Sunday, April 24, 2011

இயேசுநாதர்-நம்மாழ்வார்! ஏலி ஏலி-லாமா சபக்தானி?

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!
* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!

ஆகா! என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று, நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?

(பிரேசில் சென்றது, வாழ்வில் ஒரு திருப்புமுனை!
அப்போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)


பள்ளிக் காலத்திலே என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

என்னை முதல்வெள்ளிப் பூசையில்(First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார் என்றும் அவரிடம் அப்பவே விவாதம்! :) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை :)

சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்....,
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன்! வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!
மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)

28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,

30. அவர் மேல் துப்பி...

40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற் காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. மற்றவர்களோ: பொறு! எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.

50. இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்!


மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)


9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

12. மூப்பரோடே கூடி வந்து, ஆலோசனை பண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
13. நாங்கள் நித்திரை பண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
15. அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாய் இருக்கிறது.

14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!


என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
Bible Reader Widget-ஐ, பந்தலின் கீழே கொடுத்துள்ளேன்! இனி, அதுவும் மாதவிப் பந்தலில் நிரந்தரமாக இருக்கும்! அப்பப்போ பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்! :) இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!

* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகையர் கோன் (Kurugoor, a town in Nellai)

இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!

இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்!
மக்களிடையே கலந்து போதித்தார்! அதனால் "மேலாள" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி இறங்காததால் தப்பித்தார் போலும்! :)

* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)


இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"

* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!

* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!

ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?
* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை! இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!
* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் காலத்தின் கோலம்! = இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!

** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதி ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))

(உம்ம்ம்ம்...தில்லையில் தான் இன்னமும் மோசம்: ஓரமாக் கூட இல்லாது, பொன்னம்பலத்துக்கும் கீழே இறங்கி வந்து, படிக்கட்டுக்கு கீழே இருந்து தான், ஓதுவார் ஓதவே முடிகிறது:( முருகா, இதுக்கு என்னிக்குத் தான் விடிவோ?)

** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரைச் சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது! பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((
இங்கே, மாறனை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் (அ) ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டார்கள்? - இன்று வரை எனக்கு வியப்பிலும் வியப்பே!


சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?
* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப்பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பதென்னவோ திருவாய்மொழி தான்!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

மலைப்பொழிவிலும், வாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!
(பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம, புரியும் படி பத்தி பிரித்து, அதே கலரில் கொடுத்திருக்கேன்! பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க :)

மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!

மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....

மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------

மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!



பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!
கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?

ஹா ஹா ஹா! அப்படியில்லை!
அன்பு ரொம்ப அதீதமாக மிகுந்துவிடும் போது, ஒருவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், ஒருத்தி, என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!

இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"


நம்மாழ்வாரும் அப்படியே! "முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!

உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல என் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு ஆரா அமுது ஆனாயே!!!

நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்? :) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல
என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!
என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)


எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"
எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural? இதுல என்னமோ இருக்கு டோய்! Bridal Mysticism என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள்! :))

ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு! ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......

இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

15 comments:

  1. அன்பின் கேயாரெஸ் - இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினையும் ஒப்பு நோக்கி இடுகை இடுவது கேயாரெஸ்ஸால் மட்டும் தான் இயலும். சிதம்பரத்து தீட்சதர்களுக்கு ஒரு குட்டு - பெருமாள் கோவில்களீல் அர்ச்சகர்களே திருவாய்மொழியினை ஓதுகிறார்கள் ( அதுவும் கருவறைக்குள்ளேயே - என்பது எனக்குப் புதிய செய்தி. வெளி ஒப்பீடுகள் மற்றும் அக ஒப்பீடுகள் - பலே பலே - பாராட்டுகள் நல்வாழ்த்துகல் கேயாரெஸ் - நட்புடன் சீனா. பைபிள் ரீடர் விட்ஜெட் வேறு. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்த்து தரும் செய்திகள் நிறைய! (அவை அதிகம் திசை திருப்பாமல் இருப்பின் நலம்)
    >>Bridal Mysticism<<
    Java, C++ என்பது போல யோகா, Spirituality, Tantra, Bridal Mysticism என்கிற குறிச்சொற்கள் மதம் என்னும் வியாபாரச் சந்தையில் விற்பனைக்காகச் செய்யப்படும் தந்திரங்களாகவும் இருப்பது மறுப்பதற்கில்லை.

    நாயகி பாவனையில் உங்களைத் தொடரப் பார்க்கிறேன். பெண் பேச்சோடு தன் பேச்சும் உண்டல்லவா?

    ReplyDelete
  3. அருமையான ஒப்பாய்வு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்துவப்)பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது;வீட்டிலோ தாத்தா சொல்லும் ராமர்,கிருஷ்ணர்,முருகன் கதைகளுடன் பஜனை;பள்ளியிலோ ஏசுவின் கதைகளும்,பாட்டுக்களும்;வீட்டில் சொல்லாமல் சர்ச் போனதுண்டு;மனது கொஞ்சம் குழம்பும்;ஆனால் பின் வருமாறு கம்பேர் பண்ணி நானே சமாதானம் செய்துகொண்டதும் உண்டு:
    க்ரைஸ்டுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பெயர் ஒற்றுமை!
    அவர் மாட்டுக்கொட்டிலிலும் இவர் சிறையிலும் பிறந்தது!
    அவரைக்கொல்வதர்காக ஹிரோட் மற்ற சிசுக்களை வதம் செய்ய,இவர் பொருட்டு கம்சன் மற்ற சிசுக்களை கொன்றதாகக் கேட்ட கதை!
    அவரை மேய்ப்பராக தெரிந்து கொண்டது போல் ,இவரை கோபாலன் எனும் மாட்டிடையனாகப் புரிந்துகொண்டது,
    நதி இருவருக்கும் வழிவிட்ட கதை;
    அவர் அளித்த அப்பமும் மீனும் குறையாமல் வளர்ந்து பசி தீர்த்ததுபோல் இவருடைய அக்ஷயபாத்திரம்!
    அவரது பைபிளும் இவரது கீதையும்!
    இறுதியில் அவர் ஆணியால் சிலுவையில் அறையப்பட்டு (டெட்டனஸ்)இறந்தது போலவே,இவர் இரும்புலக்கைத்துகளின் விஷமுள்ள அம்பால்
    (டெட்டனஸ்)உயிர் நீத்ததும்;
    அவர் உயிர்த்தெழுவேன் என்று சொன்னதுபோலவே இவர் சம்பவாமி யுகே யுகே என்று நம்பிக்கை அளித்ததும்;
    நாச்டால்ஜியாவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. @ஜீவா - நலமா?
    //வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்த்து தரும் செய்திகள் நிறைய! (அவை அதிகம் திசை திருப்பாமல் இருப்பின் நலம்)//

    :))
    அலை என்னிக்கி ஓயும்? நாம என்னிக்கு குளிக்கும்?
    முன்பு போல் யாரும் அதிகம் திசை திருப்ப முடியாமல், இனி முதலிலேயே வெட்டி விடுகிறேன், ஜீவா! :)

    //>>Bridal Mysticism<<
    Java, C++ என்பது போல யோகா, Spirituality, Tantra, Bridal Mysticism என்கிற குறிச்சொற்கள் மதம் என்னும் வியாபாரச் சந்தையில்//

    உண்மை தான்! இயேசு பெருமான், கோயிலில் வியாபாரம் கூடாது என இடித்துத் தள்ளினார்! ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டே...இன்று வியாபாரங்கள் நடக்கத் தானே செய்கிறது? மத வியாபாரத்துக்கு மத வேறுபாடே கிடையாது போல! எல்லாரும் ஓர் "மதம்"! :)

    //நாயகி பாவனையில் உங்களைத் தொடரப் பார்க்கிறேன். பெண் பேச்சோடு தன் பேச்சும் உண்டல்லவா//

    ஹா ஹா ஹா
    தன் பேச்சா? உண்டு, உண்டு!
    பெண் பேச்சோடு என் பேச்சும் உண்டு! :)

    ReplyDelete
  6. @சார்வாகன் - நன்றி

    @லலிதாம்மா - மலரும் நினைவுகளா? :)
    கம்சன்-ஏரோது மன்னன் ஒற்றுமை நிச்சயம் ஆச்சரியம் தான்! ஆனால் எனக்கு அதிகம் தென்படும் ஒற்றுமை, கோபாலன் என்னும் Good Shepherd மட்டுமே!
    இருவருமே "சீர்" திருத்தினார்கள்! இயேசு கோயிலில் கலாட்டா செய்தார்! கண்ணன் இந்திரனுக்குப் பூசை கூடவே கூடாது என்று சபையில் கலாட்டா செய்தார்! அதற்குப் பதிலாக, இயற்கையான குன்றுக்கு நன்றி சொல்ல வைத்தார்!

    Krishna & Christ பற்றிப் பலரும் பேசியுள்ளார்கள்!
    ஆனால் ஆழ்வார்கள் & கிறிஸ்து பற்றிய பேச்சு, கவிதை-ஒப்பீ்டுகள் அதிகம் இல்லை! ஏதோ எனக்குத் தெரிஞ்ச திருவாய்மொழியை மட்டும் இப்போதைக்கு முன் வைத்தேன்! பிதா-எந்தை வரிகள் எல்லாம் நிறையவே ஒத்துப் போகும்!

    குமரன் அண்ணா/கோவி கண்ணன்/தேவ் போன்ற சக பதிவர்கள் தொடரலாம்!
    தோழன் இராகவன்-இன்னும் பல சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த மையத்தில் எழுதினால், மாற்றுப் பார்வை கிடைக்கும்!

    ReplyDelete
  7. @சீனா ஐயா
    //இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினையும் ஒப்பு நோக்கி இடுகை இடுவது கேயாரெஸ்ஸால் மட்டும் தான் இயலும்//

    :)
    அப்படியெல்லாம் இல்லங்க சீனா ஐயா! ஆர்வம் தான் காரணம்!
    நாம படிக்கிறோமோ, வேலை பார்க்கிறோமோ, கல்யாணம் ஆகி இருக்கோ இல்லையோ, குடும்பமா செட்டில் ஆகி இருக்கோமோ-எல்லாருக்குள்ளேயும் ஒரு "தேடல்" இருக்கத் தானே செய்கிறது?

    //பெருமாள் கோவில்களீல் அர்ச்சகர்களே திருவாய்மொழியினை ஓதுகிறார்கள் ( அதுவும் கருவறைக்குள்ளேயே - என்பது எனக்குப் புதிய செய்தி//

    "பல்லாண்டு பல்லாண்டு" என்றுமே உண்டு! அபிஷேகத்தின் போது நீராட்டம் சொல்லியே ஆகணும்! திருமலை திருப்பதியில் ஒரு மாசம் முழுக்க சுப்ரபாதம் கட்! திருப்பாவை மட்டுமே!

    தினமுமே சாற்று மறையில் திராவிட வேதமான திருவாய்மொழி உண்டு!
    அது திருப்பதியோ, கர்நாடகா மேல்கோட்டையோ, நேபாள் சாளக்கிராமமோ - தமிழை ஓதியே ஆகணும்! :) அடுத்த முறை திருப்பதி செல்லும் போது, கொஞ்சம் உற்றுக் கேளுங்கள்! உங்கள் காதில் தமிழ் விழுந்தாலும் விழலாம்! :) சாட்சிக்கு பல youtube வீடியோக்கள் கூட இருக்கே!

    //சிதம்பரத்து தீட்சதர்களுக்கு ஒரு குட்டு//

    அது எனக்கும் குட்டு தான்! :)))

    இப்படி எழுதுவதால் "மனக் கசப்பு" கொண்ட நண்பர்களும் உண்டு! ஆனாலும் உள்ளதைச் சொல்லித் தானே ஆகணும்? தவறு இருந்தால் தரவு தந்து திருத்தட்டுமே! கருத்து தானே?

    "இல்லையில்லை! எங்களுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் அடக்கி வாசி, இல்லையேல் மனக்கசப்பு" - பகுத்தறிவு வேட நண்பர்கள் உட்பட இப்படியே எதிர்பார்ப்பு! முருகா! :))

    இத்தனைக்கும் வைணவத்தின் குறைகளையும் சேர்த்தே தான் எழுதியுள்ளேன்! தசாவதாரம் கமல் படத்தின் போது, தவறான தகவல்கள்-ன்னு சொல்லி All India Kamal Fans Association கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டது தான் மிச்சம்! :)

    இந்த விஷயத்தில் மாற்று சமயத்து நண்பர்கள் எவ்வளவோ மேல்! முன்பு இஸ்லாம் பற்றி எழுதிய போது கூட நிறைய ஊக்கமே தந்தார்கள்!
    தமிழுக்கான ஆக்கமாக நோக்கினால் தாக்கமாகத் தோனாது! ஆனால் அப்படி நோக்க வேணுமே? True to the Heart?
    அவரவருக்கு மறைமுகச் சார்பு நிலைகள்! என்ன செய்ய!:) தரவுகளோடு பொருத்திப் பார்க்கும் போது, கருத்துக்களைத் திருத்திக் கொள்வதில் தவறே இல்லை! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

    ReplyDelete
  8. hmmm should go to melukote once.. nice post..

    ReplyDelete
  9. சிறந்த ஒப்பாய்வு!

    நாயகி பாவமா! கண்டிப்பா படிக்கணும் விரைவில் எழுதுங்கள்!

    ReplyDelete
  10. @ராஜேஷ்
    என்ன விசைப்பலகை வேலை செய்யலையா? ஒரே punctuation mark-aa போடறீங்க? :)

    @சரவணன் அண்ணா
    மேலக்கோட்டை அழகிய இயற்கைத் தலம்! மலை! சென்று வாருங்கள்!

    @சிவா - நன்றி...
    நாயகி Bhaavam, paavam :) சர்ச்சைக்குரிய ஒன்று! :)
    அதுவும் நான் எழுதினா வெறுமனே பக்தி என்ற அடிப்படையில் மட்டும் இல்லாது, இரு பக்கமும் நின்று பார்த்து எழுதும் போது, சர்ச்சை வருமோ-ன்னு ஒரு பயம்! இராகவா நீயே துணை!

    ReplyDelete
  11. //lalitha mittal:ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்துவப்)பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது//

    எனக்கும்

    //KRS:எல்லாருக்குள்ளேயும் ஒரு "தேடல்" இருக்கத் தானே செய்கிறது?//

    உண்மை உண்மை

    //அது திருப்பதியோ, கர்நாடகா மேல்கோட்டையோ, நேபாள் சாளக்கிராமமோ - தமிழை ஓதியே ஆகணும்! :)//

    நேபாள சாளக்கிரமமா....
    மெய்யாகவா? ஆச்சரியமா இருக்கே !!!

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.... விரைந்து எழுதுக. நன்றி

    ReplyDelete
  12. @இந்திரன்
    அடுத்த பதிவு கொஞ்சம் விவகாரமாப் போயிருமோ-ன்னு பயமா இருக்கு! அதான் எழுதி + நிறுத்தி வைத்திருக்கிறேன்! :)

    நேபாள சாளக்கிராமம் 108 திருத்தலங்களுள் ஒன்று! என்ன தான் நேபாளத்தில் இருந்தாலும், இங்கு இராமானுசர் சிலையும் உண்டு! அதனால் தமிழ்ப் பாசுரங்கள் ஒன்றிரண்டாச்சும் ஓதப்படுகின்றன (பொருள் தெரிந்தோ, தெரியாமலோ) :)

    ReplyDelete
  13. என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
    முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
    பன்னப் பணித்த இராமானுசன் வ்ரன் பாதமும் என்
    சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.. 4

    Hey krs . today ramanujar Birthday. Where is you post. நல்ல அழகா இராமானுஜர் கூடவே பயணிக்கிற மாதிரி கதை சொல்வீங்களே :)
    Ok. Any way
    Happy Birthday Ramanuja!

    ReplyDelete
  14. //Hey krs . today ramanujar Birthday. Where is your post//

    :)
    gosh! post ellam athatti vaanguRaanga pa! :)

    //நல்ல அழகா இராமானுஜர் கூடவே பயணிக்கிற மாதிரி கதை சொல்வீங்களே//

    posted a short one Rajesh! see & tell!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP