Showing posts with label சித்தர். Show all posts
Showing posts with label சித்தர். Show all posts

Sunday, January 25, 2009

தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)
வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!

தேவாரப் பதிவுகளில்....இது வரை
* சம்பந்தர் - முதல் தேவாரம்,
* அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,
* சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,
* மணிவாசகர் - தமிழ் அர்ச்சனை!,
* காரைக்கால் அம்மையார் - பெண் தேவாரம் - Icon Poetry!
என்று சில பதிகங்களைப் பார்த்தோம்!

அப்படியே...
* தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!
* நாயன்மார்கள் 63 or 72?
என்றும், தொகையடியார் பற்றிய சில குறிப்புகளையும் பார்த்தோம்! மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் ஒருவர் இல்லை என்ற ஒரு தகவலும், அதற்கு சில பெரியோர்கள் அளித்த விளக்கமும் இன்னும் பல் சுவை கூட்டின!

இன்னிக்கி பார்க்கப் போறது, கருவூர் சித்தரின் தேவாரம்!

ஆகா...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா! :)

அட, கருவூர் சித்தர் தேவாரம் பாடியிருக்காருங்க! பார்க்கலாமா?
ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பை மனசில் வாங்கிக்குங்க! முன்பே சொன்னது போல்...
* நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடிய அத்தனை பேரும் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்! (அமுதனார் என்ற பின்னாளைய கவிஞரைத் தவிர)!
* ஆனால், 63-உள் இருப்பவர்கள் அத்தனை பேரும், தேவாரம் பாடி இருக்கணும்-ன்னு அவசியமில்லை! அதே போல தேவாரம் பாடியதாலேயே, 63-உள் வைக்கப்படணும் என்ற அவசியமும் இல்லை!

* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்!
* அதே போல், சேந்தனார், கருவூர் தேவர் போன்றவர்கள் 63-உள் இல்லை! ஆனால் இவர்கள் தேவாரம் பாடி உள்ளார்கள்!


அன்றைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! இன்னிக்கி கரூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்!
அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! இன்று சொல்லப் போவதில்லை! இன்னொரு நாள்!

* இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)
* இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக் கோனே என்று பாடல்கள் பாடியவர்)

குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள்? பெருமாளை வணங்குவார்களா என்ன? :)
நம்மாழ்வார் திருவாய் மொழியைத் "தமிழ் வேதம்" என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தர் தான்! இதோ!

சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் "தமிழ் வேதம்" என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம் மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்!
கருவூர் சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)



அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)! மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்!

ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)!

பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒரு சிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை! அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒரு தடங்கலா?

சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம் தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா?
ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது இதற்குத் தானா?
அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச் சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்!

இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்!

தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது!
ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த...மருந்து இறுக, இறுக...

தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!!
மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்!


பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!

அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தானா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்!

அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்.......
* தமிழோசை வேகமாய் முன் செல்ல,
* இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
* இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல், வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர...

வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில் பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே?
அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்!

அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே!!!

ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு!
அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்!

தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!

கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா?
பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்!

அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ?
அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்..."ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு"!


தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம்


திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில் வந்து விழுகிறது!
"அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்! சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே!

மறுநாள் காலை... கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது!
கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல...பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா?

அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, "இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி", என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்!
அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க...திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்!

கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு!
ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!

கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்!

அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை எளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!

தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூர் சித்தர் சன்னதி!


கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி!
இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது!
தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!


வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்! தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை!

பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! "திருவிசைப்பா" என்று போற்றப் படுகிறது!

அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!



பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
பவளமே திருவுடம்பு! அதனில்

தவளமே களபம்! தவளமே புரிநூல்!
தவளமே முறுவல் ஆடு அரவம்!


துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே!


* ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு!
* ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு!
இப்படிச் சிவப்பும் - வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்ன....

* துவளும் மேகலை (ஒட்டியாணம்), சேலைத் துகில், துடிக்கும் இடுப்பு = இப்படி மூன்றுமான முக்கண்ணி, "ஒருத்தியாய்" நிற்கிறாள்! = அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!
* அவளே நின்று விட்ட படியால், இனி அவரும் நின்று விடுவார்! எங்கே?
திருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!

அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!
பவளமே மகுடம்! தவளமே களபம்!!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!
Read more »

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

சங்கப் பலகையில் ஓலையை வைத்தவுடன், அது என்ன செய்தது? அள்ளியதா இல்லை தள்ளியதா? இதோ முந்தைய பதிவு.

தள்ளியது!...
என்ன தள்ளியதா? - ஆமாம்...பலகையின் மீது ஏற்கனவே இருந்த நூல்களை எல்லாம் கீழே தள்ளிக் கொண்டது!
திருவாய்மொழியை மட்டும் அள்ளிக் கொண்டது!
இதைக் கண்ட மக்கள் எல்லாரும் "ஆகா"காரம் செய்ய, ஆகாரம் ஆனது மன்னுயிர்க்கு எல்லாம், இந்தத் திருவாய்மொழி!

சங்கப் புலவர்கள் எல்லாரும் திகைத்துப் போய் விட்டனர்.
இது தமிழ் மறை தான் என்று முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்ச் சங்கம் இதை ஏற்றுக் கொண்டு, தனது நூற் களஞ்சியத்திலே சேர்த்துக் கொண்டது!
சங்கப் புலவரின் தலைவர், மதுரகவிகளை அணைத்துக் கொண்டார்!
தவறுக்கு வருந்தி, கண்ணிர் மல்கி, ஒரு ஆசு கவி பாடிச் சிறப்பித்தார்!

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?

பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,
ஓவாது உரைஆயிரம் தமிழ் மாமறையின்
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!

(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)

நம்மாழ்வார் புளியமரக் காட்சித் திருகோலம் - ஆழ்வார் திருநகரி

புலவர்கள் அனைவரும் முழு மனதுடன், விழாவை மீண்டும் நடத்திக் கொடுத்தனர்!
அன்றில் இருந்து இன்று வரை, முன்பு சொன்ன கட்டியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு தான், எல்லா ஆலயங்களிலும் நம்மாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது!


அட, எல்லாம் சரி!
திருவாய்மொழி வைணவப் பாட்டாச்சே! அதைப் போய் மற்ற மதங்களும் சமயங்களும் எப்படிப் படிப்பாங்க?
இப்படித் தான் சில சைவர்கள் கேட்டார்களாம்,
இடைக்காட்டுச் சித்தர் என்னும் சிவநெறிச் செல்வரிடம்.
இவர் யாருன்னு தெரிகிறதா? தாண்டவக் கோனே, தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!

அவரு, ஒரு படி மேலே போய்,
"ஐயா...இது தமிழ் வேதம். வேதத்துக்கு சிவன் என்றோ, திருமால் என்றோ, அம்பாள் என்றோ பிரிவு உண்டா?...வாங்க எல்லாரும் படிக்கலாம்", என்று கேட்டவர்களுக்கு வகுப்பே எடுக்கத் துவங்கி விட்டாராம்!
அவர் செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டைப் (தனியன்) பாருங்க!

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து


(பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும் ,
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்! ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!)


இப்படிச் சைவ நெறிச் சீலர்களின் மனங்களையும் கவர்ந்தவர் நம்ம நம்மாழ்வார்!
முருகனின் வைகாசி விசாகத்தில் பிறந்த அந்தக் கொழுந்து.
அது செய்த தமிழைச், சைவரும் விரும்பியதில் வியப்பில்லையே!
இறைவனே இப்படித் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறார்! நாம் தான் மெத்தப் படித்து விட்டு, சொத்தை வாதங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்!
சொத்தை வாதங்களால், பெருஞ் சொத்தை இழந்து கொண்டிருக்கிறோம்! :-)

நம்மாழ்வார் அடிநிலையில் இருக்கும் சடாரி


இடைக்காடர், சைவத்தில் இருந்து கொண்டு வைணவத்தைப் புகழ்ந்தார்...சரி தான்!
அதே போல், வைணவம் சைவத்தைப் புகழ்ந்துள்ளதா?
- இது நல்ல கேள்வி!
வைணவத் தத்துவத்துக்கே தலைவரான நம்மாழ்வார், சிவபெருமானை வணங்கி வாழ்த்துவதைப் பாருங்கள்!

அற்றது பற்று எனில் உற்றது வீடு என்று பாடிய நம்மாழ்வார், அந்தப் பற்றை எப்படி அறுத்தார்?
பெருமாள், பிரமன், சிவன் என்று அனைவரையும் அழுது தொழுது, பற்றை அறுத்து, வீடு பெற்றாராம்!
இதை, இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல, அக்காலத்தில் எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்?:-)

அது என்ன பற்று?
இருப்பதிலேயே மிக பயங்கரமான பற்று, உன் சமயம் தாழ்த்தி, என் சமயம் உசத்தி என்ற பற்று.
வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளா விட்டாலும்,
அடி மனம் அதை அசை போட்டு மகிழ்வதில் ஒரு ஆனந்தம் காணுமாம்! அந்தப் பற்று... அது அற்றது பற்று எனில், உற்றது வீடு!

அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


இது திருவாய்மொழியின் நிறைவுப் பாடல்! அதில் மறக்காமல் சிவனையும் சேர்த்துப் பாடித், தமிழ் மறையைப் பொது மறை ஆக்குகிறார் நம்ம ஆழ்வார்!
முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்றும் அதற்கு முன்னால் பாடிப் பரவுகிறார்!


பொதுவாக வைணவர்கள் தீவிரப் பற்றாளர்கள் என்ற ஒரு வழக்கு உண்டு! அவர்கள் மதுரைக் கோவிலுக்குப் போனாலும்,
மீனாட்சியை மட்டும் தரிசித்து விட்டு, வந்து விடுவார்கள் என்றும் சொல்லுவர்.
அதெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரே! மிக மிகச் சொற்பம்!
உண்மை என்னவென்றால், திருச்சின்னங்களான சங்கு சக்கர முத்திரை பதித்துக் கொண்டவர்கள், அந்த விரதப்படி, சிவனார் ஆலயங்களில் வீழ்ந்து வணங்க மாட்டார்கள்! அவ்வளவு தான்!

ஒருமுறை வாரியார் சுவாமிகள், காஞ்சி மாமுனிவர் - மகா பெரியவருடன் கலந்துரையாடப் போய் இருந்தார்.
பெரியவரைக் கண்டவுடன், அவர் காலில் வீழ்ந்து வணங்க முற்பட,
பெரியவர் பதறிப் போய், வாரியாரைத் தடுத்து நிறுத்தினார்.
"மார்பிலே சிவலிங்க மணியைத் தரித்திருக்கும் வீரசைவன் நீ...சிவாலயங்கள் தவிர இப்படிப் பிற இடங்களில் கீழே விழுந்து, சிவலிங்கம் நிலம்பட வணங்கக் கூடாது.
இது தெரிந்தும் என் முன்னே நீ விழலாமா?", என்று வாரியாரைச் செல்லமாகக் கடிந்து கொண்டாராம்.
இதே தான் சங்கு சக்ர முத்திரை பதித்துக் கொண்டவர்க்கும்!

ஆனால் "வைணவர்கள் எல்லாம் தீவிரப் பற்றாளர்கள், பா", என்று சொல்லிச் சொல்லியே, வைணவரிடம் காரியம் சம்பாதித்துக் கொண்டு,
ஆனால் மனத்தளவில் மறந்தும் புறந் தொழாச் சைவர்களும் உண்டு :-)
இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் சைவர், வைணவர் இருவருக்குமே...ஏன்.....மற்ற எல்லாருக்குமே,
நம்மாழ்வார் சொல்லிக் கொள்வதைக் கேளுங்கள்!

சங்கர நாராயணர்

வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே


வணங்கும் துறைகள் = ஒரு மாபெரும் குளம்/ஏரி...
அதன் ஒவ்வொரு பக்கமும் ஒரு துறை...
தனக்குச் சொந்த ஊர் என்பதால், அந்த ஊர்த் துறையில் வசதியாகத் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான் ஒருவன்!
அதற்காக, பக்கத்துத் துறையின் தண்ணீரைப் பழித்துப் பேசுவானா?
அப்படியே பழித்துப் பேசினால், அது அந்தத் தண்ணீரின் குற்றமாகி விடாதா?
அதே ஏரியின் தண்ணீர் தானே இங்கும்? அதனால் தான் "வணங்கும் துறைகள்" என்றார் ஆழ்வார்!

அப்படி நீரின் பிழை இல்லையானால், அது யாரின் பிழை?
"மதி விகற்பால்" பிணங்கும் சமயம் = அவரவர் மதி விகற்பு. அவரவர் அறிவுக்கு எட்டிய வரை கற்பனையான வாதம். தான் தோன்றித் தனம்

அவை அவை தொறும், "அணங்கும் பலபல ஆக்கி" = இது போதாதென்று அதற்குள்ளேயே இன்னும் பலப் பலக் கருத்துகள்/கொள்கைகள்.
தென்கலை/வடகலை...வீரசைவம்/சைவ சித்தாந்தம்...இப்படிப் பலப்பல!

நின்கண் வேட்கை எழுவிப்பனே = இவ்வளவு பிரிவுகளுக்கு இடையேயும், உன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, வேட்கை எழுவிப்பனே!

இது தான் திருவாய்மொழியின் சாரம்!
இப்போது சொல்லுங்கள், திருவாய்மொழியையும் நம்மாழ்வாரையும் வைணவத்துக்குள் மட்டும் அடக்கி வைக்க முடியுமா?

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளும் இன்று தான்!
புத்த பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமாவும் இன்று தான்!
இந்நாளில் தோன்றிய நம்மாழ்வார், எந்நாளும் காட்டிய வழி இது!

இந்த வைகாசி விசாகத்தில்,
நம்மையே ஏமாற்றித் திரியும் நம் மனதினுடைய ஓரத்தில்...இதை போட்டு வைப்போம்! எப்பவாச்சும் இருட்டில் மாட்டிக் கொள்ளும் போது, நந்தா விளக்காய் ஒளி கொடுக்கும்!

மன்னு பொருள் நால் வேதம் தமிழ் செய்தான் வாழியே!
மகிழ் மணக்கும் குருகையர் கோன் மலர் அடிகள் வாழியே!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!


என்னங்க, இந்தப் பதிவில் தத்துவக் கருத்துக்கள் மிகுந்து விட்டனவா?
அடுத்த பதிவில்...
நம்மாழ்வார், ராமானுசரை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு எடுத்து விட்டார். அந்தக் கதையையும், இன்னும் சில தித்திக்கும் பாசுரங்களையும் பார்ப்போம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP