Friday, June 05, 2009

பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!

யாருப்பா தாமிரபரணித் தலைவரு? பதிவுலகில் தாமிரபரணி தண்ணிக் குடிச்சவங்க பல பேர் உண்டு! ஆனா அவிங்க எல்லாம் தலைவர் ஆயிட முடியுமா? எங்க தலைவர் மாதிரி வருமா? அதுவும் பதினாறு வயசுத் தலைவர்! அவர் பேச்சுக்கு உருகாதவங்களே கிடையாது! அவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்! அவருக்குத் தான் இன்னிக்குப் பிறந்த நாளு! (Jun-05, வைகாசி விசாகம்)

Happy Birthday MaaRa! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், குல முதல்வன் நம்மாழ்வாரே! :)

* அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)
* காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்படும் மறைந்த ஆச்சார்யர் பிறந்தநாள் நாளை (அனுஷம்)!
** அப்படியே அம்மாவுக்கும்-அப்பாவுக்கும் இன்று திருமண நாளும் கூட! Happy Wedding Day, My Big Children! :)



பொருநை என்னும் தாமிரபரணி நதி! சுழித்துச் சுழித்து ஓடும் இளமங்கை! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!
பொருநைத் துறைவன்! யமுனைத் துறைவனைக் காட்டிலும் உயர்ந்தவன்!
அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் மாறன்! அரங்கன் இட்ட பெயர் நம்-ஆழ்வார்! அவனே குல முதல்வன் ஆனான்!

பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!
அதில் பெரிதாகத் தவறொன்றும் இல்லை! சமய ஆராய்ச்சியும் தொண்டும் செய்து, அதற்கென்றே இருந்தவர்களைத் தான் அந்நாளில் தலைவராகக் கொண்டனர் போலும்!

ஆதி சங்கரர், இராமானுசர், மாத்வர், சுந்தரமூர்த்தி நாயனார் என்று பலப்பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்!
ஒரு அருணகிரியோ, அப்பரோ, சமயத் தலைவராக வந்ததில்லை! அவர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பளித்தாலும், அவர்களைத் தலைவராகத் தனியாகக் கொண்டாடியதில்லை!

ஆனால் "தாழ்ந்த குலம்", "சூத்திரர்", "நாலாம் வருணம்" என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன?

வைணவக் "குல முதல்வன்" என்ற போற்றப்படுபவர் = வேளாளரான நம்மாழ்வார்!
அந்தணர், அந்தணர் அல்லாதார் என்று அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நம்மாழ்வார்!
கீதையின் தேர்த்தட்டு மொழியை விட அவரின் திருவாய் மொழிக்கு ஏற்றம் அதிகம்!

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க!
திருவாய் மொழிக்கு உருகாதார் ஒரு வாய் மொழிக்கும் உருகார்!

இத்தனைக்கும் இவர் ரொம்ப சின்னப் பையன்!
பதினாறு வயதில் பாடத் துவங்கி, முப்பத்து இரண்டு வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு வருத்தப்படாத வாலிபன்! அவனா குல முதல்வன்?

முதன் முதலில் தோன்றிய முதலாழ்வாரைச் சொல்லலாமே?
ஆண்டாளை மகளாகப் பெற்று, அரங்கனையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வாரைச் சொல்லலாமே? இத்தனைக்கும் அவர் அந்தணராச்சே!
அவர்களை எல்லாம் குல முதல்வன் என்று சொல்லாது, ஒரு சின்னப் பையன் நம்மாழ்வாரைச் சொல்வது ஏன்?

ஏன் மாறனுக்கு மட்டும் இத்தனை சிறப்பு? அவரை மட்டும் எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்? இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்!
இன்னிக்கி பிறந்த நாள் என்பதால் தத்துவம் வேணாம்! சுவையான கதையைக் கேட்கலாமா?
ஊரையே காய்ச்சும் தாமிரபரணி ஆளுங்க ஒரு பக்கம்-ன்னா, அந்தத் தாமிரபரணித் தண்ணியையே காய்ச்சும் கதை! பார்க்கலாமா? :))



தாமிரபரணி ஆறுக்கு அம்புட்டு மகத்துவம்! அழகு + தெளிவு + உயிர்ப்பு! கனிம வளம், மருத்துவக் கூறுகள் கொண்ட வளம்-ன்னு அதன் பெருமையே தனி!
கண்ணனின் ஸ்ரீமத் பாகவதத்திலேயே நம்ம தாமிரபரணி சொல்லப்பட்டிருக்கு-ன்னு தெரியுமா?

தாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ
கலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண!
க்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச
ப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா!

தாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே
கலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்!
அங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்!
பக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் "ஆழ்ந்து" போவார்கள்!

பின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்!
இப்படிப்பட்ட தாமிரபரணிக் கரையில் அன்னிக்குன்னு பார்த்து ஒரு முக்கியமான உரையாடல்...
**********************************************************************
மதுரகவிகள்: "ஆழ்வாரே! இப்படி அடியேனை வருத்தப்பட வைக்கலாமா? என்ன வயசு ஆகி விட்டது உமக்கு? முப்பத்திரண்டு தானே? அதற்குள் உலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றால் எப்படி?"

மாறன்: "ஹா ஹா ஹா! நான் வந்த பணி முடிந்ததால் மீண்டும் பரமபதம் செல்கிறேன்! இதில் உமக்கு என்ன வருத்தம் மதுரகவிகளே?"

மதுரகவிகள்: "எங்கோ வடநாட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தேன் நான்! இமயமலை போனால் தான் சிலருக்குப் பொய் ஞானம் வருமா? மெய் ஞானம் தாமிரபரணிக் கரையிலேயே கிடைத்து விடுமே-ன்னு, வானில் தோன்றிய ஒளி, என்னை இங்கு இழுத்துக் கொண்டு வந்தது..."

மாறன்: "ஓ...மலரும் நினைவுகளா? அதான் தெரியுமே! இந்த ஊருக்கு வந்து, அசையாது இருந்த என்னை நீங்கள் தானே அசைய வைத்தீர்கள்?
’இவன் வெற்றுச் சிறுவன்! தழலை ஓம்பும் அந்தணன் கூட அல்லன்! இவனுக்குப் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறது”-என்று சோதித்துப் பார்க்கத் தானே அப்படி ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்?"

மதுரகவிகள்: "ஆகா! ஆகா! அப்படியில்லை சுவாமி! அடியேன் பிறப்பால் வேணுமென்றால் அந்தணனாக இருக்கலாம்! ஆனால் செந்தன்மை பூண்டொழுகும் நீரல்லவோ மெய் அந்தணர்? நீரல்லவோ எம் குலமுதல்வன்?
நான் முதன்முதல் பார்த்த போது, நீர் பதினாறு வயது சிறுபிள்ளை! அசையாது புளியமரத்தின் கீழே யோகத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்! உம்மை அசைக்க வேண்டியே அந்தக் கேள்வியைக் கேட்டேன்!"

மாறன்: "அந்தக் கேள்வியை இன்னொரு முறை சொல்லுங்கள் கவிகளே! என்ன அருமையான கேள்வி! நினைத்தாலே இனிக்கும்!"

மதுரகவிகள்: "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...
எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்???"


மாறன்: "அத்தைத் தின்று, அங்கே கிடக்கும்!!!"

மதுரகவிகள்: "இந்த ஒற்றை வரிப் பதிலால் அல்லவோ அடியேன் ஆடிப் போனேன்!"



மாறன்: "ஹா ஹா ஹா! உண்மைக்கு என்றுமே ஒற்றை வரி தான்!
உண்மை, இறைவனைப் போலவே மிகவும் எளிமையானது!"

மதுரகவிகள்: "ஆமாம் ஆழ்வாரே! அதனால் தான் உங்கள் ஒரு வாய்மொழியான திருவாய்மொழியும் எளிமையாகவே உள்ளது!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! இதற்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! ஆகா!"

மாறன்: "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்!"

மதுரகவிகள்: "இப்படியெல்லாம் விதம் விதமாக வியப்பில் ஆழ்த்தினீர்கள்! இந்தச் சிறிய வயதில் இப்படி ஒரு ஞானமா? இத்தனை தெளிவா? என்று வியந்து போனேன்!"

மாறன்: "ஞானமும் கர்மமும் நமக்கு எதற்கு கவிகளே? பெற்றவளை ஞானத்தாலும் கர்மத்தாலுமா ஒருவன் அறிந்து விட முடியும்? பாவித்தால் அல்லவோ உறவு? பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!"

மதுரகவிகள்: "அதான் தங்களைப் பாவிக்கிறேன் ஆழ்வாரே! ஆனால் நீர் தான் எம்மை விட்டுவிட்டு மேலுலகம் செல்வதில் உறுதியாக உள்ளீர்! அடியேன் என்ன சொல்லி உம்மை நிறுத்த?"

மாறன்: "பிள்ளைகளுக்குப் பெற்றோர் பேச்சைக் கேட்கத் தான் கசக்கும்! அதான் எம்பெருமானின் அவதாரங்கள் எடுபடுமாற் போனது!
பிள்ளைகளுக்குச் சக பிள்ளைகள் பேச்சைக் கேட்கத் தான் பிடிக்கும்! அதான் எம்பெருமான் இனி அவன் அவதரிக்காது, நம்மை அவதிரிப்பித்தான்!
நாமும் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில், தமிழ் வேதத்தைக் கொடுத்தாகி விட்டது! நம் பணி முடிந்து விட்டது! இனி வரப்போவது தமிழ்ச் சமயத்தில் அடுத்த அத்தியாயம் தான்!"

மதுரகவிகள்: "செல்ல முடிவே கட்டி விட்டீர்களா?"

மாறன்: "கவிகளே! கவலைப்படாதீர்கள்! நீரும் உமது பணி முடித்து விரைவில் எம்முடன் வந்து சேர்ந்து விடுவீர்! அது வரை உமக்குத் துணையாக, எம்மைப் போல் ஒன்றைத் தருகிறோம்!
இதோ, இந்த கனிம வளமான, தாமிரபரணி ஆற்று நீரை இப்போதே காய்ச்சுங்கள்! எம்மைப் போல் ஒன்று உருவாகும்!"



மதுரகவிகள்: "ஆகா! இது என்ன வித்தியாசமான உருவமாக வந்து விட்டதே! இதைப் பார்த்தால் தங்களைப் போல் தெரியவில்லையே சுவாமி? வழவழ மழமழ என்று செதுக்கியும் செதுக்காமலும் ஒரு உருவமா?"

மாறன்: "ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும் எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!"

மதுரகவிகள்: "ஆகா! இவர் பின்னாளில் தோன்றப் போகிறவரா? முன்னமேயே அறிவிக்கை செய்யப் போந்தீரே! தீர்க்க தரிசனமோ? அறிவுடையார் ஆவது அறிவார் என்பதல்லவோ குறள்?"

மாறன்: "ஆம்! மதுரகவிகளே! நீரும் நானும் செய்யாததை எல்லாம் இவர் செய்யப் போகுவார்! கைங்கர்யம் என்னும் திருத் தொண்டே இவர் லட்சணம்! லட்சுமணம்!
சாதிப் பாகுபாடு எல்லாம் அறவே நீக்கி, ஒருவர் விடாது, அனைவரையும் அரங்கனுக்கு ஆக்கும் செயல் வீரர் இவரே! இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த உருவத்தை வழி வழியாக நாளைய தலைமுறையிடம் கொண்டு சேருங்கள்!"

மதுரகவிகள்: "மிக்க மகிழ்ச்சி சுவாமி! அப்படியே செய்கிறோம்! அடியேனுக்குத் தங்கள் உருவத்தையும் தந்தருள வேண்டும்!"

மாறன்: "மறுமுறை தாமிரபரணியைக் காய்ச்சி நம்மை பெற்றுக் கொள்ளும்! அடியேன் விடை பெறட்டுமா?!"

முடிச்சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய், நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே!


அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகலொன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே!



காய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி, பின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்! நம்மை அவனுக்கு உடையவராக்கினார்!

குலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்! இன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்!

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!

இன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்!
"பின்னாள் ஆசான்" என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்!

செதுக்கிய சிலையாய் இல்லாமல், கையால் பிடித்த சிலையைப் போல், கூர்மையும் கூர்மையில்லாமலும், சாதாரண மானுட உருவம் போலவே இருக்கும்! இது தான் பின்னாளில் உடையவர் முகத்தையும் ஒத்து இருந்தது!

* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை!
* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே!

பொருநைத் துறைவன் பிறந்த நாள் அதுவுமாய்,
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் பிறந்த நாள் அதுவுமாய்,
வேதம் "தமிழ்" செய்த மாறன் திருவடிகளே சரணம்!!!

47 comments:

  1. செம்மொழி தமிழ் பிறந்த பொதிகை மலை இளவரசி பொருநை தாயிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் தென்குருகூர் நம்பியை அடி பணிகிறேன்.

    நல்லதொரு உரையாடல் அண்ணா..

    ReplyDelete
  3. நம்(ப) ஆழ்வார் பதிவா ஆஹா! வரேன் இருங்க.....ஆழ்ந்து அனுபவிச்சிப்படிக்கணுமே! இம்மாதிரிப்பதிவினில் உள்ள பற்றை விலக்க முடியுமா என்னதான் நம்(ப) ஆழ்வார் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்று சொன்னாலும்?!

    ReplyDelete
  4. நம்(ப) ஆழ்வார் பதிவா ஆஹா! வரேன் இருங்க.....ஆழ்ந்து அனுபவிச்சிப்படிக்கணுமே! இம்மாதிரிப்பதிவினில் உள்ள பற்றை விலக்க முடியுமா என்னதான் நம்(ப) ஆழ்வார் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்று சொன்னாலும்?!

    ReplyDelete
  5. ஒருமுறை பின்னூட்டம்அனுப்பியது இருமுறைவந்த மர்மம் என்ன?:) என்ன என்ன?:) மதுரகவியை மறந்துவிட்டேன் என்றா?:()

    ReplyDelete
  6. எல்லாவற்றையும் எல்லோருக்காகவும் பாகுபாடு இல்லாமல் கொடுத்துவிட்டு கொஞ்சும் அழகோடு புளியமரத்தடியில் சாதுவாய் வீற்றிருப்பராயிற்றே..

    'பொலிக.. பொலிக.. போயிற்று வல்லுயிர்ச் சாபம்..' என்று எப்பேர்ப்பட்ட நம்பிக்கையைக் கொடுத்தவர்..

    ஆழ்ந்த பற்றெல்லாம் கூட வேண்டாம்.. மேலோட்டமாக நம்பிக்கை வை.. போதும்.. அவன் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வான்'(உள்ளன மற்றுளவா புறமே சில மாயம் சொல்லி) என்று சர்வ சாதாரண மக்களுக்கும் பக்தியின் மகிமையைக் காண்பித்தவர்..

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் கேஆரெஸ்..

    கலிவயல் தென்னன் குருகூர் காரிமாறன் திருவடிகளை இந்த நன்னாளில் வணங்குவோம்..

    திவாகர்

    ReplyDelete
  7. உங்கள் வைகாசி விசாகப் பதிவு
    தண்பொருநையைப் போலவே
    குளிர்ச்சியாக இருக்கிறது.

    தேவ்

    ReplyDelete
  8. பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!
    யாருப்பா தாமிரபரணித் தலைவரு? பதிவுலகில் தாமிரபரணி தண்ணிக் குடிச்சவங்க பல பேர் உண்டு! ஆனா அவிங்க எல்லாம் தலைவர் ஆயிட முடியுமா? எங்க தலைவர் மாதிரி வருமா? அதுவும் பதினாறு வயசுத் தலைவர்! அவர் பேச்சுக்கு உருகாதவங்களே கிடையாது! அவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்! அவருக்குத் தான் இன்னிக்குப் பிறந்த நாளு! (Jun-05, வைகாசி விசாகம்)

    >>>>>>>>>அடடா முதல் பாராலயே எங்கள உருகவச்சிடீங்களே!

    ReplyDelete
  9. அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)
    ** அப்படியே அம்மாவுக்கும்-அப்பாவுக்கும் இன்று திருமண நாளும் கூட! Happy Wedding Day, My Big Children! :)
    >>>>>>>>>>>>>>>>
    சடகோபருக்கும், கந்தபெருமானுக்கும் இன்றுபிறந்த நாள் வைபவ கோலாகலம்...உங்க பெற்றோர்களுக்கு மண நாள் கொண்டாட்டமா? இனிமையான விஷயமாச்சே, ஆன்மீகச்செம்மலின் அப்பா அம்மாக்கு அரங்கப்ரியாவின் மண நாள் வாழ்த்துகளை சொல்லுங்க!

    ReplyDelete
  10. \\\\! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!////


    அப்படியா? இருக்கட்டும் இதுக்காக காவிரி பெருமைப்படும்.!

    ReplyDelete
  11. //ஷைலஜா said...
    \\\\! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!////

    அப்படியா? இருக்கட்டும் இதுக்காக காவிரி பெருமைப்படும்.!//

    ஹா ஹா ஹா!
    அக்காவுக்கு கோபமா? உங்க ஊரு காவிரியை, தாமிரபரணிக்கு அப்பறமா சொன்னதுக்கு?

    நான் என்னக்கா பண்ணட்டும்? சொன்னது அரங்கநாயகியாச்சே! மட்டையடி உற்சவத்திலும் நம்மாழ்வாருக்காகத் தானே அரங்கனை மன்னிச்சி விடுறா!

    "நம்" பெரியன் ஆழ்வார் சொற்படி உம்மை அனுமதித்தோம்!:))

    ReplyDelete
  12. // எருமை மாடு said...
    செம்மொழி தமிழ் பிறந்த பொதிகை மலை இளவரசி பொருநை தாயிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

    பொருநை நதிக்குப் பிறந்த நாளா? பொருநைத் துறைவனுக்கு தாங்க பிறந்தநாள்! சரியாப் பாருங்க பதிவரே! :)

    ReplyDelete
  13. //Raghav said...
    வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் தென்குருகூர் நம்பியை அடி பணிகிறேன்//

    சடகோபன் பொன்னடிகள் சரணம்!

    //நல்லதொரு உரையாடல் அண்ணா..//

    எந்த உரையாடலைச் சொல்றீங்க ராகவ்? :)

    ReplyDelete
  14. //ஷைலஜா said...
    நம்(ப) ஆழ்வார் பதிவா ஆஹா! வரேன் இருங்க.....ஆழ்ந்து அனுபவிச்சிப்படிக்கணுமே!//

    ஆமாம்-க்கா!
    அதான் வேலை முடித்து வீட்டுக்கு லேட்டா வந்தாலும், நடு ராத்திரி எழுதிப் போட்டுட்டு, தூங்கப் போனேன்! அதுக்குள்ளாற பெங்களூரில் இருந்து மிரட்டல்! பதிவு எங்கே?-ன்னு! :))

    //இம்மாதிரிப்பதிவினில் உள்ள பற்றை விலக்க முடியுமா என்னதான் நம்(ப) ஆழ்வார் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்று சொன்னாலும்?!//

    இது பற்று இல்லக்கா!
    அற்றது பற்றெனில்-ன்னு சொன்னது வீண் ஆசை!
    இது பற்றுக பற்றற்றான் பற்று! இதில் பற்று வச்சியே ஆகணும்! :)

    ReplyDelete
  15. //ஷைலஜா said...
    ஒருமுறை பின்னூட்டம்அனுப்பியது இருமுறைவந்த மர்மம் என்ன?:) என்ன என்ன?:) மதுரகவியை மறந்துவிட்டேன் என்றா?:()//

    Yessu!
    நம் சடகோபனைப் பாடினையோ?-ன்னு அரங்கன் கம்பனைக் கேட்டான்!
    நம் மதுரகவிக்கு பின்னூட்டினையோ?-ன்னு பந்தல் உங்களைக் கேட்குது போல! :))

    ReplyDelete
  16. //DHIVAKAR said...
    எல்லாவற்றையும் எல்லோருக்காகவும் பாகுபாடு இல்லாமல் கொடுத்துவிட்டு கொஞ்சும் அழகோடு புளியமரத்தடியில் சாதுவாய் வீற்றிருப்பராயிற்றே..//

    வாங்க திவாகர் சார்!
    நீங்க சொன்னா மாதிரியே மாறன் அழகான பையன் தான்!
    சின்ன வயசில் தான் மூச்சு பேச்சு இல்லையே தவிர...மத்தபடி வாலிபத்தில் அழகான இளைஞன் என்றே நாதமுனிகள் சாதிப்பார்!

    //ஆழ்ந்த பற்றெல்லாம் கூட வேண்டாம்.. மேலோட்டமாக நம்பிக்கை வை.. போதும்..//

    ஆசை உடையோர்க்கெல்லாம் மோட்சம் என்று பேசி வரம்பு அறுத்தார் ஆயிற்றே!

    //கலிவயல் தென்னன் குருகூர் காரிமாறன் திருவடிகளை இந்த நன்னாளில் வணங்குவோம்..//

    உங்களுடன் அடியேனும் குருகூர் வள்ளலை வணங்கி மகிழ்கிறேன் திவாகர் சார்!

    ReplyDelete
  17. //R.DEVARAJAN said...
    உங்கள் வைகாசி விசாகப் பதிவு
    தண்பொருநையைப் போலவே
    குளிர்ச்சியாக இருக்கிறது//

    நன்றி தேவ் சார்!
    குளிர்ச்சிக்குக் காரணம் மாறனே அன்றி அடியேன் இல்லை!

    இன்று நன்குடன் வந்து,
    என்னாக்கி என்னால்,
    தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை,
    என் சொல்லி நிற்பனோ!

    ReplyDelete
  18. //உங்க பெற்றோர்களுக்கு மண நாள் கொண்டாட்டமா? இனிமையான விஷயமாச்சே, ஆன்மீகச்செம்மலின் அப்பா அம்மாக்கு அரங்கப்ரியாவின் மண நாள் வாழ்த்துகளை சொல்லுங்க!//

    நன்றி-க்கோவ்! இப்போ இன்னொரு முறை தொலைபேசும் போது சொல்லிட்டேன்! :)
    வீட்டுக்கு வந்து எதுவுமே சாப்பிடாமப் போனாங்களே! அந்த ஷைலஜா-வா-ன்னு கேட்டாங்க அம்மா! :)))

    ReplyDelete
  19. ஆகா.. எங்க தாமிரபரணியை பத்தி\ சுத்தி பதிவா.. கலக்குங்க.

    ReplyDelete
  20. //அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)//

    என்னோட அன்பான (தாமத) வாழ்த்துக்கள்...

    (மறந்து போயிட்டேன் KRS மறந்து போயிட்டேன் ..:-((

    ReplyDelete
  21. //கிரி said...
    //அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)//

    என்னோட அன்பான (தாமத) வாழ்த்துக்கள்...//

    எலே மிஸ்டர் கிரி :)
    காளை முருகனுக்கு மட்டும் வாழ்த்து சொல்லிட்டு, இன்னொரு பிறந்தநாள் பையன் மாறனுக்கு வாழ்த்து சொல்லாம போனா எப்படி? ஒழுங்கா வந்து சொல்லுங்க! இல்லீன்னா மயில் மேல பறந்து வந்து கொத்துவேன்! :))

    ReplyDelete
  22. //Sathia said...
    ஆகா.. எங்க தாமிரபரணியை பத்தி\ சுத்தி பதிவா.. கலக்குங்க//

    வாங்க சத்தியா! அது என்ன "ஒங்க" தாமிரபரணி?
    வேணும்னா ஒங்க ஓல்ட் மாங்க்-ன்னு சொல்லிக்குங்க! :)

    இந்தத் தண்ணி எங்களுக்கும் தான்! நம்ம தாமிரபரணி! பிச்சிப்புடுவேன் பிச்சி! :)

    ReplyDelete
  23. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கும் தமிழ் வேதம் தந்த காரி மாறன் சடகோபனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க வாழ்க.

    உங்கள் அப்பா அம்மாவிற்கு திருமண நாள் வாழ்த்துகள். வணக்கங்களுடன்.

    //பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!//

    பெரும்பாலும் என்பது முக்கியமான சொல். சிறுபான்மையாக மற்ற குலத்தில் உதித்தவர்களும் இருக்கிறார்கள். பெரும்பான்மை என்பதில் லிங்காயதம் என்னும் கருநாடக சைவத்தின் முதல்வரான பசவராசரும் (வசவேசர்) அமைவார். லிங்காயதம் வடமொழி வேதத்தினை முழுமையாக மறுத்து பூணூல் உபநயனம் போன்ற சடங்குகளை முழுக்க முழுக்க மறுக்கிறது; பசவேசரோ அந்தணர்.

    நினைத்ததை உடனே செயல்படுத்திவிட வேண்டும்; இல்லையெனில் வாய்ப்பு நழுவிவிடும் என்று சொன்னார்கள் பெரியவர்கள். அதே போல் 'பவிஷ்யதாசார்யன்' பற்றி எழுத நினைத்ததைக் குறித்து மட்டும் வைத்துக் கொண்டதால் இப்போது எழுதும் வாய்ப்பை இழந்தேன்; அதனால் என்ன அடியேனை விட மிக அழகாக எழுதக்கூடிய நீங்கள் எழுதியதால் கூடியிருந்து குளிரும் வாய்ப்பு கிட்டியதே என்று மன மகிழ்ச்சி கொள்கிறேன்.

    பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்!

    ReplyDelete
  24. \\\
    ஆனால் "தாழ்ந்த குலம்", "சூத்திரர்", "நாலாம் வருணம்" என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
    மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
    அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன/////



    உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்குள்ளேதான் எந்தக்கடவுளும் அதை அனுமதிப்பதில்லை

    ReplyDelete
  25. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க!
    திருவாய் மொழிக்கு உருகாதார் ஒரு வாய் மொழிக்கும் உருகார்!
    ////////



    ஆஹா இது என்ன ரவிமொழியா?(ஆனா மொழி இனிது!)

    ReplyDelete
  26. \\\! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!"

    //////



    பவிஷ்யதாச்சார்யான் பற்றி அவ்வளவாய் நான் அறிந்து கொண்டிருக்கவில்லை..இப்போது தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete
  27. மொத்தத்தில் மிக உன்னதமான பதிவு. முழுக்கப்படிக்க நேற்று முடியாமல் போய்விட்டது இன்று ஆழ்ந்துபடித்தேன் ஆழ்ந்தும்போனேன் ஆழ்வார் பதிவென்பதால்!நதிப்பெருமை முதல் நல்லடியார் மகிமைகள் வரை ஒவ்வொரு வரியும் சிறப்பு. அகலகில்லேன் பாடல் ஒன்று போதுமே அண்ணலின் திருவடியை நாம் இறுக்கப்பற்றிக்கொண்டுவிட்டோம் என்பதற்கு! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  28. \\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //உங்க பெற்றோர்களுக்கு மண நாள் கொண்டாட்டமா? இனிமையான விஷயமாச்சே, ஆன்மீகச்செம்மலின் அப்பா அம்மாக்கு அரங்கப்ரியாவின் மண நாள் வாழ்த்துகளை சொல்லுங்க!//

    நன்றி-க்கோவ்! இப்போ இன்னொரு முறை தொலைபேசும் போது சொல்லிட்டேன்! :)
    வீட்டுக்கு வந்து எதுவுமே சாப்பிடாமப் போனாங்களே! அந்த ஷைலஜா-வா-ன்னு கேட்டாங்க அம்மா
    ////////////


    அந்த மெதுவடை யை நான் ஜோரா இருக்கேன்னு அவசர அவசரமா நாலு தள்ளினதையும் நெய்மணத்த சக்கரைப்பொங்கலை அப்படியே முழுங்கினதையும் டிகிரிகாஃபியை சுவைத்துக்குடித்ததையும் அவங்களோட நீங்களும் மறந்தாச்சா?:)

    ReplyDelete
  29. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஹா ஹா ஹா!
    அக்காவுக்கு கோபமா? உங்க ஊரு காவிரியை, தாமிரபரணிக்கு அப்பறமா சொன்னதுக்கு?//


    ச்சேச்சே கோபம்லாம் இல்ல....

    கங்கையிற்புனிதமான காவிரி என்ற சிறப்பு எங்க ஊரு நதிக்கு இருக்கே

    ///////////நான் என்னக்கா பண்ணட்டும்? சொன்னது அரங்கநாயகியாச்சே! மட்டையடி உற்சவத்திலும் நம்மாழ்வாருக்காகத் தானே அரங்கனை மன்னிச்சி விடுறா!////



    ஆமாம் மட்டையடியின்போது நம்மாழ்வார் வந்து சமாதானம் செய்வதை நானும் பார்த்திருக்கேன்.
    பெண்கள் மனம் சாஃப்ட் அதுக்காகவும் மன்னிச்சிவிடறா எங்க அரங்க நாயகி அதையும் தெரிஞ்சிக்குங்கப்பா:):)

    \\\\\\///"நம்" பெரியன் ஆழ்வார் சொற்படி உம்மை அனுமதித்தோம்////


    தன்யனி ஆனேன்:):)

    ReplyDelete
  30. இது பற்று இல்லக்கா!
    அற்றது பற்றெனில்-ன்னு சொன்னது வீண் ஆசை!
    இது பற்றுக பற்றற்றான் பற்று! இதில் பற்று வச்சியே ஆகணும்.............


    >>>>>>>>>>
    மனசில் இந்தப்பற்று பற்றிக்கொண்டது நன்றி!

    ReplyDelete
  31. //ஆழ்ந்த பற்றெல்லாம் கூட வேண்டாம்.. மேலோட்டமாக நம்பிக்கை வை.. போதும்.. அவன் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வான்'(உள்ளன மற்றுளவா புறமே சில மாயம் சொல்லி) என்று சர்வ சாதாரண மக்களுக்கும் பக்தியின் மகிமையைக் காண்பித்தவர்..//
    True...in my experience!! Enjoyed
    reading your post! I am one of those 'maraprabho' type person:-)

    ReplyDelete
  32. அப்பாடா இன்னும் எதுவும் புதிர் போடல..... :))

    ஒருவாரமா ஊருக்குப் போயிட்டு இப்போதான் வந்தேன்...

    நலமா கேயாரெஸ்?

    -முகில்தமிழ்

    ReplyDelete
  33. //Mukilarasi said...
    அப்பாடா இன்னும் எதுவும் புதிர் போடல..... :))//

    :))
    உங்களுக்குக்காக சிறப்பாப் போட்டுட்டாப் போச்சு!
    என்ன தலைப்பு வேணும்-ன்னு நீங்களே சொல்லுங்க!

    //ஒருவாரமா ஊருக்குப் போயிட்டு இப்போதான் வந்தேன்...
    நலமா கேயாரெஸ்?//

    நலம் தான் முகில்! நீங்க நலமா? ஒரே ஊர் சுத்தினா பாவம் தமிழ் என்ன பண்ணுவாரு? :) பதிவு போடுவாரு! :)

    ReplyDelete
  34. //Anonymous said...
    True...in my experience!! Enjoyed
    reading your post! I am one of those 'maraprabho' type person:-)//

    ஹா ஹா ஹா!
    நன்றிங்க! மரப்பிரபோவில் வந்ததும் அனானி தான்! இப்படி அனுபவிச்சி சொல்றதும் அனானி தான்! அடடா! :)

    நீங்க சொல்வது உண்மை தான்!
    பாவனை அதனைக் கூடில்
    அவனையும் கூட லாமே!

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கும் தமிழ் வேதம் தந்த காரி மாறன் சடகோபனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க வாழ்க//

    கேஆரெஸ்: வாழ்க வாழ்க!
    ஜிரா: வாழ்க வாழ்க! வாழ்கவே!

    //உங்கள் அப்பா அம்மாவிற்கு திருமண நாள் வாழ்த்துகள். வணக்கங்களுடன்.//

    நன்றி குமரன்! வீட்டில் அன்னிக்கே சொல்லிட்டேன்! இவரு நம்ம வீட்டுக்கு வந்ததில்லையே-ன்னு கேட்டாங்க! ஆமாம்-ம்மா! இது வரை வந்ததில்லை-ன்னு சொன்னேன்! :)

    ReplyDelete
  36. @குமரன்
    //
    //பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!//

    பெரும்பாலும் என்பது முக்கியமான சொல். சிறுபான்மையாக மற்ற குலத்தில் உதித்தவர்களும் இருக்கிறார்கள்//

    எக்ஜாக்ட்லி!
    அதான் "பெரும்பாலும்" என்றும் "பொதுவாக" என்றும் முன்னொட்டு இட்டேன்!

    //பெரும்பான்மை என்பதில் லிங்காயதம் என்னும் கருநாடக சைவத்தின் முதல்வரான பசவராசரும் (வசவேசர்) அமைவார். லிங்காயதம் வடமொழி வேதத்தினை முழுமையாக மறுத்து பூணூல் உபநயனம் போன்ற சடங்குகளை முழுக்க முழுக்க மறுக்கிறது; பசவேசரோ அந்தணர்//

    :))
    பசவண்ணா பெரும் சிவ பக்தர்!
    எனக்கு ரொம்ப பிடிக்கும்!
    லிங்காயத் என்ற ஒரு தனிப் பிரிவே உருவாகும் அளவுக்கு கருத்து உரம் கொண்டவர்!

    பசவண்ணா-ன்னு சொல்லும் போதெல்லாம், ஏனோ தெரியலை, நம்ம மெளலி அண்ணாவும் ஞாபகத்துக்கு வருவார்! ரெண்டு பேரும் அண்ணா தான்! :)

    //நினைத்ததை உடனே செயல்படுத்திவிட வேண்டும்; இல்லையெனில் வாய்ப்பு நழுவிவிடும் என்று சொன்னார்கள் பெரியவர்கள். அதே போல் 'பவிஷ்யதாசார்யன்' பற்றி எழுத நினைத்ததைக் குறித்து மட்டும் வைத்துக் கொண்டதால் இப்போது எழுதும் வாய்ப்பை இழந்தேன்;//

    ஹா ஹா ஹா!
    எழுதுங்க குமரன்! இன்னொரு முறை பலாச்சுளை சாப்பிட மாட்டோமா என்ன?

    //அதனால் என்ன அடியேனை விட மிக அழகாக எழுதக்கூடிய நீங்கள்//

    செல்லாது! செல்லாது!
    இதுக்காகவே இன்னொரு முறை எழுதறீங்க!

    அடியேன் சில செய்திகளை இதில் முழுக்க சொல்லலை! குறிப்பாக பவிஷ்யதாச்சார்யன் நாதமுனிகள் கைக்கு வந்து, வழி வழியாகத் தங்கியமைக்கு! மேலும் இராமானுசர் இந்த பவிஷ்யதாச்சார்யன் சிலையைப் பார்த்தது பற்றி!

    அதையெல்லாம் சேர்த்து நீங்க எழுதுங்க!

    ReplyDelete
  37. //ஷைலஜா said...
    ஆஹா இது என்ன ரவிமொழியா?(ஆனா மொழி இனிது!)//

    ஹிஹி!
    பலருக்கும் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்ற பாராட்டுரை தெரியும்!

    திருவாய்மொழியும் அஃதே அல்லவா!
    அதான் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

    எடுத்துச் சொல்லச் சொல்லத் தானே, மக்களைச் சென்றடையும்! பயன் பெறுவார்கள்!
    இனி இதையும் அடிக்கடி புழங்குவோம்!

    ReplyDelete
  38. //ஷைலஜா said...

    ////ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
    மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
    அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன/////

    உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்குள்ளேதான் எந்தக்கடவுளும் அதை அனுமதிப்பதில்லை//

    நச்!
    ஒருவாய் மொழி-ன்னாலும் திருவாய் மொழியாச் சொன்னீங்க-க்கா!

    ReplyDelete
  39. //ஷைலஜா said...
    நதிப்பெருமை முதல் நல்லடியார் மகிமைகள் வரை ஒவ்வொரு வரியும் சிறப்பு//

    நன்றி-க்கா!

    //அகலகில்லேன் பாடல் ஒன்று போதுமே அண்ணலின் திருவடியை நாம் இறுக்கப்பற்றிக்கொண்டுவிட்டோம் என்பதற்கு!//

    Yessu!
    பிறகு, சரணாகதி தொடரில் இந்த "அகலகில்லேன்" பாசுரத்தின் கதையைச் சொல்கிறேன்!

    இதே தாமிரபரணி வானமாமலையில் ஆரம்பிக்கும் சரணாகதிப் பாசுரம்...திருமலை வேங்கடவன் சன்னிதியில் மேல் போய் முடியும்!

    அதான் நம்மாழ்வார் தன் இறுதிக் கட்டத்தில் இந்தப் பாசுரத்தை நினைவு கூர்வது போல் காட்சி அமைத்தேன்!

    ReplyDelete
  40. Dear Mr.Shankar,

    I have been reading your blog for quite a while; It has always been a pleasant and enlightening experience. Keep it up!

    Coming to this article on Nammalvar, there is also a general belief that Nammalvar was a Pandya descendant.

    "In the year Pramadi in kaliyuga on the 43rd day of kali yuga on Friday, during the sukla paksh, Chathurdashi, in kataka lagna, in the month of Vrushabha −Vaikasi (May−June), in Vasantha ruthu, under the Visaka star , Nammazhvar was born at Thirukurugur on the banks of the river Tamiraparani in Pandya dynasty. He was born in Vellalar caste to a noble man of a royal family; Kariyar and his wife Udaya Nangai. "
    Source: http://puttakonda-lakshminarasimhaswamy.com/nammalvar-history.php and many other sites

    It is doubtful whether the Tamil community had the exact four fold varna during Nammalvar times; Even Tolkappiam, where a four fold varna is indicated, is considered of very late vintage of 12th or 13th century vintage by recent studies. At least, the term Sudra did not exist during Nammalvar times and Velalar were not considered lowly. Appar who lived before him was probably first known as velalar and his brother-in-law Kalippagaiyar was a General under Pallavas. I think the caste divisions got solidified and the four fold model itelf got mapped to social groups not only in Tamil country but also elsewhwere much later, around later chola times.

    Apologies for writing in English and Sorry for highlighting this issue; I see that the most writings on Nammalvar seem to use the supposedely 'low birth' and subsequent elevation of Nammalvar as an indication of the egalitarian approach of Vaishnavas. While i do not disagree with the 'egalitarian' angle, a lie of 'lowly birth' of Nammalvar has been made into a truth by repeating it thousands of times. And many others seem to unsuspectingly start believing it. While a 'lowly birth' can not be a blemish for anyone as well as for the greatness of such saints even if it was a fact, i am posting this comment only to present the alternate view point to the oft repeated 'fact' about Nammalvar.

    Thanks for wonderful writings and i eagerly look forward to more such 'gems' from you in future.

    Regards,

    SV

    ReplyDelete
  41. //Anonymous said...
    Dear Mr.Shankar,//

    ஆகா! வீட்டிலும், மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான் இப்படிக் கூப்பிடுவார்கள்! :)

    //I have been reading your blog for quite a while; It has always been a pleasant and enlightening experience. Keep it up!//

    நன்றி SV!

    //Coming to this article on Nammalvar, there is also a general belief that Nammalvar was a Pandya descendant//

    மாறன் என்ற பெயரால் இப்படி ஒரு கருத்து நிலவினாலும், நம்மாழ்வார் அரச வம்சம் இல்லை என்பதைக் குரு பரம்பரை உறுதி செய்கிறது!

    //was born at Thirukurugur on the banks of the river Tamiraparani in Pandya dynasty. He was born in Vellalar caste to a noble man of a royal family; Kariyar and his wife Udaya Nangai. "
    Source: http://puttakonda-lakshminarasimhaswamy.com/nammalvar-history.php and many other sites//

    In Pandya Kingdom என்ற பொருளில் இதைச் சொல்ல வந்திருப்பர் என்றே நினைக்கிறேன்! திருநெல்வேலி பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது! பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்றே அந்த திவ்ய தேசங்களுக்குப் பெயர்!

    //It is doubtful whether the Tamil community had the exact four fold varna during Nammalvar times; Even Tolkappiam, where a four fold varna is indicated, is considered of very late vintage of 12th or 13th century vintage by recent studies//

    Can you elaborate?
    நம்மாழ்வார் காலம் 6-9 நூற்றாண்டு!
    இந்தக் கால கட்டத்தில் வருணாசிரமம் தமிழகத்தில் மிக்கவே இருந்தது!

    இதை எப்படிச் சொல்கிறேன் என்றால், நம்மாழ்வாருக்கு சற்று முந்திய காலத்தவர் திருமழிசை ஆழ்வார்!
    சாதியால் "தாழ்ந்த" அவர் குடந்தைக் கோயிலுக்குச் செல்லும் போது, அவர் காதில் வேதம் விழக் கூடாது என்று, வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள் பாதியில் நிறுத்தினார்கள்!

    அவர் அந்தாண்ட சென்றவுடன், விட்ட இடம் ஞாபகத்துக்கு வரவில்லை அவர்களுக்கு! அப்போது ஆழ்வார் கார் அரிசி நெல்லை நகத்தால் உடைத்துக் காட்டி, அவர்களுக்கே வேத வரியை ஞாபகப்படுத்தியது வரலாறு...This kinda treatement is available in all versions of the aazhwar stories/history and Thirumazhisai time is before Nammazhwar times.

    //At least, the term Sudra did not exist during Nammalvar times and Velalar were not considered lowly//

    May be not "lowly"!
    But Vellala was not allowed/called ineligible to learn vedas or become a master in spiritual science.
    In such a situation, when Nammazhwar is accorded the Head of the Tradition.....
    Then it speaks the greatness of aazhwar and the acceptablity attitude of people in that faith!


    //I think the caste divisions got solidified and the four fold model itelf got mapped to social groups not only in Tamil country but also elsewhwere much later, around later chola times//

    True! But even before all these solidification, as I said,
    The Vellalas or any other varna were not allowed public access to vedas and spiritual duties! That much for sure!

    //a lie of 'lowly birth' of Nammalvar has been made into a truth by repeating it thousands of times. And many others seem to unsuspectingly start believing it.//

    பொய்யா? இல்லவே இல்லை! மெய்யே என்பதை அடியேன் மேற்கூறிய காரணங்களால் மெய்ப்பித்து விட்டேன்!

    நம்மாழ்வாரை சாதியின் காரணமாகத் தாழ்த்தி நடத்தினார்கள் என்று சொன்னால் வேண்டுமானால் அது பொய் என்று சொல்லலாம்! ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லையே!

    நீங்கள் சொன்னது போல் பிற்காலத்தில் தான் திருப்பாணாழ்வாரைக் கல்லெடுத்து அடித்தார்கள்!
    ஆனால் நம்மாழ்வார் காலத்தில் அவரைத் தாழ்த்தி நடத்தவில்லை!
    ஆனால் அதே சமயம், ஒரு வேளாளருக்கு வேத பாட சாலையில் இடமும் கொடுக்காத காலம் தான்! சமயத் துறையில் குரு ஸ்தானமும் கொடுக்காத காலம் தான்! அது 100% உண்மை!

    அதையும் மீறித் தான், வேளாளன் நம்மாழ்வாருக்கு இந்த ஏற்றம்!


    //Apologies for writing in English and Sorry for highlighting this issue;//

    தவறே இல்லை! பந்தலில் எந்தக் கடினமான கருத்தையும் விவாதிக்க இடமுண்டு! தனி மனிதத் தாக்குதல் இல்லாத வரையில், எந்தவொரு விவகாரமான கேள்விக்கும் அஞ்சி ஒளியாதவன் அடியேன்! :)

    கருத்துகளுக்காக, நண்பர்களிடம் கோபித்துக் கொண்டு கசந்து கொள்ளும் வழக்கமும், எம்பெருமான் அருளால், அடியேனுக்கு இல்லை! :)

    //Thanks for wonderful writings and i eagerly look forward to more such 'gems' from you in future//

    Thanks for your open & bold thoughts and do continue to post without any hesitation.
    Afterall கொள்வதும் கொடுப்பதுமே குணானுபவம்!

    ReplyDelete
  42. //வேத பாட சாலையில் இடமும் கொடுக்காத காலம் தான்! சமயத் துறையில் குரு ஸ்தானமும் கொடுக்காத காலம் தான்! அது 100% உண்மை!//Did this practice change? when did this happen?

    ReplyDelete
  43. // Anonymous said...
    //வேத பாட சாலையில் இடமும் கொடுக்காத காலம் தான்! சமயத் துறையில் குரு ஸ்தானமும் கொடுக்காத காலம் தான்! அது 100% உண்மை!//Did this practice change? when did this happen?//

    To answer this question, could you lemme your name please?

    ReplyDelete
  44. Dear Mr.Shankar,

    Thanks for the response; BTW, i am different from the second 'Anonymous'. Henceforth, i shall sign off with my name in the end. You can call me SV though.

    I understand that our reference point of definition of 'low' are different; I accept your angle on exclusion from Sanskrit/Vedas but my reference point was not religious learning.

    Since i come from a saiva family, i admit i have very little knowledge on this Vainava tradition, expecting the hearsays from few relatives who are an exclusive group called "Namadharis" in Tirunelveli district. It is not that i am aware of most of 'Saiva' myths and traditions too. But some familarity does exist because of upbringing and social mileu. That way, your articles all have been a revelation with a very unique style.

    Before i conclude, i have a major doubt. Nammazhvar's writings are considered as "Tamil Vedas" and each part i understand is equivalent to the one of the 'four vedas'; If they were divine ordained, then i guess there is no question of him having had to learn 'Vedas' but otherwise how did he get to access to the same?

    Generally, i try not to contribute to these discussions on the Tamil web as they usually get hijacked by 'hardliners' and the forums and the threads slowly degenerate. And even here i wrote with a lot of trepidation but i was also comforted by the group that normally participates in your blogs. I hope i do not become the root cause for any such trouble here.

    I shall try and contribute more to this thread soon.

    With thanks and regards,

    Sathuragiri Vel

    ReplyDelete
  45. // Anonymous said...
    i am different from the second 'Anonymous'//

    he he! No issues Thiru. Sathuragiri Vel.

    //Since i come from a saiva family, i admit i have very little knowledge on this Vainava tradition//

    Me too! I hail from a devout saiva family! and Murugan is too beloved for me! :)

    //That way, your articles all have been a revelation with a very unique style//

    :) Thanks!

    //Before i conclude, i have a major doubt. Nammazhvar's writings are considered as "Tamil Vedas" and each part i understand is equivalent to the one of the 'four vedas'; If they were divine ordained, then i guess there is no question of him having had to learn 'Vedas' but otherwise how did he get to access to the same?//

    நம்மாழ்வார் வடமொழி வேதங்களைப் பாடசாலைக்குச் சென்று பயின்றார் இல்லை! அவர் யோகத்தில் இருந்த போது அறியப் பெற்றவையே அவை!

    வேதங்கள் - கர்ம காண்டம், ஞான காண்டம், பூர்வ பாகம், உத்தர பாகம்-ன்னு பலவாக, பல சிக்கலான விஷயங்களை அடர்த்தியாகப் பேசுகின்றன! அதனால் பொது மக்களுக்கு அவ்வளவாக அவை சென்று அடையவில்லை! மேலும் வேதத்தை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பணியாக வைத்துக் கொண்டு இருந்தது!

    வேதத்தின் மூலமான கருத்துக்கள் எல்லாருக்கும் சென்றடைய வேண்டித் தான், மாறன் இதைத் தமிழில் ஆக்கினார்!
    "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்!" என்று அதனாலேயே இடைக்காடர் முதலான சித்தர்களும் சொன்னார்கள்! இங்கே பாருங்கள்!
    http://madhavipanthal.blogspot.com/2007/05/blog-post_30.html

    "தமிழ் செய்தான்" என்றால் அப்படியே அச்சு அசல் மொழி பெயர்ப்பு இல்லை!

    மக்களுக்குப் பயன் தரும் முக்கியமான பகுதிகளை (சரணாகதி போன்றன) வெளிக் காட்டாது, கர்ம காண்டங்களையே வேத வித்துகள் அது வரை பேசி வந்தனர்!
    எனவே அவற்றை கொணர வேண்டி, எளிய முறையில், எல்லாருக்கும் புரியும்படி, தமிழில் கருத்தாக்கினார்!

    அதனால் தான்
    "செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
    தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"-ன்னு வடமொழி வித்தகரான வேதாந்த தேசிகரே பாடினார்!

    திருவிருத்தம் - ரிக் வேதம்
    திருவாசிரியம் - யஜூர் வேதம்
    பெரிய திருவந்தாதி - அதர்வண வேதம்
    திருவாய் மொழி - சாம வேதம்

    வேத வாசகங்களான பிரணவம், ஓம் தத் சத், நேதி நேதி, அகம் பிரம்மாஸ்மி போன்றவை எல்லாம் தமிழ் வேதத்திலும் வாசகங்களாக வரும்!

    //And even here i wrote with a lot of trepidation but i was also comforted by the group that normally participates in your blogs. I hope i do not become the root cause for any such trouble here.//

    Not at all!
    Dont worry! We have a dignified set of readers here.
    பந்தலின் குளிர்ச்சிக்கும் மகிழ்வுக்கும் வாசகர்களே முதன்மைக் காரணம்!
    இங்கே குணானுபவம் மட்டுமே முக்கியம்! கருத்துத் தீவிரங்கள் அல்ல!

    ReplyDelete
  46. கோபத்தில் வந்த வார்த்தைகள். பொறுமையாக எழுதலாம் என்று தாமதித்தேன்.
    நீங்களும் மற்றவர்களும், திருவாய்மொழி தமிழில் வேதம் என்று சொல்கிறீர்கள். நான் கடவுளின் மொழி, தமிழில் திருவாய்மொழி என்று சொல்ல விரும்புகிறேன். வெகு நாளைக்கு முன் கல்கியில்
    வந்த கதை. காட்டில் உள்ள மிருகங்களுக்கு நாளை கடவுள் குறிப்பிட்ட நேரத்தில் பேசப்போவதாகச் செய்தி வருகிறது. காடே அல்லோலகல்லேப்படுகிறது. நாளும் நேரமும் வந்து போகிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், ஒவ்வொறு விலங்கினமும், தங்களுக்குள்ளே, கடவுள் தங்கள்
    மொழியில் பேசியதைப் பற்றி பேசிக்கொள்கிறது. கதை ஆசிரியர் இராஜாஜி. மனதில்
    பதிந்து போன கதை. கல்லால மரத்துப் பள்ளிக்கூட ஆசிரியர், மொளனமாகத்தானே பாடம்
    சொல்கிறார். அதனால்தான் திருவாய்மொழியை கடவுளின் மொழி என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். திரிசங்குவிற்கு, தனியே சொர்க்கம் அமைக்கப்போன விஸ்வாமித்திரரின் கோபம்
    நம்மிடையே இல்லை என்பது என் ஆதங்கம். வேத மறைகள், மறைக்கப்பட்டது. மறுக்கப்பட்டது.
    இதனாலேயே நம்மாழ்வாரும் ஏன் புத்தரும் கூடத் தோன்றினார்கள்!

    இன்னொறு பதிவில் கைலாய பரம்பரை குறித்துச் சொல்கிறீர்கள். மகேந்திர மலை குறித்த
    பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது. தட்சிணாமூர்த்தி - தென்னாடுடைய சிவன். என்னாட்டவர்க்கும் இறைவன். குருபரம்பரையும் தெற்கில் தொடங்குகிறது! திருமூலர், பதஞ்சலி, தன்னுடன் படித்தவர் என்கிறார். பதஞ்சலி இது குறித்து எதுவும் சொல்கிறாரா என்று தெரியவில்லை:-)
    No more anony comments:-)Last one!

    ReplyDelete
  47. //Anonymous said...
    கோபத்தில் வந்த வார்த்தைகள். பொறுமையாக எழுதலாம் என்று தாமதித்தேன்.//

    கோபமா? உங்களுக்கா? அப்படி ஒன்னும் தெரியலையே! பெயர் சொல்லுங்க, விவரம் சொல்கிறேன்-ன்னு சும்மா தான் கேட்டேன்!

    //நீங்களும் மற்றவர்களும், திருவாய்மொழி தமிழில் வேதம் என்று சொல்கிறீர்கள். நான் கடவுளின் மொழி, தமிழில் திருவாய்மொழி என்று சொல்ல விரும்புகிறேன்//

    சொல்லுங்கள்! தவறே இல்லை!
    திருவாய்மொழி கடவுளின் மொழி தான்!

    வேறு சில நூல்களுக்கு இறைவன் அடி மட்டுமே எடுத்துக் கொடுத்துள்ளான்! ஆனால் திருவாய்மொழி முழுதும் அவனே பாடியதாக நம்மாழ்வார் சொல்கிறார்!

    இன்கவி பாடும் பரம கவிகளால்
    தன்கவி தான் தன்னைப் பாடுவியாது
    இன்று நன்குவந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
    வன்கவி பாடும் வைகுந்த நாதனே


    தமிழ் வேதம் என்பது அவர் பாடியதன் நோக்கம் மற்றும் நூலின் நோக்கம்/அமைப்பு குறித்துச் சொல்லப்பட்டது! அதுவும் உண்மை தான்! உயர்வு நவிற்சிக்காக மட்டும் சொல்லவில்லை! வேதத்தை தமிழ் செய்ததால் இந்தப் பெயரை இடைக்காட்டுச் சித்தரே வழங்குகிறார்!

    வேதங்களும் ஓங்கார வித்தில் இருந்து இறைவன் உரைத்த மொழி தானே! அப்படிப் பார்த்தால் கடவுளின் மொழி, தமிழ் வேதம் என்ற இரண்டுமே பொருந்துமே!

    //வெகு நாளைக்கு முன் கல்கியில்
    வந்த கதை. காட்டில் உள்ள மிருகங்களுக்கு நாளை கடவுள் குறிப்பிட்ட நேரத்தில் பேசப்போவதாகச் செய்தி வருகிறது//

    ஹிஹி! நல்ல கதை!

    //கல்லால மரத்துப் பள்ளிக் கூட ஆசிரியர், மொளனமாகத் தானே பாடம் சொல்கிறார். அதனால் தான் திருவாய்மொழியை கடவுளின் மொழி என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன்//

    இங்கு தான் அடிப்படையைப் புரிந்து கொள்ளவில்லை!
    கல்லால மரத்துப் பள்ளிக் கூட ஆசிரியரின் மாணவர்கள், பெரும் முனிவர்கள்! சனகாதி முனிவர்கள்! அவர்களுக்கு மெளனமும், முத்திரையுமாய் உபதேசம் நடக்கிறது!

    எளிய மக்கள், வாழ்வில் அல்லோல கல்லோலப் படுவோர்க்கு, இப்படி முத்திரை காட்டுங்களேன் பார்ப்போம்! ஒன்னும் புரியாது! அதான் இறைவனை அடைய இறைவனே உபாயம் என்ற சரணாகதியை எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கிறார்! வேதத்தை அப்படியே மொழி ஆக்காது, அதன் சாரத்தை மட்டும் எளியவர் அனைவர்க்கும் பொதுவில் வைக்கிறார்! அவ்வளவே!

    //வேத மறைகள், மறைக்கப்பட்டது. மறுக்கப்பட்டது.
    இதனாலேயே நம்மாழ்வாரும் ஏன் புத்தரும் கூடத் தோன்றினார்கள்!//

    உண்மை! நன்றி!

    //இன்னொறு பதிவில் கைலாய பரம்பரை குறித்துச் சொல்கிறீர்கள். மகேந்திர மலை குறித்த
    பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது//

    நல்ல சுட்டி இருப்பின் கொடுங்கள்! நன்றி!

    //தட்சிணாமூர்த்தி - தென்னாடுடைய சிவன். என்னாட்டவர்க்கும் இறைவன். குருபரம்பரையும் தெற்கில் தொடங்குகிறது!//

    ஆசார்ய அவதாரங்கள் தெற்கில் தானே!

    //திருமூலர், பதஞ்சலி, தன்னுடன் படித்தவர் என்கிறார். பதஞ்சலி இது குறித்து எதுவும் சொல்கிறாரா என்று தெரியவில்லை:-)//

    இது என்ன கிளாஸ்மேட்ஸ்.காம் ஆ என்ன? :)

    //No more anony comments:-)Last one!//

    Sooper! appo ini mel per cholli comment-aa? Neenga yaaru-nu guess pannitten! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP