Saturday, November 04, 2006

"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!
அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!
சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!
இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.

ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!
ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த போதும், அவர் கூடவே இருந்து, அவருக்குத் தொண்டு புரிவது என்பது வேறு!
அதுவும் வயதான காலத்தில், ஊஞ்சல் ஆடிக் கொண்டு, மஞ்சூரியன் ஃப்ரைஸ் சாப்பிட்டோ, இல்லை பஹாமாஸ் வெகேஷன் போயோ, ஜாலியாக இருக்கலாமே!
அதை விட்டு விட்டுத் தினமும் நாலு மைல் நடந்து தண்ணிக் குடம் சுமக்க தலையெழுத்தா என்ன?

சிற்றஞ் சிறு காலை; லேசான இருட்டு!
ஓத்தையடிப் பாதை; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; பயந்த தனி காட்டு வழிக்குத் துணை எம்பெருமான் நாமங்கள்!
வயதான ஒரு பெரியவர், தலை மேல் பெரிய தண்ணீர்க் குடம் சுமந்து கொண்டு கிடுகிடு என்று நடந்து செல்கிறார்......எங்கே? எதற்கு?
பாபவிநாசம் என்ற நீர்வீழ்ச்சி திருமலையின் மேல் உள்ளது. மிகப் பழமையானது; தூய்மையான, சுவையான, பாறை நீர்!!
அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் சன்னிதி நோக்கிச் செல்கிறார் அம்முதியவர்.
எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கும் (நீராட்டு/அபிஷேகம்), மற்றும் பூஜை தீர்த்ததிற்கும் அந்த நீர் மிகவும் உகந்தது!

"பற்றே ஒன்றும் இலேன்; பாவமே செய்து பாவியானேன்,
மற்றே ஒன்று அறியேன்; மாயவனே, எங்கள் மாதவனே.
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா,
அற்றேன் வந்துஅடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டு அருளே!"
என்ற திருமங்கை மன்னனின் பெரியதிருமொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டே, ஓடுகிறார் நம்பிகள்! மலை இறக்கம் ஆயிற்றே!

"தாத்தா கொஞ்சம் நில்லு!
களைப்பா இருக்காப் போல இருக்கு! கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்!"
யாருப்பா அது, இவ்வளவு காலையில்?...அட ஒரு வேடன்! தொழிலுக்குக் கிளம்பிட்டான் போல!
"அப்பா, இது எம்பெருமான் தீர்த்தம்! ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது! அதனால் ஒண்ணு பண்ணு!
இந்தா இதைப் பருகி விடு! ஒரு கல் தூரம் கூட இல்லை பாபவிநாசம்;
பருகி விட்டு, அங்கு போய் எனக்கு மீண்டும் புது நீர் எடுத்து வாப்பா!
நான் வயதானவன், மீண்டும் மேடு ஏறக் கஷ்டமாய் உள்ளது!
இன்னும் பல தூரம் செல்லணும்; நீ சீக்கிரம் வந்தால், எம்பெருமான் திருமஞ்சனம் தடையிலாமல் நடக்க ஏதுவாய் இருக்கும்!"

பாபவிநாசம்

ஆகாசகங்கை

"அட போ தாத்தா, தண்ணி கேட்டா கொடுப்பியா, அதை வுட்டுட்டு பெருசா கதை சொல்ற!
அதுவும் என்னை வேற வேலை வாங்குற!
நான் ஒண்ணும் தவிச்ச வாய்க்குத் தண்ணி கேக்கல! சும்மா தான் கேட்டேன்;
அது சரி, உன்னை அடிச்சுப் போட்டுக் குடத்தைப் புடுங்குனா நீ என்னா பண்ணுவே?"

நம்பிகளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! இவனிடம் என்ன பேசமுடியும்? பார்வையும் பேச்சும், தாகத்தால் தவிப்பவன் மாதிரியும் தெரியவில்லை!
விடுவிடு என்ற நடக்க ஆரம்பித்தார்.
விடுவானா ஆன்ம வேட்டையாளன்?
வேங்கடத்தான் அல்லவோ அவன்!
"யோவ் தாத்தா, நில்லு!" - "அப்பா, என்னைத் துரத்தும் தூரத்துக்கு, அந்தச் சுனை கிட்டத் தானே இருக்கு! வீண் அலம்பல் பண்ணாதப்பா"
"எனக்கு அடிச்சுப் புடிங்கித் தான் எப்பவும் பழக்கம்; ஏதோ வயசாளின்னு பாத்தா ரொம்ப தான் பண்ணுறியே"

மீண்டும் விடுவிடு நடை தான்! வேங்கடத்தான் வேடிக்கை வேட்கையாளன் ஆயிற்றே!
பார்த்தான்....வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்தான். குடத்தில் ஓட்டை!
நீர் பொத்துக் கொண்டு வருகிறது. பின்னாலேயே வந்து இரு கைகளாலும் பருகினான்!
நம்பிக்குச் சுமை குறைவது தெரிந்து, திரும்பிப் பார்க்க, அழுகையே வந்து விட்டது!
"அடேய், உனக்கு நீர் தரக் கூட நான் மறுக்கவில்லையே! இப்படிப் பாத்திரதையே உடைத்து விட்டாயே! இன்று திருமஞ்சனமாயிற்றே!
மீண்டும் சிரமப்பட்டு எடுத்து வந்தாலும், ஓட்டைக் குடம்; எல்லாம் வீணாகி விடுமே" என்று அழ ஆரம்பித்து விட்டார்!

வேடன் பார்த்தான். வயதானவரும் குழந்தையும் ஒன்றல்லவா?
அழக் காண அழகாகுமா?
வில் அம்பால் அங்குள்ள ஓர் உச்சியைத் துளைத்து நீர் பிரவாகம் செய்தான்!
"தாத்தா, இதோ பார் ஆகாச கங்கா தீர்த்தம்! இது நீர் விழ்ச்சி இல்லை என்றாலும், இதுவும் சுனை தான்!
இனி அவ்வளவு தூரம் நடந்து வருந்தாதீர்!
நீர், இதில் இருந்தே நீர் - எடுத்துச் செல்லும்!!
இதுவும் விஷ்ணுப் ப்ரீதியே! இதோ உம் குடம்", என்று சொல்லி மறைந்து விட்டான்.

நம்பிகள் வாயடைத்துப் போய் விட்டார். புதிய ஆகாச கங்கை நீர் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேரத் தாமதம் ஆனது!
அர்ச்சை ரூபத்தில் உள்ள இறைவன், அர்ச்சகர் மேல் ஆவேசித்து, காட்டு வழி நிகழ்ச்சியை அனைவரும் அறியுமாறு உரக்கச் சொன்னான்.
"தாத்தா" என்று என் வாயால் நானே விரும்பி அழைத்த திருமலை நம்பிகள், இனி "தாத்தாச்சார்யர்" என்றும் அறியப் படுவர் என்று அருளினான்!

தண்ணீர் அமுது உற்சவம்



திருமலை நம்பிகள்

மேலும் மழையினாலோ, இன்ன பிற காரணங்களாலோ, இந்தப் புதிய ஆகாச கங்கை தீர்த்தம் வரத் தாமதம் ஆனால் கூட,
கோவிலுக்குள்ளேயே இருக்கும் பொற்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கக் கடவது என்று வரையறுத்து அருளினான்!
அடியவர், பணி செய்கையில் கூட, எந்த இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்று எண்ணும் நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
"என்ன செய்வியோ, ஏது செய்வியோ (hook or crook); எனக்கு வேலை முடிய வேண்டும்", என்று சொல்லும் தலைவர்கள் மத்தியில்,
தலைவர்க்குத் தலைவன் அல்லவா நம் வேங்கடத்து அண்ணல்!
தயாசிந்து உடைய தயை சிந்தும் வள்ளல் அல்லவோ அவன்!

இன்றும் இந்த வேடுவன்-கிழவர் விளையாட்டை மார்கழி மாதத்தில் திருமலை மீது நடித்துக் காட்டுகிறார்கள். தண்ணீர் அமுது உற்சவம் என்று இதற்குப் பெயர்!
நீர் வண்ணா, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!



திருமலை நம்பிகள் குறிப்பு:
மேலே நாம் கண்ட திருமலை நம்பிகள் (ஸ்ரீசைல பூர்ணர்), ராமானுசரின் தாய்மாமனும் ஆவார். ராமானுசருக்கு அவ்வாறு பெயர் இட்டதே இவர் தான்;
இராமாநுஜன் = இராம+அநுஜன் = இராமனின் தம்பி = அதாவது இலக்குவன்!
ஆதிசேஷனின் அம்சமானதால் இவ்வாறு பெயர் சூட்டினார்.
(லக்ஷ்மண முனி என்ற பெயரும் இராமானுசருக்கு உண்டு-ஆதிசேஷன் தானே இலக்குவனாகவும், பின்னர் பலராமனாகவும், பின்னர் ராமானுசராகவும், அதன் பின் மாமுனிகளாகவும் வந்தது!)

ஆளவந்தாரின் சீடரான திருமலை நம்பிகள், திருவரங்கத்தில் இருந்து, பின்னர் கைங்கர்யத்துக்காக (இறைத்தொண்டுக்காக) திருமலையில் வந்து தங்கி விட்டார்.
இராமானுசருக்கு ராமாயணம் கற்பித்த குருவும் கூட!
திருமலை அடிவாரத்தில் நடந்த இந்த வகுப்புகளின் போது,
மதுரையில் இருந்து ராமனே - இலக்குவன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோருடன், விக்ரக உருவில் வந்தது தனிக்கதை!
பழுத்த வயதில், தொண்டில் சிறந்து, பின்னர் இறைவன் அடி சேர்ந்தார் நம்பிகள்!

ராமானுஜர் காலத் திருமலையில் முதற்குடிமகன்கள் என்றால் (First Citizens of Tirumala) அது திருமலை நம்பிகள், மற்றும் அனந்தாழ்வான் தான்!
அவர்கள் செய்த பணி தான், இன்று நாம் வசதியாகத் தரிசனம் செய்ய முடிகிறது!


ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில குறிப்பு:

பொற்கிணறு (தெலுங்கில்: பங்காருபாவி), தரிசனம் முடித்து வெளி வந்த உடனேயே தென்படும்.
படியேறி தீர்த்தம் வாங்கச் செல்லும் வழியில் உள்ளது இது.
அதை ஒட்டினாற் போல் உள்ள அறை தான் அன்னப்பிரசாதங்கள் செய்யும் சமையல் அறை (லட்டு செய்யும் இடம் வேறு).
அங்கு பெருமாளின் பசி போக்கிய தாயாகக் கருதப்படும் வகுளா தேவி, சிலை உருவில் இருக்கின்றாள்; இன்றும் சமையலை அவளே கவனிப்பதாக ஐதீகம்!

பொற்கிணறு

திருமலை நம்பிகள் வாழ்ந்த குடில், தெற்கு வீதியில் உள்ளது; ஊஞ்சல் மண்டபத்துக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் ஏறும் இடத்தில், இக்கோவிலைக் காணலாம்.
க்யூ வரிசையில் இருந்தே இதைப் பார்க்க முடியும்! கண்டு வாருங்கள் அடுத்த யாத்திரையில்!

38 comments:

  1. அருமை! அருமை!!

    கண் முன் நடப்பது போலிருந்தது...

    சனிக்கிழமை நாராயண தரிசனத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  2. என்ன, இப்படியெல்லாம் தண்ணி காட்டறார்?

    தாத்தாக்கு ரொம்பத்தான்.....

    அதான், ஆத்துலே கல்லாத்தூக்கிப் போட்டாச்சு:-)))

    இன்னிக்கு எங்க கோவிலில் துளசி கண்ணாலம். சா(ல)ளக்கிரம பூஜை.

    எனக்கு ஞாயித்துக்கிழமை நாராயண தரிசனம்:-)))


    கிளம்பிட்டேன், துளசி இல்லாமல் துளசிக்குக் கல்யாணமா?

    ReplyDelete
  3. திசைகளில் 'போதிமரம்' என்ற தொடர் இம்மாதிரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உருவானது. ஆயின், நடைமுறையில் இறை தரிசனம் என்பது காற்றுள்ள போது தோன்றும் நீராவி போல் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அவன் அர்ச்சகர் முகமாக வந்து பேசுவதுண்டு. தனித்திருக்கும் போதில், கதியற்று பதறும் போது மனித உருவில் வந்து உதவுவதுண்டு. இக்கதைகள் காட்டுவது என்னவெனில், அது நடக்கும் போது, நமக்கு அது 'திருவிளையாட்டு' என்று தெரிவதில்லை. முடிந்த பின்னரே தெரிகிறது.

    கிருஷ்ணாவதாரத்தில் துரியோதனிடம் தன் தெய்வத்தன்மையைச் சொல்கிறான். ஆனால், அவர்கள் நம்புவதில்லை. பஞ்சபாண்டவர்களுக்குத் தெரியும் இருப்பினும் அஞ்ஞானம் வந்து, வந்து மறைக்கிறது. இல்லையெனில் கீதா உபதேசம் ஏன்?

    இறைவன் வெளிப்படும் போதே உணர்ந்து கொள்ளும் மெல்லிய உணர்வு வேண்டும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவன், எப்படி வேண்டுமானலும் வரமுடியும். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்று சொல்லிவிட்டாலும் அவன் வந்து போவது என்னவோ கனவிடை தோய்தலாகவே உள்ளது!!

    ReplyDelete
  4. ரவி சங்கர்

    நன்றாக எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  5. கண்ணபிரான்,
    திருமலை நம்பிகள் வைபவம் நன்று !

    சிறப்பான நடை, மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது !

    பிரபந்தத்தில் சில தனியன்களை திருமலை நம்பிகள் அருளியிருக்கிறார் அல்லவா ? அமலனாதி பிரான் தனியன் கூட.

    எ.அ.பாலா

    ReplyDelete
  6. பகவான் புராணத்தைவிட பாகவதர்களின் புராணம் மிக அருமை.இதில் பதில் சொல்வதைவிட மேலும் படிப்பதே பெருமை.தங்களின் விளக்கம் பரணூர் அண்ணாவை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
  7. தி.ரா.ச.வை வழி மொழிகிறேன். பரனூர் அண்ணா அவர்களின் பக்த விஜயம் பிரசங்கம் கேட்டது போல் இருக்கிறது. நன்றாக இருக்கிறது. தெரிந்த தெரியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன். அடுத்த முறை திருமலையான் அருளால் அவன் திருமுன் செல்ல வாய்ப்பு கிட்டும் போது பங்காருபாவியையும் திருமலை நம்பிகள் திருமாளிகையையும் தரிசிக்கும் படி நினைவில் நிற்க அவன் அருள் வேண்டும்.

    ReplyDelete
  8. //வெட்டிப்பயல் said...
    அருமை! அருமை!!
    கண் முன் நடப்பது போலிருந்தது...//

    வாங்க பாலாஜி! மிக்க நன்றி!
    கண் முன் நடத்தியும் காட்டுகிறார்கள், இன்றும்!

    ReplyDelete
  9. //துளசி கோபால் said...
    கிளம்பிட்டேன், துளசி இல்லாமல் துளசிக்குக் கல்யாணமா? //

    வாங்க டீச்சர்; அதானே! chief guest நீங்க இல்லாமல் எப்படி? கல்யாணம் நல்லபடியா நடந்து, தாம்பூலம், பை எல்லாம் வாங்கி வந்தீர்களா? :-)

    //அதான், ஆத்துலே கல்லாத்தூக்கிப் போட்டாச்சு:-))) //
    நீங்க கண்டகி நதியில் போட்ட சாளக்கிரம விஷ்ணுவைச் சொல்றீங்களா? :-)) பாவம் டீச்சர்! அவருக்கு ரொம்ப குளிருமே :-)

    ReplyDelete
  10. //நா.கண்ணன் said...
    ஆயின், நடைமுறையில் இறை தரிசனம் என்பது காற்றுள்ள போது தோன்றும் நீராவி போல் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது//

    வாங்க கண்ணன் சார், அருமையான கருத்துக்களைப் பின்னூட்டமாய் இட்டு உள்ளீர்கள்; மிக்க நன்றி

    //இக்கதைகள் காட்டுவது என்னவெனில், அது நடக்கும் போது, நமக்கு அது 'திருவிளையாட்டு' என்று தெரிவதில்லை. முடிந்த பின்னரே தெரிகிறது//

    கதையல்ல, நிஜம் என்று சொல்கிறீர்கள்.
    நடக்கும் போது கதை மாதிரியும், நடந்து முடிந்த பின் தான் நிஜம் என்றும் தெரிகிறது! முற்றிலும் உண்மை!!

    ReplyDelete
  11. //Sivabalan said...
    ரவி சங்கர்
    நன்றாக எழுதியுள்ளீர்கள்//

    வாங்க சிபா; நன்றி!

    ReplyDelete
  12. //enRenRum-anbudan.BALA said...
    சிறப்பான நடை, மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது !//

    வாங்க பாலா; நன்றி!

    //பிரபந்தத்தில் சில தனியன்களை திருமலை நம்பிகள் அருளியிருக்கிறார் அல்லவா ?//

    ஆம் பாலா; ஆழ்வார் பாசுரங்களுக்கு ஒரு எளிய preamble போலத் தனியன்கள் சொல்லும் வழக்கம் பின்னர் வந்தது; அவ்வழியில் திருமலை நம்பிகளும் தனியன்கள் பல செய்துள்ளார்.

    இதோ அவர் செய்த அமலனாதிப் பிரான் தனியன், உங்களுக்காக :-)

    காட்டவே கண்ட பாத
    கமலம் நல்லாடை உந்தி
    தேட்டரும் உதர பந்தம்
    திருமார்பு கண்டம் செவ்வாய்
    வாட்டமில் கண்கள் மேனி
    முனியேறித் தனி புகுந்து
    பாட்டினால் கண்டு வாழும்
    பாணர் தாள் பரவினோமே

    "அமலானாதிப் பிரான்" என்று பாடிய பாணர் எனப்படும் திருப்பாணாழ்வார் தாள்களை வணங்குவோம் என்று சொல்லி, அவர் வாழ்க்கைச் சுருக்கத்தை இப்பாடலில் கூறுகிறார்.

    ReplyDelete
  13. //தி. ரா. ச.(T.R.C.) said:
    பகவான் புராணத்தைவிட பாகவதர்களின் புராணம் மிக அருமை.//

    வாங்க திராச; உண்மையோ உண்மை!

    //தங்களின் விளக்கம் பரணூர் அண்ணாவை நினைவுபடுத்துகிறது//

    பரணூர் அண்ணா, கிருஷ்ணபிரேமி சுவாமிகள், தொண்டர்க்குத் தொண்டர்! அவரை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி திராச!

    ReplyDelete
  14. //குமரன் (Kumaran) said...
    தி.ரா.ச.வை வழி மொழிகிறேன். பரனூர் அண்ணா அவர்களின் பக்த விஜயம் பிரசங்கம் கேட்டது போல் இருக்கிறது. நன்றாக இருக்கிறது//

    குமரன் வாங்க! மிக்க நன்றி!

    //பங்காருபாவியையும் திருமலை நம்பிகள் திருமாளிகையையும் தரிசிக்கும் படி நினைவில் நிற்க அவன் அருள் வேண்டும்//

    நிச்சயம்; பார்த்து வந்து சொல்லுங்க!

    ReplyDelete
  15. hi,

    excellent article,icame with tears while i finished this article.
    may god bless you .
    Mayilu

    ReplyDelete
  16. தலைவா

    ராமனுஜாச்சாரியார் வரலாற்றில் தாத்தாச்சாரியார் என்பவரை பற்றி ஒரு வேடிக்கை கதை உண்டு. அவரும் இவரும் ஒருவரா என தெரியவில்லை.

    ஆகாச கங்கை தீர்த்தத்துக்கு இப்படி ஒரு வரலாறு உண்டா? புதிய தகவல். நன்றி

    உங்கள் திருமால் பதிவுகள் அனைத்தும் திருமலையை மட்டும் சுற்றி வருவதன் மர்மம் என்ன?:-)

    ReplyDelete
  17. //Anonymous said...
    hi
    excellent article,icame with tears while i finished this article.
    may god bless you .
    Mayilu//

    வாங்க, மயிலு
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    ஆனால் why tears என்று தான் தெரியவில்லை!
    எப்படி இருந்தாலும் உங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  18. //செல்வன் said...
    தலைவா

    ராமனுஜாச்சாரியார் வரலாற்றில் தாத்தாச்சாரியார் என்பவரை பற்றி ஒரு வேடிக்கை கதை உண்டு. அவரும் இவரும் ஒருவரா என தெரியவில்லை//

    வாங்க செல்வன்; சொகுசு ஓட்டல்-இல் இருந்து வந்திருக்கீங்க! கலக்குங்க!

    வேடிக்கை கதை என்ன என்று சொன்னால், யார் அது என்று தெரிந்து கொள்ளலாம்:-)
    ஆனால் நம்பிகளைப் பாத்தா வேடிக்கை செய்யறவராத் தெரியல! :-)

    //உங்கள் திருமால் பதிவுகள் அனைத்தும் திருமலையை மட்டும் சுற்றி வருவதன் மர்மம் என்ன?:-)

    அப்படிப் போடுங்க! மர்மம் என்னன்னா,
    திருமலை பல பேர் நினைப்பது போல் பணம் கொழிக்கும் இடம் மட்டுமல்ல! உள்ளே பக்தி மிகவும் கொழித்து ஒளிந்துள்ளது! அதான் கொஞ்சமா புதையலைத் தோண்டலாமே என்று! அது சரி, நீங்க புதையலில் பங்கு கேட்பீங்களா? :-))

    ReplyDelete
  19. அருமையான பதிவு. கார்முகில் வண்ணன், திருவேங்கடவன் லீலைக்கு ஒரு அளவே இல்லை.

    I felt like i'm witnessing the event. Thanks alot. :)

    ReplyDelete
  20. ரவிசங்கர்!
    பாசுரம்;படங்கள் என இணைத்து மிக அழகாக எழுதியுள்ளீர்!!நன்று!
    மேலும் க்யூ என்று சொல்வோம் அல்லது வரிசை என்போம்;; இந்த கியூ வரிசை தவிர்ப்போம். நடுச்சென்றர் போல்....கோவிக்கக் கூடாது
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  21. தண்ணீர் என்பது பக்தரின் கண்ணீர் போக்கும் நன்னீராகுமானால் அதைத் தருவதுதானே இறைவன் முறை. அதைத்தான் இறைவன் செய்திருக்கிறான்.

    தாத்தா என அழைத்து இனிமேல் இங்கிருந்தே தண்ணீர் தா தா எனச் சொன்ன தாதாவின் கதை அழகுறச் சொன்ன ரவிக்கு வாழ்த்துகள்.

    அந்தப் பொன்வாவி படம் கிராபிக்ஸ் போல உள்ளதே?

    ReplyDelete
  22. //ambi said:
    அருமையான பதிவு. கார்முகில் வண்ணன், திருவேங்கடவன் லீலைக்கு ஒரு அளவே இல்லை.
    I felt like i'm witnessing the event. Thanks alot. :)//

    அம்பி வாங்க! உண்மை தான்! லீலா விநோதன் என்று சும்மாவா சொன்னார்கள்! ஆனா என் நண்பன் ஒருவன் இதை அப்படியே அவன் காதலுக்குப் பயன்படுத்திக் கொண்டான்; லீலா+வினோத் என்று :-)))

    ReplyDelete
  23. Johan-Paris said...
    //Johan-Paris said... பாசுரம்;படங்கள் என இணைத்து மிக அழகாக எழுதியுள்ளீர்!!நன்று!//

    வாங்க யோகன் அண்ணா; மிக்க நன்றி!

    //மேலும் க்யூ என்று சொல்வோம் அல்லது வரிசை என்போம்;; இந்த கியூ வரிசை தவிர்ப்போம். நடுச்சென்றர் போல்....கோவிக்கக் கூடாது//

    அண்ணா, நீங்க எடுத்துச் சொல்லாம யாரு எடுத்துச் சொல்லுவா?
    கண்டிப்பா சொல்லுங்க, மாற்றி விடுகிறேன்!
    கியூ வரிசை, நடு செண்டர், பூ புஷ்பம், சமுத்திரக் கடல், ஷாப் கடை....இன்னும் என்னன்வோ?
    எனக்கே சிரிப்பு தான் வருகிறது!

    ReplyDelete
  24. படங்கள் அருமை..

    ReplyDelete
  25. // G.Ragavan said...
    தண்ணீர் என்பது பக்தரின் கண்ணீர் போக்கும் நன்னீராகுமானால் அதைத் தருவதுதானே இறைவன் முறை//
    //தாத்தா என அழைத்து இனிமேல் இங்கிருந்தே தண்ணீர் தா தா எனச் சொன்ன தாதாவின் கதை//

    வாங்க ஜிரா
    மாலடியார் குறித்த கதைக்கு, மருகனடியார் வந்து தமிழ் வெள்ளம் பாய்ச்சும் அழகைப் பாருங்கள்!
    நன்றி ஜிரா

    //அந்தப் பொன்வாவி படம் கிராபிக்ஸ் போல உள்ளதே?//

    ஆமாம் ஜிரா! கோயில்கள் பற்றிய அனிமேஷன் படம் (ஆனால் தெலுங்கில்) ஒன்று வந்துள்ளதாக, சுட்டி வந்தது. அந்தச் சுட்டியில் சுட்டதே அப்படம்!

    ReplyDelete
  26. அடடே, இன்றைக்குத்தான் தண்ணி காட்டியதைக் காண வேண்டுமென்றிருக்கிறதுபோல எனக்கு.

    அருமையான பதிவு கே ஆர் எஸ்.

    ReplyDelete
  27. //செந்தழல் ரவி said...
    படங்கள் அருமை..//

    வாங்க, ரவி
    கடைசிப் படம் அனிமேஷன்.
    நன்றி!

    ReplyDelete
  28. // இராமநாதன் said...
    அடடே, இன்றைக்குத்தான் தண்ணி காட்டியதைக் காண வேண்டுமென்றிருக்கிறதுபோல எனக்கு.
    அருமையான பதிவு கே ஆர் எஸ். //

    வாங்க மருத்துவரே! வணக்கம்!
    தண்ணி காட்டிய பதிவை எப்படியோ கடைசியில் கண்டு பிடித்து விட்டீங்க, பாத்தீங்களா! :-))
    அடிக்கடி வாங்க! நன்றி!

    ReplyDelete
  29. ரவிஷங்கர்,
    கடைசியில் வருவதில் நான் முதலாகி விட்டேன்.

    நல்ல பதிவு. வேலை மும்முரம் அதிகம்.
    உங்க ஊருக்கு வந்தபிறகு மெயில் செய்கிறேன்.
    தெரிந்த கதையை இத்தனை விவரங்களோடு எப்படி அழகாகச் சொல்லுகிறீர்கள்!! திருப்ப்தி போகவில்லையே என்ற ஏக்கம் அதிகமாகிவிட்டது.

    ReplyDelete
  30. படிக்க மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்

    ReplyDelete
  31. ஆஹா! இதை இத்தனை நாட்களாய் நான் பார்த்துப் படிக்காமல் போனெனே என வருத்தமாக உள்ளது..எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது..அருமையான பதிவு. விரிவாக இன்னொரு ம்டல் இடுகின்றேன் கண்ணபிரானே, காத்திருக்க!
    ஷைலஜா

    ReplyDelete
  32. அன்பு கண்ணபிரான்,
    யாவரும் மாலின் திருவிளையாடல்பற்றி எழுதும் தருணத்தே, ஆழ்வார் புகழ்பாடி ஆநந்தத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றி.
    சிறிது மனத்தாங்கலால் தமிழ்மணம் பக்கம் வராமையால் தங்களின் இடுகையைக் காலந்தாழ்த்தித்தான் கண்டேன்; பெருமகிழ்வுகொண்டேன்.
    வாழ்க! வளர்க!!

    ReplyDelete
  33. thank you for present this marvellous picture & writings
    i have a doubt - of course over the years we have heard that GOD appears before HIS Pakthan - now what happened to GOD - Uruki Uruki aluthalum, beg panninalum whe does not appear. it hurts me lot.this question again and again comes from me. will you pl. explain where HE has gone.Ninaikumpothe ullammellam paravasapadukirthu -
    ellaam AVAN seyal.
    LORD you should come and rescue the people please.. please.. come..

    ReplyDelete
  34. //வல்லிசிம்ஹன் said...
    ரவிஷங்கர்,
    கடைசியில் வருவதில் நான் முதலாகி விட்டேன்.
    நல்ல பதிவு. வேலை மும்முரம் அதிகம்.
    //

    நன்றி வல்லிம்மா...கடைசிப் போட்டியில் முதலாகி வருவதும் சிறப்பு தானே :-)

    ReplyDelete
  35. //ஜெயஸ்ரீ said...
    படிக்க மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்//

    நன்றி ஜெயஸ்ரீ!
    நடுவில் நின்று விட்டது!
    மார்கழி முடிந்து தொடர வேண்டும்! - தியாகராஜர் அடுத்த பதிவில்!

    ReplyDelete
  36. //ஷைலஜா said...
    ஆஹா! இதை இத்தனை நாட்களாய் நான் பார்த்துப் படிக்காமல் போனெனே என வருத்தமாக உள்ளது..எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது..அருமையான பதிவு. //

    நன்றி ஷைலஜா! அடிக்கடி வாங்க!

    ReplyDelete
  37. //ஞானவெட்டியான் said...
    அன்பு கண்ணபிரான்,
    யாவரும் மாலின் திருவிளையாடல்பற்றி எழுதும் தருணத்தே, ஆழ்வார் புகழ்பாடி ஆநந்தத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றி.//

    அடியவர் புகழ் பாடுவது அவன் புகழ் பாடுவதை விட இனிக்கும் அல்லவா ஞானம் ஐயா!

    //சிறிது மனத்தாங்கலால் தமிழ்மணம் பக்கம் வராமையால் தங்களின் இடுகையைக் காலந்தாழ்த்தித்தான் கண்டேன்; பெருமகிழ்வுகொண்டேன்.
    வாழ்க! வளர்க!!//

    மனத்தாங்கல் மறைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete
  38. //Anonymous said...
    thank you for present this marvellous picture & writings//

    நன்றி அனானிமஸ் அவர்களே!

    //i have a doubt - of course over the years we have heard that GOD appears before HIS Pakthan - now what happened to GOD - Uruki Uruki aluthalum, beg panninalum whe does not appear. it hurts me lot.//

    உங்கள் ஆதங்கம் அன்பு கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
    தெய்வம் மனுஷ்ய ரூபே என்பார்கள்!
    நல் அடியார் குழாங்களில் / பணிகளில் மனத்தைத் திருப்பினால் தங்கள் ஆதங்கம் குறையும் என்பது அடியேன் தாழ்மையான எண்ணம்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP