Tuesday, March 30, 2010

ஆண்டாள் திருமணம்



'கல்யாணம் வரை சொல்லி முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவேன்' என்று பாவை, தன் தோழியிடம் தொடர்ந்து சொல்கிறாள் ...

***
தோழி: அந்தக் காலக் கல்யாணங்கள் 5 நாள்! அதைச் சொல்லவே நீ 5 நாட்கள் ஆக்காமல், கொஞ்சம் வேகமா சொல்லுடீ! பக்கத்து விட்டுப் பையன் பார்க்கில் சாயங்காலம் 5 மணிக்கு கண்ணாமூச்சி விளையாடக் கூப்பிட்டிருக்கான்!

பாவை: பொறாமையோ? மேலே கேளு! எங்கள் இருவரையும் மணப் பந்தலில், கிழக்கு முகமாக, ஹோம குண்டத்தின் முன், மணையில் உட்கார வைத்தனர்.

மாதவன் 3 மந்திரங்கள் மூலம், எனக்கு குடும்ப பாரத்தைச் சுமக்கும் சக்திக்காக சோமனையும், என் இளமைக்காக கந்தர்வர்களையும், என் அழகிற்காக அக்னியையும் பிரார்த்தித்தான்.

(சோமன், தன் மனைவி சூர்யாவுக்காக சோமனை - அதாவது தன்னையே - குறிப்பிட்டு மந்திரம் சொல்வது, அதிசயமானது!)

கோவிந்தன், 4 மந்திரங்கள் மூலம் (10.85.36-39) பகன், அர்யமா, சவிதா, இந்திரன், அக்னி, சுரியன், வாயு, சரஸ்வதி ஆகியோரை வணங்கி என் கையைப் பிடித்தான் (கைத்தலம் பற்ற)! என் கையுடன், 'இதயத்தை'யும் கொடுத்தேன்!

தோழி: இதயமா? நல்லெண்ணெய் ரொம்ப விலையாச்சே! அதையும் உன் அப்பா கொடுத்தாரா?

பாவை: அடி வாங்கப் போறே நீ! என் கை விரல்கள் ஐந்தையும், ஒரு குவிந்த தாமரை போல் சேர்த்து வைக்க, அவன் என் கைப்பற்றினான்! 'குவிந்த கைகள்' ஒரு முத்திரை! இது, இதயத்தைக் குறிக்கும்!



(கை விரல் நுனிகளில் நரம்புகள் முடிவதால், அதனைத் தடவிக் கொள்ளுதல், நரம்புகளை தளர்த்தி, மன அமைதியை அளிக்கும்; விரல்களைக் குவித்து வைத்து, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று சுமார் 5 நிமிடங்கள் தடவிக் கொள்வது, மனதை அமைதிப் படுத்தும் ஒரு உடல் பயிற்சியாகச் செய்யலாம்!)

***

பாவை: நல்ல நேரத்தில் - மத்தளமும் நாதஸ்வரமும் சேர்ந்து இசைக்க (மத்தளம் கொட்ட), நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத), புரோகிதர் மந்திரம் சொல்ல - மதுசூதனன் எனக்குத் தாலி கட்டினான்! இப்படியாக, மாங்கல்ய தாரணம் முடிந்தது! என் கனவில் என் வாழ்க்கைக் கனவு நிறைவேறியது!

(நல்ல நேரம் வந்ததை, 'மத்தளம் கொட்ட' என்பதன் மூலம் நம் பாவை குறிப்பிடுகிறாள்)

தோழி: உடனே எல்லாரும் மேடைக்குப் பாய்ந்து, கை குலுக்கிவிட்டு, சாப்பிடப் போயிருப்பார்களே?

பாவை: இது மட்டும் உனக்குத் நல்லா தெரியுமே?

தோழி: எவ்வளவு கல்யாணம் பார்க்கறேன்! கல்யாணக் காட்சின்னா, 'கெட்டி மேளம்', 'மாங்கல்யம் ...', தானே? அப்புறம் வயிறு தானே?

பாவை: கேலியை நிறுத்து! உண்மையில், 'மாங்கல்யம் ...' அது மந்திரமே இல்லை! அதற்கு அர்த்தம், 'இது மங்களகரமானது. இதை உன் கழுத்தில் நான் கட்டுகிறேன்! நீ என்னுடன், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க வேண்டும்'. தாலி கட்டும் போது, எந்தக் கடவுளையும் நினைத்து மந்திரம் சொல்வதில்லை!

தோழி: அப்படியா?

பாவை: எங்கள் கல்யாணத்தில், மிக முக்கியமானது இது இல்லை! அதுனால தான் இதைப் பற்றி நான் பாசுரத்தில் சொல்லலை!

தோழி: பின் எதுடீ முக்கியம்?

***

(பாவை தொடர்கிறாள்)

தோழி: ஏய்! தாலி கட்டியாகி விட்டதல்லவா? சீக்கிரம் கனவை முடிடீ!

பாவை: முக்கியாமன நிகழ்ச்சி வரலையே! அதற்குள் அவசரம் உனக்கு! வைதீகர்கள் (வாய் நல்லார்), நல்ல வேதங்களை ஓதினர் (மந்திரத்தால் நல்ல மறை ஓதி)! எங்கள் திருமணத்திற்கு, அந்த விஷ்ணுவும், அந்த அக்னியுமே சாட்சி!

(மறை 'ஓத' என்று இருக்க வேண்டும்! 'ஓதி' என்று பாசுரம் இட்டுள்ளாள் நம் பாவை. இது எச்சத் திரிபு!

'வாய் நல்லார் நல்ல மறை ஓத, காய்சின மாகளிறன்னான், மந்திரத்தால் பாசிலை நாணல் பரிதி வைத்து, என் கை பற்றி, தீ வலம் செய்யக் கனாக் கண்டேன்'

என்று பொருள் கொள்ள வேண்டும்!)

தோழி: ஏண்டி 'நல்ல மறை' என்கிறாய்? 'கெட்ட மறை'யும் இருக்கிறதா என்ன?

பாவை: வேதத்தில், முதலில் (பூர்வ பாகம்), யாகத்தின் வகைகள், அவைகளைச் செய்யும் முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. பின்னரே (உத்தர பாகம்), புருஷ சூக்தம் போன்றவற்றில், எல்லாவற்றிலும் உள்ளே உறையும் விஷ்ணுவின் ஸ்வரூப குணங்கள் சொல்லப் படுகின்றன. பெரும்பாலும், கல்யாண ஹோமத்தில் நாராயணனின் பெருமைகளைக் கூறும் புருஷ சூக்தமே முதலில் சொல்லப் படுகின்றது! இதைத் தான் 'நல்ல மறை' என்றேன்!

தோழி: Thanks-டி! இப்பதாண்டீ கனவில், நனவாக ஒன்று சொல்லி இருக்கே!

பாவை: பயங்கரக் கோபம் கொண்ட பெரிய யானை (காய் சின மா களிறு) போல் கம்பீரமான (அன்னான்) கண்ணன், அக்னி குண்டத்தைச் சுற்றி, பசுமையான இலைகளை உடைய நாணல் புல்லை (பாசு இலை நாணல்) , தரையில் காப்பாக வைத்து (படுத்து), வாசனை உடைய சின்ன மரக் குச்சிகளை (ஸமித்துகளை) வைத்து (பரிதி வைத்து), தன் வலது கையால் என் கையைப் பற்றி (என் கை பற்றி), தீயை வலம் செய்தான் (தீவலம் செய்ய)!


ஒரு அடி எடுத்து வைத்தவுடன், அவன் குனிந்து, தன் கையால் என் திருவடி பற்றினான்!

(அளவற்ற பலமும் சக்தியும் படைத்த எம்பெருமானும், தாயாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று இவள் சொல்கின்றாளோ?)

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், (திரும்பி, பின்னால் வரும்?!?) மஹா விஷ்ணுவின் மீது ஒரு மந்திரம் சொல்லி (யஜுர் அஷ்டகம்-3, ப்ரஸ்ந-7, பஞ்-89), எங்களை நன்றாக வைக்குமாறு வேண்டினான்! இப்படி, 7 முறை (ஸப்த படி) செய்தோம்!

தோழி: அப்படி என்ன வேண்டினான் அவன்?

பாவை: நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!

- விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
- விஷ்ணு உனக்கு, 'மண வாழ்வு' இனிமையாக இருக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!

தோழி: ஆஹா! கேக்கறத்துக்கே நல்லா இருக்கே! நிஜமாவே இப்படி நடந்தா நல்லாயிருக்குமே!

பாவை: வேத முறைப்படி நடக்கும் கல்யாணத்தில், தீவலம் முடிந்த பிறகு தான் 'திருமணம்' முடிந்ததாகக் கணக்கு! கை குலுக்குதல், பரிசளித்தல் எல்லாம் இதற்குப் பின் தான் நடக்க வேண்டும்!

தோழி: இழுக்காம, மேலே சொல்லுடி!

பாவை: கண்ணன் தீயினில் நெய் விட, தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி, இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி, ஸவிதா, விஸ்வ தேவர்கள், வருணன், ஆகாஸ தேவதை) ஆசிகளைப் பெற, 'ப்ரதான ஹோமம்' எனப்படும் 16 மந்திரங்கள் கொண்ட ஹோமம் நடந்தது!

***

தோழி: எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்னடீ?

தோழி: இந்தக் கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே, 'வரும், ஆனால் வராது' எனும்படித்தானே இருக்கிறான்! ஒரு நாள் வந்தால், ஒரு மாதம் வருவதில்ல! கல்யாணத்தின் பின் ஓடி விட்டால்?

பாவை: இவ்வளவு தானா? நான் ஏதோன்னு பயந்துட்டேன்! கண்ணன், அக்னி சாட்சியாக, என்னைக் கைவிட மாட்டேன் என்று மந்திரம் சொல்லியுள்ளான்! அக்னியே கை விட்டாலும், விஷ்ணு சாட்சியாகச் சொன்னதால், கண்ணனால் என்னை விட முடியாது! விஷ்ணு சாட்சியாகக் கை கொடுத்ததால், என்னாலும் அவனை விட முடியாது!

தோழி: அதெப்படி?

பாவை: என்ன இப்படிக் கேட்டுட்டே? இந்தப் பிறவியிலும் (இம்மைக்கும்), 'ஏழேழ்' பிறவியிலும் (ஏழேழ் பிறவிக்கும்), அவன் நமக்குப் பிடித்தவனாயிற்றே (பற்றாவான்) நாராயணன்? நமக்கெல்லாம் உரிமையாளன் (நம்மை உடையவன்) ஆயிற்றே அந்த நாராயணன் (நாராயணன் நம்பி)! அந்த நாராயணனே ஒப்புக் கொண்டதால், யாராலும் கை விடமுடியாது!

தோழி: ஏழாம் வாய்ப்பாடில், 7x7=49 என்று வருமே? அந்த 49-ஆ? ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்ப்பா!

பாவை: உனக்குக் கணக்கு வரும்னு காட்டிக்கணுமாக்கும்?

மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்! ஆனால், நாராயணன் திருவடிகளைப் பற்றினால், நம் ஆத்மா உள்ள அளவும், கால தத்வம் உள்ள வரையிலும் நமக்கு பகவதனுபவம் உண்டு! இதைத் தான் 'ஏழேழ்' என்று சொன்னேன்!

நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு, ஒண்ணா ரெண்டா, எடுத்துச் சொல்ல?

தோழி: அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?

பாவை: ஏய்! 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்'னு, திருப்பாவையிலேயே சொன்னேனே? அப்போ தூங்கிட்டு இப்போ கேட்டா? சரி ... போனாப் போறது! இன்னொரு தடவை சொல்றேன்! ஆனால், நானே Repeat பண்ணறதுக்குப் பதிலா, குலசேகரரைச் சொல்லச் சொல்றேன்!

***

ரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்!

கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:

வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!

என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!

அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!

மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!


புட்கொடியானே! கடலில் செல்லும் கப்பலின் கூம்பு மேல் உள்ள பறவை, எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, கரையைக் காண முடியாமல், மீண்டும் அந்தக் கூம்பு மேல் வந்து உட்காருவது போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தாங்குபவன்-தாங்கப்படும் பொருள் உறவு)!

தாமரைக் கண்ணா! சூரிய கிரணங்கள் எவ்வளவு எரித்தாலும், சந்திரனுக்கு மலராது, சூரியனுக்கு மட்டுமே மலரும் தாமரையைப் போல் உனக்காகவே காத்திருப்பேன் (ஆண்டான்-அடிமை உறவு)!


மழைக் கண்ணா! எவ்வளவு தான் மழை பெய்யாமல் இருந்தாலும், மழை மேகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயிர்கள் போல, உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் (அறிபவன்-அறியப்படும் பொருள் உறவு)!

கடல் வண்ணா! ஆறுகள் எவ்வளவு வளைந்து, பாய்ந்து, நீண்டு ஓடினாலும், கடைசியில் கடலிடம் வந்து சேர்வது போல், உன்னிடமே வந்து சேர்வேன் (சொத்துக்கு உரியவன்-சொத்து உறவு)!

திருமகள் கேள்வா! செல்வம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவனிடம், அந்தச் செல்வமே தானாக வந்து சேர்வது போல், உன்னையே அடைய விரும்புவேன் (போகத்தை அனுபவிப்பவன்-போகப் பொருள் உறவு)!

எனக்கும், இந்த உலகத்தில் உள்ள வேறு எந்தப் பொருளுக்கும், ஒன்றோ, அல்லது, சில உறவுகளோ இருக்கலாம்! ஆனால், எனக்கு, உன்னிடத்தில் மட்டும் தான் இந்த 9 உறவுகள் அனைத்தும் ஒரு சேர இருக்கின்றன! எனவே, உன்னிடமே மீண்டும் மீண்டும் வருவேன்!

***

பாவை: என்ன! இப்போதாவது புரிஞ்சதா?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!
- கனவு தொடரும்!

64 comments:

  1. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் முதல் படமே அற்புதம்.
    கையிலே கலைவண்ணம் கண்டார் .நன்றி

    ReplyDelete
  2. Migavum nandu. Athu enna 7 pirappu villakavum- nandri

    ReplyDelete
  3. மாதவிப் பந்தலே ஒரே கல்யாண களை கட்டுது! :)
    * முருகனருள்-150இல், மாதவிப் பந்தலுக்கும் முருகனுக்கும் கல்யாணம்!
    * சீதா கல்யாண வைபோகமே பாடல்
    * அப்பறம் கோதைக்கும்-அரங்கனுக்கும் கல்யாணம்-Part 2

    அடடா! தோழி கல்யாணம் போலவே அவள் தோழன் கல்யாணமும், அதே நாளிலா! ச்சோ ஸ்வீட்! :)

    ReplyDelete
  4. //குவிந்த கைகள்' ஒரு முத்திரை! இது, இதயத்தைக் குறிக்கும்!//

    ஹிஹி! நான் மொதல்ல கையைக் கொடுக்க மாட்டேன்-ப்பா!
    இதயத்தைக் கொடுத்துட்டு அப்பறம் தான் கை, மத்தது எல்லாம்! தோழி - உஷார்! :)

    //கை விரல் நுனிகளில் நரம்புகள் முடிவதால், அதனைத் தடவிக் கொள்ளுதல், நரம்புகளை தளர்த்தி, மன அமைதியை அளிக்கும்//

    இப்போ புரியுது, காதலர்கள் எல்லாம் எதுக்கு கையைப் பின்னிக்கிட்டு, விரலைத் தடவிக் கொடுக்கறாங்க-ன்னு! :)

    ReplyDelete
  5. //நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத)//

    வாரணம் = சங்கு-ன்னு முன்பு பேச்சு வந்து போது, திருமணத்தில் ஏது சங்கு?-ன்னு கேட்டீங்களே-ண்ணா! இதோ இங்கு வருகிறதே! :)

    நீங்கள் முன்பு சொன்னது //அடியேன் பிறந்து வளர்ந்த மதுரையில், ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருமணத்தில் சங்கு பார்த்ததாக நினைவில்ல!// :))

    ReplyDelete
  6. //ஏண்டி 'நல்ல மறை' என்கிறாய்? 'கெட்ட மறை'யும் இருக்கிறதா என்ன?//

    ஹா ஹா ஹா
    இதை யாராச்சும் எடுத்துச் சொல்லணுமே-ன்னு நினைச்சேன்! நீங்க சொல்லிட்டீங்க! வாழி வாழி!

    //பாவை: வேதத்தில், முதலில் (பூர்வ பாகம்), யாகத்தின் வகைகள், அவைகளைச் செய்யும் முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. பின்னரே (உத்தர பாகம்), புருஷ சூக்தம் போன்றவற்றில், எல்லாவற்றிலும் உள்ளே உறையும் விஷ்ணுவின் ஸ்வரூப குணங்கள் சொல்லப் படுகின்றன//

    இப்போ புரிகிறது அல்லவா?
    * கர்ம காண்டத்தை = நல்ல மறை என்று சொல்வதில்லை! அது மறை! அவ்வளவே!
    * உத்தர பாகமான வேதத்தையே "நல்ல மறை" என்று கொண்டாடுகிறார்கள்! பகவத் குண விசேஷணங்களே நல்ல மறை! கர்மம் அல்ல!

    ராகவ்! மெளலி அண்ணா கிட்ட சொல்லிருப்பா! :))

    ReplyDelete
  7. //பயங்கரக் கோபம் கொண்ட பெரிய யானை (காய் சின மா களிறு) போல் கம்பீரமான (அன்னான்) கண்ணன்//

    அழகாகச் சிரிக்கும் மாப்பிள்ளையைக் காட்ட வந்த இடத்தில்...
    ஏன் கோதை, கோபம் கொண்ட யானையை உதாரணம் ஆக்க வேண்டும்? காய்சின மா களிறு அன்னான்!

    யாரேனும் தெரிஞ்சவங்க சொல்றீயளா? :)

    ReplyDelete
  8. //மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்!//

    :)
    அவ்வளவு தான் யாக பலன்!
    வெறும் ஆத்ம சாக்ஷாத்காரம் மட்டுமே!

    //ஆனால், நாராயணன் திருவடிகளைப் பற்றினால், நம் ஆத்மா உள்ள அளவும், கால தத்வம் உள்ள வரையிலும் நமக்கு பகவதனுபவம் உண்டு!//

    ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு
    எழுமையும் ஏமாப்பு உடைத்து!

    //ஏழாம் வாய்ப்பாடில், 7x7=49 என்று வருமே? அந்த 49-ஆ? ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்ப்பா!//

    ஹிஹி!
    49 என்ன? 49 கோடியும் தாங்கலாம்! ரொம்ப ஈசி! :)

    அவனுக்காக 49
    அவனுக்காக 108
    அவனுக்காக, அவனுக்காக-ன்னு பார்த்து நடந்துக்கிட்டாலே போதும்! ரொம்ப ஈசி! :)

    என்ன வந்தாலும்....உனக்காக மட்டும் நான் இருப்பேன்!
    அட, நீயே ஒரு சமயம் என்னை மறந்து போனாப் போல தெரிஞ்சாக் கூட...உனக்காக மட்டும் நான் இருப்பேன்!

    இப்படி இருக்குறது ரொம்ப ஈசி தானே!
    இதுல என்ன, "ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்"-ன்னு புலம்பல்? :)

    ReplyDelete
  9. //ஏழேழ்//

    அவளைப் போய்ப்போய் பார்த்துக்கிடணும் போல இருக்கு-ன்னு சொல்றதில்லையா? எத்தனை முறை "போய்" என்றா கேட்கிறோம்?
    அதே போல் ஏழேழ்! = எழ எழ!
    தொழுது எழென் மனனே!

    //அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?//

    ஹா ஹா ஹா!
    அதானே! அப்படி என்ன பிரிக்க முடியாத உறவு?
    * பழம்-ன்னு இருந்தா தோல் பிரியத் தான் செய்யும்! அப்போ தானே திங்க முடியும்? :)
    * பூ-ன்னு இருந்தாலும், மணம் பிரியத் தான் செய்யும்!
    பூ செடியிலேயே இருக்கோ, இல்லை தலையில் இருக்கோ, (இல்லை சில பேருக்கு காதில் இருக்கோ :)...
    அதன் போகம் முடிஞ்சவுடன், மணம் பிரியத் தானே செய்யும்!

    ஆனா...ஆனா...
    இவன் போகம் இருக்கே...ஹூம்..அது முடிவதே இல்லை! அதனால் பிரிவதே இல்லை! :)

    ReplyDelete
  10. உன் தன்னோடு (அவன்) = அ
    உறவேல் = உ
    நமக்கு (நாம்) = ம்

    உன் தன்னோடு உறவேல் நமக்கு ஒழிக்க ஒழியாது!
    அ+உ+ம் = ஓம்! அது பிரளய காலத்திலும் ஒழிக்கத் தான் ஒழியுமோ? உன்னாலும் முடியாது! என்னாலும் முடியாது!

    உன் தன்னோடு உறவேல் நமக்கு = DNA!
    அது ஒழிக்க ஒழியுமோ?
    * நீ எனக்கு பொறக்கலை போ-ன்னு அம்மாவே சொன்னாலும், DNA ஒழிக்க ஒழியாது!
    * நான் உனக்குப் பொறக்கவே இல்லை போ-ன்னு சொன்னாலும், DNA Change Operation எல்லாம் ஒன்னும் பண்ணிக்க முடியாது! :)

    DNA is DNA!
    //அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?//

    அது போலத் தான்டி, அவனுக்கும் எனக்கும்...உறவு...அது அவனே நினைச்சாலும் ஒழிக்க ஒழியாது!

    வெந்துயர் வீட்டா விடினும், ஒழிக்க ஒழியாது!
    என் பால் நோக்காயே ஆகிலும், ஒழிக்க ஒழியாது!

    உன் அந்தமில் சீர்க்கு அல்லால் வேறெங்கும் அகம் குழைய மாட்டேனே!
    என் பால் நோக்காயே ஆகிலும், நின் பற்றல்லால் பற்றில்லேன்!
    முருகா!

    ReplyDelete
  11. )வாசனை உடைய சின்ன மரக் குச்சிகளை (ஸமித்துகளை) வைத்து (பரிதி வைத்து), ::::)))))))

    பரிதி என்றால் சூரியன் முன் வைத்து என்றுதான் சொல்வார்கள்
    தாங்கள் பரிதி ,,,,,மரக்குச்சி என்று சொல்றீங்க!

    ReplyDelete
  12. ஆண்டாள் கனவில் வந்தது உக்ர நரசிம்மர். இரணியன் வதம் முடிச்சி அப்படியே ஆண்டாள் கனவுல வராரு
    வாட்ட சாட்டமா! கோபத்தோடு ஒரு உருவம் கை பற்றி தீவலம் செய்ததை ... தோழிகளிடம் நரசிம்மர் என்று
    நேரடியாக கூறாமல் மறைமுகமாக தெரிவிக்கிறாள்.

    எரியும் நெருப்பை போல் கோபம் கொண்ட மத யானையை போன்ற ஒருவன் ...கைப்பற்றி தீவலம் செய்ய
    கனா கண்டேன் தோழி நான்.

    நரசிம்மர் பாசுரம் இவை!
    காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
    தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்!

    ReplyDelete
  13. KRS Said……
    ஏன் கோதை, கோபம் கொண்ட யானையை உதாரணம் ஆக்க வேண்டும்? காய்சின மா களிறு அன்னான்!
    யாரேனும் தெரிஞ்சவங்க சொல்றீயளா? :)


    தெரியாதவன் .
    எண்ணியதை எழுதினேன்
    அவ்வளவே!

    ReplyDelete
  14. ராகவா

    படங்கள் அருமை! அதிலும், நரசிம்மர் படம் Super!

    ReplyDelete
  15. ஆண்டாள் பாசுர விளக்கங்களில் பல பயனுள்ள தகவல்களை
    கொடுத்து இருக்கீங்க!

    ரங்கன் ஐயா!
    மிக்க நன்றி

    ReplyDelete
  16. KRS

    ஹிஹி ...
    இதை எதிர்பார்த்தேன்! போன Post-லேயே, இந்தப் பாசுரத்தில் இந்தக் கேள்வி வரும்னு தெரியும்!

    சில எண்ணங்கள்:

    1) முன்பு சொன்னது, மாப்பிள்ளை அழைப்பின் போது, ’ஆயிரம் சங்கு’ ஊதும் சடங்கைப் பார்த்ததில்லை என்று!

    ராகவா, நீ உங்கள் ஊரில் பார்த்ததுண்டா? வைணவ அன்பர்களே! உங்கள் ஊரில்?

    2) அடியேன் சொன்னது உண்மை! ‘நான்’ பார்த்ததில்லை!

    3) மாப்பிள்ளை அழைப்பின் போது ஆயிரம் சங்குகள் கிடைப்பது எளிது! இதை ஊதுவது, பிரம்மாண்டமான கல்யாணம் ஆகிவிடாது! ஆனால், ஆண்டாள் விவரித்தது, கனவில் தனக்கு, ஊரார் பார்த்து பிரமிக்கும்படி நடந்த கல்யாணம்! ஆயிரம் யானைகளும், 33 கோடி தேவர்களும், இந்திரனும், இந்தியாவின் எல்லாக் கோடியிலும் இருந்து புனித நீரும் வந்தால், அது போல் வேறு பிரம்மாண்டம் இல்லையே?

    4) மாப்பிள்ளை அழைப்பின் போது ஆண்டாள் ஆயிரம் சங்கைச் சொல்ல வேண்டுமென்றால், 6-ம் பாசுரத்தில் சொன்னதைப் போல, ‘வரி சங்கு சூழ’ என்று எழுதியிருக்கலாமே? ஏன் வாரணம் ஆயிரம் ‘சூழ’ என்று பாசுரமிட வேண்டும்?

    5) ’வாரணம்’ சூழ என்பதற்கு, ’யானைகள் (ஒருவனைச்) சூழ’ என்ற பொருள் பொருந்தும். ஆனால், உங்கள் வீட்டில் ஒரு சங்கும், அடுத்த வீட்டில் ஒரு சங்கும் தொங்க விட்டால், அது வெறும் ’தோரணம்’ ஆகுமே தவிர, வாரணம் போல் ‘சூழ்ந்தது’ ஆகாது! அப்போதும், ஆண்டாள் கட்டாயம், ’வாரணம் தொங்க’ என்றே எழுதியிருப்பாள்.

    6) அப்படி ஒருக்கால் மாதவன் வரும்போது ஆயிரம் பேர் வரிசங்கம் ஊதினால், அதை ஆண்டாள், ’வாரணம் ஊத’, அல்லது ’வாரணம் முழங்க’ என்றே எழுதியிருப்பாள்!

    7) இன்னும் தென்னாட்டுக் கோயில்களில், எம்பெருமான் திருக்கல்யாணத்தில், முகூர்த்த நேரத்தில் சங்கு ஊதப்படுவது உண்டு!

    8) ஸ்வாபதேசம்: ஆண்டாளுக்கு, சங்கின் மேல் தனிப் பிரியம்! அவனைப் பற்றிப் பாடுகிறாளே 10 அடுத்த திருமொழியில்! ஒருவேளை, பாஞ்சசன்னியம் இவள் திருமணத்திற்கு ஒத்து (அருகில் நின்று) ஊதுவதால், தன் நன்றியைக் காட்டுவதற்காக பத்துப் பாசுரம் எழுதினாளோ?

    8), ஆண்டாள் கூறுவதால், முகூர்த்த நேரத்தில் சங்கு ஊதும் வழக்கம் அவள் காலத்தில் இருந்திருக்க வேண்டும்!

    ஆனால்(மனித) வைணவக் கல்யாணங்களில் இப்போது இந்த வழக்கம் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும் - ‘சங்கு ஊதும்’ செயல், பெரும்பாலும் வேறு காரியத்திற்காகச் செய்யப் படுவதால்!

    ஆராய்ச்சியாளர்களே! இந்த வழக்கம் ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியுமா?

    எனவே, வாரணம் என்ற வார்த்தைக்கு சங்கு என்ற பொருள் இருந்தாலும், மாப்பிள்ளை வரும்போது, அந்தப் பொருள் பொருந்தாது என்பது அடியேனின் எண்ணம்!

    ReplyDelete
  17. KRS

    //தாலி கட்டும் போது கடவுளை நினைத்து மந்திரம் சொல்வதில்லை தான்! ஆனால் அந்த மந்திரம் நம்மை, நம் நலனை எண்ணிச் சொல்வது!//

    ’மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறேன்’ என்று சொல்வது மந்திரம் ஆகாது! It can be a commitment, but not a Prayer!

    //கட்டுபவன், தனக்கும்-தன்னைக் கட்டுபவளுக்கும் சேர்த்துச் சொல்வது! கிட்டத்தட்ட உறுதி மொழி போல! I mean Commitment! அது முக்கியம் அல்லவா?//

    No doubt, this is a commitment, and is important! The question is: Is this the 'Most' Important?

    ReplyDelete
  18. //ராகவா, நீ உங்கள் ஊரில் பார்த்ததுண்டா? வைணவ அன்பர்களே! உங்கள் ஊரில்?//

    ராகவா என்றும் வைணவ அன்பர்களே என்றும் தனித்தனியாக குறிப்பிட்டு என்னை வைணவன் அல்ல என்று குறிப்பிட்டதற்காக என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  19. //அந்தக் காலக் கல்யாணங்கள் 5 நாள்! அதைச் சொல்லவே நீ 5 நாட்கள் ஆக்காமல்,//

    என்னா ஒரே அஞ்சு அஞ்சுன்னு வருது.. யாருண்ணா அந்த அஞ்சு ??? மன்னிக்குத் தெரியுமா :)

    ReplyDelete
  20. // எங்கள் கல்யாணத்தில், மிக முக்கியமானது இது இல்லை!//

    ஒவ்வொருவர் வீட்டுக் கல்யாணங்களிலும் சில நிகழ்ச்சிகளைப் புரோஹிதர் அந்த வீட்டுப் பெண்கள் வழக்கப்படி செய்யச் சொல்வார்கள் அல்லவா.. அதற்கு கல்யாண மந்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதா.. Any fill in the Gaps ?

    ReplyDelete
  21. //Raghav said...
    யாருண்ணா அந்த அஞ்சு ??? மன்னிக்குத் தெரியுமா :)//

    அடப்பாவி! மனுசன் திருப்பதிக்கு போயிருக்காரு-ன்னு தெரிஞ்சிக்கிட்டு, when the cat is away the mouse is playing-eh? :)

    அந்த "அஞ்சு" = அஞ்சு குடிக்கு ஓர் சந்ததியாய், உங்க எல்லாரையும் விஞ்சி நிற்கும் தன்மையளாய் = என் தோழி! :)

    ReplyDelete
  22. //அளவற்ற பலமும் சக்தியும் படைத்த எம்பெருமானும், தாயாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று இவள் சொல்கின்றாளோ//

    இங்கு தானேண்ணா.. தென்னாசார்ய மற்றும் வடகலை சம்ப்ரதாயத்தவர்கள் மாறுபடுகின்றனர்?? தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது.. அவளால் எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி பரிவு காட்ட முடியும் என்று தென்னாசார்ய சம்ப்ரதாயம் அல்லவா? இதனை கொஞ்சம் விரிவா சொன்னீங்கன்னா நன்றியுடையவர்களாவோம்.

    ReplyDelete
  23. //இப்படி, 7 முறை (ஸப்த படி) செய்தோம்//

    ஸப்தபதியா இல்லை ஸப்தபடியா ?

    ReplyDelete
  24. //விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!//

    அவரே விஷ்ணு அவரை எந்த விஷ்ணு பின்னால் வந்து காக்கிறார் ?:)

    ReplyDelete
  25. //மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்! //

    இல்லாவிடில்.. பின்பு மழை நிற்க வேண்டி யாகம் செய்ய வேண்டி வரும் அல்லவா :)

    ReplyDelete
  26. //'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்'னு, திருப்பாவையிலேயே சொன்னேனே? அப்போ தூங்கிட்டு இப்போ கேட்டா?//

    ஆமா நீங்க அர்த்த ராத்திரி 4மணிக்கு எழுப்பி குளிர்ல குளிக்க வைச்சு ஒரு காஃபி கூட குடுக்காம திருப்பாவை பாட வைச்சா.. இப்புடித்தான் இருக்கும்.. மார்கழித் திங்கள் கைநிறைய பொங்கல்னு தான் சொல்வோம் :)

    ReplyDelete
  27. //Raghav said...
    ராகவா என்றும் வைணவ அன்பர்களே என்றும் தனித்தனியாக குறிப்பிட்டு//

    ஹிஹி!
    உண்மை தானே! இதுக்கு எதுக்கு கண்டனம்? :)

    ராகவ் தான் வைணவன்! ராகவன் வைணவன் கிடையாது! நானும் வைணவன் கிடையாது! :)

    குமரன், ராதா - இவிங்க எல்லாம் பின்னால வந்து will confess :)

    Jokes apart
    வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
    பீட் பராயே ஜானே ரே
    பர துக்கே உபகாரு கரே தோயே
    மன் அபிமான் ந ஆனே ரே!

    ReplyDelete
  28. ராகவா

    //ராகவா என்றும் வைணவ அன்பர்களே என்றும் தனித்தனியாக குறிப்பிட்டு என்னை வைணவன் அல்ல என்று குறிப்பிட்டதற்காக என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)//

    உண்மை தான்! நீ வைணவ அன்பன் இல்லை, வைணவ நண்பன்! எனவே, தனித்துச் சொன்னேன்! உனக்கு இதில் ஆட்சேபணை இருந்தால் உன் இஷ்டப்படியே சொல்கிறேன்!

    ReplyDelete
  29. //ஆமா நீங்க அர்த்த ராத்திரி 4மணிக்கு எழுப்பி குளிர்ல குளிக்க வைச்சு ஒரு காஃபி கூட குடுக்காம திருப்பாவை பாட வைச்சா.. //

    ஆண்டாள் காபி கொடுக்காததன் காரணம் ரொம்ப Simple - அந்தக் காலத்தில் காபி இல்லை!

    இருந்திருந்தால், அவள் பால் சோறுடன், காபியும் சேர்த்திருப்பாளே!

    ReplyDelete
  30. //அவரே விஷ்ணு அவரை எந்த விஷ்ணு பின்னால் வந்து காக்கிறார் ?:)//

    இதைச் சொன்னது முதலில், சூர்யாவும், சோமனும்! தான் மனிதப் பிறவி எடுத்ததால், மனிதர்கள் போல் கல்யாணம் செய்து கொள்வதில் அத்தனை ஆசை அவளுக்கு! இதனால் வந்த ஒரு Confusion இது!

    இதைப் போல் இன்னொரு Confusion, ராமனுக்கும் சீதைக்கும், வந்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  31. //எந்தக் கடவுளையும் நினைத்து மந்திரம் சொல்வதில்லை என்ற காரணத்தால் முக்கியம் பெறாதா என்ன?//

    இதுவும் முக்கியம் பெறும். ஆனால், பல முக்கியமான சடங்குகள் கல்யாணத்தில் நடைபெறும் போது, ’எது மிக முக்கியம்?’ என்பது அவரவர் விருப்பத்தையும் பொருத்தது.சிறு உதாரணம்:

    தோழன் ஒருவன், மாத்வ குலத்தைச் சேர்ந்தவன். குடும்பத்தின் தாய்மொழி கன்னடம். ஆனால், அவன் தந்தை தொழில் நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். அரங்கத்தில் சுமார் 20 வருடம் இருந்தனர். தமிழ் வாடை இல்லாமல் போகுமா? தாயாருக்கு, தமிழ்க் காலாச்சாரத்தில் அதீத பற்று.

    நண்பனுக்குத் திருமணம் ஏற்பாடாகியது! நண்பன் வீட்டார் பெங்களுருக்கு விஜயம்! திருமணத்தின் முதல் நாள், திருமணச் சடங்குகள் பற்றிப் பேசும்போது, தோழனின் தாயார், 'தாலி கட்டும்' வைபவத்திற்குத் தான் அதிகம் முக்கியத்துவம் உண்டு என்று பேச ஆரம்பித்தார்! ஆனால், மாத்வ சடங்குகளில், பெரும்பாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை!

    சாதாரணப் பேச்சு, ஒரு மணி நேர உறவினர் சண்டையாக மாறி, திருமணம் நிற்கும் நிலைக்கு வந்து விட்டது! சில நண்பர்கள், எல்லாச் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது எனச் சமாதானம் செய்து வைத்தனர்! மறு நாள் திருமணம் முடியும் வரை, அனைவர் முகத்திலும் பயங்கர Tension!

    (குறிப்பு: இதையும் Blog-லேயே போட்டிருந்தேன்; ஆனால் ந்ம் Editor ராகவன் அவர்கள் வெட்டி விட்டார்! :-)

    ReplyDelete
  32. KRS

    //அப்படிப் பார்த்தால் அம்மி மிதிக்கும் போது, கடவுளை நினைத்து மந்திரம் சொல்வதில்லையே! அம்மி மிதித்தலைப் பாடும் கோதை, ஏன் தாலி கட்டுவதைப் பற்றி மட்டும் பாடவில்லை?//

    அம்மி மிதிக்கும் போதும் மந்திரம் உண்டே? இதைப் பற்றி இந்தப் பாசுரம் முடிக்கும்போது எழுதலாம் என்றிருந்தேன் (இந்த Blog-ல், பாசுரத்தின் இரண்டு வரிகள் மட்டும் தான் எழுதியுள்ளேன் - ஏழேழ் பிறவிக்கும் என்பது பற்றித் தான் இதுவரை எழுதியுள்ளேன்; அடுத்த 2 வரிகள் அடுத்த Blog-ல்)

    ReplyDelete
  33. //ஆண்டாள் பாசுர விளக்கங்களில் பல பயனுள்ள தகவல்களை
    கொடுத்து இருக்கீங்க!//

    நன்றி அண்ணே!

    ReplyDelete
  34. //ஸப்தபதியா இல்லை ஸப்தபடியா ?//

    ஸப்த பதி! இதைக் கவனிக்கவில்லை. தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  35. //இப்படி இருக்குறது ரொம்ப ஈசி தானே!
    இதுல என்ன, "ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்"-ன்னு புலம்பல்? :)//

    இது, அவரவர்கள் மனத்தைப் பொறுத்தது!

    அடியேனுக்கு, சீக்கிரம் வைகுந்தம் போகவேண்டுமப்பா! அதுக்காகத்தான், அடிக்கடி வைகுந்தம் Complex போகிறேன் :-)

    ReplyDelete
  36. //இங்கு தானேண்ணா.. தென்னாசார்ய மற்றும் வடகலை சம்ப்ரதாயத்தவர்கள் மாறுபடுகின்றனர்??//

    :))
    மொத்தம் பதினெட்டு விஷயத்தில் கருத்து "மாறுபாடுகள்"!

    கருத்து *மாறுபாடு*-ன்னே சொல்றேன்!
    ஏன்-ன்னா அது கருத்து *வேறுபாடு* கூட இல்லை! Just மாறுபாடு! Alternates! Not Differences! Both have different connotations!

    - இதைச் சொல்வது கேஆரெஸ் அல்ல! :)
    - இதைச் சொல்வது மகான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்! அவருடைய சம்பிரதாய பரிசுத்தி என்னும் நூலிலே!

    ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய சம்பிரதாயங்களில்...
    ஒன்றிலும் அர்த்த விரோதம் இல்லை!
    வாக்ய யோஜனா பேதமே உள்ளது!


    அதாச்சும் இராமானுஜ சம்பிரதாயத்திலே...
    * அர்த்த விரோதம் = பொருள் வேறுபாடு என்பதே இல்லை!
    * வாக்ய பேதம் = சொல்லும் முறை மாறுபாடு தான் உள்ளது!

    இந்த மாறுபாடு ரெண்டு பேருக்கு இடையே கூட இருக்கணும்-ன்னு அவசியம் இல்லை!
    நம்ம ஒருத்தருக்குள்ளேயே...நேற்று சொன்னதில் இருந்து இன்னிக்கி நாமளே மாறுபடுகிறோம்! :)

    அம்மா நேற்று குழந்தையைப் பார்த்து, "டேய் ஏன்டா உயிரை வாங்குற?"-ன்னு சொன்னாள்!
    இன்னிக்கு, "ஏன் உயிரே நீ தான்டா" என்கிறாள்! :)
    இதுல எதை எடுத்துக்கறது? :))

    * முன்பு சொன்னது = ஸ்வாதந்த்ரியத்தில்!
    தன் வேலைக்கு (கர்மத்தில்) நடுல வந்து கலாட்டா பண்ணும் போது!
    * பின்பு சொன்னது = பரதந்த்ரியத்தில்!
    தான் செய்யும் வேலையே அந்தக் குழந்தைக்குத் தான் என்று உணரும் போது!

    மகான் தேசிகரே அர்த்த விரோதம் இல்லை-ன்னு சொன்னாப் பிறகு கூட...
    இன்னும் பேரையும், ஆளையும் மட்டுமே வைத்துக் கொண்டு,
    ஆலயங்களில் பேதம் பார்த்துத் திரியும் சில...
    (வாயில வேற என்னமோ வருது! சரி வேணாம் விடுங்க :))

    ஒருத்தனுக்கும் அது என்ன 18 point alternates-ன்னே தெரியாது!
    கருத்தை, என்னிக்கி நாம கருத்தாப் பார்த்து இருக்கோம்?
    உடனே அதைச் சொன்ன ஆளைப் பிடிச்சிக்கறதும், முத்திரை குத்துறதும், ஓ அவனா, அவங்க அப்படித் தான் என்ற எண்ணம் வளர்த்துக் கொள்வது தானே நம்ம வழக்கம்! :(

    கருத்து வேற! சம்பிரதாயம் வேற! ஆளு வேற - என்பதைப் பார்க்கவல்ல "ஸம த்ருஷ்டி", வெறும் தினப்படி மந்திரங்களில் மட்டுமே உள்ளது போலும்! நிஜ வாழ்வில் அல்ல! :(

    தேசிகரை உண்மையா மதிப்பவர் எவராய் இருந்தாலும்...
    மானசீகமா மதிப்பவர் எவராய் இருந்தாலும்...
    Read this again...
    //ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய சம்பிரதாயங்களில்...
    ஒன்றிலும் அர்த்த விரோதம் இல்லை!
    வாக்ய யோஜனா பேதமே உள்ளது!//

    வேதாந்தாச்சார்ய வர்யோ மே
    சன்னிதத்தாம் சதா ஹ்ருதி

    ReplyDelete
  37. //பரிதி என்றால் சூரியன் முன் வைத்து என்றுதான் சொல்வார்கள்
    தாங்கள் பரிதி ,,,,,மரக்குச்சி என்று சொல்றீங்க!//

    அருமையான கேள்வி!

    பரிதி - சூரியன், வட்டச் சுற்றளவு! இங்கு உச்சரிக்கப்பட்ட ‘த’, தமிழ்த் ‘த’.

    பரிதி - ஸமித்து (ஹோமத்தில் சேர்க்கும் வாசனையுள்ள மரக்குச்சிகள்). இங்கு உச்சரிக்கப்பட்ட ‘த’, வடமொழியில் ’த’(4) - நான்காவது ’த’. பரிதி என்றால், ஸமித்து!

    பாசுரத்தில், பரிதி என்ற வார்த்தைக்கு, வடமொழிச் சொல் பொருளை எடுத்துக் கொண்டு, இந்த வரியின் பொருளை,

    ’பசுமையான இலைகளை உடைய நாணல் புற்களை, தரையில் வைத்து, தீயில் ஸமித்துக்களை இட்டு’

    என்று கொள்ளலாம்.

    பாசுரத்தில், பரிதி என்ற வார்த்தைக்கு, தமிழ்ச் சொல் பொருளை எடுத்துக் கொண்டு, இந்த வரியின் பொருளை,

    ’பசுமையான இலைகளை உடைய நாணல் புற்களை, வட்டச் சுற்றளவாக தரையில் வைத்து’

    என்று கொள்ளலாம்.
    ஆனால், இப்படிப் பொருள் கொள்வதில், ஒரு சிறு பிரச்சனை: இந்தச் சடங்கில் செய்யப் படுவது:

    மந்திரங்கள் சொல்வது, தீயில், வாசனையுள்ள மரக் குச்சிகளை போட்டு ஹோமம் வளர்ப்பது, மற்றும், புல்லைத் தரையில் காப்பாக வைப்பது!

    தமிழ்ப் பொருளை எடுத்துக் கொண்டால், சடங்கில் ஒரு முக்கியமான பகுதி - தீயில் ஸமித்துக்களை இடுவது - விட்டுப் போகிறது! எனவே, இது அவ்வளவு மேன்மை பொருத்திய பொருளாக இருக்காது!

    எனவே வடமொழிச் சொல்லே (பரிதி = ஸமித்து) அதிகம் பொருந்தும்!

    (இதை எழுதும் முன், அடியேனிடம் உள்ள 4 நாச்சியார் திருமொழிப் புத்தகங்களில் இதற்கு அர்த்தம் தேடியபோது, அனைத்திலும் வடமொழிச் சொல் பொருளே கூறப்பட்டுள்ளன)

    Anyway, hats off to you for noticing and asking this question!

    ReplyDelete
  38. //தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது..
    அவளால் எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி பரிவு காட்ட முடியும் என்று தென்னாசார்ய சம்ப்ரதாயம் அல்லவா?

    இதனை கொஞ்சம் விரிவா சொன்னீங்கன்னா நன்றியுடையவர்களாவோம்//

    :)

    பேத ஸ்ருதியை மட்டுமே பார்த்து பாஷ்யம் பண்ணுவது ஒரு வகை!
    அபேத ஸ்ருதியை மட்டுமே பார்த்து பாஷ்யம் பண்ணுவது ஒரு வகை!

    ரெண்டையும் பொருத்திப் பார்த்து, இணைக்க வல்ல, கடக ஸ்ருதிகளையும் கவனித்து பாஷ்யம் பண்ணுவது தனி வகை! :)

    அது போலத் தான், இந்த Doctrinal Differences!
    இது தேசிகர், மாமுனிகள்-ன்னு எல்லா ஆச்சார்யர்களுக்கும் நல்லாவே தெரியும்! அதனால் தான் அவர்கள் காலங்களில் பேதமோ, டைப் டைப்பா நாமம் இட்டுக் கொள்வதோ, உங்க ஏரியா/எங்க ஏரியா போன்ற அரசியலோ வரவில்லை!

    இந்தப் பேதங்கள் எல்லாம் 18ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த அரசியல்!

    வியாக்யானங்களைக் கருத்தாப் பார்க்காமல், அதைச் சொன்ன ஆட்களாகப் பார்த்ததன் விளைவு தான் இத்தனையும்!

    வியாக்யானங்களையும் சரியாப் புரிஞ்சிக்காம,
    படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்-ன்னு ஊர்ல சொல்லுறாப் போல...
    சில ஞான-கர்ம வித்வத் சிகாமணிகள், பாட்டைக் கெடுக்கறதுகள்! :))
    ------------------------------
    சரி போகட்டும்! தம்பி ராகவ் கேட்ட கேள்விக்கு வருவோம்!

    //தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது..//

    தாயாரால் + தனி, என்பதே முதலில் கிடையாது!
    அகலகில்லேன் இறையும் என்பதே தமிழ் வேதம்! வேத வாக்குக்கு மறு பேச்சு இல்லை! அது எந்த வியாக்யானம் ஆகட்டும்! :)

    அது, தென்னாச்சார்யமே ஆகட்டும் - அதில் கூட ஒரு மிதுனமே உத்தேச்யம் என்றே வசனம்!
    அதாச்சும் தாயார்-பெருமாள் = ஒரு மிதுனம்! இருவர் கிடையாது!
    முடிஞ்சா, இதை வாசிச்சிப் பாருங்க! ஸோ கால்டு தென்னாச்சார்யவங்க எழுதினது தான்! :)
    http://acharya.org/books/pBooks/PBA/OruMithunam-PBA.pdf

    அப்பறம் எப்படி இந்த //தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது// என்பது வந்தது?
    அட...இராமானுசர் கை காட்டுறவங்க எல்லாருக்கும் மோட்சம்-ன்னு ரெண்டு தரப்புலேயும் ஒத்துக்கறாங்க! லீலா விபூதி, நித்ய விபூதி - இரண்டுமே உடையவர் கிட்ட-ன்னு சிலாகித்துக் கொள்பவர்கள்...

    இராமானுசரே மோட்சம் காட்ட முடியும்-ன்னா, ஏன் தாயாரால் மட்டும் முடியாது-ன்னு ஒக்க நிமிஷம் யோசிச்சிப் பார்ப்பாங்களா? :))

    ReplyDelete
  39. //ஒவ்வொருவர் வீட்டுக் கல்யாணங்களிலும் சில நிகழ்ச்சிகளைப் புரோஹிதர் அந்த வீட்டுப் பெண்கள் வழக்கப்படி செய்யச் சொல்வார்கள் அல்லவா.. அதற்கு கல்யாண மந்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதா.. Any fill in the Gaps ?//

    சுற்றி வளைத்துப் பதில் சொல்ல முயல்கிறேன்:

    நம்மாழ்வார், வைணவம்/சைவம் தவிர, 6 மதங்களை அவர் குறிப்பிடுகின்றார்!

    ‘விளம்பும் ஆறு சமயமும்*
    அவையாகியும் மற்றும் தன்பால்*
    அளந்து காண்டற்கு அரியனாகிய*
    ஆதிப்பிரான் அமரும்*
    வளங்கொள் தண்பணை சூழ்ந்தழகாய*
    திருக்குருகூர் அதனை*
    உளங்கொள் ஞானத்து வைம்மின்*
    உம்மை உய்யக் கொண்டு போகுறிலே

    என்கிறார் (திருவாய் 4-10-9)

    அந்த ஆறு சமயங்கள்:
    - சாக்கிய (பௌத்தர்) மதம்,
    - உலூக்கிய (சார்வாகர்)மதம்,
    - அக்‌ஷபாத (கௌதமர்) மதம்,
    - க்ஷபண (ஜைன) மதம்,
    - கபில (சாங்கிய) மதம்,
    - பதஞ்சலி மதம்.

    பதஞ்சலி மதத்தில், மற்ற சடங்குகள் இன்று குறைந்து, அவர் சொல்லிய ‘YogA' மட்டுமே நிலைத்து உள்ளது!

    கபிலரும், விஷ்ணுவின் அவதாரமே என்று பாகவதம் கூறும். அவர் தன் தாயாருக்கு உபதேசம் செய்தது தான் சாங்கியம்/கபில (மதம்)!!

    இன்று நம் சினிமாக்களில் ’சாங்கியம்’ என்பதற்குக் கொடுக்கப்படும் பொருளை நினைத்தால் மயக்கம் வரும்!

    ஒரு Vivek Comdey-ல், கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடத்தினால், மழை வரும் என்று சாங்கியத்தில் சொல்லியிருப்பதாக வரும் - இதெல்லாம் எந்த சாங்கியம், எந்த வேதம், என்று அடிக்கடி வியப்பதுண்டு!

    காலப் போக்கில், அந்த ’மதங்கள்’, உதித்த இடத்தில் இருந்து பரவி, கலந்து, மாறுபட்டு வந்துள்ளது!

    இன்று சொல்லப்படும் ’மதங்களுக்கும்’, வேத கால மதங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது!

    எனவே, திருமணம் மட்டுமன்றி, நம்முடைய மற்ற ’மதச்’ சடங்குகளுக்கும், காலத்தின் கோலத்தினால் ஏற்பட்ட மற்ற மாற்றங்களுக்கும், வேதச் சான்றுகள், மந்திரங்கள் இருக்காது என்பது அடியேன் எண்ணம்!

    ReplyDelete
  40. //அழகாகச் சிரிக்கும் மாப்பிள்ளையைக் காட்ட வந்த இடத்தில்...
    ஏன் கோதை, கோபம் கொண்ட யானையை உதாரணம் ஆக்க வேண்டும்? காய்சின மா களிறு அன்னான்!

    யாரேனும் தெரிஞ்சவங்க சொல்றீயளா? :)//

    கல்யாணத்தில், முதலில் அனைவரும் பார்க்க விரும்புவது, ஆண்/பெண் பொருத்தம் தான்! இதில், ஆணிடம் பார்த்தவுடன் எதிர்பார்ப்பது, கம்பீரம், பெண்ணிடம் எதிர்பார்ப்பது நளினம்!

    இதனை ஆண்டாள் சொல்லும்போது, அருமையான யுத்தியைக் கையாளுகிறாள்!

    தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வெட்கம்! எனவே, தன் கணவனைப் பற்றிச் சொல்கிறாள்!

    கண்ணன், தன்னைக் கைப்பற்றிய உடனேயே ’நான் அவன் இதயத்தில் சிறைப்பட்டு, அடங்கினேன்’ என்று கூறுகின்றாள்! எப்படி?

    நான் ஒரு மதம் கொண்ட (கம்பீரமான) ஒரு பெண் யானை! அவன் தன் கையைப் பற்றிய உடனேயே, ஒரு மதம் கொண்ட ஆண் யானையிடம், மதம் கொண்ட பெண் யானை அடங்குவது போல் தானும் அடங்கியதாகக் கூறுகின்றாள்!

    இதைச் சொல்லவே, கண்ணன், ‘காய் சின மா களிறு’ என்கிறாள்!

    இங்கு ’கோபம் கொண்ட பெரிய யானை’ எனும் பொருளை விட, ’கம்பீமான ஆண் யானை’ எனும் பொருள் அதிகம் பொருந்தும்!

    மதம் கொண்ட ஆண் யானையும், பெண் யானையும், மிகச் சிறப்பான பொருத்தம் தானே?

    ReplyDelete
  41. முக்கியமானத சொல்ல மறந்துட்டேன்..

    பிறந்த நாள் வாழ்த்துகள் ரங்கன் அண்ணா!!

    பந்தலில் தோரணம் கட்டி !!
    நரசிம்மத்தை நேரில் காட்டி !!
    பதிவுகளில் வாரணமாய் முழங்கி !!
    எங்களை வியப்பில் ஆழ்த்தும் அரங்கனாரே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் !!

    ReplyDelete
  42. அதானே...
    என்ன ராகவ், லேட்டா announce சேஸ்தானு?
    பதிவில் படம் ஒட்டும் போதே, இதையும் ஒட்ட வேண்டியது தானே? :))

    Happy Birthday Rangan Anna!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


    கைங்கர்ய ஸ்ரீயிலே களித்து, இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  43. ரங்கன் அண்ணா
    * திருப்பதி லட்டு வடையைப் பதிவில் வைங்க!
    * அண்ணி செஞ்ச பிறந்தநாள் விசேட பட்சணங்களைப் பதிவில் வைங்க! :))
    * ஆண்டாள் கல்யாணத்துக்கு தான் சாப்பாடு போடலை! பிறந்த நாளுக்காச்சும் பார்ட்டி வைங்க! :)

    # அனைத்து பந்தல் வாசகர்கள் சார்பாகவும்...

    # குல முதல்வன் காரி மாறன் - நம்மாழ்வார் சார்பாகவும்
    # எம்பெருமானார் இராமானுசர் சார்பாகவும்
    # ஆழ்வார் ஆசார்யர்கள், நாயன்மார்கள் சார்பாகவும்
    # குமரன் அண்ணா தலைமையிலான தொண்டர் குழாங்கள் சார்பாகவும்

    # என் தோழி கோதை சார்பாகவும்
    # என் ஆருயிர் முருகன் சார்பாகவும்
    Wish you a very Happy Birthday! :)

    ReplyDelete
  44. //தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது//

    ரொம்ப ஆசார்ய வியாக்யானமா இல்லாம, பொதுவாச் சில கருத்துகளைச் சொல்றேன்!
    கொஞ்சம் அதிரடியா இருந்தாலும், கேஆரெஸ் சொன்னதா எடுத்துக்கிட்டு, வழக்கம் போல் மன்னிச்சி விட்டுருங்க! :))

    வேணும்-ன்னா ஆச்சார்ய விளக்கமும் பின்னால் வைக்கிறேன்! அது மணிப்ரவாளமா இருக்கும்! வியாக்யானத்தைப் படிக்கவே வியாக்யானம் தேவைப்பட்டு, சில படிச்சதுகள் பாட்டைக் கெடுத்தாப் போல ஆயீரும்! :)

    அதான் இயல்பான சிந்தனையா, சம்பிரதாயத்தில் இல்லாதவர்க்கும் எளிமையாப் புரிவது போல்...முதலில் சொல்லிட்டு...அப்பறம் வியாக்யானம்...ஓக்கேவா? :)
    --------------------

    //தாயாரால் தனியாக மோட்சம் தரமுடியாது!//

    இது எப்படீ-ன்னா...உலகத்து அம்மா தனியாகக் குழந்தை பெத்துக்க முடியாது! :))))

    இப்படிச் சொல்வதால், அம்மாக்களை எல்லாம் குறைச்சிச் சொல்லிட்டதா ஆகி விடாது! அப்படி எடுத்துக்கிட்டு பாட்டைக் கெடுக்கவும் கூடாது! :) Pl remember Desikan's words - வாக்ய பேதம் மட்டுமே உள்ளது!

    அம்மா-அப்பா இருவரும் "சேர்ந்து" தான் குழந்தை பெத்துக்க முடியும்! மோட்சம் தர முடியும்! :)))
    --------------------

    அப்படீன்னா, எம்பெருமான் தனித்து மோட்சம் கொடுக்க முடியாது-ன்னும் சொல்ல வேண்டியது தானே?-ன்னு அடுத்த கேள்வி வரும்! :))

    ஏன்-ன்னா அந்தக் கேள்வியின் நோக்கத்தில்: யார் பெரியவர் என்ற ஆராய்ச்சி/ஞான/வித்வத் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு! அதுனால தான் இம்புட்டு பிரச்சனை! :)

    எம்பெருமானும் "தனித்து" மோட்சம் கொடுக்க மாட்டான்! அப்படி அவனால் இயலுமா-ன்னு அவனுக்கே தெரியாது! :) அவள் புருஷகாரம் செய்ய, அவளைப் பற்றித் தான் அவனும் மோட்சம் அளிப்பான்!

    எப்படி?
    த்வய மந்திரம் "மனசார" தெரிஞ்சா, இந்தக் கேள்வியே எழாது!
    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீமதே நாராயணாய நம:

    இப்படி ஸ்ரீயுடன் கூடிய நாராயணனே தஞ்சம் = உபாயம்!
    ஸ்ரீயுடன் கூடிய நாராயணனுக்கே நான் = பலன்!

    இப்படி உபாயமும்+பலனும் = ஸ்ரீயுடன் கூடிய நாராயணனாகவே சொல்லப்படுகிறது! "தனியாக" என்ற பேச்சுக்கே இடமில்லை!

    அவன் தனியாகவும் தர முடியும் என்றால்...
    * ஸ்ரீயுடன் கூடிய நாராயணனே தஞ்சம் என்று முதல் வரியில் உபாயம் மட்டும் சொல்லிட்டு...
    * ஓம் நாராயணாய நம: என்று சொல்லி இருக்கலாமே?

    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
    ஓம் நமோ நாராயணாய நம:-ன்னு சொல்லி இருக்கலாம் தானே? எதுக்கு பலனைச் சொல்லும் போதும் ஸ்ரீமதே நாராயணாய நம:?

    :)
    புரியுதா ராகவ்? :))

    ReplyDelete
  45. //Happy Birthday Rangan Anna!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    //

    Thanks KRS & Raghavan!

    ReplyDelete
  46. //அண்ணி செஞ்ச பிறந்தநாள் விசேட பட்சணங்களைப் பதிவில் வைங்க! :))//

    அண்ணே!

    இன்று அண்ணி எதுவுமே செய்யல! இன்று எல்லாமே பெருமாள் பிரசாதம் தான்!

    ReplyDelete
  47. KRS

    //# அனைத்து பந்தல் வாசகர்கள் சார்பாகவும்...

    # குல முதல்வன் காரி மாறன் - நம்மாழ்வார் சார்பாகவும்
    # எம்பெருமானார் இராமானுசர் சார்பாகவும்
    # ஆழ்வார் ஆசார்யர்கள், நாயன்மார்கள் சார்பாகவும்
    # குமரன் அண்ணா தலைமையிலான தொண்டர் குழாங்கள் சார்பாகவும்

    # என் தோழி கோதை சார்பாகவும்
    # என் ஆருயிர் முருகன் சார்பாகவும்
    Wish you a very Happy Birthday! :)//

    இதுவரை இப்படி ஒரு பிறந்த நாள் வாழ்த்து கிடைத்ததில்லை! மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  48. அடுத்து
    மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சொல்லும் போதும் கூட...

    "தனியாக",மோட்ச இஸ்யாமி கிடையாது!
    "மாம்" என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டுகிறான்! = வக்ஷஸ்தலமான அவள் இருக்கும் நான்...

    எங்களை = ஏகம் = ஒரு மிதுனமே உத்தேச்யம்
    அப்படிப்பட்ட எங்களை = ஏகம் சரணம் வ்ரஜ!
    சர்வ பாபேப்யோ மோக்ஷ இஸ்யாமி! = இதுவே சரமப் பொருள்!
    ----------------------------

    இப்படி தாயாரால் "தனித்து" மோட்சம் தர முடியாது என்றோ...
    எம்பெருமானால் "தனித்து" மோட்சம் தர முடியும் என்றோ...
    ஒரு பேச்சும் இல்லை!
    "அகலகில்லேன்" என்னும் போது, "தனித்து" எங்கே வந்தது? :)

    அப்பறம் எப்படி தென்னாச்சார்யத்திலே அப்படிச் சொன்னார்கள்?

    வாக்ய பேதம் தான்! அவர்கள் அப்படிக் "கருதாததை" கூட நாம் "சொன்னதாக" எடுத்துக் கொண்டோம்! :))

    When a child brings his progress report, mother can sign, father can sign!
    Mother asks Father to sign!
    But everybody knows, that damn Father would NOT have signed, if Mother would not have stepped in :)))

    Why not both sign & "demonstrate" to the school that they are equal opportunity couple? :)

    Simply bcoz there is only one small column for signature! :)
    And more bcoz, the purpose is
    * NOT to "demonstrate" their own ideal love life
    * But to "concern" for the child!

    ஹரி: ஓம்!

    ReplyDelete
  49. //இதைச் சொல்லவே, கண்ணன், ‘காய் சின மா களிறு’ என்கிறாள்!

    இங்கு ’கோபம் கொண்ட பெரிய யானை’ எனும் பொருளை விட, ’கம்பீமான ஆண் யானை’ எனும் பொருள் அதிகம் பொருந்தும்!

    மதம் கொண்ட ஆண் யானையும், பெண் யானையும், மிகச் சிறப்பான பொருத்தம் தானே?//

    ’கைப்பற்றி’ என்ற வார்த்தைகளுக்கு, விசேஷ அர்த்தமாக, பெரியவாச்சான் பிள்ளை, ‘சிறைப்பட்டாள்’ என்கின்றார்!

    ReplyDelete
  50. ரத்தினச் சுருக்கமாக...

    தாயாரால் "தனித்து" மோட்சம் தரும் நிலை இல்லை என்று சொல்லிய "வாக்கியத்துக்காகவே"...
    அவனால் மட்டும் "தனித்து" தர முடியும் என்ற அர்த்தம் ஆகி விடாது!

    = வாக்ய பேதம்!

    தென்னாச்சார்யத்திலே அப்படிக் காட்டப்படவில்லை!
    காட்டப்படுவது என்னவென்றால்...
    * அவள் அகலகில்லேன் என்பதால் அவள் "தனித்து" பலன் ஆக மாட்டாள்! ஆக விரும்புவதும் இல்லை!
    * அவளைப் பின்னிறுத்தி, அவனை முன்னிறுத்தி, அதை எப்படிச் செய்வது என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள் - அவள் முதல் ஆச்சார்யள் ஆகையாலே!

    இப்படி
    * ஸ்ரீமதே நாராயணாய = பலனில் = அவளைப் பின்னிறுத்தி அவனை முன்னிறுத்திக் கொள்கிறாள்!
    * ஸ்ரீமன் நாராயண சரணெள = நாமத்தில் = அவனைப் பின்னிறுத்தி அவளை முன்னிறுத்திக் கொள்கிறான்!

    இதுவே சம்பிரதாய நுட்பம்!
    மத்தபடி எந்த வாக்ய பேதமும், இதற்கு உட்பட்டே! அது எப்பேர்பட்டவரின் வியாக்யானமாய் இருந்தாலும் கூட!

    எனவே "தனித்து" என்ற பேச்சே இல்லை!
    "அகலகில்லேன்" என்பதே பேச்சு! மூச்சு!

    அவளைப் போலவே நம்மைப் பின்னிறுத்துவோம், அவனை முன்னிறுத்துவோம்!


    ஸ்ரீஹரி: ஓம்!

    ReplyDelete
  51. On a lighter note...
    ஸோ கால்டு தென்னாச்சார்யத்திலே, ஒரு முறை மட்டுமே வீழ்ந்து வணங்கல் இருக்கும்! பல முறை சேவித்தல் என்ற விதிக்கு கட்டுப்படாத "ஆணவமாகவும்" இதைப் பார்க்கலாம்! இல்லை "ஐயோ, நம் குழந்தை இத்தனை முறை விழுந்து வணங்கினாத் தானா நாம அருளணும்? ஆ-வா" என்று அவன் கருதுவதாகவும் பார்க்கலாம்! :))

    தேசிகர் சொன்னதே தான்! Just வாக்கிய பேதம்! :)
    அதே போல் தான் இந்த So Called "Powers" Of SriMahaLakshmi! :))

    நுட்பம் மறைஞ்சி போயி,
    பதினெட்டாம் நூற்றாண்டு துவக்கமாக...
    பவர் பாலிடிக்ஸில்...
    வியாக்யானத்தையே வியாக்யானம் பண்ணிப் பண்ணி...
    இரண்டு கோஷ்டி வியாக்யானமாகப் போய்விட்டது! :((

    மற்றபடி...
    * பொது வேதமான திருவாய்மொழியை மீறி,
    * அகலகில்லேனை மீறி,
    * தர்சனத்திலே எப்பேர்பட்ட தென்னாச்சார்யமோ, வடவாச்சார்யமோ, ஒன்னும் நில்லாது!

    நேய நிலைக் கதவம்
    நீக்கேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  52. 1.04.2010
    பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ரங்கன் ஐயா!
    பெருமாள் அடியார்வர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

    ReplyDelete
  53. ரொம்ப நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். அதோடு தொடர்புடைய படங்களும் அருமை.

    நன்றிகள் பல.

    ReplyDelete
  54. பிறந்த நாள் வாழ்த்துகள் ரங்கன் அண்ணா. பிறந்த நாளன்று மிகப் பொருத்தமான அருமையான பகுதியை எழுத கொடுத்து வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  55. எங்கே இந்த இடுகையிலும் வாரணம் = யானை / சங்கு என்ற பேச்சே பெரிதாகிப் போய்விடுமோ என்று பயந்தேன். இராகவன் நல்ல கேள்வியாய் கேட்டு திசை திருப்பினார்! நன்றி இராகவ்!

    ReplyDelete
  56. லக்ஷ்மி நரசிம்மர் படம் அருமை.

    ReplyDelete
  57. குமரன்

    //பிறந்த நாள் வாழ்த்துகள் ரங்கன் அண்ணா. பிறந்த நாளன்று மிகப் பொருத்தமான அருமையான பகுதியை எழுத கொடுத்து வைத்துள்ளீர்கள்.//

    நன்றி!

    ReplyDelete
  58. சரவணன்,

    //ரொம்ப நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். அதோடு தொடர்புடைய படங்களும் அருமை.

    நன்றிகள் பல.//

    நன்றி.

    ReplyDelete
  59. ராஜேஷ்

    //பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ரங்கன் ஐயா!
    பெருமாள் அடியார்வர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  60. குமரன்

    //எங்கே இந்த இடுகையிலும் வாரணம் = யானை / சங்கு என்ற பேச்சே பெரிதாகிப் போய்விடுமோ என்று பயந்தேன்.//

    இந்தப் பயம் வேண்டாம்! இரு அடியார்களின் கருத்துப் பரிமாற்றம் தவறில்லை. அது, அவர்களின் சொந்த ‘Ego' பிரச்சனையாக மாறினால் தான் பயப்பட வேண்டும்!

    ReplyDelete
  61. வலை அன்பர்களே!

    //Athu enna 7 pirappu villakavum- nandri//

    இதற்கு விளக்கம் தருகிறீர்களா?

    ReplyDelete
  62. Anony said:)))
    /Athu enna 7 pirappu villakavum- nandri//


    அனானி அவர்களே!

    எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஸ்ரீமன் நாராயணனே நமக்கு
    பற்று. சொந்தம் . அவனுக்கு நாம் . நமக்கு அவன் .என்று இருக்க ஆசை படனும் .
    இதுதான் உட்கருத்து. .

    என்ன 7 பிறவிகள் என்பதேல்லாம் அவசியமே இல்லை.
    தெரிந்தும் ஒன்றும் ஆக போவதில்லை .

    பிறவாமை வேண்டும்
    பிறந்தால் நாராயணனை மறவாமை வேண்டும்.இதை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்

    மிக்க நன்றி.

    ReplyDelete
  63. //When a child brings his progress report, mother can sign, father can sign!
    Mother asks Father to sign!
    But everybody knows, that damn Father would NOT have signed, if Mother would not have stepped in)))

    "Why not both sign & "demonstrate" to the school that they are equal opportunity couple? :)

    Simply bcoz there is only one small column for signature! :)
    And more bcoz, the purpose is
    * NOT to "demonstrate" their own ideal love life
    * But to "concern" for the child!"//
    Wow!
    I must add that I'm enjoying the comments' area as much as the blog posts themselves.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP