Wednesday, March 09, 2016

சங்கத் தமிழில் நீர் மேலாண்மை: கரையும் மரமும்!

தேர்தல் காலம்!
அதனால் பலதும் மறந்து போயிருக்கும்.. அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் "பேசுவதில் மட்டுமே" ஆர்வம் மிக்க நமக்கும்:)

Chennai Rains, Cuddalore Floods என்றெல்லாம், சென்ற ஆண்டு இறுதியில்..
திண்டாடி, திரண்டு,
ஒருங்கிணைந்து, உதவி,
கடைசியில் "அறிந்தது" = பலப்பல!

நவநாகரிகத் தலைமுறை இளைஞர்களின், வேறொரு முகத்தை வெளிக் கொணர்ந்த தருணங்கள் அவை!

"உதவப்" போன இளைஞர்கள், "அறிந்து" கொண்டும் வந்தார்கள்! எதை?
தமிழ் மரபியல் எனும்..
இயற்கை நுட்பங்களை!

ஆம்! வானத்தில், நட்சத்திரங்களை ஏறெடுத்துப் பார்ப்பதே அரிதாக விட்டதொரு வாழ்வில்..
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் போது மட்டும், சரி.. என்ன தான் சொல்றாரு? கேட்டுத்தான் பார்ப்போமே என்று காது குடுக்கத் துவங்கிய லேசான மன மாற்றத்தில்..
சென்னை/கடலூர் வெள்ளங்கள் = வாழை மரத்தில் ஆணி அடித்தாற் போல், சில பல உணர்ச்சிகளை ஆணியடித்து விட்டன!


Corporate வெளிவேடச் சடங்குகள் கடந்து, மெய்யான இயற்கையை = "அறிதலும் பரிதலும்"!

அறிந்ததை.. வெறும் அறிவோடு நிறுத்தாமல், அறிந்ததை உணர்ந்து, நிலைக்கச் செய்யும் முயற்சியே = நம் மரபியல் பாடங்கள் மீட்டெடுத்தல்!

வளரும் தலைமுறைக்கு ஏற்றாற் போல்.. அந்த மரபியல் பாடத்தை, சுவாரசியமாக எழுதல்!
மரபின் நுட்பங்கள் மீண்டும் தொலைந்து போகாமல், சுவையாக மாறிக் கொண்டே இருக்கும் பாடம்; ஆனால் அதன் அடிப்படையை மட்டும் இழக்காது!

அந்த முயற்சியில், நண்பரும் தமிழன்பருமான உமர் (@umarchennai) செய்த வடசென்னை உதவிப் பணிகளின் நீட்சியாக..
இந்த "அறிதலும் பரிதலும்" = நீர் நிலைகளின் கரையைப் பலப்படுத்துதல் பற்றிய ஒரு சிறு தொகுப்பு!



1. மழை பெய்தால், மண் ஏன் அரிக்கின்றது?
மண்ணை அரிக்காமல், மழை பெய்தால் தான் என்னவாம்?:)

நம் வீட்டில் வளரும் குழந்தை போன்றது தான்= இயற்கை!
குழந்தை.. தண்ணியாக்காமல் "உச்சா" போனால் என்னவாம்? என்று கேட்போமா?:)
வீட்டில் மெல்லிய துணியும், வெளியில் போகும் போது Diaperஉம் கட்டி அழைத்துச் செல்வதில்லையா, குழந்தையை?
அது போல், இயற்கைக் குழந்தையின் போக்கை, இடத்துக்கு ஏற்றபடி, நாம் உறவாடிக் கொள்ளுதலே = அழகிய தாய்மை/ தந்தைமை ஆகும்!

*மழை பெய்யும் போது மண் அரிக்கப்பட்டு, ஆறு/ஏரி/குளம்/குட்டை போன்ற தாழ்வான பகுதிகளில் சேரும்!
*அப்போது தான் மண் சுழற்சி ஏற்பட்டு, கீழ் மண் மேலுக்கு வரும்! மேல் மண் இன்னொரு இடத்துக்குச் சென்று, அந்த இடத்தை வளமாக்கும்!


ஆனா, இதெல்லாம் விவசாய நிலத்தில் நடந்தால் நல்லது! ஆனால், ஏரிக் கரையில் நடந்தால்?
மண் அரிப்பால் ஏரி உடைத்துக் கொள்ளுமோ என்று அச்சம் தான் மிஞ்சும்!

ஆனா அப்பாவிக் குழந்தையான மழைக்குத் தெரியாதே, எந்த இடம் ஏரி மண்ணு? எந்த இடம் கழனி மண்ணு?-என்று:)
அது பொதுவாகத் தான் பெய்யும்! நாம் தான் குழந்தை வளர்ப்பைத் தெரிஞ்சக்கணும்:)

அடித்துச் செல்லும் மண், கடைசியில் ஓர் இடத்தில் தங்கி விடுவதால், அந்த இடம் "மேடு" போல் ஆகியும் விடும்!
அது குளமாக இருந்தால், பள்ளம் -> மேடாகி, நீர்த் தேக்கம் குறையும் வாய்ப்பு! அதுக்குத் தான் "தூர்" வாருதல் செய்வது!

ஆறு/ ஏரி போன்ற நீர்நிலைப் பகுதிகளில் மட்டும், மண் அரிப்பு நிகழாமல், அதன் கரைகளைப் பலமாக்குவது எப்படி?
மண் மேல் படுத்துக் கொண்டு, "மண்ணே ஓடாதே" -ன்னு இறுக்கிப் பிடிச்சிக்கலாமா?:) முடியாது!
அதுக்குத் தான் சில நண்பர்கள் தேவை! அந்த நட்பு = மரஞ்/ செடி/ கொடிகள்!
தாவரங்களை= நம்முடன் வாழும் சக நட்பு போல், பாவிக்கும் எண்ணமே போய் விட்டது:) அவை காய்/கனி குடுக்கும் Automated Robotக்கள் அல்ல!:)

வேர்பாயும் சில வகை மரங்கள் இருக்கு!
உடனடியாக மண் கரைஞ்சி ஓடாமல், வேர்கள் "இறுக்கப்" பிடித்துக் கொள்கின்றன!
அடிமண் அடித்துச் செல்லப்படாமல்.. மண் அரிப்பு தடுக்கப்படும்!

இந்த மரம்/ செடிகளுக்கு = "வேர் பிடிப்பான்" என்று பெயர்! Soil Binders!

இவை, அந்தந்த இடத்தின் மண்ணுக்கேற்ப மாறுபடும்!
எல்லா இடங்களிலும், பனை மரமே நட்டு வைக்க முடியாது! One Size does not Fit All:) சில இடங்களில் மரங்கள், சில இடங்களில் செடிகள் என்று மாறுபடும்!

சேச்சே..
ஏரிக் கரையைக் 'கச்சா முச்சா' -ன்னு ஆக்கிருச்சே, இந்தப் படரும் செடிகள்; புடிங்கிருவோம்! Trim பண்ணுவோம்!
அப்போ தான் முதல்வர்/பிரதமர் வரும் போது, பார்க்க அழகா இருக்கும்!:)
இப்பிடி மடத்தன வேலையெல்லாம் செஞ்சா, ஒருநாள் ஊருக்குத் தான் ஆபத்தாய் முடியும்:( அதுக்குத் தான் "மரபியல் அறிவு" தேவை!

எதைப் பிடுங்கலாம்? எதைப் பிடுங்கக் கூடாது?... என்று பகுத்து அறியும், இயற்கைப் பகுத்தறிவு!
பார்ப்போமா? இந்த Soil Binders பற்றி? என்ன மரங்கள்? எந்தச் செடிகள்?

சங்கத் தமிழ்= செயற்கைப் புராணங்கள் கலவாத "இயற்கைத் தமிழ்" என்று சொல்லுவார்களே?
தமிழ் மரபியல்/ தமிழ் இலக்கியம்.. இந்த Soil Binders/ வேர்ப் பிடிப்பான் பற்றி நமக்குக் கற்றுக் குடுப்பது என்ன?


2. "வேப்ப மரம்" என்று வெறுமனே சொல்கிறோம்! அதைச் 'சாமி' வேறு ஆக்கி விட்டோம்!
சாமி என்பதாலோ என்னவோ, குழந்தை போல் ஆதரவுடன் கவனிக்காது, சற்று விலகியே இருந்து, பக்தி மட்டுமே செலுத்துகிறோம்!:)

நோய்க் காலங்களில் மட்டும் Psuedo Science/ போலி அறிவியல் பேசி, வேப்ப இலை= சர்வ ரோக நிவாரணி என்று கதை அளக்கிறோம்!:)


ஆனால், வெறுமனே "வேப்ப மரம்" என்னாமல், எத்தனை எத்தனை வகை? ஒவ்வொன்றின் தன்மை என்ன? எந்த மண்ணுக்கு எது ஒத்து வரும்?
Botanical Names போல் திரட்டித் தரும் சங்கத் தமிழ் அறிவோமா? மாட்டோம்:)

1 அலர் தார் வேம்பு = இளங்கோவடிகள்
2. கருஞ் சினை வேம்பு = கோவூர் கிழார்
3. கோட்டு இணர் வேம்பு = உருத்திரங் கண்ணனார்
4. கருங் கால் வேம்பு = பரணர்
5. ஒண்பூ வேம்பு = ஓதலாந்தையார்
6. சிறியிலை வேம்பு = மருதன் இளநாகனார்
7. பராரை வேம்பு = காவிதி கீரங் கண்ணனார்
8. பைங்கால் வேம்பு = மிளைக் கந்தனார்
9. பொரி அரை வேம்பு = பாண்டியன் நெடுஞ்செழியன்

அட.. பாண்டியனா? அரசியல் தலைவன் கூட, மரத்தின் இயற்கை முறைகளை, அறிஞ்சி வச்சிக்கிட்டு, ஆட்சி செஞ்சீருக்கான் போல?:)
ஏன்னா.. நிலம்= அவனோட குழந்தை! நில மக்கள்= அக் குழந்தையின் குழந்தைகள்!

சங்க இலக்கியத்தில் = Approx 245 தாவரங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கு!
அவற்றின் மண் வளம், ஊர்கள், பூ/ காய்/ பழங்கள்,
அச்செடிகளின் அமைப்பு, பண்பு; இன்னும் பலப்பல இயற்கைத் தகவல்கள்!

*வேர்த் தொகுதி, தண்டுத் தொகுதி
*பேரிலை, சிற்றிலை, நுனிச் சிற்றிலை,
*புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்த வட்டம்
*மகரந்தச் சேர்க்கையில், பூ -> காய் ஆகி -> கனி ஆகி..  வளரும் விதங்கள்!

கடம்ப மரத்தை, மூனே சொல்லால்.. சொல்லி விடும் நுட்பம்!
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் கொண்ட வெறிமனை வந்தோய் (நற்றிணை)

மருத மரத்தை, ஒட்டியே மதுரையின் பெயர் = மருதை!
மருதை -> மதுரை ஆனது, முன் பின்னாகத் தொக்க இலக்கணப் போலி!

வையை ஆற்றின் கரை முழுக்க, மருத மரங்கள்!
இன்று?
வையை= கரை/ஆறுல்லாம் ஒன்னு போலத் தான் இருக்கு! மண்ணாய்:(

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இயற்கையான சங்கத் தமிழ் பற்றி!
ஆனா, நம் நோக்கம் அது அன்று!
இலக்கியத் திறனாய்வு இன்னொரு நாள்! இன்னிக்கி, Data Gathering மட்டுமே! தரவு திரட்டல்!

Soil Binders/ வேர்ப் பிடிப்பான்கள் என்னென்ன?
எந்தெந்த மண்ணுக்கு எவை? என்று மட்டும் தகவல் திரட்டுவோம்; சரியா?:)

(தொடரும்..... part 2)

7 comments:

  1. மாதவிப்பந்தலில் இப்படி ஒரு பதிவா எனத் தொடக்க வரிகளில் தோன்றியது. இடையிடையே பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து செய்திகளைப் பொங்கலில் முந்திரிப் பருப்புப் போல் ஆங்காங்கே தூவி வழக்கம் போல அசத்தி விட்டீர்கள்!

    "தன் ஊரின் பெயரையே சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள்" என்று அடிக்கடி நான் கூறுவதுண்டு. அதற்காக, மருதை மக்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் இந்தப் பொதுவெளியிலே! ஓர் ஊரின் பெயர் எது என்பதை அந்த ஊர்க்காரர்கள்தாமே தீர்மானிக்க வேண்டும்? உரைத்தது என் தவறு! மிக்க நன்றி ஐயா!

    வெகு நாட்களாக உங்களிடமிருந்து பதிவு ஏதும் வராதது கண்டு வருத்தமுற்றிருந்த எங்களுக்கு நீங்கள் தொடர்பதிவே தொடங்கியிருப்பது கண்டு பெருத்த மகிழ்ச்சி! அதற்காகத் த(ந)னி நன்றி!

    ReplyDelete
  2. Super ..waiting for next part FYI
    எங்க வீட்டு காம்பவுண்ட்குள்ள 3 வேப்பமரம் ஒரு மாமரம் அதுல ஒரு வேப்பமரம் மேல மல்லிகைப்பூ செடி படர்ந்து இருக்கும்..அப்புறம் ஒரு மாதுளை செடி கருவேப்பிலை செடி இதெல்லாம் இருக்கு.

    Guess me who am i

    ReplyDelete
    Replies
    1. Guessing, Still Guessing...
      ராணி -ன்னு சொல்லட்டுமா, ஆண்பாலுக்குப் பெண்பாலாய்?:)

      Delete
  3. same feeling - வெகு நாட்களாக உங்களிடமிருந்து பதிவு ஏதும் வராதது கண்டு வருத்தமுற்றிருந்த எங்களுக்கு நீங்கள் தொடர்பதிவே தொடங்கியிருப்பது கண்டு பெருத்த மகிழ்ச்சி! அதற்காகத் த(ந)னி நன்றி!

    ReplyDelete
  4. வேர்களை மறந்ததால் வேதனை மிகவுற்றோம். இனியாவது இயற்கையின் துணை கொண்டு இன்னல் களைவோம்.. கோகுல், மதுரை

    ReplyDelete
  5. சில வருடங்களாக உங்கள் பதிவுடன்தொடர்பு அற்று இருந்தேன். நீங்களும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
    இந்த இயற்கை பேணுவோம் பதிவு அருமை. ஆயின், இந்த வேர் பற்றிய உண்மை தெரிந்தவர்கள் பிளாட்டில் இருக்கிறோம். நிலம் இருப்பவர்களும், ஏரிகளின் உரிமையாளர்களான அரசும், இது பற்றி அறிவதில்லை.
    விவசாயிகளுக்கு இந்த உண்மையை கொண்டு செல்வோம். நம் அரசுக்கு நீதிமன்றம் மூலம் தான் தெரிவிக்க முடியும்.
    N.பரமசிவம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP