Showing posts with label மாரியம்மன். Show all posts
Showing posts with label மாரியம்மன். Show all posts

Friday, March 21, 2008

***மாரியம்மனும் மேரியம்மனும்!

மாரியம்மன் கோயில் இல்லாத கிராமங்கள் மிக மிகக் குறைவு! தனிப்பட்ட கோயிலாய் இல்லை என்றாலும் கூட எங்காகிலும் ஒரு இடத்தில், வேப்ப மரத்திலோ இல்லை மண் புற்றிலோ, ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! அப்படி ஒரு அன்னோன்னியம் அவளுக்கும் கிராமத்து மக்களுக்கும்!
நாம் என்ன தான் மாயோனும் சேயோனும் ஆதி காலத் தமிழ்க் கடவுள் என்று மாஞ்சி மாஞ்சிப் பதிவு போட்டாலும், இன்னிக்கு மூலைக்கு மூலை இருப்பதென்னவோ அரசரடிப் பிள்ளையாரும், வேப்ப மர மாரியும் தான்! இதை யாரும் மறுப்பதற்கு இல்லை! :-)

படிப்பின்மையால் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகமாக இவள் வழிபாட்டில் இருந்தாலும், எளிமையும் அன்பும் கூட அங்கு தான் அதிகம்!
படித்தவர்கள் பேராசையால் செய்யும் மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் போது, கிராமத்து மூடநம்பிக்கைகள் எவ்வளவோ மேல் என்று தான் எண்ணத் தோன்றுகிறது! :-)
குறைந்த பட்சம், நிறுவனப்படுத்தப்பட்ட பிரேமானந்தாக்களைக் கிராம மக்கள் உருவாக்கியது கிடையாது! அடுத்தவரை வருத்தும் மூடநம்பிக்கைகளைக் காட்டிலும் தன்னை வருத்திக் கொள்ளும் மூடநம்பிக்கைகள் தான் கிராம மக்களிடம் அதிகம்!

அதெல்லாம் இருக்கட்டும்! மாரி-ன்னா என்னாங்க?
மாரி என்பது மழை என்னும் தூய தமிழ்ச்சொல் என்பது பலருக்கும் தெரியும்! மழைக் கடவுளாக வழிபடப்பட்டவள் இவள்!
இன்று மரக்கடவுளாக வழிபடும் நிலைக்கு இந்த மாரி, மாறி உள்ளாள்!

இவளின் தோற்றம் வேதக் கடவுளாக இல்லை என்பதே அறிஞரின் கருத்து! பின்னாளில் தான் பார்வதி, துர்க்கையுடன் இவள் தொடர்புகள் பேசப்படுகின்றன! கொற்றவை என்று தமிழ் இலக்கியம் பேசுவது மாரியம்மனைத் தானா?
இல்லை இ்வளும் பிடாரி, இசக்கியம்மனைப் போல் ஒரு சாதாரண கிராமத்து தேவதையா? இல்லை எப்போதோ மடிந்த ஒரு பெண்ணின் தெய்வாம்சமா?



தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

இவளை எப்படியெல்லாம் கருதுகிறார்கள்?

* பரசுராமனின் தாயார் ரேணுகா தேவி = நெறி தவறிய தாயின் தலையைப் பரசுராமன் வீழ்த்தியதால் இன்றும் தலை மட்டும் காலடியில் சிலையாக வைத்து வழிபடும் வழக்கம் மாரியம்மன் கோயில்களில் இருக்கு!
படவேடு "ரேணுகா" பரமேஸ்வரி மிகவும் பிரபலமான ஆலயம்! எங்கூருக்கு மிகவும் பக்கம்!

* மாயை, மாயாதேவி, விஷ்ணு மாயை = வசுதேவர்-யசோதையின் உண்மையான மகள்! ஆயர் குலத்தில் உதித்தவள்! கண்ணன் பிறந்த போது பிறந்த குழந்தை! கம்சன் கையில் இருந்து தப்பி வானில் எழுந்து சிறு வயதிலேயே மறைந்தவள்! இப்படி மணமாகாமல் மறையும் கன்னிப் பெண்களை, ஆண்டுக்கொரு நாள் வழிபடுவது ஆயர் குல வழக்கம்! எங்கள் வீட்டில் பூவாடைக்காரியாக இப்படி வழிபடுவார்கள்!

கண்ணனுடன் பிறந்தவள் ஆதலால் பெருமாளின் சகோதரி. இன்றளவும் ஒவ்வொரு வைகாசி மாதமும் முதல் நாள் அன்று, திருவரங்கத்து அந்தணர்கள் இவளை வழிபடுகிறார்கள். பூச்சொரிதல் விழாவின் போது அரங்கனும் சமயபுரத்தாளுக்குப் பிறந்தவீட்டுச் சீதனமாய்ப் பட்டாடை அனுப்புகின்றான்!

* கொற்றவை = கொற்றம் என்றால் வெற்றிச் சிறப்பு! நின் கொற்றம் வாழ்க-ன்னு டயலாக் வரும்ல! வெற்றியைத் தரும் போர்த் தேவதை இவள்! பாலை நிலத்து வேட்டைத் தெய்வம்!
சிலப்பதிகாரம் வேட்டுவ வரிகளில் இவள் பேசப்படுகிறாள்! வழிப்பறி/ கொள்ளைகள் செய்யும் ஆறலைக் கள்வர்களால்(எயினர்) வணங்கப் பெற்றவள்! இந்தக் கொள்ளைத் தொடர்பினாலோ என்னவோ தான் சிலம்புக்கு முன்னுள்ள சங்க இலக்கியங்கள் இவளை அதிகம் பேசவில்லை போலும்! நக்கீரர் மட்டும் "கொற்றவைச் சிறுவ" என்று கொற்றவையின் புதல்வனாக முருகனை அழைக்கிறார்!

* கண்ணகி அம்மன் = கண்ணகி தான் மாரியம்மனோ?
கண்ணகி உயிர் துறந்த மலைநாடான கேரளத்தில் இந்த பகவதி நம்பிக்கை அதிகம்! ஆடியின் கடைசி வெள்ளியில் கண்ணகி மதுரையை எரித்ததாகச் சொல்லுவார்கள்! கண்ணகி என்பவள் அம்மனான பின்னர், அம்மனுக்கும் ஆடியில் விழா எடுக்கிறார்கள்!

* அம்மை நோய் எப்படி இவளோடு தொடர்பாச்சு என்பது ஒரு புதிர் தான்! தென்னகம் மட்டும் இல்லை! வடக்கிலும் அம்மை நோய்க்குச் சீதளாதேவியின் தொடர்புண்டு! (சீதளம்=குளிர்ச்சி); நம் நாட்டைத் தாண்டி, யூதர்கள்=மார்ச்சு, Chaldeans=மாராட்டு, பாபிலோனியர்கள்=ஆயா என்று நோய் தீர்க்கும் அம்மன்கள் எல்லாக் கலாச்சாரம், பண்பாட்டிலும் இருக்கு போல!:-)

* எல்லையம்மன், பேச்சியம்மன், செல்லியம்மன், பச்சையம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன், ராக்காயி, பிடாரி, இளங்காளி என்று அத்தனையும் இவள் தானா?


இப்படிப் பலப்பல கேள்விகள்!
கேக்கறவன் கேட்டுக்கிட்டே இருப்பான். கும்புடறவன் போயிக்கிட்டே இருப்பான்!:-)
எது எப்படியோ,
பொங்கல், குலவைச் சத்தம், கரகம் என்று ஆய கலைகள் - நாட்டுப்புறக் கலைகள் - அதுக்காகவேனும் மாரியம்மனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்!
பதிவர்களில் எத்தினி பேருக்குக் குலவை போடத் தெரியும்? தெரிஞ்சவங்க பின்னூட்டத்தில் போடுங்க பார்ப்போம்! :-)

மாரியம்மன் ஏழை மக்களோடும் குறிப்பாகப் பெண்களோடும் உறவாடும் தெய்வமாய் இருப்பது எப்படி-ன்னு கீழே அசைபடம் பாருங்க! புரிஞ்சிடும்!






மாரியம்மாவில் இருந்து மேரியம்மாவுக்கு வருவோம்!
சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று!
மு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல!:-)

வேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே? கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்!
தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி ஒன்றே!

மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி!-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குக் கொடுக்கவும் அடியேன் தயார்! முகம் பொழி கருணை! அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்!

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா,
வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு!
அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி! அது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு!
அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன்!
அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :-)

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம்! தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்! அமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி! முகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்!

அன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான்! ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது!
அன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.
ஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்!
தன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான்! பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது!

இருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள்! அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது! போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தலவரலாறு!

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்!
மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது!

மதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.
மதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்!
எளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி!


வாழைப்பந்தல் பச்சையம்மன்



பாலாறும் செய்யாறும் சங்கமிக்கும் எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தின் (திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம்) அதிதேவதை இவள்!
புதுப்புடைவையை மடித்து மடித்துச் சுற்றி ஒரு பெண்ணின் உருவம் போல் எங்கம்மா செய்வாங்க! பூவாடைக்காரியான அதற்குக் காதோலைக் கருகமணி சார்த்தி, வாமுனியும் செம்முனியும் காக்கும் பந்தலில் பொங்கலிட்டு, வீட்டுக் குழந்தைகளுக்கு முதல் முடியிறக்கம், காதுகுத்தல் எல்லாம் நடைபெறும்!


வாழைப்பந்தல்கள் பின்னணியில் வாமுனி, செம்முனி

இவளுக்குச் செய்த பின்னர் தான், குலதெய்வம் முருகப் பெருமானுக்கும், பின்னர் திருமலை எம்பெருமானுக்கும் செய்வது வழக்கம்!
பச்சம்மா என்று நாங்கள் பாசமுடன் அழைக்கும் பச்சையம்மனையும் பொன்னியம்மனையும் இந்த நட்சத்திர வாரத்தில் போற்றி மகிழ்கின்றேன்!

ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா!
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், துன்னுபுட்டுப் போடியம்மா!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP