கைகேயி அன்னைக்குப் பிறப்பவனுக்கே ராஜ்ஜியம் அளிக்கிறேன் என்று, அந்த வாக்குறுதி என்னாவது?" என்று ஏன் வாதம் செய்யவில்லை?
    2. லட்சுமணன் ராமனுக்குக் காவலாகத் தானும் வருவேன் என்று சொன்ன போது, "வேண்டாம், நான் என் மனைவியுடன் செல்கிறேன். மேலும் எனக்குத் தான் வனவாச உத்தரவு. நீ வரத் தேவையில்லை. சீதை வருகிறாள் என்றால் அவள் என் மனைவி. என்னைப் பிரிந்து இருப்பதை விட வனம் கஷ்டமாக இருக்காது என்று வருகிறாள். நீ வரக் கூடாது என்று கட்டளை ஏன் போடவில்லை? பரதனிடம் நாடாள்வதற்கு கட்டளை இடத் தெரிந்தவனுக்கு லட்சுமணனிடம் ஏன் அப்படிக் கறாராகப் பேசத் தோன்றவில்லை? அப்படியே வருவதாக இருந்தால் நீயும் ஊர்மிளையை அழைத்துக் கொண்டு வா" என்று ஏன் சொல்லவில்லை? தம்பியை அவன் மனைவியிடம் இருந்து பிரித்து வைத்த பாவம் தான் ராவண யுத்தத்திற்குப் பிறகும் ராமனுக்கு தன் மனைவியுடன் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாமல் போனதோ?
    3. கானகத்தில் ஒரு பெண் தன்னிடம் காதலைத் தெரிவித்தால் அவளிடம் "என்னை விட என் தம்பி பெட்டர்; அவனிடம் முயற்சி செய்து பார்" என்று சொல்பவன் பற்றி என்ன எண்ண முடியும்? இது ஒரு கேலியா? பெண்ணின் உணர்வைக் கேவலப்படுத்தும் செயல் இல்லையா? அதுவும் அந்தத் தம்பி தன் மனைவியைப் பிரிந்து தனக்கு காவல் சேவகம் செய்வதற்காக தூக்கத்தையும் துறந்து இருப்பவன் என்று அறிந்திருந்தும்?
    4. தன்னுடைய காதல் நிறைவேறாமல் போவதற்குக் காரணம் சீதையே என்கிற ஆத்திரம் சூர்ப்பனகைக்கு வருவது இயல்பான பொறாமையே. அவள் சீதையைத் தாக்க முயன்றால் பொறுப்பான ஆண் வீரர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களிடம் இல்லாத அஸ்திரங்களா? அவற்றால் அவளைக் கட்டிவைத்து அவளுடைய உறவினரை அழைத்துப்பேசி, அவளுடைய நிலையை விளக்கி சமாதானமாக அனுப்பி வைப்பார்களா? மூக்கு முலையை அறுத்து அவமானப் படுத்துவார்களா?
    5. தன்னுடைய தங்கைக்கு நேர்ந்த கதியைப் பார்த்தபிறகும் எந்த அண்ணனால் சும்மா இருக்க முடியும்? என் வீட்டு பெண்ணை மானபங்கம் செய்தாய், அதற்குப் பழி வாங்க உன் வீட்டுப் பெண்ணைத் தூக்கி வருகிறேன் என்று அவன் கிளம்பியதில் தலைக்கனம் என்ன இருக்கிறது?
    6. வாலிவத மேட்டர், ராமனுடைய காரெக்டரில் ஒரு சறுக்கலே என்பது எண்ணற்ற கம்ப ராமாயணப் பட்டிமன்றங்களில் அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து. எத்தனை முறை கம்பராமாயணத்தை விரித்தாலும் வாலி உயிர்விடும்முன் எழுப்பும் கேள்விகளுக்கு ராமன் பதில் சொல்லமுடியாமல் தயங்கி நிற்க லட்சுமணன் சால்ஜாப்பு சொல்லும் பாடல்களும் அதனை வழிமொழிகின்றன.
    7. தன் மனைவியைத் தேடிப் போகும் தூதனிடம் அவளுடைய அங்க அடையாளங்களையும் முந்தைய சம்பவங்களையும் ஆபாசக் களஞ்சியமாக விலாவாரியாக விளக்கும் இடத்திலும், கடலைத் தாண்ட வழிவிடும்படி சமுத்திர ராஜனிடம் வேண்ட, அவன் வருவதற்கு மூன்று நாட்கள் தாமதமானவுடன் வெகுண்டெழுந்து ராமன் செய்கிற செயல்களும், பேசுகிற பேச்சுக்களும், சீதை மீட்கப்பட்டவுடன் அவள் மனம் நோகிக் கூசும்படிச் சொல்லும் சொற்களும் ராமன் மீது நல்லபிப்ராயம் ஏற்படுத்தும் வண்ணம் இல்லை.

    அடுத்து உங்கள் பின்னூட்டத்தில் சொல்லியுள்ள,

    //கம்பர் தம் இராம காதையை அரங்கேற்றும் போது எத்தனை எதிர்ப்புகள்! எத்தனை கேள்விகள்! மூலத்துக்கும் அதற்கும் இடையே ஏன் வேறுபாடுகள் என்று துளைக்கும் கேள்விகள்! கடவுள் என்கிற இமேஜுடன் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அப்படி எல்லாம் கேட்டு அரங்கேற்றத்க்குத் தடை உண்டாக்கி இருக்க மாட்டார்கள்!...கம்பர் அத்தனையும் சமாளித்துத் தான் அரங்கேற்ற முடிந்தது!//

    அப்படி என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில்கள் சொன்னார் என்று இருந்தால் கொடுங்கள். இவையும் வேதாரண்ய ராமர் பாதக் கதை போன்றவையே என்று நினைக்கிறேன். கம்பர் எந்த மன்னனிடம் ராமாயனத்தை அரங்கேற்றினார் என்பதிலேயே சரித்திர ஆசிரியர்களிடம் குழப்பம் இருப்பதை அறிவீகள்.

    கடைசியாக,

    //பாத்திரப் படைப்புகளில் சிக்கலும் சர்ச்சையும் இன்று நேற்றல்ல! எப்பவும் உண்டு தான்! காந்தியடிகள், போஸ், விவேகானந்தர், சம்பந்தர், மார்ட்டின் லூதர் கிங் என்று எல்லாரின் செயல்களுக்கும் வேறு வேறு கற்பித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!//

    இதையே தான் நாங்களும் சொல்கிறோம். உயிருடன் சமீபத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றியே ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை; ஏதோ பழங்கதையின் ஏதோ பாத்திரத்தின் தன்மையைக் கடவுள் பூச்சோடு தகுதியற்ற நிலைக்கு உயர்த்தி வைத்து ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு ஏன் போராட்டங்கள்? அப்படி அப்பழுக்கற்ற விதத்தில் படைக்கப்பட்ட பாத்திரமாகவும் தெரியவில்லையே என்பது தானே வாதத்தின் மையப் பொருள்?

    //காவியங்களில் பாத்திரப் படைப்புக்கள் மக்களுக்கு என்ன பயன் தருகிறது! சமுதாயம் என்ன செழுமை அடைகிறது என்ற நோக்கம் தான் இங்கு முக்கியம்!//

    ராமாயணத்தால் சமுதாயம் என்ன செழுமை அடைந்திருக்கிறது? அதன் பெயரைச் சொல்லி மேடைகளில் மனம் போன படியெல்லாம் புகழ்ந்து தள்ளி, இல்லாத கூடுதல் இடுகையெல்லாம் இட்டுக் கட்டி காலட்சேபத்தால் சம்பாதித்தவர்களின் குடும்பங்களின் வேண்டுமானால் கொஞ்சம் செழிப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்திய சமுதாயத்தில் நிரந்தரமாக சிலரைப் பகைவர்களாக்கிப் பிரித்து வைத்து நூற்றாண்டுகளாக உயிர்ச் சேதாரங்களையும் பொருட்சேதாரங்களையும் உண்டாக்கியது தான் ராமாயணத்தின் சாதனை எனலாம்.
    மகாபாரதம் உள்ளிட்ட வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத பெரும் சிறப்பு இது.

    ராகவன் சார், உங்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
  60. //இனி(ய) கே ஆர் எஸ்,
    எனக்கு ஒரு வாசகனாக கீழ்க்கண்ட சந்தேகங்கள் ஏற்படுகின்றன://

    அன்புள்ள ரத்னேஷ்,
    உங்கள் சந்தேகங்கள் ஒவ்வொன்றும், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பதிவாய் பார்க்கலாம்! விவாதிக்கலாம்! இருவருமே தெளிந்துணரலாம்!

    இந்தப் பதிவின் நோக்கத்தில் இருந்து மிகவும் தள்ளி வந்து விட்டோம் என்று தான் தோன்றுகிறது! இராவணன் மீது தீராக் காழ்ப்பு கொள்ளத் தேவை இல்லை என்பது தான் பதிவின் நோக்கம்!
    அது இராமாயணப் பாத்திரப் படைப்பு பற்றிய திறனாய்வு ஆக நீண்டு விட்டது!

    உங்கள் முதல் கேள்விக்கு மட்டும் இதோ:
    //1. வசிட்டன் ராமனிடம் பட்டம் ஏற்பது பற்றிய தசரதனின் கட்டளையைச் சொன்ன போது,//

    அதையே தான் உங்களை நானும் கேட்கிறேன்!
    கம்ப ராமாயணத்தில் இருந்து மட்டும் தற்போதைக்குப் பேசுகிறேன்!
    கேகயனுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படும் வரம் பற்றிக் கம்பன் எங்கும் குறிப்படவில்லை என்று தான் எண்ணுகிறேன். அரசியற் படலம் பாருங்கள்

    அப்படியே கொடுத்திருந்தாலும்...
    பட்டாபிஷேக அறிவிப்பின் போது, தயரதன் முன் அமைச்சர்களோ, சிறந்த முனிவரான வசிட்டரோ ஏன் அதை எடுத்துக் காட்டவில்லை?

    சரி...அவர்கள் தான் காட்டவில்லை! கூனி காட்டி இருக்கலாமே! அவளும் ஏன் சொல்ல வில்லை? கைகேயியும் கணவனுடன் வாதாடும் போது ஏன் இதை முன் வைக்கவில்லை? இதற்குப் பதில் சொல்லுங்கள்!
    மந்திரை சூழ்ச்சிப் படலமும் பாருங்கள்!

    புதிதாக இரண்டு வரங்கள் பற்றிப் பேசும் முன்னர், அதான் ராஜ்ஜியம் தருகிறேன் என்ற வெளிப்படையான வரமே இருக்கே! அதையே கேட்டு வாங்கி இருக்கலாமே!
    அதை விடுத்து என் மகன் நாடாள, இன்னொரு மகன் ஒழிந்து போய் காடாள ஏன் கேட்க வேண்டும்? அதைச் சொல்லுங்கள்!

    மற்றவற்றை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்!
    //என்னை விட என் தம்பி பெட்டர்; அவனிடம் முயற்சி செய்து பார்//
    :-)
    இப்படி எல்லாம் நாம் வம்பு பேசிக் கலாட்டா செய்யலாம்! ஆனால் இராமன் என்ன சொற்களைச் சொன்னான் என்பது தான் முக்கியம்.
    'உளைவன இயற்றல்; ஒல்லை உன் நிலை உணருமாகில்,
    இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி விரைவில்' என்றான்

    ஒரு பெண், அதீத காமத்தில், ஆடவனிடம் முறை தவறிப் பேசும் போது, அவளை அப்புறப்படுத்தச் சொல்லும் சொற்களை வைத்துக் கொண்டு இட்டும் கட்டியும் பல பேசலாம்! ஆனா நீங்க அங்கு இருந்து பாத்தா தான் தெரியும் :-)
    Adam Teasing அனுபவம் இங்கு யாருக்காச்சும் உண்டா? :-)))

    //கொலை புரிய வந்தவளை, அங்க சேதம் செய்த இலக்குவன்//

    பெண் உருவில் இருக்கும் போது செய்தானா? இல்லை அரக்கியின் பேருருவம் எடுத்துக் காட்டிய போது செய்தானா என்றும் பாருங்கள்! பிறகு பார்ப்போம்!

    //இலக்குவன் மனைவி ஊர்மிளை ஏன் காட்டுக்கு உடன் வரவில்லை//

    அது பற்றி ஊர்மிளையின் நிலை என்ன? உங்களுக்குத் தெரியுமா? இதுவும் பிறகு பார்ப்போம்!

    //என் வீட்டு பெண்ணை மானபங்கம் செய்தாய், அதற்குப் பழி வாங்க உன் வீட்டுப் பெண்ணைத் தூக்கி வருகிறேன் //

    பழி வாங்கப் புறப்பட்டவன், தங்கைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கலாமே! இருவரையும் அவள் காலடியில் நிறுத்தி இருக்கலாமே?
    ஏன் காம வயப்பட்டு, சீதையின் காலில் விழவேண்டும்! இது தான் பழி வாங்கும் லட்சணமா? அண்ணன்-தங்கை பாசமா? :-)))

    //வாலி வதம்// = முன்பே சொல்லி விட்டேன்...நீண்ட தத்துவ விவாதங்கள்...தன் கருமத்துக்கு உண்டான கட்டளையை இராமன் ஏற்றுக் கொண்டான்! கருமமே கட்டளைக் கல். மீண்டும் பேசலாம்

    //7. தன் மனைவியைத் தேடிப் போகும் தூதனிடம் அவளுடைய அங்க அடையாளங்களையும் முந்தைய சம்பவங்களையும் ஆபாசக் களஞ்சியமாக விலாவாரியாக விளக்கும் இடத்திலும்//

    அறிஞர் அண்ணா அவர்களின் கம்பரசம் படித்துள்ளீர்களா? அவசியம் படியுங்கள்!

    ReplyDelete
  61. //கடவுள் பூச்சோடு தகுதியற்ற நிலைக்கு உயர்த்தி வைத்து ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு ஏன் போராட்டங்கள்?//

    போராட்டங்களுக்கும் இராமனுக்கும் என்ன தொடர்பு?
    இராம காதையின் புரிதல் என்பது தனிப்பட்ட விடயம்! அது மக்களை அவரவர் வாழ்க்கையில் எப்படித் தொட்டுள்ளது என்பது அவரவருக்குத் தான் தெரியும்! அரசியல் செய்து யாரும் இராமனை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை!

    இராமனால் இவ்வளவு நூற்றாண்டுகளாக ஏற்படாத அரசியல்/பொருளாதார ஸ்திரத்தன்மை குலைப்பு இப்போது மட்டும் ஏன் ஏற்படுகிறது?

    மக்களிடம் இராமன் இருக்கிறான் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு, போராட்டங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்வது அவரவர் சுயநலம். அதைத் தடுக்கவோ தாக்கவோ முனையுங்கள்! அதை விடுத்து அவலை நினைத்து உரலை இடிப்பதால் எந்தவொரு பலனும் வரப்போவதில்லை!

    கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்றார்.
    சொல்லப் போனால் கல்லாதவர்கள் தான் இராம காதை சொல்லும் அன்பையும் நீதியையும் மனத்தளவில் உணர்ந்து வைத்துள்ளனர்!
    கற்றார் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள், இயக்கத்தினர் எல்லாம் மனத்தளவில் உணர்ந்திருந்தால் இன்றைய நிலைமை வேறு!

    பதிவில் நான் சொன்ன வரிகளையே மீண்டும் படியுங்கள்.
    //காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!//

    அதே போராட்டம் தான் இன்றும் நடக்கிறது! இராமன் பேரைச் சொல்லி ஒருபுறம், இராமன் பேரை இழித்து மறுபுறம்! :-)

    ReplyDelete
  62. //குமரன் (Kumaran) said...
    வேலை முடிஞ்சவுடனே வேலை வணங்க வருவீங்கன்னு பாத்தா சேவல் மாதிரி சிலுத்துக்கிட்டு இங்க வந்து நிக்கிறீங்களே?!//

    என்ன மயிலாரே? சேவலாரு சிலுத்துக்கறாராம்? நீங்க மட்டும் சிலுக்காம அலுக்காம எப்பமே நல்ல புள்ளையாவே இருக்கீரு! ஏன் புள்ள? :-)))

    ReplyDelete
  63. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    அப்படி ஜிரா சொல்லுவதுதான் சரிதான்!//

    ஜீவா
    அத்யாத்ம ராமாயணம், கதையைக் காட்டிலும் கதைத் தத்துவங்கள் மிகுந்த ஒன்று!

    ஜிரா அத்யாத்ம ராமாயணத்தில் இருந்து சொன்னாரா-ன்னு எனக்குத் தெரியாது :-)
    ஆனா எதில் இருந்து சொன்னாருன்னு கொஞ்சம் தெரியும்! :-)

    //அத்யாத்ம ராமயணத்தில் ராவணன் தூக்கிச்சென்றது உண்மையான சீதையே இல்லை. அவன் அபகரித்தது மாயையான சீதைதான்//

    இதுக்கு ஜிரா என்ன சொல்லுவாரு-ன்னு பார்க்கலாம்!
    என்ன ஜிரா, மாய சீதையாமே?

    //இதெல்லாம் நமக்கு புரிய மாயையின் விளக்கும் சக்தியினை புரிய வைப்பதற்கான நாடகம்தான் என்கிறது அத்யாத்ம ராமாயணம்//

    போச்சுடா!
    எனக்குப் பதிவே மாயையாத் தெரியுதே!
    என்ன ஜீவா இது இப்பிடிச் சொல்லீட்டீங்க?
    ஜிரா பின்னூட்டம் மாயை!
    ரத்னேஷ், பாவம் மிகவும் பாடுபட்டு டைப்படித்த பின்னூட்டங்கள் மாயை!
    குமரன், கோவி எல்லாரும் மாயை! :-)))

    ச்ச்ச்சும்மா!

    ReplyDelete
  64. என்ன இது இரவிசங்கர்? விட்டா 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே'ன்னு பாடத்தொடங்கிடுவீங்க போலிருக்கே?! :-)

    ReplyDelete
  65. ராமேஸ்வரத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் அனுமானால் கொண்டுவரப்பட்டதுன்னு சொல்றாங்க.

    அங்கெயும் மணலால் சிவலிங்கம் செஞ்சு ராமன் பூஜிச்சதா சொல்றதுலெ இருந்து 'ராமன் சிவபூஜை செய்தார்'னு இருப்பது சரிதானே?

    ReplyDelete
  66. //துளசி கோபால் said...
    ராமேஸ்வரத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் அனுமானால் கொண்டுவரப்பட்டதுன்னு சொல்றாங்க//

    ஆமாங்க டீச்சர்...காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்தது விஸ்வலிங்கம் என்று பெயர். அதற்குத் தான் இன்றும் ஆலயத்தில் முதல் பூசைகள் நடைபெறுகின்றன!

    //அங்கெயும் மணலால் சிவலிங்கம் செஞ்சு ராமன் பூஜிச்சதா சொல்றதுலெ இருந்து 'ராமன் சிவபூஜை செய்தார்'னு இருப்பது சரிதானே?//

    இலங்கைப் போருக்கு முன்னரே, சேது பந்ததனத்தின் போது சிவ பூஜைகள் செய்ததாகவும் சொல்லப் படுகிறது!

    இராமன் போருக்குப் பின் சிவபூஜை செய்தார் என்பதற்கு வால்மீகியிலோ, கம்பனிலோ நேரடித் தகவல் இல்லை.
    ஆனா மற்ற இலக்கியங்களில் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை! தேடிப் பார்க்கணும்!

    ஆனால் தல புராணங்களிலும், மற்ற பாடல் நூல்களிலும் ராம லிங்க வழிபாடு பற்றித் தகவல்கள் வருகின்றன! முன்பே சொன்னது போல் மூல நூல்களில் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!
    இதை ஒட்டுமொத்தமாக Collective ஆகத் தான் படிக்க வேண்டும்! இல்லை மூல நூலில் சொல்லி இருந்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை!
    அவரவர் நம்பிக்கை என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!
    ராமேஸ்வரமும் ஜோதிர் லிங்க தலங்களில் வைத்து பாரதம் முழுக்கப் போற்றப்படுகிறது என்றால், சும்மா இல்லை! தரவுகளை நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  67. கேஆர்எஸ்,

    நிறைய விஷயங்களில் நாம் ஒத்த கருத்துடன் தான் இருக்கிறோம், குறிப்பாக அரசியலின் பிடியில் சிக்கி விட்ட சமூகத்தின் இன்றைய நிலைக்கு ராமனைப் போற்றுவோரும் ராமனைத் தூற்றுவோரும் ஏற்படுத்துகிற சுயநலப் போராட்டங்களே காரணம் என்பதில்.
    தசரதன் கேகயனுக்குக் கொடுத்த வாக்குறுதி கம்பராமாயணத்தில் கிடையாது. வால்மீகி ராமாயணத்தில் மட்டுமே உள்ளது. (இது போன்ற சில களங்கத் துடைப்பு வேலை செய்த கம்பன், முழுதாய்ச் செய்திருக்கலாமே என்பதில் தான் விவாதமே தொடங்கியது என்று நினைக்கிறேன்). கம்பராமாயணத்தை மட்டும் முழுதாய் எடுத்துக் கொண்டு தொடங்கிய விவாதம் அல்ல இது என்பதையும் நினைவு கூர விரும்புகிறேன்.

    கம்பரசம் நான் முன்னெப்போதோ படித்தது. கம்பன் ஆசிரிய நோக்கில் பாடிய பாடல்களில் பொதிந்துள்ள ஆபாசம் குறித்தெல்லாம் எனக்கு கருத்துக்கள் இல்லை. அவன் சொந்தப் பார்வையின் வர்ணனை எப்படியும் தொலையட்டும். அவன், தெய்வத்தன்மை கொண்டதாகச் சித்தரிக்க முயன்ற கதாநாயகன் தன் நாயகி பற்றி மூன்றாம் ஆணிடம் (அது குரங்குதானே என்கிற சமாதானம் வேண்டாம்; அவன் தோளில் ஏறி ராமனிடம் வர மறுப்பு சொல்லும் சீதை கூறும் காரணங்களில் நீ ஓர் ஆண் என்பதும் ஒன்று - கம்பராமாயணத்தில்) சொல்வதாக எழுதி இருந்ததைப் படிக்கையில் ராமன் சீதை பற்றிய சாதாரண அபிப்ராயம் உடைய எனக்கே கூசியது.

    //அது பற்றி ஊர்மிளையின் நிலை என்ன? உங்களுக்குத் தெரியுமா? இதுவும் பிறகு பார்ப்போம்!//

    எங்கும் குறிப்பிடப்படாத ஒன்றைப் பற்றி ஊகத்தில் மட்டுமே பேச இயலும். சீதை சூர்ப்பனகை லட்சுமணன் விவகாரத்திலேயே, நான் அங்கே இருந்திருக்க வேண்டும் - நிலைமையின் தீவிரத்தை உணர என்று எதிர்பார்க்கும் நீங்கள், ஊர்மிளையின் நிலை என்னவாக இருக்கும் என்பதை எங்கிருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியுமே, ஊர்மிளையின் சமாதானமாக எந்த ஆசிரியர் என்ன சால்ஜாப்பு சொன்னாலும்.

    இறுதியாக, எனக்கு ராவணன் நல்லவன் என்று நிலை நிறுத்தும் நோக்கம் இல்லை. ஒரு பெண்ணைப் பகடைக்காயாக்கி விளையாடும் எவனும் ஆண்மகன் என்கிற பதத்துக்கு லாயக்கற்றவன் என்பது என் எண்ணம். அந்த வகையில் ராமனும் ராவணனுக்கு நிகரானவனாகவே பலவீனமான கதாசிரியர்களால் படைக்கப்பட்டுள்ளான் என்பது மட்டுமே என் விமர்சனம்.

    எப்படியோ ஒரு நல்ல விவாதம் தொடர வாய்ப்பளித்ததற்கு நன்றி.

    குமரன், தங்களுக்கு அளித்த வாக்கினைக் காப்பாற்றி இருக்கிறேனா?

    ReplyDelete
  68. இன்னும் ஒரு விஷயம் 'மாய சீதை' குறித்து . . .

    அத்யாத்ம ராமாயணம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாய சீதை கான்செப்ட், துளசிதாஸ் ராமாயணத்திலும் இருக்கிறது. சீதையை ராவணன் தூக்கிச் செல்லப் போகிறான் என்று அறிந்து கொண்ட ராமன் தனிமையில் சீதையிடம் தம்முடைய அவதார நோக்கம் குறித்து விளக்கி அவளை அக்னிக்குள் மறைந்து கொள்ளச் சொல்லி மாய சீதையை உருவாக்கி வைத்திருக்கிறான். அந்தச் சீதை தான் ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டவள். அதனால் தான் அக்னிப்பரீட்சை என்னும் நாடகம் ஆடி மாய சீதை அக்னிக்குள் சென்றுவிட நிஜ சீதை அதிலிருந்து வெளிப்பட்டு ராமனுடன் சேர்ந்து கொள்கிறாள். இந்த அளவுக்கு, ராமன் சீதையின் இறைத் தன்மை மாசுபடாமல் பாலீஷ் போட்டு மாற்றியது துளசிதாஸரின் ராமபக்தி.

    ReplyDelete
  69. //குமரன், தங்களுக்கு அளித்த வாக்கினைக் காப்பாற்றி இருக்கிறேனா? //

    இரத்னேஷ். நான் பொதுவாகத் தான் சொன்னேன். உங்களைக் குறித்து சொல்லவில்லை. உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பு. நான் அங்கீகாரம் கொடுக்கத் தேவையில்லை. அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்குப் பெரியவன் என்று என்னை எண்ணிக் கொள்ளவும் இல்லை.

    பொதுவாகச் சொன்ன கருத்தில் ஏதோ ஒன்று உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதனை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்/அந்தக் கருத்து படி நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இங்கே நீங்களும் இரவிசங்கரும் பேசியவை இன்னும் மிக மிக ஆழமாக நெருங்கிப் பார்க்கப்பட வேண்டியவை. சில நண்பர்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாமலும் கொஞ்சமே கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் தெரிந்தது போல் அறுதியிட்டுப் பேசாமலும் உங்கள் இருவரிடையே பேச்சுகள் நடந்தன. அந்த வகையில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி.

    வேறு புலனம். தற்போது நான் சங்க இலக்கியங்களில் கருத்தை வைத்திருப்பதால் இராமாயணத்தை நெருங்கிப் படிக்க நேரமிருக்காது என்ற எண்ணம் இருக்கிறது. இரவிசங்கரும் சிலப்பதிகாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். இராமாயணத்தை இப்போதே தொடர்ந்து பார்க்காமல் அவர் சிலப்பதிகாரத்தைப் படித்து முடித்த பின்பும் நான் சங்க இலக்கியங்களைக் கொஞ்சமே கொஞ்சமாவது படித்து முடித்த பின்பும் இராமாயணம் பக்கம் திரும்பலாமா என்ற எண்ணம் எனக்கு. ஆனால் உங்கள் இருவருக்கும் நேரம் இருந்தால் இப்போதே தொடர்ந்து பேசி வாருங்கள். நான் வாசகனாக இருக்கிறேன். அறிந்தவை ஏதேனும் இருந்தால் சொல்கிறேன். ஆனால் இப்போதைக்கு என்னால் இராமாயணத்தை நெருங்கி ஆய முடியாது.

    ReplyDelete
  70. திரு மனோஹரின் லங்கேச்வரன் நாடகத்தில் ராவணனை உயர்வாக காட்டியுள்ளார்.

    ReplyDelete
  71. பதிவினைப் படித்தேன். பின்னூட்டங்களைப் படித்தேன். பதிவிற்கும் பின்னூட்டங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ?? தெரியவில்லை. கொளுத்திப் போடப்பட்ட தீபாவளி சர வெடி வெடித்துச் சிதறுகிறது. விவாதக் களமாக மாறி விட்டது. ராவணன் கோவில் மூடப் பட்ட செய்தி மறைந்து போய் விவாதம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. முடிவில்லாமல் தொடரும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  72. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே//

    அண்ணே வணக்கமுண்ணே!
    ட்ரெயின் வுடாம இருந்திருந்தா குண்டே வெச்சிருக்கமாட்டாங்களே!
    ட்வின் டவர் கட்டாம இருந்திருந்தா இடிச்சி இருக்கவே மாட்டாங்களே!
    நாட்டுக்கு விடுதலை வாங்காம இருந்திருந்தா லஞ்ச லாவண்யமே பெருகி இருக்காதே!
    அவ்தாரம் பண்ணாம இருந்திருந்தா இராவணனும் தூக்கி இருக்க மாட்டானே! //

    அடடே! நீங்க அப்படி வாரீங்களா? அவதாரங்குறதே....ஐயா..இந்த ராவணனை மாய்க்குறதுக்குத்தானே. தொல்லை தாங்கலைன்னு ஒரு கூட்டம் போய் ஓலம் போட்டதாலதான அவரு குடும்பத்தோட கீழ இறங்கி வந்தாரு. வரும் போதே அடிக்கனும்னு முடிவோட வந்தாச்சுல்ல.

    கவுக்கனும்னு நெனச்சா ட்ரெயின் விட்டாங்க? இடிக்கிறதுக்காகவா ட்வின் டவர் கட்டுனாங்க? இல்லையே. வேறொரு திட்டத்துக்காக் கெட்டுனது. ஆனா வேற மாதிரி வேற ஒருத்தரு பயன்படுத்திக்கிட்டாரு. ஆனா இங்க வந்ததுக்குக் காரணமே என்கவுண்டருக்குத்தானே.

    //////ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம்.//

    பங்கம்-னா என்ன ஜிரா?
    சேதப்படுத்தறது-ன்னு பொருள்!
    சேதமாச்சுன்னா, டோட்டல் டேமேஜ் ன்னா சொல்லுறோம்!
    அதைத் தான் வெட்டி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்! //

    அப்ப மானபங்கம்னா மானத்த டோட்டல் டேமேஜ் பண்றது இல்ல. லேசா செய்கூலி சேதாரம் செஞ்சுக்கிறதுதான் போல. நல்லா சொல்லிக்குடுத்தீங்க. நன்றி. :)

    // ஈசனார் அவன் செருக்கை அடக்கினார். ஆனாலும் அது மீண்டும் துளிர்த்தது! ஈசன் அவனைக் கண்டித்தாரே அன்றி தண்டிக்க வில்லை! ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க இராவணன் முயலவே வில்லை!//

    ஏங்க ஈசரு தண்டிக்கலை?

    // //அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.//

    ஜிரா, இங்கு பின்னூட்டங்களில் சூரன் பற்றியும் பேச்சு வந்தது!
    அதனால் நீங்க சூரனும் என்னென்ன தப்பு செஞ்சான்னு சொன்னீங்கன்னா, ரெண்டுத்துல இருந்தும் பாடம் படிக்க பயனுள்ளதா இருக்கும்!

    சூரபாத்மன் செய்த தவறுகள் என்ன ஜிரா? //

    அடடா! நல்லதா ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க. சூப்பருங்க. கச்சியப்பரோட கந்தபுராணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு ஜிரா சொல்லீட்டா வால்மீகியோட ராமாயணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு கே.ஆர்.எஸ் ஒத்துக்கிறதா எடுத்துக்கலாமா?

    ReplyDelete
  73. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    இராமன் போருக்குப் பின் சிவபூஜை செய்தார் என்பதற்கு வால்மீகியிலோ, கம்பனிலோ நேரடித் தகவல் இல்லை.
    ஆனா மற்ற இலக்கியங்களில் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை! தேடிப் பார்க்கணும்!

    ஆனால் தல புராணங்களிலும், மற்ற பாடல் நூல்களிலும் ராம லிங்க வழிபாடு பற்றித் தகவல்கள் வருகின்றன! முன்பே சொன்னது போல் மூல நூல்களில் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!
    இதை ஒட்டுமொத்தமாக Collective ஆகத் தான் படிக்க வேண்டும்! இல்லை மூல நூலில் சொல்லி இருந்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை! //

    அடடா. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்குது. நீங்க சொன்னாப்புல ஜோதிர்லிங்கத்துல ஒன்னா வெச்சிப் போற்றுறாங்க. அப்படியிருக்குறப்ப இந்த வால்மீகி மறந்து போயி விட்டுட்டாரே! இன்னும் எதையெதையெல்லாம் விட்டாரோ தெரியலையே.

    ReplyDelete
  74. ஆன்மீக பதிவர்களும் அரசியல் பதிவர்கள் மாதிரி தான் நடந்துக்கறீங்க...

    ஜி.ரா,
    இங்க ஒருத்தர் நீங்க கேட்டதை கோட் பண்ணி இராவணன் செய்த குற்றங்களை சொன்னார். அதை புத்திசாலி தனமா விட்டுட்டு KRS கூட விவாதம் செய்யத்தான் பார்க்கறீங்க.

    அவரும் அந்த அனானிமஸ் நண்பர் கொடுத்த பதில் சரியா தப்பானு சொல்லாம நைசா ஏமாத்திட்டு அடுத்த பின்னூட்டத்துக்கு போயிட்டார். எல்லாரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிங்கப்பா... பெரிய பெரிய அரசியல்வாதிங்க எல்லாரும் தோத்துடுவாங்க... (ஸ்மைலி இல்லை)

    ReplyDelete
  75. //வெட்டிப்பயல் said...
    ஆன்மீக பதிவர்களும் அரசியல் பதிவர்கள் மாதிரி தான் நடந்துக்கறீங்க...//

    பாலாஜி
    நீங்க போடாத சிரிப்பானை, இருங்க நான் போடறேன்!
    :-))

    //ஜி.ரா,
    இங்க ஒருத்தர் நீங்க கேட்டதை கோட் பண்ணி இராவணன் செய்த குற்றங்களை சொன்னார். அதை புத்திசாலி தனமா விட்டுட்டு KRS கூட விவாதம் செய்யத்தான் பார்க்கறீங்க//

    இதுக்கும் ஒரு :-)
    பாலாஜி
    ஜிரா அனானி ஐயா கொடுத்ததை pont by point விவாதிக்க வில்லை. ஆனால் இராவணன் செய்த குற்றங்களின் மூல காரணத்தைத் தேடப் பார்க்கிறார்-ன்னு தான் நான் நினைக்கிறேன்! அதுக்குத் தான் இந்த அவதாரமே எதுக்கு-ன்னு கேள்வி கேட்டார்.

    //அவரும் அந்த அனானிமஸ் நண்பர் கொடுத்த பதில் சரியா தப்பானு சொல்லாம நைசா ஏமாத்திட்டு அடுத்த பின்னூட்டத்துக்கு போயிட்டார்//

    இல்லையே...அனானி ஐயாவுக்கு நன்றியும் சொல்லியாச்சி! அவருக்குப் பதிலும் போட்டாச்சு! பாருங்க!
    //அனானி ஐயா!
    சுட்டிகளுக்கும் விளக்கத்துக்கும் நன்றி!
    இதை இப்படியே சொல்வதை விட, தற்காலச் சூழலுக்குப் பொருத்திச் சொன்னால் புரிய மறுக்கும் மக்களும், சிந்தித்துப் புரிந்து கொள்வார்கள்!
    பார்க்கலாம்...ஒவ்வொன்றாய் இனி வரும் பதிவுகளில் அவ்வப்போதாச்சும் எழுதுகிறேன்! நன்றி!//

    இராவணன் செய்த குற்றங்களைப் பட்டியலிட்டார் அனானி. அதைப் பற்றி நான் பேசவில்லை. பேசினால், விவாதம் வேறு திசைக்குச் செல்லும்!

    எப்படி இராமன் ஒரு அவதாரமோ, இராவணனும் ஒரு அவதாரமே! இறைவனின் நாடகத்துக்குத் துணை புரிய வந்த வாயிற்காப்போன் தானே அவன்!
    இந்தப் பதிவின் சாராம்சம் என்ன?
    இராவணனை வெறுத்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான்! அதனால் தான் அனானியின் குற்றப்பட்டியல் பற்றி நான் பேசவில்லை!

    ஆனால் பதிவில் உள்ள இராவணனை விடுத்து இராமனைப் பிடித்துக் கொண்டார்கள் நம்ம மக்கள்!
    அது தான் வளர்ந்து இப்படி நீண்டு விட்டது!

    ஜிராவிடம் சூரன் செய்த குற்றப் பட்டியலையும் கேட்டேன்! எதுக்குத் தெரியுமா? அனானியின் இராவணக் குற்றப் பட்டியலும், சூரனின் குற்றப் பட்டியலும் வச்சி தனிப்பதிவா போட்டா, ஒன்றோடு ஒன்று கம்பேர் செய்து பார்க்கும் போது இதெல்லாம் ஏன்ன்-னு ஒரு தெளிவு வரும்! இல்லீன்னா...ஒரு முகாமில் இருந்து கொண்டு அடுத்த முகாமைப் பற்றிப் பேசினதையே தான் இன்னும் காரசாரமாப் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, முடிவே எட்ட முடியாது!

    ReplyDelete
  76. //G.Ragavan said...
    அவதாரங்குறதே....ஐயா..இந்த ராவணனைமாய்க்குறதுக்குத்தானே.
    .....
    ஆனா இங்க வந்ததுக்குக் காரணமே என்கவுண்டருக்குத்தானே//

    அவதாரம் எடுத்தது என்கவுண்டருக்குத் தான்-னு யார் சொன்னா ஜிரா?

    இல்லை! இல்லை!
    அவதாரத்தின் நோக்கம் என்ன தெரியுமா?
    தர்மத்தை மானுடம் கடைப்பிடிக்க!

    போட்டுத் தள்ளணும்னா அவதாரமே தேவை இல்லையே! நேரா ஒரு சக்கரம் விட்டா மேட்டர் க்ளோஸ்!
    எதுக்குப் பொறந்து, கஷ்டப்பட்டு, தம்பிகள் மீடு மட்டும் அல்லாமல், வேடன், குரக்கின அனுமன் மேல எல்லாம் அன்பு பாசம் காட்டி, அலைஞ்சி, திரிஞ்சி....
    எதுக்கு இவ்வளவு சிரமங்கள்?

    அதுவும் இறைவனின் விசேட சக்திகள் எல்லாம் எதுவும் காட்டாது, ஒரு மனித வாழ்வு ஏன்?
    மனிதனாய் பிறந்து, தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்பதைக் காட்டத் தான்!

    சாதாரண மனிதனாய் அற வழியில் நடக்க முடியும். சில சமயம் அறம் தவறும் போது, அது தெய்வமே ஆனாலும், அவன் செய்த கருமம் கட்டளைக் கல்லாக மாறும்! இதை உலகுக்குக் காட்டத் தானே அவதாரம்!

    கம்பன் எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறானே அவதார நோக்கத்தை!
    உலகம் யாவையும் தாம் உள வாக்கலும்,
    நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
    அலகு இலா விளையாட்டு உடையார்
    ....என்று

    காவியத்தின் நோக்கத்தைப் புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சரியாப் புரியும்! அது வரை இப்படித் தான் ஆட்களைப் பிடித்துக் கொண்டு இருப்போம்! கருத்துக்களை வித்டு விடுவோம்!

    அலகிலா விளையாட்டின் ஒரு பகுதி தான் இராவணனும்!
    இறைவன் காட்ட விரும்பிய நாடகத்தில் அவனுக்கு வில்லன் ரோல்! அவன் அன்புக்குரிய வாயிற் காப்போன்! இறைவனுக்கு உதவவே அவனும் இறங்கி வருகிறான்!

    ReplyDelete
  77. //அப்ப மானபங்கம்னா மானத்த டோட்டல் டேமேஜ் பண்றது இல்ல. லேசா செய்கூலி சேதாரம் செஞ்சுக்கிறதுதான் போல. நல்லா சொல்லிக்குடுத்தீங்க. நன்றி. :)//

    ஜிரா...வார்த்தை விளையாட்டு இங்கு உதவாது! சும்மா செய்கூலி, சேதாரம்-னு வம்பு பண்ணாதீங்க!
    பங்கம்-னா சேதம் தான்!
    மான பங்கம் னா, மானம் சேதமாகிறது! நல்ல குணம் உள்ள ஒருவன்/ஒருத்தி மானபங்கப் படுத்தப்பட்டால், அது சேதம் தான்! அதுக்காக அவங்க மானமே போச்சி! அவங்க உயிரை விட்டுடணும்-னு இல்லை!

    அதே போலத் தான் கர்வ பங்கம். கர்வம் சேதமாச்சு! ஆனா டோட்டலா ஒழியலை!

    //ஏங்க ஈசரு தண்டிக்கலை?//

    தெய்வம் நின்று கொல்லும்! உங்களுக்குத் தெரியாததா? ஏன் ஈசரு சூரனைத் தண்டிக்கல? முருகன் தான் வந்து தண்டிக்கனுமா? ஈசரு தண்டிக்கக் கூடாதா?

    //அடடா! நல்லதா ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க. சூப்பருங்க. கச்சியப்பரோட கந்தபுராணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு ஜிரா சொல்லீட்டா வால்மீகியோட ராமாயணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு கே.ஆர்.எஸ் ஒத்துக்கிறதா எடுத்துக்கலாமா?//

    இது என்ன அலம்பல்?
    கந்தனைக் கவுத்தா நானும் இராமனைக் கவுத்துக்கறேன்-ன்னு சொல்றா மாதிரியில்ல இருக்கு! :-)

    சூரன் செய்த தவறுகளை உங்களிடம் ஏன் கேட்டேன்னு வெட்டிக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க!
    அவன் செய்த தவறுகள் உங்களுக்குப் புரிஞ்சுதுன்னா, இராவணன் செய்த தவறுகளும் உங்களுக்குப் புரிந்து விடும்! காவியத்தின் நோக்கமும் அது தான்!

    சூரன் என்ன தவறு செய்தான்? எதுக்கு அவனைக் கிளையோட அழிக்கணும்?
    அழிக்கல! சேவலும் மயிலுமாய் ஆக்கி அருளினார்-னு சொல்லாதீங்க!
    உயர்திணை சூரனை, அஃறிணையாக்கி வச்சிக்கறத்துக்கு பேர் தான் அருளா?

    சரி, அப்படியே அருளியவரு, எதுக்கு சிங்கமுகன் தாருகனுக்கு அருளலை? அதே மாதிரி அவங்கள்யும் ஏதாச்சும் ஆக்கி கிட்டாரா? அவங்களும் அண்ணனுக்காக கடமை செஞ்சவங்க தானே! எங்கே அவங்களுக்கு அருள்?

    முருகா...இப்படி எல்லாம் தெரிஞ்சே கேள்வி கேட்கறதுக்கு என்னை மன்னிச்சிக்கோப்பா! இப்படி எல்லாம் கேட்டாத் தான் ஒரு முகாம், இன்னொரு முகாமில் நடக்கும் அதே போன்ற விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது போலும்!

    சூரனின் குற்றப் பட்டியலும் இராவணின் குற்றப் பட்டியலும் வைத்து ஒன்றாகப் பேசலாம் ஜிரா!
    எது அருள்! எது மருள்-னு எல்லாருமே புரிஞ்சிக்கலாம்!

    அனானி சார்
    இராவணின் குற்றப் பட்டியல் கொடுத்தமைக்கு நன்றி!
    ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பேசும் வரை பொறுத்துக் கொள்ளுங்கள்!


    கடைசியில் நான் முன்பே பின்னூட்டத்தில் சொன்னது தான்!
    இராவணனும் ஆணவ மலம்!
    சூரனும் ஆணவ மலம்!
    மலத்தை அறுத்தால் வரும்
    பெரு-நிலத்தை சொல்வதே காவியம்!


    இதைக் கதா பாத்திரங்களோடு ஏன் எப்படி-ன்னு தொடர்புபடுத்தி (அது இராமன்-இராவணன் இருவருக்குமே பொதுவாக) விரைவில் பேசலாம்!
    சூரனின் பட்டியல் வரட்டும்!

    ReplyDelete
  78. //சில நண்பர்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாமலும் கொஞ்சமே கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் தெரிந்தது போல் அறுதியிட்டுப் பேசாமலும் உங்கள் இருவரிடையே பேச்சுகள் நடந்தன. அந்த வகையில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி//

    நன்றி குமரன்!


    ரத்னேஷ்

    நீங்க விவாதத்தில் பொறுப்புணர்வுடன் பங்கு கொண்டமைக்கு அடியேனின் நன்றி! Truth is for the seeker என்பார்கள்! உண்மையைத் தேடும் முயற்சிகளில் காரசாரம் பின்னுக்குத் தள்ளி, பொறுப்பான விசாரணை முன்னுக்கு வருதல் தான் நலம்! அம்மட்டில் எனக்கும் மகிழ்ச்சியே!

    இதோ கிடிகிடு வென்று கொஞ்சம் பார்வைகள்...உங்கள் கடைசிப் பின்னூட்டத்துக்கு!

    மாய சீதை = அத்யாத்ம இராமாயணம்/துளசி தாசர் போட்ட பாலீஷ் மட்டுமில்லை! அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ள வராக புராணத்தில் கூட வருகிறது! அதைத் தான் துளசி எடுத்து ஆண்டார் போலும்! திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயார் குறித்த தகவல்களுக்கும் இராமாயண வேதவதி (மாய சீதை)க்கும் உள்ள தொடர்புகளை அதன் தல புராணமும் தெரிவிக்கும்!

    அதே போல் பின்னொரு பதிவில் இராமன் அனுமனிடம் வர்ணித்ததாகச் சொல்லப்படும் ஆபாச தொனித்த வர்ணனைகள் பற்றித் தொட்டுச் செல்கிறேன்! இப்போது வேண்டாம்!

    //ஒரு பெண்ணைப் பகடைக்காயாக்கி விளையாடும் எவனும் ஆண்மகன் என்கிற பதத்துக்கு லாயக்கற்றவன் என்பது என் எண்ணம்//

    மிகவும் சரியான பார்வை!
    அது யார் செய்தாலும் இராமனோ இராவணனோ...அவர்கள் செய்த கருமம் அவர்களுக்கு கட்டளைக் கல்லாக அமையும்! பிறகு பார்க்கலாம்!

    இளங்கோவின் சிலம்பில் ஆழ்ந்து கொண்டிருந்த நான், இராமாயணச் சிலம்பம் எடுத்து ஆட வேண்டியதாகப் போய் விட்டது, இந்தப் பத்திரிகைச் செய்தியால்!
    என்னருமை நண்பர் அடிக்கடி சொல்வது போல், "எல்லாம் இறைவன் செயல்!"

    ReplyDelete
  79. திராச,
    நன்றி!
    இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகரின் மிகச் சிறந்த நாடகம்! ஆனால் அதில் இராமனையும் தரக்குறைவாக எல்லாம் காட்ட மாட்டார்கள்!

    சீனா சார்
    நன்றி!
    பதிவின் நோக்கம் உங்களுக்காவது புரிந்ததே! மகிழ்ச்சி!
    சில சமயம் இது போன்ற சிக்கலான விடயங்களில், பின்னூட்டங்களில் விலகிச் செல்வது வாடிக்கை தான்!
    ஆனால் இதுவும் வேறு மாதிரியான ஒரு தெளிவு!

    ReplyDelete
  80. Rathnesh ayya
    I accept your argument that dasarathan once promised to his father in law.Rama actually ensures that all the promises made by dasarathan comes true for he is the abider of truth.He accepts to go to forest only because he cannot do anything which will make his father a liar.It is another thing that Bharathan refuses to accept kingship and lives the life of hermit in Nandigram and lets raman's slippers rule ayodhya.No wonder Rama says that "not all brothers are like Bharathan'!!!
    Following Dharma and truth is way of Rama and also lakmana and bharatha and shatrughna.Which is why Rama is still highly praised and followed and prayed by Tamilians like me


    i think rest of my arguments abt surpanakai and sitha and lakshmana forcibly coming to forest are correct and still stand by it unless you give me proofs to the contrary from www.valmikiramayan.net

    ReplyDelete
  81. ஜீவி ஐயா என்னுடைய 'மாயோனைப் போற்றும் தொல்காப்பியம்' இடுகையில் இட்ட இந்தப் பாடல் இந்த இடுகைக்கும் பொருத்தமானது. அதனால் இங்கே எடுத்து இடுகிறேன்.

    குறுந்தொகை 'இராவண கருவ பங்க' நிகழ்ச்சியை இந்தப் பாடலில் கூறுகிறது.

    "இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

    உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

    ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

    தொடிப்பொலி தக்கையின்கீழ் புகுந்து,அம்மலை

    எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"...

    இந்த வரிகள், கலித்தொகையில்('குறிஞ்சி'யில் 23ம் வரி) "குறிஞ்சி"யைப்பாடிய புலவர் கபிலரால் குறிக்கப்படுகிறது.

    ReplyDelete
  82. // வெட்டிப்பயல் said...
    ஆன்மீக பதிவர்களும் அரசியல் பதிவர்கள் மாதிரி தான் நடந்துக்கறீங்க...

    ஜி.ரா,
    இங்க ஒருத்தர் நீங்க கேட்டதை கோட் பண்ணி இராவணன் செய்த குற்றங்களை சொன்னார். அதை புத்திசாலி தனமா விட்டுட்டு KRS கூட விவாதம் செய்யத்தான் பார்க்கறீங்க.

    அவரும் அந்த அனானிமஸ் நண்பர் கொடுத்த பதில் சரியா தப்பானு சொல்லாம நைசா ஏமாத்திட்டு அடுத்த பின்னூட்டத்துக்கு போயிட்டார். எல்லாரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிங்கப்பா... பெரிய பெரிய அரசியல்வாதிங்க எல்லாரும் தோத்துடுவாங்க... (ஸ்மைலி இல்லை)//

    வெட்டி....ஓவர் உணர்ச்சி போலத் தெரியுது. ஆனா தேவையில்லை.

    பேச்சு எனக்கும் ரவிக்கும். அதுக்குக் காரணம்.. இருவருக்கும் இருக்கும் புரிதல். வேறு எங்காவது இப்படிச் செய்கிறோமா? இல்லையே. இந்த விதண்டாவாதம் எங்களுக்குள் மட்டுந்தான். இது எனக்கும் தெரியும்....ரவிக்கும் தெரியும்.

    ReplyDelete
  83. //
    வெட்டி....ஓவர் உணர்ச்சி போலத் தெரியுது. ஆனா தேவையில்லை.
    //

    நீங்க கேட்டதுக்கு ஒருத்தர் பதில் சொல்லும் போது நான் ரவிக்கிட்ட தான் கேட்டேன் நீ சொல்ல தேவையில்லைனு சொல்றதை என்னனு சொல்லனும்னு தெரியல :-(

    நீங்க தெரிஞ்சிக்கனும்னு அந்த கேள்வி வந்ததா? இல்லை ரவிக்கு தெரியுமானு வந்ததா?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP