Sunday, January 17, 2010

ஒரு "தாசி" உணர்ச்சி அடைகிறாள்! - பிங்கலாவின் கதை(கீதை)!

மாயக் கண்ணன் மாயப் போகிறான்! துவாரகை மூழ்கப் போகிறது!
திருச்சீர் அலைவாய்கள் அலைத்து அலைத்து விளையாடும் தீவு நகரமாம் அந்த துவரைப் பதி! அதைக் கடல் சூழ்ந்து "சுனாமி"க்கப் போகிறது!
துவரைப் பதியின் சில வேளிர் குடிகள், இன்னும் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டன! தமிழைக் கைக்கொண்டு புறப்பட்டு விட்டன!

தன் அன்பனும்-நண்பனும்-பக்தனுமான உத்தவனுக்கு,
தன்னுடைய "கடைசி" நேரத்தில்....
இன்னொரு கீதையைச் சொல்லத் துவங்குகிறான் கண்ணன்!


கண்ணன் சொன்னது இரண்டு கீதைகள்!
* ஒரு கீதை = பகவத் கீதை!
* இன்னொரு கீதை = உத்தவ கீதை!
முன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்! பின்னது = வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவில்!

இந்த உத்தவ கீதையில் தான்.....இந்தத் "தாசி"யின் கீதை!...ஒரு பேதையின் கீதை!...அவள் பெயர் பிங்கலா! - கிருஷ்ண பிங்கலா!



என்னாது...? மிகப் "புனிதமான" கீதையின் நடுவில், ஒரு "தாசியின் கீதையா"?

சமூகம் அவளைத் "தேxxxx" என்ற சொல்லால், "சிறப்பித்து" வைத்துள்ளதே!
இப்படியெல்லாம் ஆன்மீகத்தில் கண்ணனே கலந்து எழுதலாமா? தவறாயிற்றே!
கண்ணா, இது உனக்கே அடுக்குமா? இதெல்லாம் சினிமாவுக்கு வேண்டுமானால் நல்லா இருக்கும்! ஆனால் ஆன்மீகப் பொக்கிஷமான கீதையில்.....போயும் போயும் ஒரு தாசியின் கீதத்தைச் சேர்க்கலாமா?

கீதையைப் பாராயணம் வேறு பண்ணுவார்களே! புத்தக அடுக்கில் வைத்து, பூ போட்டு, பூஜிக்கவும் செய்வார்களே! அதிலா இப்படி ஒரு "இழிந்தவளின்" பாட்டைக் கொண்டு போய்க் கலந்து வைப்பது??? ஹைய்யோ!

கண்ணன்: ஆன்மீக உள்ளங்களே........நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ, அவர்களே "ஆத்திகர்கள்" ஆகிறார்கள்!
எனவே, உங்களில் "ஆத்திகர்கள்" யாரோ...
அவர்கள்...இவள் மீது கல் எறியக் கடவீராக!
"இதரர்"...பூ எறியக் கடவீராக! சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!


இந்தக் கீதையின் மீது வைக்கப்படும் பூக்கள் ஒவ்வொன்றும் "தாசி" பிங்கலாவை அலங்கரிக்கட்டும்!
* வாழ்வைத் தொலைத்து விட்ட பெண் இவள்!
* வாழ்வைத் தொலைத்தாலும், "வாழும்-அன்பை" தொலைக்காத பெண் இவள்!

உயிர் துறந்த கன்னிப் பெண்களை "கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி இறுதியாக்குவது போல்...
இவளைக் "கிருஷ்ணார்ப்பணம்" என்று ஜபித்தே உறுதியாக்குங்கள்...
இவளே ஆசார்யன்! இவளே கீதையின் இந்தப் பகுதிக்கு "கீதாசார்யன்"!


அவள் ஒரு "தாசி"! ஆனால் "பேதை" தாசி!
அன்று குழந்தை தாசியாக இருந்து, இன்று குமரி தாசியாகி நிற்கிறாள்!
அவள் பெயர் பிங்கலா! கிருஷ்ண பிங்கலா!

பிதிஷா நகரத்து தாசிகளில், "அப்பாவி" தாசி என்றால் அது இவள் தான்!
எளிதில் இவளை "மடித்து" விடலாம்!
அன்பு காட்டினால் போதும்! காசைக் காட்ட வேண்டும் என்ற கட்டாயமே இல்லை! :)
என்னடீ...கண்ணாஆஆஆ என்று செல்லமாய் அழைத்தாலும் வந்து விடுவாள்! :)

அவள் பேரழகி எல்லாம் ஒன்றும் இல்லை! ஆனால் அசிங்கமாகவும் இருக்க மாட்டாள்! சுமாரான பால் வடியும் முக-அழகி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
புன்னகையே அவள் பலம்! அகம் குழைவதே அவள் பலம்-வீனம்!

மருவே செறித்த குழலாள்,
மயக்கி, மதன் ஆகமத்தின் விரகாலே,
மயலே எழுப்பி, இதழே அருந்த
மலை போல் முலைக்குள் உறவாக்குபவள்! உருவாக்குபவள்!


அவளிடம் ஆசை வார்த்தைகள் ஒன்றிரண்டு பேசி விட்டான்.....ஒரு இளைய செல்வந்தன்!
பேசினது தான் பேசினானே......காமம் கலந்து பேசாமல்.....காதல் கலந்தது போல் பேசித் தொலைத்து விட்டான்! அவள் மேல் கொஞ்சம் அக்கறையும் காட்டி விட்டான்! குப்ப்ப்ப்....

நெருப்புக்கே நெருப்பு பிடித்துக் கொண்டது! ஆசைக்கே, ஆசை வந்து விட்டது! - அது பேராசையா? அவன் பேரில் ஆசையா??

அவனை அல்லால், பிற எவரையும் அண்ட விடுவதில்லை! - தொழில் "தர்மத்தை" மீறல் ஆகுமோ? அவளுக்கென்று "விதிக்கப்பட்டதை"ச் செய்ய வேண்டாமோ?



அன்று மதி நிறைந்த, நிலாக் காயும் இரவு.....ஹேய் இது "அந்த" இரவு என்று அவனும் சொல்லி வைத்தான்! அவளும் நம்பி வைத்தாள்!
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே என்று பல்கலனும் அணிந்து வைத்தாள்! மனம் துணிந்து வைத்தாள்!

கண்ணிமைக்கும் நேரத்தில், தான் காணாமல் போகப் போவது தெரியாமல், கண்ணிமைக்கு கன்னி மை இடுகிறாள்!
தலையெழுத்தே மாறப் போவது தெரியாமல், தலை எழுத்தில் தளிர்க் குங்குமம் இட்டுக் கொள்கிறாள்!

சீர்சிறக்கு மேனி பசேல் பசேல் என
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என


மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என
ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என
வாடை பற்று வேளை அடா அடா என
நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என...


பெளர்ணமி இரவில்...மதி நிறைந்த நன்னாளில்...ஒருவனுக்காக ஒருத்தி காத்திருக்கலாம்! ஆனால் ஒரு தாசி காத்து இருக்கலாமோ?
அன்றிரவென்று பார்த்து, பிதிஷா நகரத்தில் கொஞ்சம் அதிகமான பேருக்கு வேட்கை! அவரவர் இச்சையில் எவை எவை உற்றன??

கல்விச் செல்வத்து வேத பண்டிதர்கள்...
செல்வச் செல்வத்து பெருஞ் சீமான்கள்...
வீரச் செல்வத்து விவேக மறவர்கள்...
இப்படிச் சிலர் வந்து அவள் கதவைத் தட்டிப் பார்க்கின்றனர்! ஹூஹூம்! நேய நிலைக் கதவம் நீக்கவும் இல்லை! நேரே எவரையும் பார்க்கவும் இல்லை! அவன்! அவன்! அவன் மட்டுமே!

ஹா ஹா ஹா!
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணலாம்! ஆனால் இவள், கற்பை எண்ணலாமா?
இவள் முகம் நகலாம்! அகம் நகலாம்! ஆனால் அகங் குழையலாமா? - உன் அந்தமில் சீர்க்கு அல்லால் வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!
குழைந்து விட்டவள், கும்மிருட்டில், குளிரக் குளிரக் காத்து நிற்கிறாள் வாசற்படியில்!

இரவின் கடுமை! தனிமைக் கொடுமை!
ஒரே வாசலுக்கு எத்தனை முறை தான் நடந்து நடந்து தேய்வது? பத்தே விரல்களில் எத்தனை முறை தான் நகத்தைக் கடித்து ஏங்குவது?



ஆனால் அவன் வாசம் மட்டும் வரவே இல்லை! பாசம் மட்டும் வரவே இல்லை!
ஓலை வந்தது! அவள் வாழ்விற்குப் பாலை வந்தது!

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணய்யா! மார்பு துடிக்குதடா! பார்க்கும் மனிதரெல்லாம் உன்னைப் போல் ஒரு பாலன் தெரியுதடா!
இளைய செல்வந்தா...எதற்கு அன்பு காட்டினாய்? அக்கறை காட்டினாய்? காதல் கலந்து பேசினாய்?"

"அட அப்புராணியே, சிரிப்புக்குச் சொன்னதெல்லாம் சீர் வரிசை ஆகுமா? பொழுது போக்கப் பேசியதெல்லாம் பொன் மணத்தில் முடியுமா??
இந்த நியாயத்தை நீ போய் ஊராரிடம் கேட்கத் தான் முடியுமா? இல்லை என்னைத் தான் கேட்க முடியுமா? அதை விடு, உன்னையே நீ கேட்க முடியுமா?"

"ஊரிடம் கேட்க முடியா விட்டால், நியாயம், நியாயம் ஆகாதா, மணவாளா?"

"அடியே அறிவு கெட்டவளே! தர்மவான்கள் கேட்டால் நியாயம்! ஆனால் தாசி கேட்டால்???
உனக்குச் சூதனமாக இருக்கத் தெரியாதோ? நான் சும்மா பேசிய வார்த்தைகளுக்காக...வந்த "பெரியவர்களை" உள்ளே விடாது ஊரைப் பகைத்துக் கொண்டாயே! இனி என்ன செய்யப் போகிறாய் பிங்கலா?
அடங்கு! அடங்கு! அடங்கு! மூலையில் ஒடுங்கு! ஒடுங்கு! ஒடுங்கு!"

"சரி நான் ஒடுங்குகின்றேன்...ஆனால் உள்ளம் ஒடுங்குமா, உயர்ந்தவரே?"

"உள்ளமா? அதற்கெல்லாம் உனக்கு உரிமையே இல்லை! இது காமமா? காதலா?? என்று போய்க் கேள்! சந்தேகம் என்ன? அனைவரும் சொல்வார்கள்!
காமத்துக்கென்று இருப்பவள்...அவள் காதலித்தாலும்...அது காமம் தான்!"

மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோர் எம் பாவாய்!
மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோர் எம் பாவாய்!

பளீர்...பளீர்...பளீர்...என்று அவள் மன வானத்தில்...
ஆழி போல் மின்ன...வலம்புரி போல் நின்று.....அதிர்ந்து போனாள்!

பேதை...நள்ளிரவில் கீதை...பாடத் துவங்குகிறாள்...
கண்ணனின் "உத்தமமான" உத்தவ கீதையில்...இதோ...ஒரு "தாசி" கீதை!



கர்ணாம்ரிதா என்னும் மேலைநாட்டுப் பாடகி, இந்தத் "தாசி"யின் கீதைப் பாடலைப் பாடுகிறார்!
வித்தியாசமான...ஆனால் அழுத்தம் திருத்தமான உச்சரிப்புகளோடு!
கேட்டுக் கொண்டே பதிவை மேலும் வாசியுங்கள்!



or hear from here... Dasi - Prayers by Women
The Story of Pingala, From Lord Krishna's Uddhava Gita

Vocals: Karnamrita
Melody composed by: Yuddhistira and Karnamrita
Tablas: Yuddhistira
Kartals: Chaitanya Nitai
Hand Claps: Ron Marinelli
..................................................

பிங்கலோ உவாச:
அஹோ மே மோக விதாதிம்
பஸ்யதா அவிஜித் தாத் மன:
யா கண்டாத் அசதா காமம்
காமயே யேன பாலிசா!
காமயே யேன பாலிசா!

பிங்கலை சொல்கின்றாள்:
மோகம் எனும் தீ வளர்த்தேன்! - ஊர்
பார்க்க உளம் தனில் உழந்தேன்!
காமத்தில் காதலைக் கலந்தேன்!
காண்பீர் நான் ஒரு பேதை!
பி்திஷாவின் மக்களே, காண்பீர் நான் ஒரு பேதை!

சந்தாம் சமீபே...ரமணாம் ரதிப் ப்ரதாம்
வித்தாப் ப்ரதாம்...நித்யம் இமம் விகாயா
அ-காமா தாம்....துக்க, பயாதி, சோகா
மோகப் ப்ரதம்...துச்சம் அகம் பஜேனா!


மனத்துக்கு இனிய என் காதலைத் துறந்தேன்!
மனத்துக்கு இனியான் அவனையும் துறந்தேன்!
துக்க, பய, சோகம், மோகம் என்று ஆகித்
துச்சம் ஆகிப் போனேன்! பேதை நான் பேதை!

எங்கெங்கோ போய்க் கரை காணாது, எறி கடலுக்கே மீண்டும் வந்து,
கப்பலின் கூம்பில் ஏறி, உனக்காக என்றும் நின்று விட்ட,
மாப்பறவை ஆனேனோ? மாப்பறவை ஆனேனோ?

தேனோ உப...கிருதம் ஆதாயா
சிரசா கிரமயா சங்கதஹா
தியாக த்வ...துர் ஆசா
சரணம் வ்ரஜாமி.... தம்...ஆதீஸ்வரம்!

சரணம் வ்ரஜாமி.... தம்...ஆதீஸ்வரம்!

உன் அருளினைத் தலையினில் ஏற்றேன்!
புலன் ஆசையை அறிந்தே நோற்றேன்!
உன் "சரணம் சரணம்" என...நான் ஏற்றேன்!
அவன் சடுதியில் வர வர வேற்றேன்!


முன்பு கட்டிலில் பலர் மூச்சு வாங்கிய வேசியாள்...
இன்று அவள் மூச்சையே சுவாசியாள்!
முன்பு பஞ்சணையில் இருமை உற்றவள்...
இன்று பாம்பணையில் ஒருமை உற்றாள்!

சற்று முன்பு செய்து கொண்ட அலங்காரங்கள் கரைந்து ஒழுகின!
பல நாள் காமத்தின் அகங்காரங்கள் கரைந்து ஒழுகின!
வழுக்கும் கால்கள் நெகிழ...வளைந்த இடுப்பு நெகிழ...
செழிக்கும் மார்பு நெகிழ...சிறைக்கும் கண்கள் நெகிழ...

மேனியின் மேலும் கீழும்...திரவங்கள் திரண்டோட...
பருவங்கள் பறந்தோட...மதனங்கள் மறந்தோட...
பல இரவு உடலொழுகு நீரை.....
ஓர் இரவு கண்ணொழுகு நீர்.....
மிஞ்சிட...விஞ்சிட...அஞ்சிட...கெஞ்சிட...

கைகள்...மேலெழ மேலெழ...
சரணம் ஐயோ! சரணம் ஐயோ!!
ஆதி மூலமே! நீதி வானமே!
சரணம் ஐயோ! சரணம் ஐயோ!!




தன்னையே கொலை செய்து கொள்ள முயன்றாள்!
ஆனால் குதித்ததோ தற் கடல்! தத்துவக் கடல்!!
மூழ்க முனைந்தவளால் மூழ்க முடியவில்லை!
ஆழத் தான் முடிந்தது! - ஆழ்ந்து போனாள்! "ஆழ்வாள்" ஆனாள்!

பிங்கலை, எப்படி ஒரே இரவில், இப்படி "மாறி"ப் போனாள்?
- குருவின் உபதேசமா?
- இல்லை, அவள் கர்ம வினையா?
- அவள் தாழ்ந்து விட்ட போது, அவள் அன்பன் காட்டிய, "அளவில்லாக் கருணையா"?
- இல்லை, அவள் "ஆசையே" அவளுக்கு "அனுபூதி" கொடுத்ததா??

Denial of an Intense Desire leads to vairaagya?
ஆழ் மனம் மறுதலிக்கப்பட்டால்? வருவதோ வைராக்கியம்??
அவள் "ஆன்மீகப் பதிவு" எழுதவில்லை! - ஆனால் "ஆன்மாவில் எழுதி" வைத்து விட்டாள்!

அவள் எழுத்தை, கண்ணனே தன் கீதைக்குள் நுழைக்கிறான்!
"உத்தவ" கீதையில்............. ஓர் "தாசியின்" கீதை!
"அவன்" கீதையில்...........ஓர் "அவள்" கீதை! = அது அடியவள் கீதை!

என்னாது "அடியவளா"? ஒரே இரவில், அவள் "அடியவள்" ஆகி விட்டாளா??
ச்சீ..ச்சீ என்று முகஞ் சுளிப்பார்கள்...
அவள் பாடல் இருக்கும் கண்ணனின் கீதைக்கும் முகம் சுளிக்கக் கடவர் ஆகுக!

நல்ல ஆன்மீகத்தில் நெருடல் என்பதில்லை! அந்த "ஓர் இரவுச் சரணாகதி"யில் முரணாகதி இல்லை!
கருத்து "எதுவாயினும்".......மனங்களை ஒதுக்கலும் விலக்கலும் இல்லை!

* இதைக் கண்ணன் அறிந்தான்!
* கண்ணனை அறிந்தவரும் அறிந்தார்!
* அறியாதார்...ஆன்மீக "நிர்ணயம்" பேசப் புகுந்தார்! பேச மட்டும் புகுந்தார்!

ஆனால்...ஆனால்...ஆனால்...
அவன் "வாசி" கீதையில், அவள் "வேசி" கீதை,
அனைவரும் வாசிக்குமாறு...
இன்றுமே நிலைத்து விட்டது! என்றுமே நிலைத்து விட்டது!

பிங்கலை என்னும் "தாசியே"...உனக்கு வணக்கம்! உன் நள்ளிரவு ஞானத்துக்கு வணக்கம்!



விசாகன்: "புனிதா, பிங்கலையின் கதையைக் கேட்டாய் அல்லவா?"

புனிதா: "கேட்டேன் முருகா!"

விசாகன்: "பிங்கலை துணிந்தது போல் நீயும் துணிவாயா?"

புனிதா: "நீ இருக்க, நான் வேறு தனியாகத் துணிய வேணுமா முருகா?"

விசாகன்: "புனிதா, நீ எனக்கு மிகவும் பிடித்தமானவள்! அதனால் தான் உன்னைக் கேட்கிறேன்! எங்கே சொல் பார்ப்போம்! பிங்கலை எப்படி ஒரே இரவில், அப்படி "மாறி"ப் போனாள்? அவள் மாறக் காரணம் என்ன?
- அவள் தாழ்ந்து விட்ட போது, அவள் அன்பன் காட்டிய, "அளவில்லாக் கருணையா"?
- இல்லை, அவள் "ஆசையே" அவளுக்கு "அனுபூதி" கொடுத்து விட்டதா??

புனிதா: "முருகாஆஆஆ.....ஆசையால் அனுபூதி கூடக் கிடைக்குமா என்ன?"

விசாகன்: "சரி, அதை விடு புனிதா! அன்று நான் தானே, உன் கையை உதறி, உன்னை அந்தப் பயங்கரமான ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன்?"

புனிதா: "ஆமாம் முருகா!"

விசாகன்: "இறந்து மீண்டும் பிறந்துள்ளாய், புனிதா! செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்துள்ளது!"

புனிதா: "ஆஆஆ!"

விசாகன்: "சொல்...அது, எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?"

புனிதா: "முருகா...நீ கேட்கும் கேள்வி எனக்கு அச்சமூட்டுகிறது முருகா! இது மாறன் மொழி ஆச்சே! முன்பு எங்கோ படித்தது போல் இருக்கே முருகா??"

விசாகன்: "புனிதா, என் செல்வமே! யாமிருக்க பயம் ஏன்? முன்பு 'படித்து' இருந்தாய்! இப்போது 'உணர்ந்து' இருக்கப் போகிறாய்!
மாறன் மொழியாவது, முருகன் மொழியாவது! அது உனக்கும் எனக்கும் மாறா மொழி! காதல் ஆறா மொழி!"

புனிதா: "சரி முருகா! எனக்குன்னு நீ சொன்னாச் சரியாத் தான் இருக்கும்!"

விசாகன்: எங்கே, பதில் சொல் பார்ப்போம்...உன்னைப் போன்று....பிங்கலையைப் போன்று.....
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்?
அது......எத்தைத் தின்று? எங்கே கிடக்கும்??

(தொடரும்...)
(இனி, ஒவ்வொரு ஏகாதசி அன்றும், மாதவிப் பந்தலில் உங்கள் அனைவரையும் மறுபடியும் சந்திக்க முயல்கிறேன்...)

9 comments:

சின்ன அம்மிணி said...

//அது, எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?"//

தெரியலையே.

மேலைநாட்டுப்பாடகி பாடறது வித்யாசமா இருக்கு.

R.DEVARAJAN said...

கீதம் என்றால் சொல்லப்பட்டது என்று பொருள்; கூற்று என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் பகவத் கீதை என்று ப்ரபலமாகி விட்டதால் கீதை என்பதற்கு ஒரு தெய்வத்தன்மை ஏற்பட்டு விட்டது.

நாமும் மனத்தாலும், வாக்காலும் அவனோடு இணைந்து கொள்வோம்;

தேவ்

கோபிநாத் said...

ஆகா..தலைவா ;))

ஆங்கில & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)

பொங்கல் வாழ்த்துக்கள் ;))

இப்படி ஒரு கீதை இருக்குன்னு இப்பதான் தெரியும். வழக்கம் போல கடைசியில ஒரு கேள்வியா!!

வழக்கம் போல நீங்களே சொல்லிட்டுங்க தல ;))

srikamalakkanniamman said...

உடலளவில் அனுமன் பிரமச்சாரி , இராமானுஜர் சந்நியாசி, ஆண்டாள் பெருமாளுக்கே! பிரகலாதன் - அசுரன் பிங்களா - வேறுவிதம்!
அனுமன், இராமானுஜர், ஆண்டாள், பிரகலாதன் , பிங்களா போன்றோர் சரீரத்தில் வேறுபட்டாலும் உள்ளத்தில் ஒன்று பட்டனர் . பெருமாளிடம் அதிக அன்பை செலுத்தி அவர் திருவடி அடைந்தனர். என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்?
அது......எத்தைத் தின்று? எங்கே கிடக்கும்??

அத்தை தின்று அங்கே கிடக்கும்

நன்றி
மீண்டும் சந்திப்போம்!
Rajesh Narayanan

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சின்ன அம்மிணி said...
//அது, எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?"//

தெரியலையே//

:)
எனக்கும் தான் சின்ன அம்மிணி-க்கா!

//மேலைநாட்டுப்பாடகி பாடறது வித்யாசமா இருக்கு//

ஆமா! ரொம்ப ஜில்-லுனு பாடறாங்க, உதித் நாராயண், சாதனா சர்கம் தமிழில் பாடுறாப் போலே :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//R.DEVARAJAN said...
கீதம் என்றால் சொல்லப்பட்டது என்று பொருள்; கூற்று என்று வைத்துக் கொள்ளலாம்//

ஆகா! அப்படியா தேவ் சார்?
கீதம்-ன்னா பாட்டு-ன்னு மட்டுமே நினைச்சிக்கிட்டு இருந்தேன்!
சொல்லப்பட்டது-ன்னு கூட ஒரு பொருளா?

//ஆனால் பகவத் கீதை என்று ப்ரபலமாகி விட்டதால் கீதை என்பதற்கு ஒரு தெய்வத்தன்மை ஏற்பட்டு விட்டது//

ஆமாம்! தெய்வம் உரைத்ததால் தெய்வத்தன்மை வந்து விட்டது!
ஆனால் தெய்வம் எல்லார்க்கும் பொது என்பதால், ஒரு தாசியின் பாட்டும், தெய்வத்தின் கீதையில் மிக அழகாகச் சேர்ந்து விட்டது!

//நாமும் மனத்தாலும், வாக்காலும் அவனோடு இணைந்து கொள்வோம்;//

தங்கள் ஆசி நிறைவேறட்டும்! பொலிக பொலிக!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோபிநாத் said...
ஆகா..தலைவா ;))
ஆங்கில & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)
பொங்கல் வாழ்த்துக்கள் ;))//

ஹிஹி!
எதுக்கு இம்புட்டு சிரிப்பான் கோபி? ரொம்ப நாள் கழிச்சி பாக்குறியே? அதனாலா? :)

பொங்கல் வாழ்த்துக்கள்! பொங்கல் எல்லாம் பொங்கிப் போயி, பிப்ரவரியில சொல்லுறேன்! அதான் என் இப்போத்தைய நிலைமை! :)

//இப்படி ஒரு கீதை இருக்குன்னு இப்பதான் தெரியும்//

சூப்பர்! இனி மறக்காத ஓக்கேவா?

//வழக்கம் போல கடைசியில ஒரு கேள்வியா!!
வழக்கம் போல நீங்களே சொல்லிட்டுங்க தல ;))//

அதுக்குப் பதில் விடை-ல இல்ல! வாழ்க்கையில் இருக்கு!
கொஞ்சமா கொஞ்சமாப் பதிவு வளரும்! :)

emmem said...

Matthavanga maari room pottu yosichi edhaiyo ezhudhama, pudhusa, purindhum & puriyamaalum, vilangiyum vilangaamalum --- enakku --- ezhudhiringale, adhu pudichirukku.

En magalgalukku piditha character-ai, aavaludun edhirparkkum..

--- MM

emmem said...

Solla marendhene... dasi paadal enbadhaal, appadi paadi erukkangala?

--- MM



Post a Comment

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
அது தான் என்னைப் போன்றவர்களை எல்லாம் படிக்க வைக்குது. குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை -
//துன்பமும் ஓடணும்! வினையும் அழியணும்! அதுனால, அழகிய ரெண்டு கண்ணையும் நல்லாத் தொற! விரிய விரியத் தொற! தொறந்து தொறந்து எங்களைப் பாரு!//
இந்த மாதிரி நீங்க அனுபவிச்சு எழுதறீங்க பாருங்க இது தான்!

Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தாம் என்று, தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...
//இந்தச் சங்கரன்-அடியேன் தான் இப்படி லோக்கலா எழுதறேன்-ன்னு முன்பு கம்ப்ளையிண்ட்டு! :)//

ஆழி மழை கண்ணா! என்ற ஆண்டாள் திருப்பாவையில் பற்பநாபன் கையில் ஆழி மோல மின்னி... என்ற வரியில் பற்பநாபன் என்றால் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்ரவனா என்று சொல்வீங்க!
இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோகல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP